Thursday, April 06, 2006

தொகுதி அலசல் : பண்ருட்டி

வடமாவட்டங்களில் பாமகவின் பலத்தை சரியாக கணிக்க முடியாத தொகுதிகளில் பண்ருட்டி முக்கியமான தொகுதி. இந்த தொகுதி கிராமங்கள் (பண்ருட்டி நகரத்தை தவிர்த்து) மட்டுமே கொண்ட தொகுதி என்பதால் இங்கு சாதி வாரியாக பார்த்தால் வன்னியர்களே அதிகம். அடுத்த நிலையில் இருப்பவர்கள் தலித் மக்கள். 1991, 2001 தேர்தல்களில் பாமக வென்றிருக்கிறது. 1996 தேர்தலில் திமுக வென்றது. 1991 தேர்தலில் பாமகவை முதன் முதலாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்த தொகுதி பண்ருட்டி தான் என்றவகையில் பாமகவிற்கு இந்த தொகுதி மேல் தனி கவர்ச்சி உண்டு. ஆனால் அதே அளவுக்கு பாமகவிற்கு பலம் உள்ளதா என்பது கேள்விக்குறி தான்.

1991 தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் 39,911 ஓட்டுக்கள் பெற்று, 1,122 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மட்டுமே இங்கு போராடி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் கடுமையான ராஜீவ் அனுதாப அலை வீசியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு பண்ருட்டியாரின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்று அப்பொழுது கூறப்பட்டது. இதற்கு பிறகு பண்ருட்டியார் பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். தனிக்கட்சி தொடங்கினார்.

1996 தேர்தலில் இங்கு திமுக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக 68,021 ஓட்டுக்களைப் பெற்றது. அதிமுக 28,891 ஓட்டுக்களைப் பெற்றது. பாமக 9,988 ஓட்டுக்களை மட்டுமே பெற்றது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த தேர்தலில் ஜெ எதிர்ப்பு அலை இருந்தது.

1996 தேர்தலில் இங்கு பண்ருட்டியார் போட்டியிடவில்லை. பண்ருட்டியார் தனக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று நிச்சயமாக தெரிந்தால் மட்டுமே போட்டியிடுவார் என்ற கருத்து இங்கு பரவலாக உண்டு. ஏதாவது ஒரு கட்சியைச் சார்ந்து இருக்கும் பொழுது மட்டுமே அவர் இங்கு போட்டியிடுவார். 1996 தேர்தலில் பண்ருட்டியார் இங்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. 1989 தேர்தலில் இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவரான நந்தகோபால் கிருஷ்ணன் நிற்பதால், எந்தக் கட்சியையும் சார்ந்து போட்டியிடாமல் தான் வெற்றி பெற முடியாது என்று பண்ருட்டியார் முடிவு செய்திருக்க கூடும்.

ஆனால் 2001 தேர்தலில் பண்ருட்டியார் திடீரென்று சுயேட்சையாக கடைசி நேரத்தில் களமிறங்கினார். இதற்கு காரணம் இந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து களமிறங்கிய பாமக-அதிமுக கூட்டணி வேட்பாளாரான பாமகவின் தி.வேல்முருகன், இந்த தொகுதியில் அதிகம் அறிமுகமில்லாதவர். புதியவர். இளைஞர். எனவே தான் இங்கு வெற்றி பெற்று விடலாம் என்று பண்ருட்டியார் எண்ணினார். வேல்முருகன் பண்ருட்டியரின் சொந்த ஊரைச் சேர்ந்தவர். பண்ருட்டியாரின் உறவினரும் கூட. இவர் பாமகவில் நிற்பது அறிவிக்கப்பட்டவுடன் முதலில் பண்ருட்டியாரை தான் சந்தித்து "ஆசி" பெற்றார் என்று அப்பொழுது இங்கு கூறப்பட்டது. அந்த சமயத்தில் இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லாம் வேல்முருகனுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் மூந்தைய தலைமுறையினர் பண்ருட்டியாருக்கும் வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் இங்கு பரவலாக இருந்தது. அதன் படியே தான் நடந்தது என்றும் சொல்லலாம். பண்ருட்டியார் 30,459 ஓட்டுக்களை தனியாக இருந்து பெற்றார். ஆனால் மூன்றாம் இடத்தையே பிடித்தார். வேல்முருகன் 45,963 ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக 40,915 ஓட்டுக்களைப் பெற்றது.

