Tuesday, June 27, 2006

ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு

இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை.

கடந்த காலங்களில் புலிகள் இந்தியாவிடம் நெருங்கி வர முயன்ற சூழ்நிலைகளில் இந்த "மன்னிப்பு" கேட்க வேண்டிய அவசியத்தை பல இந்தியப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து இருந்தனர். இராஜீவ் காந்தியின் படுகொலையை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரியாக்கி விட முடியுமா ? என்ற கேள்வி எனக்கு அப்பொழுதே எழுந்தது.

என்றாலும் பொதுவாக பலர் முன்வைத்து இருந்த இந்த மன்னிப்பு, தற்பொழுது கிடைத்து விட்டப் பின்னரும், எந்த மாற்றமும் இந்தியாவின் நிலையில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. ஆனாலும் புலிகளின் எதிர்கால உத்திகளை பாலசிங்கத்தின் பேட்டி படம் பிடித்து காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.

புலிகளின் இந்த முயற்சி உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. ஆனால் எதிர்காலத்தில் தங்களுக்கு இந்தியா மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை தவிர்த்துக் கொள்ள இதன் மூலம் புலிகள் முயன்றிருக்கிறார்கள்.

உலக நாடுகளின் தடை புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாட புலிகள் முயலுகிறார்கள் என்ற பல பத்திரிக்கைகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதற்கு காரணம் புலிகள் மீது தடை விதித்துள்ள நாடுகளில், இந்தியாவுடன் மட்டுமே புலிகளுக்கு "தனிப்பட்ட பகை" உள்ளது. இந்திய இராணுவம் - புலிகள் போர் மற்றும் இராஜீவ் காந்தியின் மரணம் போன்றவையே புலிகளை இந்தியாவுடன் நெருங்க முடியாமல் செய்யக்கூடியவை. இவை தவிர புலிகளை கடுமையாக எதிர்க்க கூடிய "செல்வாக்கு மிகுந்த ஒரு Lobby" இந்தியாவில் தான் உண்டு.

ஆனால் பிற நாடுகளுடன் புலிகளுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் பிற நாடுகளுக்கு இருந்ததில்லை. இலங்கை அரசின் நிர்பந்தம் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை தடை செய்ய முக்கிய காரணம் (இவை தவிர என்னுடைய முந்தையப் பதிவில் கூறியிருந்த பொருளாதார ரீதியான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும்). புலிகள் மீதான ஐரோப்பிய யூனியன் தடை, கனடாவின் தடை போன்றவை புலிகள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

புலிகள் மீதான தன்னுடைய தடை நிரந்தரமானது அல்ல என்றும் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் புலிகளுடன் தங்களால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா கடந்த மாதம் கூறியிருந்தது. இது சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய எந்த வாய்ப்பும் இந்தியாவிடம் புலிகளுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதாவது தடை விதித்துள்ள நாடுகளில் புலிகளால் நெருங்க முடியாத நாடு இந்தியா மட்டுமே. ஆனால் பிற நாடுகளை புலிகளால் எதிர்காலத்தில் அணுக முடியும்.

இந்தியாவுடன் நெருங்கி வரத்தக்க ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முதல் படியாகத் தான் பாலசிங்கம் இராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த மன்னிப்பு சில முக்கியமான பிண்ணனி காரணங்களைக் கொண்டது.

