வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, December 30, 2004

சுனாமி : பொருளாதார பாதிப்புகள்

பல்லாயிரம் பேரின் உயிரைப் பலி கொண்ட சுனாமி, ஆசியாவில் சுமார் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளின் சுற்றுலாத் துறைக்கு கடும் சேதத்தை விளைவித்து விட்டது. இலங்கை, மாலத்தீவுகள் போன்ற நாடுகளின் பொருளாதாரம் சுனாமியால், வரும் நாட்களில் கடும் சோதனைகளை எதிர் கொள்ளும். ஆனால் இந்தியாவிற்கு பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று தான் பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர்களுக்குப் பிறகு, விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட போர் நிறுத்தத்திற்குப் பிறகு தான் இலங்கைப் பொருளாதாரம் முன்னேறத் தொடங்கியது. சமீப காலங்களில் தான் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இலங்கைக்கு வரத் தொடங்கியிருந்தனர். இனி அவர்களது வரவு குறைந்துப் போகக் கூடும். சுற்றுலாத் துறையை பெரிது நம்பி இருக்கும் இலங்கைக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். சுற்றுலாத் தளங்களான கடற்கரை ரிசார்டுகள், சின்னாபின்னமாகி விட்ட சாலைகள், ரயில் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்றவை சரி செய்யப்பட ஏராளமான நிதி, கால அவகாசம் தேவைப்படுகிறது. சுனாமி, இலங்கைப் பொருளாதார வளர்ச்சியை சில வருடங்கள் பின்நேக்கி தள்ளக் கூடும்.

இலங்கையின் மற்றொரு முக்கிய ஏற்றுமதி தொழில், ஜவுளி. 2005ம் ஆண்டில் இருந்து ஜவுளித் துறையில் கோட்டா முறை விலக்கப்படுகிறது. ஜவுளித் துறையில் வளர்ச்சி அடைந்து விட்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கடும் ஏற்றுமதி போட்டியை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இலங்கைப் பொருளாதாரத்திற்கு விடுக்கப்பட்ட இந்த சவால் போதாதென்று இப்பொழுது சுனாமி வேறு சேதம் விளைவித்து விட்டது.

சுற்றுலாத் துறையை நம்பியிருக்கும் மற்றொரு நாடான மாலத் தீவிலும் இதே நிலைமை தான். மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சியே சுற்றுலாத் துறையை நம்பி தான் உள்ளது. அந் நாட்டிற்கு கிடைக்கும் அந்நியசெலவாணியில் அரைப் பங்கு சுற்றுலாப் பயணிகள் மூலம் தான் வருகிறது. சுனாமி அந் நாட்டு பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரை சுனமியால் சுமார் 5000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழில், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்றவை அதிகம் பாதிப்புக்குள்ளாகும். வெளிநாட்டுக்கு அதிகம் ஏற்மதியாகும் இறால், மற்றும் மீனவர் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சுமாராக 2000 கோடி இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது. சமீப காலங்களில் தான் கப்பல் போக்குவரத்து, ஹோட்டல் தொழில் சூடு பிடிக்கத் தொடங்கியிருந்தது. சுனாமி அனைத்தையும் சிதைத்து விட்டது. இன்று கூட பங்குச் சந்தையில் ஹோட்டல்
பங்குகள், கப்பல் நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவுற்றுள்ளது. ஆனால் இந்தத் துறைகள் எல்லாம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவை அல்ல. அதனால் இந்திய பொருளாதாரம் இந்த இழப்புகளை தாங்கிக் கொள்ளும். சில மாதங்களில் இந் நிலைமை சரியாகிவிடும் என்றே எதிர்பர்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக புனர்வாழ்வு அமைத்து தருவது தான் தற்போதைய பெரிய சவால். தற்போதைய நிலவரப் படி சுமார் இரண்டாயிரம் கோடி இதற்காகத் தேவைப்படும். வருமான வரியில் கல்விக்காக விதிக்கப்படும் செஸ் (cess) வரிப் போல நிவாரணப் பணிக்காக 1% செஸ் வரி விதிக்கப் படும் சாத்தியக் கூறுகள்
உள்ளது. இதன் மூலம் சுமார் 1400 கோடியை திரட்ட முடியும். இது மட்டுமின்றி பல நிறுவனங்களும், மக்களும் பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து கொண்டே இருக்கின்றனர். இதிலும் கணிசமாக நிதி திரட்ட முடியும்.

இந்தியா, குஜராத் போன்ற பூகம்ப காலங்களில் எப்படி வெளிநாட்டு உதவி தேவையில்லை என்று கூறி வந்ததோ அது போலவே இம்முறையும் வெளிநாட்டினரின் உதவி தேவையில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டது. இந்தியாவால் இந்த இழப்பை தாங்கிக் கொள்ள முடியும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இன்று மறுபடியும் தெரிவித்தார். நம் தேவையை நாமே கவனித்து கொள்கிற அதே நேரத்தில் இலங்கைக்கு ஏராளமான உதவியை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. சுமார் 100 கோடி இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது (நமக்கு இதைக் கேட்டால் வேதனை தான் ஏற்படுகிறது. நம்முடைய வரிப்பணம் இலங்கையில் உள்ள நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு உதவாமல் யாருக்கோ போகிறது )

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுலப கடன் திட்டமும், ஏற்கனவே கடன் வாங்கியுள்ளவர்களுக்கு கடன் காலத்தை நீட்டிக்கவும், காப்பீடு செய்தவர்களுக்கு காலதாமதம் செய்யாமல் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொழில் சார்ந்த கட்டுமானங்களான கடலில் இருந்த ONGC யின் எண்ணெய் கிணறுகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் சென்னைக்கு வந்த கப்பலின் கண்டெய்னரில் இருந்த 1200 ஹுண்டாய் கார்களில் நீர்
புகுந்துள்ளது. பிரேசிலில் இருந்த வந்த சக்கரையும் கடல் கொந்தளிப்பால் கரைந்துப் போனதில் சில கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும். 4 கப்பல்கள் சுனாமியில் சேதமானதில் கப்பல் துறைக்கு சுமார் 200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

Leia Mais…
Wednesday, December 29, 2004

இலங்கை மக்கள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லோரையும் விட மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு இலங்கை மக்களுக்கு நம்மாளான உதவிகளை மேற்கொள்ள முனைய வேண்டும். தமிழகத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் பல உதவிகளை அளித்து வருகின்றன.

ஆனால் வட கிழக்கு இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலக நாடுகளின் உதவி போய்ச் சேராத நிலை மிக்க வருத்தத்தை அளிக்கிறது. பல ஆண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட அம் மக்களை சமாதான
காலத்திலும் நிம்மதியாக இருக்க விடாமல் இயற்கை வஞ்சிக்கிறது.

இந்தியாவில் இருந்து நேரடியாக இலங்கைக்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து outward remittance மூலமாக பணம் அனுப்ப இயலும். உங்கள் வங்கிகளை தொடர்பு கொண்டால் விபரங்கள் கிடைக்கும்.


Leia Mais…
Sunday, December 26, 2004

அஞ்சலி

கடந்த காலங்களில் நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் தமிழகத்தில் நடக்காது என்ற கருத்து ஆய்வாலர்களால் வலுவாகச் சொல்லப்பட்டது. நில நடுக்கமே வராது என்ற நிலையிருக்கும் பொழுது சுனாமிகளை யார் கவனிக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலும், தமிழகத்திலும் லேசான நில அதிர்வு ஏற்பட்ட பொழுதே மற்றொரு ஆய்வை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதில் எந்த சேதமும் இல்லாததால் யாரும் அதைப் பற்றி யாரும் அக்கறை காட்ட வில்லை.

இந்தியாவில் ISRO சார்பாக 6 செயற்கோள்கள் இருக்கின்றன. அந்தச் செய்ற்கைக்கோள்களால் ஏன் இத்தகைய இயற்கைச் சீற்றங்களை முன் கூட்டியே அறிய முடியவில்லை ? கடலாய்வு குறித்த செயற்கைக்கேள்களும்
இருக்கின்றனவே அவை ஏன் இந்தக் கடல் தொந்தளிப்பை முன் கூட்டிய அறிய முடியவில்லை ? இந்தக் கேள்வி ISRO உயரதிகரியிடம் முன்வைக்கப்பட்டதற்கு அவர் அளித்த விளக்கம் "கடலலைகள் குறித்து ஆராயக் கூடிய எந்த செயற்கைக்கோள்ளையும் நாம் வைத்திருக்கவில்லை. அது போல செயற்கைகோள்கள் பூமியை சில நேரங்களில் தான் ஸ்கேன் செய்யும். அப்படி ஸ்கேன் செய்யும் பொழுது இத்தகைய எந்த அறிகுறிகளும் தென்படவில்லை" என்றார்.

இத்தகைய சுனாமிகளை கண்டறியும் திறன் பசிபிக் நாடுகளில் உள்ளது. ஆனால் ஆசியாவில் இல்லை. இருந்திருந்தால் உயிர்ச்சேதங்களை தடுத்திருக்கலாம் என்று BBC தொலைக்காட்சி தெரிவித்தது.

நடந்து போனவைகளைப் பற்றிக் குறைச் சொல்லிக்கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை. இனி என்ன செய்வது என்று தான் யோசிக்க வேண்டும்.

பல செயற்கைக்கோள்களை செலுத்தியிருக்கும் நாம் இயற்கையின் பல்வேறு சீற்றங்களையும் கண்டறிய தொழில்நுடபங்களை உருவாக்க வேண்டும். பிற நாடுகளிடம் அத்தகைய தொழில்நுட்பங்கள் இருந்தால் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நில நடுக்கம் போன்ற சீற்றங்களை முன் கூட்டியே கண்டறிய முனைய வேண்டும்.

