Sunday, May 09, 2010

தமிழ்மணம் நட்சத்திரம், எழுத்து அரசியல், ஈழ‌ம்

தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு மாதமும் வலைப்பதிவில் நுழைந்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகி விட்டது. இன்றைக்குச் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. எழுதப்படும் அனைத்தையும் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதெல்லாம் சிறந்த படைப்புகளாக இருப்பதும் இல்லை. தினந்தோறும் எழுதப்படும் எண்ணற்றக் கட்டுரைகளில் எத்தனையோ நல்லப் படைப்புகள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஒளிந்து கொள்கின்றன.

வலைப்பதிவுகள் குழு மனப்பான்மை உடையது. நம்முடையப் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு குழுவுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களை ஏதேனும் குழுவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்கள் வேகமாக பிரபலமாகிறார்கள். திரட்டிகளின் ஓட்டுகளை பெறுவதற்கும் அது ஒரு முக்கிய தேவையாகவும் இருக்கிறது. நான் முதலில் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வலைப்பதிவுகள் இருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் குழு மனப்பான்மையை உணர்ந்து இருக்கிறேன். சில மாதங்கள் வலைப்பதிவுகளை வாசித்தப் பிறகு நாமும் எழுத வேண்டும் என யோசித்த பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக் குறித்த‌ வ‌லைப்ப‌திவை தொட‌ங்கினேன். அப்பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக்கு என்று ஒரு த‌னி வ‌லைப்ப‌திவை த‌மிழில் யாரும் வைத்திருக்க‌வில்லை. நான் ப‌ங்குச்ச‌ந்தை குறித்து எழுத‌த்தொட‌ங்கிய‌த‌ற்கு அதுவும் ஒரு கார‌ண‌ம். அது தான் எந்தக் குழுவிலும் சேராமல் என்னை ஒர‌ள‌வுக்கு அடைய‌ள‌ப்ப‌டுத்திய‌து. அத‌னை தொட‌ர்ந்து என்னுடைய‌ காஷ்மீர் குறித்த‌க் க‌ட்டுரைக‌ளும், ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் ந‌ல்ல‌ அறிமுக‌த்தைக் கொடுத்த‌ன.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு தரம் கூட வில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரளவுக்கு உண்மை தான். என்றாலும் இன்று இருக்கின்ற வெகுஜனப் பத்திரிக்கைகளை விட தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒரு பிரச்சனைக் குறித்த பல்வேறு கோணங்களை வலைப்பதிவுகள் நமக்கு வழங்குகின்றன. தமிழ் எழுத்து உலகில் ஒரு சில எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில் இது மிகப் பெரிய கருத்தாக்க வெளியை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்று நோக்கினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைப்பட விமர்சனம் போன்றவற்றில் ஒரு திரைப்படம் குறித்து பலக் கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் முக்கிய சமூகப் பிரச்சனைகளில் பல வேறுபட்ட கோணங்கள் கிடைப்பதில்லை. சினிமாவை மாறுபட்டு உள்வாங்கும் நமது சமூகம், சமூக வாழ்வியல் பிரச்சனைகளை ”பெரும்பாலும்” ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்க்கிறதோ என்ற கருத்து எனக்குள்ளது.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியும், இணையத்தின் வளர்ச்சியும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்றைக்குப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு உடனுக்குடன் வாசகர்கள் கிடைக்கிறார்கள். அவ்வாறு கிடைப்பதால் அவர்கள் எழுதும் எழுத்துக்கு "ரசிகர்களும்" பெருகி இணைய வாசகர் உலகம் பல ரசிக குழுக்களால் சினிமா ரசிகர் மன்றங்கள் போன்ற குழும மன்றங்களாக மாறி விட்டது. சாருவுக்கு ஒரு கோஷ்டி, ஜெயமோகனுக்கு ஒரு கோஷ்டி என சினிமா ரசிகர் மன்றங்களை ஒத்த ரசிகர் குழுக்கள் இங்கே உருவாகி விட்டது.

இந்தக் குழுக்களை தொடர்ச்சியாக கட்டமைக்க எழுத்தாளர்கள் முனைகின்றனர். இந்தக் குழுக்க‌ளை த‌க்க‌வைக்க‌ இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்பொழுது தங்களுக்குள் சண்டைகளை உருவாக்கி, ந‌ல்ல‌ சுவார‌சிய‌மான‌ மோத‌லை அவ்வ‌ப்பொழுது வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கிறார்க‌ள். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமும் கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் எழுத்தும் கார்ப்பரேட் யுகத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் ரசிகர் மன்றங்களாகவும் பிறகு வாடிக்கையாளர்களாகவும் மாறும் பரிணாம வளர்ச்சியில் தான் சாமியார்களுக்கு விளம்பர சேவைகளையும் இந்த எழுத்தாளர்கள் புரிந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ச்சியான குப்பைகளை தங்கள் வலைத்தளத்தில் ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும்.

இவர்கள் எழுதுவது பெரும்பாலும் சுவாரசியமான குப்பைகள் தான் என்றாலும் சாரு கொட்டும் குப்பைகளை கூட‌ கலகம் என புளகாங்கிதம் அடைய‌ ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியக் காலத்திலும், போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தக் காலத்திலும் ஈழத்தைப் பற்றி எழுதவே சாரு தொடை நடுங்குவார். மே2009க்குப் பிறகு பிரபாகரன் சேவ் செய்து சரண‌டைந்து விட்டார் எனப் பல மாதங்களுக்குப் பிறகு யோசித்து எந்தப் பிரச்சனையும் தனக்கு ஏற்படாது என உறுதிப் படுத்திக் கொண்டு எழுதினார் சாரு. உடனே அவர் ரசிக சிகாமணிகள் எல்லாம் சாருவுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள், பெரிய கலகத்தையே புரிந்து விட்டார் என புல்லரித்து மகிழ்ந்தனர்.

இந்த எழுத்துலகக் கலகப் புல்லரிப்பின் மிகை உணர்ச்சியைப் பார்த்தால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை விட அசத்தலான நகைச்சுவையாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ”நொஞ்சான்” தமிழ்மணத்தை நாலு சாத்து சாத்தினால் பெரும் கலகத்தை ஏற்படுத்தியவர் என்ற பட்டம் கிடைக்கும். யோனி என்ற வார்த்தையை எழுதினாலே கலகம். காமக்கதை என்ற தலைப்பு வைத்தாலே பெரும் கலகம். இதுவெல்லாம் கொஞ்சம் ”ஓவர்” என்று இந்த கலக எழுத்தாளர்களுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் தெரியாதது தான் அதை விட நகைச்சுவையானது.

ஜி.நாகராஜன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே போன்ற நாவல்கள் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலியல் தொழிலாளர்களும், தன் மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவனும் இவர் நாவலின் கதாநயகர்கள். தான் கலகம் புரிவதாக இவர் சொல்லிக் கொண்டதில்லை. அதன் பிறகு எத்தனையோ பேர் தமிழில் பாலியல் கலகத்தைப் புரிந்து விட்டனர். பாலியல் வெகுஜன ஊடகங்களிலும் பரவலாக பலரால் அலசப்பட்டது. பல வெகுஜன பத்திரிக்கைகள் மிக விலாவாரியாக கட்டுரைகள் எழுதி பாலியல் மூடு மந்திரங்களை அவிழ்த்தன. விஜய் டிவியில் வந்த புதிரா, புனிதமா அந்தக் காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண் பாலியல் கேள்வி கேட்பதா எனக் கூக்குரல் எழுந்தது. இன்றைய நவீன இணையக் காலத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பாலியல் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறான நிலையில் காமக்கதை என்று எழுதுவதே கலகம் என்று எண்ணும் காமெடி எல்லாம் தமிழ் வலைப்பதிவுலகில் மட்டுமே நிகழ்க்கூடியது. இதனால் என்ன பயன் என்றால் தமிழ்மணம் வலைப்பதிவுக்கு வரும் தேடலில் பெரும்பாலும் காமக்கதையை தேடிய கூகுள் தேடல்கள் தான் அதிகமாக வருகின்றன. இனி என்னுடைய இந்தக் கட்டுரைக்கும் அதிக தேடல் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் இது ஒரு தேடல் கலகம் தான்.

