வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

சசிகுமார் என்கிற நான்...

நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த உலகத்தில் உள்ள ரத்தமும் சதையுமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் மனிதர்கள் வாழும் இடங்களில் நான் தற்பொழுது வாழ‌வில்லை. நான் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் அவ்வாறு எழுதக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறேன். "என் உலகத்தில்" நிகழும் நிகழ்வுகளை எழுத வேண்டும் என்றால் என்னுடைய "தற்போதைய" இருப்பிடத்தை விட்டு வெளியேறியே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறேன்.

வாழ்க்கை நெடியது. பல ஆண்டுகள் கொண்ட இந்த வாழ்க்கையில் நாம் எதையும் திட்டமிட்டு அணுகுவது இல்லை. நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகவில்லை. எதிர்பாராத பல விடயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. என் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களைக் கொண்டே என் வாழ்க்கையை என் அனுபவங்களால் நான் அமைத்துக் கொள்கிறேன். என் அனுபவங்களே என் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், என் அரசியல் கருத்துக்கள் என்றாலும், அதனை என் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்தே நான் பெறுகிறேன்.

நெய்வேலியின் புறநகர்ப் பகுதியான தாண்டவன்குப்பம் என்ற குடிசைப் பகுதியை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலியில் உள்ளவர்களுக்குத் தெரியும். நான் அங்கே தான் பிறந்தேன். தாண்டவன் குப்பத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே. நெய்வேலி டவுன்ஷிப்பில் (Township) வீடு கிடைக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். மொத்தத்தில் இங்கிந்தவர்கள் அடிமட்டத்தில் இருந்தவர்கள். அந்தக் காரணத்தால் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இடம் இழந்தப் பலரும் நெய்வேலியைச் சுற்றிய இத்தகையப் பல குடிசைப் பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வரை என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. நெய்வேலி இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் ஒரு நகரம். ஆனால் நெய்வேலியில் இருக்கும் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையே இருந்தது 1980கள் வரை இருந்தது. கார‌ண‌ம் இந்த‌ப் ப‌குதியில் இருந்த‌ ப‌ல‌ருக்கும் பெரிய‌ வ‌ச‌தி இல்லை. ப‌ல‌ரும் சாமானிய‌ ம‌க்க‌ள். சாமானிய‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி அர‌சாங்க‌ங்க‌ளுக்கோ, அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கோ, எங்கள் நிலத்தைப் பிடுங்கிய நிறுவ‌ன‌ங்க‌ளுக்கோ எந்தக் க‌வலையும் இல்லை. நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட என் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நெய்வேலியில் வீடு இருந்தது. அன்றைக்கு அவர்கள் இருந்த கிராமத்தின் பெயர் இளவரசன்பட்டு. இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமாகவும், அனல்மின் நிலையமாகவும், நெய்வேலி ட‌வுன்ஷிப்பாகவும் இருக்கும் பல கிராமங்களில் இளவரசன்பட்டு கிராமமும் ஒன்று. பலக் கிராமங்களை அழித்து அதில் எழுந்து நிற்கும் நிறுவனம் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். என் பாட்டி இருந்த‌ வீடு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காகப் பறிக்கப்பட்டப் பிறகு அவர்கள் ஆதண்டார்கொல்லை என்ற குடிசைப் பகுதியிலேயே குடி அமர்த்தப்பட்டனர். பிற‌கு தாண்ட‌வ‌ன் குப்ப‌ம் என்ற‌ ம‌ற்றொரு குடிசைப் ப‌குதிக்கு மாறின‌ர். ஆதாண்டார்கொல்லை ப‌குதியை பேச்சுத் தமிழில் ஆண்டாக்கொல்லை என‌ அழைப்பார்க‌ள்.

என் பாட்டி மிகச் சிறிய வயதிலேயே விதவையானவர். நெய்வேலிக்காக நிலத்தை இழந்த என் பாட்டி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கட்டப்பட்ட ஆரம்பகாலங்களில் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாகவே பணிபுரிந்தார். என் அப்பா ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க வில்லை. வாழ்க்கைத் தேவைக்காக வியபாரத்தை என் அப்பா சிறிய வயதிலேயே தொடங்கினார். முதலில் பெட்டிக் கடை, பிறகு சைக்கிள் கடை, டீக்கடை, மளிகைக் கடை எனப் படிப்படியாக உயர்ந்தார். அதனால் நான் பிறந்த பொழுது ஏழ்மையில் பிறக்க வில்லை. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு குடும்பத்திலேயே நான் பிறந்தேன். என் அப்பாவிற்கு ப‌டிப்பில் நிறைய‌ ஆர்வ‌ம் இருந்தும் ஏழ்மையின் கார‌ண‌மாக‌ப் ப‌டிக்க‌வில்லை. அத‌னால் த‌ன் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்தார். அத‌ற்காக‌ எந்த‌ச் செல‌வும் செய்ய‌ சித்த‌மாக‌ இருந்தார்.

படிப்பு தவிர வேறு எதிலும் கவனம் இருக்கக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பல தமிழகப் பிள்ளைகளில் நானும் ஒருவன். ஆங்கில வழிப் படிப்பே சிறந்தப் படிப்பு என்ற தமிழக மக்களின் பொதுவான மனப்பாங்கிற்கு என் அப்பாவும் விதிவிலக்கல்ல. ஆங்கில வழிப் பள்ளியிலேயே என் அப்பா என்னைப் படிக்க வைத்தார். எல்.கே.ஜி முதல் பொறியியல் வரை அவ்வாறே படித்தேன். தாண்டவன் குப்பம் பகுதியில் இருந்த அரவிந்தோ வித்யாலயா தான் நான் படிப்பைத் தொடங்கிய இடம். அக் காலத்தில் இது குடிசைப் பள்ளியாகவே இருந்தது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிக்கு மாறினேன். நெய்வேலி வட்டம் 4ல் இருக்கும் செயிண்ட் பால் பள்ளியில் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் பொறியியல் படித்தேன்.

இயந்திரவியல்(மெக்கானிக்) பொறியியல் படித்தவுடன் எனக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாதாரண மதிப்பெண்களையே பெற்றேன். பலப் போராட்டங்களுக்குப் பிறகே வேலைக் கிடைத்தது. வேலையிலும் படிப்படியாக நகர்ந்து இன்று அமெரிக்காவில் ஒரு முண்ணனி வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொறுப்பில்‌ இருக்கிறேன். இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன். நெய்வேலி தாண்டவன் குப்பத்தில் இருந்து யாரும் எளிதாக இதில் வந்து விட முடியாது. வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒவ்வொரு முடிவையும் சுயமாக எடுத்து, அதனால் அடிபட்டு பாடம் கற்றுக் கொண்டு அடுத்த அடியை வைத்து நகர்ந்து இருக்கிறேன்.

இன்று அமெரிக்காவில் நான் சொகுசாக இருக்கிறேன் என்பதை நான் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் வீட்டில் லேடஸ்ட் தொலைக்காட்சி உள்ளது. இன்னும் சில லேடஸ்ட் அயிடங்கள் உள்ளன‌. ஓரளவுக்கு நல்ல கார் இருக்கிறது. வாடகை வீடு தான் என்றாலும் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருக்கிறேன் என்பதை மறைக்க நான் விரும்பவில்லை. ஆனால் சிறு வயதில் கோடைக் காலத்தில் மிகவும் புழுக்கமான அறையில் மின்சாரம் கூட இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாகப் படுத்தால் தான் ஓரளவிற்கு நிம்மதியாக தூங்க முடியும் என்ற சூழலில் கட்டாந்தரையில் படுத்து, அதில் கிடைக்கும் காற்றிலும் தூங்கியிருக்கிறேன். அவ்வாறு தூங்கியிருப்பதால் இன்னமும் அதைப் போன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

மின்சாரம் கூட இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் படித்தக் காலமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நம்முடைய நிலத்தின் மீது கட்டப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறவே நாம் போராடி இருக்கிறோமே என்ற ஞாபகம் என் நெஞ்சில் இருந்து அகல வில்லை. அத்தகைய அநீதி தானே சட்டிஸ்கரில், ஜார்க்கண்ட்டிலும், ஓரிசாவிலும் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகிறது என்பதை எண்ணும் பொழுது அம் மக்களுடனும் அவர்கள் நிலத்தை பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் நான் அமெரிக்காவில் சொகுசாக‌ இருக்கும் சூழ்நிலையிலும் எழுதத் தோன்றுகிறது.

ஈழப் போராட்டத்தைக் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். அவ்வாறு எழுதுவதால் எனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள் ? குறைந்தபட்சம் எந்த வெகுஜன இதழாவது என் கட்டுரைகளை தான் வெளியிடுமா ? இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும், கருணாநிக்கும் ஜல்ரா அடித்தால் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்ற ஒரு அணிக்காக வக்காலத்து வாங்கினோம் என்ற திருப்தியையாவது அடைய முடியும். ஆனால் இன்று பின்னடைவு நேரிட்ட‌ ஒரு போராட்டத்திற்காகப் பல மணி நேரம் செலவு செய்து எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். எதிர்காலத்திலும் எழுதுவேன். காரணம் அந்தப் போராட்டம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் சிறிய வயதில் இருந்து என்னுள் இருந்து வந்திருக்கிறது. 10 வயதில், எங்கள் ஊரில் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த‌ குரலாக இதனைப் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என்னை இந்தப் போராட்டம் நோக்கி ஈர்த்தது.

விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் என்னுடைய சிறிய வயது ஹீரோக்கள். இதைத் தவிர நெய்வேலிக்கு பக்கத்தில் இருந்த முந்திரிக் காடுகள் தமிழ்தேசியம் பேசியக் காலம் அது. இதுவும் என்னை பாதித்தது. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். பிரபாகரனை எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் கடவுளாகவும் பார்த்த எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன். ஒரு சராசரி தமிழக ஈழ ஆதரவாளன் அவ்வாறே இருக்க முடியும். அது தான் பிரபாகரன் என்ற மனிதன் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடையாளம். நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கும் பொழுது ஈழத்தின் நினைவுகளை எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அதனை எழுதாமல் என்னால் இருக்க முடியாது.

தற்கால வாழ்க்கை சொகுசாக இருக்கலாம். தற்போதைய செகுசான வாழ்க்கைக்கு ஏற்ப நம் கருத்துக்களை அமைத்துக் கொள்ளலாம். பலர் அமைத்தும் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய கடந்தக் காலத்தின் நினைவுகள், தாக்கங்கள், நாம் பார்த்த ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட்டு சென்று விட முடியாது. அந்த நினைவுகளே என்னை போராட்டத்தைக் குறித்து எழுத வைக்கின்றன. அத்தகைய மனிதர்களைப் போன்ற வேறு மனிதர்களைப் பார்க்கும் பொழுது அவர்களையும் பற்றியும் எழுத வைக்கிறது. ஈழத்தின் போராட்டத்தை பார்த்து விட்டு காஷ்மீரின் போராட்டத்தையோ, நாகா மக்களின் பிரச்சனைகளையோ புறந்ததள்ளி விட முடியாது. நெய்வேலியில் நிலம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு சட்டிஸ்கரில் நடக்கும் பிரச்சனைகளை புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு எழுதுவதால் சொல்லப்படும் வாதம், நீ ஈழத்திற்கு போ, சட்ஸ்கருக்கோ போ என்பது. இந்த நுண்ணிய அரசியலை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும், நான் கடந்து வந்த கடந்தக் காலம் என்னைக் கடந்து விடவில்லை. அது என்னுடன் ஒட்டியே வருகிறது. நினைவுகளாக ஒட்டி வருகிறது. என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் நினைவுகளே என்னுடைய கருத்தாக்கங்களை வழி நடத்துகிறது. அந்த எண்ணங்களையே நான் எழுத முடியும்.

வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும்.

முதலில் நாம் எல்லாம் சாமானியத் தனி மனிதர்கள். நம்மைச் சுற்றி நமது குடும்பமும், நம்மை நம்பி இருப்போரும் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை என்பது நமக்கு மட்டும் என்பது அல்லாமல் அவர்களுக்குமானது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வகையில் குடும்பமே முதன்மையானதாகிறது. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்பவுமே வாழ்க்கை அமைகிறது. இந்த வாழ்க்கையை விடுத்து வெளியே சென்று புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது 33வயதில் எளிதானது அல்ல. இது ஒரு வகையில் இயலாமை கலந்து சுயநலம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவம் அவ்வாறு தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்ற பணியையே நான் செய்ய விரும்புகிறேன்.

என்னுடைய எண்ணங்களை எழுதுவதோடு மட்டுமில்லாமல் என்னால் முடிந்த‌தை செய்ய முயன்று கொண்டு தான் இருக்கிறேன். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன‌ போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பின்பற்றவே விரும்புகிறேன். அப்படி நான் பின்பற்ற விரும்புகிறவர்களில் முக்கியமானவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். அவரைப் பற்றி எழுதுவதை அவர் விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர். இதற்காக அவர் செலவிடும் நேரம் அதிகம்.

அமெரிக்காவில் இன்னும் எத்தனையோப் பேர் இது போன்று தங்களால் முடிந்த பல விடயங்களைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழுவது ஒரு வகையில் பலமானதே என்பதைக் கடந்த காலங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஈழத்தமிழர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தனர். நானும் என்னால் முடிந்த சிலவற்றையேனும் கடந்த சில ஆண்டுகளில் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. தமிழ்ச் சார்ந்த விடயங்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

**************

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் எழுத நினைத்தவற்றை முழுமையாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதில் எனக்கு ஒரளவிற்கு திருப்தியும் இருக்கிறது. இனி தொடர்ந்து எழுத முடியும் என நம்புகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணம் நண்பர்களுக்கும், வாசித்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தை ஈழப் போரில் ஆர்ட்டலரிகளுக்கும், செல்லடிகளுக்கும் பலியான மக்களுக்கும், போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஈழப் போராட்டம் சார்ந்த நினைவுகளை அடுத்த வாரமும் தொடர இருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்...

மேலும் படிக்க...

நினைவில் நிற்கும் எட்டு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, ஈழ மக்களுக்காக போராடியது, முன்னாள் பிரதமர்களுடனும், முதல்வர்களுடனும் பழகியது, கல்லூரியில் பேசி பாராட்டைப் பெற்றது என என்னைக் குறித்து நிறைய எட்டுகளை எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால் என்ன செய்வது...அப்படி ஒன்றும் இல்லையே. சுயத்தேவைகளுக்காக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதே அன்றாட வாழ்க்கையாக இருக்கும் பொழுது சுயதம்பட்டம் அடித்து சுயவிளம்பரம் செய்து கொள்ளும் செயலில் எனக்கு விருப்பம் இல்லை.

ஆனாலும் அருணா அவர்கள், நண்பர் மாயன், நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் போன்றோர் என்னை இந்த எட்டு ஆட்டத்திற்கு அழைத்திருப்பதால் ஒரு விதமான தர்மசங்கடமான நிலையில் அவர்களின் மின்னஞ்சல்களை புறக்கணிக்க முடியாத சூழலில் இந்த எட்டு விளையாட்டில் நானும் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வலைப்பதிவுகளில் நடக்கும் இத்தகைய விளையாட்டுக்கள் ஒரு சிலருக்கு வரப்பிரசாதம். தங்களைப் பற்றிய "பிம்பத்தை" வலைப்பதிவுகளில் முன்வைக்க முனைவார்கள். சிலர் நகைச்சுவையாக கலாய்ப்பார்கள், சிலர் தங்களின் வாழ்க்கையை இயல்பாக திரும்பிப் பார்க்கிறார்கள்.

நானும் என் நினைவில் நிற்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

*****

2005ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், என் வாழ்க்கையில் மறந்த முடியாத உன்னதமான தருணம். அதிகாலை குளிரில் சுமார் மூன்று மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்த பொழுது மனம் பலவிதமான எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒரு விதமான அச்சம், எதிர்பார்ப்பு என அனைத்தும் மனதில் இருந்தது. வரவழைக்கப்பட்டிருந்த டாக்சியில் நானும் என் மனைவியும் நியூஜெர்சி Hackensackல் உள்ள Hackensack University Medical Centerக்கு சென்றோம். எங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான ஒரு தருணம் அது. ஆரம்பகட்ட பரிசோதனை எல்லாம் முடிந்து காலை சுமார் 7:59மணிக்கு என்னுடைய முதல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தார்கள். அடுத்த சில நொடிகளில் 8மணிக்கு அடுத்த குழந்தையையும் வெளியில் எடுத்தார்கள். ஆம்.. எங்களுக்கு இரட்டைக்குழந்தைகள். முகத்தில் சில ரத்த துளிகளுடன் வெளியே வந்த என்னுடைய குழந்தைகளின் முகத்தை அருகில் இருந்து பார்க்கும் உன்னதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்னமும் முதன் முதலாக வெளியில் வந்த பொழுது இருந்த என குழந்தைகளின் முகபாவம் என் மனதில் நிற்கிறது. இந்தியாவில் இருந்திருந்தால் என்னை அறுவைச் சிகிச்சை அறைக்குள் நுழையவே அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இந்த வாய்ப்பு உண்மையில் விலைமதிப்பற்றது என்றே சொல்ல வேண்டும்.
என் அம்மாவின் விசா தாமதமாக, இரட்டைக்குழந்தைகளை அடுத்து ஒரு மாதம் நானும் என் மனைவியும் மட்டுமே கவனிக்க நேர்ந்த அனுபவம் சுவாரசியமானது. இன்னும் வாழ்க்கையில் எத்தனை தருணங்கள் வந்தாலும் என்னுடைய குழந்தைகள் பிறந்த அந்த தருணத்திற்கு ஈடாகுமா என்பது சந்தேகமே...

*****

கல்லூரி நாட்கள் என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான நாட்கள். அதுவும் ஒரு நண்பர் குழு கிடைத்து விட்டால் போதும் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இருக்காது. நான் 12ம் வகுப்பில் வாங்கி கிழித்த மதிப்பெண்களுக்கு எனக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. கல்லூரியில் படிப்பதற்கு தான் நுழைந்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு அங்கு அடித்த கூத்துகளும் இனிமையானவை. அதில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல உள்ளன. ஆனால் அடிவாங்காமல் தப்பிக்க ஓடிய ஒரு நினைவு உள்ளது.

