Saturday, February 18, 2006

வைகோவின் எதிர்காலம்

தமிழக அரசியலில் வைகோ குறித்த ஒரு குழப்பமான எண்ணமே தற்பொழுது உள்ளது. இந்தப் பக்கம் தாவுவதா, அந்தப் பக்கம் செல்வதா என்பது குறித்து கணநேரத்தில் முடிவு செய்து தாவி விடும் இந்திய/தமிழக அரசியல்வாதிகள் மத்தியில் இந்தக் குழப்பம் விந்தையாகத் தான் இருக்கிறது. ஒரு புறம் அவரை சிறையில் தள்ளிய ஜெயலலிதா, மற்றொரு புறம் அவரது பலத்தை மட்டும் உபயோகித்து கொண்டு ஆனால் அவரை அதிகம் வளர விடாமல் செய்யும் நோக்கத்தில் இருக்கும் கலைஞர் என அவரது அரசியல் வாழ்வின் இரு எதிரிகளில் ஒரு எதிரியை தேர்ந்தெடுத்தாக வேண்டிய சூழ்நிலையில் வைகோ இருக்கிறார்.


கொஞ்சம் அதிக இடங்களை கொடுத்தால் திமுகவிடமே தங்கி விடலாம், கொள்கைவாதி என்ற இமேஜையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற நப்பாசை.அந்த நப்பாசையால், தன்னுடைய பேரத்தை தக்க வைத்துக் கொள்ள இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று வைகோ ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறார். திட்டமிட்டு இந்தக் குழப்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அந்தக் குழம்பிய குட்டையில் பெரிய மீன்களாக பிடித்து விட வைகோ முனைந்துக் கொண்டிருக்கிறார்.

வைகோ முன் இருக்கும் குழப்பாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருப்பது இரண்டு தான்.

அதிக இடங்களா ? காப்பாற்ற வேண்டிய இமேஜா ?

அதிக இடங்கள் முக்கியம் இல்லை என்றால் எதற்கு அரசியல் என்ற கேள்வி வரும். இமேஜ் முக்கியம் என்றால், அதை மட்டும் வைத்து கொண்டு வைகோ எத்தகைய அரசியல் நடத்தப் போகிறார் என்ற கேள்வி எழும்.


இமேஜை காப்பாற்ற நினைத்தால் சுந்தரமூர்த்தி கூறுவது போல திக, தமிழர் தேசியக் கட்சி போன்றவை போல மதிமுகவை மாற்றி விடலாம். மதிமுக தொண்டர்கள் திமுகவிற்கும், அதிமுகவிற்கும் சென்று விடுவார்கள். கூடாரம் காலியாகிய பிறகு திருவாசகம் விழாவில் இளையராஜா கூறியது போல அவரை ஒத்தவர்களுடன் சேர்ந்து அவரது பேச்சாற்றலைக் கொண்டு உலகெங்கிலும் தமிழ்மணம் பரப்பலாம். கிட்டத்தட்ட ஒரு கிருபானந்த வாரியார் போல மாறிவிடலாம். ஆன்மீகத்திற்கு பதிலாக பெரியாரிசத்தையும், தமிழ் உணர்வையும் பரப்பலாம்.

ஆனால் வைகோ அதை செய்ய நினைக்கிறாரா என்ன ?

அதிகார பலம், சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் இருக்கும் எண்ணிக்கையின் பலம் மற்றும் தேர்தலில் வெற்றி இவை தான் அரசியலில் நீடித்து நிற்க தேவை. வெற்றி ஒன்றே கட்சியின் தொண்டர்களையும், பிற கட்சி தலைவர்களையும் வசியப் படுத்தும் வசிய மருந்து. அந்தப் பலத்தை எதையாவது செய்து பெற்றுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில் இமேஜை காப்பாற்ற வேண்டுமானால் தனி பலம் தேவை. அந்த தனி பலம் வைகோவிடம் இல்லை.

சிறையில் வைகோ தனக்கான திட்டமாக சிலவற்றை முடிவு செய்திருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகு வைகோவின் சில நடவடிக்கைகளும் அவ்வாறே இருந்தன. பாராளுமன்றத்திற்கு போட்டியிடுவதில்லை என முடிவு செய்தார். நடைபயணம் மேற்க்கொண்டார்ர். அந்த முயற்சிகளின் பலனை அறுவடை செய்யும் நேரமிது. அவரது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான தருணம் இது. அதனால் தான் அவருடைய திட்டங்களின் அடுத்த அத்தியாயமாக இந்தக் "குழப்ப நாடகம்" அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

வைகோவின் கடந்த கால முடிவுகளும் அவரை இந்தத் தேர்தலில் ஒரு உறுதியான முடிவை எடுக்க தூண்டியுள்ளன. அந்த உறுதியான முடிவு "எண்ணிக்கை" மட்டுமே. இமேஜ் அல்ல.