மகாராஜ்டிரா, குஜராத் என்று நிகழ்ந்த கோரங்களுக்கு அடுத்து தமிழகம். இனிமேலும் இத்தகைய கோரங்கள் நிகழக்கூடாது. இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் அதனால் ஏற்படக் கூடிய சேதங்களை சரியான தற்காப்பு நடவடிக்கை, திட்டமிடுதல் மூலம் குறைக்க முடியும்.

நிருபர்களிடம் பேசிய தமிழக முதல்வர், நிலநடுக்கம் பற்றிய அறிவு தமிழக அரசுக்கு தேவைப்படுவதாகவும், பிரதமரிடம் அது குறித்த தகவல்கள் வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதிலிருந்தே
இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு எந்தளவுக்கு இது குறித்த அறிவும், இத்தகைய நிலையில் செயலாற்றும்
திறனும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது களையப்பட வேண்டும்.

மாநில அரசும், மய்ய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். மய்ய அரசில் உள்ளது போல மாநில அரசிலும் Crisis Management குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசின் தலைமைச் செயலகமும், காவல்துறை தலைவர் அலுவலகமும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் சாலையில் அசம்பாவிதம் நடந்து, பல மணி நேரங்களுக்குப் பிறகு தான் நிவாரணப் பணிகளே முடுக்கி விடப்பட்டுள்ள பொழுது எங்கோ இருக்கும் நாகப்பட்டினத்தின் குக்கிராமங்களில் எப்பொழுது நிவாரணம் முழுஅளவில் போய்ச் சேரும் என்று தெரியவில்லை. மய்ய அரசின் அவசர காலக் குழு இராணுவம், கடற்படை, விமானப்படைகளை முடுக்கி விட்டுள்ளது. நிவாரணங்கள் துரிதமாக நடப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகைய பெரிய சீற்றங்களில் மாநில அரசுகளுக்கு இருக்கும் வசதிகளும், இயந்திரங்களும் மிகக் குறைவு.

மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை. சென்னையில் அப்பலோ போன்ற தனியார் மருத்துவமனைகள் தங்களது சேவையைச் செய்ய தொடங்கியிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.

Leia Mais…

மீட்பு நடவடிக்கை

நில நடுக்கம் ஏற்பட்டு பல மணி நேரங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னமும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல், கடலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய தமிழக கடலோரப் பகுதிகள் அனைத்தும் பாதிப்புள்ளாகியிருக்கிறது. சென்னையில் 100, கடலூரில் 100 என்று சாவு எண்ணிக்கை அதிகம் உயரும் போல தெரிகிறது. கடலூர் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்து உயிர்ச் சேதம் விளைவித்துள்ளது.

ஆனால் இது வரை அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. போலீஸ், மீட்புக் குழு என்று எவரும் அதிக எண்ணிக்கையில் காணப்படவில்லை. மக்கள் தங்களுக்குள்ளாகவே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். பார்வையிட ஆளுங்கட்சி குழு, எதிர்க்கட்சி குழு என்று மீடியா முன்பு காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள். தில்லியில் இருந்து தயாநிதி மாறன் வருகிறாராம். வந்து என்ன கிழிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

தற்பொழுது தேவைப்படுவது இந்த பார்வையிடல்கள் அல்ல. Crisis Management என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் ?

தமிழக கடலோர பகுதி நெடுகிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளுக்கு உடனடியாக இராணுவமும், கடற்படையும் ஈடுபடுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். இன்னமும் இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகத் தான் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இனி மேலும் எதற்கு தயார் நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதியில் மருத்துவ வசதிகளும் இல்லை. போலீஸ் எண்ணிக்கையும், மாநில அரசின் குழுவும் தற்பொழுதுள்ள சூழ்நிலையில் போதாது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் மிக அதிகமாக இருப்பதால் மிக துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், ஓரிசா என்று இந்தியாவின் கிழக்கு கடற்கரை முழுவதும் மற்றும் இலங்கைத் தீவிலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விவரம் தெரிய பல நாட்கள் ஆகலாம்.

Leia Mais…

சென்னையில் நில நடுக்கம்

சென்னையில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடலோரப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெரினா, சாந்தோம் போன்ற கடலோர பகுதியில் கடல் நீர் புகுந்துள்ளது. இது வரை 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. பலரை காணாவில்லை.

சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. மெரினா கடற்கரை மற்றும் ரோடுகளில் கடல் நீர் இருப்பதை தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. கடலூர், நாகை போன்ற இடங்களில் மீனவர் குடியிருப்புகள் பெருத்த சேதம் அடைந்துள்ளதாகவும், பல மீனவர்கள் இறந்திருக்கலாம் என்றும் சன் நியுஸ் தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

மேலும் இலங்கையில் கூட இதன் பாதிப்பு இருப்பதாகவும் தெரிகிறது

Leia Mais…
Saturday, December 25, 2004

வரலாறு

வரலாறுக்கென்று ஒரு தனி இணையத் தளம் சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழில் உள்ள பல சிறப்பான இணையத் தளங்களின் பட்டியலில் இந்த இணையத் தளமும் சேருவதற்கான அறிகுறி தெரிகிறது.

கமலக்கண்ணன் எழுதும் கட்டடக்கலை ஆய்வு, இலாவண்யாவின் கல்வெட்டாய்வு பற்றிய தொடர்கள் இது வரை எந்த ஊடகங்களிலும் காணப்படாத புது முயற்சி. கட்டடக்கலைப் பற்றிய விளக்கங்கள், படங்களுடன் அளிக்கப்படும் தகவல்கள் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால்
கட்டடக்கலைக்கே உரித்தான பல வார்த்தைகளுடன் கட்டுரை அமைந்திருப்பதால் சில இடங்களில் புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது. கட்டடக்கலைப் பற்றி அதிகம் அறியாத வாசகர்கள் (என்னைப் போல) வாசிப்பதற்கு ஏற்றவாறு நடையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். அது போலவே கலைக்கோவன் எழுதும் கட்டுரைகள் சிறப்பாக உள்ளது. பல தகவல்களை தெரிந்து
கொள்ள முடிகிறது.

கதைநேரத்தில் கோகுல் எழுதும் இராஜகேசரி வரலாற்றுத் தொடர் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. நடையில் வேகமும், துள்ளலும் இயல்பாக இருக்கிறது. கதாசிரியரின் வர்ணனை திறனுக்கும், சிறப்பான நடைக்கும் எடுத்துக்காட்டாக கதையைப் படிக்கும் பொழுது அக்கால தஞ்சாவூர் கண்களில் விரிவதை செல்லலாம்.

கதையின் ஆரம்பத்தில் உள்ள முன்னுரையில் அக் கால மக்களின் வாழ்க்கை முறைகளை விளக்கப் போவதாக சொல்லப்பட்டாலும், கதையின் போக்கில் அப்படித் தெரியவில்லை. ஒரு சதி அதைச் சுற்றி பின்னப்படும் கதை என்று வழக்கம் போல ஒரு "மசாலா" வரலாற்றுக் கதையாகவே கதையின் போக்கு "இது வரை" தென்படுகிறது.


தற்கால நிகழ்வுகள் கதைக்குள் புகுத்தப்பட்டது போல சில இடங்களில் தெரிகிறது. குறிப்பாக ராஜராஜரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரை காண வருபவர்களை குறிப்பெடுத்துக் கொள்ளுதல் போன்றவை கதை நிகழும் காலத்தின் இருந்திருக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஆனாலும் அந்தக்
கற்பனை சிறப்பாகவே உள்ளது.

கல்கியின் பாதிப்பு கோகுலிடம் தேவைக்கு அதிகமாகவே தென்படுவதை தவிர்த்திருக்கலாம். கல்கியின் பாணியில் எழுதுவதற்கு கூட ஆழ்ந்த புலமை தேவை. என்றாலும், தன்னுடைய தனித்தன்மையை கதையில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் சில குறைகள் தென்பட்டாலும், மிக சிறப்பான ஒரு வரலாற்று கதையாக இது வெளிவரும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் மிக வலுவாகவே உள்ளது.

கட்டடக்கலை மற்றும் அதைச் சார்ந்த இணையத் தளமாக மட்டுமில்லாமல் வரலாற்றின் பிற நிகழ்வுகளான அக் கால மாபெரும் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு, தமிழிசை, அக் கால மக்களின் வாழ்க்கை முறைகள் போன்றவற்றை பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும். இத்தகைய தகவல்கள் புத்தகமாக கிடைக்கும் என்றாலும், ஒரு தொடராக வெளிவரும் பொழுது படிப்பதற்கு எளிதாக இருக்கும்.

சிறப்பாக எழுதி வரும் வரலாறு இணையத் தள குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்

Leia Mais…
Friday, December 24, 2004

நரசிம்மராவும் பொருளாதாரமும்

இன்றிருக்கும் பொருளாதார சூழ்நிலைகளையும், 1991ல் இருந்த சூழ்நிலைகளையும் ஒப்பு நோக்கும் பொழுது நரசிம்மராவ் என்ற கிழவரின் சாதனைகள் புரிபடும். அவரது ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்டவை தான் இன்று வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நரசிம்மராவ், பொருளாதாரத்தில் பெரிய மேதை இல்லை என்பது தான் அச்சரியமான ஒன்று. பொருளாதாரத்தில் பெரும் புலமை இல்லாத அவர் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்தும் செயல்களை செய்தது நிச்சயம் சாதாரணமானது அன்று.

ராஜிவ் காந்தி போலவோ, வாஜ்பாய் போலவோ கவர்ச்சிகரமான, மக்களை வசிகரிக்கக்கூடிய சக்தி இல்லாத பிரதமர், நமக்கு 1991ல் கிடைத்தது தான் மிகப் பெரிய வரப்பிரசாதம். நாட்டின் பொருளாதார தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்ற ஒருவரை தேர்ந்தெடுத்து, அதனால் கிடைக்கும் புகழை பிறருக்கு தாரைவார்க்கும் மனம் நிச்சயமாக ஒரு கவர்ச்சிகரமான பிரதமருக்கு இருந்திருக்காது. ராஜீவ் காந்தி இறக்காமல் இருந்து அவரே பிரதமராக 1991ல் பதவியேற்றிருந்தாலும், இந்த பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்க கூடும்.
ஆனால் அவர் தன்னை முன்னிறுத்தி, நிதித் துறையில் உள்ள பல அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, பொருளாதாரத்தை நாலாபக்கங்களிலும் இருந்து பலரும் ஆட்டிப்படைக்க மந்தகதியில் பொருளாதாரம் சென்றிருக்கும்.

இமேஜ் இல்லாத பிரதமராக நரசிம்மராவ் கிடைத்ததால் தான் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி, சுதந்திரம் அளித்து, பொருளாதார சீர்திருத்த புகழை எல்லாம் அவருக்கு தாரைவார்த்து, முடிக்கிடந்த நாட்டின் பொருளாதார கதவுகளை அகல திறக்க முடிந்தது.

அது போலவே அரசியல் சக்திகளிடமிருந்து மன்மோகன் சிங்கை காப்பாற்றி எந்தளவுக்கு சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார் என்பது வாஜ்பாய் ஆட்சிக் காலத்தின் நடந்த நிகழ்வுகளை நோக்கும் பொழுது புரிபடும். நிதி அமைச்சர், தனியார் மயமாக்க ஒரு அமைச்சர், அவர்களுக்கு உத்தரவு கொடுக்க சுதேசி கோஷத்துடன் சங்பரிவார் என எல்லாவற்றையும் சமாளித்து வாஜ்பாயால் தனது ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் தான் "இந்தியா ஒளிர்கிறது" என்று கோஷமிடமுடிந்தது.

ஆனால் இமேஜ் இல்லாமல், மக்கள் சக்தியும் இல்லாமல் அரசியல் எதிர்ப்புகளை சமாளித்து அவரது ஆட்சிக்காலத்திலேயே பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்தது அசாத்தியமானது.

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிக்க இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது, தொழில் தொடங்க இருந்த பல பிரச்சனைகளை களைந்தது என்று அவரின் பொருளாதார சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சொற்ப அந்நிய செலவாணியுடன் இருந்த இந்தியா இன்று 130 பில்லியன் டாலர் அந்நிய செலவாணியுடன் சொகுசாக இருக்கிறது. பங்குச் சந்தை 6000ஐ கடந்து 7000ஐ நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை குவிப்பதாலேயே இது சாத்தியமாகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

உலகத்தரத்துடன் மிக நவீனமயமாக்கப்பட்ட, முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட, நாடெங்கிலும் பல்வேறு மையங்களிலும் எளிதில் பங்கு வர்த்தகம் செய்யக் கூடிய தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்டதும் நரசிம்மராவின் ஆட்சியில் தான்.

நரசிம்மராவ் - பங்குச் சந்தை என்றவுடன் ஹர்ஷத் மேத்தா வின் ஊழல் நினைவுக்கு வரும். சீர்திருத்தங்கள் செய்யும் பொழுது சில ஓட்டைகள் அடைக்கப்படாமல் போவது சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போய் விடும். ஏதாவது பிரச்சனை வந்தால் தான் அந்த ஓட்டைகள் வெளிவரும். பின் ஓட்டைகள் அடைக்கப்படும். ஹர்ஷத் மேத்தா ஓட்டையை பயன்படுத்திக் கொண்ட புத்திசாலி. அவ்வளவு தான். அப்பொழுது நடக்காமல் போய் இருந்தால் பின் எப்பொழுதாவது நடந்திருக்கும். அந்த ஊழல் மூலம் ஓட்டைகள் அடைக்கப்பட்டு சரியான அளவிலான கண்காணிப்புடன் இன்று பங்குச் சந்தை செயல்படுகிறது.

மற்ற எந்த பிரதமர்களைக் காட்டிலும் இந்தியாவின் பொருளாதார மேன்மைக்காக வித்திட்ட பிரதமர் நரசிம்மராவ் தான். இன்னும் 50 வருடத்திற்க்குப் பிறகு இந்தியா பொருளாதார வல்லரசாகும் பொழுது அதற்கு விதை விதைத்தவர் ஒரு எழுபது வயது கிழவர் என்பதை அனைவரும் மறக்காமல் இருந்தால், அவரது அத்மா அமைதி அடையும்.

பத்ரியின் இரங்கல் : பிரகாஷின் Obituary


Leia Mais…
Saturday, December 18, 2004

உலக அதிசயங்களுக்கான தேர்தல்

இதைப் பற்றி கேள்விபட்டவுடன் எனக்கு எழுந்த முதல் கேள்வி "தஞ்சாவூர் பெரிய கோயில்" ஏன் இந்தப் பட்டியலில் இல்லை ? மதுரை மீனாட்சியம்மன் கோயில் எந்தவிதத்தில் அதிசயமானது ?

இப்பொழுது ஒரு புதுப்பட்டியல் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகத்தில் இருந்து எழு இடங்கள் இடம்பெற்றுள்ளன.

  1. மதுரை மீனாட்சியம்மன் கோயில்
  2. தஞ்சாவூர் பெரிய கோயில்
  3. மகாபலிபுரம்
  4. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை
  5. கன்னியாகுமரி விவேகானந்தா நினைவு மண்டபம்
  6. திருவண்ணாமலை கோயில்
  7. சென்னை அண்ணாநகர் டவர்

இந்தப் பட்டியலில் அண்ணா நகர் டவரைப் பார்த்தவுடன் சிரிப்பு தான் வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய அளவுக்கு அண்ணாநகர் டவர் எந்த வகையில் அதிசயமானது என்பது தெரியவில்லை.

இந்தப் பட்டியலில் இடம்பெறக் கூடிய கட்டடங்களை யார் தேர்வு செய்கிறார்கள் ? மற்ற நாடுகளில் உள்ள கட்டிடங்களும் இந்த லட்சனத்தில் தான் இருக்குமோ ?

இதற்கு ஒரு தேர்தலாம் ? ஓட்டெடுப்பாம் ?

Leia Mais…
Friday, December 10, 2004

ஆந்திரா திருமணங்களும், வரதட்சணையும்

சமீபத்தில் ஆந்திராவைச் சேர்ந்த நண்பன் ஒருவனின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். நண்பன் அமெரிக்காவில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வரதட்சணை மட்டும் சுமார் 50 இலட்சம் கிடைத்திருக்கிறதாம். ஆந்திரா திருமணங்களில் வரதட்சணை படுத்தும் பாடு, படு மோசம். அந்திராவில் பெண் பெற்றவர்கள் பாடு படு திண்டாட்டம் தான் போலும். என்னுடைய பல ஆந்திரா நண்பர்கள் வரதட்சணை என்று பல லகரங்களைப் பெற்ற கதை எனக்குத் தெரியும். இதில் வினோதம் என்னவென்றால், எனக்கு வரதட்சணை அதிகமாக வேண்டும், அதனால் தான் இந்த மென்பொருள் துறைக்கே வந்துள்ளேன் என பலர் தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள். ஓவ்வொருவரின் தகுதிக்கு ஏற்றாற்ப் போல வரதட்சணை மாறுபடும். அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்றால் தனி ரேட், இந்தியாவில் பெரிய கம்பெனியில் இருந்தால் தனி ரேட், சின்ன கம்பெனிக்கு ஒரு ரேட் என்று விலைப் போய் கொண்டிருக்கிறார்கள்.

வரதட்சணை என்றாலே என்னுடைய நிறுவனத்தில் வேலைச் செய்யும் அந்திராவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் ஞாபகம் கட்டாயம் வந்துப் போகும். நண்பருக்கு திருமணம் நிச்சயம் ஆகும் சூழ்நிலை. பெண் பார்த்து எல்லாம் பேசி முடிவாகி விட்டது. 20 இலட்சம் வரதட்சணை என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டு திரிந்தார். திடீரென்று அவருக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்கா சென்றால் நிறைய வரதட்சணை கிடைக்கும் என்ற ஆசையில் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லி விட்டார். அவர் நேரம் அவருடைய ப்ராஜக்ட் சொதப்பலாகி அமெரிக்கா வாய்ப்பு பறிபோய் விட்டது. இன்னமும் சென்னையில் தான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார். கல்யாணமும் ஆன பாடில்லை. வயதும் 30ஐ தாண்டி கடந்து கொண்டே இருக்கிறது. தனது அந்தஸ்துக்கு ஏற்ற வரதட்சணையை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் பெரும் சம்பளத்திற்கு இந்த அலைச்சல் தேவை இல்லை தான். ஆனால் குறைவாக வரதட்சணை பெற்றால் தன் உறவினர்கள் மத்தியில் தன் அந்தஸ்து குறைந்து விடும் என்று அஞ்சுகிறார். கீழ்மட்டத்தில் வரதட்சணை எந்தளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் என் அலுவலகத்தைப் பொறுத்தமட்டில் மேல் சாதியினராக கருதப்படும் ரெட்டி போன்ற சாதிகளில் வரதட்சணை பல இலகரங்கள் தான்.