கடந்த கால வாக்கு நிலவரத்தை கொண்டு பார்த்தால் இங்கு பலமாக இருக்கும் கட்சிகளில் முதலிடம் திமுகவிற்கு தான். அடுத்த இடம் அதிமுகவிற்கு. மூன்றாம் இடத்தில் தான் பாமக வருகிறது. ஆனால் பாமகவிற்கு இங்கு அதிகம் செல்வாக்கு இருப்பது போல தெரிவதற்கு காரணம், இங்கு முழுக்க முழுக்க இருக்கும் வன்னியர்களின் வாக்குகள் தான். திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளிலும் தான் வன்னியர்கள் அதிகம் இருப்பார்கள். அதனாலேயே திமுக-பாமக கூட்டணி அமைக்கும் பொழுது இங்கு இந்தக் கூட்டணிக்கு பலம் அதிகம் இருக்கும்.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் கூட இந்த தொகுதியில் திமுக பண்ருட்டியில் சுமார் 72,580 வாக்குகளைப் பெற்றது. அதிமுக 46,420 வாக்குகளும், விடுதலைச் சிறுத்தைகள் 9,730 வாக்குகளையும் பெற்று இருக்கின்றனர். அதிமுக-விடுதலைச் சிறுத்தைகளின் மொத்த வாக்குகள் 56,150 வாக்குகள். மதிமுகவிற்கு சுமாராக 3,000 வாக்குகள் இங்கு இருக்கலாம்.

ஆக, 2004 பாரளுமன்ற தேர்தல் நிலவரம் படி சுமார் 13,000 வக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி இங்கு முன்னிலையில் இருக்கிறது.

ஆனால் விஜயகாந்த் கட்சியின் மூலம் இங்கு பண்ருட்டியார் மறுபடியும் களமிறங்குகிறார். மும்முனை போட்டி இருக்கும் வடமாவட்டத்தின் வெகுசில தொகுதிகளில் இதுவும் ஒன்று. அதுவும் வி.ஐ.பி. தொகுதி. பாமகவிற்கு முதல் சட்டமன்ற உறுப்பினராக பண்ருட்டியாரை அனுப்பி வைத்த பண்ருட்டி, விஜயகாந்திற்கு இங்கிருந்து முதல் உறுப்பினரை அனுப்பி வைக்குமா ?

அனுப்பாது என்பது தான் என்னுடைய கருத்து.

காரணம்

  • பாமக வேட்பாளர் தி.வேல்முருகன் + திமுக கூட்டணி
  • அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் + அதிமுக கூட்டணி
  • சரிந்து போய் விட்ட பண்ருட்டியாரின் செல்வாக்கு

பல தொகுதிகள் போல இல்லாமல், இந்த தொகுதியில் போட்டியிடும் மூன்று கட்சியின் வேட்பாளர்களுமே தொகுதியில் பிரபலமான பெரும் புள்ளிகள்.

2001 தேர்தலில் வேல்முருகன் களமிறங்கிய பொழுது அவர் தொகுதிக்கு புதிய முகம். அப்பொழுது இவருக்கு சுமார் 27வயது என்று நினைக்கிறேன். இவர் சரியான கத்துக்குட்டி என்று எண்ணி தான் பண்ருட்டியார் களமிறங்கினார். ஆனால் அதே வேல்முருகன் இன்று தொகுதியில் மிக பிரபலம். தன்னுடைய அதிரடி அரசியல் மூலம் இந்தப் பகுதியின் பிரபலமான பிரமுகர் ஆகியிருக்கிறார். தொகுதியில் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கினை கணிசமாக வளர்த்து இருக்கிறார். இந்தப் பகுதியில் நடக்கும் பல திருமண விழாக்களில் இவரை பார்க்க முடியும். பண்ருட்டியார் போல சென்னையில் இருந்து விட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதி பக்கம் வருபவர் என்ற இமேஜ் இவருக்கு இல்லை. தொகுதியிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர். அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனின் "பழைய ரொளடி" போன்ற எந்த தவறான இமேஜும் இவருக்கு இல்லை. கட்சிகளைக் கடந்த செல்வாக்கினை வேல்முருகன் பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.

இவருடைய பலவீனம், இவருடைய அதிரடி அரசியல் தான். இந்தப் பகுதியில் இருக்க கூடிய பல சினிமா ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. குறிப்பாக ரஜினி மற்றும் விஜயகாந்த் ரசிகர்களுக்கு இவரைப் பிடிக்காது. பாபா படம் திரையிடப்பட்ட பொழுது பண்ருட்டியில் தான் முதன் முதலில் தியேட்டர் திரை கிழிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது இவருடைய மேற்பார்வையில் தான் நடந்தது. அது போல பல ரசிகர் மன்றங்களையும் இவர் கலைக்க வைத்தார். ஆனாலும் இளைஞர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறது என்று சொல்லலாம். இவருடைய வயது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

