வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

காஷ்மீரில் மீண்டும் விடுதலை முழக்கம்

காஷ்மீரில் கடந்த சில வருடங்களாக அடங்கியிருந்த விடுதலை முழக்கம் மீண்டும் எழ தொடங்கியிருக்கிறது. இந்த வாரம் மட்டும் 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் போலீசாரின் துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியுள்ளனர். ஹூரியத் மாநாட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷேக் அப்துல் அஜீஸ் போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல போலீஸ் நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் 1989-1990ம் ஆண்டில் இருந்த சூழலுக்கு மறுபடியும் திரும்பியுள்ளது. காஷ்மீர் விடுதலையை கோரி பெரும் திரளான மக்கள் வீதிகளிலும், முக்கிய இடங்களிலும் குவிய தொடங்கியுள்ளதால் காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. கண்டதும் சுட உத்தரவு போன்ற கடுமையான அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை இந்திய மைய அரசு காஷ்மீரில் பிரயோகிப்பதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

அமர்நாத் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட இடம் தொடர்பாக ஆரம்பித்த இந்தப் பிரச்சனை காஷ்மீர் மீதான பொருளாதார தடையாக உருமாறி, இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றப்பட்டு இன்று சங்பரிவார் கும்பலுக்கு மற்றொரு தேர்தல் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது.

1990ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தொடங்கிய காஷ்மீர் விடுதலை போராட்டம், பாக்கிஸ்தானின் தலையீட்டால் இஸ்லாமிய பயங்கரவாதமாக உருமாற்றம் பெற்றது. இந்திய அரசாங்கத்தின் இராணுவம், பாக்கிஸ்தான் சார்பு தீவிரவாதிகளின் பயங்கரவாதம் என இந்தப் போராட்டம் திசைமாறி இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளின் பகடைக் காய்களாக காஷ்மீர் மக்கள் மாற்றப்பட்டனர்.

(இது குறித்த என்னுடைய முந்தைய பதிவு - காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை)

காஷ்மீர் பிரச்சனை என்பது இந்தியா-பாக்கிஸ்தான் பிரச்சனை என்பது போலவே பார்க்கப்பட்டது. காஷ்மீர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு காஷ்மீரிகளை ஒரு அழைப்பாளராக கூட இந்தியாவும் பாக்கிஸ்தானும் அழைக்காமல் பார்த்துக் கொண்டன. ஆனால் 1990க்கு பிறகு முதன் முறையாக காஷ்மீர் மக்கள் தங்கள் போராட்டத்தை தாங்களாகவே முன்னெடுத்து உள்ளனர். பாக்கிஸ்தான் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் எந்த தலையீடும் இல்லாமல் இந்தப் போராட்டம் எழுந்துள்ளது.

காஷ்மீரிகளின் போராட்டம் இயல்பாக எழுந்தாலும் இதனை தொடங்கி வைத்த பெருமை சங்பரிவார் கும்பலையேச் சாரும். சங்பரிவார் கும்பலுக்கு காஷ்மீருக்கு சிறப்பு சலுகையை அளிக்கும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவு மீது ஒரு எரிச்சல் உண்டு. இந்தப் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருவது இவர்களின் வாடிக்கை. ஆனால் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்து பொழுது இந்தப் பிரிவை நீக்க எந்த முயற்சியும் எடுக்க வில்லை என்பது கவனிக்கத்தக்கது. 370ம் பிரிவு, அயோத்தியில் கோயில் கட்டுவது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுது தான் சங்பரிவார் கும்பலுக்கு இந்துத்துவா ஆதரவாளர்களிடம் தங்களின் இருப்பை தக்க வைத்து கொள்ள முடியும். இந்துத்துவா ஓட்டு வங்கிகளை தங்கள் வசம் வைத்திருக்க முடியும்.

இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவின் படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நிலங்களை வெளி மாநிலத்தைச் சேர்ந்தோர் வாங்க முடியாது. இது சார்ந்த பிரச்சனை 2006ல் ஒரு முறை நடந்து. குல்மார்க் சுற்றுலா தளத்தில் அதிநவீன சுற்றுலா விடுதிகளை அமைக்க அனுமதி அளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காஷ்மீரை சாராதவர்களுக்கு நிலங்களை வழங்குவதை காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதையெடுத்து இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இப்பொழுதும் அது போலவே அமர்நாத் ஆலயத்திற்கு 40 ஏக்கர் நிலத்தை வழங்கிய ஆணையை காஷ்மீர் மக்கள் எதிர்த்தனர். இது காஷ்மீரில் இந்துக்களை புகுத்தும் மறைமுக திட்டமாகவே காஷ்மீர் மக்கள் கருதினர். பொதுவாகவே காஷ்மீரிகள் இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமாகவே பார்க்கின்றனர்.

"காஷ்மீரிகள்" என்ற தங்கள் அடையாளத்தை 370ம் பிரிவே இன்று வரை காப்பாற்றி வருவதாக காஷ்மீர் மக்கள் நம்புகிறார்கள். காஷ்மீரில் பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. காஷ்மீரில் தங்கள் அடையாளத்தை தக்கவைக்க 370ம் பிரிவு அவசியம் என நினைக்கின்றனர். காஷ்மீரிகளின் இந்த உணர்வை என்னால் தவறாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் உலகின் பலப் பகுதிகளில் தங்கள் விடுதலையை முன்னெடுக்கும் தேசிய இனங்களின் பெரும்பான்மையை குறைக்க இவ்வாறான குடியேற்றத்தையே அதிகார மையங்கள் முன்வைக்கின்றன.

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதியில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்களின் தமிழீழ கோரிக்கையை சீர்குலைக்க கிழக்குப் பகுதியில் சிங்களவர்களை சிறீலங்கா அரசு குடியேற்றியது. இன்றைக்கு தமிழர்களின் பெரும்பான்மை கிழக்கு பகுதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. இது போலவே பாலஸ்தீன பகுதிகளில் யூதர்களை இஸ்ரேல் குடியேற்றியது.

