வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன.

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு.

திலீபன், காந்தி, அகிம்சை

இது கடந்த ஆண்டு எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

இன்று திலீபன் மறைந்த நாள். 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.

திலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.

திலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.

அகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.

அகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது ? அகிம்சையா ?

"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.

in the larger world it came eventually to be realized that colonial territory was only marginally relevant to economic progress, if it was relevant at all. The dissidence and revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers are often credited with bringing the colonial era to end. More attention might well be accorded to the rather simple but persuasive fact that colonies had become no longer economically worthwhile. Territory was not the thing.

என்று தன்னுடைய "A Journey Through Economic Time" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.

இவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.

இவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.

இரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்துவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.

காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.

காந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது

தங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் "இந்தியர்கள்" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.

ஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா ?

மக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.

இத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.

அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.

திலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது

மேலும் படிக்க...

வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி

வாசிங்டன் நகரில் கேபிடல் ஹில் (Capitol Hill) கட்டடித்திற்கு எதிரில் "ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆதரவு அமைதி பேரணி" கடந்த திங்களன்று (ஜூலை 23, 2007) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்தும், மனித உரிமைகளை வலியுறித்தியும், சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை சுமார் 11:30 மணிக்கு கேபிடல் ஹில் முன்பாக ஆரம்பித்த இந்த பேரணி மதியம் 3 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வட கரோலினா மாநிலங்களைச் சார்ந்த செனட் உறுப்பினர்கள் இந்தப் பேரணிக்கு அதரவு தெரிவித்து செய்திகள் அனுப்பியிருந்தனர். பேரணியின் இறுதியில் உரையாற்றிய மனித உரிமை சட்டவல்லுனரும் ஈழப் போரட்டத்தில் ஈடுபாடு கொண்டவருமான கேரன் பார்க்கர் தமிழர்கள் ஏற்கனவே சட்டப்படி ஒரு தமிழ் ஈழத்தை ஈழத்தில் அமைத்து விட்டதாக குறிப்பிட்டார். வழக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தமிழ் ஈழப் பகுதிகளை de facto state என்று சொல்வார்கள். ஆனால் அதனை அவ்வாறு அழைப்பது சரியல்ல. அது de jure - சட்டப்படியான தனி நாடு என்பதே சரி என்றார் கேரன் பார்க்கர்.

Ms Parker said: "Because of the right to self- determination, the Tamil areas belong to the Tamils. It is their land. The civilian government and the military force - the LTTE - have a right de jure (by law) to this State. Tamils presence in their own land is not de facto and their government is not a de facto one.

"The Sri Lankan government’s occupation of part of the historic Tamil Eelam is de facto. They are there by the clear facts on the ground but they don’t have the legal right to it," Ms. Parker added.

குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tamil American Peace Rally: Speech by Dr. Ellyn Shander M.D








இது குறித்த செய்திகள் :
"Struggle to achieve self-rule will continue"- American Tamils

********

உலக நாடுகளின் அங்கீகாரத்தினை பெறுவது என்பதான ஒரு நிலையில் தான் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் கொள்கை இருந்து வந்தது. ஆனால் உலகநாடுகளின் அங்கீகாரம் என்ற நிலையிலேயே தங்களை அடைத்துக்கொள்ளாமல் அதனைக் கடந்து வேறு வகையில் தங்களின் சுயநிர்ணயத்தை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தற்பொழுது எழுந்துள்ளது. தொடர்ச்சியாக உலகநாடுகளின் ஒரு தலைச்சார்பான நடவடிக்கை இருக்கும் சூழலில் உலகநாடுகளின் அங்கீகாரம் எளிதாக கிடைத்து விடாது. இது தவிர உலகளவில் மேற்கத்திய நாடுகளின் மக்களை அச்சுறுத்தும் மதத்தைச் சார்ந்த அடைப்படைவாத பயங்கரவாத கண்ணாடி மூலமே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பார்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையெல்லாம் கடந்து தமிழீழம் அமைவது என்பது தான் தற்போதைய சவால். அதனை உலக நாடுகளின் அங்கீகாரம் என்ற ஒரே வியூகத்தின் மூலமாக அணுக முடியாது.

ஈழத் தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணயத்தினை தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்று கேரன் பார்க்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும் மேலும் படிக்க...

மரண தண்டனை


இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற கூடாது, தூக்கு தண்டனை மனித நாகரிகத்திற்கு எதிரானது என்பதான கூக்குரல் தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளால் எழுப்பபட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அப்சலுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்பதாக எழுந்திருக்கிறது. இதற்கிடையில் கொல்கத்தாவைச் சார்ந்த தன்னஞாய் சேட்டர்ஜிக்கு கற்பழிப்பு வழக்கில் 2004ல் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனையை ஒரு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்த்தன என்பது தவிர, வேறு எந்த எதிர்ப்பும் பெரிய அளவில் எழவே இல்லை.

தூக்கு தண்டனைக்கான பெருவாரியான ஆதரவும், எதிர்ப்பும் அது எந்தளவுக்கு பிரபலமான குற்றத்தைச் சார்ந்து இருக்கிறதோ, அதையொட்டியே எழுகிறது. இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வாதிட்ட ஹிந்து, இப்பொழுது அப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்க கூடாது என்று வாதிடுகிறது (கடந்த 10 பத்து வருடங்களாக தங்களுடைய நிலைப்பாடு இதுவே என்று தலையங்கம் கூறுகிறது. நளினிக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடந்த பொழுது மரண தண்டனைக்கு ஆதரவாக ஹிந்துவில் பல கட்டுரைகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது)

ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுவை ஏற்க கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ், தற்பொழுது இந்தப் பிரச்சனையில் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டிருக்கிறது. அதன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆஸாத் தூக்கு தண்டனை கூடாது என்கிறார். காஷ்மீரில் எழுந்திருக்கிற உணர்வும், ஆட்சி குறித்த பயமும், அப்சால் தூக்கிலிடப்படும் சமயம் ரமலான் காலம் என்பதால் அவருடைய அரசியல் அச்சம் அவரை ஆட்கொள்கிறது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சமயத்தில் அது குறித்து பெரிய அளவில் எந்தப் பிரச்சனையையும் எழுப்பாத பாஜக இன்று தன்னுடைய அரசியல் தேவையை முன்னிட்டு இந்தப் பிரச்சனைக்கு அதிக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் இன்று தூக்கு தண்டனை வேண்டும் என்று கூறும் தீவிர இந்துத்துவ, சங்பரிவார் பாணி தேசபக்தர்கள் எல்லாம் "மனிதத் தன்மையற்ற மரண தண்டனையை" அகற்ற வேண்டும் என போராடுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர். இது வரை வலைப்பதிவில் விவாதிக்கப்பட்டதில் அப்சல் சார்ந்த, எதிரான வாதங்கள் தான் முன்நிறுத்தப்பட்டதே தவிர நான் படித்த வரையில் அப்சலை தவிர்த்து மரண தண்டனையை யாரும் அணுகியதாக தெரியவில்லை.

அப்சல் குறித்த எண்ணங்களை விலக்கி வைத்து விட்டு, மரணதண்டனை பிரச்சனையை அணுக முயற்சித்துள்ளேன்

இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனையை Rarest of the rare casesல் தான் வழங்குவதாக பத்திரிக்கைகளில் வாசித்தேன். இந்த Rarest of the rare caseஐ தீர்மானிப்பது யார் ? ஏதேனும் சட்டங்கள் இதனை வரையறை செய்கிறதா ? அல்லது நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படுகிறதா ? நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் ராஜீவ் கொலையில் 26பேருக்கு மரண தண்டனை வழங்கியது போலவோ, ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஓரிசா உயர்நிதீமன்றம் கீழ்கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியது போலவோத் தான் முடிவடையும். இந்த Rarest of the rare case எது என்பது சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என அம்னஸ்டி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

சட்டம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்றால் முதலில் எல்லா வழக்குகளும் ஒரே அளவில் தான் நடத்தப்பட வேண்டும். இந்த Rarest of the rare case என்பதே எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை என்பதாகவும் சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையுமே வெளிப்படுத்துகிறது. தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என்பதாகவும், தாதாவாக இருந்து கொண்டு "போட்டுத் தள்ளுவது" வேறு வகை என்பதாகவும் மாறி விடக்கூடாது. மரண தண்டனை இந்திய சட்டத்தில் "தொடர்ந்தால்" அது "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கில் பேதமில்லாமல் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படி இதனை "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கிலும் கூட சரிசமமாக பிரயோகிக்கப்படுத்த முடியாது என்றால் இதனை முழுமையாக விலக்கியே தீர வேண்டும்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் மரண தண்டனை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து நடைமுறையில் இருந்து தான் வருகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது தொடங்கி இன்று வரை நடந்து வரும் குற்றங்கள் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. குற்றங்கள் என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. ஆட்டோ சங்கர் போன்ற தாதாக்கள் தூக்கிலிடப்பட்டும், வீரமணி போன்ற தாதாக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் தாதாக்களுக்கு பஞ்சமில்லை. தாதாக்களே இவ்வாறு என்றால் தீவிரவாதிகள் எந்த மனநிலையில் இருக்கின்றனர் என்று நாம் சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் தூக்கு தண்டனை, குற்றங்களை தடுத்து நிறுத்தும் என்பதோ, குற்றம் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான்.

சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தண்டனைகள் குற்றங்களை தடுப்பதாகவும், குற்றவாளிகளை திருத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் உயிர்களை பறிப்பதாக இருக்க கூடாது. இவ்வாறு கூறுவதன் மூலம் தீவிவாதிகளை எப்படி திருத்த முடியும் என்ற கேள்வி எழும்.

தீவிரவாதத்தை சட்டங்கள் மூலம் தடுத்து விடமுடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை. தீவிரவாதம் தோன்றுவதன் அடிப்படை சமூக அவலங்களை நீக்கினால் தான் தீவிரவாதம் தடுக்கப்படும்.

இந்தியாவில் மரணதண்டனை, தீவிரவாதம் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என செய்திகளில் பார்த்தேன். தீவிரவாதத்தை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என்னும் பொழுது இந்த சட்டத்தின் நோக்கத்தில் எவ்வித அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தீவிரவாதத்தை சமூக மாற்றத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

அமெரிக்காவை Free Democratic country என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தான் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனால் இங்கிருக்கும் பல சட்டங்கள் ஒரு சமூகத்தை சரியான கோணத்தில் செலுத்தக்கூடியவை. செலுத்திக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு ஓட்டுனர் உரிமம் பெற இங்கிருக்கும் சட்டங்களும், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனையாக மட்டும் இருப்பதில்லை. அது தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. சாலை விதிகளை மீறுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது

நம்மூரிலும் இத்தகைய சட்டங்கள் இல்லையா ? இருக்கின்றன. பல சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான வேறுபாடு அதனை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது. எவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லையெனில் அந்த சட்டங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்தியாவில் சட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு இயந்திரங்களான காவல்துறையும், அதிகார அமைப்பும் சட்டங்களை
எந்தளவுக்கு மதித்து செயல்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்களை நடைமுறையில் சரியாக பின்பற்றக்கூடிய நிர்வாக முறை உள்ளது.

குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, அதனை சரியாக நிர்வகிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையோ, வேறு எந்த தண்டனையோ குற்றங்களை தடுத்து நிறுத்தி விடாது.

மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர குற்றங்களை தடுத்து விடாது.

(
மரண தண்டனைக்கு மாற்று தான் என்ன ? இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆயுள் தண்டனையின் காலம் 14வருடங்கள். இதனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், 35வருடங்கள் சிறைவாசம், தனிமை சிறைவாசம் போன்றவற்றை பலர் முன்வைத்துள்ளனர். தற்பொழுது இருக்கும் சிறை என்பது பலருக்கு "உல்லாசமாக" இருப்பதான ஒரு கருத்து நிலவுகிறது. பலருக்கு அது சிறைவாசமாக இல்லாமல் மற்றொரு விடுதி அனுபவமாக மாறிவிடுகிறது. இந் நிலையில் சிறைவாசத்தை இன்னும் கடுமையாக மாற்றுவதும், தனிமை சிறைவாசத்தை புகுத்துவதும், கடுமையான வேலைகளை கைதிகளுக்கு கொடுப்பதும் குற்றங்களை குறைக்கும் என சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை
) மேலும் படிக்க...