எங்கள் கல்லூரி விடுதிக்கு அருகில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. ஒரு நாள் மாலை நண்பர்கள் சுமார் 10 பேருடன் அந்த விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு நண்பன் கடலை நன்றாக விளைந்துள்ளது, பறித்து சாப்பிடலாமா என்றான். வேண்டாம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சிலர் களத்தில் இறங்கினர். பறித்த கடலைகளை உட்கார்ந்து தின்று கொண்டிருந்த பொழுது திடீரென்று தூரத்தில் ஒரு கும்பல் எங்களை நோக்கி உருட்டு கட்டைகளுடன் ஓடிவருவது தெரிந்தது. ஓடிவருவது எங்களை நோக்கி தானா என்பது எங்களுக்கே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு யாரும் அங்கு இல்லாததால் நாங்கள் தான் இலக்கு என்பது எங்களுக்கு புரிந்து நாங்களும் ஓடத்தொடங்கினோம். ஓடிச்சென்று சிக்காமல் விடுதி மாணவர் கூட்டத்தில் கலந்து விட்டோம். அதன் பிறகு கல்லூரியில் விசாரணை, மிரட்டல் இறுதியாக அப்பாலஜி லெட்டர் என வழக்கமான அரங்கேற்றங்கள் நடந்தன. அந்த ஒரு நிகழ்வில் கிடைத்த நல்ல பெயர் நான்கு ஆண்டுகளும் கல்லூரியில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனாலும் வேர்கடலை புடுங்கியதற்காக உருட்டுக்கட்டைகளுடன் ஆட்கள் ஏன் துரத்த வேண்டும் என எனக்கு புரிந்ததேயில்லை. கல்லூரியில் அதையொட்டி பலக் கதைகள் அப்பொழுது உலாவிக்கொண்டிருந்தன.

மேல்மருவத்தூர் கோயில் மீதும், பங்காரு அடிகளார் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக் கோயில் பலருக்கு தனிப்பட்ட வகையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் அது மிகையல்ல. அங்கு தமிழில் தான் மந்திரம் சொல்லப்படும். கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். பெண்கள் மாதவிலக்கு காலத்திலும் கூட கருவறைக்குள் சென்று வழிபடலாம். இவை பல பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் கோயில் மீது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தான் மேல்மருவத்தூர் கோயிலின் வெற்றியும் கூட. இந்து சனாதன தர்மங்களை உடைத்த ஒரு இடம் மேல்மருவத்தூர். அதே சமயத்தில் இந்து மதம் முன்வைத்த மூடநம்பிக்கைகளை முன்வைப்பதில் மேல்மருவத்தூரும் குறை வைத்ததில்லை.

*****

கல்லூரியை முடித்தப் பிறகு தான் கல்லூரி வாழ்க்கையை படிக்காமல் சொதப்பி விட்டோமோ எனப் புரிந்தது. படித்தது இயந்திரப் பொறியியல் என்பதால் அதில் வேலை தேடத் தொடங்கிய பொழுது அதில் "நல்ல" வேலை கிடைப்பது கடினம் என்பது புரிந்தது. அப்பொழுது தான் கணினித் துறை அதிக கவனத்தை பெற தொடங்கி இருந்த நேரம். நண்பர்கள் பலர் Y2K காலத்தில் நல்ல வேலைகளில் செட்டில் ஆகிக் கொண்டிருக்க நான் கணினி படிக்கத் தொடங்கினேன். பிறகு இரு சிறு நிறுவனங்களில் நிரலி எழுத தொடங்கியது தான் கணினித்துறையில் முதல் படி. குறைந்த சம்பளத்தில் சில மாதங்கள் குப்பை கொட்டியப் பிறகு ஐந்து இலக்க சம்பளத்துடன் மற்றொரு வேலையைப் பெற்ற பொழுது கல்லூரியை முடித்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தன. வேலை கிடைத்த பொழுது மகிழ்ச்சியை விட "அப்பாடா" ஒரு வழியாக கிடைத்து விட்டது என்றே நினைக்கத் தோன்றியது

*****

வலைப்பதிவுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. வலைப்பதிவுகள் மூலம் எனக்கு கிடைத்த முக்கிய பலன் - பல நண்பர்கள். பலரிடம் இருந்து அவ்வப்பொழுது வரும் நேசமான மின்னஞ்சல்கள். அந்த வகையில் வலைப்பதிவுகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அதே சமயத்தில் வலைப்பதிவுகள் மூலம் கிடைத்த சில நண்பர்களை இழந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக வருந்தியது இல்லை. கருத்து ஒற்றுமையின் காரணமாக கிடைக்கும் நட்பு சில நேரங்களில் கருத்து வேறுபாடால் முறிவது கூட இயல்பானதே...