படித்த நல்ல வேளையில் இருக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களுக்கும் அந்திரா இளைஞர்களுக்கும் இந்த விஷயத்தில் நிறைய வேறுபாடு உள்ளது. எல்லா இடத்திலும் சிலர் வரதட்சணைப் பெற்று கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் பெருவாரியான படித்த இளைஞர்கள் இவ்வாறு இல்லை என்றே நான் கருதுகிறேன். அப்படியே வாங்கினாலும் அதை பெருமைக்குரிய செயலாக நினைக்காமல் ஒரு குற்ற உணர்ச்சியுடன், தான் வரதட்சணை வாங்கியதை வெளியே சொல்லாமல் அமுக்கி விடுவார்கள். வரதட்சணை வாங்குவது நம்முடைய தமிழ் சமுதாயத்தில் அவ்வளவு கேவலமான விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் ஆந்திராவிலோ எவ்வளவு வரதட்சணை பெறுகிறோமோ அந்தளவுக்கு தம்முடைய அந்தஸ்து உயருவதாகவே கருதுகின்றனர். வெளிப்படையாக தனக்கு இவ்வளவு வரதட்சணை கிடைக்கிறது, வரதட்சணை அதிகமாக பெறுவதற்குத் தான் அமெரிக்கா செல்ல நினைக்கிறேன் என்று தப்பட்டம் அடிக்கின்றனர்.

அந்திரா உணவு போல திருமணமும் காரமான விஷயம் தான். ஆனால் அது பெண் வீட்டாருக்கு மட்டும் தான் காரமாக தெரிகிறது.

Leia Mais…
Thursday, October 28, 2004

சென்னையில் ஒரு மழைக் காலம்

மேட்ராசுல மழை வந்தாலே பேஜார் தான். அது இல்லாங்காட்டியும் மேட்ரோ லாரிக்கு காவ காத்து, அதுவும் வராம, மினரல் வாட்டர் வாங்கி கஜானா காலியாகிடும். இது எப்பவும் உள்ள மேட்டரு தான். அத்த உடுங்க.
நாம சொல்ல வர்ற மேட்டர். மய (மழை) பெய்ஞ்சா ரோட்டுல நடக்கறத பத்தி தான்.

அப்படித் தான் ஒரு நாளு, ஆபிசுல மீட்டிங்னு ஒரு வெள்ள கலர் சட்டையை உஜாலா போட்டு வெளுத்து போட்டுக்கிட்டு ஆபிசுக்கு கிளம்பறேன். நான் கிளம்பற வரைக்கும் சுள்ளுன்னு அடிச்சுக்கிட்டு இருந்த சூரியன், நான் வெளிய வந்த உடனே எஸ்கேப் ஆயிட்டான். மய கொட்ட ஆரம்பிச்சுடுச்சி. சரி ஆனது ஆவட்டும்னு ஒரு குடையை பிடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டேன். ஆபிசு மீட்டிங் வேற மனசுல கபடி ஆட ஆரம்பிச்சுட்டுது. நல்ல மலை (மழை). நம்ம ஊருலத் தான் மய பெய்ஞ்சா காவேரி ஆறு ஓடுமே. அப்படி ஒரு ஆறு நான் போற வழியில ஓட ஆரம்பிச்சிட்டுது. கறுப்பு காவேரி. சென்னை ஸ்பேஷல் காவேரி.

என்னாடா இது வெள்ளை சட்டை வேற தெரியாத்தனமா போட்டுக்கிட்டோம். எவனாவது அர்ச்சனை பண்ணிட போறானேன்னு நினைச்சுண்டே இருக்கேன், ஒரு ஆட்டோக்காரன் சள்ளுன்னு தண்ணிய பீச்சு அடிக்கறான். இது மெயின் ரோடு கூட இல்ல. எதிர்தாப்ல ஆள் வர்றாங்கன்னு தெரிஞ்சே பண்றாங்கன்னு எனக்கு தோணிச்சு. உஜாலாவுல மாஞ்சி மாஞ்சி தோவிச்ச சட்டை இப்ப நெய்வேலி நிலக்கரி கலர்ல மாறினா கடுப்பு வருமா வராதா. நானும் கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

"புறம்போக்கு பாத்து போடா" அப்படின்னு.

வேகமா போன ஆட்டோ சல்லுன்னு திரும்பி வந்துடுச்சி.

"இன்னா சொன்ன" அப்படின்னு கேட்டான்.

ஏதோ வேகமா போறவன் அப்படியே புடுவான்னு நினைச்சி கத்தினா, இவன் நிறுத்திபுட்டு வரானே. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ. நம்ம தெம்புக்கு இதெல்லாம் தேவையா. பெரிய ஆளுங்க வீட்டுக்கே வரிசையா ஆட்டோ விடுவாங்க. நமக்கு இவன் ஒருத்தன் போதுமே. ஆளு நல்லா நம்ம பொன்னம்பலம் மாதிரி இருந்தான். சரி..நம்ம உடம்புக்கு இதெல்லாம் ஜாஸ்தின்னு முடிவு பண்ணி வடிவேலு கணக்கா பம்மி "ஒண்ணும்மில்லண்ணா..வெள்ளை சட்டை இப்படி ஆச்சேன்னு உணர்ச்சி வசப்பட்டு கத்திபுட்டேன்" அப்படின்னு அவனுக்கு ஒரு கும்புடு போட்டேன். அவனும் கையை சொடுக்கி நம்ம தலீவர் ஸ்டைல்ல ஏதோ சொல்லிட்டு போனான். தலைக்கு வந்தது தலைப் பாகையோட போயிடுச்சின்னு சந்தோசத்துல ஆபிசுக்கு போகாம லீவு போட்டுட்டு, மறுநாள் மேனேஜர் சிடுமூஞ்சிக்கிட்ட திட்டு வாங்கனப்ப இந்த மழை மேல பயங்கர வெறுப்பா போயிடுச்சு.

சரி நடந்தா தானே இந்த பிரச்சனை. டு வீலர்ல போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் டு வீலர்ல கிளம்பறேன். லேசா தூறிக் கிட்டு இருந்துச்சு. சரி சீக்கரமா போயிடலாம்னு நினைச்சு கிளம்பிட்டேன். அப்புறம் தான் இந்த பிரச்சனை புரிஞ்சுது. நம்ம ரோட்டுல போற எந்த வண்டிக்கும் mud guard இருக்காதுன்னு எனக்கு தெரியாம போயிடுச்சி. நானும் என் முன்னாடி போற வண்டியை பாலோ பண்ணிக்கிட்டே போறேன். அந்த வண்டியோட பில்லியன்ல மழையில தொப்பலா நனைஞ்சிக்கிட்டே சிக்குன்னு ஒரு பிகர் லேசான காட்டன் சட்டையில, ஜின்ஸ் போட்டுக்கிட்டு இருந்தா, நீங்க பாலோ பண்ணுவிங்களா மாட்டிங்களா. நானும் அத்த தான் செஞ்சேன். அத்தோட ரிசல்ட்டு ஆபிசு போனதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சது. சட்டையெல்லாம் ஒரு புது டிசைன் போட்டிருக்கு. பிகரப் பாத்து ஜொல்லு விட்டதால அன்னைக்கும் சம்பளம் கட்டு.

நடந்தாலும் பிரச்சனை, டு வீலர்ல போனாலும் டாவு கிழியுது. எதுக்கு வம்பு. கார்ல சொகுசா போயிடலாம்னு முடிவு பண்ணி ஒரு நாள் கார்ல கிளம்பறேன். இந்த கார்ல போறப்ப என்னா பிரச்சனைன்னா. டு வீலர்ல போற பொடிப் பசங்க நேரா நம்ம கார் எதிர்த்தாப்புல வந்து கட் அடிப்பாங்க. அப்புறம் இந்த பாழாப்போன டிராப்பிக்ல ஊர்ந்துக்கிட்டே போறத்துக்குள்ள மண்டை கிழிஞ்சிடும். ஒரே ஆறுதல் என்னான்னா நம்ம "சுச்சியோட" ரொம்ப ஹாட்டான வாய்ஸ்ச கேட்டுக்கிட்டே போவலாம். அப்படி போய்க்கிட்டே இருக்கறப்ப ஒரு தபா என்னா பண்ணிட்டேன், யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்னு சல்லுன்னு ஒரு ரோட்டு ஓடையில வண்டிய உட்டு எடுத்தேன். சல்லுன்னு டு வீலர்ல போன ஒருத்தர் மேல அபிசேகம். ரியர் மிரர்ல பாத்து சந்தோசப் பட்டுக்கிட்டு சுச்சியின் ஹட் வாய்ச கேட்டுக்கிட்டு இருக்கேன், சட்ன்னு ரோட்ட மறிச்சுக்கிட்டு ஒரு பொன்னம்பலம் நிக்கறான். யோசிச்சு பாத்தா நம்ம ரியர் மிரர் அபிசேக பார்ட்டி.

கீழே இறங்குடாங்குறான்.

"என்னா கார்ல வந்தா நீ பெரிய ..." என பேச, நாம மறுபடியும் வடிவேலு கணக்குல பம்ம கடைசில ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சி, மூட் அவுட்டாகி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டேன்.

இப்பல்லாம் மழை பெய்ஞ்சா ஒரு பாட்டிலோட வீட்டுல செட்டில் ஆயிடுறேன். வேற வழி...

மழைக் காலத்துல நீங்க என்னா பண்றீங்க...

Leia Mais…
Thursday, October 14, 2004

http://tamilstock.blogspot.com/

என்னோட தொந்தரவை பொறுத்துகிட்டு தொடர்ந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கறவங்க எல்லாருக்கும் நன்றிங்க...