இன்னொரு நகைச்சுவையை உதாரணமாக கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வலைப்பதிவில் நடந்த லீனா மணிமேகலைச் சார்ந்த விடயத்தை கூறலாம். லீனா ஒரு கவிதையை எழுத அதனை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. கலகம், கட்டுடைப்பு என்று கூறும் லீனா மணிமேகலை போன்றவர்கள் விமர்சனம் என்று வரும் பொழுது மட்டும் பெண் என்ற கேடயத்தை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களும், விமர்சனம் செய்பவர்களை ஆணாதிக்கம் மிக்கவர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். இது ஒரு அலுப்பூட்டும் வாதம். பெண்ணியவாதிகளை விமர்சிக்கவே பல நேரங்களில் தயக்கமாக உள்ள காரணங்களில் இந்த ஆணாதிக்க முத்திரையும் ஒரு முக்கியக் காரணம். இங்கே விமர்சனம் செய்த வினவுக்கு ஆணாதிக்கவாதி என்ற பட்டமே கிடைத்தது. லீனா மணிமேகலைக்கு எதிராக‌ ஒரு விமர்சனக் கட்டுரை முன்வைக்கப்பட்டவுடன் தமிழ் அறிவுஜீவிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்தனர். ஈழப் போராட்டம் நடந்தக் காலத்தில் ஒரு கூட்டம் கூட நடத்த துப்பில்லாத தமிழ் நாட்டின் அறிவுஜீவிகள் எல்லாம் கொதித்து எழுந்து இல்லாத எதிர்ப்புக்கு கண்டன கூட்டம் நடத்த தொடங்கி விட்டனர். லீனா மணிமேகலை எழுதுவதை யார் தடை செய்தார்கள்? லீனா மணிமேகலைக்கு அப்படி என்ன தான் எதிர்ப்பு எழுந்தது ? அவர் எழுதியக் கவிதைக்கு ஒரு விமர்சனக் கட்டுரை. அவ்வளவு தான். இல்லாத எதிர்ப்புக்கு ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் போலி அறிவுஜீவிகளுக்கு அ.மார்க்சின் தலைமை ஆச்சரியப்படுத்த வில்லை. இதில் இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் லீனா மணிமேகலையின் கவிதை, தமிழ்க் கவிதையை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறதாம். இது வேறையா...அடங் கொய்யால...நல்ல வேளையாக இதைப் பார்க்க அடுத்த நூற்றாண்டில் நான் இருக்கப் போவதில்லை.

இப்படி நாம் கூறினால் உடனே யோனி என்ற புரட்சி வார்த்தைக்கு நாம் எதிரானவர்கள், கலாச்சாரக் காவலர்கள், ஆணாதிக்கவாதிகள் என பட்டம் கிடைக்கும். ஆனால் கோணேஸ்வரிகள்...என்ற இந்தக் கவிதை தரும் உணர்வுகளையும், கருத்தின் ஆழத்தையும் லீனா மணிமேகலை போன்ற கவிஞர்களின் புரட்சிக்(?) கவிதைகள் நமக்குத் தருவதில்லை.

***************************

2005ல் முதலில் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். இன்றைக்குத் திரும்பி பார்த்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்னுடைய எழுத்து பெரும்பாலும் அரசியல் சார்ந்தாகவே இருந்து வந்திருப்பதால் நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு. அதே நேரத்தில் தற்போதைய சமுதாய முறையையும், அநீதியான சூழலையும், அராஜகமான அதிகாரமையப் போக்கினையும், தற்போதைய உலக ஒழுங்கினையும் எப்பொழுதும் நிராகரித்து வந்திருக்கிறேன் என்ற வகையில் ஒரு வகையான திருப்தியும் எனக்குள்ளது.

***************************

மே 2010, தமிழினப் பேரவலத்தின் ஒரு வருடத்தை குறிக்கும் நினைவு மாதம். புலிகளின் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 மாதங்கள் முடிந்து விட்டன. சுமார் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைவாய்க்கால் கடற்க்கரை மணலில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் விட்டனர். ஒரு மனிதப் பேரவலத்தை உலகமே கண்டுகொள்ளாத உலக ஒழுங்கிலும், சக தமிழர்கள் கூட முழுமையாக இந்த அவலத்தை உள்வாங்காத சூழ்நிலையிலும் வாழ நேர்ந்ததன் துக்கத்தை மறுபடியும் நினைவு கூறும் மாதமாக மே 2010 மாறியுள்ளது.

இந்த ஒரு வருடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மீள் அமைக்கவே அராஜகச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கான அரசியல் என்பது இன்றைக்கு ஏதும் இல்லை என்பதான சூழ்நிலையே உள்ளது. இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மட்டுமல்ல அவர்களின் அரசியல் பாதையை செப்பனிட வேண்டிய தமிழ் அரசியல் சூழலும் அந்த அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுஜீவி சூழலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் புலிகளே காரணம் என முடிவு செய்து விட்ட தமிழ் அறிவுஜீவி உலகம் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்து கொண்டிருந்ததிலேயே கடந்த 12 மாதங்கள் கழிந்து போய் விட்டன. சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கியே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கேட்க வேண்டி உள்ளதாக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் எல்லாம் இன்று தமிழ் திரையுலகில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பள்ளிக் காலத்தில் என்னை அதிகம் பாதித்தவர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தியாகு போன்றோர்களே. ஆனால் இன்றைக்கு சுப.வீரபாண்டியனை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.

கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது. தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy).

***************************

அடுத்த ஒரு வாரத்திற்கு இத்தகைய பல்வேறு விடயங்களை தொட்டுச் செல்வதான எண்ணத்தில் இருக்கிறேன். விரிவாக எழுத முடியா விட்டாலும் தொட்டுச் செல்ல முடியும் என நம்புகிறேன்.

தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நண்பர் சங்கரபாண்டிக்கு என்னுடைய‌ நன்றி...

34 மறுமொழிகள்:

கே.என்.சிவராமன் said...

பேரழிவின் துக்கம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் -

நட்சத்திரமாகி இருக்கிறீர்கள்.

வலையுலகம் குறித்த அலசலுடன் ஆரம்பமாகி இருக்கும் இந்த நட்சத்திர வாரத்தில் -

பல ஆழ்ந்த, யோசிக்க வைக்கும் இடுகைகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

நட்சத்திர வாழ்த்துகள்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

12:31 AM, May 10, 2010
உண்மைத்தமிழன் said...

வாங்கண்ணே சசியண்ணே..!

வாழ்த்துக்கள்ண்ணே..! கலக்குங்கண்ணே..!

2005-க்கு் பிறகு ஐந்து வருடம் கழித்துத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரமா..? கொடுமை..!

அப்படியிருந்தும் இன்னும் எப்படி சங்கரபாண்டிகூட நட்புல இருக்கீங்க..? கோஷ்டி மாறுண்ணே.. நம்ம பக்கம் வாண்ணே.. அவரை ஒரு வழி பண்ணுவோம்..!

1:48 AM, May 10, 2010
ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !


//பல ஆழ்ந்த, யோசிக்க வைக்கும் இடுகைகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் //

அதே!

1:57 AM, May 10, 2010
Anonymous said...

சசி, உங்களது நட்சத்திர வாரப் பதிவுகளை வாசிக்க ஆவலாயுள்ளேன்.
-தங்கமணி

2:46 AM, May 10, 2010
வினவு said...

//நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு.//

இதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். நட்சத்திர வாழ்த்துக்கள்!

4:16 AM, May 10, 2010
ராஜ நடராஜன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

5:24 AM, May 10, 2010
நேசமித்ரன் said...

நட்சத்திர நல்வாழ்த்துகள் சார்

5:58 AM, May 10, 2010
தருமி said...

வாழ்த்துக்கள் -- என்றும்.

6:13 AM, May 10, 2010
ரவி said...

நேரம் இருந்தால், முடிந்தால், இந்த வாரத்தில் நீங்கள் பெரியாரியம், பெண்ணியம், பார்ப்பணீயம், கடவுள் மறுப்பு, செக்ஸ் கல்வி போன்ற அழுத்தமான டாப்பிக்ஸ் எடுத்து எழுதவேண்டும் என்பது என் ஆசை...!!!

வாசிக்க காத்திருக்கிறேன்...!!

6:29 AM, May 10, 2010
gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!

6:42 AM, May 10, 2010
பழமைபேசி said...

வாழ்த்துகள்; காத்திருக்கிறேன் எதிர்பார்ப்புடன்...

7:15 AM, May 10, 2010
குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் சசி, நீங்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வலையுலகில் வந்தோம்...

//நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு.//
எனக்கும் இது உண்டு... வெறுப்படைந்து ஏமாற்றும் அடைந்து கோபமடைந்து தற்போது இதெல்லாம் காதிலேயே விழவேண்டாமென காதை மூடிக்கொண்டு இருக்க விழைகிறேன்... ஆனால் என் அரசியல் அப்படியே தான் உள்ளது, ஆனால் நான் என் அரசியலுக்காக யார் யார் மேலெல்லாம் நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டார்கள்... அதற்காக என் அரசியல் தவறு என்றல்ல.... நான் நம்பிய அரசியல் வாதிகள் தவறு... வினவு விரிவாக விளக்க கேட்பதிலும் அர்த்தமுண்டு ஏதாவது மீன் சிக்குமா தூண்டிலில் என்று பார்க்கிறார் போல

9:04 AM, May 10, 2010
ஜோதிஜி said...

நல்வாழ்த்துகள் தமிழ் சசி.

ஏற்கனவே திரு செல்வராஜ் வலைதளம் மூலமாக உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்.

வந்துள்ள விமர்சன பின்னூட்டங்கள் போதுமானது. பலதரப்பிலும் நீங்கள் உருவாக்கிய தாக்கம்.

தொடருங்கள்.

10:25 AM, May 10, 2010
SnackDragon said...

சசி,

குட்டிச்சுவர் அருகே ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு கழுதையைப் பார்த்தது போல
உங்கள் பதிவை வாசிக்க ஏதோ ஒரு வித நிம்மதி வருகிறது.

11:23 AM, May 10, 2010
DJ said...

நீண்ட‌கால‌ம் எதுவும் எழுதாம‌ல் இருந்த‌ உங்க‌ளை இந்த‌ ந‌ட்ச‌த்திர‌ வார‌ம் மீண்டும் தொட‌ர்ச்சியாக‌ எழுத‌ வைக்குமென‌ ந‌ம்புகிறேன்.

11:42 AM, May 10, 2010
Unknown said...

வாழ்த்துக்கள் ...! எதிர்பார்ப்புடன்

11:59 AM, May 10, 2010
தமிழநம்பி said...

பாராட்டும் வாழ்த்தும்.

///தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.///

***கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது***

மிகச்சரியான கூற்றுகள்,

12:50 PM, May 10, 2010
அபி அப்பா said...

வாசிக்க காத்திருக்கிறோம் சசி!!! நட்சத்திர வாழ்த்துக்கள்!!

1:19 PM, May 10, 2010
தருமி said...

ஒன்று சொல்ல மறந்து போச்சே!

எப்போதும் அந்நாளிலிருந்து உங்கள் எழுத்து மேல் எனக்கு மிக்க மரியாதை.

காஷ்மீர் பிரச்சனை பற்றிய பதிவுகள் - ஒரு text book மாதிரி...

1:25 PM, May 10, 2010
பா.ராஜாராம் said...