இவ்வாறான சூழலில் 370ம் பிரிவு தங்கள் உரிமையை தக்கவைக்க உதவுவதாக காஷ்மீரிகள் நம்புகின்றனர். இந்த காரணத்தினாலேயே அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்குவதை எதிர்க்கின்றனர்.

காஷ்மீரிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த அமர்நாத் நில மாற்றம் அரசால் கைவிடப்பட்டது. ஆனால் சங்பரிவார் அமைப்புகள் இதனை எதிர்த்தன. அமர்நாத் ஆலயத்திற்கு நிலத்தை வழங்கியே தீர வேண்டும் என ஜம்முவில் போராட்டம் நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக காஷ்மீரில் இருந்து ஜம்மு வரும் சாலைகளை மறித்து காஷ்மீர் மீது ஒரு பொருளாதார முற்றுகையை ஜம்மு இந்துக்கள் மேற்கொண்டனர். இந்த முற்றுகையை நீக்க இந்திய மைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

காஷ்மீரின் முக்கிய பொருளாதாரமான காஷ்மீர் ஆப்பிள்கள் மற்றும் பிற பழ வகைகள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு ஜம்மு வழியாகவே செல்ல முடியும். எனவே ஜம்முவில் சாலைகளை மறிப்பது என்பது காஷ்மீரின் ஒரு முக்கிய பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியது. இதனால் காஷ்மீரில் உள்ள பழ வியபாரிகள் தங்கள் பொருட்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசும் இது குறித்து சரியான நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என போராட்டத்தை காஷ்மீர் பழவியபாரிகள் இந்த வாரம் துவங்கினர். இந்தப் போராட்டம் வலுவடைந்து பெரும்திரளான மக்களை உள்ளடக்கிய போராட்டமாக உருமாறியது. சுமார் 1.5லட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

முசாராபாத் செல்ல தொடங்கிய இந்தப் போராட்டத்தை தடுக்க எந்த திட்டமிடலும் செய்யாத அரசு, இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இது வரை 20க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை ஒரு பொருளாதார போராட்டம் விடுதலை போராட்டமாக மறுபடியும் மாற வழிவகுத்துள்ளது. பலர் கொல்லப்பட்ட நிகழ்வு காஷ்மீரில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போலீசாரை தாக்கியுள்ளனர். காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மீறுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. சில வருடங்களாக அமைதியாக இருந்த காஷ்மீர் மீண்டும் கலவர பூமியாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக அதிகம் கேட்காத காஷ்மீர் விடுதலை முழக்கம் இப்பொழுது ஓங்கி ஒலிக்கிறது.

****

முசாராபாத் பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீரிகள் ஏன் பாக்கிஸ்தான் பகுதிக்கு செல்ல முயல வேண்டும் ? எதற்காக போராட்டம் நடத்த வேண்டும் ?

காஷ்மீர் பிரச்சனையில் எப்பொழுதுமே தவறான தகவல்களை வழங்கி கொண்டிருக்கும் இந்திய ஊடகங்கள் "எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்ற காஷ்மீரிகள்" என்ற மேலோட்டமான செய்தியை தான் வழங்கி கொண்டிருக்கின்றன. Muzzafarabad Chalo என்ற இந்தப் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீநகர்-முசாபராபாத் சார்ந்த வர்த்தக தொடர்புகளையும், அதனைச் சார்ந்த பிரச்சனைகளையும் கவனிக்க வேண்டும்.

முசாராபாத்தும் ஸ்ரீநகரும் காஷ்மீருக்கு சொந்தமானவை. தமிழ்நாட்டின் மதுரையும், திருச்சியும் போல.

இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் காஷ்மீர் துண்டாடப்பட்டது. இந்தியாவிடம் ஒரு பகுதியும், பாக்கிஸ்தானிடம் மற்றொரு பகுதியும் என காஷ்மீர் இரு துண்டுகளாக பிரிந்தது. ஸ்ரீநகர் இந்தியாவிடமும், முசாராபாத் பாக்கிஸ்தான் வசமும் உள்ளது. இந்த காஷ்மீர் பிரிவினையால் உறவுகள் பிரிந்தன. காஷ்மீர் மக்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சீர்குலைந்தது.

காஷ்மீரிகளின் சுதந்திர முழக்கம் என்பது வெறும் பிரிவினைவாதமாகவே இந்தியாவில் பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரும் தன்னுடையது தான் என்ற பொருந்தாத வாதத்தை இந்தியா தொடர்ந்து முன்வைத்து வருகிறது. காஷ்மீர் என்பது இந்தியாவின் பகுதியே அல்ல (என்னுடைய காஷ்மீரின் விடுதலை தொடரில் அதற்கான ஆதாரங்களை முன்வைத்திருக்கிறேன்). பாக்கிஸ்தானுக்கும் காஷ்மீர் சொந்தமானது அல்ல. ஆனால் பல நூற்றாண்டுகளாக காஷ்மீருக்கும், பாக்கிஸ்தானில் உள்ள பகுதிகளுக்கும் இடையே தான் வர்த்தக தொடர்பே இருந்து வந்திருக்கிறது. தில்லியுடனோ, இந்தியாவின் பிற பகுதிகளுடனோ காஷ்மீருக்கு பெரிய வர்த்தக உறவுகள் இருந்ததில்லை. காரணம் பூளோக அமைப்பு ரீதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி பாக்கிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக இருக்க வில்லை.

காஷ்மீர் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் இடையே பிரிந்த பொழுது காஷ்மீர் மக்கள் மட்டும் துண்டாடப்படவில்லை. அவர்களின் வர்த்தகம், பொருளாதாரம் என அனைத்தும் சீர்குலைந்து போனது. அது தான் காஷ்மீரிகள் இன்று வரை தங்களை இந்தியாவுடன் பொருத்தி பார்க்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்ததால் இயற்கையாக அமைந்த தங்களுடைய பொருளாதாரம் சீர்குலைந்ததாக பெரும்பாலான காஷ்மீர் மக்கள் நம்பினர். அதன் தொடர்ச்சியாக எந்த புதிய பொருளாதார வாய்ப்புகளும் இந்தியாவுடன் இணைந்த பிறகு காஷ்மீருக்கு ஏற்படவில்லை.

*********

2005ம் ஆண்டு நான் எழுதிய "காஷ்மீரின் விடுதலை" தொடரில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
(காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 காஷ்மீர் பிரச்சனைக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

**********

..... பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.

****

இந்தியாவின் மைய அரசாங்கம் கடந்த காலங்களில் செயல்பட்டது போலவே இம்முறையும் செயல்பட்டிருக்கிறது. ஜம்முவில் போராட்டம் நடத்திய இந்துக்களிடம் அரசாங்கம் நடந்து கொண்ட முறையும், காஷ்மீரில் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட மூர்க்கமான தாக்குதல்களையும் ஒப்பு நோக்க வேண்டியுள்ளது. போராட்டம் துவங்கிய முதல் சில நாட்களில் 20க்கும் மேற்பட்ட காஷ்மீர் முஸ்லீம்கள் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளது மைய அரசாங்கம் காஷ்மீர் மக்களின் நியாயமான போராட்டத்தை தொடர்ந்து தன்னுடைய அதிகார பலத்தை கொண்டு அடக்கி ஒடுக்க முயலுவதையே காட்டுவதாக உள்ளது. மாறாக ஜம்முவில் பல நாட்களாக மறியல் செய்து வரும் ஜம்மு இந்துக்களின் மீது என்ன நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது ?

ஜம்முவில் இந்துக்கள் அதிகம் என்பதால், இந்தப் பிரச்சனையை இந்து-முஸ்லீம் பிரச்சனையாக மாற்றி அதில் குளிர்காய சங்பரிவார் கும்பல் நினைக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு சாதகமாக மைய அரசுகளும், காஷ்மீர் அரசுகளும் தொடர்ச்சியாக நடந்து வருவதாக ஒப்பாரி வைக்கின்றன. ஜம்மு இந்துக்களுக்கு தொடர்ச்சியாக அரசாங்கங்கள் அநீதி இழைப்பதாக இந்திய ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. அதனைச் சார்ந்த கருத்து ஒற்றுமையை இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏற்படுத்த ஊடகங்கள் முயலுகின்றன.

ஆனால் உண்மை என்னவென்றால் தொடர்ச்சியாக இந்திய இராணுவம் மற்றும் போலீசாரின் அடக்குமுறைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகியவர்கள் காஷ்மீர்கள் தான். ஜம்முவில் இருக்கும் இந்துக்களுக்கு என்ன பிரச்சனை இருந்தது ? அரசாங்கம் ஜம்மு இந்துக்களை எண்கவுண்ட்டரில் போட்டு தாக்கியதா, இல்லை ஜம்மு இந்துக்கள் தான் காணாமல் போய் சடலங்களாக மீண்டு வந்தார்களா ?

அரசாங்கம், பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்ட சண்டையின் இடையில் சிக்கி மனித உரிமை மீறல்களை அனுபவித்தவர்கள் காஷ்மீர் முஸ்லீம்கள் தான். தங்களின் பதவி உயிர்வுக்காக காஷ்மீர் இளைஞர்களை பலியிட்ட கொடுமையெல்லாம் காஷ்மீரில் தான் நடந்தது. ஜம்முவில் அல்ல. (இது குறித்த என்னுடைய முந்தைய பதிவுகள்
- காணாமல் போகும் காஷ்மீரிகள்
- காஷ்மீர் பற்றிய குறும்படம் )

இவ்வறான சூழலில் ஜம்மு மக்கள் புறக்கணிக்கப்பட்டதாக சொல்வது இந்தப் பிரச்சனையை திசை திருப்பும் ஒரு போக்காகவே நான் நினைக்கிறேன்.

எல்லப் பிரச்சனைக்கும் காரணமான சங்பரிவார், இதனை இந்தியா முழுவதும் இந்து முஸ்லீம் கலவரமாக மாற்றி வரும் தேர்தலில் இந்தப் பிரச்சனை மூலம் வெற்றி பெற துடித்துக் கொண்டிருக்கிறது.

இன்று இந்தியாவின் சுதந்திர தினமாம். காஷ்மீர் மக்களை பொறுத்தவரை இது அவர்களின் கறுப்பு தினம்.

*****

அமர்நாத் பனிலங்கம் என்பதே ஒரு மோசடியான, மூடநம்பிக்கையான ஒன்று. இது குறித்த உண்மைகளை ஏற்கனவே அறிவியல் ரீதியாக திராவிடர் கழகம் அம்பலப்படுத்தியுள்ளது. அது குறித்த ஒரு வீடியோவை பெரியார் வலைக்காட்சியில் பார்க்க முடியும் - சு.அறிவுக்கரசு திராவிடர் கழக பொதுச்செயலாளர் - அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன? மேலும் படிக்க...

சேது சமுத்திரம் : பொருளாதார வாய்ப்புகள் : கலைஞரை ஏன் ஆதரிக்க வேண்டும் ?

