வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, December 29, 2005

உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட

Leia Mais…
Saturday, December 17, 2005

சாப்பலின் Remote Control


இந்தியப் பாராளுமன்றம் கங்குலி நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்போகிறது. இது நாட்டிற்கு அவசியமான, முக்கியமான பிரச்சனை போல இடதுசாரி மற்றும் மேற்குவங்காள தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். கங்குலி நீக்கப்பட்டது சாப்பல்-பவார் & Coவின் அரசியல் காரணமாகத் தான் என்பதிலும் கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் இது பாரளுமன்றம் விவாதிக்ககூடிய முக்கியமான பிரச்சனையா என்பது தான் கேள்வி.

இந்திய கிரிக்கெட்டின் அரசியலும் தேர்வுக் குழுவில் இருக்கும் தில்லுமுல்லுகளும் இன்று வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரளுமன்றமும் இந்தப் பிரச்சனையை விவாதிப்பது பிரச்சனையை மேலும் அரசியல் மயமாக்கி விடும்.

என்னைப் பொறுத்தவரை கங்குலியை நீக்கியது சரி அல்ல. அவரை மறுபடியும் அணியில் சேர்க்க வேண்டும்.



கங்குலியை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கிய பொழுது அது சரியானது என்றே நினைத்தேன். அது போல கங்குலி டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அது சரியான முடிவல்ல, கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என்று கருதினேன்.

ஆனால் இப்பொழுது கங்குலி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் அரசியலின் உச்சகட்டமாகத் தான் தெரிகிறது.

தில்லி டெஸ்ட் போட்டியில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. நான் போட்டியை பார்க்கவில்லை. அர்ஜுனா ரணதுங்கா கங்குலி அடித்த சில கவர் டிரைவ்கள் தான் தில்லி டெஸ்ட் போட்டியில் தான் பார்த்த ஷாட்களில் சிறப்பான ஷாட்டாக இருந்ததாக தெரிவிக்கிறார். கங்குலி சிறிது காலம் தன்னுடைய பழைய ஆட்டத்திறன் இல்லாமல் இருந்தார். அதனை பெற முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தில்லி போட்டியில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய கங்குலி அடுத்த போட்டியில் சதம் அடித்தால் அவரது இடம் அணியில் உறுதியாகி விடும் என்று நினைத்து கங்குலியை சாப்பல்-கிரண் மோர் & Co நீக்கியிருக்கிறார்கள்.

சாப்பல் - கங்குலி சண்டையில் சாப்பல் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் முட்டாள்தனம் நிறைந்த அதிகப்பிரசங்கித்தனம் என்றே நான் நினைக்கிறேன். அணியின் கேப்டன் என்னும் பொழுது அவர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் நியதி. கோச் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் டீம் மீட்டிங்கில் கங்குலியை விலகிக் கொள்ளுமாறு கோச் கூறியது அதிகப்பிரசங்கித்தனம். சாப்பலுக்கு கேப்டனை விலகச் சொல்லும் அதிகாரம் கிடையாது. இது கேட்பனாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட அவமரியாதை. கங்குலி கேப்டனாக இருப்பதிலோ, அணியில் இருப்பதிலோ பிரச்சனை என்றால் அதனை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு கேப்டனை நீ அணியில் இருந்து விலகிக் கொள் என்று சொல்வது எந்த வகையில் சரி என்பது எனக்கு தெரியவில்லை. அது போலவே கங்குலி அந்தப் பிரச்சனையை மீடியாக்களிடம் கொண்டு சென்றதும் சரியான காரியமல்ல.

நன்றாக விளையாடுபவர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்று கூறுவது மிகச் சரி. அப்படியானால் கங்குலி மட்டுமே தான் அணியில் சரியாக விளையாட வில்லையா ? இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அடித்த 90+ தவிர சச்சின் கடந்த இரு வருடங்களாக எந்தளவுக்கு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கைக்கு எதிராக அடித்த 90+க்குப் பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் சச்சின் சரியாக விளையாடவில்லை. எனவே அவர் எதிர் வரும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு விடுவாரா ? கங்குலிக்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் ?

தன்னுடைய அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கேப்டனுக்கு முழு அதிகாரம் உண்டு. கங்குலி கேப்டனாக இருந்த பொழுது அதைத் தான் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கே ஒரு புதிய முகத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் கங்குலி. ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் திராவிடை சாப்பல் தன் ரிமோட் கண்ட்ரோலால் இயக்குவது போல தான் தோன்றுகிறது. சாப்பல் தான் இந்தியக் கிரிக்கெட்டின் தேர்வாளர், கோச், கேப்டன் எல்லாமும்.

சிறப்பாக விளையாடும் அனைவருக்கும் கங்குலி அணியில் இடமளிக்க தவறவில்லை. ஓய்வு பெற்று விடும் முடிவுக்கே சென்ற ஸ்ரீநாத்தை அணிக்கு கொண்டு வந்து அவரை கங்குலி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அணித் தேர்வில் இருந்த பல தில்லுமுல்லுகளை கங்குலி நீக்கி திறமையானவர்களை ஊக்குவித்தார். ஒரு கேப்டன் அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால் திராவிட் கங்குலி விஷயத்தில் நடந்த கொண்டு முறை அவ்வாறாகத் தெரியவில்லை.

கங்குலி தில்லி போட்டியில் சிறப்பாக விளையாடினார், அடுத்த வரும் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடக்கூடும் என்றால் அவரை அணியில் தக்கவைத்துக் கொள்ளவே எந்த கேப்டனும், கோச்சும் விரும்பவேண்டும். அர்ஜுணா ரணதுங்க கூட கங்குலி தொடர்ந்து இந்திய அணியில் இருப்பது இந்தியாவிற்கு நல்லது என்றே கூறுகிறார். கங்குலி தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொள்ள சிறப்பாக விளையாடவேண்டும். தில்லி போட்டியில் கூட அதைத் தான் அவர் செய்ய முயன்றுள்ளார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயமும் கூட. ஆனால் கங்குலியை ஆடவிடாமல் நீக்க வேண்டும் என்பதில் தான் சாப்பலும் திராவிட்டும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் கங்குலியை அடுத்த போட்டியில் ஆட விடாமல் நீக்கி இருக்கிறார்கள்.

கங்குலி அணியில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்பதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு குழு என்று வரும் பொழுது அதில் பிரச்சனைகளும் வரத் தான் செய்யும். சிலரை மட்டுமே கொண்ட சாப்ட்வேர் டீமில் கூட எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய கிரிக்கெட் அணியிலும் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தான் செய்யும். அது அணியில் உள்ளவர்களை கங்குலி பிரிக்கிறார் என்று பொருள் தருமா என்று தெரியவில்லை. கங்குலியை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பல் பிதற்றுவதாகத் தான் தோன்றுகிறது. இப்பொழுது கூட இந்திய அணியில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் ஒரே எண்ணத்தில் சாப்பலின் பின் இருக்கிறார்களா என்ன ?

இப்பொழுது கங்குலியை அணியில் கொண்டு வந்து ஒரு போட்டித் தொடருக்கு வாய்ப்பளித்து பின் அவரே ஓய்வு பெற்றுக் கொள்வது என்பதான ஏற்பாடு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்டீவ் வாக்கிற்கு கொடுக்கப்பட்டது போல கங்குலிக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படுமாம். இது ஒரு முட்டாள்தனமான காரியம். முதலில் ஸ்டீவ் வாக்கிற்கு செய்யப்பட்டதே பெரிய அவமதிப்பு. அதையே கங்குலிக்கும் செய்வது முட்டாள்தனம்.

கங்குலி நன்றாக விளையாடினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தே தீர வேண்டும். நன்றாக விளையாடா விட்டால் நீக்கி விடலாம். அதற்காக அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும், அரை சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் - just too much

Leia Mais…
Wednesday, December 14, 2005

French Fries

பா.ராகவன் எழுதிய "பாக். ஒரு புதிரின் சரிதம்" என்ற புத்தகம் சமீபத்தில் படிக்க கிடைத்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இது குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்ததாக நினைக்கிறேன். அப்பொழுது மேம்போக்காக இதனை வாசித்து இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனை குறித்து படித்து அது குறித்து எனது எண்ணங்களை வளர்த்துக் கொண்ட பிறகு இப்பொழுது தான் இதனை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


கிழக்கு பதிப்பகம் இணையத்தளத்தில் "காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது" என்ற வரிகளை பார்த்து இந்தப் பத்தகம் குறித்த ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன். படிக்க தொடங்கிய சில அத்தியாயங்களில் காஷ்மீர் குறித்த விஷயங்கள் சரியாக எழுதப்படவில்லை என்று தான் எனக்கு தோன்றியது. காஷ்மீர் பிரச்சனை மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வித்தியாசமானது. இது இரு தேசங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனை இல்லை. காஷ்மீர் மக்களை இரு தேசங்களுக்கிடையே துண்டாக்கி மனித உறவுகளை கூறு போட்ட ஒரு பிரச்சனை. பா.ரா. இது குறித்து அலசி ஆராய்ந்து எழுதி இருக்கலாம் என்று தோன்றியது.

பா.ரா. இதனை எழுதும் பொழுது இருந்த சூழ்நிலையை விட இன்று இப் பிரச்சனை குறித்த இரு நாடுகளின் நிலையும் ஓரளவிற்கு மாறியிருக்கிறது (கவனிக்கவும், ஓரளவிற்கு மட்டுமே). காஷ்மீரின் எல்லைகளை திறந்து (Soft Borders) காஷ்மீர் மக்களிடையேயான உறவுகளை வளர்ப்பது இப்பொழுது முக்கியமாக பேசப்படுகிறது.

நான் காஷ்மீர் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஒரு நண்பர் இப் பிரச்சனை குறித்து தானும் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இப் பிரச்சனை குறித்த ஒரு சரியான அறிமுகத்தை அவர் தமிழ் வாசகர்கள் முன் வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

*************

பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் தன் வேலையை உதறி பங்குச்சந்தையில் முழுமையாக நுழைந்து விட்டான். பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்க அவன் செய்யும் டிரேடிங்கிலும் கொழுத்த லாபம். இதனை கேட்டதில் இருந்து நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி விட்டது. ஆனால் சிரமப்பட்டு அதனை அடக்கிக் கொண்டேன். பங்குச்சந்தையின் பொருட்டு வேலையை உதறுவது சரியானது தானா என்று மனதில் ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி முடிவில் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் சந்தையில் குவிந்து கொண்டே இருக்கிறது. உலகப் பொருளாதார நிலையும் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்ககூடும். அதுவரை இந்தியாவில் இருப்பவர்கள் பங்குச்சந்தையில் புகுந்து விளையாடலாம்.

*************

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா இந்தியாவில் இருப்பதாக தமிழ்நெட் இணைத்தளம் தெரிவிக்கிறது. இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தி

http://www.hindustantimes.com/news/7598_1572346,000500020002.htm

இது உண்மையா என்று தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் இந்தியாவில் இருக்கும் இரண்டாவது புலிகள் எதிர்ப்பு தலைவர் இவர். ஏற்கனவே இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் எங்கோ வடஇந்தியாவில் இருப்பதாக ஊடகங்களில் படித்த நினைவு.

யார் வரதராஜ பெருமாள் என்கிறீர்களா ? அது சரி...

*************

அது என்ன French Fries ன்னு தலைப்பு ?

பயங்கர குளிர். முகம், காது, கை மற்றும் உடலெங்கும் கவசம் அணிந்தும் நடுங்க வைக்கும் குளிர். என்ன செய்வது ? ஓரளவுக்கு சுமாரான குளிரில் கொடைக்கானலிலும், ஊட்டியிலும் ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி, தேங்காய் சட்னி ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது. இங்கும் அது போல சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு முறை ஒரு இந்தியன் கடையில் பஜ்ஜி சாப்பிட்டு, அடுத்த முறை பஜ்ஜியை பார்த்தால் ஒரே ஓட்டம் தான்.

நேவார்க் (Newark) வரை சுரங்க ரெயிலில் வந்து பின் வீட்டிற்கு பேருந்து பிடிக்க காத்திருந்த சில நிமிடங்களில் மெக்டோனால்சில் சாப்பிட்ட French Fries தான் எனக்கு நம்மூர் பஜ்ஜியாக தெரிந்தது. நல்ல சூடான French Fries குளிருக்கு இதமாக இருந்தது. இங்கு கிடைக்கும் நம்மூர் பஜ்ஜியை விட French Fries 1000% times better.



அதில் மெய்மறந்து போய் இந்த கதம்பமான பதிவிற்கு French Fries என்று வைத்து விட்டேன்

Leia Mais…
Saturday, December 03, 2005

புதிய யுத்தம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் பேச்சு இலங்கைப் பிரச்சனையில் மற்றுமொரு புதிய யுத்தத்தை தொடங்கியிருக்கிறது. அது தான் ராஜதந்திர யுத்தம். அடுத்து வரும் நாட்களில்/மாதங்களில் இந்த ராஜதந்திர யுத்தத்தை தான் இரு குழுக்களும் புரியப்போகின்றன. பிரபாகரனின் பேச்சு அதற்கு தான் அடித்தளமிட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இம் முறை பிரபாகரனின் பேச்சு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. தன்னிலை விளக்கம் தரும் உரையாகவும், இலங்கையின் யதார்த்த சூழலை வெளிப்படுத்துவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவை ஒரு பொறிக்குள் சிக்க வைப்பதாகவும் அவரது பேச்சு இருந்தது. ஆனால் பிரபாகரனின் பேச்சுக்கு எதிர்வினையாக ராஜபக்ஷ எதுவும் செய்யாமல் மிகுந்த கவனத்துடன் காய்களை நகர்த்துவதாகவே தோன்றியது.




கடந்த காலங்களில் சிங்கள அரசுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை ஒரு நிர்பந்தம் காரணமாகவே எழுந்ததாகவும், சிங்கள அரசு தமிழர்களின் உரிமைகளை எக் காலத்திலும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் பிரபாகரன் தெரிவித்தார். கடந்த காலங்களில் புலிகள் உண்மையிலேயே தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை, வெளிப்பூச்சாகத் தான் அதனைக் கூறுகிறார்கள் என்பதான ஒரு எண்ணம் இருந்தது. பிரபாகரன் அதனை உறுதிப்படுத்தும் அதே வேளையில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்பு பேசிய உரையை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக் கொண்டார். கூட்டாச்சி, புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ஏற்பது, சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளுடன் இணைந்து செயல்படுவது போன்ற உலக நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட ராஜபக்ஷ மறுதளித்தது பிரபாகரனின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது.

பொதுவாக பிரபாகரனின் பேச்சில் போர் பற்றிய தீவிரம் எதுவும் இருக்கவில்லை. மாறாக உலகநாடுகளிடம் தங்களுக்கான அங்கீகாரத்தை வேண்டுவதும், சிங்கள அரசு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதை வெளிப்படுத்துவதும் தான் முக்கிய நோக்கமாக இருந்தது. பிரபாகரனின் பேச்சிற்கு முன்பாக இலங்கை ஒன்றுபட்ட ஒரே நாடு அல்ல என்பதை முன்னிறுத்தும் செயல்களை புலிகள் மேற்கொண்டிருந்தனர். பிரபாகரனின் பேச்சிலும் தாங்கள் ஏற்கனவே வடகிழக்கில் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சரி..தங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை தேடத் தான் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக பிரபாகரன் கூறினார். உண்மையிலேயே அவர்கள் எதிர்நோக்கிய அங்கீகாரம் உலகநாடுகள் மத்தியில் கிடைத்ததா ? இது வரை அவர்கள் அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளனரா ?

இல்லை என்பது தான் உண்மை.

இலங்கை அரசு கடந்த காலங்களில் சந்திரிகா, லஷ்மன் கதிர்காமர், ரனில் விக்ரமசிங்கே போன்றோர் மூலமாக நடத்திய ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோல்வியடைந்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் மூவரும் இலங்கை அரசுக்கு ஒரு Diplomatic முகத்தை கொடுத்தனர். குறிப்பாக லஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளிடம் இலங்கைக்கு நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தி அதன் மூலம் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வைத்தார்.

புலிகள் குறித்தான ஒரு அவநம்பிக்கையை மிக கவனமாக உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசு வளர்த்திருந்தது. புலிகள் கடந்த காலங்களில் செய்த அரசியல் படுகொலைகள் அரசின் நோக்கத்திற்கு உதவி புரிந்தது. லஷ்மன் கதிர்காமர் தவிர புலிகளுக்கு சலுகைகளை அதிகம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ரனில் கூட புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவதில் வெற்றி கண்டிருந்தார். நார்வேயை மட்டுமே அனுசரணை செய்யும் நாடாக புலிகள் நினைத்தனர். ஆனால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி புலிகளை ஒரு பொறிக்குள் சிக்க வைக்க ரனில் முயன்றார். வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டால் அது தங்களுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரத்தை கொடுக்கும் என்று புலிகள் நினைத்தனர். ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவே புலிகள் அழைக்கப்படவில்லை. புலிகள் விலக்கப்பட்டது குறித்து ரனில் அதிகம் அக்கறை கொள்ளாமல் அடுத்த மாநாட்டை டோக்கியோவில் நடத்த தயாராகினார். சமாதான பேச்சு வார்த்தை என்ற பொறிக்குள் தங்களை ரனில் கொண்டுவர நினைப்பதை தாமதமாக உணர்ந்த புலிகள் அந்தப் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகினர்.

இலங்கை அரசு மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளை கடந்து, புலிகள் சில வெற்றிகளை பெற்றிருந்தனர்.

இலங்கைக்கு வருகின்ற பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புவில் ஜனாநிதிபதியையும், பிரதமரையும் சந்தித்து விட்டு கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் தமிழ்ச்செல்வனையும் சந்திப்பது வழக்கமான ஒன்றானது. குறிப்பாக சுனாமிக்கு பின்பு புலிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிடைத்தது. புலிகளின் பகுதியில் ஒரு தனி நாடு போன்ற அமைப்பு இருந்தது நிவாரணப் பணிகளில் புலிகளையும் சேர்த்து கொள்வது போன்றவற்றில் உதவியது. அது போல புலிகளின் கிழக்கு மாகாண தலைவர் கொளசல்யன் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலர் கோஃபி அன்னான் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்பொழுது புலிகளுக்கு ஐ.நா. அங்கீகாரம் தர முயலுவதாக இலங்கை அரசு, மற்றும் சிங்கள் தேசியவாதிகள் கோஃபி அன்னான் மீது குற்றம் சாட்டினார்.

ஆனால் இவை புலிகள் அங்கீகாரம் பெறுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை

கடந்த காலங்களில் உலகநாடுகளிடம் புலிகள் அங்கீகாரம் பெற முயன்ற பல முயற்சிகளை லஷ்மன் கதிர்காமர் தடுத்தார்.

ஆனால் கடந்த காலங்கள் போல் இல்லாமல் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பெருத்த மாறுதல் இருக்கிறது.

இன்றைக்கு அரசியல் ரீதியாக ஒரு சமபலம் நிலவுகிறது. புலிகளை பார்க்கும் அதே கோணத்தில் போரினை விரும்பும், சிங்கள தீவிர தேசியவாத குழுவாகவே இலங்கை அரசும் தற்பொழுது பார்க்கப்படுகிறது - Hawkish. இலங்கைக்கு கடந்த காலங்களில் இருந்த ஒரு Diplomatic முகம் தற்பொழுது இல்லை. கடந்த காலங்களில் உலகநாடுகள் கவனிக்க மறந்த பல விஷயங்கள் தற்பொழுது கூர்ந்து கவனிக்கப்படும். கிழக்கு மாகாணங்களில் தங்கள் மீது நிழல் யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்திருப்பதாக புலிகள் குற்றம்சாட்டினர். வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களை உலகநாடுகள் கூர்ந்து கவனிக்கும். இந்தச் சூழ்நிலையை Exploit செய்து விடும் நோக்கத்தில் தான் பிரபாகரனின் பேச்சு இருந்தது.

அது போலவே நார்வேவை சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்க வேண்டும் என்பன போன்ற பேச்சுகள் ராஜபக்ஷவின் தேர்தல் முழுக்கமாக இருந்தது. வெற்றி பெற்ற பிறகு ராஜபக்ஷ நார்வே குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லையெனினும், அனுசரணை செய்யும் நாடுகளை பலப்படுத்துவது குறித்து ராஜபக்ஷ தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நார்வேக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது தான் ராஜபக்ஷவின் நோக்கம். நார்வே புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் நார்வேவை அனுசரணை செய்வதில் இருந்து தன்னிச்சையாக நீக்குவதையோ, தற்போதைய சூழ்நிலையில் நார்வே விலகுவதையோ இலங்கை விரும்பவில்லை.

புலிகளுக்கு ஆதரவான நாடாக நார்வேயை இலங்கை கருதுகிறது. நார்வே நாட்டினை அனுசரணையாளர் என்பதில் இருந்து நீக்கினால் இலங்கைக்கு அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக புலிகள் தமிழீழத்தை அறிவித்தால் அதனை அங்கீகரிக்க கூடிய நாடாக நார்வே இருக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இப் பிரச்சனைகளில் தன்னுடைய சார்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி தனக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டு பிறகு நார்வேயின் முக்கியத்துவத்தையோ, நார்வே வை முழுமையாக நீக்குவதையோ மேற்கொள்ள இலங்கை நினைக்கிறது. ஆனால் இந்தியா இந்தப் பிரச்சனைகளில் நுழையுமா என்பது சந்தேகமே. அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு வரும் காலங்களில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது. தற்போதைய இலங்கை அரசு தலைமையை நம்பி அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழர்களின் நிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பாக கருதப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் லஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கு பிறகு எடுத்த நிலைப்பாடு புலிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்கா, இந்தியா ஆதரவை விட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு புலிகளுக்கு முக்கியமானது. இதனை புலிகள் பெற்றாக வேண்டும்.

பிரபாகரனின் பேச்சுக்கு முன்பாக தமிழீழம் அறிவிக்கப்படும் என்பன போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால் அவ்வாறு ஒரு அறிவிப்பு வெளியிடக்கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. உலகநாடுகள் அதற்கு ஆதரவு தராது. எனவே தான் பிரபாகரனின் பேச்சில் பெரும் பகுதி உலகநாடுகளை நோக்கியே அமைந்து இருந்தது. தங்களுடைய பொறுமை குறைந்து கொண்டிருக்கிறது என இறுதி எச்சரிக்கையை விடுத்து உலகநாடுகளை இப் பிரச்சனையில் அதிக கவனத்தை பெற வைக்க பிரபாகரன் முயலுகிறார்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் அவ்வாறு தனது நிலையை மாற்றிக் கொள்ள ஜே.வி.பி போன்ற அமைப்புகள் அவரை அனுமதிக்குமா என்பது அடுத்த கேள்வி. அவரை ஒரு Hawk என்றே உலகநாடுகள் தெரிந்து வைத்திருக்கின்றன. இதனை மாற்றியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது.




இலங்கைப் பிரச்சனை தற்பொழுது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஆனால் பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது. போரும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் யார் வெற்றி பெற போகிறார்கள் ?

Leia Mais…
Thursday, November 24, 2005

WALMART - என்ன பிரச்சனை ?



சில்லறை வியபாரத்தில் (Retail) அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு சர்ச்சையில் சிக்கித் தவிக்கிறது. இடதுசாரிகளின் முதல் சிறு வியபாரிகள் வரை பலரும் முன்வைத்த பலமான எதிர்ப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.

இந்தியாவிற்கு வால்மார்ட் வருவதால் அப்படி என்ன தான் பிரச்சனை இருக்கிறது ?

இந்தியாவின் சில்லறை வியபாரம் முறைப்படுத்தப் படாத வர்த்தகம். சிறு வியபாரிகள் முதல் அவர்களுக்கு பொருள்களை தரும் சப்ளையர்கள், பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் என பலர் இருந்தாலும் இது முறைப்படுத்தப்படாத, காலப்போக்கில் கிளை விட்டு வளர்ந்த ஒரு மிகப் பெரிய Network.

இந்த Networkல் யார் வேண்டுமானாலும் நுழைந்து அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்ள முடியும். நானும் கூட இந்த Networkல் இருந்து வந்தவன் தான். என் அப்பாவுக்கு நெய்வேலியில் மளிகை கடை உண்டு. ஓய்வு நேரங்களில் நானும் கடையை பராமரித்திருக்கிறேன். இதில் இருக்கும் பல பிரச்சனைகள் புரியும். கடந்த காலங்களில் ஏற்பட்ட பல மாறுதல்களும் எனக்கு தெரியும்.

முன்பெல்லாம் சோடா, கலர் போன்றவை கடைகளில் அதிகளவில் விற்கும். எங்கள் கடைக்கு விற்பனை செய்யும் சோடா சப்ளையருக்கு கோடை காலங்களில் நல்ல வியபாரம் நடக்கும். எங்கள் கடையைப் போலவே நெய்வேலியில் இருக்கும் பலக் கடைகளுக்கும் அவர் தான் விற்பனையாளர். நல்ல முறையில் சென்று கொண்டிருந்த அவர் வியபாரம் அந்நிய குளிர் பான நிறுவனங்கள் இந்தியாவெங்கும் பரவிய பொழுது நசிந்துப் போனது.

அன்றைக்கு கோலி சோடாவை வைத்துக் கொண்டு இந்த கோலி குண்டு வெளியில் வருமா, வராதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நான், இன்றைக்கு அதனை ஏதாவது கண்காட்சியில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். கிராமங்களில் கூட லெகர் சோடாக்கள் கிளை பரப்பி விட்டன. கோலி சோடா/குண்டு சோடா காணாமல் போய் விட்டது

அவ்வாறே ஊறுகாய் வியபாரம். மட்டைகளில் வைக்கப்பட்டு குடிசை தொழில்களாக செய்யப்பட்டு விற்கப்பட்ட ஊறுகாய்கள், "ருசி" ஊறுகாய் பாட்டில்களாக மாறிய பொழுது அதனைச் செய்து கொண்டிருந்தவர்களின் தொழில் நசிந்தது. இது போன்ற பல வியபாரங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் நசிந்து போய்ப் இருக்கிறது.

இப்பொழுது மொத்த மளிகைக் கடைகளுக்கும் வேட்டு வைக்க கூடிய வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கின்றன.




மளிகைக் கடைகளுக்கு வியபாரம் பாதிப்படையும் பொழுது அதனை நம்பி இருக்கிற மளிகைக் கடை வியபாரிகளில் இருந்து, சப்ளையர்கள், அவர்களுக்கு பொருள் வழங்கும் விவசாயிகள் வரை பாதிப்படைகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அவர்களே கொள்முதல் செய்து கொள்வார்கள். விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக - Whole Sale ஆக பொருள்களை வாங்குவதால் விவசாயிகளுக்கும் குறைவாகத் தான் கொடுப்பார்கள். ஆனால் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். பொருள் விளையும் இடத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லப்படும் பழைய முறைகள் மாறுதல் அடையும். Food processing போன்ற துறைகள் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகளிடம் இருந்து பெரிய நிறுவனங்களே கொள்முதல் செய்வதால் சப்ளையர்களுக்கு வேலை இருக்காது. பொருள்களை பெற்று TVS 50ல் பலக் கடைகளுக்கும் சப்ளை செய்யும் விற்பனையாளர்கள் வேலை இழப்பார்கள்.

பலர் தங்களுக்கு ஒரு மாற்று வருமானமாக பெட்டிக்கடைகளையோ, சிறு வியபாரத்தையோ செய்து வருகின்றனர். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தால் இவ்வாறு செய்ய முடியாது. இது இந்தியாவில் பெரிய பாதிப்புகளையும், சமுதாய மாற்றங்களையும் ஏற்படுத்தும் என்று இடதுசாரிக்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.

இது முழுமையான உண்மை என்றோ, அடுத்த சில வருடங்களில் நடந்து விடும் என்றோ நிச்சயமாக கூறமுடியாது. இந்தியா போன்ற பெரிய நாட்டில், வருமானத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் நாட்டில், இத்தகைய மாற்றங்கள் வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் இது குறித்த ஒரு அச்சம் நிலவத் தான் செய்கிறது.

மாற்றங்கள் என்பது இன்றியமையாதது. சில்லறை வியபாரத் தொழில் இந்தியாவில் பல காலமாக ஒரே நிலையிலேயே இருந்து வருகின்றது. இது நிச்சயமாக ஒரு மாற்றத்தை எதிர்கொள்ள தற்பொழுது தயாராகி வருகிறது என்று சொல்லலாம்.




வால்மார்ட்டை அனுமதிக்க மாட்டோம், அதனால் சிறு வியபாரிகள் பாதிப்படைவார்கள் என்று கூறும் இடதுசாரிகள், டாட்டாவோ, ரிலையன்ஸோ இவ்வாறு ஆரம்பிக்கும் பொழுது பிரச்சனை வராது என்று நினைக்கிறார்களா ?

டாட்டா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற அனுபவம் வாய்ந்த நிறுவனங்களுடன் போட்டியிட முடியாது என்று கருதுகிறார்களா ?

வால்மார்ட் இந்தியாவில் நுழைவதில் உள்ள சிக்கல் என்ன ?


இது பற்றி அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்

Leia Mais…

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 1

விடுதலைப் புலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதான ஒரு கருத்து இந்திய ஊடகங்களால் பல காலமாக தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஏதிரான இவ்வாறான கருத்துக்கள் பல நிலைகளில் முன்வைக்கப்படுகிறது

  • விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் இலங்கையில் அமெரிக்க படைகள் நுழையும். அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்
  • தமிழ் ஈழம் அமைந்தால் தமிழ்நாட்டை விடுதலைப் புலிகள் பிரித்து ஒரு அகன்ற தமிழ் தேசத்தை உருவாக்க நினைப்பார்கள் அல்லது சுதந்திர தமிழ் ஈழம் அமைந்தால் அதன் பாதிப்பால் இங்குள்ள தனித் தமிழ் இயக்கங்கள் தனி நாடு கோருவார்கள்
  • ராஜீவ் காந்தியின் படுகொலை

1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிலும் உலக நாடுகளிலும் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்ட போதிலும் இந்த வாதங்கள் மட்டும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த உளுத்துப் போன வாதங்கள் தவிர புதிதாக சில வாதங்களும் தற்பொழுது சேர்ந்து கொண்டுள்ளன.

  • விடுதலைப் புலிகளின் புதிய விமானங்கள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன
  • புலிகள் சமர்ப்பித்துள்ள - ISGA (Interim Self Governing Authority) எனப்படும் இடைக்கால நிர்வாக அமைப்பின் சரத்துப் படி இந்துமகா சமுத்திரத்தில் மூன்றாவது கடற்படையாக புலிகளின் கடற்படை உருவாவது நீண்ட கடற்கரையுடைய இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக அமையும்

இந்த வாதங்களில் எந்தளவிற்கு உண்மையிருக்கிறது ? இந்த வாதங்களின் படி இந்தியாவின் பாதுகாப்பிற்கு புலிகள் உண்மையில் அச்சுறுத்தலாக இருக்கிறார்களா ? அல்லது தமிழ் ஈழம் அமைவதை விரும்பாத சில பத்திரிக்கைகள்/குழுக்கள் இந்த வாதங்களை பல ஆண்டுகளாக தொடர்ந்து அப்படியே பராமரித்து வருகிறார்களா ?

இது பற்றி எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தாலும், இந்த Thanks Giving விடுமுறையில் தான் அதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.

1987க்குப் பிறகு உலக அரசியலில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக பனிப்போர் முடிவிற்கு வந்து உலக வரைப்படத்தில் இருந்து சோவியத் யுனியன் காணாமல் போனது. இரு வல்லரசுகளுக்கும் அதனைச் சார்ந்த சார்பு நாடுகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வு குறைந்து பரஸ்பரம் நட்புறவை வளர்த்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முனைந்தன. போரும், ஆயுதக்குவிப்பிற்குமான முக்கியத்துவம் குறைந்து நாடுகளிடையே நட்புறவும், பொருளாதார வர்த்தக உறவும் முக்கியத்துவம் பெற்றன.

குரூட்டுதனமாக சோவியத் பாணி பொருளாதாரத்தை நேரு தொடங்கினார் என்ற ஒரே காரணத்திற்கு விடாப்பிடியாக பற்றி வந்த காங்கிரஸ், நரசிம்மராவ் தலைமையில் அதனை 1991ல் மாற்றியது. பொருளாதாரம் தளர்த்தப்பட்டது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளிலும் 1991ல் சோவியத் யுனியன் சிதறுண்ட பிறகு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

பனிப்போர் காலத்தில் அணிசேரா நாடு என்ற முகமூடியை இந்தியா அணிந்திருந்தாலும் உண்மையில் சோவியத் யுனியனின் மிக நெருங்கிய நட்பு நாடாக தான் இந்தியா செயல்பட்டது. எனவே இயல்பாக பல நேரங்களில் அமெரிக்காவிற்கு எதிராகவும் சோவியத் யுனியனிற்கு ஆதரவாகவுமே இந்தியாவின் கொள்கைகள் அமைந்தன. இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட சமயத்தில் இலங்கை உலக இராணுவ மையத்தில் கேந்திர முக்கியத்துவம் உள்ள பகுதியாக விளங்கியது. தெற்காசியாவில் தன் இரணுவத்தை நிலை நிறுத்திக் கொள்ள அமெரிக்காவிற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. எங்கே இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைந்தால் தன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேருமோ என்று எண்ணி இந்தியப் படை அமைதி காக்கும் படையாக இலங்கையில் நுழைந்தது. அதன் பிற்கு நடந்தது ஒரு சோசகமான வரலாறு.

1991க்குப் பின் இந்தியா மிகவும் நம்பியிருந்த சோவியத் யுனியன் சிதறுண்டது, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. சோவியத் யுனியன் போதையில் மறந்து போய் இருந்த நாடுகளிடம் உறவை இந்தியா புதுபிக்கத் தொடங்கியது. அதே சமயத்தில் இந்தியாவின் அணு ஆயுத பலம் மற்றும் இரணுவ பலத்துடன் பொருளாதார பலமும் கைசேர பில் க்ளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது, இந்தியாவுடன் அமெரிக்காவின் உறவை வளர்க்கத் தொடங்கினார்.

இது தவிர அமெரிக்கா சீனாவை தனக்கு எதிர்கால போட்டியாக கருதுகிறது. சீனாவின் பலத்துடன் மோத வேண்டுமானால் ஆசியாவில் அதற்கு ஒரு நட்பு நாடு தேவைப்பட்டது. சீனாவுடன் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தில் ஆசியாவில் போட்டியிடக்கூடிய ஒரே நாடு இந்தியா தான். எனவே இந்தியாவுடன் பொருளாதார ரீதியில் மட்டுமில்லாமல் இராணுவ ரீதியிலும் தன் உறவை அமெரிக்கா வளர்த்துக் கொள்ள தொடங்கியிருக்கிறது. பல இராணுவ தளவாடங்கள், அணு ஆயுத ரீதியிலான ஒத்துழைப்பு, அணு ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகள் (Anti Nuclear Missile system) விற்பனை போன்ற எண்ணற்ற இராணுவ உதவிகளை இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் அமெரிக்கப் படைகள் தெற்காசியாவில் நுழைவதை தன்னுடைய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதி வந்த இந்தியா, இன்று அமெரிக்கப் படைகளுக்கு இந்தியாவிலேயே இடமளிக்க தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கப் படைகள் இந்தியப் படைகளுடன் ப்ல பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் இந்திய விமானப்படையும், அமெரிக்க விமானப்படையும் கூட்டதாக போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அமெரிக்கப் படைகள் இந்தியாவில் பயிற்சி அளித்தது தவிர இந்தியாவில் இருந்து ஒரு குழு அலாஸ்கா சென்று மேலும் பயிற்சிகளில் ஈடுபட்டது.


