Saturday, January 21, 2006

அள்ளிக் கொடுக்கும் ஜெ

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல "Populist" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)

இந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.



ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு "fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல "Populist" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.

0 மறுமொழிகள்: