தொகுதி அலசல் : குறிஞ்சிப்பாடி

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எந்த தொகுதியில் எந்தக் கட்சி நிற்கிறது என்ற நிலவரம் தெரிந்து விட்டதால் தேர்தல் கணிப்புகளும் இனி தொகுதிவாரியாக தொடங்கி விடும். அந்த வகையில் என்னுடைய சொந்த ஊரான நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி நிலவரத்தை என்னால் இங்கிருந்து சரியாக கணிக்க முடியாது என்றாலும் ஒரளவு கணிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

மதிமுகவுக்கு அதிமுக வழங்கியுள்ள சில தொகுதிகளை கவனித்தேன். ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரிகிறது. தான் கண்டிப்பாக தோல்வி அடையக்கூடும் என்று நினைக்கும் சில தொகுதிகளை அதிமுக மதிமுகவிடம் தள்ளி விட்டுள்ளது. வேலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தருமபுரி, தாரமங்கலம், பெரம்பூர், எழும்பூர் என திமுக-பாமக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய பல வட மாவட்ட தொகுதிகளை மதிமுகவிடம் ஜெயலலிதா தள்ளி விட்டுள்ளார். சென்ற பாரளுமன்ற தேர்தலில் கூட பாஜகவிற்கு இந்த நிலை தான் ஏற்பட்டது. தென்மாவட்ட தொகுதி நிலவரம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் வடமாவட்டங்களில் நிறைய தொகுதிகள் ஏன் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை. மதிமுகவிற்கு வடமாவட்டங்களில் எந்த அடித்தளமும் இல்லை.

குறிஞ்சிப்பாடியில் கட்சிகளின் நிலவரத்திற்கு செல்வதற்கு முன்பாக இங்கிருக்கும் சில முக்கிய அம்சங்களை கவனிக்கலாம். வடமாவட்டத்தில் உள்ள பல தொகுதிகள் போல தலித், வன்னியர் என இரு சமூகங்கள் மட்டுமே இருக்கும் தொகுதியாக இல்லாமல் குறிஞ்சிப்பாடி தொகுதி ஒரு கலவையான தொகுதியாக பல சமூக மக்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. நெய்வேலியில் பல சமூக மக்களும் இருக்கின்றனர். நெய்வேலிக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் தலித், வன்னியர், ரெட்டியார், நாயுடு போன்ற சமூக மக்கள் அதிகம் உள்ளனர்.

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதிகள் குறிஞ்சிப்பாடி தொகுதியின் கீழ் வருகிறது. நெய்வேலி நகரம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் நெய்வேலியைச் சார்ந்தப் பகுதிகளே பல தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் வெற்றியை தீர்மானித்து வந்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இங்கு இருந்தாலும், மைய அரசுக்கு லாபம் ஈட்டும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி இருந்தாலும், நெய்வேலியால் அருகில் இருக்கும் கிராமங்களுக்கோ, சிறு நகரங்களுக்கோ எந்த ஒரு உபயோகமும் இல்லை. குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ள பகுதியாக இதனை சொல்ல முடியா விட்டாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் நெய்வேலியை தவிர்த்தப் பிற பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. விவசாயம் தான் இந்தத் தொகுதியின் முக்கிய பொருளாதாரம் (நெய்வேலி தவிர).

குறிஞ்சிப்பாடி சுற்றி இருக்கும் பகுதிகள் நல்ல வளமான பூமி என்று சொல்லலாம். நிலத்தடி நீர் தான் பாசனத்திற்கு உதவுகிறது. முக்கிய விவசாயமாக நெல் மற்றும் வேர்கடலை உள்ளது (இதனை மல்லாட்டை, மல்லாக் கொட்டை என்று இந்தப் பகுதியில் கூறுவார்கள்). நெல், கரும்பு போன்றவையும் இங்கு உண்டு. குறிஞ்சிப்பாடி அரிசி என்பது இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலம். எங்கள் கடைக்கு அதிகம் குறிஞ்சிப்பாடி அரிசியையே வாங்குவோம்.

நிலத்தடி நீர் குறைவது, நெய்வேலியில் நிலம் இழந்தவர்களுக்கு வேலை போன்றவை இங்கு முக்கிய பிரச்சனைகள். ஆனால் இன்று வரை தீர்வு ஏதும் ஏற்பட்டதில்லை. குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்ததில்லை. தமிழகத்தின் மிகவும் பிந்தங்கிய மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் உண்டு. இந்தப் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பகுதியில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தின் பல தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லாத வசதி இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வுக்கு உண்டு. நெய்வேலி இந்தப் பகுதியில் இருப்பதால் நெய்வேலி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் செய்து கொடுத்து விடுகிறது. ஏதாவது வசதி குறைவு என்றால் மக்களின் கோபம் என்.எல்.சி. நிர்வாகம் மேல் தான் திரும்புகிறது. எம்.எல்.ஏ.வுக்கு பிரச்சனையில்லை. அது போல பல தொகுதிகளில் இருக்கும் குடிநீர் பிரச்சனையும் இந்த தொகுதியில் இல்லை. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பகுதிக்கு என்.எல்.சி குடிநீர் வழங்கி விடுகிறது. இதனால் இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு வேலையும் இல்லாமல் நன்றாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்

இந்த தொகுதியில் நெய்வேலியை தவிர்த்துப் பார்த்தால் ஒரு உருப்படியான விஷயமும் இல்லை. நெய்வேலிக்கு வெளியே ஒரு தொழிற்சாலையோ, நல்ல பள்ளியோ, கல்லூரியோ இல்லை. பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பக்கத்து ஊர்களில் இருக்கும் வியபாரப் பரபரப்பு கூட இங்கு இருக்காது. நெய்வேலியிலும் இதே நிலை தான். இந்தப் பகுதியே ஒரு சோம்பேறிப் பகுதியாக எனக்கு தோன்றும்.


