வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.

பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.

கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்... மேலும் படிக்க...

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன்.
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது.

வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன்.

நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.

புலிகள் மீதான குற்றச்சாட்டு

1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.

அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை.


தமிழ் ஈழம்

ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்


தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?

சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.

நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும்.

நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...
மேலும் படிக்க...

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.

கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான்.

இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.

போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம்.

புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.

தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது.

அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். மேலும் படிக்க...

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.

ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான சோகங்களையும், வேதனைகளையும் நமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மனங்களில் தெரியும் இந்த வேதனையை பிற மொழி பேசுவோரிடம் கொண்டு செல்ல வேண்டும். இனி இந்தியாவையும், தமிழகத்தையும் நம்பாமல் மேற்குலக நாடுகளையே அணுக வேண்டும். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் வகையில் அமெரிக்க அரசியலை புரிந்து கொண்டிருக்கிறேன். எங்கோ நடக்கும் பிரச்சனை இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தெரியவரும் பொழுது தங்களை அந்தப் பிரச்சனையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் 40 எம்பிக்களும் புண்ணாக்கு மூட்டைகளாக டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே உள்ள ஒரு செனட் உறுப்பினருக்கு எழுதும் மின்னஞ்சலுக்கு கூட கரிசனையுடம் பதில் வருகிறது. சில நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலமே அமெரிக்க வெளிவிவகார குழு தலைவரும், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளாரான ஜான் கெரியை சென்றடைய முடிந்திருக்கிறது. அவருடன் இந்தப் பிரச்சனையை குறித்து பேச முடிந்திருக்கிறது.

நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும். தமிழில் ஈழம் குறித்து எழுதப்பட்ட அதே அளவுக்கு கடந்த 20 வருடங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நாம் நம் நிலையை உலகுக்கு தெரியப்படுத்தியிருக்க் முடியும். ஒரு சின்ன கருத்தையாவது ஆங்கிலத்தில் எழுதி வைக்க வேண்டும். அந்த நோக்கத்துடனே சமீப நாட்களில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி இருக்கிறேன்.

கடந்த சில மாத மனதின் ரணங்களை ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன். அந்தக் கட்டுரையை "Eelam crisis - The unsettling conflict of mind" கழுகு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Eelam crisis - The unsettling conflict of mind


மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்

மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 2

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


போர் என்பது தற்காப்பு தாக்குதல் (Defensive), வலிந்த தாக்குதல் (Offensive), தந்திரோபாய பின்நகர்வு (Tactical Withdrawal), சுற்றி வளைப்பு (Flanking maneuver), Tactical Maneuver (தந்திரோபாய நகர்வு) என அனைத்தும் சேர்ந்ததது தான். போரில் ஒரு இராணுவம் இந்த அனைத்து வியூகங்களையும் ஒவ்வொரு கட்டத்திலும் கடைபிடிக்கவே செய்கிறது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வியூகங்களை அமைக்கும் படையே போரில் வெற்றிகளை பெற முடியும்.

தற்போதைய ஈழப் போரில் சிறீலங்கா இராணுவம் பெரிய அளவிலான வெற்றிகளை பெற்றிருக்கிறது. புலிகள் கடுமையான தற்காப்பு போரினை செய்து வருகிறார்கள். புலிகளின் போர் தந்திரங்களை முறியடிக்கும் இராணுவத்தின் வியூகங்களும் வெற்றிக்கு காரணமாக உள்ளது. தற்போதைய ஈழப் போரில் இராணுவத்தின் குறிப்பிடும்படியான வெற்றியாக மடு தேவாலயம் சார்ந்த பகுதிகளுக்கும், அடம்பன் நகருக்கும் நடந்த சண்டைகளை குறிப்பிட முடியும். பல மாதங்கள் இந்தச் சண்டை நீடித்தது.

இங்கு புலிகள் மிகவும் பலமான பாதுகாப்பு வளையங்களை அமைத்து இருந்தனர். கிட்டதட்ட முகமாலையில் இருந்தது போலவே இங்கு ஒரு வலுவான தற்காப்பு அரண் புலிகளால் செய்யப்பட்டிருந்தது. புலிகளின் தற்காப்பு அரண் பல அடுக்குகளை கொண்டது. நன்றாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் ஒரு அரண். அதற்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருக்கும். கண்ணி வெடிகள் என்னும் பொழுது அது ஒரு பொதுப்படையான பெயர். ஆனால் அதிலே பல விதமான வகைகள் உள்ளன. Chain Mines எனப்படுவது ஒரு வகையான கண்ணி வெடி. இதில் ஒரு வெடி வெடிக்கத் தொடங்கினால் தொடர்ச்சியாக அதனுடன் பல இடங்களில் பிணைக்கப்பட்டிருக்கும் பல வெடிகள் வெடித்து மிகவும் பலமான சேதங்களை படைகளுக்கு ஏற்படுத்தும். இது தவிர Booby trap என்ப்படும் பொறிகளும் புலிகளால் பயன்படுத்தப்பட்டன. இந்த பொறிக்குள் சிக்கும் படைகள் கடுமையான பாதிப்புகளை அடைய நேரிடும்.

புலிகளின் பதுங்கு குழிகளை கைப்பற்ற வேண்டுமானால் இந்த வளையத்தைக் இராணுவம் கடந்து செல்ல வேண்டும். அடம்பன் பகுதியில் இந்த வளையத்தை கடந்து செல்லவே முடியாத சூழ்நிலை இராணுவத்திற்கு ஏற்பட்டது. இந்த வளையத்தில் சிக்கி பல இராணுவத்தினர் தங்கள் கால்களை இழக்க நேரிட்டது. பலர் இறந்தனர். இது தவிர தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தை தாக்க புலிகள் ஸ்னைப்பர்களை (Sniper) பயன்படுத்தினர். தூரத்தில் இருக்கும் இலக்குகளை மிகவும் சரியாக குறி பார்த்து சுடுவதே ஸ்னைப்பர் தாக்குதல். எல்லா இராணுவத்திலும் ஒரு தனிப் பிரிவே இதற்கு உண்டு. புலிகள் அமைப்பிலும் உள்ளது. தங்கள் இலக்குகளை நோக்கி வரும் இராணுவத்தினரை சுடுவதற்கு இந்த ஸ்னைப்பர்களை புலிகள் பயன்படுத்தினர்.

இப்படியான தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதிகளில் இராணுவத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. பல மாதங்களாக இந்த சண்டை நடந்தது. புலிகளின் இந்த அரண்களை உடைத்து இராணுவம் முன்னேறும் பொழுது தங்கள் நிலைகளில் இருந்து புலிகள் பின்வாங்கி விடுவார்கள். ஆரம்பத்தில் இராணுவத்தின் நோக்கம் புலிகளின் எண்ணிக்கையை குறைப்பது என்றளவில் இருந்ததால், புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடும் உத்தியை கடைப்பிடித்தனர். புலிகள் இராணுவம் முன்னேறும் பொழுது பின்வாங்கி விடுவார்கள். பிறகு இராணுவத்தை நோக்கி கடுமையான ஆர்ட்டிலரி தாக்குதலை தொடுப்பார்கள். புலிகளின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இராணுவம் பின்வாங்க வேண்டிய சூழ்நிலை நேரிடும். இப்படியான சூழலில் ஒரு இடத்தை இராணுவம் கைப்பற்றுவதும், பின் அதனை புலிகள் கைப்பற்றுவதும், பின் இராணுவம் கைப்பற்றுவதும் என மாறி மாறி சூழ்நிலை நிலவி வந்தது.

அப்போதைய செய்திகளை தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு இது தெரியும். அடம்பன் நகரை பிடித்து விட்டோம் என இராணுவம் கூறும். பின் சிறிது காலம் கழித்து மறுபடியும் அடம்பன் நகரை பிடித்து விட்டோம் எனக்கூறுவார்கள். இடையிலே அவர்கள் புலிகளிடம் இழந்தது செய்தியாக வெளியாகாது. இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருந்த சூழ்நிலை ஒரு விதமான தேக்க நிலையை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கள் தந்திரோபாயத்தை மாற்ற வேண்டிய தேவை சிறீலங்கா இராணுவத்திற்கு ஏற்பட்டது.

புலிகளின் தற்காப்பு வியூகத்தை உடைக்க மூன்று திசைகளில் இருந்து அடம்பன் நகரை நோக்கி இராணுவம் படிப்படியாக நகர தொடங்கியது. சிறீலங்கா இராணுவத்தின் Flanking maneuver எனப்படும் சுற்றிவளைப்பு காரணமாக புலிகள் அடம்பன் நகரில் இருந்து பின்வாங்க நேரிட்டது. இங்கு இராணுவத்தை எதிர்த்து புலிகள் பதில் தாக்குதலை தொடுத்து இருக்கலாம். ஆனால் அது புலிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். எனவே புலிகள் தந்திரோபாயமாக பின்நகர்ந்தார்கள். அடம்பன் இராணுவம் வசம் வந்தது. அதற்கு பிறகு பல இடங்கள் மிக வேகமாக இராணுவம் வசம் வந்தடைந்தது.

**********

அடம்பன் நகர் சார்ந்த பகுதிகளிலும், முகமாலை பகுதிகளிலும் புலிகளின் தற்காப்பு வியூகம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் இருந்தது. ஆனால் அடம்பனை கைப்பற்றிய சிறீலங்கா இராணுவத்தால் முகமாலையை ஏன் கைப்பற்ற முடியவில்லை ?

ஈழத்தில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போருக்கும், கடந்த காலங்களில் ஈழத்திலும், பிற நாடுகளில் நடைபெற்ற போருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக போரிட்டு வெல்வதை காட்டிலும் அதனை சுற்றிவளைத்து எதிரியை நிலைகுலைய வைப்பது ஒரு போர் தந்திரம். இதைத் தான் Flanking maneuver என்கிறார்கள். உதாரணமாக சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த பொழுது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி தங்களுக்கு பாதகமாக இருக்கும் என நினைத்தார்கள். எனவே அந்த மலைப்பகுதிகளுக்கு சென்று தாக்குதல் நடத்தாமல், அந்த மலைப்பகுதியை வேறு வகையில் சுற்றி வளைத்து அங்கு செல்லக்கூடிய வழிகளை அடைத்தார்கள். இதன் காரணமாக சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. மூன்றாம் ஈழப் போரில் கூட புலிகள் ஆனையிறவை "ஓயாத அலைகள் - 3" தாக்குதலில் இவ்வாறே வென்றார்கள். இரண்டாம் உலகப் போரில் நடந்த ஐ ஆலமெய்ன்(El Alamein) சண்டையும் அவ்வாறானதே.

தற்போதைய ஈழப் போர் வியூக அமைப்பும், ஐ ஆலமெய்ன் வியூக அமைப்பும் பெரும்பாலும் ஒப்பிடக்கூடியதாகவே உள்ளது. ஐ ஆலெமெய்ன் போரில் ஜெர்மனி-இத்தாலி அச்சுப் படைகள் மிக நீண்ட ஒரு தற்காப்பு அரணை அமைத்து இருந்தார்கள். இந்த தற்காப்பு அரண் என்பது மிக நீண்ட பதுங்கு குழிகளை கொண்டதாக அமைந்து இருந்தது. சுமார் 40கி.மீ நீள பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. இந்த பதுங்கு குழிகளுக்கு முன்பாக கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டன. பதுங்கு குழிகளுக்கு பின்புறமாக படைவீரர்களும், ஆர்ட்டலரிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதனைச் சார்ந்து நடந்த சண்டையில் அச்சுப்படைகளின் வியூகத்தை உடைத்து பிரிட்டன் - பிரான்சு உள்ளிட்ட நேச நாடுகள் வெற்றி பெற்றன. அச்சு படைகள் எதிர்பார்த்திராத திசையில் இருந்து நுழைந்து நேச நாடுகள் அந்த தாக்குதலை நடத்தின. எதிர்பாராத திசையில் இருந்து எதிர்பாராத தாக்குதல் என்பது தான் பல இராணுவ வெற்றிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அடம்பனிலும் சிறீலங்கா இப்படியான ஒரு வெற்றியை தான் பெற்றது. புலிகள் எதிர்பாராத வகையில் மூன்று திசையில் இருந்து அடம்பனை சிறீலங்கா இராணுவம் சுற்றி வளைத்தது. ஆனால் முகமாலையில் சிறீலங்கா இராணுவத்தால் அதனை செய்ய முடியவில்லை. ஏனெனில் முகமலையில் Flanking Maneuverability க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. முகமாலை வெறும் 7 கி.மீ அகலம் கொண்ட குறுகலான நிலப்பகுதி. சுற்றிலும் கடலும், கடனீரேரிகளும் உள்ளன. சுற்றி வளைப்பதற்கான வாய்ப்பு இங்கே மிகவும் குறைவு. சுற்றி வளைக்க வேண்டுமானால் தென் பகுதியில் இருந்து நுழைந்து கிளிநொச்சி-பரந்தன் - பூநகரி போன்ற பகுதிகளை பிடிக்க வேண்டும். அதைத் தான் தற்பொழுது சிறீலங்கா இராணுவம் முனைந்து வருகிறது. கிளிநொச்சி-பரந்தன்-ஆனையிறவு வழியே செல்லும் A9 நெடுஞ்சாலை தான் தற்போதைய போரின் இலக்கு.

***************

புலிகள் தற்பொழுது பெரும்பாலும் தற்காப்பு தாக்குதல்களையே செய்து வருகிறார்கள். புலிகள் ஏன் தற்காப்பு தாக்குதல்களை நீண்ட காலமாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.



தற்காப்பு தாக்குதலுக்கும், வலிந்த தாக்குதலுக்கும் இருக்கும் பெரிய வேறுபாடு தாக்குதலுக்கு தேவைப்படும் ஆட்பலம். ஒரு மிக பலமான தற்காப்பு வியூகத்தை உடைக்க 5:1 என்ற விகிதத்தில் வலிந்த தாக்குதலுக்கு கூடுதல் படையினர் தேவைப்படுகின்றனர். அது போல தற்காப்பு வியூகத்திற்கு அனுபவம் மிக்கவர்கள் மட்டுமே தேவையில்லை. அனுபவம் இல்லாதவர்களை கூட "நல்ல பயிற்சியுடன்" தற்காப்பு போரில் களம் புகுத்த முடியும். ஆனால் வலிந்த தாக்குதலுக்கு மிகவும் கூடுதல் பலம் தேவைப்படுகிறது. போர் சார்ந்த மதி நுட்பமும், அனுபவமும் தேவைப்படுகிறது.

தற்பொழுது முகமாலை, கிளிநொச்சி, பரந்தன், முல்லைத்தீவு என பல முனைகளில் நடைபெறும் போருக்காக தன்னுடைய வலிமையான படையணியை இராணுவம் களத்தில் புகுத்தியுள்ளது. புலிகள் தங்களுடைய வலுவான கமாண்டோ படையணிகளான சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவற்றை போரில் புகுத்தவே இல்லை. They are kept in Reserve. இந்த சூழ்நிலையில் இராணுவம் தொடர்ச்சியாக தங்களுடைய மிக வலிமையான படையணிகளை இந்தப் போரில் புகுத்தி கொண்டிருக்கும் சூழ்நிலையில், போர் நீண்ட காலம் நீடிக்கப்பட்டால் இராணுவம் தன்னுடைய முக்கிய படைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்ய நினைக்கின்றனர். இது தவிர போர் ஏற்படுத்தும் உளவியல் கூறுகளும் (Stress, Psychological Trauma) இராணுவத்திற்கு ஏற்படும்.

இராணுவம் தொடர்ச்சியான வலிந்த தாக்குதல்களில் தங்களுடைய அனுபவம் மிக்க படையணிகளை இழக்கும் பொழுது எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இராணுவம் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இராணுவம் Attrition warfare என்பதை முதலில் முன்னிறுத்தினாலும், புலிகள் தற்பொழுது கிளிநொச்சியில் தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் செய்வதும் ஒரு வகையில் Attrition warfare தான். இராணுவத்தின் பலத்தை தங்களுடைய தற்காப்பு வியூகம் மூலமே குறைத்து விடலாம் என புலிகள் நினைக்கிறார்கள். தொடர்ச்சியான இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிப்பதும், அவ்வாறு முடியாத சூழ்நிலையில் பின்நகர்ந்து வேறு இடத்தில் புதிய தற்காப்பு அரண்களை அமைப்பதும் புலிகளின் தந்திரோபயமாக உள்ளது.

கடந்த காலங்களில் கூட யாழ்ப்பாணத்தை நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறிய பொழுது புலிகள் இவ்வாறே பின்வாங்கினர். ஆனால் பின்வாங்குதல் என்பது இரணுவம் நுழைய ஆரம்பித்தவுடன் உடனே பின்வாங்கி விடுவதல்ல. புலிகள் எப்பொழுதுமே முன்னேறி வரும் இராணுவத்தை எதிர்த்து தற்காப்பு தாக்குதல் தொடுத்து பின்வாங்கி விடுவார்கள். அவ்வாறு தற்காப்பு தொடுக்கும் பொழுது இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்திக் கொண்டும், தங்களுடைய படையணியை தற்காத்துக் கொண்டும் பின்வாங்குவது புலிகளின் வியூகம். இந்தப் போரில் கூட அவர்களின் நோக்கம் அது தான். யாழ்ப்பாணம் கடனீரேரி தொடக்கம், இரணைமேடு வரை ஒரு நீண்ட பாதுகாப்பு அரணை கிளிநொச்சி-பரந்தனை பாதுகாக்க புலிகள் அமைத்துள்ளனர். இந்த பாதுகாப்பு அரணை உடைக்கவே தற்பொழுது பெரும் சண்டை நடந்து வருகிறது. இந்த பாதுகாப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்துவது புலிகளின் நோக்கம். இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றினால் கூட பலத்த சேதங்களைப் பெற்ற பிறகே கைப்பற்றக்கூடிய சூழ்நிலை தான் உள்ளது.

புலிகளின் இந்த வியூகத்தை சிறீலங்கா இராணுவம் உணர்ந்தே உள்ளது. கடந்த வாரம் நடந்த போரில் அதிகம் பயிற்சி பெறாத பல இராணுவத்தினர் புகுத்தப்பட்டுள்ளனர். அது போல புலிகளின் தற்காப்பு அரணை உடைக்க ஒரே நேரத்தில் மிகவும் அசுர பலத்தை பல முனைகளில் பிரயோகிக்க வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். அதன் முன்னோட்டம் தான் கடந்த வாரம் நடைபெற்றது.

பல முனைகளில் அதிகளவில் இராணுவத்தினர் ஒரே நேரத்தில் புலிகளை தாக்கும் பொழுது புலிகளிடம் பல முனை தாக்குதலை ஒரே நேரத்தில் சமாளிக்க ஆயுத பலம், ஆர்ட்டிலரி பலம் போன்றவை இல்லை என்பது இராணுவத்தின் கணக்கு. கடந்த வாரம் சுமார் 7000 இராணுவத்தினர் பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபடுத்த பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்யும் பொழுது புலிகளை ஒரே நேரத்தில் நிலைகுலைய செய்ய முடியும் என இராணுவத்தினர் நம்புகின்றனர். இதில் இராணுவத்திற்கு சாதகங்களும் உள்ளன. பாதகங்களும் உள்ளன. கடந்த வாரம் இராணுவம் பலத்த இழப்புகளை எதிர்கொண்டது. என்றாலும் இத்தகைய தொடர் தாக்குதல்களை அடுத்து வரும் நாட்களில் எதிர்பார்க்க முடியும்.

இராணுவத்தின் இத்தகைய வியூகம் புலிகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. தங்களுடைய தற்காப்பு தாக்குதலை நீண்ட நாட்களுக்கு கடத்த முடியாத நிலை புலிகளுக்கு ஏற்படும். அப்படியான சூழ்நிலையில் புலிகள் தங்கள் பதில் தாக்குதலை தொடுக்க வேண்டும். புலிகள் தற்பொழுது அதைத் தான் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.

இதில் வெற்றி தோல்விகள் பல விடயங்களைப் பெறுத்து உள்ளது. அந்த விடயங்களை அடுத்து வரும் பகுதிகளில் எழுத உள்ளேன்.

படங்கள் : dailymirror.lk
References : sundaytimes.lk, thesundayleader.lk, transcurrents.காம் மேலும் படிக்க...

கிளிநொச்சி போர் - ஒரு போரியல் பார்வை - 1

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


ஈழத்திலே நான்காவது ஈழப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. தற்போதைய சூழலில் புலிகள் பலவீனமாக உள்ளனர் என்பதாக சிறீலங்கா அரசு கூறி வருகிறது. புலிகள் தங்கள் வசம் இருந்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை இழந்துள்ள சூழலில் இந்தக் கருத்தை பல போர் ஆய்வாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழர்கள், புலிகள் பலவீனமாக இல்லை, இது அவர்களின் தந்திரோபாய பின்நகர்வு மட்டுமே என கூறி வருகின்றனர். புலிகள், தங்கள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை இழந்துள்ள சூழ்நிலையில் தமிழர்களின் இந்த வாதம் வெறும் நம்பிக்கையாகவே பலருக்கும் தெரிகிறது. கடந்த காலங்களில் இருந்த சூழ்நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளதாக சிறீலங்கா கூறுகிறது. எனவே போரின் போக்கினை கடந்த காலங்களில் மாற்றியது போல தற்பொழுது புலிகளால் மாற்றி விட முடியாது என சிறீலங்கா அரசு நம்புகிறது. இதற்கு சிறீலங்கா முன்வைக்கும் காரணங்களும் வலுவாகவே உள்ளது.

புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு, கடந்த மூன்று மாதங்களாக கிளிநொச்சியை கைப்பற்ற நடக்கும் இந்தப் போரில் கடுமையான சேதங்களை சிறீலங்கா இராணுவம் இந்த வாரம் அடைந்திருக்கிறது. இந்த வாரம் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட படையினரை சிறீலங்கா இராணுவம் இழந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட படையினர் பலத்த காயங்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் கிளிநொச்சிக்காக நடக்கும் இந்தப்போரினை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஸ்டாலின்க்ரேட் போருடன் (The Battle of Stalingrad) இந்திய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான பி.ராமன்ஒப்பிடுகிறார் . பி.ராமன் இவ்வாறு கூறுவதற்கு முன்பாகவே ஈழத்தமிழர்கள் கிளிநொச்சியை ஸ்டாலின்க்ரேடுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் கிளிநொச்சி ஸ்டாலின்க்ரேட் ஆகும் வாய்ப்பு குறைவு எனக்கூறிய பி.ராமன் டிசம்பரில் அதனை ஒப்புக்கொண்டுள்ளார் போலும்.

The Battle of Stalingrad என்பது இரண்டாம் உலகப்போரில் சோவியத்யூனியனில்இருந்த ஸ்டாலின்க்ரேட் நகருக்காக நடந்த சண்டை. சோவியத்யூனியன் படையினருக்கும், ஜெர்மனியின் நாஸிப் படையினருக்கும் இடையே இந்தப் போர் நடைபெற்றது. இந்தப் போரினை இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக கூறுவார்கள். சுமார் 6 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த சண்டையில் ஸ்டாலின்க்ரேட் நகரத்தை இன்று கைப்பற்றுவோம், நாளை கைப்பற்றுவோம் எனக்கூறிக்கொண்டே இருந்த நாஸிப் படையினர், இறுதியில் தோற்றுப் போயினர். இந்தப் போர் இரண்டாம் உலகப்போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

கிளிநொச்சி மற்றொரு ஸ்டாலின்க்ரேட் ஆக முடியுமா ? தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் நினைத்தது போல கிளிநொச்சி வெற்றி அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை கிளிநொச்சி போர் தெளிவுபடுத்தி வருகிறது.

நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் ஆய்வாகவே இந்தக் கட்டுரை தொடரை எழுத இருக்கிறேன். என்றாலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த வேண்டும். எனக்கு இராணுவம் குறித்து அதிகம் தெரியாது. ஈழத்திலே நடக்கும் போர் குறித்த ஒரு சக தமிழனின் அச்சம்/கவலை இவற்றுடனே இந்தப் போரினை கவனித்து வருகிறேன். அது சார்ந்த விடயங்களை தேடி படிக்கிறேன். அவ்வாறு கிடைத்த தகவல்களை என்னுடைய கருத்துகளுடன் முன்வைப்பது தான் இந்தக் கட்டுரை தொடரின் நோக்கம்.

*********

கிளிநொச்சி போர் குறித்து பார்ப்பதற்கு முன்பு இந்தப் போர் ஆரம்பத்தில் தொடங்கிய சூழலை கவனிக்க வேண்டும்.

Attrition warfare என்பது எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒரு போர் நுட்பம். எதிரியின் பலத்தை படிப்படியாக குறைக்கும் பொழுது போரிடும் பலத்தை எதிரி இழக்கும் பொழுது வெற்றி கிடைக்கும். இந்த நுட்பத்தை தான் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்டது.

புலிகளின் பலத்தை படிப்படியாக குறைப்பது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. புலிகளின் பலம் என்பது அவர்களின் போர் வீரர்கள், ஆயுதங்கள் போன்றவை. எனவே முதலில் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழியை சிறீலங்கா இராணுவம் தடுக்க முனைந்தது. புலிகளுக்கு முல்லைத்தீவு கடல்வழியாகவே ஆயுதங்கள் வரும். இந்த வழியை அடைப்பது தான் சிறீலங்கா அரசின் முதல் நோக்கமாக இருந்தது. இந்தியா/அமெரிக்கா போன்ற நாடுகள் அளித்த அதிநவீன உளவு நுட்பங்கள் மூலம் புலிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்த பல கப்பல்களை சிறீலங்கா கப்பற்படை அழித்தது. இதனால் புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் முக்கிய வழி அடைக்கப்பட்டது. இது புலிகள் தொடர்ந்து போரிடும் வலுவை குறைத்தது.

அடுத்த இலக்காக புலிகளின் முக்கிய முகாம்கள், ஆயுதக்கிடங்குகள் போன்றவற்றை விமானங்கள் மூலம் குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் புலிகளின் பல முகாம்களும், ஆயுதக்கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பல இடங்கள் பொதுமக்கள் உள்ள இடங்களே என புலிகள் கூறுகின்றனர். புலிகளின் மறைவிடம் என்று கூறி ஆதரவற்ற குழந்தைகள் இருந்த செஞ்சோலை இல்லத்தை சிறீலங்கா இராணுவம் தாக்கியது போன்ற துயரமான சம்பவங்கள் பல நிகழ்ந்தன என்பதை மறுக்க முடியாது.

இதையெடுத்து புலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியை இராணுவம் மேற்கொண்டது. சுமார் 10,000 புலிகளை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறுகிறது. எப்படி இந்த எண்ணிக்கை முன்னிறுத்தப்படுகிறது என்று பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் வியூகம் நமக்கு புரியும். கடந்த காலங்களில் புலிகள் வசம் இருந்த இடங்களை கைப்பற்றுவதற்காக மிகப் பெரிய அளவிலான தாக்குதலை இராணுவம் தொடுத்து உள்ளது. இதனால் இராணுவத்தின் முன்னேற்றத்தை தங்களின் வியூக அமைப்பினால் புலிகள் முறியடித்து உள்ளனர். இராணுவத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆனால் தற்போதைய போரில் பொன்சேகா சிறீலங்கா இராணுவத்தின் வியூகங்களை மாற்றி அமைத்தார். பெரும் அளவிலான படையெடுப்புகள் எதையும் அவர் முன்னெடுக்கவில்லை. மாறாக சிறு குழுக்களை கொண்ட படைகளை தான் தாக்குதலில் பயன்படுத்தினார். ஆனால் தாக்குதல் தொடர்ச்சியாக இருக்கும். ஒரு சிறு குழு புலிகளின் முன்னரங்கப்பகுதிகள், பதுங்கு குழிகளை தாக்கும். தாக்கும் படைக்கு புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை பிடிக்கும் நோக்கம் இருக்காது. ஆனால் அவர்களின் இலக்கு புலிகளின் பலத்தை குறைப்பது. அதனால் புலிகளின் இலக்குகளை தாக்கி விட்டு பின்வாங்கி விடுவார்கள். இதனை தினமும் செய்யும் பொழுது புலிகளின் எண்ணிக்கை குறையும். ஆயுதங்களும் குறையும். இவ்வாறு படிப்படியாக குறைக்கப்பட்டு பின் ஒரு மிகப்பெரிய தாக்குதலை தொடுப்பது பொன்சேகாவின் வியூகமாக இருந்தது. புலிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைக்கப்பட்டு ஆயுதங்கள் வரும் வழிகளும் தடைப்பட்டு விட்ட நிலையில் புலிகள் பலம் இழப்பார்கள் என்பது தான் பொன்சேகாவின் வியூக அமைப்பு.

இதன் மூலமே தினமும் பல புலிகள் கொல்லப்பட்ட நிலையில் புலிகளின் பலத்தில் பெரும்பகுதியை தாங்கள் குறைத்து விட்டதாக சிறீலங்கா இராணுவம் கூறுகிறது.

பொன்சேகாவின் வியூக அமைப்பு இவ்வாறு இருந்தது என்றால் புலிகளின் வியூகம் இதனை எதிர்கொள்ளவே செய்தது. பொன்சேகாவின் வியூகத்திற்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களையும் புலிகள் அமைத்திருந்தனர்.

*********

புலிகள் போன்ற சிறு கொரில்லா அமைப்பு ஒரு மரபு சார்ந்த இராணுவத்தை எதிர்கொண்டு வருகிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புலிகள் மேற்கொள்ளும் "பலமான"வியூகங்கள் தான். இதனை சிறீலங்கா இராணுவத்தினரும், இந்திய இராணுவத்தினருமே ஒப்புக் கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக நடந்த மூன்றாவது ஈழப் போரில் புலிகள் அடைந்த வெற்றிகளே இதற்கு சாட்சிகளாக விளங்குகின்றன.

ஆனையிறவு படைத்தளம் மீது புலிகள் கொண்ட வெற்றியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க முடியாது. ஆனையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை வன்னி பெருநிலத்துடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு தான் ஆனையிறவு படைத்தளம் என்ற சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் பிரபாகரன். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை கடந்தப் போரில் பெற்றனர்.

ஆனையிறவை இழந்தது சிறீலங்கா இராணுவத்திற்கு மிகப் பெரிய உறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. இம் முறை நான்காவது ஈழப் போர் தொடங்கிய பொழுது சிறீலங்கா இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு படைத்தளத்தை கைப்பற்றுவது என்பதாகவே இருந்தது. ஆனையிறவுக்கும், சிறீலங்கா இராணுவத்தின் முதல் முன்னரங்கப்பகுதியான முகமாலைக்கும் இடையேயான தூரம் வெறும் 14 கி.மீ தான். இந்தப் பகுதி மிகவும் குறுகலான ஒரு நிலப்பகுதி. கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையிலான இந்தப் பகுதியின் அகலம் வெறும் 7கி.மீ தான். கிளாலி முதல் முகமாலை வரை ஒரு பகுதியும், நாகர்கோவில் அடுத்தும் உள்ளது (படத்தில் பார்க்கலாம்)



முகமாலையில் இருந்து ஆனையிறவை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு முறை இராணுவம் முன்னேற முனைந்த பொழுதும் புலிகள் மிக பலமான ஒரு பதில் தாக்குதலை தொடுத்தனர். இதனால் தங்கள் நிலைகளில் இருந்து இராணுவத்தால் முன்னேற முடியாத சூழல் தான் நிலவி வந்தது. இன்றைக்கும் நிலவி வருகிறது. கடந்த வாரம் கூட இராணுவம் முன்னேற முனைந்த பொழுது மிகவும் கடுமையான சேதங்களை அடைந்தது.
சிறீலங்கா இராணுவ நிலைகளில் இருந்து 14 கி.மீ. தூரம் கொண்ட ஆனையிறவை நெருங்க முனைந்த சிறீலங்கா இராணுவம், முகமாலையில் சில மீட்டர் தூரங்களே கொண்ட புலிகளின் முதல் முன்னரங்கப்பகுதிகளையே நெருங்க முடியவில்லை.

ஆரம்பகாலங்களில் இருந்தே இராணுவத்தின் நோக்கம் ஆனையிறவு தான். கிளிநொச்சி புலிகளின் தலைநகரம் என்பதாக கூறப்பட்டாலும், கிளிநொச்சிக்கு பெரிய இராணுவ முக்கியத்துவம் இல்லை. ஆனையிறவுக்கே அதிக முக்கியத்துவம் உள்ளது. தற்பொழுது நடந்து வரும் போர் கூட கிளிநொச்சிக்கானது என்பதை விட ஆனையிறவு நோக்கியே என கூற முடியும். ஆனையிறவை முகமாலையில் இருந்து கைப்பற்ற முடியாத இராணுவம் இப்பொழுது தென்பகுதிகளில் இருந்து பிடிக்க முனைகிறது. பரந்தன், கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகள் கைப்பற்றபட்டால் இராணுவத்திற்கு ஆனையிறவை கைப்பற்றுவது சுலபமாக இருக்கும். பூநகரி கைப்பற்ற பட்ட நிலையில் A9 நெடுஞ்சாலையில் இருக்கும் பரந்தன், கிளிநொச்சி போன்றவையும் இராணுவம் வசம் வந்தால் ஆனையிறவு இலக்கு சுலபமாகி விடும். அவ்வாறு நேர்ந்தால் புலிகள் பின்வாங்கி முல்லைத்தீவு பகுதிக்கு செல்ல நேரிடும்.

இது தான் இராணுவத்தின் நோக்கம்.

ஆனையிறவு புலிகள் வசம் இருக்கும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது.

புலிகள் வசம் இருந்த இடங்களில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய இராணுவம், ஏன் முகமாலை தொடக்கம், ஆனையிறவு வரையிலான 14 கி.மீ கொண்ட இடத்தை கைப்பற்ற முடியவில்லை ? முகமாலையில் நடந்த பல சண்டைகளில் இராணுவம் சுமார் 1000பேரை இழந்திருக்க கூடும். பலர் காயம் அடைந்துள்ளனர். இங்கு தான் நாம் புலிகளின் தற்காப்பு வியூகங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

புலிகளின் முகமாலை தற்காப்பு வியூகத்தை இரண்டாம் உலகப்போரில் நடந்த ஆலமெய்ன்(El Alamein) போரில் அமைக்கப்பட்டிருந்த தற்காப்பு வியூகங்களுடன்ஒப்பிடுகிறார்கள் . ஐ ஆலமெய்ன் எகிப்தில் இருக்கும் ஒரு சிறு நகரம். இந்தப் பகுதியில் நடந்த போர் இரண்டாம் உலகப்போர் அதிகம் பேசப்பட்டது. அச்சு அணி நாடுகளான ஜெர்மனி-இத்தாலி படைகளுக்கும், நேசநாடுகளாக இங்கிலாந்து, பிரான்சு போன்ற படைகளுக்கும் இடையே நடைபெற்றஇந்தப் போரில் நேச நாடுகள் வெற்றி பெற்றன. "Before Alamin we had no victory and after it we had no defeats" என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

முகமாலையில் அத்தகைய ஒரு தற்காப்பு அமைப்பினை புலிகள் அமைத்துள்ளதால் தான் மிகக் குறுகிய அந்த நிலப்பகுதியை பல முறை முனைந்தும் இராணுவத்தால் கைப்பற்ற முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து புலிகளின் அந்த வியூக அமைப்பை உடைக்க இராணுவம் முயன்று வருகிறது.

இரண்டாம் பகுதி


****************

போர் மிகவும் கொடுமையானது என்பதை தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் நான்காவது ஈழப் போர் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறது. போரில் இறந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரின் கோரமான படங்களைப் பார்க்கும் பொழுது வேதனையாக உள்ளது. சிங்கள/தமிழ் இளைஞர்கள் என இரண்டு தரப்புமே இந்தப் போரில் பலியாகி கொண்டிருக்கின்றனர். இந்தப் போரில் யாருக்கும் உறுதியான வெற்றி கிடைக்கப்போவதில்லை என்றே போர் வியூகங்கள் கூறுகின்றன. கிளிநொச்சி கைப்பற்றப்பட்டால் கூட போர் முடியப்போவதில்லை. புலிகள் வசம் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. அவ்வாறான சூழலில் இத்தனை உயிர்கள் ஏன் பலியாக வேண்டும் ? அதற்கு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளதா போன்ற கேள்விகளை எழுப்பியாக வேண்டும். இந்தக் கேள்விகளுக்கு தற்போதைய சூழலில் எந்த அர்த்தமும் இல்லை. இருந்தாலும் போர் ஏற்படுத்தும் பாதகங்களை எழுப்பி போரின் கொடுமைகளை பேசியாக வேண்டும். மேலும் படிக்க...

ஹிந்து ராமுக்கு மற்றொரு சிறீலங்கா விருது

ஹிந்து ராம் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசுக்கும், சிங்கள மக்களுக்கும் ஹிந்து நாளிதழ் மூலம் செய்து வரும் சேவையை பாராட்டி மற்றொரு விருதினை சிறீலங்கா அரசு சார்ந்த NGO நிறுவனம் அளித்து இருக்கிறது. Sri Lanka Mass Media Society (a government-supported NGO to promote excellence in the media world) என்ற நிறுவனம்இதனை வழங்கியுள்ளது.

சிறீலங்கா அரசு சார்ந்த ஒரு நிறுவனம் ஊடகங்களை பாராட்டி விருது வழங்குகிறதாம். புல்லரிக்கிறது. ஏன் புல்லரிக்கிறது என்றால் - Sri Lanka has been ranked as the third most dangerous place for the media in the world என்பது தான்...

சமீபத்தில் வெளியான பி.பி.சி செய்தி
'Drop' in S Lanka press freedom
International media watchdog groups say there has been a marked deterioration in press freedom in Sri Lanka.




பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டத்தை தொடர்ந்து ஊடக அமைப்புகள் Stop the War on Journalists in Sri Lanka என்று போராட்டத்தையும் நடத்தினர்.


TV journalist killed in Sri Lanka




இந்தளவுக்கு ஊடகங்கள் மீது கரிசனமாக இருக்கும் சிறீலங்கா அரசாங்கம், அதனுடைய ஒரு அமைப்பு மூலமாக ஆசியாவின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருதினை ராமுக்கு அளிக்கிறதாம். புல்லரிக்காதா பின்னே ?

அந்த விருதினை வாங்கிக் கொண்டு ஆற்றோ, ஆற்றோன்னு ஒரு உரையாற்றி இருக்கிறார் பாருங்கோ, அதனை நினைச்சா இன்னும் புல்லரிக்கிறது.

“Time has come for the media in South Asia to seriously introspect on its role on how it could improve its performance in betterment of the welfare of the people and the peace processes in the society,” N. Ram, Editor-in-chief of The Hindu, said here on Tuesday.

அவருடைய ஹிந்து நாளிதழை அவர் முதலில் introspect செய்தால் பரவாயில்லை.

****

ஹிந்து நாளிதழை தொடர்ச்சியாக நான் ஏன் விமர்சனம் செய்ய வேண்டும் என்பன போன்ற கேள்விகள் என்னுடைய கடந்த பதிவை சார்ந்து முன்வைக்கப்பட்டது. ஹிந்து நாளிதழ் ஆசிரியர் குறித்து முன்பு எழுதிய ஒரு பதிவை அவர்களுக்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.
ஹிந்து ஆசிரியர் என்.ராமின் பத்திரிக்கையாளர் முகமூடி...

இந்திய அதிகார மையத்திற்கு, ஈழம் சார்ந்து தாங்கள் முன்வைக்க விரும்புகிற விடயங்களை நேரிடையாக மக்கள் மத்தியில் வைக்க முடியாத சூழல் உள்ளது. அதனால் எப்பொழுதுமே ஹிந்து அதனை முன்வைத்து வந்திருக்கிறது. 1980களில் இருந்து 2000ம் வரை இதே நிலை தான். அதனால் தான் ஹிந்துவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. ஹிந்து நாளிதழை எதிர்ப்பது இந்திய அதிகாரமையத்தை எதிர்க்கும் ஒரு செயல் என நான் நம்புகிறேன். மேலும் படிக்க...

ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்

தமிழகத்தில் ஈழ மக்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள உணர்வுகளை ஹிந்து ஆசிரியர் என்.ராமால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கடுமையான அஜீரண கோளாறு காரணமாக கருத்துச் சுதந்திரம் குறித்து எல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ? செய்திகளை கூட இருட்டடிப்பு செய்து வெளியிடும் ஹிந்து நாளிதழ் எல்லாம் கருத்துச்சுதந்திரம் குறித்து பேசுவது தான் உச்சகட்ட காமெடி.

இன்றைக்கு பேச்சுரிமை குறித்து பேசும் ஹிந்து, ஈழத்திற்கு ஆதரவாக குரலெழுப்புவதும் பேச்சுரிமை தான் என்பதையும், கடந்த காலங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரலெழுப்ப முயன்ற வைகோ போன்ற தலைவர்களின் கைதினை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்டதையும் சுட்டி காட்ட வேண்டிய தேவையுள்ளது.

என்.ராமின் பின்புலம் குறித்து தெரியதவர்களுக்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பது அவசியம் என்று தோன்றினாலும், நேரமின்மை காரணமாக ஒரு செய்தியை மட்டும் சுட்டிக்காட்டி விட்டு செல்லலாம் என நினைக்கிறேன். ஹிந்து ராம் சிறீலங்கா அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்படாத தூதுவராக தமிழகத்திலும், இந்தியாவிலும் செயலாற்றிக் கொண்டிருந்தார்/கொண்டிருக்கிறார். சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவர் விசுவாசமாக பணியாற்றியதன் அடையாளமாக அவருக்கு அவருடைய "குடும்ப நண்பர்" சந்திரிகா குமாரதுங்கா "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற சிறீலங்காவின் உயரிய விருதினை அளித்து கொளரவப்படுத்தினார். இந்த விருதினைப் பெற்ற ஒரே இந்தியர் என்ற தனிப்பெரும் பெருமையும் என்.ராமிற்கு உண்டு.

இது குறித்து செய்தியினை ஹிந்து நாளிதழிலேயே சென்று வாசிக்கலாம்.
http://www.hinduonnet.com/2005/11/15/stories/2005111517191400.htm

அந்தச் செய்தியின் ஒரு சாரத்தினை இங்கே அளிக்கிறேன்.

The "Sri Lanka Ratna" is conferred for "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka in particular and\or humanity in general." Mr. Ram is the first Indian recipient of the honour, which is conferred on a restrictive basis.

அதாவது சிறிலங்காவிற்கு அவர் அளித்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்ற காரணத்திற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. இந்த "exceptionally outstanding and most distinguished service to Sri Lanka" என்பதை அவர் எப்படி சாதித்தார் ?

130 வருட "பாரம்பரியம்" மிக்க ஹிந்து நாளிதழை சிறீலங்கா அரசாங்கத்தின் கொள்கைப் பரப்புச் சாதனமாக மாற்றியதன் மூலம் சாதித்தார். செய்திகளை தமிழகத்தில் திரித்து வெளியிட்டார். பத்திரிக்கை ஆசிரியர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு அவர் செய்த அரசியல் புரோக்கர் வேலைகளை யாருமே அதிகம் அம்பலப்படுத்தாமல் போனதும், ஹிந்துவின் "பாரம்பரிய பேனரும்" அவருக்கு வசதியாக இருந்தது.

**********

ஈழப் பிரச்சனையில் ஹிந்துவின் பிரச்சார போக்கில் தற்பொழுது ஒரு மாற்றம் தெரிவதை ஹிந்துவை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்தி படுகொலை என்ற வாதத்தை தொடர்ந்து ஈழப் பிரச்சனையில் ஹிந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் இன்றைக்கு தமிழக காங்கிரஸ் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அரசியல் நிர்பந்தங்களுக்காக ஈழ மக்களுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்துள்ளது ஹிந்துவிற்கு தன் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் இவ்வாறான ஒரு போக்கினை எடுக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. தமிழ்ச்செல்வன் மரணத்தை சார்ந்த சூழ்நிலையின் பொழுது, தமிழ்ச்செல்வனை கொன்றது பிரபாகரன் என கூறிய அறிவுஞீவி "தமிழர்கள்" தான் காங்கிரஸ் கதர் வேட்டிகள். டெல்லியின் எடுபிடிகளான காங்கிரஸ் கதர்வேட்டிகள் மீது எனக்கு பெரிய நம்பிக்கையோ, மரியாதையோ இல்லை. ஆனால் தங்களின் அரசியல் தேவைக்காக தமிழக காங்கிரஸ், ஈழப்பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாட்டினையே சார்ந்துள்ள சூழ்நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், விகடன் உள்ளிட்ட கருத்துகணிப்புகளில் ராஜீவ் காந்தியின் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை தமிழக மக்கள் அணுகியுள்ள சூழ்நிலையில் ராஜீவ் படுகொலை என்ற வாதம் வலுவிழக்கிறது.

தமிழ் ஈழத்தை எதிர்க்க, ராஜீவ் படுகொலை என்ற ஆயுதத்தை கடந்த காலங்களில் வெற்றிகரமாக பிரயோகித்து வந்த ஹிந்து, அது கூர்மழுங்கியதும் தற்பொழுது புதிய ஆயுதத்தை எடுத்துள்ளது.

அது தான் காஷ்மீர் பயங்கரவாதம்.

காஷ்மீர் பிரச்சனையையும், ஈழப் பிரச்சனையும் பிணைத்து விடுவதன் மூலம் "இந்திய தேசிய உணர்வை" சீண்டி விட்டு ஈழத்திற்கு எதிரான சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்து வருகிறது. ஈழப் பிரச்சனையை காஷ்மீருடன் ஒப்பிடுவதன் மூலம் அண்டை நாட்டில் ஒரு புதிய நாடு உருவானால், நம் நாட்டிலும் புதிய நாடு உருவாகும் என்ற அச்சத்தை விதைப்பதே ஹிந்துவின் நோக்கம். இதன் மூலம் இந்தியத் தமிழர்களை, இந்தியர்களாக மட்டும் வைத்திருக்க முனைவதும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத் தமிழர்களை திருப்புவதும் ஹிந்துவின் நோக்கமாக உள்ளது.

ஹிந்துவில் மாலினி பார்த்தசாரதி என்பவர் பின்வருமாறு எழுதுகிறார்

Tamil Nadu’s politicians clearly have different standards for India and for Sri Lanka. It would appear that they accept that battling terrorism in India and saving Kashmir from Islamist jihadis are important national tasks but not so in Sri Lanka which has been menaced for more than two decades by the LTTE.


....When Pakistani generals and Islamist militants characterise the separatist uprising in Kashmir as a "freedom struggle," the collective Indian national consciousness is understandably outraged. Politicians in India are rarely exercised over concerns that the human rights of innocent citizens are often trampled upon in police action against terrorists or their perceived accomplices. There is indeed a broad-based political consensus behind the Indian state when it takes strong steps to root out terrorism.

என்னைப் போன்றவர்கள் காஷ்மீர் மக்களின் விடுதலையையும் ஆதரிக்கவே செய்கிறோம் என்பதால் இந்த வாதம் எந்த மாற்றத்தையும் எங்களுடைய நிலைப்பாட்டில் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால் ஆனால் மைய அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் காஷ்மீர் குறித்த பெரிய புரிதல் இல்லாத சூழ்நிலையை தங்களுடைய சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவான நிலைக்கு ஹிந்து பயன்படுத்திக் கொள்கிறது. ஈழப் பிரச்சனையை எப்படியெல்லாம் எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் ஹிந்து ராம் இருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஸ்ரீலங்கா ரத்னா பட்டத்தை கட்டிக் காக்க வேண்டும் அல்லவா ?

இந்திய தேசிய உணர்வுகளை தூண்டி விட்டு, சிறீலங்காவை கட்டிகாக்க ஹிந்து துடிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறீலங்காவை அப்படி கட்டிக்காக வேண்டிய தேவை அவருக்கு ஏன் உள்ளது என்றும் தமிழர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அப்பொழுது தான் ஹிந்துவின் குள்ளநரித்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

**********

சிறீலங்காவை கட்டிகாக்க துடிக்கும் ஹிந்து, தமிழர்கள் குறித்த செய்திகள் எதையேனும் வெளியிடுகிறதா ?

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் நடவடிக்கை ஒரு பெரிய மனித அவலத்தை ஈழத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கிளிநொச்சியை விட்டு தமிழ் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சிங்கள விமானப்படை விமானம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. ஒரு பாரம்பரிய மிக்க பத்திரிக்கை நியாயமாக இந்தச் செய்திகளை வெளியிட வேண்டாமா ? கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் பத்திரிக்கை, பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டாமா ? ஆனால் ஹிந்து அதனை செய்யவில்லை.

பிபிசி போன்ற செய்தி தளங்களில் தமிழர்கள் தினமும் கைது செய்யப்படுவது (Sri Lanka Tamils 'being arrested' ), கிளிநொச்சியில் மக்கள் போரினால்பாதிக்கப்பட்டுள்ளது போன்ற செய்திகள் தற்பொழுது வெளியாகியுள்ளன ('The intolerable noise of ஷேல்ல்ஸ்')

இப்படியான செய்திகளை வெளியிட்டால், தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலை இன்னும் அதிகரிக்கும். எனவே ஹிந்து அதனை செய்யாது. மாறாக இன்றைக்கு ஹிந்து ஒரு முக்கியமான செய்தியினை முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


‘I am committed to political solution and ending Tamil civilian hardships’

N. Ram

Chennai: “I am firmly committed to a just and enduring political solution” to the Tamil question in Sri Lanka and “am clear that there are no military solutions to political questions,” President Mahinda Rajapaksa told me in a telephonic conversation from Colombo on Thursday morning.

மகிந்த ராஜபக்ஷ என்.ராமிடம் மேற்கண்டவாறு தொலைபேசியில் கூறியிருக்கிறாராம். உடனே ஹிந்து அதனை முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இத்தனை நாளாக ஹிந்து ஏன் கேட்கவில்லை ? மகிந்த ராஜபக்ஷ ஏன் கூற வில்லை ?

இத்தனை நாளாக தமிழர்கள் தமிழகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு விழித்துக் கொண்டார்கள். அதனால் தமிழகத்தில் எழுந்துள்ள சூட்டை தணிக்க ஹிந்து தன்னலான உதவியை செய்கிறது. வாங்கிய "ஸ்ரீலங்கா ரத்னா" என்ற ரொட்டி துண்டுக்கு உழைக்க வேண்டாமா ? ஹிந்து ராம் என்ற விசுவாசமான "பிறவி" அந்த ரொட்டி துண்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறது.

********

போரினால் மிகப் பெரிய மனித அவலம் நேரும் இந்த தருணத்திலும் மனிதநேயம் அற்ற வகையில் செயல்பட்டு வரும் ஹிந்து நாளிதழை கண்டிப்பதோ, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதோ தேவையில்லாதது. தமிழர்களாக தங்களை நினைக்கும் அனைவரும் ஹிந்து நாளிதழை "காசு கொடுத்து" வாங்க கூடாது. தமிழர்களின் காசில் கொழுத்து தமிழர்களுக்கு எதிராகவே செயல்படும் ஹிந்துவை முற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.

அப்படி செய்தால் ஹிந்து அலுவலகம் தானாகவே சென்னை அண்ணாசாலையில் இருந்து கொழும்பு LakeHouse க்கு மாறிவிடும். ஹிந்து இருக்க வேண்டிய இடமும் கொழும்பு LakeHouse தான்.

எனவே ஹிந்து நாளிதழை புறக்கணிப்போம்...

*******

விகடனை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரசும் சமீபத்தில் ஈழப்பிரச்சனை குறித்து தமிழகத்தில் கருத்துகணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் கீழே உள்ளது

மேலும் படிக்க...

ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே...

விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.

விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.

இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் - தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.

1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.

உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் - நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.

ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.

******

விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.

ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.

இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.

இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
http://www.tamilnation.org/indictment/Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf

இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.

"When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi's military adventure in Sri Lanka would be India's Viet Nam, I had not anticipated that India's Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.

That is why when in the early days of India's military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day's good deeds, particularly for damsels in distress.

Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London's Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything "this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back".

இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.

ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?

அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

******

விகடன் நடத்திய இந்த சர்வே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். என்றாலும் இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட விதம் என்னை எரிச்சல் படுத்தியது என்பது தான் உண்மை.

“நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் கைதாக வேண்டும்!” என்பது விகடனின் சர்வே முடிவை ஒட்டிய தலைப்புச் செய்தியாக வெளிவந்தது.

சரி விகடன் வெளியிட்ட சர்வே முடிவுகள் என்ன புள்ளிவிபரங்களை தருகிறது என பார்ப்போம்.

பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என கூறியவர்கள் 43.02%,
குற்றமற்றவர் என கூறியவர்கள் - 16.90%
குற்றத்தை மன்னித்து விடலாம் என கூறியவர்கள் 40.07%. (மன்னித்து விட வேண்டும் என்றால் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை கைது செய்ய வேண்டாம் என்பது தான் பொருள் என நினைக்கிறேன்)

அதாவது 56.97% பேர் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது பிரபாகரன் கைதாக வேண்டும் என தமிழக மக்கள் கூறியுள்ளதாக விகடன் தலைப்புச் செய்தி வெளியிடுகிறது ? என்ன கொடுமை சார் இது ?

மும்முனைப் போட்டியில் 43.02% பெற்ற கட்சி வெற்றி பெற்றது, மற்றவர்கள் எல்லாம் தோல்வி அடைந்தார்கள் என்று சொல்ல இது என்ன தேர்தல் கருத்து கணிப்பா ? ஒரு கருத்தினை ஒட்டிய கேள்வி என்னும் பொழுது அந்தக் கருத்தினை சார்ந்த அனைத்து விடயங்களையும் அலசி தான் தலைப்புச் செய்தி வெளியிட வேண்டும். ஆனால் விகடன் அதனைச் செய்ய வில்லை.

இந்தக் கருத்து கணிப்பின் முடிவுகளை ”உண்மையாக” அப்படியே வெளியிடுவதில் விகடனுக்கு உள்ள நிர்பந்தம் எனக்கு புரிகிறது.

இதே சர்வே “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரன் குற்றமற்றவர்!” என்றோ “நிச்சயம் தமிழீழம் வேண்டும்! பிரபாகரனை மன்னித்து விடலாம்” என்றோ வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? இந்தியாவின் மேல்தட்டு ஊடகங்களும், தமிழகத்தில் உள்ள விகடனின் ”சொந்தக்கார” ஊடகங்களும் விகடனை ரவுண்டு கட்டி அடித்திருப்பார்கள். விகடனின் நாட்டுப்பற்று குறித்து கேள்விகள் எழுந்திருக்கும். 80 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க விகடன் எப்படி தேச விரோத பாதையில் செல்கிறது என்பது குறித்த கவலைகள் எழுந்திருக்கும். விகடனுக்கு புலிகள் வழங்கிய வெளியே தெரியாத தொகை குறித்த வேள்விகள் எழுந்திருக்கும்.

எனவே இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க விகடன் ஒரு உண்மையை மட்டும் வெளியிட்டு விட்டு மற்றொரு உண்மையை புள்ளிவிபரங்களுடன் சேர்த்து மறைத்து விட்டது. மேலும் படிக்க...

போர் : மக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்

போர் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவனுடைய அன்றாட வாழ்வியலை கேள்விக்குறியாக்குகிறது. உயிருடன் அன்றைய பொழுதை கழிக்க முடியுமா என்ற கேள்வியுடன், தன்னைச் சார்ந்த குடும்பமும், சக மனிதர்களும் அடுத்த சில மணி நேரங்களுக்கு இருப்பார்களா அல்லது உயிரிழப்பார்களா என்ற நிலையற்ற தன்மையுடனும் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பெரும்பாலும் அதிகார மையங்களால் நகர்த்தப்படும் இந்தப் போர், அந்தப் போரினை நேரடியாக எதிர்கொள்ளும் சூழலில் இருக்கும் சாமானிய மனிதனையே அதிகம் பாதிக்கிறது/சிதைக்கிறது.

ஈழத்திலே நடந்து வரும் போரும் ஒரு சாமானிய தமிழனையே அதிகம் பாதிக்கிறது. தன்னுடைய குடும்பத்தை இராணுவத்திடமும், புலிகளிடமும், துணை இராணுவ குழுக்களிடம் இழந்தவர்கள், விமானத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், கணவன்/குழந்தைகளை இழந்த பெண்கள், உறவுகள் இல்லாமல் அனாதையாக்கப்பட்ட குழந்தைகள் என தமிழ் ஈழம் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட ஒரு நாடாக மாறிவிட்டது. இந்தச் சூழ்நிலை தமிழீழ மக்களின் மனநிலையையும் கடுமையாக பாதித்து இருக்கிறது.

போர் என்பது நேரடியான யுத்தமாக மட்டும் இல்லாமல் புலிகளுக்கு ஆதரவாக உள்ளவர்களை அரசு படைகள் தொடர்ச்சியாக அழிக்கும் நிகழ்வாகவும், புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம் மீதான விமானத் தாக்குதலாகவும், இராணுவம், உளவுக்குழுக்கள், DPU, துணை இராணுவக்குழுக்களின் (Paramilitary) தாக்குதலாவும், தமிழர்கள் அனைவரும் புலிகள் என்ற சந்தேகப்பார்வையினால் தொடுக்கப்படும் மனித உரிமை மீறல்களாகவும் பலப் பரிமாணங்களில் போர் தமிழர்களை பாதிக்கிறது.

இந்த போர் தமிழர்களை பெருமளவில் பாதித்தாலும் சாமானிய சிங்கள மக்களுக்கும் போர் மூலமாக பாதிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் விமான தாக்குதலுக்கு பதிலடியாக புலிகள் தென்னிலங்கையில் மக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் மீது தங்கள் தாக்குதலை தொடுக்கின்றனர். இராணுவத்தின் Deep Penetration Unit புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் பொதுமக்கள்/குழந்தைகள் பயணம் செய்யும் வாகனங்கள் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தும் பொழுது அதே வகையிலான பதிலடி தாக்குதல் சிங்கள மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. தாக்குதல்/பதில் தாக்குதல் என்று கூறினாலும் இரண்டு பக்கங்களிலும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி பொதுமக்களே.

சிங்கள அரசு புலிகள் மீதான இராணுவ முன்னெடுப்பிற்கு ஏராளமான பணத்தை செலவழிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக உள்ள சூழ்நிலையில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து அதிக வட்டிக்கு பெறப்படும் பணம் போருக்கு செலவழிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அன்றாடப் பொருட்களின் விலை நிலவரம் பலருக்கும் அச்சமூட்டும் நிலையை எட்டியுள்ளது. தமிழ்/சிங்களர் என இருவரையும் இது பாதிக்கிறது.

இதனால் சிங்கள மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தியை மறைக்க போர் வெற்றி சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவசியமாகிறது. புலிகளை தோற்கடித்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விடும், எனவே சில மாதங்கள் பொறுத்திருக்கும் படி அரசு பிரச்சாரம் செய்கிறது. போருக்கான ஆதரவை மக்கள் மத்தியில் சிங்கள இனவெறியை தூண்டுவதன் மூலம் திரட்டி வருகிறது. மகிந்த அரசாங்கம் தனது இருப்பினை போர் மூலமான வெற்றி மூலம் மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ராஜபக்ஷ அரசாங்கம் என்றில்லாமல் சிறீலங்காவின் எல்லா அரசாங்களுமே போர் என்பதை தென்னிலங்கையில் தங்களுடைய அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்ள ஒரு ஆயுதமாக பயன்படுத்துவது தான் ஈழப் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருப்பதற்கும் காரணமாக உள்ளது.

********

கடந்த காலங்களில் இந்திய வெகுஜன ஊடகங்கள் தமிழர்களின் இன்னல்களை வெளியிட்டதேயில்லை. 10 புலிகள் பலி, 20 புலிகள் பலி என்று "வெறும்" எண்ணிக்கையாக மட்டுமே செய்திகள் வெளியிட்டு வரும் இந்திய ஊடகங்களில் மக்களின் இன்னல்கள், பிரச்சனைகள் வெளிப்படுவதில்லை. அவ்வாறான செய்திகளை வெளியிடாமல் இந்திய ஊடகங்கள் அக்கறையாக உண்மைகளை மறைத்தன. தொடர்ந்து மறைத்து வருகின்றன. ஈழப் பிரச்சனைக்காக குரல் எழுப்பும் சில அமைப்புகளின் கூக்குரல் கூட பயங்கரவாதிகளுக்கான ஆதரவு என்பதான ஒரு கருத்தாக்கத்துடன் தமிழகத்தின் நடுத்தரவர்க்க மக்களின் மத்தியில் திணிக்கப்படுகின்றன.

ஆனால் இன்றைக்கு இணைய ஊடகங்களின் வளர்ச்சி, வலைப்பதிவுகளின் வளர்ச்சி போன்றவை மூலம் தமிழர், சிங்களர் என இரு சாராரும் தங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ள தொடங்கி இருக்கின்றனர். இதனால் வெகுஜன ஊடகங்களில் பரப்பப்படும் சிங்கள தேசிய சார்பு, தமிழ் தேசிய சார்பு போன்றவற்றை கடந்த உண்மை நிலைகள் வலைப்பதிவுகளில் கிடைக்கின்றன. தங்களின் நேரடி அனுபவங்களை இந்த வலைப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன.

இணையம் மூலமான இந்தப் பதிவுகள் மூலம் போர் ஒரு சாமானிய மனிதனுக்கு ஏற்படுத்தும் இன்னல்களையும், அவனது அன்றாட வாழ்க்கையை எப்படி போர் நிர்மூலமாக்குகிறது என்பதை கவனிக்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது. ஈழ தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் போர் சூழல் தமிழர்களின் வாழ்க்கையை எவ்வாறு சிதைத்து உள்ளது என்பதை ஈழத்தைச் சார்ந்த பலர் தங்கள் வலைப்பதிவுகளின் முன்வைத்துள்ளனர். அது குறித்த ஒரு தொகுப்பு.

***********

தமிழ் ஈழப் போராட்டத்தின் தலைநகரம் - யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டே பெரும்பாலான இராணுவ தாக்குதல்கள் நடைபெற்று உள்ளன. சிங்கள இராணுவம், புலிகள், இந்திய இராணுவம் என பலரின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகரம் பல் வேறு காலங்களில் இருந்து வந்துள்ளது. யாழ்ப்பாணம் தமிழ் ஈழப் போராட்டத்தில் பல உக்கிரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளது. சிங்கள மற்றும் இந்தியப் படைகளின் அடக்குமுறையை யாழ்ப்பாணம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலை யாழ்ப்பாணம் மக்களை மனரீதியாக பாதித்துள்ளதாக The psychological trauma of an age old war என்ற இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. groundviews என்னும் இந்த தளம் சிங்கள/தமிழ் மக்களின் ஒரு கூட்டு வலைத்தளம். வெகுஜன சிங்கள/தமிழ் ஊடகங்களுக்கு மாற்றாக மாற்று கருத்துகளை முன்வைக்கும் ஊடகமாக இந்த வலைத்தளம் உள்ளது.

The killings, abductions and disappearances that take place daily have contributed to decades of mental agony which are finally taking its toll in the manifestation of an aggressive society. The survey revealed that the majority of young widows had lost their husbands due to killings or abductions. All the young widows were with mental depression.

The Elderly have now grown accustomed to the killings and abductions of their kith and kin including their children, in-laws and friends. They are tired of grieving; attending funerals, there’s no one to console one another; each and every family is victimised daily by the violent activity in Jaffna. They’ve learnt to control their feelings, they hardly laugh or cry.

***********

யாழ்ப்பாணம் தமிழர்களுக்கு ஒரு திறந்த வெளி சிறைக்கூடமாக மாறி விட்டது. யாழ்ப்பாணத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

My experiences in Jaffna-Summer 2007

Killings and abductions occurred daily. I have seen dead bodies by the road side. They were mostly young men who have been shot and killed. It is usually reported the next day in the Uthayan News paper that persons of unknown identity are thought to have been the killers. Friends and neighbours are scared to befriend the bereaved family for fear of their lives in case they also become victims of the killers. I was told that the victims were young men who were active politically, either when in University or as journalists or as activists during ‘Pongu Thamil’ celebrations and other political demonstrations. The killings did not appear to be random but targeted. Many of the abducted are given up for dead because so few of them return alive. The killings of these young men have left a growing number of young widows and fatherless children. The ‘recent’ widows number over a thousand. Last month alone 57 men were killed in the Jaffna peninsula. Wives and mothers are anxious each morning when their husbands and children leave home until they return in the evening.

யாழ்ப்பாணம் மக்களின் இயலாமையை இந்த வரிகளின் உணர்த்தும் பொழுது மனம் கனக்கிறது.

The recurrent heartfelt cry that I heard in Jaffna was the sense of hopelessness and the feeling of desolation. Hopelessness because the people of Jaffna had put hope in their politicians through the democratic process. They had hoped in the freedom struggle through the efforts of the ‘boys’-the freedom fighters to some but terrorists to others. They had hoped in every new Prime Minister and President for an equitable solution for all time. They had hoped in the IPKF. They had hoped in the CFA. They had hoped the Norwegians would broker a deal for all time. The International community, the United Nations, the European Union and the Co-Chairs have not done enough to stop the genocide.

I could sense a feeling of desolation, a feeling of being abandoned and lonely and forlorn without friends. A feeling of utter hopelessness filled my heart as well. We have put our trust in men and horses and chariots with no avail. Our hopes have been dashed time and again. We as Tamils and as Sri Lankans as peace loving people have stood back in horror, feeling utterly helpless and alienated.

***********

Jaffna: Tears, blood and terror

Life in Jaffna

All around the town, I saw bombed out buildings, barbed wire and what once would have been residential houses now occupied by the military. One man I met in the plane told me his land and house had been taken over by the military in 1990, and no compensation or alternative land or housing had been provided. He has given up hoop of ever getting it back.

In terms of hearing, nothing can beat the shelling. Whether it was while I was trying to sleep, or while doing the training that took me to Jaffna, or even while playing a friendly cricket match, shelling continued.

Insecurity of civilians

The curfew is now at 9pm (untill early November it had been 7pm) and on two days, as I went around at about 7pm, I didn’t see a single vehicle or cycle on the streets. Several friends told me that they “regretted” they can’t invite me for dinner as curfew starts at 9pm, and in any case, it would not be safe for me to visit them or vice versa after dark. The training was I was doing had to be concluded by 2.30pm, to enable participants to reach home before dark, leaving space for “convoys” that block roads for hours.

But everyone I spoke to said curfew is not for protection of civilians – but for protection of “unidentified groups” that roam the streets of Jaffna abducting and killing people. I got names of seven people who had been killed in the week I was in Jaffna. I remembered a recent report that showed that showed that almost 2 person per day disappeared or was killed in Jaffna in the first 8 months of 2007.


இது சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தின் நிலை என்றால், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இராணுவத்தின் விமானங்கள் தமிழர்கள் மீது குண்டுகளை பொழிகிறது.

வன்னியில் தனக்கு நேர்ந்த தினசரி விமான தாக்குதல் மூலமான இன்னல்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.


Kfir – Daily Messengers of Death

What a difference! In place of the eagle that took the lives of the chicks there is the Man operated Kfir. I couldn’t conclude if the man or the Kfir is the messenger of death. But certainly the man has his role as well. Kfir is a man-made huge iron air vessel that carries the dangerous poisonous thing called bombs that are shifted into its belly using cranes. They are so huge and heavy. The iron structure called as the Israeli-made Kfir flies from Colombo, the capital city of Sri Lanka in just ten minutes. It comes with the sole purpose of taking the lives of Tamils that have become so cheap in the eyes of the Sri Lankan government- a democratic government said to be adhering to the noble truths of Lord Buddha who preached against the killings of lives in whatever form. The eagle as said above stick to no moral rules neither it has the capacity to think. But the government that sends the killer in the form of a Kfir and the man behind the wheels are capable of thinking. They do think- in terms of killing Tamils. Let it be anybody - children, elderly, or sick, they are Tamils and they should be killed.

In the eye of the storm

It was the 25th of November 2007. I was sitting at the door-steps of the house, relaxing and enjoying the outside view -the garden and the flowers and the unpolluted atmosphere that refreshes anyone both mentally and physically. There were some children playing in the opposite compound playing and giggling and shouting in their natural carefree childhood innocence. I enjoyed it very much. But this didn’t last long.

All of a sudden there was the sound of the Kfir approaching. Before I could gather my senses the children took to their heels and fled somewhere and I too was called out to run away. There wasn’t time to run. I could just go to the backdoor of the house and there was the deadly noise of the bomb being dropped and the blast of it from all sides, the banging of the doors and windows and the people running and shouting out in panic. I heard as if a heap of daggers are being dashed simultaneously. I felt it close–so close that they rang in my ears. I shut my ears, closed my eyes and pressed myself against a wall and stood motionless. All what I could think was that I cannot do anything other than accepting whatever fate decides for me. My throat was parched; I lost the capacity to think anymore and everything was beyond my control. When all is over and there was absolute silence I couldn’t even think that I am saved. There was smoke everywhere. The unpolluted atmosphere I just enjoyed got surrounded with poisonous gaseous elements from the bomb. A silence that predicted the death of some innocent lives prevailed in the neighbourhood. People were running helter-skelter. They were running to see what had happened and who is left dead and injured. At once they started acting and rushed to the spot for help. All in a moment depicting how unpredictable is life in Tamil Eelam. What can we do to help these people?

Life on the run

I met a boy of 17years whom I asked which area of Tamil Eelam he is from. He answered, “Amma I had been running since I was three. I have lived under the trees. Slept in open places. Eating whatever is available and my mother has told me that she even had to quench my thirst with the water running in a canal that carried dirty water. I haven’t attended schools regularly. I was in several schools. I couldn’t concentrate in my studies for I didn’t know where I will go next.” He is not the only youth with such a story. There are many such people. Their agony doesn’t end there. They have seen people being killed due to the bombing and shelling. They have seen the distorted bodies; helped to clean them up. There live so many people who lost their limbs and eye-sight. The worry, the memories and the impact is too much to bear with.

groundviews.org தளத்தில் தென்னிலங்கையில் நிலவும் போர் சூழ்நிலையை பிரசன்னா ரத்னாயகே என்னும் சிங்களர் Travels in a Militarised Society என்னும் கட்டுரை தொடர் மூலமாக விளக்குகிறார்.

தெரு நாய்களை விட தமிழ் மக்கள் கேவலமாகிப் போன சூழ்நிலையை இந்த வரிகள் உணர்த்துகின்றன.

In Colombo, Jaffna, the East, Vayvuniya, and elsewhere people continue to disappear. There are no investigations and no local or national records kept of who or how many they are. From one day to the next, people forget because another incident has occurred.

However, things are not all bad: last year the government decided it must stop the killing of stray dogs—not the right to be happening in a Buddhist country. The dogs have taken advantage of this ethical decision and packs of strays trot around enjoying the freedom of the capital city.


புத்தரின் வழியை பின்பற்றும் புத்த பிக்குகள் போருக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலை தான் சிங்கள-பொளத்த இனவாதத்தின் உச்சகட்டம்.

Switching to another channel, there is a serious discussion in progress about how to conquer the Vanni, the Tamil district in the centre of the country. The panel of civilian men, who call themselves academics, and Buddhist monks, are making war in the TV studio in their immaculate saffron robes and well-ironed shirts, with benefit of AC and bottled mineral water. Loudly, belligerently, they outdo each other, shouting “We will win!” “We will crush the Enemy!” “We will prevail!” “We will have a proper Sinhala New Year in April!”

On a third channel another big discussion is going on between members of the Sangha and some more self-designated academics. They are devising a Buddhist justification for war; how to legitimate the process of annihilating non-Sinhala elements of the nation. A listener phones in to protest that this is not the Buddhist way. The panel of authorities strongly and unanimously reject this. Ours is a revised Buddhism; a Sangha-ism that accepts no dissent.

சிங்களச் சூழலில் போர் எவ்வாறு சிலருக்கு பயன் அளிக்க கூடியதாக உள்ளது என்பதையும், அந்த காரணத்திற்காகவே போரினை சிங்கள மக்கள் ஆதரிக்கும் போக்கினையும் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

At a small tea stall beside the tank, I have a little chat with the owners. They too are very happy with the new war situation: lots of young villagers, girls as well as boys, have got good local jobs as Home Guards and no longer worry their parents by going off to Colombo looking for work. They are well paid; they have job security and social status as never before. So the youth are happy and their parents are happy that the war has brought this improvement in their lives. On the billboards along the roadside of this agricultural district, amongst the ads for fertilisers and weed killers, are others which encourage and praise our valiant troops.


http://www.groundviews.org/2008/03/07/travels-in-a-militarised-society-6-strolling-along-ward-place-colombo/

....During the ’90s he told me many stories about the geopolitical demographics of Boralla. He even had stories of individual buildings. What had happened here was this: in 1958 and 1983, thousands of Tamils of the area had to flee in a great rush to save their lives. Many were small traders who ran their businesses from street stalls or peddled their goods along the pavements. When they had to leave, they asked their Sinhala neighbours to safeguard their property until they would return to reclaim it and take up their normal lives again. This is not what happened. Their neighbours agreed and watched the exodus. Some Sinhala residents of Boralla took over these abandoned businesses and, having good connections and no political or ethnic problems, prospered to such an extent that many are now millionaires and leading figures in the Sinhala national project. When some of these Tamil owners returned, they found that most of their houses were gone. New buildings have gone up in which their former friends now run major businesses build up from the goods and properties inherited from their erstwhile neighbours.

http://www.groundviews.org/2008/03/09/travels-in-a-militarised-society-7-cultural-iconography-odel-present-and-past/

in the second JVP uprising of the late ’80s and early ’90s, they lost 60,000 people. They in turn killed more 6,577 of their adversaries. During this time, they were dependent on Amnesty International, which brought their plight to the attention of the world and put much effort into protecting their human rights. Amnesty’s support for the JVP was so effective that in 1991 Defence Minister Ranjan Wijerathne called Amnesty a terrorist organisation, a wolf in lamb’s clothing out to demonise Sri Lankans. Now the JVP are partners of the government by day and champions of ‘the people’ by night. This is the strange choreography of opportunism, of those who have power without responsibility. They call themselves Marxist but they are Mask-ist. Not only do they deny that there are any human rights problems in Sri Lanka, but they are the ones now who loudly accuse Amnesty of siding with the LTTE and ignoring that organisation’s violations. மேலும் படிக்க...