Monday, May 10, 2010

செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்

மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாக‌க் கூட‌ பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள், ஒவ்வொரு மொழியை பேசுபவர்களின் சூழலுக்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் தனித்தனி பண்பாட்டுக் கூறுகளாகவும் வெளிப்படுகிறது. இப்படி மொழியைச் சார்ந்த ஒரு பண்பாடும், தனித்த அடையாளங்களும் எழும் பொழுது அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தேசிய இனங்களாக அந்தப் பண்பாட்டினைச் சார்ந்த மக்களை முன்னிறுத்துகிறோம். எனவே மொழி வெறும் கருவியாக மட்டுமே இல்லாமல் அதன் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து இருப்பதால் மொழியையும், அம் மொழி பேசும் மக்களையும் எவ்வளவு எளிதில் பிரித்து விட முடிவதில்லை. தங்கள் மொழிக்குப் பிரச்சனை நேரும் பொழுது அம் மொழி பேசும் மக்கள் வெகுண்டு எழுந்து தங்கள் மொழியைக் காக்க முனைகின்றனர். தமிழ் மொழி பேசுபவர்களிடம் ஹிந்தி திணிக்கப்படும் பொழுது அம் மொழியைப் பேசும் தமிழர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். சிங்களம் மட்டும் தேசிய மொழியாக்கப்பட்ட பொழுது இலங்கையில் தமிழர்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே ம‌த‌த்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக‌ இருந்த‌தால் கிழக்கு பாக்கிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷாக மாறியது.

மொழியும், மொழிச் சார்ந்த வளர்ச்சியும் எப்பொழுதுமே சாமானிய மக்களை உள்ளடக்கி இருந்தால் சிறப்பானது. ஆனால் அவ்வாறு தமிழ் மொழி என்றைக்கும் இருந்ததில்லை. தமிழ் மொழியின் இலக்கியங்கள் மக்களின் இலக்கியங்களாக இல்லாமல் மேட்டுக்குடியினரின் இலக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் மண்ணின் மணம் இல்லை. மண்வாசனை இல்லை. தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை ஏன் பெரும்பான்மையான தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதுமே உண்டு. தற்கால இலக்கியங்களே குறிப்பாக தலித் இலக்கியம் போன்றவையே மக்களை முன்னிறுத்துகின்றன‌.

ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், கூத்து சாமானிய மக்களின் கலை. ஆனால் கூத்துப் பாடல்கள் என்றைக்கும் இலக்கியமாக தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். ஆனால் அவை வெறும் கூத்துகளாக கட்டமைக்கப்பட்டு விட்டன. இப்படி சாமானிய மக்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் தமிழறிஞர்களும், தமிழ்ப்புலவர்களும் புறக்கணித்தே வந்துள்ளார்கள். இப்படியான இந்த மொழி அரசியல் தொடர்ச்சியாக காலங்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் வேறுபடுத்துவது என்பது ஒரு நுண்ணிய அரசியலாகும். நான் பேசும் மொழி என்றளவில் தான் தமிழ் மொழி மீது எனக்கு காதலே தவிர வெறும் மொழி என்றளவில் இல்லை. இங்கே முன்னிறுத்தப்படுவது நான் என்ற என்னையும், நாம் என்ற மொழி பேசும் மக்களையும் தான். மொழிக்குச் சிறப்பு என்பது மொழியைச் சார்ந்தது மட்டும் அல்ல. மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியே தான் இருக்க முடியும். ஆனால் தமிழறிஞர்கள் என்றைக்கும் அவ்வாறு இல்லாமல் போனதன் அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மொழியை முன்னிறுத்துகிறோம் என்று கூறி இவர்கள் முன்னிறுத்தியது தங்களின் அரசியலை தான். அதாவது தனி மனிதர்களான தங்களையே இவர்கள் முன்னிறுத்தி இருக்கிறார்கள்.

சரி..இதையெல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? ஏனெனில் இன்றைக்கும் இத்தகைய ஒரு நுண்ணிய அரசியலே தமிழ்ச் சூழலில் வெளிப்பட்டு வருகிறது. மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து மொழிக்கு நன்மை என்று கூறும் ஒரு நுண்ணிய அரசியலை தமிழறிஞர் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நுண்ணரசியல் இடம் பெறும் இடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் அடுத்த மாதம் (சூன் மாதம்) நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழறிஞர்கள் எல்லாம், ஒவ்வொருவராக மாநாட்டில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஐக்கியமாகி விட்டனர். இவர்கள் எல்லோரும் கூறும் காரணத்தை ஒரு வார்த்தையில் தொகுக்க முடியும் - அது இந்த மாநாட்டால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இது ஒரு மேல் பூச்சான காரணமே தவிர, உண்மையான காரணம் - இந்த மாநாட்டில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், இந்த மாநாட்டினை புறக்கணிப்பதால் தமிழக அரசை பகைத்துக் கொள்ள வேண்டுமோ என்ற அச்சம், இவ்வளவு பெரிய மாநாட்டினை நம்முடைய புறக்கணிப்பு என்ன செய்து விடும் எனவே கலந்து கொள்வோம் என்ற சால்ஜாப்பு போன்றவையே.

இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி தமிழின் அனைத்துத் துறைகளும், அமைப்புகளும் இன்று இந்த மாநாட்டில் இடம் பிடித்து விட்டன. தமிழ் வலைப்பதிவுகள், தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் இந்த மாநாட்டில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தங்களை இணைத்துக் கொள்கின்றன. ஒரு உதாரணத்திற்கு தமிழ் விக்கிப்பீடியா இந்த மாநாடு மூலம் வீக்கிப்பீடியாவிற்கு ஆயிரக்கணக்கிலான கட்டுரைகள் கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்து செம்மொழி மாநாட்டில் தன்னை இணைத்துக் கொள்கிறது. பல தமிழ் ஆர்வலர்களை உள்ளடக்கிய தமிழ் விக்கிப்பீடியா குழுவே இவ்வாறு என்றால் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ்க் கணினி அமைப்பான உத்தமம் (INFITT), தமிழ்ச்சங்கங்கள் போன்றவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. அரசு அறிவித்த அடுத்த நிமிடமே இந்த அமைப்புகள் செம்மொழி மாநாட்டுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டன. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்மணம் பங்கேற்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்த பொழுது, எந்தக் காரணம் கொண்டும் இத்தகைய மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இதனால் தமிழ்மணத்திற்குச் சில இழப்புகள் நேரலாம். ஆனால் தமிழுக்கு நன்மை என்று கூறி செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் அரசியலை என்னால் புறந்தள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. You can put lipstick on a Pig. But it is still a pig. தமிழுக்கு நன்மை என்ற உதட்டுச் சாயத்தை அணிந்து வரும் செம்மொழி மாநாட்டின் துரோக அரசியலை நம்மால் புறந்தள்ள முடியாது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து செய்யும் அரசியல் வஞ்சகமானது. இன்று மொழியை கொண்டாடும் சூழல் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. இன்னும் சுமார் ஒரு லட்சம் மக்கள் தடுப்பு முகம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் ஒரு அசாதாரணமான சூழ்நிலையையே எதிர் கொண்டுள்ளது. கடந்த காலங்களின் ரணங்களை கடந்து அவர்கள் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன ? அவர்கள் பேசும் மொழி. தமிழ் மொழி தான் இன்றைக்குப் பல்லாயிரம் மக்கள் பலியிடப்படுவதன் காரணமாக அமைந்து விட்டது. தமிழர்களாக அவர்கள் இருந்ததால் தான் முல்லைவாய்க்கால் கடற்கரைகளில் ஆர்ட்டலரிகளுக்கு பலியாகினர். அப்படியான சூழலில் மொழியைக் கொண்டாடி, மாநாடு எடுத்து சிறப்பிப்பது ஈழ மக்களின் துயரங்களை புறந்தள்ளும் செயலே ஆகும்.

அது மட்டுமில்லாமல் இன்றைக்கு செம்மொழி நடத்தப்படுவது தமிழ் மொழிக்காக அல்ல. இந்த மாநாடே கருணாநிதியின் தமிழினத்தலைவர் பட்டத்தை மீள்கட்டமைக்கவே கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் திமுக ஈழத்தமிழர் பிரச்சனையின் பொழுது தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள முனைந்ததே தவிர தார்மீக அடிப்படையில் தமிழர் நன்மையை கருத்தில் கொள்ள வில்லை. ஈழத்தில் நடந்தப் போரை கருணாநிதியால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது அல்ல நம்முடைய நிலைப்பாடு. ஆனால் அந்தப் போர் நடைபெற்ற சூழலில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையே தமிழர்கள் எதிர்நோக்கி இருந்தனர். காரணம் கருணாநிதி தமிழினத்தலைவராக பார்க்கப்பட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழர்கள் தனித்து விடப்பட்டனர். தனித்து விடப்பட்ட தமிழர்கள் தங்களுக்குள்ளாவது ஒற்றுமையாக குரல் கொடுத்து இருந்தால் 25000க்கும் மேற்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை ஓரளவுக்காவது தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியே ஆவார். தன்னுடைய திமுக அரசாங்கம் தமிழகத்தில் காங்கிரசை நம்பி இருப்பதால் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்தி தமிழின அரசியலை நீர்த்துப் போகச் செய்தார். தமிழக மக்கள் அவரது நாடகங்களை உணர்ந்த பொழுது சகோதரச் சண்டை என்று புதிய ஆயுதத்தை எடுத்தார். தமிழின அரசியல் பேசியவர்களை சிறையில் தள்ளவும் அவர் தயங்கவில்லை. எல்லாம் முடிந்து குறைந்தபட்சம் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்க கூட எவ்வித‌ முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. தடுப்பு முகாம்களுக்கு சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையையே திமுக நாடாளுமன்றக் குழு எடுத்தது.

இவ்வாறு தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள தமிழின விரோத அரசியல் செய்த கருணாநிதியின் செல்வாக்கு உலகத்தமிழர்கள் மத்தியில் சரிந்தது. தமிழினத்தின் தலைவராகப் பார்க்கப்பட்ட கருணாநிதி, உலகத்தமிழர்களாலும் ஈழ ஆதரவாளர்களாலும் வெறுக்கப்பட்டார். இழந்த தன்னுடைய நிலையை உலகத்தமிழர்களிடம் பெற வேண்டிய நிலையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியின் செல்வாக்கினை புதுப்பிக்க உதயமானது தான் செம்மொழி மாநாடு. அதுவும் இந்தச் செம்மொழி மாநாடு உருவாக்கப்பட்டச் சூழலையும் நாம் கவனிக்க வேண்டும்.

உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தும் பொறுப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே உள்ளது. முதலில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை அணுகிய கருணாநிதிக்கு பரவலான எதிர்ப்பே எழுந்தது. ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழியில் மேதையுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா மாநாடு நடத்த போதிய அவகாசம் இல்லை என்று கூறி மாநாட்டை உடனே நடத்த மறுத்தார். அவர் மாநாட்டினை நிராகரிக்க வில்லை. ஆனால் கூடுதலான அவகாசத்தையே கேட்டார். ஆனால் கருணாநிதிக்கு உடனடியாக மாநாடு நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். சில மாதங்களில் செம்மொழி மாநாட்டினை நடத்தியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழுக்கு நேர்ந்தது அசாதாரணமானது தான்.

சில மாதங்களில் ஒரு மாநாட்டினை நடத்த வேண்டும் என்றால், ஒரு புதிய தமிழ் அமைப்பினை உருவாக்க வேண்டும். அதைத் தான் கருணாநிதி செய்தார். உலக செம்மொழி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி அந்த நிறுவனம் மூலமாக மாநாடு நடத்த முனைகிறார் கருணாநிதி. எப்பாடு பட்டாவது இழந்த தன்னுடைய பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது நிலை. செம்மொழி மாநாட்டை நடத்தும் சூழ்நிலையிலும் கருணாநிதியின் தமிழின எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வரவில்லை. செங்கற்பட்டில் இருந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது போலீஸ் அராஜகம் ஏவப்பட்டது. சென்னைக்கு வந்த 80 வயது மூதாட்டியான பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டார். பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு இந்திய அரசு மட்டுமே காரணம் என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா அனுப்பிய அறிக்கையை தனக்குச் சாதகமாக கருணாநிதி இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மையாக இருக்க முடியும். செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் வைகோவின் பராமரிப்பில் இருப்பதை கருணாநிதியால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? விமான நிலையம் வரைக்கும் வந்த பார்வதியம்மாள் கருணாநிதிக்கு தெரியாமல் திருப்பி அனுப்பபட்டிருப்பார் என்பதை திமுக உடன்பிறப்புகள் வேண்டுமானால் நம்பலாம். அதிகாலையிலேயே விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசார் கூட கருணாநிதிக்கு தெரியாமலேயே குவிந்து விட்டார்கள் போலும். தமிழக காவல்துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மன்மோகன் சிங் கட்டுப்பாட்டிலா உள்ளது ?

இப்பொழுது தமிழக அரசின் பாதுகாப்பில், தமிழக அரசின் செலவில், தமிழக அரசு சொல்லும் மருத்துவமனையில் பார்வதியம்மாள் சிகிச்சை பெற ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற இருக்கிறார். அதாவது கருணாநிதியின் கருணையால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இருக்கிறார். தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் அனாதைகளாக சுற்றித் திரியும் வயதான தமிழர்களுக்கும் இன்னமும் நாதி இல்லாத சூழ்நிலையில் ஒரு பார்வதியம்மாளுக்காவது இப்படி ஏதேனும் ஒரு வழியில் சிகிச்சை கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியே.

இப்படி தொடர்ச்சியான தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் விளக்க தேவையில்லை. தமிழறிஞர்கள் என்பவர்கள் தங்களின் சுயநலத்தை அடிப்படையாக கொண்டே இம் மாநாட்டினை ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

**************

அதே நேரத்தில் நான் யாரையும் செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை. எண்ணற்றப் புறக்கணிப்பு முழக்கங்களையும், எண்ணற்ற மனுக்களையும், தொலைபேசி அழைப்புகளையும், மின்னஞ்சல்களையும் அனுப்பி அலுத்தும் போய் விட்டது. நான் இங்கு முன்வைப்பது இவர்களின் அரசியலையே ஆகும். தமிழர்களின் அரசியல் அலங்கோலமே இன்றைய தமிழர்களின் வாழ்வியல் அலங்கோலத்திற்கும் முக்கியக் காரணம். எனவே இங்கே நான் பேசிக் கொண்டிருப்பது, செம்மொழி மாநாட்டின் அரசியலையும், தமிழறிஞர்களின் நுண்ணரசியலையுமே ஆகும்.

தவிரவும் இன்று தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? ஈழத்தில் இராணுவத் தடுப்பு முகாம்களில் இருப்பவர்களா? தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் தங்களின் மொத்த குடும்பத்தையும் போரில் இழந்து யாரும் இல்லாத அனாதைகளாக நடைபிணமாக திரிபவர்களா? தங்களுடைய தந்தையையும், தாயையும் இழந்து யாருமற்ற அனாதைகளாக இருக்கும் குழந்தைகளா? போராளிகளாக இருந்து சிறைப் பிடிக்கப்பட்டு தங்களின் இந்த வாழ் நாளில் சிறைக்கூடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் இளைஞர்களா? யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், கொழும்பிலும் இந்தப் பிரச்சனைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த‌ தமிழ் பேசும் மக்களா? வெளிநாடுகளில் கூக்குரலிட்டு விட்டு இன்று அமைதியாக இருக்கின்ற வெளிநாட்டு தமிழர்களா ? ஈழம் ஒரு பொருட்டல்ல, பணமே பிரதானம் என நிருபித்த தமிழக மக்களா? எதையும் செய்ய இயலாமல் உலகமயமாக்கத்தின் சுகத்தையும் இழக்க முடியால் இயலாமையுடன் திரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களா? யார் தமிழர்கள்? எந்தத் தமிழர்களை நோக்கி நான் தமிழர்களே செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் எனக் கூற முடியும் ? அதனால் நான் யரையும் செம்மொழி மாநாட்டைப் புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை.

********

செம்மொழி மாநாடு மிகப் பெரிய விழாவாக, பல நூறு கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதை நடந்து வரும் ஏற்பாடுகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. கோவையில் புதிய சாலைகளும், அழகான பூங்காக்களும் இந்த மாநாட்டினையொட்டி அமைக்கப்படுகின்றன‌. அரசின் இலவச பேருந்துகள் பல லட்சக்கணக்கான மக்களை கோவைக்கு கொண்டு வந்து குவிக்கும். அது தவிர உலகெங்கிலும் இருந்து கோவை வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விமானப் பயணம், தங்குமிடம் என அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் இருந்தும், கனடாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் இலவச பயணமாக கோவை செல்கிறார்கள். இவ்வாறு பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி குவிக்கப்படும் தமிழர்களை கொண்டு தான் மட்டுமே தமிழினத் தலைவர் என கோவையில் கருணாநிதி சூளுரைக்க இருக்கிறார்.

அதற்காக கோவை செல்லவிருக்கும் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், உடன்பிறப்புகள், கதர் வேட்டிகள் அனைவருக்கும் என்னுடைய bon voyage wishes.

Dudes, Have a nice, memorable and historic trip to Coimbatore. May your name gets mentioned in the history.

bye for now...

42 மறுமொழிகள்:

வந்தியத்தேவன் said...

செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் தான் பாடுவார்கள். வாலி வைரமுத்து கமல் ரஜனி என ஜால்ராக்கள் நிறைய உண்டு. யார் கண்டது சிறப்பு மானாட மயிலாட கூட நடக்கலாம்.

5:04 PM, May 10, 2010
இராதாகிருஷ்ணன் said...

இதிலிருக்கும் இன்னொரு நிஜ அரசியலையும் சொல்கிறார்கள். அதாகப்பட்டது, கொங்கு மண்டலத்தில் சரிந்து கிடக்கும் செல்வாக்கை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக பணத்தை அள்ளி வீசி நேர்படுத்தப் பார்ப்பதாம். இந்த சாக்கிலாவது நலத்திட்டங்கள் கிடைக்கிறதே என்று மகிழும் கூட்டங்களும் இருக்கின்றன. கேவலங்கள் மலிந்துவிட்ட சமுதாயத்தில் எல்லாம் ஒருவித அலுப்பையே தருகின்றன.

5:14 PM, May 10, 2010
-/பெயரிலி. said...

இதற்காக கோவை செல்லவிருக்கும் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், உடன்பிறப்புகள், கதர் வேட்டிகள் அனைவருக்கும் என்னுடைய bon voyage wishes./

செந்தமிழ்க்கணிகைகள், பொங்குதமிழ்க்கால்பிடிகள்,மங்குசனிவாலாட்டிகள்,அங்காடித்தமிழ்வணிகர்கள், அறிவியற்றமிழ்நாசாகாரர்களை விட்டுவிட்டீர்களே! விளம்பரம் கிட்டவேண்டு இத்தகாத்தமிழர்களைத் தவிர்த்து இருட்டடிப்பது உங்களைப் போன்றவர்களுக்கு அழகல்ல :-(

6:00 PM, May 10, 2010
கோவி.கண்ணன் said...

வரிக்கு வரி எந்த வரியை மறுக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. கட்டுரை சிறப்பாக இருக்குங்கண்ணா.

8:47 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

வந்தியத்தேவன்,

அரசவைக் கவிஞர் வாலி கவி பாட, கலா மாஸ்டர் இயக்கத்தில் புதிய எம்.எல்.சி குஷ்பு குத்தாட்டம் ஆட, ஏ.ஆர்.ரகுமானின் மேற்கத்திய தாளத்தில் செந்தமிழ் மொழிக்கு செம்மொழி மாநாடு நடக்க இருக்கிறதாம்.

8:49 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

கொங்கு மண்டலத்தில் சரிந்து கிடக்கும் செல்வாக்கை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக பணத்தை அள்ளி வீசி நேர்படுத்தப் பார்ப்பதாம்

*****

அஞ்சா நெஞ்சன் கோவையை ஒரு ரவுண்டு வந்தால் போதும். திமுகவின் சரிந்து கிடக்கும் செல்வாக்கு விண் முட்ட எழுந்து நிற்கும்...

8:51 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

செந்தமிழ்க்கணிகைகள், பொங்குதமிழ்க்கால்பிடிகள்,மங்குசனிவாலாட்டிகள்,அங்காடித்தமிழ்வணிகர்கள், அறிவியற்றமிழ்நாசாகாரர்களை....

...விளம்பரம் கிட்டவேண்டு இத்தகாத்தமிழர்களைத் தவிர்த்து இருட்டடிப்பது...

*******

:))

பெயரிலியின் தமிழ் :)
வார்தைகள் நடனமாடுகின்றன...ரசித்தேன்...

8:56 PM, May 10, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

வரிக்கு வரி எந்த வரியை மறுக்கும் அளவுக்கு எதுவும் இல்லை. கட்டுரை சிறப்பாக இருக்குங்கண்ணா.

******

நன்றி அண்ணாச்சி...

8:59 PM, May 10, 2010
குழலி / Kuzhali said...

//எதையும் செய்ய இயலாமல் உலகமயமாக்கத்தின் சுகத்தையும் இழக்க முடியால் இயலாமையுடன் திரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களா?
//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வேறென்ன செய்ய ஆல் தி பெஸ்ட் ஃபார் செந்தமில் வேர்ல்ட் கான்ஃபிரன்ஸ்

9:32 PM, May 10, 2010
Anonymous said...

கருணாநிதி “தமிழறிஞராக” இருப்பது தமிழின் சாபக்கேடு. அண்ணாதுரை, நெடுஞ்செழியன் மாதிரி முறையாக தமிழ் கற்று பட்டம் வாங்காத காரணத்தால் உண்டான தாழ்வு மனப்பான்மை காரணமாக தானும் தமிழறிஞர் தான் என்று தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்க ஏதாவது சர்க்கஸ் வித்தை செய்துக்கொண்டே இருக்கவேண்டும். காமராஜ், எம்.ஜி.ஆர். போன்ற வெகுஜனத் தலைவர்களுக்கு இத்தகைய போலி அறிஞர் பட்டம் தேவையில்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் காலங்களில் தகுதி வாய்ந்த சான்றோர்களுக்கு உரிய அங்கீகாரமும், சுதந்திரமும் அளித்ததால் தமிழ் மொழியும், இலக்கியமும் செழித்தது. கருணாநிதி “தமிழ்த் தாயின் தலைமகன்” அல்லவா? அவரை மீறி யாரும் பெரிய அறிஞராக இருக்க முடியாது. அவருக்குத் தேவையெல்லாம் தன்னைச் சுற்றி ஒரு காக்கைக் கூட்டம். காக்கைகளுக்கு வடைத்துண்டுகள் விட்டெறிவது போல இந்த தமிழ்க் காக்கைகளுக்கு விருதுகளும், பதவிகளும். இவற்றால் தமிழும் வளரவில்லை. உண்மையான அறிஞர்களுக்கும் அங்கீகாரம் இல்லை.