கடந்த காலங்களில் வைகோவின் சரியான திட்டமிடாத அரசியல், சந்தர்ப்பச் சூழ்நிலை, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், இமேஜை காப்பாற்றும் பயம், அரசியல் தடுமாற்றம் இவற்றால் மதிமுக அழிவின் விளிம்பிற்குச் சென்றது. இரு பெரும் திராவிட கட்சிகளின் தலைவர்களும் மதிமுகவை அழிப்பதில் காட்டிய பெரும் அக்கறையும் அதனை எதிர்த்து வீம்பிற்காக தன்னந்தனியாக சாதூரியம் இல்லாமல் போராட முற்பட்டதும் மதிமுகவை காணாமல் போக செய்திருக்கும். வைகோவின் போராடும் குணம் ஒன்று மட்டுமே அவரையும் அவரது கட்சியையும் அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றியது.

ஆனால் எந்தவித சரியான பாதையும், செயல் திட்டமும் இல்லாமல் போராடிக் கொண்டே இருப்பதில் என்ன பயன் இருக்க முடியும் ? வைகோ இதனை யோசிக்காமல் இருந்திருக்க முடியாது.

வைகோவின் அரசியல் பயணத்தில் முக்கிய கட்டமான திமுகவின் பிளவு. அந்த ஆரம்பம் மிகுந்த ஆரவாரத்துடனே இருந்தது. தமிழக ஊடகங்கள் எல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு திமுக இரண்டாக பிளவு பட்டு தொண்டர் பலமும், இளைஞர் கூட்டமும் வைகோ பின் திரண்டு இருப்பதாக எழுதின. சினிமாவில் இருந்து தான் சென்னை கோட்டையை எட்ட முடியும் என்று வலுவாக நம்பப்பட்ட நேரத்தில் தன்னுடைய அனல் கக்கும் பேச்சாற்றல் ஒன்றை மட்டுமே கொண்டு தமிழகத்தின் கோட்டையை தொட்டு விடும் தூரத்தில் வைகோ இருப்பதாக நம்பப்பட்டது. ஊடகங்கள் அதனை மிகைப்படுத்தி எழுதின என்றாலும் முழுமையான பொய் என்றும் சொல்லி விட முடியாது. மதிமுக தான் சந்தித்த முதல் இடைத் தேர்தலில் திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

திமுகவின் பலத்தை குறைக்க வேண்டுமானால் தனக்கு சாதகமான ஒரு நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆனால் வைகோ அதனைச் செய்ய வில்லை. திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார். கலைஞர் தனது வழக்கமான அரசியல் சாணக்கியத்தனத்தை பயன்படுத்தி மூப்பனாரை வளைத்துப் பிடித்தார். சந்தர்ப்பச் சூழ்நிலையும் அப்பொழுது வைகோவிற்கு எதிராகவே அமைந்தது. தமிழகத்தில் கரைபுரண்டோடிய "ஜெ எதிர்ப்பு அலையில்" வைகோவால் கரை சேர முடியவில்லை. ஜெ எதிர்ப்பு, தமிழ் மாநில காங்கிரஸ் - திமுக கூட்டணி போன்றவைக்கு மத்தியில் தனதுசொந்த ஊரில் கூட வைகோவால் வெற்றி பெற முடியவில்லை.

கலைஞர் ஆட்சியை பிடித்ததும், வைகோ தன் சொந்த தொகுதியில் கூட தோல்வி அடைந்ததும் வைகோவின் கூடாரத்தில் இருந்தவர்களை திமுக நோக்கி திருப்பியது. ஆனாலும் 1996 தேர்தலில் வைகோ 15லட்சம் ஓட்டுகளை பெற்றிருந்தார். வைகோ அன்று அடைந்த சரிவில் இருந்து பிறகு மீளவே இல்லை. மறுபடியும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மற்றொரு மோசமான முடிவை எடுத்தார். அது தான் அவரது அரசியல் வாழ்க்கையை படுகுழிக்கு கொண்டு சென்றது.

கடந்த கால தவறுகள் வைகோவிற்கு நல்ல பாடத்தையே கொடுத்திருக்கின்றன. அதனால் தான் அவர் இன்று குழப்ப நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் திடமான ஒரு முடிவை எப்பொழுதோ எடுத்து விட்டதாக நான் நினைக்கிறேன். இது சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக மட்டுமே எடுக்கும் முடிவல்ல. திமுக எத்தனை தொகுதிகளை அவருக்கு விட்டு கொடுக்கும் என்பது அவரால் கணிக்க முடியாத சிதம்பர ரகசியம் அல்ல. கூட்டணியில் இருந்து நழுவ ஒரு நல்ல காரணத்தை தேடிக் கொண்டு தனது பேரத்தை அதிகரித்து கொண்டிருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். நழுவக் கூடிய நேரமும் தற்பொழுது வந்து விட்டது.

இன்று தமிழகம் கூட்டாட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில், அலை வந்தது போல ஒரு கூட்டணிக்கே தமிழக மக்கள் தொடர்ந்து வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் இம் முறை அது நடக்கப் போவதில்லை என்பது எனது கணிப்பு.