அமெரிக்க, இந்திய இராணுவ ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒரு நிலையை அடைந்திருக்கிறது. சீனாவின் வளர்ந்து வரும் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை எதிர்கொள்ள இந்தியாவை உற்ற நேச நாடாக அமெரிக்கா தற்பொழுது அங்கீகரித்திருக்கிறது. இதனால் தான் இரானுக்கு எதிராக International Atomic Energy Agency கூட்டத்தில் இந்தியா வாக்களித்தது. இந்தக் கூட்டத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் வாக்களிப்பில் பங்கு பெறாமல் நடுநிலை வகித்தன. கடந்த காலங்களில் ரஷ்யாவை சார்ந்தோ அல்லது நடுநிலை வகித்தோ செயல்பட்டுவந்த இந்தியா இம் முறை அமெரிக்காவின் உற்ற தோழனாக மாறி அமெரிக்கா சார்பு நிலையை எடுத்தது.

கடந்த சில ஆண்டுகளாக செய்திகளில் அதிகம் அடிபடாமல் இந்தியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளும் இரணுவ ஒத்துழைப்பு வியப்பை அளிக்கிறது. இந்தியா தவிர ஆசியாவின் பிற இடங்களில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மலாக்கா நீரிணையில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகள் கூட்டாக ரோந்து மற்றும் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. இப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இந்தியாவை சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டுள்ளது.



பனிப் போர் காலத்தில் இலங்கை விஷ்யத்தில் அதிக அக்கறை காட்டிய இந்தியா தற்பொழுது இப் பிரச்சனையில் தன்னை அதிகம் ஈடுபடுத்தி கொள்ளாமைக்கு முக்கிய காரணம், அமெரிக்காவால் தனக்கு இந்தப் பிராந்தியத்தில் அச்சம் இல்லை என்பது தான். தன்னுடைய நலனுக்கு பிரச்சனையில்லாத பொழுது இலங்கையின் உள்விவகாரத்தில் தேவையில்லாத தலையீட்டையும் இந்தியா விரும்பவில்லை.

1980களில் அமெரிக்காவுடனும், பிரிட்டனுடனும் இணைவதாக பூச்சாண்டிக் காட்டிய இலங்கை, தற்பொழுது அது பற்றியெல்லாம் பேசாமல், இந்தியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை வேண்டுவது கூட இந்தியாவை தன் சார்பாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான்.

இன்று அமெரிக்கா இலங்கையில் நுழைந்தால் கூட இந்தியா எதிர்ப்பு தெரிவிக்காது என்றே கருதப்படுகிறது (நான் மட்டும் சொல்ல வில்லை. ஆசியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் பற்றி ஒரு முறை கட்டுரை எழுதிய ஹிந்துவும் இதைத் தான் தெரிவிக்கிறது).

சுனாமிக்குப் பிறகு அமெரிக்கப் படைகள் முதன் முறையாக இலங்கை, மாலத்தீவு போன்ற தெற்காசிய நாடுகளில் நுழைந்த பொழுது இந்தியா அதனை வரவேற்கவே செய்தது. இந்தியாவிலேயே அமெரிக்க படைகள் இருக்கும் பொழுது, இலங்கையில் அமெரிக்கப் படைகள் நுழைவதால் என்னப் பிரச்சனை ஏற்படப் போகிறது ?

இவ்வாறான நிலையில் 1987ல் கூறப்பட்ட அதே உளுத்துப் போன வாதத்தை கூறி இந்தியா தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்க கூடாது என்று கூறுவது படு அயோக்கியத்தனமான நிலைப்பாடாக தான் நான் நினைக்கிறேன்.

அது போலவே ராஜீவ் காந்தியின் படுகொலை என்ற ஒரே கண்ணாடியை கொண்டு ஈழப் பிரச்சனையை அணுகுவதும் முறையானது அல்ல என்பது எனது கருத்து.

இந்தியாவில் நிகழ்ந்த சோகமான மூன்று படுகொலைகள் - மகாத்மா காந்தி, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் படுகொலைகள்

இந்திரா காந்தியை ஒரு சீக்கியர் கொன்றான் என்பதற்காக சீக்கிய இனத்தையே நாம் பலிவாங்கி விடவில்லை.

அது போல காந்தியை கொன்ற RSS இயக்கம் அதன் அரசியல் Proxy பா.ஜ.க மூலமாக இந்தியாவை ஆட்சி செய்து விட்டது. மகாத்மா காந்தியை படுகொலை செய்த சதியில் சம்மந்தப்பட்டவரான வீர்சர்வார்காரின் படம் இந்தியப் பாரளுமன்றத்தில் மகாத்மா காந்தியின் படத்திற்கு எதிராகவே ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஒரு இனத்தின் விடுதலை, அம் மக்களின் வாழ்க்கை என்ற நோக்கில் பிரச்சனையை அணுகவேண்டும்.

ஒரு நாட்டின் வரலாற்றிலோ, இயக்கத்தின் வரலாற்றிலோ மாற்றங்களும், பரிணாம வளர்ச்சிகளும் ஏற்படத்தான் செய்கின்றன. புலிகளின் வளர்ச்சியை நோக்கும் பொழுது கூட ஒரு சிறு கூட்டம், கொரில்லாப் படை, மரபு சார்ந்த படையாக வளர்ச்சிப் பெற்றது போன்ற நிலைகளை கடந்து இன்று ஒரு அரசியல், இராணுவ இயக்கமாக மாறியிருக்கிறார்கள். ஒரு தேசத்தின் உள்கட்டமைப்பை தனி அமைப்பாக இருந்து நிறுவி முன்னேறி இருக்கிறார்கள்.

காத்ரீனா போன்ற இயற்கை சீற்றங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளே சரியான நிவரணப் பணிகள் மேற்கொள்ளாமல் தாமதமாகத் தான் நிவாரணப் பணிகளை துவங்கியது. ஆனால் சுனாமிக்குப் பின் சில மணி நேரங்களில் புலிகள் மேற்க்கொண்ட நிவாரணப் பணிகளை உலக நாடுகள் கவனிக்க தவறவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை கொண்டே கொள்கைகளை ஒரே நோக்கில் வைத்திருக்க முடியாது. மாறிவரும் உலக நிலைக்கேற்ப கொள்கைகள் மாற்றம் பெற வேண்டும். இந்தியாவில் எண்ணற்ற குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி மனித உயிர்களையும், பொருளாதார சேதங்களையும் விளைவித்த பாக்கிஸ்தானுடன் கைகுலுக்க முடியும் என்றால் புலிகளிடமும் நிச்சயமாக கைகுலுக்க முடியும்.

கைகுலுக்க முடியாவிட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்காமல் இருக்கலாம். ஏனெனில் தமிழீழ மக்களிடம் மட்டுமே தமிழ்நாட்டு மக்கள் மூலமாக இந்தியாவிற்கு தொப்புள் கொடி உறவு இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்குமான பிரச்சனைகளாக சிண்டு முனையப் படும் மேலும் சில பிரச்சனைகள் பற்றியும், தமிழீழம் அமைவதால் இந்தியாவிற்கு என்ன நன்மைகள் ஏற்படும், பாதகம் ஏற்படும் வாய்ப்பு உண்டா என்பது பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் எழுதுகிறேன்

Leia Mais…
Tuesday, November 22, 2005

ஒரு தேசத்தின் சோகம்



இந்தப் படத்தில் இருக்கும் குழந்தைக்கு ஒரு சோகமான சரித்திரம் உள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட ஒரு மழலைக் கைதி இந்தக் குழந்தை தான். இன்று வரை இந்தக் குழந்தை (இன்றைக்கு இவர் இளைஞர்) வெளியுலகிற்கு காண்பிக்கப்படவில்லை. இதைச் செய்தது ஏதோ ஒரு சாதாரண நாடு அல்ல. மிகப் பெரிய வல்லரசு. அமெரிக்காவிற்கு சரிசமமாக போட்டியிடும் வல்லரசு.

அந்த சோக பூமியின் பெயர் திபெத். திபெத்தின் சுதந்திரம் பறி போக காரணமாக இருந்த வல்லரசு - சீனா

பல ஆயிரம் ஆண்டு கால பழமையான பாரம்பரிய வரலாறு உடைய சுதந்திர நாடான திபெத் 1950ம் ஆண்டு சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டது. சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்ற திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய்லாமா தான் சீனாவின் முதல் எதிரி

திபெத்தை சீனா ஆக்கிரமித்தது முதல் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்கள், எண்ணற்ற அவலங்களை அரங்கேற்றியது. திபெத் மக்கள் அகதிகளாக இந்தியாவிடமும், பிற நாடுகளிடமும் தஞ்சம் புகுந்தனர். 1959ம் ஆண்டு தலாய்லாமா திபெத்தில் இருந்து தப்பித்து இந்தியாவிடம் தஞ்சம் அடைந்தார். இந்தியாவில் உள்ள தர்மசாலா என்ற நகரத்தில் திபெத்திய அரசாங்கத்தை தொடங்கினார். ஆம்.. திபெத்தின் அரசாங்கம் (Government in exile), இந்தியாவில் இருந்து தான் செயல்படுகிறது.

திபெத்தின் புத்த மத வழக்கம்படி தலாய்லாமா தான் மதகுரு மற்றும் திபெத்திய ஆட்சித்தலைவர். அவர் காலத்திற்கு பிறகு தலாய்லாமா தேர்ந்தெடுக்கும் ஒருவர் மற்றொரு தலாய்லாமா ஆவார். இதற்கு பஞ்சன்லாமா என்று பெயர். இது பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கம். தற்போதைய தலாய்லாமா திபெத்தின் 14வது தலாய்லாமா ஆவார்.

10வது பஞ்சன்லாமா என்பவர் தற்போதைய தலாய்லாமாவிற்கு பிறகு 15வது தலாய்லாமாவாக பதவியேற்க வேண்டியவர். சீனாவால் கைது செய்யப்பட்ட இவர் சுமார் 8ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1989ம் ஆண்டு இவர் மறைந்தார்.

இதையடுத்து ஒரு புதிய பஞ்சன்லாமாவை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் தலாய்லாமாவிற்கு ஏற்பட்டது. இவர் தேர்ந்தெடுத்த 6வயது குழந்தை தான் இந்தப் படத்தில் காணப்படும் 11வது பஞ்சன்லாமா எனப்படும் நய்மா (Gedhun Choekyi Nyima). தற்போதைய தலாய்லாமா இவரை தனக்கு அடுத்து 15வது தலாய்லாமாவாக பதவியேற்க கூடியவராக 1995ம் ஆண்டு மே 15ல் அறிவித்தார் . இது தான் இந்தக் குழந்தையின் வாழ்க்கையில் சோகத்தை விளைவித்தது. இதற்கு அடுத்த இரு தினங்களில் மே 17ம் தேதி சீன அரசு இந்தக் குழந்தையை கைது செய்தது. 6வயதில் சிறையெடுக்கப்பட்ட மிக இளவயது அரசியல் கைதி இவர் தான்.

அதன் பிறகு இவர் வெளியுலகுக்கு கொண்டு வரப்படவேயில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இவர் எங்கிருக்கிறார், இவர் குடும்பம் எங்கிருக்கிறது போன்ற தகவல்களை சீனா வெளியிடவேயில்லை. கடந்த 2002ம் ஆண்டு இவர் நலமுடன் இருப்பதாக சீனா அறிவித்தது. ஆனால் மேல் விபரங்களை தெரிவிக்க வில்லை.

தலாய்லாமா அறிவித்த பஞ்சன்லாமாவிற்கு போட்டியாக சீனா மற்றொரு பஞ்சன்லாமாவை அறிவித்தது. ஆனால் இதனை திபெத் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.



11வது பஞ்சன்லாமா கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து விட்டதால், 2005ம் ஆண்டை பஞ்சன்லாமாவை விடுவிக்கும் ஆண்டாக திபெத் மக்கள் அனுசரிக்கின்றனர். பல போரட்டங்களையும் நடத்துகின்றனர். ஆனால் 2005 முடிவடையும் தருவாயில் கூட இது பற்றி சீனா கண்டுகொள்ளவேயில்லை.



திபெத்தின் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தனது முழு ஆதரவையும், திபெத் அரசாங்கம் இந்தியாவில் இருந்து செய்ல்படுவதற்கு அனுமதியும் அளித்த இந்தியா, தற்பொழுது சிறிது சிறிதாக சீனாவிடம் தன் நட்புறவை பேணும் பொருட்டு திபெத் விடுதலையையோ அல்லது சீனாவில் தீபெத்திற்கு சுயாட்சி வழங்குவது பற்றியோ அதிகம் பேசுவதில்லை.

