வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, June 27, 2005

காஷ்மீரின் விடுதலை - 1

பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.



நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது, போர் மூலம் பாக்கிஸ்தானை வென்று அந்தப் பகுதியை எல்லாம் கைப்பற்ற முடியாது என்று தெரிந்தாலும், மதவெறியை தூண்டுவதற்கும், அதன் மூலம் பா.ஜ.க. வின் ஓட்டு வங்கி பெருகுவதற்கும் இந்தப் பேச்சு அவர்களுக்கு உதவுகிறது. இப்படியே இது அரசியலாகி, நாட்டின் முக்கிய தீவிரவாத, கொளரவ பிரச்சனையாகி விட்டது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் "பிரதமராக" நியமிக்கப்பட்டார். ஆம்...ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் "தனி நாடாக" சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு. ஆம்.. முறையற்ற தேர்தலை இந்தியாவிற்கு அறிமுகம் செய்த பெருமை நேருவையே சாரும். ஏன் நேரு இதனை செய்தார் ? பிறகு பார்க்கலாம்.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.



காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.



பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?

அடுத்த பதிவில் எழுதுகிறேன்

Leia Mais…