Sunday, April 26, 2009

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.

இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.

திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.

இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.

இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.

1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.
எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.

1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?

திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?

ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.

இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.

இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.

இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.

ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..

இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.

பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?

கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.

அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

58 comments:

  1. An excellent analysis.

    Nathan

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வதை ஆமோதிகிறேன்.

    - கஜன்

    ReplyDelete
  4. வழக்கம் போல் பா.ம.க.வை பூசி மெழுகியாச்சு

    ReplyDelete
  5. மிக மிக ஆழமானக் கட்டுரை. Voice on wings படித்தவுடன் வந்த ஒரு சின்ன யோசனை இந்தப் பதிவைப்படித்தவுடன் நீங்கியது.
    //
    எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்//
    ரொம்பச்சரி

    ReplyDelete
  6. ***அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.***

    மாற்றம் அது இதுனு எதுக்கு வெட்டிப் பேச்சு பேசுனீங்க?

    ஒரு சாதாரண பாமர திராவிடன் செய்வதும் இதுதான். அவன் எதுவும் மாற்றம் கீற்றம்னு பிதற்றுவது இல்லை.
    வெள்ளையா தெரிகிற ஜெயலலிதாதான் அவனுக்கு "தெய்வமாக"தோனும்.

    அது திராவிடன்களின் சாபம்! நீங்களும் அதற்கு விதிவிலக்கல்ல!

    ஒரு திராவிடன் கிடைக்கலை பாருங்க உங்களுக்கு? ஜெயலலிதாதான் ஈழத்தமிழர் கண்ணீரை துடைக்கப் போறார்.

    உங்க முடிவுப்படியே 40 தொகுதியிலும் ஜெயலலிதா கூட்டணி வெற்றியடையனும். காங்கிரஸ் ஆட்சியை இழக்கனும்.

    அதுக்கப்புறம் பார்ப்போம் யார் ஈழத்தமிழர் கண்ணீரை துடைக்கிறார் என்று.
    இது நடத்தால்தான் தெரியும் உங்கள் முடிவு எவ்வளவு அபத்தமானது என்று.

    கவலைப்படாதீங்க,அது நடக்காது. அதனால் உங்க ச்ஜஷன் அபத்தமாகாது.

    ReplyDelete
  7. வைகோ - ராமதாஸ் போன்றவர்கள் தனியாக கூட்டனி அமைத்திருந்தால் அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கலாம்

    ஆனால் ஜெயலலிதாவிற்கு போடப்படும் ஓட்டு எப்படி கருதப்படும் என்றால்

    1. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டுவந்த அரசிற்கு எதிரான ஓட்டு

    2. விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஓட்டு

    3. தமிழுக்கு எதிரான ஓட்டு

    என்றே கருதப்படும்

    சோ, ராம் ஆகியோர் இந்த வேலையை திறம்பட செய்து திராவிடம் செத்து விட்டது என்று கூறுவார்கள்

    ReplyDelete
  8. வருண்,

    கொஞ்சம் உணர்ச்சிவசப்படாம யோசித்து பாருங்களேன்.

    மாற்றம் வேண்டும் என்பது வெட்டி பேச்சு அல்ல. நான் மட்டும் பேச வில்லை. ஈழ உணர்வாளர்கள் அத்தனை பேரும் ராமதாஸ்-வைகோ-திருமா-சிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து இந்த மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று விரும்பினோம். இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் அந்த அணி அமைந்து இருந்தால், தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதற்கு தலைவர்கள் ஒத்து வர வில்லை என்னும் பொழுது, நானா மாற்றத்தை கொண்டு வர முடியும். அல்லது இந்தியா தான் அமெரிக்காவா, நான் களத்தில் இறங்கி போட்டியிடுவதற்கு.

    நான் காரணங்களை என்னுடைய கட்டுரையில் தெளிவாகவே விளக்கி இருக்கிறேன். கீழ்க்கண்ட வரிகள் என் நிலையை தெளிவுபடுத்துகிறது என நம்புகிறேன். வாசித்து பாரு்ங்கள்.

    ///
    இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.///

    ///
    கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

    திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.
    ///

    அவ்வளவு தான் நான் கூற விரும்புவது

    நன்றி...

    ReplyDelete
  9. Only for revenge we need to vote ADMK.Then Again we r going to face more problems than this.I am not a DMK support.For pain we r taking painkiller,it gives more sideeffect than pain know likethat only your decision expressed.

    ReplyDelete
  10. பார்ப்பனர்கள் பூணூலைப் பிடித்துக் கொண்டு அண்ணாவுக்கு ஓட்டுப் போடவேண்டும் என்று இராஜாஜி ஒரு காலத்தில் சொல்லியது போல் திராவிடர்கள் புடுக்கைப் பிடித்துக் கொண்டு ஜெயலலிதாவுக்கு ஒரு முறை ஓட்டுப் போடவேண்டியதுதான் :-)

    அப்பொழுதாவது கருணாநிதி திருந்துவாரென்று நம்புவோமே.

    ReplyDelete
  11. Mr. Sasi,

    I am sorry if I sounded rude in my earlier post.

    கருணாநிதியை தண்டிப்பது சரிங்க. அவரை தண்டிப்பதால், நீங்க தமிழ் ஈழம் அமைந்துவிடும் என்று நம்புவதுதான் அதிசயம்.

    இது ரெண்டும் வேற வேற விசயம் இல்லையா?

    கருணாநிதிதான் தமிழீழ விடுதலைக்கு குறுக்கே நிற்கிறாரா? கருணாநிதி தமிழின துரோகி என்று சொல்லுங்கள். சரி, நான் மறுக்கவில்லை.

    ஜெயலலிதா ஈழ விடுதலைக்காக போராடுவார் என்று எப்படி நம்புறீங்க?

    அவரும் சாதாரண அரசியல்வாதிதானே? அவருக்கு மட்டும் தமிழீழ மக்களைப்பார்த்தால் கண்ணீர் வருதுனு எப்படி நம்புறீங்க?

    எந்தவகையில் அவர் சிறந்தவர்?

    கருணாநிதியை தண்டிப்பதால் தமிழ் ஈழவிடுதலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.

    அடுத்து ஜெயலலிதாவை நாம் தண்டிக்க வேண்டிய நிலைமை நிச்சயம் வரும்.

    We can go on punish MK and JJ in every alternate election but the problem is not going to be resolved by punishing MK or JJ.

    ReplyDelete
  12. சசி, விரிவான எதிர்வினைக்கு நன்றி. உங்கள் கட்டுரையுடன் பெரும்பாலும் உடன்பட முடியுது (கருணாநிதி, அவரது இன்றைய செயல்பாடுகளின் காரணமா மிக மோசமான முறையில் தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற வரையில்). அவரது கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் செய்வது கூட தக்க தண்டனையே. ஆனா அதை சாத்தியப் படுத்த ஜெயாவை வெற்றி பெறச் செய்யணும் என்பது 'கருணாநிதியை மட்டுமல்லாமல் நம்மையும் தண்டித்துக் கொள்வது போன்றது' என்பது எனது கருத்து. நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.

    ஜெயாவுக்கு வாக்காளித்தால் எந்த பார்ப்பன / தேசிய அரசியலிலிருந்து நாம தனித்து விளங்கணும்ன்னு நினைக்கறோமோ அதே பார்ப்பன / தேசிய அரசியலில் நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதில்தான் போய் முடியும், என்பதுவும் எனது அச்சமா இருக்கு.

    ஒரு மிகச் சிறிய தகவல் என்னை கொஞ்சம் உறுத்தியது. தற்போது அவர் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது அணி, மாயாவதியை ஏகமனதா பிரதம வேட்பாளரா அறிவிக்கும் நிலை இருந்தது சில நாட்களுக்கு முன்பு. அந்தக் கூட்டணியின் முக்கிய அங்கமான இடதுசாரிகள் அதுக்கு சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில், மற்ற அங்கத்தினர்களும் அதற்கு சம்மதித்திருக்கக் கூடிய நிலையில், ஜெயா எடுத்த நிலைதான் அது நிகழவிடாமல் தடுத்தது. பிரதம வேட்பாளரை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம்ன்னு கூறி, அதன் வெற்றி வாய்ப்புகளை (அதாவது, நாம எல்லோரும் விரும்பும் non-Congress, non-BJP alternativeஇன் வெற்றியை) சிதைத்து, பிறகு கூட்டணியிலேயே இல்லாத சரத் பவார் பிரதமராகத் தகுதியனவர்ன்னு குட்டையைக் குழப்பும் ஒரு அறிக்கையை விட்டாங்க. ஒரு தலித் பெண் இந்த நாட்டோட பிரதமரா ஆகும் நிகழ்வை தனது ராஜதந்திரத்தினால் நடக்க விடாமல் செய்தது, அவர் பார்பனிய / தேசிய அரசியலுக்கு வழங்கிய ஒரு வெற்றியே. அது போன்ற இன்னும் பல வெற்றிகளை அவர் சாதிப்பதற்கான வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கணுமா?

    ReplyDelete
  13. வருண்,

    நான் வலைப்பதிவில் அதிகமாக ஈழம் பற்றி தான் எழுதியிருக்கிறேன். அதன் அரசியல் பின்புலங்களை அலசி இருக்கிறேன். கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஈழத்தை பெற்று கொடுப்பார்கள் என்று நினைக்கும் அளவுக்கு என் எழுத்தினை சிறுபிள்ளைத்தனமாக நிச்சயம் நான் அணுகவில்லை. கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஈழத்தை பெற்று கொடுத்து விட முடியாது. தெற்காசிய இராணுவ,பொருளாதார சூழலில் சிக்கியிருக்கும் ஈழத்தை அவ்வளவு எளிதில் அடைந்து விட முடியாது.

    என்னுடைய கட்டுரையை கொஞ்சம் நிதானமாக வாசித்து இருந்தால் இந்தக் கட்டுரையில் எங்கேயும் ஈழத்தை ஜெயலலிதா பெற்றுக் கொடுப்பார் என நான் கூறவில்லை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

    மறுபடியும் என்னுடைய கட்டுரையில் இருந்தே சில வரிகளை கொடுக்கிறேன்.

    ///
    இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.
    ///

    நான் கூறியதெல்லாம் தமிழினத்தை காங்கிரஸ் கட்சியிடம் கெஞ்சிப் பிழைக்கும் பரிதாப நிலைக்கு கருணாநிதி தள்ளி விட்டார் என்பதே...

    ReplyDelete
  14. ரவி,

    ஜெயலலிதாவை நாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

    நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் ஆனால் நான் தான் தமிழினதலைவர் என்ற கருணாநிதியின் மமதை தான் நமக்கு உறுத்தலாக உள்ளது. சோனியாவே கருணை காட்டுங்கள் என்ற கதறல் நம்மை அவமானப்படுத்துவது போல இல்லையா ?

    ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுங்கள் என்பது அவரை ஆதரித்து அல்ல. கருணாநிதிக்கு ஒரு பாடத்தை புகட்டவே. தன்னுடைய அரசியலில் கருணாநிதி தெளிவு பெற வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்

    முன் எப்பொழுதையும் விட கருணாநிதி தமிழின அரசியலின் வலிமையை தற்பொழுது உணரத்தொடங்கி விட்டார் என்றே தோன்றுகிறது. பதற்றமாக உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதே அதற்கு சான்று. என்ன இதுவும் மற்றொரு நாடகமாக முடியப்போகிறது என்பது தான் நம்முடைய கவலை. கருணாநிதி தன்னுடைய தவறினை உணர வேண்டும். அதற்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்பது மட்டுமே என்னுடைய கருத்து.

    ஜெயலலிதாவிற்கு நான் நிச்சயமாக வக்கலாத்து வாங்க முடியாது. காங்கிரசும், ஜெயலலிதாவும் தமிழர்களின் எதிரிகள் என்பதில் நான் தெளிவாகவே இருக்கிறேன். இந்தக் கட்டுரையிலும் அதனை தெளிவாக கூறியிருக்கிறேன் என நம்புகிறேன்...

    ReplyDelete
  15. உங்கள் கருத்து சரியென்றே எண்ணுகிறேன். இருந்தாலும் ஜெவுக்கு குத்த கைவராதே! அந்த 23 தொகுதிகளிலும் 49O-வோ புறக்கணிப்பதோதான் தமிழ் உணர்வாளர்களுக்கு ஒரே வழி. எதிர்ப்பு ஓட்டுக்கள் இப்படிச் சிதறினால், வழக்கமான ஓட்டுகளினாலேயே ஜெ வென்றுவிடுவார்.

    ReplyDelete
  16. திராவிட அரசியல் என்ற கீழ்த்தரமான அரசியல் வியாபாரம் செய்து கருணாநிதி போன்ற களவாணிப் பதர்கள் வெற்றி பெற்றதால் தான் ஒட்டு மொத்தமாக தமிழர்கள் என்றாலே இழி பிறவிகள் என்று ஏனைய திராவிடர்களான கன்னடர்களும்,மல்லுக்களும்,கொல்டிகளும் சொல்கிறார்கள்..தமிழனைப் பார்த்தாலே "எலே பாண்டி எலே திராவிடா" என்று கேவலமாக அழைக்கிறார்கள்.தமிழர்களின் இத்தகைய இழி நிலைக்கு திராவிட அரசியலும்,அதற்கு சப்பைக் கட்டு கட்டும் திராவிட தமிழ் சசி போன்ற அயோக்யர்களும் தான் காரணம்.

    ReplyDelete
  17. ஆழமான அரசியல் ஆய்வு .
    தமிழக மக்கள் மிக குழப்பமான ஒரு தேர்தல் கூட்டணியைத்தான் எதிர் கொண்டு உள்ளார்கள்.இந்த சமயத்தில் தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் இலங்கை அரசுக்கு உதவும் காங்கிரசுக்கு படு தோல்வியையும் ,அந்த காங்கிரசுக்கு அடியாளாக வேலை செய்யும் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கையும் செய்வதற்கு இந்த தேர்தலை தமிழக மக்கள் பயன்படுத்த வேண்டும்.
    ஜெயலலிதா தமிழ் ஈழம் பற்றிச் சொன்னது ஒரு தேர்தல் பல்டி என்பதில் சந்தேகம் இல்லை.ஜெயலலிதாவின் முந்தைய சரித்திரம் பலருக்கு ஒருவித சந்தேகத்தை தருவது உண்மைதான் ,என்றாலும் அவர் தமிழ் ஈழம் பற்றி தேர்தலுக்கு முன்பு பேசியபடியால் அவர் வெற்றி பெற்றால் அது அவரின் அந்த தமிழ் ஈழம் பற்றிய கருத்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்று எடுத்துக்கொள்ளலாம் .
    இன்றைய சூழல் ஒரு அசாதாரண சூழல் ,இந்த நேரத்தில் சில அசாதாரண செயல்களைச் செய்ய வேண்டியுள்ளது.,யதார்த்த நிலையில் காங்கிரஸின் ஈழத்தமிழருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர்களுக்கு படு தோல்வி வரப் பண்ணுவதென்றால் விருப்பம் இல்லாவிட்டாலும் கை கூசினாலும் ஜெயலலிதாவின் கட்சிக்கு வாக்குப் போடுவதுதான் ஒரே வழி.கசப்பு மாத்திரைதான் ,என்ன செய்வது ?
    விஜய காந்த பற்றிய உங்கள் கணிப்பு முற்றிலும் சரியே ,ஒரே ஒரு தொகுதியை வைத்துக்கொண்டு இவர் போடும் நாடகங்கள் இப்போதே இப்படி என்றால் ,அவர் கையில் அதிகாரம் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வாரோ தெரியாது.
    குறிப்பாக ஈழத்தமிழர் விஷயத்தில் பல மாதங்களாக மௌனம் சாதித்து விட்டு அது ஒரு பெரிய விஷயமாக உரு எடுத்தவுடன் சாக்குக்கு சில வார்த்தைகள் சொல்லி வைத்தது அரசியல் நேர்மையைக் காட்டவில்லை.
    இப்போது இந்தி தெரிந்தவர்கள் மட்டும்தான் தனது கட்சியின் சார்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்.இது இவரின் எதிர்கால இந்திய தேசிய அரசியலுக்கு முதலாவது படி.
    பலர் நினைக்கிற மாதிரி இந்திய மத்திய அரசினதும் அதிகார வர்க்கத்தினதும் தமிழின எதிர்ப்புக்கு அவர்கள் தமிழரை ஏளனமாக நினைப்பதுதான் காரணமா?
    இதை ஏன் வேறு விதமான பரிணாமத்தில் சிந்திக்கக் கூடாது.
    உண்மையில் இது ஏளனம் இல்லை ,பயமாகவும் இருக்கலாம் அல்லவா ?
    இன்றைய நிலையில் தமிழர்கள் இனஉணர்வு இல்லாதவர்களாக இளைய சமூதாயத்தினர் தங்கள் தாய்மொழியான தமிழைப் பேசுவதே ஒரு இழிவான செயலாக எண்ணுபவர் மாதிரித் தெரியலாம் ,
    ஆனாலும் தமிழ் நாடு பல விஷயங்களில் தனித்துவமான முன்னோடியான ஒரு மாநிலமாக இருந்த வரலாற்றைக் கொண்டது.
    பெரியாரின் சாதி எதிர்ப்பின் பலனை இன்று தமிழ் நாட்டின் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களின் மக்களும் அனுபவிக்கிறார்கள்
    இந்தி எதிர்ப்பிலும் தமிழ் நாடு தனது தனித்துவத்தைக் காட்டியது.
    இன்று அவர்களின் இந்த சுதந்திர உணர்வும் போராட்ட உணர்வும் சினிமா ,உலகமயமாக்கல் ,நுகர்வோர் கலாச்சாரம் திணிக்கப்பட்ட இந்திய தேசியம் என்பதால் மழுங்கடிக்கப் பட்டு இருந்தாலும் தமிழர்களுக்கே உள்ள இந்த சுதந்திர உணர்வு உள்ளத்தின் மூலையில் எங்கோ கனன்று கொண்டு இருக்கிறது ,அந்தப் பயம் இந்திய தேசிய வாதிகளுக்கு இருப்பதுதான் அவர்களின் ஈழ எதிர்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் ,
    அதுதான் இத்தனை புலிப் பூச்ச்சாண்டிக் கதைகளும் ஈழதமிழ் விடுதலைக்கெதிரான இந்திய தேசிய ஊடகங்களின் பிரச்சாரங்களுக்கும் காரணம்.
    --வானதி

    ReplyDelete
  18. ஜெயலலிதாவுக்கு ஒரு முறை ஓட்டுப் போடவேண்டியதுதான்

    ReplyDelete
  19. உங்கள் நிலையும் கோபமும் புரிகிறது. ஆனால் நீங்கள் சொல்லும் அந்த 'மாற்று' கொஞ்சம் உதைக்கத்தான் செய்கிறது. பலரது கேள்விக்கு நீங்கள் மீண்டும் மீண்டும் "ஜெயலலிதா நல்லது செய்வார் என்று நான் சொல்லவில்லை. கருணாநிதி தோற்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்" என்ற ஒரே பதிலை தான் சொல்கிறீர்கள். "எலியைத் தண்டிக்க வேண்டும் என்று புலியை (ஈழத்து புலி பற்றி பேசவில்லை) வீட்டுக்குள் விடுவது போல் ஆகி விடாதா?" என்ற கேள்விக்கு உங்கள் உறுதியான பதிலை எதிர்பார்க்கிறேன். உங்கள் கருணாநிதியைப் பழிவாங்கும் (சரியான) எண்ணம் "புலியிடம் அகப்பட்டு செத்தாலும் பரவாயில்லை. எலி வேண்டாம்" (அது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்பது புரியவில்லை) என்ற அளவுக்கு போய் விட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

    ReplyDelete
  20. இன உணர்வாளர்கள் சொல்லவொண்ணா துயரில் இருந்ததும் உண்மை; தி.மு.கவின் மீது கோபமுற்று எதையும் செய்யத் தயாராக இருந்ததும் உண்மை!

    எப்போது, அம்மையார் முன்னிறுத்தப்பட்டாரோ அப்போதே அனைத்தும் தவிடு பொடியானதுதான் நிதர்சனம். திராவிடப் பள்ளியில் பாலபடம் படித்தவன் எவனும் இரட்டை இலைக்கு ஒப்பமுக்க மாட்டான் நண்பா!!!

    ReplyDelete
  21. யாரோ அனானி திராவிட அரசியல் என்கிற கீழ்த்தர அரசியல் என்று பின்னூட்டம் போட்டுள்ளார்.
    அப்படியா?
    புரியவில்லை.,அப்படி என்றால் இந்திய தேசிய அரசியல் வாதிகள்தான் மேல்தரமான அரசியல் செய்பவர்களா?
    ஒப்புக் கொள்கிறேன் ,திராவிட அரசியல்வாதிகள் ஊழல் செய்துள்ளார்கள்,செய்துகொண்டு இருக்கிறார்கள்.
    ஆனால் மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் ,மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் வாதிகள் எல்லாம் உத்தம புத்திரர்களா?ஊழலே அறியாத நேர்மை மிக்க அரசியல்வாதிகளா?

    ReplyDelete
  22. "ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்."
    இந்த வரிக்காக இவ்வளவு பெரிய பதிவ படிக்க வச்சிட்டீங்களே.
    மிகவும் நல்ல பதிவு.

    ReplyDelete
  23. அன்பின் சசி,
    உங்க பதிவுக்கு நன்றிகள்.
    ஜெ. க்கு ஓட்டு போட எனக்கு தோன்றும் காரணம், ஒரு தெளிவான எதிரி, திடமான, ஒரு தீர்க்கமான எதிரி கிடைப்பாங்க-ங்கறது மட்டும்தான்.

    இப்போ பாருங்க, தாமரை மாதிரியான தமிழ் உணர்வாளர்கள் கூட கடந்த 6 மாதத்தை வீணாக்கிட்டோம் -ன்னு சொல்றாங்க. இப்போ, ஜெ. பதவி-ல இருந்திருந்தா, அவங்களோட அடக்குமுறை தொடர்ந்து ஒரு அழுத்தத்த கொடுத்து, போராட்டம் நன்கு வெடித்து இருக்கும். ஆனா, கலைஞர் என்ன பண்ணினார்?. போராட்டத்த ஒரு முகப்படுத்தாம, அத பிரிச்சு, பல குழு அமைய காரணமாயிட்டார். இதன் மூலம் ஒரு போராட்டம் காற்று குறைந்து இருக்கும் பலூன் மாதிரி ஆயிருச்சு. இந்த ஒரு செயல் தான் என்னை அவர தமிழினத் துரோகின்னு சொல்ல வைக்குது. ஆனா, ஜெ. இருந்திருந்தா, ஒரு தீர்க்கமான எதிரி இருந்திருப்பாங்க. அதனால, போராடறவங்க எல்லாம், தங்களோட இன உணர்வு என்னும் இழையால் இணைஞ்சு, ஒரே நேரத்துல போராடி இருப்பாங்க. இதுல நான், கலைஞரையும் சேர்த்துதான் சொல்றேன்.
    குறைந்த பட்சம், ஒரு திடமான எதிரிக்காகவாவது, ஜெ. இந்த தேர்தலில் வெற்றி பெறனும்-னு விரும்பறேன்.

    ReplyDelete
  24. பாரி,
    //ஜெ. க்கு ஓட்டு போட எனக்கு தோன்றும் காரணம், ஒரு தெளிவான எதிரி, திடமான, ஒரு தீர்க்கமான எதிரி கிடைப்பாங்க-ங்கறது மட்டும்தான்.//


    சமீபத்துல 1980 களிலே குமுதத்தில் அரசு பதில்:

    கே: 'நாடு போற போக்கில் பேசாமல் கொஞ்ச நாள் இந்தியாவை ஜியா வுல் ஹக் கிட்டே கொடுத்துப் பாக்கலாமா?'
    ப: 'கொடுக்கலாம்தான், பிறகு யாரு போய்க் கேக்கிறது ?'

    உங்க லாஜிக் எனக்கு அதைத் தான் நினைவு ஊட்டுது.

    ReplyDelete
  25. காசி,
    நீங்க சீரியஸா சொல்றீங்க-ன்னா, உங்களுக்கு என் பதில். ஜெ., போலீஸ் ஆட்சிய கையிலெடுக்கனும், அதை எதிர்பாத்துதான் முந்தைய கமெண்ட் எழுதினேன். இவுங்ககிட்ட இருந்து அதிக பட்சம் அஞ்சு வருசத்துல ஆட்சிய வாங்கிரலாம்.

    ReplyDelete
  26. அரசியலில் ஒவ்வொருவரின் கோர முகங்களும் இந்த முறை வெளிப்படையாகவே தெரிகிறது.கலைஞரின் இயலாமை ஏமாற்று அரசியல்,ஜெயலலிதாவின் சந்தர்ப்ப அரசியல்,வை.கோ,ராமதாஸ்,திருமாவின் நிஜ முகங்கள் என எதுவும் நம்பிக்கை தரவில்லை.

    ஒருவேளை ஊரில் இருந்திருந்தால் கோவையில் 49ஓ வுக்கு களம் அமைத்துக் கொடுத்து ஒதுங்கிய மேல் சொன்ன அனைவருக்கும் நன்றி சொல்லி 49 ஓ ஒரு முத்திரை.

    ReplyDelete
  27. Hi Sasi,

    Thanks for the detailed post.

    Yes, Karunanidhi should be aware of the power of the vote. But why can't we suggest that the voters vote for the candidates from PMK, MDMK who are better than Karunanidhi as far as the Tamil Eelam issue is concerned?

    I agree they took the opportunistic stand in this election, but atleast it will give them some validation that they can perform united on this issue (This is how I sounded in Vasanth's post).

    Sorry, I couldn't type it in tamil from my office and felt compelled to post a comment after I read your post.

    Thank you.

    ReplyDelete
  28. You too Sasi..????

    மன்னிக்கவும் சசி வேறு ஏதும் தோன்றவில்லை..

    ReplyDelete
  29. அந்த எலி-புலி விவாதம் சரியாகத் தோன்றுகிறது.

    ReplyDelete
  30. கருணாநிதியை பழிவாங்க ஜெயலலிதாவும், ஜெயலலிதாவை பழிவாங்க கருணாநிதிக்கும் ஓட்டு போட ஈழப் பிரச்சினை ஒரு காரணமாக இருக்கத் தேவையே இல்லை. "வயர்ல கரண்டு வரல்ல, குழாயில தண்ணி வரல்ல" போன்ற பிரச்சினைகளே போதும். இவற்றை வைத்து தான் கடந்த இருபதாண்டுகளாக அம்மாவுக்கும், அய்யாவுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போட்டு "பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்" தமிழ்நாட்டு மக்கள். அவர்களும் பயந்துபோய் திருந்திவிட்டு அடுத்த தேர்தல் வரை காத்திருப்பார்கள்.

    இன்றைய நிலையில் ஈழப் பிரச்சினை சம்பந்தமாக தமிழ்நாட்டு மக்கள் என்ன தான் செய்ய முடியும்? ஒன்றுமில்லை என்பது தான் யதார்த்தம். தமிழ்நாட்டு மக்கள் செய்யக்கூடியதெல்லாம் செய்துவிட்டார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் நடத்தக்கூடிய நாடகங்களை எல்லாம் அரங்கேற்றிவிட்டார்கள். எதையும் இந்திய அரசு சட்டை செய்யவில்லை. இலங்கை அரசு மசிகிற மாதிரியும் தெரியவில்லை. நிலைமை இவ்வளவு தீவிரமடைந்த பிறகும் "ரத்த ஆறு ஓடும், ஆயுதம் ஏந்துவோம், கட்டுமரத்தில் போவோம்" என்று என்னதான் புறநானூற்று வீர வசனங்கள் பேசினாலும் அப்படியான விபரீதங்கள் ஏதும் நடக்கவில்லை. விரக்தியில் தீக்குளித்து இறக்கிறார்களே தவிர கடல் கடந்து போய் யாரும் சண்டையெல்லாம் போடுவதில்லை. இந்தியத் தமிழர்கள் செல்லக்கூடிய எல்லையை இது தெளிவாகவே உணர்த்துகிறது. இதில் ஜெயலலிதா ஈழத்தை வாங்கிகொடுத்தே தீருவேன் புதிதாக சபதம் செய்திருப்பதைக் கண்டு சிரிப்பதா, அழுவதா? கடந்த 25 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி, வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன், வீரமணி, கொளத்தூர் மணி என்று ஆளுக்கொரு ஈழத்தை வாங்கிக்கொடுத்துவிட்டார்கள். இப்போது ஜெயலலிதாவின் முறை. அவரும் இன்னொரு ஈழத்தை வாங்கிக்கொடுக்கப்போகிறார்.

    சண்டை போடுவதோ, சாவதோ, சரணடைவதோ, சமாதானம் பேசுவதோ ஈழத்தமிழர்களே தான் செய்யவேண்டும் என்று தெளிவடைந்துவிட்டது. இரண்டு கோடி சிங்களவர்களோடு, இருபது லட்சம் தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் தான் போராடிக்கொண்டிருக்க முடியும்? ஏழுகோடி இந்தியத்தமிழர்கள் செய்யக்கூடியதெல்லாம் அவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பதுமட்டும் தான். இனியொருமுறை இந்தியா உதவிசெய்வதாக பாவனைக் காட்டினாலும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் வீரவசனம் பேசி உசுப்பிவிட்டாலும் அவற்றைக் கண்டு ஈழத்தமிழர்கள் ஏமாறக்கூடாது. சாட்சிக்காரனும் ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்யமாட்டான், சண்டைக்காரனும் சும்மா விடமாட்டான் என்பது தான் தற்போதைய நிலை. சாட்சிக்காரன் கையைப் பிடித்து கெஞ்சுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்துவிடலாம். சாட்சிக்காரன் கண்டிப்பாக தேவையென்றால் அதற்கு இந்திய அரசையோ அல்லது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையோ நம்பிப் பயனில்லை. மேற்கத்திய நாடுகளிடம் முயற்சி செய்யவேண்டும்.

    தேர்தல் முடிந்த பிறகு இப்போதைய நாடகங்கள் முடிவுக்கு வரும். காட்சிகள் டெல்லிக்கு மாறும். எந்த கூட்டணி, எத்தனை அமைச்சர் பதவிகள், என்னென்ன துறைகள் என்று பேரங்களில் ஈழப்பிரச்சினை காணாமல் போகும். உண்மையிலேயே தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கு அக்கறை இருக்குமென்றால், ஆட்சி அமைக்கப்போகும் கூட்டணியில் இணையும் தமிழ்நாட்டுக் கட்சி(கள்) அப்போது உருவாக்கப்படும் "பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தில்" ஈழம் சம்பந்தமாக எந்தமாதிரியான திட்டத்தை சேர்க்க முயற்சிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதில் உருப்படியாக எதுவும் சேர்க்கவில்லை என்றால் இப்போது ஓட்டு போடும் கட்சியைப் பழிவாங்க அடுத்தத் தேர்தலுக்குக் காத்திருக்க வேண்டியதுதான்.

    ஆகவே இப்படி தமிழ்நாட்டு அரசியலை அக்குவேறு, ஆணி வேறாக பிய்த்துப்போட்டு நேரத்தை வீணாக்குவதைவிட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுத்திக்கொள்வது ஏதாவது பயன் தரலாம்.

    ReplyDelete
  31. துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு போங்கள் தவறில்லை.

    அப்படியில்லாமல் துரோகிக்கு பதிலாக எதிரிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

    ReplyDelete
  32. It is so unfortunate that bloggers like you are playing for Jayalalitha now. Jaya has no respect among the SL Tamils diaspora, and I am afraid if any SL Tamil is carried over by her latest 'pro-separate Ealam' announcement.

    Please bear one thing in mind, be it Tamils of Tamil Nadu, or Tamils of Srilanka or malaysia, only DMK alone can is capable of playing a pro-active role.

    I too had expected DMK to come out of Congress led UPA, but DMK was afraid of the political realignments in the state in the even of its getting out of UPA. AIADMK would have wasted no time in joining Congress. Ramadoss and his PMK would also find it comfortable sailing with Congress.

    Dont you see Thirumavalavan as the WORST POLITICIAN in the whole episode. Thirumavalavan is now begging in the streets of Tamil Nadu and seeking votes in favour of Sonia's Congress Party that is responsible for the killing of tens and thousands of Tamils.

    Kalaignar is still a great leader.
    DMK-BJP-MDMK alliance is the best one for SL Tamils, but it didnt materialize. Had Murasoli Maran been alive, such a combination would have come. Still, let us not lose hope. SL situation is different and Tamil Nadu is different. Kalaignar is UNDISPUTABLY THE BEST TO LEAD TAMILS HERE..... PPPPPPLEEEEEASE DO NOT ALLOW JAYA TO TAKE OVER THE HELM OF AFFAIRS.........IT WOULD REALLY BE DISASTROUS FOR ALL TAMILS!

    - my two cents

    ReplyDelete
  33. எனக்கு இந்தியாவில் வாக்குரிமை இல்லை. என்றாலும் என் கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். சசி சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. கருனானிதியைத் தோற்கடிப்பதிலும், ஜெ வெற்றி பெற்ச் செய்வதிலும் ஒரு உறுதியான செய்தி உண்டு. : தமிழர் உணர்வை மதிக்காதவர்கள் அன்னியப்படுவார்கள்.

    தமிழர் உண்ர்வை மறந்ததால் தோல்வி அடைந்தேன் என 85 வயதில் மு.க புதிய பாடம் கற்க வேண்டும்.
    தமிழர் உணர்வை மதித்ததால் தான் வெற்றி பெற முடிந்தது என ஜெ புதிய கீதையைக் கற்காவேண்டும்.

    ஒரு ஈழத்து தமிழன்

    ReplyDelete
  34. நல்ல பதிவு... இந்திய தேசியம், திராவிட அரசியல் பற்றி கடந்த கால தமிழக நிகழ்வுகளோடு நல்ல அலசல்........நானும் என் வாயால கீழ உள்ள வாக்கியத்த என் வாழ்க்கைல சொன்னுவேன்னு நெனைக்கல..ஆனா சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு என்னை தள்ளிய நான் விரும்பிய கலைஞரே ஆவார் "எல்லாரும் ஜெயலலிதாவுக்கு ஒட்டு போடுங்க"

    ReplyDelete
  35. சசி,
    மிகவும் யதார்த்தமான பதிவு.

    ReplyDelete
  36. திரு.சுந்தரமூர்த்தி தனது பின்னூட்டத்தில் சிங்கள தமிழ் எண்ணிக்கையை பற்றி சொன்னதில் புள்ளிவிபரங்கள் தவறு.
    இரண்டு கோடி சிங்களவர்களும் இருபது லட்சம் தமிழர்களும் என்பது தவறு.
    இலங்கையின் தற்போதைய சனத்தொகையே இரண்டு கோடிதான்
    அதில் சிங்களவரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐம்பது லட்சம்
    ஈழத்தமிழரின் எண்ணிக்கை இலங்கையில் உள்ளவர்கள் இருபத்தைந்து லட்சம் ,வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து உள்ளவர்கள் பத்து லட்சம் ,மொத்தம் முப்பத்தைந்து லட்சம்.
    மற்றவர்களில் இந்திய வம்சாவளி மலையகத்தமிழர் பத்து லட்சம்
    தமிழ் பேசும் முஸ்லிம்கள் பதினைந்து லட்சம்
    -வானதி

    ReplyDelete
  37. Vanathy,
    My statistics can certainly be wrong. It was not my point. Even with your statistics, Sinhalese outnumber Tamils by five to one. That being the reality, fighting against a disproportionately large group and forming an independent state can be only a pipe dream unless an external power assists Tamils in the war. India might have given such an impression at the very early stage but it became clear soon it was not genuine just a ploy. Just emotional rhetoric of Tamils in India has no practical use whatsoever. It is time for Eelam Tamils to continue to internationalize the issue rather than wasting their efforts on gaining support from Tamil Nadu politicians and celebrities. Shouting at Karunanidhi or supporting Jayalalitha may be just a way to vent the anger but it serves no other practical purpose in my opinion. It is time to decouple Eelam issue from Tamil Nadu politics.

    ReplyDelete
  38. It is time to decouple Eelam issue from Tamil Nadu politics.

    **********

    I don’t think so. Also, it is not possible and practical. No one wanted Eelam problem to be part of Tamilnadu politics except pro-eelam friends like you and me. Politicians and Media badly wanted to decouple Eelam from Tamil Nadu politics. But it is only natural that Eelam problem will have its resonance in Tamilnadu poltics. No force in the Earth can stop a natural phenomenon. That’s why we are seeing the current burst after it has been suppressed since 1991.

    ReplyDelete
  39. ***That’s why we are seeing the current burst after it has been suppressed since 1991***

    I think the reason for today's burst is due to SL army's domination and LTTE's defeat. That has never been the case for past couple of decades. Several civilians have been killed due to SL army's attack and LTTE's inabilty to defend/save the innocent tamils or NOT?

    ReplyDelete
  40. I think the reason for today's burst is due to SL army's domination and LTTE's defeat. That has never been the case for past couple of decades.

    ********

    விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது மட்டும் அல்ல.

    இந்த தேர்தலில் ஈழப் பிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சனையாக உருவெடுக்க இருந்த பல காரணங்களில் இன்றைய தகவல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. 1990களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை நோக்கி சிங்கள இராணுவம் முன்னேறிய பொழுது இந்தளவுக்கு அந்த நிகழ்வு தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. போர் அங்கே நடக்கிறது என்பது தெரியுமே தவிர அங்கு மக்கள் பட்ட இன்னல்கள் தெரியவில்லை. கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை அப்பொழுதும் புலிகள் இழக்கவே செய்தனர். முல்லைத்தீவு காடுகள் தான் புலிகள் வசம் இருந்தது. இப்பொழுதும் முல்லைத்தீவு காடுகளில் புலிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    எனவே இன்றைய புலிகளின் தோல்வி மட்டும் காரணமல்ல. அன்றைக்கு இருந்த ஊடகங்கள் ஒட்டு மொத்தமாக இந்தப் பிரச்சனையை புறக்கணித்தன. சந்திரிகா குமாரங்கா புகழை ஊடகங்கள் பாடிக் கொண்டிருந்தன. குமுதம் போன்ற இதழ்களும் அதையே செய்தன. அப்பொழுது குமுதம் இதழின் ஆசிரியராக இருந்தவர் மாலனா, சுஜாதாவா என சரியாக ஞாபகமில்லை. இவர்கள் இருவரில் ஒருவர்.

    அக் கால கட்டத்தில் பி.பி.சி தமிழோசை மூலமாகவே ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் ”உண்மையான” செய்திகளை அறிய முடியும். ஆனந்தி அக்கா அப்பொழுது தமிழோசையில் இருந்தார். பி.பி.சி தமிழோசையை கடினப்பட்டே கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. சில நேரங்களில் சரியாக கேட்காது. விட்டு, விட்டு இழுத்துக் கொண்டே கேட்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

    ஆனால் இன்றைய இணைய யுகத்தில், தொலைக்காட்சியின் வளர்ச்சியில் செய்திகள் மக்களை சென்றடைந்திருக்கிறது. நம் கையில் ஒரு உருப்புடியான ஊடகமும் இல்லாத நிலையிலும் ஈழப் பிரச்சனையை மக்களிடம் ஊடகங்களின் பெரிய உதவிகள் இல்லாமலேயே சென்று சேர்க்க முடிந்திருக்கிறது. நக்கீரன், ஆனந்த விகடன், மக்கள் தொலைக்காட்சி போன்றவையும் குறிப்பிடத்தக்க பங்காற்றின. குமுதம் கடைசியாக சில வியபார தொடர்களுடன் வந்து சேர்ந்தது.

    இதைத் தவிர தமிழக கட்சிகள் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்தில் பேசி இருந்தால் ”பயங்கரவாத” பூச்சாண்டியுடன் அடக்கப்பட்டிருக்கும். மாறாக சிபிஐ முதன் முதலில் இதனை பேச தொடங்கியது. தா.பாண்டியன் பேச தொடங்கினார். வைகோ பேசினால் புலி ஆதரவு என்று ஒதுக்கியிருப்பார்கள். ஆனால் தேசிய கட்சியான சிபிஐக்கு எந்த முத்திரை குத்த முடியும் ? அது தான் மனத்தடைகளையும், பய உணர்வுகளையும் உடைக்க முக்கிய காரணமாக அமைந்தது

    ReplyDelete
  41. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பொழுது காயமடைந்தவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். எனவே அவர் இந்தப் பிரச்சனையை பேச தொடங்கிய பொழுது ராஜீவ் படுகொலை பூச்சாண்டி அவரிடம் எடுபடவில்லை.

    அரசியல் கட்சிகளில் தா.பாண்டியன் தான் இதனை தொடங்கினார் என்பதாலோ என்னவோ, அவர் கார் எரிக்கப்பட்டது தொடங்கி அவருக்கு பல சிக்கல்கள்.

    தா.பாண்டியன் போன்றவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்...

    ReplyDelete
  42. சசி உங்கள் கருத்துக்களுடன் பெரும்பாலான இடங்களில் ஒத்துப் போக முடிகிறது. ஆனால் காங்கிரஸ் அரசின் தமிழின விரோத போக்குக்கு ராஜிவ் காந்தியின் கொலையோ அல்லது தமிழர்களின் மேலுல்ல காழ்ப்புணர்ச்சியோ அடைப்படைக் காறணமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கப் போவதில்லை.

    90களில் காஷ்மிரில் பிரிவினைவாதம் தீவிரமடையத் துவங்கியது. அதே நேரத்தில் ராஜிவ் காந்தியின் கொலையும் நிகழ்ந்தது. அப்போது இந்திய ராஜதந்திரிகளும் உளவுது துறையும் விடுதலை புலிகள் போன்ற பிரிவினைவாத குழுக்கள் இந்தியாவின் அருகில் இருப்பது இந்திய இறையாண்மைக்கு பெரும் பாதகமாகவே இருக்கும் எனக்கருதி ராஜிவ் காந்தி கொலையைச் சாக்காக வைத்து பெரும் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்தனர்.

    இந்திய உளவு நிறுவனங்கள் இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலையிட துவங்கின. புலிகளை தனிமைப்படுத்துவது மற்றும் வேறு போட்டிக்குழுக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வது, தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்திற்கோ, புலிகளுக்கோ அனுதாபம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது போன்ற நிறைய வேலைகளை 'ரா' நடத்தி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது காஷ்மிர், அஸ்ஸாமில் உல்பா, மற்றும் நக்ஸலைட்டுகள் போன்று பிரிவினைவாதம் உயிரோடு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

    எனவே இந்தியாவின் உதவியுடனோ அல்லது வேறு வழியாகவோ தமிழ் ஈழம் அமையுமானால் அது முதலில் இந்தியாவின் ஒற்றுமையைத் தான் பாதிக்கும். தனிநாடு கோரிக்கைகள் ஆங்காங்கே எழ தொடங்கிவிடும் (முக்கியமாக தமிழ்நாட்டில், 60களில் அடங்கிய தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கை மீண்டும் உயிர் பெற்று விடும்). மேலும் இந்தியா தலையிட்டு தனி ஈழம் அமைத்துக் கொடுத்தால் இனி காஷ்மிர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல இயலாது மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுவிடும். காஷ்மிரை இழக்கவும் நேரிடலாம்.
    அதனால் இந்தியா ஒருபோதும் தனி ஈழத்தை இனி ஆதரிக்கப்போவதும் இல்லை. அப்படி ஒரு சூழ்நிலை அமையவும் அனுமதிக்கப்போவது இல்லை. அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி. இதில் ராஜிவ் காந்தி கொலையின் காரணமாக புலிகளைப் பழி வாங்கவே காங்கிரஸ் அரசு இலங்கை அரசை ஆதரிக்கிறது என்பதெல்லாம் ஒரு வெளித்தோற்றமே.

    இதில் திமுகவின் பங்கு என்ன என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்ததே. அவர்களுக்கு ஆட்சி வேண்டும் பதவி வேண்டும். ஆனால் ஒருவேளை திமுக ஈழத்திற்கு ஆதரவு அன்ற நிலையை முழுமையாக எடுக்க வேண்டுமானால், இப்போதைய சூழலில் இந்திய எதிர்ப்பு என்ற கட்டத்திற்கு இட்டுச் செல்வதாகவே முடியும். அப்படி ஒரு மாற்றத்திற்கு இன்னும் யாரும் தயராகவில்லை என்றே நினனிக்கிறேன். அதிமுகவைப் ப்ற்றி கருத்துக் கூறி நேரத்தையும் இடத்தையும் விரயமாக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் சந்தர்ப்பவாதமும் ஆணவமும், பார்ப்பன் அரசியலும் அனவௌம் அறிந்ததே.

    நன்றி!

    ReplyDelete
  43. இந்தத் தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெறப்போகும் அணி, பிரதமர் அமைச்சகம், இந்திய அயல்விவகாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றில் ஒன்றையாவது தங்களுக்குக் கேட்டுப் பெற்று இலங்கை-ஈழம் தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தைக் கொஞ்சமாவது தொடங்கிவைக்க வேண்டும் என்று உங்களில் யாரும் எழுதவில்லை... முன்பெல்லாம் வெற்றி கண்ட அதிமுக, திமுக, பாமக, மதிமுக யாருமே இந்த அமைச்சரவைகளைக் கேட்டுப்பெறவில்லை என்பதை நீங்கள் உணரவில்லை போலும். கேரளத்தின் ஈ அகமது, வயலார் ரவி போன்றோர் எந்தெந்த அமைச்சகங்களைப் பெற்று வளைகுடாப்பகுதி சென்றிருக்கும் மலையாள, தமிழ், மற்ற மக்களுக்கு உதவுகிறார்கள் என்பதைக் கூட உங்களால் கவனிக்க முடியவில்லையே.. இந்த அறுபதாண்டுக்காலம் இந்திய அரசில் இந்த மூன்று துறைகளிலும் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் - ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம், ப. சிதம்பரம் ஆகிய காங்கிரசார் மட்டுமே. இலங்கையில் மட்டுமல்லை, இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அக்கறையும் சரி, உலகெங்கும் வாழும் தமிழ்-மக்களுக்கு ஏற்ற வகையில் இந்திய அரசின் அயலுறவுக்கொள்கையை வலிந்து மாற்ற வேண்டும் என்ற அக்கறையும் சரி, இந்தக் காங்கிரசாருக்கு இருந்ததில்லை. தமிழகத்தின் பிரதான கட்சிகள் திமுக, அதிமுக போன்றவற்றுக்கும் இவை இல்லை என்பதுதான் வருத்தம் தரும் நிலை. இது இந்தத்தேர்தலுடன் மாற வேண்டும் என்ற நோக்கத்தை இந்த அணிகள்முன் வைத்து இவர்களை மடக்க வேண்டுமே தவிர, பழிவாங்கும் பொதுப்புத்தி நோக்கத்துடன் வாக்களிப்பது, உங்களில் பலர் கூறுவது போலவே, எதிர்மறையான விளைவில் போய் முடியலாம்.

    ReplyDelete
  44. Sasi,
    When we had trusted Karuna for years, atleast now why cant we trust Jaya, agree we never know Jaya can turnaround any way,
    but if you look at her past she had always firmly stand by her policies no matter how opposition may be..

    Just for sake of being optimistic lets be beleive Jaya (??)

    Hope next central Govt will be supportive to Tamils,

    ReplyDelete
  45. Sasi, are you the person conducted the conference about whats happening in SriLanka at Westchase Libary ,Houston.

    ReplyDelete
  46. சசி,
    மிகவும் தயங்கி, யோசித்து, காலம் எடுத்து இந்த பின்னூட்டத்தை இடுகிறேன். (சிறிது மனக் கஷ்டத்தோடுதான்..)

    உங்களுடைய காஷ்மீர் கட்டுரைகள், ஏனைய அரசியல் கட்டுரைகள் மூலம் உங்கள் அரசியலறிவின் மீது மிகுந்த மதிப்பு எனக்கிருந்தது. இப்பதிவு ஒரு பெரும் சறுக்கல் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  47. நாம் ஓட்டுப் போடவேண்டும் என்று நீங்கள் சொல்லும் அரசியல் தலைவி பங்களாதேஷ் போல் தமிழீழம் அமைப்போம் என்று பேசுவதைப் பார்த்தால் அன்று இந்திரா இருந்த இடத்தில் இப்போதே உட்கார்ந்து விட்டது போன்ற எண்ணத்தில் பேசுவது போலவே இருக்கிறதே ..!

    ReplyDelete
  48. In 2007 I wrote this article in Support for Karunanidhi.

    http://blog.tamilsasi.com/2007/11/eelam-tamilnadu-karunanidhi-vaiko.html

    At that time, all these Karunanidhi devotees who are yelling at me right now took it in the right spirit. During that time, I sincerely believed that Karunanidhi has the right spirit and motives for the Tamil cause. I DID NOT expect miracles from him. I know he can’t do anything. He does not have much POWER. But I expected him to do as per his conscience and as a Tamil Leader.


    But what did he do? No one can expect me to be a Karunanidhi devotee after all these events. I know Jayalalitha's Dramas. I am not someone so innocent to believe Jaya’s Dramas.

    But Karunanidhi has to be punished.
    That's all i can say...

    ReplyDelete
  49. //But Karunanidhi has to be punished.
    And by that way, let us reward jeyalalitha

    That's all i can say...//

    ....AMEN

    ReplyDelete
  50. //But Karunanidhi has to be punished.
    And by that way, let us reward jeyalalitha

    That's all i can say...//

    ....AMEN

    **************

    காலையில் எழுதியதால் விரிவாக எழுத முடியவில்லை.

    சில விடயங்களை நாம் கவனிக்க வேண்டும்

    1 - இன்றைக்கு கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் ஒரே தராசில் தான் எடை போட வேண்டியிருக்கிறது. இது மிகப் பெரிய அவலமாக கருணாநிதி ஆதரவாளர்களுக்கு தெரியாதது தான் விந்தையாக உள்ளது

    2 - இன்று முதல்வராக கருணாநிதி இருக்கும் இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் எதுவுமே பேசி இருக்க முடியாது என்கிறார்கள். அப்படி சொல்ல முடியாது. ஈழப்பிரச்சனையைப் பற்றியே கடந்த 17 ஆண்டுகளாக பேசாமல் இருந்த மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடி இருக்கிறார்கள் என்றால் அது ஈழத்தில் நடந்து வரும் அவலம் காரணமாக தான். இன்றைக்கு கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இல்லையே என வருந்துகிறேன். காரணம், எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் தமிழர்களை மிகப் பெரிய அளவில் கருணாநிதி ஒன்று திரட்டியிருப்பார். போராட்டத்தின் வீரியம் அதிகரித்து இருக்கும். தமிழர்கள் ஒற்றுமையாக போராடி இருப்பார்கள். ஏனெனில் பொது எதிரியை எதிர்க்க ஒன்று பட வேண்டிய தேவை இருந்திருக்கும். ஆனால் கருணாநிதி இன்று முதல்வராக இருப்பது ஒட்டு மொத்த தமிழர் ஒற்றுமையை நீர்த்துப் போக செய்து விட்டது. நான் வேறு திசையிலும், நீங்கள் வேறு திசையிலும் பேச வேண்டிய அவலத்தை தோற்றுவித்து விட்டது. நீங்களும், நானும் வேறு வேறு கருத்துக்களை பேசிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை கருணாநிதி முதல்வராக இருக்கும் சூழ்நிலை நமக்கு ஏற்படுத்தி விட்டது.

    3 - இன்றைக்கு ஈழப் போராட்டம் அடைந்த நிலையை விட இனி மோசமான ஒரு நிலையை நாம் எப்பொழுதும் அடைந்து விட முடியது. இனி ஈழப் போராட்டம் ஒன்று நடக்குமா எனவும் தெரியவில்லை. அந்தப் போராட்டம் 1983க்கு முன்பான சூழ்நிலையை அடைந்து விட்டது. இப்படி ஒரு புதை குழி நேர்ந்த பிறகு தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற கவலையை விட இந்த சூழ்நிலையில் நம் முதுகில் குத்திய கருணாநிதி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக உள்ளது.

    4 - இன்று திமுக-காங்கிராஸ் கூட்டணியின் படுதோல்வியே மக்கள் மனதில் உள்ள ஈழம் சார்ந்த அதிருப்தியை வெளிப்படுத்துவதாக இருக்கும்

    என்னுடைய இந்த கட்டுரையை ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட சொன்னது மற்றும் சில பின்புலங்களை மட்டுமே கொண்டு பார்த்தால் பலருக்கு நான் கட்டுரையில் முன்வைத்திருந்த பல கருத்துக்கள் சென்றடையவில்லை. அந்த சிலவற்றை இங்கே முன்வைத்து விடுகிறேன்

    ///

    திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.

    ///

    ReplyDelete
  51. //இன்றைக்கு கருணாநிதி எதிர்க்கட்சி தலைவராக இல்லையே என வருந்துகிறேன். காரணம், எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் தமிழர்களை மிகப் பெரிய அளவில் கருணாநிதி ஒன்று திரட்டியிருப்பார்//

    மிக மிகச் சரி

    ReplyDelete
  52. சசி!

    தவறாக கருதவேண்டாம். காங்கிரஸ் தமிழினத்தின் எதிரி. ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் காங்கிரஸுக்கு சளைக்காத அளவுக்கு தமிழின எதிரியாகவே கடந்த காலங்களில் இருந்திருக்கிறது. பொதுவான எதிரிகள் இருவரும்.

    இப்படிப்பட்ட நிலையில் நேற்று காங்கிரஸோடும், இன்று அதிமுகவோடும் உறுதியான உறவு வைத்திருக்கும் பாமகவை எந்த பட்டியலில் சேர்க்கப் போகிறீர்கள்?

    உங்களைப் போன்றவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பாக வலியுறுத்திய ‘மாற்றம்’ ஆகட்டும். இன்றைய அதிமுக ஆதரவு நிலை ஆகட்டும். பாமகவுக்கு நேரடியாக அல்லாமல் மறைமுகமான தீவிர ஆதரவை நோக்கி நகர்த்தப்படும் நகர்த்தல்கள் அல்ல என்று நான் நம்பினாலும் மற்றவர்கள் நம்ப தயாரில்லை :-)

    தமிழின அரசியல் என்ற பெயரில் பாமக நடத்துவது சுயநல அரசியலே. அதிமுகவை நம்புவதைக் காட்டிலும் செத்தாலும் திமுகவை நம்பியே சாவோம் என்ற முடிவுக்கு திமுகவின் தொண்டர்கள் வந்திருப்பது உங்கள் பார்வைக்கு கண்மூடித்தனமான திமுக விசுவாசமாக தெரியலாம்.

    ஒரு நல்ல தமிழின உணர்வாளன் அதிமுகவுக்கு ஆதரவளிப்பது என்பதை தமிழின துரோகமாக தான் எங்களைப் போன்றவர்கள் காண முடிகிறது.

    அதிமுக வெற்றி பெற்றால் சேதுசமுத்திரத் திட்டம் நிறுத்தப்படும் என்ற அவர்களது தேர்தல் அறிக்கை ஒன்றே அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அளிக்கும் எங்கள் நிலையை நியாயப்படுத்துகிறது. சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை பாஜகவை விட மிக அதிகமாக எதிர்ப்பது இலங்கை அரசு என்பது கவனத்துக்குரியது. ஜெ.வின் சிங்களப்பாசம் எக்காலத்திலும் மறையாது.

    ReplyDelete
  53. லக்கிலுக்,

    நாம் பேசிய வட்டத்திற்குள் தான் பேசிக் கொண்டே இருக்க போகிறோம். அதனால் இப்படியே விட்டு விடுவோம்.

    ***************

    சேது சமுத்திரம் திட்டத்தைப் பற்றி மட்டும் எனது கருத்தினை சொல்லி விடுகிறேன். சேது சமுத்திரம் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என நான் 2007ல் எழுதினேன். அந்தப் பிரச்சனையில் சங்பரிவார் அமைப்புகள் கருணாநிதிக்கு எதிராக திரண்ட பொழுது கருணாநிதிக்கு ஆதரவாகவும் எழுதினேன். சேது சமுத்திரம் திட்டத்தை எதிர்த்தும் எழுதினேன். இது முரண்பாடான நிலைப்பாடக உங்களுக்கு தெரியலாம். ஆனால் எனக்கு அவ்வாறு இல்லை. அன்றைக்கு திராவிடத்தின் அடையாளமாக எனக்கு தெரிந்த கருணாநிதியை வட நாட்டவன் எதிர்த்த பொழுது கருணாநிதியை ஆதரித்தேன். ஆனால் சேது சமுத்திரம் சாமானிய மக்களின் வாழ்வியலுக்கு ஏற்படுத்துக் கூடிய பாதிப்புகளுக்காக அந்த திட்டத்தை எதிர்த்தேன்.

    http://blog.tamilsasi.com/2007/10/sethu-samudram-frequently-asked.html
    அதற்குரிய காரணங்களை அப்பொழுது என்னுடைய பதிவில் முன்வைத்து இருந்தேன்.

    இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா ? எதிர்க்க வேண்டுமா ? சமீபகாலத்தில் தமிழகத்தில் உள்ள பலரை ஒரு தெளிவான நிலைப்பாட்டினை எடுக்க விடாமல் குழப்பிய ஒரு விடயம் இது தான் என்றால் அது மிகையல்ல.

    ஒரு பொருளாதார திட்டம் Vs அது ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச்சூழல், சாமானிய மக்களுக்கான வாழ்வியல் பாதிப்புகள் என்று மட்டும் இருந்திருந்தால் இதில் ஏதேனும் ஒரு அணியில் பலர் சேர்ந்திருக்ககூடும். ஆனால் இங்கே சம்பந்தமேயில்லாமல் சங்பரிவார் ஆஜராகியவுடன் தமிழகத்தில் உள்ள பலருக்கு இந்த திட்டத்தை எந்தக் காரணத்தால் ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு விட்டது.

    ஆனால் இந்த திட்டம் "எதிர்க்கப்படவேண்டிய" ஒரு திட்டம். பொருளாதாரக் காரணங்களுக்காக அல்ல. ராமன் தன் குரங்குகள் கூட்டணியுடன் பாலம் கட்டிய புராண கற்பனை கதைக்காகவும் அல்ல.

    சுற்றுப்புறச்சூழலுக்காகவும், மீனவர்களின் வாழ்வியலுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளுக்காகவும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

    தவிரவும் இயற்கை வளங்களாக இருக்கும் வரை அது சாமானியனின் சொத்தாக இருக்கும். அது பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றப்படும் பொழுது பண முதலைகளுக்கும், அதிகார மையத்திற்கும் தான் அந்த சொத்தில் சொந்தம் இருக்கும். சாமானியனின் உரிமை பறிக்கப்பட்டு விடும். அந்த வகையிலும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும்.

    மீனவர்களை இந்த திட்டம் எவ்வாறு பாதிக்கும் ?

    கப்பல்கள் இந்த கடல்பாதையில் செல்வதால் மீனவர்கள் இந்த கடல்பாதையை தற்பொழுது உள்ளது போல கடக்க முடியாது. கப்பல்கள் செல்லும் நேரத்தில் சேது சமுத்திரத்தை கடக்க காத்திருக்க வேண்டும்.

    இந்த கடல்பாதையை ஆழப்படுத்த தோண்டப்படும் மணல் கரையோரங்களில் கொட்டப்படும். இதனால் கடலோரங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பாதிப்பு இருக்கும்.

    மீன் வளம் குறையும்

    The Gulf of Mannar and the Palk Bay are sensitive regions, very different from the open sea. "If their physical environment is disturbed in a big way, it will reflect on their biological environment, biodiversity and fishery production. Fishery production depends on the physical environment," says a marine biologist. The entire fish chain will be affected.

    ReplyDelete
  54. Sasi, are you the person conducted the conference about whats happening in SriLanka at Westchase Libary ,Houston.

    ******

    Vijayan,

    Yes, it's me...

    ReplyDelete
  55. //உங்களைப் போன்றவர்கள் ஒரு மாதத்துக்கு முன்பாக வலியுறுத்திய ‘மாற்றம்’ ஆகட்டும். இன்றைய அதிமுக ஆதரவு நிலை ஆகட்டும். பாமகவுக்கு நேரடியாக அல்லாமல் மறைமுகமான தீவிர ஆதரவை நோக்கி நகர்த்தப்படும் நகர்த்தல்கள் அல்ல என்று நான் நம்பினாலும் மற்றவர்கள் நம்ப தயாரில்லை :-)//

    சசி!

    இப்பகுதிக்கு உங்களிடம் பதில் பெற விரும்பினேன். மேலும் வற்புறுத்த விரும்பவில்லை.

    நீங்கள் மழுப்பி விட்டதாகவோ அல்லது பதில் தர விரும்பாததாகவோ எடுத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  56. நீங்கள் மழுப்பி விட்டதாகவோ அல்லது பதில் தர விரும்பாததாகவோ எடுத்துக் கொள்கிறேன்.

    ***********

    முன்கூட்டியே முடிவுக்கு வந்து விட்டு கேள்விகளை கேட்கும் உங்களுக்கு என்ன பதிலை கொடுத்து விட முடியும் என நம்புகிறீர்கள் ?

    மாற்றம் வலைப்பதிவு ஒரு மாற்று அணியை அமைக்கும் நோக்கத்தில் தான் தொடங்கப்பட்டது. அதனை தொடங்கியவன் நான் அல்ல. அதில் இருப்பவனும் நான் மட்டும் அல்ல. குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களும் அல்ல/கட்சியை சேர்ந்தவர்களும் அல்ல.

    அதில் இருப்பவர்கள் இராம.கி ஐயா, சங்கரபாண்டி, சுந்தரமூர்த்தி, சுந்தரவடிவேல், தங்கமணி, ரமணீதரன், நாக.இளங்கோவன் போன்றவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று எனக்கு தெரியாது. தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள். அதன் பிறகு இணைந்து கொண்ட பல நண்பர்களும் எந்த சாதி/கட்சி என எனக்கு தெரியாது.

    வலைப்பதிவில் எங்களைப் போன்றவர்களும், சிறுபத்திரிக்கைகளில் இராஜேந்திர சோழன் போன்றோர்களும், அரசியல் அமைப்புகளில் நெடுமாறன், திருமா போன்றோர்களும் இத்தகைய முயற்சியில் இறங்கியிருந்தார்கள்.

    இப்படி பல இடங்களில் பலர் செய்த முயற்சிக்கு ஒரு பொதுவான அடையாளம் உண்டு. அவர்கள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் என்பது மட்டுமே...

    நான் வலைப்பதிவினை 2003ல் இருந்து வாசித்து வருகிறேன். 2004ல் இருந்து தொடர்ச்சியாக இடைவெளி எதுவும் இல்லாமல் இயங்கி வருகிறேன். எதனை பொருட்படுத்த வேண்டும் என்பதும், எதனை உதாசீனம் செய்து விட்ட செல்ல வேண்டும் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். வலைப்பதிவில் கிசு, கிசு பாணியில் எழுதப்படும் விடயங்களை நான் பொருட்படுத்துவதில்லை...

    நன்றி...

    ReplyDelete
  57. தேர்தல் என்றதும்,
    கருணாநிதியா? ஜெயலலிதாவா?;
    தேசியமா? திராவிடமா?;
    ஈழ ஆதரவா? ஈழ எதிர்ப்பா?;
    ஊழலா? நிர்வாகத்திறமையா?;
    அதுவா? இதுவா? என்று நிலை பிரித்து செயல்பாடுகளை பிரித்து நுணுகி விளக்கம் கூறி கடைசியில் ஏதாவது ஒன்று என்று முடிப்பது தான் வழமையாக இருந்து வருகிறது. ஆனால் மக்களாட்சி என்ற திரைமறைவில் மக்களை வதைக்கும் ஏமாற்றுத்தனங்கள் விவாதிக்கப்படுவதில்லை. தேர்தல் புறக்கணிப்பு என்றதும் வறட்டுத்தனம், நடைமுறைக்கு ஒவ்வாதது என்றெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடுகிறது. நடைமுறைக்கு உகந்த முடிவை எடுத்து எடுத்து மக்கள் வாழ்விழ‌ந்ததுதான் மிச்சம். மக்களின் மிச்சமிருக்கும் நேர்மை உணவையும் வழித்தெரியும் என்று திருமங்கலம் காட்டவில்லையா? மக்கள் சம சுக வாழ்வு ஒன்று தானே எல்லாவற்றினதும் நோக்கமாக பசப்பப்படுகிறது. பின் ஏன் தேர்தலை மக்கள் வாழ்வா? வீழ்வா? என்று அலசக்கூடாது? கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, பிரபாகரனோ, அல்லது வேறு யாருமோ, ஈழம் கிடைக்கிறது என்றே கொள்வோம். அப்போது மக்கள் வாழ்வு எப்படி இருக்கும்? இப்போது போல் அப்போதும் ஏதேதோ பிரச்சனைகள். எதிரும் புதிருமான அணிகள். விவாதித்து விவாதித்து ஓட்டுப்போடுங்கள். மாற்று என்ன என்ற சிந்தனை மட்டும் வந்துவிடக்கூடாது. வறட்டுத்தனம், நடைமுறைக்கு ஒவ்வாதது, சாத்தியமில்லை, ஒன்றிரண்டு பேர் புறக்கணித்து என்ன ஆகப்போகிறது? இது போன்ற செக்கு மாட்டுச்சிந்தனையிலிருந்து விடுபடும் முதல் அடி எப்போது?
    http://senkodi.wordpress.com/2009/05/01/யானையை-பார்த்த-குருடன்-ப/

    தோழமையுடன்
    செங்கொடி

    ReplyDelete
  58. ungaluku indus meal ean intha kobam nabare

    ReplyDelete