Saturday, June 11, 2005

கலைஞர் அரசியலில் இருந்து விலக வேண்டும் !!!

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? ஜெயலலிதாவா, கலைஞரா ?

தன்னுடைய இறுதிக்காலத்தில் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என்ற கலைஞரின் துடிப்பு எனக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு மேல் அந்த பதவியில் அமர்ந்த பிறகும் அதனை மறுபடியும் அடைய வேண்டும் என்ற அவரது ஆசை ஆச்சரியம் தான் என்றாலும் இந்திய அரசியலில் புதிது அல்ல.

அரசியல்வாதிகள் பதவிகளை நாடி ஓடுவது இயற்கையான ஒன்று தான். அதனால் தான் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமர் பதவியை தூக்கி எறிந்த பொழுது அது மிகப் பெரிய தியாகமாக தெரிந்தது. ஒரு இந்திய அரசியல்வாதி பதவியை துச்சமென மதித்ததை அப்பொழுது தான் முதன் முறையாக பார்த்தேன். சோனியா இந்தியாவில் அரசியல் செய்தாலும், இந்தியர் இல்லையே. எனவே தான் அவரால் அவ்வாறு சிந்திக்க முடிந்தது. ஒரு சராசரி இந்திய அரசியல்வாதியால் பதவியை இவ்வாறு தூக்கியெறிய முடியாது என்றே நினைத்தேன்.

கலைஞர், ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என தமிழகத்தில் இருக்கும் பல தலைவர்களும் சரி, தமிழகத்தில் மக்கள் செல்வாக்கை அபரிதமாக பெற்றிருந்த எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களும் சரி மக்களுக்காக உண்மையில் என்ன செய்தார்கள் ? எந்த கொள்கையை பின் பற்றுகிறார்கள், எதனை விட்டுச் செல்லப் போகிறார்கள் ?

இந்த லட்சணம் இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது. அத்வானி, நரேந்திரமோடி, லல்லு, முலாயாம், மாயாவதி, பாஸ்வான் என்று எங்கு நோக்கினும் பதவிவெறியர்கள் தான். ஆட்சியில் இருந்த வரை தன் மாநிலத்தை முன்னேற்ற நினைக்கும் ஒரு தேர்ந்த நிர்வாகியாக தெரிந்த சந்திரபாபு நாயுடு, பதவியில் இருந்து விலகிய பிறகு பேருந்துகளை மாநிலமெங்கும் தீவைத்து எரித்து தன் கட்சி தொண்டர்கள் செய்த கலவரங்களை நியாயப்படுத்தியது, இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரே சாதி தான் என்பதை நிருபித்தது.

என்னைப் போன்ற இக் கால தலைமுறையை கலைஞர் போன்ற மூத்த தலைவர்கள் பாதித்து இருக்கிறார்களா ? அவர்களுடைய கொள்கை பிடிப்பு, வாழ்க்கை நெறிகள் நாங்கள் பின்பற்ற தகுந்த அளவிலே இருக்கிறதா ? இளையதலைமுறைக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் இத் தலைவர்கள் விட்டுச் செல்லும் சித்தாந்தம் என்ன ?

தந்தை பெரியார், காமராஜர் போன்றோரை இந்தப் பட்டியலில் கொண்டு வர நான் விரும்பவில்லை. ஆயினும் என்னை வியக்க வைத்த தலைவர்கள் என்னும் பொழுது கக்கன் போன்றோர் தான் ஞாபகத்தில் வருகிறார்களே தவிர மக்களின் பெரும் ஆதரவை பெற்ற தலைவர்கள் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை.

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக இருந்த மொழி உணர்வை கொண்டு ஆட்சி பீடம் ஏறிய திமுகவும் கலைஞரும் இது வரை தமிழுக்காக என்ன செய்தார்கள் ? ஹிந்தி எதிர்ப்பின் பொழுதும் பின்பு தேவைப்பட்ட பொழுதெல்லாம் ஹிந்தி பெயர் பலகைகளை தார் பூசி அழித்து, மைய அரசுக்கு எதிராக மொழி உணர்வை வளர்த்த கலைஞர், இன்று மைய அரசில் அங்கம் அகிக்கும் நிலையை அடைந்த பிறகு தன்னுடைய துறை அமைச்சர் இருந்த அமைச்சகமே தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் எல்லாம் பெயர் பலகைகளில் ஹிந்தியால் ஊர் பெயர்களை எழுதியதை வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு தானே இருந்தார். எந்த கொள்கையை முழக்கமிட்டாரோ, அதே கொள்கையை இன்று குழிதோண்டி புதைத்து விட்டார்.
இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த அவலம்.

தன்னுடைய கொள்கைகளை நடைமுறைப்படுத்த தான் கைப்பற்றிய பதவி உதவவில்லை என்றால் அந்த பதவியை துச்சமென மதித்து தூக்கி ஏறிந்திருக்க வேண்டும். அல்லது தான் முழக்கமிட்ட கொள்கைகளுக்காக அரசின் கொள்கைகளை மாற்ற துணிந்து தோல்வி அடைந்திருந்தால் கூட நான் கலைஞருக்கும் திமுகவுக்கும் தலைவணங்கியிருப்பேன். மாறாக தமிழுக்காக தீக்குளித்து மாண்டு போன அக் கால மாணவர்களின் சாம்பலில் ஆட்சிபீடம் ஏறிய திமுக அந்த தியாகிகளின் தியாகங்களை கேலிக்கூத்தாக்கிய சம்பவத்திற்காக கலைஞரை குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்விக்காகவோ, கோயில்களில் பல நூறு ஆண்டுகளாக வழக்கில் இருக்கும் சமஸ்கிருதத்தை மாற்றவோ, தமிழின் வளர்ச்சிக்காகவோ கலைஞர் தன்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் கடந்தும் இன்றும் இவை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதன் காரணம் என்ன? நீதிமன்றத்தில் முடங்கிப் போன தமிழ் சார்ந்த வழக்குகளை போராடி வென்றிருக்க வேண்டாமா ? போராடி வெல்ல வேண்டிய கொள்கைகள் அல்லவா அவை ? எதிர்க்கட்சியில் இருக்கும் பொழுது மட்டும் இதற்காக போராட்டம் நடத்தி விட்டு ஆளுங்கட்சியானவுடன் இவற்றை மறந்து போனதால் தானே இந் நிலை ஏற்பட்டது.

தமிழினத்தின் ஒரே தலைவர் என்ற புகழுரைக்கு ஆசைப்படும் கலைஞர், தன்னுடைய தமிழ் இனம் அண்டை நாட்டில் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி சிறிதும் அக்கறை கொள்வதில்லையே ? தமிழீழத்தின் விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல் மொளனம் சாதிக்கிறார். மைய அரசின் கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகித்தும் இலங்கை அரசுக்கு இந்தியா செய்யும் இராணுவ உதவிகளை எதிர்க்காமல் இருக்கும் கலைஞருக்கு எப்படி தமிழினத்தின் தலைவர் என்ற பட்டம் எப்படி பொருந்தும் ?

பத்தாண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் முதல்வராக கலைஞர் சாதித்தது என்ன ? தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா ? இன்னமும் மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத கிராமங்கள். கூரைகள் இல்லாமல் குட்டிச்சுவராக இருக்கும் பள்ளிகள். எலிக் கறி சாப்பிட நேர்ந்த தஞ்சை விவசாயிகளின் ஏழ்மை. காவிரி பிரச்சனையை அரசியலாக்கியவர்கள் தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பெருக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் 1200 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட வீராணம் ஏரியை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அவலம்.

இதற்கெல்லாம் கலைஞரை மட்டுமே குற்றம்சொல்ல முடியாது என்றாலும் ஒரு மூத்த தலைவராக இதனை சரி செய்ய அவர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் ? மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்ற எந்த உருப்படியான திட்டங்களையும் கொண்டு வராமல் பல ஆண்டுகளை வீணடித்த நம் நாட்டின் அரசியல்வாதிகளில் கலைஞரும் ஒருவர்.

இது வரை ஆட்சியில் பெரிய சாதனைகளை நிகழ்த்தாத கலைஞர் இனியும் ஆட்சிபீடம் ஏறி என்ன சாதிக்க நினைக்கிறார் ? அது வெறும் பதவி ஆசையாகத் தான் எனக்கு தெரிகிறது. தேவையான அளவு பதவியை சுவைத்தாகி விட்டது. அடுத்த தலைமுறைக்கு கலைஞர் வழி வகுக்க வேண்டும். தன்னுடைய அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலினையோ, ஆசை பேரன் தயாநிதி மாறனையோ தமிழக முதல்வர் பதவியில் அமர்த்தி விட்டு கலைஞர் அரசியலில் இருந்து விலகலாம். அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தொல்காப்பிய பூங்கா, திருக்குறள் உரை போன்று பல புத்தகங்களை எழுதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்.

