தன்னிகரில்லாத தமிழ்

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்கு கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது. என்றாலும் தமிழ் மிகப் பூர்வீகமான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட பாடலை பலர் தங்களின் சார்புகளுக்கு ஏற்ப திரித்தும், புகழ்ந்தும், இகழந்தும், விமர்சித்தும் பேசி வந்திருக்கிறார்கள்.

மொழி மீது தமிழகத்தில் ஒரு காலத்தில் அதீத பற்று இருந்த நிலை மாறி இன்று "தமிழன்" என்று கூறுவதே இரண்டாம் பட்சமாக மாறி விட்ட சூழ்நிலையில், தமிழனின் வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழக வரலாற்று தேடல் என்பது தமிழனின் மிகத் தொன்மையான வரலாற்று தடயங்களை தேடிச் செல்லும் மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் தங்கள் வரலாற்றை துச்சமென மதிக்கும் தமிழர்கள், தமிழக அரசுகள் எனப் பல இடற்பாடுகளை கடந்து தான் வரலாற்று ஆய்வாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கூக்குரலிட்டு அரியணை ஏறிய அரசாங்கங்கள் கூட தமிழ் குறித்த ஆய்வுகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்புகளை கூட வரலாற்று ஆய்வுகளுக்காக இழந்துள்ளனர். தமிழக ஆய்வாளர்களைக் கடந்து வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளனர்.

தமிழனின் வரலாற்று தடங்கள் பல இடங்களில் அழிந்து போய் விட்டன. இன்னும் சில தடங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதனை பாதுகாக்க மிகப் பெரிய ஒரு கூட்டுமுயற்சி தேவைப்படும் சூழ்நிலையில் சில புதிய வரலாற்று கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. புதிய "அரிய" வரலாற்று கண்டுபிடிப்புக்கள் நிகழும் பொழுதெல்லாம் அதனைச் சிறுமைப் படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பலப் பரிமாணங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு கால தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்று தான் இன்று இணையம் வரை கிளைப் பரப்பி இருக்கிறது. செம்மொழி நிலையையும் "தாமதமாகப்" பெற்று இருக்கிறது.

தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் பிராமி வடிவம் தான். பிராமி எழுத்துருவத்தில் இருந்து தான் பல மொழியின் எழுத்துருக்கள் உருவாகின.

இந்த பிராமி எழுத்துரு இரு வடிவமாக உருப்பெற தொடங்கியது. வடக்கே பிராமியின் ஒரு வடிவமும், தெற்கே வேறு ஒரு வடிவத்திலும் அது உருவாகியது. வடக்கே உருவாகிய வடிவம் கிரந்தம் எனவும், தெற்கே உருவாகிய வடிவம் தமிழ் பிராமி என்றும் வழங்கப்படுகிறது.

இந்த கிரந்த வடிவ எழுத்துருவைத் தான் அசோகர் பயன்படுத்தினார். அசோகர் காலத்து கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கிடைக்கப்பெற்றதன் வாயிலாக அவரது வரலாற்றையும், அவர் காலத்து எழுத்து வடிவமும் கண்டு பிடிக்கப்பட்டது. கிமு 8ம் நூற்றாண்டு வரை கிரந்த வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டது. பல்லவர் கால கல்வெட்டுகளில் இந்த வடிவத்தை காணமுடியும்.


கிமு6 - கிமு10ம் நூற்றாண்டுகள் இடையே தமிழ் "வட்டெழுத்துக்கள்" தமிழ் பிராமி எழுத்துக்களில் இருந்து உருவாகின. வட்டெழுத்து என்பது அதன் பெயருக்கு ஏற்ற வகையிலேயே வட்ட வடிவத்தில் இருக்கும் எழுத்துருக்கள் ஆகும். அக் காலத்தில் பனை ஓலைகளில் எழுதும் முறை இருந்ததால் எழுத்துக்களை எழுதும் பொழுது பனை ஓலை கிழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு வட்ட வடிவமாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இந்த எழுத்துக்களே வட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இவை பனை ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு கிமு8 - கிமு10 இடையே இன்றைய தமிழ் எழுத்துருக்கள் உருவாகின.

வடக்கே இருந்த கிரந்த எழுத்துருக்கள் பிற்காலத்தில் மலையாளமாக உருமாறியது. கிரந்த எழுத்துருக்களின் தாக்கம் தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் காணமுடியும். இன்றைக்கும் கிரந்த வடிவ எழுத்துருக்கள் தமிழில் புழங்குவதை நாம் அறிவோம். தமிழில் வடமொழி எழுத்துக்கள் என்று நாம் பொதுவாக கூறும் எழுத்துக்கள் தான் கிரந்த எழுத்துருக்கள் எனப்படுகிறது.

பிராமி எழுத்துரு தான் இந்திய மொழி அனைத்திற்குமான பொதுவான மூல வடிவம்.

இந்த வடிவம் கிரந்தமாக மாறி பின் இதிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற தெற்கு பகுதி எழுத்துருக்கள் உருவாகின. ஆனால் இந்த வகை எழுத்துருக்களுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.


சமஸ்கிருதம், ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் தேவாங்கிரி என்ற எழுத்துருக்களில் இருந்து உருவாகியது. தேவாங்கிரிக்கும் அடிப்படை பிராமி தான்.

இது தான் பொதுவான மொழி எழுத்துருக்களின் வரலாறு. மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தொன்மை குறித்த பெருமை ஒரு புறம் இருக்க அசோகரின் பல கல்வெட்டுகளை கண்டுபிடித்ததன் வாயிலாக அசோகரின் பிராமி எழுத்துக்கள் தான் பல மொழிகளின் அடிப்படை என்ற கருத்தாக்கம் நிலவி வந்தது. இதற்கு காரணம் அசோகரின் காலத்திற்கு முந்தைய எந்த கல்வெட்டுக்களும், எழுத்துருக்களும் கிடைக்கவில்லை என்பது தான். இதனால் தமிழ் மொழி அசோகரின் எழுத்துருவில் இருந்தது வந்திருக்க கூடும் என்ற கருத்து நிலவி வந்தது.

ஆனால் சமீபத்தில் தேனி அருகே கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அசோகர் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே தமிழ் எழுத்துருக்கள் உருவாகி விட்டன, என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன்.


இந்த கண்டுபிடிப்புகள் ஏதோ தமிழ் ஆர்வளர்கள் அதீத ஆர்வம் கொண்டு கூறும் கதைகள் அல்ல. விஞ்ஞான ரீதியில் இதன் தொன்மையான காலம், அந்த எழுத்துருக்களின் வடிவம் இவற்றைக் கொண்டு இந்த உண்மை நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தான் சமீபத்தில் ஒரு வரலாற்று ஆதாரம் மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்துவில் செய்தியும், அந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையும் வந்திருந்தன.

சிந்து சமவெளி நாகரித்தின் மொழி என்ன என்பது குறித்து பலவிதமான ஆருடங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சிலர் இது குறித்த சில முயற்சிகள் மேற்கொண்டு வெளியிட்ட தகவல்கள் சரியான fraud என்றும் நிருபிக்கப்பட்டன.

சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்து பலர் பல தியரிகளை பலர் முன்வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச் சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத் தான் இருக்கும் என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதரங்கள் உள்ளன. இன்றைய பாக்கிஸ்தானில் இருக்கும் மொழிகளில் கூட திராவிட மொழிகளின் தாக்கம் இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு கட்டுரை - http://asnic.utexas.edu/asnic/subject/peoplesandlanguages.html. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிகள் Indus script என்ற எழுத்துருவில் தான் இருந்தன. இவை pictograms போல உள்ளவை.


சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்த மொழி ஆரிய மொழியா, திராவிட மொழியா என்ற சச்சரவு இருந்த நிலையில் தான் மயிலாடுதுறை கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட ஆயுதம் இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு ஆகும்.


மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட இந்த ஆயுதத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட Indus எழுத்துரூ வடிவில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது தான் இதன் முக்கியத்துவத்திற்கு காரணம். இது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தென்னிந்தியாவைச் சார்ந்தக் கல் என்பதால் இது வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்துக்கும் இடமில்லை.

இந்த எழுத்துருவை decode செய்த இத் துறையில் உலகளவில் மதிக்கப்பெறும் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தக் கல்லில் காணப்படும் Indus script "முருகன்" என்னும் பொருளைக் கொடுப்பதாக கூறுகிறார். இதன் மூலம் சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்தின் ஆதி கால மனிதனுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன என நிருபிக்கப்படுவதுடன், சிந்துசம வெளி நாகரிகத்தின் மொழி குறித்து இருக்கும் சச்சரவுகளுக்கும் ஒரு தெளிவான விடை கிடைக்கிறது.

சிந்துசம வெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

திராவிட மொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

எந்த கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்புமோ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.

தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.

தன்னிகரில்லாத நம் தமிழ் மொழி குறித்து பெருமை கொள்ள வேண்டும்.


References

http://www.varalaaru.com/ & நண்பர் கமலக்கண்ணன்

http://www.ancientscripts.com
Languages in pre-Islamic Pakistan
http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html
http://www.thehindu.com/2006/05/01/stories/2006050112670100.htm