என்னுடைய முந்தையப் பதிவில் கூறியுள்ளது போல இலங்கையில் போர் துவங்கும் பட்சத்தில் திரிகோணமலை புலிகளின் முக்கியமான இலக்காக இருக்கும். திரிகோணமலை என்பது ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரம். இந்த இடம் புலிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஈழப் போரில் முதன் முறையாக ஒரு பொருளாதார கேந்திரம் புலிகளிடம் இருக்கும். ஒரு முக்கியமான பொருளாதார இடம் மூலம் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கும். இவை தவிர திரிகோணமலை துறைமுகம் குறித்தான சில ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கை அரசுக்கும் உள்ளது. புலிகள் இதனை கைப்பற்றும் பொழுது இந்தியாவின் நலன்கள் குறித்த கேள்வி எழும். அப்பொழுது இந்தியாவுடன் உறவை புதியதாக தொடங்க புலிகள் விரும்பினாலும், இராஜீவ் காந்தி படுகொலை, மன்னிப்பு போன்ற பிரச்சனைகள் அப்பொழுது எழும்.

இத்தகையப் பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்க்க புலிகள் இந்த "மன்னிப்பு" மூலம் திட்டமிடுகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிர்பந்தங்களை புலிகள் exploit செய்ய நினைக்கிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.

இதைத் தவிர தமிழீழம் என்ற தனி நாட்டை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு தான் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு நாடு உருவாவது தங்களின் பொருளாதார, இராணுவ நோக்கங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்ற வகையில் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழீழத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழீழம் என்பது உருவானால் இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தீவிராவாத குழுக்களுக்கு அது ஒரு முன் மாதிரியாக அமைந்து விடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. இந்தியாவுடன் நட்பு கொள்வதன் மூலம் இந்த அச்சத்தை போக்க முடியும் என புலிகள் நினைக்கின்றனர்.

இவை தவிர பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் நெருங்கி வருவதன் மூலம், இந்தியா மூலம் தங்களுக்கு எதிர்ப்பு ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ள முனைகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியான சில காரணங்களை எதிர்நோக்கி தான் புலிகள் தற்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இந்த மன்னிப்பு தற்பொழுது எந்த பலனையும் கொடுக்காது. என்றாலும் எதிர்காலம் நிச்சயமற்றது.

Tags


14 மறுமொழிகள்:

-/பெயரிலி. said...

சசி,
என்னைப் பொறுத்தமட்டிலே இந்திய அரசும் புலனாய்வு அமைப்பும் அவற்றின் வழிப்பட்ட இந்திய அமேதி இராணுவமும் ஈழத்திலே - இராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னாலே - செய்த கொலைகளுக்கும் மனித உரிமைமீறல்களுக்கும் தார்மீகப்பொறுப்பெடுத்து ஈழத்தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்காதவரையிலே ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் விடுதலைப்புலிகளோ அல்லது அவர்களின் ஆலோசகரெனக் கருதப்படும் அன்ரன் பாலசிங்கமோ வவுனியாவிலே வந்து இந்து நிருபர் ஒரே கேள்வியாகக் கேட்டாலுமென்ன வேறெங்கேனும் வைத்துத் இந்தியத்தொலைக்காட்சியாளர் கேட்டாலுமென மன்னிப்பு என்பது தொனிக்குமாறு எதையும் கேட்கத்தேவையில்லை.

இராஜீவ் காந்தியின் கொலை ஒரு துர்ப்பாக்கியசம்பவம் என்பதிலே எனக்கேதும் மறுப்பில்லை. அஃது அரசியலளவிலே விடுதலைப்புலிகளின் பெருந்தவறு (தமிழ்நாட்டினைப் பொறுத்தமட்டிலே அவர்களின் ஆதரவு இழந்ததையிட்டு). ஆனால், இது விபிசிங்காக இருந்திருந்தாலும் ஐபிகுஜ்ராலாக இருந்திருந்தாலும் அதேபோன்ற அரசியல்ரீதியான தவறாகவே இருந்திருக்கும்.

ஆனால், ஆயிரம் சாதாரணம் ஈழத்தமிழ்நாணற்புற்கள் இந்தி அமேதிப்படையினாலே சாய்க்கப்பட்டபோது, ஆலமரம் விழுத்தப்படுவதற்காக புற்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கமுடியாது.

bite ;-)

8:49 PM, June 27, 2006
வசந்தன்(Vasanthan) said...

