Sunday, November 23, 2008

இலங்கை தமிழர் போராட்ட க்ரைம் நாவல்

சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்த சரித்திர நாவல்கள் என்றால் அது சாண்டில்யன் மற்றும் கல்கியின் நாவல்கள் தான். அதுவும் சாண்டில்யன் நாவல்களை நெய்வேலி நூலகத்தில் முன்பதிவு செய்து படித்தது தனிக்கதை. சரித்திர நாவல்களை "உண்மையான வரலாறாகவே" கண்டு கொள்ளும் போக்கு தமிழக வாசகர் வட்டத்தில் இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் உள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை உண்மையான சோழ சரித்திரமாக நினைத்துக் கொண்ட பலரை நான் அறிவேன்.

வரலாற்று நாவல்களை முழுமையான கற்பனையாக மட்டும் இல்லாமல் வரலாற்றை சரியாக பொருத்தி எழுதிய நாவல்களாக நான் வாசித்த எழுத்தாளர் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் போன்ற நாவல்களை குறிப்பிட முடியும். புதுவையில் இருந்த பிரஞ்ச் ஆட்சி குறித்து ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகளை அடிப்படையாக கொண்டு பிரபஞ்சன் எழுதிய நாவல் வரலாற்றை தன் எழுத்து சுவராசியத்திற்காக வளைத்து விடவில்லை. இந்த தொடர்கள் தினமணிக்கதிரில் வெளிவந்தது என்பதை குறிப்பிட வேண்டும். வெகுஜன ஊடகத்தில் எழுதினாலும் பிரபஞ்சன் வரலாற்றை சிதைத்து விடவில்லை.

வரலாற்று நாவல்களே இவ்வாறு என்றால், முழுமையான வரலாற்று தொடர் எப்படி இருக்க வேண்டும் ?

வரலாறு குறித்து எழுதுவது சவால் நிறைந்தது. அதீத பொறுப்புணர்வு இத்தகைய பணிகளுக்கு தேவைப்படுகிறது. சுவாரசியமாக எழுத வேண்டும் என்பதற்காக வரலாற்றை சிதைத்து விடக்கூடாது. அதுவும் வெகுஜன ஊடகங்களில் சரித்திரத்தை முன்வைக்கும் பொழுது வாசகனை படிக்க வைக்க அதனை சுவாரசியமாக எழுத வேண்டியது தான். அதற்காக சரித்திரத்தை ஒரு க்ரைம் நாவல் போன்று எழுத வேண்டுமா ? சரித்திரத்தை மிகவும் சுவாரசியமாக எழுத முனையும் பொழுது அங்கு சுவாரசியத்திற்கு தான் முக்கியத்துவம் கிடைக்கிறது. வாசகனை கட்டிப்போட வேண்டும் என்ற எண்ணம் சரித்திரத்தை சிதைத்து விடுகிறது.

பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியிருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் அந்த வகையில் பெருத்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளது.

இத்தனைக்கும் இது இன்னும் 1948 நிகழ்வுகளுக்கோ, 1990க்கு முன்பான சூழலுக்கோ செல்ல வில்லை. கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தான் இந்த தொடர் தற்பொழுது பேசுகிறது. அதிலேயே இத்தனை பிழைகள் என்றால் இலங்கையின் குழப்பமான ஆரம்பகாலம், போராளிக்குழுக்களுக்குள் நிகழ்ந்த சண்டை, இந்தியாவின் தலையீடு போன்றவை குறித்து எழுதும் பொழுது இன்னும் எத்தனை குழப்பங்களை முன்வைக்கப் போகிறதோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

பொன்சேகா மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் தான் தற்பொழுது நடைபெறும் போருக்கான முக்கிய காரணம் என்பதான கருத்தாக்கத்தை இந்த தொடரின் முதல் பாகம் வாசகர் மனதில் விதைக்கிறது. இலங்கைப் பிரச்சனை குறித்து பெரிய புரிதல் இல்லாத சாமானிய வாசகர்கள் இதனை மனதில் கொண்டே அடுத்து வருகின்ற பாகங்களை வாசிக்கப்போகிறார்கள். பொன்சேகா மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டும் தானா இந்தப் போருக்கான முக்கிய காரணம் ? போருக்கான சூழல் ஏற்பட்ட பிறகு, இனி நிச்சயமாக போர் தான் என்ற நிலை ஏற்பட்ட பிறகே பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே உண்மையான நிலை.

இது குறித்த நண்பர் திருவின் பதிவு - ‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்!


************

இரண்டாம் பாகத்தில் வரும் சில வரிகள்...

ஐரோப்பிய யூனியன் தன் மீது விதித்த தடையைச் சுட்டிக்காட்டி, அமைதித் திட்டத்தின் அங்கத்தினர்களாக இருந்த ஐரோப்பிய தேசங்களான ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய தேசங்களை `யூனியனிலிருந்து விலகுங்கள்' என்று விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ம்ஹும். சாத்தியமில்லை. டென்மார்க்கும் ஃபின்லாந்தும் செப்டம்பர் 1 முதல் அமைதித் திட்டத்திலிருந்து விடைபெறுவதாகச் சொல்லிவிட்டன.

இந்த வரிகளைப் படித்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து ஸ்வீடன், டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளை விலக புலிகள் கேட்டு கொண்டார்களா ? பா.ராகவன் எங்கே இருக்கிறீர்கள் ? புலிகள் என்ன கேட்டார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நார்வே ஐரோப்பிய யூனியனில் இல்லை என்பது கூடவா உங்களுக்கு தெரியாது ? ஐரோப்பியாவில் இருக்கின்ற அனைத்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இல்லை.

என்ன நடந்தது என்பதை நான் ஏற்கனவே என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" என்ற தொடரில் எழுதியுள்ளேன். மறுபடியும் இங்கே குறிப்பிடுவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. பா.ராகவன் குறிப்பிடுவது போல ஸ்வீடன், டென்மார்க் போன்றவை அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் அல்ல. அமைதித்திட்டத்தின் அங்கத்தினர்கள் என பொதுவாக எதனை குறிப்பிடுகிறார் என்றும் தெரியவில்லை. Co-chairs என்று சொல்லப்படும் கூட்டுத்தலைமையை குறிப்பிடுகிறாரா என தெரியவில்லை. அதில் நார்வே, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்றவை உள்ளன. ஸ்வீடன், டென்மார்க் போன்றவை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் - SLMM (Srilanka Monitoring Mission). ஐரோப்பிய யூனியன் தடைக்கு பிறகு ஐரோப்பிய யூனியனை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருக்க கூடாது என்று தான் புலிகள் கூறினார்கள். ஐரோப்பிய யூனியனை விட்டே விலக வேண்டும் என்று கேட்கவில்லை. அவ்வாறு கேட்டால் பலர் சிரிப்பார்கள்.

இது மட்டுமா இன்னும் பிழைகள் உள்ளன...

மாவிலாறு என்பது ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. ராணுவத்தின் நோக்கம் வேறு. செயல்திட்டம் வேறு. இலக்கு முற்றிலும் வேறு. மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி. நிறுத்தப் போவதில்லை. என்ன ஆனாலும் சரி. போர் நிறுத்த ஒப்பந்தப் பத்திரம், பத்திரமாக இருக்கிறது. இன்னும் கிழித்துப் போடவில்லை. யார் கேட்கப்போகிறார்கள்?

அடுத்து சில வரிகள் யாழ்ப்பாணம் குறித்த குழப்பத்தை இன்னும் அதிகரிக்கிறது.

பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.

யாழ்ப்பாணம் புலிகள் கைகளில் உள்ளதா ? இராணுவத்தின் கைகளில் உள்ளதா ? யாழ்ப்பாணம் புலிகள் வசம் இல்லை என்ற உண்மையை தெரியாமல் பா.ராகவன் இருக்க முடியாது என நம்புகிறேன். ஆனால் இலங்கை குறித்து அதிகம் தெரியாத சாமானிய வாசகர்கள் இந்த வரிகள் குறித்து படித்தால் என்ன நினைப்பார்கள் ?

இங்கு மற்றொரு தகவல் பிழை உள்ளது. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நிலம் வழியான பாதை இல்லை. படகுகள் மூலமாகவே செல்ல முடியும். சாலை வழியாக செல்ல வேண்டும் என்றால் ஆனையிறவு தான் வழி. A9 நெடுஞ்சாலை ஆனையிறவு வழியாகவே யாழ்ப்பாணத்தை வன்னியுடன் இணைக்கிறது. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல் என்பது மட்டும் அல்ல, யாழ்ப்பாணத்தை ஏன் சிறீலங்கா இராணுவம் பிடிக்க வேண்டும் ? அது தான் அவர்கள் வசம் ஏற்கனவே உள்ளதே :)

அடுத்து...

தனி ஈழம் என்கிற ஒற்றை இலக்கிலிருந்து இன்றுவரை ஓரங்குலம் கூட நகராதவர்களாக விடுதலைப் புலிகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ISGA (Interim Self Governing Authority) என்ற ஒன்றை புலிகள் சமர்ப்பித்தார்களே ? அது என்ன ? அது எதற்காக ? அதை வைத்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா ? ஏன் நடக்கவில்லை ? யார் காரணம் ?

************

இந்த தொடரில் முன்வைக்கப்பட்டிருக்கும் சில தகவல்கள் உண்மையில் சரியானது தானா என்ற கேள்வி எனக்கு உள்ளது. சிறீலங்கா குறித்து உண்மையில் அறிந்தவர்கள் இது சரியா அல்லது தவறா என்பதை கூறட்டும்.

தொடரில் இப்படியான ஒரு வரி வருகிறது.

அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே. ரொம்ப மேலே. ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும். நோக்கம் தெளிவானது. புலிகளை ஒழித்துவிடலாம். சிம்பிள்.

இது எந்தளவுக்கு உண்மையானது ? எனக்கு தெரிந்த வரையில் ஜனாதிபதி ராஜபஷேவின் தம்பி கோத்தபாய ராஜபக்ஷேவும், பொன்சேகாவும் ஒன்றாக இராணுவத்தில் இருந்தவர்கள். அவர்கள் ஒன்றாக இராணுவத்தில் இருந்த காரணத்தால் நெருங்கிய நண்பர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் (Assumption, not fact), இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததால் பொன்சேகவும், அதிபர் ராஜபக்சேவும் நண்பர்களா ? அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ?

இது உண்மையா என்பதை சிறீலங்கா குறித்து தெரிந்தவர்கள் கூறட்டும். எனக்கும் உண்மையை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளது.

ஒரு நண்பரிடம் இருந்து கிடைத்த தகவல் படி...

ராஜபக்க்ஷ, பொன்சேகா இருவரும் அம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது தவிர எதுவுமே பொதுவில்லை. ஒருவர் படித்தது, ஆனந்தா கல்லூரி; மற்றையவர் நாளந்தா கல்லூரி. இரண்டுமே கொழும்புவட்டாரத்திலே ஆளுக்காள் எதிரும் புதிருமான சிங்களப்போட்டிக்கல்லூரிகள்.

வரலாற்றை சுவரசியமாக, க்ரைம் நாவல் போன்று எழுத முனைந்தால் இப்படியான விபரீதங்கள் தான் விளையும். இன்னும் என்ன என்ன வரப்போகிறதோ ?

************

இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம் கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.

25 மறுமொழிகள்:

Anonymous said...

பத்த வெச்சுட்டியே பரட்ட

11:30 PM, November 23, 2008
Anonymous said...

ஒரே காமடியாக இருக்கும் போல!!!!!!! ;)

11:56 PM, November 23, 2008
அருண்மொழிவர்மன் said...

குமுதத்தில் இப்படி சில பிழையான தகவல்கள் வருவதும், அவை பற்றிய திருத்தங்கள் வராமல் போவதும் மிகப்பெரிய துரோகம். இவர்கள் தெரிந்தோ தெரியாமலோ உலகத்தமிழர் அனைவர்க்கும் துரோகம் இழைக்கின்றார்கள்

11:58 PM, November 23, 2008
VSK said...

பா.ரா. போன்ற சந்தர்ப்பவாதிகளை, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களை இன்னமும் தோலுரித்துக் காட்டுங்கள் சசி!!

கேவலமான செயல் செய்யும் இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்!

12:02 AM, November 24, 2008
Anonymous said...

//ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர். அதனை சுவரசியமாக க்ரைம் நாவல் போன்று எழுதி, பரபரப்பாக வாசகர்களிடம் கொண்டு சென்று பணம் சேர்க்க நடக்கும் இந்த வியபாரம் எரிச்சலையே ஏற்படுத்துகிறது.//


நண்பர் சசி, அவ்வப்போதைய பிரச்னைகளை/செய்திகளை முன்னிறுத்தி வணிக ஊடகங்கள் பணம் பண்ணுவது முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட எல்லா நாடுகளிலும் நடக்கக் கூடியது, எனவே இது பெரிய தவறல்ல. ஆனால் இப்பிரச்னையின் மீது துளிக்கூட அக்கறையில்லாத, இன்னும் சொல்லப்போனால் எதிர்மறை நோக்கத்துடன் வேண்டுமென்ற உதாசீனப் படுத்தி வந்த ஒரு கும்பல், அனைத்து ஜனநாயகச் சக்திகளையும், எழுத்தாளர்களையும் முந்திக் கொண்டு பணம் சம்பாதிப்பது ஒன்றையே நோக்கமாகச் செயல் படுவதுதான் எச்சரிக்கையுடன் அணுகப் பட வேண்டியது. உங்களைப் போன்ற விவரமறிந்து எழுதுபவர்கள் அச்சு ஊடகப் பலம் இல்லாமலும், தங்களைப் பற்றிய அளவுக்கதிகமான தன்னடக்கத்தாலும், தவறு செய்கிறீர்கள். ஏன், பதிவுலகிலே கூட எத்தனையோ ஈழத்து நண்பர்கள் ஈழப் போரைப் பற்றிய ஒரு வெகுஜனத் தொடரை எழுத முயற்சி செய்ததில்லை. விவஸ்தையில்லாத தமிழ்நாட்டு இதழ்களும், மீண்டும் மீண்டும் ஆழ்ந்த அறிவும், ஈடுபாடும் இல்லாத இப்படியான சுயநலக் கும்பலுக்குத்தான் இடமளிக்கின்றன.

வேண்டுமானால் பார்த்துக் கொண்டேயிருங்கள். ஈழத்தமிழர் எத்தனையோ இழப்புக்கும், இரத்தம் சிந்தலுக்கும் பின் ஈழத்தை வாங்கி விட்டால் அங்கே போய் இந்துமத மூடநம்பிக்கைகளைக் காட்டியும், மொழி பெயர்க்கிறேன் என்ற கூறியும், வரலாறு எழுதுகிறேன் என்று கூச்சமில்லாமல் சொல்லியும், வயிறு வளர்க்கப் போவது டோண்டு கும்பல்தான். இந்தக் கும்பலை இப்பொழுது விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள், அப்பொழுதும் பயனில்லாமல் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

தமிழகத்தமிழர்கள் பெரியார் வரலாற்றையும், மு.க. வரலாற்றையும் எழுதுவதற்கு இரஜினி இராம்கி போன்ற கால்வேக்காடுகளிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அது போல், மூடநம்பிக்கையில் திளைத்துப் போயிருக்கும் ஈழத்தமிழர்களும் "டோண்டு கும்பல் போன்ற நல்லவர்கள் கிடையாது, அவர்களை ஏன் தமிழ்நாட்டில் பாடாய்ப் படுத்துகிறார்களோ தெரியவில்லை" என்று அனுதாபப் பட்டு அவர்களுக்கு எல்லாவற்றையும் தாரை வார்ப்பார்கள். இது நடக்கத்தான் போகிறது.

12:14 AM, November 24, 2008
அரி said...

//அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுக்கும் அவருக்குமான உறவு, வெறும் அதிபர் - ராணுவத் தளபதி உறவல்ல. மேலே.//
அவர்களுக்குள்ளே இருக்கும் முக்கியமான ஒற்றுமை அவர்களுடைய சிங்கள அடிப்படைவாத மனோபாவம். மஹிந்த அவர்கள் இதை வெளிப்படையாக கூறவில்லை ஆனால் சரத் பொன்சேகா சமீபத்தில் இதை வெளிப்படையாகவே கூறி இருந்தார். இலங்கை சிங்களவர்களுக்கே உரிய நாடு சிறுபான்மையினர் அவர்களோடு சேர்ந்து வாழ முடியும் ஆனால் கூடுதலான உரிமைகளுக்காக போராடுவது தவறு என்று ஒரு கருத்தை வெளிப்படையாக கூறி இருந்தார். (அடிப்படையில் மஹிந்த அவர்களே இலங்கை முப்படையின் தளபதி ஆவார். தரைப்படையின் தளபதி தான் சரத் பொன்சேகா ) மஹிந்த அவர்கள் கூட்டணி போட்டிருக்கும் கட்சிகளான ஜே வி பி, சிகல உறுமய போன்ற கட்சிகளும் அதை வெளிப்படையாகவே சொல்லுகின்றன. இதைப் பேரினவாதம் என்றும் கூறுவார்கள். இந்த மனோபாவம் அவர்கள் இருவருக்கும் மட்டும் பொது அல்ல, இப்படி சிந்திக்கும் ஆட்களை பெரிய பட்டியலே போடலாம்.

எனவே நீங்கள் குறிப்பிட்டது போல இந்த வார்த்தை செருகல், கற்பனையில் ஒரு சுவையைக் கூட்டுவதற்காக அந்த எழுத்தாளரால் சேர்க்கப்பட்டு இருக்கும் ஒரு குதப்பல். பதிவு உலகத்திரையில் இத்தனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி.

அவர்கள் செயலை விட இப்பிடி பொட்டுக்கட்டி எழுதும் , வரலாற்றை சிதைக்கும் இவர்கள் செயல்களால் தான் நிறைய ஆபத்து இருக்கிறது. எதிர்கால சந்ததிகளுக்கு சம்பவங்களோ சாட்சிகளோ இருக்கப்போவது இல்லை.

வரலாறு ரொம்ப முக்கியம் என்று வடிவேலு ஒரு படத்தில் அலும்பு பண்ணுவது ஞாபகம் வருகிறது.

1:09 AM, November 24, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

வரலாற்றை "வரலாறாக" எழுத வேண்டும் என்பதும், சுவாரசியத்திற்காக இல்லாத கற்பனைகளை இத்தகைய வரலாற்று தொடரில் கொண்டு வரக்கூடாது என்பதற்காகவும் தான் இந்தக் கட்டுரையை எழுதினேன். இந்த தொடரின் பல வரிகள் வாசகர்களை கவர்ந்து இழுப்பதற்காக நிருபிக்க முடியாத கற்பனைகளை முன்வைக்கிறது என்பதும் என்னுடைய குற்றச்சாட்டு.

இனி மேல் வரும் பாகங்களாவது சரியான வரலாற்றை முன்வைத்தால் எனக்கு மகிழ்ச்சியே. வெகுஜன மக்களிடம் ஈழ வரலாற்றை கொண்டு செல்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆனால் இது வியபார நோக்கமாக மட்டும் தெரிவது தான் எனது கவலையாகவும்/எரிச்சலாகவும் உள்ளது.

பின்னூட்டங்கள் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி...

1:21 AM, November 24, 2008
Mohandoss said...

//பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்.//

அன்புள்ள சசி,

மற்றவகைளைப் போன்றில்லாமல் இதில் உங்கள் பக்கம் புரிந்துகொண்ட விதத்தில் தவறிருக்கலாமோ என்று படுகிறது.

பாரா, நீங்கள் நினைத்ததற்கு உல்டாவா சொல்றாராயிருக்கு. அதாவது யாழ்பாணத்தை மீண்டும் புலிகள் கைப்பற்ற நினைத்தால் பூநகரி அவர்களுக்கு பெரும் வாசல்.