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் தலைக்கு சங்பரிவார் "முட்டாள் கூட்டம்" தங்கக்காசுகளை விலையாக நிர்ணயித்து இருக்கின்ற கேலிக்கூத்தான நிகழ்வுகளும், தன்னுடைய ஓட்டு வங்கிக்காக அத்தகைய காவிக்கூட்டங்களின் அறிவிப்பினை கைக்கட்டி அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ் அரசாங்கமும் அணு ஆயுத, பொருளாதார வல்லரசான இந்தியாவின் விஞ்ஞான அறிவினை கேலிக் கூத்தாக்கி இருக்கிறது. இந்தியாவின், இந்தியர்களின் இத்தகைய "விஞ்ஞான அறிவு" உலகெங்கும் சந்தி சிரித்து கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடு என கூறிக்கொண்டாலும் அவ்வப்பொழுது தன் மதச்சார்பின்மை முகமூடியை விலக்கி "காவிச் சாயத்தை" வெளிப்படுத்தும். அத்தகைய தருணங்களில் இதுவும் ஒன்று. பாக்கிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் குறித்து நம்மவர்கள் குறை கூறுவதும் நக்கல் அடிப்பதும் எப்பொழுதுமே வழக்கமானது. இந்த பிரச்சனையில் இந்தியர்களின் மத அடிப்படைவாதம் தெளிவாக வெளிப்பட்டது என்பது தான் உண்மை.

பொருளாதார, இராணுவ வல்லரசான இந்தியாவில் இப்பொழுது முக்கிய பிரச்சனை குரங்குகள் கூட்டணியுடன் ராமர் கட்டியதாக கதையளக்கப்படும் ஆதம் பாலம் என வழங்கப்படும் தீவுக்கூட்டம். இந்த ஆதம் பாலத்தை பல தலைமுறைகளாக ராமேஸ்வரம் பகுதியில் வசிக்கும் மக்கள் மணல் திட்டு என்றே வழங்கி வருகிறார்கள். ஆனால் திடீரென்று வலதுசாரி இந்துத்துவா கும்பல் இதனை "ராம் சேது" என பெயர் மாற்றம் செய்து விட்டது. இவர்களின் வாதத்திற்கு வக்காலத்து வாங்குவது போல வட இந்திய ஊடகங்களும் இதனை ஓங்கி முழங்கி வருகின்றன.

பெரும்பாலான வட இந்திய ஊடகங்களில் எப்பொழுதுமே வலதுசாரி முழக்கங்கள் காணப்படுவது வழக்கமான ஒன்று. இந்தியாவின் ஆங்கில செய்தி ஊடகங்களில் தென்னிந்தியச் செய்திகள் குறித்து விவாதிக்கப்படும் பொழுது கூட வட இந்திய வாடையும்/பார்வையும் முழுமையாக வீசிக்கொண்டிருக்கும். உண்மையை தெரியாத அரைகுறை செய்தியாளர்களின் உளறல் எப்பொழுதுமே இருக்கும். இப்பொழுது அது உச்சகட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டம் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்ப படுகின்றன. ஹிந்து போன்ற தமிழகத்தில் இருந்து வெளியாகும் ஊடகங்கள் அவற்றில் விதிவிலக்கானவை. (ஹிந்துவின் அரசியல் வேறு வகையானது).

****

சேது சமுத்திர திட்டம் தமிழர்களின் 150 ஆண்டு கால கனவு என்பதில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. தமிழனின் பொருளாதாரம் இதை நம்பி மட்டுமே இன்றைக்கு இல்லை. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் முதல் 3 இடத்தில் இருக்கிறது. தமிழகத்திற்கு ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து கொண்டிருக்கிறன. இவை அனைத்துமே தமிழ்நாட்டின் இயற்கையான சூழல் காரணமாகவும், தமிழனின் மனித வளம் காரணமாகவே வந்துள்ளன. மைய அரசாங்கத்தின் பங்களிப்பு மிகவும் குறைவே. நெய்வேலி போன்ற பகுதிகளில் கூட தமிழகத்தின் இயற்கை வளம் காரணமாகத் தான் மைய அரசு நிறுவனங்கள் உள்ளனவே தவிர வேறு எந்தக் காரணங்களாலும் அல்ல. நெய்வேலியில் தமிழகத்தின் இயற்கை வளத்தை உறிஞ்சும் மைய அரசாங்கம் தமிழகத்திற்கு ராயல்டி கூட வழங்குவதில்லை. பல தலைமுறைகளாக நெய்வேலியில் இருந்த என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இழந்தது அதிகம். பலன் பெற்றது ஒன்றுமே இல்லை.

மைய அரசாங்கத்திடம் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த திட்டங்களில் சேது சமுத்திரமும் ஒன்று. 1955ல் இந்த திட்டம் குறித்த முதல் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக இந்த திட்டம் மைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கு இந்த திட்டத்தின் மதிப்பு வெறும் 9.98கோடி. ஆனால் இதே காலக்கட்டத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்திய அரசாங்கம் செய்த பொருளாதார முதலீடு எவ்வளவு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இன்றைக்கு மைய அரசாங்கத்தின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், 9.98கோடி கூட தராமல் தள்ளிப்போடப்பட்ட ஒரு திட்டம் இன்று சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் தமிழகத்திற்கு கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் பொருளாதார வாய்ப்புகள் குறித்து பல ஆய்வாளர்களின் அறிக்கைகள் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அனைத்து அறிக்கைகளுமே இந்த திட்டத்திற்கு எதிராக உள்ளவை மட்டுமே. ஆனால் இந்த திட்டம் லாபம் தரும் எனக்கூறிய ஆய்வாளர்களின் அறிக்கைகளும் உள்ளன. அந்த அறிக்கைகள் வெளியாவதில்லை. எது அதிகளவு விளம்பரப்படுத்தப்படுகிறதோ அதைச் சார்ந்தே ஒரு கருத்து ஒற்றுமை உருவாகிறது. ஊடகங்களின் நோக்கமும் அது தான். இந்திய ஊடகங்களின் பல இரட்டை வேடங்களில் இதுவும் ஒன்று. இடஒத்துக்கீடு காலத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்து தன் கோர முகத்தை வெளிப்படுத்தியவை தான் இந்த ஊடகங்கள். மற்றொரு முறை அந்த ஊடகங்களின் வட இந்திய/பார்ப்பனிய/பனியா முகம் வெளிப்படுகிறது.

இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன ? தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் உயரும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு பார்க்கும் பொழுது இந்த திட்டம் நிச்சயம் தமிழகத்தின் தற்பொதைய பொருளாதாரத்தை மேலும் பெருக்கும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். மென்பொருள் துறையை விட்டுவிடுவோம். குறிப்பாக கார் மற்றும் ஆட்டோமோபைல் சார்ந்த தொழிற்சாலைகள் தமிழகத்தில் தான் அதிகம். சென்னை இந்தியாவின் டெட்ரோய்ட் (Detroit) என்று அழைக்கப்படுவதன் முக்கிய காரணம் சென்னையின் உள்கட்டமைப்பு. முக்கியமாக சென்னை துறைமுகம். Manufacturing தொழிற்சாலைகள் அமைக்க துறைமுகம் மிகவும் அவசியம். சென்னையில் ஒரு போர்ட், ஹுண்டாய் தொழிற்சாலை தொடங்கப்படுகின்றன என்றால் அதைச் சுற்றி அந்த தொழிற்சாலைக்கு தேவைப்படும் பல உதிரிப்பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலை அவசியமாகிறது. இதனால் பல சிறிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன. அதைத் தவிர மிக சுலபமாக தயாரித்த பொருள்களை ஏற்மதி செய்ய துறைமுகம் அவசியம்.
சென்னை துறைமுகம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குவதன் காரணமாகத் தான் இன்று சென்னைக்கு அருகே பல ஆட்டோமோபைல், தொலைத்தொடர்பு சாதனங்களின் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன.

சேது சமுத்திரம் என்பது வெறும் கால்வாய் வெட்டும் வேலை மட்டுமே அல்ல. அது பொருளாதார வளர்ச்சியையும் கொண்டு வரும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. சேது சமுத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்த திட்டம் குறித்த பொருளாதார வாய்ப்புகள் அதிகளவில் ஊடகங்களில் வெளியாகின. பல வணிக ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகளே வந்தன. ஆனால் இன்று காவிக்கூட்டத்தின் முட்டாள்தனத்திற்கு தீனி போடும் வகையில் செய்திகள் வந்து கொண்டிருப்பது அந்த ஊடகங்களின் இரட்டை வேடத்தை தான் தெளிவுபடுத்துகிறது.

பொதுவாகவே இந்தியாவின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாலேயே பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சீனா பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி பெற காரணம் அந் நாடு மிக வேகமாக தனது உள்கட்டமைப்பை பெருக்கி கொண்டுள்ளது தான். உள்கட்டமைப்பு என்னும் பொழுது மிகத் தரமான சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின் உறபத்தி என அனைத்துமே அடங்கும். சேது சமுத்திரம் போன்ற திட்டங்கள் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கதக்கவை என்ற அளவுகோளில் தான் பார்க்கப்பட வேண்டும். மாறாக கடல்போக்குவரத்து மட்டுமே என்பதாக இதனை அணுக முடியாது.

சேது சமுத்திர திட்டம் லாபத்தை கொண்டு வந்து விடாது என்று கூறும் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், லாபத்தை இந்த திட்டம் கொடுக்கும் என்ற செய்திகளை/ஆய்வறிக்கைகளை ஏன் வெளியிடுவதில்லை ?

இந்த திட்டத்தால் லாபம் உண்டு/இல்லை என்ற இரண்டுமே வெறும் ஊகங்கள் தான். இதில் எது உண்மை, பொய் என யாரும் உறுதியாக கூறிவிட முடியாது.

தூத்துக்குடி துறைமுகம் குறித்து ஆய்வறிக்கை ஒன்றினை தயாரித்த PricewaterhouseCoopers இவ்வாறு கூறுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் இந்த வாய்ப்பினை பெருக்க சேது சமுத்திரம் மிகவும் அவசியம்.

THE Tuticorin port has the potential to become an international container transhipment hub given its unique geographical location, says a feasibility study by PricewaterhouseCoopers Pvt Ltd (PwC).

இது தவிர சேது சமுத்திர திட்டம் குறித்த feasibility அறிக்கையினை L&T Ramboll ஏற்கனவே வழங்கியுள்ளது.

ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் பார்த்தாலே தூத்துக்குடி துறைமுகம் எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது புரியும். கொழும்பு துறைமுகத்தில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40% இந்தியாவின் கிழக்கு மேற்க்கு பகுதிகளுக்கு நேரடியாக செல்ல முடியாத காரணத்தால் கொழும்பு துறைமுகத்தின் மூலமாக நடக்கிறது. சேது சமுத்திரம் திட்டம் அமல் படுத்தப்பட்டால் இது தூத்துக்குடி துறைமுகம் மூலமாக நடக்கும்.

The Colombo port currently handles 1.7 million twenty-foot equivalent units (TEUs) of which 40 per cent is Indian transhipment cargo. It fears Sethusamudram project can wean away a substantial chunk of it.

உண்மைகள் இவ்வாறு இருக்க காவிக்கூட்டத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையில் செய்திகள் வெளியிடும் தொலைக்காட்சி மற்றும் வணிக ஊடகங்கள் குறித்து நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

நான் இங்கு வைத்துள்ள புள்ளி விபரங்கள் அனைத்தும் http://sethusamudram.info என்னும் இணையத்தளத்தில் உள்ளன

****

சேது சமுத்திரம் திட்டத்தின் அடுத்த முக்கிய பிரச்சனையாக கூறப்படுவது சுற்றுப்புறச்சூழல் மற்றும் கடல் வாழ் இனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு. இந்த பிரச்சனை குறித்து சங்பரிவார் கோஷ்டிகளுக்கு இப்பொழுது தான் தெரிகிறதா ?

சுற்றுப்புறச்சூழல் மட்டுமல்ல பல மக்களின் வாழ்வியலை குலைத்த நர்மதா அணைக்கட்டு திட்டத்தை இந்த காவிக் கும்பல் எதிர்த்ததா ? மேதா பட்கர் தனியாளாக போராடிய பொழுது இந்தியாவின் நீதிமன்றங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என அனனவருமே வளர்ச்சி திட்டத்தை மேதா பட்கர் குலைப்பதாக தானே கூறினார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் மேதா பட்கருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே...