பங்குச் சந்தை என்ற பெயருடன் இந்த புது முகவரிக்கு போறேன்

http://tamilstock.blogspot.com/

நீங்களும் அங்க வந்து படிப்பீங்க தானே?

இந்த தனித் தளம் யோசனையை சொன்ன அன்பு மற்றும் என் தோஸ்துகளுக்கு thanks.

Leia Mais…
Wednesday, October 13, 2004

அறிக்கைகளும் முதலீடும்

இன்று இரு மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. TCS மற்றும் Hughes நிறுவனங்களில், TCS அறிக்கை அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்துள்ளது. அதனுடைய நிகர லாபம் 14.1% அதிகரித்து 576.40 கோடி லாபத்தை இந்த காலாண்டில் எட்டியுள்ளது. ஆனால் Hughes நிறுவனத்தின் லாபமோ 3.64% மட்டுமே அதிகரித்துள்ளது.

இன்று மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்குச் சந்தைக்கு விடுமுறை. நாளைய வர்த்தகத்தில் TCSன் பங்குகள் உயரக் கூடும். Hughes பங்குகள் சரியக்கூடும்.

பத்ரி பின்னுட்டத்தில் தெரிவித்து இருந்தது போல அறிக்கைகளின் ஏற்றத்தாழ்வுகளால் இந்த நிறுவனங்களின் அடிப்படையில் எந்த ஒரு மாற்றமும் நிகழ்வதில்லை (பெரிய இழுப்புகளை சந்தித்து இருந்தாலொழிய). ஆனால் அந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பொறுத்து பங்குகளின் விலையில் மாற்றம் ஏற்படும். நம்மைப் போன்ற முதலீட்டாளர்களுக்கு இந்த அறிக்கைகள் சில செய்திகளை தெரிவிக்கும்.

இன்போசிஸ் பங்குகள் இப்பொழுது நல்ல லாபகரமான ஒரு முதலீடாக இருக்குமென பல பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு இது மிகவும் ஏற்ற ஒரு முதலீடாக இருக்கும். இதன் விலை 1800 - 1850க்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக சொல்கின்றனர்.
தற்பொழுது இதன் விலை - 1711. மூன்றாம் காலாண்டில் தன்னுடைய வருவாய் ரூ1,869 கோடி முதல் ரூ1,882 கோடி வரை இருக்கும் என அறிவித்துள்ளதால் (இது கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் பொழுது 50% அதிகம்) அதன் பங்கு விலையில் ஏற்றம் இருக்கும் என கருதப்படுகிறது.

அதைப் போல TCS பங்குகளும் நல்ல லாபகரமான முதலீடாக இருக்கும்.

எல்லா மென்பொருள் நிறுவனங்களுமே offshoring மூலமாக நல்ல லாபம் அடைந்துள்ளனர். இவர்கள் பிற்காலத்தில் சந்திக்க கூடிய சவால் - சில பெரிய அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாக தங்கள் கிளைகளை இங்கு துவக்க ஆரம்பித்துள்ளனர். Goldmansachs, Morgan Stanley போன்ற நிறுவனங்கள் இப்பொழுது தங்களுடைய மென்பொருள் நிறுவனங்களை இந்தியாவில் வெள்ளோட்டம் பார்க்கின்றனர். அது வெற்றியடையும் பட்சத்தில் பல நிறுவனங்களும் இதையே பின்பற்றக்கூடும். இது இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் கடும் சவாலாக இருக்கும்.

இது உடனடியாக நடக்க கூடிய ஒன்றல்ல என்பது இந்த நிறுவனங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும்.

Leia Mais…
Tuesday, October 12, 2004

லாபம் போதும் சாமி...

இரு நாட்கள் - இரு வேறு அறிக்கைகள். ஒரு அறிக்கை பங்குச் சந்தையின் குறியீடுகளை சரிய வைத்தது. மற்றொன்று நம்பிக்கையை அளித்தது. ஆனாலும் சந்தை இரு நாட்களும் கரடிகளின் ஆணைக்குட்பட்டு சரியத் தொடங்கியுள்ளது.

திங்களன்று எம்பசிஸ் Mphasis BFL நிறுவனம் அளித்த அறிக்கை பங்குச் சந்தையில் மென்பொருள் பங்குகளை சரிய வைத்தது. இந்த காலாண்டில் Mphasis BFLக்கு வருவாய் குறைந்துள்ளதால் (இழுப்பு அல்ல) மொத்த மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய நிலையில் தான் இருக்குமோ என்ற அச்சத்தில், இன்போசிஸ் உட்பட அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் சரிவை எதிர்கொண்டன. வருவாய் இழுப்பு அந்நியச்செலவாணியாலேயே எற்பட்டதாக Mphasis BFL நிறுவனம் கூறியது. மற்றபடி தங்கள் நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது. சிறு பொறி கிடைத்தால் பற்றிக் கொள்ளும் பங்குச் சந்தை அதன் வருவாய் இழுப்பையே அதிகம் கவனித்தது.

இன்று காலை மென்பொருள் பங்குகளின் வர்த்தகம் இன்போசிஸ் நிறுவனத்தின் அறிக்கையைப் பொருத்தே அமையும் என்பதால் ஒரு சிறு பரபரப்பு என்னுள் எழுந்தது. வேறு என்ன. இன்போசிஸ் நல்ல அறிக்கையை தரும் என்ற எண்ணத்தில் நானும் சில இன்போசிஸ் பங்குகளை வாங்கி வைத்திருந்தேன்.

Mphasis BFL, Infosys ஆகிய இரண்டு நிறுவனங்களையும் ஒரே அளவில் வைத்து பார்க்க இயலாது. இன்போசிஸ் நாட்டின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனம். பல துறைகளிலும் தனது முத்திரையை பதித்துள்ளது. அந்த நம்பிக்கை இருந்தாலும் போட்ட பணம் என்னகுமோ என்ற கவலை ஒரு புறம்.

ஆனால் அனைவரின் கவலையையும் போக்கி இன்போசிஸ் நிறுவனம் ஒரு சிறந்த அறிக்கையை கொடுத்தது.
இன்போசிஸ்ஸின் வருவாய் இந்த காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த காலாண்டில் மட்டும் சுமார் 32 புதிய Clients இந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளனர். மொத்த Clients எண்ணிக்கை 431. Offshore வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. சுமார் 5000 பேர் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர். வரும் காலாண்டில் மேலும் 4000 பேர் சேர்க்கப்படுவர்.

Mphasis BFL போன்ற நிறுவனத்திற்கும், இன்போசிஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனத்திற்கும் உள்ள ஒரு வேறுபாட்டை ஒரு விஷயம் படம்பிடித்து காட்டியது. Mphasis BFL நிறுவனம் அந்நியச்செலவாணி விஷயத்தில் நஷ்டம் கண்டது. ஆனால் இன்போசிஸ் நிறுவனமோ Forward contracts மூலம் தனது அந்நியச்செலவாணியை திறம்பட நிர்வாகித்துள்ளது (சரி..அது என்ன Forwards. FX Forwards எனப்படுவது அந்நியச்செலவாணியில் தினமும் நிகழும் மாற்றத்தில் இருந்து ஒரு நிர்வாகம் தன்னை தற்காத்து கொள்ள மேற்கொள்ளும் ஒரு உத்தி. உதாரணமாக இம் மாதம் ஒரு டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 45.80. ஆனால் தினமும் நிகழும் பல்வேறு மாற்றத்தினால் அது 45க்கும் வரலாம், 48க்கும் செல்லலம். அந்நியச்செலவாணி அதிகமாக பரிமாற்றம் செய்யும் ஒரு நிறுவனம் தன்னை இத்தகைய நிலையற்ற தன்மையில் இருந்து தற்காத்து கொள்ள FX Forwards எனப்படும் ஒரு ஒப்பந்தத்தை வங்கிகளிடம் செய்து கொள்ளும். அதாவது ஒரு டாலரை ரூ 46.50க்கு ஒரு மாதம் கழித்து மாற்றிக் கொள்கிறேன் என்பது தான் அந்த ஒப்பந்தம். பறிமாற்றம் செய்யும் நாளில் அது 45 ஆக இருந்தாலும், 48ஐ எட்டினாலும் 46.50க்குத் தான் அந்த பறிமாற்றம் நிகழும். இது ஒரு சிக்கலான கணக்கு). ஆனால் Mphasis BFL நிறுவனம் தன்னை இந்த விதத்தில் தற்காத்து கொள்ளாததால் இந்த காலாண்டில் நிகழ்ந்த நிலையற்ற பணப் பறிமாற்றத்தில் இழுப்பை எதிர்கொண்டது.

சரி...பங்குச் சந்தை என்ன ஆனது. இன்போசிஸ்ஸின் பங்குகள் ஆரம்பத்திலேயே சுமார் 40 ரூபாய் எகிறியது.
பங்கு வர்த்தகத்திலும் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் பங்குகள் அதிக விலையை எட்டியதால் லாபம் அடையும் நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இன்போசிஸ் பங்குகள் கூட சற்று சரிவடைந்து ஓரளவிற்கு லாபமுடன் (25 ரூபாய் அதிகமாக) இருந்தது.