தமிழுக்கு இவர் செய்ததெல்லாம் வெறும் நினைவுச் சின்னங்களும், படோபட விழாக்களும், மொழியை வைத்து அரசியலும், வியாபாரமும் தான். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அண்ணா காலத்தில் துவக்கப்பட்டது. தமிழ்ப்பல்கலைக் கழகம் எம்.ஜி.ஆர். உருவாக்கியது. கருணாநிதி செய்தது என்னவென்றால் வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை, வள்ளுவர் சிலை. சிலைவைப்பதும், சினிமா வசனம் எழுதுவதும் தான் அவருடைய உடன்பிறப்புகளைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தொண்டு. ஆகவே அவர் தமிழ்த் தாயின் தலைமகன், முத்தமிழ் வித்தகர், வாழும் வள்ளுவர், இது மாதிரி இன்னும் என்னென்னவோ.

செம்மொழி ஆராய்ச்சி மாநாடு என்றால் அதை நடத்தும் பொறுப்பு முழுவதையும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திடம் அல்லது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களிடம் கொடுத்திருக்க வேண்டும். கருணாநிதி குடும்பமும், திமுக கட்சிக்காரர்களும், சினிமா நடிகர்களும் நடத்துவதற்கு இது குடும்ப விழாவோ, கட்சி மாநாடோ அல்லது கோடம்பாக்கத்து கேளிக்கையோ அல்ல.

செம்மொழி அரசியல் செய்துகொண்டு தமிழர்கள் போடும் கூச்சலில் எல்லோரும் விழித்துக்கொண்டார்கள். எல்லோரும் தங்கள் மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டுப் பெற்றுக்கொள்கிறார்கள். கன்னடம், தெலுங்கு தொடர்ந்து இப்போது மலையாளத்துக்கும் செம்மொழி அந்தஸ்து வேண்டுமென்று கிளம்பியிருக்கிறார்கள். செம்மொழி என்பதன் இலக்கணமே மாறி செம்மொழி என்பதே இப்போது கேலிக்கூத்தாகிவிட்டது.

9:34 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

கருணாநிதியிடம் சுயநலத்துக்காக தன்மானத்தை அடகு வைத்துள்ள ஒரு சில தமிழறிஞர்களே இம்மானாட்டை ஆதரிக்கின்றனர். பெரும்பாலானோர் எதிர்க்கவே செய்கின்றனர். எடுத்துக் காட்டாக, தொ. பரமசிவம் என்ன சொல்கிறார் என்று படியுங்கள் (தொ. ப. அய்யாவைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே செல்லவும்:

http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_09.html

http://avetrivel.blogspot.com)

தொ.பரமசிவம் அவர்கள் கருணாநிதியைப் பற்றியும், செம்மொழி மாநாட்டைப் பற்றியும் சண்டே ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில் சொல்லிய கருத்துகளை இங்கு கீழே தருகிறேன்.


"ஈழப்படுகொலையின் போது தூக்க மாத்திரை போட்டுத்தான் தூங்கினேன்"
தமிழக மக்களாலும், திராவிடக் கட்சிகளாலும் ஒரு நல்ல தலையீடைச் செய்து ஈழத்தமிழர் இனப் படுகொலையை நிறுத்த இயலவில்லையே? மார்க்சீய இயக்கங்களும் இதில் சரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவில்லையே?

உலகத்திலேயே கொடுமையான தண்டனை ஏமாற்றம்தான். ஒரு ஐம்பது ஆண்டுகால உழைப்பை கலைஞர் பாழாக்கிவிட்டார். ஒரு தமிழ்விரோத கட்சி மத்தியில் இருக்க இங்கேயுள்ள மாநில ஆட்சி தனது அதிகாரத்தை இழக்க விரும்பவில்லை. அதனால் தலைகுனிந்து, தாழ் பணிந்தது. மார்க்சியர்களைப் பொறுத்தவரை 1925லிருந்தே ஏமாற்றி வருகிறார்கள். குறிப்பாக இந்தியா பல்வேறு மேடுபள்ளங்களை உடைய நாடு என்ப்தை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை. சாதி, மதம், இனம், கலாச்சார வெளிப்பாடு உடைய நாடு என்பது அவர்களது புரிதலில் இல்லை. அவர்களுடைய சர்வதேச அரசியலில் மாவோ மட்டுமே மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை நடைமுறைப்படுத்தியவர். ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும் வேறுவேறாகவே நிகழ்ந்தன. அதுபோன்றில்லாமல் ரஷ்யாவின் நிலைப்பாட்டையே எடுத்ததால் மக்களின் மனநிலையோடு இவர்களால் ஒன்றிப் போக இயலவில்லை.
:
:
இலங்கையில் இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற வேளையில் எங்களைப் போன்றவர்கள் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டுதான் துங்கினோம். இரவு ஒன்பதே காலுக்கு பிபிசி தமிழோசை கேட்பேன். அதையெல்லாம் அப்போது நிறுத்தி விட்டேன். எத்தனை நாளைக்குத்தான் சாவைக் கேட்டுக் கொண்டேயிருப்பது. நாளைக்குச் சாகப் போகிறார்கள் மனிதர்கள் என்று தெரிந்தால் எப்படித் தூக்கம் வரும். இந்தப் படுகொலையை நேரடியாக ஆதரித்தவர்கள், மறைமுகமாக ஆதரித்தவர்கள் மீதான ஆத்திரம் எனது உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும்.

தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கெடுக்கிறீர்களா?
இல்லை, ஏனெனில் தூக்கமில்லாமல் கழிந்த இரவுகள் திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றன. அதனாலே கலந்து கொள்ளப் போவதில்லை. கலைஞர் கூப்பிட்டதனால் சிவத்தம்பி போகலாம், நான் போக மாட்டேன்.

நன்றி - சொ.சங்கரபாண்டி

10:08 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு இன்னொரு நற்செய்தி. மாநாட்டில் கலந்து கொள்ளும் பொழுது தங்கள் பெயருக்கு முன்னால் முனைவர் (டாக்டர்) பட்டம் போட்டுக் கொள்ள வேண்டுமானால் அமெரிக்காவில் எங்க ஊருக்குப் பக்கத்தில் செல்வின் குமார் என்ற தமிழர் மலிவு விலைக்கு விற்கிறார். அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு மாநாட்டுக்குச் செல்ல இலவசமாக கருணாநிதி அவர் அப்பன் வீட்டுப் பணத்தைக் கொடுப்பதால் கைக் காசைப் போட்டு இந்த டாக்டர் பட்டத்தை வாங்கிக் கொள்ளலாம். அமெரிக்க டாக்டர் என்று வேறு சொல்லிக் கொள்ளலாம் :-)

ஜுனியர் விகடனிலிருந்து ....

13.05.10 ஹாட் டாபிக்

வெண்டைக்காய்,கத்தரிக்காய் விற்கும் ஸ்டைலில் தமிழகத்தில் இப்போது டாக்டர் பட்டங்கள் விறுவிறுவென விற்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக தென் தமிழகத்தில்தான் இந்த விற்பனை திமிலோகப்படுகிறது. ஒரு லட்ச ரூபாய் யார் தந்தாலும் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அருளப் படுகிறது. பேருக்கு முன்னால் ‘முனைவர்’ என்று போட்டு காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு அவர் கம்பீரமாக நடை பயிலலாம்.

அது மட்டுமல்ல. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இந்த தருணத்தில் ‘உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஓர் அமைப்பு இந்த உல்டா பட்டமளிப்பு வேலைகளைச் செய்து வருவது தான் கொடுமையிலும் கொடுமை.

10:19 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

‘‘நீங்கள் நடத்தும் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி போன்ற ஜிலுஜிலு பகுதிகளில் மட்டுமே நடக்கிறதே? அது ஏன்?’’ என்றோம். ‘‘நாங்கள் அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் டாக்டர் பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். எங்கே? எப்படி நடத்தவேண்டும் என்பது எங்களின் வசதியையும், விருப்பத்தையும் பொருத்தது. அதை உங்களிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை’’ என்று முடித்துக¢கொண்டார் செல்வின்குமார்.

இப்படி போலி டாக்டர் பட்டங்கள் வாரியிறைக்கப்படுவது பற்றி மூத்த கல்வியாளர் ஒருவரிடம் பேசியபோது அவர்,“அமெரிக்காவில் இதுபோன்ற பட்டங்களை வழங்குவதற்காக ஏராளமான போலி பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவர்கள் வழங்கும் டாக்டர் பட்டங்களை மத்திய அரசால் தடைசெய்ய முடியாது.இவர்களது இ-மெயில் முகவரிக்கு டாக்டர் பட்டம் பெறுபவரின் சுய விவரத்தோடு இருநூறு டாலர்கள் பணத்தை அனுப்பினால் போதும்.ஒரு மாதத்திற்குள் டாக்டர் பட்டத்தை அனுப்பிவிடுகிறார்கள்.

இதை வாங்கித் தருவதற்காக தமிழகத்தில் பல ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். திடீர் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். டாக்டர் பட்டத்துக்காக ஐந்து லட்ச ரூபாய் வரை செலவழித்தவர்களும் இருக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கில் இது போன்ற போலி டாக்டர் பட்டங்கள் உலவுகின்றன. இந்தப் பட்டங்களால் மக்களுக்கு எந்தத் தீங்கும் இல்லாததால் யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும், சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்க வேண்டிய டாக்டர் பட்டங்கள் இப்படி வருவோர் போவோருக்கெல்லாம் வாரியிறைக்கப்படுவது கொடுமையான விஷயம்’’ என்ற அவர்,

“வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இப்படி பட்டம் வழங்குவதைக் கட்டுப்படுத்த போதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்’’ என்றார் வேதனையோடு.

இப்படியொரு டாக்டர் பட்டம் வாங்கிய நண்பர் ஒருவரிடம் பேசினோம். “இந்தப் பட்டம் வாங்க எனக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய்தான் செலவாச்சு. ‘கிராமப்புறக் கல்வி’ என்ற தலைப்பில் நான் படித்து டாக்டர் பட்டம் வாங்கியதாக எனக்குச் சான்றிதழ் தந்தபோது நானே மலைத்துப் போய்விட்டேன். ஆரம்பத்தில் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக் கொண்டாலும் மனசாட்சி உறுத்தியதால் இப்போது டாக்டர் என போடுவதில்லை. என் நண்பர்கள் சுமார் 40 பேர் இப்படி டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள்.உங்களுக்கு வேண்டுமென்றால் கூட சொல்லுங்கள்.பணம் தந்து விட்டு ஒருசில மாதங்கள் காத்திருந்தால் கண்டிப்பாக டாக்டர் பட்டம் கிடைக்கும்’’ எனக்கூறி நம்மை அதிர வைத்தார் அவர்.

படங்கள்: மாரிராஜா

10:20 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

இதை சும்மா விட முடியாது. போலி பல்கலைக்கழகம் நடத்தி போலியாக டாக்டர் பட்டம் வழங்கும் செல்வினை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவரிடம் புகார் கொடுக்க இருக்கிறேன். உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடர இருக்கிறேன்’’ என்றார் அவர்.

வக்கீல் சுந்தர் என்பவரின் தலைமையின் கீழ் இயங்கும் மனித உரிமைக் கழகத்தின் சர்வதேசத் தலைவராக செல்வின்குமார் இருப்பதால் நாம் இதுபற்றி சுந்தரிடம் கேட்டோம்.

“எங்களது மனித உரிமைக் கழகத்தின் வெளி உலகத் தொடர்புகளுக்காகத்தான் செல்வினை நியமித்தோம். அது ஒரு நியமனப் பதவிதான்.எப்போது வேண்டுமானாலும் அவரை நீக்கிவிடலாம். செல்வின்குமார் நிறையப் பேருக்கு போலியாக டாக்டர் பட்டம் வழங்குவதாக எங்களுக்கும் நிறைய புகார்கள் வந்திருக்கின்றன. அதுபற்றி விசாரித்து வருகிறோம்.மற்றபடி எங்களது மனித உரிமைக் கழகத்திற்கும் அவரது பல்கலைக் கழகத்திற்கும், அவர் டாக்டர் பட்டம் வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.

இதுபற்றி டாக்டர் செல்வின்குமார் என்ன சொல்கிறார் என்பதை அறிய அவரை போனில் தொடர்பு கொண்டோம்.

“நான் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 14 வருடமாக பேராசிரியராகப் பணிபுரிந்தவன். உலக அளவில் பெரிய, பெரிய கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருப்பவன். ஆனால், நரி ஒன்று தன் வாலால் கடல் ஆழத்தை அளந்து பார்த்தது போல ஒரு வக்கீல் உங்களிடம் எனது யோக்கியதையைப் பற்றிப் பேசியிருக்கிறார். அந்த வக்கீல் எங்கள் பல்கலைக் கழகத்தின் இணையதளத்திற்குச் சென்று பார்த்திருப்பாரா? எங்கள் பணி பற்றி அவருக்குத் தெரியுமா? அந்த வக்கீலுக்கு வாஷிங்டன் என்பதைக் கூட ஒழுங்காக எழுதத் தெரியுமா?’’ என்று ஏக எகத்தாளம் செய்த செல்வின்,

‘‘நாங்கள் யாரிடமும் போய் உங்களுக்கு டாக்டர் பட்டம் தருகிறோம் என்று கேன்வாஸ் செய்வதில்லை. டாக்டர் பட்டம் கேட்டு எங்களிடம் வருகிறவர் களுக்கு மட்டுமே அவர்களது பயோடேட்டாவை ஆராய்ந்தபின் பட்டம் கொடுக்கிறோம்.

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலை வைத்திருக்கும் காளிராஜ் என்பவர் மூலம் ஆறாயிரம் வீடுகளில் அடுப்பு எரிகிறது. அவருக்கு டாக்டர் பட்டம் தருவதில் என்ன தவறு? தவிர, யாருக்குப் பட்டம் தர வேண்டும் யாருக்கு தரக் கூடாது என்பதை எங்கள் பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யும். அதற்கான தகுதிகள் என்ன என்பதைப் பற்றி நான் உங்களிடம் சொல்லத் தேவை யில்லை. எஸ்.வி. சேகர்,பாரதிராஜா போன்றவர்களுக்கும் நாங்கள் பட்டம் கொடுத்திருக்கிறோம். ஒருசிலர் ஒருவேளை சோடை போயிருக்கலாம்’’ என்று குறிப்பிட்டு தகுதி இல்லாத சிலருக்கும் டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதை செல்வின்குமார் ஒப்புக் கொண்டார்.

10:20 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

அப்படி பட்டம் வாங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் இல்லை என்பதுதான் வேதனை. அதிலும் கயத்தாறு யூனியன் துணை சேர்மனாக இருக்கும் மாணிக்கராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது வேதனையிலும் வேதனை. மாணிக்கராஜா இதுவரை இரண்டு முறை கயத்தாறு யூனியன் சேர்மனாக இருந்து கோலோச்சி வந்தவர்.அந்த சேர்மன் பதவி இப்போது தலித் பெண்ணுக்காக ஒதுக்கப்பட்டு விட்டதால் மாணிக்கராஜா துணை சேர்மனாக இருக்கிறார். இருந்தும் அந்த தலித் பெண்ணை இவர் அடிமை போல வைத்துக் கொண்டு, தானே தலைவர் என்பதுபோல தலைகால் புரியாமல் திரிகிறார்.

இதைக் கண்டித்து தலித் அமைப்புகள் பல தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையிலும் தன் நிலையில் இருந்து இறங்காமல் மாணிக்கராஜா அழிச்சாட்டியம் செய்து வருகிறார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறவேண்டிய இவருக்கு திடீரென டாக்டர் பட்டம் கிடைத்தபோது எல்லா தரப்பினருமே அதிர்ந்து போனார்கள்.

மாணிக்கராஜாவுக்கு எந்த அடிப்படையில், யார் டாக்டர் பட்டம் வழங்கினார்கள் என்று விசாரித்த போது, அப்படி பட்டம் வழங்கியது ‘உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்’ எனத் தெரிய வந்தது. பத்து வருடம் தொடர்ந்து யூனியன் சேர்மனாக இருந்து மக்கள் சேவை செய்ததால் மாணிக்கராஜாவுக்கு டாக்டர் பட்டம் தந்திருப்பதாக அந்த அமைப்பு காரணம் சொல்லியிருக்கிறது.

அதன்பின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழம் பற்றி விசாரிக்க ஆரம்பித்தோம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த செல்வின்குமார் என்பவர் அந்தப் பல்கலைக் கழகத்தின் தொலைதூர அஞ்சல் வழிக் கல்விக்கான ஸ்டடி சென்டரை அமெரிக்காவில் தொடங்குவதற்காக அந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். போன இடத்தில் அவர் ‘உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற பெயரைப் பதிவு செய்து அதன் நிறுவனத் தலைவராகி இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள சில கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு அந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுதான் இந்த அமைப்பின் வேலை. கிட்டத்தட்ட ஒரு புரோக்கர் போன்ற வேலைதான் அது. மற்றபடி செல்வினின் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் எந்தத் தமிழ் ஆராய்ச்சியும் செய்ததாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, மதுரையில் உள்ள ஒரு மனித உரிமைக் கழகத்திற்கு சர்வதேசத் தலைவராக மாறிய செல்வின், அதன்பின் தமிழகம் முழுக்க தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். மனித உரிமைக்கழகக் கூட்டம் ஒன்றில், ‘எங்களது உலக தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு யாராவது ஒரு லட்சம் ரூபாய் தந்தால் அவர்களுக்கு டாக்டர் பட்டம் தரத் தயார்’ என்று இவர் நூல் விட்டுப் பார்த்திருக்கிறார். அதைக் கேட்டு மனிதஉரிமை ஆர்வலர்கள் நொந்துபோனாலும் செல்வின்குமார் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

அதன்பின் இந்த டாக்டர் பட்டத்தில் பலர் ஆர்வம் காட்டவே, தனக்குக் கீழ் சில ஏஜெண்டுகள்,புரோக்கர்களை நியமித்து பணக்கார தொழிலதிபர்களுக்குப் பட்டமளிப்பதை ஒரு தொழிலாகவே செல்வின் ஆக்கி விட்டார்.டாக்டர் பட்டம் வாங்க ரூபாய் ஒரு லட்சம்தான் என்றாலும் பட்டமளிப்பு விழா நடக்கும் இடத்துக்கான கட்டணம், இதர செலவுகளுக்காக சிலரிடம் ரூ.3 லட்சம் கூட இந்த அமைப்பு கறந்ததாகக் கேள்வி.

கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் ‘நூற்றுக்கணக்கான பேர் இப்படி டாக்டர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் டாக்டர் பட்டம் வாங்குவதற்கான எந்தத் தகுதியும் கிடையாது. இப்படி காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டம் தருவதன் மூலம் உண்மையாகவே கஷ்டப்பட்டு ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் வாங்கியவர்களை செல்வின்குமார் அவமதிப்புச் செய்கிறார்.

10:20 PM, May 10, 2010
-/சுடலை மாடன்/- said...

தென்மாவட்டங்களில் அண்மைக்காலமாக பல ரியல் எஸ்டேட் புள்ளிகள், தீப்பெட்டி ஆலைக் காரர்கள், பள்ளி நிர்வாகிகள் பந்தாவாக ‘உலக தமிழ்ப் பல்கலைக் கழகம்’ மூலமாக ‘டாக்டர்’ பட்டம் பெற்றுள்ளார்கள். சொந்த ஊர்களில் அவர்களுக்கு அமர்க்கள வரவேற்பு, ஆடம்பர விழாக்கள் எல்லாம் அமளிதுமளிப்பட்டிருக்கின்றன.

அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு யூனியன் துணை சேர்மனும், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. செயலாளருமான மாணிக்கராஜாவும் டாக்டர் பட்டம் வாங்கியபோதுதான் மக்கள் விழித்துக் கொண்டனர். ‘இவருக்கு எதற்கு டாக்டர் பட்டம்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எகிற, ‘‘உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பதே ஒரு ஃபோர்ஜரி. அது டாக்டர் பட்டம் தருவது அதைவிட போக்கிரித்தனம். எனவே, இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று கூறி நீதிமன்றப் படியேறத் தயாராகி வருகிறார், தூத்துக்குடி மாவட்ட மக்கள் உரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் வக்கீல் அதிசயகுமார். அவரிடம் நாம் பேசினோம்.

“அரசாங்கம் வழங்கும் பத்ம விருதுகளே தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்ற சர்ச்சைகள் ததிங்கிணத்தோம் போடும் நிலையில், தென்மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக இந்த டாக்டர் பட்ட காமெடி கூத்துகள் அரங்கேறி வருகின்றன. அமெரிக்காவில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி போன்ற இடங்களில் வைத்து, வசதி படைத்த பணக்காரர்களுக்கு இப்படி பட்டம் வழங்கும் வைபவங்களை அட்டகாசமாக நடத்தி வருகிறது.

10:20 PM, May 10, 2010
மயிலாடுதுறை சிவா said...

அன்புநிறை சசி

தமிழ்மணம் நட் சித் திரதிற்கு வாழ்த்துகள் பல..."கலைஞரின் எதிர்ப்பு அரசியிலை" உங்களுக்கு சாதமாக பயன் படுத்தி கொண்டீர்கள்!!! பரவாயில்லை!!! இது போல ஆயிரம் எதிர்பார்ப்புகளை பார்த்தாகிவிட்டது!!!

உங்களது கட்டுரையில் நீங்களே சொல்லி உள்ளீர்கள் "கலைஞர் போருக்கான முழு காரணம் இல்லை என்று"

இழந்த தமிழின பட்டத்தை மீண்டும் பெறவே இந்த மாநாடு என்கீறீர்கள். எங்களுக்கு யாரும் பட்டம் தரவில்லை! அதனை நீங்கள் தராவிட்டாலும் அது மறைய கூடிய பட்டம் அல்ல! கடந்த 60 ஆண்டுகால உழைப்பால் மக்கள் கொடுத்தப் பட்டம்!!!

பல கோடிகளை செலவு செய்து நாங்கள் வருடா வருடம் "இது போல மொழிக்கு" மாநாடு நடத்த முடியும்!!! எங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை! ஏனில் இது ஒரு கோடிக்கும் மேலாக தொண்டர்களை கொண்ட இயக்கம்!

இந்த மாநாட்டிற்கு செல்வதால் எனது வீட்டு கடன் அல்லது கார் கடனை கலைஞர் அடைக்க போகிறாரா என்ன? அல்லது அனைத்து தமிழ் அறிஞர்களுக்கும் அவர் பணம் கொடுத்து வரவழைக்கிறாரா என்ன? விருப்பம் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள்! அதற்காக அவர்களையும் நீங்கள் கேவலாக சொல்வது தவறு அல்லாவா?

தமிழ்நாட்டில் மொழிக்கான விழா, சும்மா ஜாலியாக போகிறோம்!!! பாவம் உங்களை போன்ற நண்பர்களும் அய்யா நெடுமாறன் கோஷ்டியனர்களும் தொடர்ந்து செம்மொழி மாநாட்டை புறக்கணிப்போம்!!! அது இது சொல்லி கொண்டே வருகீறீர்கள்!!!

எழுத்தாளார் பிரபஞ்சன் "செம்மொழி மாநாடு தவறில்லை" என்கிறார். இசை அறிஞர் போராசரியர் மம்மது அய்யாவும் தவறில்லை என்கிறார். இவர்களும் கலைஞர் ஜால்ராக்களா? இது போல பல பொதுவான தமிழ் அறிஞர்கள் ஆதரிக்கிறார்கள்!!!

உங்களுக்கு மிகவும் பிடித்த மருத்துவர் அய்யா ராமாதாஸும் ஆதரிக்கிறாரே?!!

ஈழ அரசியலைப் பற்றி மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பேசி பேசி என்ன பலனை காண்டார் வைகோ?!

தமிழக அரசியல் வேறு! ஈழ அரசியல் வேறு! என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்!!!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஈழ இழப்பிற்கு பிறகு நமது இல்லங்களில் திருமணங்கள் நின்றா போய்விட்டது? அல்லது நாம்தான் புது இல்லம், புது கார் வாங்காமாலா இருக்கிறோம்?! அல்லது நல்ல சுவையான உணவு சாப்பிடலாமா? இருக்கிறோம்?!
நமது வீட்டிற்கு ஒரு நியாயம்? நாட்டிற்கு ஒரு நியாயமா?

செம்மொழி மாநாடு விழாவிற்கு நாங்கள் செல்வதிற்கு உங்களது வாழ்த்திற்கு நன்றிகள் பல!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

12:23 AM, May 11, 2010
கிருது said...

கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பாக்குகிறீர்கள். வலை தளம் மற்றும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற மக்கள் செல்வாக்கு அற்றவர்கள் தான் இலங்கை தமிழர் என்று கூப்பாடு பூட்டு திரிகிறார்கள். முதலில் கருணாநிதி தாக்கி எழுதும் வலை தளங்கள் ஒன்றை புரிந்துகொள்ள மறுக்கின்றன அல்லது தெரிந்தும் மறைக்கின்றன, ஜெயா உடன் உறவு கொண்டுள்ள வைகோவை யான் யாரும் எதிர்பதில்லை.ஜெயா ஒரு தமிழ் துரோகியாக உங்களுக்கு தெரிய வில்லையா? கருணாநிதி தமிழ் நட்டு மக்களுக்கு மட்டும் தான் தலைவர், நீங்கலாக உலக தலைவர் என்றல் எப்படி?

4:53 AM, May 11, 2010
Killivalavan said...

Hi Tamilsasi,
A nice article, iam happy to see you agian writing some interesting stuffs .
All the best
Murugan

5:06 AM, May 11, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

உங்களுக்கு மிகவும் பிடித்த மருத்துவர் அய்யா ராமாதாஸும் ஆதரிக்கிறாரே?!!

********

சிவா,

கருணாநிதியையும், உடன்பிறப்புகளையும் விமர்சித்தால் இத்தகைய பதில் விமர்சனம் வரும் என்பது எனக்கு தெரியும். இது வலைப்பதிவில் ஒன்றும் புதிதல்ல.

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் பதவிகள் தேவை, அரசியல் நடத்த வேண்டும். அதனால் அவர்கள் எதையும் ஆதரிக்கலாம். அரசியல் சந்தர்ப்பவாதிகள் அனைவரும் செம்மொழி மாநாட்டை ஆதரிக்கலாம். ஜெயா கூட்டணியில் இருந்தால் ராமதாஸ் எதிர்ப்பார். இன்றைக்கு கருணாநிதி தயவு தேவைப்படும் நேரத்தால் கருணாநிதி செய்யும் எதையும் ராமதாஸ் ஆதரிப்பார். சமீபத்தில் கருணாநிதியின் காலை தொட்டு கும்பிட்டு வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டவர் தான் ராமதாஸ். அவரிடம் இருந்து இதைத் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

சாதியால் நான் வன்னியராக இருப்பதால், அவர் ஆதரித்தால் நான் ஆதரிக்க வேண்டுமா ? உங்கள் வாதம் குழந்தைத்தனமாக உள்ளது..

நன்றி...

7:28 AM, May 11, 2010
மயிலாடுதுறை சிவா said...

சசி

நான் அப்படி சொல்லவில்லை! செம்மொழி மாநாட்டிற்கு போவது ஏதோ கொலை குற்றம் அளவிற்கு பேச படுவதும், ஏதோ நாங்கள் எல்லாம் ஈழ தமிழர்களுக்கு 100% ஆதரவாளர் இல்லை என்பது போலும் ஒரு பரவலான கருத்து உள்ளது!!!
அதற்கு உங்கள் இந்த பதிவு ஆதரவு கரம் நீட்டுகிறது!!!

நான் என்றும் உங்கள் சாதியை குறிப்பிட்டு சொல்லவில்லை! மருத்துவர் இராமதாஸ் ஜெ வின் கூட்டணியில் இருந்தே பொழுதே ஆதரித்தார் என்றுதான் எனக்கு தோணுகிறது!

ஒரு சராசரி தமிழ் உணர்வாளன் இந்த மாநாட்டிற்கு செல்வதால் என்ன தவறு இருக்க முடியும்?

என்னுடைய வருத்தம் எல்லாம் ஏன் திரும்ப திரும்ப ஈழ அரசியலை நம் தமிழ்நாட்டு அரசியலோடு போட்டு குழப்பி கொள்ள வேண்டும்?!

மேலும் இழந்த "தமிழன தலைவர்" பட்டம் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை சசி!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

11:29 AM, May 11, 2010
Prasanna Rajan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சசி. உங்களைப் போன்ற மூத்த பதிவர்கள், இந்த விடயத்தில் விவாதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செம்மொழி மாநாடு என்ற பெயரிலும், தமிழ் சீர்திருத்தம் என்ற பெயரிலும் இவர்கள் அடிக்கும் கூத்துகளை என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆயினும் இதற்கு ஆதரவாக பதிவுலகிலேயே கொடி பிடிப்பவர்கள் இருப்பது தான் பெரும் வேதனை.

1:37 PM, May 11, 2010
-/பெயரிலி. said...

/என்னுடைய வருத்தம் எல்லாம் ஏன் திரும்ப திரும்ப ஈழ அரசியலை நம் தமிழ்நாட்டு அரசியலோடு போட்டு குழப்பி கொள்ள வேண்டும்?!/

அதுதானே! எதுக்கு கலைஞர் தமிழனின் தலைகாக்காத்தந்தி உந்தி பற பறவென்று செத்தசவம் மக்கினப்பிறகு(ம்) பரபரப்புக்கு அடிக்கவேண்டும்?

ஈழத்துஎட்டுவீட்டுச்சடங்கின்போது, முதலுதவிப்பெட்டி கொண்டுபோக அனுமதி கொடுங்கள் என்று டாக்டர் பரிதிmark கலைஞர் தமிழ்வள்ளல் அன்னை சோன்பப்டினியாவை இரங்கிக் கேட்பதை எதற்கு சசி நீங்கள் ஈழ அரசியலோடு குழப்பிக்கொள்கிறீர்கள்? தமிழக அரிசியலோடு நிறுத்துவதுதானே நேர்மையாவனருக்கு அழகு?

/மேலும் இழந்த "தமிழன தலைவர்" பட்டம் என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை சசி!/

சபாஷ் சரியான ஸ்டேட்மெண்டு. அவர் என்னிக்கு வெச்சிருந்தாரு இன்னிக்கு இழக்க? வேணுமானா ஒங்க பிரபாகரனை இறந்த 'தமிழினத்தலைவர்" பட்டம் விட்டுக்கொள்ளுங்க.

சிவா, 'தமிழன தலைவர்' என்று எந்த எழுத்துச்சீர்திருத்தத்தின அடிப்படையிலும் எழுதவில்லையே! அப்படி ஏதாச்சும் ஈர்திருத்தி பேன் வார்ந்து தமிழன தலைவர் என்று எழுதியிருந்தீர்களென்றால், சொல்லிவிடுங்கள் அண்ணே;-) தமிழை தகடுபோட்டு நிமிர்த்தித் திருத்திக்கிறோம்

3:50 PM, May 11, 2010
Unknown said...

அன்புள்ள சசி,

அருமையான கட்டுரை தந்ததற்குப் பாராட்டு. தமிழ் மக்கள், நிலம், மொழி மூன்றின் நிலையும் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணிந்துள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சிறந்த பரந்த நுண்ணிய செயல்திறன் தேவைப்படும் தருணத்தில், இக்காலத்தில் தமிழ்நாட்டின் தலைமை திருக்குறள் பொருள் கடைசி அதிகாரமான கயமை 10 குறளுக்கும் வடிவமாக, மாதிரியாக அமைந்துவிட்டது. உணரும் தமிழர் கெடுதலுக்கு துணை போகாமல் தம் கடமை ஆற்றவேண்டும்.

***************************

கட்டுரையின் (இதன்கீழுள்ள)இரண்டு பத்திகள் சரியாக அமையவில்லை.
"என்றைக்கும்" இருந்ததில்லை என்பது தவறு. குறுந்தொகைப் பாக்கள் பலவும் எல்லா மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் சுட்டியுள்ளது. எனவே, மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டு, மீண்டும் கட்டுரைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்
அன்புடன் ராதாகிருஷ்ணன், ஹூசுடன், மே 11, 2010

**************************
மொழியும், மொழிச் சார்ந்த வளர்ச்சியும் எப்பொழுதுமே சாமானிய மக்களை உள்ளடக்கி இருந்தால் சிறப்பானது. ஆனால் அவ்வாறு தமிழ் மொழி என்றைக்கும் இருந்ததில்லை. தமிழ் மொழியின் இலக்கியங்கள் மக்களின் இலக்கியங்களாக இல்லாமல் மேட்டுக்குடியினரின் இலக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் மண்ணின் மணம் இல்லை. மண்வாசனை இல்லை. தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை ஏன் பெரும்பான்மையான தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதுமே உண்டு. தற்கால இலக்கியங்களே குறிப்பாக தலித் இலக்கியம் போன்றவையே மக்களை முன்னிறுத்துகின்றன‌.

ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், கூத்து சாமானிய மக்களின் கலை. ஆனால் கூத்துப் பாடல்கள் என்றைக்கும் இலக்கியமாக தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். ஆனால் அவை வெறும் கூத்துகளாக கட்டமைக்கப்பட்டு விட்டன. இப்படி சாமானிய மக்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் தமிழறிஞர்களும், தமிழ்ப்புலவர்களும் புறக்கணித்தே வந்துள்ளார்கள். இப்படியான இந்த மொழி அரசியல் தொடர்ச்சியாக காலங்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

5:53 PM, May 11, 2010
Unknown said...

அன்புள்ள சசி,

அருமையான கட்டுரை தந்ததற்குப் பாராட்டு. தமிழ் மக்கள், நிலம், மொழி மூன்றின் நிலையும் எதிர்காலமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சிறந்த பரந்த நுண்ணிய செயல்திறன் தேவைப்படும் தருணத்தில், இக்காலத்தில் தமிழ்நாட்டின் தலைமை திருக்குறள் பொருள் கடைசி அதிகாரமான கயமை 10 குறளுக்கும் வடிவமாக, மாதிரியாக அமைந்துவிட்டது. உணரும் தமிழர் கெடுதலுக்கு துணை போகாமல் தம் கடமை ஆற்றவேண்டும்.

***************************

கட்டுரையின் (இதன்கீழுள்ள)இரண்டு பத்திகள் சரியாக அமையவில்லை.
"என்றைக்கும்" இருந்ததில்லை என்பது தவறு. குறுந்தொகைப் பாக்கள் பலவும் எல்லா மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும் சுட்டியுள்ளது. எனவே, மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டு, மீண்டும் கட்டுரைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்
அன்புடன் ராதாகிருஷ்ணன், ஹூசுடன், மே 11, 2010

6:36 PM, May 11, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஈழ இழப்பிற்கு பிறகு நமது இல்லங்களில் திருமணங்கள் நின்றா போய்விட்டது? அல்லது நாம்தான் புது இல்லம், புது கார் வாங்காமாலா இருக்கிறோம்?! அல்லது நல்ல சுவையான உணவு சாப்பிடலாமா? இருக்கிறோம்?!

***********

சிவா,

உங்களுடைய கருத்துகளில் திமுக மற்றும் கருணாநிதியின் மீதான தீவிரமான "பக்தியே" வெளிப்படுகிறது என்பதால் அதில் பெரிதாக விவாதிக்க ஏதுமில்லை. கருணாநிதி நினைத்தால் மாதம் ஒரு மாநாடு கூட நடத்தலாம். அவரிடம் இல்லாத கோடியா ? எல்லாம் ஸ்பெக்டரம் மயம்.

ஆனால் மேலே குறிக்கப்பட்ட இந்த வாதத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. காரணம் இத்தகைய வாதங்களைபல இடங்களில் எதிர்கொண்டு வருகிறோம். இது ஒரு "சோ"த்தனமான வாதம். உடன்பிறப்புகள் அதனை பயன்படுத்துவது தான் திராவிட இயக்கத்தின் பிரிணாம வளர்ச்சியாக மாறியிருக்கிறது.

முல்லைவாய்க்கால் ஆர்ட்டலரி வீச்சில் பலியான சிறுமியை ஒரு தாய் புதைத்து விட்டு, தப்பி ஓடி முகாமிற்கு வந்து சேர்ந்தார். அப்படி வந்து சேர்ந்த அந்தக் கதையும் ஊடகங்களில் வந்தது. அந்த‌த் தாய் ந‌டைபிண‌மாக‌வே மீதி வாழ்க்கையை வாழ‌ முடியும். ஆனால் வாழ்கிறார்.

கும்ப‌கோண‌த்தில் ப‌ள்ளிக் குழ‌ந்தைக‌ள் எரிந்து சாம்ப‌லான‌ செய்தியை ம‌ற‌ந்திருக்க‌ மாட்டீர்க‌ள். எந்த‌ப் பெற்றோரும் குழ‌ந்தைக‌ளுட‌ன் சேர்ந்து ம‌ரித்து விட‌ வில்லை. வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்க‌ள். அவர்க‌ள் வாழ்க்கையிலும் இய‌ல்பான‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கும். ஆனால் அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் சும‌க்கும் வலி அவ‌ர்க‌ள் வாழ் நாள் முழுவ‌தும் இருக்கும்.

க‌ட‌ந்த‌ ஆண்டு ஈழ‌ நிக‌ழ்விற்குப் பிற‌கு க‌ன‌டாவில் ம‌ன‌ அழுத்த‌த்திற்காக‌ சிகிச்சை பெறும் த‌மிழ‌ர்க‌ளின் எண்ணிக்கை மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌தாக‌ செய்திக‌ளை வாசித்தீர்க‌ளா என‌ தெரிய‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌ன‌தில் இருக்கும் வ‌லியை அவ‌ர்க‌ள் வாழ்வின் இய‌ல்பான‌ சூழ‌ல் ஆற்ற‌ உத‌வும். ஆனால் நிக‌ழ்வுக‌ள் ம‌ன‌தில் இருந்து அக‌லாது.

க‌ட‌ந்த‌ ஆண்டு மே மாத‌ம் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்விற்குப் பிற‌கு என‌க்கும் ம‌ன‌ அழுத்த‌ம் இருந்தது. இதில் இருந்து க‌வ‌ன‌த்தை மாற்ற வேண்டிய‌ தேவையும் இருந்த‌து. நான் வாங்கிய‌து ஒரு ஐபோன். தின‌மும் அமைதியான‌ பாட‌ல்களை கேட்க‌ தொட‌ங்கினேன். இளைய‌ராஜாவின் ர‌ம‌ண‌ மாலை, திருவாச‌க‌ம் போன்ற‌ பாட‌ல்க‌ளை தின‌மும் கேட்பேன். டி.எம்.செள‌ந்த‌ராஜ‌னின் முருக‌ன் பாட‌ல்க‌ளை கேட்க‌ தொட‌ங்கினேன். பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுதும் வாக்கிங் செல்லும் பொழுதும் என்னுடைய காதில் ஐபோன் ஒட்டிக் கொண்டிருக்கும். என‌க்கே இது ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்று தான். ஆனால் அதைத் தான் செய்தேன். ஒட்டு மொத்த‌மாக‌ த‌மிழ், எழுத்து போன்ற‌ அனைத்திலும் இருந்து வில‌கி விட‌ வேண்டும் என்ப‌து தான் என‌து எண்ண‌ம். சமீப காலங்களில் அதிகமாக சினிமா பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலையில் கவனம் செலுத்துகிறேன். அரசியலிலும் மற்ற விடயங்களிலும் கவனத்தை குறைத்துக் கொள்ள முயன்றேன். மாவீர‌ர் தின‌த்தில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஷாப்பிங் சுற்றினேன். இது எல்லாம் நம‌க்கு நாமே செய்து கொள்ளும் ஏமாற்ற‌ம் தான். இன்று மறுபடியும் ஈழத்தை எழுதி என்னுடைய மன அழுத்ததை கூட்டிக் கொள்கிறேன்.

சிவா, வாழ்க்கை இயல்பான ஓடினாலும் எங்காவது நிலநடுக்கம் ஏற்படும் பொழுது, இயற்கைச் சீற்றம் எழும் பொழுதும் அரசியல்வாதிகள் நீலிக் கண்ணீர் வடிக்கும் பொழுதும் முல்லைவாய்க்காலில் என் மக்கள் செத்த பொழுது எங்கேடா போனீங்க நாய்களா என்று கத்த தோன்றுகிறது. ஆஸ்திரேலியாவில் உதைபடும் நபர்களைப் பார்த்து வாங்குங்டா நல்லா என்று சிரிக்க‌ தோன்றுகிறது. இதுவெல்லாம் இயல்பான வாழ்க்கையில் இருந்தாலும் நமக்கு ஏற்பட்ட பைத்தியக்காரத்தனம் தானே ?

வாழ்க்கை இயல்பாக இருந்தாலும், இந்த அரசியல் பைத்தியக்காரத்தனத்தை மாற்ற இயலாது. ந‌ம்முடன் அது ஒட்டிக் கொண்டே இருக்கும். ந‌ம் க‌ட்டை வேகும் வ‌ரைக்கும் இருக்கும்.

திமுக தொண்டர்களுக்கும் இந்த உணர்வுகள் புரியாது. திமுக ஒரு நாள் அழிந்தால், திமுக அழிந்து விட்டதே என்று நினைத்தால், அப்பொழுது புரியும்.

ந‌ன்றி...

9:38 PM, May 11, 2010
தமிழ் சசி | Tamil SASI said...

ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

நலம் தானே ?

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

9:51 PM, May 11, 2010
மோகன் கந்தசாமி said...

//ஈழத்தில் நடந்தப் போரை கருணாநிதியால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது அல்ல நம்முடைய நிலைப்பாடு.///

கருணாநிதியால் தடுக்க முடிந்திருக்குமா இல்லையா என்பது அவரது பர்சனாலிட்டியை, வாழ்க்கை வரலாறை அறிந்தவர்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் தமிழக தமிழரை பகைத்துக்கொண்டு ஈழத்திற்கெதிராக ஒரு கைத்துப்பாக்கி கூட துணைக்கண்டத்தைத் தாண்டி சென்றிருக்க முடியாது என்பது என் கருத்து. அது முடிந்திருந்தால் கடந்த இருபது வருடத்தில் என்றோ அது நடந்திருக்கும். தமிழ் துரோகிகளை கண்டு பிடிக்கவும், சமரசவாதிகளை துரோகிகளாக்கவும் இருபது வருடம் தேவைப்பட்டுள்ளது. தமிழரை ஏமாற்றி அல்லது ஏமாற்ற தக்க ஆட்களை நியமித்து இந்த வேலை கட்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.

உலகின் எந்த புரட்சியும் மக்களின் தன்னெழுச்சியால் நடந்திருக்கும் என்பதை ரேடிக்கலாகவே நான் மறுக்கிறேன். கருத்தியல்வாதிகளோ, தியாகிகளோ, செல்வாக்குபெற்றோரோ, மாவீரர்களோ அல்லது அனைவருமோ சேர்ந்து போரையும் போராட்டத்தயும் கட்டியெழுப்பி இருக்க வேண்டும். அத்தகைய ஒன்று தமிழகத்தில் ஏற்படாதவாறு முகவர்களைக் கொண்டு தொய்வில்லாமல் நப்பை வார்த்து வந்துள்ளது இந்திய அரசு. உரத்து உரசினால் அணைக்கவியலா நெருப்பு தமிழகத்தில் வியாபிக்கும் என்ற பயத்தை இந்திய ஆட்சியாளர்கள் கண்ணில் இன்றும் நாம் பார்க்கலாம். மெல்ல பயம் இளகி இன்று புன்னைகை பூக்கும் இவர்கள் நாளை உரத்து கெக்கலிப்பர். அந்த அவலத்தை நமக்குத்தந்து விட்டு நம் தமிழினத்தலைவர் இதோ நாளை மறுநாள் போய்விடுவார்!! ஆனால் நடந்து வரும் ஈழக்கொடுமைக்காக 'சொல்லிச்சொல்லி வரலாறு' இவரைச் 'ஏசும்.' இவர் 'பெயர் சொன்னால் தமிழுக்குக் கூசும்'.

12:18 AM, May 12, 2010
amalorpavanathan said...

Good article.Amal

2:18 AM, May 12, 2010
குழலி / Kuzhali said...

//க‌ட‌ந்த‌ ஆண்டு மே மாத‌ம் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்விற்குப் பிற‌கு என‌க்கும் ம‌ன‌ அழுத்த‌ம் இருந்தது. சமீப காலங்களில் அதிகமாக சினிமா பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன்.
//
இதுவே எனக்கும் ஏற்பட்டது, தற்போது நானும் நிறைய சினிமா பார்க்கிறேன் தொலைக்காட்சி பார்க்கிறேன்... விஜய் குத்துபாட்டை ரசித்து பார்க்கிறேன்... யூடியூபில் தேடி தேடி வின்னர் படக்காமெடியை பார்க்கிறேன்... கோபம் தீர சில தலைவர்களை திட்டி தீர்க்கிறேன் ஆனாலும் மாதம் ஒரிரு முறையாவது நடு இரவில் திடீரென எழுந்து உட்கார்ந்து கலங்கிய கண்களோடு தூங்க முயன்று தோற்கிறேன்.... சிவா போன்ற உடன்பிறப்புகளுக்கு புரியாது என்பதையும் சில உடன்பிறப்புகளுடன் பேசி பேசி சண்டை வந்த பின்பே புரிந்துகொண்டேன்... தோற்ற உணர்வை விட ஏமாற்றப்பட்ட உணர்வே கடுமையாக வருத்துகிறது...

2:20 AM, May 12, 2010
மயிலாடுதுறை சிவா said...

குழலி / சசி

ஓரு வேளை நான் உங்கள் அளவிற்கு மனம் பாதிப்பு அடையாத காரணத்தால், கலைஞரை வெறுக்க முடியவில்லை போலும்!

என்னை பொறுத்தவரை கலைஞர் நிறைய தவறு செய்து இருக்கலாம், ஆனால் ஈழ போர் அவரால் வரவும் இல்லை, அவரால் தடுத்துm நிறுத்தி இருக்க முடியாது என்றுதான் எனக்கு தோணுகிறது!

உங்கள் மன வேதனைகளுக்கு ஒரு வடிகால் வேண்டும், அதற்காக தொடர்ந்து கலைஞரை திட்டுகிறீர்கள்! திட்டுங்கள்! பரவாயில்லை! திமுக என்ன மகிழ்ச்சியில் வளர்ந்த இயக்கமா என்ன? தொடக்கம் காலம் முதல் "எதிர்ப்பில்" வளர்ந்த இயக்கம்!
வெறும் "பழியை" சுமந்த இயக்கம்!

செம்மொழி மாநாடு என் தாய் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது! அதற்கு போக ஆசை! போகிறேன் அவ்வளவுதான்! ஆனால் ஈழ அரசியலோடு இதனை போட்டு நான் குழப்பி கொள்ளா விரும்பவில்லை!

உங்களின் ஈழத்து உணர்வுகளை நான் நன்கு உணருகிறேன்....

மயிலாடுதுறை சிவா...

2:46 PM, May 12, 2010
King... said...

யாரொடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்..

தமிழையும் சனங்களையும் இவர்களிடமிருந்து யார் காப்பாற்றுவதோ..

3:23 PM, May 12, 2010
Anonymous said...

//ஆனால் தமிழக தமிழரை பகைத்துக்கொண்டு ஈழத்திற்கெதிராக ஒரு கைத்துப்பாக்கி கூட துணைக்கண்டத்தைத் தாண்டி சென்றிருக்க முடியாது என்பது என் கருத்து. அது முடிந்திருந்தால் கடந்த இருபது வருடத்தில் என்றோ அது நடந்திருக்கும்.//

முதலில் நம்மைப் பற்றிய “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” என்பது போன்ற கற்பனைகள், சோழர்கால வீரதீரப் பிரதாபக் கதைகளிலிருந்து வெளியே வரவேண்டும். நிகழ்கால நடைமுறைக்குத் தக்கபடி சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.

நீங்கள் சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன். இந்திய அரசின் ஆயுதங்கள் மட்டுமல்ல படையே துணைக்கண்டத்தைத் தாண்டி சென்றிருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமைதியாக தான் இருந்தார். எம்.ஜி.ஆருக்கு தன் நண்பர் ராஜிவ் காந்தியை எதிர்த்து ஒன்றும் சொல்லும் தைரியம் இருந்ததில்லை. எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி எதிர்த்தார். கருணாநிதி பதவிக்கு வந்த பிறகு தன் நண்பரான வி.பி.சிங் பிரதமராக இருந்ததால் திரும்பி வந்த இந்தியப் படையை வரவேற்காத தைரியம் இருந்தது. இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி. மாநிலத்தில் காங்கிரஸின் தயவால் ஆட்சி. அதனால் தைரியம் இல்லை. வெறும் நாடகங்கள் நடத்த மட்டுமே முடிந்தது. கருணாநிதியின் இடத்தில் எம்.ஜி.ஆரோ. ஜெயலலிதாவோ இருந்திருந்தாலும் இதைத் தவிர ஒன்றும் செய்திருக்க முடியாது. ஈழத்தமிழரின் நண்பர் எம்.ஜி.ஆர். ஆனாலும் சரி, துரோகி கருணாநிதியானாலும் சரி, எதிரி ஜெயலலிதாவானாலும் சரி, இன்ன பிற சில்லரைத் தலைவர்களாலும், ஒட்டு தமிழக மக்களாலும் இந்திய அரசை மீறி ஒன்றும் செய்திருக்க முடியாது. வி.பி. சிங் அரசைப் போன்ற ஒரு நட்பரசு இருந்திருந்தால் ஒழிய தமிழ்நாட்டிற்குள் நடந்த எந்த எதிர்ப்பும், போராட்டமும், ஒன்றும் செய்திருக்க முடியாது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கைகளை ஒரு மாநிலத்தின் கட்சிகளும், மக்களும் மாற்றிவிட முடியாது. மத்தியில் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ள பிரதான எதிர்க்கட்சியின் அழுத்தங்களோ அல்லது மறைமுகமான லாபிகள் மூலமாகவோ தான் மத்திய அரசின் முடிவுகளை அசைத்துப் பார்க்க முடியும். எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாகவேப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு தெரிந்ததெல்லாம் உணர்ச்சிவசப்படுவதும், முத்திரைக் குத்துவதும், பிரயோஜனமில்லாத தெருப்போராட்டங்களும் தான். காலத்துக்கும், சூழ்நிலைக்கும் தகுந்தபடி உத்திகளையும், நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளத் தெரியவில்லை.

மூர்க்கத்தனமான சிங்கள அரசு முடிவுடன் ராணுவ நடவடிக்கையில் இறங்கியபோது அதை முட்டாள்தனமாக எதிர்கொண்டது புலித் தலைமை. அப்படிப்பட்ட மூர்க்கத்தனமான சிங்கள அரசு உருவாக அடிகோலியதே புலித் தலைமை தான். ”நாங்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டோம். அரசியல் தெளிவு அறவே இன்றி, விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், தோன்றியதையெல்லாம் செய்துக்கொண்டே இருப்போம். தமிழ்நாட்டு, வெளிநாட்டு புலி ஆதரவாளர்களெல்லாம் எங்கள் சாகசங்களைக் கண்டு புல்லரித்துப் போய் கண்மூடித்தனமாக ஆதரித்துக்கொண்டிருப்பார்கள். ஏதாவது இக்கட்டு என்றால் தெருவில் இறங்கிப் போராடி இந்திய அரசை அடிபணிய வைப்பார்கள். இந்திய அரசு இலங்கை அரசை மிரட்டும்” என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.

- தொடரும்

12:36 PM, May 13, 2010
Anonymous said...

தொடர்ச்சி...

எனக்கும் கருணாநிதியின் மீது கடுமையான கோபமிருக்கிறது. ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக அல்ல. அவர் நடத்திய அற்பத்தனமான நாடகங்களுக்காக. 18 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று கூறி ஊரை ஏமாற்றியதற்காக. இரண்டுமணி நேரம் உண்ணாவிரதமிருந்து, போரை நிறுத்திவிட்டதாக திசைத் திருப்பியதற்காக. போர் உக்கிரத்தில் இருந்தபோது டெல்லியில் அமர்ந்து தன் வாரிசுகளுக்கு பதவி பேரம் நடத்திக்கொண்டிருந்ததற்காக. சுரணையில்லாமல் நடத்தும் செம்மொழி மாநாடு என்னும் கூத்துக்காக. இன்னும் பல காரணங்களுக்காக.

கருணாநிதி மீது தேவையான எல்லா விமர்சனங்களும், வசவுகளும் தொடர்ந்து வந்துகொண்டுதானிருக்கின்றன. அதே போல புலி ஆதாரவாளர்கள் புலித்தலைமையின் முப்பதாண்டுகால அரசியல் தெளிவின்மையையும், கடைசி வரை வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்ததையும் விமர்சனப்பூர்வமாக மீளாய்வு செய்யவேண்டும். இலங்கை அரசின் இனவெறியும், உலகநாடுகளின் சதியும், இந்திய அரசின் நயவஞ்சகமும், தமிழகத் தலைமையின் துரோகமும் கடும் விமர்சனத்துக்குள்ளாகின்றன. ஈழத்தமிழரின் இன்றைய கொடும்துயரத்திற்கு காரணமான இன்னொரு சூத்திரதாரி புலித்தலைமையின் மீதான விமர்சனத்தையும் ஆதரவாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அதிலிருந்து பெறும் பாடங்களே தற்போதைய ஈழத்தமிழ் கட்சிகள் தங்கள் அரசியல் போக்கை தீர்மானிக்க உதவும்.

புலிகளின் ராணுவ வெற்றிகளையும், உத்திகளையும் ஆய்ந்து அலசி எழுதிய சசி புலிகளின் அரசியல் தெளிவின்மையை குறித்தும் எழுதவேண்டும். அதேபோல தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்யமுடியும், என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். “உலகத் தமிழர்கள்” என்ற ஒற்றை லேபிளை வைத்துக்கொண்டு வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களின் அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடியாது.

12:37 PM, May 13, 2010
மோகன் கந்தசாமி said...

//நீங்கள் சொல்லியிருப்பது நடந்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன். இந்திய அரசின் ஆயுதங்கள் மட்டுமல்ல படையே துணைக்கண்டத்தைத் தாண்டி சென்றிருக்கிறது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அமைதியாக தான் இருந்தார்.///

இருபது ஆண்டுகளுக்கு முன் செய்த தவறுகளுக்காகத்தான் இந்திய அரசு மூக்குடைபட்டது. அடுத்த இருபது வருடங்கள் பொறுத்தது தனது தவறுகளை திருத்திக்கொல்வததற்கு அல்ல எனினும் தமிழக எதிர்ப்பை கண்டு பயந்துதான் அது காத்திருந்தது. ஆதரவாக ஆயுதங்களை அனுப்பியபோது ஆர்ப்பரித்த தமிழகம் எதிராக ராணுவத்தை அனுப்பியபோது முகத்தில் காரி உமிழ்ந்தது. அது ஒரு தொடக்கம் தான். அதன் பிறகு தமிழகத்தில் எவ்வித எழுச்சிக்கும் தேவையை அது உருவாக்கவில்லை. அதன் பிறகு உருவானாலும் அதை எதிர்கொள்ள ஒரு நரித்திட்டத்தைத் தீட்டிவிட்டுத்தான் அது மீண்டும் தனது வாலை நீட்டியுள்ளது.

மொழிப்போரைக்காட்டிலும் தீவிரமான எழுச்சி தமிழகத்தில் தோன்றுமேயானால் அதை காஷ்மீரைக் கையாளும் உத்தியில் ஒடுக்கிவிட முடியும் என்பது கனவிலும் நடவாதது. இந்தியா தம் எதிரி என்ற மனநிலைக்குத் தமிழக தமிழர்கள் தள்ளப்பட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்று பின்னிருட்டில் இருந்து இந்தியாவை இயக்குவோர் அறிந்தே உள்ளனர்.

எம்ஜியார், கருணாநிதி என்று தலைவர்களின் செயல்பாடுகள் மக்களுக்கு இயல்பாக உள்ள இன உணர்வுகளை மீட்டவோ அல்லது நசுக்கவோ மட்டுமே செய்ய முடியும். இல்லாத இன உணர்வை ஊட்டவோ அல்லது இருக்கின்ற வேற்றுனர்வை போக்கவோ முடியாது. எம்ஜியார் அமைதியாக இருந்ததும் கருணாநிதி அலப்பறை செய்ததும் ஏன் என்று விவாதிப்பதற்கும் தமிழரிடம் ஏற்பட்டுவிடவிருந்த வேற்றுமை உணர்வுக்கும் தொடர்பில்லை. ஏன் இதுவரையிலும் நாம் தந்துவந்தது கூட ஈழ ஆதரவு தானேயொழிய இந்திய வெறுப்பு அல்ல. அன்று அதை தோற்றுவிக்க எம்ஜியார் உயிருடனும் இல்லை. இருந்தாலும் அதைச் செய்திருப்பார் என்று நானும் கூறவில்லை. இந்திய வெறுப்பு முளைவிடவிருந்த அந்த எண்பதுகளின் இறுதியைப் போல் மீண்டும் நிகழ்வது எவ்வித அபாயமானது என்பதை இந்தியா உணர்ந்திருந்தது. அத்தகு வெறுப்பின் நாயகனை விலைக்கு வாங்குவதிலும், ஆசை காட்டுவதிலும் தம் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளது. கருணாநிதி விலை போகாதிருந்தால் ஒரு எழுச்சியை உருவாகியிருக்க முடியும். அது இந்திய வெறுப்பாய் உருமாறும் தருனத்தைக்கண்டு இந்தியாவை அஞ்சச்செய்த்து வழிக்கு கொண்டுவந்திருக்க முயன்றிருக்கலாம். எதையும் செய்யாமல், 'நம்மால் முடியாது, முயன்றாலும் தோற்போம்' என்பது தனது கூட்டுக்களவானி வேலைக்கு சப்பை கட்டுவது போன்றது.