இல்லையா?

அப்படி எழுதியிருப்பாரோ? இது என் புரிதல் மட்டுமே!

4:17 AM, November 24, 2008
அருண்மொழி said...

மிக அத்தியாவசியமான பதிவு. குமுதம் பத்திரிக்கையில் வரும் பொய்களும் புனைசுருட்டுகளும் நாளைய சந்ததியினருக்கு ஈழத்தை பற்றி ஒரு தவறான தகவலை அளிக்கக்கூடும்.

7:22 AM, November 24, 2008
Anonymous said...

மோகன்தாஸ் நீங்கள் சொல்வதுபோலவே வைத்துக்கொண்டாலும் அது ஒரு வரிதானே? இரண்டு அத்தியாயங்களிலே இதுமட்டுமா குளறுபடி? ஆலமரம் திருவின் கட்டுரையையும் வாசித்துப்பாருங்கள்.

8:53 AM, November 24, 2008
thiru said...

சசி,

உங்களது பதிவை தற்போது தான் கவனித்தேன். ராகவனின் தொடர் பற்றிய எனது பதிவு ஒன்று http://aalamaram.blogspot.com/2008/11/blog-post_24.html

9:05 AM, November 24, 2008
சிக்கிமுக்கி said...

///பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத தொடங்கியிருக்கின்ற "யுத்தம் சரணம்" என்ற தொடர் அந்த வகையில் பெருத்த ஏமாற்றத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இரண்டு பாகங்களே வெளியாகி இருக்கின்றன. அந்த இரண்டு பாகங்களும் பல தகவல் பிழைகளுடன், குழப்பங்களுடன் வெளியாகி உள்ளது.///

திரித்தும் குழப்பியும் எழுதி அதனால் ஏதாவது கிடைக்காதா என்று அங்காந்து திரியும் ஒரு கூட்டமே .... சோ, இந்துராம், தினமலரான்கள... என உள்ளது உங்களுக்குத்தெரியாதா என்ன?
தொடர்ச்சியாக இருக்கலாம்.

///இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர்///

வணிகம் மட்டுமே காரணமன்று. அதற்கும் மேல், மனம் பொறுக்கா 'வக்கிரம்' என்னும் மனக்கோணலும் காரணமாக இருக்கும் என்பதைப் புறக்கணிக்க முடியாது.

9:13 AM, November 24, 2008
Nimal said...

ஒரு வெகுசன/வியாபார எழுத்தாளரின் எழுத்து என்ற வகையில் இதில் வரக்கூடிய இட்டுக்கட்டுக்களை/புரட்டுக்களை ஒரு வியாபார நோக்கில் எழுதப்பட்ட புனைவுகளாகவே கருதவேண்டும்.

ஆனாலும் இதன்மூலம் வரலாற்றை தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இது பல தவறாற புரிதல்களை ஏற்படுத்தும் என்பதே கவலை.

மற்றவர்கள் இதை நகைச்சுவை தொடராக கருதி படிக்கலாம்...!

10:25 AM, November 24, 2008
முத்துகுமரன் said...

// அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ? //

பா..ரா வுக்கு தகவல் உதவி அம்சா போல!

சரித்திரம் எழுத புறப்பட்டவர் அடிப்படை தகவல்களை சொல்லாமல் இருப்பதுதான் அவரது எழுத்து தர்மம்.

11:49 AM, November 24, 2008
மலைநாடான் said...

சசி!

நியாயமான வாதங்கள். இப்படி வலைப்பதிவுகளிலும் நல்ல காமெடிகள் பார்க்க முடிகிறது.

ஒரிடத்தில் யாழ்ப்பாணத்துக்கும் கண்டிக்கும் இந்திய இராணுவம் இரயில் பாதை அமைத்ததாக எழுதியிருந்தது.

எல்லாவற்றையும் வாசிக்கின்றோம். :)

3:11 PM, November 24, 2008
Anonymous said...

// அதுவும் "ரத்த உறவுகளுக்கெல்லாம் மேம்பட்ட நட்புறவு அவர்களுடையது. கருத்து வித்தியாசங்களே வராத அளவுக்கு ஒரே மாதிரி சிந்திக்கக்கூடியவர்கள் இருவரும்" ? //

beat the KISU Kisu hands down ;)

4:59 PM, November 24, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

மோகன்தாஸ்,

யாழ்ப்பாணம் குறித்து தொடரில் இரு இடங்களில் வருகிறது.

மட்டக்களப்பில் ஆரம்பித்து திருகோணமலை வழியே வவுனியா வரை உள்ள புலிகளின் அத்தனை தளங்களையும் கைப்பற்றி அழிக்கும் திட்டம் அவர்கள் வசம் இருந்தது. அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி.

"அப்படியே முடிந்தால் யாழ்ப்பாணம். சுற்றி வளைத்துக் கிளிநொச்சி" என்கிறார்.

அதற்கடுத்த வரிகளில் "பூநகரியைப் பிடிக்க முடிந்தது மிகப்பெரிய விஷயம். அது புலிகளின் வலுவான கோட்டை. யாழ்ப்பாணத்தைச் சாலை வழியில் பிடிப்பதற்கு மிகப்பெரிய வாசல்" என்னும் பொழுது யாழ்ப்பாணம் குறித்து குழப்பான தகவல் தான் வாசகனை சென்றடைகிறது.

நான் முன்பே கூறியிருந்தது போல யாழ்ப்பாணம் யாரிடம் இருக்கிறது எனத் தெரியாமல் பா.ராகவன் இருக்க முடியாது. ஆனால் யாழ்ப்பாணம் குறித்த தகவல்கள் தெளிவில்லாமல் உள்ளது தான் பிரச்சனை. உங்களுக்கும், எனக்கும் இந்த தொடரை படித்து தான் ஈழம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் ஒன்றுமே தெரியாதவர்கள் குழம்பிப் போவார்கள் என்பது தான் எனது கவலை.

நீங்கள் சொல்வதே சரி என வைத்துக் கொண்டாலும் கூட அதுவும் அபத்தமான கருத்து தான்.

ஏனெனில்
1.பூநகரி யாழ்ப்பாணத்தை சாலை வழியில் இணைக்கவில்லை. பூநகரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகுகள் மூலமாகவே செல்ல முடியும்

2.பூநகரி யாழ்ப்பாணத்தின் வாசல் அல்ல.

3. புலிகளின் முன்னரங்க நிலைகள் முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் உள்ளது. சாலை வழியில் யாழ்ப்பாணத்தை பிடிக்க வேண்டுமென்றால் புலிகள் இந்த முன்னரங்குகள் வழியாகவோ அல்லது வேறு யாரும் எதிர்பாராத வழியாகவோ தான் செல்ல முடியும்.

4. பூநகரியின் முக்கியத்துவம் வேறு வகையானது. பூநகரியில் புலிகள் தங்கள் ஆர்ட்டிலரி தளங்களை அமைத்துள்ளனர். இதன் மூலம் புலிகள் சிறீலங்கா இராணுவத்தின் நிலை மீது தொடர் தாக்குதல்களை தொடுத்துள்ளனர். பலாலி விமானப்படை தளம் வரைக்கும் இங்கிருந்து புலிகளால் தாக்க முடியும்.

- முகமாலையை நோக்கி பல முறை சிறீலங்கா இராணுவம் முன்னேற முயன்ற பொழுது பூநகரியில் இருந்து தான் இராணுவத்தினர் மீது புலிகள் தாக்குதல் தொடுத்தனர். இப்பொழுது பூநகரியை இழந்துள்ள சூழ்நிலையில் இது பின்னடைவை ஏற்படுத்தும் என இராணுவம் நம்புகிறது

- கடந்த வாரம் முகமாலையில் உள்ள புலிகளின் முதல் முன்னரங்க நிலையை இராணுவம் கைப்பற்றி உள்ளதாக கூறியுள்ளது. இதற்கு பூநகரியை புலிகள் இழந்தது தான் காரணம் என்றும் இராணுவம் சொல்கிறது.

பூநகரியை கைப்பற்றிய பொழுது யாழ்ப்பாணத்திற்கு தரைவழியான ஒரு பாதையை இனி இராணுவம் ஏற்படுத்தும் என செய்திகள் தெரிவித்தன. A32 சாலை முழுவதும் இராணுவம் வசம் வந்ததால் இப்படியான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதனை அப்படியே கட்டுரை ஆசிரியர் தொடரில் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அதன் பிண்ணனி என்ன என்பது பற்றியோ, ஈழத்தின் பூளோக அமைப்பு பற்றியோ எந்த ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை என்பதும் இந்த வரிகள் மூலம் தெளிவாகிறது.

நன்றி...

9:35 PM, November 24, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

திரு,

உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி...

அனைத்து நண்பர்களின் கருத்துகளுக்கும் நன்றி...

VSK,

யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இந்த கட்டுரையை எழுதவில்லை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய நோக்கம் கட்டுரை தொடரில் இருக்கின்ற குறைகளை சுட்டிக்காட்டவே தவிர, தனி நபர்களை தாக்குவதற்கு அல்ல...

அடுத்து வரும் பாகங்கள் சரியான தகவலை முன்வைக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.

நன்றி...

10:16 PM, November 24, 2008
மதிபாலா said...

இந்தப்பதிவுக்கும் , அந்தத் தொடருக்குமான பாரா அவர்களின் பதில்

--------------------------------------

"குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியாகும் என்னுடைய ‘யுத்தம் சரணம்’ தொடர் குறித்து இணையத்தில் வெளியாகும் சில விமரிசனங்களைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து சில வாசகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். நண்பர் சுரேஷ் யுத்தம் சரணம் அறிவிப்பு வெளியான பதிவில் இன்று இதனை ஒரு வினாவாக முன்வைத்துள்ளார். வாசகர்களின் வசதிக்காக அவரது கருத்தைக் கீழேயும் அளித்திருக்கிறேன். இது பற்றிய என் கருத்துகள் இதனைத் தொடர்ந்து வெளியாகியிருக்கிறது.

ஈழம் பற்றிய யுத்தம் சரணம் ஆரம்பித்தாலும் ஆரம்பித்தீர்கள், அதைப் பற்றி இணைய உலகில் விரிவான விவாதமே ஆரம்பித்து விட்டது. நீங்கள் ஈழத்தகவல்களைப் பிழையுடன் கூறுவதாயும், பொன்சகா கொலைமுயற்சியிலிருந்து இதைத் தொடங்கியது, ஈழம்பற்றி அறியாத வாசகனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் என்றும் தமிழ் சசி தனது வலைப் பதிவில் கூறியிருக்கிறார். உங்களது பெயரில் ஆரம்பித்திருக்கும் ஆர்குட் குழுமத்திலும் இது பற்றிய ஒரு விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. தாங்கள் விளக்கம் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கும் ஒரு வாசகன். - சுரேஷ்

இனி என் பதில்:

அன்புள்ள சுரேஷ்

இத்தொடரினைக் குறித்து இணையத்தில் வெளியாகும் ஒவ்வொரு குறிப்பையும் விமரிசனத்தையும் கவனமாகப் படித்து வருகிறேன். ஈழப் போராட்டம் குறித்த சார்பற்ற, சரியான தகவல்களை அளிக்கவேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம். என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இதில் எவ்வித இடமும் இல்லை. எழுதுகிற ஒவ்வொரு வரிக்கும் சாத்தியமுள்ள அனைத்துத் தரப்புகளிலிருந்தும் ஆதாரங்கள் தேடி, ஒப்பிட்டுச் சரிபார்த்துத்தான் எழுதுகிறேன். இவற்றைத்தாண்டி, தகவல் பிழைகள் வருமானால் - சுட்டிக்காட்டப்படுமானால், அதையும் சரிபார்த்து, நேர்ந்த பிழையைச் சொல்லி, சரியான தகவலையும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு ஈழப் பிரச்னை குறித்த சரியான புரிதலை உண்டாக்குவது ஒன்றே இத்தொடரின் நோக்கம். பெரிய நாளேடுகளும் பிரபல விமரிசகர்களும் தொடர்ந்து ஈழம் குறித்த ஒருதலைப்பட்சமான தகவல்களையே முன்வைத்துவரும் சூழலில், அனைத்துத் தரப்புகளில் இருந்தும் கிடைக்கக்கூடிய தகவல்களைப் பொதுவில் வைத்து, உண்மையை வாசகர்களே உணர்ந்துகொள்ளக்கூடிய வகையில் இதனை வடிவமைக்க விரும்புகிறேன்.

மகாவம்சம் தொடங்கி இலங்கையின் முழுமையான சரித்திரத்தை இத்தொடர் விவரிக்கும். களம் பெரிது என்பதனால் முன்னும் பின்னுமாக நகர வசதியாக Halfway opening உத்தியைக் கையாண்டிருக்கிறேன். மற்றபடி இதன்மூலம் க்ரைம் நாவல் வாசிக்கும் பரபரப்புணர்வை உண்டாக்கும் எண்ணம் சற்றுமில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில் மாவிலாறு யுத்தக் காட்சியை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்க இயலும். பல வீடியோ காட்சிப் படங்கள் என்னிடம் உள்ளன.

பிரச்னை மிகவும் தீவிரமானது என்பதனால், அந்தத் தீவிரம் சற்றும் குறையாத ஒரு மொழிநடையை இணையத்தில் உள்ள பல வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள் மூலமும் சில வலைப்பதிவுக் குறிப்புகள் மூலமும் அறிகிறேன். எதையும் காட்சிப்படுத்தாமல் நேரடியாக நடந்ததைச் சொல்லும் அத்தகைய உத்தி, பத்திரிகைத் தொடருக்குப் பொருந்தாது. மக்களை விடாமல் வாசிக்கவைப்பது என்பது ஆகப்பெரிய சவால். எனக்கு அவர்கள் வாசித்தே தீரவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் வெளிப்படுத்த முடியுமானால் எத்தனை கனமான விஷயத்தையும் பத்திரிகைத் தொடராக எழுத இயலும். டாலர் தேசம் தொடங்கி இதைப் பலமுறை எனக்கு நானே நிரூபித்துக்கொண்டிருக்கிறேன்.

எனவே மொழி சார்ந்த விமரிசனங்களுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. ஆனால் கருத்து ரீதியில் முன்வைக்கப்படும் எந்த ஒரு விமரிசனத்தையும் நிச்சயம் நிராகரிக்கமாட்டேன். பதில் சொல்லவேண்டிய ஒவ்வொரு வினாவுக்கும் அவசியம் பதிலளிப்பேன். மின்னஞ்சல் மூலமோ, நேரடியாகவோ, தொடரிலோ, அல்லது என் வலைப்பதிவிலோ - அவசியத்துக்கேற்றபடி. ஏதேனும் பிழைகள் சுட்டிக்காட்டப்படுமானால் அவசியம் திருத்திக்கொள்வேன். இது விஷயத்தில் எனக்கு அகங்காரம் ஏதுமில்லை. ஈழத்தில் நடப்பது பற்றி வெறுமனே கவலைகொண்டு வருந்திக்கிடக்கும் கோடிக்கணக்கான சாதாரணர்களுள் நானும் ஒருவன். அவ்வளவே.

ஆனால் வாரம் இருமுறை இதழில் இது வெளியாகிறபடியால் உடனடிப் பிழை திருத்தம் என்பது சற்றே சிரமமான செயல். ஏதேனும் பிழை நேர்ந்தால், எதிர்வரும் இதழ்களில் ஒன்றில்தான் சரி செய்ய இயலும்.

தொடர் நிறைவடைந்து புத்தகமாக இது வெளிவரும்போது எந்தப் பிழையும் இல்லாமல் வரும் என்கிற ஓர் உத்தரவாதத்தைக் கண்டிப்பாக அளிக்கிறேன்.

ஈழப் பிரச்னை குறித்த உள்ளார்ந்த அக்கறை உள்ள வாசகர்கள் என்னுடைய இம்முயற்சியில் சகபயணிகளாக இணைந்துகொள்ள முன்வருவார்களேயானால், அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். பெரும்பான்மை வாசகர்களுக்குச் சரியான தகவல்கள் சென்று சேர உங்களால் இயன்ற தகவல் உதவிகளை எனக்குச் செய்யலாம்.

என்னைக்காட்டிலும் சிறப்பாக இதனை எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கக்கூடும். எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை அர்த்தமுள்ளதாக்க விரும்புகிறேன். அவ்வளவுதான்.

http://www.writerpara.net/

3:27 AM, November 25, 2008
Anonymous said...

Even Mahinda also said poonagary capture is given land link to Jaffna. Cos the distace from poonagary to Jaffna across water is very less ( 2 km or so). I think If they could not cature Elephant Pass( Anaiyiravu) in near future army would build a bridge across the sea water or develop this area for ship transportation suitable for military movement.

And this link may eventually help to the Army when they run away from Jaffna

3:51 AM, November 25, 2008
Anonymous said...

I guess my comment before is not relevent. Poonagary capture is not the main issue. How they corrupt the History and the Fact is important. Thanks

3:57 AM, November 25, 2008
Anonymous said...

வாரத்திற்கு இரண்டு பகுதிகள் எழுதும் போது அவசரத்தில்/கவனக்குறைவில்
பிழைகள் வர வாய்ப்புண்டு.அச்சுக்குப்
போகும் முன் விபரமறிந்தவர்கள் யாரவது படித்து கருத்து சொல்லி/
பிழை தவிர்த்து வெளியிடலாம்.
அது நடைமுறையில் சாத்தியமில்லை.
சசி,திரு தொடர்ந்து வாராவாரம்
படித்து பிழைகளை/தவறுகளை
எழுதுங்கள்.நூலாக வரும் போது
அவற்றை கருத்தில் கொண்டு
திருத்தி எழுத அது உதவும்.
அவர் திறந்த மனதுடன் அணுகும்
போது விமர்சித்து உதவுங்கள்.

இதுவரை திராவிடர் கழகம், பெரியார்
திராவிடர் கழகம் போன்றவை ஈழம் குறித்த ஒரு முழுமையான நூலை
வெளியிடவில்லை.சிறு பிரசுரங்கள்
வெளியிட்டார்கள்.இப்போது பா.ரா
எழுதுகிறார்.அது நூலாகவும் வரும்.
அப்புறம் அதை ஒரு தரப்பினர் விமர்சித்து கூட்டம்
போடுவார்கள்.ஒரு பத்து பேர் பேசுவார்கள்.கூட்டம் கூடி
கலைவார்கள்.இதுதான் நடக்கும்.

9:13 AM, November 25, 2008
Anonymous said...

good luck my friend. Seems you pissed off not on one person, but on a group of people. 14/30. Why are those eight people not in agreement with you? Do they think para has a write to his own history?

3:11 PM, November 25, 2008
Anonymous said...

//இந்த தொடர் ஒரு வியபாரம் என்பதே என்னுடைய கருத்து. ஒரு பிரச்சனை தமிழகத்தில் முக்கியமாக பேசப்படும் பொழுது அதனை வியபாரமாக மாற்றும் இந்திய வெகுஜ ஊடக, எழுத்து வியபாரிகளின் முயற்சி தான் இந்த தொடர்.//

பா.ராகவன் நுனிப்புல் மேய்ந்து 'வரலாற்றுத் தொடர்' எழுதினால், கடைசி பாகம் வெளியான அடுத்தவாரமே முழுத்தொடரும் கிழக்கு பதிப்பகத்தின் நூலாக வெளியாகும் என்பது நடைமுறை. ஈழப் பிரச்சினைப் பற்றி அக்கறையோடு பதிவுகள் எழுதும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர் பத்ரி பா.ரா.வின் 'முதலே முழுக்கோணலாக' இருக்கும் இந்த தொடரையும் வியாபாரச் சரக்காக்க மாட்டார் என்று நம்புவோம்.

3:50 PM, November 25, 2008
Anonymous said...

Started as a Crime Novel, currently as Ambulimama, Do you have any comments ?

11:25 PM, December 01, 2008