Thursday, November 22, 2007

ஈழம் - தமிழகம் : தமிழக அரசியல் : கலைஞரின் ஈழ ஆதரவு

தமிழ்ச்செல்வனின் படுகொலை, தமிழகத்தில் அதனால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை எழுந்துள்ளதாக மிகைப்படுத்தும் ஈழ ஊடகங்கள், அப்படியான எந்த ஒரு உணர்வும் தமிழகத்தில் இல்லை என உண்மையை மூடி மறைக்கும் இந்தியப் பத்திரிக்கையாளர்கள் (மற்றும் அவற்றின் வலைப்பதிவு வால்கள்) என அந்தப் படுகொலையை விட அதனை விளம்பரப்படுத்தும் உத்தியும் - அதன் எதிர்நிலையும் காணப்பட்ட சூழ்நிலை மறைந்து மிக இயல்பான ஒரு சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிற இந்த தருணத்திலே என்னுடைய இந்த இடுகை தாமதமாக எழுதப்படுகிறது.

ஜெயலலிதா குறித்து பெரிய விமர்சனத்தினை நாம் வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஜெயலலிதா இவ்வாறு செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். எந்தப் பிரச்சனையையும் அரசியலாக்கும் கோணத்திலேயே பார்க்கும் ஜெயலலிதா இந்தப் பிரச்சனையையும் அரசியலாக்க முனைந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று பயமுறுத்தி பிறகு அடங்கிப் போய் விட்டார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் இவ்வாறு எழுதியது.

Fearing isolation on the "Tamil issue" in a state dominated by ethnic politics, Jayalalitha quickly issued a statement claiming that Tamil blood ran in her veins too, even though she was born outside Tamil Nadu in Mysore. She has apparently given up the idea of going to the Supreme Court after seeing the general political mood in the state on the issue of Tamilselvan.

கலைஞர் வழக்கம் போல ஜெயலலிதாவிற்கு விளக்கம் அளித்தார். முன்பெல்லாம், ஜெயலலிதா கலைஞரை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று தாக்கும் பொழுதெல்லாம் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை ஆதரித்து இந்தியன் எக்ஸ்பிரசில் எப்பொழுதோ (1980களில் ?) வெளியிட்ட அறிக்கையை தான் சுட்டி காட்டுவார். எனவே விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதரிப்பது தான் மட்டும் அல்ல. ஜெயலலிதா கூட "ஒரு காலத்தில்" ஆதரித்தார் என கலைஞர் சுட்டி காட்டுவார். ஆனால் இப்பொழுது வைகோ ஜெயலலிதா பக்கம் இருப்பதாலும், கலைஞருக்கும் வைகோவிற்கும் பகை இருப்பதாலும் விடுதலைப் புலிகளை ஜெயலலிதா அணியில் இருக்கும் வைகோ ஆதரிக்கிறாரே என கேள்வி கேட்டிருக்கிறார்.

வழக்கம் போல தமிழக அரசியலில் இருக்கும் மிக மோசமான அரசியல் சூழ்நிலைக்கு இந்தப் பிரச்சனையும் இரையாகி இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு தமிழன் என்ற நிலையையும் கடந்து தன்னுள் இயல்பாக எழுந்த உணர்வின் காரணமாக இரங்கல் கவிதையை எழுதிய கலைஞர், அதனை வழக்கம் போல வெளிப்படையாக கூறிக்கொள்ள தயங்குகிறார். அவரின் இந்த தயக்கமும், அச்சமும் ஈழ விடுதலையின் எதிரிகளுக்கு பல நேரங்களில் வசதியாக இருந்து வந்துள்ளது.
தமிழகத்தில் ஈழ விடுதலை குறித்து எந்தக் கருத்தும் இல்லை என்று கூற தொடங்கி விடுவார்கள்.

ஆனால் இம்முறை கலைஞர் தெரிவித்த இரங்கல் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் பல காலமாக அடங்கி இருந்த உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மாறி எழத் தொடங்கியது. இந்தப் பிரச்சனை குறித்து எழுதிய Economist தமிழகம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளது.

One disturbing development is a revival of interest in Sri Lanka's Tamil issue in the Indian state of Tamil Nadu, just across the 30km-wide (19 -mile) Palk Strait. In the 1980s, its Tamils, now numbering some 60m, helped house, finance, train and arm Sri Lankan Tamil militants. The state's chief minister, M. Karunanidhi, opened a can of worms by penning a poem praising Tamilselvan and talking of the “Tamil brotherhood” binding Tamils across the globe. This revived memories of the late 1980s, when he was also chief minister and openly supported the Tigers.

The main opposition party in Tamil Nadu, the All-India Anna Dravida Munnetra Kazhagam, condemned Mr Karunanidhi's condolence message, saying that he had broken the law by praising a member of a proscribed group. The Tigers were banned in India after the assassination of Rajiv Gandhi, a former prime minister, in 1991. Tamilselvan's death has revived the issue of Tamil ethnicity in Tamil Nadu, which could help whip up support for the Tigers there. This is worrying Sri Lanka. At least one newspaper has asked the government to take the matter up in Delhi.

தமிழகத்தில் உள்ள நிலை குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி மிரார் போன்ற பத்திரிக்கைகள் பல கட்டுரைகளை வெளியிட்டன.

தமிழகம் என்றில்லாமல் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தில்லியின் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்சனை எதிரொலித்தது.

TN students at JNU term slain Tamil Tiger a martyr

கலைஞர் தன்னுடைய விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டினை வெளிப்படையாக கூறாவிட்டாலும், தமிழகத்தின் பிற தலைவர்களான வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமா போன்றோர்களுக்கு கலைஞர் போல எந்த தயக்கமும் இல்லை. அவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப் புலிகளை தாங்கள் ஏன் ஆதரிக்கிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

கலைஞர், ஈழத்தமிழர்களை உணர்வால் ஆதரிக்ககூடியவர் என்றாலும் அவரின் நிலைப்பாடு ஒரளவிற்கு பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துவதாக தான் நான் நினைக்கிறேன். அது விடுதலைப் புலிகளை ஆதரித்தால் எழும் "ராஜீவ் படுகொலை பூதம்", இந்திய தேசியத்திற்கு எதிரான பிரிவினைவாதிகள் என்ற குற்றச்சாட்டு போன்றவையே. 1989ல் கலைஞரின் ஆட்சி திமுக விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக கலைக்கப்பட்டது. 1998ல் மைய அரசின் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஜெயின் கமிஷன் பிரச்சனையில் (ராஜீவ் படுகொலை சார்ந்த விசாரணைக் கமிஷன்) ஆட்சியினை இழக்க நேரிட்டது. இந்த இரண்டு காரணங்களும் திமுக விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

இவை தவிர மைய அரசியலில் காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா என இரு கட்சிகளுக்குள் ஏதேனும் ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைக்கு திமுகவிற்கு உள்ளது. கொள்கை ரீதியில் பாரதீய ஜனதா கட்சியுடன் ஒட்ட முடியாத ஒரு ஒவ்வாத நிலை கடந்த காலத்தில் திமுகவிற்கு இருந்தது. அந்த நிலையிலே தான் காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி தானாக முன் வந்து கடந்த பாரளுமன்ற தேர்தலில் திமுகவுடன் உடன்பாடு செய்ய முனைந்த பொழுது அந்த ஆதரவினை திமுக கெட்டியாக பிடித்துக் கொண்டது. காங்கிரசின் மிக முக்கியமான தோழமைக் கட்சியாக இன்று திமுக உள்ளது. எதிர்காலத்தில் பாரதீய ஜனதா போன்ற மத ரீதியான கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதை தவிர்ப்பதற்கு இது திமுகவிற்கு உதவும். அதுவும் தவிர பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்வதால் திமுகவிற்கு தமிழகத்தில் பெரிய பலம் இல்லை. மயிலாப்பூரில் வாக்குகளை பெறுவதே கடினம் என்னும் நிலையில் பாரதீய ஜனதா கூட்டணி மாநில அரசியலில் திமுகவிற்கு பெரிய பலம் கிடைத்து விடாது. மாறாக காங்கிரசுடன் கூட்டணி திமுகவிற்கு மாநில அரசியலிலும் பலத்தைச் சேர்க்கிறது. எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் அடக்கி வாசிக்க வேண்டிய அவசியம் நேருகிறது. தமிழக அரசியல் நிலைப்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஈழ விடுதலை பின்னுக்கு தள்ளப்படும் சூழல் திமுகவிற்கு உள்ளது.

திமுகவின் அரசியல் நிர்ப்பந்தம் இவ்வாறாக உள்ளது என்றால் ஜெயலலிதாவின் அரசியல் நிர்ப்பந்தமும் திமுகவை போல காங்கிரசைச் சார்ந்தே தான் அமைந்து உள்ளது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதாவை கைகழுவி விட்ட நிலையில் அடுத்து வரும் பாரளுமன்ற தேர்தல் அதிமுகவிற்கு முக்கியமான சவால். அதுவும் அந்த பாராளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சியாக எதிர்கொள்வது அதனை விட சவாலானது. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் நடந்த இடைத்தேர்தல்கள் விஜயகாந்த்தின் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை, அதுவும் அதிமுக வாக்கு வங்கியில் இருந்து பிளந்து பெற்று வரும் நிலை அதிமுகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தமிழக வாக்கு அரசியலில் இருக்கும் சினிமா கவர்ச்சி கலாச்சாரம் அதிமுகவை சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சினிமா கவர்ச்சியை சார்ந்த வாக்கு வங்கி தான். திமுகவின் வாக்கு வங்கி என்பது அவ்வாறானது அல்ல. அதுபோலவே கடந்த காலங்களில் "கருணாநிதி எதிர்ப்பு" என்பது தமிழக அரசியலில் முக்கியமான ஒன்று. அதனைச் சார்ந்து தான் தமிழக அரசியல் இயங்கி வந்துள்ளது. சினிமாவும், கலைஞர் எதிர்ப்பும் அதிமுகவின் முக்கியமான பலமாக இருந்து வந்துள்ளது.

விஜயகாந்தின் அரசியலை கவனிக்கும் பொழுது அவரும் இதே அரசியலை தான் பின்பற்றுகிறார் என்பதும், அவரது வளர்ச்சி அதிமுகவிற்கு வேட்டு வைக்க கூடியதாக உள்ளதையும் ஜெயலலிதா உணர்ந்திருக்கிறார். விஜயகாந்துடன் இருக்கும் பண்ருட்டியார் இவ்வாறான அரசியல் விளையாட்டுகளை கற்று தேர்ந்தவர் என்ற வகையிலே அதிமுக முன்வைக்க கூடிய அதே உத்திகளை முன்வைத்து வருகிறார்.

இவ்வாறான நிலையில் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்கவைக்க வேண்டுமெனில் காங்கிரசை தன்னுடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நேருகிறது. பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் ஓரளவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஜெயலலிதா தான். 1998ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாரதீய ஜனதா கட்சியுடன் அமைத்த கூட்டணி மூலம் பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை தொடங்கி வைத்தார். அது போலவே பாரதீய ஜனதா சார்ந்த அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தவரும் ஜெயலலிதா தான். கடந்த சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க முடியாத நிலை இருந்தது. 1998ல் பாரதீய ஜனதா ஜெயலலிதாவின் equationக்குள் வர முக்கிய காரணம், அப்போதைய மைய அரசியல் சூழல் தான். தமிழகத்தைச் சார்ந்து இவை அமைந்ததில்லை. தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதே அதிமுகவிற்கு பலத்தை கொடுக்கும். ஜெயலலிதா அதற்கு தொடர்ந்து முயலுவார். அதனால் தான் சேது சமுத்திர திட்டத்தில் பாஜக தாமாக முன் வந்து "சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டதையும் மறந்து" அதிமுகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய பொழுதும் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை.

