வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, May 19, 2009

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.

பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.

கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...

Leia Mais…
Tuesday, May 12, 2009

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன்.
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது.

வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன்.

நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.

புலிகள் மீதான குற்றச்சாட்டு

1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.

அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை.


தமிழ் ஈழம்

ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்


தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?

சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.

நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும்.

நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

Leia Mais…
Sunday, May 10, 2009

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.

கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான்.

இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.

போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம்.

புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.

தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது.

அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

Leia Mais…
Wednesday, April 29, 2009

ஈழம் : இயலாமையின் வலி, மனதின் போராட்டம்

கடந்த சில மாத நிகழ்வுகள் ஈழ மக்களை வரலாறு காணாத கொடுமையான இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாத சோகம் வாட்டுகிறது. தமிழக தமிழர்கள் அடைந்த வேதனைக்கு சாட்சியாக முத்துக்குமார் மற்றும் பலரின் தீக்குளிப்பு நிகழ்ந்து விட்டது.

ஈழத்தமிழர்களின் மனநிலையை யாரும் வார்த்தைகளில் வடித்து விட முடியாது. அவர்களின் மனதில் ஒரு எரிமலை வெடித்துக் கொண்டிருக்கிறது.

இப்படியான சோகங்களையும், வேதனைகளையும் நமக்குள் பேசிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மனங்களில் தெரியும் இந்த வேதனையை பிற மொழி பேசுவோரிடம் கொண்டு செல்ல வேண்டும். இனி இந்தியாவையும், தமிழகத்தையும் நம்பாமல் மேற்குலக நாடுகளையே அணுக வேண்டும். அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக வசித்து வரும் வகையில் அமெரிக்க அரசியலை புரிந்து கொண்டிருக்கிறேன். எங்கோ நடக்கும் பிரச்சனை இங்கு யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தெரியவரும் பொழுது தங்களை அந்தப் பிரச்சனையுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தமிழகத்தின் 40 எம்பிக்களும் புண்ணாக்கு மூட்டைகளாக டெல்லியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே உள்ள ஒரு செனட் உறுப்பினருக்கு எழுதும் மின்னஞ்சலுக்கு கூட கரிசனையுடம் பதில் வருகிறது. சில நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறார்கள்.

மின்னஞ்சல் மூலமே அமெரிக்க வெளிவிவகார குழு தலைவரும், முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளாரான ஜான் கெரியை சென்றடைய முடிந்திருக்கிறது. அவருடன் இந்தப் பிரச்சனையை குறித்து பேச முடிந்திருக்கிறது.

நம்முடைய பிரச்சனையை நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருப்பதில் எந்த பலனும் இல்லை. ஈழத்தின் பால் அக்கறை கொண்டு தமிழில் எழுதும் ஒவ்வொருவரும் இனி ஆங்கிலத்தில் எழுத தொடங்க வேண்டும். தமிழில் ஈழம் குறித்து எழுதப்பட்ட அதே அளவுக்கு கடந்த 20 வருடங்களில் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நாம் நம் நிலையை உலகுக்கு தெரியப்படுத்தியிருக்க் முடியும். ஒரு சின்ன கருத்தையாவது ஆங்கிலத்தில் எழுதி வைக்க வேண்டும். அந்த நோக்கத்துடனே சமீப நாட்களில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கி இருக்கிறேன்.

கடந்த சில மாத மனதின் ரணங்களை ஆங்கிலத்தில் கொண்டு வர முயற்சித்து இருக்கிறேன். அந்தக் கட்டுரையை "Eelam crisis - The unsettling conflict of mind" கழுகு இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

Eelam crisis - The unsettling conflict of mind


Leia Mais…
Sunday, April 26, 2009

திராவிட அரசியலும், ஜெயலலிதாவிற்கான ஆதரவு ஓட்டும்

திமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற ரோசாவசந்த்தின் பதிவும், அதற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட ரவியின் (Voice on Wings) பதிவையும் சார்ந்ததே இந்தக் கட்டுரை.

இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு செல்வதற்கு முன்பாக தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.

இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம். 1992ல் இருந்த வைகோவுடன் கருணாநிதியை அப்பொழுது ஒப்பிடலாம். என்னுடைய சமகாலத்தில் வளர்ந்த வைகோவை என்னால் எப்பொழுதும் தமிழ் அரசியல் சார்ந்து விலக்க முடியவில்லை. வைகோ போன்றவர்கள் தலைவராக முடியவில்லையே என்ற வேதனை எனக்கு உண்டு. அதே போலத் தான் கருணாநிதி காலத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள் இன்றும் உள்ளனர். கருணாநிதி மீதான பற்றினை அவ்வளவு சீக்கிரம் அவர்களால் விட முடியவில்லை என்பதை பலருடன் விவாதிக்கும் பொழுது உணர்ந்திருக்கிறேன். வலைப்பதிவில் இருக்கும் எனக்கு முந்தைய தலைமுறை சார்ந்தவர்களின் உணர்வு இவ்வாறே உள்ளதை கவனித்து இருக்கிறேன். எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதி, 1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தன்னை தமிழ் சார்ந்த பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்திய தேசியத்திற்கு முன்பு மண்டியிட வேண்டிய அவலம் கருணாநிதிக்கு நேர்ந்தது. இவ்வாறன சூழ்நிலையில் அமைந்த காங்கிரஸ் கூட்டணியை தனக்கு கிடைத்த அங்கீகாரமாக கருணாநிதி பார்த்தது தான் தற்போதைய கருணாநிதியின் துரோக அரசியலுக்கு முக்கிய காரணம். கூடவே திமுகவுடன் கருணாநிதி குடும்ப அரசியலும் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு அடிபணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.

திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. சாதிக் கட்சியாக தொடங்கினாலும் பாமக தமிழ் அரசியலை பின்பற்ற தொடங்கியது. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த இடைவெளியை தன் கையில் எடுத்துக் கொள்வதே பாமகவின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது. இதன் வெளிப்பாடு தான் மக்கள் தொலைக்காட்சி, பொங்குதமிழ் பண்ணிசை மன்றம் போன்றவை. இந்த காரணத்தினாலேயே கருணாநிதி கைவிட்ட ஈழ அரசியலையும் பாமக அதிகமாக முழங்கியது. கருணாநிதியே ராமதாஸ் தன் தமிழின அரசியலை கடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாமக பின் மைய அரசில் பங்கு கொண்ட சூழ்நிலையில் தன்னை காங்கிரசின் நண்பனாக காட்டிக் கொள்ள முனைந்தது. திமுக எப்படி தமிழின அரசியலில் இருந்து மாறியதோ அதே போன்று பாமகவும் மாறியது.

இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

நிலை நிறுத்தப்பட்ட கட்சிகள் இவ்வாறு என்றால் புதியதாக கட்சி ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் இன்னும் ஒரு படி மேலே சென்று ”இந்திய தேசியம்” என்பதை ஓங்கி ஒலிக்க தொடங்கினர். இவர்கள் இதனை செய்தது இவர்கள் இந்திய தேசியம் மேல் கொண்டிருக்கிற ஆழ்ந்த பற்றினால் அல்ல. தமிழக அரசியல் அந்த பாதையில் நகர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களும் அப்படி தான் நகரமுடியும். அதைத் தான் அவர்கள் செய்தார்கள். ஹிந்தி எதிர்ப்பு என்ற திராவிட அரசியலின் அடிப்படை அடித்தளத்தையே விஜயகாந்த் தகர்க்க பார்த்தார். எனவே தான் திராவிட அரசியலை விலக்க விஜயகாந்த்தை பார்ப்பன ஊடகங்கள் பரப்புரை செய்ய தொடங்கின.

இந்த ஆபத்தான பாதை திருமாவையும் விட்டு வைக்காது என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்த போக்கில் இருந்து ஓரளவுக்கு தன்னை விலக்கி கொண்டவர் வைகோ மட்டும் தான். அதனால் தான் வைகோ வளரவே இல்லை. வைகோவின் ஒரு முக்கியமான சக்தியாக வளராமல் போனதற்கு அவரது உணர்ச்சிவசப்படும் போக்கு மட்டும் காரணம் அல்ல. அவரைச் சார்ந்த தமிழ் பிம்பமும் முக்கிய காரணம். 1992ல் திமுக பிளவு பட்ட பொழுது அவரை ஊடகங்கள் ஆதரித்தே எழுதின. மதிமுக தொடங்கப்பட்ட காலங்களில் வைகோவிற்கு நல்ல விளம்பரம் ஊடகங்களில் கிடைத்தது. அவர் விஜயகாந்த் போன்று ஒரு சோனகிரியாக இருந்திருந்தால் அது தொடர்ந்திருக்கும். வைகோ அப்படி பட்டவர் இல்லை என்பதால் அவருக்கு எந்த ஊடக விளம்பரமும் கிடைக்கவில்லை. பின்னர் மூப்பனார் ஊடகங்களை ஆக்கிரமித்தார்.

1991ல் தொடங்கிய இந்த போக்கு 2008ல் திசை மாற தொடங்கி 2009ல் முழுமையான மாற்றத்திற்கு வந்திருக்கிறது. இதற்கு காரணம் ஈழப்பிரச்சனை.
எந்த அரசியலும் தெளிவாக அமைய ஒரு போராட்ட களம் தேவைப்படுகிறது. போராட்டம் தான் அரசியல் களத்தை தெளிவுபடுத்துகிறது. ஈழப் பிரச்சனை எப்பொழுதுமே தமிழக அரசியல் பாதையை மாற்றியிருக்கிறது. பெரியாரின் சுயமரியதை இயக்கம், ஹிந்தி எதிர்ப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளையும் விட தமிழக அரசியலில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்தியது ஈழப் போராட்டம் மட்டுமே. அதன் தாக்கம் தமிழின அரசியலுக்கு ஆதரவாகவும் அமைந்தது, எதிர்மறையாகவும் அமைந்தது. 1980களிலும், 1990களிலும் ஈழப்போராட்டத்தின் தாக்கமே தமிழக அரசியல் பாதையை மாற்றியது. தற்பொழுது 2008லும் அது தான் மாற்றப் போகிறது.

1967க்கு பிறகு எந்த பெரிய போராட்ட களமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த தமிழக அரசியல் இந்திய தேசியம் நோக்கி நகர தொடங்கியது. திமுக உடைந்து அகில இந்திய அதிமுக தேசிய அடையாளத்துடன் உருவாகியது. இந்திய தேசியம் நோக்கி சென்ற தமிழக அரசியலை தடுத்து நிறுத்தியது 1980களில் வீசிய ஈழ ஆதரவு அலையே. ஆனால் அதே ஈழப் போராட்டம் 1991க்கு பிறகு தமிழகத்தை இந்திய தேசிய அரசியல் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது மறுபடியும் தமிழகத்தை ஈழப் போராட்டம் தமிழ் அரசியல் பாதைக்கும், இந்திய தேசிய எதிர்ப்பு அரசியலுக்கும் கொண்டு வந்திருக்கிறது. முன் எப்பொழுதையும் விட குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் இன்றைக்கு நம் முன் இருப்பது ஒரே கேள்வி தான் ? இன்றைய சூழ்நிலையில் யாரை எதிர்க்க வேண்டும் ?

திமுக, காங்கிரஸ் கூட்டணியையே எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது தான் நம்முடைய நோக்கம். திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்வி காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் இருந்து ஒழித்துகட்டும். காங்கிரஸ் ஒழிக்கப்பட்டால் தமிழின அரசியல் சார்ந்தே தமிழகம் நகர முடியும். தற்பொழுது ஈழ ஆதரவாக பல்டி அடித்திருக்கிற ஜெயலலிதா அந்தப் பாதையில் இருந்து விலகினால் கருணாநிதி ஜெயலலிதாவை தமிழின அரசியல் சார்ந்தே எதிர்ப்பார். கருணாநிதியும் தமிழின அரசியல் பாதைக்கு திரும்புவார். புதியதாக கட்சி ஆரம்பித்து காங்கிரசின் கடைக்கண் பார்வைக்காக காத்து இருக்கிற விஜயகாந்த்தும் தமிழின அரசியல் நோக்கி நகர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இரண்டு திராவிட கட்சிகளின் முதுகிலும் சுகமாக சவாரி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் உத்திரபிரதேசத்திலும், பிகாரிலும் 1990களில் அடைந்த பின்னடைவை சந்திக்கும். தனிமை படுத்தப்படும். அது தான் நாம் செய்ய வேண்டியது என நான் திடமாக நம்புகிறேன்.