ஆம். பெயரிலியின் கருத்தோடு முற்றாக ஒத்துப்போகிறேன்.

ஏற்கனவே 'துன்பியல் சம்பவம்' என்ற சொற்களினூடான வருத்தத்தையே என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. சாதாரண ஈழத்தவனாக இந்த விசயத்தில் புலிகள் மேல் எனக்கு விசனமுண்டு. அவர்கள் எனக்கும் சேர்த்தல்லவா மன்னிப்போ வருத்தமோ கேட்கிறார்கள்?

9:13 PM, June 27, 2006
வசந்தன்(Vasanthan) said...

//ஆனால், ஆயிரம் சாதாரணம் ஈழத்தமிழ்நாணற்புற்கள் இந்தி அமேதிப்படையினாலே சாய்க்கப்பட்டபோது, ஆலமரம் விழுத்தப்படுவதற்காக புற்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கமுடியாது.//

9:14 PM, June 27, 2006
தமிழினி said...

//இதைத் தவிர தமிழீழம் என்ற தனி நாட்டை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு தான் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன.//
//காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தீவிராவாத குழுக்களுக்கு அது ஒரு முன் மாதிரியாக அமைந்து விடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு//

தர்மப்படி பார்த்தால் இந்தியா தமது நாட்டிலே இருக்கிற பிரச்சினையின் அல்லது குழுக்களின் பிரச்சினையின் அடிப்படையினை ஆராய்ந்து அதை என்ன முறையில் தீர்க்க முடியும் என்று ஆராய வேண்டுமேயன்றி, ஈழத்திலே அநியாயமாக அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தின் நலனை இதனுடன் ஒப்பிட்டு, இந்தியாவிற்கு ஈழத்தின் நியாயப்பாடும், சிறிலங்கா செய்யும் அநியாயமும் விளங்கியிருந்தும், ஈழத்து மக்களை அப்படியே அழிந்து பொக விடுவது நியாயமில்லை.

மேலும் இந்தியாவில் இதற்கு முன்னரும் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவற்றுக்கெல்லாம் காரணமாக அல்லது உடந்தையாக இருந்த இனங்கள் இந்தியாவில் அழிக்கப்பட்டா விட்டன. மேற்படி சம்பவங்களின் குற்றவாளிகளுக்கு இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன?

ராஜீவ் காந்தி விவகாரம் தொடர்பாக புலிகள் வருத்தம் தெரிவித்து விட்டிருப்பது ஒருபுறமிருக்க, அங்கு வாழும் பல இலட்ச்சம் தமிழரின் நலனில், இந்தியாவை காலம் காலமாக தாய் நாடு என்று கருதிவந்த தமிழர்களின் நலனில் இந்தியாவிற்கு கரிசனை இல்லையா?

எது எப்படி இருந்தாலும், அரசியல் இராணுவ, பொருளாதார, புவியியல் ரீதியில் இந்தியாவிற்கு எதிர்காலத்தில் நட்பாகவும், பயனாகவும் அமையப்போவது ஈழத்தமிழினமும் புலிகளுமேயன்றி, இந்தியாவிற்கு அச்சுறுத்தலாய் இருந்த, இருக்கின்ற, இருக்கப்போகின்ற பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டும் அல்லது அவர்களது உதவியையும் ஆலோசனையையும் எதிர்பார்க்கும், இந்திய பிராந்திய நலனை என்றுமே கருத்தில் கொள்ளதா(தனது தேவைக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளும்) சிறிலங்காவாக ஒருபோதும் இருக்காது.

11:34 PM, June 27, 2006
ஜூலியன் said...

Once again a timely article. Read the interviews in this link. They are from horses' mouths.
A set of interviews an anti-LTTE guy can not refuse

Whether we agree or disagree the sort of apology is a serious issue at this juncture. I do not see anything amusing in it. This is not a biting matter at all.

12:07 AM, June 28, 2006
மலைநாடான் said...

சசி!
நேர்மையான பார்வை. இங்கே பெயரிலி, வசந்தன், ஆகியோது கருத்துக்களின் தார்மீக நியாயமே, எனது கருத்தும்.
நன்றி!

12:17 AM, June 28, 2006
Anonymous said...

என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அளித்த பேட்டி இந்தியத் தரப்பினால் திட்டமிட்டுத் திரிவுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக மதியுரைஞர் பாலசிங்கம் தெரிவித்த கருத்துகளை முழுமையாகப் பயன்படுத்தாமல், ஒரு பகுதியை ஒளிபரப்பி ....
அதற்கு வேறு அர்த்தத்தில் விளக்கமும், வியாக்கியானமும் கொடுத்து இந்தியத் தரப்பில் 'திருவிளையாடல்" புரியப்பட்டிருப்பதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன என தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி பேட்டி என்.டி.ரி.வியின் சார்பில் ஜேர்மன் நாட்டில் பணியாற்றும் இந்தியப் பெண் ஒருவரினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் புறநகர் பகுதியிலுள்ள அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டில் எடுக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு முற்பகுதியில் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சமயம், 'ராஜீவ் காந்தி கொலை ஒரு துன்பியல் நிகழ்வு" என்று தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தெரிவித்திருந்தார்.

அதற்கு மேலதிகமாக இது 'வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு துன்பிய நிகழ்வு" என்று பாலசிங்கம் தெரிவித்ததோடு அந்தச் சம்பவத்துக்காகத் தாம் ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கிறார் எனவும் குறிப்பிட்டார். அது அப்படியே ஒளிபரப்பாகியது.

அதற்கு மேல் 'இந்நிகழ்வை ஒரு தனி மனித கொலைச் சம்பவமாக அணுகுவது அல்லது பார்ப்பது தவறு. ஈழத் தமிழரின் தேசிய இனப்பிரச்சினையில் இந்தியா இராணுவ ரீதியில் தலையிட்ட அரசியல் வரலாற்றுப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இச் சம்பவத்தைத் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும்" என்று சாரப்பட அவர் தெரிவித்த கருத்துகள் அப்படியே வெட்டப்பட்டு விட்டன.

அவற்றை ஒதுக்கிவிட்டு '15 ஆண்டுகளுக்குப்பின்னர் முதல் தடவையாக ராஜீவ் காந்தி கொலைக்கான பொறுப்பை புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்" என்ற சாரப்பட பாலசிங்கம் கூறாதவிடயத்தை ஒரு முன்னறிவிப்பாகக் கொடுத்து பாலாசிங்கத்தின்; நீண்ட ஒரு மணிநேரப் பேட்டியில் ஓரிரு நிமிட வார்த்தைகளை ஒளிபரப்பி, ராஜீவ் கொலைக்குற்றத்தைப் புலிகள் அப்படியே ஏற்றுக்கொண்டனர் என்ற மாயையை உருவாக்கும் விதத்தில் 'திருகுதாளம" பண்ணி செய்தி வெளியிடப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்தியச் செய்தி நிறுவனத்தில் ஞாயிற்றுக் கிழமை பதிவுசெய்யப்பட்ட மேற்படி பேட்டியின் முக்கிய பகுதிகள் புதுடில்லியில் வார்த்தைக்கு வார்த்தை அலசி ஆராயப்பட்ட பின்னர், அதில் சாதகமான பகுதிகளை வெட்டி எடுத்து ஒளிபரப்ப ஏற்பாடுசெய்யப்பட்டதோடு, அதற்கு இந்திய அரசுத் தரப்பில் பதலடி தரவும் ஆயத்தம் செய்யப்பட்டது.

ராஜீவ் கொலை ஒரு வரலாற்றில் மறக்க முடியாத துன்பியல் நிகழ்வு. அதற்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கின்றோம். பழையவற்றை மறந்துவிட்டுப் புதிய அணுகு முறையில் விடயங்களைக் கையாள இந்தியாவின் சமிக்ஞைகளை எதிர்பார்க்கின்றோம என்று பாலசிங்கம் சொன்ன கருத்துகள்
'பதினைந்து ஆண்டுகளின் பின்னர் ராஜீவ் கொலைக்கான பொறுப்பை புலிகள் முதற்தடவையாகப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள். அதற்காக ,ந்தியாவினதும், இந்திய மக்களினதும் மன்னிப்பை அவர்கள் கோருகிறார்கள்" என்ற பீடிகை அறிவிப்போடு ஒளிபரப்பியதன் மூலம் இவ் விடயத்தை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் குழப்பியிருக்கிறது என்.டி.ரி.வி. எனத் தமிழர் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்படுகின்றது

9:11 AM, June 28, 2006
thamillvaanan said...

//இந்தியாவில் இதற்கு முன்னரும் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இவற்றுக்கெல்லாம் காரணமாக அல்லது உடந்தையாக இருந்த இனங்கள் இந்தியாவில் அழிக்கப்பட்டா விட்டன. மேற்படி சம்பவங்களின் குற்றவாளிகளுக்கு இந்தியா எடுத்த நடவடிக்கை என்ன? //

மேற்படி கருத்துக்களும் முக்கியமானவை.

இப்பேட்டி பற்றி இந்திய அமைச்சர் ஒருவரிடம் பிபிசி கருத்துக்கேட்டபோது அவர் தமது தரப்பு நியாயத்தை சொன்னார். அது அவருடைய அரசின் கருத்து. அவற்றோடு மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதன்பின்னர் இந்து ராமிடம் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டது. அப்போதுதான் இந்து ராம் எப்படிபட்டவர் என்பதை புரிந்துகொண்டேனன். புலிகள் மீது வெறிகொண்ட மனிதனாகவே தென்படுகிறார். சந்திரிகாவிடம் பதக்கம் வாங்கிய பெருமைக்குரியவர் அல்லவா?

சசி குறிப்பிடுவதுபோல, புலிகளின் தற்போதைய அறிவிப்பு இந்திய அரசு என்ற இயந்திரத்தில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தபோவதில்லை. மாறாக ஈழஆதரவு கட்சிகளுக்கு தார்மீக ரீதியான பலத்தை, அவர்களது நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான வலுவாக இருக்கமுடியும். அதன்விளைவாக அவர்களுடைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் கைகள் சிறிலங்காவை நோக்கி நீளாமல் கட்டிப்போடக்கூடியதாக இருக்க வாய்ப்புண்டு.

அன்புடன்
தமிழ்வாணன்

10:16 AM, June 28, 2006
சின்னக்குட்டி said...

//புலிகளின் தற்போதைய அறிவிப்பு இந்திய அரசு என்ற இயந்திரத்தில் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தபோவதில்லை. மாறாக ஈழஆதரவு கட்சிகளுக்கு தார்மீக ரீதியான பலத்தை, அவர்களது நியாயத்தை வெளிப்படுத்துவதற்கான வலுவாக இருக்கமுடியும். அதன்விளைவாக அவர்களுடைய செயற்பாடுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் கைகள் சிறிலங்காவை நோக்கி நீளாமல் கட்டிப்போடக்கூடியதாக இருக்க வாய்ப்புண்டு.//


முற்றும் முழுதான உண்மை

12:35 PM, June 28, 2006
வெற்றி said...

சசி,
வணக்கம்.
தங்களின் சதுரங்க ஆட்டத்தில் தமிழீழம்-1 எனும் பதிவில் வலைப்பதிவ நண்பர் ஈழபாரதி தெரிவித்த கருத்துக்களுக்கு நான் முன்வைத்த என் மாற்றுக்கருத்தை தேவை கருதி இங்கே பதிகிறேன்.

நண்பர் ஈழபாரதி இப்படிச் சொன்னார்:
//என்னைப்பொறுத்தவரை இந்தியாவுக்கு நல்லெண்ண சமிக்கைகளை விடுதலைப்புலிகள் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு, அமெரிக்காவுடன் ஒரு சிறிய அஜெஸ்மெண்டை செய்ய முன் வரவேண்டும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் பிரனவ்முகர்ஜி இறுதியாக வெளியிட்ட அறிக்கை அவர்களால், மாறமுடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறது.//

நான் இப்படிச் சொல்லியிருந்தேன்:

ஈழபாரதி, தங்களின் இக் கருத்திலும் நான் மாற்றுக் கருத்தையே கொண்டுள்ளேன். இலங்கையில் இராணுவ ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை இந்தியாவிற்கு தற்போது உள்ள சூழ்நிலையில் இல்லை. காரணம், 1987 ல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தனது நலன்களுக்குச் சாதகமான பல உறுதிகளை இலங்கையிடம் இருந்து இந்தியா பெற்றுக்கொண்டு விட்டது. குறிப்பாக, இலங்கை அரசு எந்த வெளிநாட்டு இராணுவத்தையும் இலங்கைக்குள் அனுமதிக்க முன்னர், அல்லது மற்றைய நாடுகளுடன் இராணுவ ஒப்பந்தங்களைச் செய்யும் முன்னர் கட்டாயம் இந்தியாவிடம்
"ஆலோசனை" பெற வேண்டும் என்பது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். ஆகவே இவ் ஒப்பந்தம் அமுலில் இருக்கும் வரை, இலங்கை அரசு இவ் ஒப்பந்ததை மீறும் வரை இந்தியாவிற்கு இலங்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டிய தேவை தற்போது இல்லை.

ஈழபாரதி இப்படிச் சொன்னார்:

//இந்தியாவுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகளை விட அமெரிக்கா விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கும் நல்லெண்ண சமிக்கைகள் சாலச்சிறந்தது.//

நான் இப்படிச் சொல்லியிருந்தேன்:

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படுவோமாயிருந்தால், அதாவது, புலிகள் இந்திய நலனுக்கு எதிராகச் செயற்படுவார்களாயின் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது என்பதே என் கருத்து.
எமது பிராந்தியத்தில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்பட்டால் வரும் விளைவுகளை விடுதலைப் புலிகளின் திட்டவகுப்பாளர்கள் அறியாதது அல்ல. அதனால் தான் பாகிஸ்தான் உளவுப்படை புலிகளுக்கு ஆதரவு தருவதாகத் தகவல் அனுப்பிய போதும், புலிகள் அதை நிராகரித்தனர். அதே போலத்தான் , ஆனையிறவு இராணுவமுகாமைத் தகர்த்தெறிந்து வெற்றியீட்டி, புலிகளின் படை யாழ் நோக்கி அணிவகுத்துச் சென்று கிட்டத்தட்ட 40,000 சிங்களப் படைகளை முற்றுகை இட்ட போது , இந்தியாவின் வேண்டுகோளினால் தான் புலிகள் யாழ் முற்றுகையைக் கைவிட்டார்கள். ஆக, புலிகள் இந்தியாவின் முக்கியத்துவத்தை நன்றாகவே கணிப்பிட்டு வைத்துள்ளார்கள்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்திய தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் இப்படிச் சொல்லியிருந்தார்:

“We have made pledges to the Govt of India that under no circumstances we will act against the interest of the Govt of India... "

12:42 PM, June 28, 2006
Anonymous said...

http://www.rediff.com/news/2000/mar/24lanka.htm
Everybody did his own and we landed there. And we landed there like a refugee camp I saw in Assam, Chabua, when we were fighting the Chinese. Everybody was just being inducted, nobody knew anything. Anyway, I met the Sri Lankan brigade commander, went to his operations room and he told me what it was all about.