///எல்லாவற்றையும் கருப்பு, வெள்ளையாகவேப் பார்த்துப் பழகிவிட்ட நமக்கு தெரிந்ததெல்லாம் உணர்ச்சிவசப்படுவதும், முத்திரைக் குத்துவதும், பிரயோஜனமில்லாத தெருப்போராட்டங்களும் தான். காலத்துக்கும், சூழ்நிலைக்கும் தகுந்தபடி உத்திகளையும், நட்புகளையும் உருவாக்கிக்கொள்ளத் தெரியவில்லை. ///

உணர்வுகளால் இணைந்த கூட்டம் யாரிடம் பேரம் பேசும் வலிமையை கொடுத்ததோ அவர்களது உத்திகளையும் ராஜரீக செயல்பாடுகளையும் தான் நாம் பார்த்தோமல்லவா? அவர்களது பித்தலாட்டங்களை உணர்ந்த மக்கள் திரள் கைமாறிப் போய்விடும் அச்சம் எண்பது வயதில் உந்தமிழந்த முழுக்கிழம் ஒருவரை பாடாய்ப் படுத்துவதையும் இப்போது நாம் பார்த்து வருகிறோமே! இத்தகையோரிடம் நாம் அளித்த ஆயுதத்தை நாம் கைமாற்றியாக வேண்டும். இப்போது நாம் ராஜரீக செயல்பாடுகளுக்கு முந்தய கட்டத்தில் இருக்கிறோம். சொல்லப்போனால் முதலிலிருந்து தொடங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உணர்வால் இயங்கும் சமூக மையத்தை உருவாக்க வேண்டிய ஆரம்ப நிலையில் இருக்கிறோம். அத்தகு இன உணர்வு மையத்தை சமுதாய உணர்ச்சி விளிம்புகளை நோக்கி விரிவுபடுத்த வேண்டும். தந்திர நடவடிக்கைகளுக்கு அறிவுரை கூறுவோர் சேவையை தேவைப்படும்போது சமுதாயம் பயன்படுத்திக்கொள்ளும் வரை அவர்கள் காத்திருக்கலாம், சோக கீதம் இயற்றி போழுதைப் போக்கலாம், அல்லது இயலாமையை மறைக்க அறிவு ஜீவி வேடம் அணிந்து மன நிம்மதி கொள்ளலாம். உணர்ச்சிவசப் படுவது அறியாமையின் வெளிப்பாடு என்று கூறிக்கொண்டு கழிவிரக்கத்தால் ஆசுவாசப் படுத்திக்கொள்ளலாம்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை ஒரு மாநிலம் மாற்றிவிட முடியாது என்பது....(தொடரும்)

10:20 PM, May 13, 2010
Anonymous said...

செம்மொழி மாநாட்டிற்கான பாடலையும்
மன்னிக்கவும் பாடல் என்று அரசு விளம்பரம் கருணாநிதியே கிறுக்கியுள்ளார்.வாலியோ வைரமுத்தோ எழுதியிருக்கலாமே.அவர் பேத்தி மாநாட்டில் வீணை வாசிக்கப் போகின்றார். அவ்வை காரைக்காலம்மையாரையெல்லாம் விஞ்சிய கனிமொழி வேறு இருக்கின்றார். ஒழிந்தது தமிழ். வாழ்ந்தது கருணாநிதியின் குடும்பம்

10:57 PM, May 13, 2010
Anonymous said...

ungal karuthukkalai thamilaham vazhi mozhikirathu.

7:44 AM, May 14, 2010
தமிழ்நதி said...

"இந்த மாநாட்டில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், இந்த மாநாட்டினை புறக்கணிப்பதால் தமிழக அரசை பகைத்துக் கொள்ள வேண்டுமோ என்ற அச்சம், இவ்வளவு பெரிய மாநாட்டினை நம்முடைய புறக்கணிப்பு என்ன செய்து விடும் எனவே கலந்து கொள்வோம் என்ற சால்ஜாப்பு போன்றவையே."

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றாகிவிட்டது பொய்யறிஞர்களின் பிழைப்பு. பா.விஜய்யும் வைரமுத்துவும் கலைஞரைப் பாடத் தமிழுக்குள் தலைபுதைத்து வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அடையாளம் வேண்டுமையா அடையாளம்... அதிலும் அரச அடையாளம்... மனிதர்கள்.. இந்த மனிதர்கள்!

பார்வதி அம்மா திரும்பவும் இலங்கைக்குப் போய்விட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. அறிந்திருப்பீர்கள் சசி.

8:52 AM, May 14, 2010
Anonymous said...

இந்த செம்மொழி மாநாடு கோவையில் நடத்த காரணம் கடந்த தேர்தலில் தேர்தலில் தி.மு.க மரண அடி வாங்கியது தான் .
கொங்கு பகுதியில் பலர் தி.மு.க வினரிடம் பணம் வாங்கி கொண்டு அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தார்கள் அதற்க்கு அவர்கள் சொன்ன காரணம் "மிச்சமிருக்குதுன்னு தானே குடுக்குறாங்க" ,தி.மு.க வும் மண்ணை கவ்வியது கொங்கு மண்டலத்தில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஓட்டு வாங்க முடியாது என்பது துரோகிகளுக்கு தெரியும் மேலும் அஞ்ச நெஞ்சங்களின் அரசியல் சாணக்கியமும் இங்கு செல்லாது

4:25 AM, May 15, 2010
Kasi Arumugam said...

நட்சத்திர வாரம் நன்றாகவே போகிறது. எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கனம் அதிகம். வாழ்த்துகள் சசி.

கோவையில் மாநாடு நடத்துவதற்கு உள்ளூர்க் காரணங்கள்தான் அதிகம் என்பது என் கணிப்பு. செந்தமிழோ என்னவோ, ஒரு சாக்கு வேண்டும், இங்கே இழந்த செல்வாக்கை மீட்க.
ஆனால் இந்த மாநாட்டை வைத்து தமிழ்நாட்டில் மற்ற இடங்களில் பில்டப் செய்துக்கலாமே ஒழிய இங்கே அத்தனை சீக்கிரம் ஏமாறமாட்டார்கள். பார்க்கலாம். உள்கட்டமைப்புக்கள் உதாசீனம், தொடர்ந்த மின்வெட்டு இரண்டும் போதும், குழிபறிக்க.

-’லோக்கல் தமிழன்’ காசி.;-)

12:19 PM, May 15, 2010
அற்புதன் said...

வணக்கம் சசி,
நீன்ற நாட்களின் பின் உங்கள் எழுத்தைக் கண்டது நீண்ட நாட்களின் பின் இதை எழுதத் தூண்டியது.மேலே சிலர் புலிகளுக்கு அரசியல் இருந்திருக்கவில்லை என்று எழுதி இருகிறார்கள்.அவர்களுக்கு சில பதில்கள்.ஈழத் தமிழரின் போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை விளங்கிக் கொள்ளாமையின் விழைவே இந்த மயக்கங்கள் என்று நினைக்கிறேன்.சிறிலங்கா அரசு என்பது என்றுமே சிங்களப் பேரினவாதத்தை மையமாகக் கொண்டே இயங்கி வருவது.இன்று கூட்டமைப்பின் அரசியலையும் அதற்க்கு சிரிலங்கா அரசின் எதிர்வினைகளைம் அவதானித்தால் இது தெளிவாகப் புரியும்.தமிழர்களுக்கான தீர்வை எந்தச் சிங்கள அரசும் தரப் போவதில்லை என்பதே உண்மை.அப்படியானால் தமிழர்கள் எங்கனம் தமது அரசியல் விடுதலையைப் பெறுவது? விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை விமர்சிப்பவர்கள் ,ஈழத்தில் தமிழர்கள் எங்கனம் தமது அரசியல் விடுதலையைப் பெறலாம் எந்தைச் சொல்வார்களா?பல ஆண்டுகளாக ஜனனாயக வழிமுறைகளால் போரடிய பின்னரே புலிகளின் ஆயுதப்போராட்டம் எழுந்தது.இந்தியாவின் பிராந்திய நலங்கள் அதன் ஆளும் வர்க்கங்களின் சுய நலன்கள் இதன் அடிப்படியிலையே ஈழப் போராட்டம் ஆயுத வலுவைக் கொண்டு அடக்கி ஒடுக்கப்படுள்ளது.ஆனால் இங்கே இந்த ஒடுக்குறை எந்தத் தீர்வையும் தரவில்லை என்பதனையும் அடக்கப்படும் இனம் தனது போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதுமே உண்மையானது.கருணானிதி தனது சொத்துக்களையும் விட்டுவிட்டு ஆறடி மண்ணில் படுத்து உறங்கும் போது அவர் கோடான கோடி தமிழர்மனக்களில் ஆறா வடுவையும் வரலாற்றில் மாறா துரோகத் தனத்தையுமே விட்டுச் சென்றிருப்பார்.

1:09 PM, May 15, 2010
பகீ said...

//////க‌ட‌ந்த‌ ஆண்டு மே மாத‌ம் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்விற்குப் பிற‌கு என‌க்கும் ம‌ன‌ அழுத்த‌ம் இருந்தது. இதில் இருந்து க‌வ‌ன‌த்தை மாற்ற வேண்டிய‌ தேவையும் இருந்த‌து. நான் வாங்கிய‌து ஒரு ஐபோன். தின‌மும் அமைதியான‌ பாட‌ல்களை கேட்க‌ தொட‌ங்கினேன். இளைய‌ராஜாவின் ர‌ம‌ண‌ மாலை, திருவாச‌க‌ம் போன்ற‌ பாட‌ல்க‌ளை தின‌மும் கேட்பேன். டி.எம்.செள‌ந்த‌ராஜ‌னின் முருக‌ன் பாட‌ல்க‌ளை கேட்க‌ தொட‌ங்கினேன். பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுதும் வாக்கிங் செல்லும் பொழுதும் என்னுடைய காதில் ஐபோன் ஒட்டிக் கொண்டிருக்கும். என‌க்கே இது ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்று தான். ஆனால் அதைத் தான் செய்தேன். ஒட்டு மொத்த‌மாக‌ த‌மிழ், எழுத்து போன்ற‌ அனைத்திலும் இருந்து வில‌கி விட‌ வேண்டும் என்ப‌து தான் என‌து எண்ண‌ம். சமீப காலங்களில் அதிகமாக சினிமா பார்க்கிறேன். தொலைக்காட்சி பார்க்கிறேன். வேலையில் கவனம் செலுத்துகிறேன். அரசியலிலும் மற்ற விடயங்களிலும் கவனத்தை குறைத்துக் கொள்ள முயன்றேன். மாவீர‌ர் தின‌த்தில் ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் ஷாப்பிங் சுற்றினேன். இது எல்லாம் நம‌க்கு நாமே செய்து கொள்ளும் ஏமாற்ற‌ம் தான் //////

நன்றி.


////உங்களின் ஈழத்து உணர்வுகளை நான் நன்கு உணருகிறேன்....////

செய்திகளை உணரமுடியாது சிவா, உணருகின்றேன் என்று சொல்லி மேலும் வேதனைப்படுத்தாதீர்கள். நீங்கள் மாநாட்டுக்கு போய்வர வாழ்த்துக்கள்.

இந்த நியாயமான கோபத்துக்கும் முடிந்தால் பதில் சொல்லுங்கள்.

http://mauran.blogspot.com/2010/05/blog-post.html

1:46 PM, May 28, 2010