Monday, October 10, 2011

அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)

வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

வால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்

தற்போதைய அரசியல் சூழ்நிலை

இந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.

தற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


சுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்டியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின் ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.

****************
பணக்காரர்களுக்கு வரி விதிப்பு

ஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.

வேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.
ஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.

பணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.

****************

உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்ன தான் நடக்கிறது ? அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ரீகனின் பொருளாதாரம் - Trickle down Economics

இந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.

அது என்ன Trickle down Economics ? அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.
தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.

இந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.

ரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்


பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.

சரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா ? இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.


பணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவின் பொருளாதார சரிவு

ரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.

Collateralized debt obligation மற்றும் Credit Default Swaps

சரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் ? அவர்களுக்கு பணம் வேண்டாமா ? அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.

இது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது ? நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.

2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ? அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.

ரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன ? வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.

Bailout

எந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தாலும் வேறு வழியில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.

வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்

இடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).

*********************


இடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.

99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% மக்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.


*****************

வர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.

20 மறுமொழிகள்:

சதுக்க பூதம் said...

நல்ல அலசல்.

நிதி நிறுவனங்கள் மீதான கட்டுபாட்டை தளர்த்தியதில் கிளண்டன் பங்கும் குறிப்பிடதக்கது.Glass-Steagall Act ஐ தளர்த்தியது கிளிண்டன் காலத்தில் தான் என்பது குறிப்பிட தக்கது.(Climax Bush ஆட்சி காலத்தில் தான் என்றால் கூட) அதுமட்டுமன்றி பெரிய வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை அரசின் நிதி சம்பந்தமான முக்கிய பொறுப்புகளில் நியமித்து பல கட்டுபாடுகளை தளர்த்ததிலும் அவர் பங்கு உள்ளது.Derivatives மற்றும் வங்கிகளின் அதிகாரம் பற்றிய பதிவின் சுட்டிபெரிய வங்கிகளின் பிடியில் உலக வர்த்தகம்

12:01 AM, October 11, 2011
bandhu said...

மிக நல்ல அலசல்.. ஒரு நல்ல கட்டுரையை படித்த திருப்தி..மிக்க நன்றி..

9:25 AM, October 11, 2011
மயிலாடுதுறை சிவா said...

Sasi

It is very informative and useful post for right time.

I am also convinced your last paragraph.

Jai "Occupy Wall Street" ;-))

Sivaa....

9:50 AM, October 11, 2011
Agila said...

இந்த மசோதாக்கள் நிறைவேற எதற்கு ஒபாமா குடியரசுக் கட்சியினரின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டும்? குடியரசு தலைவருக்கு உரிய "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா?

இது ஒரு தகவல் அறியும் கேள்வி மட்டுமே.

1:31 PM, October 11, 2011
வருண் said...

***வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர்.***

விமர்சகராகிவிட்டால் இந்த சூழ்நிலை அடிக்கடி உருவாகும். ஒரு பொது விடயத்தை எழுதும்போது நம்ம அதில் விதிவிக்காக இருக்கனும்னு அவசியம் இல்லையே? ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம்! He does not have to be a "perfect human being". He is also part of the same hypocrisy often times! :)

1:44 PM, October 11, 2011
சரண் said...

இந்தப் பொருளாதார சீரழிவில் FED -க்கும், அவர்கள் கண்மூடித்தனமாக அச்சடிக்கும் பணத்திற்கும், ஈராக்/அப்கனிஸ்தான் போர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் செலவுகளுக்கும், Fannie/Freddie போன்ற அரசால் கொடுக்கப் பட்ட insurance-க்கும் பங்கு இருக்கிறதென்று நம்புறிங்களா? இல்லை.. இந்தச் சீரழிவு பணக்காரங்களுக்கு வரிவிலக்கு அளித்தால் மட்டுமே ஆனதுன்னு சொல்றிங்களா?

