Monday, May 01, 2006

ஜனநாயகத்தின் தூண்கள் :- நீதித்துறை

ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் நீதிமன்றங்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இந்தியாவில் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு பரவலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செல்வக்குள்ள பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை சிறைக்கு அனுப்புவதால் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதே தவிர சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக சரியான வகையில் நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. இன்று இந்தியாவில் சுமாராக 2 கோடி வழக்குகள் தேங்கிப் போய் இருக்கின்றன. தேங்கிப் போய் கிடக்கும் இந்த வழக்குகள் பெரும்பாலும் சாமானிய மக்களின் சிவில், கிரிமினல் வழக்குகள் தான். குற்றவாளிகள் இதனால் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகிறார்கள். அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றாச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவி மக்கள் அந்த வழக்கை நடத்த முடியாமல், ஜாமீன் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் அவலங்களும் நிறைய நடந்து கொண்டிருக்கிறன. அரசு இயந்திரங்களால் கைது செய்யப்படும் அப்பாவி மக்கள், அந்த வழக்குகளை நடத்த முடியாமல் போய் பல வருடங்கள் சிறையில் இருக்கும் நிலை இருந்து வருகிறது.

இவ்வாறு வழக்குகள் வருடக்கணக்கில் நடக்கும் பொழுது அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்காத பொழுது ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லப்படும் அமைப்புகள் மீது வெகுஜன மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அரசியல்பிரமுகர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டுமே தீர்ப்பு சொல்லும் அமைப்பாக நீதிமன்றங்கள் மாறிவிடக்கூடாது.

சல்மான்கான் ஒரு தவறு செய்த பொழுது தாங்களாகவே முன்வந்து அவர் மீது வழக்கு தொடுத்த சில நீதிமன்றங்களின் செயலை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அது நீதிமன்றங்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் நாட்டின் பல மூலைகளில் பாதிக்கப்படும் பல மக்களின் பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காத பொழுது நீதிமன்றங்கள் முழுமையாக இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியாது.

வழக்குகளை விரைவாக்க மாற்று முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை என்பது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், நீதிமன்றங்களின் நேரங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதும், நீதிமன்றங்களின் விடுமுறை காலங்கள் போன்றவற்றிலும் சீர்திருத்தங்கள் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்று வழக்குகளை தாமதப்படுத்தும் முயற்சிகளில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். வாய்தா, தள்ளிவைப்பு, சாட்சியங்கள் விசாரணை போன்றவற்றில் நிறைய நேர விரயம் ஏற்படுகிறது. குற்றவாளிகள் வழக்குகளை தொடர்ந்து தள்ளிவைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தாமதத்தை கட்டுப்படுத்த நீதிமன்றங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சாட்சியங்கள் மீதான விசாரணையில் நவீன யுத்திகளை கைக்கொள்ளலாம். இது போன்றவையெல்லாம் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

அது போன்றே நீதிமன்றங்களில் ஊழல் என்பது ஜனநாயக முறைகளில் மக்களை நீதிமன்றங்களில் இருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. ஆனால் மேல்நீதிமன்றங்களில் இந்த அளவுக்கு ஊழல் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம்

முந்தையப் பதிவு

திசைகள் கட்டுரை

0 மறுமொழிகள்: