வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, November 30, 2006

மாவீரர் நாள் உரை - ஒரு விமர்சனம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இந்த வருட மாவீரர் நாள் உரை வழக்கம் போல பலரது கவனத்தைப் பெற்று இருக்கிறது. தமிழ் ஈழ விடுதலையே ஒரே தீர்வு என பிரபாகரன் அவர்கள் கூறியிருப்பது இந்த உரைக்கு கூடுதல் கவனத்தைப் பெற்று கொடுத்து இருப்பது மட்டுமில்லாமல் பல உலக நாடுகளின் கண்டனத்தையும் பெற்று கொடுத்து இருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, நார்வே என அனைத்து நாடுகளுமே இதனை ஏற்கவில்லை.

ஆனால் இது வரையில் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாக என்றுமே கூறியதில்லை. பிரபாகரனின் வெளிப்படையான அறிவிப்பு ஒரு புதிய கொள்கைப் பிரகடனமும் அல்ல. கடந்த காலங்களில் புலிகள் கூறிவருவதைத் தான் பிரபாகரன் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழ் ஈழம் நோக்கி புலிகள் நகருவது போர் சூழ்நிலையை உருவாக்கும் என்ற நிலையில் தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. போர் நோக்கி புலிகள் நகருவதை தடுக்க வேண்டுமெனில் உலக நாடுகள் சிறீலங்கா அரசிடம் அதிகாரப் பகிர்வு குறித்து நிர்பந்தம் ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே A9 நெடுஞ்சாலையை திறக்க சிறீலங்கா அரசை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிர்பந்தம் செய்து வருகின்றன. இந் நிலையில் மற்றொரு போர் ஏற்படுவது வடக்கு கிழக்கு இலங்கையில் மனித அவலத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்க இது வரையில் எந்த பெரிய நிர்பந்தங்களையும் உலக நாடுகள் ஏற்படுத்தாத நிலையில் பிரபாகரனின் அறிவிப்பு இந் நாடுகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது

இன்று இலங்கையில் நடக்கும் ராஜதந்திர சதுரங்க ஆட்டம் கூட விடுதலைப் புலிகளுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் இடையேயான ஆட்டம் தானே தவிர, சிறீலங்கா அரசு இந்த இரண்டு தரப்பின் ஆட்டங்களையும் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த வாரம் வாஷிங்டனில் இணைத் தலைமை நாடுகளின் மாநாட்டின் பொழுது சிறீலங்கா அரசுக்கு எதிராக நிர்பந்தம் ஏற்படுத்தப்படும் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. சிறீலங்கா அரசு கருணாவின் குழுவிற்கு சிறுவர்களை சேர்ப்பது குறித்து இணைத்தலைமை நாடுகள் கடுமையான கண்டனங்களை தெரிவிக்கும் என்பதாக எதிர்பார்க்கப்பட்டது. சிறீலங்கா அரசு கூட A9 நெடுஞ்சாலையை தற்காலிகமாக திறக்கப் போவதாக பூச்சாண்டி காட்டியது. ஆனால் எதிர்பார்க்கபட்ட அளவுக்கு கண்டனத்தை இணைத்தலைமை நாடுகள் வெளிப்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா அரசை கண்டிக்கவே செய்தன. இன்றைய நிலையில் சிறீலங்கா அரசை கடுமையாக கண்டிப்பது புலிகளை வலுப்படுத்தும் என்பதாக அமெரிக்கா நினைக்கிறது. ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், நார்வே போன்ற நாடுகளின் நிலை அவ்வாறு இல்லை. என்றாலும் அமெரிக்காவின் நிலையை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அமெரிக்காவின் நிலை இந்தியாவின் நிலையாகவும் இருக்க கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

புலிகளின் நிலை சிறீலங்கா அரசின் சிங்கள இனவாதத்தை வெளிப்படுத்தி, தங்களின் தமிழீழ கோரிக்கைக்கு அங்கீகாரம் தேட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் பொழுது உலகநாடுகளின் நிலை அவ்வாறான தனி நாட்டிற்கு அங்கீகாரம் வழங்காமல் சிறீலங்கா அரசை சார்ந்து தமிழர்களுக்கு அதிகராப்பகிர்வு வழங்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது. இவ்வாறான நிலையில் புலிகள் தங்கள் கோரிக்கைகாக போர் நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு மீதான உலகநாடுகளின் அழுத்தம் அதிகரிக்கும். உலகநாடுகளின் கோரிக்கைக்கு சிறீலங்கா மறுக்கும் பட்சத்தில் சிறீலங்கா அரசிற்கு எதிரான நிலையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உலகநாடுகள் தள்ளப்படும். அதைத் தான் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக உதவியதன் மூலம் புலிகள் செய்தனர். இன்று சிறீலங்கா அரசு செய்து வரும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகளுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அவ்வாறான நிலையில் பிரபாகரனின் உரை அவர்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது.


அதே நேரத்தில் சிறீலங்கா அரசுக்கு உலகநாடுகளின் அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்காமல் தன் வழியில் செல்வதற்கும் சில பலமான காரணங்கள் உள்ளன. போர் சூழலிலும் ஆண்டிற்கு சுமார் 8% வளர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இன்றைய உலகமயமான பொருளாதாரச் சூழலில் அலட்சியப்படுத்த முடியாத ஒன்று. இலங்கை மீதான நிர்பந்தம் பொருளாதார தடையாக மாறுவதற்கான சூழ்நிலை நிச்சயமாக உலகநாடுகளின் உச்சகட்ட நடவடிக்கையாகவே இருக்கும். ஆனால் இந்த உச்சகட்ட நடவடிக்கையை உலகநாடுகள் அவ்வளவு விரைவில் எடுக்க முடியாது என்பது மட்டுமில்லாமல் உலகநாடுகளிடம் இருந்து அந்நியப்பட்டு போவதற்கான வாய்ப்புகள் சிறீலங்கா அரசுக்கு குறைவாகவே உள்ளது. சர்வதேச நாடுகளின் நிர்பந்தங்களுக்கு முழுமையாக அடிபணியாமல் ஒரு பொம்மையான கூட்டாட்சியை நிறுவ சிறீலங்கா அரசு முனையக்கூடும். அதனால் தான் சமீபகாலங்களில் மகிந்த ராஜபக்ஷ புலிகள் ஒட்டுமொத்த தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று கூறி வருகிறார். மாற்று தமிழர் குழுக்களை வளர்க்கவும் தலைப்படுகிறார். ஆனால் மகிந்தவின் இந்த உத்தி பல சிங்கள தலைவர்கள் கடைப்பிடித்த உளுத்துப்போன உத்தி தானே தவிர அது சர்வதேச நாடுகளிடம் எடுபடப்போவதில்லை. அதுவும் தமிழர் தாயகப் பகுதிகளில் சுமார் 70% இடத்தை தங்கள் வசம் வைத்துள்ள புலிகளை அவ்வளவு சீக்கிரம் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று விலக்கி விட முடியாது. இது சிறீலங்கா அரசுக்கு தெரிந்தே இருந்தாலும், இந்த உத்தி மூலம் அதிகாரப் பகிர்வினை பலருக்கும் பிரித்து அளித்து விட, புலிகள் எதிர்ப்பு குழுக்களை ஒன்று சேர்த்து விட முனைந்து கொண்டிருக்கிறது.

புலிகள் மற்றும் சிறீலங்கா அரசின் உத்திகளைக் கொண்டு சில விடயங்களை கணிக்க முடியும். அதாவது புலிகளின் தலைவர் தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று நினைத்தாலும் அதனை உடனடியாக அடைந்து விட முடியும் என்று நினைக்கவில்லை. புலிகள் எப்பொழுதுமே இடைக்கால தீர்வு என்ற ஒன்றை தொடர்ந்து வலியுறுத்தி வருவதை கவனிக்க வேண்டும். ஒரு இடைக்கால தீர்வினை எட்டியப் பிறகு தான் தமிழீழம் நோக்கி நகர முடியும்.

அதே சமயத்தில் சிறீலங்கா அரசு தொடர்ந்து ஒரு முழுமையான தீர்வினை வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும். புலிகள் தமிழீழம் குறித்த தங்கள் போக்கில் தீவிரத்தை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களின் தற்காலிக இலக்கான இடைக்கால தீர்வு என்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும். ஏனெனில் புலிகள் போரினை தீவிரப்படுத்தும் பொழுது சர்வதேச நாடுகளிடம் இருந்து எழும் நிர்பந்தம் புலிகளின் இடைக்கால தீர்வு குறித்த வாய்ப்பினை அதிகரிக்கும். சிறீலங்கா அரசு இடைக்கால தீர்வினை அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதிகப்பட்ச அதிகாரங்களுடன் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கான அதிகாரப்பரவல் தான் இடைக்கால தீர்வு ஆகும். இதனை புலிகள் முன்னிறுத்துவதற்கான காரணங்கள் என நான் சிலவற்றை கருதுகிறேன். முதலில் தமிழீழத்திற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் இராணுவ நிலையில் இருந்தோ, தமிழர் பகுதிகள் அனைத்தையும் புலிகள் கைப்பற்றுவதாலோ நிகழ்ந்து விடாது. இன்றைய உலகம் வணிகமயமான பொருளாதார உலகம் ஆகும். இந் நிலையில் உலகநாடுகளின் அங்கீகாரம் கூட பொருளாதார காரணங்களால் தான் நிகழ முடியுமே தவிர இராணுவக் காரணங்களால் நிகழ முடியாது. ஒரே இலங்கையின் கீழ் அதிகப்பட்ச அதிகாரங்களுடன் கூட்டாட்சி அமையும் பட்சத்தில் இன்றைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார உலகில் பிற நாடுகளுடனான உறவுகளை புலிகளால் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அந்த பொருளாதார உறவுகள் மூலம் தான் அடுத்தக் கட்டமான சுதந்திர தமிழீழம் நோக்கி புலிகள் நகர முடியும் என நான் நம்புகிறேன். புலிகள் முன்வைத்த இடைக்கால நிர்வாக அமைப்பான - Interim Self Governing Authority (ISGA) கூட இத்தகைய அதிகப்பட்ச அதிகாரங்களைக் கொண்டதாக புலிகள் அமைத்து இருப்பதையும், பிற நாடுகளிடம் இருந்து பொருளாதார உதவிகளை பெற்றுக் கொள்வதாக இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

சிறீலங்கா அரசு கூட இதனை சரியாக அவதானித்து தான் இந்த இடைக்கால அதிகார அமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதிகளாக ஏற்காமல், புலிகளின் எதிர்ப்பு தமிழர் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதையும் கவனிக்க வேண்டும். இது ஒரு புறம் என்றால் தமிழர்களுக்கு இந்தியாவின் கிராம பஞ்சாயத்து அமைப்புகளைச் சார்ந்த அதிகாரங்களை வழங்க பரிசீலித்து வருவதாகவும், இந்திய மாநிலங்களுக்கு இருப்பது போன்ற அதிகாரங்கள் கொண்ட தமிழர் மாநிலங்களை ஏற்படுத்த போவதாகவும் நகைச்சுவை உணர்வுடன் பேசிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இருப்பது கூட்டாட்சி அல்ல என்பது கூட தெரியாமலா தமிழர்கள் இருக்கிறார்கள் ?

புலிகளின் கோரிக்கை மிக அதிகப்பட்ச அதிகாரப்பரவல் நோக்கி உள்ளது. தனி இராணுவம், பொருளாதார உதவிகளை தனித்து பெற்றுக் கொள்வது போன்றவை கூட்டாட்சியில் மிக அதிகப்பட்சமான அதிகாரங்கள் ஆகும். ஆனால் சிறீலங்கா அரசு வழங்க நினைப்பது எந்த வகையிலும் கூட்டாட்சி சார்ந்து இல்லை. மிகக் குறைந்தபட்ச அதிகார அமைப்பைச் சார்ந்ததாகத் தான் சிறீலங்கா அரசின் நிலை உள்ளது.

இதில் இருவரும் சில சமரசங்களை செய்து கொள்ளக்கூடும். ஆனால் எந்த வகையிலும் புலிகள் தங்களின் தற்போதைய இராணுவ பலத்தை விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

இவ்வாறான நிலையில் புலிகள் தமிழீழம் நோக்கி தங்கள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொழுது உலகநாடுகள் சிறீலங்கா அரசின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். அதைத் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன் இந்த உரை மூலமும், அடுத்த வரும் மாதங்களிலும் செய்ய நினைக்கிறார். புலிகள் போர் நோக்கி செல்வதை தடுக்க தமிழர்களுக்கான அத்தியாவிச பொருட்களை கூட தடை செய்து ஒரு மனித அவலத்தை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முனைந்து கொண்டிருக்கிறது. "வெளிநாட்டில் இருக்கும் ஈழத் தமிழர்கள் போரினை விரும்பக்கூடும். ஆனால் ஈழத்தில் இருக்கும் தமிழர்கள் அதனை விரும்ப மாட்டார்கள்" என்கிறார் டி.பி.எஸ்.ஜெயராஜ். அவர் கூறுவது உண்மையும் கூட. அதனால் தான் புலிகள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளைக் கூட தாமதமம் செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பதைத் தான் பிரபாகரனின் உரை தெளிவுபடுத்துகிறது. சிறீலங்கா அரசின் பிடியை விடுவிக்க புலிகள் முனையக்கூடும்.

அடுத்த வரும் நாட்களில் ஈழப் போர் தீவிரம் அடையக்கூடும். இன்று ஈழத்தில் தலைவிரித்தாடும் வறுமை ஒரு மனித அவலத்தை ஏற்படுத்தும் நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. போர் ஏற்படும் பட்சத்தில் இது மிகவும் தீவிரமாகக்கூடும் என்பது தான் வருத்தமான உண்மை


தொடர்புடைய சில சுட்டிகள் :

பிரபாகரனின் மாவீரர் நாள் உரையின் வீடியோ
Sri Lanka ignoring India’s advice

Leia Mais…
Thursday, November 16, 2006

வன்முறை சமுதாயம்

ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும்.

இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் விடுக்கக் கூடிய சவால் மிகவும் கவலை அளிக்க கூடியதாகும். என்னுடைய முந்தைய ஒரு கட்டுரையில் கூறியிருந்தது போல அரசாங்கம் ஒரு சமூகத்தின் மீது வன்முறையை திணிக்கும் பொழுது, அந்தச் சமூகம் அரசாங்கத்தின் வன்முறையை தன் எதிர் வன்முறையால் தான் எதிர்க்க முயலுகிறது. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கூட ஜாலியன்வாலாபாக்கில் பிரிட்டிஷ் எகாதிபத்தியம் நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக எழுந்த இந்திய எதிர்ப்பும் அத்தகைய எதிர்வன்முறை தான். இவ்வாறு பல இடங்களில் அதிகார மையங்கள் முன்நிறுத்தும் வன்முறையை எதிர்த்து முன்வைக்கபடும் எதிர்வன்முறையை நியாயப்படுத்துவதும், மறுப்பதும் அவரவரின் சார்புகளைப் பொறுத்தே உள்ளது.

ஆனால் இவ்வாறு எழும் எதிர்வன்முறை வலுத்து ஆயுதக்கலாச்சாரம் பரவும் பொழுது, அந்த சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான். அவர்களின் வாழ்க்கை அந்த வன்முறை சமூகத்தில் சிக்கி சீர்குலைந்து போய் விடுகிறது. அவ்வாறான ஒரு சமுதாயமாக அனைத்து மட்டங்களிலும் வன்முறையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இடமாக இலங்கை உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்த வன்முறையை எதிர்க்க தொடங்கிய தமிழ் போராளிக்குழுக்கள், அதன் பிறகு தொடங்கிய போர், ஆயுதக்கலாச்சாரம் போன்றவை இலங்கையில் மிக ஆழமாக ஊடுறுவி விட்டன. இலங்கையில் சமாதானம் நிலைப்பெற்றால் கூட ஆயுதங்களின் பிடியில் இருந்து விலகி இலங்கை ஒரு சகஜமான சூழ்நிலையைப் பெற பல காலங்கள் பிடிக்கும். அந்தளவுக்கு வன்முறை இலங்கையின் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ளது.

ஆயுதங்களின் புழக்கம் மிக அதிகளவில் காணப்படுகிறது. பிபிசி தமிழோசையில் தினமும் வடகிழக்கு இலங்கையில் நிகழும் வன்முறை குறித்து தொகுத்து அளிக்கப்படும் தகவல்கள் அதிர்ச்சியை அளிக்க கூடியதாக உள்ளது. தினமும் சிலர் சுடப்பட்டு இறக்கும் நிகழ்வுகளும், அரசாங்கத்தின் மேற்பார்வையிலேயே பலர் கடத்தப்படுவதும், பணத்திற்காக மிரட்டப்பட்டு கொலை செய்யப்படுவதும், எம்.பிக்கள் கொலை செய்யப்படுவதும் மிகச் சாதாரணமான நிகழ்வாகி விட்டது. கடந்த வாரம் தமிழ் எம்.பி. ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்கு முந்தைய வாரம் பலர் மர்மான முறையில் அரசாங்கத்தால் கடத்தப்படுவது குறித்து மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து இருந்தன.

இவ்வாறு நடந்து வந்த தொடர் வன்முறையின் உச்சக்கட்டமான ஒரு செய்தியை ஐநா வெளியிட்டு உள்ளது. கடந்த காலங்களில் இதனை தமிழ் ஊடகங்கள் எழுதியிருந்தாலும், இது அதிகம் பொருட்படுத்தப்படவில்லை. ஆனால் இம்முறை இதனை அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து ஐநா அமைப்பு வெளியிட்ட பொழுது கடந்த வாரம் அது உலகெங்கிலும் தலைப்புச்செய்தியாக இருந்தது. பிபிசி தன்னுடைய உலகச்செய்திகளில் அதிகளவு முக்கியத்துவம் அளித்து இந்தச் செய்தியை வெளியிட்டு இருந்தது. சமீபகாலங்களில் இலங்கை விடயத்தில் பிபிசியின் செய்தி வழங்கும் முறை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. மிகுந்த நடுநிலையுடன் சரியான செய்திகளை பிபிசி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தச் செய்தி - சிறீலங்கா இராணுவம், குழந்தைகளை வலுக்கட்டாயமாக கருணாவின் குழுவில் சேர்த்து புலிகளுக்கு எதிராக அவர்களை "குழந்தைப் போராளியாகளாக" மாற்றியிருக்கிறது என்பது தான். கடந்த காலங்களில் புலிகள் மீது முன்வைக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு இம்முறை சிறீலங்கா அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. புலிகள் குழந்தைகளை அவர்கள் அமைப்பில் சேர்ப்பது மனிதாபிமானமற்ற செயல் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. அதனை கண்டிக்கும் அதே வேளையில் சிறீலங்கா அரசாங்கத்தின் செயலை சர்வதேச நாடுகள் கண்டிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்றைய உலகமயமாக்கப்பட்ட சந்தையில் இலங்கை மீதான பொருளாதார தடை எந்தளவுக்குச் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கத்தைச் சேர்ந்த சிலருக்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்யும் தடையை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலிக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் சிறீலங்கா அரசாங்கம் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டிய கட்டயத்திற்கு சர்வதேச சமூகம் வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது "தேர்தல் திருவிழா" ஜனநாயக நாடு என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருந்த சிறீலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாத சிங்கள கோரமுகம் மிக தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இதன் அனைத்து பெருமையும் சிங்கள தேசியவாதத்தை முன்நிறுத்தும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையேச் சாரும். மகிந்த ராஜபக்ஷ மிக மோசமான மனித உரிமை மீறல்களை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துள்ளதை உலகநாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டிக்க தொடங்கியுள்ளன. அதே சமயத்தில் மகிந்த ராஜபக்ஷ இராணுவ நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பது இராணுவத்தின் பலம் சிவிலியன் நிர்வாகத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் நிலை நோக்கிச் செல்வது, இலங்கையின் "தேர்தல் திருவிழா" ஜனநாயகத்திற்கு கூட கேடுவிளைவிக்க கூடியது ஆகும்.

உலகின் பிரச்சனைக்குரிய பலப்பகுதிகளில், உள்நாட்டுக் கலவரம் அதிகளவில் இருக்கும் நாடுகளில் இராணுவத்திற்கு அதிக பலம் இருக்கும். சில நேரங்களில் அந்த பலம் சிவிலியன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு கூட காரணமாக அமைந்து விடுகிறது. இலங்கையின் நீண்ட உள்நாட்டு போர் சூழலில் சிவிலியன் அரசு தொடர்ந்து தாக்கு பிடிப்பதே கூட ஒரு வகையில் வெற்றி தான். ஆனால் கடந்த காலச் சூழ்நிலைகள் போல இல்லாமல் இம்முறை சர்வதேச நாடுகளின் நிர்பந்தம், சிங்கள தேசியவாதிகளின் ஆதிக்கம், சிறீலங்கா இராணுவத்தில் ஆதிக்கம் பெற்று வரும் சிங்கள தேசியவாதிகள் என நோக்கும் பொழுது சிறீலங்கா இராணுவத்தின் ஆதிக்கம் சிவிலியன் நிர்வாகத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்கும் நிலையை எட்டி விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

BBC செய்தி: செய்திப்படம்

Leia Mais…
Tuesday, October 24, 2006

இலங்கை : கூட்டாட்சியா ? போரா ?

ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும்.

ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்ட பாதையில் சரியாக முன்னேறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு வருட நிகழ்வுகள் இலங்கையின் சிக்கல் மிகுந்த காலமாக பலர் பார்க்கிறார்கள். புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பும் பல ஈழத் தமிழர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. ஊடகங்கள் புலிகள் பலவீனம் அடைந்து இருப்பதாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஒரு வருடம் தான் ஈழப் போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஒரு வருடம் ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம். திட்டமிட்ட ஒரு பாதையின் அடுத்த கட்டம்.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகான கடந்த ஒரு வருட நிகழ்வுகள் முக்கியமானது. மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு தான். பிரபாகரன் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தன் முக்கிய நோக்கம் சிங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவது தான் (இது குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள் - தேர்தலும் தமிழ் ஈழ அங்கீகாரமும், புதிய யுத்தம்).

கடந்த ஓராண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது அந்த நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகம் ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாத முகத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறது. அதன் போர் உத்திகளை உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அதனை தடுக்காத இரட்டை வேடத்தை தான் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதனை அப்படியே தொடர முடியாது என்பதற்கு சாட்சியாகத் தான் பல நாடுகள் தங்களது பொருளாதார உதவிகளை நிறுத்தப்போவதாக அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஜெர்மனி அதை செயலிலும் காட்டியிருக்கிறது.

Unitary Nation என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ, புலிகள் கொடுத்த நிர்பந்தத்தால் ஒரு Federal அமைப்பில் ஆட்சிப் பகிர்வை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தப்பிக்க போர் நோக்கி ராஜபக்ஷ செல்ல தொடங்கினார். இதற்கிடையில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் போக்கில் முனைந்தார். ஆனால் சிங்கள தேசியவாதக் குழுக்களின் போர் முழுக்கத்திற்கு கட்டுப்பட்டு போர் புரிய முனைந்த பொழுது, புலிகள் சம்பூரில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். இது சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஒரு வகையில் சம்பூரில் இருந்து புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டதன் மூலம் செயற்கையான ஒரு வெற்றியை அவர்களுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தனர். ( சம்பூர் போரில் முன்னேறிய இராணுவத்தை புலிகள் எதிர்க்க வில்லை என்பதையும், அது ஒரு தந்திரமாக இருக்கும் என்றும் முகமாலையின் தோல்விக்கு பிறகே இராணுவ நோக்கர்கள் கூற தொடங்கினர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்)

சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், வங்காலை படுகொலை, மூதூர் தன்னார்வ நிறுவன ஊழியர்களின் படுகொலை, ஐநாவின் கண்டனம் என கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு சிறீலங்கா அரசை "முழுமையாக" ஆதரிக்க முடியாத சூழலுக்கு சர்வதேச சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கள இனவெறி முகத்தை சந்திரிகா, ரனில் போன்றோர் தங்களின் Diplomatic முகத்தால் மறைத்திருந்தனர். ஆனால் இன்று அந்த Diplomatic முகமூடி அகற்றப்பட்டு சிறீலங்கா அரசின் இனவெறி, சர்வதேச சமூகம் முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க தொடங்கியிருக்கிறது. ஐநா அமைப்பு இலங்கைக்கான தங்களது மனிதாபிமான உதவிகளை நிறுத்தப் போவதாக கூறி பிறகு அதனை மாற்றிக் கொண்டது.

சிறீலங்கா அரசு இன்று சர்வதேச சமூகம் முன் குற்றவாளியாக்கப்பட்டு கடும் நிர்பந்தங்களை எதிர்கொண்டிருந்த சூழலில் போரில் வெற்றி பெறுவது ஒரு முக்கிய தேவையாக இருந்தது. புலிகளின் தோல்வியை விரும்பும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை திருப்தி படுத்தும் வகையில் புலிகள் மீது சிறிலங்கா போர் தொடுத்தது. புலிகளும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு இருப்பதான ஒரு பிம்பம் ஏற்பட்டது. அமைதியாக இந்தப் போரை ரசித்துக் கொண்டிருந்த சர்வதே சமூகம், முகமாலை தோல்விக்குப் பிறகு விழித்துக் கொண்டது. பலம் புலிகளின் பக்கம் சாய்வதை அவர்கள் விரும்பவில்லை. சர்வதேச தூதுவர்கள் இலங்கைக்கு பறந்து வந்தனர்.

இதன் பலன், இன்று சர்வதேச சமூகத்தின் நிர்பந்தம் சிறீலங்கா அரசு மீது அதிகம் எழுந்து இருக்கிறது. ராஜபக்ஷ தன்னுடைய Unitary state என்ற கோரிக்கையை கைவிடவேண்டிய தேவை எழுந்து இருக்கிறது. தென்னிலங்கை அரசியலில் பிளவுகள் இருக்கும் வரையில் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தை வழங்க முடியாது. சர்வதேச நிர்பந்தங்களுக்கு மத்தியில் எதிரும், புதிருமாக இருந்த இரு கட்சிகள் இன்று இணைந்து இருக்கின்றனர்.

தென்னிலங்கை அரசியல் பிளவுகளை சுட்டி தமிழ் ஈழ விடுதலைக்கான காரணங்களை வலுப்படுத்துவது தான் பிரபாகரனின் திட்டம். அந்த திட்டத்தை முறியடிக்கவே இன்று இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கின்றன.

இந்த கூட்டணியின் பிண்ணனியில் இருந்த சர்வதேச சமூகத்தின் மாற்றம் முக்கியமானது

கடந்த ஒரு வருட காலத்தில் ஈழப் பிரச்சனையில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான நியாயங்கள் பலரால் அலசப்பட்டிருக்கின்றன. அமெரிக்க செனட்டில் கடந்த மாதம் பேசிய நியூஜெர்சி Congressman, Frank Pallone மற்றும் U.S. Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்துள்ளனர்.

"though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.''

இன்றைக்கு தமிழர்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற அதே வேளையில் அந்த சுயநிர்ணயத்தின் அளவுகோள்கள் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லாத ஒரு வடகிழக்கு மாகாணத்தை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய சூழலுக்கு பின், கடந்த 20 ஆண்டுகளில் பரந்த அதிகாரங்களுடன் தமிழர் பிரதேசம் இருக்க வேண்டிய அவசியம் (Federal) சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால், அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் புலிகளுக்கும், சிங்கள அரசுக்குமான ஒரு அரசியல் சமநிலை பலத்தைக் கொண்டு தான் அமையும். அந்த சமநிலை கடந்த காலங்களில் இருந்ததில்லை. இன்றைக்கு அமைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சமநிலையை தெளிவாக அங்கீகரிக்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் உள்ளது. இந்த சமநிலையை சர்வதேச சமூகம் விரும்புவதும் இல்லை. அதனை வெளிப்படுத்துவதும், சர்வதேச சமூகத்தை அந்த சமநிலையை அங்கீகரிக்க வைப்பதும் புலிகளின்/பிரபாகரனின் அடுத்த முக்கிய நோக்கமாக இருக்கலாம்.

அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் இராணுவ போராட்டமாக மட்டுமில்லாமல், இராணுவ-அரசியல் போராட்டமாக இருக்கும்.

1997ல் புலிகள் இயக்கத்தை "Most ruthless terrosrist group" என்று அமெரிக்கா தடை செய்ததது. பின் புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுவான அல்கொய்தாவுடன் ஒப்பிட்டு பார்த்தது. பின் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், புலிகள் அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் ராஜாங்க உறவுகளை பராமரிக்கும் வாய்ப்புகள் உள்ளது - ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் எனக் கூற தொடங்கியது (If the Tigers give up terrorism, the United States will be able to consider dealing with them). இவ்வாறு கடந்த ஓராண்டாக அமெரிக்காவின் போக்கு மாற்றம் காண தொடங்கியிருக்கிறது (சில நேரங்களில் குழப்பாக இரு வேறு கருத்துகளையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இது கூட அமெரிக்காவின் மாறி வரும் கொள்கைகளை தான் சுட்டிக் காட்டுகிறது).

"தங்கள் தாயகப் பகுதிகளை தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடிய உரிமை இருக்கிறது" எனக் கூறிய அமெரிக்கா, கடந்த வாரம் இதை வலியுறுத்தியது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கத்தை அங்கீகரித்தும் உள்ளது. ஆனால் புலிகள் தங்கள் நோக்கத்தை அரசியல் வழியில் மேற்கொள்ள வேண்டும், பயங்கரவாத/இராணுவ ரீதியில் அல்ல என கூறியிருக்கிறது

Assistant Secretary Richard Boucher addressing a press briefing in Colombo, ending his two-day visit to the island said on October 20 "They (LTTE) have aspirations to satisfy some of the legitimate grievances of the Tamil community. They have aspirations to see the Tamil community respected, and be able to control its own affairs within a unified island, and the only way they’re going to achieve those aspirations is through negotiations."

இந்தியா இதுவரையில் தெளிவாக இது குறித்த தன்னுடைய கொள்கைகளை அறிவிக்காததால், இந்தியா தன் மொளனம் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடுகளை சார்ந்தே உள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது - to control its own affairs within a unified island.

இந்த வாக்கியத்தை நோக்கும் பொழுதே அதில் இருக்கின்ற தெளிவற்ற குழப்பம் நமக்கு புரியும் - to control its own affairs within a unified island. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களின் ஆட்சியை அமைத்து கொள்வது என்றால் என்ன ? தற்பொழுது புலிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே - அது போலவா ? அல்லது வெளியூறவு, நிதி, பாதுகாப்பு போன்றவற்றை மைய அரசாங்கத்திடம் (ஒன்றுபட்ட இலங்கை அரசாங்கம்) கொடுத்து விட்டு எஞ்சிய துறைகளை புலிகள் நிர்வகிப்பார்களா ? அப்படியெனில் தற்போதைய நிலையில் தமிழர் பகுதியின் பாதுகாப்பு புலிகளின் கைகளில் உள்ளதே, அதை எப்படி புலிகள் விட்டுகொடுப்பார்கள் ? வெளியூறவு மைய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்றால் தற்பொழுது வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புக்கு சென்று ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வன்னிக்குச் சென்று தமிழ்ச்செல்வனை சந்திக்கிறார்களே அதனை புலிகள் எப்படி விட்டு கொடுப்பார்கள் ?

இவ்வாறான சூழ்நிலையில் எத்தகைய கூட்டாட்சியை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வைக்கும் ? அதனை சிங்கள அரசாங்கம் ஏற்குமா ?

தற்பொழுது புலிகளை விட சிறீலங்கா அரசிற்கு தான் பாதகமான சூழல் நிலவி வருகிறது. கடந்த காலங்களை போல இல்லாமல் இன்றைய Globalization சிறீலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்ஷ-JVP-JHU கூட்டணி தமிழர் தாயகப் பகுதிகளை அங்கீகரிக்க மறுத்து வந்திருக்கிறது. கடந்த வாரம் இலங்கையின் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு கூட சிங்கள இனவெறி நிலைப்பாட்டை தான் முன்நிறுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து உள்ளது. இது சிங்கள தேசியவாதக் குழுக்களுக்கு ஒரு பெரிய நெருக்கடியான சூழ்நிலை என்பது உண்மை.

இவ்வாறான நிலையில் சர்வதேச நிர்பந்தங்களால் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கும் ராஜபக்ஷ-ரனில் எவ்வளவு காலம் இதனை தக்கவைத்துக் கொள்வார்கள் ? தென்னிலங்கை அரசியல் நிலைமையால் இந்தக் கூட்டணி சிதைத்து போகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. சமீபகால ஜனாதிபதிகளில் மிக அதிக அளவில் சிங்கள தேசியவாதத்தை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ எப்படி மிதவாத போக்குக்கு மாறி அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவார் ? அதுவும் தவிர இந்த இருவரும் இணைவது சிங்கள தேசியவாத சக்திகளை எதிரணியில் ஒன்று திரள வைத்து, சிங்கள தேசியவாத சக்திகள் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்து விடும் என்னும் பொழுது இந்தக் கூட்டணியின் சாத்தியங்கள் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இவ்வாறான நிலையில் புலிகளின் உத்தி கடந்த காலங்களில் இருந்து வந்த இராணுவ ரீதியிலான அணுகுமுறை தவிர இனி இராணுவ-அரசியல் உத்தியாக மாறும். ஜெனிவாவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட சில மாறுபட்ட போக்குகள் காணப்படலாம். கடந்த முறை ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் புலிகள் எடுத்த சில நடவடிக்கைகள் சர்வதேச சமூகம் மீது சில நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விதித்த தடையை நார்வே சாடியிருந்தது. புலிகளுக்கு நெருக்கடியை கொடுப்பதன் மூலம் தங்கள் வழிக்கு புலிகளை கொண்டு வரலாம் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. இது சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையை அணுகும் விதத்தை கேள்விக்குரியாக்கியிருந்தது. இந் நிலையில் இப் பிரச்சனையில் சர்வதேச சமூகம் அணுகி வரும் முறையில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவே பிரபாகரன் முயலுவார்.

சிறீலங்கா அரசு முன் இருக்கும் சவால் அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவது. அதிகபட்ச Federal அமைப்பு என்னும் பொழுது இலங்கையில் தற்பொழுது இருக்க கூடிய இரண்டு இராணுவங்கள் (சிறீலங்கா மற்றும் புலிகள் இராணுவம்) அப்படியே நீடிப்பது, இரண்டு நிர்வாக அமைப்புகள், பொருளாதார உதவிகளை தனித்தனியாக பெற்றுக் கொள்வது போன்றவை. ஆனால் சிறீலங்கா அரசால் இதனை ஏற்றுக் கொள்வது முடியாத காரியம் என்று தான் நினைக்கிறேன்.

புலிகள் முன் இருக்கும் சவால் - புலிகள் இராணுவ ரீதியாக பெறும் வெற்றி தான் சிறீலங்கா அரசு மீது சர்வதேச நிர்பந்தத்தை அதிகரிக்கும் என்னும் நிலையில் சிறீலங்கா அரசு போர் தொடுத்தால் அதனை முறியடிப்பது மட்டுமில்லாமல் இராணுவ நிலைகளை வெற்றிக் கொள்ள முடியுமா ? புலிகள் போரில் தோற்பதை சர்வதேச நாடுகள் விரும்பவேச் செய்யும் என்னும் நிலையில் சர்வதேச சமூகத்தை தங்களின் அரசியல் உத்திக்கு திருப்ப வேண்டுமானால் இராணுவ ரீதியில் சில முக்கிய வெற்றிகளை பெற்றாக வேண்டும். முகமாலையில் புலிகள் பெற்ற வெற்றியை போல மேலும் சிலப் பகுதிகளை புலிகள் கைப்பற்ற முடியுமா ?


************************

இலங்கையில் தற்பொழுது நடந்து வரும் நான்காவது ஈழப் போர் ஒரு சமநிலையை கடந்த வாரம் எட்டியது. ஆனையிறவு நோக்கி சிறீலங்கா அரசுபடைகளின் நகர்வை புலிகள் முறியடித்துள்ளனர். முகமாலையில் நடந்த இப்போர் சிறீலங்கா அரசு படைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது மட்டுமில்லாமல் தற்போதைய இராணுவ நிலையில் ஒரு சமநிலையையும் கொண்டு வந்திருக்கிறது. மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இராணுவ ரீதியில் புலிகள் பெற்ற இந்த வெற்றி இந்த வார இறுதியில் ஜெனிவாவில் நடக்க இருக்கின்ற பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் புலிகள் ஹபரணை மற்றும் காலியில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் புலிகளின் நிலையை மேலும் வலுவாக்கியிருக்கின்றது. பேச்சுவார்த்தையை ஒட்டிய சமயத்தில் நடந்த இந்த தாக்குதல் பேச்சுவார்த்தை மேஜையில் புலிகளுக்கு சில சாதகமான விடயங்களை ஏற்படுத்தியிருக்கிறது

எப்பொழுதுமே தங்களுடைய இராணுவ வெற்றியின் பிண்ணனியில் பேச்சுவார்த்தை மேஜைக்கு "பலத்துடன்" செல்வது தான் புலிகளின் வழக்கம். இம்முறை அத்தகைய பலத்தை பெற்று விட சிறீலங்கா அரசு முனைந்தது. அதன் விளைவு தான் புலிகள் மீது தொடுக்கப்பட்ட சம்பூர், மாவிலாறு மற்றும் முகமாலை தாக்குதல். இதில் சிறீலங்கா அரசுக்கு வெற்றி கிடைத்ததாக ஒரு சூழல் எழுந்தது. அதன் விளைவு தான் ஆனையிறவு நோக்கிய படைநகர்த்தல். இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போர் உத்திகளை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாக புரியும். சிறீலங்கா அரசு பெறும் எந்த வெற்றியும்/தோல்வியும் அரசியல் ரீதியாக சாதகமான/பாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இரணுவ உத்திகள் மட்டுமில்லாமல், அரசியல் கள நிலையும் சிறீலங்கா இராணுவத்தின் வியூங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசின் உத்திகளை கணிப்பது யாருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது. நம்மைப் போன்ற சாமானியர்கள் கூட சிறீலங்கா அரசு எப்படி திட்டங்களை வகுக்கும் என்பதை பட்டியலிட்டு கூறிவிடலாம். ஆனால் புலிகளின் உத்திகளை கணிப்பது சிறீலங்கா அரசுக்கும், ஏன் சர்வதேச சமூகத்திற்கும் கூட கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவர்கள் பின்பற்றிய வியூகங்களை கணிக்கும் பொழுது அவ்வாறு தான் எனக்கு தோன்றுகிறது. புலிகளுக்கு, சிறீலங்கா அரசு போல அரசியல் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. அவர்களுடைய உத்திகள் அனைத்துமே இராணுவம் சார்ந்த நிலைகளை பொறுத்தே இருந்து வந்திருக்கிறது.

முதல் தாக்குதல் மாவிலாறு யுத்தம் தான். மூதூர் மீதான தாக்குதலுக்குப் பிறகு திடீரென்று புலிகள் பின்வாங்கினர். இது புலிகளுக்கு வெற்றியா, தோல்வியா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தான் இருந்தது. புலிகளை பின்வாங்கச் செய்து விட்டதாக இராணுவம் கூறியது. இது அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மூதூரை கைப்பற்றும் நோக்கம் புலிகளுக்கு இல்லை என்றாலும் அவர்கள் தாக்குதல் தொடுத்த வேகத்திலேயே பின்வாங்கியது சந்தேகங்களை நிச்சயம் எழுப்பியது. அடுத்த முக்கிய தாக்குதல் சம்பூர் மீதான தாக்குதல். புலிகள் இங்கும் இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்க்காமல் பின்வாங்கினர். இராணுவம் சம்பூரை கைப்பற்றினாலும், புலிகளின் இராணுவ பலத்தை சிதைக்கவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக சிறீலங்கா அரசின் Kfir விமானத்தை எதிர்க்க கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பதாக இராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இப்பொழுதும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் புலிகளிடம் Surface to Air missiles (SAM) எனப்படும் விமானங்களை தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் நிச்சயம் புலிகளிடம் இந்த ஏவுகணைகள் உள்ளன. புலிகள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது கூட ஒரு உத்தியாக இருக்க கூடும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போர் ஒரு முழு அளவிலான போர் அல்ல என்பதால் தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக புலிகள் பிரயோகிக்கவேயில்லை.

தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக பிரயோகிக்காமல் இருப்பது இராணுவ ரீதியாக மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியாகவும் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்காக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

***************

சிறீலங்கா அரசு முன்வைக்க இருக்கும் தீர்வும், தென்னிலங்கை அரசியலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புலிகள் முன்வைக்க இருக்கும் உத்திகளையும் பொறுத்தே கூட்டாட்சியா அல்லது போரா என்பது முடிவாகும்.

கடந்த கால தென்னிலங்கை அரசியலும், புலிகளின் நிலைப்பாடும் கூட்டாட்சி குறித்த நம்பிக்கையை எனக்கு தற்பொழுது ஏற்படுத்தவில்லை. ஒரு இடைக்கால தீர்வினை எட்டவே ஒரு சில ஆண்டுகள் தேவைப்படலாம்

Leia Mais…
Thursday, October 12, 2006

மரண தண்டனை


இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற கூடாது, தூக்கு தண்டனை மனித நாகரிகத்திற்கு எதிரானது என்பதான கூக்குரல் தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளால் எழுப்பபட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அப்சலுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்பதாக எழுந்திருக்கிறது. இதற்கிடையில் கொல்கத்தாவைச் சார்ந்த தன்னஞாய் சேட்டர்ஜிக்கு கற்பழிப்பு வழக்கில் 2004ல் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனையை ஒரு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்த்தன என்பது தவிர, வேறு எந்த எதிர்ப்பும் பெரிய அளவில் எழவே இல்லை.

தூக்கு தண்டனைக்கான பெருவாரியான ஆதரவும், எதிர்ப்பும் அது எந்தளவுக்கு பிரபலமான குற்றத்தைச் சார்ந்து இருக்கிறதோ, அதையொட்டியே எழுகிறது. இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வாதிட்ட ஹிந்து, இப்பொழுது அப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்க கூடாது என்று வாதிடுகிறது (கடந்த 10 பத்து வருடங்களாக தங்களுடைய நிலைப்பாடு இதுவே என்று தலையங்கம் கூறுகிறது. நளினிக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடந்த பொழுது மரண தண்டனைக்கு ஆதரவாக ஹிந்துவில் பல கட்டுரைகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது)

ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுவை ஏற்க கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ், தற்பொழுது இந்தப் பிரச்சனையில் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டிருக்கிறது. அதன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆஸாத் தூக்கு தண்டனை கூடாது என்கிறார். காஷ்மீரில் எழுந்திருக்கிற உணர்வும், ஆட்சி குறித்த பயமும், அப்சால் தூக்கிலிடப்படும் சமயம் ரமலான் காலம் என்பதால் அவருடைய அரசியல் அச்சம் அவரை ஆட்கொள்கிறது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சமயத்தில் அது குறித்து பெரிய அளவில் எந்தப் பிரச்சனையையும் எழுப்பாத பாஜக இன்று தன்னுடைய அரசியல் தேவையை முன்னிட்டு இந்தப் பிரச்சனைக்கு அதிக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் இன்று தூக்கு தண்டனை வேண்டும் என்று கூறும் தீவிர இந்துத்துவ, சங்பரிவார் பாணி தேசபக்தர்கள் எல்லாம் "மனிதத் தன்மையற்ற மரண தண்டனையை" அகற்ற வேண்டும் என போராடுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர். இது வரை வலைப்பதிவில் விவாதிக்கப்பட்டதில் அப்சல் சார்ந்த, எதிரான வாதங்கள் தான் முன்நிறுத்தப்பட்டதே தவிர நான் படித்த வரையில் அப்சலை தவிர்த்து மரண தண்டனையை யாரும் அணுகியதாக தெரியவில்லை.

அப்சல் குறித்த எண்ணங்களை விலக்கி வைத்து விட்டு, மரணதண்டனை பிரச்சனையை அணுக முயற்சித்துள்ளேன்

இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனையை Rarest of the rare casesல் தான் வழங்குவதாக பத்திரிக்கைகளில் வாசித்தேன். இந்த Rarest of the rare caseஐ தீர்மானிப்பது யார் ? ஏதேனும் சட்டங்கள் இதனை வரையறை செய்கிறதா ? அல்லது நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படுகிறதா ? நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் ராஜீவ் கொலையில் 26பேருக்கு மரண தண்டனை வழங்கியது போலவோ, ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஓரிசா உயர்நிதீமன்றம் கீழ்கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியது போலவோத் தான் முடிவடையும். இந்த Rarest of the rare case எது என்பது சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என அம்னஸ்டி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

சட்டம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்றால் முதலில் எல்லா வழக்குகளும் ஒரே அளவில் தான் நடத்தப்பட வேண்டும். இந்த Rarest of the rare case என்பதே எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை என்பதாகவும் சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையுமே வெளிப்படுத்துகிறது. தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என்பதாகவும், தாதாவாக இருந்து கொண்டு "போட்டுத் தள்ளுவது" வேறு வகை என்பதாகவும் மாறி விடக்கூடாது. மரண தண்டனை இந்திய சட்டத்தில் "தொடர்ந்தால்" அது "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கில் பேதமில்லாமல் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படி இதனை "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கிலும் கூட சரிசமமாக பிரயோகிக்கப்படுத்த முடியாது என்றால் இதனை முழுமையாக விலக்கியே தீர வேண்டும்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் மரண தண்டனை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து நடைமுறையில் இருந்து தான் வருகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது தொடங்கி இன்று வரை நடந்து வரும் குற்றங்கள் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. குற்றங்கள் என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. ஆட்டோ சங்கர் போன்ற தாதாக்கள் தூக்கிலிடப்பட்டும், வீரமணி போன்ற தாதாக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் தாதாக்களுக்கு பஞ்சமில்லை. தாதாக்களே இவ்வாறு என்றால் தீவிரவாதிகள் எந்த மனநிலையில் இருக்கின்றனர் என்று நாம் சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் தூக்கு தண்டனை, குற்றங்களை தடுத்து நிறுத்தும் என்பதோ, குற்றம் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான்.

சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தண்டனைகள் குற்றங்களை தடுப்பதாகவும், குற்றவாளிகளை திருத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் உயிர்களை பறிப்பதாக இருக்க கூடாது. இவ்வாறு கூறுவதன் மூலம் தீவிவாதிகளை எப்படி திருத்த முடியும் என்ற கேள்வி எழும்.

தீவிரவாதத்தை சட்டங்கள் மூலம் தடுத்து விடமுடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை. தீவிரவாதம் தோன்றுவதன் அடிப்படை சமூக அவலங்களை நீக்கினால் தான் தீவிரவாதம் தடுக்கப்படும்.

இந்தியாவில் மரணதண்டனை, தீவிரவாதம் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என செய்திகளில் பார்த்தேன். தீவிரவாதத்தை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என்னும் பொழுது இந்த சட்டத்தின் நோக்கத்தில் எவ்வித அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தீவிரவாதத்தை சமூக மாற்றத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

அமெரிக்காவை Free Democratic country என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தான் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனால் இங்கிருக்கும் பல சட்டங்கள் ஒரு சமூகத்தை சரியான கோணத்தில் செலுத்தக்கூடியவை. செலுத்திக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு ஓட்டுனர் உரிமம் பெற இங்கிருக்கும் சட்டங்களும், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனையாக மட்டும் இருப்பதில்லை. அது தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. சாலை விதிகளை மீறுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது

நம்மூரிலும் இத்தகைய சட்டங்கள் இல்லையா ? இருக்கின்றன. பல சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான வேறுபாடு அதனை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது. எவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லையெனில் அந்த சட்டங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்தியாவில் சட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு இயந்திரங்களான காவல்துறையும், அதிகார அமைப்பும் சட்டங்களை
எந்தளவுக்கு மதித்து செயல்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்களை நடைமுறையில் சரியாக பின்பற்றக்கூடிய நிர்வாக முறை உள்ளது.

குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, அதனை சரியாக நிர்வகிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையோ, வேறு எந்த தண்டனையோ குற்றங்களை தடுத்து நிறுத்தி விடாது.

மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர குற்றங்களை தடுத்து விடாது.

(
மரண தண்டனைக்கு மாற்று தான் என்ன ? இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆயுள் தண்டனையின் காலம் 14வருடங்கள். இதனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், 35வருடங்கள் சிறைவாசம், தனிமை சிறைவாசம் போன்றவற்றை பலர் முன்வைத்துள்ளனர். தற்பொழுது இருக்கும் சிறை என்பது பலருக்கு "உல்லாசமாக" இருப்பதான ஒரு கருத்து நிலவுகிறது. பலருக்கு அது சிறைவாசமாக இல்லாமல் மற்றொரு விடுதி அனுபவமாக மாறிவிடுகிறது. இந் நிலையில் சிறைவாசத்தை இன்னும் கடுமையாக மாற்றுவதும், தனிமை சிறைவாசத்தை புகுத்துவதும், கடுமையான வேலைகளை கைதிகளுக்கு கொடுப்பதும் குற்றங்களை குறைக்கும் என சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை
)

Leia Mais…
Tuesday, October 10, 2006

வடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி

இன்று CNN-IBN பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு செய்திப்படம் பார்த்தேன். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சிலப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் ஒரு தனி இராணுவம் (மணிப்பூர் மக்கள் படை) சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது என்பதும் தான் அந்தச் செய்தி.

அஸாம் குறித்த பிரச்சனையை நான் அறிந்திருக்கிறேன். அது தவிரவும் என்னுடைய நண்பன் ஒருவன் அசாமைச் சேர்ந்தவன் என்ற வகையில் அங்கிருக்கும் பிரச்சனையின் சில யதார்த்த ரீதியிலான உண்மைகளை அறிந்திருக்கிறேன். பொருளாதாரம், கல்வி, அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தான் அசாமில் தீவிரவாதம் வளர்ந்தது. வடக்கிழக்கு மாகாணங்கள் இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாத பகுதி என்பதால் கடந்த காலங்களில் இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதும் தீவிரவாதம் வளர முக்கிய காரணம்.

மணிப்பூர் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த செய்தினை பார்க்கும் பொழுது இது பொருளாதார காரணங்களால் மட்டும் நடக்கும் பிரச்சனை போன்று தெரியவில்லை.

CNN-IBN செய்திப்படம்

CNN-IBN செய்தியில் இருந்து சில வரிகள்

The UNLF contends that the Merger Agreement signed in 1949 between Maharaja Bodh Chandra Singh and the Advisor to the Government V P Menon, was flawed.

“From 1947 to 1948, to be precise 15 October, 1949, the day India annexed Manipur, Manipur was an independent country. That's how it all began - the conflict - the genesis of the Manipur-India conflict,” says UNLF Chairman Sanayaima.

Strangely, the man who leads Manipur's violent secessionist movement once believed in the idea of India.

“I grew up and I thought that I'm an Indian - when I was in school and I thought of myself in that environment. But when I began to grow and reach the level of college & I gradually realized that India is something different from what we are,” says Sanayaima.

Alienation drives these young guerillas

Leia Mais…
Sunday, October 08, 2006

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரில் இன்று நடப்பது சுதந்திர போராட்டம் என பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பயங்கரவாதம் என இந்தியா கூறி வருகிறது. தீவிர இந்திய, இந்துத்துவா அனுதாபிகளும், அடிப்படைவாதிகளும் இதனையே கூறிவருகின்றனர்.

ஆனால் உண்மையில் அங்கு நடந்தது, நடைபெறுவது என்ன ?

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையாக ஆரம்பித்து, பின் அவர்களில் சில குழுக்களின் ஆயுதப் போராட்டமாக உருவாகியது தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம்.

ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அந்த போராட்டத்தின் முகத்தை சிதைத்து இன்று காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை பாக்கிஸ்தானையேச் சாரும்.

காஷ்மீர் முஸ்லிம்கள் சுபிஸம் என்ற இஸ்லாம் பிரிவைச் சார்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். ஆனால் இன்று பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து இருக்கின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நெருங்கிய இணக்கம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இன்று காஷ்மீர் மக்கள் தங்களின் சிதைந்து போன வாழ்க்கை முறையையும், போராட்ட முகத்தையும் வெளிக்கொண்டு வரமுடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இது குறித்து நான் முன்பு எழுதிய காஷ்மீர் குறித்த கட்டுரையை மீள்பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

அதனை இங்கே தருகிறேன் (காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)


காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.


காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய நினைவிடத்துக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த நினைவிடத்துக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், "காஷ்மீர் கலாச்சாரம்" என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது. பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது. அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.

மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிரச்சனை பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.

இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

Leia Mais…
Saturday, September 30, 2006

In the Line of Fire - Nuclear Proliferation

இந்தக் கட்டுரையின் முந்தையப் பகுதி

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப்பின் புத்தகம் இந்திய ஊடகங்களால் மட்டுமில்லாமல் பாக்கிஸ்தான் ஊடகங்களாலும் மிகக் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதற்கான காரணங்களை அவருடைய புத்தகத்தின் மற்றொரு அத்தியாயமான Nuclear Proliferation - பாக்கிஸ்தான் அணு ஆயுதங்கள் குறித்த அத்தியாயத்தில் காண முடிகிறது. ஜனாதிபதி பதவியில் இருந்து கொண்டு பாக்கிஸ்தான் அணு ஆயுத திட்டங்கள் குறித்த ஆரம்ப கால ரகசியங்களை முஷ்ரப் வெளிப்படுத்தியுள்ள விதம் இந்தப் புத்தகத்திற்கு கடுமையான எதிர்ப்பை பாக்கிஸ்தான் ஊடகங்களிலும் அவரின் எதிர்ப்பாளர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது

என்ன தான் இந்திய ஊடகங்கள் முஷ்ரப்பின் புத்தகத்தை நிராகரிக்க முயன்றாலும், இந்தப் புத்தகம் மிக சுவாரசியமான பல இராணுவ விடயங்களை சொல்லிக் கொண்டு செல்வதால் நிச்சயம் நிறையப் பிரதிகளை விற்று தீர்க்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயத்தில் இதில் எழுதப்பட்டுள்ள சில கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்றாலும் இது நிராகரிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. அவ்வளவு எளிதாக நிராகரித்து விடவும் முடியாது என்று தான் தோன்றுகிறது

பாக்கிஸ்தானின் ஆணு ஆயுதங்கள் பற்றிய ஆரம்ப கால விடயங்களை சுவாரசியமாக விவரிக்கிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு திட்டத்தின் தந்தை எனக்கூறப்படும் A.Q.கான் நெதர்லாந்தில் யூரேனியம் என்ரிச்மெண்ட் துறையில் வேலைப்பார்த்து கொண்டிருந்தவர். 1975ல், அதாவது 1974ல் இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை மேற்க்கொண்டப் பிறகு இவர் பாக்கிஸ்தான் அணுதிட்டத்தில் பங்காற்ற தாமாக முன்வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர் நெதர்லாந்தில் இருந்து பாக்கிஸ்தான் வந்த பொழுதே, அங்கிருந்து centrifuges drawingsஐ கொண்டு வந்ததாக முஷ்ரப் கூறுகிறார். அதோடு இல்லாமல் பாக்கிஸ்தானின் ஆரம்ப கால அணு ஆயுத திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை ஐரோப்பாவில் உள்ள சில "திரைமறைவு" தனியார் குழுக்களிடம் இருந்து பெற்றதாக முஷ்ரப் கூறுகிறார். இந்தியாவும் இதே சமயத்தில் தன் அணு ஆயுத திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்ததால் இந்தியாவும் இதே தனியார் குழுக்களிடம் இருந்து அணு தொழில்நுட்பத்தை பெற்றிருக்கலாம் என்கிறார் முஷ்ரப்.

...In the years that followed, we obtained all the other materials and technology we needed through an underground network based mainly in the developed countries of Europe. India was also developing its nuclear arsenal during these years. Perhaps we were both being supplied by the same network, the non-state proliferators

தங்களுக்கு கிடைத்த அணு ஆயுத தொழில்நுட்பம் தங்களுடையது அல்ல என்றும் அது சில தனியார் அமைப்புகளிடம் இருந்து திரைமறைவு காரியங்களில் பெறப்பட்டது என்பதை முஷ்ரப் வெளிப்படையாக கூறியது தான் பல பாக்கிஸ்தான் ஊடங்களில் முஷ்ரப் மீது தாக்குதல் தொடுக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும்.

இந்தியா தெற்காசியாவிலும், மத்திய கிழக்குப் பகுதியிலும் தன்னை ஒரு வல்லரசாக உருவாக்கிக் கொள்ளவே அணு ஆயுதங்களை முதலில் சோதனை செய்தது என்றும், அதைத் தொடர்ந்து தான் பாக்கிஸ்தான் தன்னுடைய தற்காப்புக்காக அணு ஆயுதங்களை சோதித்தது - India's intentions were offensive and aggressive; ours were defensive என்கிறார் முஷ்ரப். முஷ்ரப்பின் இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் இவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் இந்தியாவின் hegemonyஐ வெளிப்படுத்தவே பல சமயம் முயன்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இந்திரா, ராஜீவ் காலங்களில் ரா அமைப்பு மூலம் இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளில் ஏற்படுத்திய நாசவேலைகள் ஒரு சிறந்த உதாரணம்.

பாக்கிஸ்தானின் அணு ஆயுத தந்தை எனப்படும் A.Q.கான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் முஷ்ரப். A.Q.கானின் திரைமறைவு வேலைகள் தனக்கு தெரிந்து இருந்தாலும், அவர் மீது பாக்கிஸ்தான் மக்கள் வைத்திருந்த அளவற்ற மரியாதை காரணமாக தன்னால் அவரது குற்றங்களை சரியாக வெளிக்கொண்டு வரமுடியவில்லை என்கிறார் முஷ்ரப். A.Q.கானுக்கும் வடகொரியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு இருந்த திரைமறைவு தொடர்புகளை வெளிப்படுத்துகிறார். இவை தவிர கான் துபாயில் சட்டவிரோதமான ஒரு அணு ஆயுத குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் பல நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றார் என்கிறார் முஷ்ரப். இந்த சட்டவிரோதக் குழுவில் பல நாட்டைச் சேர்ந்தவர்கள் பயற்சி எடுத்தனர் என்றும் முஷ்ரப் கூறுகிறார்.

இலங்கை, பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் கான் குழுவில் அணு ஆயுதப் பயிற்சி எடுத்ததாக முஷ்ரப் கூறுகிறார். இவர்கள் தவிர இந்தியாவைச் சேர்ந்த சிலரும் இங்கு பயிற்சி எடுத்தாகவும் இந்தியாவின் யூரேனியம் என்ரிச்மெண்ட் தொழில்நுட்பம் பாக்கிஸ்தான் அணு விஞ்ஞானி A.Q.கானிடம் பயிற்சி எடுத்த இந்தியர்கள் மூலமாக இந்தியாவிடம் சென்று சேர்ந்து விட்டது என்று கூறி ஒரு புதுக் கதையை எழுப்புகிறார் முஷ்ரப்.

Ironically, the network based in Dubai had employed several Indians, some of whom have since vanished. There is a strong probability that the Indian uranium enrichment program may have its roots in the Dubai-based network and could be a copy of the Pakistani centrifuge design. This has also been recently alluded to by an eminent American nonproliferation analyst

முஷ்ரப்பின் இந்த வாதம் தான் பலருக்கு நகைச்சுவையை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் முஷ்ரப் இதனை கூறுகிறார் ? அந்த அமெரிக்கன் nonproliferation analyst யார் ? யாரோ கூறியதை எப்படி ஒரு ஜனாதிபதி தன் சயசரிதையில் கூற முடியும் ?

எனக்கு ஒரு பட்சி சொன்னது என்ற பாணியில் முஷ்ரப் இவ்வாறு எழுதியிருப்பது தான் இந்திய ஊடகங்களும், தீவிர இந்திய அபிமானிகளும் இந்த புத்தகம் மீது தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு முக்கிய காரணம். அதுவும் தவிர பாக்கிஸ்தானின் அணு ஆயுதப் பாதுகாப்பு எவ்வாறு மிக மோசமான நிலையில் இருந்தது என்பதை அவரே விவரித்து விட்டு, அமெரிக்கா இந்தியாவின் அணு ஆயுத நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இந்தியாவுடன் அணு ஆயுத ஒத்துழைப்பை செனட் மூலமாக நிறைவேற்றியுள்ள தருணத்தில், இந்தியாவின் அணு திட்டம் பாக்கிஸ்தானின் காப்பி என்று போகிற போக்கில் சொல்லி விட்டுச் செல்வது தான் இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது.

அதே சமயத்தில் முஷ்ரப் எந்தவித ஆதாரமும் இல்லாமல் கூறியிருக்கும் இந்த வரிகள் பொருட்படுத்த வேண்டியவை அல்ல. இந்த ஒரு வரிக்காக முழு புத்தகத்தையும் நிராகரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த புத்தக ஆசிரியரும் தன்னுடைய சார்புகளை சில இடங்களில் அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தவே செய்வார். முஷ்ரப்பின் இந்த வரிகளும் அந்த வகையைச் சார்ந்தது தான்

இந்தப் புத்தகத்தில் பொதுவாகவே தன்னையும், பாக்கிஸ்தானையும் அதிக அளவில் முன்னிலைப்படுத்துகிறார் முஷ்ரப். பாக்கிஸ்தான் அணு நிலையங்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் எழ ஏ.யு.கான் தான் காரணம் என்கிறார் முஷ்ரப். தனக்கு ஏ.யு.கான் பற்றி தெரிந்தாலும் பாக்கிஸ்தான் மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஹீரோ இமேஜ் காரணமாகவே தன்னால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்கிறார் முஷ்ரப்.

பல சட்டவிரோதமான அணு ஆயுத தொடர்புகளைக் கொண்டிருந்த ஏ.யு.கான் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், பொதுமக்களிடம் இந்த உண்மையை கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தான் கூறியதாகவும் முஷ்ரப் கூறுகிறார். ஏ.யு.கான் இதற்குப் பிறகு தொலைக்காட்சியில் தோன்றி பாக்கிஸ்தான் மக்களிடம் மன்னிப்பு கோரினார். பின்பு வீட்டுக் காவலிலும் அடைக்கப்பட்டார். இப்பொழுதும் வீட்டு காவலில் தான் உள்ளார்.

இந்தியா குறித்தான விரிகளை நீக்கி விட்டு பார்த்தால் இந்த அத்தியாயம் சுவாரசியமாகவே உள்ளது. ஆனால் தற்பொழுது ஜனாதிபதியாக உள்ள ஒருவர், அவரது நாட்டு ரகசியங்களை வெளிப்படுத்துவது சரியானது தானா ? அதைத் தான் பாக்கிஸ்தான் ஊடகங்கள் சாடிக் கொண்டிருக்கின்றன

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf

Leia Mais…
Friday, September 29, 2006

In the Line of Fire - Pervez Musharraf

பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் எழுதி உலகெங்கிலும் அதிகப் பரபரப்புடன் விற்பனையாகிக்கொண்டிருக்கும் புத்தகம் - In the Line of Fire. இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன் பெரும்பாலான இந்தியர்கள் படிக்க நினைக்கும் சிலவற்றை தான் நானும் முதலில் படித்தேன். இன்னும் முழு புத்தகத்தையும் படிக்க வில்லை. கார்கில் போர் குறித்தான முஷ்ரப்பின் கருத்துக்களை இந்திய ஊடகங்கள் சாடிக் கொண்டிருந்த நிலையில் முதலில் கார்கில் குறித்து படித்து விட்டு பிறகு முழு புத்தகத்தையும் படிக்கலாம் என்று கார்கில் அத்தியாயத்தை வாசிக்க தொடங்கினேன்.

இந்திய ஊடகங்கள் குறிப்பாக ஹிந்துவில் வெளியான கட்டுரையும், இந்த புத்தகத்தை படிக்காமலேயே ஆசிரியருக்கு கடிதம் எழுதி குவித்து கொண்டிருக்கும் ஹிந்து வாசகர் கடிதங்களையும் பார்த்தப் பிறகு முஷ்ரப் கார்கில் குறித்து என்ன தான் சொல்கிறார் என்ற ஆர்வம் ஏற்பட்டது. கார்கில் குறித்த கட்டுரை நல்ல நடையில் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது.

முதலில் முஷ்ரப் என்ன சொல்கிறார் என்பதை மட்டும் பார்த்து விட்டு அது குறித்த எனது விமர்சனங்களை இறுதியில் எழுதுகிறேன்.

முஷ்ரப் கார்கில் அத்தியாயத்தை இவ்வாறு தொடங்குகிறார்

The year 1999 may have been the most momentous of my life.. The events of 1999 and the fall of 1998, dramatically catapulated me from solidiering to leading the destiny of the nation என்று தொடங்கும் முஷ்ரப் It is time to lay bare what has been shrouded in mystery என்று கார்கில் குறித்த புதிர்களை அவிழ்க்க முற்படுகிறார்.

கார்கில் மற்றும் Dras பகுதியில் இருக்கும் சிலப் பகுதிகளை பாக்கிஸ்தான் 1999ல் ஆக்கிரமித்தது ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அது முதன் முறையாக நடந்த ஒரு ஆக்கிரமிப்பு இல்லை என்றும் முஷ்ரப் கூறுகிறார். பாக்கிஸ்தான் அதிக வலுவுடன் இல்லாத பனிப் பகுதிகளை இந்தியா ஆக்கிரமிப்பதும், இந்தியா வலுவுடன் இல்லாத இடங்களை பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பதும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு என்றும் இவ்வாறு தான் சியாசின் பகுதி இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார் முஷ்ரப்.

இந்தியா, பாக்கிஸ்தான் பகுதிகள் மீது தாக்குதல் தொடுக்க முயற்சி செய்வதாக தங்களுக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையிலே தான் கார்கிலை பாக்கிஸ்தான் ஆக்கிரமிக்க திட்டம் தீட்டியது என்கிறார் முஷ்ரப். குளிர் காலங்களில் மிகவும் குளிர் மிகுந்த இந்தப் பகுதிகளை விட்டு இரு நாட்டின் படையினரும் விலகிக் கொள்வதும், குளிர் காலம் முடிந்தவுடன் இந்தப் பகுதிக்கு மீண்டும் வருவதும் வழக்கம். 1999ல் குளிர் காலத்தில் இந்தப் பகுதியை விட்டு இந்திய இராணுவம் விலகிய நிலையில் தான் பாக்கிஸ்தான் கார்கில் பகுதியை ஆக்கிரமித்தது

There was specific information of a possible Indian attack in the Shaqma sector; it was aimed at positions we had used to shell the road between Dras and Kargil in early summer 1998, in response to continuous artillery shelling by the Indians...

There were large gaps between our defensive positions in the Kargil and Dras sectors, making it possible for Indian troops to cross the line too easily. India also brought in and tested special bunker-busting equipment in the autumn of 1998 ...

இந்தியாவின் இந்த முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் இந்த முயற்சியை தடுக்கும் வகையிலும் மிக ரகசியமாக கார்கில் பகுதி பாக்கிஸ்தான் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது என்கிறார். இது பாக்கிஸ்தான் இராணுவத்தின் செயல்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று முஷ்ரப் கூறுகிறார்

Our maneuver was conducted flawlessly, a tactical marvel of military professionalism. By the end of April the unoccupied gaps along 75miles (120KM) of the LOC had been secured by over 100 new posts of ten to twenty persons each.

பாக்கிஸ்தான் படைகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் இருக்கும் பகுதியில் தங்கள் பலத்தை அதிகரித்தப் பிறகு முஜாஹீதின் குழுக்கள் இந்தியாவின் பகுதிக்குள் சுமார் 800 சதுர கி.மீ பகுதிகளை ஆக்கிரமித்து இருந்ததாகவும், எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளை நோக்கி இந்தியா நெருங்க முடியாதவண்ணம் இவர்கள் அரண் அமைக்க, எல்லைக் கட்டுப்பாட்டு கோடுக்குள் பாக்கிஸ்தான் படைகள் தங்கள் பாதுகாப்பை அதிகரித்து இருந்ததாகவும் முஷ்ரப் கூறுகிறார். இது எதுவுமே இந்தியாவிற்கு 1999 மே மாதம் வரை தெரியாது என்கிறார் முஷ்ரப்.

முஷ்ரப் கூறியதன் சாராம்சம் இது தான் - "பாக்கிஸ்தான் மீது இந்தியா கார்கில் பகுதியில் தாக்குதல் தொடுக்க திட்டமிட்டிருந்தது. இதனை முறியடிக்க கார்கில் பகுதியில் எங்கள் பாதுகாப்பை அதிகரித்தோம். முஜாஹீதின் குழுக்கள் மூலமாக இந்தியப் பகுதியையும் ஆக்கிரமித்தோம். இதற்கு காரணம் இந்தியா தானே தவிர நாங்கள் இல்லை"

இது உண்மையா ? பிறகு கவனிப்போம்.

முஷ்ரப் கூறும் மேலும் சில விடயங்கள் இந்திய இராணுவத்தின் திட்டமிடல் குறித்தும், செயல்பாடு குறித்தும், கார்கில் போரில் இந்தியாவின் வெற்றி குறித்தும் பல கேள்விகளை எழுப்புகிறது. அது போல கார்கில் போர் பாக்கிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என முஷ்ரப் கூறுகிறார்

India moved in artillery and infantry formations even at the cost of significantly depleting its offensive capability elsewhere along the international border. Evaluating this buildup at headquarters we realized that India had created a serious strategic imbalance in its system of forces. It had bottled up major formations inside Kashmir, leaving itself co capability to attack us elsewhere....

By july 4 they (இந்தியா) did achieve some success, which i would call insignificant

Our Nation remains proud of its commanders and troops, whose grit and determination I observed during my frequent vists to the forward areas

Pakistan was in a strategically advantegous position in case of an all-out war, in view of the massive Indian troop indications inside Kashmir, resulting in a stragtegic imbalance in India's system of forces

The indians, by their own admission, suffered over 600 killed and over 1500 wounded. Our information suggests that the real numbers are at least twice what India has publicly admitted. The Indians actually ran short of coffins, owing to an unexpectedly high number of casualties;

The number of Indian casualties proves the fighting prowess and professionalism of the officers and men of the Pakistan Army

our army, outnumbered and outgunned, fought this conflict with great valor

கார்கில் போர் இராணுவ ரீதியில் பாக்கிஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறும் முஷ்ரப் அரசியல் ரீதியாக இந்தப் போர் தங்களுக்கு கிடைத்த தோல்வி என்கிறார். அதற்கு காரணம் அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தான் என முஷ்ரப் குற்றம்சாட்டுகிறார்.

கார்கில் போர் திட்டமிடல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நவாஸ் ஷெரீப் அப்பொழுது கூறியது பொய் எனக்கூறும் முஷ்ரப் அவருடன் இது குறித்து விவாதித்த தேதிகளையும் குறிப்பிடுகிறார். பாக்கிஸ்தான் இராணுவத்தின் இந்த மிகப் பெரிய வெற்றியை கூட தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அப்போதைய அரசியல் தலைமை இருந்ததாக நவாஸ் ஷெரீப் மீது குற்றம்சாட்டுகிறார். அது போலவே இந்தியா சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சனையை சாதுரியமாக கையாண்டு தங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது என ஒப்புக்கொள்கிறார்.

இந்திய ஊடகங்கள் இந்தியாவின் கார்கில் வெற்றி குறித்து மிகைப்படுத்தியே செய்தி வெளியிட்டது என்று முஷ்ரப் கூறுகிறார். ஆனால் பாக்கிஸ்தானில் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை பாக்கிஸ்தானின் அரசியல் தலைமை உருவாக்க தவறி விட்டதாக முஷ்ரப் சாடுகிறார்.

முஷ்ரப் இந்த புத்தகத்தில் கூறுவது உண்மையா ? இந்தக் கேள்வியை பல ஊடகங்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.

தான் கூறும் அனைத்தும் உண்மை என வாதிடுகிறார் முஷ்ரப்

whatever I have said in the book is the truth, the whole truth and nothing but the truth, and I stand by it."

பாக்கிஸ்தானின் கார்கில் திட்டம் முழுவதும் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்கு மேற்க்கொண்ட பஸ் பயணத்திற்கு பின்பாக பாக்கிஸ்தானுடன் ஒரு சுமூக உறவை உருவாக்க இந்தியா முயற்சித்துக் கொண்டிருந்த தருணத்தில் நடைபெற்றது என்பதை இந்த அத்தியாயத்தின் எந்த இடத்திலும் முஷ்ரப் கூறவேயில்லை. அது தவிர கார்கில் பிரச்சனை காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்பதாக தான் இது வரை இந்திய ஊடகங்களும் பிற நாட்டு ஊடகங்களும் கூறிவந்தன. ஆனால் தங்கள் மீது இந்தியா தாக்குதல் தொடுக்க திட்டமிட்டதன் எதிர் நடவடிக்கை தான் இந்த தாக்குதல் என்றும் தங்களின் கார்கில் நடவடிக்கை அதை முறியடித்து விட்டதாகவும் முஷ்ரப் கூறுகிறார்.

Indian's planned offensive was preempted

முஷ்ரப்பின் இந்தக் கருத்து இதுவரையில் வெளிவராத ஒரு புதிய நிலைப்பாடு. முஷ்ரப் சொல்வது உண்மையா ? தெரியவில்லை

பாக்கிஸ்தான் இராணுவத்தின் பெருமையை பறைச்சாற்றும் முஷ்ரப், இந்த போர் நடந்த சமயத்தில் இந்தப் பிரச்சனைக்கும், பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தான் கூறி வந்தனர்.

இன்னும் சொல்லப் போனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட பல பாக்கிஸ்தான் வீரர்களின் சடலங்களை பாக்கிஸ்தான் ஏற்க மறுத்தது. அவர்களுக்கு இந்திய இராணுவமே ஒரு போர் வீரனுக்கு கொடுக்க வேண்டிய இறுதிமரியாதையை முஸ்லீம் முறைப்படி கொடுத்தாக அப்பொழுது ஹிந்துவில் படித்த ஞாபகம் இருக்கிறது. இந்திய ஊடகங்கள் இதை மிகைப்படுத்தி கூறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் தொடர்ச்சியாக இந்தப் போரில் தங்கள் இராணுவம் ஈடுபடவில்லை என்று பாக்கிஸ்தான் கூறிவந்ததை இந்தப் புத்தகம் நிராகரிக்கிறது. ஆனால் இதற்கு தான் காரணமில்லை என்றும் அரசியல் தலைமை தான் காரணம் என்று கூறி முஷ்ரப் தப்பித்து கொள்கிறார். ஒரு இராணுவ தளபதியாக தன் படையின் வெற்றியை தன்னால் சரியாக வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்ததாக முஷ்ரப் கூறுகிறார்.

இந்தப் புத்தகம் இந்திய இராணுவத்தின் வெற்றி குறித்து எழுப்பியிருக்கும் சில கேள்விகள் சரியானவை அல்ல என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம், இந்தியப் படைகளுக்கு மிகவும் பாதகமான சூழ்நிலையில் தான் இந்தப் போர் நடைபெற்றது. பாக்கிஸ்தான் இராணுவமும், அவர்களின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் குழுக்களும் இந்திய இராணுவத்தை வலுவாக தாக்கக்கூடிய சாதகமானப் பகுதிகளை தான் ஆக்கிரமித்து இருந்தனர். முதலில் விமானப்படை மூலமான தாக்குதல் தொடங்கி அது பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில் தான் இந்தியா தனது அடுத்த தாக்குதலை தொடுத்தது. பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து இருந்த சில நிலைகள் 10 முதல் 20 பேர் வரை மட்டுமே ஆக்கிரமித்து இருந்தனர். அந்த கடுமையான மலைப்பகுதியில், குளிரில் இந்திய இராணுவத்தினர் கடும் சவாலுடன் தான் இந்தப் போரினை எதிர்கொண்டனர் என்பதை மறுக்க முடியாது. சில குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் பெற்றே இருந்தனர்.

ஆனால் முஷ்ரப் கூறுவது போல அது பெரிய வெற்றி இல்லையா ? - did achieve some success, which i would call insignificant...
தெரியவில்லை

இந்தப் போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்து முஷ்ரப் எழுதவேயில்லை. பாக்கிஸ்தான் இந்தப் போருக்கு பின்பு அரசியல் குழப்பத்திற்குள்ளானது. நவாஸ் ஷெரீப், முஷ்ரப் இடையேயான பிரச்சனை வலுத்து, மோதல் ஏற்பட்டு இராணுவப் புரட்சி மூலம் முஷ்ரப் அதிபரானார். பாக்கிஸ்தான் மீது கடுமையான நிர்பந்தம் உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவில் இந்தப் போருக்கு பின், ஊசலாடிக் கொண்டிருந்த கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்து வாஜ்பாய் தலைமையில் ஒரு வலுவான அரசு உருவானது. பொருளாதார ரீதியிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

இவ்வாறான நிலையில் தான் முஷ்ரப் இராணுவ ரீதியில் மட்டும் இந்தப் போர் பாக்கிஸ்தானுக்கு வெற்றி என்கிறார். கார்கில் போர் பாக்கிஸ்தான் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் முஷ்ரப்

Considered purely on military terms, the Kargil operations were a landmark in the history of Pakistan Army. As few as few batallions in support of the freedom fighter groups, were able to compel the Indians to employ four divisions....

இந்தப் போரின் பலன் என்ன ? முஷ்ரப்பே கூறுகிறார்

I would like to state emphatically that whatever movement has taken place so far in the direction of finding a solution to Kashmir is due considerably to the Kargil conflict

இந்த புத்தகத்தின் மற்றொரு முக்கிய விடயம் காஷ்மீர் குறித்து முஷ்ரப் முன்வைத்த out-of-box solution. இது குறித்து முன்பே நான் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். பத்ரியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

கார்கில் குறித்து முஷ்ரப் கூறிய கருத்துக்களை என்னால் முழுமையாக ஏற்க முடியாவிட்டாலும், காஷ்மீர் குறித்த முஷ்ரப்பின் கருத்து இது வரை இந்தியா-பாக்கிஸ்தான் இரு நாட்டைச் சேர்ந்த எவரும் முன்வைக்காத உருப்படியான திட்டம் என்றே நினைக்கிறேன். அவரின் இந்த திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால் அது காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையக்கூடும்.

அது குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

கட்டுரையின் அடுத்தப் பகுதி - In the Line of Fire - Nuclear Proliferation

Excerpts from "In the Line of Fire" by Pervez Musharraf
Published by FREE PRESS
Copyright 2006 by President Pervez Musharraf


Leia Mais…
Tuesday, September 26, 2006

திலீபன், காந்தி, அகிம்சை

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

Leia Mais…
Sunday, August 20, 2006

இலங்கை நிலவரம்

இலங்கையில் மீண்டும் போர் துவங்கி விட்டது. கிழக்கு பகுதியில் தொடங்கி பல முனைகளில் நடைபெற்ற போர் இப்பொழுது யாழ் நோக்கி திரும்பியுள்ளது. யாழ்ப்பாணம் இலங்கையின் பிற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மிக மோசமான நிலைக்கு வெகு விரைவில் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படுமோ என்ற கவலை ஏற்படுகிறது. இலங்கையில் இருந்து வரும் செய்திகளைக் கொண்டு பார்க்கும் பொழுது புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் சண்டையில் யாழ்ப்பாண மக்கள் பகடை காய்களாக பயன்படுத்தப்படுகிறார்களோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.

புலிகள் யாழ்ப்பாணத்தை முற்றுகை இட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவிச பொருட்கள் செல்லக்கூடிய A9 புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி வழியாக செல்வதால் அந்தப் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது. பலாலி விமாத்தளம் புலிகளின் ஆர்ட்டிலறி தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதால் விமானங்களை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கான கடல்வழியான போக்குவரத்தும் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி வழியாகவோ அல்லது சர்வதேச கடல் வழியாகவோ தான் கொண்டு செல்ல முடியும். திரிகோணமலை துறைமுகமும் புலிகளின் ஆர்ட்டிலறி தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது. இந் நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்குமான அத்தியாவிச பொருட்கள் கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை புலிகள் கைப்பற்றும் இந்த முயற்சியை கவனிக்கும் பொழுது அவர்கள் ஆனையிறவு முகாமை கைப்பற்ற மேற்க்கொண்ட முயற்சியைப் போலத் தான் உள்ளது. முதல் கட்டமாக இராணுவத்தினருக்கான அத்தியாவிச பொருட்களை தடை செய்து அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது, அவர்களின் மனவலிமை குலையும் நிலையில் அதிரடி தாக்குதலை நடத்துவது என்பது தான் புலிகளின் உத்தி. இந்த உத்தியினை சிறீலங்கா இராணுவம் சரியாக கணித்திருப்பதன் எதிர்நடவடிக்கை தான் யாழ்ப்பாணத்தை விட்டு பொதுமக்கள் வெளியேற அனுமதிக்காமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலை. யாழ்ப்பாண மக்களையும் இந்தப் பிரச்சனைக்கு உள்ளாக்குவதன் மூலம் இதனை பொதுமக்களின் பிரச்சனையாக மாற்ற சிறீலங்கா இராணுவம் முயன்று கொண்டிருக்கிறது. நேற்று பி.பி.சி.தமிழோசைக்கு செவ்வி வழங்கிய ஒரு இராணுவ அதிகாரி, "புலிகள் எங்களை தாக்கும் பொழுது பொதுமக்களும் பாதிக்கப்படத் தான் செய்வார்கள்" என்று கூறினார். யாழ்ப்பாண மக்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டு இந்த முற்றுகையில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள சிறீலங்கா அரசு முனைந்து கொண்டிருக்கிறது. மக்களை யாழ்ப்பாணத்திலேயே வைத்திருப்பதன் மூலம் புலிகளின் பெரிய அளவிலான தாக்குதலை தடுத்திருக்கிறது. அது தவிர இந்த முற்றுகை தொடருமானால் புலிகளுக்கு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. அதுவும் தங்களுக்குச் சாதகமாக இருக்க கூடும் என்பது தான் சிறீலங்கா இராணுவத்தின் கணிப்பு. அது தவிர மக்கள் இச் சமயத்தில் வெளியேறும் பட்சத்தில் புலிகளின் ஆதரவு மக்கள் குழுக்கள் தங்கள் மீது கொரில்லா தாக்குதல் தொடுக்க கூடும் என்பதும் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

பொதுமக்களுக்கு பிரச்சனையில்லாத வகையில், மக்கள் போர்ப் பகுதியில் இருந்து வெளியேற வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் நியதி. ஆனால் இலங்கையில் இப்பொழுது நடைபெற்று வரும் பிரச்சனையில் மக்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப்படுவது தான் நடந்து வருகிறது. மூதூரை புலிகள் தாக்கிய பொழுது மூதூர் முஸ்லீம் மக்களை புலிகள் தாக்கியதாக பிரச்சனை எழுந்தது. அதன் பிறகு மூதூரில் 15தமிழ் தன்னார்வ பணியாளர்கள் சிறீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ச்சியாக செஞ்சோலை அனாதை இல்லம் மீதான சிறீலங்கா விமானப்படையின் "பயங்கரவாத" தாக்குதல். இது ஒரு போர் முகாம் அல்ல என்று தெளிவாகியப் பிறகும், தொடர்ந்து இது புலிகளின் பயிற்சி முகாம் என்று சிறீலங்கா அரசு கூறிக் கொண்டுள்ளது

செஞ்சோலைக் குறித்த ஒரு குறும்படத்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு இணையத்தளத்தில் பார்த்திருக்கிறேன். அது அனாதைக் குழந்தைகளின் ஒரு காப்பகமாகத் தான் செய்லபட்டு வந்திருக்கிறது. புலிகளின் எதிர்ப்பாளராக அறியப்படும் D.B.S.ஜெயராஜ் கூட இது குறித்து மிக விரிவான ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்

சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக ஹிந்து போன்ற ஊடகங்கள் செய்தி பரப்பும் நிலையில் இப்பிரச்சனையை தமிழக அரசியல் அமைப்புகள் கட்சி பேதமில்லாமல் கையாண்டுள்ளமை ஆறுதல் அளிக்கிறது.

அதே நேரத்தில் பள்ளி மாணவிகள் படுகொலைச் செய்யப்பட்ட நிலையிலும் அதனை அரசியலாக்கும் கருணா ஆதரவு குழுக்களின் நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. புலிகளின் "பாஸிசத்தை" எதிர்ப்பதை யாரும் குறைச்சொல்ல முடியாது. ஆனால் 61 பள்ளி மாணவிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை இந்தக் குழுக்களின் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எதிர்கொண்ட விதம் அருவருக்கத்தக்க வகையிலே தான் இருந்தது. செஞ்சோலை புலிகளின் பயிற்சி முகாம் என்ற பொய்ச் செய்தியை "ஹிந்து" போன்ற "சிறீலங்கா ஆதரவு பத்திரிக்கைகளும்" அதிக முக்கியத்துவத்துடன் மனிதாபிமானம் இல்லாமல் வெளியிட்டு தங்களின் புலி எதிர்ப்பு "அரிப்பை" தீர்த்துக் கொண்டுள்ளன.

இந்தச் சண்டையை யார் முதலில் துவக்கியது என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. தண்ணீரை நிறுத்தியப் புலிகளா அல்லது முதல் இராணுவ தாக்குதலை தொடுத்த சிறீலங்கா இராணுவமா என்பது தான் கேள்வி. ஆனால் உண்மையில் இரு தரப்புமே போர் துவங்க ஒரு காரணத்தை தேடிக்கொண்டிருந்த நிலையில், அடுத்தவர் மீது பழி போட்டு விட்டு இந்தப் போரினை துவக்கி விட்டனர்.

மாவிலாறு பிரச்சனை நடந்த சமயத்தில் இடதுசாரி அமைப்புகளின் வேலைநிறுத்தம் தென்னிலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த்து கவனிக்கத்தக்கது. தென்னிலங்கை வேலை நிறுத்தம் ஒரு பக்கம், போர் துவங்க ஜேவிபியின் நிர்பந்தம் ஒரு பக்கம் என்ற நிலையில் ஜே.வி.பி.யின் நிர்பந்தம் காரணமாகவே இந்த போரினை மஹிந்த ராஜபக்ஷ தொடங்கினார். தென்னிலங்கையின் அரசியல் நிலையை சமாளிக்க, பகடை காய்களாக இம்முறையும் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை நிலை.

என்றாலும் ராஜபக்ஷவின் இந்த நடவடிக்கையை புலிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

விளைவு, நான்காம் ஈழப் போர் துவங்கி விட்டது

இந்தப் பிரச்சனைக்கு முந்தைய காலம் வரை இலங்கையில் போர் எப்பொழுது துவங்கும் என்ற நிச்சயமற்ற நிலை தான் நீடித்துக் கொண்டிருந்தது. யார் முதலில் போரினை துவக்குவார்கள் என்ற நிலைதான் இருந்ததே தவிர பேச்சுவார்த்தை, சமாதானம் என்பதெல்லாம் இருந்ததில்லை. என்னுடைய "சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்" தொடரில் கூறியிருந்தது போல, எப்பொழுது வேண்டுமானாலும் போர் தொடங்கப்படலாம் என்ற நிலை தான் நீடித்துக் கொண்டிருந்தது. புலிகள் தண்ணீரை தடை செய்ததும், சிறீலங்கா அரசு போரினை துவக்கியதும் போர் துவங்க இரு தரப்பினருமே முன்னெடுத்த ஒரு நடவடிக்கை என்பதை மறுக்க முடியாது.

புலிகளின் பலவீனமான பகுதியாக கிழக்கு மாகாணங்கள் தான் கருதப்பட்டு வந்தன. கருணா குழுவை முன்நிறுத்தி சிறீலங்கா அரசின் உளவுப்படையும், Deep Peneteration unit எனப்படுகிற சிறீலங்கா அரசின் மற்றொரு படையும் இப் பகுதியில் தான் புலிகளுக்கு எதிரான "நிழல் யுத்தத்தை" நடத்தி வந்திருந்தன. இந் நிலையில் இப் பகுதியில் இருந்த மாவிலாறு யுத்தம் புலிகளுக்கு பெருத்த சவாலினை விடுத்தது. என்றாலும் இந்தப் போரினை தங்களின் பலத்தை பரிசோதித்துக் கொள்ளும் ஒரு இடமாக புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். அதன் விளைவு தான் மூதூர் மீதான தாக்குதல் என நான் நினைக்கிறேன்.

மூதூர் மீதான புலிகளின் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததாக சிறீலங்கா தரப்பும், புலிகள் எதிர்ப்பு அமைப்புகளும் கூறியிருந்தன. மூதூர் தாக்குதல் புலிகளுக்கு ஒரு பின்னடைவு தான். என்றாலும் புலிகளின் மூதூர் தாக்குதல் ஒரு சோதனை முயற்சி என்பதாகவே நான் நினைக்கிறேன்.

மூதூர் தாக்குதல் ஈழப் போரின் பல சிக்கல் நிறைந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்தன என்பது உண்மை.

முதல் உண்மை - புலிகளின் பலம் ஈழம் முழுதுமான தங்களின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தக் கூடிய நிலையில் இல்லை. மூதூரில் இது தெளிவாக வெளிப்பட்டது. மூதூர் நகரை புலிகள் கைப்பற்றும் நிலையை நோக்கிச் சென்றாலும், இராணுவத்தின் பெரிய அளவிலான பதில் தாக்குதலுக்கு புலிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. வன்னி உள்ளிட்டான தங்களது வலுவான நிலையில் இருந்து படையினை விடுவித்து கிழக்குப் பகுதிகளில் கொண்டு வரும் நிலையில் புலிகளின் படை எண்ணிக்கை இல்லை என்பது உண்மை.

மற்றொரு உண்மை - புலிகளின் தாக்குதலுக்கு முன்னால் சிறீலங்கா இராணுவத்தின் எந்த நிலையும் பாதுகாப்பான நிலை அல்ல என்பதை இந்த தாக்குதல் உறுதி செய்தது.

புலிகளின் முக்கிய இலக்காக திரிகோணமலை இருக்கலாம் என்ற எனது முந்தைய பதிவுகளின் வாதத்தை இந்த தாக்குதல் உறுதி செய்தது என்றாலும், அதில் ஏற்பட்ட பின்னடைவு புலிகளை யாழ்ப்பாணம் நோக்கி திருப்பி இருக்கிறது.

அம்னஸ்டி அறிக்கையின்படி தற்போதையச் சண்டையினால் சுமார் 1,60,000 மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மூதூரில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் வெளியேறி இருக்கின்றனர்.

இவ்வாறு பிரச்சனை தீவிரமாக இருந்த நிலையில் தான், முதன்முறையாக பாக்கிஸ்தான் தூதுவர் புலிகளால் தாக்கப்பட்டார். இது ஈழப் போரட்டத்தில் இது வரை காணாத ஒரு செயல். என்றாலும் புலிகளின் நோக்கத்தை தெளிவாக்கியது.

சிறீலங்கா அரசுக்கு பாக்கிஸ்தான் செய்யும் உதவிகளை வெளிப்படுத்துவது மட்டும் இதன் நோக்கம் அல்ல. இந்தியாவை நோக்கி புலிகள் விடுக்கும் மற்றொரு அழைப்பாகவும் இது எனக்கு தோன்றியது. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பும், இந்தியாவின் ரா அமைப்பும் எதிர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் "இயற்கையான" நியதி. ஆனால் இவர்கள் இருவரும் இலங்கையில் ஒரே அணியில் இருப்பதை மாற்றுவது புலிகளின் நோக்கமாக இருக்கலாம்.

ஆனால் இந்த நோக்கம் நிறைவேறுமா ?

(அடுத்தப் பதிவில்)

Leia Mais…
Saturday, August 05, 2006

அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் அபிமானம்

இஸ்ரேல், லெபனானில் தாக்குதல் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்க ஊடகங்களில், ப்ரைம் டைம் செய்தி அலசல்களாக இந்தச் செய்தி தான் இடம் பிடித்து இருக்கிறது. பாக்ஸ், சி.என்.என் என பெரும்பாலான ஊடகங்களில் இஸ்ரேலின் சார்பு செய்திகள் தான் வாசிக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துவது தான் இந்த ஊடகங்களின் முக்கிய வேலையாக இருந்து வருகின்றது.

அமெரிக்க ஊடகங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு நிலையை அமெரிக்க மக்களிடம் ஏற்படுத்த பல காலமாக தொடர்ந்து முனைந்து வருகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது என்பன போன்ற ஒரு பிம்பம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனிய மக்கள் மேல் தொடுத்த பயங்கரவாதத்தின் எதிர்வினை தான் இஸ்ரேல் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பதை இந்த ஊடகங்கள் சரியாக வெளிக்கொணர்ந்ததில்லை.

அது குறித்த ஒரு விரிவான குறும்படத்தை - Peace, Propaganda & the Promised Land, சமீபத்தில் பார்த்தேன். ஒரு மணி நேரம் செல்லக்கூடிய அந்தக் குறும்படம் அமெரிக்க ஊடகங்களின் இஸ்ரேல் சார்புகளை வெளிப்படுத்துகிறது

Peace, Propaganda & the Promised Land provides a striking comparison of U.S. and international media coverage of the crisis in the Middle East, zeroing in on how structural distortions in U.S. coverage have reinforced false perceptions of the Israeli-Palestinian conflict. This pivotal documentary exposes how the foreign policy interests of American political elites--oil, and a need to have a secure military base in the region, among others--work in combination with Israeli public relations strategies to exercise a powerful influence over how news from the region is reported.
Through the voices of scholars, media critics, peace activists, religious figures, and Middle East experts, Peace, Propaganda & the Promised Land carefully analyzes and explains how--through the use of language, framing and context--the Israeli occupation of the West Bank and Gaza remains hidden in the news media, and Israeli colonization of the occupied terrorities appears to be a defensive move rather than an offensive one. The documentary also explores the ways that U.S. journalists, for reasons ranging from intimidation to a lack of thorough investigation, have become complicit in carrying out Israel's PR campaign. At its core, the documentary raises questions about the ethics and role of journalism, and the relationship between media and politics.

Leia Mais…
Monday, July 31, 2006

Selective மனித உரிமைகள்

திசைகள் மின்னிதழின் "தனி மனிதர் சுதந்திரம்" சிறப்பு பகுதியில் வெளியாகி இருக்கும் எனது கட்டுரை

ஒரு தனிமனிதன் தான் நினைக்கும் எதையும் எந்த வித அச்சமும் இல்லாமல் செய்ய முடிகின்ற ஒரு நிலையை தான் சுதந்திரமான உலகமாக கருதமுடியும். நாம் நினைக்கும் எதையும் என்னும் பொழுது, அது பிறர் சுதந்திரத்திற்கு பிரச்சனையாக அமைந்து விடாமல் இருப்பது முக்கியம். என்னுடைய சுதந்திரம் அளவில்லாமல் இருக்கும் பொழுது, அந்த சுதந்திரத்தை நான் தவறாக பிரயோகிக்கலாம். அவ்வாறு நான் தவறாக பிரயோகிப்பதை தடுக்க சட்டங்களும், தனி மனித சுதந்திரத்தை "குறுக்கும்" அரசாங்கத்தின் நெறிமுறைகளும் தோன்றின.

அரசாங்கத்தின் இந்தச் சட்டங்கள் தனி மனிதனை நெறிப்படுத்துவதற்காக இருந்த நிலை மாற்றம் பெற்று தன்னுடைய இருப்பை நிலை நிறுத்த அரசாங்கங்கள் செயல்படத் தொடங்கும் பொழுது தான் பிரச்சனைகளும் தோன்றுகின்றன. ஒரு நாடு தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் பொழுது, அந்த நிலைப்பாடு ஒரு சமூகத்தின் உரிமைகளை பாதிக்கும் பொழுது பிரச்சனைகள் தோன்றுகின்றன.

தன்னுடைய தனி மனித உரிமைக்கு பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் அதனை மக்கள் இயக்கங்கள் எதிர்த்தே வந்திருக்கின்றன. இதில் பலப் பரிமாணங்கள் உள்ளன. தன்னுடைய சுயநிர்ணய உரிமை, மொழியின் சுதந்திரம், இனத்தின் சுதந்திரம், மதச் சுதந்திரம், தன்னுடைய தனிப்பட்ட பேச்சு சுதந்திரம் போன்றவற்றை காப்பாற்ற எல்லா காலங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

தனி மனித சுதந்திரத்தில் மிக முக்கியமானதாக நான் கருதுவது என்னுடைய பேச்சு மற்றும் எழுத்துரிமையை தான். இது தான் பலப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம். பேச்சு மற்றும் எழுத்துரிமை மிகச் சுதந்திரமாக இருக்கும் நிலையில் தான் அந்தச் சமூகம் பல ஆக்கப்பூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியும். ஒரு சமூகத்தின், இனத்தின், மொழியின் வளர்ச்சி இத்தகைய ஒரு தடையில்லாத சுதந்திரமான சமூகத்தில் தான் நடைபெற முடியும். பேச்சு உரிமை ஆக்கப்பூர்வமான சிந்தனை வளத்தை உண்டாக்கும். மாற்றுச் சிந்தனைகளும், மாற்று கருத்துக்களும் வளர்ச்சி பெறும். அவ்வாறான ஒரு சமூகச் சூழலில் பொருளாதார வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி என அனைத்து நிலையிலும் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் நடைபெறும்.

" I disapprove of what you say, but I will defend to the death your right to say it" என்று ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் கூறியுள்ளது போல ஒரு தனிமனிதனின் மாற்று கருத்துரிமை காப்பற்றப்பட வேண்டும்.
அதே சமயத்தில் அனைத்து நாடுகளிலுமே ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தை எந்தளவுக்கு அனுமதிப்பது என்பதும், எந்தப் பிரிவுகளில் தனிமனிதனின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது என்பதையும் சட்டங்கள் தீர்மானிக்கின்றன. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் இந்தியாவில் இருக்கின்ற தீண்டாமை தடுப்பு சட்டத்தைச் சொல்லலாம். சுதந்திரத்தை தேவையில்லாமல் பயன்படுத்தி ஒரு சமூகத்தை அவமதிப்பதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. அது போல "வன்முறையை" பிரயோகித்து, மக்களின் சகஜவாழ்க்கையில் ஊறு விளைவிப்பதை பொடா போன்ற சட்டங்கள் தடைசெய்கின்றன. ஆனால் இந்தச் சட்டங்களை சரியாக பயன்படுத்தாவிட்டால் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

ஜனநாயக நாடுகளில் தனிமனித சுதந்திரம் மிக முக்கியமானதாக கருதப்பட்டாலும், ஜனநாயக நாடுகளிலும் பிரச்சனைகள் ஏற்படவே செய்கின்றன. ஒரே சமூக நிலையை பெற்றிருந்தால் எந்த நாடுகளிலும் பிரச்சனைகள் இருக்காது. ஆனால் ஏற்ற இறக்கங்களுடன் பல வகையான சமூக இனங்கள் வாழுகின்ற நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுவது மிக இயல்பான நிலையாகவே இருக்கின்றது.

இதற்கு அடிப்படை காரணம் "பெரும்பான்மை" என்ற ஒரு நிலையைச் சுற்றியே இங்கு இருக்கின்ற ஜனநாயக அரசாங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது தான். ஒரு பெரும்பான்மை சமூகம் ஆளும் பொழுது அந்த பெரும்பான்மை சமூகத்தை முன்நிறுத்தி சிறுபான்மை சமூகத்தின் முக்கியத்துவத்தை குறைக்க "முயலும் பொழுது" பிரச்சனைகள் உருவாகின்றன. அவ்வாறு பிரச்சனைகள் உருவாகும் பொழுது மக்களை நெறிப்படுத்த வேண்டிய சட்டங்கள் தவறாக பயன்படுத்தப் படுகின்றன.

இப்படியான அடிப்படை நிலையை கொண்டு நம்மைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளை அலசும் பொழுது, தனிமனித சுதந்திரம் குறித்த போராட்டங்களை நாம் உணர முடியும்

1967ல் இந்தியை கட்டாயமாக்கிய இந்திய மைய அரசின் சட்டம் தங்களுடைய உரிமைகளை, மொழிச் சுதந்திரத்தை பாதித்ததையடுத்து தமிழகத்தில் மொழிப் போராட்டம் தொடங்கியது.

சிங்கள மொழிக்கு மட்டும் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை எதிர்த்து இலங்கையில் தொடங்கிய போராட்டம் தான் பின்னர் படிப்படியாக மாற்றம் பெற்று உரிமை போராட்டமாக, சுதந்திர தமிழீழ போராட்டமாக உருவாகி இருக்கிறது.

அது போல ஒரு தேசியத்தின் இருப்பை ஒரு சமூகம் கேள்விக்குள்ளாக்கும் பொழுது, அரசாங்கம் இந்த மாற்று சிந்தனைகளை ஒடுக்க முயலுகிறது.

இன்று உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் சிலப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் தேசியம் என்பதைச் சார்ந்து நடைபெறும் பிரச்சனைகளே. இது தனிமனித சுதந்திரத்தில் ஒரு சிக்கலான நிலையை தோற்றுவித்து இருக்கிறது. தேசியம் என்பது ஒவ்வொருவரின் விருப்பங்களைச் சார்ந்தே இருக்க முடியும். என்னுடைய தேசியத்தை நான் யார் மீதும் திணிக்க முடியாது. ஒரு தேசியத்தை ஏற்க மறுக்கும் சமூகத்தின் நிலையை நாம் மதிக்க வேண்டும். அவர்களின் சுயநிர்ணய உரிமைகளை நாம் பேண வேண்டும். ஒரு சமூகம் தான் விரும்பும் நாட்டினை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப அம் மக்கள் சுயநிர்ணயம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

ஆனால் அதற்கு நேர்மாறான நிலையே பல தேசிய இனங்களின் பிரச்சனைகளாக இன்று உலகெங்கிலும் பல இடங்களில் நடந்து வருகிறது.

அது போல பாரம்பரியம், கலாச்சாரம் போன்ற பழமைவாதம் முன்நிறுத்தப்படும் பொழுது, அதனை எதிர்க்கும் நிலையில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்தக் கட்டுரையை எழுதும் சமயத்தில் கூட சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடும் உரிமை தடைசெய்யப்பட்டது குறித்து பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. இங்கும் என்னுடைய வழிபாட்டு உரிமையை சில ஆகம கட்டுப்பாடுகள் மூலம் தடைவிதிக்கும் முயற்சிகள் என்னுடைய தனிமனித சுதந்திரத்தை பாதிக்கவே செய்கின்றன.

இப்படியான பலப் பரிமாணங்களில் தனிமனித சுதந்திரம் குறித்த பிரச்சனைகள் இன்று இந்தியாவிலும், பிற நாடுகளிலும் எழுந்திருக்கிற நிலையில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு இந்தியாவில் பேணப்படுகிறது என்ற கேள்வி இந்தியா சுதந்திர தின மலருக்காக கட்டுரை எழுதும் பொழுது எனக்கு எழுகிறது.

இந்தியாவில் தனிமனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இல்லை என்றாலும் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மனித உரிமைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. பிற மாநிலங்களில் Selective மனித உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

பல தருணங்களில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுகின்றன. ஒரு மேடைப் பேச்சிற்காக ஒரு வருடம் பொடா சிறையில் இருந்த வைகோ, ஒரு அரசாங்கத்திற்கு எதிராக இருந்த காரணத்தால் பொடாவில் அடைக்கப்பட்ட நக்கீரன் கோபால், அஸ்ஸாம் மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளை துச்சமாக மதிக்கும் இராணுவம் போன்றவை இந்தியாவில் தனிமனித சுதந்திரம் எந்தளவுக்கு பேணப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன.

Leia Mais…