6:14 PM, October 11, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

இந்த மசோதாக்கள் நிறைவேற எதற்கு ஒபாமா குடியரசுக் கட்சியினரின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டும்? குடியரசு தலைவருக்கு உரிய "வீட்டோ" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா?

*****

வீட்டோ என்பது நிராகரிப்பு அதிகாரம் மட்டுமே. காங்கிரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிப்பது.

மசோதாவை சட்டமாக்க காங்கிரஸ் அதனைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்

அமெரிக்க குடியரசுத் தலைவர் Executive Order என்று சொல்லப்படும் அரசு ஆணையை மட்டுமே தன்னிச்சையாக கொண்டு வர முடியும். ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அரசாங்கத்திற்கு செலவினை ஏற்படுத்தும் இத்தகைய மசோதாக்களை கொண்டு வர வாய்ப்பில்லை.

பெரும்பாலும் Executive Orders அரசாங்கத்தின் பணி தடையில்லாமல் நடைபெறவே குடியரசுத்தலைவரால் பயன்படுத்தப்படும்

Executive Orderஐ தன்னிச்சையாக வெளியிடுவது ஜனநாயக விரோதமாகவே கருதப்படுகிறது.

தற்பொழுது கூட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான விவாதத்தில் டெக்சஸ் கவர்னர் ரிக் பெரி பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் அரசு ஆணையை தன்னிச்சையாக Executive Order மூலம் வெளியிட்டதை பலரும் ஜனநாயக விரோதமாக விமர்சித்து இருந்தனர்.

9:50 PM, October 11, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

இந்தப் பொருளாதார சீரழிவில் FED -க்கும், அவர்கள் கண்மூடித்தனமாக அச்சடிக்கும் பணத்திற்கும், ஈராக்/அப்கனிஸ்தான் போர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் செலவுகளுக்கும், Fannie/Freddie போன்ற அரசால் கொடுக்கப் பட்ட insurance-க்கும் பங்கு இருக்கிறதென்று நம்புறிங்களா? இல்லை.. இந்தச் சீரழிவு பணக்காரங்களுக்கு வரிவிலக்கு அளித்தால் மட்டுமே ஆனதுன்னு சொல்றிங்களா?

*************

பொருளாதார சீரழிவு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இது தான் காரணம், அது தான் காரணம் என பலக் காரணங்களை சுட்டிக் காட்ட முடியும்.

பொருளாதாரச் சரிவிற்கு என்ன காரணம் என்பதை என்னுடைய இந்தக் கட்டுரை அலசவில்லை. தற்போதைய போராட்டத்திற்கான நியாயங்களையே என் கட்டுரை முன்வைக்கிறது. வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம் எதன் அடிப்படையில் எழுகிறது என்பதையே கட்டுரை அலசுகிறது. அதில் முக்கியமான காரணம் Trickle down Economy என்கிற ரீகனின் பொருளாதாரம். அந்த பொருளாதாரத்தால் எந்தப் பலனும் இல்லை என்பதையே என் கட்டுரை நிறுவுகிறது

இன்னும் நிறைய எழுத முடியும். நேரம் இல்லை. ரீகனின் வரி விலக்கிற்கு முன்பு அமெரிக்க பொருளாதாரம் இதை விட அதிக வளர்ச்சியை கண்டிருக்கிறது. மிகக் கூடுதலான வரியில் பொருளாதாரம் வளர முடியும். எனவே வரி விலக்கினால் மட்டுமே பொருளாதாரம் வளரும் என்பது அபத்தமானது. வரி விலக்கு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை ஏழைகளாகவும், நடுத்தர வர்க்க மக்களை அதே நிலையிலுமே வைத்திருக்கிறது

நன்றி...

10:09 PM, October 11, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

விமர்சகராகிவிட்டால் இந்த சூழ்நிலை அடிக்கடி உருவாகும். ஒரு பொது விடயத்தை எழுதும்போது நம்ம அதில் விதிவிக்காக இருக்கனும்னு அவசியம் இல்லையே? ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம்! He does not have to be a "perfect human being". He is also part of the same hypocrisy often times! :)

*****

Yep..Agreed :)

10:11 PM, October 11, 2011
தமிழ் சசி | Tamil SASI said...

மறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

10:12 PM, October 11, 2011
சரண் said...

//பொருளாதார சீரழிவு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இது தான் காரணம், அது தான் காரணம் என பலக் காரணங்களை சுட்டிக் காட்ட முடியும். //

மிகச்சரி. பல காரணங்கள் இருக்கிறது என்பதுதான் என் கருத்தும்.
ஆனால் (நோக்கம் அதுவாக இல்லையென்றாலும்) இக்கட்டுரையும், பெரும்பாலான வர்க்கப் போராட்டக் களத்திலிருக்கும் மக்களின் கருத்தும், பணக்காரர்களை வில்லனாகக் கருதும் மனப்பான்மையை உருவாக்குகிறது என்பதைதான் நான் சொல்ல முயன்றிருக்கிறேன்.வரிவிதிப்பு மட்டும் இந்தப் போரடும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.

// வரி விலக்கு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை ஏழைகளாகவும், நடுத்தர வர்க்க மக்களை அதே நிலையிலுமே வைத்திருக்கிறது //

இக்கருத்தில் தான் நான் மறுக்கிறேன். பணக்கரர்களுக்கு மென்மேலும் வரி வித்திப்பதால் (குறிப்பாக at federal level) கிடைக்கும் பணம் மக்களிடம் நேரடியாக சேரும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அப்பணம் மத்திய அரசியல்வாதிகளிடம் தான் சேரும்.. அது ஊழலுக்குத்தான் துணைபோகும்.

I'm pretty sure you know about Fiat (paper) currency and how it works. இந்த வெற்றுக் காகித பணத்தை எந்தப் பிடிப்பும் இல்லாமல் அச்சடிப்பதாலும், இந்த அச்சடிக்கும் பொறுப்பு பெரிய வங்கிகளின் கூட்டமைப்புடன் (FED) இருப்பதாலும் (particularly all the wall steet evil), அரசியல்வாதிகள் துணையுடனும்தான் இப்பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.

எல்லாப் பணக்கார்களையும் வில்லனாக்குவது ஒரு சமுதாயத்துக்கு நல்லதில்லை. உதாரணத்திற்கு Steve Jobs, Bill gates etc.,. இவர்களெல்லாம் தனது கடின உழைப்பாலும், சாமத்திய திறத்தாலும் பணம் சேர்த்தவர்கள். இவர்களையும், wall steet- ல் குறுக்குவழியில் அரசின் உதவியால் பணம் சேர்த்தவகர்களயும் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசு ஏன், எதனால், எப்படி இவர்களுக்கு உதவி செய்கிறது என்பதை ஆரய்ந்தாலே பல உண்மைகள் வெளிவரும்.. அதிலிருந்துதான் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்

1:23 PM, October 12, 2011
Hai said...

அருமையான தெளிவான பதிவு.

10:16 AM, October 13, 2011
Anonymous said...

Very nice article. Perfect analysis of the current economic+political situation.

10:04 PM, October 14, 2011
superlinks said...

எளிமையாக எழுதியுள்ளீர்கள். நல்ல பதிவு. மேலும் இந்த பதிவிலேயே வங்கிகள் குறித்தும், கடன்கள் குறித்தும் எழுதியுள்ளீர்கள் அதை சற்று விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

4:10 AM, October 15, 2011
வழிப்போக்கன் said...

தங்கள் கட்டுரையை படித்த பின்பு தான் உலகின் உண்மையான பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொண்டேன். இதில் உற்பத்தியே இன்றி பணத்தை செயற்கையாக உருவாக்குவது தான் அபத்தம் என்பது தெளிவு. வால்ஸ்ட்ரீட் இயக்கம் தோல்வியடையும் பட்சத்தில் நாமெல்லாம் கோவிந்தாதான். இன்னும் இதுபற்றிய தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6:03 AM, April 01, 2012