BSE 41 புள்ளிகள் சரிவடைந்து 5,677 என்ற அளவிலும், NSE 24 புள்ளிகள் சரிவடைந்து 1788 என்ற அளவிலும் வர்த்தகம் முடிவடைந்தது. பங்குச் சந்தை எப்பொழுதுமே தொடர்ந்து லாபகரமாக சென்று கொண்டிருந்தால் அடுத்த சில நாட்களில் லாபம் போதும் சாமி என எல்லோரும் பங்குகளை விற்ப்பார்கள். அது தான் கடந்த இரு தினங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

மணிசங்கர் அய்யர் பிரதமரை சந்தித்து பெட்ரோல், டீசல் விலையேற்றம் பற்றி விவாதிக்கப் போகிறார் ? விலை ஏறினால் எண்ணெய் விற்ப்பனை நிறுவனங்களான HPCL, BPCL போன்ற பங்குகளுக்கு குஷியாக இருக்கும். நமக்கு ?? பெட்ரோல் பங்க் பக்கம் போகும் பொழுது வயிறு எரியும்.

Leia Mais…
Sunday, October 10, 2004

காளைகளின் தகவல்கள்

பங்குச் சந்தையில் எப்பொழுதும் எதிர்காலத்தைப் பற்றிய மதிப்பீடுகள் தான் முக்கியம். கடந்து வந்த பாதைகளைப் பற்றிய கற்பனையிலேயே இருந்தால் அதள பாதாளம் தான்.

கடந்த வாரம், BSE பங்குக் குறியீடு 82 புள்ளிகளும், NSE 42 புள்ளிகளும் உயர்ந்தது.

இந்த வாரம் எப்படி இருக்கும் ?

வரும் வாரம் பல நிறுவனங்கள் தங்களது இரண்டாம் காலாண்டு அறிக்கைகளை (Q2 Results) வெளியிடும். அந்த அறிக்கையைப் பொறுத்துத் தான் பங்குச் சந்தையின் போக்கு அமையும். ஒவ்வொரு ஆண்டும் இன்போசிஸ் நிறுவனம் முதலில் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும். கடந்த காலாண்டில் இன்போசிஸின் சிறப்பான செயல்பாடு இந்த காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த அறிக்கையைப் பொருத்து இன்போசிஸ் பங்குகள் விலையில் மாற்றம் தெரியும்.

சரி எந்தப் பங்குகளை நாம் வாங்கலாம் ?

சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பெரியக் காளைகள் தெரிவிக்கும் தகவல்களைத் திரட்டி தருகிறேன்.

இந்த வார "காளைகளின் தகவல்கள்".

இந்த வாரம் பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை அறிவிப்பதால் அந்தத் துறைப் பங்குகளை வாங்கலாம். அறிக்கைகளின் நிலவரத்தைப் பொருத்து அந்தப் பங்குகளின் விலை ஏறக்கூடும்.

கச்சா எண்ணெய்யின் விலை ஏறுமுகமாக இருப்பதால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்குகளான ONGC போன்றவை நல்ல லாபகரமாக் இருக்கும். ஆனால் எண்ணெய் விற்பனை நிறுவனப் பங்குகளான HPCL, BPCL போன்றவற்றில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பது நல்லது. அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதில்லை என்ற முடிவில் இருந்து மாறினால் இந்த நிறுவனப் பங்குகள் முன்னேறும்.

மற்றபடி ரிலயன்ஸ் நிறுவனப் பங்குகளும், வங்கிப் பங்குகளும் விலை ஏறக்கூடிய சாத்தியக் குறுகள் இருப்பதாக காளைகள் சொல்கின்றன.

ரிலயன்சைப் பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று சொல்கின்றனர்.

இந்த வாரம் பங்குச் சந்தை காளைகளின் ஆதிக்கத்தில் இருக்குமா ? கரடிகளின் ஆணைக்கு உட்படுமா ?

காளை, கரடி இந்த இரண்டு சந்தையிலுமே சில பங்குகள் நல்ல லாபகரமாகத் தான் இருக்கும். நான் திரட்டிய இந்த பங்குகள் அந்த வரிசையில் இருந்தால் நல்லா இருக்கும் ? பார்ப்போம் ?

Leia Mais…
Saturday, October 09, 2004

பணப் பெருக்கம்

தீபாவளிக்கு ஒரு உடை வாங்க வேண்டும் என்றதும் எதையெல்லாம் யோசிப்போம்

எவ்வளவு விலை ?
துணி எப்படி உள்ளது ?
விலைக்கு ஏற்ற துணி தானா ?
துவைத்தால் சுருங்கிப் போகுமா ?
நிறம் மங்கிப் போகுமா ?
நம்முடைய நிறத்திற்கு ஏற்றதாக இருக்குமா ?

இன்னும் யோசித்து, கடையிலுள்ள உடைகளை அலசி ஆராய்ந்து, கடை சிப்பந்தியை கடுப்பேற்றி, எல்லா வகையிலும் ஏற்றதாக சில துணிகளை தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஒரு துணியை இறுதியில் தேர்ந்தெடுப்பதற்குள் தீபாவளி நெரிசலில் வேர்த்து விடுகிறது.

ஆனால் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கும் பொழுது இந்த அளவுக்கு நாம் யோசிப்பதே இல்லை. பெரும்பாலும் யாரோ ஒருவர் சொல்வதை கேட்டு விடுகிறோம். நாமாக யோசித்து வாங்கினாலும் விலைக் குறைந்த பங்குகளாக நிறைய வாங்கி அது விலை ஏறும் பொழுது நிறைய பணம் பார்க்கலாம் என்று பேராசைப் படுகிறோம்.

உண்மையில் நடப்பது என்ன ?

விலைக் குறைந்த பங்குகள் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். இது மிகச் சிறிய நிறுவனங்களாக இருப்பதால் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு விலை ஏறுவதற்கான சாத்தியக் குறுகள் இல்லை. பெரும்பாலும் இருக்கின்ற நிலையிலேயே இருக்கும். இல்லாவிட்டால் சரியும். இதனால் போட்ட முதலீட்டிற்கு நாம் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. பணம் காணாமல் கூட போகும்.

அதற்காக குறைந்த விலைப் பங்குகள் எல்லவற்றையும் விட்டு விலக வேண்டும் என்பது அர்த்தமாகாது. குறைந்த விலையோ அதிக விலையோ நல்ல நிறுவன பங்குகளாகத் தான் வாங்க வேண்டும்.

எப்படி அந்த நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு கொள்வது ?

ஒரு நிறுவன பங்குகள் வாங்குவதற்கு முன்பு அந்த நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
தற்பொழுது பங்குச் சந்தையின் நிலை என்ன ?
குறுகிய கால முதலீடா இல்லை நீண்ட நாள் முதலீடா ?
நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகள் காளைச் சந்தையில் எப்படி இருந்தது, கரடிச் சந்தையில் எவ்வளவு சரிந்தது.
அதனுடைய தற்பொழுதய விலை (Valuations) சரியான அளவில் உள்ளதா இல்லை அதிக விலையிலோ, குறைந்த விலையிலோ இருக்கிறதா ?
அந்த நிறுவனத்தின் எதிர்கால் செயல்பாடுகள் எப்படி இருக்கும் ?

என்று மண்டையை உடைத்து ஆராய வேண்டும். செலவழிக்க கூடிய துணிகளுக்கே யோசிக்கும் பொழுது, முதலீடு செய்யும் பணத்திற்கு யோசிப்பதில் பாதகம் இல்லை.

பங்குச் சந்தையில் சரியான நேரத்தில் நுழைவது மிகவும் அவசியம். பங்குச் சந்தை குறியீடு சரியும் பொழுது நாம் அஞ்சி ஓடி விடுகிறோம் ? விலை அதிகரிக்கும் பொழுது நுழைந்து அதிக விலையில் பங்குகளை வாங்கி நஷ்டப் படுகிறோம். மாறாக குறைந்த விலையில் பங்குகளை வாங்கி அதிக விலை இருக்கும் பொழுது விற்க வேண்டும்.

சரி மறுபடியும் ஒரு சின்ன கணக்கு

இந்த முறை விலை குறைந்த ஒரு பங்கு பற்றியது

SAIL (Steel Authority of India) - சென்ற மாதம் இந்த நிறுவன பங்குகளின் விலை - ரூ39 என்ற அளவில் இருந்தது.

100 பங்குகளை சென்ற மாதம் வாங்கி இருந்தால்

100 x 39 - 3900

இன்று அதன் விலை - ரூ50

100 x 50 - 5000

இந்த லாபத்தை நாம் பெற்றிட என்ன செய்திருக்க வேண்டும் ?

தினசரிகளில் "Business" என்ற ஒரு பிரிவு இருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

Leia Mais…
Friday, October 08, 2004

காளை..கரடி..பன்றி..

பங்குச் சந்தையில் நான் கற்றுக் கொண்ட முதல் வார்த்தை Bull Market - காளைச் சந்தை. இதைக் கற்றுக்கொண்ட வார்த்தை என்பதை விட விநோதமாக தெரிந்த ஒரு உருவத்தை என்ன என்று தோண்ட ஆரம்பித்த பொழுது புரிந்து கொண்ட அர்த்தம் எனக்கொள்ளலாம். பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இங்கே இருந்து என்ன செய்யப்போகிறாய்? போய்க் கற்றுக்கொண்டு வா என்று என்னுடைய நிறுவனம் நியுயார்க்குக்கு எட்டி உதைக்க, அந்த நிறுவனத்திற்குள் நுழையும் பொழுது எங்கு நோக்கினும் காளைகள் வாலைத் தூக்கி கொண்டு, மிரட்டின (Merrill Lynch நிறுவனம் தான். அந்த நிறுவனத்தின் சின்னம் காளை) என்னடா இது நம்ம ஊர் ஜல்லிக்கட்டு இந்த ஊர் வரைக்கும் வந்து விட்டதோ என்று தோன்றியது. சரி கொஞ்சம் ஊர் சுற்றலாம் என்று அன்று மாலை இரட்டைக் கோபுரங்களைப் பார்த்து வியந்து கொண்டே நடந்த பொழுது சற்றுத் தொலைவில் நியுயார்க் பங்குச் சந்தை அருகில் மற்றொரு பெரிய காளைச் சிலை. Merrill Lynch சின்னத்தை இங்கு எதற்காக வைத்திருக்கிறார்கள்? தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருந்தது.

