தமிழ்மணம் நட்சத்திரம், எழுத்து அரசியல், ஈழ‌ம்

தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு மாதமும் வலைப்பதிவில் நுழைந்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகி விட்டது. இன்றைக்குச் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. எழுதப்படும் அனைத்தையும் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதெல்லாம் சிறந்த படைப்புகளாக இருப்பதும் இல்லை. தினந்தோறும் எழுதப்படும் எண்ணற்றக் கட்டுரைகளில் எத்தனையோ நல்லப் படைப்புகள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஒளிந்து கொள்கின்றன.

வலைப்பதிவுகள் குழு மனப்பான்மை உடையது. நம்முடையப் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு குழுவுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களை ஏதேனும் குழுவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்கள் வேகமாக பிரபலமாகிறார்கள். திரட்டிகளின் ஓட்டுகளை பெறுவதற்கும் அது ஒரு முக்கிய தேவையாகவும் இருக்கிறது. நான் முதலில் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வலைப்பதிவுகள் இருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் குழு மனப்பான்மையை உணர்ந்து இருக்கிறேன். சில மாதங்கள் வலைப்பதிவுகளை வாசித்தப் பிறகு நாமும் எழுத வேண்டும் என யோசித்த பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக் குறித்த‌ வ‌லைப்ப‌திவை தொட‌ங்கினேன். அப்பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக்கு என்று ஒரு த‌னி வ‌லைப்ப‌திவை த‌மிழில் யாரும் வைத்திருக்க‌வில்லை. நான் ப‌ங்குச்ச‌ந்தை குறித்து எழுத‌த்தொட‌ங்கிய‌த‌ற்கு அதுவும் ஒரு கார‌ண‌ம். அது தான் எந்தக் குழுவிலும் சேராமல் என்னை ஒர‌ள‌வுக்கு அடைய‌ள‌ப்ப‌டுத்திய‌து. அத‌னை தொட‌ர்ந்து என்னுடைய‌ காஷ்மீர் குறித்த‌க் க‌ட்டுரைக‌ளும், ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் ந‌ல்ல‌ அறிமுக‌த்தைக் கொடுத்த‌ன.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு தரம் கூட வில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரளவுக்கு உண்மை தான். என்றாலும் இன்று இருக்கின்ற வெகுஜனப் பத்திரிக்கைகளை விட தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒரு பிரச்சனைக் குறித்த பல்வேறு கோணங்களை வலைப்பதிவுகள் நமக்கு வழங்குகின்றன. தமிழ் எழுத்து உலகில் ஒரு சில எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில் இது மிகப் பெரிய கருத்தாக்க வெளியை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்று நோக்கினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைப்பட விமர்சனம் போன்றவற்றில் ஒரு திரைப்படம் குறித்து பலக் கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் முக்கிய சமூகப் பிரச்சனைகளில் பல வேறுபட்ட கோணங்கள் கிடைப்பதில்லை. சினிமாவை மாறுபட்டு உள்வாங்கும் நமது சமூகம், சமூக வாழ்வியல் பிரச்சனைகளை ”பெரும்பாலும்” ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்க்கிறதோ என்ற கருத்து எனக்குள்ளது.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியும், இணையத்தின் வளர்ச்சியும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்றைக்குப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு உடனுக்குடன் வாசகர்கள் கிடைக்கிறார்கள். அவ்வாறு கிடைப்பதால் அவர்கள் எழுதும் எழுத்துக்கு "ரசிகர்களும்" பெருகி இணைய வாசகர் உலகம் பல ரசிக குழுக்களால் சினிமா ரசிகர் மன்றங்கள் போன்ற குழும மன்றங்களாக மாறி விட்டது. சாருவுக்கு ஒரு கோஷ்டி, ஜெயமோகனுக்கு ஒரு கோஷ்டி என சினிமா ரசிகர் மன்றங்களை ஒத்த ரசிகர் குழுக்கள் இங்கே உருவாகி விட்டது.

இந்தக் குழுக்களை தொடர்ச்சியாக கட்டமைக்க எழுத்தாளர்கள் முனைகின்றனர். இந்தக் குழுக்க‌ளை த‌க்க‌வைக்க‌ இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்பொழுது தங்களுக்குள் சண்டைகளை உருவாக்கி, ந‌ல்ல‌ சுவார‌சிய‌மான‌ மோத‌லை அவ்வ‌ப்பொழுது வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கிறார்க‌ள். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமும் கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் எழுத்தும் கார்ப்பரேட் யுகத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் ரசிகர் மன்றங்களாகவும் பிறகு வாடிக்கையாளர்களாகவும் மாறும் பரிணாம வளர்ச்சியில் தான் சாமியார்களுக்கு விளம்பர சேவைகளையும் இந்த எழுத்தாளர்கள் புரிந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ச்சியான குப்பைகளை தங்கள் வலைத்தளத்தில் ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும்.

இவர்கள் எழுதுவது பெரும்பாலும் சுவாரசியமான குப்பைகள் தான் என்றாலும் சாரு கொட்டும் குப்பைகளை கூட‌ கலகம் என புளகாங்கிதம் அடைய‌ ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியக் காலத்திலும், போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தக் காலத்திலும் ஈழத்தைப் பற்றி எழுதவே சாரு தொடை நடுங்குவார். மே2009க்குப் பிறகு பிரபாகரன் சேவ் செய்து சரண‌டைந்து விட்டார் எனப் பல மாதங்களுக்குப் பிறகு யோசித்து எந்தப் பிரச்சனையும் தனக்கு ஏற்படாது என உறுதிப் படுத்திக் கொண்டு எழுதினார் சாரு. உடனே அவர் ரசிக சிகாமணிகள் எல்லாம் சாருவுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள், பெரிய கலகத்தையே புரிந்து விட்டார் என புல்லரித்து மகிழ்ந்தனர்.

இந்த எழுத்துலகக் கலகப் புல்லரிப்பின் மிகை உணர்ச்சியைப் பார்த்தால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை விட அசத்தலான நகைச்சுவையாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ”நொஞ்சான்” தமிழ்மணத்தை நாலு சாத்து சாத்தினால் பெரும் கலகத்தை ஏற்படுத்தியவர் என்ற பட்டம் கிடைக்கும். யோனி என்ற வார்த்தையை எழுதினாலே கலகம். காமக்கதை என்ற தலைப்பு வைத்தாலே பெரும் கலகம். இதுவெல்லாம் கொஞ்சம் ”ஓவர்” என்று இந்த கலக எழுத்தாளர்களுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் தெரியாதது தான் அதை விட நகைச்சுவையானது.

ஜி.நாகராஜன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே போன்ற நாவல்கள் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலியல் தொழிலாளர்களும், தன் மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவனும் இவர் நாவலின் கதாநயகர்கள். தான் கலகம் புரிவதாக இவர் சொல்லிக் கொண்டதில்லை. அதன் பிறகு எத்தனையோ பேர் தமிழில் பாலியல் கலகத்தைப் புரிந்து விட்டனர். பாலியல் வெகுஜன ஊடகங்களிலும் பரவலாக பலரால் அலசப்பட்டது. பல வெகுஜன பத்திரிக்கைகள் மிக விலாவாரியாக கட்டுரைகள் எழுதி பாலியல் மூடு மந்திரங்களை அவிழ்த்தன. விஜய் டிவியில் வந்த புதிரா, புனிதமா அந்தக் காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண் பாலியல் கேள்வி கேட்பதா எனக் கூக்குரல் எழுந்தது. இன்றைய நவீன இணையக் காலத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பாலியல் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறான நிலையில் காமக்கதை என்று எழுதுவதே கலகம் என்று எண்ணும் காமெடி எல்லாம் தமிழ் வலைப்பதிவுலகில் மட்டுமே நிகழ்க்கூடியது. இதனால் என்ன பயன் என்றால் தமிழ்மணம் வலைப்பதிவுக்கு வரும் தேடலில் பெரும்பாலும் காமக்கதையை தேடிய கூகுள் தேடல்கள் தான் அதிகமாக வருகின்றன. இனி என்னுடைய இந்தக் கட்டுரைக்கும் அதிக தேடல் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் இது ஒரு தேடல் கலகம் தான்.

இன்னொரு நகைச்சுவையை உதாரணமாக கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வலைப்பதிவில் நடந்த லீனா மணிமேகலைச் சார்ந்த விடயத்தை கூறலாம். லீனா ஒரு கவிதையை எழுத அதனை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. கலகம், கட்டுடைப்பு என்று கூறும் லீனா மணிமேகலை போன்றவர்கள் விமர்சனம் என்று வரும் பொழுது மட்டும் பெண் என்ற கேடயத்தை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களும், விமர்சனம் செய்பவர்களை ஆணாதிக்கம் மிக்கவர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். இது ஒரு அலுப்பூட்டும் வாதம். பெண்ணியவாதிகளை விமர்சிக்கவே பல நேரங்களில் தயக்கமாக உள்ள காரணங்களில் இந்த ஆணாதிக்க முத்திரையும் ஒரு முக்கியக் காரணம். இங்கே விமர்சனம் செய்த வினவுக்கு ஆணாதிக்கவாதி என்ற பட்டமே கிடைத்தது. லீனா மணிமேகலைக்கு எதிராக‌ ஒரு விமர்சனக் கட்டுரை முன்வைக்கப்பட்டவுடன் தமிழ் அறிவுஜீவிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்தனர். ஈழப் போராட்டம் நடந்தக் காலத்தில் ஒரு கூட்டம் கூட நடத்த துப்பில்லாத தமிழ் நாட்டின் அறிவுஜீவிகள் எல்லாம் கொதித்து எழுந்து இல்லாத எதிர்ப்புக்கு கண்டன கூட்டம் நடத்த தொடங்கி விட்டனர். லீனா மணிமேகலை எழுதுவதை யார் தடை செய்தார்கள்? லீனா மணிமேகலைக்கு அப்படி என்ன தான் எதிர்ப்பு எழுந்தது ? அவர் எழுதியக் கவிதைக்கு ஒரு விமர்சனக் கட்டுரை. அவ்வளவு தான். இல்லாத எதிர்ப்புக்கு ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் போலி அறிவுஜீவிகளுக்கு அ.மார்க்சின் தலைமை ஆச்சரியப்படுத்த வில்லை. இதில் இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் லீனா மணிமேகலையின் கவிதை, தமிழ்க் கவிதையை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறதாம். இது வேறையா...அடங் கொய்யால...நல்ல வேளையாக இதைப் பார்க்க அடுத்த நூற்றாண்டில் நான் இருக்கப் போவதில்லை.

இப்படி நாம் கூறினால் உடனே யோனி என்ற புரட்சி வார்த்தைக்கு நாம் எதிரானவர்கள், கலாச்சாரக் காவலர்கள், ஆணாதிக்கவாதிகள் என பட்டம் கிடைக்கும். ஆனால் கோணேஸ்வரிகள்...என்ற இந்தக் கவிதை தரும் உணர்வுகளையும், கருத்தின் ஆழத்தையும் லீனா மணிமேகலை போன்ற கவிஞர்களின் புரட்சிக்(?) கவிதைகள் நமக்குத் தருவதில்லை.

***************************

2005ல் முதலில் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். இன்றைக்குத் திரும்பி பார்த்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்னுடைய எழுத்து பெரும்பாலும் அரசியல் சார்ந்தாகவே இருந்து வந்திருப்பதால் நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு. அதே நேரத்தில் தற்போதைய சமுதாய முறையையும், அநீதியான சூழலையும், அராஜகமான அதிகாரமையப் போக்கினையும், தற்போதைய உலக ஒழுங்கினையும் எப்பொழுதும் நிராகரித்து வந்திருக்கிறேன் என்ற வகையில் ஒரு வகையான திருப்தியும் எனக்குள்ளது.

***************************

மே 2010, தமிழினப் பேரவலத்தின் ஒரு வருடத்தை குறிக்கும் நினைவு மாதம். புலிகளின் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 மாதங்கள் முடிந்து விட்டன. சுமார் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைவாய்க்கால் கடற்க்கரை மணலில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் விட்டனர். ஒரு மனிதப் பேரவலத்தை உலகமே கண்டுகொள்ளாத உலக ஒழுங்கிலும், சக தமிழர்கள் கூட முழுமையாக இந்த அவலத்தை உள்வாங்காத சூழ்நிலையிலும் வாழ நேர்ந்ததன் துக்கத்தை மறுபடியும் நினைவு கூறும் மாதமாக மே 2010 மாறியுள்ளது.

இந்த ஒரு வருடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மீள் அமைக்கவே அராஜகச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கான அரசியல் என்பது இன்றைக்கு ஏதும் இல்லை என்பதான சூழ்நிலையே உள்ளது. இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மட்டுமல்ல அவர்களின் அரசியல் பாதையை செப்பனிட வேண்டிய தமிழ் அரசியல் சூழலும் அந்த அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுஜீவி சூழலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் புலிகளே காரணம் என முடிவு செய்து விட்ட தமிழ் அறிவுஜீவி உலகம் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்து கொண்டிருந்ததிலேயே கடந்த 12 மாதங்கள் கழிந்து போய் விட்டன. சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கியே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கேட்க வேண்டி உள்ளதாக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் எல்லாம் இன்று தமிழ் திரையுலகில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பள்ளிக் காலத்தில் என்னை அதிகம் பாதித்தவர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தியாகு போன்றோர்களே. ஆனால் இன்றைக்கு சுப.வீரபாண்டியனை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.

கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது. தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy).

***************************

அடுத்த ஒரு வாரத்திற்கு இத்தகைய பல்வேறு விடயங்களை தொட்டுச் செல்வதான எண்ணத்தில் இருக்கிறேன். விரிவாக எழுத முடியா விட்டாலும் தொட்டுச் செல்ல முடியும் என நம்புகிறேன்.

தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நண்பர் சங்கரபாண்டிக்கு என்னுடைய‌ நன்றி...