நெய்வேலி நகரம் படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கும் இடமாக இருப்பதால் எப்பொழுதுமே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பிற பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகள் கிரமப்புற பகுதிகள். இங்கு பாமக ஒரு வலுவான இயக்கம் என்று சொல்லலாம். அதே அளவு வலுவான நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் உள்ளது. கட்சி ரீதியாக அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் எந்தச் செல்வாக்கும் இல்லை. ஆனால் அதிமுகவிற்கு கிராமப்புற மக்களின் கணிசமான வாக்கு வங்கி இங்கு உண்டு.

நெய்வேலியில் இருக்கின்ற தொழிற்சங்கங்களில் மிகவும் வலுவானச் சங்கம் திமுகவின் தொ.மு.ச தான். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கம். மூன்றாம் இடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கத்திற்கும், நான்காம் இடம் கம்யுனிஸ்ட்களுக்கும் உள்ளது. ஐந்தாம் இடத்தில் அதிமுக வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்கள் எந்த தொழிற்சங்கத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பொறுத்து இந்த நிலைகள் திர்மானிக்கப்படுகிறது (என்னுடைய நெய்வேலி பற்றிய பதிவை பார்க்கலாம்).

கடந்த தேர்தலில் (2001) தமிழகத்திலேயே திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி குறிஞ்சிப்பாடி தொகுதி தான். திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுமார் 23,863 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பெற்ற வாக்குகள் 65,425 (சுமார் 55.78% வாக்குகள்). இந்த தேர்தலில் அதிமுக 41,562 வாக்குகள் பெற்றது. இதில் பாமகவின் வாக்குகளும் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். அதே போல திமுகவின் 65,425 வாக்குகளில் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் உள்ளன.

இங்கு மதிமுகவிற்கு எந்த அடித்தளமும் இல்லை. வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது நெய்வேலி திமுகவில் ஒரு பிரிவு வைகோவுடன் சென்றது. அந்தப் பிரிவின் தலைவர் நாகலிங்கம் என்பவர். பின்னர் அவர் மறுபடியும் திமுகவுடன் இணைந்தார். அவர் தான் இப்பொழுது திமுகவின் நெய்வேலி நகர தலைவர்.

மதிமுகவிற்கு இங்கு அமைப்பு ரீதியாக கூட எந்த பலமும் இல்லை. தன்னால் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடும் ஜெயலலிதாவின் வழக்கமான பாணியில் இந்த தொகுதி இம்முறை மதிமுகவிற்கு வருகிறது.

மதிமுகவில் யார் வேட்பாளராக நிற்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும். 1996க்குப் பிறகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திமுகவின் அசைக்க முடியாத புள்ளியாக கடலூர் மாவட்டத்தில் உருவாகி விட்டார். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் காட்டுமன்னார்குடி. காட்டுமன்னார்குடி தனி தொகுதியாக இருப்பதால் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாறினார். தொகுதி மக்களிடம் பெரிய அளவில் நல்ல பெயரும் இல்லை. கெட்டப் பெயரும் இல்லை.

இவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்னும் ஒரு காரணம் திமுகவில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே ஒவ்வொரு திமுக உட்கட்சி தேர்தலிலும் தன்னுடைய ஆதரவாளர்களை பெரும் அளவில் பணத்தைக் கொட்டி வெற்றி பெறச் செய்வதில் எம்.ஆர்.கே அதிக அக்கறை செலுத்துவார். இந்த தொகுதியில் இவருக்கு எதிராக கட்சியில் சீட் கேட்பார்கள் என்று கருதப்பட்ட நெய்வேலி இராமகிருஷ்ணன், வடலூர் தண்டபானி, குறிஞ்சிப்பாடி கணேசமூர்த்தி போன்ற இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவர்களை உட்கட்சி தேர்தலில் சில டம்மி வேட்பாளர்கள் கொண்டே தோற்கடித்தார். இதன் மூலம் திமுக தலைமை தனக்கே வாய்பாளிக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியை பொறுத்தவரை போட்டி என்பதே இல்லை என்று சொல்லலாம். அதிமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ நின்றிருந்தால் கூட ஒரு பரபரப்பு இருந்திருக்கும். ஆனால் மதிமுக நிற்பதால் அந்த பரபரப்பு கூட இல்லை. இந்தப் பகுதிக்கே உரிய சோம்பலுடனே தொகுதியும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குறிஞ்சிப்பாடியில் திமுக முந்துகிறது

(அடுத்த தொகுதி அலசல் - இந்த தேர்தலில் பரபரப்பாக இருக்கப் போகிற தொகுதிகளில் ஒன்றான, நெய்வேலிக்கு பக்கத்து ஊரான "பண்ருட்டி")