இம் மாதம் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் புஷ் பெயரளவுக்கு சில கருத்துகளை தெரிவித்து விட்டு நழுவி விட்டார். அவரது சீனப் பயணத்திற்கு முந்தைய வாரத்தில் தலாய்லாமா, புஷ்யை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். எங்கே இந்தச் சந்திப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் சீனாவுடனான தன் உறவு பாதிக்கப்படுமோ என்று அஞ்சி அந்தச் சந்திப்பு பற்றிய செய்திகள் அதிகம் வெளியாகாமல் பார்த்து கொண்டார். சீனாவின் நாணயத்தில் மாற்றங்களை கொண்டு வர சீனாவிடம் கெஞ்சி விட்டு நாடு திரும்பியிருக்கிறார்.





கடந்த காலங்களில் திபெத்திய விவகாரத்தில் அதிக அக்கறை கொண்டிருந்த அமெரிக்கா, வளர்ந்து வரும் பொருளாதார உலகில் சீனாவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருப்பதால் இந்தப் பிரச்சனையில் இப்பொழுது மொளனம் சாதிக்க தொடங்கியிருக்கிறது.

உலகெங்கிலும் பல இடங்கில் நடந்து வரும் ஆக்கிமிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் பல நாடுகளின் அங்கீரம் பெற்றிருக்கும் திபெத்திற்கே அதன் எதிர்காலம் குறித்து ஒரு கேள்விக்குறியான நிலை தான் தற்பொழுது உள்ளது.

தற்போதைய தலாய்லாமா மரணமடையும் பட்சத்தில், பஞ்சன்லாமா பிரச்சனை பெரிய அளவில் மறுபடியும் விஸ்ரூபம் எடுக்கும்.

ஆனால் 6வயதில் கடத்தப்பட்டு இன்று வரை சீனாவின் பிடியில் இருக்கும் 11வது பஞ்சன்லாமா, திடீர் என்று வெளிவந்து திபெத் சீனாவிற்கு தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சீனாவின் பராமரிப்பில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வரும் அவர் மூளை சளவை செய்யப்பட்டிருக்கும் என்று தான் நான் நினைக்கிறேன்

Leia Mais…
Saturday, November 19, 2005

தேர்தலும், தமிழ் ஈழ அங்கீகாரமும்

விடுதலைப் புலிகளின் புண்ணியத்தால் சிங்கள தேசியவாதத்தை தேர்தலில் முன்னிறுத்திய மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருக்கிறார். இந்தச் சொற்றொடரை எழுதும் பொழுதே எனக்கு ஆச்சரியம் தான். விடுதலைப் புலிகள் ஏன் ஒரு சிங்கள இனவாத தலைவரை வெற்றி பெற வைக்க நினைக்கிறார்கள் ?

மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றியை அறிவித்த பல செய்தி நிறுவனங்களின் தலைப்பு செய்திகளைப் பார்த்தால் விடுதலைப் புலிகள் ஏன் இதனைச் செய்தார்கள் என்பது தெளிவாகும். Hardliner wins Sri Lanka election என்று BBC கூறுகிறது. CNN, சமாதானத்தை முன்னிறுத்தக் கூடிய ரனில் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவிக்கிறது. Economist மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றி சமாதானத்திற்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கிறது.



தற்பொழுது உலக நாடுகளின் மத்தியில் சமாதானத்திற்கு வேட்டு வைக்க கூடிய வில்லனாக மஹிந்த ராஜபக்ஷ தெரிகிறார். இதைத் தான் புலிகள் எதிர்பார்த்தனர். ஹிந்து தன் தலையங்கத்தில் கூறியிருப்பது போல சிங்கள இனவாதத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்துவது தான் விடுதலைப் புலிகளின் நோக்கம். இந்த நோக்கத்தில் புலிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர்

இந்த தேர்தலில் இருவருக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. ஒன்று சிங்கள இனவாத முழக்கத்திற்கு. மற்றொரு வெற்றி புலிகளுக்கு. தமிழர்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு மூலம் தங்கள் ஆதரவு எவ்வளவு முக்கியமானது என்பதை இலங்கையின் தெற்க்கில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தி இருக்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் நிலை பரிதாபமாகத் தான் தெரிகிறது. அவர் வெற்றி பெற்ற நேரத்தில் இலங்கையின் பங்குச்சந்தை சுமார் 7% வீழ்ச்சி அடைந்தது. இலங்கையில் வலது சாரி பொருளாதார சீர்திருத்தத்தை முன்னிறுத்தி தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர் ரனில். அவரது தோல்வி இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று அங்கு முதலீடு செய்ய முயலும் நிறுவனங்கள் நினைக்கின்றன. அது தவிர ராஜபக்ஷவின் தீவிர இடது சாரி நிலைப்பாடு, அவர் அணி சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் மார்க்ஸ்ட நிலைப்பாடு போன்றவை இலங்கையின் பொருளாதாரத்தையும் அங்கு இனி வர இருக்கும் முதலீடுகளையும் குறைக்கும். ஏற்கனவே இலங்கையின் பொருளாதார நிலை தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. கோட்டா முறை நீக்கப்பட்ட பிறகு இலங்கையின் ஜவுளித் துறை சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் ஜவுளி ஏற்றுமதியில் ஈடுகொடுக்க முடியாமால் திணறிக் கொண்டிருக்கிறது.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பலக் கட்ட திட்டத்தில் முதல் கட்டத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். கடந்த தேர்தல்களில் சந்திரிகா, ரனில் போன்றோர் சமாதானத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு உலக நாடுகளின் மத்தியில் தாங்கள் சமானத்தை அதிகம் விரும்புவதாகவும், விடுதலைப் புலிகள் மட்டுமே சமாதானத்தை எதிர்ப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர். தென்னிலங்கையில் இருக்கும் தீவிர சிங்கள, புத்த இனவாதம் அதிகம் வெளிக்கொணரப்படவில்லை. ஜே.வி.பி, புத்த பிக்குகள் போன்ற சில குழுக்கள் மட்டுமே சிங்கள இனவாத அமைப்புகளாக வெளிஉலகுக்கு தெரிந்தது. ஆனால் தற்பொழுது இலங்கையின் ஜனாதிபதியை சிங்கள தேசியவாத தலைவராக விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் தேர்தல் முடிவுகளில் தெரியும் ஒரு Polarized சமுதாயமும், இத்தகைய சமுதாயத்தில் சமாதானமோ, தங்களுக்கான உரிமையோ சரியாக கிடைக்காது என்று கூறி ஏற்கனவே அவர்கள் அமைத்து விட்ட தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் மத்தியில் அங்கீகாரம் கோருவது தான் விடுதலைப் புலிகளின் பல கட்ட திட்டங்களின் இறுதி நோக்கமாக தெரிகிறது. இதனை நோக்கியே அடுத்து வரும் நாட்கள் இருக்கும். சமாதானப் பேச்சு வார்த்தை என்பது தற்போதைய இலங்கை சூழலில் நடக்கும் என்று தோன்றவில்லை.

TamilNet இணையத்தளத்தில் இருக்கும் இரு செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன.

ஒன்று, தமிழ் ஈழப் பகுதியில் நுழைந்த இலங்கையின் காவல்துறையைச் சேர்ந்த மூன்று போலீசாருக்கு "தமிழ் ஈழ நீதி மன்றம்" ஜாமீன் வழங்க மறுத்துள்ள செய்தி. இந்த வழக்கு "தமிழ் ஈழ சட்டதிட்டங்களின்" கீழ் நடைபெறுவதாக TamilNet தெரிவிக்கிறது. இது ஏதோ பாக்கிஸ்தான் ஏஜெண்டுகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கைதாகும் செய்தி போல உள்ளது. தங்களின் எல்லையை புலிகள் அதிகம் கண்காணிப்பதாக TIME இதழும் கூறுகிறது. இலங்கை ஏற்கனவே இரண்டு துண்டுகளாக உள்ளதை இது உறுதிப்படுத்துகிறது.

மற்றொரு செய்தி "தமிழ் ஈழ தேசிய கீதத்தை" இயற்றுமாறு தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இம்மாதம் வர இருக்கும் மாவீரர் நாளில் இந்த கீதம், தமிழ் ஈழ தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் ஈழ தேசியக் கொடி, தேசிய மலர் போன்றவற்றை புலிகள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்திகள் கடந்த காலங்களில் அதிகமாக வெளிஉலகுக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக புலிகளின் தமிழ் ஈழ தேசிய உள்கட்டமைப்பு ஊடகங்கள் மூலமாக அதிகம் பேசப்படுகிறது. இலங்கையின் தேர்தல் பற்றி எழுதியுள்ள TIME இதழ் ராஜபக்ஷ கூறும் "ஒரே நாடு" என்ற பேச்சு புலிகள் ஏற்கனவே அமைத்து விட்ட ஒரு தனி தேசத்தை மறைக்கும் நோக்கில் பேசப்படும் பேச்சாக தெரிவிக்கிறது.

அதிக அளவில் கண்காணிக்கப்படும் எல்லைகள், நீதிமன்றங்கள், சிவில் நிர்வாக மையங்கள், காவல்துறை, தேசியக் கொடி, தேசிய கீதம் போன்றவற்றின் மூலம் புலிகள் ஏற்கனவே ஒரு தனி தேசத்தை உருவாக்கி விட்டதாக TIME இதழ் தெரிவிக்கிறது

புலிகள் தற்பொழுது கோருவதெல்லாம் தமிழ் ஈழத்திற்கான உலக நாடுகளின் அங்கீகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்த நோக்கத்தை நிறைவேற்றும் திட்டத்தின் முதல் படி தான் இந்த தேர்தல் புறக்கணிப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவியதன் முக்கிய நோக்கம்.

தமிழ்ச்செல்வன் TIME இதழுக்கு அளித்த பேட்டியிலும் அதனை உறுதிப்படுத்துகிறார்

TIME: It's plain if you look around L.T.T.E. territory that you have, in fact, built most of the facets of a separate state. You have borders, an army, police, courts, a civil administration, a flag. I even hear you're writing a national anthem. Do you think the debate in Colombo regarding Tamil separatism is historical—that they're arguing about something that's actually already happened?

T: It is historic. Colombo is behind on their history. What the Tamil people have established has all the hallmarks of a separate state. But this is nothing new. There was a distinct Tamil nation prior to the 16Th century. There was a Tamil nation here, with its own sovereignty and a rich heritage and culture. The people lost it, and now they are taking it back. About 60-70% of our homeland is liberated and nobody can prevent this process going further. This is reality. What Colombo says about a unitary nation is imagination. If Colombo refuses to accept this reality, Colombo has to pay for it one day. And the cost will be terribly high and the damage irreparable for them.

புலிகளின் தனி தேசத்தை உலக நாடுகள் தற்பொழுது நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு அங்கீகாரம் தருவார்களா ?
அது புலிகள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே உள்ளது.

லஷ்மன் கதிர்மாரின் படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் புலிகளின் இந்த நோக்கத்திற்கு தடை போடுவதாகவே அமைந்துள்ளது.

சிங்கள தேசியவாதத்தை வெளிப்படுத்தியும், சமாதானத்தை அதிகம் விரும்பும் குழுவாக தங்களை வெளிப்படுத்துவதும் தான் புலிகளுக்கு தற்பொழுது இருக்கும் சவால். அதனை நோக்கி தான் இரு குழுக்களும் நகரப் போகின்றன.

இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் இப்பொழுது உள்ள கேள்வி

Leia Mais…
Monday, September 26, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 4

சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும் என்ற வாதத்தை பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகம் பேசத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியே மறந்து போன சர்தார் பட்டேலின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் தான் புதுபிக்கத் தொடங்கினர். குறிப்பாக எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி போன்ற குஜராத் தலைவர்கள் தங்களை மற்றொரு சர்தார் பட்டேலாகவே உருவகப்படுத்திக் கொண்டனர்.

சர்தார் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியா முன்னேறி இருக்குமா ? இந்திய கிராமங்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றிருக்குமா ?

மேலும் படிக்க...

Leia Mais…
Sunday, September 25, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2

இந்திய ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் பற்றி நான் பெரிய அளவில் விளக்கம் தரத் தேவையில்லை. இந்தியப் பங்குச்சந்தை 16,000ஐ எட்டும் என்று செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை எந்தளவிற்கு விற்கும், அது போல பங்குச்சந்தையில் ஊழலா ? என்று கேள்விக்கணையுடன் செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை பரபரப்பாக விற்குமா என்று சிந்தனையில் தான் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.

எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.

கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.

இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?

இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.

ஏன் ? அது தான் Global liquidity

இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்

அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்


Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?

அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?

இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?

கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது

சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.

ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.

அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

Leia Mais…
Saturday, September 24, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1

பங்குச்சந்தையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது ? இந்தக் கேள்வி சில வாரங்களாக இந்திய ஊடகங்களில் அதிகமாக அலசப்படுகிறது. பலரும் பல யூகங்களை முன்வைக்கின்றனர். BSE பங்குச்சந்தைக் குறியீடு 10,000 புள்ளிகளை எட்டும், 16,000 எட்டி விடும் தூரம் தான் போன்ற பேச்சுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 8000 நோக்கி பங்குச்சந்தை சரியும் என்ற எண்ணம் பரவலாக தென்பட தொடங்கி இருக்கிறது.

மேலும் படிக்க

Leia Mais…
Monday, September 19, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 3


ஜோசப் ஸ்டாலின், சோவியத் யுனியனின் தலையெழுத்தை மட்டுமல்லாமல் உலகின் தலையெழுத்தையே மாற்றிய பெருமைக்குரிய சரித்திர நாயகன். ஸ்டாலினின் உண்மையான பெயர் ஜோசப் டிஜுகாஸ்வில்லி. சிறு வயது முதலே கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனினின் சத்தாந்தங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு பல புரட்சி இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றியவர். இதனால் 8 முறை கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் அடைக்கப்பட்டார். 7 முறை சிறையில் இருந்து தப்பித்து பல புனைப் பெயர்களில் புரட்சி இயக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் சூட்டிக் கொண்ட பல புனைப் பெயர்களில் ஒன்று தான் ஸ்டாலின். ஸ்டாலின் என்ற பெயருக்கு இரும்பைப் போன்றவன் என்று பொருள். தனக்கு ஏற்ற கம்பீரமான பெயர் இது தான் என்று ஸ்டாலின் முடிவு செய்தார். பின் அதுவே நிலைத்தும் விட்டது.

மேலும் படிக்க...

Leia Mais…
Monday, September 12, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 2

1917, இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். ஆம்..அந்த வருடம் தான் ரஷ்ய புரட்சி வெடித்து லெனின் தலைமையில் ஒரு கம்யுனிச நாடு உலகில் உதயமாகியது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்தக் கூடிய ஒரு அரசு அப்பொழுது தான் உலகில் முதன் முறையாக தோன்றியது. இந்த நிகழ்வு, வர்க்க பேதங்களை கலைந்து ஒரு சமத்துவமான சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

ரஷ்ய புரட்சியின் தாக்கம் அடுத்து வந்த ஆண்டுகளில் உலகின் பல நாடுகளை ஆட்டிப் படைத்தது. பல நாடுகளின் கொள்கைகளை மாற்றி எழுதியது. மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகள் தாங்கள் எழுச்சி பெற கார்ல் மார்க்ஸின் கம்யுனிசம் தான் ஒரே வழி என்று நினைத்தன. இந்தியாவிலும் அந்த எண்ணம் பரவலாக பெருகி இருந்தது.

மேலும் படிக்க...

Leia Mais…
Wednesday, September 07, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 1

1946, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நேரம். இது வரை நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தல்களை விட இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. சுதந்திர இந்தியாவின் "முதல் பிரதமர்" என்ற கவர்ச்சிகரமான பதவியையும் அவர் தான் அலங்கரிப்பார். பல ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டு, சீர்குலைந்திருந்த ஒரு நாட்டை திட்டமிட்டு எழுப்ப வேண்டிய முக்கியமான பொறுப்பிற்கான தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைந்தது.

எங்கும் நிறைந்திருந்த வறுமை, மதவெறி, கல்வியறிவின்மை போன்றவற்றை கலைந்து பொருளாதாரத்தை வளர்த்து நாட்டை வழி நடத்தக் கூடிய தலைவர் யார் ?

மேலும் படிக்க...

குறித்த நேரத்தில் தொடங்காமல் இரண்டு வாரங்கள் தாமதமாக இந்த தொடரை தொடங்குகிறேன்

Leia Mais…
Monday, August 15, 2005

பில்லியன் டாலர் கனவுகள்

என் அப்பா அடிக்கடி சொல்வார், "நாங்க சிறுக சிறுக சேமித்து, ஒவ்வொரு செலவையும் யோசித்து செய்வோம், நீங்களல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் சம்பளம் நிறைய வருதுன்னு ஏகப்பட்ட செலவுகளை செய்கிறீர்கள்" என்று. என் அப்பா வறுமை கோட்டின் கீழ் இருந்து தன்னுடைய உழைப்பால் முன்னேறியவர். செலவுகளை யோசித்து தான் செய்வார். அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை எனக்கும், எனது சகோதரனின் படிப்புச் செலவுக்கும், ஒரு வீட்டை கட்டுவதற்கும் செலவு செய்தார். இவை போக அவரிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கும்.

நான் நெய்வேலியில் பலரை பார்த்து இருக்கிறேன். என்.எல்.சி. நிர்வாகத்தில் வேலை செய்யும் வரை மிகுந்த வசதியுடன் இருப்பார்கள். ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெரும் பொழுது பெரிய சேமிப்புகளோ, வசதியோ இருக்காது. அரசுப் பணியில் நீண்ட காலம் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளமாக அப்பொழுதெல்லாம் 20,000 இருந்திருக்க கூடும். பல வருடங்கள் உழைத்து முன்னேறி அந்த சம்பளத்தை அடைய வேண்டும்.

ஒரு வீடு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணம் இவை தான் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தின் கனவு. மாதத்தில் ஒன்றோ, இரண்டோ சினிமா, கடற்கரை, சரவணபவனில் மாலை டிபன் இது தான் உல்லாசம். அதிக பட்ச சுற்றுலா, ஊட்டியோ, கொடைக்கானலோ, திருப்பதியோ தான்.

ஆனால் கடந்த சில வருடங்களில் பிரமாண்ட மாற்றம். அன்றைக்கு பல வருடங்கள் உழைத்து பெற்ற சம்பளம், இன்று கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுதே கிடைக்கிறது. ஆரம்ப வேலையிலேயே பல ஆயிரங்கள் சம்பளம். யோசித்து பல தடவை சிந்தித்து கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினர் இன்று வீட்டுக் கடன், கார் கடன், உல்லாசக் கடன் என்று பல கடன்களை யோசிக்காமால் வாங்கிக் குவிக்கின்றனர். நல்ல வசதியான வீடு, வார இறுதியில் பார்ட்டிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டின்னர்கள், வருடத்திற்கு ஒரு முறை சொகுசான சுற்றுலா என்று தடாலடி மாற்றம். அலமாரிகளிலும், அரிசிப் பானைகளிலும், வங்கிகளிலும் தேங்கிக் கிடந்த பணம் இன்று ஹோட்டல்களுக்கும், விமானங்களுக்கும் பாய்கிறது.

ஒரு தலைமுறை இடைவெளிக்குள் எப்படி இந்த திடீர் மாற்றம் ?

நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பொழுது இருந்த கார்களின் எண்ணிக்கையை விட தற்போதைய எண்ணிக்கையை ஒப்பிடும் பொழுது வியப்பாக இருக்கிறது. என் சென்னை அலுவலகத்தில் பைக்குகளின் எண்ணிக்கையுடன் கார்களின் எண்ணிக்கை போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 20 வருடங்களில் உலகில் அதிக எண்ணிக்கையில் கார்கள் இருக்கும் நாடு இந்தியாவகத் தான் இருக்க கூடும். உலக வரைபடத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும், ஜெர்மனியும், ரஷ்யாவும், ஜப்பானும் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இந்தியாவும் பெறும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் நிரந்திர உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உண்டு. உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நிரந்திர உறுப்பினராக வேண்டியது முக்கியம். அப்பொழுது தான் பாதுகாப்பு சபையில் சரியான பிரதிநிதித்துவம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவோ, அமெரிக்காவோ இந்தியாவிற்கு நிரந்திர இடத்தை கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்தன. ஆசியாவில் ஒரு சக்தியாக இந்தியா உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் யார் நினைத்தாலும் தடுக்க இயலாத, அணை போட முடியாத நிலையை நோக்கி இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது.

இன்று சீனாவும், அமெரிக்காவும் ஐ.நா. சபையில் நிரந்திர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ஆதரவு தெரிவித்துள்ளன. இவர்கள் நமக்கு ஆதரவாக மாறியது நமக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நம்மை சிறுமைபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் யாருடைய அங்கீகாரத்திற்கும் கையேந்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை. நம்முடைய பொருளாதார பலத்தை கண்டு நம்முடன் அவர்களது உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க முயலுகிறார்கள் என்பதே உண்மை.

இது அதீத கற்பனையோ !! மிதமிஞ்சிய கனவோ !! இந்த எண்ணம் எழத் தான் செய்கிறது.

ஏனெனில் சுதந்திரம் பெற்ற பொழுது அதளபாதாளத்தில் இருந்த, திட்டமிட்டு எழுப்ப வேண்டிய ஒரு நாட்டை பல ஆயிரம் ஆண்டு கால செழுமையான வரலாற்று போதையில், வரலாற்று புகழைப் பேசியே கோட்டை விட்டவர்கள் நாம். சுந்திரம் வாங்கும் பொழுது எங்கும் நிறைந்திருந்த வறுமையை போக்க திட்டம் தீட்ட வேண்டியவர்கள் "The Great Nation" என்று பழம் பெருமையை பேசிப் பேசியே கோட்டை விட்டனர்.

ஆனால் இன்று எங்கும் நம்பிக்கை ஒளி வீசுகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியர்கள் தான் தங்கள் நாடு பொருளாதாரத்தில் பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.

நானும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். அந்த நம்பிக்கையில் தான் இந்த தொடரையும் தொடங்குகிறேன். இந்தியாவின் பல நிறுவனங்களும், தனி நபர்களும் கனவு காண வேண்டும். பில்லியனர்களாக கனவு காண வேண்டும். இந்தியா பொருளாதார வல்லரசாக பல ஆயிரம் பில்லியன் டாலர் பொருளாதார பலத்தை எட்ட வேண்டும்.

கனவு மெய்ப்படுமா ? கனவு மெய்ப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா ?

இந்த சாத்தியங்கள் ஏன் இன்று தீடீர் என்று முளைத்துள்ளன ? சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் நாம் ஏன் தடுமாறிக் கொண்டிருந்தோம் ? யார் அதற்கு காரணம் ? நாம் செய்த தவறுகள் என்ன ?

இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம் என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவு தான் - "பில்லியன் டாலர் கனவுகள்"

இந்த தொடரை தமிழோவியத்தில் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறேன். இந்த தொடரை தமிழோவியத்தில் எழுத தூண்டிய நண்பர் கணேஷ் சந்திராவிற்கு எனது நன்றி.

Leia Mais…

காஷ்மீரின் விடுதலை - 6

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை. இந்தச் சாலைக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, ஷேக் அப்துல்லாவிற்கு ஆதரவு தெரிவிக்க, இந்த சாலை வழியாக பயணிக்கும் பொழுது தான் ஜவகர்லால் நேருவை காஷ்மீர் மன்னர் ஹரி சிங் கைது செய்தார்.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 பிரிவினனக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

அது போலவே பாக்கிஸ்தானின் காஷ்மீரில் இருக்கும் தங்கள் உறவினர்களை பார்க்க வேண்டுமானால் முதலில் பாஸ்போர்ட், விசா போன்றவை கிடைக்க வேண்டும். பின் தில்லிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தில்லி-லாகூர் பேருந்து மூலமாக லாகூர் சென்று, அங்கிருந்து ராவல்பிண்டி பின் முசாராபாத் என்று ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணம் 4 நாட்கள் நீடிக்கும். ஆனால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் தங்கள் உறவினர்களை பார்த்து விடலாம். நேரம், செலவு, விசா அலைச்சல் போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது.

உறவுகளை இணைப்பதுடன், வணிக வாய்ப்புகளும் பெருகுவதால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து போக்குவரத்து காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது,

இந்த பேருந்து போக்குவரத்தை இந்திய பிரதமர் வாஜ்பாய் தான் ஆக்ரா பேச்சுவார்த்தையின் பொழுது பாக்கிஸ்தானிடம் முன்வைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம் இரு காஷ்மீரிடையே பயணிக்க பாஸ்போர்ட், விசா போன்றவை தேவை. இதனால் இரு காஷ்மீருக்கு இடையே இருக்கும் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு - LOC சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் பாக்கிஸ்தானுக்கு இருந்தது. எனவே, இரு காஷ்மீரிடையே மக்கள் செல்வதற்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இருக்ககூடாது. மாறாக விசா, பாஸ்போர்ட் இல்லாத பர்மீட் (Permit) முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இதனை இந்தியாவால் ஏற்க முடியவில்லை. இந்த பிரச்சனையால் பல மாதங்கள் பேருந்து போக்குவரத்து நிலுவையில் இருந்தது.

பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல், பர்மீட் மூலமாக பயணம் செய்யலாம் என்ற பாக்கிஸ்தானின் வாதத்தை பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. அது போலவே இந்த பேருந்து மூலமாக காஷ்மீரிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தையும் பாக்கிஸ்தான் தளர்த்திக் கொண்டது.

இரு நாடுகளும் ஒரளவுக்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் போக்கினை கையாண்டதால் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அதிக ஆரவாரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் இதனை தொடங்கி வைத்தார்.



பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஸ்ரீநகரில் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த பேருந்து போக்குவரத்தை நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதிகள் அச்சுறுத்தினர்.



பாக்கிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாத மற்றும் ஜிகாத் அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், இந்திய இராணுவம் போன்றவை பேருந்து போக்குவரத்தை எதிர்த்தன.

இந்திய இராணுவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இருக்க கூடிய இடங்களில் மின்சார வேலிகளை அமைத்து இருந்தது. இதன் மூலம் தீவிரவாதிகளின் ஊடுறவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஸ்போர்ட் கூட இல்லாமல் இரு காஷ்மீருக்கு இடையே நடக்கும் போக்குவரத்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழையும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக இராணுவம் கருதியது.

பாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகள் இந்த பேருந்து போக்குவரத்து மூலம் காஷ்மீர் மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்தியா முயலுவதாக குற்றம் சாட்டின. தற்பொழுதுள்ள சூழலில் காஷ்மீரை பாக்கிஸ்தானுடன் இணைப்பது தான் முக்கியமானதே தவிர இத்தகைய போக்குவரத்து அல்ல என்று அந்த அமைப்புகள் நினைத்தன. அதனால் இந்த போக்குவரத்தை எதிர்த்தன.

ஆனால் சராசரி காஷ்மீர் மக்கள் இந்த பேருந்து போக்குவரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இது அவர்களின் நீண்ட நாள் கனவு. அவர்களுக்கு இந்த பிரச்சனையின் அரசியல் முக்கியமானதாக தெரியவில்லை.

சரி.. காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்தளவுக்கு பங்காற்றும் ?

உண்மையில் காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்த வகையிலும் தீர்வாகாது. காஷ்மீர் மக்களின் 58 ஆண்டு கால பிரச்சனைக்கு இது ஒரு இடைக்கால நிவாரணம் தான்.

ஆனால் இரு காஷ்மீரிடையே இருக்கும் எல்லைகள் திறக்கப்படும். 1947க்கு முன்பாக எவ்வாறு இரு காஷ்மீரிடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததோ அதே தொடர்பு உருவாக்கப்படும். Soft Borders எனப்படும் எளிதாக கடக்க கூடிய எல்லைகளுடன் இரு காஷ்மீரும், காஷ்மீர் மக்களும் இணைக்கப்படுவர்.

ஆனால் இந்த இணைப்பு எவ்வளவு நாட்கள் சாத்தியப்படும் ? திடீர் என்று இழுத்து மூடப்படக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலா போகும் ?

அப்படியெனில் என்ன தீர்வு உள்ளது இந்த பிரச்சனைக்கு ?

அடுத்தப் பதிவில்...

Leia Mais…
Tuesday, August 09, 2005

காஷ்மீரின் விடுதலை - 5

காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?


காஷ்மீருக்கு விடுதலை கொடுத்து விடலாமா ? என்னுடைய கையில் அதிகாரம் இருந்தால், காஷ்மீர் மக்களின் விருப்பமும் அதுவாக இருந்தால் நான் அதைத் தான் செய்வேன்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை.

இன்று காஷ்மீர் பிரச்சனை தேசத்தின் கொளரவ பிரச்சனை. காஷ்மீரை இழக்க இந்தியாவில் யாருமே விரும்பவில்லை. கூகிள் எர்த்தில் காஷ்மீர் இந்தியாவின் பெயரில் இல்லாமல் போனதற்கே உணர்ச்சிவசப்படுபவர்கள் நாம். தென் தமிழகத்திலேயே இந்த உணர்வு என்றால் குஜராத்திலோ, மும்பையிலோ, லக்னோவிலோ, ஜெய்பூரிலோ எழக்கூடிய பிரச்சனைகள், சங்பரிவார் கும்பலின் எதிர்ப்பு போன்றவற்றால் நாட்டில் ஒரு பிரளயமே ஏழக் கூடும்.

அது போல காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும் கொளரவப் பிரச்சனை. அவர்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் பிரச்சனை நம்வூர் இராமர் கோயில் பிரச்சனையை விட ஒரு படி அதிகமானது. மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அந்த உணர்வுகளை ஓட்டுக்களாக மாற்றுவதற்கு காஷ்மீர் பிரச்சனை அவர்களுக்கு உதவுகிறது, அங்குள்ள பல தீவிரவாத இயக்கங்களுக்கு ஜிகாத் வளர்ப்பதற்கும் இந்த பிரச்சனை அவசியம். காஷ்மீர் நிரந்தரமாக இந்தியாவுடன் இருக்க அவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். PAKISTAN என்ற எழுத்தில் உள்ள "K" தங்களுக்கு முழுமையாக சொந்தமாகும் வரை அவர்கள் மாறப் போவதில்லை.

பின் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?

இந்தியாவும், பாக்கிஸ்தானும் காஷ்மீரில் பல வருடங்களாக கடைபிடித்து வந்த கொள்கையில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணத்திற்கு தற்பொழுது வந்திருக்கின்றனர். பல வருடங்களாக சண்டையிட்டு கொண்டே இருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணத்திற்கு இரு நாடுகளுமே வந்துள்ளது ஆரோக்கியமானச் சூழல் தான்.

காஷ்மீரிகளும் 16 ஆண்டு கால நிம்மதியற்ற வாழ்க்கைக்கு பிறகு நிம்மதியுடனும் துப்பாக்கிச் சத்தம் இல்லாமலும் வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர். காஷ்மீர் பிரிவினைவாதிகளும் ஒரு தீர்வை கூடிய விரைவில் எட்ட வேண்டும் என்று எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். முழுமையான சுதந்திர காஷ்மீர் என்பது இன்றைய யதார்த்த சூழலில் வெறும் கனவாகத் தான் இருக்க முடியும்.

ஆனால் அனைத்து தரப்பிற்கும் திருப்தி தரக்கூடிய வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா ? மிகவும் சிக்கலான காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியுமா ?

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை - கில்கிட், முஷ்பராபாத். மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக், பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

ஆனால் இதனை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. காரணம் முஷ்ரப்பின் திட்டம் காஷ்மீரை மத ரீதியாக பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்று இந்தியா நினைத்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என மூன்று கூறுகளாகத் தான் அம் மாநிலத்தை இந்தியா கருதுகிறது. பூன்ச், கார்கில் போன்றவற்றை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை சார்ந்தது என்பதே இந்தியாவின் எண்ணம்.

ஆனால் முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கும் இப் பகுதிகளை தனிப் பகுதியாக முஷ்ரப் பிரித்தார். பாக்கிஸ்தான் அருகில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள முஷ்ரப் நினைப்பதாக இந்தியா சந்தேகித்தது.

முஷ்ரப் திட்டத்தை நிராகரித்த இந்தியா தன் பங்குக்கு ஒரு திட்டத்தை முன்வைத்தது. கடந்த ஆண்டு மன்மோகன் சிங் இதனை வெளியிட்டார். இதன்படி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா சுயாட்சி வழங்கும். வெளியுறவு, பாதுகாப்பு, தேர்தல், நாணயம், நீதிமன்றம் போன்ற துறைகள் மைய அரசிடம் இருக்கும். பிற அனைத்து துறைகளும் காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கும். இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்தாலும், பிற இந்திய மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீர் சுயாட்சியுடன் இருக்கும். அது போலவே பாக்கிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரிலும் பாக்கிஸ்தான் இது போன்ற ஏற்பட்டை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் தங்களுடைய பிடிவாதமான போக்கை ஒரளவுக்கு தளர்த்தி உள்ளது நல்ல அறிகுறி. அதே நேரத்தில் இறுதி தீர்வை உடனடியாக எட்டி விட முடியாது. இடைக்கால தீர்வாக சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

முதல் நடவடிக்கை பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.



காஷ்மீர் இரு துண்டுகளாகி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இவர்கள் வேண்டுவது எல்லாம், உறவுகளை சுலபமாக பார்க்க ஒரு இணைப்பு பாலம்.

அதன் முதல் படி தான் ஸ்ரீநகர்-முஷ்பராபாத் இடையிலேயான பேருந்து வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏதோ தில்லி-லாகூர் இடையே விடப்பட்ட பேருந்து பயணம் போல அரசியல் லாபத்திற்காக விடப்பட்ட போக்குவரத்து அல்ல.

இந்தியாவின் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும், பாக்கிஸ்தான் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும் இடையிலேயான பேருந்து போக்குவரத்து. காஷ்மீரிகள் சுலபமாக தங்கள் சொந்தங்களை பார்த்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம். இது தான் காஷ்மீர் பிரச்சனையின் தீர்வு நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் நடவடிக்கை.


இதில் வெற்றி கிட்டுமா ?

இந்த பேருந்தின் முதல் பயணமே தீவிரவாதிகள் இதற்கு எதிராக நடத்திய குண்டுவெடிப்புடன், பலத்த பாதுகாப்புடன் தான் தொடங்கியது

காஷ்மீரிகளின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்ற இந்த பேருந்து பயணத்தை தீவிரவாதிகள் ஏன் எதிர்க்கிறார்கள் ? எதிர்ப்பவர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளா அல்லது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதிகளா ?

அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்

Leia Mais…
Sunday, August 07, 2005

காஷ்மீரின் விடுதலை - 4



காஷ்மீர் தீவிரவாதப் பிரச்சனையின் இன்னொரு சோகம் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள். ஏராளமான இராணுவத்தினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கின்றனர். இது தவிர பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள், காவல்துறையினர் என கணக்கில் எடுத்தால் மக்கள் தொகைக்கு நிகரான அளவுக்கு இராணுவத்தினரும், காவல்துறையினரும் காஷ்மீரில் இருக்கின்றனர்.

பாக்கிஸ்தானின் ஆயுத உதவியுடன் தீவிரவாதிகளுக்கும் பஞ்சம் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் கிடைக்கவில்லையா ? ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை கூப்பிடு என்ற ரீதியில் தட்டுபாடு இல்லாமல் தீவிரவாதிகளும் காஷ்மீரில் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தினசரி வாழ்க்கையில் துப்பாக்கிச் சத்தம், சந்தேக கண்ணோடு பார்க்கும் இராணுவத்தினர், வீதியில் நடமாடினலே சோதனைகள் என்று தினமும் மக்களுக்கு இன்னல்கள்.



கடந்த 16 ஆண்டுகளாக நடக்கும் தீவிரவாதத்திற்கு சுமார் 75,000 பேர் பலியாகியிருக்கிறார்கள். இராணுவத்தின் கணக்கு படி சுமார் 18,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே அளவு இராணுவத்தினரும் பலியாகி இருக்கலாம். இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு இறந்து போன அப்பாவி மக்களின் உயிர்கள் எத்தனையோ ?

ஒரு காலத்தில் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீர் இன்று பிண பூமியாக மாறி விட்டது. அடக்குமுறைகள், இன்னல்கள் இவற்றுக்கிடையே வாழ வேண்டிய நிர்பந்தம் காஷ்மீர் மக்களுக்கு உள்ளது. நான் இங்கு காஷ்மீரிகள் என்று குறிப்பிடுவது முஸ்லீம்களை மட்டும் அல்ல, ஹிந்துக்களையும் தான்.

காஷ்மீரி ஹிந்துக்களான பண்டிட்கள் தீவிரவாத பிரச்சனை தொடங்கியதும் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்டனர். தீவிரவாதிகளின் முதல் இலக்கு இவர்கள் தான். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேண்டிய சோக நிலைக்கு பண்டிட்கள் தள்ளப்பட்டனர்.

தீவிரவாதிகள் ஹிந்துக்களை மட்டுமில்லாது தங்களுக்கு எதிர் கருத்துக்களையுடைய முஸ்லீம்களையும் கொன்று குவித்திருக்கின்றனர். தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவாளர்கள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்கு. இது தவிர ஹுரியத் இயக்கத்தை சேர்ந்த சில மிதவாத தலைவர்களையும் (அப்துல் கானி லோன்) தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அதிகம். நமக்கு அமைச்சர்களின் மகள் கடத்தப்பட்டது தான் செய்தியாக தெரியும். அது தவிர ஏராளமானானோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். பாக்கிஸ்தானின் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் இஸ்லாம் சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ஈவுஇரக்கமின்றி பலியிடப்பட்டிருக்கிறார்கள்.

இங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் கடத்தப்பட்டதால் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்து அதனை மட்டுமே நம்பி இருக்கும் பல பகுதிகளின் பொருளாதாரம் நசிந்து விட்டது.

இது தீவிரவாதிகளின் கோரமுகமென்றால் நம்முடைய இராணுவத்தினரும் இவர்களுக்கு சளைக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்,

காஷ்மீரில் சில இடங்களில் இரவு 10மணிக்கு மேல் விளக்கு ஏற்றப்படவே கூடாது என்ற இரணுவ சட்டம் இருக்கிறது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்களின் வீடுகளை எந்த நேரத்திலும் சோதனை செய்யும் அதிகாரம் இராணுவத்திற்கு உண்டு. சந்தேகத்தின் பெயரில் இராணுவத்தினர் இதனை செய்கின்றனர் என்றாலும் பல நேரங்களில் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறு சந்தேகம் அவர்கள் மேல் எழுந்தாலும் அவர்கள் நிலைமை பரிதாபம் தான்.

காஷ்மீரின் ஒவ்வொரு இளைஞனும் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கப்படுகிறான். பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட பலரின் நிலை பற்றி எந்த தகவலும் இல்லை. சிலரின் சடலம் மட்டும் எங்காவது வீசி எறியப்பட்டிருக்கும். விசாரணைக்கு கொண்டு செல்லப்படும் பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பலர் இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு பலிகடா ஆகியிருக்கிறார்கள்

இந்திய சார்புடைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மகள் மெகபூமா முப்தி கூட இராணுவத்தினர் ஒவ்வொரு காஷ்மீரி இளைஞரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது குறித்து தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.

இந்திய இராணுவத்தினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும் இது குறித்து எந்த ஊடகங்களும் எழுதுவதில்லை. பல செய்திகள் மறைக்கப்படுகிறன.

காஷ்மீரில் Armed Forces (Special Powers) Act, 1958 என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது தடா சட்டம் போல எந்த வித விசாரணையும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும், எந்த இடத்தையும் சோதனை செய்யவும், இராணுவத்தின் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரி கூட துப்பாக்கி சூடு நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பல நேரங்களில் இராணுவத்தினர் முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றனர்.
இந்த சட்டம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தாலும் இதனை முழுமையாக விலக்க இயலவில்லை.

இராணுவத்தினருக்கு மனித உரிமை குறித்து உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. தவறு செய்யும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு செய்த இராணுவத்தினர் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இரணுவத்தினரின் பல செயல்கள் காஷ்மீர் மக்களை இந்தியாவிடம் இருந்து இன்னும் அதிக அளவு அந்நியப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.

அம்னஸ்டி முதல் பல மனித உரிமை இயக்கங்கள் காஷ்மீரில் நடக்கும் நிலை குறித்து வெளிப்படையாக தங்கள் கவலையை தெரிவித்து இருக்கின்றன. ஆனால் இன்று வரை பெரிய முன்னேற்றம் இல்லை.

காஷ்மீரிகளின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

படங்கள் : FRIENDS OF KASHMIR

Leia Mais…
Saturday, August 06, 2005

காஷ்மீரின் விடுதலை - 3

PAKISTAN என்ற வார்த்தையில் இருக்கும் "K" காஷ்மீரையே குறிப்பதாக ஜின்னா கூறினார். காஷ்மீர், முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசமாக இருப்பதால் பாக்கிஸ்தானிடம் இயல்பாக சேர்ந்து விடும் என்றும் நம்பினார். ஆனால் காஷ்மீர் முஸ்லீம்களுக்கும், பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய கோயிலுக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த கோயிலுக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், காஷ்மீர் கலாச்சாரம் என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

காஷ்மீர் மக்கள் மென்மையானவர்கள். சாதுவானவர்கள். நேரு கூட காஷ்மீர் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அப்படித் தான் கூறினார். ஆனால் சாது மிரண்டால் - அதன் எதிரொலி தான் 1989ல் வெடித்த காஷ்மீர் தீவிரவாதம்.

காஷ்மீரில் போராடுபவர்கள் அனைவரையும் பாக்கிஸ்தானின் கூலியாட்கள் என்று கூறுவதில் இந்தியாவிற்கு பெரும் வசதி இருக்கிறது. காஷ்மீர் மக்களின் உண்மை நிலை மூடிமறைக்கப்பட்டு விடும். அப்படித் தான் காஷ்மீர் மக்களின் நிலையும் மாறி விட்டது. இரு பெரு நாடுகளிடையே சிக்கிக் கொண்டு தன் அடையாளத்தை இழக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.
காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது.
பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை எதிர்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

தாத்தா நேரு பிள்ளையார் சுழி போட்ட பிரச்சனையை பேரன் ராஜீவ் காந்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி விட்டார். ஒரு குடும்பம் காஷ்மீரிகளின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாகி விட்டது.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது.
அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.
மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற முரட்டுதனமான முஸ்லீம் பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிர்ச்சனை முஸ்லீம் பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.


இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

Leia Mais…
Wednesday, July 27, 2005

இந்தியா-பாக்கிஸ்தான் பொருளாதார உறவு

பத்ரியின் பதிவுக்கு பதிலளிக்க தொடங்கி, பதில் பெரிதாகி விட்டதால் தனிப் பதிவாக பதிவு செய்கிறேன்.

இந்தியா, பாக்கிஸ்தான் இடையிலேயான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்ட பிறகு தான் பொருளாதார ரீதியான உடன்படிக்கைகளை செய்து கொள்ள வேண்டுமென்றால் அது இந்த நூற்றாண்டில் நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.

மாறாக அண்டை நாடுகளுக்கு இடையிலேயான பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் எல்லைப் பிரச்சனைகள் முதற்கொண்டு பிற பிரச்சனைகளை முழுவதுமாக தீர்த்துக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சுமூகமான சூழ்நிலையினை உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியா பாக்கிஸ்தான் இரான் இடையிலேயான பைப்லைன் திட்டம் முதல் பல்வேறு பொருளாதார உறவுகளை பாக்கிஸ்தானுடன் வளர்த்துக் கொள்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.

இந்தியா சீனா இடையிலேயான உறவில் ஏற்பட்ட மாற்றமும், அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவில் ஏற்பட்ட மாற்றமும் பொருளாதார காரணங்களால் தான் ஏற்பட்டது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தியாவுடன் சிக்கிம் இணைந்ததை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டிருந்த சீனா கடந்த ஆண்டு திடீரென்று தன் முடிவினை மாற்றிக் கொண்டதையும், இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த சீனா திடீரென்று அதனை ஆதரிக்க தொடங்கியதையும் பார்க்கும் பொழுது இன்று உலகம் ஒரு இணக்கமான பொருளாதார சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இந்த பைப்லைன் திட்டம் பாக்கிஸ்தான் வழியாக வருவதால் இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியா பாக்கிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும். தனக்கு ஒரு செலவும் இல்லாமல் வரும் பல மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தான் இழக்க விரும்பாது. எனவே பைப்லைனுக்கு பாதகம் வரும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது போல இந்த பைப்லைன் ஆப்கானிஸ்தான் வழியாக வருவதாக எனக்கு தெரியவில்லை. இரானில் இருந்து பாக்கிஸ்தான் வழியாகத் தான் இந்தியாவிற்கு வருகிறது.

தீவிரவாதிகளால் இந்த திட்டத்திற்கு ஆபத்து வரும் என்றால் அது எந்த நிலையில் இருந்தாலும் வரும். கடல் மூலம் பைப்லைன் கொண்டு வந்தாலும் வரும், மலையைக் குடைந்து கொண்டு வந்தாலும் வரும். அவ்வாறு இருக்கையில் பாக்கிஸ்தான் மூலம் வருவதால் மட்டுமே ஆபத்து இருக்கிறது என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தீவிரவாதிகளால் ஆபத்து வரும் என்று அஞ்சினால் ஒரு உருப்படியான திட்டத்தையும் கொண்டு வர முடியாது

கடந்த மார்ச் மாதம் காண்டலிசா ரைஸ் இந்தியாவிற்கு வந்த பொழுது இந்தியாவின் மாற்று எரிவாயு தேவைகளை கவனிப்பதாகவும் அமெரிக்கா அதற்கு உதவும் என்றும் தெரிவித்திருந்தார். அது பற்றி அப்பொழுது நான் எழுதிய பதிவு.

http://thamizhsasi.blogspot.com/2005/03/blog-post.html

அமெரிக்காவின் உதவிக்கு விலையாக அவர் கேட்டது இரான் - பாக்கிஸ்தான் - இந்தியா இடையிலேயான பைப்லைன் திட்டத்தை கைவிடுவது.


இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் சூழ்நிலையில் நமது எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகளும் பெருகி கொண்டு வருகிறது. தற்பொழுது கச்சா எண்ணெய் நிலையான விலையில் இல்லாமல் மாறிக் கொண்டே இருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சியை குறைக்கும். இதற்கான தீர்வு, நமது தேவைக்கான எண்ணெய்யை விலை குறைவாக இருக்கும் காலத்தில் சேகரித்துக் கொள்வது - Inventory, மாற்று எரிசக்திகளை வளர்த்துக் கொள்வது போன்றவை. இந்தியா ஒரு தொலைநோக்குடன் இந்த திட்டத்தை அணுக வேண்டும்.

இரான் - பாக்கிஸ்தான் இடையிலேயான பைப்லைன் திட்டமானாலும் சரி அல்லது அமெரிக்காவுடனான அணுசக்தி திட்டமானலும் சரி நம்முடைய தேவையை எதிர்காலத்தில் பூர்த்தி செய்யும் திட்டத்தில் நாம் நம்மை இணைத்துக் கொள்வது முக்கியமானது.

பாக்கிஸ்தான் ஒரு Rogue State என்ற மனப்பான்மையை நாம் மாற்றிக் கொள்வதும் முக்கியம். தெற்காசிய பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அது மிக முக்கியமானது. பாக்கிஸ்தான் தனது பொருளாதாரத்தை தற்பொழுது தாராளமயமாக்கி இருக்கிறது. ஆனால் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் செயலாற்றுவதற்கு இன்னமும் தடை இருக்கிறது. பாக்கிஸ்தானுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் இந்திய நிறுவனங்கள் பாக்கிஸ்தானில் முதலீடு செய்வதும், இந்திய பொருட்களை பாக்கிஸ்தான் சந்தையில் விற்பதும் அதிகரிக்கும். இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் அது முக்கிய பங்காற்றும்.

பொருளாதார ரீதியாக Mutual Interdependece அதிகரிக்கும் பொழுது பிற பிரச்சனைகள் தீர்க்கப்படவும், சமாதானம் பெருகவும் சாத்தியக் கூறுகள் நிறைய உண்டு.

Leia Mais…