வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Saturday, February 04, 2017

மார்க் சக்கர்பர்க், டிரம்ப், நீயா நானா கோபிநாத்

நியூஜெர்சி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் டிவி நீயா, நானா கோபிநாத் கலந்து கொண்டார். சமூக ஊடகங்கள் வரமா, சாபமா என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கமான நீயா நானா பாணியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சமூக ஊடகத்தளமான முகநூலின் வலிமையைக் கொண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பை, மார்க் சக்கர்பர்க் ஆளுமை செய்ய நினைக்கிறார் என்ற கோபிநாத்தின் கருத்து சூடான விவாதத்தை ஏற்படுத்தியது.

டிரம்ப் சில இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடைவிதித்துள்ளார். அகதிகளின் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நாடுகளில் உள்ள போர்ச்சூழலில் அங்கிருந்து தப்பித்துப் பல நாடுகளுக்கும் குடியேறி வருவபவர்களை எந்த வித மனிதாபிமானமும் இல்லாமல் அமெரிக்காவிற்கு வரக்கூடாது என்று டிரம்ப் விதித்துள்ள நாசித்தனமான உத்தரவு அமெரிக்காவெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எதிர்த்து பலரும் பேசி வருகிறார்கள். அரசியல்வாதிகள் தொடங்கி, திரைப்பட நடிகர்கள், தனியார் நிறுவனங்களின் சி.இ.ஓக்கள் எனப் பலரும் இந்தத் தடையை எதிர்த்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில் மார்க் சக்கர்பர்க் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டிரம்ப்பின் இந்தத் தடையை எதிர்த்து எழுதியிருக்கிறார். தன்னுடைய மூதாதையர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அமெரிக்காவே பல நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நாடு தான் என்ற கருத்தை தான் மார்க் சக்கர்பர்க் முன்வைத்துள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சியில் முகநூலை இலவசமாக வழங்கி விட்டு அதனை வைத்து லாபம் சம்பாதிக்கிறார்கள் என்ற கருத்து வந்த பொழுது நடந்த விவாதத்தில் முகநூலின் வலிமையைக் கொண்டு டிரம்ப்பை ஆளுமை செய்ய மார்க் சக்கர்பர்க் முயல்கிறார் என்ற கருத்தினைக் கோபிநாத் முன்வைத்தார். இதனை மேடையில் இருந்த சிலர் மறுத்துப் பேசினார்கள். மறுத்துப் பேசியவர்கள் தங்கள் கருத்தை இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பது ஒரு புறம் இருக்க, உங்களுக்கு வெள்ளைக்காரர்களைச் சொன்னால் புரியாது. அம்பானியும், அதானியும் இந்திய அரசை கட்டுப்படுத்துகிறார்களா, இல்லையா என்ற கேள்வியைக் கோபிநாத் முன்வைத்தார். மேடையில் இருந்தவர்கள். ஆமாம் என்றார்கள். அம்பானி, அதானியை ஒப்புக் கொள்கிறீர்கள், மார்க் சக்கர்பர்க்கை ஒப்புக் கொள்ளமாட்டீர்களா என்று கேட்டார். மறுபடியும் விவாதம் தொடர்ந்தது.

மார்க் சக்கர்பர்க் எதற்காக இதனைச் சொல்கிறார் எனப் பலரும் விளக்க, கோபிநாத் தான் சொல்வது தான் சரி என்ற பாணியில் விவாதத்தை முடித்துக் கொண்டார். அதற்கு மேல் விவாதத்தைத் தொடர விட வில்லை. நான் சொல்வதன் பின் உள்ள அரசியல் இப்பொழுது உங்களுக்குப் புரியாது. இன்னும் ஒரு வருடம் கழித்துப் புரியும் என்று ஜோதிடம் கூறி முடித்துக் கொண்டார்.

******

பொதுவாகத் தமிழகப் பிரபலங்கள், எழுத்தாளர்களுக்கு அமெரிக்கச் சூழ்நிலைப் பற்றிப் புரியாது. அமெரிக்காவைப் பற்றித் தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு எல்லாவற்றையும் தட்டையாகப் பார்ப்பார்கள். சமீபத்தில் கூட எழுத்தாளர் ஜெயமோகன் முதலாளித்துவம் குறித்து உளறி இருந்தார். (அது குறித்து நான் எழுதிய பதிவு - http://blog.tamilsasi.com/2016/11/blog-post.html)

அமெரிக்கத் தனியார் நிறுவனங்கள் உலகெங்கும் தங்கள் ஆளுமையைச் செலுத்தி வருகின்றன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அமெரிக்க அரசாங்கத்தையும், அமெரிக்கக் காங்கிரசையும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதில் உண்மை உள்ளது. அது போலவே விசா விசயத்தில் பல தனியார் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்தை லாபி செய்து வருகின்றன. தங்கள் நிறுவனங்களையே வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று விடுவோம் என்று கூறிய உதாரணங்களும் உண்டு. மார்க் சக்கர்பர்க் இந்தியாவில் இணைய இணைப்பை இலவசமாக வழங்கி மொத்த இணையத்தையும் கைப்பற்ற நினைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். இது போன்ற பலக் குற்றச்சாட்டுகளில் எனக்கு உடன்பாடு உண்டு.

