வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, January 31, 2006

தேர்தல் களம் : பாட்டாளி மக்கள் கட்சி

தேர்தல் நெருங்கி விட்டது. "உங்கள் கைத் தொட்டு, கால் தொட்டு, சிரம் தாழ்த்தி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்" என்று இது வரையில் மக்களை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள், மக்களை தேடித் தேடி வந்து மைக் வைத்து அலற வைக்கப் போகிறார்கள். பொங்கலுக்கு சுண்ணாம்பு பூசிய சுவர்களில் எல்லாம் தலைவர்களும் அவர்களின் கொடிகளும் சின்னங்களும் அலங்கரிக்கப் போகின்றன. தமிழகம் கலர்புள்ளாக, திருவிழாக் கோலத்தில் மாறி விடும்.

நான் இங்கு எழுதப் போவது அதைக் குறித்து அல்ல. தேர்தல் சமயம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் தமிழகத்தை பரபரப்பிலேயே வைத்திருக்கும் கட்சியைப் பற்றியது தான் இந்தப் பதிவு. The most colourful Party in Tamil Nadu - பாட்டாளி மக்கள் கட்சி. அதனுடைய தலைவர் முதற்கொண்டு, தொண்டர்கள் வரை கடந்த ஐந்தாண்டு காலமாக "பயங்கர பிசி"யாக இருந்து விட்டனர். இப்பொழுது உச்சக்கட்ட பிசியான சூழலில் இருக்கின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் பிசியாக, பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்த ஒரே கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தான். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, ரஜினியை விமர்சித்தது, குஷ்பு விவகாரம், தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று தமிழ் பத்திரிக்கைகளில் அதிகம் இடம் பெற்ற கட்சி பாமக வாகத் தான் இருக்க கூடும். அவர்களின் இந்தக் கூச்சலை மட்டுமே எழுதும் பத்திரிக்கைகள், அவர்கள் செயல்படுத்த முனைந்த "சில" நல்ல விஷயங்களை பற்றி எழுதுவதே இல்லை. வலைப்பதிவுகளிலும் அவ்வாறான சூழல் தான் உள்ளது. பாமக குறித்த விமர்சனத்தை பலர் எழுதி விட்டதால், பாமக மேற்க்கொண்ட சில நல்ல முயற்சிகளை கூறி விட்டு, அதன் பலம் இம் முறை தேர்தலில் எப்படி திமுகவிற்கு உதவக் கூடும் என்பது குறித்தான எனது பார்வையை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன்.

இது வரையில் தமிழகத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி மூன்று பட்ஜெட்கள் தயாரித்து இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா ? உண்மை தான்.

எனக்கும் கூட ஆச்சரியமாகத் தான் இருந்தது. நான் வட மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதுவும் பாமக வின் கோட்டை என்று சொல்லப்படும் பகுதிக்கு அருகில் இருப்பதாலும், பாமக பல முறை நடந்திய பல போராட்டங்களை அறிந்திருந்ததாலும், ஒரு முறை பாமக நடத்திய போராட்டம் காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொசு, சாக்கடை நாற்றம் இடையே ஒரு இரவை கழித்த அனுபவம் இருந்ததாலும், பாமகவை சாதிக் கட்சி, வன்முறைக் கட்சி என்று மட்டுமே நினைத்திருந்தேன். அத்தகைய கட்சி பட்ஜெட் தயாரித்தது தான் என்னுடைய ஆச்சரியத்திற்கு காரணம்.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு மாற்று பட்ஜெட்டாக அதனை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த பட்ஜெட் குறித்த மேலோட்டமான செய்தியை ஒரு முறை இந்துவில் வாசித்தேன். தமிழ்ப் பத்திரிக்கைகளில் இது குறித்து எழுதப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருந்தார்கள், நிதிப் பிரச்சனை குறித்து என்ன மாற்று திட்டங்களை முன்வைத்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலும் பாமகவிற்கு என்று தனியாக இணைய தளம் இல்லாததால் இது குறித்த முழுமையான விவபரங்கள் தெரியவில்லை.

பாமகவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டிய முயற்சி. இந்தியாவில் வேறு ஏதேனும் கட்சிகள் இது போல செய்கின்றனவா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் அரசு எடுக்கும் அனைத்து திட்டங்களையும் குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் இங்கு நியதியாக இருந்து வருகிறது. அரசுக்கு மாற்றாக தாங்கள் முன்வைக்க கூடிய திட்டம் என்ன என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதே இல்லை. அரசு செயல்படுத்தும் திட்டங்களை விமர்சிப்பது எளிதாக இருப்பதால் அதனை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியாக இருந்த கட்சி பிறகு எதிர்கட்சியாக மாறினாலும் இதே கதை தான்.

எதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும். அரசின் தற்போதைய நிதி நிலையை கொண்டு எந்த மாதிரியான மாற்று திட்டங்களை தாங்கள் முன்வைக்க முடியும் என்பது குறித்து கூற வேண்டும். அது தான் சரியான அரசியலாக, மக்கள் நலம் குறித்த அரசியலாக இருக்க முடியும். பாமகவின் முயற்சி அதற்கு முன்னோடியாக உள்ளது என்று சொல்லலாம்.

பாமகவின் அடுத்த முயற்சி தமிழிசை குறித்தான முயற்சி. "தமிழ் என் உயிர்", "தமிழனத்தலைவர்" என்றெல்லாம் தன்னைக் கூறிக் கொள்வதில் பெருமைக் கொள்ளும் கலைஞர் இது வரை இது குறித்த முயற்சிகளை எடுக்க வில்லை. பாமக ஆண்டுதோறும் தமிழ் பாட மறுக்கும் சபாக்களின் மத்தியில் தமிழிசையை வளர்க்க முனைந்துள்ளது பாரட்டத்தக்க முயற்சி.

அது போல கடும் விமர்சனத்திற்கு ஆளான தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களும் உண்டு. அன்புமணியின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள், ராமதாஸ் வீட்டு பெயர்ப் பலகையில் ஆங்கிலம் இருக்கிறதே என்று விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் பெரிய பெரிய பலகைகளில் வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்களின் அறிமுகத்தை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்தப் பலகைகளை படிக்கும் பொழுது நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் எத்தனை பொருள்களுக்கு நாம் தமிழில் பெயர் தெரியாமல், வேறு மொழியில் இருந்து கடன் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று எனக்கு தோன்றியது. அவமானமாகக் கூட இருந்தது.

பாமகவின் மிக நல்ல செயல், ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலத்தில் இருக்க கூடியவர்களையும் திரட்டி தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக தமிழகம் வந்த இலங்கை மலையகத் தமிழ் கட்சி தலைவரன சந்திரசேகரனிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தமிழ் நெட் இணையத் தளத்தில் கடந்த மாதம் படித்தேன். இதுவும் ஒரு நல்ல முயற்சி. கடந்த காலங்களிலும் பாமக இது போன்ற முயற்சியை எடுத்தது. அத்வானியை சிறப்பு அழைப்பாளராக கொண்டு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மாநாடு நடப்பதற்கு சில தினங்கள் முன்பாக நம் வில்லன் "இந்து" பத்திரிக்கை அவதூறான ஒரு செய்தி வெளியிட்டு அத்வானி கலந்து கொள்ள விடாமல் செய்தது.

இத்தகைய நல்ல முயற்சிகளுக்கிடையே குஷ்பு, சுகாசினி விவகாரங்கள் தேவையற்றவை. ஆனாலும் பாமக அது போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறது. அதற்குத் தான் அதிக விளம்பரமும் கிடைக்கிறது. குஷ்பு, சுகாசினி விவகாரங்களுக்கு செலவழிக்கும் நேரத்தை ஒரு நல்ல இணையத் தளம் வைக்க பயன்படுத்தலாம்.


தேர்தல் வரும் பொழுதெல்லாம் ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்று பத்திரிக்கைகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே எழுதத் தொடங்கி விடும். அவரும் வாய்ஸ் கொடுப்பார். தனக்கு மிகப் பெரிய பலம் இருப்பதாக நினைத்திருந்தார் போலும். பத்திரிக்கைகளும் அதற்கு தூபம் போட்டு கொண்டு இருந்தன. ஆனால் இம் முறை யாரும் இது வரையில் எழுதவில்லை. இனி மேல் அவர்கள் எழுதினாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. காரணம் திண்டிவனம் (தைலாபுரம்) டாக்டர் தான். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பத்திரிக்கைகளால் மிகப் பெரும் மக்கள் சக்தி உள்ளவராக சித்தரிக்கப்பட்டு ஊதி பெரிதாக்கப்பட்ட ரஜினி என்ற கலர்புல்லான பலூனை, சிறு துளையிட்டு, காற்றைப் பிடுங்கிய பெருமைக்குரியவர் தைலாபுரம் டாக்டர் தான் (பூனைக்கு மணி கட்டியவர் என்று சொல்லலாமோ).

இந்த தேர்தலில் மற்றுமொரு கேள்விக்கு விடை கிடைத்து விடும். மற்றொரு "காந்த்" மக்களை இழுக்கும் காந்தமா, வெற்று காகிதமா என்பது தெரிந்தால், "வருங்கால முதல்வர்" என்று நடிகர்களுக்கு கோஷம் எழுப்பி நாயகர்களை ரசிகர்கள் காமெடியன்களாக்க மாட்டார்கள்.

பாமக கடந்த தேர்தலுக்கு முன்பாக திமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 27/29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக-காங்கிரஸ் கூட்டணில் போட்டியிட்டு 6/6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த இரு தேர்தல்களில் கிட்டத்தட்ட 100% வெற்றி. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக தங்களைக் கூறிக் கொள்கிறது. அதனுடைய கடந்த கால வெற்றிகளையும், தொண்டர் பலத்தையும் பார்க்கும் பொழுது அதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பாமக எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பார்த்து அங்கு சாய்ந்து விடுகிறது என்ற கருத்து உள்ளது. அதில் உண்மை இருந்தாலும், பாமகவிற்கு பலமே இல்லை என்றால் எந்தக் கூட்டணியிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு தொகுதிகளையும் கொடுக்க மாட்டார்கள். பாமகவின் பலம் எதிர் அணிக்கு செல்வதை திமுக, அதிமுக இருவருமே விரும்பவில்லை.

கடந்த முறை ஜெயலலிதாவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டது.

  • ஒன்று மதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக தென்மாவட்டங்களில் தோல்வியடைய அது தான் முக்கிய காரணம். அதிமுக ஓட்டு பிரிந்ததால் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றது
  • மற்றொன்று வடமாவட்டங்களில் பாமகவுடன் கூட்டணி அமைத்தது. வடமாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற பாமகவின் பலம் தான் முக்கிய காரணம். திருமாவளவன், பொன்முடி போன்ற பிரபலங்கள் தவிர பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் தோல்வியே அடைந்தனர். பொன்முடி விழுப்புரம் தொகுதியில் கடும் போட்டியில் அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி காரணமாகவே வெற்றி பெற்றார்.

திமுக தென்மாவட்டங்களை விட வடமாவட்டங்களில் தான் பலமான கட்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனுடைய பலத்துடன் பாமக பலம் சேரும் பொழுது அந்தக் கூட்டணி மிகச் சுலபமாக வடமாவட்டங்களில் வெல்ல முடியும். திருமாவளவன் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டம் திமுக கைகளில் என்று உறுதியாக சொல்லலாம்.

தமிழக அரசியலில் குறிப்பாக, வட மாவட்ட அரசியலில் ஓட்டு வங்கிகளும், சாதியும் தான் பிரதானமாக இருந்து வருகிறது. எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் கட்சியின் பலம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது. குஷ்பு பிரச்சனையா, கலாச்சார பிரச்சனையா என்பதெல்லாம் இங்கு முக்கியமாக தெரிவதில்லை. அந்தப் பிரச்சனை குறித்து அலசி ஆராய்ந்து பேசும் நாமெல்லாம் ஓட்டு போடுவதில்லை. இப்படி அலசி ஆராய்ந்து ஓட்டு போடுபாவர்களை நம்பியும் பாமக போன்ற கட்சிகள் இருப்பதில்லை.

அவர்களுடைய பலம் கிராமங்கள். அங்கு இருக்கும் அவர்களின் சாதி மக்கள். அந்த மக்கள் இது வரை கட்சி மாறியதாக தெரியவில்லை

அடுத்தப் பதிவு - மிதில் மேல் பூனை - மதிமுக பற்றி

Leia Mais…
Monday, January 30, 2006

புலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2

கடந்தப் பதிவு



தமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன்

இலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந்த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.

அமெரிக்காவை நோக்கி நகர்ந்த இலங்கையின் பார்வை தவிர 1980களில் வேகமாக வளர்ந்த இலங்கையின் பொருளாதாரமும் இந்திய உளவு நிறுவனமான ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் மத்தியில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இருந்த ரா, இலங்கை மீது தன் கவனத்தை திருப்பியது.

இலங்கையில் அப்பொழுது நிலவிய சூழலும் ராவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.

இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்

- ஒன்று இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனை தமிழகத்தை அப்பொழுது தொந்தளிக்கச் செய்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமான நிலையை அன்று இந்தியா எடுத்திராவிட்டால் தமிழகத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் வெடித்திருக்கும்.

- மற்றொன்று இலங்கை பாக்கிஸ்தான் - அமெரிக்கா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம். அவ்வாறு சாயும் பட்சத்தில் இலங்கையில் நிலை கொள்ளக் கூடிய அமெரிக்கப் படைகள் இந்தியாவிற்கு தெற்கில் ஒரு நிரந்தர தலைவலியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டுமானால் அந் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை குறைப்பதும் முக்கியமானது என ரா கருதியது.

எனவே தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதில் இந்தியாவிற்கு பல நன்மைகள் இருந்தன. இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலமாக மிரட்டலாம். இலங்கையில் தீவிரவாத பிரச்சனையை வளர்ப்பதன் மூலம் அந் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் இந்தியா ஈழத் தமிழர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளதாக காண்பிக்கலாம்.

இந்தியா தனது இந்த நோக்கத்தில் வெற்றியை பெற்றது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் அதே வேளையில் தமிழ் ஈழம் அமைந்து விடக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. அதற்கு காரணம் இலங்கை இரண்டு துண்டாகும் பட்சத்தில் அதில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராகவே இருக்கும் என்ற அச்சம். உலகச் சூழ்நிலையும் அவ்வாறு தான் இருந்தது. சோவியத் யுனியன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையே ஒரு நாட்டுடன் சார்பு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அன்றைக்கு பல நாடுகளுக்கு இருந்தது.

இவை தவிர தமிழ் ஈழம் அமைந்தால் தமிழகத்தில் அது போல தீவிரவாதம் எழக் கூடும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த தமிழ் மொழி உணர்வும் அதற்கு ஒரு காரணம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது.

"Inter-state relations are not governed by the logic of morality. They were and they remain an amoral phenomenon.."

இலங்கைப் பிரச்சனையில் குட்டையை குழப்பியவர்களில் முக்கியமானவரான ஜெ.என்.தீக்ஷத் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுதும் பொழுது இப்படித் தான் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் நியாயம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது தான் தீக்ஷ்த்தின் வாதம். இந்தியா, இலங்கை பிரச்சனையில் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வாறு நியாயத்திற்கு புறம்பாக இருந்தது என்பதற்கு இதை விட வேறு யாரும் ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது.

இலங்கை அரசுக்கு எதிர் நடவடிக்கையாக, இலங்கை அரசுக்கு பிரச்சனை கொடுக்கும் பொருட்டும், தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக மட்டுமே இலங்கை போராளி குழுக்களுக்கு இந்தியா ரா மூலமாக பயிற்சி அளிக்க தொடங்கியது. இதில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா முயற்சி எடுத்தது என்பதெல்லாம் வெளிவேஷம். தமிழகத்து மக்களை நம்ப வைக்க போடப்பட்ட வேடம். இப் பிரந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர் என்பது தான் உண்மை. அது தான் ஜெ.என்.தீக்ஷத் கூறும் amoral phenomenon.

இலங்கை போராளிக் குழுக்களை தங்களுடைய கூலிப்படைகளாக மாற்றுவது, இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வருவது, இந்து மகா சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் தான் மட்டுமே வல்லரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இங்கு இடமில்லை என்பதை வெளிக்காட்டுவது இவையே இந்தியா 1980களில் இலங்கை விஷயத்தில் கொண்ட கொள்கை.

இந்தியா அனைத்து போராளிக் குழுக்களையும் தன்னுடைய கூலிப்படைகளாவே மாற்றியது. மாலத்தீவில் ரா மேற்க்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டது. ராவின் செல்லப் பிள்ளைகளாக ஈழப் போராளிக் குழுக்கள் மாறின.

ஆனால் இந்தியாவின் எண்ணம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும், அதன் தலைவர் பிரபாகரன் விஷயத்திலும் தவறாகிப் போனது. இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் பொழுது கூட விடுதலைப் புலிகள் தங்கள் சொல்படி கேட்கும் கிளிப் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ரா எண்ணியது. அப்போதைய ரா அமைப்பின் தலைவர் வர்மா, ராஜீவ் காந்தியிடம் "these are boys whom we know and with whom we have been in touch and so they will listen to us" என்று கூறினாராம் (Assignment Colombo - By JN Dixit)

அவ்வாறு இல்லாமல் எதிர்த்தாலும் எளிதில் நசுக்கி விடலாம் என்று ரா கருதியது.

ஆனால் இந்தியாவின் எண்ணம் நிறைவேற வில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பதை வெளிப்பூச்சாக பேசுவதில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவது என்ற உறுதியான நிலையை எக் காலத்திலும் பிரபாகரன் சமரசம் செய்து கொண்டதில்லை. தன்னுடைய அதே உறுதிப்பாட்டுடனே தமிழ் ஈழத்தை அடையும் லட்சிய வேட்கையுடனே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களையும் அவர் உருவாக்கினார்.

விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெ.என்.தீக்ஷ்த்தே அவரது Assignment Colombo என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்

The LTTE's emergence as the most dominant and effective politico-military force representing Tamil interests was due to the following factors:

First, the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

Secondly, he has created a highly disciplined, and dedicated cadres, a manifestation of which is inherent in what is called the 'cyanide cult.' Each regular member of the LTTE carries a cyanide pill and is pledged to committing suicide rather than being captured by the enemy.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

The fourth factor has been the LTTE's ability to upgrade its political and military capacities including technological inputs despite the constraints imposed on it by Sri Lankan forces and later by India.

The fifth factor is a totally amoral and deadly violent approach in dealing with those the LTTE considers as enemies.

The sixth factor is Prabhakaran's success in gathering around him senior advisers with diverse political, administrative and technological capacities, which contributed to effective training of his cadres, optimum utilisation of the military equipment which he had, and the structuring of an efficient command and control system.

தன்னுடைய "Island of Blood" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.

.. The other thing about Pirabakaran that made a deep impression on me was his unwavering commitment to the cause of Eelam. It was deep -rooted, non-negotiable convication.

...My encounters with the LTTE guerrillas and their prodigious literature convinced me that Pirabhakaran was the man to watch out for. Compared to the other Tamil groups, the LTTE cadres were clearly superior. They exuded an aura of single-minded devotion to their cause

விடுதலைப் புலிகள் இயக்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் ஈழத்திற்காக சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழத்திற்கான பாதையில் எதிர்ப்பு வந்த பொழுதெல்லாம் அதனை எதிர்த்தே போரிட்டிருக்கிறார்கள். அனிதா பிரதாப்பிற்கு ஆரம்ப காலங்களில் அளித்த பேட்டிகளில் பிரபாகரன் ஒன்றை தெளிவு படுத்தியிருந்தார்.

நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம் என்று அனிதா பிரதாப்பிற்கு 1984ல் அளித்த பேட்டியிலேயே பிரபாகரன் கூறியிருந்தார். இது 1984ல் நிலவிய சூழலில் அனிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார்.

இந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிராக மாறிய பொழுது இந்தியாவை எதிர்த்து போரிடவும் பிரபாகரன் தயங்கவில்லை. நாளை அமெரிக்கா தன்னுடைய படைகளை களமிறக்கினாலும், அமெரிக்காவை எதிர்ப்பார். ஏனெனில் தமிழ் ஈழம் என்பது அவருக்கு deep -rooted, non-negotiable convication.

இந்தியாவிற்கு தன்னுடைய இறையான்மை, பாதுகாப்பு போன்றவை முக்கிய நோக்கமாக இருப்பதால் தமிழ் ஈழத்தை எதிர்த்து.

அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன ?

அமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.

அமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா "Voice of America" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

இவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

இலங்கையுடன் தமிழர்களுக்கான ஒப்பந்தம் என்ற போர்வையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தின

இவையனைத்துமே தமிழ் ஈழத்திற்கு எதிராகவே கடந்த காலங்களில் அமைந்தன. பிராந்திய வல்லரசும், உலக வல்லரசும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.

ஆனால்.....

தற்பொழுது உலக நிலை மாறி வருகிறது. கொள்கைகளும் மாறி வருகின்றன. நாடுகளின் வெளியுறவு கொள்கை மாறி வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார இணக்கம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையிலும், அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்படுமா ?

கடந்த காலங்களில் பிராந்திய முக்கியத்துவமுள்ள பகுதியாக இருந்தது போன்று இலங்கை இப்பொழுதும் இருக்கிறதா ?

விடுதலைப் புலிகளின் நோக்கம் சமரசத்திற்கு இடமில்லாத தமிழ் ஈழம் மட்டுமே. தமிழ் ஈழத்தை பிரபாகரனால் அமைக்க முடியுமா ?




அடுத்தப் பதிவில்

Leia Mais…
Saturday, January 21, 2006

அள்ளிக் கொடுக்கும் ஜெ

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல "Populist" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)

இந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.



ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு "fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல "Populist" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.

Leia Mais…
Sunday, January 01, 2006

ஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு

இன்றைய ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இலங்கைப் பிரச்சனை குறித்து ஹிந்துவில் எழுதப்படும் தலையங்கங்கள் விமர்சனப் பார்வைக்கு கூட தகுதியற்ற ஒரே agenda கொண்டு எழுதப்படும் அலுப்பு தரும் விஷயம் என்பது தான் என் எண்ணம். ஆயினும் இந்தத் தலையங்கத்தை படிக்கும் பொழுது மாறி வரும் சில விஷயங்கள், குறிப்பாக இந்திய நிலைப்பாடு குறித்து ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ள கவலையும், அதனை மூடிமறைக்க ஒன்றுக்கும் உதவாத சில விஷயங்களை பெரிதுபடுத்தி பேசி இருப்பதும் நல்ல Humourக உள்ளது. இந்தத் தலையங்கத்தின் நோக்கம் தலைப்பில் தெளிவாக தெரிகிறது. LTTE is an anti-India force.

இந்தியா எங்கே இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து விடுமோ என்ற கவலை ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் Hindu is trying to make a frantic attempt to brand LTTE as an anti-India force.



மகிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதும், மாறாக இது வரையில் இல்லாத அளவு விடுதலைப் புலிகள் விஷயத்தில் இந்திய அரசு மொளனம் சாதித்ததும் "ஸ்ரீலங்கா ரத்னா" பட்டம் பெற்ற ஹிந்துவின் ஆசிரியருக்கு கவலையளித்துள்ளதாக தெரிகிறது.

ஹிந்துவுக்கு குறிப்பாக சில விஷயங்களில் கவலை ஏற்பட்டுள்ளது.

ஒன்று இலங்கை-இந்தியா கூட்டறிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களிடம் முறையிட்டப் பிறகும், அது குறித்து அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை.

ஹிந்து இது குறித்து கவலை அடைந்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.

Surprisingly, the joint statement is foggy about why the ceasefire is threatened. Instead of identifying the LTTE as the author of the escalating violence, it points to "the need for the strict observance of the ceasefire and immediate resumption of talks aimed at strengthening the ceasefire." Is the non-condemnation of the LTTE deliberate - a consequence of pro-Eelam parties in Tamil Nadu, two of which are constituents of the United Progressive Alliance, applying pressure by ratcheting up the noise against the Rajapakse Government?

ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பாலியல் பாலத்காரமும், கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் நிழல் யுத்தமும் ஹிந்துவுக்கு டிசம்பர் "Fog"ல் சரியாக தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கும், இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் அது குறித்து தெரிந்துள்ளது. எனவே தான் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுவாக இரு தரப்புமே போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த உண்மை. இதைத் தான் இந்தியாவும் செய்துள்ளது. அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு தன்னுடைய Credibilityஐ உலக நாடுகள் மத்தியில் கேலி பொருளாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. எக்காரணத்தைப் பிடித்தாவது புலிகளை எதிர்த்தே தீர வேண்டிய ஹிந்துவின் Agenda இந்திய அரசுக்கு இப்பொழுது இல்லாமல் போனது மகிழ்ச்சியை அளிக்கிறது.

மற்றொன்று யாருமே எதிர்பாராதது - ஜெயலலிதா மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதா இது போன்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் இல்லாதபட்சத்தில் அவர் இம் மாதிரியான நிலையினை மேற்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் சிங்கள பேரினவாத தலைவராக, தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் ஒரு தலைவராக மகிந்தா பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவின் நிலையே இவ்வாறு இருக்கும் பொழுது மைய அரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவின் நிலை இந்திய அரசுக்கு புரிந்திருக்கும். மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க கூடாது என்று தொடர்ந்து பேசி வருகின்றன. இதனால் இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been unwaveringly clear about since May 21, 1991 என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.

இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.

மகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் இரண்டு நோக்கங்களை முக்கியமாக கொண்டு இருந்தது

ஒன்று இந்தியாவை அணுசரணை செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவது. ஏற்கனவே நார்வே முக்கிய அணுசரணையாளராக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய "co-chair's" ஒன்றை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவையும் சேர்ப்பது ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.

மற்றொன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்த அத்துமீறல்கள் குறித்து ஒரு கண்டனத்தையாவது பெற்று இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.

ராஜபக்ஷ இந்த இரண்டு நோக்கங்களிலுமே வெற்றி பெறவில்லை.

இந்தியா அவரது முதல் நோக்கத்தை கண்டுகொள்ள வில்லை.

கடந்த காலங்களில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு ஒவ்வொரு முறையும் காவடி எடுக்கும் பொழுதெல்லாம், குறைந்தபட்சம் தனது கவலையையாவது இந்தியா வெளிப்படுத்தும். ஆனால் இம் முறை அவ்வாறு கூட இல்லை.

இவ்வாறு ராஜபக்ஷவின் நோக்கம் நிறைவேறாத பொழுதும் ஹிந்து தேடிக் கண்டுபிடித்து சில காரணங்கள் கூறுவது, நல்ல ஜோக்.

Of particular significance are bilateral efforts to identify joint ventures for the development of the eastern Sri Lankan port city of Trincomalee, and its surrounding region, and the agreement for a joint venture power plant in the same district. These projects will intensify India-Sri Lanka economic co-operation in a region the LTTE covets

இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார உடன்படிக்கை என்பதை தவிர மேற்கண்ட உடன்படிக்கையில் எந்த முக்கியமான அம்சமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒன்றும் புதிய உடன்படிக்கை இல்லை. திருகோணமலையில் இந்தியா-இலங்கை இடையே ஏற்கனவே சில உடன்படிக்கைகள் உள்ளன. அப் பகுதியில் இருக்க கூடிய வாய்ப்புகளை கண்டறியக்கூடிய உடன்படிக்கை தானே தவிர செயல்படுத்தப்படும் என்பது நிச்சயமில்லை. செயல்படுத்த கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.

ரனிலிடம் இருந்து பாதுகாப்பு போன்ற சில பொறுப்புகளை சந்திரிகா பறித்த பொழுது அவர் கூறிய ஒரு காரணம் திருகோணமலையை சுற்றிலும் புலிகள் அரண் அமைத்துள்ளனர். போர் துவங்கும் பட்சத்தில் திருகோணமலை சில மணி நேரங்களில் புலிகள் வசம் சென்று விடும் என்பது தான். அவ்வாறான பகுதியில் இந்தியா எந்த முதலீட்டையும் செய்யாது.

ஆனால் ஹிந்து அதனை வேறு நோக்கில் பார்க்கிறது.

With this, India has forcefully made the point that it considers the North-East to be an integral part of Sri Lanka

"Forcefully" என்பது தான் கொஞ்சம் அதிகபட்சம்.

Hindu is desperate about the changing situation என்பதைத் தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் எப்பொழுதுமே புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்திய அரசியல் சூழ்நிலையும் கடந்த கால நிகழ்வுகளும் அதற்கு இடம் தராது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதும், நடுநிலைமையுடன் செயல்படுவதும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கை அரசுக்கு ஆதரவான கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து இந்தியா இம் முறை சற்றே விலகி இருப்பது, நடுநிலைமையான அணுகுமுறையின் துவக்கம் என்று நான் நினைக்கிறேன்.

Leia Mais…