ஆனால் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டு போடுவது என்பதே சகிக்க முடியாத ஒன்று. அதனை எப்படி செய்வது ?

ரோசாவசந்த்தின் பதிவில் நான் எழுதியிருந்தது போல, இந்த தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. அந்த நோக்கத்தினை ஆரோக்கியமாக செயல்படுத்த தமிழர்களுக்கு தேர்தல் அரசியலில் எந்த வழியும் இந்த தேர்தலில் கிடைக்கவில்லை. இந்த தேர்தல் போன்று ஒரு குழப்பமான தேர்தலை தமிழ் உணர்வாளர்கள் முன் எப்பொழுதுமே எதிர்கொண்டதில்லை. ஒரு பக்கம் துரோகியாக மாறி விட்ட கருணாநிதி, மற்றொரு புறம் எதிரியாக இருக்ககூடிய ஜெயலலிதா. இவர்கள் இருவரையும் நிராகரித்து விட்டு விஜயகாந்த்தை ஆதரிக்கலாம் என்றால் ஆரம்பத்திலேயே காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருக்கிற அவரின் கபடநாடகம். தனித்து அணி அமைப்பர்கள் என எதிர்பார்க்கப்பட்ட ராமதாஸ், வைகோ, திருமா போன்றோரின் சந்தர்ப்பவாதம்.

இத்தகைய சூழ்நிலையில் பேசாமல் தேர்தலை புறக்கணிக்கலாம், 49ஓ போடலாம் என பல்வேறு சிந்தனைகள் பலரின் மனதிலே ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக...இந்த தேர்தலில் நாம் யாரையும் ஆதரித்து வாக்களித்து விட முடியாது என்பது ஒரு முக்கிய நிலைப்பாடாக அனைவரது மனதிலும் உள்ளது.

இன்றைக்கு தமிழர்களுக்கு இருக்க கூடிய அசாதாரணமான சூழ்நிலையில் தான் இந்த தேர்தலை அணுக வேண்டியுள்ளது. இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இருந்தாலும் நடைமுறையில் இருந்து விலகி வெறும் வறட்டுத்தனமான சித்தாந்த அறிவுஜீவியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. அந்த அவசியமும் எனக்கு இல்லை. எனவே தான் 0% ஓட்டு பதிவு கூட இருக்க கூடாது அப்பொழுது தான் உலகம் நம்மை திரும்பி பார்க்கும், 49ஓ செலுத்த வேண்டும் அப்பொழுது தான் இந்தியா நம்மை திரும்பி பார்க்கும் போன்ற நடைமுறை சாத்தியமற்ற வறட்டுத்தனமான சித்தாந்தங்களில் இருந்து என்னை நான் விலக்கி கொள்கிறேன். இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில், ஒரு எழவு வீட்டில் எது நடைமுறை சாத்தியம் மிக்கதோ அதனையே நான் பின்பற்ற விரும்புகிறேன். அது தான் இயல்பும் கூட.

இந்தியா போன்று ஆரோக்கியமற்ற ஜனநாயக சூழ்நிலையில் தற்போதைய சூழ்நிலையை கொண்டே எதையும் அணுக முடிகிறது. அமெரிக்காவில் உள்ளது போல ஒபாமாவின் கொள்கைகளையும், மெக்கெயின் கொள்கைகளையும் பார்த்து அணுகும் சூழ்நிலையில் இந்திய ஜனநாயகம் இன்றைக்கு இல்லை. தற்போதைய நடைமுறை அப்படியே தொடரத்தான் போகிறது. அதனால் எப்பொழுதும் இந்தியாவில் மாற்றம் வரும் வாய்ப்பும் இல்லை. அதே போல ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்ட மக்கள் புரட்சிகர தத்துவங்களை கைக்கொண்டு இடதுசாரி அமைப்புகளின் பக்கம் திரும்புவார்கள் என்பதும் ஒரு வறட்டு வேதாந்தமே. தேர்தல் என்பது மக்களுக்கு தமிழகத்தில் ஒரு கொண்டாட்டம். மக்கள் இந்த கொண்டாட்டத்தில் இருந்து எப்பொழுதும் தங்களை விலக்கி கொள்ள மாட்டார்கள்.

ஈழத்தில் உள்ள மோசமான சூழ்நிலையும், தமிழர்களுக்கு எதிரான காங்கிரசின் செயல்பாடும், தமிழினத்தின் துரோகியாக மாறிய கருணாநிதியின் அயோக்கியத்தனமும் இன்றைக்கு இருந்திருக்காவிட்டால், நாமும் வறட்டு வேதாந்தங்களை பேசிக் கொண்டு அமைதியாக தேர்தலை புறக்கணித்து விட்டு போய்க் கொண்டு இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழ்நிலை அப்படியானது அல்ல. நாம் நம் எதிர்ப்பை ஏதோ ஒரு வழியில் காட்டியாக வேண்டிய தேவை உள்ளது. அந்த எதிர்ப்பை காட்ட நமக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு இந்த தேர்தல் மட்டுமே..

இப்படியான சூழ்நிலையில் தான் ஜெயலலிதாவின் ஈழப் பிரச்சனை சார்ந்த பல்டி நிகழ்கிறது. இந்தப் பேச்சைக் கொண்டு ஜெயலலிதாவை நம்பலாமா என்று கூட நாம் யோசிக்க முடியாது. நிச்சயமாக ஜெயலலிதாவை நம்ப கூடாது. நம்ப முடியாது. நான் ஏற்கனவே கூறியிருந்தது போல, இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் நாம் ஆதரித்து வாக்களித்து விட முடியாது. அதனால் யார் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்டார். ஆனால் தற்பொழுது தன்னுடைய பதவியை காப்பாற்றும் பொருட்டு தமிழின அழிப்பிற்கு (Genocide) துணையாக நிற்கிறார். எதற்கெடுத்தாலும் தந்தி அனுப்புவதும், நாடகம் ஆடுவதும், தாயே மனது வையுங்கள் என்று சோனியாவிடம் கதறுவதும், என்னால் இவ்வளவு தான் முடியும் எல்லாவற்றையும் செய்து விட்டேன் என புலம்புவதும் என தன்னுடைய சுயமரியாதையை மட்டும் அல்ல தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்பட்ட வகையில் ஒட்டுமொத்த தமிழினத்தின் சுயமரியாதையையும் கருணாநிதி அவமதித்து விட்டார். தன்னுடைய ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தின் பொருட்டு ராஜபக்சேவின் குரலை ஒலித்து கொண்டிருக்கிற காங்கிரசுக்கு கருணாநிதி துணை போய் விட்டார்.

பிரபாகரன் எனது நண்பர் என முதல் நாள் சொல்வதும், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தவுடன் பல்டி அடித்து பேசுவதும் என இவர் நடந்த விதம் தமிழினத்தலைவர் என்பது போல அல்ல. சோனியாவின் வேலைக்காரன் என்ற நிலையில் தான் இருந்து வருகிறது.

இவ்வளவு நடந்த பிறகும் கருணாநிதியை திராவிடத்தின் தலைவர் என்று கூறுபவர்களை பார்த்தால் பரிதாபமாகவே உள்ளது. இவர்கள் இன்னும் கடந்த கால கருணாநிதியையே பார்க்கிறார்கள். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பார்க்க மறுக்கிறார்கள். திராவிடத்தின் தேவைக்காக திமுகவை ஆதரிக்க வேண்டும் என கூறுபவர்கள் கருணாநிதியின் கடந்த ஒரு வருட நாடகங்களை வாய்மூடி பார்த்து கொண்டு மட்டுமே இருக்கின்றனர். தற்பொழுது கருணாநிதி நடத்திக் கொண்டிருப்பது என்ன திராவிட அரசியலா ? அல்லது எதிர்காலத்தில் ஸ்டாலினும், அழகிரியும் நடத்தப்போவது தான் திராவிட அரசியலா ?


கருணாநிதி தன்னுடைய ஆட்சி பறிபோய் விடும் என்ற கவலையை விடுத்து, ஈழ ஆதரவுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு இருந்தால் ஒட்டுமொத்த தமிழினமும் அவரது தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டிருக்கும். இன்று தங்களின் சொந்த காசு போட்டு களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற தமிழின உணர்வாளர்கள் திமுக பின் அணிவகுத்து இருப்பார்கள். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் திராவிடத்தின் தலைவராக, தமிழனத்தலைவராக கருணாநிதியை கொண்டாடி இருக்க முடியும். அப்படி இல்லாத சூழ்நிலையில் கருணாநிதியை தண்டிக்க வேண்டும். மிக மோசமான தோல்வி தான் கருணாநிதிக்கு ஒரு பாடமாக அமையும்.

திமுகவை திராவிட அரசியலின் பார்வையாக நாம் பார்த்தால் அந்த அமைப்பு தவறு செய்யும் பொழுது தண்டிக்கவும் வேண்டும். இந்த தேர்தலில் கருணாநிதி அடையும் படுதோல்வி அவரின் துரோக அரசியலுக்கு தமிழர்கள் கொடுக்கும் பாடமாக இருக்கும். எதிர்காலத்தில் திராவிட அரசியலை இன்னும் ஆழமாக பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்தை திமுகவிற்கு கொடுக்கும்.

அதற்காக ஜெயலலிதாவிற்கு ஒட்டு குத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பதாகவே நான் நம்புகிறேன்.

Leia Mais…
Saturday, April 25, 2009

Software professionals Arrested in Alangudi

”மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் இன்று ஆலங்குடியில் கைது செய்யப்பட்டு உள்ளனர்”

இது குறித்த என்னுடைய ஆங்கில பதிவு

ப.சிதம்பரத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, செய்திகளில் அடிபடாமல் மிரட்டும் முயற்சியாகவே இது தெரிகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி அயோக்கியத்தனம் செய்யும் ப.சிதம்பரத்தின் இந்த ரவுடித்தனத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

வலைப்பதிவில் இருக்கும் பலர் மென்பொருள் வல்லுனர்கள் மற்றும் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் என்பதால் இந்த கைதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில் தங்களுடைய ஜனநாயக கடமையை செய்து கொண்டிருந்த மென்பொருள் வல்லுனர்களை கைது செய்வது என்பது அவர்களின் எதிர்காலத்தை சிக்கலில் தள்ளும் ஒரு முயற்சியாகவே தெரிகிறது.

இதனை எதிர்த்து நாம் நமது குரலை ”நமது நண்பர்களுக்கு” ஆதரவாக வலுவாக பதிவு செய்ய வேண்டும்.

இது குறித்த முழுமையான தகவல்களுக்கு - http://sreesharan.blogspot.com/2009/04/13.html

***************

Nearly 13 Software professionals were arrested in Alangudi near Sivaganga for campaigning against P.Chidambaram. Unconfirmed news from an email source says.

IT’ians for Eelam Tamils” is a Chennai based consortium of Software professionals who support Eelam Tamils. This consortium had led several agitations, hunger strike against the Genocide of Tamils in Tamil Eelam.

In an effort to defeat Congress in Tamil Nadu, various Tamil organizations are campaigning against Congress. IT professionals are part of this campaign in Sivaganga to consolidate the educated People in favor of Tamil Cause.

IT Professionals are the right candidates to tear the Intellectual mask of P.Chidamabaram. Hence the congress led Central Government and its DMK Servants in the state are resorting to arresting the Software Professionals.

Putting the IT professionals Career at Risk and threatening them seems to be the main aim of the Government. This news if true has to be opposed by all the IT professionals. They are not terrorists. They are performing their Democratic rights in the So-called Democratic Country India.

I request all the IT Professionals to come out in Support of our Friends.

***************

திமுக-காங்கிரஸ் கூடணியை தோற்கடிக்க வேண்டும் - ரோஸாவசந்த்தின் பதிவு

முத்துக்குமாரை விதைத்தோம், காங்கிரஸ் கட்சியை இந்த தேர்தலுடன் தமிழகத்தில் புதைப்போம்


Leia Mais…
Monday, April 13, 2009

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.


தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

சொ. சங்கரபாண்டி

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

* * *

மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.

ஓவியம் - நன்றி தூரிகைகளின் துயரப்பதிவுகள் மற்றும் புதினம்

Leia Mais…
Saturday, April 04, 2009

துப்பாக்கிகள் மீதான காதல்

துப்பாக்கிகள் போன்ற ஒரு கொடூரமான ஆயுதம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. உயிர்களை பறிக்கிறது என்பதற்காக மட்டும் அல்ல. துப்பாக்கி கையில் இருந்தால் ஒரு புது தைரியம் கிடைக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் எண்ணமும்,
ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை கவனிக்கும் பொழுது இதனை நான் உணர்ந்திருக்கிறேன். ஈழம் தொடங்கி பல இடங்களில் நடக்கும் போராட்டங்கள் இதையே நமக்கு கூறுகின்றன. இத்தகைய போராட்ட பகுதிகளில் இருக்கும் சாமானிய மக்கள் துப்பாக்கிகளை வெறுக்கவே செய்வார்கள்.

ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் துப்பாக்கிகளை நேசிக்கும் பெருவாரியான மக்கள் இருக்கும் நாடு ஒன்றும் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா தான்.

அமெரிக்காவில் சுமாராக 200 மில்லியன் (20 கோடி) துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பாலானோர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்து கொள்வது, கருக்கலைப்பு போன்றவை முக்கிய சமூக பிரச்சனையாக உள்ளன. தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும். துப்பாக்கிகளை தடை செய்யும் எந்த சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பெரிய கூட்டம் இங்கு இருக்கிறது. மிகவும் வலுவான நிலையில் 2000ம் வருட தேர்தலில் இருந்த அல்கோர் தோல்வியுற்றதற்கு அவர் மீது கன்சர்வேட்டிவ்கள் முன்வைத்த மோசமான பிரச்சாரங்கள் முக்கியமான காரணம். அவர் மீது முன்வைக்கப்பட்ட பல பிரச்சாரங்களில் அவர் துப்பாக்கிகளை தடை செய்யும் சட்டத்தினை கொண்டு வருவார் என்று முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமும் ஒன்று. ஆரம்பத்தில் ஒபாமா கூட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும், கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர் தான். சிக்காகோ சூழலில் வளர்ந்த ஒபாமா அங்கு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மிக சகஜமாக துப்பாக்கிகளில் சுட்டுக் கொண்டு இறந்து போகும் சூழ்நிலையில் அது குறித்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். ஆனால் அது தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அதனை தீவிரமாக வலியுறுத்தாமல் மேலோட்டமாக அது குறித்து பூசிமொழுகி பிரச்சாரம் செய்தார்.

ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்க உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தனிநபர்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து முன் எப்பொழுதையும் விட துப்பாக்கிகளின் புழக்கம் அமெரிக்காவில் அதிகரித்து இருப்பதாக துப்பாக்கிகளை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் என்று எண்ணி பார்த்தால் கணக்கு வழக்கே இல்லை. 10, 15 பேர் ஒரு இடத்தில் இறந்தால் தான் இந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றி செய்தி வெளியே தெரிய வரும். சிறிய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் எல்லாம் வெளியே வராது.

ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம். அதுவும் டெக்சாஸ் போன்ற பகுதிகளில் மிக அதிகம். டெக்சாசுக்கு புதியதாக வந்த பொழுது நாங்கள் கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையில் அதிர்ச்சி அடைய வைத்தன. நியூஜெர்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைவு. வீட்டில் இருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார்கள். கதவை திறந்தவுடன் நெற்றிக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்டு பணம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பர்சில் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பார்கள். டெக்சாஸ் போன்ற பகுதிகளில் திருட்டும் அதிகம். இந்தியர்கள் வீடுகளில் நகைகள் இருக்கும் என்பது பெரிய ரகசியம் அல்ல. நம்மவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக வீட்டின் சந்து பொந்துகளில் மறைத்து வைப்பார்கள். ஆனால் இங்கு திருட வருபவர்கள் மெட்டல் டிடக்டருடன் (Metal Detector) வருவார்களாம். சில நிமிடங்களில் வீட்டில் இருக்கும் மொத்த நகையையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். இது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் கதைகள் அல்ல. மிக சகஜமாக டெக்சாசில் அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக உள்ளது. இங்கு இருக்கும் அப்பார்ட்மெண்ட்களில் துப்பாக்கிச் சூடுகள் இல்லாத அப்பர்ட்மெண்ட் எது என தேட வேண்டியிருக்கும். நியூஜெர்சியில் இத்தனை மோசம் இல்லை.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். இவற்றில் நிறைய குழந்தைகளும் உண்டு என்பது வேதனை அளிக்கும் உண்மை. அமெரிக்க வரலாற்றில் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இவ்வளவுக்கு பிறகும் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த அமெரிக்க அரசியல்வாதிகளால் ஒரு வலுவான சட்டத்தை கூட கொண்டு வரமுடியவில்லை. மக்களின் எதிர்ப்பு அத்தகையது. இதிலே கன்சர்வேட்டிவ்-லிபரல் இடையே கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் உண்டு. ஒபாமா துப்பாக்கிகளை பறித்து விடுவார் என மெக்கெயின் பிரச்சாரம் செய்தார்.

மக்களுக்கு துப்பாக்கிகள் மீது அப்படி என்ன காதல் ?

சமூக விரோத பிரச்சனைகள் காரணமாகவும், வேட்டையாடும் பொருட்டும் துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது தங்களுடைய தனி மனித உரிமையாகவே பெரும்பாலான அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டங்களை பேச்சுரிமை, தனி மனித உரிமைகளை எதிர்க்கும் சட்டமாகவே பார்க்கிறார்கள். இதனால் இங்கே எந்த அரசியல்வாதிக்கும் அத்தகைய சட்டங்களை கொண்டு வரும் தைரியம் இல்லை.

துப்பாக்கிகள் அமெரிக்காவின் கலச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய பொழுது இது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க தொடங்கினர். அது தவிர செவ்விந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் துப்பாக்கிகள் வீட்டின் ஒரு அங்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இவை தவிர ஆரம்பகாலங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுக்கள், காடுகளில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு வர ஒரு பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக துப்பாக்கிகள் சகஜமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் சட்டத்தில் இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவதை வலியுறுத்துகிறது.

A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.

இந்த இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறை துப்பாக்கிகளை தடை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுதும் துப்பாக்கிகளை ஆதரிக்கும் குழுக்கள் இந்த சட்டத்தை சுட்டிகாட்டி துப்பாக்கிகளை பறிப்பது தங்களது தனிமனித உரிமையை பறிப்பதாகும் என கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சட்டதிட்டம் எவ்வாறான சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு பார்வைகள் உள்ளன. அமெரிக்கா மீது பிற நாடுகள் போர் எடுத்தால் ஆயுதங்களை பெருமளவில் கொண்டிருக்கும் மக்கள் அதனை எதிர்த்து போராட முடியும் என்பதே இதன் பொருள். இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு அத்தகைய நெருக்கடி ஏற்படப்போவதில்லை. அதனால் துப்பாக்கிகளுக்கு அவசியமும் இல்லை.

ஆனால் துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காகவே துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் சட்டம் வலியுறுத்துவதாக கூறுகின்றனர். தங்களுடைய பாதுகாப்பிற்கு துப்பாக்கிகள் அவசியம் எனவும் மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக பல வீடுகளில் துப்பாக்கிகள் நிச்சயம் இருக்கும் என்ற நிலை தான் உள்ளது. இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது. அதனால் பல நேரங்களில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

இது தவிர மிக முக்கிய பிரச்சனையாக வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு துப்பாக்கிகளை கையாளுவது மிக சகஜமாக சிறு வயதிலேயே தெரிந்து விடுகிறது. துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது ஒரு கலாச்சாரமாகவே உள்ளதால் பெற்றோர்களே குழந்தைகளுக்கு துப்பாக்கி பயிற்சிகளை கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறு பூசல்களுக்கு கூட துப்பாக்கிகள் வெடிக்கின்றன. பல குழந்தைகள் இறக்கின்றனர். சிகாகோ நகரில் ஒரு வருடத்தில் சுமார் 30ம் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள் என ஒபாமா ஒரு தேர்தல் விவாதத்தில் கூறினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதனால் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதை எதிர்க்கிறார்கள். தங்களுடைய வேலையிடங்களுக்கு (அலுவலகங்களுக்கு) துப்பாக்கிகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. யாராவது அலுவலகத்தில் திடீரென்று நுழைந்து சுட தொடங்கினால் என்ன செய்வது ? எனவே எங்களுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களது வாதம். இங்கே ஒரு சில முக்கியமான அரசு அலுவலகங்களில் மெட்டல் டிடக்கர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் கூட மெட்டல் டிடக்கடர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். ஆரம்பத்தில் இந்தளவுக்கு பயங்கரவாத பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறதோ என தோன்றியது. ஆனால் பிறகு தான் அதன் உண்மையான காரணங்கள் புரிந்தது. யாராவது அரசு அலுவலகங்களில் தங்களுடைய கோபத்தை காட்டி விடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் இதையும் மீறியே இங்கு துப்பாக்கிச் சூடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் நியூயார்க் குடியேற்ப்பு மையத்தில் நடந்தது போல.

இப்படி பல துப்பாக்கிச் சூடு இங்கே நடந்து கொண்டிருந்தாலும், துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் துப்பாக்கிகளை குறை சொல்வது தவறு என்கிறார்கள். துப்பாக்கிகள் தானாக சுடுவதில்லை. மனிதன் தான் சுடுகிறான். எனவே துப்பாக்கிகளை காரணமாக சொல்ல முடியாது. மனிதர்களின் மனநிலையும், சமூக நிலையும் மாறினால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் நடைபெறாது என கூறுகிறார்கள். இந்த வாதமே வேடிக்கையாக உள்ளது. துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது. மனிதன் மனம் இத்தகைய தன்மை மிக்கதே. மிக அரிதாக பயன்படுத்தும் நோக்கம் மறைந்து குடும்பச்சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவற்றுக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்தும் நோக்கம் ஏற்பட்டு விடுகிறது. இது அமெரிக்கர்கள் என்றில்லாமல் இங்கு குடியேறும் அனைவருக்கும் பொருந்தும். சமீபகாலங்களில் துப்பாக்கி சூடு நடத்திய சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.

ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும். அடுத்த நாள் அது மறந்து போய் விடும். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் வெளியாகும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெகு சகஜமாகி விட்டது. ஐயோ, பாவம் என்ற எண்ணத்துடன் சேனல்களை மாற்றும் போக்கு ஏற்பட்டு விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த செய்தியை பார்த்து விட்டு அடுத்த சேனலுக்கு நகர்ந்த பொழுது தான் நாமும் அமெரிக்க மனப்பான்மைக்கு வந்து விட்டோமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

************

துப்பாக்கி கலச்சாரம் (Gun Culture) என்பது பெரும்பாலான நாடுகளில் வன்முறையையே குறிக்கும். ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பதற்கு வேறு பார்வையும் உண்டு. இங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதும் ஒரு கலாச்சாரமே. மேலே கூறியிருப்பது போல அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய காலங்களில் இருந்தே துப்பாக்கிகள் அமெரிக்காவின் வீடுகளில் சகஜமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கமும் கூட. இதன் பிரதிபலிப்பு தான் ஹாலிவுட் திரைப்படங்களில் துப்பாக்கிகள் சகஜமாக பயன்படுத்தபடுவதற்கு முக்கிய காரணம். ஆனால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கிறேன் எனக் கூறி தமிழ் சினிமாவில் தற்பொழுது துப்பாக்கி காட்சிகளை படங்களில் தேவையில்லாமல் புகுத்த தொடங்கி இருக்கின்றனர். ஏன் ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிகள் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன என்ற காரணம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை.

************

ஈழத்தில் துப்பாக்கிகள் போராட்டத்தின் அடையாளமாக கூறப்பட்டாலும் அங்கு துப்பாக்கிகளைச் சார்ந்த வேறு சமூகவியல் பார்வையும் உள்ளது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு துப்பாக்கி கிடைப்பதற்கே மிக கடினமாக இருந்தது. பணத்தேவையும் அதற்கு அதிகம். துப்பாக்கிகளை பெற ஈழத்தில் இருந்த மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதும் கடினம். அந்தளவுக்கு மக்களிடம் பணம் இல்லை. இதனால் துப்பாக்கிகளின் புழக்கம் அங்கு வெகுவாக இல்லை. ஆரம்பகாலத்தில் ஒரு நல்ல துப்பாக்கிக்காக பல போராளிகள் அலைந்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலையீட்டிற்கு பிறகும், வெளிநாட்டுத் தமிழர்கள் பெருமளவில் நிதி அளிக்க தொடங்கிய பிறகும் துப்பாக்கிகள் அங்கு பெருகின. துப்பாக்கிகளின் பெருக்கம் துப்பாக்கிகளை கொண்டிருந்தவர்களை அதிகாரம் மிக்கவர்களாக சமூகத்தில் பிரதிபலித்தது.
துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். தங்களிடம் துப்பாக்கிகள் இருக்கிறது என பகீரங்கமாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தங்களை குறித்த பய உணர்ச்சியையும் தோற்றுவித்தனர். இயக்கங்களை எதிர்த்து பேச மக்கள் அஞ்சும் சூழ்நிலையும் எழுந்தது. துப்பாக்கிகளின் வளர்ச்சியும் பய உணர்ச்சியும் இயக்கங்கள் மத்தியில் அதிகாரமையங்களையும் உருவாக்கியது. தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்ட சட்டங்கள், மற்றவருக்கு அளித்த தண்டணைகள் போன்றவற்றுக்கு துப்பாக்கிகள் கொடுத்த அளவில்லாத சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்.

ஈழம் என்றில்லாமல் துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன. இந்த அளவில்லாத சுதந்திரம் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது. அதே நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு நடக்கும் போராட்டம் மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அதாவது போராட்டத்தினை நடத்த பணத்திற்காக மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக இருக்கும். மக்களை நம்பாமல் தங்களை மட்டும் நம்பும் பொழுது அது போராட்ட பாதையில் இருந்து விலகி சென்று விடுகிறது. ஈழப் போராட்டத்தினை இங்கே பொருத்தி பார்க்க முடியும். ஈழத்திலே உள்ள மக்கள் எப்பொழுதும் ஈழப்போராட்டத்தினை நிர்ணயித்தது இல்லை. அதற்குரிய பணபலம் அவர்களிடம் இல்லை. மாறாக ஆரம்பகாலத்தில் இந்தியா, தமிழகம் (எம்.ஜி.ஆர் போன்றவர்கள்) பிறகு புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்றோரே ஈழப்போராட்டத்தினை நிர்ணயம் செய்தவர்கள். எனவே இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.

************

துப்பாக்கிகளை ஈழத்திலும், அமெரிக்காவிலும் பார்த்தவரையிலும் இந்த துப்பாக்கிகளை விளையாட்டு மொம்மையாக கூட குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவை பாதுகாப்பின் அடையாளம் அல்ல. வன்முறையின் சின்னம். வன்முறையை மனிதன் எளிதாகவும், சுலபமாகவும் கைக்கொள்ள துப்பாக்கிகள் வழிவகுத்து விடுகின்றன.

Leia Mais…
Wednesday, March 25, 2009

தமிழக தேர்தல் கூட்டணி கணக்குகள், வியூகங்கள்

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டணிகளில் எத்தனை இடங்கள், எந்த தொகுதிகள் என்பதில் இருக்கும் அக்கறையும், மந்திரிசபையில் போராடி சம்பாதிக்க கூடிய துறைகளை பெறுவதில் இருக்கும் கரிசனமும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சனைகளுக்காகவோ, ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைக்காகவோ ஏற்படுவதில்லை. தமிழர்களின் போராட்டங்களை முன்னெடுப்பதாக காட்டிக் கொண்ட கருணாநிதி, ராமதாஸ் ஆகிய இருவரின் லட்சணமும் தெளிவாகவே சமீபகாலங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. சோனியாவை மிரட்டி தனக்கு தேவைப்பட்ட இலாக்காக்களை பெற்ற தமிழின தலைவர் தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜனாமா நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கருணாநிதி ஒரு புறம் என்றால், கருணாநிதியின் தமிழின அரசியலை தன் கையில் எடுத்துக் கொள்ள முனையும் ராமதாஸ், தமிழின அழிப்பை செய்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு தமிழின எதிரியான ஜெயலலிதாவிடம் தற்பொழுது உறவாடுகிறார். வைகோ குறித்து எதுவும் பேச தேவையில்லை என நினைக்கிறேன். கருணாநிதியை எதிர்க்க அவருக்கு ஜெயலலிதாவிடம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை. ராமதாஸ், வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகளை நம்பி ஈழத்தமிழர் போராட்டத்தில் இறங்கிய திருமாவின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது. காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்ற வலியூறுத்திக் கொண்டிருக்க, வடமாவட்டங்களில் திருமாவின் செல்வாக்கினை பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி திருமாவை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த தேர்தலில் நீண்டு கொண்டே இருந்த பாமகவின் பேரங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா என பாமக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் இறுதியாக எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அந்தக் கூட்டணிக்கே தாவும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தற்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில், பாமக எப்படியும் அதிமுகவிற்கு தான் செல்லும் என்பது ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த முறை அன்புமணி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நின்றதால் பாமக அதிமுக பக்கம் சென்றடைய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் கூட்டணியை கவனித்தால் 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். 1996ம் ஆண்டு தேர்தலில் கடுமையான தோல்வியை எதிர்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதிமுகவின் பலமான வாக்கு வங்கி ஜெயலலிதாவின் சர்வாதிகார நடவடிக்கைகளால் சரியத்தொடங்கி இருந்தது. எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சியான தலைவரால் எழுப்பபட்ட அந்த மாபெரும் வாக்கு வங்கியை ஜெயலலிதா தன்னுடைய நடவடிக்கைகளால் இழந்தார். இதனால் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் அப்பொழுது பலமான கூட்டணியாக இருந்தது. 1996ம் ஆண்டில் கடுமையாக தோல்வி அடைந்த ஜெயலலிதாவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மைய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.
மிகவும் பலமாக இருந்த திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலமாக இருந்த பாமகவும், தென்மாவட்டங்களில் பலமாக இருக்கும் மதிமுகவும் கொண்டு வரப்பட்டால் தன்னுடைய இழந்த வாக்கு வங்கியை சரிக்கட்டி விடலாம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

சிறிய கட்சிகளான பாமகவும், மதிமுகவும் தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கிகள் மூலம் ”தனித்து நின்று” பெரிய அளவுக்கு வெற்றிகளை பெற முடியாது, கூட்டணி மூலமே வெற்றி பெற முடியும் என்ற உண்மையை உணரத்தொடங்கியிருந்த நேரம் அது. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக தனித்து நின்று தோல்வியை எதிர்கொண்டு இருந்தன. இப்படி ஜெயலலிதா, பாமக, மதிமுக ஆகியவற்றின் தனிப்பட்ட நலன்களுக்காவும், Survivalலுக்காகவும் அமைந்தது தான் 1998ம் ஆண்டு கூட்டணி. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் எந்த பலமும் இல்லை. ஆனால் பிரச்சாரத்திற்கு உதவும் என்பதால் பாஜகவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை மையப்படுத்தியே சென்று கொண்டிருந்த தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்து கூட்டணி அரசியலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான்.

அதன் விளைவு ?

பல சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக அதிகரித்து தற்பொழுது தமிழக அரசியல் முன் எப்பொழுதுதையும் விட குழம்பிய குட்டையாக காட்சி அளிக்கிறது.
கொள்கைகளோ, மக்களின் நலமோ, தமிழர்களின் வாழ்வுரிமையோ இன்றைக்கு முக்கியம் இல்லை. எத்தனை இடங்கள், எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றால் மைய அரசில் எந்த துறை பெறலாம், எந்த துறையை பெற்றால் அதிகம் சம்பாதிக்கலாம், அடுத்து எந்த மகனை, மகளை, பேரனை, பேத்தியை, கொள்ளுப்பேரனை, கொள்ளுப்பேத்தியை அரசியலுக்கு கொண்டு வரலாம் என்பதில் தான் அரசியல் கட்சி தலைவர்களின் கவனம் உள்ளது. இந்திய அரசியல் என்பது நவீன மன்னராட்சி காலமாக மாறி விட்டது.

மக்களை உலகமயமாக்கிய பொருளாதாரம் நோக்கி திருப்புவதன் மூலம் தங்களுடைய பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதும், மக்களுக்கு ஒரு போலியான இந்திய பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டி மக்களை அப்படியே ஆட்டு மந்தைகளாக வைத்திருப்பதும் தான் அரசியல்வாதிகளின் முக்கியமான வேலைத்திட்டம். இதில் இந்தக் கட்சி தலைவர், அந்தக் கட்சி தலைவர் என்ற பேதங்கள் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் கடைக்கோடி தொண்டனும், ஓட்டளிக்கும் கடைக்கோடி தமிழனும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. மைய அரசில் அமைச்சராக இருந்து சம்பாதித்த பணம் தண்ணீராக செலவழிக்கப்படும். யார் அதிகம் பணத்தை வாரி இறைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பது தான் இன்றைய தமிழக தேர்தல் அரசியலாக உள்ளது.

இங்கே மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி முக்கிய தேர்தல் பிரச்சாரம் என்றால் இந்த தேர்தலில் எந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். (வெற்றி பெற்ற பிறகு ஒரு சில இடங்களில் கொடுக்கப்பட்ட இலவச டிவி இப்பொழுது வேகமாக பட்டுவாடா செய்யப்படும் சாத்தியம் உள்ளது). இவ்வாறாக தமிழக மக்கள் தொடர்ச்சியாக ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள். தமிழக மக்களை அவர்களுடைய முக்கிய வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து மிக எளிதாக திசை திருப்பி விட முடியும். 2006ம் ஆண்டு தேர்தலில் சமமாக இருந்த தேர்தல் களத்தை இலவச கலர் டிவி திமுக கூட்டணி பக்கம் லேசாக சாய்த்தது. அதுவே திமுக கூட்டணி அதிக இடங்களை பெற போதுமானதாக இருந்தது. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக மக்களின் பரிதாப நிலையையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இந்த சமயத்தில் மிகவும் பிரிதாபத்திற்குரியவர்கள் யார் ? மக்கள் அல்ல, அரசியல்வாதிகள் நிச்சயமாக அல்ல.

மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.

************

தற்போதைய அரசியல் கூட்டணியை 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் என்பது தான் 1998ம் ஆண்டு இருந்த கூட்டணி. தற்பொழுது அது திமுக, காங்கிரஸ். கூடுதலாக திருமா தற்பொழுது கூட்டணியில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் அப்பொழுது பாமக, மதிமுக, பாஜக இருந்தது. தற்பொழுது பாஜகவிற்கு பதிலாக இடதுசாரிகள் இருக்கின்றனர்.

1998ல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்சிகளின் பலம் இரண்டு தரப்பிலும் சரிந்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே தங்களுடைய பாரம்பரிய பலத்தை இழந்து இருக்கின்றன. சிறிய கட்சிகளான பாமக, மதிமுக போன்றவையும் 1998ல் இருந்த தங்களுடைய பலத்தில் இருந்து கணிசமான பலத்தை இழந்து இருக்கின்றன. இதில் மற்றொரு புதிய வியூகமாக விஜயகாந்த் உருவாகி இருக்கிறார்.

திமுக கூட்டணி

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கும். தனிப்பட்ட பலத்தில் திமுகவை விட அதிமுக பலமான கட்சி என்பதை மறுக்க முடியாது. திமுக வடமாவட்டங்களில் மிகவும் பலமான கட்சி என்றால் அதிமுக தென்மாவட்டங்களில் பலமான கட்சி. ஆனால் கடந்த சில வருடங்களில் மு.க.அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் தென்மாவட்டங்களில் திமுக முன்பை விட பலமாக உள்ளதாக கருதப்படுகிறது. மு.க.அழகிரியை திமுகவிற்கு பலம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். பலவீனம் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வடமாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பலமான தலைவர்களான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்களால் வடமாவட்டங்களில் பலமாக இருந்த திமுக தென்மாவட்டங்களில் சற்று தடுமாறியது உண்மையே. மதிமுகவின் பிளவும் திமுகவை பலவீனமடைய செய்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் அழகிரி திமுகவை பலப்படுத்தியிருக்கிறார் என்ற கருத்து பரவலாக உண்டு. இதனை இந்த தேர்தல் முடிவுகளே நமக்கு தெளிவுபடுத்த முடியும்.