12 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

அன்புள்ள சசி,

//அடுத்த தலைமுறைக்கு கலைஞர் வழி வகுக்க வேண்டும். தன்னுடைய அரசியல்
வாரிசான மு.க.ஸ்டாலினையோ, ஆசை பேரன் தயாநிதி மாறனையோ தமிழக
முதல்வர் பதவியில் அமர்த்தி விட்டு கலைஞர் அரசியலில் இருந்து விலகலாம். //

இது என்ன? இன்னும் நம்ம நாட்டிலே மன்னராட்சி முடியலையா? குடியாட்சி என்ற
பேருலே அரசியல்வாதி-கள் நடத்தும் முடியாட்சியா?

ஒண்ணும் புரியலையேப்பா? அதான் 200 தலைமுறைக்குச் சொத்து சேர்த்தாச்சே, இன்னும்
வேணுமாம்மா?

போகட்டுமுன்னு மத்தவங்களுக்கு விட்டுத்தர மாட்டாங்களாமா?


இங்கே நாங்க இருக்கற இடத்துலேஅரசியல்வாதிகள், அமைச்சர்கள் அப்பப்ப பதவி
வேணாமுன்னு விட்டுட்டுப் போயிடறாங்க. ஒரு முறை பிரதமரே பதவி வேணாமுன்னு
போயிட்டார். ரொம்ப டென்ஷன் ஆகதுன்றதுதான் காரணமாம்!!!!

ஹூம்ம்ம்ம்ம்ம்.... எப்பத்தான் நம்ம நாட்டுக்கு 'விடியுமோ'?

5:44 PM, June 11, 2005
மாயவரத்தான்... said...

ஆ.. எங்கள் தங்கத் தலைவனை, தன்னிகரில்லா பெருந் தலைவனை, ஊருக்காக ஓடியாடி உழைக்கும் ஒப்பில்லா தலைவனை, சதா (சினிமா நடிகை அல்ல!) சர்வ காலமும் தமிழ், தமிழ் என்றே மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நடமாடும் தமிழை, போராட்டங்களை நாள் தோறும் சந்தித்து வருகிற மாவீரனை (நெப்போலியன் அல்ல!) அரசியலை விட்டு விலகச் சொல்லும் நீங்கள் கட்டாயம் தமிழினத் துரோகி தான். இதை உங்களை விட்டு சொல்லச் சொன்னது யாரென்று இந்த வலைப்பூ உலகம் நன்கறியும். உங்களை போன்றோரின் தலைக்கு பின்னால் சுற்றும் ஒளிவட்டம், வெளிவட்டமெல்லாமும் கூட தெரியும்.

8:01 PM, June 11, 2005
Anonymous said...

Annachi,

Pathivila irukumbothu seththathan Marinala oru samathi kattuvanga..Appuram innum oru 50 varusathukku makkal ellam vanthu oru kumbidu pottuttu povanga...Ithellam arasiyal vazhkaila sagajamappa...

Senthil

8:56 PM, June 11, 2005
குழலி / Kuzhali said...

//அதனால் தான் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமர் பதவியை தூக்கி எறிந்த பொழுது அது மிகப் பெரிய தியாகமாக தெரிந்தது. ஒரு இந்திய அரசியல்வாதி பதவியை துச்சமென மதித்ததை அப்பொழுது தான் முதன் முறையாக பார்த்தேன்//

சோனியாவைப்பற்றிய உங்களது பார்வையும் எனது பார்வையும் ஒத்துப்போகின்றதே http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_08.html

//எந்த கொள்கையை பின் பற்றுகிறார்கள், எதனை விட்டுச் செல்லப் போகிறார்கள் ?
//
என்னங்க இவர்களுக்காவது கொள்கை என்று சொல்லிக்கொள்வதற்கு அவர்களின் கட்சிப்புத்தகத்திலாவது ஏதாவது இருக்கும், நம்ம பொரட்சி கலைஞர் கிட்ட உங்க கட்சி கொள்கை என்ன என்று கேட்டதற்கு கொள்கை மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்றார், அப்படிபோடுன்னானாம்...

வயதான கலைஞர் அரசியலை விட்டு ஓய்வு பெறவேண்டுமென்றீர், அது சரி அப்படியே 50+வயதிற்கும் மேலான வயதான கதாநாயகர்கள் 16 வயது பெண் கதாநாயகியோடு இளமை(?!) பொங்க நடிக்கின்றனரே, அவர்கள் ஓய்வைப்பற்றியும் ஒரு பதிவு போடுவது.

9:07 PM, June 11, 2005
Partha (பார்த்தா) said...

என்ன குழலி, "அவன நிறுத்தச் சொல்லு, நா நிறுத்தறேன்" - னு, கமல் வசனம் மாதிரி, எங்க பாத்தாலும், "50+வயதிற்கும் மேலான வயதான கதாநாயகர்கள் 16 வயது பெண் கதாநாயகியோடு இளமை(?!) பொங்க" நடிக்கின்றதை நிறுத்த சொல்லி சொல்லிட்டிருக்கீங்க!

9:19 PM, June 11, 2005
தமிழ் சசி said...

/*

அது சரி அப்படியே 50+வயதிற்கும் மேலான வயதான கதாநாயகர்கள் 16 வயது பெண் கதாநாயகியோடு இளமை(?!) பொங்க நடிக்கின்றனரே, அவர்கள் ஓய்வைப்பற்றியும் ஒரு பதிவு போடுவது.

*/

இது உண்மையான ஆதங்கத்தில் எழுதிய பதிவு. இவ்வாறு அபத்தமான கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கதாநாயகர்கள் பற்றிய பதிவை நீங்களே எழுதலாம்.

10:42 PM, June 11, 2005
வீ. எம் said...

நல்ல பதிவு , அலசி ஆராயந்து எழுதியுள்ளீர்கள் என்றாலும்...சில இடங்களில் கலைஞர் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானது என்று தோன்றுகிறது
வீ எம்

3:07 AM, June 13, 2005
ராம்கி said...
This comment has been removed by a blog administrator. 5:26 AM, June 13, 2005
ராம்கி said...

சசி,

பத்து வருஷத்துக்கு முந்தி வைகோ பேசின பேச்சு மாதிரி இருக்கிறது பதிவு. கலைஞர் அரசியலை விட்டுவிலகவேண்டும் என்கிறார் ஞாநியும் உங்களை மாதிரியே. விலகுவதாலோ அல்லது விலகாமல் இருப்பதாலோ ஒரு புண்ணியமுமில்லை என்றுதான் தோன்றுகிறது.

5:27 AM, June 13, 2005
Nambi said...

I have a feeling that not only M.K, the role of DMK itself is finished or diluted.

Next crop of leaders should come. But they are not Vijayakanth, RajiniKanth, etc..

I wonder how did you club Thiruma with these DMK & Ramdoss guys?. He is different from the rest

7:14 PM, June 15, 2005
தமிழ் சசி said...

நம்பி,

திருமா, வைகோ இருவரையும் இந்த பட்டியலில் சேர்த்து இருக்க கூடாது தான்.

ஆனாலும் எனக்கு இந்த இருவரின் சில நடவடிக்கைகளில் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் தான் அவர்களை இந்தப் பட்டியலில் சேர்த்து விட்டேன்

1996க்கு பின் ராமதாசிடம் ஏற்பட்ட மாற்றம் திருமாவளவனிடம் இனி ஏற்படுமோ என்ற ஐயம் எனக்கு உண்டு

8:03 PM, June 15, 2005
Anonymous said...

சசி,

கலைஞர் ஒருமுறை இராஜராஜனும் மகேந்திரவர்மரும் தமிழை வளர்க்கவில்லை என்று பேசியபோது அதுபற்றி வரலாறு.காமில் 'தமிழை வளர்க்க நாம் யார்?' என்று ஒரு கட்டுரை கலைஞரைப் பற்றி எழுத நான் நினைத்துக் கொண்டிருந்த விஷயங்களை அப்படியே எழுதியிருக்கிறீர்கள். நமக்குள் என்ன ஒரு கருத்தொற்றுமை?

இதுதான் எனது கடைசித் தேர்தல் என்று சென்ற தேர்தலின் போது அறிவித்ததை விட்டு விட்டீர்களே!

கடைசி வாக்கியம்தான் நெருடுகிறது. வாரிசு அரசியலுக்கு சிபாரிசு செய்வது போலிருக்கிறது.

கமலக்கண்ணன்

9:15 PM, June 15, 2005