கடந்த சட்டமன்ற தேர்தல் கூட்டணி பலத்திற்கும் தற்போதைய கூட்டணி பலத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. மதிமுக-அதிமுக -விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணிக்கு அது ஒரு சரியான மாற்று கூட்டணியாகவே அமையக்கூடும். அதிமுக, மதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள் தான். திமுக-பாமக-விடுதலைச் சிறுத்தைகள் வடமாவட்டங்களில் பலமாக இருப்பவை. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கும். ஆனால் திருமாவளவன் அதிமுக கூட்டணியில் சேருவார் என்றே இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

கூட்டணி ஆட்சி அமையும் பட்சத்தில் அதிக எண்ணிக்கையில் எம்.எல்.ஏ. பலம் இருக்க வேண்டும். அதுவும் தவிர இந்த தேர்தலில் வைகோ பெறும் எண்ணிக்கை தான் அவரது எதிர்கால தமிழக அரசியல் நிலையை தீர்மானிக்கப் போகிறது. பாமக கடந்த சில தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் தமிழக அரசியலில் அதற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன. இத்தகைய வெற்றியை மதிமுகவும் இன்று பெற்றாக வேண்டும்.

இந்திய அரசியலில் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து மைய அரசின் எதிர்காலத்தை தீர்மானிப்பது போல, தமிழக அரசியலும் இன்று சிதறுண்டு காணப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிகள் பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளால் ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்ட தேவர், நாடார் இன வாக்குகளும் எதிர்காலத்தில் இவ்வாறு சிறு கட்சிகளால் சிதறுண்டு போகும் அபாயமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் தன்னுடைய குறுகிய அரசியல் பலத்தை பலப்படுத்துவதும், தனது தளத்தை விரிவுபடுத்துவதும் வைகோவிற்கு முக்கியம். திமுக தரும் 20 தொகுதிகளை கொண்டு வைகோ அரசியலில் ஒன்றும் சாதித்து விட முடியாது. ஜெயலலிதா தரத் தயாராக இருக்கும் 40-50 தொகுதிகள் கவர்ச்சிகரமான பேரமாகவே உள்ளது. அதில் கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் மதிமுக அடுத்த நிலைக்கு தயாராகும். அடுத்த நிலையாக வைகோ கருதுவது கலைஞருக்குப் பின் இருக்கும் திமுக. அவர் நினைப்பது எல்லாம் கைகூடுமா என்பது தெரியவில்லை. ஆனால் it's worth a gamble.

இந் நிலையில் ஜெயலலிதா தன்னை கைது செய்தது போன்ற செண்ட்டிமெண்ட் விஷயங்களில் தனது கவனத்தை வைகோ சிதற விட மாட்டார். தமிழக அரசியலில் அவரது Mr.Clean, கொள்கைவாதி என்ற இமேஜ் சரியப்போகிறது. அந்த இழப்பு தேர்தலில் வெற்றியாக மாறுமா, எதிர்காலத்தில் வைகோ பெரிய சக்தியாக மாறுவாரா என்பதை இந்த தேர்தலும், எதிர்வரும் காலங்களும் தான் பதில் சொல்ல வேண்டும்.















வைகோ அவ்வாறு ஒரு சக்தியாக உருமாறும் பட்சத்தில் தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்று தலைவருக்கு காணப்படும் வெற்றிடம் நிரப்பப்பட்டு விடும்.

20 மறுமொழிகள்:

Pot"tea" kadai said...

சிறந்த கருத்தாய்வு!

தற்போதைய நிலவரப்படி திமுகவில் கலைஞர் மட்டும் தான் அவரை சகோதரராக பாவிக்கிறார். இரண்டாம் நிலை தலைவர்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆகையால் கலைஞருக்கு பிறகு அவர் திமுகவை கைப்பற்றி வழிநடத்துவது இயலாத காரியம்.

ஆகையால் அவர் கொள்கைகள் இத்தேர்தலோடு முடிந்து விட்டது. கலைஞருக்குப் பிறகு திமுக பலவீனப்படும் பட்சத்தில் அதிமுகவுக்கு நிகராக தனது கட்சியை தூக்கி பார்க்கும் நிலையில் உள்ளார். அதற்காக அவர் அதிமுகவோடு சேர்ந்து தனது கட்சியின் பலத்தை சட்டமன்ற்த்தில் உயர்த்துவதற்காக இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்.

ஆனால் அவர் எதை முன்னிறுத்திப் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்பதே கேள்விக்குறி.
ஆக மொத்தத்தில் இத்தேர்தல் முடிவுகள் யாரும் எதிபாராத நிலையிலேயே இருக்கும் என்பது என்னுடய கணிப்பு.

1:33 PM, February 18, 2006
Thangamani said...

ஜெயலலிதா வைகோவுக்கு 40-50 இடங்கள் தருமிடத்து, அவர் அதிமுகவுக்குச் செல்வது நல்ல முடிவாகத் தோன்றுகிறது. அவர் தனது கட்சியை பலப்படுத்தவும், சட்டசபையில் தனது இருப்பை நிறுவுவதற்கும் அது உதவும். மாறாக திமுக கூட்டணியில் இருப்பது அவரை மேலும் பலவீனப்படுத்துவதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

பார்க்கலாம்.

3:14 PM, February 18, 2006
Gopalan Ramasubbu said...

One of the best unbiased post i have read about MDMK and Vaiko so far.Weldone Thamizh sasi.Great work

6:46 PM, February 18, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி

/*

திமுகவில் கலைஞர் மட்டும் தான் அவரை சகோதரராக பாவிக்கிறார்

*/

சத்யா,

கலைஞருக்கு பிள்ளைப் பாசம் தான் அதிகம். சகோதரப் பாசமெல்லாம் கிடையாது :-)

9:00 PM, February 18, 2006
Boston Bala said...

சுவாரசியமான அலசல். நீங்கள் சொல்வது போல், அதிமுக-வுடன் கூட்டு என்பதை வைகோ எப்பொழுதோ எடுத்திருக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் பங்கு பெறாமல் இருப்பதன் மூலம், எந்தக் கூட்டணிக்கும் செல்லும் option-ஐ வைத்துக் கொண்டிருக்கிறார். அமைச்சர்கள் இருந்தால், அவர்களின் பதவி பேரங்கள், நீக்கங்கள், பா-ஜ.க.வுடன் கூட்டு முடியாது என்பது போல் சங்கடங்களும் தடைகளும் முட்டுப் போட்டிருக்கும்.

கலைஞர் ஆட்சி அமையாமல் இருப்பதன் மூலம் திமுகவின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற முடியும் என்னும் எண்ணம் உண்டு. ஆளுங்கட்சியை உடைப்பதை விட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எளிதில் வலையில் விழுவார்கள்.

நாற்பது இடங்களில் நின்றாலும் எத்தனை இடங்களில் வெல்வார்கள்?

9:52 PM, February 18, 2006
குழலி / Kuzhali said...

//திமுகவின் பாரம்பரிய பலம் வடமாவட்டங்கள் தான். அங்கிருந்த பாமகவுடன் கூட்டணி அமைத்திருக்கலாம். ஆனால் அவர் தமிழகத்தில் ஒன்றுக்கும் உதவாத மார்க்ஸ்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே கூட்டணி அமைத்தார்
//
அந்த நிலையில் பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் ஒரு அரசியல் இரட்டையர்களாக இராமதாசுவும் வைகோவும் உருவாகியிருப்பார்கள், குறைந்த பட்சம் வைகோ மட்டுமாவது சட்டமன்றத்திற்கு சென்றிருப்பார், இது பற்றி ஒரு அலசல் அந்த நேரத்தில் நக்கீரனோ ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தேன்...

//ஆனால் நாற்பது இடங்களில் நின்றாலும் எத்தனை இடங்களில் வெல்வார்கள்?
//
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு, வைகோ ஏற்கனவே அதிமுக வுடன் கூட்டணி என்பதை முடிவு செய்து விட்டதாகவே தெரிகின்றது, இந்த தேர்தலில் தெரிந்து விடும்.

நன்றி

7:52 AM, February 19, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

தமிழக அரசியல் வரலாற்றைப் புரட்டினால் ஆட்சியிலிருந்த/பலமிக்க கட்சியைத் தள்ளிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதற்கு இரண்டு மாதிரிகள் கிடைக்கும்: (1) காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த திமுக; (2) திமுகவைப் பிளந்து ஆட்சியைப் பிடித்த அதிமுக.

முதலாவது மாதிரி படிப்படியான, இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, நீண்ட கால வளர்ச்சி. கொள்கையடிப்படையில் அதிகமாக சமரசம் செய்துக்கொள்ளாமல், மைய நீரோட்ட ஊடகங்களை நம்பாமல், தங்கள் சொந்த ஊடகம், எழுத்து, மேடை, தொண்டர்படை இவற்றை மட்டுமே நம்பி வளர்ந்து காங்கிரசுக்கு அடுத்து இரண்டாவது நிலையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து, பிறகு ஆட்சியையும் பிடிக்க கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆனது.

இரண்டாவது ஏற்கனவே கட்சியில் செல்வாக்குடன் இருந்த தனிநபர் செல்வாக்கோடு, சினிமாப் பிரபலம், பணம், ஊடகங்கள் போன்றவற்றை இணைத்து சாதித்த குறுகிய கால சாதனை.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அண்ணாவின் தொலைநோக்கு அணுகுமுறையை மறந்துவிட்டு எம்ஜியார் ஆக பலர் முயன்று தோல்வியடைந்துள்ளனர். எம்ஜிஆருக்கிருந்த அனைத்துத் தகுதிகளும் கணிசமாக இருந்த சிவாஜியாலேயே ஒன்றும் சாதிக்கமுடியவில்லை என்றானபிறகு பிற நடிகர்களுக்கு சாத்தியமேயில்லை.

வைகோவுக்கு எம்ஜியாருக்கு இருந்ததைப் போல இயக்க ஆதரவு ஓரளவு இருந்தும், பிற நேர்மறையான காரணிகள் இல்லாததால் அவர் அண்ணாவின் தொலைநோக்கு அணுகுமுறையையே கையாண்டிருக்கவேண்டும். பதவி ருசி கண்டறியாத தொண்டர்களை மட்டும் நம்பி, கொள்கையளவில் தனித்தன்மையை இழக்காமல் தனியாகவோ, சிறிய கட்சிகளோடு கூட்டு வைத்து மூன்றாவது அணிக்கு தலைமயேற்று படிப்படியாக வளர்ந்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை 1998 இல் அதிமுக வுடன் கூட்டுவைத்து பக்கவாத்தியம் வாசிக்க முடிவு செய்தபோதே இழந்தாகிவிட்டது. இனிமேலும் அவர் கட்சியை வளர்த்து ஆட்சியைப்பிடிப்பார் என்று ஊடகங்கள் வேண்டுமானால் உசுப்பிவிடலாம். அதற்கான உள்நோக்கம் வேறு. அது 90களின் ஆரம்பத்திலேயே தெளிவாகிவிட்டது (இப்போது உசுப்பிவிட்டுக்கொண்டிருப்பதற்கும் அதே உள்நோக்கம் தான்). வைகோவின் காலம் முடிந்துவிட்டது என்பதை கொஞ்சம் கவலையுடன் ஏற்றுக்கொள்ளவேண்டிய காலம் வந்தாகிவிட்டது.

9:17 AM, February 19, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

சுமூ,

வைகோ, எம்.ஜி.ஆரைப் போல சரியான சாதகமான சூழ்நிலை பார்த்து கட்சியை விட்டு வெளியேற வில்லை. திமுகவில் இருந்து வெளியேற்றப் பட்ட சூழ்நிலை அவரே எதிர்பாராதது. ஆனாலும் திமுகவின் மிகப் பெரிய பிரிவு அவர் பின் சேர்ந்தது. ஆனால் ஒரு மாற்று அணியை துவக்க அவரால் முடியவில்லை. அவரை மாற்று அணியின் கூட்டணி தலைவராக ஏற்றுக் கொள்ள ராமதாஸ், மூப்பனார் போன்ற தலைவர்கள் அப்பொழுது தயாராக இல்லை என்பதும் வைகோ ஒரு சரிசமமான நிலையை ஏற்றுக் கொள்ள அன்றைக்கு தயாராக இல்லை என்பதும் வைகோ, ராமதாஸ் இருவரும் இணையாமல் போனதன் முக்கிய காரணம். இது எல்லாமே வைகோவின் பலவீனமாக அமைந்தன.

1998ல் அதிமுகவுடன் சேர்ந்தது தவறான காரியம் அல்ல. அன்று பலமான, எளிதில் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக கருதப்பட்ட திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து வைகோவால் ஒரு மாற்று அணியை அமைத்திருக்க முடியாது. ஆனால் பாமக, பாஜக போன்ற கட்சிகளுக்கு சமமான எண்ணிக்கையில் சீட்டுகளைப் பெற்றது தான் அவரது இன்றைய நிலைக்கு காரணமாக அமைந்து விட்டது. அன்றைக்கு கூட்டணியில் அவரால் சற்று அதிக எண்ணிக்கையில் இடங்களை பெற்றிருக்க முடியும். 1998க்குப் பிறகு வைகோவின் வளர்ச்சி ஒரு தேக்க நிலையை நோக்கி சென்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவே வேண்டும்.

அதே சமயத்தில் வைகோவின் எதிர்காலம் அடுத்து வருகின்ற 5ஆண்டுகளைப் பெறுத்தே அமையப் போவதாக நான் நினைக்கிறேன். ஒரு எதிர்பாரத சூழ்நிலையில் மதிமுக துவங்கி, தொண்டனாக இருந்தவர் கட்சியின் தலைவராகி, தமிழக அரசியல் களத்தில் சரியான முடிவுகளை எடுக்காமல் அனுபவமின்மை வெளிப்பட்டு அழிவின் விளிம்பிற்கு சென்று கடந்த 13 ஆண்டுகளில் அவர் பெற்ற அனுபவம் தான் அடுத்த 5ஆண்டுகளில் அவரை வழி நடத்தப் போகிறது.

கலைஞருக்குப் பின் திமுக ஸ்டாலின் கைகளுக்கு செல்வது, திமுக அழிவின் தொடக்கமாகவே நான் கருதுகிறேன். கடந்த தேர்தலில் திமுகவின் தோல்விக்கு ஸ்டாலின் சொல்படி கலைஞர் அமைத்த கூட்டணி தான் காரணம். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியை முன்நின்று உருவாக்கியவர் ஸ்டாலின் தான். அவரது அனுபவமின்மை அதில் தெளிவாக வெளிப்பட்டது. புதிய நீதிக் கட்சி, கண்ணப்பனின் கட்சி போன்றவற்றுக்கு எதன் அடிப்படையில் ஸ்டாலின் தொகுதிகளை அள்ளிக் கொடுத்தார் என்பது குறித்து எனக்கு அப்பொழுதே ஆச்சரியம் ஏற்பட்டது. கலைஞர் என்ற சக்தியை கடந்து திமுக வலுவான சில இரண்டாம் கட்ட தலைவர்களால் அமையப்பெற்ற இயக்கம். அவர்கள் எந்தளவுக்கு ஸ்டாலினுடன் உடன்படுவார்கள் என்பது கேள்விக்குறியே.

இவையெல்லாமே யூகங்கள் தான். ஆனால் இந்த யூகங்களுக்கு விடை கிடைக்காமல் வைகோவின் முடிவு அமையாது.

10:21 AM, February 19, 2006
மு. சுந்தரமூர்த்தி said...

//1998ல் அதிமுகவுடன் சேர்ந்தது தவறான காரியம் அல்ல. அன்று பலமான, எளிதில் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக கருதப்பட்ட திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து வைகோவால் ஒரு மாற்று அணியை அமைத்திருக்க முடியாது. //

சசி,
1998 தேர்தலில் சில வெற்றிகளைப் பெற முடிந்தது என்பதில் சரியான காரியமே. அதனால் பலன் பெற்றது ஜெயலலிதா, பாஜக. மதிமுகவைப் பொறுத்தவரை கட்சியில் சிலருக்கு குறுகியகால பதவி கிடைத்தது. மற்றபடி கட்சியின் வளர்ச்சிக்கு இத்தகைய கூட்டுகளும், அதில் கிடைக்கும் சில வெற்றிகளும் எந்த வகையிலும் உதவப்போவதில்லை. மாறாக பெரும்கட்சிகள் மாறிமாறி சவாரி செய்வதற்கு மட்டுமே பயன்படும். "மூத்த தலைவர்களை" நம்பி கட்சி நடத்தினால் இப்படித்தான் இருக்கமுடியும். தனக்கு இத்தகைய குறுகியகால பதவி மீது அக்கறையில்லை என்பதை போனதடவை தேர்தலில் நிற்காமல் நிரூபித்த ஒருவருக்கு குறுகியகால பதவிகளுக்காக ஆசைப்படும் தலைவர்களை புறக்கணித்து தொண்டர்களை மட்டும் நம்பி தொலைநோக்கில் செயல்படும் உத்தி புலப்படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. தன் கட்சி, பிறகட்சி மூத்த தலைவர்கள் (மூப்பனார், ராமதாஸ்) மேல் எதிர்பார்ப்பு வைத்திருக்காமல் 10-15 ஆண்டுகளுக்கு தொண்டர்கள் மீதுமட்டும் நம்பிக்கை வைத்து, அவர்களில் செயலூக்கமிக்க, தோல்வியைக் கண்டு துவளாத சிலரை இரண்டாம்நிலை தலைவர்களாக்கி செயல்பட்டிருந்தால் கடந்த தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கமுடியாவிட்டாலும் கட்சியின் வளர்ச்சி கணிசமாக இருந்திருக்கும். அண்ணா தம்பிகளை வளர்த்து, அவர்களை நம்பிதான் கட்சி நடத்தினார். உடனடியாக பதவிசுகம் காண விழையும் மூத்த தலைவர்களை நம்பி கட்சி நடத்துவதால் இப்போதுள்ளதுக்கு மேல் வளரமுடியாது. இப்போது பிளவுவேண்டுமானால் வரலாம்.

திமுகவின் எதிர்காலம் என்னைப் பொறுத்தவரை கலைஞருக்குப் பிறகு ஓரளவு கலகலக்கும். அதை ஸ்டாலினும், அவருடைய ஆதரவாளர்களும் எப்படி சமாளிப்பார்கள் என்பதை வைத்து தான் சொல்லமுடியும். ஒருவேளை இத்தேர்தலில் வெற்றி பெற்றால், இளைய தலைவர்கள் கணிசமானோருக்கு வாய்ப்பு கொடுத்து, பிரபலப்படுத்தி ஸ்டாலினை வலிமைப்படுத்தினால் சமாளிக்க முடியும் என்றே தோன்றுகிறது. தலைவராவதற்கு வெறும் அடுக்குமொழி வசனங்களும், அனல் பறக்கும் பேச்சுக்களும் மட்டும் போதாது. செயலூக்கமும், கட்சியின் நிறுவனபலமுமே முக்கியம்.

வைகோவிற்கு உள்ள ஒரே வாய்ப்பு, எந்த கட்சியுடனாவது சேர்ந்து கணிசமாக சட்டமன்றத்தில் நுழைந்து, உடனேயே கூட்டிலிருந்து விலகி தனிப்பாதையை அமைத்துக்கொண்டு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு அடுத்த தேர்தலிலாலவது தனித்து போட்டியிட்டாலேயே முடியும். அதாவது இரண்டாவது கட்சியாக (எதிர்க்கட்சியாக, ஆளும்கட்சியின் ஜால்ராவாக இல்லை) அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு எத்தனை "மூத்த தலைவர்கள்" ஒத்துழைக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

11:37 AM, February 19, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

சுமூ,

குறுகிய கால வெற்றிகள் இல்லாமல் தற்பொழுது ஒரு கட்சியை நடத்த முடியாது என்றே நான் நினைக்கிறேன். தொடர் தோல்விகள் ஒரு கட்சியை அழித்து விடும்.

திமுகவின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு ஒரு தளம் இருந்தது. தமிழ் உணர்வும், இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் இயல்பாக எழுந்த உணர்வும் தான் திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அந்த உணர்வில் எழுந்த இயக்கத்தை மிகுந்த கட்டுக்கோப்புடன் கலைஞரால் கட்டிப் போட முடிந்தது. பத்தாண்டு கால தோல்விகள் கூட திமுகவை சீர்குலைக்க வில்லை.

ஆனால் வைகோவிற்கு அத்தகைய தளம் இது வரை கிடைக்க வில்லை. இனி மேலும் கிடைக்காது. அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பு "ஜெ எதிர்ப்பு அலை". ஆனால் அந்த அலையை அவரால் சாதூரியமாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. கலைஞர் தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டார்.

/*

அதாவது இரண்டாவது கட்சியாக (எதிர்க்கட்சியாக, ஆளும்கட்சியின் ஜால்ராவாக இல்லை) அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்

*/

உண்மை. வைகோ எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஒரு எதிர்க்கட்சியாக அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். தொண்டர் பலத்தை தக்க வைத்துக் கொள்ள முனைய வேண்டும். தன்னுடைய தளத்தை விரிவாக்கும் வழிகளை ஆராய வேண்டும்.

குறிப்பாக சந்தர்ப்பச் சூழ்நிலைக்காக காத்திருக்க கூடாது. அவருக்கேற்ற சரியான வாய்ப்புகள் அமையாமல் கூட போய் விடலாம்.

வைகோ அடுத்த 5 ஆண்டுகளுக்குள்ளாக தனது தளத்தை விரிவுபடுத்தவில்லை என்றால் மதிமுகவை கலைத்து விடலாம்.

Do or die..

12:12 PM, February 19, 2006
குமரேஸ் said...

அரசியலில் அன்பு, பாசம், குரு, அரசியல் ஆசான், போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே அவர் கரையேற முடியும்.

வைகோவை வேலூர் சிறைக்குப் போய் மு.க பார்த்ததில் பாசம் என்பதைவிட, மு.க வின் அரசியல் தொலைநோக்கும் சாணக்கியமுமே மேலோங்கி நின்றது. சிறையில் உள்ள வைகோ மீது தமிழக மக்கள் காட்டத் தொடங்கிய அனுதாபங்களை, பாராளுமன்ற தேர்தலில் தனக்கு சாதகமான வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே மு.க வைகோவை சிறையில் போய்ப் பார்த்தார். வைகோ கொண்டுவந்த அரிசியுடன், மு.க கொண்டுபோன உமியை சேர்த்து ஊதி ஊதி ஆக்கின கஞ்சியை அதிகம் பருகியது மு.க தான்.

அன்று தன்னிடம் இருந்தது உமியல்ல அரிசிதான் என்பது தெரியாத அளவிற்கு வைகோவின் கண்களை மறைத்தது அரசியல் ஆசான் என்ற பாசம்.

அன்றைக்கே வைகோ தொலை நோக்குடன் 2006 சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து மு.க வுடன் கூட்டணி உடன்பாடு கண்டிருக்க வேண்டும். தவறிவிட்டார் அதனால் தான் இன்று திரிசங்கு நிலையில் தின்டாடுகிறார்.

2:23 PM, February 19, 2006
krishjapan said...

Though the post and the comments seem to be unbiased, there seeems to be an hidden bias in the discussion, understandable to a person who watches the TN politics seriously. I think, all forget about JJs role here. MKs period is over and soon JJ Vs MK need to be transformed to JJ Vs ?. NaiKo need to take that place. Leave the hard core DMK persons now. Think about others, wont they support VaiKo compared to stalin. so, easily VaiKo can make it as JJ Vs VaiKO.Yes, stalin may have power to counter this. even then, when it comes to JJ Vs Stalin Vs Vaiko, wont u think it will automatically transform into JJ Vs Vaiko. So, I think, Vaiko need to align with DMK just to maintain the anti JJ image. The future of TN politics is in AntiJJ and Not AntiMK.

9:22 PM, February 19, 2006
ஜோ/Joe said...

கிருஷ்ணா அவர்களின் கருத்து தான் என் கருத்தாகவும் இருக்கிறது.

9:52 PM, February 19, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

எதிர்காலத்தில் "ஜெ எதிர்ப்பு அரசியல்" தான் தமிழகத்தில் உருவாகும் என்பதை நான் மறுக்க வில்லை.

அதே நேரத்தில் மதிமுக ஒரு வெற்றிடத்தில் இருந்து அரசியல் நடத்த முடியாது. மதிமுக ஒரு பலமான நிலையில் இருந்தால் தான் எத்தகைய அரசியலையும் எதிர்கொள்ள முடியும். நான் இங்கு "பலமாக" குறிப்பிடுவது சட்டசபையில் உள்ள பலம்.

திமுக தரும் 20 தொகுதிகளைக் கொண்டு வைகோ இரண்டாம் இடத்திற்கெல்லாம் வந்து விட முடியாது. கலைஞருக்குப் பிறகு ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க வேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும்.

மாறாக 40-50 தொகுதியில் போட்டியிட்டு கணிசமான தொகுதியில் வெற்றி பெற்றால் ஒரு பலமான நிலைக்கு மதிமுகவை கொண்டு செல்ல முடியும்.

