பத்திரிக்கைகளிடம் "சரக்கு" இல்லை

பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் எனப் பலவற்றின் வழக்கமான மசாலாவை பார்த்து பழகிப் போன எனக்கு IBNLiveன் ராஜ்தீப் சர்தேசாய் இவ்வாறு கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை தான்,

I believe that we in the media are running out of ideas

செய்தி நிறுவனங்களில் இருக்கும் எங்களுக்கு புதிய உத்திகள் எதுவும் தெரியவில்லை, அதனால் தான் சாதாரணப் பேட்டிகளைக் கூட "Exclusive" என்பன போன்ற பெயர்களில் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ராஜ்தீப்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் கூறிய மற்றொரு கருத்து தான் கவருவதாக இருந்தது.

Maybe, we as journalists need to start recognising that a channel is not a one day 24 hour match, its a 365 day hour by hour challenge where our main task is simply to stay on top of the news, without titillating the viewer, but actually enhancing their knowledge. Will it happen? Don't know.

ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை "செய்திகளை" தருவது மட்டுமே. கொடுக்கின்ற செய்திகள் பார்ப்பவர்களை வசப்படுத்துவதற்காக இல்லாமல்,
செய்திகளை கொடுப்பது மட்டும் தான் ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை என்கிறார் ராஜ்தீப். Very simple.

ஆனால் தமிழகத்தில் வெளியாகும் மஞ்சள் பத்திரிக்கை தொடங்கி சில ஆங்கிலப் பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் வரை செய்திகளை எவ்வாறு தருகிறார்கள் என்பது நமக்கு புரியும். உதாரணமாக சன் டிவியின் உளவியல் வன்முறை பற்றி மானுஷ்ய புத்திரன் எழுதியிருந்தார். சன் டிவி பொதுமக்களின் பேட்டி என்பன போன்ற ஒரு செய்தி வடிவத்தைக் கொண்டே எப்படி தன் கருத்துக்களை மக்கள் மீது திணித்து அவர்களை தங்கள் பக்கம் வசப்படுத்த முனைந்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரியும்.

அது போல இந்த ஆண்டின் பட்ஜெட் குறித்து தினமலர் வெளியிட்ட செய்தியை இங்கு குறிப்பிடலாம். தினமலர் வெளியிடும் செய்திகளில் பட்ஜெட் பற்றி மட்டும் தான் குறிப்பிட வேண்டுமென்பது இல்லை, அவர்களுடைய பல செய்திகள் திரிக்கப்பட்ட செய்திகள் தான். ஆனால் பட்ஜெட் போன்ற செய்திகளை கூட தங்களுக்கு சாதகமாக எப்படி திரிக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது வியப்பு ஏற்படுகிறது.

ஒரு பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாகட்டும், வேறு எந்தச் செய்தியாகட்டும் அதனைச் செய்தியாக மட்டுமே கொடுக்க வேண்டும். பத்திரிக்கைகள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களை தலையங்கங்களில் மட்டும் வெளிப்படுத்த வேண்டுமென்பது பத்திரிக்கைகளின் நியதியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் "சிதம்பரம் மக்களை ஏமாற்றினார்" என்பன போன்று வெளியிடுவது, பத்திரிக்கையின் செய்தி வெளியிடும் தன்மையையே கேலிக் கூத்தாக்கி விடுகிறது.

இவ்வாறு பொய்யும் புரட்டும் வெளியிடும் பத்திரிக்கைகள் தங்களை ஜனநாயகத்தின் நாடித்துடிப்பு என்றும், அவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் ஐனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் முயற்சி என்றும் கூறுவது தான் நகைச்சுவையான விஷயம். இந்து பத்திரிக்கை ஆசிரியர்களை கைது செய்ய ஜெயலலிதா முயற்சி செய்த பொழுது எழுந்த கூக்குரல் இந்த வகையான நகைச்சுவையைச் சார்ந்தது தான். ஜெயலலிதாவின் நடவடிக்கையை சரி என்று ஏற்க முடியவில்லை என்றாலும் அவரின் நடவடிக்கை ஒரு வகையில் எனக்கு குரூரமான திருப்தியையே கொடுத்தது.

அது போலவே கேபிள் தொலைக்காட்சி சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தது முறையற்ற செயல் என்றாலும் பலர் இதனை வரவேற்கவேச் செய்தனர். அந்தளவுக்கு அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது.

இன்று தேர்தல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் தொடங்கி, தேர்தல் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் செய்தி நிறுவனங்கள் வரை அவர்களின் செய்திகளைப் பார்க்கும் பொழுது they are running out of ideas என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த தேர்தலை எப்படி எதிர்கொண்டார்களே அதேப் போன்ற உளுத்துப் போனச் செய்திகள், வம்பானந்தா தொடங்கி கழுகு வரை அனைவரும் சொல்லும் பொய்க் கதைகளைப் படிப்பதில் ஏற்படும் அலுப்பு காரணமாக அந்தப் பக்கம் நான் செல்லுவதே இல்லை. பல வருடங்களாக இங்கு ஒரே Formula தான். இதனை தாண்டி வேறு வகையில் தமிழ் பத்திரிக்கைகள் போக முடியாதா என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் they are running out of ideas என்னும் பொழுது நாம் என்னச் செய்ய முடியும்.