அதிமுகவின் சொரத்தூர் ராஜேந்திரன் இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். முதலில் தாதா என்ற வகையில் அறிமுகமானவர். ஆரம்பம் முதலே ஜெயலலிதாவின் ஆதரவாளராக இருந்து வருகிறார். நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி, பண்ருட்டி தொகுதி, கடலூர் பாரளுமன்ற தொகுதி என பல தொகுதிகளில் இவர் போட்டியிட்டு இருந்தாலும் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் பலமான வேட்பாளர் தான் என்றாலும் இவருடைய கடந்த காலம் பலருக்கும் ஞாபகமிருக்கிறது. பணபலம், தொகுதியில் இருக்கும் அறிமுகம், அதிமுக பலம் போன்றவை மூலம் இம்முறை எப்படியாவது மும்முனை போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர்.

பண்ருட்டியார் - இந்தப் பெயருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. 1977, 1980, 1984, 1991 என நான்கு முறை இந்த தொகுதியில் இருந்து இவர் வெற்றி பெற்றிருக்கிறார். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல பண்ருட்டியில் பேருந்துகளை பல ஊர்களுக்கு இயக்கியே பிரபலம் ஆனவர். ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே தொகுதிக்கு வருவது இவருடைய பலவீனம். இவர் மேல் அபிமானம் கொண்ட பழைய வாக்காளர்கள் தான் இவருடைய செல்வாக்கிற்கு முக்கிய காரணம். இப்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. அந்த பழைய வாக்காளர்களும் இம் முறை இவருக்கு இம்முறை வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. பண்ருட்டியாரின் செல்வாக்கு சரிந்து கொண்டே தான் வந்துள்ளது. விஜயகாந்த் மூலமாக இளைஞர்கள் செல்வாக்கு கிடைக்கும். ஆனால் வேல்முருகனின் செல்வாக்கிற்கு முன்பாக ஈடுகொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

இனி எனது கணிப்பு...

மூன்று பிரபலமான வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தொகுதியில் கடுமையான போட்டியிருக்கிறது.

2004 பாரளுமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை பண்ருட்டியார் பிரிப்பார். பண்ருட்டியார் இரு வேட்பாளர்களிடம் இருந்துமே வாக்குகளைப் பிரிப்பார். இவருடைய அனுதாபிகள் அதிமுகவில் அதிகளவில் உள்ளார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

இங்கு திமுக தொடர்ந்து தனது வாக்கு வங்கியை தக்க வைத்து வந்துள்ளது. திமுகவில் இருக்கும் ஓட்டுக்கள் பெரும்பாலும் இந்தப் பகுதியில் "பண்ருட்டியார் எதிர்ப்பு வாக்குகள்" தான். பல காலமாக தொடர்ந்து திமுகவிற்கு விழுந்து கொண்டிருக்கும் வாக்குகள். திமுக இங்கு தன்னுடைய வாக்குகளாக சுமார் 40,000 ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பாமக இம்முறை திமுக கூட்டணியில் இருப்பதால் இது பாமகவிற்கு சாதகமாக உள்ளது.

விஜயகாந்த் மூலம் திமுக-பாமக ஓட்டுகள் பண்ருட்டியாருக்கு வந்து சேரும் என்று கணித்தாலும், அதிமுகவில் இருந்து தான் அதிகளவில் இவருக்கு வாக்குகள் வந்து சேரும். ஏனெனில் இங்கு அதிமுக வளர பண்ருட்டியார் முக்கிய காரணம்.

திமுக, அதிமுக என இரு கட்சிகளிடம் இருந்துமே பண்ருட்டியார் ஓட்டுக்களைப் பிரிப்பதால், மும்முனை போட்டியில் திமுக கூட்டணிக்கே சாதகம் அதிகம்.

கடந்த தேர்தலில் பெற்ற 30,000 வாக்குகளை விட இம்முறை குறைவாகவே பண்ருட்டியார் பெறக்கூடும் என்பது எனது கணிப்பு.

பாமகவிற்கு இங்கு தனிப்பட்ட செல்வாக்கு அதிகளவில் இல்லை. என்றாலும் திமுகவுடனான கூட்டணி பலம், வேல்முருகனின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக பண்ருட்டியில் பலாப்பழ, முந்திரி சீசனில், வழக்கமான பலாப் பழ வாசனையுடன் மாம்பழ வாசனையும் வீசிக் கொண்டிருக்கிறது.

பண்ருட்டி பற்றிய என்னுடைய முந்தைய பதிவு

குழலியின் பண்ருட்டி தொகுதி அலசல்

1 மறுமொழிகள்:

Anonymous said...

மிகவும் விரிவான நல்ல அலசல்.

1:17 AM, April 06, 2006