மறுநாள் என்னுடன் வேலை பார்த்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்க, அவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரியாகப் பார்த்தார். இது கூடத் தெரியாமல் நீ என்னத்த செயலி எழுதிக் கிழித்து, அதை வைத்து நாங்கள் வியபாரம் பண்றது என்பது போல இருந்தது அந்த பார்வை. சரி நீ என்னத்த நினைக்கிறியோ நினைச்சிக்கோ. விஷயத்தை சொல்லுடா! என்று மனதுள் நினைத்து கொண்டே (பின்ன? வெளிய சொல்ல முடியுமா?) பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவரைப் பார்த்தேன்.

அப்பொழுது தெரிந்துகொண்ட விபரங்கள்தான் பங்குச் சந்தை மீது ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

காளைச் சந்தை என்பது பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையைக் குறிப்பது. பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச் சந்தையில் தான்.
பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.

காளை, கரடி என இருவேறு சந்தைகள் இருக்கின்றன என்று எண்ண வேண்டாம். ஒரே சந்தைதான். அன்றைய நிலவரத்தை வைத்து, காளை என்றும் கரடி என்றும் வர்ணிப்பார்கள்.

அப்படியானால், பன்றி என்பது?

“Bulls make money,
bears make money,
but pigs just get slaughtered!”

பங்குச் சந்தையைப் பற்றி தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்ற்வர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.

என் கனவில் அடிக்கடி பன்றிகள் தோன்றுவது ஏன் என்று புரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன் ?

Leia Mais…
Thursday, October 07, 2004

இன்றைய சூடான பங்கு

இன்று NTPC (National Thermal Power Corporation) நிறுவன பங்குகள் ஆரம்ப பொது விலைக்குறிப்பீட்டிற்கு வந்துள்ளது (Initial Public Offer - இதன் சரியான தமிழாக்கம் தெரியவில்லை. ஆனால் "ஆரம்ப பொது விலைக்குறிப்பீடு" அந்த அர்த்தத்தை பிரதிபலிக்கும். பங்குச் சந்தையின் பல சொற்களை தமிழ்ப் படுத்தலாமா என்று ஒரு யோசனை. ஏற்கனவே அத்தகைய சொற்கள் இருந்தால் சொல்லுங்களேன். பத்ரி கூறிய "பரஸ்பர நிதி" போல).

அது என்ன IPO ?. ஒரு நிறுவனம் முதல் முறையாக பங்குகள் வெளியிடும் பொழுது ஒரு விலை நிர்ணயித்து, தனது பங்குகளை பொது விற்பனைக்கு வழங்கும். இது முதன்மைச் சந்தை எனப்படுகிறது. இதில் விற்ற பின் தான் இரண்டாம் சந்தையான பங்குச் சந்தையில் சேர்க்கப்படும் (Listing).

சரி...விஷயத்திற்கு வருவோம். NTPC நிறுவன பங்குகள் இன்று முதல் பொது விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்கலாமா வேண்டாமா?

இதைப் பற்றிய ஒரு சின்ன ஆய்வு

மின் உற்பத்தி செய்யும் நிறுவனமான NTPC நாட்டின் மின் உற்பத்தியில் 27 சதவீதத்தை தன் கையில் வைத்துள்ளது. அது மட்டுமின்றி தற்பொழுது நீர்மின் நிலையங்களை தொடங்குவதற்கும் உத்தேசித்துள்ளது. இது இந்த நிறுவனம் எதிர்காலத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தினால் இந்த நிறுவனத்தின் வருவாய் தேய்ந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இவர்களின் இலவச மின்சார அறிவிப்புகள் இந்த நிறுவனத்தின் லாபத்தை கடுமையாக பாதிக்கும். அதைப் போல இந்த நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறும் மாநில மின்வாரியங்கள் அதற்கான பணத்தை செலுத்த மறந்து விடுகின்றன. ஆனால் இந்தப் பிரச்சனை இப்பொழுது ஒரளவிற்கு தீர்க்கப்பட்டு விட்டது. 2004 ஆம் ஆண்டுக்கான பாக்கி பத்திரமாக வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் 85கோடி பங்குகள் 52 முதல் 62 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பங்குகள் கிடைக்க கூடிய சாத்தியக் குறுகள் குறைவு என்பதால் மும்மை கள்ளச் சந்தையில் 12 ரூபாய் அதிகம் வைத்து விற்கபடுகிறதாம். பங்கு விற்பனை தொடங்கிய சில மணி நேரத்தில் விற்பனைக்கு உள்ள பங்குகளை விட இரண்டு மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்து உள்ளதாம்.

சரி போகட்டும்... நாம் உரியமுறையில் விண்ணப்பிப்போம். கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டால் குடி முழ்க போவதில்லை.

இன்று பங்குச் சந்தையின் நிலை என்ன ?. B.S.E குறியீடு 70 புள்ளிகள் முன்னேறி 5784 க்கும், N.S.E. 20 புள்ளிகள் உயர்ந்து 1815 க்கும் வந்துள்ளது. இந்த அளவில் இருந்து 6000 நோக்கி நகரக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகிறது. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குங்கள். சற்று கவனமாக தெரிவு செய்யுங்கள்.

Leia Mais…
Wednesday, October 06, 2004

ஏற்றங்களும், இறக்கங்களும்

வலைப்பூ இதழில் என்னுடைய வலைப்பதிவுப் பற்றி எழுதிய அன்பு அவர்களுக்கும், இங்கு வந்து பின்னூட்டம் எழுதிய பத்ரி, துளசி, கிறிஸ்டோபர் ஆகியோருக்கும் என்னுடைய நன்றி. இத்தகைய வாழ்த்துக்கள் எழுதுவதற்கு உத்வேகம் அளிக்கிறது.

சூப்பர் ஸ்டார் "அருணாச்சலம்" போன்றவர்களுக்குத் தான் பணத்தை செலவழிப்பது கஷ்டமான ஒன்று. ஆனால் நம்மைப் போன்ற அற்ப உயிர்களுக்கு அது மிக சுலபம். மாத சம்பளம் மாத நடுவிலேயே காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு மாதமும் வரவு செலவு போடுவதும், திடீர் என வரும் செலவுகளால் மண்டையை உடைத்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சம்பாதிப்பதை கட்டிக் காப்பது மிகவும் கடினம். அதனால் தான் நம்மவர்கள் வங்கிகளிலும், அரசாங்க சிறுசேமிப்புகளிலும் பாதுகாப்பாக பணத்தை சேர்த்து விடுகின்றனர். அல்லது அதிக "வட்டி" ஆசையில் நிதி நிறுவனங்களில் கொடுத்து பின்னர் பனகல் பூங்காவில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

வங்கிகளை விட அதிக லாபம் தரக்கூடிய, அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்டு செயல் படுகிற பங்குச் சந்தையை நாம் ஏன் கண்டு கொள்வதில்லை ?

ஒரு சின்ன கணக்கு போடுவோம்

ரூ5000க்கு, வங்கிகளின் வைப்பு நிதியில், ஒரு மாத வட்டி முப்பது ரூபாய்க்கும் குறைவாகத் தான் கிடைக்கும்.

பங்குச் சந்தையில் விப்ரோவின் பங்குகளை உதாரணமாக எடுத்து கொள்வோம்

கடந்த வாரம் இந்த பங்குகளின் விலை - ரூ580 என்ற அளவில் இருந்தது. இன்று அதன் விலை – 630 க்கு மேல்.

9 பங்குகளை கடந்த வாரம் வாங்கி இந்த வாரம் விற்றிருந்தால்
வாங்கும் விலை - 9x580 = 5220
விற்கும் விலை - 9x630 = 5670

பங்குத் தரகு, புதியதாக ஐயா சிதம்பரம் அவர்களின் புண்ணியத்தால் வந்துள்ள பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை கழித்து நிகர லாபமாக வரும் தொகை ரூ425க்கும் மேல்.

இது வங்கிகளின் வைப்பு நிதியைப் போல ஒரே நிலையாக இல்லாமல் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும்
இருக்கும். ஆனால் வங்கிகளை விட அதிக அளவில் லாபம் தரும்.

பங்குச் சந்தையின் இந்த ஏற்ற இறக்கம் தான் பலரின் அச்சத்திற்கு காரணம். இது பங்குச் சந்தையின் இயல்பான தன்மை (Speculation). தக்காளி, வெங்காய விலைப் போலத் தான். ஆனால் நாம் தேர்வு செய்யும் பங்குகளைப் பொருத்து தான் நம்முடைய லாபம் அமையும். நல்ல நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிய வாய்ப்பு இல்லை. அதைப் போல குறுகிய கால முதலீட்டை விட நீண்ட கால முதலீடு இந்த ஏற்ற இறக்கங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

சரி...இப்பொழுது பங்குச் சந்தை எப்படி உள்ளது ? இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்த்தது நடக்க தொடங்கி விட்டது. பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் லாபம் அடையும் பொருட்டு பங்குகளை விற்க தொடங்கியதில் பங்குகளின் விலையில் நேற்று சரிவு ஏற்ப்பட்டது. ரிலயன்ஸ், இன்போசிஸ், சத்யம் பங்குகள் சரிவடைந்தன. நேற்று வரை முன்னேறிக் கொண்டிருந்த விப்ரோ இன்று சற்று சரிந்துள்ளது

எங்கே கிளம்பிட்டீங்க பங்குகள் வாங்கவா ? கொஞ்சம் இருங்க...
பங்குச் சந்தையில் புதியதாக பங்குகளை வாங்க இது உகந்த நேரம் இல்லை. பங்குச் சந்தையை நம் கவனத்தில் இருந்து நகர்த்தாமல் காத்திருப்போம்.

Leia Mais…
Monday, October 04, 2004

பங்குச்சந்தை ஒளிர்கிறதா ?

இன்று பங்குச் சந்தை குறியீடுகள் ஆச்சரியப் படும் வகையில் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 91 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 31 புள்ளிகளும் உயர்ந்தது. தொடக்கத்திலேயே BSE குறியீடு 45 புள்ளிகள் உயர்ந்து, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்ததால் மேலும், மேலும் ஏறிக் கொண்டே இருந்தது.

மாருதி, ரிலயன்ஸ், விப்ரோ, இன்போசிஸ், சத்யம், ONGC பங்குகள் நல்ல முன்னேற்றம் கண்டன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்வது ஒரு நல்ல அறிகுறி.

சில நாட்களில் பல நிறுவனங்கள் தங்கள் அரையாண்டு அறிக்கைகளை வெளியிடும். அது பங்குச் சந்தைக்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, இடையில் அவ்வப்பொழுது சில டெக்னிக்கல் திருத்தங்கள் (Technical corrections) நடக்க கூடும். (அந்த திருத்தம் இந்த வாரமே நடக்க கூடுமோ?) ஆனாலும் தொடர்ந்து முதலீடு செய்வதற்கு பங்குச் சந்தை ஆரோக்கியமான இடம் தான்.

கொஞ்சம் யோசித்து நல்ல பங்குகளாக வாங்கிப் போடுங்கள். லாபம் வந்தால் என்னை வாழ்த்துங்கள். (சரிந்தால் ? … ஆண்டவன் விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியது தான்).

Leia Mais…
Sunday, October 03, 2004

கச்சா எண்ணெய் எச்சரிக்கை

கச்சா எண்ணெய் விலை எகிறிக் கொண்டே இருக்கிறது. இப்பொழுது ஒரு பேரல் (பீப்பாய் ?) $50 என்ற நிலையில் உள்ளது. இந்த விலை ஏற்றம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மந்தப் படுத்தும் என்பதால் பங்குச் சந்தையை பாதிக்கும்.

கடந்த சில வாரங்களாகவே எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே இருந்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு காரணமாக பங்குச் சந்தை குறியீடுகள் ஏறிக் கொண்டே இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கைத் தான் இந்த முதலீடுக்கு முக்கிய காரணம். பண வீக்கம் 8%க்கு கீழ் இருப்பதும், வளர்ச்சி 7%க்கு மேல் இருப்பதும் முதலீட்டாளர்களூக்கு நம்பிக்கை ஊட்டுகிறது

தற்பொழுது மும்பை பங்குச் சந்தை குறியீடு (BSE) 5,675 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை குறியீடு (NSE) 1,775 என்ற உயர் நிலையிலும் இருக்கிறது. கடந்த வாரம் பல துறைகளை சார்ந்த பங்குகள் லாபகரமாக இருந்தன. அதில் குறிப்பிட தகுந்தது கச்சா எண்ணெய் நிறுவனமான - ONGC பங்குகள். கடந்த வாரம் மட்டும் சுமார் 40 ரூபாய்க்கு இந்த பங்குகளின் விலை ஏறியது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இந்த நிறுவனத்திற்கு லாபம் தரும் எனபதால் இந்த நிலை.

அதைப் போல மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், சத்யம், விப்ரோ பங்குகள் நல்ல லாபம் அடைந்தன. இந்த பங்குகள் சரிந்து கடந்த வார இறுதியில் விலை ஏறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த துறைக்கும் கச்சா எண்ணெய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. கடந்த வாரமே ரூ300 ஐ தொட்டு விடும் என எலலோரும் கூறிய டாடா ஸ்டீல் (TISCO) பங்குகள் ரூ280 - 295 க்கும் இடையில் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது.

பங்கு குறியீடுகள் உயர்ந்து காணப்படுவதால், மேலும் உயரக் கூடுமா, சரியக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. பங்குகளின் விலை (Valuations) சற்று அதிக அளவில் தான் உள்ளது. பங்குச் சந்தைக்கு சாதகமான செய்திகள் எதுவும் இல்லாததால், சற்று எச்சரிக்கையாய், கச்சா எண்ணெய் விலை மீது ஒரு கண் வைத்து முதலீடு செய்ய வேண்டும்.

நாளை தொடங்கும் வாரம் ஒரு முக்கியமான ஒன்று. நம்பிக்கையுடன் காத்திருப்போம்

Leia Mais…
Saturday, October 02, 2004

எனது முதல் பதிவு

முதலில் என்ன எழுதலாம் என யோசித்த பொழுது, எனது பங்குச் சந்தை அனுபவத்தை எழுதலாம் என்று தோன்றியது.

"நடக்கும் என்பார், நடக்காது...நடக்காது என்பார், நடந்து விடும்"

இது எதற்குப் பொருந்துமோ இல்லையோ...பங்குச் சந்தைக்கு மிகவும் பொருந்தும்.

ஒரு நான்கு வருடம், ஒரு பெரிய அமெரிக்க stock broking நிறுவனத்தின் செயலிகளை கட்டி மேய்த்திருப்பதன் வாயிலாக பங்குச் சந்தைப் பற்றி அறிந்திருக்கிறேன். அந்த இருமாப்பில் களத்தில் குதித்த பொழுது தான் அது ஒரு புரியாத புதிர் என்று புரிந்தது. அது எனக்கு மட்டும் புதிர் இல்லை, இதில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கும் கூட அப்படித்தான் போலும்.
நான் கணக்கு வைத்திருக்கும் பங்கு நிறுவனம், இந்த பங்குகளை இந்த விலைக்கு வாங்கி இந்த விலைக்கு விற்கலாம் என டிப்ஸ் கொடுப்பார்கள், ஒரு நாள் சில ஆயிரங்கள் கிடைத்த சந்தோசத்தில், அடுத்த நாள் அவர்களின் டிப்சை அப்படியே பின் பற்றினால் கையை கடிக்கும்.
விலை ஏறியது போதும் என்று பங்குகளை விற்ற அடுத்த நிமிடம், விலை இன்னும் சில ரூபாய்கள் எகிறி கடுப்பேற்றும். குறைந்த விலைக்கு வாங்குகிறோம் என்ற எண்ணத்தில் வாங்கிய பங்குகள் வாங்கியவுடன் இன்னும் விலை குறைந்து எப்பொழுது ஏறும் என டென்ஷனுடன் கணினி திரையை பார்த்து வெறுத்து போகும்.

Intra day முறையில் பங்குகளை வாங்கி விற்பது போன்ற டென்ஷனான வேலை வேறு எதுவும் இல்லை.சில நொடிகளில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இழப்பு ஏற்பட்டால் சில மணித்துளிகளில் சில ஆயிரங்கள் காணாமல் போகும்.

வெளிப்புறத்தில் சூதாட்டம் போல தோன்றினாலும் அதன் நுட்பம் அறிந்து, எற்படும் இழப்புகளை சரிக்கட்டி பொறுமையாக மதி நுட்பத்துடன் முதலீடு செய்தால் இது பணத்தை அறுவடை செய்யும் இடம் தான். அடுத்தவர்கள் டிப்சை மட்டும் நம்பாமல், தினசரி செய்திகளையும் அது பங்குச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகளையும் கணிக்க வேண்டும். அந்த நாளில் குறிப்பிட்ட துறைகளையும், பங்குகளையும் நமது இலக்காக கொள்ள வேண்டும். பங்குகளின் ஏறு முகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அது சரிந்தால் எந்த அளவுக்கு சரியும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்(Stop Loss).சரியான நேரத்தில் பங்குச் சந்தையில் நுழைவதும், விற்பதும் ஒரு கலை தான். அது எனக்கு இது வரை கைகூட வில்லை. நீங்கள் அறிந்திருந்தால் சொல்லுங்களேன் ?


சரி...எனக்கு நேரமாகி விட்டது. இன்று ஒரு முக்கிய வேலை இருக்கிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பத்ரி தோன்றுகிறார்.கண்டு மகிழப் போகிறேன். காந்தி ஜெயந்தியன்று என்ன ஒரு பொருத்தமான படம். பத்ரி நாடுக்காக ஆற்றும் சேவைகளையும், தியாகங்களையும் காந்தி ஜெயந்தியன்று கண்டு புல்லரிக்கலாம்.ஒரு பொருத்தமான படத்தை இந்தத் திருநாளில் திரையிடும் சன் டிவிக்கு கோடி நமஸ்காரம்.

Leia Mais…

வாங்க..வாங்க..

எனக்கென்று ஒரு வலைப்பக்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் சில மாதங்களாக மனதில் இருந்தாலும் என்ன எழுதுவது, தொடர்ந்து எழுத முடியுமா போன்ற கேள்விகள் என்னை வில்லனாய் தடுத்து எழுத விடாமல் செய்தன. சரி, யோசித்தது போதும், பொங்கி எழுவோம் என முடிவு செய்து இந்த வலைப்பக்கத்தைத் தொடங்கி உள்ளேன்.

"யார் யாரோ வலைப்பதிவு ஆரம்பிச்சிடுரங்கப்பா" என்று நீங்கள் திட்டுவது காதில் விழுந்தாலும் என் முயற்சியில் இருந்து பின்வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளேன்.

படித்து விட்டு ஒரு வரி விமர்சனம் எழுதி போடுங்கள், நன்றி

Leia Mais…