தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டணிகளில் எத்தனை இடங்கள், எந்த தொகுதிகள் என்பதில் இருக்கும் அக்கறையும், மந்திரிசபையில் போராடி சம்பாதிக்க கூடிய துறைகளை பெறுவதில் இருக்கும் கரிசனமும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சனைகளுக்காகவோ, ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைக்காகவோ ஏற்படுவதில்லை. தமிழர்களின் போராட்டங்களை முன்னெடுப்பதாக காட்டிக் கொண்ட கருணாநிதி, ராமதாஸ் ஆகிய இருவரின் லட்சணமும் தெளிவாகவே சமீபகாலங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. சோனியாவை மிரட்டி தனக்கு தேவைப்பட்ட இலாக்காக்களை பெற்ற தமிழின தலைவர் தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜனாமா நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கருணாநிதி ஒரு புறம் என்றால், கருணாநிதியின் தமிழின அரசியலை தன் கையில் எடுத்துக் கொள்ள முனையும் ராமதாஸ், தமிழின அழிப்பை செய்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு தமிழின எதிரியான ஜெயலலிதாவிடம் தற்பொழுது உறவாடுகிறார். வைகோ குறித்து எதுவும் பேச தேவையில்லை என நினைக்கிறேன். கருணாநிதியை எதிர்க்க அவருக்கு ஜெயலலிதாவிடம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை. ராமதாஸ், வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகளை நம்பி ஈழத்தமிழர் போராட்டத்தில் இறங்கிய திருமாவின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது. காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்ற வலியூறுத்திக் கொண்டிருக்க, வடமாவட்டங்களில் திருமாவின் செல்வாக்கினை பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி திருமாவை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டார்.இந்த தேர்தலில் நீண்டு கொண்டே இருந்த பாமகவின் பேரங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா என பாமக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் இறுதியாக எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அந்தக் கூட்டணிக்கே தாவும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தற்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில், பாமக எப்படியும் அதிமுகவிற்கு தான் செல்லும் என்பது ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த முறை அன்புமணி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நின்றதால் பாமக அதிமுக பக்கம் சென்றடைய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய அரசியல் கூட்டணியை கவனித்தால் 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். 1996ம் ஆண்டு தேர்தலில் கடுமையான தோல்வியை எதிர்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதிமுகவின் பலமான வாக்கு வங்கி ஜெயலலிதாவின் சர்வாதிகார நடவடிக்கைகளால் சரியத்தொடங்கி இருந்தது. எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சியான தலைவரால் எழுப்பபட்ட அந்த மாபெரும் வாக்கு வங்கியை ஜெயலலிதா தன்னுடைய நடவடிக்கைகளால் இழந்தார். இதனால் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் அப்பொழுது பலமான கூட்டணியாக இருந்தது. 1996ம் ஆண்டில் கடுமையாக தோல்வி அடைந்த ஜெயலலிதாவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மைய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.
மிகவும் பலமாக இருந்த திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலமாக இருந்த பாமகவும், தென்மாவட்டங்களில் பலமாக இருக்கும் மதிமுகவும் கொண்டு வரப்பட்டால் தன்னுடைய இழந்த வாக்கு வங்கியை சரிக்கட்டி விடலாம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.
சிறிய கட்சிகளான பாமகவும், மதிமுகவும் தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கிகள் மூலம் ”தனித்து நின்று” பெரிய அளவுக்கு வெற்றிகளை பெற முடியாது, கூட்டணி மூலமே வெற்றி பெற முடியும் என்ற உண்மையை உணரத்தொடங்கியிருந்த நேரம் அது. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக தனித்து நின்று தோல்வியை எதிர்கொண்டு இருந்தன. இப்படி ஜெயலலிதா, பாமக, மதிமுக ஆகியவற்றின் தனிப்பட்ட நலன்களுக்காவும், Survivalலுக்காகவும் அமைந்தது தான் 1998ம் ஆண்டு கூட்டணி. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் எந்த பலமும் இல்லை. ஆனால் பிரச்சாரத்திற்கு உதவும் என்பதால் பாஜகவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.
திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை மையப்படுத்தியே சென்று கொண்டிருந்த தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்து கூட்டணி அரசியலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான்.
அதன் விளைவு ?
பல சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக அதிகரித்து தற்பொழுது தமிழக அரசியல் முன் எப்பொழுதுதையும் விட குழம்பிய குட்டையாக காட்சி அளிக்கிறது.
கொள்கைகளோ, மக்களின் நலமோ, தமிழர்களின் வாழ்வுரிமையோ இன்றைக்கு முக்கியம் இல்லை. எத்தனை இடங்கள், எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றால் மைய அரசில் எந்த துறை பெறலாம், எந்த துறையை பெற்றால் அதிகம் சம்பாதிக்கலாம், அடுத்து எந்த மகனை, மகளை, பேரனை, பேத்தியை, கொள்ளுப்பேரனை, கொள்ளுப்பேத்தியை அரசியலுக்கு கொண்டு வரலாம் என்பதில் தான் அரசியல் கட்சி தலைவர்களின் கவனம் உள்ளது. இந்திய அரசியல் என்பது நவீன மன்னராட்சி காலமாக மாறி விட்டது.
மக்களை உலகமயமாக்கிய பொருளாதாரம் நோக்கி திருப்புவதன் மூலம் தங்களுடைய பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதும், மக்களுக்கு ஒரு போலியான இந்திய பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டி மக்களை அப்படியே ஆட்டு மந்தைகளாக வைத்திருப்பதும் தான் அரசியல்வாதிகளின் முக்கியமான வேலைத்திட்டம். இதில் இந்தக் கட்சி தலைவர், அந்தக் கட்சி தலைவர் என்ற பேதங்கள் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் கடைக்கோடி தொண்டனும், ஓட்டளிக்கும் கடைக்கோடி தமிழனும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. மைய அரசில் அமைச்சராக இருந்து சம்பாதித்த பணம் தண்ணீராக செலவழிக்கப்படும். யார் அதிகம் பணத்தை வாரி இறைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பது தான் இன்றைய தமிழக தேர்தல் அரசியலாக உள்ளது.
இங்கே மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி முக்கிய தேர்தல் பிரச்சாரம் என்றால் இந்த தேர்தலில் எந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். (வெற்றி பெற்ற பிறகு ஒரு சில இடங்களில் கொடுக்கப்பட்ட இலவச டிவி இப்பொழுது வேகமாக பட்டுவாடா செய்யப்படும் சாத்தியம் உள்ளது). இவ்வாறாக தமிழக மக்கள் தொடர்ச்சியாக ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள். தமிழக மக்களை அவர்களுடைய முக்கிய வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து மிக எளிதாக திசை திருப்பி விட முடியும். 2006ம் ஆண்டு தேர்தலில் சமமாக இருந்த தேர்தல் களத்தை இலவச கலர் டிவி திமுக கூட்டணி பக்கம் லேசாக சாய்த்தது. அதுவே திமுக கூட்டணி அதிக இடங்களை பெற போதுமானதாக இருந்தது. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக மக்களின் பரிதாப நிலையையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.
இந்த சமயத்தில் மிகவும் பிரிதாபத்திற்குரியவர்கள் யார் ? மக்கள் அல்ல, அரசியல்வாதிகள் நிச்சயமாக அல்ல.
மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.
************
தற்போதைய அரசியல் கூட்டணியை 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் என்பது தான் 1998ம் ஆண்டு இருந்த கூட்டணி. தற்பொழுது அது திமுக, காங்கிரஸ். கூடுதலாக திருமா தற்பொழுது கூட்டணியில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் அப்பொழுது பாமக, மதிமுக, பாஜக இருந்தது. தற்பொழுது பாஜகவிற்கு பதிலாக இடதுசாரிகள் இருக்கின்றனர்.
1998ல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்சிகளின் பலம் இரண்டு தரப்பிலும் சரிந்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே தங்களுடைய பாரம்பரிய பலத்தை இழந்து இருக்கின்றன. சிறிய கட்சிகளான பாமக, மதிமுக போன்றவையும் 1998ல் இருந்த தங்களுடைய பலத்தில் இருந்து கணிசமான பலத்தை இழந்து இருக்கின்றன. இதில் மற்றொரு புதிய வியூகமாக விஜயகாந்த் உருவாகி இருக்கிறார்.
திமுக கூட்டணி
திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கும். தனிப்பட்ட பலத்தில் திமுகவை விட அதிமுக பலமான கட்சி என்பதை மறுக்க முடியாது. திமுக வடமாவட்டங்களில் மிகவும் பலமான கட்சி என்றால் அதிமுக தென்மாவட்டங்களில் பலமான கட்சி. ஆனால் கடந்த சில வருடங்களில் மு.க.அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் தென்மாவட்டங்களில் திமுக முன்பை விட பலமாக உள்ளதாக கருதப்படுகிறது. மு.க.அழகிரியை திமுகவிற்கு பலம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். பலவீனம் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வடமாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பலமான தலைவர்களான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்களால் வடமாவட்டங்களில் பலமாக இருந்த திமுக தென்மாவட்டங்களில் சற்று தடுமாறியது உண்மையே. மதிமுகவின் பிளவும் திமுகவை பலவீனமடைய செய்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் அழகிரி திமுகவை பலப்படுத்தியிருக்கிறார் என்ற கருத்து பரவலாக உண்டு. இதனை இந்த தேர்தல் முடிவுகளே நமக்கு தெளிவுபடுத்த முடியும்.இந்த தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும் பலமாகவே உள்ளது. பாமக அதிமுக பக்கம் சாய்ந்தது இழப்பு தான். என்றாலும் வடமாவட்டங்கள் எப்பொழுதுமே திமுகவின் பலமான பகுதி தான். அதனுடன் திருமாவின் பலமும் சேருகிறது. திருமாவிற்கு சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளில் நல்ல பலம் உள்ளது. திமுகவின் பலத்துடன், திருமாவின் பலமும் சேரும் பொழுது வடமாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக இருக்கின்ற anti-incumbency factorயை கடந்தும் அதிமுக-பாமக கூட்டணி போராட வேண்டியிருக்கும். தவிரவும் விஜயகாந்த் கடந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை வடமாவட்டங்களில் நிருபித்து இருக்கிறார். திமுகவிற்கு எதிராக இருக்கும் ஓட்டுக்களை விஜயகாந்த் பிரிக்கும் பொழுது அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறுவது சுலபமாக இருக்காது.
காங்கிரசுக்கு ஒட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. அவ்வாறு கூறியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. ஆனால் இன்னமும் காங்கிரஸ் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட தலைவர்களின் செல்வாக்கு காரணமாக ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு பலம் இருந்தாலும் அதன் பலம் மாநிலம் முழுவதும் பரவலானது அல்ல. அது எந்தளவுக்கு திமுகவிற்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குரியது. இந்த தேர்தலில் அது தெளிவாகி விடும்.
அதிமுக கூட்டணி
அதிமுக பெரும்பாலும் தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பலமான கட்சி. வடமாவட்டங்களில் திமுகவுடன் ஒப்பிடும் பொழுது பலவீனமான கட்சி. தென்மாவட்டங்களில் ஒரு காலத்தில் மதிமுகவிற்கு நல்ல பலம் இருந்தது. மதிமுகவின் பலம் திமுகவை தென்மாவட்டங்களில் பலவீனப்படுத்தி இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் மதிமுகவின் பலம் பெரிய அளவில் சரிந்து விட்டது. மு.க.அழகிரியால் தென்மாவட்டங்களில் திமுகவின் பலம் அதிகரித்து இருக்கிறது. இந் நிலையில் 1998ம் ஆண்டு இருந்ததை போல அதிமுக-மதிமுக தென்மாவட்டங்களில் பலமான கூட்டணியாக கூற முடியாது.வடமாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுக சற்று பலவீனமான கட்சி. இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் (சிதம்பரம் போன்ற பகுதிகள்) திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு அடுத்த நான்காவது இடம் தான் அதிமுகவிற்கு என சொல்ல முடியும். ஆனால் பாமகவுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறுகிறது.
பாமகவின் பலம் வடமாவட்டங்களே. வடமாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு நல்ல பலம் உண்டு. அது தேர்தல் கூட்டணியுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறும் என்பது தேர்தல் கணக்கு. வன்னியர் வாக்கு வங்கி என்பது திமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் உள்ளது. திமுகவின் வாக்கு வங்கியும் வடமாவட்டங்களில் வன்னியர்களை பெருமளவில் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாமக வாக்கு வங்கியின் பெரும் பகுதி திமுகவில் இருந்து பிரிந்து வந்ததே ஆகும். இந்த வாக்கு வங்கி மறுபடியும் திமுக நோக்கி செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்பொழுதும் பூசல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாமக தன் வாக்கு வங்கியை சாதி அடிப்படையில் கொண்டு சென்று விடுமோ என்ற கவலை திமுகவிற்கு உண்டு. பெரிய கட்சியான திமுக தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் பாமகவிற்கு உண்டு. இதனால் இரண்டு கட்சிகளும் தலைமை மட்டத்தில் தங்களுக்குள் தாக்கி கொள்வதன் மூலம் இரு கட்சியின் தொண்டர்கள் இடையே ஒரு சுவரினை எழுப்பி தங்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர். ராமதாஸ் அடிக்கடி கருணாநிதியை தாக்குவது இதன் அடிப்படையில் தான். இதனால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் தற்பொழுது இரண்டு கட்சி தொண்டர்களும் முட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமதாசிற்கு அது தான் தேவை.பாமகவின் தற்போதைய பலம் 1996/1998ல் அது பெற்ற வாக்கு வங்கி கொண்டே கணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு அதன் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. குறிப்பாக 2006 சட்டமன்ற தேர்தலில் பாமக தடுமாறியது. நான் மேலே கூறியுள்ளது போல பாமகவின் சரிவு என்பது திமுகவிற்கு பலம். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது கூட்டணி அளவில் அதிமுக-பாமக என்பது திமுக-விசி-காங்கிரசுடன் ஒப்பிடக்கூடியதாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தால் அதிமுகவிற்கு அது சாதகமாகலாம்.
விஜயகாந்த்
விஜயகாந்த் திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு பெறக்கூடியவராக வளர்ந்து வருகிறார். விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் அவரது அரசியல் பயணம் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுகிறது. அவரது நகர்வுகள் ஒரு நீண்ட கால இலக்கை நோக்கி இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த சரியான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணமாகவே அவர் கடந்த தேர்தலில் 8% வாக்குகளை பெற்றார். அவரது Masterstroke என்றால் அது விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றதே. தற்போதைய தேர்தலிலும் அவரது அணுகுமுறை சரியான திசையிலேயே உள்ளது.அதே நேரத்தில் அவர் கடந்த தேர்தலில் பெற்ற 8% வாக்குகளை அவரது வாக்கு வங்கியாக கருத முடியாது. விஜயகாந்த் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் இந்த முறை உயர்வதற்கும், சரிவதற்கும் சமமான வாய்ப்புகள் உண்டு. எனவே அவர் பெற்ற 8% என்பதே உறுதியான வாக்கு வங்கியாக முடியாது. அது 12% உயரவும் கூடும். 5%மாக குறையவும் கூடும்.
வாக்கு வங்கி என்பது தலைவர், கட்சி, சாதி இவை சார்ந்த விசுவாசத்தின் அடிப்படையில் உருவாகுவதே ஆகும். கருணாநிதியின் வசீகரம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சி போன்றவை காரணமாக இருக்கும் வாக்கு வங்கி அசைக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. என்னுடைய ஓட்டு எப்பொழுதும் உதயசூரியனுக்கு தான், இரட்டை இலைக்கு தான் என கூறுபவர்கள் பல காலமாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு தலைமை, கட்சியை சார்ந்த விசுவாசமான வாக்கு வங்கி தான் திமுக, அதிமுகவினுடையது. அது போல பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை சாதி சார்ந்தவை. அதுவும் ஒரு விசுவாசமான வாக்கு வங்கியே.
ஆனால் விஜயகாந்தின் வாக்குகள் திசை மாறக்கூடியது. திமுக, அதிமுகவிற்க்கு பதிலாக மற்றொரு கட்சி வேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகளே விஜயகாந்த்திற்கு விழுகின்றன. இவை தேர்தல் களநிலையை பொறுத்தது. தேர்தல் களநிலை மாறும் பொழுது விஜயகாந்த் பெறும் வாக்கு விகிதங்களும் மாறும். உதாரணமாக ஒரு பெரிய அலை அடித்தால் விஜயகாந்த்திற்கு விழும் வாக்குகள் வேறு திசையில் போய் விடும். தவிரவும் மைய அரசுக்காக தேர்தல் நடக்கும் பொழுது விஜயகாந்த்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்ற கேள்வியும் உண்டு. மாநில அரசியல் என்னும் பொழுது அது வேறு விதமான தாக்கத்தை விஜயகாந்த்திற்கு ஏற்படுத்தும். இதனால் தான் விஜயகாந்த் தேர்தலை புறக்கணிப்போம் என சில காலமாக பேசிக் கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன்.
விஜயகாந்த் எங்கிருந்து வாக்குகளை பெறுவார் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக வாக்களிக்க வருபவர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் தான் விஜயகாந்திற்கு அதிகளவில் வாக்களிக்க போகிறவர்கள். கடந்த தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்கள் இம்முறையும் அவருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் உண்டு.
விஜயகாந்த எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பெறுவார் என்ற கேள்வியும் உண்டு.
பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களித்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர் திடீரென்று ஒரு புதிய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. கவர்ச்சியின் காரணமாக சிலர் வாக்களிக்க கூடுமே தவிர பெரிய கட்சியின் வாக்குகள் விஜயகாந்த்திற்கு மாறாது. ஆனால் கூர்ந்து கவனிக்கும் பொழுது அதிமுக வாக்கு வங்கியை கவரக்கூடிய தன்மை விஜயகாந்த்திற்கு உண்டு. ஏனெனில் சினிமா கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதே அதிமுகவின் வாக்கு வங்கி. அதை விஜயகாந்த் பெறுவது சுலபம். மாறாக திமுகவின் வாக்கு வங்கியை பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல. என்ன தான் ஈழப்பிரச்சனையை சார்ந்து திமுக விமர்சிக்கப்பட்டாலும் திராவிட அரசியல் என்னும் பொழுது பெரும்பாலானோர் திமுகவை நோக்கியே செல்கின்றனர். ஸ்டாலின், அழகிரி செயல்பாடுகள் எதிர்காலத்தில் அதனை மாற்றலாம். ஆனால் குறுகிய காலத்தில் திமுகவின் பலம் சரியப்போவதில்லை.
வேறு கட்சிகள்
வேறு பல உதிரிக் கட்சிகள் இருந்தாலும், இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொருவரும் இருக்கிறார். அவர் தான் சரத்குமார். தென்மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமார் எந்தளவுக்கு நாடார் சமூக ஓட்டுக்களை பெறுவார் என்ற கேள்வியும் தற்பொழுது உள்ளது. சரத்குமார் இது வரையில் தன்னை ஒரு அரசியல் சக்தியாக நிருபிக்கவில்லை. சரத்குமார் நாடார் சமூகத்தை மையமாக வைத்து கட்சி தொடங்கும் முன்பே நாடார் சமூகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் ”சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்” என்ற அமைப்பு சரத்குமார் திமுகவில் இருந்த காலங்களிலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட திருநெல்வேலி மாநாட்டிற்கு நானும் சென்றிருக்கிறேன். இது நாடார் சமூகத்தை ஒன்று திரட்டி சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க செய்யும் ஒரு முயற்சி என நான் கருதினேன். ஆனால் ஏனோ சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க வில்லை. ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரை இறக்கி விட்டிருக்கிறார். நாடார் சமூகம் மத்தியில் சிவந்தி ஆதித்தனுக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே ஒரு சில தொகுதிகளில் சரத்குமாரை உதாசீனப்படுத்தி விட முடியாது என்பதே என்னுடைய எண்ணம். ஆனால் மாநில அளவில் கூட்டணியின் வெற்றி பலத்தை நிர்ணயிக்கும் பலம் இவருக்கு இல்லை.
கூட்டணி அளவில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) திமுகவிற்கு பலவீனமானதே. அதே நேரத்தில் அது மட்டுமே தேர்தலில் பெரிய வெற்றியை தற்பொழுது கொடுத்து விட முடியாது. இந்த தேர்தலில் இரு கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்யக்கூடியாக சக்தியாக விஜயகாந்த் இருப்பார் என தோன்றுகிறது. விஜயகாந்த அதிகளவில் ஓட்டுக்களைப் பிரித்தால் திமுக, அதிமுக கூட்டணி இரண்டும் சமமான இடங்களை பெற முடியும். விஜயகாந்த் அதிகமாக ஓட்டுக்களை பிரிக்காவிட்டால் அதிமுக வெற்றி பெறும்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பிரித்த 8% வாக்கு தான் தற்போதைய திமுக அரசை மைனாரிட்டி அரசாக்கியது.
விஜயகாந்த்தின் முந்தைய 8%, தற்பொழுது 12% என்ற அளவுக்கு உயர்ந்தால் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
8%, 5-6% என்றானால் அதிமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்
முழுமையான 40 யாருக்கும் கிடைக்காது
மக்களுக்கு ?
சில்லறை காசும், பட்டை நாமமும் கிடைக்கும்.
//மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.
ReplyDelete//
உண்மை!
சசி,
ReplyDeleteதென் மாவட்டங்கள் அதிமுக கோட்டை என்று பொதுவாக சொல்லும் போது ,தென் கோடி குமரி மாவட்டம் அதில் சேராது . தமிழகத்திலேயே அதிமுக மிகக்குறைந்த சதவீத வாக்கு வங்கியை கொண்டிருப்பது குமரி மாவட்டத்தில் தான் .
கடந்த சட்டமன்ற தேர்தலில் 60-க்கு மேற்பட்ட தொகுதிகளை வென்ற அதிமுக குமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது தெரியுமா?
இன்னொன்று ..பாஜக என்றொரு கட்சியையே மறந்து விட்டீர்கள் . புதிதாக உருவாகியுள்ள ஒட்டுமொத்த குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய கன்னியாகுமரி தொகுதியில் இம்முறை பா.ஜ.க வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
//ந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொருவரும் இருக்கிறார். அவர் தான் சரத்குமார். //
ReplyDeleteநல்லா எழுதிக்கிட்டு இருந்த நீங்க கடைசி ஆனதும் நொந்து நகைச்சுவையாய் எழுதினீங்களா?
nalla,arumaiyana therthal alasal sasi...nandri.expecting more articles frm u.
ReplyDeleteஆக ஈழத் தமிழனுக்கு ஓட்டு இல்லாத காரணத்தால் .......
ReplyDeleteஎங்களுக்கு அடி தொடரும்.
கட்டு மரமாக மிதக்கும் உத்தி தெரியாத அந்த வன்னி அப்பாவிகள் குறித்து யாரும் பேசமாட்டார்களா?
ஒரு ஈழத் தமிழன்
நல்ல அலசல். அருமையாக விளக்கியுள்ளீர்கள். பார்க்கலாம் என்ன நடக்கும் என்று.
ReplyDeleteவிரிவான கட்டுரைக்கு பாராட்டுக்கள்.இந்தியாவின் ஜனநாயகம் முதிர்ச்சி அடைய இன்னும் எவ்வளவோ காலம் ஆகும் போல் தெரிகிறது.
ReplyDeleteசினிமா கவர்ச்சிக்கும் ,இலவசப் பொருட்களுக்கும் ,பணத்துக்கும் ,சாதிக்கும் வாக்குப் போடுவது விரைவில் இல்லாமல் போகுமா?
அல்லது இந்தியா 'உலக வல்லரசு' ஆனாலும் இது தொடருமா?
தி,மு.க ,அதிமுக இரண்டும் ஒரே அளவான வாக்கு வங்கி வைத்திருப்பவை என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதிமுக பலமானது போல் தெரிகிறதே.
உண்மையில் தனித்தனியாக தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் வாக்கு பலம் ,விகிதம் என்ன என்று கூற முடியுமா?
-வானதி
//மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான். //
ReplyDelete100% True.
நல்லா எழுதிக்கிட்டு இருந்த நீங்க கடைசி ஆனதும் நொந்து நகைச்சுவையாய் எழுதினீங்களா?
ReplyDelete***********
குறும்பன்,
கவனிக்கப்பட வேண்டியவர் என்று தான் கூறினேன். ஒரு முக்கியமான சக்தி என கூறவில்லை. நீங்கள் சரத்குமாரை மட்டும் பார்க்கிறீர்கள். நான் அவர் பின்னே இருக்கும் சக்திகளை கவனிக்கிறேன். சிவந்தி ஆதித்தனை நான் அறிந்த வரையில் அவ்வளவு எளிதில் அவரை அலட்சியப்படுத்தி விட முடியாது. என்னுடைய கணிப்பினை முடிவுகள் தவறாக்கலாம். ஆனால் தற்பொழுது நாம் நம்புவதற்கு காரணங்கள் உள்ளது. சரத்குமார் என்பது வெறும் முகமூடி மட்டுமே.
ஆனாலும் 1 அல்லது 2 தொகுதிகளுக்கு மேல் இவர்களால் எதுவும் செய்ய முடியாது
:( romba nondhu poi irukeenga.
ReplyDeleteSasi,
ReplyDeleteI was your regular visitor during last elections. I was expecting a nice article from you for this Election.
You did not disappoint. You really rocked in this Article :)
I could sense your feeling of disappointment in this article with the turn of events especially politicians giving up the Eelam cause
But keep up your spirit and keep writing your perspectives. I love it
Yours,
Radhakrishnan
Cincinnati
சசி,
ReplyDeleteசிறப்பான பதிவு.
நல்வாழ்த்து.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹுச்டன்
Sasi,
ReplyDeletevery good article.
These kinds of article with good
analysis are really rare in the tamil
blog world.
I think I should subscribe to ur blogs.
--Senthil
இன்னொன்று ..பாஜக என்றொரு கட்சியையே மறந்து விட்டீர்கள் . புதிதாக உருவாகியுள்ள ஒட்டுமொத்த குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய கன்னியாகுமரி தொகுதியில் இம்முறை பா.ஜ.க வென்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
ReplyDelete****
ஜோ,
கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் எப்பொழுதுமே பாஜக பலமாக இருந்து வந்திருக்கிறது. கிறுத்துவர்களுக்கும் - ஹிந்துக்களும் இடையேயான பூசல் பாஜகவை வளர்த்தது. எங்கெல்லாம் மதவாதம் தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் பாஜக வளரும். ஏற்கனவே தனித்து நின்று சட்டமன்றத்திலும் நுழைந்து இருக்கிறது. ஆனால் ஒரு சில சட்டமன்ற தொகுதிகளில் பலமாக உள்ளது என்று தான் தெரியும். ஆனால் தற்பொழுது ஒரு பாராளுமன்ற தொகுதியையே வெல்லக்கூடிய பலம் என்பது ஆச்சரியம் தான்.
வடமாவட்டங்கள், தென்மாவட்டங்களின் சில பகுதிகளின் அரசியல் எனக்கு தெரியும். குமரி மாவட்டம் குறித்து அதிகம் தெரியாது. அதைக் குறித்து எழுதுங்களேன்....
நன்றி...
தி,மு.க ,அதிமுக இரண்டும் ஒரே அளவான வாக்கு வங்கி வைத்திருப்பவை என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதிமுக பலமானது போல் தெரிகிறதே.
ReplyDeleteஉண்மையில் தனித்தனியாக தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் வாக்கு பலம் ,விகிதம் என்ன என்று கூற முடியுமா?
************
வானதி,
வாக்கு வங்கி என்பது தொடர்ச்சியாக ஒரு கட்சிக்கே ஓட்டு போடுபவர்கள். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது அதிமுக சற்று பலமான கட்சி. ஆனால் அதிமுகவிற்கும், திமுகவிற்குமான இடைவெளி குறைந்து கொண்ட வருகிறது என்றே நான் நினைக்கிறேன்.
அடுத்து அமைப்பு ரீதியிலானது. அமைப்பு ரீதியாக திமுக பலமான கட்சி. அதிமுக போல அல்லாமல் ஒவ்வொரு ஒன்றியமும், மாவட்டமும் திமுகவில் உள்ளூர் தலைவர்களாலேயே நடத்தப்படுகிறது. ஆனால் அதிமுக அமைப்பு ரீதியில் பலவீனமானது. எல்லாம் அம்மா தான். அம்மா கைகாட்டுபவர்கள் தலைவர்கள். அதனாலேயே விஜயகாந்த் பலம் பெற்றால் அது அதிமுகவிற்கு தான் சரிவை கொடுக்கும். விஜயகாந்த் தனிப்பட்ட வகையில் தன்னை முன்னிறுத்திக் கொண்டாலும், ஒவ்வொரு ஊரிலும் அமைப்பு ரீதியாக பலமானவர்களை கொண்டு திமுக போலவே அடித்தள அமைப்பை வலுவாக்க முயற்சிக்கிறார்.
ஓட்டு சதவீதம் எவ்வளவு என கணிப்பது கடினம். 10 ஆண்டுகளாக கூட்டணி மூலமாக தான் எல்லாம் நடக்கிறது. தோராயமாக கீழ்க்கண்டவாறு கூறலாம்
திமுக, அதிமுக இரண்டுக்கும் தனிப்பட்ட செல்வாக்கு என்றால் சுமார் 25-30% இருக்கலாம். அடுத்து விஜயகாந்த் - 8%, பாமக - 5%, மதிமுக - 2-3%, காங்கிரசுக்கு ஒரு காலத்தில் 15% ஆதரவு உள்ளதாக கூறப்பட்டது. தற்பொழுது அதன் உண்மையான பலம் கேள்விக்குறியே. பாஜக - 2-3%
நன்றி...
But keep up your spirit and keep writing your perspectives. I love it
ReplyDeleteநன்றி..தொடர்ந்து எழுதும் எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்
*******
ராதாகிருஷ்ணன்
ஹுச்டன்
நன்றி அண்ணாச்சி...
*******
I think I should subscribe to ur blogs.
செந்தில்,
நன்றி
பின்னூட்டம் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
//மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.//
ReplyDeleteரிப்பீட்டு.....!
//விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் அவரது அரசியல் பணம் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுகிறது.///
அரசியல் பணம் - எழுதுப்பிழையாக விழுந்ததா ? அவருடைய முதலீடுகளைச் சொல்கிறீர்களா ?
எப்படி இருந்தாலும் உண்மை !
:)
//குமரி மாவட்டம் குறித்து அதிகம் தெரியாது. அதைக் குறித்து எழுதுங்களேன்....//
ReplyDeleteகன்னியாகுமரியை பொறுத்தவரை பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் என்று முடிவாகி விட்டது .விஜயகாந்த் தனது வேட்பாளராக முன்பு அதிமுக மாவட்ட செயலாளராகவும் ,ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்தவரும் ,சென்ற சட்ட மன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக நின்று இரண்டாம் இடத்தில் வந்த ஆஸ்டின் -ஐ சொல்லியிருக்கிறார் .அது இறுதி முடிவாக இருக்கும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக பா.ஜ.க எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிப்பார் . பாரம்பரிய காங்கிரஸ் தொகுதியை இம்முறை திமுக-வுக்கு பெற்றுத்தர அழகிரி நினைப்பதாக தெரிகிறது .அதிமுக கூட்டணியில் மீண்டும் மார்ச்சிஸ்ட் நிற்பதற்கு வாய்ப்பு உள்ளது .கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி இருந்தாலும் ,அதிமுக வலுவில்லாமல் இருப்பதால் மும்முனைப் போட்டியில் காங்கிரஸ் கூட்டணிக்கும் ,பா.ஜ.க வுக்குமே முதல் இரண்டு நிலை கிடைக்க வாய்ப்பு அதிகம் ..எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக-வுக்கு சாதகமாக இருந்த கிறிஸ்தவ மீனவர் வாக்கு வங்கி ஜெயலலிதாவின் இந்துத்துவ முகம் வெளிப்பட்ட பின் கலகலத்துப்போனது . திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் யாரென்று தெரிந்த பின் விரிவாக எழுதுகிறேன்.
நல்ல நீண்ட நெடி(ய) ஆய்வு !
ReplyDelete:) பாராட்டுகள் சசி !
//அதே நேரத்தில் அவர் கடந்த தேர்தலில் பெற்ற 8% வாக்குகளை அவரது வாக்கு வங்கியாக கருத முடியாது. விஜயகாந்த் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் இந்த முறை உயர்வதற்கும், சரிவதற்கும் சமமான வாய்ப்புகள் உண்டு. எனவே அவர் பெற்ற 8% என்பதே உறுதியான வாக்கு வங்கியாக முடியாது. அது 12% உயரவும் கூடும். 5%மாக குறையவும் கூடும்.
//
இதுபற்றி எனது கருத்து, ஒரு பதிவில் எழுதப்பட்டது தான்.
விஜயகாந்த் இதுவரையில் தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதாகக் கூட மக்கள் மன்றத்தில் காட்டவில்லை. ஒருகூட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்தி வருவதாகவும், மறுநாள் கூட்டத்தில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதாக நாளொரு பேச்சு பேசி வருகிறார். எதுவுமே செய்யாதவர்கள் இவரது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்துவதாக முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் இருந்தே விஜயகாந்தின் அரசியல் வெறும் தூற்றல் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சென்ற சட்டமன்ற தேர்தலில் 'பதிவான' வாக்குகளில் வி.காந்த் வாங்கியது வெறும் 8 விழுக்காடு, அதாவது 'மொத்த' வாக்களர்களில் 5 விழுக்காட்டினர் வி.காந்துக்கு வாக்களித்தனர், அதிலும் 3 விழுக்காட்டினர் முதல் முறை நிற்கிறார் என்பதாலும் திராவிட கட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதற்காக கிடைத்த வாக்குகள் தான். 1 விழுக்காடு ரஜினி கட்சி ஆரம்பிக்காத எரிச்சலில் வி.காந்தை ஆதரித்த ரஜினியின் முன்னால் ரஜினி ரசிகர்க்கள், 1 விழுக்காடு சரத்குமாருக்கும் மதுரை இடைத்தேர்தலுக்கு கிடைத்தது போல் தெளிவற்ற வாக்களர்களால் போடப் பட்டது, அதிலும் மீதம் ஒரே ஒரு விழுக்காடு தான் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களில் வாக்குகள், வி.காந்தின் வாக்கு வங்கி என்றால் அது அந்த ஒரு விழுக்காடு மட்டுமே, சென்ற முறை வி.காந்துக்கு வாக்களித்த மற்ற 4 விழுக்காட்டினர் எப்போதும் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
அரசியல் பணம் - எழுதுப்பிழையாக விழுந்ததா ? அவருடைய முதலீடுகளைச் சொல்கிறீர்களா ?
ReplyDelete*****
கோவி.கண்ணன்,
அரசியல் பயணம் என்று தான் எழுத நினைத்தேன் :))
சுட்டிகாட்டியமைக்கு நன்றி. திருத்தி இருக்கிறேன்
ஜோ, கோவி.கண்ணன்,
ReplyDeleteஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
விஜயகாந்த் தெளிவில்லாமல் இருந்தாலும் அவரைச் சுற்றி எழுப்பப்படும் சோத்தனமான பிரச்சாரங்களே அவரது வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம். அவரின் பல நகைச்சுவை உளறல்களை இந்த ஊடகங்கள் வெளிப்படுத்துவதில்லை.
திமுக-அதிமுக என்று சென்று கொண்டிருக்கும் தமிழக அரசியலை கருணாநிதிக்கு பின்பு அதிமுக-தேமுதிக என்று மாற்ற வேண்டும் என்பது சில மேல்தட்டு ஊடகங்களின் பேராசை. கருணாநிதியை சார்ந்த திராவிட பிம்பம் அவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்து வருகிறது. அந்த பேராசையை மக்களிடம் திணிக்கவே விஜயகாந்த்தை பிரச்சாரம் மூலம் வளர்த்து வருகிறார்கள். தமிழக அரசியலை சினிமா பிரபலங்களை கொண்டு நடத்துவதன் மூலம் திராவிட அரசியலை சிதைப்பது தான் அவர்களது நோக்கம். விஜயகாந்த்திற்கு கிடைக்கும் வாக்குகள் இந்த மேல்தட்டு ஊடகங்கள் திணிக்கும் பிரச்சாரத்தி்ற்கு கிடைக்கும் வாக்குகள் என்றும் சொல்லலாம்.
உங்களுடைய ஆய்வில் மேற்கு மாவட்டங்களைப்பற்றிய கணக்குகளே இல்லை.தற்போது புதிதாக கொங்குநாடு முன்னேற்றப்பேரவை என்கிற அரசியல்கட்சி கவுண்டர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் ஒரு பிரம்மாண்ட 5 லட்சம்பேர் கலந்துகொண்ட மாநாட்டை கோவையில் நடத்தினர்.இங்கு தற்போதைய நிலவரப்படி இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என தெரிகிறது.
ReplyDeleteதமிழ் சசி,
ReplyDeleteமிக தெளிவான அலசல், நீங்கள் சொன்னது போல் மிக பரிதாபத்துக்குரியவர்கள் சமுதாய அக்கறையாளர்கள்தான்...
உங்களுடைய ஆய்வில் மேற்கு மாவட்டங்களைப்பற்றிய கணக்குகளே இல்லை.தற்போது புதிதாக கொங்குநாடு முன்னேற்றப்பேரவை என்கிற அரசியல்கட்சி கவுண்டர்களால் ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் ஒரு பிரம்மாண்ட 5 லட்சம்பேர் கலந்துகொண்ட மாநாட்டை கோவையில் நடத்தினர்.இங்கு தற்போதைய நிலவரப்படி இதன் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என தெரிகிறது.//
ReplyDeleteபொதுவாக நாம் சாதிக்கட்சிகளை ஆதரிப்பதில்லை என்றாலும் கோவையைச் சார்ந்தவன் என்ற முறையில் அங்கிருந்து வரும் தகவல்கள் அப்படித்தான் தெரிவிக்கின்றன.
கோவை சிபி அவர்களின் கருத்து ஆழ்ந்து நோக்கத்தக்கது.
எங்கள் ஊரிலும் அருகிலுள்ள கிராமங்களிலும் அந்தப் பேரவை மிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது..நிறைய பேர் தொடர்ச்சியாக அக்கட்சியில் இணைந்து வருகிறார்கள்........ தனியரசு / ஆடிட்டர் இவர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டாலும் கோவை மாநாட்டை மிகப் பெரியதாக நிகழ்த்திக்காட்டினார்கள்!
இவர்கள் பலம் என்ன இந்தத் தேர்தல் தான் பதில் சொல்ல வேண்டும்.
ரொம்ப பாதுகாப்பான பதிவு சசி :-)
ReplyDeleteஇந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.
ReplyDelete:-)
//தமிழக அரசியலை சினிமா பிரபலங்களை கொண்டு நடத்துவதன் மூலம் திராவிட அரசியலை சிதைப்பது .. //
valid point
//தனிப்பட்ட பலத்தில் திமுகவை விட அதிமுக பலமான கட்சி என்பதை மறுக்க முடியாது//
அப்டியா ...? அதிமுக நீறுபூத்த நெருப்பாய் இருக்கிறதா? இல்லை, முழுசாக நீறு பூத்துவிட்டதா?
இரண்டாம் நிலை மாதிரியல்லவா தெரிகிறது.
//குமரி மாவட்டம் குறித்து அதிகம் தெரியாது. அதைக் குறித்து எழுதுங்களேன்....//
ReplyDeleteதேமுதிக அதிகம் வாக்குகள் பெற வாய்ப்புள்ள இரு தொகுதிகளில் இது ஒன்று !!
மற்றொன்று விருதுநகர்
--
விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தை எப்படி அளவிடுகிறீர்கள் என அறிந்து கொள்ள விழைகிறேன். பாமக, மதிமுக போன்ற கட்சிகள் சில இடங்களுக்காக இலங்கைத் தமிழர் பிரசினையில் சம்ரசம் செய்து கொண்டுவிட்டார்கள் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள். அவர்களை விடக் குறைவான இடங்களுக்காக வி.சி. திமுகவோடு இணைந்து கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? சில வாரங்களுக்கு முன் இலங்கைப் பாதுகாப்புப் பேரவையில் உள்ள கட்சிகள் தனி ஒரு அணியாக நிற்க வேண்டும் என எழுதியிருந்தீர்க்ள். வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள பாமகவும், தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள மதிமுகவும், வடமாவட்டங்களில் செல்வாக்குள்ளதாகக் கருதப்படும் வி.சியும் ஓர் அணியில் நின்றிருந்தால் இவர்கள் பேரம் பேசும் இடங்கள் அளவிற்குக் கூட வெற்றி பெற்றிருக்க முடியாதா? முடியும் என்றால் இந்தக் கட்சிகள் ஏன் அதற்கு முயலவில்லை? இல்லை இலங்கை பிரசினை தமிழகத்தில் ஒரு போதும் தேர்தல் பிரசினையாக இருக்க முடியாதா? உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விருப்பம்.நன்றி -மாலன்
ReplyDeleteவிடுதலைச் சிறுத்தைகளின் பலத்தை எப்படி அளவிடுகிறீர்கள்
ReplyDelete********
மாலன்,
விடுதலைச் சிறுத்தைகளின் பலம் என்பது என்னுடைய பகுதியில் என் அனுபவத்தை கொண்டு கணிப்பது. உதாரணமாக நெய்வேலியில் இருக்கும் தொழிற்சங்கங்களில் மிகவும் பலமான தொழிற்சங்கம் தொமுச (திமுக). அடுத்த இடம் SC/ST Federation - இது முழுமையாக திருமா பின் நிற்கிறது. இளையபெருமாளுக்கு காட்டுமன்னார்கோவிலில் இருந்த செல்வாக்கு அப்படியே விடுதலைச் சிறுத்தைகளுக்கு தற்பொழுது உள்ளது. நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவன் என்ற முறையில் அங்கிருக்கும் சூழ்நிலையை கொண்டு இதனை கணிக்கிறேன். திருமாவின் உண்மையான பலம் வெளியே தெரியாமல் போனதற்கு அவர் எப்பொழுதுமே பிற கட்சியின் சின்னங்களில் போட்டியிட்டது தான். முதன் முதலாக தேர்தலில் நின்ற பொழுது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சின்னத்தில் நின்றார். அடுத்த முறை திமுக சின்னத்திலேயே நின்றார்.
இதனால் அவரது உண்மையான பலம் தெரியவில்லை. அது அவர் செய்த மிகப் பெரிய தவறு
அலுவலகத்திற்கு ஓட வேண்டும். மாலையில் விரிவாக இது குறித்து எழுதிகிறேன்
நன்றி...
//ராமதாஸ், வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகளை நம்பி ஈழத்தமிழர் போராட்டத்தில் இறங்கிய திருமாவின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது.//
ReplyDeleteதவறு. திருமாவை நம்பிய இந்த இருவரும்தான் பரிதாபத்துக்குரியவர்கள். தான் எதிர்த்த காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தது எதற்காக ? எல்லாம் சீட்டுக்குதான்..
//வைகோ குறித்து எதுவும் பேச தேவையில்லை என நினைக்கிறேன்.//
எதுவும் பேச தேவை இல்லாத தலைவர் எப்படி போன தேர்தலில் 4MP வாங்க முடிந்தது ?
//அலுவலகத்திற்கு ஓட வேண்டும். மாலையில் விரிவாக இது குறித்து எழுதிகிறேன்//
ReplyDeleteஅன்பின் சசி,
அவசியம் எழுதவும். ப.ம.க மற்றும் வி.சி கட்சிகளின் பலம் என்னவென்பது புரியாத புதிராகவேயுள்ளது.
- வழுத்தூரான்...
so which group our King Maker Praba is going to support? ;)
ReplyDeleteபிராமணர்களை கூடவே வைத்து கொண்டு பிராமின குடும்பங்களில் பெண்ணெடுத்து சாதி ஒழிப்பு நிகழ்த்திக்காட்டிய கருணாநிதியை நம்பி அரசியல் செய்யும் திருமாவை பார்த்தால் பாவமாக உள்ளது. தமிழுக்காக கருணாநிதி உழைத்த உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் விதமாக கூட்டணி கொள்வதாக கொண்டாலும் இவருக்கு உரிய முதல் மரியாதை கிடைக்குமா என்றால் சந்தேகமே.
ReplyDeleteசொந்த குடும்பத்திலேயே அரசியல் செய்த மாதலைவர் கலைஞர். தன் சுயலாபத்திற்கு பேரனையே வெட்டி விட்டவர். ஒட்டவிடாமல் நடு தெருவில் நிக்க விட்டவர். ரோட்டோரம் நிற்க தகுதி இல்லாதவர்கள் கூட தயாநிதியை சட்டையை பிடித்து கேள்வி கேட்க வைத்த சாணக்ய தலைவர். வேர்வை சிந்தாமல் சன்னுக்கு இணையான டிவி நெட்வொர்க்கை நிர்மாணித்து தமிழ் மக்களை சீரழிவு கலாச்சாரத்திற்கு நெட்டித்தள்ளிய வித்தகர். குடும்பத்து உறுப்பினர்கள் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உட்பட எல்லோரையும் கழகத்தில் பொறுப்பு கொடுத்து அழகு பார்ப்பவர் பெரியவர் கலைஞர்.
இப்படிப்பட்ட கலைஞரை ஆதரிப்பதாகவே கொண்டாலும் கலைஞருக்கு பின் ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன் போன்ற பதவியும் நிர்வாகமும் அதிகாரமும் கையைவிட்டு நழுவிவிடகூடாது என நினைக்கும் நிலையில் ஒரு புழுவை மதிக்கும் அளவாவது மதிப்பார்களா என்பது என் சந்தேகம். ராமதாசை விட்டுத்தள்ளுங்கள். ஆரம்பத்தில் வைத்திருந்த அளவீடை மக்களால் எளிதில் மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால் அன்புமணியையே அறிவிலும் ஆளுமையிலும் நாகரீகத்திலும் மேன்மையிலும் மென்மையிலும் உலகளாவிய அளவில் சூட்டான அன்புமணியையே அவர்கள் கிஞ்சித்தும் ஒரு உயிராககூட மதிப்பதில்லை. நிலைமை இப்படியிருக்க இந்த வாரிசுகள் செழிக்க, கொழுக்க, நம்மக்களை சீரழிக்க நம் திருமா இவர்களுக்காக கூட்டணி அமைத்து உதவத்தான் வேண்டுமா? யோசிக்க வேண்டுகிறேன்.
ஊருக்கு ஒதுக்கு புறமாக தள்ளி வைத்தது போல ஒண்டு திண்ணையில் ஓரம்மாக நிற்கவைத்து பேசும் ஊர்காரர்கள் போல ஒரு சீட் என்பது கேவலமாக இல்லையா? இடஒதுக்கீட்டில் சட்டபடி இருபது சதம் பெற்று விட்டோம். ஆனால் நமக்கு இன்னும் ஒரு சீட் தானா? கேவலம் முஸ்லிம்கள் கூட இரு கட்சிகளைகொண்டு இரு சீட் பெற்று விட்டார்கள். நாம் எங்கு ஏமாறுகிறோம்? எப்படி ஏமாறுகிறோம்? இதுதான் கருணாநிதியின் சாதி ஒழிப்பு கொள்கையா? புரியவில்லை. இன்னும் மாயாவதி பீவர் இங்கும் பரவி விட்டால் எனென்ன இழப்புகள் ஏற்படுமோ? திருமா அவர்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவருக்காகவே அர்பணித்திருக்கும் தோழர்களை சலிப்படைய செய்து விடக்கூடாது.
அப்புறம் மாலனுக்கான பதிலில் நெய்வேலியில் திருமாவின் வீச்சு பற்றி குறிப்பிட்டுருந்தீர்கள். ஆனால் இங்குதான் வன்னியர்களுக்கு எதிராகவும் தலித்களுக்கு எதிராகவும் அதேர்ஸ் என்று ஒரு பொலிடிக்ஸ் உண்டு. மேலும் தொமுசவிலும் வன்னியரும் எஸ்சியும் வெற்றி பெறுவதென்பது குதிரைகொம்ம்பு. அதனால் ஏற்பட்ட வெறுப்பு தான் இங்கு பாமாக தொழிற்சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம். இன்றும் மது இல்லாமல் பணம் விளையாடாமல் குறைந்த காலத்தில் நல்ல முறையில் தேர்தல் நடந்ததென்றால் அது பாமாகாவின் தேர்தல்தான். ஆனால் எஸ்சி எஸ்டி பிடேரேசன் ஒற்றுமையாய் இருக்கிறார்களா? சந்தேகமே!
ஆக தேர்தல் கால திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டுமே ஒழிய வறட்டு பிடிவாதம் பார்ப்பது நல்லதில்லை. மருத்துவரை பாருங்கள். ஒரு கட்சி விடாமல் இடது சாரிகள் உட்பட ராஜீய சபை சீட் வாங்கிய ஈரம் காயாமல் அணி மாறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அர்ச்சனைகள் கிடைக்கிறதா? வலைஞர்கள் உட்பட கும்முகிர்ரார்களே...ஏன்? காய்த்த மரம் தான் கல் படும். ராமதாசை பின்பற்றி அரசியல் செய்ய செய்யுங்கள். எருதுகளை மோதசெய்யும் சூழ்ச்சிகளுக்கு இனியும் இறை ஆக வேண்டாம். கலைஞரை நம்பி மோசம் போக வேண்டாம்.
சசி,
ReplyDeleteநல்ல அலசல்...
//மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.
//
என்ன செய்ய?? இப்படி ஆகிவிட்டது தமிழார்வலர்களின் நிலை :(
//தமிழக அரசியலை சினிமா பிரபலங்களை கொண்டு நடத்துவதன் மூலம் திராவிட அரசியலை சிதைப்பது தான் அவர்களது நோக்கம். விஜயகாந்த்திற்கு கிடைக்கும் வாக்குகள் இந்த மேல்தட்டு ஊடகங்கள் திணிக்கும் பிரச்சாரத்தி்ற்கு கிடைக்கும் வாக்குகள் என்றும் சொல்லலாம்.//
எனக்கென்னவோ, அவர்களின் இந்த ஆசை நிறைவேறும் என்றே தோன்றுகின்றது...
//விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் //
ReplyDeleteநீங்கள் சொல்வது கூட காமெடியாகத்தான் உள்ளது.
டெக்ஸாஸ்ல உக்காந்துகிட்டு எழுதுவது ரொம்ப ஈசி.ஆனால் நம்மூரில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் (குறிப்பாக ஓட்டுப்போடப்போகும் பாமர மக்கள்) திருப்த்திப் படுத்த இப்படித்தான் பேசியாக வேண்டும் என்பதை சற்று நினைவில் நிறுத்தி எழுதவேண்டும். அது உங்களை போன்ற அறிவு ஜீவிகளுக்கு நகைச்சுவையான உளறலாக தெரிந்தால் அதற்கு பாவம் இவர் என்ன செய்யமுடியும்.
வேண்டுமானால் நீங்கள் கற்றுக்கொடுக்கலாமே?!
நீங்கள் சொல்வது கூட காமெடியாகத்தான் உள்ளது.
ReplyDeleteடெக்ஸாஸ்ல உக்காந்துகிட்டு எழுதுவது ரொம்ப ஈசி.ஆனால் நம்மூரில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் (குறிப்பாக ஓட்டுப்போடப்போகும் பாமர மக்கள்) திருப்த்திப் படுத்த இப்படித்தான் பேசியாக வேண்டும் என்பதை சற்று நினைவில் நிறுத்தி எழுதவேண்டும். அது உங்களை போன்ற அறிவு ஜீவிகளுக்கு நகைச்சுவையான உளறலாக தெரிந்தால் அதற்கு பாவம் இவர் என்ன செய்யமுடியும்.
வேண்டுமானால் நீங்கள் கற்றுக்கொடுக்கலாமே?!//
அதாவது நீங்கள் சார்ந்த கட்சித்தலைவர் மக்களிடம் உளறியாவது முன்னுக்கு வர வேண்டும் என்பது உங்கள் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அதே போல ஆசையில்லை என்று வருத்தபப்டுவது முட்டாள்தனம் அனானி!
பாமக, மதிமுக போன்ற கட்சிகள் சில இடங்களுக்காக இலங்கைத் தமிழர் பிரசினையில் சம்ரசம் செய்து கொண்டுவிட்டார்கள் என்பது போல் எழுதியிருக்கிறீர்கள். அவர்களை
ReplyDeleteவிடக் குறைவான இடங்களுக்காக வி.சி. திமுகவோடு இணைந்து கொண்டிருக்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?
***********
திருமாவளவன் ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் செய்தார் என நான் திடமாக நம்புகிறேன். அவரை அறிந்த வகையிலும்,
தனிப்பட்ட வகையில் தெரிந்த கருத்துக்களையும் கொண்டே இதனை கூறுகிறேன். சிறிய கட்சியான விடுதலைச் சிறுத்தைகளால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.
தவிரவும் பாமக போன்று விடுதலைச் சிறுத்தைகள் வாக்கு பலம் கொண்ட கட்சியும் அல்ல. எனவே பாமக, மதிமுக போன்ற கட்சிகள் முன்வராமல் விடுதலைச் சிறுத்தைகள் தனிப்பட்ட அளவில் எதுவும் செய்ய இயலாது.
பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தனியான ஒரு அணி அமைக்க முன்வராத சூழ்நிலையில் திருமாவால் எதுவும் செய்ய முடியாது. அவர் காங்கிரசை திமுக கூட்டணியில் இருந்த பொழுதும் கடுமையாக எதிர்த்தார். பாமக போன்று சமரசம் செய்து கொள்ளவில்லை.
திமுக ஆட்சி தமிழகத்தில் காங்கிரசை நம்பி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வலுவாக திமுகவை ஆதரித்து இருந்தால் திமுக தன்னுடைய ஆட்சியை இழக்கும் கவலை இல்லாமல் ஈழப்பிரச்சனையில் ஈடுபட்டிருக்க முடியும். அதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முயன்றது. திமுக பிற தமிழ் கட்சிகளை நம்புவதை விட காங்கிரசை அதிகமாக நம்புகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் திமுகவா, அதிமுகவா என்ற நிலையில் அவர் ஏற்கனவே இருந்த திமுகவுடனே தங்கி விட்டார். இது ஒரு வகையில் ஈழப்போராட்டத்திற்கு எதிரானது தான். ஆனால் அதனை அவர் வேறு வழியில்லாமல் தான் செய்தார்.
இது எதுவும் வேண்டாம் தனித்து நிற்கலாம் என்றால், இந்திய ஜனநாயகம் என்ன அமெரிக்க ஜனநாயகம் போன்றதா ? சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக
சிக்காகோ நகரில் சுற்றிக் கொண்டிருந்த ஒபாமா இன்று அமெரிக்க ஜனாதிபதி. இங்கு ஜனநாயகம் தழைக்கிறது. ஆனால் இந்தியாவில் நவீன மன்னராட்சியும், பண ஆட்சியும் தானே நடைபெறுகிறது ? பணம் இல்லா விட்டால் தேர்தல் வெற்றி சாத்தியமா ? என்னை விட மூத்த பத்திரிக்கையாளரான உங்களுக்கு இது குறித்து தெரிந்திருக்கும்.
விஜயகாந்திற்கு மறைமுகமாக பணத்தை கொட்டுபவர்கள் திருமாவிற்கு பணத்தை தருவார்களா ? ஒபாமாவிற்கும் பணம் தேவைப்பட்டது. அவர் அதனை மக்களிடம் இருந்து திரட்டினார். இங்கே இருக்கும் ஜனநாயகம் அப்படியானது. இந்தியாவில் உள்ளது ஜனநாயகமே அல்ல.
தனித்து நின்று நாசமாக போவதை விட ஒரு இடத்தில் வென்றாவது திருமா பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். பலரின் எண்ணமும் கூட.
இன்றைக்கும் அவரை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து அவரை வெளியேற்ற கோருகிறதே ? அது ஏன் ?
********************************************
சில வாரங்களுக்கு முன் இலங்கைப் பாதுகாப்புப் பேரவையில் உள்ள கட்சிகள் தனி ஒரு அணியாக நிற்க வேண்டும் என எழுதியிருந்தீர்க்ள். வட மாவட்டங்களில்
செல்வாக்குள்ள பாமகவும், தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள மதிமுகவும், வடமாவட்டங்களில் செல்வாக்குள்ளதாகக் கருதப்படும் வி.சியும் ஓர் அணியில்
நின்றிருந்தால் இவர்கள் பேரம் பேசும் இடங்கள் அளவிற்குக் கூட வெற்றி பெற்றிருக்க முடியாதா? முடியும் என்றால் இந்தக் கட்சிகள் ஏன் அதற்கு முயலவில்லை? இல்லை
இலங்கை பிரசினை தமிழகத்தில் ஒரு போதும் தேர்தல் பிரசினையாக இருக்க முடியாதா? உங்கள் கருத்துக்களை அறிந்து கொள்ள விருப்பம்.நன்றி -மாலன்
********************************************
ஈழப் பிரச்சனை, தேர்தலில் முக்கியமான முதல் இரண்டு பிரச்சனைகளில் ஒன்று என்பதாக தான் குமுதம் இதழ் தனது கருத்து கணிப்பில் தெரிவிக்கிறது. அதனால் தான் ஈழத்தமிழர்கள் என்று எவரும் கிடையாது என கூறிய ஜெயலலிதா, ஈழப்பிரச்சனையை சார்ந்து காலந்தாழ்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். காங்கிரஸ் கூட்டணிக்காக தன்னுடைய ஆரம்பகால ஈழநிலைப்பாட்டினை மறந்து போயிருந்த விஜயகாந்த் கூட சமீபகாலங்களில் திடீர் ஞானோதயம் பெற்று ஈழப்போராட்டம் சார்ந்து பேச
தொடங்கினார். எனவே ஈழப்போராட்டம் தமிழகத்தில் ஒரு முக்கியமான பிரச்சனையே என்பதை புரிந்து கொள்ள முடியும்.
அதிமுக கூட்டணி தேர்தல் வெற்றிக்காக ஈழபோராட்டம் குறித்து பேசப்போகிறது. அதன் அறிகுறிகள் தென்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் தமிழர்களின் முக்கிய
எதிரியாக நான் கருதும் ஜெயலலிதா, இந்தப் போராட்டத்தை பற்றி தன்னுடைய தேர்தல் வெற்றிக்காக மற்றவரை விட அதிகமாக பேசுவார். எப்படியாவது வெற்றியை அறுவடை செய்வது தான் அவரது எண்ணம்.
பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் இயங்கிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒரு தனி அணியாக மாற்றப்பட வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருந்தது. இந்தக் கட்சிகள் ஈழபோராட்டத்தில் எப்பொழுதுமே சமரசம் இல்லாத நிலைப்பாட்டினை கொண்டிருந்ததே அதற்கு காரணம். ஆனால் பாமக, மதிமுக போன்ற கட்சிகள் இதற்கு முன்வரவில்லை. ஒரு புதிய அணியில், புதிய முயற்சியில் தங்களை பரிசோதனை செய்து கொள்வதை விட கடந்த காலங்களை போன்ற சுலபமான வெற்றியை தான் இந்தக் கட்சிகள் விரும்புகின்றன. அதனால் தான் பாமக, மதிமுவை நான் விமர்சிக்கிறேன். தவிரவும் விஜயகாந்த்திற்கு கிடைக்கும் பணம் இவர்களுக்கு கிடைக்காது. இதனை ஏன் என்று நான் விளக்க வேண்டியதில்லை. அனைவருக்கும் தெரிந்தது தான். இதன் காரணமாகவே தனி அணி ஏற்படவில்லை என நான் நம்புகிறேன்.