சுற்றுப்புறச்சூழல் விடயத்தில் கூட சேது சமுத்திர திட்டம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடாது என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன - Sethu project will not create geological imbalance

மீனவர்கள் கூட முன்பை விட அதிக மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் - http://sethusamudram.info/content/view/20/32/

என்றாலும் இவையெல்லாம் வெறும் தியரி (theory). உண்மையில் என்ன நடக்கும் என யாரும் சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை. இந்த திட்டத்தை பொருளாதார காரணங்களுக்காக ஆதரிக்கலாம். என்றாலும் சுற்றுப்புறச்சூழலுக்கு இந்த திட்டம் தீங்கு விளைவிக்க கூடிய வாய்ப்புகளை மறுக்க முடியாது. இயற்கையான எந்த ஒரு விடயத்தையும் செயற்கையாக மாற்றும் பொழுது சில எதிர்விளைவுகள் ஏற்படும். எனவே சுற்றுப்புறச்சூழலுக்காக மட்டுமே இந்த திட்டத்தை எதிர்க்கவேண்டிய அவசியம் நேருகிறது.

****

"Ram is a big lie: Karunanidhi" என்பது தான் கடந்த வாரம் பல வட இந்திய பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்தி. இந்தச் செய்தியை இந்த ஊடகங்கள் அதிர்ச்சியாக வெளியிட்டு உள்ளது தான் உச்சகட்ட காமெடி. கலைஞரை சாடி பல வட இந்திய ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதை கூகுள் மூலமாக படித்து சிரித்து ரசிக்கலாம் :). இதனை "Blasphemy" :) என்று கதறும் ஊடகங்களும் அடக்கம். "Even Aurangzeb or the Britishers never questioned the existence of Lord Ram," என அழுகிறார் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்

கலைஞர் ராமாயணம் என்ற கதையின் "கதாபாத்திரம்" ராமன் குறித்து பேசியது தவறு என பலர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கூறியதில் எந்த தவறும் இல்லை. இதனை இன்னும் வலுவாக, தெளிவாக கலைஞர் கூறியிருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே வருத்தம்.

தமிழர்களின் கலாச்சாரத்தை தட்டையாக "இந்து" என்ற சொல்லாடலில் அடைப்பதை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த பிரச்சனையில் கலைஞர் முன்வைத்த வாதம் வட இந்தியாவில் பிரபலப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது ஒரு வகையில் நன்மையே. இந்து மத வெறியர்களை தவிர உண்மையை அறிந்து கொள்ள நினைக்கும் பலருக்கு இந்த உண்மை சென்று சேர்ந்து இருக்கிறது. பெரியார் குறித்தும் சில விவாதங்கள் நடப்பதை சில இணையத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் காண முடிந்தது. Periyar An Iconoclast and a Reformer.

அது மட்டுமில்லாமல் இந்தப் பிரச்சனையின் பொழுதும், காஞ்சி மடாதிபதி கைது செய்யப்பட்ட பொழுதும், அயோத்தி பிரச்சனையின் பொழுதும் ஒட்டுமொத்த இந்தியாவில் இருந்து விலகி நிற்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் என்பதும் பிற மாநில மக்களுக்கு தெளிவாகியிருக்கும். பெரியார் மாற்றம் செய்த மண் இது. இங்கு இந்து/இஸ்லாமிய/கிறுத்துவ என எந்த மத வெறியர்களுக்கும் வேலையில்லை.

இந்தப் பிரச்சனையை இந்து வெறியர்கள் தொடர்ந்தால் இந்து மதத்தை விமர்சிப்பதை ஒரு இயக்கமாக திராவிட அமைப்புகள் "மறுபடியும்" தொடங்க வேண்டும் என்பதே என் விருப்பம். எல்லா பேதங்களையும் கலைந்து தமிழர்கள் அனைவரும் கலைஞருக்கு இந்தப் பிரச்சனையில் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் படிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி



அப்துல் கலாமின் குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. பதவியேற்ற பொழுது இந்திய மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் பெற்ற "குடியரசு தலைவராக" (People's President) ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டவர், இன்று அவருடைய பிம்பத்திற்கு ஏற்பட்ட சிறிய சறுக்கலுடன் அவரது பதவிக்காலம் முடியப் போகிறது. நான் அதனை அவரது சறுக்கலாக பார்க்கவில்லை. ஏனெனில் அவரைச் சுற்றி எழுப்பப்பட்ட பிம்பமே போலியாது. அப்துல் கலாம் என்ற தனி மனிதனுக்கு பதவி மேல் ஆசைப்படுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது. மற்றொரு முறை குடியரசுத்தலைவராக முடிந்தால் அவரே தொடர்வதும் நல்லது தான். அலங்காரப்பதவியில் யார் இருந்தால் தான் என்ன ?

நகர்ப்புற, "ஏட்டுப்படிப்பு" படித்த நடுத்தர வர்க்க மக்களின் அபிமானமத்தை பெற்றவர்களை 100 கோடி இந்திய மக்களும் ஆதரிப்பதான ஒரு பிம்பத்தை தொடர்ந்து எழுப்பும் இந்திய வெகுஜன ஊடகங்களின் மற்றொரு "தந்திரம்" தான் அப்துல் கலாமைச் சார்ந்து எழுப்பபட்ட பிம்பமும். ஊடகங்களால் எழுப்பபட்டிருந்த அப்துல் கலாமின் பிம்பம் பதவிக்கு ஆசைப்படாதவர் என்பதாகும். கலாம் தன்னை ஒரு சாமானிய மனிதராக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய பொழுது அவரை ஒட்டி எழுப்பியிருந்த பிம்பமும் தகர்ந்து போய் விட்டதாக அதே ஊடகங்கள் மறுபடியும் புலம்பிக்கொண்டிருக்கின்றன.

அப்துல் கலாம் என்ற தனி மனிதன் மீது எனக்கு அபிமானம் உண்டு. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் உயர்ந்து "தன்னுடைய துறையில்" பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் என்ற வகையில் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்தியாவில் அரசுப் பதவிகளை பெறுவதில் இருக்கும் அரசியல் மற்றும் பிற பேதங்களை கவனிக்கும் பொழுது அப்துல் கலாம் என்னும் சாமானியர் அனைவரையும் கவர்வதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அது மட்டுமே அவருக்கு குடியரசுத்தலைவர் என்ற பதவியை பெற்று கொடுத்து விடவில்லை.

சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியா தன்னுடைய Hegemonyஐ பல விடயங்களில் தொடர்ந்து வெளிப்படுத்த முனைந்து வருகிறது. இராணுவ ரீதியிலான இந்த முன்னெடுப்பினை செய்வதன் மூலமாக "இந்தியாவை பலம் மிகுந்த ஒரு இராணுவ வல்லரசாக மாற்ற வேண்டும்" என்பதே "ஏழ்மை அதிகமான நாட்டிலும்" இந்திய அரசியல்வாதிகள் சுதந்திரம் அடைந்ததில் இருந்து முன்னெடுத்த முக்கியமான செயல்திட்டம். இந்தியாவை ஒரு இராணுவ சக்தியாக மாற்றுவதன் மூலம் ஒரு போலியான தேசியவாதத்தை இந்திய மக்களிடம் ஊட்டவதும், இந்தியா பலம் வாய்ந்த ஒரு நாடு என்பதாக தன் மக்களிடமும் பிற நாடுகளிடமும் வெளிப்படுத்துவதும் இந்த செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் "இந்தியனாக நீ பெருமை கொள்ள வேண்டும்" என்று கூறுவதும், இந்திய துணைக்கண்டத்தின் பல் வேறு தேசிய இனங்களின் தனித்தன்மையை "இந்தியன்" என்ற தட்டையான ஒரு வடிவத்தில் அடக்க முனைவதும் இந்திய தேசியவாதிகளின் தந்திரம்.

இந்திய தேசியவாதிகளின் இந்த நோக்கத்தை ஓரளவிற்கு பூர்த்தி செய்த "விஞ்ஞான" குழுவின் தலைவர் தான் அப்துல் கலாம். அப்துல் கலாம் இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவவாதிகளின் முக்கிய கனவான ஏவுகணைகளை உருவாக்கிய விஞ்ஞான் குழுவின் தலைவர். இந்தியா போக்ரான் அணு ஆயுத சோதனையை நடத்திய பொழுது பாதுகாப்பு ஆலோசகராக அதனை முன்னின்று நடத்தியவர்.

வலதுசாரி இந்துத்துவவாதிகளின் கனவை மெய்ப்பித்த "முஸ்லிம்". அதுவும் எப்படிப்பட்ட முஸ்லீம் - ராமபிரானின் பக்தர். அதை அவரே வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் இரண்டு வேளை தொழுபவர். காலை எழுந்தவுடன் அவர் படிப்பது "பகவத் கீதை". ஆனாலும் குரான் படித்து தொழுகை செய்யும் முஸ்லீம். இந்துத்துவவாதிகள் ஒரு "இந்திய முஸ்லீம்" இப்படித் தான் இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்ட நினைத்ததை விட அப்துல் கலாமிடம் அளவுக்கு அதிகமாகவே இந்துத்துவவாத தன்மைகள் காணப்பட்டன.

இந்திய முஸ்லீம்கள் இப்படியாக இருந்தால் தான் அவர்களை வலதுசாரி இந்துத்துவவாதிகள் "இந்தியர்களாக" ஒப்புக்கொள்வார்கள். கலாம் அவ்வாறு இருந்ததால் தான் அவர் "200% இந்தியராக" ஒப்புக்கொள்ளப்பட்டார். இந்திய முஸ்லீம்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறவே 2002ல் அவரை ஆதரித்த ஆர். எஸ்.எஸ், இன்றைக்கும் அவரை ஆதரிக்கிறது.

(ஒரு பத்திரிக்கையாளர் - பெயர் நினைவில்லை, ஒரு முறை கலாம் 200% இந்தியர் என்பது குறித்து கூறும் பொழுது - ஆர். எஸ்.எஸ் பாணியில் ஹிந்துக்கள் என்றால் 100% இந்தியராக இருந்தால் போதுமானது. முஸ்லீம்கள் என்றால் 200% இந்தியராக இருந்தால் தான் ஒப்புக்கொள்வார்கள் என்றார்)

அப்துல் கலாம் பல வகையில் சாமானிய இந்தியர்களை பிரதிபலித்து இருந்தார். ஒரு சாமானியக் குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவியை எட்டியது அவர் மீது ஒரு அபிமானத்தை இந்திய நடுத்தர வர்க்க மக்களிடம் ஏற்படுத்தி இருந்தது. அப்துல் கலாம் "அபரிதமான தேசபக்தி மிக்க இந்தியர்" என்பதாக ஊடகங்கள் அவரை சத்தரித்தன. அப்துல் கலாம் தன்னுடைய தேசபக்தியை அப்படி எந்த விதத்தில் வெளிப்படுத்தி இருந்தார் என்பது எனக்கு புரிந்ததேயில்லை. இந்தியாவிற்கான அணு ஆயுதங்களை தயாரிக்கும் குழுவின் தலைவர் (Project leader) , அவ்வப்பொழுது இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற "எனது கனவு" என புத்தகங்களிலும், பேட்டிகளிலும் முழங்கியது தவிர அவர் தன்னை குறித்து இந்துத்துவவாதிகளைச் சார்ந்து வெளிப்படுத்தி இருந்த பிம்பமே அவரை தேசபக்தி மிக்க இந்தியராக ஊடகங்கள் சித்தரிப்பதற்கு காரணமாக இருந்தன.

அப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். முஸ்லீம்கள் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என உதாரணம் காட்ட எப்படி அப்துல் கலாம் உதவினாரோ, அது போல நடுத்தரவர்க்க இந்தியர்களிடம் இவரை ஒரு முன்மாதிரியாக காட்டவும் உதவினார். அவரிடம் அதற்கான சில தன்மைகள் இருந்தன. ஆனாலும் அவரின் இராணுவ பலம் சார்ந்த தேசியவாதமே அப்துல் கலாமை பிரபலப்படுத்த இந்துவவாதிகள் துணிந்தமைக்கு முக்கிய காரணம்.

அப்துல் கலாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராகவே பெரும்பான்மை இந்திய மக்கள் கருதினர். தேசியவாதிகளை தீவிரமாக எதிர்க்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கூட அப்துல் கலாம் குறித்து வாய்மூடி மொளனமாகவே இருந்தனர். காரணம் அப்துல் கலாம் குறித்து எழுப்பப்பட்டிருந்த அளவுகடந்த பிம்பம். அதனால் தான் அவர் பதவியேற்ற சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்கும் குழந்தைகளை அவர் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து செல்வதாக அறிவித்த "சம்பிரதாய விளம்பர நடவடிக்கையும்" விமர்சிக்கப்படாமலேயே ஒதுக்கப்பட்டது. அப்துல் கலாம் குழந்தைகள் மீது அபிமானம் கொண்டவராக ஊடகங்கள் சித்தரித்தன. எப்படிப்பட்ட குழந்தைகள் அவர்கள் ? அவர் பல இடங்களில் உரையாடிய குழந்தைகள் எப்படிபட்டவர்கள் ? நகர்ப்புற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள். அவர்களிடம் கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் உரையாற்றுவார். ஊடகங்கள் குழந்தைகள் மீது அப்துல் கலாமுக்கு இருக்கும் அபிமானத்தை பட்டியலிடும்.

ஆனால் கிரமப்புற பள்ளிக்கு கூட செல்ல முடியாத ஏழை குழந்தைகள் பற்றி யாருக்கும் கவலையில்லை. தினந்தோறும் கிராமப்புறங்களில் பள்ளிக்கு செல்ல முடியாமல் அடுத்த வேளை சோறுக்காக பீடி சுற்றும் குழந்தைகளும், பட்டாசு தொழிற்சாலையில் தங்கள் மழலைப் பருவத்தை தொலைக்கும் குழந்தைகள் குறித்தும் யாருக்கும் கவலையில்லை. அடுத்த வேளை நல்ல சோற்றுக்கு கனவு காணுவதை தவிர இந்தக் குழந்தைகளுக்கு் கனவுகள் என எதுவும் இல்லை.

அந்த மழலைகள் படிக்க வேண்டிய ஆரம்ப பள்ளிப்படிப்புக்கு அரசு ஒதுக்க வேண்டிய பணம் - இந்தியாவின் போலியான இராணுவ வல்லரசு கனவுக்காக கொட்டப்படுவதை பற்றியும் யாருக்கும் அக்கறையில்லை. உலகில் தன்னுடைய இராணுவத்திற்காக அதிகமாக செலவு செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல குழந்தைகளின் ஆரம்ப பள்ளிப்படிப்பு கனவுக்கு தேவைப்பட்ட அந்த பணத்தை கொண்டு கட்டியெழுப்பப்ட்ட அந்த இராணுவ வல்லரசு கனவை அப்துல் கலாம் நினைவாக்கியதாகத் தான் அவரை தேசியவாதிகள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷோபா சக்தி "தேசிய உணர்ச்சியை விட வயிறு வலிமையானது" என கூறியிருப்பார். நானும் அதைத்தான் கூற நினைக்கிறேன். இந் நாட்டில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு அடிப்படைக்கல்வி இல்லாத சூழலில், அந்த அடிப்படைக்கல்விக்கு செலவிடப்பட வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் "இந்தியாவின் இராணுவ வலிமையை" நிலைநிறுத்த செலவிடப்படுகிறது. இந்தியாவில் ஆரம்பக்கல்விக்கு செலவிடப்படும் தொகையை இராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையுடன் கணக்கிட்டால் நான் கூற வருவது புரியும்.

அவ்வாறு பல ஆயிரம் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தங்களின் வாழ்கை தேவைக்காக மழலைப் பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் சூழலில் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுடன் பேசுவதும், கனவுகளை வளர்க்கச் சொல்வதும் வெறும் அடையாளப்பூர்வமான சம்பிரதாயமாகவே இருக்க முடியும்.

****

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த, ஆனால் பெரும்பான்மை தேசியவாதிகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் சிலருக்கு பவிகளை அள்ளித்தருவது எல்லா காலங்களிலும், நாடுகளிலும் நிகழ்ந்தே வருகிறது.

இந்தியாவில் சீக்கியர்கள் பிரிவினைவாதம் கோரிய பொழுது குடியரசுத்தலைவராக்கப்பட்டவர் சீக்கிய இனத்தைச் சேர்ந்த கியானி ஜெயில்சிங் (கியானி ஜெயில்சிங் ராஜ்வ் காந்திக்கு எதிராக மாறியது தனிக்கதை. இந்திய வரலாற்றில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கு மிககடுமையான பனிப்போர் இருந்த சூழ்நிலை இந்தக் காலகட்டத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது)

இலங்கையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு இலங்கையின் பிரதமர் பதவியை கொடுக்குமாறு சிங்கள தேசியவாதிகளான ஜேவிபியினர் கூறியதையும் இவ்வாறே பார்க்க முடிகிறது.

****

ஒரு தமிழரான அப்துல் கலாமிற்கு குடியரசுத்தலைவர் பதவி கிடைக்காமல் திமுக சதி செய்வதாக ஜெயலலிதா மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் கூறினார்களாம். இவர்கள் எல்லாம் "இந்தியர்கள்" தானே ? இப்பொழுது என்ன தமிழன் மீது திடீர் பாசம் :)

****
தொடர்புடைய கட்டுரை : அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?


மேலும் படிக்க...