Saturday, December 17, 2005

சாப்பலின் Remote Control


இந்தியப் பாராளுமன்றம் கங்குலி நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்போகிறது. இது நாட்டிற்கு அவசியமான, முக்கியமான பிரச்சனை போல இடதுசாரி மற்றும் மேற்குவங்காள தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். கங்குலி நீக்கப்பட்டது சாப்பல்-பவார் & Coவின் அரசியல் காரணமாகத் தான் என்பதிலும் கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் இது பாரளுமன்றம் விவாதிக்ககூடிய முக்கியமான பிரச்சனையா என்பது தான் கேள்வி.

இந்திய கிரிக்கெட்டின் அரசியலும் தேர்வுக் குழுவில் இருக்கும் தில்லுமுல்லுகளும் இன்று வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரளுமன்றமும் இந்தப் பிரச்சனையை விவாதிப்பது பிரச்சனையை மேலும் அரசியல் மயமாக்கி விடும்.

என்னைப் பொறுத்தவரை கங்குலியை நீக்கியது சரி அல்ல. அவரை மறுபடியும் அணியில் சேர்க்க வேண்டும்.



கங்குலியை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கிய பொழுது அது சரியானது என்றே நினைத்தேன். அது போல கங்குலி டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அது சரியான முடிவல்ல, கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என்று கருதினேன்.

ஆனால் இப்பொழுது கங்குலி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் அரசியலின் உச்சகட்டமாகத் தான் தெரிகிறது.

தில்லி டெஸ்ட் போட்டியில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. நான் போட்டியை பார்க்கவில்லை. அர்ஜுனா ரணதுங்கா கங்குலி அடித்த சில கவர் டிரைவ்கள் தான் தில்லி டெஸ்ட் போட்டியில் தான் பார்த்த ஷாட்களில் சிறப்பான ஷாட்டாக இருந்ததாக தெரிவிக்கிறார். கங்குலி சிறிது காலம் தன்னுடைய பழைய ஆட்டத்திறன் இல்லாமல் இருந்தார். அதனை பெற முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தில்லி போட்டியில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய கங்குலி அடுத்த போட்டியில் சதம் அடித்தால் அவரது இடம் அணியில் உறுதியாகி விடும் என்று நினைத்து கங்குலியை சாப்பல்-கிரண் மோர் & Co நீக்கியிருக்கிறார்கள்.

சாப்பல் - கங்குலி சண்டையில் சாப்பல் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் முட்டாள்தனம் நிறைந்த அதிகப்பிரசங்கித்தனம் என்றே நான் நினைக்கிறேன். அணியின் கேப்டன் என்னும் பொழுது அவர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் நியதி. கோச் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் டீம் மீட்டிங்கில் கங்குலியை விலகிக் கொள்ளுமாறு கோச் கூறியது அதிகப்பிரசங்கித்தனம். சாப்பலுக்கு கேப்டனை விலகச் சொல்லும் அதிகாரம் கிடையாது. இது கேட்பனாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட அவமரியாதை. கங்குலி கேப்டனாக இருப்பதிலோ, அணியில் இருப்பதிலோ பிரச்சனை என்றால் அதனை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு கேப்டனை நீ அணியில் இருந்து விலகிக் கொள் என்று சொல்வது எந்த வகையில் சரி என்பது எனக்கு தெரியவில்லை. அது போலவே கங்குலி அந்தப் பிரச்சனையை மீடியாக்களிடம் கொண்டு சென்றதும் சரியான காரியமல்ல.

நன்றாக விளையாடுபவர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்று கூறுவது மிகச் சரி. அப்படியானால் கங்குலி மட்டுமே தான் அணியில் சரியாக விளையாட வில்லையா ? இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அடித்த 90+ தவிர சச்சின் கடந்த இரு வருடங்களாக எந்தளவுக்கு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கைக்கு எதிராக அடித்த 90+க்குப் பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் சச்சின் சரியாக விளையாடவில்லை. எனவே அவர் எதிர் வரும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு விடுவாரா ? கங்குலிக்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் ?

தன்னுடைய அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கேப்டனுக்கு முழு அதிகாரம் உண்டு. கங்குலி கேப்டனாக இருந்த பொழுது அதைத் தான் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கே ஒரு புதிய முகத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் கங்குலி. ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் திராவிடை சாப்பல் தன் ரிமோட் கண்ட்ரோலால் இயக்குவது போல தான் தோன்றுகிறது. சாப்பல் தான் இந்தியக் கிரிக்கெட்டின் தேர்வாளர், கோச், கேப்டன் எல்லாமும்.

சிறப்பாக விளையாடும் அனைவருக்கும் கங்குலி அணியில் இடமளிக்க தவறவில்லை. ஓய்வு பெற்று விடும் முடிவுக்கே சென்ற ஸ்ரீநாத்தை அணிக்கு கொண்டு வந்து அவரை கங்குலி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அணித் தேர்வில் இருந்த பல தில்லுமுல்லுகளை கங்குலி நீக்கி திறமையானவர்களை ஊக்குவித்தார். ஒரு கேப்டன் அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால் திராவிட் கங்குலி விஷயத்தில் நடந்த கொண்டு முறை அவ்வாறாகத் தெரியவில்லை.

கங்குலி தில்லி போட்டியில் சிறப்பாக விளையாடினார், அடுத்த வரும் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடக்கூடும் என்றால் அவரை அணியில் தக்கவைத்துக் கொள்ளவே எந்த கேப்டனும், கோச்சும் விரும்பவேண்டும். அர்ஜுணா ரணதுங்க கூட கங்குலி தொடர்ந்து இந்திய அணியில் இருப்பது இந்தியாவிற்கு நல்லது என்றே கூறுகிறார். கங்குலி தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொள்ள சிறப்பாக விளையாடவேண்டும். தில்லி போட்டியில் கூட அதைத் தான் அவர் செய்ய முயன்றுள்ளார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயமும் கூட. ஆனால் கங்குலியை ஆடவிடாமல் நீக்க வேண்டும் என்பதில் தான் சாப்பலும் திராவிட்டும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் கங்குலியை அடுத்த போட்டியில் ஆட விடாமல் நீக்கி இருக்கிறார்கள்.

கங்குலி அணியில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்பதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு குழு என்று வரும் பொழுது அதில் பிரச்சனைகளும் வரத் தான் செய்யும். சிலரை மட்டுமே கொண்ட சாப்ட்வேர் டீமில் கூட எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய கிரிக்கெட் அணியிலும் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தான் செய்யும். அது அணியில் உள்ளவர்களை கங்குலி பிரிக்கிறார் என்று பொருள் தருமா என்று தெரியவில்லை. கங்குலியை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பல் பிதற்றுவதாகத் தான் தோன்றுகிறது. இப்பொழுது கூட இந்திய அணியில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் ஒரே எண்ணத்தில் சாப்பலின் பின் இருக்கிறார்களா என்ன ?

இப்பொழுது கங்குலியை அணியில் கொண்டு வந்து ஒரு போட்டித் தொடருக்கு வாய்ப்பளித்து பின் அவரே ஓய்வு பெற்றுக் கொள்வது என்பதான ஏற்பாடு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்டீவ் வாக்கிற்கு கொடுக்கப்பட்டது போல கங்குலிக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படுமாம். இது ஒரு முட்டாள்தனமான காரியம். முதலில் ஸ்டீவ் வாக்கிற்கு செய்யப்பட்டதே பெரிய அவமதிப்பு. அதையே கங்குலிக்கும் செய்வது முட்டாள்தனம்.

கங்குலி நன்றாக விளையாடினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தே தீர வேண்டும். நன்றாக விளையாடா விட்டால் நீக்கி விடலாம். அதற்காக அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும், அரை சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் - just too much

3 மறுமொழிகள்:

Pot"tea" kadai said...

சசி, நீங்கள் நன்றாக ஆராய்ந்து எழுதுபவர் தான் என்றாலும் உங்களுடைய இந்த பதிவு பல விசயங்களை இருட்டடிப்பு செய்வதாகவே தெரிகிறது.
//சாப்பல்-பவார் & Coவின் அரசியல் காரணமாகத் தான் என்பதிலும் கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது//

என் சிற்றறிவுக்கு எட்டிய வரை,

1) இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவினருக்கு அறிவுருத்தும் அளவிற்கு எந்தவொரு இந்திய அணியின் பயிற்சியாளருக்கும் அதிகாரமோ, வாய்ப்போ கொடுக்கப்பட்டது இல்லை.
2)இந்திய் - இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக் குழு கூடுகிறது. அதில் வெறும் வங்காள கிரிக்கெட் போர்டு தலைவரான "டால்மியா" விற்கு என்ன வேலை?
3)உங்களுடைய இந்த பதிவில் நீங்கள் "சாப்பல்" ஐ மட்டுமே குறி வைத்து எழுதியுள்ளதாகத் தெரிகிறது.

கங்குலிக்கு "work ethics" என்பது சிறிதும் கிடையாது. அப்படி இருந்தது என்றால் அவர் "dressing room" ல் நடந்த விசயங்களை வெளியில் சொல்ல வேன்டியிருக்க அவசியம் இருந்திருக்காது.அது தொடர்பான "சாப்பல்" மின்னஞ்சல் கூட பத்திரிகைகளுக்கு வெளியிடபட்டது ஒரு ஆரோக்கியமற்ற தலையீடே.

//சாப்பல் - கங்குலி சண்டையில் சாப்பல் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் முட்டாள்தனம் நிறைந்த அதிகப்பிரசங்கித்தனம் என்றே நான் நினைக்கிறேன். அணியின் கேப்டன் என்னும் பொழுது அவர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் நியதி. கோச் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் டீம் மீட்டிங்கில் கங்குலியை விலகிக் கொள்ளுமாறு கோச் கூறியது அதிகப்பிரசங்கித்தனம். சாப்பலுக்கு கேப்டனை விலகச் சொல்லும் அதிகாரம் கிடையாது. இது கேட்பனாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட அவமரியாதை. கங்குலி கேப்டனாக இருப்பதிலோ, அணியில் இருப்பதிலோ பிரச்சனை என்றால் அதனை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு கேப்டனை நீ அணியில் இருந்து விலகிக் கொள் என்று சொல்வது எந்த வகையில் சரி என்பது எனக்கு தெரியவில்லை.//

உண்மையில் சொல்லப் போனால் "சாப்பல்" கங்குலிக்கு ஒரு சூப்பர் "ஸ்டண்ட்" விட வாய்ப்பளித்தார் என்றே கூற வேண்டும். கங்குலி அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மேலும் "சாப்பல்" ஒரு "suggestion" தான் கொடுத்தாரேயொழிய , நிர்ப்பந்திக்கவில்லை என்பதனையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த முறை நீங்கள் இது தொடர்பான பதிவுகள் எழுதும் பொழுது சற்று ஆராய்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.

கடைசியாக, கத்தியை எடுப்பவன் கத்தியாலே சாவான் என்று கூறுவார்கள். டால்மியாவால் அரசியல் உத்தியை பயன்படுத்தி வந்த கங்குலி அதே அரசியலினால் அழிந்தாலும் இந்தியாவிற்கு பேரிழப்பு ஏதும் இல்லை.

இதை பாராளுமன்றத்தில் விவாதிப்பது, இந்திய அரசியல்வாதிகளின் அறியாமையையே காட்டுகிறது.

12:32 AM, December 18, 2005
தமிழ் சசி | Tamil SASI said...

உங்கள் கருத்துக்கு நன்றி

நான் எதையும் இங்கு இருட்டடிப்பு செய்ததாக தெரியவில்லை.

கங்குலி டால்மியாவால் தான் இந்திய அணிக்குள் வந்தார், கேப்டனாக ஆனார் என்பதெல்லாம் அபத்தம்

சச்சினுக்கு பிறகு ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி இரண்டிலும் விளையாடக்கூடிய ஒருவர் கேப்டனாக வேண்டும் என்ற நிலையில் கங்குலி கேப்டனாக ஆனார். அப்பொழுது கும்ளே மோசமான பார்மில் இருந்தார். திராவிட் ஒரு நாள் போட்டியில் விளையாடக்கூடியவர் அல்ல என்ற முத்திரை இருந்தது. வேறு சாய்சே இல்லாமல் தான் கங்குலி கேப்டனாக்கப்பட்டார். அதன் பிறகு கங்குலி அந்தப் பதவியை எப்படி மாற்றினார், இந்தியக் கிரிக்கெட் அணியை எப்படி மாற்றினார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அது போல 10,000 ஒரு நாள் ரன்களுக்கு மேல் அடித்த ஒருவரை சிபாரிசு காரணமாக வந்தார் எனக் கூறுவது - good joke

நான் பத்திரிகைகளில் படித்ததை வைத்து பார்க்கும் பொழுது சாப்பலின் பிடிவாதம் காரணமாகத் தான் கங்குலி நீக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அதற்கு கங்குலியின் Attitude தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு கூட்டங்களில் அணியின் கோச்சும், கேப்டனும் கலந்து கொள்வார்கள் என்பதும் அவர்களின் கருத்துக்களும் கேட்கப்படும் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்

சாப்பலுக்கு அதிக அளவில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன்

பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சனையை விவாதிப்பது சரியல்ல.

9:46 AM, December 18, 2005
Raja said...

இது கங்குலி அவமானம் என்பதை விட இந்திய கிரிக்கெட்டுக்கே அவமானம். டிராவிட் போல கங்குலி டம்மி கேப்டனாக இருக்கமாட்டார் என்ற ஒரே காரணம் தான் கங்குலி நீக்கப்பட்டதற்கு.சாப்பாலின் ஆட்ட்ம் முடிவுக்கு வரும்.

12:35 AM, December 19, 2005