நன்றி...
கோவை சிபி, மதிபாலா,
ReplyDeleteசமீபத்தைய கொங்கு நிகழ்வுகள் குறித்து அறிந்திருக்கிறேன். அதன் தாக்கம் குறித்து இந்த தேர்தல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். ஆனால் எனக்கென்னவோ இவையெல்லாம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது. பார்க்கலாம்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
நரேஷ், தருமி, பதி, சந்திர சேகரன் மற்றும் பின்னூட்டங்கள் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
//மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.//
ReplyDeleteஉண்மைதான்!
//கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பிரித்த 8% வாக்கு தான் தற்போதைய திமுக அரசை மைனாரிட்டி அரசாக்கியது.
விஜயகாந்த்தின் முந்தைய 8%, தற்பொழுது 12% என்ற அளவுக்கு உயர்ந்தால் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.
8%, 5-6% என்றானால் அதிமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்
முழுமையான 40 யாருக்கும் கிடைக்காது//
பெரும்பாலும் இதுதான் நடக்கப்போகிறது.
//மக்களுக்கு ?
சில்லறை காசும், பட்டை நாமமும் கிடைக்கும்.
//
அது போதுமென்று இருப்பவர்களுக்கு வேறென்ன வேண்டும்?
//அதாவது நீங்கள் சார்ந்த கட்சித்தலைவர் மக்களிடம் உளறியாவது முன்னுக்கு வர வேண்டும் என்பது உங்கள் ஆசை. ஆனால் எல்லோருக்கும் அதே போல ஆசையில்லை என்று வருத்தபப்டுவது முட்டாள்தனம் அனானி!//
ReplyDeleteமுதல்ல என்ன சொல்லவரேன்னு புரிஞ்சிக்குறனும். இல்லாட்டி உளறாலாத்தான் தெரியும்.
பாமர மக்களுக்கு புரியும் படி பேசினா உங்கள மாதிரி படித்த மேதாவிகளுக்கு உளறல் மாதிரித்தான் தெரியும்.
பெயரில் மட்டும் மதி இருந்தால் போதுமா?
//திமுக ஆட்சி தமிழகத்தில் காங்கிரசை நம்பி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் வலுவாக திமுகவை ஆதரித்து இருந்தால் திமுக தன்னுடைய ஆட்சியை இழக்கும் கவலை இல்லாமல் ஈழப்பிரச்சனையில் ஈடுபட்டிருக்க முடியும். அதற்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு முயன்றது. திமுக பிற தமிழ் கட்சிகளை நம்புவதை விட காங்கிரசை அதிகமாக நம்புகிறது.//
ReplyDeletesimple reason. if cong forms govt at center, mu.ka will have the remote control.nayar pudicha puli vaaldhan. he has no hold on the local parties. dhinamum aatchiyil pangu keppargal.
தங்கள் விளக்கஙகளுக்கு நன்றி. அவ்ற்றில் சிலவற்றிற்கு இன்னொரு கோணம் உண்டு. சில விவாதத்திற்குரியவை. நேரம் வாய்க்கும் போது (இடம் கருதி) என் பதிவில் அதனைச் செய்ய முயற்சிக்கிறேன்.
ReplyDeleteமாலன்
சேரல் நன்றி...
ReplyDeleteமாலன்,
எழுதுங்கள். வாசிக்க ஆவல் உண்டு. நன்றி...
முதல்ல என்ன சொல்லவரேன்னு புரிஞ்சிக்குறனும். இல்லாட்டி உளறாலாத்தான் தெரியும்.
ReplyDelete//
அன்பு அனானி ,
இது உங்களுக்கா இல்லை விஜயகாந்திற்கா ? உங்களுக்காக இருந்தால் நான் நீங்கள் உளறுகிறீர்கள் என்று சொல்லவே இல்லை. விஜயகாந்திற்காய் இருந்தால் அவர் சொல்வது புரியாததால் தான் பலர் அவர் உளறுகிறார் என்கிறார்.
*****
பாமர மக்களுக்கு புரியும் படி பேசினா உங்கள மாதிரி படித்த மேதாவிகளுக்கு உளறல் மாதிரித்தான் தெரியும்.//
எங்கள மாதிரி படிச்ச ( இன்னொரு முறை சொல்லுங்க...!) மேதாவிங்களுக்கே புரியாம பேசுவது பாமர மக்களை ஏமாற்றத் தான் என்பதை நீங்க சொல்லமலே சொல்லிட்டீங்க போங்க.
***
பெயரில் மட்டும் மதி இருந்தால் போதுமா?//
நன்றி இனிமேல் விவாதத்திலும் மதியை உபயோகப்படுத்த முயற்சிக்கிறேன்.
என்னால் ஆயிரம் உதாரணங்களை அடுக்கடுக்காக இங்கே அடுக்க முடியும். ஆனால் இது விஜய்காந்த் பற்றிய விவாதமில்லையாகையால் இங்கே வைப்பது விவாதத்தின் போக்கை திசை திருப்ப வல்லது என்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி.
//இது உங்களுக்கா இல்லை விஜயகாந்திற்கா ? உங்களுக்காக இருந்தால் நான் நீங்கள் உளறுகிறீர்கள் என்று சொல்லவே இல்லை. விஜயகாந்திற்காய் இருந்தால் அவர் சொல்வது புரியாததால் தான் பலர் அவர் உளறுகிறார் என்கிறார்.//
ReplyDeleteவிஜயகாந்த் கூறிய எது உளறலாக இருந்தது என்று விளக்க முடியுமா?
ஒரு வேளை ஜெயலலிதா கூறியது போல அவர் குடித்துவிட்டு உளறுகிறார் என்று கூறுகிறீர்களா?
இப்போதுதான் ஒருவர் சொன்னார், லஞ்சத்தை ஒழிப்பது என்பது இயலாத காரியம், விஜயகாந்து சினிமா பாணியில் டயலாக் விட்டுகிறார் என்று.
ஆனால் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்கமுடியாவிட்டாலும், வாங்குபவர்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தி அதன் தீவிரத்தை குறைக்க முடியும். இல்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் அது நம் தேசத்திற்கே ஆப்பாக அமையும்.
கருனாநிதி, ஜெயலலிதா மற்றும் மூப்பனார் உளறாத உளறல்களா விஜயகாந்த் உளறிவிட்டார்.
ஆனால் இவர்களுக்கு இல்லாத தைரியம் விஜயகாந்திற்கு உள்ளதை பாராட்டாவிட்டாலும், கிண்டல் செய்யாமல் இருப்பது நல்லது.
அன்பு அனானி....
ReplyDeleteநான் மீண்டும் சொல்கிறேன். இது விஜயகாந்த் பற்றிய விவாதமல்ல. இருப்பினும் நீங்கள் வேண்டி விரும்பி கேட்டதால் சில சேம்பிள்கள் இங்கே!
"""""
தேமுதிக ஆட்சிக்கு வந்தால் 5 மாதத்தில் மின் தட்டுப்பாட்டை நீக்குவேன். அதற்கு என்னிடம் திட்டங்கள் உள்ளன. அதை இப்போது கூறினால் காப்பியடித்து விடுவார்கள்.
""""""
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?
"""""
இலங்கையில் அன்று ராவணனால் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இன்று ராஜபக்சேவால் இன்னல் ஏற்பட்டு வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு என்றும் துணை நிற்பவர் விஜயகாந்த்.
இது பிரேமலதா விஜயகாந்த்.
""""""
பேட்டியின்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளால் விஜயகாந்த் கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
முன்பு மக்களுடன் மட்டும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது உங்களது போக்கில் மாறுதல் தெரிகிறதே என்று சில நிருபர்கள் கேட்டதும், கோபத்துடன் நீங்கள் எந்தக் கட்சி என்று தெரியும், நீங்கள் எப்படி கேள்வி கேட்பீர்கள் என்றும் தெரியும், எனது வாயைப் பிடுங்காதீர்கள் என்றார்.
"""""""
இந்த அத்தனை செய்திகளுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இன்று வரை மேடையில் அவர் உருப்படியாகப் பேசிய ஒரே மேட்டர் அவருடைய கல்யாண மண்டபத்தை இடித்து விட்டார்கள் என்பதைத் தான்....!!!!!!!
தேர்தல் ஆணையம் முரசு சின்னத்தை தர மறுத்த போதும் கூட கருணாநிதிதான் சதி செய்கிறார் என்று சொன்னவர் விஜயகாந்த்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதில் அனேக நியாயங்கள் இருக்கின்றன. ஆனால் , மாற்றம் என்ற பெயரில் ஜெயலலிதா போன்ற இன்னொரு சர்வாதிகாரியை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்பது தான்.
மாற்றம் மக்கள் இயக்கத்தின் மூலமாக வரவேண்டும்.
மக்கள் நல்லது கெட்டது அறிந்து தமக்கு உரிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து இன்னமும் சினிமா என்ற மாயையின் மூலமாக தமது தலைவர்களைத் தேடுவதென்பது மிகப்பெரிய முட்டாள்தனம் என்பதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
//கேவலம் முஸ்லிம்கள் கூட இரு கட்சிகளைகொண்டு இரு சீட் பெற்று விட்டார்கள். நாம் எங்கு ஏமாறுகிறோம்? எப்படி ஏமாறுகிறோம்?//
ReplyDeleteyou could have carefully read this part of mr.chandrasekar and condemned. :(
மதிபாலா,
ReplyDeleteபிரேமலதா பேசியது உளறல் தான் ஆனால் விஜயகாந்த் கூறியது ஒன்றும் உளறாக தெரியவில்லை. கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிக்கதான். அண்ணா, எம்ஜிஆர் எல்லாம் எதற்காக கட்சி ஆரம்பித்தார்கள்.
மின் திருட்டை நிறுத்தினாலே மின்சாரத்தட்டுபாட்டை ஓரளவுக்கு குறைக்கலாம். முறையான திட்டமிடல் மற்றும் வினியோகம் மூலம் மின்சாரத்தட்டுப்பாடே இல்லாமல் செய்யலாம்.
விஜயகாந்திற்கு எதிராக கருனாநிதி சதியே செய்யவில்லை என்கிறீர்களா?
சதிகளின் மொத்த உருவமான கருனாநிதி யாருக்கு எதிராகத்தான் சதி செய்யவில்லை? இல்லாவிட்டால் ஒன்றுமில்லாமல் இருந்த குடும்பம் இன்று ஆசியாவின் பணக்கார குடும்பமானது எப்படி.
பலருக்கு குழிபறித்து முன்னேறியவர்தானே கருனாநிதி அவரைப்பற்றி விஜயகாந்த் கூறியதில் தவறில்லை.
you could have carefully read this part of mr.chandrasekar and condemned. :(
ReplyDelete********
மன்னிக்கவும், இந்த வரிகள் நிச்சயமாக ஆட்சேபகரமானதே.
விடுதலைச் சிறுத்தைகளை விட பலம் குறைந்த முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளுக்கு கூட இரண்டு இடங்கள், ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒரு இடமா (தற்பொழுது இரண்டு இடமாகி இருக்கிறது) என்ற ஆதங்கத்திலேயே சந்திரசேகரன் கேட்டிருப்பார் என நம்புகிறேன்.
ஆனால் அதற்காக பயன்படுத்திய சொற்கள் நிச்சயம் ஆட்சேபகரமானதே. அதனை நான் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
மூஸ்லீம் லீக் திமுக சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். எனவே உண்மையில் இவர்களுக்கு இதனை தனியிடமாக கூற முடியாது. அடிப்படையில் அவர்கள் திமுக உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். முஸ்லீம் வாக்குகளை பெறுவதற்காக கருணாநிதி செய்யும் தந்திரம் இது. இதனை அவர் பல காலமாக கடைபிடித்து வருகிறார்.
//// ஊருக்கு ஒதுக்கு புறமாக தள்ளி வைத்தது போல ஒண்டு திண்ணையில் ஓரம்மாக நிற்கவைத்து பேசும் ஊர்காரர்கள் போல ஒரு சீட் என்பது கேவலமாக இல்லையா?
ReplyDeleteஇடஒதுக்கீட்டில் சட்டபடி இருபது சதம் பெற்று விட்டோம். ஆனால் நமக்கு இன்னும் ஒரு சீட் தானா?
கேவலம் முஸ்லிம்கள் கூட இரு கட்சிகளைகொண்டு இரு சீட் பெற்று விட்டார்கள்.
நாம் எங்கு ஏமாறுகிறோம்? எப்படி ஏமாறுகிறோம்?
இதுதான் கருணாநிதியின் சாதி ஒழிப்பு கொள்கையா? புரியவில்லை ////
மன்னிக்கவும்.
முஸ்லிம்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
அவசரத்தில் எழுதும் போது ஏற்ப்பட்ட வார்த்தை தடுமாற்றம்தான் அது. மற்றபடி அதில் எந்த குதர்க்கமும் இல்லை. மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்.
மேலும் கருணாநிதியின் ஏமாற்று அரசியலை குறிப்பிடவே அப்படி எழுதும்படி ஆகி விட்டது.
தமிழ் சசி அதை நல்ல விதமாக புரிந்து கொண்டு விளக்கியுள்ளார். அவருக்கு என் மனதான நன்றி.
உண்மையிலேயே திமுக அணியில் மனிதநேயமக்கள் கட்சிக்கு சீட் கொடுக்காமல் புறக்கணிக்க பட்டதில் வருத்தமே. அதுதான் கருணாநிதி அவர்களின் பாணி. கண்ணப்பன், செஞ்சியார், எல் கணேசன் வரை நம்ப வைத்து சீட் கொடுக்காமல் ஏமாற்றியது போல திருமா அவர்களையும் அவரது இம்பார்டன்சுக்கு ஏற்ப சீட் வழங்கபடாததால் ஏற்பட்ட கோபமே அவ வார்த்தை தவறாக வந்துவிட்டதற்கு காரணம்.
மன்னித்தருள்க. நான் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே.
//Anonymous said... 47 //கேவலம் முஸ்லிம்கள் கூட இரு கட்சிகளைகொண்டு இரு சீட் பெற்று விட்டார்கள். நாம் எங்கு ஏமாறுகிறோம்? எப்படி ஏமாறுகிறோம்?//
ReplyDeleteyou could have carefully read this part of mr.chandrasekar and condemned. :(
//சந்திர சேகரன் said...
மன்னித்தருள்க. நான் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே.//
இதே கிருஸ்தவர்களைப் (அல்லது பா.ஜ.க) பற்றி குறிப்பிட்டிருந்தால் இப்படி ஒரு புகார் comment வந்திருக்குமா..? சந்தேகந்தான்
//you could have carefully read this part of mr.chandrasekar and condemned. :(//
அதென்ன "carefully" .."condemned".??..
"முஸ்லிம்களும் என் அண்டை வீட்டார்" என்பதுதான் எதார்த்தமான கரிசனை. அவர்களைப் பற்றி பேசும்போது மனதில் பயத்தோடு, மனக்கண்ணில் வெளக்கெண்ணேய் விட்டுக்கொண்டு பேசவேண்டும் என்பதெல்லாம் வெத்து மரியாதை.
மூனு வகையான முஸ்லிம்கள் உண்டு. 1. எதார்த்தமான "தமிழ்" முஸ்லிம் 2. muslims with "majority" mindset
3. muslims with "minority" mindset
பத்து வருடத்திற்கும் மேலாக சில முஸ்லிம் பையன்களோடு அருகருகே அமர்ந்து படித்திருப்போம் ..ஆனால் அவர்கள் "வேற்றாள்" என்று உணர்ந்திருக்கமாட்டோம்...அதுதான் எதார்த்தமான நட்பு, "secularism".
2வது வகை வடநாட்டில் அதிகம்.
3வது வகை சமீபகாலமாக தமிழ்நாட்டில் வளர்ந்து,வளர்க்கப்பட்டு வருகிறது..
நம்முடைய Anonymous 3வது வகை என்று நினைக்கிறேன்....நெட்டில் அலைந்து திரிந்து படித்து,,பின்னூட்ட சண்டை போட்டு "முஸ்லிம்கள் எல்லா நாட்டிலும் மைனாரிட்டி (பாக்கிஸ்தான் உட்பட!!)" என்ற பிரிவு மனப்பான்மை கொண்ட "நவீனர்கள்"..
தெரியாமல்தான் கேட்கிறேன் ..நம்மில் பலர் USல்,europe-ல் இருக்கிறோம்...எப்போதாவது அந்த ஊரில் "நான் மைனாரிட்டி(தமிழன்,இந்து..) என்னை தனியாக நடத்து" என்று எதிர்பார்திருப்போமா?..அல்லது உணர்ந்திருப்போமா?
என்னமோப்பா....மனசுல பட்டத சொன்னேன்...ஹம்ம்ம்..
//
ReplyDeleteதெரியாமல்தான் கேட்கிறேன் ..நம்மில் பலர் USல்,europe-ல் இருக்கிறோம்...எப்போதாவது அந்த ஊரில் "நான் மைனாரிட்டி(தமிழன்,இந்து..) என்னை தனியாக நடத்து" என்று எதிர்பார்திருப்போமா?..அல்லது உணர்ந்திருப்போமா?
//
குஜராத்தும், பாபர் மசூதி இடிப்பும், அப்துல் நாசர் மதானியும் ஞாபகத்திற்கு வருகிறதே. என்ன செய்வது.
அமெரிக்காவிலும், ஐரோப்பவிலும் பொடாவும், தடாவும் உங்கள் மீது பாய்ந்தால் அப்பொழுது அலறுவீர்கள்
தமிழகத்தில் தேர்தல்க் கூட்டணிக்கு குற்ப்பிட்ட கொள்கையோ, குறைந்தபட்ச செயலாக்கத் திட்டமோ ஏதும் கிடையாது.
ReplyDeleteஇப்போது ஈழப்பிரச்சினையில் ஒன்றாக அணிச் சேர்ந்திருக்கும் (அப்படிக் கூறிக்கொளளும்)அ.தி.மு.க. , பா.ம.க., கம்யூ.,ம.தி.மு.க. கட்சிகள்
உண்மையில் எந்தச் சூழலில் இணைந்தன?
1) அணு ஒப்பந்த்தில் உடன்பாடு இல்லாத கம்யூ.கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு தரும் ஆதரவை திரும்பப் பெற்றது. தமிழகத்தில் தே.மு.தி.க. உடன் கூட்டணிக்கு முயன்று, அதில் தோற்று அ.தி.மு.க. வுடன் வேறு போக்கிடம் இல்லாமல் கூட்டணி (?) அமைத்தது.
2) கம்யூ. உடன் இருக்கும்போதே காங்கிரைஸை இழுக்க முயன்று (ஜெ. யின் ராஜபக்ஷே ஆதரவு உரை அதற்கு சாட்சி) பின் அது கைகூடாமல் திடீரென்று தேர்தலுக்கு எடுத்த ஆயுதம் 'ஈழப் பிரச்சினை'".
3) பா.ம.க. கடைசி வரை பேரம் பேசி இங்கும் அங்கும் பிடிக் கொடுக்காமல், நல்ல விலைக்கு தன்மானத்தை விற்றது.
4) ம.தி.மு.க. - அ.தி.மு.க. கூட்ட்ணியில் ஸீனியர் (2006 முதல்). அப்போது ஈழத்திற்காக சேரவில்லை. (POTA ஞாபகம் வருகிறதா?)ஆனால் ஒதுக்கீட்டில் அவர் பட்டப் பாடை பார்க்க நல்ல வேளை அவர் கட்சியில் யாரும் இல்லை.
இவர்கள் ஈழப் பிரச்சினைக்காக ஆட்சியை இழந்தவர்களை எதிர்த்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். எதன் பெயரால் ஈழத்தின் பெயரால்.