நட்சத்திர வாழ்த்துகள்.

உணர்ந்த வரையில் நேர்மையான கருத்து பகிர்வு.

2:55 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

நண்பர்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் நன்றி. இந்த வாரம் எவ்வளவு எழுத முடியும் என தெரியவில்லை. பணிச்சூழலுக்கு இடையே எடுத்துக் கொண்ட நட்சத்திரப் பணியையும் பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இருக்கிறேன்.

இங்கே பின்னூட்டமிட்ட பல நண்பர்கள் என் மேல் வைத்துள்ள அன்பு மிக்க மகிழ்ச்சைத் தருகிறது.

அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்...

8:19 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

எப்போதும் அந்நாளிலிருந்து உங்கள் எழுத்து மேல் எனக்கு மிக்க மரியாதை.

காஷ்மீர் பிரச்சனை பற்றிய பதிவுகள் - ஒரு text book மாதிரி...

*********

தருமி ஐயா,

உங்களுடைய இந்த வரிகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது. மிக்க நன்றி...

8:20 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

குட்டிச்சுவர் அருகே ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கும் இன்னொரு கழுதையைப் பார்த்தது போல
உங்கள் பதிவை வாசிக்க ஏதோ ஒரு வித நிம்மதி வருகிறது.

*******

எனக்கும் இது உண்டு... வெறுப்படைந்து ஏமாற்றும் அடைந்து கோபமடைந்து தற்போது இதெல்லாம் காதிலேயே விழவேண்டாமென காதை மூடிக்கொண்டு இருக்க விழைகிறேன்... ஆனால் என் அரசியல் அப்படியே தான் உள்ளது

***********
குழலி, TiredRannaSuarus,

நம்மைப் போல இன்னும் எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள். கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகளால் விரக்தியின் விளிம்பிற்கு சென்று உடல் உபாதைகள் அடைந்த எத்தனையோ நண்பர்களை நான் அறிவேன். இனிமேல் எழுதவே போவதில்லை என்று கூட ஒரு நேரத்தில் முடிவெடுத்து இருந்தேன். எழுதி என்ன சாதித்தோம் என்ற விரக்தியே காரணம்.

ஆனால் காலம் ஓடிக் கொண்டே தான் இருக்கும். மாற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். நமக்கான நேரம் வரும் வரை நம் அரசியலை சீர்படுத்திக் கொள்வதே நாம் செய்ய வேண்டியது.

நன்றி...

8:27 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

நேரம் இருந்தால், முடிந்தால், இந்த வாரத்தில் நீங்கள் பெரியாரியம், பெண்ணியம், பார்ப்பணீயம், கடவுள் மறுப்பு, செக்ஸ் கல்வி போன்ற அழுத்தமான டாப்பிக்ஸ் எடுத்து எழுதவேண்டும் என்பது என் ஆசை...!!!

******

நன்றி ரவி...

கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தே உள்ளது. பார்க்கலாம்.

8:30 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

இதைப்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

********

வினவு,

முடிந்தால் எழுதுகிறேன். கொள்கைப் போராட்டங்கள் எல்லா நேரங்களிலும் ஏற்படக்கூடியது தான். ஆனால் அசாதாரணமான சூழ்நிலைகள் நம் கொள்கைகளை மீள் பார்வை செய்ய வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்துகிறது.

ஈழம், பொருளாதார தேக்கம் என கடந்த இரண்டு வருடங்களில் நடந்த நிகழ்வுகள் நிச்சயமாக என்னுடைய கொள்கைகளை மீள் பார்வை செய்ய வைத்துள்ளது.

ஈழம் தவிர பொருளாதார தேக்கத்தின் பொழுது அமெரிக்காவில் அப்பாவி மக்களை வீடு வாங்க வைத்து, அவர்களின் பணத்தை பிடுங்கி பின் வீட்டையையும் பிடுங்கிய நிறுவனங்கள் என்னுடைய பொருளாதாரக் கொள்கைகளையும் மீள்பார்வை செய்ய வைத்துள்ளது. இவற்றை விரிவாக எழுத வேண்டும். நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.

நன்றி...

8:40 PM, May 10, 2010
கோவி.கண்ணன் said...

//ஆனால் என் அரசியல் அப்படியே தான் உள்ளது, ஆனால் நான் என் அரசியலுக்காக யார் யார் மேலெல்லாம் நம்பிக்கை வைத்திருந்தேனோ அவர்கள் எல்லாம் ஏமாற்றிவிட்டார்கள்... அதற்காக என் அரசியல் தவறு என்றல்ல.... நான் நம்பிய அரசியல் வாதிகள் தவறு...//

சாரு அபிமானிங்க எல்லாம் இப்படித்தான் எழுதுவிங்களோ ?

:)

8:51 PM, May 10, 2010
மதிபாலா said...

ஞாபகமிருக்கிறது.

கடந்த 2009ம் ஆண்டின் முதல் பாதியில் நாம் அவ்வப்போது கருத்துக்களால் பேசிக்கொண்டதும் , அந்த மே - 18க்குப் பிறகு தமிழ்ப்பதிவுலகில் காணாமல் போனவர்களில் என்னோடு சேர்த்து நீங்களும் என்பதும் நிழலாடுகிறது. இன்னமும் காணாமல் போன நண்பர் மோகன் கந்தசாமி , பெயர் மறந்து போன பலர் அனைவரும் ஈழத்துப்பேரழிவின் சாட்சியாகவே இருக்கிறோம்...இருப்போம்..!

பதிவுலகை விட்டு பிரியாவிடை பெற்று விட்டாலும் , இன்னமும் தமிழ்மணம் பக்கம் அவ்வப்போது வந்துதான் போய்க்கொண்டிருக்கிறேன்.

ஆச்சர்யமாக , இன்று வந்த எனக்கு இன்ப அதிர்ச்சி......உங்களின் நட்சத்திர வாரமா இது? அனேகமாக 2010 ஆம் ஆண்டு நான் இடும் முதல் பின்னூட்டம் இதுவாகவே இருக்கும்...

பேரழிவு மாதத்தில் மிகச்சரியாகவே உங்களைத் தேடிப்பிடித்து தமிழ்மணம் நட்சத்திரம் ஆக்கி இருக்கிறது.......

பேரழிவின் ஞாபகத்தை இன்றைய பதிவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு..

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பர் தமிழ்சசி..!!

1:58 AM, May 11, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

மதிபாலா,

உங்களுடன் மீண்டும் உரையாட முடிந்ததில் எனக்கும் மிக்க மகிச்சியே. எந்தச் சமுதாயமும் இவ்வளவு பெரிய இழப்பினையும், வலியையும் சந்தித்து இருக்க முடியாது. தமிழ் சமுதாயம் அதனை சந்தித்தது. அதனை கடந்து தான் நாம் செல்ல வேண்டும்.

நன்றி...

8:34 PM, May 11, 2010
✨முருகு தமிழ் அறிவன்✨ said...

தமிழ்சசி,
உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் படித்ததில்லை;ஆனால் முக்கியமான பதிவுகளைப் படித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

எழுதவரும் எதையும் தெளிவாக ஆற்றொழுக்காக எழுதும் வெகு சிலரில் நீங்களும் ஒருவர்;ஈழத்தைப் பற்றிய உங்கள் நம்பிக்கை தெறித்த,வலி சுமந்த,அவலமான-சென்ற மே'மாதத்தில்- பதிவுகள் பலவும் நினைவில் நிற்பவை.

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
வினவுக்கு அளித்த பதில் போல உங்களது பல நோக்குகள் குறித்த விமானப்பார்வையாகவோ அல்லது மீள்பார்வையாகவோ இவ்வாரப் பதிவுகள் அமையும் என்று எதிர்பார்க்கிறேன்..

நன்றி..

||தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy).
||
இந்த வரிகள் புன்னகைக்கவும் ஆமோதிக்கவும் வைத்தன!

1:53 AM, May 12, 2010