அவ்வப்பொழுது வேலைப்பளு காரணமாக சில இடைவேளை இருந்தாலும் வலைப்பதிவுகளை விட்டும் விலகும் எண்ணம் ஏற்பட்டதில்லை. காரணம் சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது இருக்கும் காதல்.

என்னுடைய அப்பா நியூஸ் ஏஜண்ட் என்பதால் பல தினசரிகளும், வார இதழ்களும் வீட்டில் கிடைக்கும். நான் முதன் முதலில் படிக்க தொடங்கியது என்றால் அது தினமணிக்கதிரில் வந்து கொண்டிருந்த தும்பி படக்கதைகள் தான். தினமணி, தினமணிக்கதிர், துக்ளக் போன்றவை வாசிப்பது ஒரு அறிவுஞீவித்தனமான செயல் என்பதான ஒரு பிம்பம் அப்பொழுது இருந்தது. இந்த அறிவுஞீவி பிம்பத்தை என் அப்பாவிடமும், அப்பாவின் நண்பர்களிடமும் இருந்து பெற வேண்டும் என்பதற்காக தினமணிக்கதிர் மற்றும் துக்ளக் போன்றவற்றை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் எனது பள்ளிக்காலத்தில் இருந்தது. தினமணிக்கதிரில் அப்பொழுது பல நல்ல அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வரும். ஆனால் மாநில அரசியலை விட டெல்லி அரசியலுக்கு அதிக முக்கியத்துவத்தை தினமணிக்கதிர் கொடுத்துக் கொண்டிருந்தது. டெல்லி அரசியலுக்காகவே ஒரு தனிப்பக்கம் இருந்ததாக ஞாபகம். அப்பொழுது கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்ததார் என்று நினைக்கிறேன். கஸ்தூரி ரங்கனுக்குப் பிறகு மாலன் ஆசிரியராக பொறுப்பேற்ற பொழுது தான் மாநில அரசியல்களுக்கும் தினமணிக்கதிர் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது என நினைக்கிறேன். தினமணிக்கதிர் தற்பொழுது ரொம்ப அரசியல் வாசனை அடிக்கிறது என என் சித்தப்பா விமர்சித்ததும் ஞாபகத்தில் உள்ளது. அது போலவே "புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பதழ்" என ஒன்றை வெளியிட்டு அதில் முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பது போல முன்நிறுத்தியதும் தினமணிக்கதிர் மீதான எனது அப்போதைய விமர்சனங்கள்.

அது போலவே துக்ளக்கில் வெளியாகிக்கொண்டிருந்த "எங்கே பிராமணன் ?" தொடர், "கூவம் நதிக்கரையினிலே.." என்னும் சோவின் அரசியல் விமர்சனப் பகுதி, தலையங்கம், கேள்வி பதில்கள் போன்றவற்றை படிக்கும் பழக்கம் இருந்தது. இவற்றை படித்தே அதில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகு என்னைப் போன்ற பலர் இருப்பதை நானும் கண்டு கொண்டேன். அந்த வகையில் சோவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

அது போலவே அப்பொழுது வெளியாகிக்கொண்டிருந்த சுப.வீரபாண்டியனின் "இனி" போன்ற மாற்று இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவர்கள் முன்வைத்த நடைமுறைச்சாத்தியம் அற்ற, மக்களின் ஆதரவு இல்லாத தனித்தமிழ்நாடு, தமிழ் தேசியம் குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு.

இந்த இதழ்கள் தவிர, நான் பிறந்து வளர்ந்த நெய்வேலியில் படிப்பதற்கான வசதிகள் அதிகம். நல்ல நூலகம் ஒன்று உண்டு. அது தவிர ஒரு நடமாடும் நூலகத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்தி வந்தது. ஒரு பேருந்து நூலகமாக மாற்றப்பட்டு நெய்வேலியின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த நடமாடும் நூலகம் வரும். சில மணி நேரங்கள் ஒரு இடத்தில் நிற்கும். என் வீட்டின் எதிரிலேயே இந்த பேருந்து நிற்கும் என்பதால் நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பிறகு கல்லூரி சென்ற பொழுது நல்ல நூலங்கள் அங்கு இல்லாததால் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து பிறகு ஒரு கட்டத்தில் வெகுஜன ஊடகங்களை மட்டுமே வாசிக்கும் பழக்கம் என்றளவில் தான் இருந்தது. பிறகு வலைப்பதிவுகளுக்கு வந்தது மறுபடியும் பலவற்றை வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். ஆனால் பங்குச்சந்தை, பொருளாதாரம், அரசியல், சமூகம் என எழுதத்தொடங்கி இது வரை ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்ற எண்ணம் அவ்வப்பொழுது எனக்கு எழுவதுண்டு. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் குறித்து எழுதக்கூடியதாக உள்ளது என்பதால் "கட்டுரை வடிவம்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

*****

ஈழப் போராட்டத்தை சிறு வயது முதல் கவனித்து வருகிறேன். எனக்கு அப்பொழுது 10 அல்லது 11 வயது இருக்கலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனேவுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் ஊர்வலங்கள் தான் என்னை இந்தப் போராட்டம் ஈர்த்த முதல் நிகழ்வு. ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி எரிக்கும் பழக்கம் அப்பொழுது எல்லா ஊர்களிலும் நடக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தமிழகத்தில் இருந்த ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் கலந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்டத்தை கவனிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. இதில் பின்னிப்பினைந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளும் வயது அது அல்ல. என்றாலும் இந்தப் போராட்டம் என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது. விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் எனக்கு பல விமர்சனங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுந்தாலும் இந்தப் போராட்டத்தினை ஆதரிக்கும் எனது கருத்துகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை. வெகுஜன ஊடகங்கள் தமிழகத்தில் இந்தப் போராட்டத்தை திரித்தும், பொய்க்கதைகளை பரப்பியும் வந்ததற்கு "பின்னே" இருக்கும் அரசியல்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது

ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்தன. திலீபனின் மரணம், கிட்டு நடுக்கடலில் கப்பலை வெடிக்கச்செய்து தற்கொலைச் செய்து கொண்டது, யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றியது மற்றும் அவ்வபொழுது போர்களிலும், சிங்கள இராணுவத்தாலும் கொல்லப்படும் அப்பாவி தமிழர்களின் மரணங்கள் என்னை வெகுவாக பாதித்தன.

இன்று ஈழப்போராட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் சூழலில் அம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தப் போராட்டத்திற்கு விரைவில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சிங்கள இனவாதமும், உலக நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை

*****

எட்டு எழுத வேண்டும் என்பது தான் விளையாட்டு, ஆனால் இப்போதைக்கு இது போதும் என்றே நினைக்கிறேன்.

இப்பொழுது இன்னும் சிலரை மாட்டி வைக்கும் படலாம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நான் ஐந்து மட்டும் எழுதியுள்ளதால் ஆறு பேரை மட்டும் அழைக்கிறேன்
வெற்றி
மயிலாடுதுறை சிவா
கார்த்திக்ராமாஸ்
குழலி
டிசே தமிழன்
பொட்"டீ" கடை சத்யா

விளையாட்டின் விதிகள்:

விதிகள் என்பதே உடைப்பதற்கு தான் என்பதால் :)) உங்களுக்கு எதைப் பற்றி எழுத வேண்டுமோ "அந்த எட்டைப்" பற்றி எழுதி விடுங்கள் மேலும் படிக்க...