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து விட்டு அவரை எதிர்க்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் இந்திய/தமிழக அரசியலில் அர்த்தமற்றவை. ஜெயலலிதா இது வரை தன்னுடன் கூட்டணி அமைத்த கட்சிகளை எல்லாம் காரியமானவுடன் கைகழுவி விட்டுள்ளார்.

எனவே ஜெ எதிர்ப்பு அரசியலை வைகோவால் நடத்த முடியும்.

இது எல்லாமே எதிர்காலம்

நிகழ்காலம் - எப்படி அதிக இடங்களைப் பெறுவது என்பது குறித்து தான். அது அதிமுகவிடம் மட்டுமே கிடைக்கும்

/*

நாற்பது இடங்களில் நின்றாலும் எத்தனை இடங்களில் வெல்வார்கள்?

*/

தேர்தல் முடிவு தான் இதற்கு பதிலாக இருக்க முடியும். கணிப்பது கடினம்.

கடந்த சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது மதிமுக ஒரளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கலாம். வைகோவின் நடைபயணம் மக்களை வைகோ பக்கம் ஈர்த்து இருக்கலாம். குறைந்தபட்சம் வைகோவின் பலமான தென்மாவட்டங்களில் அவரது பலம் ஓரளவிற்கு அதிகரித்து இருக்கலாம்.

இவையெல்லாமே யூகங்கள் தான். தேர்தல் முடிவு தான் தெளிவு படுத்தும்

10:33 PM, February 19, 2006
krishjapan said...

U r forgetting about the credibility factor. VaiKo lost some credibility when he aligned with J first. Peopel r ready to forget that as a decision forced upon him for survival. But now? what is the provocation. what will be his answer to why he left the DMK alliance. If he is going to say that since the MP election, J has become pure and MK corrupt, that wont make sense. All the talk of varisu arasiyal wont make sense now at the time when Anbumani, Vasan, Karthik Chidambarams are getting their dues. People wont take him serious any more. And also, please dont make the mistake of asking why he cant do this alliance switching when Ramadoss did that before.Please, Dont compare MDMK with PMK. PMK has a solid caste base and they r voting for Dr.Ramadoss and so they dont mind with whom he has alliance. But, VaiKOs base is different. He cant do what Ramadoss does. Defintely, his antiJJ deeds wont have credibilty if he alignes with her just for few seats this time. It is like what JJ told to Ramadoss last time - while they give u 35 seats, i give u 27 MLAs. what do u want. Simillarly, I feel MK gives him 15 to 16 MLAs. But JJ, 4 MLAS and 35 seats... So, it is better for him and also for Tamilnadu politics, that he alignes with MK gets some 15 MLAs and slowly moves away from his shadow. And throwing him away after use, both MK and JJ will do and so he dont have to work for that!!

11:56 PM, February 19, 2006
krishjapan said...

I forgot to add about one thing. U must also think about waht seats he will get from MK or JJ. If it is JJ, then mostly North, PMK strong places. In south, both JJ and Vaiko will Vie for some good seats where they both r strong and she will allot only few strong seats. she will apare very few west seats. he cant argue with her what seats she gives. There is only taking what she gives exists with her, as we all know. Once he comes out of DMK alliance, her purpose is solved. She will even force him to leave her and stand alone. That risk factor is very big. if he alignes with MK, some sure winnable south seats , his strong west seats he will get. Even some Sure win North also.

12:02 AM, February 20, 2006
தமிழ் சசி | Tamil SASI said...

இமேஜா, அதிக இடங்களா என்று யோசித்து விட்டு இமேஜ் தான் முக்கியம் என்று வைகோ முடிவு செய்து விட்டது போல தெரிகிறது. திமுக கூட்டணியில் முன்பு கூறியதை விட சற்று அதிக இடங்களை வைகோ பெறுவார். அந்த வகையில் வைகோவின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

வைகோவின் முடிவு திமுக கூட்டணியை வலுவாக்கும். திமுகவை கோட்டையின் அருகே இந்த முடிவு அழைத்து சென்றிருக்கிறது என்று சொல்லலாம்.

திமுகவின் தலைமையை (கலைஞர், ஸ்டாலின்) பலப்படுத்துவதாக உள்ள இந்த முடிவு வைகோவின் எதிர்காலத்திற்கு எந்தவகையில் உதவி செய்யும் என்பதும் விவாதத்திற்குரியது. திமுக ஆளும்கட்சியாக இருக்கும் பட்சத்தில், எத்தகைய சூழ்நிலையிலும் திமுகவில் விரிசல் ஏற்படாது என்று உறுதியாக சொல்லலாம்.

அதே சமயத்தில் வைகோவின் இந்த முடிவு திமுக தொண்டர்கள் மத்தியில் வைகோவின் இமேஜை உயர்த்தும்

10:18 AM, February 20, 2006
siva gnanamji(#18100882083107547329) said...

PERIYAR E.VE.RA sonnadhu ;
satta sabaikku sella aasaip padubavargal pattam poochigal;vettukkiligal......
Evvalavu theerkka sindhanai...Periyar periyardhan!

7:29 AM, February 23, 2006