I said, Have you seen the Tigers, LTTE? He said, Never. I sit inside my bunker and at last light I have APCs outside my bunker. Why should I go and see the LTTE? I said, You have been there for a long time. Alright, let us do one thing, you take me to the LTTE, I want to establish contact with them.

We established contact. Kumaran, who got killed in the boat tragedy, he was the Jaffna commander, very nice chap, he came in a car and took me and one of my brigade commanders, who got killed in Srinagar, Fernandes, he got blown off by a mine aimed at the ammunition depot. We both went with Kumaran, Mahathiah was standing outside a bungalow. He said, General, I am not prepared to talk to you. I said, Why? I have come here with a message of peace, goodwill. He said, Unless you bring back Prabhakaran, we will not talk to you. I said, Where is Prabhakaran?

I didn't even know that. They kept the army absolutely in the dark. Prabhakaran was in the Ashoka Hotel in Delhi. Now I know the room number also, 512 or 522. And he was to see the prime minister, before the prime minister went in for the Accord. Anyway he saw him, the PM gave him certain assurances, and before he could say 'Jack Robinson', the prime minister was in Colombo, signing the Accord.

Prabhakaran learnt it on television that the Accord had been signed and they were not party to it. It was one reason why the LTTE never accepted the Accord and India's stand.

If we had taken the LTTE into confidence, they would have known the whole thing, their terms would have been put across to Jayewardane, and the situation would have been different. Dixit was in a great hurry to get the Accord signed, with his name up. He became foreign secretary; he got the award later. But he never studied the mood of the people, especially the JVP. And since he didn't study the mood of the people, there was an attempt to assassinate the prime minister.

We would have lost our prime minister. After signing the Accord, they themselves would have killed him. We didn't know of it. Why did they not tell us? We only saw it on television, newspapers never came.

2:36 PM, June 28, 2006
ஜோ/Joe said...

நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்து ,தமிழ் பெண்களை மானபங்கப்படுத்திய ஒரு இராணுவத்தின் செயலையும் ,ராஜீவ் காந்தியின் படுகொலையும் ஒப்பிட முடியாது .ராஜாங்க ரீதியில் ஒரு நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதால் இந்த மன்னிப்பு அவசியமாக இருக்கலாம் .ஆனால் தார்மீக ரீதியில் ராஜீவ்காந்தி படுகொலைக்காக புலிகள் மன்னிப்பு கேட்க வேண்டியது தமிழ்நாட்டு தமிழர்களிடம் .உணர்வு பூர்வமாகவும் வெளிப்படையாகவும் தமக்கு ஆதரவு அளித்து வந்த அம்மக்களை இந்த ஒரு நிகழ்வின் மூலம் சொந்த நாட்டில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மற்றவர் பரிகசிக்கச் செய்தது மிகப்பெரிய தவறு .அதற்கான பலனைத்தான் இன்று அவர்கள் அனுபவிக்கிறார்கள் .அதைப்பார்த்து தமிழ்நாட்டு தமிழர்கள் வாய்பொத்தி நிற்பதற்கு புலிகளே காரணம் .தங்கள் தலையிலே தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டதுமில்லாமல் ,தமிழக தமிழர்களின் நம்பிக்கையை தகர்த்ததற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்பது தான் தார்மீக அடிப்படையில் சரியானது.

11:14 PM, June 28, 2006
ENNAR said...

பாலசிங்கத்தின் பேச்சேற்றல் இந்திய நலனுக்கு ஆரோக்கியமானதன்று

9:36 AM, June 29, 2006
CAPitalZ said...

றாஜீவ் கந்தியின் கொலை தப்பா
http://1paarvai.wordpress.com/2006/06/28/raajiiv-kanthiyin-kolai-thappaa/

_______
CAPital

8:15 PM, June 29, 2006