ஆனால் முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் முக்கியமான தருணங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்ற வரலாறும் உண்டு. தனியார் நிறுவனங்கள் என்னும் பொழுது வியபாரம் முக்கிய நோக்கம் தான் என்றாலும் அந்த வியாபர நோக்கம் சில முக்கியமான சமயங்களில் அமெரிக்காவை சரியான பாதைக்குக் கொண்டு செல்ல வழிவகுத்துள்ளது. கறுப்பர்களின் உரிமை, பெண்ணுரிமை, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமை போன்றவற்றில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குக் கொண்டு சென்றதில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மார்க் சக்கர்பர்க்கின் சமீபத்தையப் பதிவை கூட அப்படித் தான் பார்க்க வேண்டும். அது அமெரிக்காவில் வாழ்பவர்களுக்குப் புரியக்கூடிய சாதாரண உண்மை. அதை அம்பானி இந்திய அரசைக் கட்டுப்படுத்த முனையும் கோணத்தில் பார்ப்பது சரியானது அல்ல. டிரம்ப் விவகாரத்தில் மார்க் சக்கர்பர்க் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. டிரம்ப்பை எல்லாம் கட்டுப்படுத்த முடியுமா என்ன ?

கடந்த காலங்களில் அமெரிக்காவை முற்போக்குப் பாதைக்குத் தள்ளியதில் பல தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது. இது குறித்த சில தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பகிறேன்.

அமெரிக்காவின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று 8 மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறை. இதற்காகப் பல தொழிற்ச்சங்கங்கள் பல காலங்கள் போராடி வந்தன. 1914ல் போர்ட் நிறுவனம் 8மணி நேரம், வாரம் 5 நாள் வேலை முறையைக் கொண்டு வந்தது. இதன் காரணமாகப் பல நிறுவனங்கள் இதனைப் பின்பற்றும் சூழல் ஏற்பட்டது. அமெரிக்காவில் இன்றுள்ள வார இறுதி நடைமுறையைக் கொண்டு வந்ததில் போர்ட் நிறுவனத்திற்கும் பங்கு உள்ளது.

பெப்சி-கோக் வணிகப் போட்டி உலகப் புகழ் பெற்றது. அந்தப் போட்டி கறுப்பர்களின் உரிமைப் போராட்டத்தில் எதிரொலித்தது. கோக் வெள்ளையர்களின் குடிபானமாக இருந்த நேரத்தில் பெப்சி கறுப்பர்களின் பானமாக இருந்தது. இதற்குப் பின் ஒரு வரலாறு உண்டு. பெப்சியின் மார்க்கட்டிங் துறையில் பணியாற்றிய பாய்டு ஒரு கறுப்பர். கறுப்பர்களிடையே பெப்சியைக் கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகித்தவர். கறுப்பர்களுக்கான விளம்பரங்கள் ஒரு விதமான clicheவாக இருந்தக் காலக்கட்டத்தில் கறுப்பர்களும் மனிதர்கள் தான் என்பதை மற்றவர்களுக்குப் புரியவைக்கும் வகையில் விளம்பரங்களை வடிவமைத்தார். இது அக்காலக்கட்டத்தில் மிகப் பெரிய புரட்சி. பெப்சியின் விளம்பரம் வெள்ளையினவாத இயக்கங்களான KKK போன்ற இயக்கங்களின் எதிர்ப்பைப் பெற்றது. ஆனால் பெப்சி கறுப்பர்களின் மிகப் பெரிய ஆதரவினைப் பெற்றது. தன் வியபாரத்தைப் பெருக்கவே பெப்சி கறுப்பர்களைச் சார்ந்து தன்னுடைய சந்தையை விரிவாக்கியது. ஆனால் கோக் வெள்ளையர்களின் பானமாக இருந்த காலக்கட்டத்தில் தங்களுடைய பானமாகப் பெப்சியைக் கறுப்பர்கள் ஆதரித்தனர். இந்த அரசியலை அந்தக் காலக்கட்டத்துச் சூழ்நிலையில் இருந்து பார்க்கும் பொழுது தான் நமக்குப் புரியும். (இது குறித்த ஒரு விரிவான புத்தகம் - The Real Pepsi Challenge: The Inspirational Story of Breaking the Color Barriers - by Stephanie Capparell)

இது போன்ற பல உதாரணங்களைக் கொடுக்க முடியும். இப்பொழுது கூடக் கூகுல், பேஸ்புக் தவிர வேறு பல தனியார் நிறுவனங்களும் டிரம்ப்பின் இனவாத நடவடிக்கையை எதிர்க்க தொடங்கியிருக்கின்றன.

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. வியபாரம் மூலமாகவே பல முற்போக்குக் கருத்துக்களைச் சமூகத்தில் கொண்டு வந்த நெடிய வரலாறு இந்நாட்டில் உண்டு. அதனை இந்த நாட்டில் வாழும் நண்பர்களுடன் திறந்த மனதுடன் கலந்துரையாடி பெற முயலலாம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பதாலேயே தனக்கு எல்லாமும் தெரியும் என நினைப்பது அறிவுஜீவித்தனம் அல்ல.

Leia Mais…