இந்த தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும் பலமாகவே உள்ளது. பாமக அதிமுக பக்கம் சாய்ந்தது இழப்பு தான். என்றாலும் வடமாவட்டங்கள் எப்பொழுதுமே திமுகவின் பலமான பகுதி தான். அதனுடன் திருமாவின் பலமும் சேருகிறது. திருமாவிற்கு சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளில் நல்ல பலம் உள்ளது. திமுகவின் பலத்துடன், திருமாவின் பலமும் சேரும் பொழுது வடமாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக இருக்கின்ற anti-incumbency factorயை கடந்தும் அதிமுக-பாமக கூட்டணி போராட வேண்டியிருக்கும். தவிரவும் விஜயகாந்த் கடந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை வடமாவட்டங்களில் நிருபித்து இருக்கிறார். திமுகவிற்கு எதிராக இருக்கும் ஓட்டுக்களை விஜயகாந்த் பிரிக்கும் பொழுது அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறுவது சுலபமாக இருக்காது.

காங்கிரசுக்கு ஒட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. அவ்வாறு கூறியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. ஆனால் இன்னமும் காங்கிரஸ் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட தலைவர்களின் செல்வாக்கு காரணமாக ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு பலம் இருந்தாலும் அதன் பலம் மாநிலம் முழுவதும் பரவலானது அல்ல. அது எந்தளவுக்கு திமுகவிற்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குரியது. இந்த தேர்தலில் அது தெளிவாகி விடும்.

அதிமுக கூட்டணி

அதிமுக பெரும்பாலும் தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பலமான கட்சி. வடமாவட்டங்களில் திமுகவுடன் ஒப்பிடும் பொழுது பலவீனமான கட்சி. தென்மாவட்டங்களில் ஒரு காலத்தில் மதிமுகவிற்கு நல்ல பலம் இருந்தது. மதிமுகவின் பலம் திமுகவை தென்மாவட்டங்களில் பலவீனப்படுத்தி இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் மதிமுகவின் பலம் பெரிய அளவில் சரிந்து விட்டது. மு.க.அழகிரியால் தென்மாவட்டங்களில் திமுகவின் பலம் அதிகரித்து இருக்கிறது. இந் நிலையில் 1998ம் ஆண்டு இருந்ததை போல அதிமுக-மதிமுக தென்மாவட்டங்களில் பலமான கூட்டணியாக கூற முடியாது.

வடமாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுக சற்று பலவீனமான கட்சி. இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் (சிதம்பரம் போன்ற பகுதிகள்) திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு அடுத்த நான்காவது இடம் தான் அதிமுகவிற்கு என சொல்ல முடியும். ஆனால் பாமகவுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறுகிறது.

பாமகவின் பலம் வடமாவட்டங்களே. வடமாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு நல்ல பலம் உண்டு. அது தேர்தல் கூட்டணியுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறும் என்பது தேர்தல் கணக்கு. வன்னியர் வாக்கு வங்கி என்பது திமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் உள்ளது. திமுகவின் வாக்கு வங்கியும் வடமாவட்டங்களில் வன்னியர்களை பெருமளவில் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாமக வாக்கு வங்கியின் பெரும் பகுதி திமுகவில் இருந்து பிரிந்து வந்ததே ஆகும். இந்த வாக்கு வங்கி மறுபடியும் திமுக நோக்கி செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்பொழுதும் பூசல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாமக தன் வாக்கு வங்கியை சாதி அடிப்படையில் கொண்டு சென்று விடுமோ என்ற கவலை திமுகவிற்கு உண்டு. பெரிய கட்சியான திமுக தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் பாமகவிற்கு உண்டு. இதனால் இரண்டு கட்சிகளும் தலைமை மட்டத்தில் தங்களுக்குள் தாக்கி கொள்வதன் மூலம் இரு கட்சியின் தொண்டர்கள் இடையே ஒரு சுவரினை எழுப்பி தங்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர். ராமதாஸ் அடிக்கடி கருணாநிதியை தாக்குவது இதன் அடிப்படையில் தான். இதனால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் தற்பொழுது இரண்டு கட்சி தொண்டர்களும் முட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமதாசிற்கு அது தான் தேவை.

பாமகவின் தற்போதைய பலம் 1996/1998ல் அது பெற்ற வாக்கு வங்கி கொண்டே கணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு அதன் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. குறிப்பாக 2006 சட்டமன்ற தேர்தலில் பாமக தடுமாறியது. நான் மேலே கூறியுள்ளது போல பாமகவின் சரிவு என்பது திமுகவிற்கு பலம். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது கூட்டணி அளவில் அதிமுக-பாமக என்பது திமுக-விசி-காங்கிரசுடன் ஒப்பிடக்கூடியதாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தால் அதிமுகவிற்கு அது சாதகமாகலாம்.

விஜயகாந்த்

விஜயகாந்த் திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு பெறக்கூடியவராக வளர்ந்து வருகிறார். விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் அவரது அரசியல் பயணம் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுகிறது. அவரது நகர்வுகள் ஒரு நீண்ட கால இலக்கை நோக்கி இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த சரியான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணமாகவே அவர் கடந்த தேர்தலில் 8% வாக்குகளை பெற்றார். அவரது Masterstroke என்றால் அது விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றதே. தற்போதைய தேர்தலிலும் அவரது அணுகுமுறை சரியான திசையிலேயே உள்ளது.

அதே நேரத்தில் அவர் கடந்த தேர்தலில் பெற்ற 8% வாக்குகளை அவரது வாக்கு வங்கியாக கருத முடியாது. விஜயகாந்த் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் இந்த முறை உயர்வதற்கும், சரிவதற்கும் சமமான வாய்ப்புகள் உண்டு. எனவே அவர் பெற்ற 8% என்பதே உறுதியான வாக்கு வங்கியாக முடியாது. அது 12% உயரவும் கூடும். 5%மாக குறையவும் கூடும்.

வாக்கு வங்கி என்பது தலைவர், கட்சி, சாதி இவை சார்ந்த விசுவாசத்தின் அடிப்படையில் உருவாகுவதே ஆகும். கருணாநிதியின் வசீகரம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சி போன்றவை காரணமாக இருக்கும் வாக்கு வங்கி அசைக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. என்னுடைய ஓட்டு எப்பொழுதும் உதயசூரியனுக்கு தான், இரட்டை இலைக்கு தான் என கூறுபவர்கள் பல காலமாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு தலைமை, கட்சியை சார்ந்த விசுவாசமான வாக்கு வங்கி தான் திமுக, அதிமுகவினுடையது. அது போல பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை சாதி சார்ந்தவை. அதுவும் ஒரு விசுவாசமான வாக்கு வங்கியே.

ஆனால் விஜயகாந்தின் வாக்குகள் திசை மாறக்கூடியது. திமுக, அதிமுகவிற்க்கு பதிலாக மற்றொரு கட்சி வேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகளே விஜயகாந்த்திற்கு விழுகின்றன. இவை தேர்தல் களநிலையை பொறுத்தது. தேர்தல் களநிலை மாறும் பொழுது விஜயகாந்த் பெறும் வாக்கு விகிதங்களும் மாறும். உதாரணமாக ஒரு பெரிய அலை அடித்தால் விஜயகாந்த்திற்கு விழும் வாக்குகள் வேறு திசையில் போய் விடும். தவிரவும் மைய அரசுக்காக தேர்தல் நடக்கும் பொழுது விஜயகாந்த்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்ற கேள்வியும் உண்டு. மாநில அரசியல் என்னும் பொழுது அது வேறு விதமான தாக்கத்தை விஜயகாந்த்திற்கு ஏற்படுத்தும். இதனால் தான் விஜயகாந்த் தேர்தலை புறக்கணிப்போம் என சில காலமாக பேசிக் கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன்.

விஜயகாந்த் எங்கிருந்து வாக்குகளை பெறுவார் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக வாக்களிக்க வருபவர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் தான் விஜயகாந்திற்கு அதிகளவில் வாக்களிக்க போகிறவர்கள். கடந்த தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்கள் இம்முறையும் அவருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் உண்டு.

விஜயகாந்த எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பெறுவார் என்ற கேள்வியும் உண்டு.

பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களித்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர் திடீரென்று ஒரு புதிய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. கவர்ச்சியின் காரணமாக சிலர் வாக்களிக்க கூடுமே தவிர பெரிய கட்சியின் வாக்குகள் விஜயகாந்த்திற்கு மாறாது. ஆனால் கூர்ந்து கவனிக்கும் பொழுது அதிமுக வாக்கு வங்கியை கவரக்கூடிய தன்மை விஜயகாந்த்திற்கு உண்டு. ஏனெனில் சினிமா கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதே அதிமுகவின் வாக்கு வங்கி. அதை விஜயகாந்த் பெறுவது சுலபம். மாறாக திமுகவின் வாக்கு வங்கியை பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல. என்ன தான் ஈழப்பிரச்சனையை சார்ந்து திமுக விமர்சிக்கப்பட்டாலும் திராவிட அரசியல் என்னும் பொழுது பெரும்பாலானோர் திமுகவை நோக்கியே செல்கின்றனர். ஸ்டாலின், அழகிரி செயல்பாடுகள் எதிர்காலத்தில் அதனை மாற்றலாம். ஆனால் குறுகிய காலத்தில் திமுகவின் பலம் சரியப்போவதில்லை.


வேறு கட்சிகள்

வேறு பல உதிரிக் கட்சிகள் இருந்தாலும், இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொருவரும் இருக்கிறார். அவர் தான் சரத்குமார். தென்மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமார் எந்தளவுக்கு நாடார் சமூக ஓட்டுக்களை பெறுவார் என்ற கேள்வியும் தற்பொழுது உள்ளது. சரத்குமார் இது வரையில் தன்னை ஒரு அரசியல் சக்தியாக நிருபிக்கவில்லை. சரத்குமார் நாடார் சமூகத்தை மையமாக வைத்து கட்சி தொடங்கும் முன்பே நாடார் சமூகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் ”சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்” என்ற அமைப்பு சரத்குமார் திமுகவில் இருந்த காலங்களிலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட திருநெல்வேலி மாநாட்டிற்கு நானும் சென்றிருக்கிறேன். இது நாடார் சமூகத்தை ஒன்று திரட்டி சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க செய்யும் ஒரு முயற்சி என நான் கருதினேன். ஆனால் ஏனோ சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க வில்லை. ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரை இறக்கி விட்டிருக்கிறார். நாடார் சமூகம் மத்தியில் சிவந்தி ஆதித்தனுக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே ஒரு சில தொகுதிகளில் சரத்குமாரை உதாசீனப்படுத்தி விட முடியாது என்பதே என்னுடைய எண்ணம். ஆனால் மாநில அளவில் கூட்டணியின் வெற்றி பலத்தை நிர்ணயிக்கும் பலம் இவருக்கு இல்லை.


கூட்டணி அளவில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) திமுகவிற்கு பலவீனமானதே. அதே நேரத்தில் அது மட்டுமே தேர்தலில் பெரிய வெற்றியை தற்பொழுது கொடுத்து விட முடியாது. இந்த தேர்தலில் இரு கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்யக்கூடியாக சக்தியாக விஜயகாந்த் இருப்பார் என தோன்றுகிறது. விஜயகாந்த அதிகளவில் ஓட்டுக்களைப் பிரித்தால் திமுக, அதிமுக கூட்டணி இரண்டும் சமமான இடங்களை பெற முடியும். விஜயகாந்த் அதிகமாக ஓட்டுக்களை பிரிக்காவிட்டால் அதிமுக வெற்றி பெறும்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பிரித்த 8% வாக்கு தான் தற்போதைய திமுக அரசை மைனாரிட்டி அரசாக்கியது.

விஜயகாந்த்தின் முந்தைய 8%, தற்பொழுது 12% என்ற அளவுக்கு உயர்ந்தால் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

8%, 5-6% என்றானால் அதிமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்

முழுமையான 40 யாருக்கும் கிடைக்காது

மக்களுக்கு ?
சில்லறை காசும், பட்டை நாமமும் கிடைக்கும்.

Leia Mais…
Monday, March 23, 2009

பேப்பர் வாங்கலையோ பேப்பர்

இன்று ஊடகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அது பலரையும் சென்றடையும் வழிகளை இன்று ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. விஜய் கத்திய காட்டு கத்தல் அமெரிக்கா வரை யூடிப் மூலமாக எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் வருகைக்கு பிறகு ஊடகங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் 1990களுக்கு முன்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாமல் வெறும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவை மூலம் தான் செய்திகள் மக்களைச் சென்றடையும். நாளிதழ்களில் ஆரம்பகாலங்களில் தினத்தந்தியின் இடம் கிராமப்புறங்களிலும் பெருவாரியான இடங்களிலும் அசைக்க முடியாமல் இருந்தது. தினமணியின் சந்தா கூட தினமலருக்கு ஆரம்பத்தில் இருந்ததில்லை. ஆனால் தினமலர் தன்னுடைய திறமையான மேலாண்மையால் படிப்படியாக கிராமங்களில் நுழைந்து தினத்தந்தியின் இடத்தை பிடிக்க தொடங்கியது. தினமலர், தினத்தந்தி, தினகரன், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பின் எத்தனையோ தனி நபர்களின் உழைப்பு இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமானிய தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றைக்கு இந்த ஊடகங்களை வளர்த்து இருக்கிறது.

எழுத்து ஆர்வம் என்பது ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளரும் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. வலைப்பதிவுகளில் இன்றைக்கு எழுதி கொண்டிருக்கும் பலருக்கும் பல்வேறு வழிகளில் எழுத்து ஆர்வம் ஏற்பட்டிருக்கும். எனக்கு பத்திரிக்கை விற்பனை அடிப்படையில் தான் எழுத்து ஆர்வம் ஏற்பட்டது. சிறிய வயதில்
இருந்தே பத்திரிக்கைகளின் வாசனையிலேயே வளர்ந்தேன் என சொல்ல முடியும். அதற்கு காரணம் என்னுடைய அப்பா ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்தப் பணியின் சிரமம் காரணமாக அதனை நிறுத்தினார்.

இன்றைக்கு எப்படியோ தெரியாது. ஆனால் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரதியையும் மிகவும் கடினப்பட்டே விற்க வேண்டியிருக்கும். சந்தா அவ்வளவு எளிதில் கிடைத்து விடும். டீக்கடை, சலூன் போன்ற பல இடங்களில் ஓசிப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டு கிராமப்புற பகுதிகளில் பத்திரிக்கைகளை விற்பது அவ்வளவு எளிது அல்ல. சிறு, பெரு நகரங்களில் பத்திரிக்கைகள் விற்பது கிராமப்புறங்களுடன் ஒப்பிடும் பொழுது கொஞ்சம் சுலபம். எங்களைப் போன்ற நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத இரண்டாங்கெட்டான் இடம் என்றால் சிக்கல் தான். நெய்வேலியின் புறநகர்ப்பகுதியான மந்தாரக்குப்பம், தாண்டவன் குப்பம் போன்றவை தான் எங்கள் ஏரியா. இது நகரமும் இல்லை. கிராமமும் இல்லை என்ற சிக்கலான பகுதிகள். நெய்வேலி டவுன்ஷிப் என்று சொல்லப்படுகிற நெய்வேலி நகரத்தில் பத்திரிக்கைகள் விற்பது கொஞ்சம் சுலபம். அங்கும் சிக்கலகள் இருக்கவே செய்கின்றன.

பத்திரிக்கை விற்பனை என்பது கடினமான பணி. அதிகாலையிலேயே எழுந்து பத்திரிக்கை வேன்களில் இருந்து வந்திருக்கும் பத்திரிக்கை கட்டுகளை பிரிக்க வேண்டும். அனைத்து பத்திரிக்கைகளும் ஒரே நேரத்தில் வந்து விடாது. சில பத்திரிக்கைகள் 4 மணிக்கே வரும். சில பத்திரிக்கைகள் வருவதற்கு 5 மணி ஆகலாம். ஹிந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை சென்னையில் இருந்து வரும். தினத்தந்தி கடலூரில் இருந்தும் தினமலர் புதுவையில் இருந்தும் வரும். இப்படி அனைத்து பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தவுடன் அதனை பகுதி வரியாக சந்தாக்களின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேப்பர் போடுவதற்கு என்று ஒருவர் இருப்பார். பேப்பர் போடுவது பெரும்பாலும் ஒரு பகுதி நேர வேலை தான். பேப்பர் போட்டு முடித்தவுடன் அவர்களின் முழு நேர வேலைக்கு செல்ல வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இந்த வேலையை செய்வார்கள். இந்த பத்திரிக்கை விநியோகத்தின் முக்கிய குறிக்கோள் அதிகாலையில் சீக்கிரமே பத்திரிக்கைகளை விநியோகித்து விட வேண்டும். அப்பொழுது தான் அது விற்பனையை அதிகரிக்கும். பத்திரிக்கை விநியோகம் தாமதமானால் பத்திரிக்கை சந்தாக்களை இழக்க நேரிடலாம்.

பத்திரிக்கை வாங்குபவர்களுக்கு அதிகாலையிலேயே பத்திரிக்கை வேண்டும். காலையில் எழுந்து காப்பியுடன் பத்திரிக்கை வாசித்தால் தான் பலருக்கு காலைப் பொழுது உகந்ததாக இருக்கும். எனவே காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் பத்திரிக்கை இல்லாவிட்டால் எங்கள் கடைக்கு வந்து கத்தி விட்டு செல்லும் பலரை பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் தாமதம் தவிர்க்க முடியாதது. பத்திரிக்கை அலுவலகங்களில் இருந்து வரும் பத்திரிக்கை வேன் தாமதமானால் பத்திரிக்கைகளை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும். மழைக்காலங்களில் வேகமாக பத்திரிக்கைகளை விநியோகம் செய்ய முடியாது. இதனாலும் விநியோகம் தாமதமாகும்.

அது போல பத்திரிக்கை விநியோகம் செய்வதற்கும் அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். விநியோகிக்கும் நபரை பொறுத்தே பத்திரிக்கை விற்பது அதிகரிப்பதும், குறைவதும் நடக்கும். விநியோகிப்பவர் ஒவ்வொரு நாளும் விநியோகிப்பதை தாமதப்படுத்தினால், காலையில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பத்திரிக்கைகளை நிறுத்தி விடுவார்கள். சரியான நேரத்தில் பத்திரிக்கை விநியோகம் செய்யப்பட்டால் வியபாரம் தொடர்ச்சியாக இருக்கும். பத்திரிக்கை விநியோகிப்பவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்து விடுவார்கள். அப்படியான சூழ்நிலையில் அனைத்துமே தாமதமாகும்.

நகர்ப்புறங்களில் ஒரு பத்திரிக்கையை நாம் வாங்க வேண்டும் என்றால் டெபாசிட் தொகை கொடுக்க வேண்டும். ஏஜெண்டும் பத்திரிக்கை அலுவலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை அனுப்புவார்கள். ஆனால் எங்களைப் போன்ற ஏஜெண்ட்களுக்கு அந்த வசதி எல்லாம் கிடையாது. டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை என்பது சமீபகாலங்களில் ஏற்பட்ட மனநிலை தான். ஆரம்பகாலங்களில் அதனை கட்டாயமாக்க முடியாது. சிலர் கொடுப்பார்கள். பலர் கொடுக்க மாட்டார்கள். எனவே பத்தி்ரிக்கையை போட்டு விட்டு தான் பணம் வாங்க வேண்டும். சில நேரங்களில் அது வருவதற்கும் தாமதம் ஆகும். தாமதமாகிறது என பத்திரிக்கையை நிறுத்தி விட முடியாது. அப்படியே விட்டு விடுவார்கள். பத்திரிக்கை போட்டு கொண்டே அவர்களிடம் பழைய பாக்கியையும் நெருக்கி பெற வேண்டும். அதனால் பத்திரிக்கை அலுவலகத்திற்கு பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை நேரும் பொழுது நம் கை காசோ, கடனோ வாங்கி கட்ட வேண்டும். பிறகு முழுமையாக வசூலானால் திருப்பி செலுத்த வேண்டும். சில நேரங்களில் 15ம் தேதி வரை கூட போட்ட பத்திரிக்கைகளுக்கு காசு முழுமையாக கிடைக்காது. பத்திரிக்கைகளை மாதம் முழுக்க வாங்கி விட்டு வீட்டை காலி செய்து விட்டு போனவர்களும் உண்டு. அந்த நஷ்டத்தையெல்லாம் ஏஜெண்ட் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கேட்காமலேயே கூடுதல் பிரதிகள் அனுப்பி விடுவார்கள். அதையெல்லாம் விற்க வேண்டும். பெரும்பாலும் கடைகளில் கூடுதல் பிரதிகள் போட்டு விற்க முயற்சிப்போம். செய்திகளின் பரபரப்பினை பொறுத்து அனைத்து பிரதிகளும் விற்று, இன்னும் பல பிரதிகள் கூட தேவைப்படும். சில நேரங்களில் கூடுதல் பிரதிகள் விற்காது. இதனை திருப்பி அனுப்ப வேண்டும். விற்காத பிரநிதிகளுக்கு ஏஜெண்ட்களும் கொஞ்சம் பொறுப்பேற்க வேண்டும். எனவே எப்படியாயினும் விற்காவிட்டால் கொஞ்சம் நஷ்டம் தான்.

இப்படி எல்லாம் கடினப்பட்டு செய்யும் பத்திரிக்கை தொழிலால் பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்காது. நகர்ப்புற நியூஸ் ஏஜண்ட்கள் வேண்டுமானால் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம். ஆனால் கிராமப்புறங்களில், எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளில் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியமாக கூட பத்திரிக்கை வருமானத்தை கருத முடியாது என்பது தான் உண்மையான நிலை.

இவ்வளவு கடினப்படும் சூழ்நிலையிலும் அந்த விற்பனைக்கு போட்டி உண்டு என்பதும், தொடர்ச்சியாக நமது விற்பனையை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் ஏஜென்சி பறிபோய் விடும் என்பதும் அடுத்த பிரச்சனை. சர்குலேஜன் உயர்த்த திட்டங்களை வகுக்க பத்திரிக்கை அலுவலத்தில் இருந்து நேரடியாக பிரதிநிகள் வருவார்கள். மறைமுகமாக நமக்கு தெரியாமல் ஆய்வு செய்து, இந்த வாய்ப்புகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை ? பத்திரிக்கை விநியோகம் ஏன் தாமதம் ஆகிறது என்று நெருக்குதல் தருவார்கள். குறிப்பாக தினத்தந்தி போன்ற நிர்வாகங்கள் ஏஜெண்ட்களை நெருக்குதல், ஏஜென்சியை எடுத்து விடுவேன் போன்ற மிரட்டல்கள் மூலமே பத்திரிக்கை விற்பனை அதிகரிக்க முடி்யும் என்ற மேலாண்மை தத்துவம் உடையவர்கள். மாறாக தினமலர், ஏஜெண்ட்களை அரவணைத்து சென்று விற்பனையை அதிகரிக்கும் மேலாண்மையை கொண்டவர்கள். அதனால் தான் தினமலர் தினத்தந்தியின் இடத்தை வேகமாக பிடித்தது. தினத்தந்தி வைத்திருப்பவர்கள் தினமலர் ஏஜென்சியை எடுக்க கூடாது. ஆனால் ஹிந்து போன்ற போட்டியில்லாத பத்திரிக்கைகளை நடத்தலாம். தினமலரில் அப்படி எதுவும் விதி ஆரம்பகாலங்களில் இருந்ததில்லை. இப்பொழுது கொண்டு வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

நான் நேரடியாக பத்திரிக்கை விநியோகம் போன்றவற்றை செய்ததில்லை. என் வீட்டில் நடக்கும் விடயங்களை சிறு வயதில் இருந்து தொடர்ந்து கவனித்து வந்ததில் பெற்ற அனுபவத்தை தான் மேலே கூறியிருக்கிறேன். ஆனால் பத்திரிக்கை விற்பனைக்கு சந்தா பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். வலைப்பதிவில் எந்த பத்திரிக்கைக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினேனோ, அதே பத்திரிக்கையை தான் முதன் முதலாக எங்கள் பகுதியில் விற்க முனைந்தேன். ஆம், ஹிந்து பத்திரிக்கைக்கு ஒரு காலத்தில் களத்தில் இறங்கி சந்தா சேர்த்திருக்கிறேன்.

ஹிந்து அப்பொழுது முக்கியமான நகர்ப்புற பகுதிகளில் மட்டும் தான் இருந்தது. கிராமங்களிலோ, எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளிலோ இருந்ததில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் இருந்தது. ஹிந்து தனது சந்தாவை விரிவாக்கும் பொருட்டு நகரங்களுக்கு வெளியே இருக்கும் பகுதிகளையும் குறிவைக்க தொடங்கியது. எனவே நெய்வேலி நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில் சந்தா பிடிக்க எங்களை அணுகியது. ஆனால் எங்கள் பகுதியில் எல்லாம் அதிகம் ஹிந்து படிக்க மாட்டார்கள். தவிரவும் ஏற்கனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்கிக் கொண்டிருப்பவர்களை அணுகவும் முடியாது என்பது என் அப்பாவின் நிலை. ஆனால் முயற்சித்து பாருங்கள். ஆரம்பத்தில் சில பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்கிறோம். விற்பனையாகாவிட்டால் திரும்ப பெற்று கொள்கிறோம் என்றார்கள். நான் ஆங்கில வழிப் பள்ளியில் படித்து கொண்டிருந்தால் பத்திரிக்கையை விநியோகம் செய்யும் பழனி என்பவருடன் என் அப்பா என்னையும் அனுப்பினார். ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பவர்களை பார்த்து சந்தா படிப்பது தான் எங்கள் இலக்கு. ஹிந்துவில் வெளிவரும் பல்வேறு பகுதிகளை விளக்கி சந்தா பிடிக்க வேண்டும். ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களுடைய வழக்கமான தூண்டில். தினமும் வாங்கா விட்டால் ஞாயிற்று கிழமை மட்டும் வாங்கிப் பாருங்கள் என்பது அடுத்த இலக்கு. நான் அப்பொழுது ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தாக ஞாபகம். அது ஒரு வித்யமான தனி அனுபவமாக இருந்தது. ஆங்கிலம் படிக்க கூடியவர்களை குறிவைத்து பேசி எங்களாலும் சந்தா பிடிக்க முடிந்தது.

இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...

(தொடரும்)

பி.கு. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலானது. ஒவ்வொருவரின் அனுபவங்களுக்கு ஏற்ப அவர்களது கருத்துக்கள் மாறலாம். இது பத்திரிக்கை விற்பனை குறித்த என் பார்வை மட்டுமே.

Leia Mais…
Wednesday, March 18, 2009

தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் திருவிழா காலம் இது. இந்த தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமும், வேலையும் அதிகமாக இருக்கும். மக்களும் யார் யாருடன் சேர்வார்கள் ? தங்களுடைய தொகுதியில் யார் வெல்வார்கள் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வத்தை காசுக்கும் காரியத்தை ஊடகங்கள் கச்சிதமாக செய்யும்.

தொலைக்காட்சி சானல்களின் பெருக்கத்திற்கு முன்பு இந்த தேர்தல் கால விற்பனையை மொத்த குத்தகை எடுத்திருந்தது அச்சு ஊடகங்கள் தான். அச்சு ஊடகங்கள் தங்கள் சந்தாவை அதிகளவில் பெருக்க இந்த தேர்தல் காலங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அச்சு ஊடகங்களின் சர்குலேஷன் பிரதிநிதிகள் பத்திரிக்கை ஏஜெண்ட்களை தேடி ஊர் ஊராக அலைந்து தற்பொழுது இருக்கும் பிரதிகளை விட கூடுதல் பிரதிகளை விற்க விற்பனையாளர்களை நெருக்குவார்கள். அவ்வாறு விற்பனையை பெருக்காத ஏஜெண்ட்கள் எதிர்காலத்தில் மாற்றப்படுவீர்கள் என எச்சரிக்கவும் படுவார்கள். இதற்கு பயந்து தேவைக்கு அதிகமான கூடுதல் பிரதிகளை வாங்கியாக வேண்டிய சூழ்நிலையில் ஏஜெண்ட்கள் இருப்பார்கள். சில நேரங்களில் இவ்வாறு கூடுதலான பிரதிகளை பெற்று விற்க முடியாத பிரதிகளை திரும்ப எடுத்துக் கொள்ள கூட தினத்தந்தி போன்ற சில ஊடக நிறுவனங்கள் மறுத்து விடும். தினமலரின் வளர்ச்சிக்கு முன்பாக தினத்தந்தி நிர்வாகம் இந்த விடயங்களில் சற்று சர்வாதிகாரமாகவே நடந்து கொள்ளும். தினமலர் வளர தொடங்கிய பின்பு, தினத்தந்தியின் சந்தை சரிவுக்குள்ளானதை தொடர்ந்து தான் தினத்தந்தி நிர்வாகத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. தினத்தந்தி, தினமலர் நிர்வாகங்களை ஒப்பிடும் பொழுது மேலாண்மை ரீதியில் தினமலர் எத்தனையோ திறமை மிக்கது என கூற முடியும். தினத்தந்தியின் மேலாண்மை ஒரு மன்னார் அண்ட் கம்பெனியை விட மோசமானது. ஏஜெண்ட்களை மிரட்டும் தொனியை தினமலர் நிர்வாகத்தில் நான் பார்த்ததில்லை. தினமலரின் இத்தகைய அணுகுமுறை தான் தினமலரின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என கூற முடியும். இது ஒரு புறம் இருக்கட்டும்.

தேர்தல் நேரத்தில் விற்பனையை பெருக்க இப்படி கள அளவில் முயற்சியை மேற்கொள்ளும் ஊடகங்கள், செய்தி மட்டத்திலும் பரபரப்பினை சேர்ப்பார்கள். அப்படி சேர்த்தால் தான் பத்திக்கை அதிகமாக விற்கும். வழக்கமாக பத்திரிக்கைகள் பக்கமே திரும்பாத பலர் தேர்தல் காலங்களில் மட்டும் பத்திரிக்கைகள் வாங்குவது உண்டு. சராசரியாக சுமார் 10-20% அதிக விற்பனையை தேர்தல் காலங்களில் பார்க்க முடியும். சில இடங்களில் இது அதிகமாகவும் இருக்கலாம். தற்போதைய தொலைக்காட்சி காலங்களில் பத்திரிக்கைகளின் இந்த தேர்தல் கால வருவாயினை தொலைக்காட்சி ஊடகங்களும் விளம்பரங்கள் மூலமாக பங்கு போட்டு கொள்கிறார்கள்.

இப்படி தேர்தல் காலங்களில் தங்களின் வருவாய் அதிகரிப்பது தான் காரணமோ என்னவோ இந்த ஊடகங்களுக்கு ஜனநாயகத்தின் பெருமை தேர்தல் காலங்களில் தான் தெரியவரும். ஊடகங்கள் தேர்தல் காலங்களில் ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கும். இந்தியாவில் ஜனநாயகம் செழித்து ஓங்குவதாக நம்ப வைக்க முனைவார்கள். சீமானை கைது செய்ய முழுக்கமிட்ட தினமலர் தேர்தல் ஜனநாயகம் குறித்து புல்லரிக்க பேசும். ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் ஜனநாயகம் தான். வெறும் மேடைப் பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டம், பொடா சட்டம் போன்றவை மூலமாக பலர் சிறையில் தள்ளப்படும் இந் நாட்டினை, ஜனநாயக நாடு என்று கூறுவதே கேலிகூத்தானது. சீனா, சிறீலங்கா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஜனநாயகம் ஏதோ இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

தேர்தல் காலங்களில் தேர்தல் கணிப்புகளும், அலசல்களும் சுவாரசியம்மிக்கவை. இவர் வெற்றி பெறுவார் என காரணங்களை அடுக்குவதிலும், அவர் தோற்பார் என ஆருடம் கூறுவதும் போன்ற விவாதங்கள் ரொம்ப சாதரணமாக டீக்கடை, பேருந்து நிலையங்கள் எங்கள் அலுவலக கேபிடேரியா வரை நடைபெறுவது உண்டு. இப்படியான விவாதங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது தமிழ் வலைப்பதிவுகளிலும் அதிகளவில் இடம் பெற்றது. நண்பர்கள் இடையே விவாதித்ததை முதன் முறையாக எழுத்து வடிவம் கொடுத்து வலைப்பதிவில் எழுதியது எனக்கு ஒரு சகமான அனுபவம். அப்பொழுது வலைப்பதிவுகளில் இருந்த தமிழக தேர்தல் பரபரப்பு இப்பொழுது காணப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் தனிப்பட்ட அளவில் தற்போதைய ஈழப் பிரச்சனை சார்ந்த சூழ்நிலையும், அதனை புறக்கணிக்கும் தமிழக/இந்திய அரசியல்வாதிகளின் போக்கும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டினையும் குறைத்து இருக்கிறது. அரசியல்வாதிகளின் பின்னே இருந்து இந்த தேர்தலின் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளைப் பற்றிய புரிதல் முந்தைய காலங்களை விட தற்பொழுது அதிகம் உள்ளது. இதுவும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது.

அதே நேரத்திலே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் இந்திய அரசியல் ஒரு குழம்பிய குட்டையாக காட்சி அளிப்பது ஒருவகையில் ஆறுதலையும் தருகிறது. பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவை ஹிந்தி, ஹிந்து மதம் சார்ந்த ஒரே தேசியமாக கட்டமைக்க இந்திய தேசிய சக்திகள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து முனைந்து வந்திருக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை தன்மையுடன் கட்டி எழுப்ப முனைந்த அந்த பிம்பம் இன்றைக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் சரிவு மூலம் ஒரளவிற்கு உடைக்கப்பட்டிருக்கிறது. முன் எப்பொழுதையும் விட இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. மாநில கட்சிகள் தங்களின் செல்வாக்கினை தக்க வைக்க அதிகளவில் முனையும். குறைந்தபட்சம் இரண்டு/மூன்று பிரதமர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெறும் என்றளவில் இந்திய அரசியல் குழப்பமாக உள்ளது.

அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுப்பினால் - மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, மாயாவதி, தேவ கொளடா, சந்திரபாபு நாயுடு, முலயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதாவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா என அடுக்கப்படும் பெயர்கள் தலைசுற்றலை ஏற்படுத்துகின்றன. இவர்களில் அதிகளவு வாய்ப்பு மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, மாயாவதி போன்றோருக்கு உள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என கூறி விட முடியாது.

சந்திரசேகர், தேவ கொளடா போன்றோர் எல்லாம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சியில் அமர்ந்த நிகழ்வுகளை நிச்சயம் அடுத்த சில மாதங்களில் மறுபடியும் எதிர்பார்க்கலாம்.

முலயாம் சிங் யாதவ் உத்திரபிரதேசத்தில் அதிக இடங்களை பெற்றால் அவரும் நாற்காலியில் உட்கார முனைவார். காங்கிரஸ்-முலயாம் கூட்டணி உத்திரபிரதேசத்தில் ஏற்பட்டிருந்தால் முலயாம் அதிக இடங்களை பிடிக்க கூடும் என்ற காரணத்தால் தான் உ.பியில் தோற்றாலும் பரவாயில்லை கூட்டணி தேவையில்லை என காங்கிரஸ் முலயாமை விட்டு விட்டது. கர்நாடகத்தில் தேவ கொளடா அதிக இடங்களை பிடித்தால் மறுபடியும் பிரதமராகலாம். இதே போன்ற ஒரு தருணத்தில் தான் ஜனதா தள கட்சியில் இருந்து தேவ கொளடா யாருமே எதிர்பார்க்காமல் பிரதமரானார்.

இத்தகைய ஒரு தருணத்தில் தான் உலக வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு ”தமிழன்” பிரதமராகும் ஒரு வரலாற்று நிகழ்வு வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரைக்கும் எனக்கு மகிழ்ச்சி தான். அந்த தானை தமிழன் ஜி.கே.மூப்பனாருக்கு பிறகு அந்த இடத்தை அடைய மற்றொருவர் முயற்சிக்கிறார். அதனை சுப்பிரமணியம் சாமி நிறைவேற்ற போகிறாராம். இரண்டாவது முறை நடக்காமல் போனது மூன்றாவது முறை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது தான் ஆபத்தானது. பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல், ஜெயலலிதா தமிழகத்தில் அதிக இடங்களை (30+) கைப்பற்றினால், ஜெயலலிதா தலைமை அமைச்சராகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என தமிழக மக்கள் சமமாக படி அளந்து ஒரு மனுநீதிச்சோழனாக தீர்ப்பு அளித்தால் தமிழகம் தப்பிக்கும். இல்லாவிட்டால் உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற அவலங்கள் எல்லாம் நடந்தேறும்.

**********

கடந்த தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் மறுபடியும் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்று போனது. தற்போதைய தேர்தல் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆட்சியை பிடிக்க அற்புதமான வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி மீது இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 2004ல் இருந்ததை விட விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கை தரத்தை கடுமையாக பாதித்து உள்ளது.
விவசாயம், தொழில்துறை என அனைத்து மட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி உள்ளது.

பொதுவாக காங்கிரசை காட்டிலும் இந்தியாவின் நடுத்தரவர்க்க மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி மீது அபிமான உண்டு என்பதான ஒரு கருத்தாக்கத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இம் முறை நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா மிக எளிதாக வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2004ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை கூட இம் முறை பாரதீய ஜனதா கட்சியால் பெற முடியாது என்பதே தற்போதைய சூழ்நிலையாக உள்ளது. இதைக் கொண்டே ஊடகங்களின் நடுத்தரவர்க்க கருத்தாக்கம் எவ்வளவு புரட்டானது என்பதை நாம் புரி்ந்து கொள்ள முடியும்.

குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும் தான் பாஜக தற்பொழுது பலமாக உள்ளது. ஹிமாச்சல், சட்டிஸ்கர் போன்ற சிறிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலத்தில் கூட்டணி பலத்தாலும் பாஜக இடங்களை கைப்பற்ற கூடும். கடந்த தேர்தலில் ராஜஸ்தானில் தான் பாஜக அதிக இடங்களை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து உள்ளது. உத்திரபிரதேசம் பாஜகவிற்கு கடுமையான சரிவினை கொடுத்திருக்கிறது. மாயாவதி, முலயாம் சிங் யாதவ் போன்றோருக்கு பிறகு தான் மூன்றாவது இடத்தில் பாஜக உள்ளது. ஒரிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி பலத்தால் அதிக இங்களை பெற்ற பாஜக இம் முறை கூட்டணியில் ஏற்பட்ட பிளவால் சரிவினை எதிர்கொள்ளும் என தெரிகிறது.

1984ம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக 1999ம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய 182 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சுமார் 270 பாரளுமன்ற உறுப்பினர்கள் மூலம் முதன் முறையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது. அவ்வாறு ஆட்சி செய்த பாஜக 2004ம் தேர்தலில் பெற்ற 138 தொகுதிகளை கூட இம் முறை பெற முடியாது என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் இந்த சரிவிற்கு காரணம் என்ன ?

பாஜக ஆட்சியை பிடித்ததற்கு முக்கிய காரணம் ராமர் கோயில் பிரச்சனை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான மதக்கலவரங்கள் போன்றவையே. மதரீதியிலான உணர்வுகளை தூண்டி விட்டே பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை பெருக்கியது. ஆனால் மக்களை கவரக்கூடிய ஒரு தலைவரை பாஜக உருவாக்கவில்லை. பாஜக ஒரு வலுவான தலைவரை எப்பொழுதுமே கொண்டிருக்கவில்லை. வாஜ்பாய் கூட ஒரு முகமூடி தான். அதனை அந்தக் கட்சியின் தலைவர்களே கூறி வந்தனர். பாஜகவின் இந்த நிலைக்கு காரணம், பாஜக சார்ந்து இருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் அமைப்புகள் தான். பாஜகவின் அடித்தளமே சங்பரிவார் அமைப்புகளால் தான் பிணைக்கப்பட்டிருந்தது. சங்பரிவாரின் மதரீதியிலான முன்னெடுப்புகளான ஹிந்தி - ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை முன்னெடுப்பதே பாஜகவின் நோக்கம். அதே நேரத்தில் அதனுடைய மத ரீதியிலான தீவிரவாதத்தை மறைத்து தேசிய மட்டத்தில் ஒரு மிதமான தலைவரை கொண்டு ”மறைமுகமாக” (Hidden Agenda) தன்னுடைய செயல் திட்டங்களை முன்னெடுப்பதே சங்பரிவாரின் திட்டம். அதற்கு பாஜகவிற்கு கிடைத்த முகமூடி தான் வாஜ்பாய். வாஜ்பாயால் அதனை வெற்றிகரமாக சாதிக்கவும் முடிந்தது. என்றாலும் வாஜ்பாயால் பாஜகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஒரு சில ஹிந்தி மாநிலங்களுக்கு வெளியே பாஜக தலைவர்களால் மக்களை கவர முடியவில்லை. கூட்டணிகளையும் பெற முடியவில்லை. பாஜகவின் வட இந்திய மேல்தட்டு முத்திரையை வாஜ்பாயால் விலக்க முடியவில்லை.

வாஜ்பாய்க்கு பிற்கு அடுத்த பாஜக பிரதமராக அத்வானி இருப்பார் என நம்பப்பட்டது. வாஜ்பாயை விட அத்வானிக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம் என்ற பிம்பமும் அதற்கு காரணம். ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் "மாஸ்க்" தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு நடந்த சில நிகழ்வுகள் நிருபித்தன. அது பாஜகவை மேலும் பலவீனப்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் தலைமை தான் பாஜக என்ற கட்சியையே இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்களை தான் பாஜக செயல்படுத்த முடியும். அதனை வாஜ்பாய் ஆட்சியிலேயே கண்டுகூடாக பார்க்க முடிந்தது. 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் ஹிந்து அடிப்படைவாத தேசியவாத கோஷத்தை கைவிட வேண்டும் என அத்வானி நினைத்தார். ஹிந்து அடிப்படைவாதம் என்பது கட்சிக்கு சில இடங்களை பெற்று தருமே தவிர அதுவே எப்பொழுதும் இந்தியாவெங்கும் வெற்றியை தந்து விடாது. ஹிந்து அடிப்படைவாத கோஷத்தால் மாநில கட்சிகளின் கூட்டணியும் கிடைக்காது. 2004 தேர்தலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் கோஷத்தை தோற்கடித்தது. ஒரு சில மாநிலங்களை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவெங்கும் தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஹிந்தி - ஹிந்து என்ற அடையாளங்களை கலைய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இருந்தது. தவிரவும் அத்வானி ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சி சார்ந்த சூழ்நிலையில் தனக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். வாஜ்பாய் போன்று ஒரு மிதவாத பிம்பத்தை முன்னிறுத்த வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தார்.

அத்தகைய சூழலில் தான் 2006ல் பாக்கிஸ்தான் சென்ற அத்வானி ஜின்னா ஒரு Securalist என்று கூறினார். இந்த ஜின்னா அஸ்திரம் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும், ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் அத்வானிக்கு இது கட்சியில் பலத்த சரிவினையே ஏற்படுத்தியது.

பாஜகவின் மொத்த அமைப்பையுமே ஆர்.எஸ்.எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. காரணம் பாஜகவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்ல. பாஜக மீதான அபிமானம் என்பது மதரீதியிலானதே. தனிப்பட்ட தலைவர்களை சார்ந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அடித்தளத்தில் இருந்து எழுந்தது தான் பாஜக. எனவே பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கட்டுப்பட்டே தீர வேண்டும். இந்த நிலையில் இருந்து விதிவிலக்கானவர் நரேந்திர மோடி மட்டுமே. மத ரீதியிலான தளத்தை பயன்படுத்தி் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டை கடந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே பாஜக தலைவர் நரேந்திர மோடி தான் (ஹிட்லரை ஜெர்மனி மக்கள் கொண்டாடினர் என்பதை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்).

அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் "பாக்கிஸ்தான்" என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை அத்வானி புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கி, அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் எடுத்தது. அத்வானியின் நிலை கட்சியில் கேள்விக்குரியாக்கப்பட்டது. நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்ற வதந்திகள் உலாவின. அத்வானி தன்னுடைய செல்வாக்கினை மீட்க 1990ல் செய்தது போல மறுபடியும் 2006ல் ஒரு ரதயாத்திரை தொடங்கினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலில் ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறத்தில் இருந்து ரதயாத்திரை தொடங்கினார். 1990ல் நடந்தது போன்று அத்வானிக்கு ரதயாத்திரை வெற்றியை கொடுக்க வில்லை. அவருக்கு ரதயாத்திரை தோல்வியையே கொடுத்தது.

இன்றைக்கு பாஜக பிளவுபட்ட கட்சியாக இலக்கில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. காரணம் தேசியவாதம் மக்களுக்கு தேவையில்லாதது. மக்களை நீண்ட நாட்களுக்கு தேசியவாதம் போன்ற பிம்பங்களில் அடைத்துவைக்க முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறைத்து இந்தியாவை ஹிந்தி ஹிந்து மதம் சார்ந்த ஒற்றை தேசமாக கட்டமைக்க சங்பரிவார் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. அந்த இயல்பை மறைத்து பின்ன முனைந்த செயற்கையன ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை மக்களே உடைத்து இருக்கின்றனர். பாஜக அதிகம் வளர்ந்த உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலேயே அது தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் தலைவரான நரேந்திர மோடியை தேசிய தலைவராக மாற்றி விடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் செல்வாக்கு என்பது உள்ளூர் தலைவர்களாலேயே நிலை நிறுத்த முடியும் என்பது நரேந்திர மோடி மூலமும், கர்நாடகத்தில் பெற்ற வெற்றி மூலமும் நிருபிக்கப்பட்டிக்கிறது. அத்வானிக்கும், வாஜ்பாய்கும் குஜராத் வெற்றியிலோ, கர்நாடகா வெற்றியிலோ எந்த பங்கும் இல்லை. ஆனால் அதை மறந்து நரேந்திர மோடியை தேசிய தலைவராக்குவதன் மூலம் சரி செய்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அம்பானிகள் சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டால் நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தலைவராகி விட முடியாது. தமிழ்நாட்டு குப்புசாமிக்கும், ஆந்திரத்தின் ரொட்டிக்கும், கேரளாவின் நாயருக்கும் இன்னும் நரேந்திர மோடியின் புகைப்படம் கூட தெரிந்திருக்காது.

பாஜக தன்னுடைய வெற்றியை தக்கவைக்க எப்பொழுதுமே மத அடிப்படைவாதத்தை தூண்டும். எங்கெல்லாம் மதவாதம் தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெறும். முஸ்லீம்களை வேட்டையாடி நரேந்திர மோடி வெற்றி பெற்றார். ராமர் சேனாக்களை வளர்த்து கர்நாடகத்தை தக்கவைக்க பாஜக முனைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தேசியவாதம் எடுபடாத மாநிலங்களில் பாஜக நுழையவே முடியாது. தமிழகத்திலும், கேரளாவிலும் அது தான் நிலை. ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதம் அலுத்து போய் விட்டாலும் பாஜக தோல்வி அடைந்து விடும். உத்திரபிரதேசத்தில் அது தான் தற்போதைய நிலை.


பாஜகவின் சரிவு அதைத் தான் இன்றைக்கு தெளிவுபடுத்தி கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் தொடங்கிய பாஜக சரிவு, இந்த தேர்தலிலும் நீடிக்கும். இனி பாஜக மெதுவாக அழிந்து போகும்.

Leia Mais…