***

ராஜ்தீப்பின் கருத்துப் படி ஏதாவது ஒரு செய்தியையோ புத்தகத்தையோ படித்திருக்கிறேனா என்று யோசித்த பொழுது இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் "Island of Blood" என் நினைவுக்கு வந்தது. இது ஒரு Reporter's Dairy. இலங்கை, ஆப்கானிஸ்தான், அயோத்தி ராமர் கோயில் இடிப்பு போன்ற சம்பவங்களின் நேரடிப் பதிவு தான் இந்தப் புத்தகம்.

Reporter's Dairy என்று சொல்லும் பொழுது அது ஒரு செய்தியாளனின் நேரடி அனுபவங்களை மட்டும் கூற வேண்டும். படிக்கின்ற வாசகன் மீது எந்த வித கருத்து திணிப்பையும் செய்யாமல், கொடுக்கும் செய்திகளைக் கொண்டே ஒரு வாசகன் தன் கருத்துக்களை நிர்ணயித்துக் கொள்வதாக இருக்க வேண்டும். பயணக் கட்டுரைகள் செய்திகளைக் கொடுப்பவை தான். ஆனால் ஒரு தீவிரமான பிரச்சனையை சுற்றி எழுதப்படும் செய்திகளில் சார்பு இல்லாமல் ஒரு செய்தியாளன் எழுதுவது முக்கியம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே செய்தியாளன வாசகர்கள் அறியத் தர வேண்டும்.

அப்படி கொடுக்கும் புத்தகம் தான் Island of Blood என்று நான் நினைக்கிறேன். நான் ஈழத்துப் பிரச்சனைகள் குறித்து எழுதும் பொழுது இந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள்களை காட்டுவது கூட அதன் பொருட்டு தான். அதே சமயத்தில் அனிதா மற்ற இந்தியப் பத்திரிக்கையாளர்கள் போலவே விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் விமர்சனங்களை வைத்தார் என்பதும் உண்மை.

ஆனால் Island of Blood அவர் கொண்ட கருத்துக்களை தூக்கி நிறுத்துவதற்காக எழுதப்படாமல் அவருடைய நேரடியான அனுபவங்களை பதிவு செய்யும் முயற்சியாக தெரிவதால் ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. அது போல இந்தப் புத்தகம் ஈழப்பிரச்சனையின் வரலாற்றையோ அந்தப் பிரச்சனையையோ விரிவாக சொல்லும் புத்தகமும் அல்ல. ஒரு செய்தியாளரின் நேரடி வர்ணனை என்று சொல்லலாம்.

அனிதா, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் தன்னுடைய அனுபவத்தை விவரிப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் விவரிப்பதற்கும் இருக்கின்ற பெருத்த வேறுபாடு தெளிவாக தெரிகிறது. புலிகளின் இயக்கத்தைச் சுற்றிச் சுழலும் அவரின் அனுபவங்களைக் காணும் பொழுது புலிகளின் இயக்கத்தில் உள்ளவர்களின் விடுதலை உணர்வு தெளிவாக வெளிப்படுகிறது. மாறாக தாலிபான்களின் மத அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் அவர் வர்ணனையைக் கொண்டே அறிய முடிகிறது. புலிகளை தாலிபான்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை அவரின் இரு அத்தியாயங்களே தெளிவாக விளக்கும்

அதே நேரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல காலமாக இருக்கும் விமர்சனங்களுக்கும் சில இடங்களில் பதிலை தருகிறார். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பிரபாகரன் ஏன் பத்திரிக்கையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை, மாத்தையா கொல்லப்பட்டது போன்றவையும் புத்தகத்தில் வருகிறது. இதில் தன்னுடைய சொந்தக் கருத்தாக அனிதா எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இதற்கு நேர்மாறாக இருக்கும் மற்றொரு பயணக் கட்டுரையும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. அது வாஸந்தியின் யாழ்ப்பாணப் பயணக் கட்டுரை.

இது தன் சொந்தக் கருத்தை வாசகர்கள் மீது திணிக்கும் முயற்சி. ராஜ்தீபின் கருத்துப் படி சொல்ல வேண்டுமானால் வாசகர்களை தன்னுடைய கருத்தை நோக்கி "வசப்படுத்தும்" முயற்சி.

ஒரு பயணக் கட்டுரை எழுதும் பொழுது தான் நேரில் காண்பதை உள்ளபடியே பதிவு செய்ய வேண்டும். அது தான் நேர்மையான அணுகுமுறை. வாஸந்தியின் கட்டுரையை வாசிக்கும் பொழுது அவர் முன்கூட்டியே ஒரு முடிவை திட்டமிட்டு விட்டு அதன் காரணங்களை யாழ்ப்பாணத்தில் தேடிக்கொண்டிருந்தார் என்று தெரிகிறது. கட்டுரையின் இறுதியில் அதனை அவரே தெளிவுபடுத்துகிறார்.

பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின. யாழ்ப்பாணத்தில் எழுபது சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்களை புலிகள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஒரு திட்டமிட்ட சாதனையாகத் தோன்றிற்று. அவர்களது ராணுவ பலமும், எதிர்ப்பவர் தமிழரானாலும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், மக்களை விநோதமான மனநிலைக்கு ஆளாக்கியிருந்தது. கண்டும் பதைத்தும், வாய் திறக்கும் திறனை இழந்ததோடு, புலிகள் செய்வதில் ஒரு நியாயம் இருப்பதாகக்கூட நினைக்கும் நிலைக்கு மக்கள் உட்பட்டிருந்தார்கள்

புலிகள் யாழ்ப்பாண மக்களை "உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி" வைத்திருப்பதாகச் சொல்லும் வாஸந்தி அவரது கட்டுரையில் அவர் வாதத்திற்கான காரணங்களைச் சொல்லவில்லை. அவர் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது என மேம்போக்காக சொல்லி விட்டுச் சொல்கிறார்.

யாழ்ப்பாண குடும்பங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்து ஒருவர் இயக்கத்தில் இருப்பதாக சொல்லி விட்டு இறுதியில் இவ்வாறு கூறுவது கட்டுரைக்கு ஒரு செயற்கைத்தனத்தையே கொடுக்கிறது.

வாஸந்தி தன்னுடைய யாழ்ப்பாணப் பயணம் குறித்து எழுதும் பொழுது யாழ் நிலவரம் குறித்து சில இடங்களில் கூறுகிறார்,

தமிழீழம் என்பது ஏற்கெனவே சாத்தியமாகிவிட்ட ஒன்றாகத் தோன்றிற்று. ராணுவத்தைக்கண்டு எங்களுக்குப் பயமில்லை, புலிகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்ற என்பது மக்களின் தாரக மந்திரம் என்று பட்டது

அசாதாரண காலகட்டத்தை, புலிகள் தங்கள் பொருண்மீய திட்டங்களினால் திறமையாக சமாளித்து வந்ததை, அதன் இயக்குனர், இளைஞர் ரவி அலுவலகத்தைச் சுற்றிக்காட்டி உத்வேகத்துடன் விளக்கினார். பல இளம் புலிகள், பிரபாகரனை ‘‘அம்மா, அப்பாவை விட அதிகமா மதிக்கிறோம். ‘‘அவரது வழிகாட்டலில் நாடு விடுதலை அடைஞ்சு, சுபிட்சமா இருக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கை இருக்கு" என்றார்கள்

ஆனால் இது எதுவுமே அவருக்கு இயல்பாக தெரியவில்லை. மொத்த யாழ்ப்பாண மக்களும் புலிகளால் மெஸ்மரிசம் செய்யப்பட்டு விட்டனர் என்ற ரீதியில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

***
அனிதா பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லவேண்டுமானால், இவர் 1983 இலங்கை இனக்கலவரம் முதல் இலங்கையின் பலப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொண்டுள்ளார். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவத்தை பதிவு செய்த இந்தியாவின் முதல் செய்தியாளர் இவர் தான். இவர் எழுதிய இலங்கை இனக்கலவரம் பற்றிய கட்டுரைகள் தான் இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் ஈடுபடவைத்தன என்றுச் சொல்லலாம். 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல. கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத இந்தியர்களும் தான் என அனிதா கூறுகிறார். கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த பல இந்தியக் குடும்பங்கள் சூறையாடப்பட்டதாகவும் அனிதா இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

1983 கலவரம், இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த பொழுது நடந்த போர்கள், ஜெ.வி.பிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நடந்த கொலைவெறிப் பிரச்சனைகள், ரஞ்சன் விஜயரத்னே, காமினி திசநாயகே போன்ற இனவெறி தலைவர்களுடனான சந்திப்புக்கள் போன்றவை இலங்கையின் மற்றொரு கோரமுகத்தை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு சிறிய புத்தகம் தான். ஆனால் இவையனைத்தும் போரினிடையேயும், கலவரத்தின் இடையேயும் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் புத்தகத்தில் ஒரு யதார்த்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆனால் இலங்கை குறித்துச் சில அத்தியாயங்களே இருப்பது ஒரு குறையாகவும் உள்ளது. இந்தப் புத்தகம் மூலம் இந்தப் பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்தப் போரட்டத்தின் நீண்ட வரலாற்றில் சில நிகழ்வுகளைச் சுற்றி இந்தப் புத்தகம் பின்னப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

சென்னையின் ஏ.சி. அறையில் இருந்து கொண்டு தான் "இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட்" என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளின் குண்டுகளுக்கிடையே ஓடி ஒளிந்து அனிதா செய்திகளை சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை மட்டுமில்லாமல் பெண்களை மோசமாக நடத்திய ஆப்கானிஸ்தானில் உயிரை பணயம் வைத்து அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே என்னை வியப்பில் ஆழ்த்தியது.