காங்கிரசை தன் பக்கம் இழுக்க அதிமுக முனையும் பொழுது, காங்கிரசை தன் பக்கம் தக்க வைக்க திமுக நினைக்கும். எனவே விடுதலைப் புலிகள் விடயத்தில் திமுக எப்பொழுதுமே அடக்கியே வாசிக்க வேண்டிய அவசியம் உள்ளது. திமுக அந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் நினைத்தால், அது நடக்கப்போவதில்லை.

கலைஞரின் இந்த நிர்ப்பந்தம் வைகோவிற்கோ, ராமதாசிற்கோ, திருமாவிற்கோ இல்லை. காரணம் இவர்களுக்கு தேவை காங்கிரஸ் அல்ல. திமுக அல்லது அதிமுக. இவற்றில் ஏதேனும் ஒரு அணி இவர்களுக்கு போதுமானது. காங்கிரசை இழுக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கே உள்ளது. பாமக கூட கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியால் தீண்டத்தகாத கட்சியாகவே பார்க்கப்பட்டது. காரணம் பாமகவின் விடுதலைப்புலிகள் ஆதரவு நிலைப்பாடு தான். திமுக-காங்கிரஸ்-பாமக இவை மூன்றும் ஒரே அணியில் இருந்தும், புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவில் பாமக தேர்தலில் போட்டியிட்ட பொழுதும் கூட, எங்களுடைய கூட்டணி திமுகவுடன் தானே தவிர பாமகவுடன் அல்ல என்று காங்கிரஸ் கூறியதை இங்கே குறிப்பிடவேண்டும்.

அவ்வாறான நிலையில் இருந்து காங்கிரசின் அரசியல் நிறைய மாற்றங்களை அடைந்துள்ள சூழலில் அதனை சிதைத்துக் கொள்ள திமுக தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.

கலைஞர் மீதான ஈழத்தமிழர்களின் வருத்தம் என்பது அவர் வெளிப்படையாக ஈழ விடுதலையையோ, விடுதலைப் புலிகளையோ ஆதரிப்பதில்லை என்பதாக உள்ளது. ஆனால் வைகோ இதனை "ஓங்கி" ஒலிப்பதால் ஈழத்தமிழர்கள் வைகோவை கலைஞரை விட நேசமாக பார்க்கிறார்கள். ஈழத்தமிழர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞரின் "தமிழ்" உணர்வுகள் என்பவை வேறானது. அரசியல் என்பது வேறானது. கலைஞரின் தமிழ் உணர்வுகளை யாரும் சந்தேகிக்க முடியாது.

இன்றைக்கு தமிழகத்தில் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த முடிகிறது. சுவரொட்டிகளை ஒட்ட முடிகிறது என்றால், அதற்கு காரணம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலைஞரின் ஆட்சி என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் இதே அளவிளான கருத்துச்சுதந்திரம், பேச்சுசுதந்திரம் இருந்திருக்க முடியாது. கலைஞர் இந்தப் பேச்சு சுதந்திரத்தை அனுமதித்து இருப்பதால் தான் சென்னையிலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த முடிகிறது. அந்த வகையிலே சுப.வீரபாண்டியன் அவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே எனது கருத்துக்களும் உள்ளன.

தமிழகத்திலே மக்களின் மத்தியிலே ஈழப் போராட்டம் குறித்து தெளிவாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறான சூழல் கடந்த காலங்களில் இல்லை. தற்பொழுது அதற்கான சூழல் அமைந்துள்ள நிலையில் அதனை தெளிவாக பயன்படுத்திக்கொள்வதில் தான் ஈழவிடுதலை ஆதரவினை தமிழக மக்கள் மத்தியில் எழுப்ப முடியும். தற்போதைய சூழலில் இதனையே நான் முக்கியமாக நினைக்கிறேன். வைகோ போல விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புவதால் இந்தப் பிரச்சனையில் பெரிதாக சாதித்து விட முடியாது.

தமிழக மக்கள் மத்தியில் ஈழ போராட்டத்திற்கு எழும் ஆதரவு தான் தில்லியில் இருக்கும் "சில வெளியூறவு/பாதுகாப்பு அதிகாரிகளை" அச்சப்படுத்தும். இந்தியாவின் வெளியூறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை வகுக்கும் இந்த அதிகாரிகளுக்கு இருக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது தான் இந்திய ஜனநாயக சூழலின் யதார்த்தமான உண்மை.

யார் அந்த அதிகாரிகள் ?

நான் குறிப்பிடும் அதிகாரி எம்.கே.நாராயணன் - பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் - National Security Advisor (NSA) to the Prime Minister of India.

Narayanan is an expert in security matters and a specialist on Sri Lankan affairs என விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அவ்வாறான ஒரு பிம்பம் தான் இந்தியாவின் மைய அரசின் வட்டாரத்தில் நிலவுகிறது. எம்.கே.நாராயணனும் சரி, இதற்கு முன்பு ஆலோசகராக இருந்தவரான ஜெ.என்.தீக்க்ஷ்த்தும் சரி விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்ப்பாளர்கள். எம்.கே.நாராயணன் Intelligence Bureau (IB) தலைவராக இருந்தவர். இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் முக்கிய ஆலோசகர்களாக இருந்தவர்களில் எம்.கே.நாரயணனும் ஒருவர்.

ஆண்டன் பாலசிங்கம் எழுதிய "War and Peace Efforts of LTTE" என்ற புத்தகத்தில் எம்.கே.நாராயணன் குறித்தும், அவருடன் தானும், பிரபாகரனும் நடத்திய ஆலோசனைகள் குறித்தும் பாலசிங்கம் குறிப்பிடுகிறார். எம்.கே.நாரயணன், பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம் இடையேயான முதல் சந்திப்பு வட இந்தியாவில் உள்ள காசி நகரில் முதன் முதலாக நடைபெறுகிறது. ராஜீவ் காந்தி பிரதமராக பொறுப்பேற்ற நேரம் அது. இந்திரா காந்தி சிங்கள அரசுக்கு எதிராக எடுத்த நிலைப்பாடுகளுக்கு மாறாக சிங்கள அரசுடன் இணக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த ராஜீவின் ஆலோசகர்கள் ராஜீவ் காந்திக்கு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி புலிகளை சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இந்திய அரசின் உளவு நிறுவனமான ரா நெருக்குதல் செய்து கொண்டிருந்தது. இவ்வாறான சூழலில் தான் எம்.கே.நாராயணன் பிரபாகரனையும், ஆண்டன் பாலசிங்கத்தையும் சந்திக்கிறார். இதில் தொடங்கி 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழ்நிலை வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அதிகாரிகளில் எம்.கே.நாராயணனும் ஒருவர்.

இவ்வாறு இலங்கை விவகாரத்தில் பணியாற்றிய எம்.கே.நாராயணன் இன்றைக்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் சூழலில், மைய அரசு பெரும்பாலும் "பாதுகாப்பு" என்ற காரணம் காட்டி தமிழக அரசியல்வாதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சூழலில் இந்தியா இந்தப் பிரச்சனையில் தமிழர்களுக்கு இணக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. கலைஞரால் இந்த நிலையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும். இந்தியாவும் புலிகளுடன் பேசுமாறு சிங்கள அரசை தூண்டும். புலிகள் பலவீனப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் தற்பொழுது உருவாகியுள்ள சூழலில் புலிகளை தோற்கடிக்கவே இந்தியாவும் விரும்பும். 20 வருடங்களாக இந்தியாவின் நிறைவேறாத ஆசை அது.

புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதுவரை, ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது.


இது தொடர்பான பிற வலைப்பதிவர்களின் கட்டுரைகள்
பெயரிலியின் - சற்றே சும்மா க/கிடவும் பிள்ளாய்
நாக.இளங்கோவனின் - தமிழீழ மக்களுக்கு கருணாநிதி துரோகியா? part1

31 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

நிலையை யதார்த்தமாக படம் பிடித்திருக்கும் நல்ல பதிவு. நீங்கள் கூறிய பல விஷயங்களை வெளிப்படையாக பேச இயலாத சூழ்நிலையில் திமுகவினர் இருக்கிறார்கள். அதுவே ஈழத்தமிழர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.

நன்றி!

4:33 AM, November 23, 2007
PRINCENRSAMA said...

வழக்கம் போலவே சரியான கருத்துகள் சசி!
வைகோ மட்டுமல்ல... என்ன காரணத்திற்காகவோ இதை பழ.நெடுமாறனும் புரிந்துகொள்ள 'மறுக்கிறார்'! கலைஞரை ஈழத் தமிழர்களுக்கு எதிரியாகக் காட்டுவது வைகோவுக்கு வேண்டுமானால், 'ஈழத்தமிழர்களின் பாதுகாவலன் தானே' என்ற பிம்பத்தை உண்டாக்கப் பயன்படலாம். (ஆனால் தலைவர் பிரபாகரனைத் தவிர வேறு யாரும் அவர்களுக்குத் தேவையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். நாம் தருவதெல்லாம் தார்மீக ஆதரவுதான்.. நாங்கள் இருக்கிறோம் என்ற ஆறுதல்தான்).
ஆனால் இந்நிலைப்பாடு பழ.நெடுமாறனுக்கு எந்த அவசியத்தால் ஏற்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. இவ்வாட்சியின் தொடக்கம் முதலே பழ.நெடுமாறனது போக்கு அப்படித்தான் இருக்கிறது. எனவே நமது ஆட்சிக்கு நாமே ஆபத்தை விளைவித்துக் கொள்வது பேராபத்து! இந்த சூழலைப் பயன்படுத்தி மக்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மீண்டும் ஈழத்தின் உண்மை நிலையை விளக்கவேண்டிய தருணம் இது!

11:41 AM, November 23, 2007
Ceylon boy said...

மிக அற்புதமான பதிவு. கலைஞரை தமிழகத்தின் ஒரு அடையாளமாகவே ஈழத்தமிழர்கள்
பார்க்கின்றார்கள். கலைஞரின் பேச்சும் எழுத்தும் ஈழ மக்களை கடல் கடந்து கவர்ந்தது.
கருணாநிதி என்ற பெயர் எனது நண்பருக்கு இருந்ததால் அவனை இலங்கை இராணுவம்
சுட்டெரித்தது. அவனுடைய தந்தை கலைஞரின் ஆதரவாளர். இப்படி எத்த்னையோ இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் கலைஞருக்கு ஈழத்தில் உண்டு. கலைஞர் ஈழத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு 1960களின் ஆரம்பத்திலேயே நிரந்தரத் தடைபோட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் புலிகள் உருவாகவே இல்லை.

க‌லைஞ‌ர் மீது ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் பெரு ம‌திப்பு வைத்திருக்கின்றார்க‌ள்.
க‌லைஞ‌ர் மீது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் ந‌ம்பிக்கை வைத்திருக்கின்றார்க‌ள;

5:05 PM, November 23, 2007
Naanjil Peter said...

திரு. சசி அவர்களுக்கு ஒர் அருமையான
தேவையான அரசியல் ஆய்வு கட்டுரையைப் பல சான்று தொடர்புகளுடன் கொடுத்தற்கு நன்றி. சிறுஒளிக்காட்சிகள் மிகவும் நன்றாக இருக்கிறது. தமிழ்ச் சேவைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

நவம்பர் 17-ல் மெரிலாண்டில் நடந்த வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க விழாவில்
திரு. தமிழ்ச்செல்வனின் வீர மரணத்திற்கு
அனுதாபம் தெரிவித்து ஒரு நிமிட மௌன அஞ்சலி எழுந்து நின்று செலுத்தப்பட்டது.
தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி. மேலும் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் கலைஞர் எழுதிய தமிழ்ச்செல்வனின் இரங்கல் பாடல் படிக்கப்பட்டது.
தமிழ் இன ஒற்றுமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
அன்புள்ள
நாஞ்சில் எ. பீற்றர்
www.thirukkural2005.org

2:50 PM, November 24, 2007
-/பெயரிலி. said...

/கலைஞர் ஈழத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு 1960களின் ஆரம்பத்திலேயே நிரந்தரத் தடைபோட்டுள்ளது./
??
உண்மையா, ceylon boy?

3:13 PM, November 24, 2007
CEYLON BOY said...

பெயரிலி!!
இது உண்மையான செய்தி. அது மட்டுமா? யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழராச்சி மகா நாட்டுக்குகூட தடைவிதித்தது. 2ம் உலகத் தமிழராச்சி மகா நாட்டுத் தொகுப்பில் கலைஞர் பேச்சை ஒலிபரப்பத் தடைசெய்தது.
ஜனார்த்தனன் இரகசியமாகவே இலங்கை வந்து சென்றார்.


Ceylon Boy

4:30 PM, November 24, 2007
CEYLON BOY said...

சசி அவ‌ர்க‌ளே!!

இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ஒரு தடவைக்கு இருதடவை வாசிக்கவேண்டிய கட்டுரை. இதுபோன்ற கட்டுரையை இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி அல்லது தினக்குரல் போன்ற செய்தித்தாள்களில் பிரசுரமாகினால் நன்று. உங்கள் கடின உழைப்பும் நேர்மையான கருத்துக்களும் செய்தித்தாள்களில் வெளிவரும்போது பலரைச் சென்றடையும். தயவுசெய்து கருத்தில் எடுக்கவும்.

4:40 PM, November 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

6:03 PM, November 24, 2007
-/பெயரிலி. said...

ceylon boy
நான்காம் தமிழாராய்ச்சிமகாநாடு 70களின் முற்பகுதியிலானது. கருணாநிதி 60 களின் ஆரம்பத்திலே திமுகவின் அதிமுன்னணித்தலைவருமல்ல; இலங்கை அரசு தமிழகத்தின் அழுத்தம் பற்றி, கருணாநிதிக்குத் தடை விதிக்குமளவுக்கு எண்ணியதா என்பது சந்தேகமே. எனக்கு இது செய்தி. அதனாலேயே, கேட்டேன்.

சசியின் தேவையான பதிவின் நோக்கத்திலிருந்து கருத்துகள் திசைதிரும்பிவிடலாமென்பதாலே இங்கே இது தொடர்பான உரையாடலைத் தொடரவேண்டாமென்று எண்ணுகிறேன்.

6:44 PM, November 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

பிரின்ஸ்,

நெடுமாறன் கடந்த காலங்களில் பேசியது போலவே இப்பொழுதும் பேசி வருகிறார்.

நெடுமாறன் தலைமையிலான "தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள்" என்ற அணியில் கடந்த காலங்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள் திருமா, பாமக போன்ற இயக்கங்கள். ஜெயலலிதா அணியில் வைகோ இருப்பதால் பிற கட்சியினர் விலகி சுப.வீரபாண்டியன் அவர்களின் தலைமையிலான ஈழ ஆதரவாளர்கள் அணியில் சேர்ந்துள்ளனர். சுப.வீரபாண்டியன் கடந்த தேர்தலில் வைகோ ஜெயலலிதாவிடம் சேர்ந்ததை கடுமையாக விமர்சித்தவர். திமுக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அதற்காக அவர் முன்வைக்கும் காரணங்களில் எனக்கும் 100% உடன்பாடு உண்டு.

திமுக பதவியேற்ற ஆரம்ப காலங்களில் வைகோ ஈழப் பிரச்சனையை தன்னுடைய அரசியல் சுயநலத்திற்கும் பயன்படுத்த தொடங்கினார். திமுக அரசு தன்னை கைது செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம். அந்த கைது மூலம் தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்க வைக்க வைகோ முயற்சி செய்தார். ஆனால் கலைஞர் அதனை செய்யவில்லை.

நெடுமாறன் வைகோவை சார்ந்து இயங்குவது அவசியமற்றது என நான் கூறமாட்டேன். ஆனால் வைகோ தமிழக அரசியலுக்கு ஈழ விடுதலையை பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது.

ஈழ விடுதலையின் நியாயமான காரணங்கள் ராஜபக்க்ஷவின் ஆட்சியில் வலுபெற்றிருக்கும் நிலையில் தமிழக மக்களிடம் அதனை கொண்டு செல்வது தான் முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். அரசியல் அதில் இருக்க கூடாது...

9:52 PM, November 24, 2007
ஈழநாதன்(Eelanathan) said...

சசி சுருக்கமாவும் தெளிவாகவும் சொல்ல வந்ததைச் சொல்லியிருக்கிறீர்கள்.ஈழத்தமிழ் ஊடகங்களுக்கு இன்றைய முக்கிய தேவை ஒரு வழிப்படுத்துபவர்.எனக்குத் தெரிந்து முன்பு சமாதன காலத்தில் தயாமாஸ்ரர் அனைத்துலகத் தொடர்பகத்திற்குப் பொறுப்பாக இருந்தபோது புலிகள்,போராட்டம் ஈழம் சம்பந்தப்பட்ட செய்திகள் எவ்வகையான ஊடகத்தில் வந்தாலும் அவற்றைப் பகுப்பாய்வு செய்து வழிகாட்டலை வழங்கி வந்துள்ளார்.இப்போது என்ன நடைமுறை தெரியவில்லை.அந்த வழிகாட்டல் மிக முக்கியமானது என நினைக்கிறேன் ஏனெனில் அடிப்படை அரசியல் அறிவற்றவர்களே ஊடகவியலாளர்களாகவும் அரசியல் ஆய்வாளர்களாகவும் பரிணாமம் எடுத்து வாய்க்கு வந்ததையெல்லாம் அச்சு ஊடகங்களிலும் இணைய ஊடகங்களிலும் உமிழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கையில் விசனமே ஏற்படுகிறது.பாலசிங்கத்திற்குப் பின்னர் சர்வதேச அரங்கில் தனது பிரதிநிதியாக எவரையும் புலிகள் நியமிக்கவில்லை அதைப் போலவே வழிகாட்டல் இல்லாத ஈழ ஆதரவு ஊடகங்களினால் நடத்தப்படும் பிரச்சாரங்களையும் விடுதலைப்புலிகளின் தவறாகவே காண்கிறேன்

10:45 PM, November 24, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

ஈழத்தமிழ் ஊடகங்களுக்கு இன்றைய முக்கிய தேவை ஒரு வழிப்படுத்துபவர்

****

ஈழநாதன்,

மிகவும் சரி...

அதுவும் தமிழகம் சார்ந்த விடயங்களுக்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் கடந்த தமிழக தேர்தல் சமயத்தில் வைகோ ஜெயலலிதா அணியில் சேர்ந்ததை தமிழ்நெட் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது. தமிழ்நெட் தளத்தின் வலதுபக்கத்தில் (Right Column) எப்பொழுதுமே முக்கியமான செய்திகள் தான் இடம் பெறும்.

தமிழ்நெட், வைகோ ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்ததை ஏன் வலதுபக்கம் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அப்பொழுது எழுந்தது. அதுவும் தமிழ்நெட் இலங்கைச் சார்ந்த முக்கிய செய்திகளை தான் அந்த இடத்தில் வெளியிடும். வைகோ ஜெயலலிதாவிடம் சேர்ந்தது எப்படி முக்கியத்துவம் பெற்றது என எனக்கு புரிந்ததில்லை.

தமிழ்நெட் புலிகளின் குரலாகவே பார்க்கப்படும் நிலையில் இத்தகைய செய்திகளில் மிகவும் கவனம் தேவை.

****

tamilnet.comல் சில தவறான செய்திகளும் வெளியாவது உண்டு. என் நினைவுக்கு உடனே வருவது ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் மறைந்த பொழுது தமிழ்நெட் வெளியிட்ட செய்தி தான். திம்பு பேச்சுவார்த்தைகள் முதல் பாலசிங்கம் புலிகளின் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இடம்பெற்றதாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டது.

உண்மை என்னவென்றால்... திம்பு பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம் பங்கேற்கவில்லை. அப்பொழுது அவர் சென்னையில் இருந்தார். திம்பு பேச்சுவார்த்தைகளில் யோகி தான் பங்கேற்றார். இதனை அவருடைய புத்தகத்தில் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். சென்னையில் இருந்து திம்புவில் இருந்து குழுவினருடன் பாலசிங்கம் தொடர்பில் இருந்தார் என்பதே உண்மையானது.

இது பெரிய தவறு இல்லை. ஆனால் செய்திகளை தமிழ்நெட் போன்ற தளங்கள் "மிகவும்" கவனமுடன் வெளியிட வேண்டும்.

தமிழ்நெட் பெரும்பாலான செய்திகளை சிறப்பாகவே வெளியிட்டு வருகிறது. என்றாலும் இன்னும் கவனம் தேவை...

11:36 PM, November 24, 2007
-/சுடலை மாடன்/- said...

இந்தப் பதிவிலும், இதனுடன் தொடர்புடைய நாக இளங்கோவனுடைய பதிவுகளிலும் (இப்பொழுதுதான் அவற்றையும் படித்தேன்) சொல்லப் பட்டுள்ள பெரும்பாலான கருத்துக்களில் உடன்பாடுண்டு. பெரும்பாலும் இந்தப் பிரச்னைக்குள் சென்று என்னுடைய கருத்துக்களை எழுத விருப்பமில்லை, ஏனெனில் அவை எந்த அளவுக்குப் பயன் விளைக்கும் என்ற அவநம்பிக்கை மட்டுமல்லாமல், கலைஞர்-வைக்கோ-நெடுமாறன்-வீரமணி ஆதரவாளர்களிடையே விரிசலை அதிகப் படுத்தும் என்ற கவலையே. இருந்தாலும் ஒரு கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆருக்கு இருந்த கண்மூடித்தனமான மக்கள் ஆதரவும், பார்ப்பனிய சக்திகளின் பின்புலமும், கலைஞருக்கு இல்லை என்ற ஒன்றே கலைஞர் அரசு எவ்வளவு எச்சரிக்கையுடன் ஈழப்பிரச்னையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நன்கு அறிவேன். அதனால் தன்னுடைய உள்ளுணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் கலைஞரை ‘துரோகி’ என்றெல்லாம் ஒருசிலர் பழிப்பது எந்த அளவுக்கு முட்டாள்தனம் என்று சொல்ல வேண்டியதில்லை. அதுவும் வைக்கோ இதை ஒரு அரசியலாக பயன்படுத்திச் செல்வதைப் போன்ற அயோக்கியத்தனத்தை ஆரம்பித்திருப்பது வருத்ததை அளிக்கிறது. ஆனாலும் இப்படியொரு நிலைக்குக் கலைஞரும் காரணம், இனியாவது அவர் சில விசயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது இங்குள்ள கலைஞரது ஆதரவாளர்கள் அவருக்கோ அல்லது மற்ற தி.மு.க தலைமைக்கோ எடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

இன்று வைக்கோ செய்யத் துணிந்த அயோக்கியத்தனத்தை ஆரம்பித்து வைத்தது கலைஞர்தான் என்பது மறுக்க முடியாது. புலிகள் மூலம் தன்னைக் கொலை செய்ய வைக்கோ முயல்கிறார்கள் என்று பிதற்றிய அயோக்கியத்தனத்தைத் தான் குறிப்பிடுகிறேன். ஓராண்டுக்கு முன்பு ஈழத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பிரதமரைச் சந்திக்க வந்தபொழுதும், அண்மையில் கூட நெடுமாறன் உண்ணாவிரதமிருந்த பொழுதும், கலைஞர் வைக்கோவுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கக் கூடாது என்ற அல்பத்தனமாக அரசியல் நடத்தியதையும் குறிப்பிடலாம். இனியாவது கலைஞர் ஒவ்வொரு விசயத்திலும் வைக்கோவை வீழத்தவேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான கோபத்தைக் கைவிட்டுக் கொஞ்சமாவது பெருந்தன்மையோடு நடந்து கொள்வது நல்லது.

அடுத்தபடியாக, எத்தனை காலம் தான் மைய அரசையும், எம்.கே.நாராயணனையும் எண்ணிப் பயந்து கையாளாகாமல் இருக்க வேண்டும்? அவர் தன்னுடைய வரம்புக்குட்பட்டு சில செயல்களில் இறங்கலாம். அதற்கு அவர் ஆட்சியைப் பயன்படுத்த வேண்டியதில்லை. தன் கட்சியனரை அணிதிரட்டி பொது மக்களைச் சென்றடைய வேண்டும். எடுத்துக் காட்டாக இரண்டு பிரச்னைகளை மக்கள் முன்வைத்து மாபெரும் பேரணிகளையும், போராட்டங்களையும் தி.மு.க கட்சியினர் செய்திருக்கலாம், இன்னும் அவகாசமிருக்கிறது, செய்யலாம்.

1. ஈழ மக்களுக்காகத் திரட்டப் பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் போன்ற தொண்டு அமைப்புகள் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி மைய அரசை நிர்ப்பந்திக்கலாம்.
2. இலங்கை அரசு தமிழர் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் (இராணுவம் மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளைப்) பார்வையிட வெளி நாட்டு/மேலை நாட்டு மனித உரிமை அமைப்புக்கள், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கள் போன்றவர்களை அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை முன் வைத்து பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்துவதன் மூலம் இலங்கை அரசின் கொடுமைகளை, குறிப்பாக இந்து, தினமலர், துக்ளக் போன்ற பொய்யர்களின் திரித்தல்களை தமிழக மக்களிடம் அம்பலப் படுதுவதற்காவது செய்ய வேண்டும்.
தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய மக்களுக்கும் ஈழத்தமிழர் அனுபவிக்கும் இன்னல்கள் பரவலாக அறிய வர இவை உதவும். இவற்றைச் செய்வதற்கு எந்தப் பயமும் தேவையில்லை. எந்த அரசின் தயவும் தேவையில்லை. ஜெயலலிதா ஆட்சி செய்தால் கூடச் செய்ய முடியும். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதா, கடந்த 17 ஆண்டுகளாக நடத்தி வரும் புலிகளை மையப்படுத்திய ஈழத்தமிழர் எதிர்ப்பு அரசியலை பின்னுக்குத் தள்ளி ஈழத்தமிழரை ஆதரிப்பதாக நாடகம் ஆடும் போட்டி அரசியலை கூட முன்னெடுக்கலாம். ஒரு பெரிய ஜனநாயக இயக்கத்தை கையில் வைத்துள்ள கலைஞருக்கு இதுவும் செய்ய முடியாது என்பதற்கு வேறு சொத்தைக் காரணங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி – சொ. சங்கரபாண்டி

12:19 AM, November 25, 2007
செல்வநாயகி said...

தமிழ்சசி,

ஈழம்சார்ந்த உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கலைஞர்மீது எனக்கு ச் சில/பல விமர்சனங்கள் உண்டென்றாலும், ஈழமக்களின் துயர்மிகு வாழ்வினைக்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் விடுதலைக்கொரு தார்மீக ஆதரவைத் தமிழக மக்களிடையே பரவலாகக் கொண்டுவரவும் அப்படி விரும்புவர்களுக்கான வாய்ப்பைத் தட்டிப்பறிக்காதது கலைஞர் அரசு என்பதை யாரும் மறுக்கமுடியாது.

ஆனால் இவற்றைச் செய்பவர்கள்/ செய்யமுயல்பவர்கள் எங்கே யாரை வீழ்த்துவதற்கு இதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் மட்டும் மிகுதியான முனைப்போடு செயல்படுவதன் மூலம் அவர்களுக்குத் தனிப்பட்ட அளவிலே ஏதேனும் பலனிருக்கலாமே தவிர ஈழத்து மக்களுக்கு அது பயன்தரப்போவதில்லை. இது தமிழக அரசியலோ, இணையப் பேச்சுக்களோ எதுவானாலும்.

மிகுந்த வருத்தமாகவிருக்கிறது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென்று சிரத்தையெடுத்துச் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களையும், மருந்துப்பொருட்களையும்கூட அங்கே காலத்தே அனுப்பிவைக்க வக்கற்றவர்களாகத்தான் நாம் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கையில்:(( உணவுப்பொருட்கள் சில கெட்டுப் போகத் துவங்கியிருக்கின்றன என்று நெடுமாறன் சொல்லியிருந்ததைக்கூட சமீபத்தில் எங்கோ வாசிக்க நேரிட்டது.

எழுதுகிறோம், பேசுகிறோம் இதைத்தாண்டியும் ஏதேனும் இவ்விடயத்தில் செய்ய நாமெல்லாம்கூட ஏன் முயலக்கூடாது? எனக்குத் தோன்றுவது சில யோசனைகள். ஏதேனும் தேறுமா எனப் பரிசீலியுங்கள்.

1. ஒரு விண்ணப்பம் தயாரித்து ஆர்வமுள்ளவர்களைக் கையெழுத்திடவைத்து கலைஞருக்கே முதலில் அனுப்பிவைத்து அவரை இவ்விடயத்தில் உடனே முயற்சிகள் மேற்கொண்டு பொருட்களை அனுப்ப ஏதுவானவை செய்யக்கோறல்.

2. செஞ்சிலுவைச் சங்கங்கள் போன்றவற்றைத் தொடர்புகொண்டு இந்தியாவிலிருந்து சேகரித்த பொருட்களை அனுப்ப அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் வேறுவிதமாக அவற்றை எடுத்துச்சென்று சேர்பிக்க மேற்கண்ட சங்கங்களுக்கு ஏதும் மாற்று வழிகள் உண்டா என விசாரித்து அப்படியிருக்கும் பட்சத்தில் அவற்றையாவது அணுக ஏதும் முயற்சிகள் மேற்கொள்ளல்.

நன்றி.

1:06 AM, November 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

சங்கர், செல்வநாயகி,

நீங்கள் முன்வைக்கும் கருத்துகளில் எனக்கு ஏதும் மாற்று கருத்து இல்லை. எனக்கும் அதில் "முழு" உடன்பாடு உண்டு.

ஆனால் தற்போதைய சூழலில் இவை நடைமுறைச் சாத்தியமாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை அனுப்புவது என்பது அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது போன்றதே. அதனை செய்ய வேண்டிய நிலையில் இருப்பது மைய அரசாங்கம். ஆனால் "இன்றைக்கு" மைய அரசாங்கம் சிறீலங்காவை தன்னுடைய நேச நாடாக கருதுவது தான் பிரச்சனை. மைய அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆலோசகர்களாக உள்ளவர்கள் தமிழர்களின் எதிரிகளாக உள்ளது தான் பிரச்சனை. மைய அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரங்களை தன் கையில் வைத்திருக்கும் கும்பல் எது என்பது நமக்கு தெரியும். அதனால் தான் சுப.வீரபாண்டியன் அவர்கள் இதனை "பார்ப்பானுக்கும் தமிழனுக்குமான பரம்பரை போராக" குறிப்பிடுகிறார்.

இந் நிலையை கலைஞர் மாற்ற வேண்டும் என்றால், மைய அரசாங்கத்தை இந்த விடயத்தில் "தமிழர்களுக்கு ஆதரவாக" தலையிட நிர்பந்திக்க வேண்டும். அவ்வாறு மைய அரசு செய்ய மறுத்தால் மைய அரசாங்கத்திற்கான தன்னுடைய ஆதரவினை கலைஞர் விலக்கி கொள்ள வேண்டும் அல்லது அவ்வாறான அச்சுறுத்தல் இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நிலைமை என்ன ?

கலைஞர் இல்லையென்றால் ஜெயலலிதா என்ற நிலை தான் இங்கே பிரச்சனையாக உள்ளது

1980களில் திமுக, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக என இரண்டுமே ஈழப்போராட்டத்தை ஆதரித்தது. ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா ஈழப் போராட்டத்தை எதிர்க்கும் நிலையில் திமுக இல்லையென்றால் அதிமுக என்ற நிலை உள்ளது. அது தான் பிரச்சனை.

****

தமிழக மக்களிடம் 1991க்குப் பின் ஈழப் போராட்டம் குறித்த உண்மையான தகவல்கள் சென்று சேரவில்லை. உண்மையான தகவல்கள் சென்று சேரும் பொழுது தான் அதற்கான ஆதரவு களம் அமைக்க முடியும். எனவே அதனையே நான் முக்கியமாக நினைக்கிறேன். (ஆனால் தமிழகத்தில் இதனை யார் முன்னெடுக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை).

இவை தவிர ஜெயலலிதாவின் அரசியல் தளத்தை "சிதைப்பதும்" முக்கியம் என நினைக்கிறேன். ஜெயலலிதாவின் அரசியல் தளத்தை சிதைப்பது விஜயகாந்த்தாக இருந்தாலும் பிரச்சனையில்லை.

பி.கு. விஜயகாந்த்தின் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த காலங்களில் ஈழப்போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர். அவர் தான் விஜயகாந்த்திற்கு "இலங்கை விடயத்தில்" தவறான ஆலோசனைகளை கொடுக்கிறார் என்றும் நான் நம்புகிறேன். பண்ருட்டியார் 1987 இந்திய-இலங்கை ஒப்பந்த நேரத்தில் செய்த சில குளறுபடிகள் குறித்து தன்னுடைய புத்தகத்தின் சில இடங்களில் ஆண்டன் பாலசிங்கம் குறிப்பிடுகிறார்.

2:02 AM, November 25, 2007
Unknown said...

/ இன்றைக்கு தமிழகத்தில் தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த முடிகிறது. சுவரொட்டிகளை ஒட்ட முடிகிறது என்றால், அதற்கு காரணம் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் கலைஞரின் ஆட்சி என்பதை உணர வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியாக இருந்திருந்தால் இதே அளவிளான கருத்துச்சுதந்திரம், பேச்சுசுதந்திரம் இருந்திருக்க முடியாது. கலைஞர் இந்தப் பேச்சு சுதந்திரத்தை அனுமதித்து இருப்பதால் தான் சென்னையிலே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த முடிகிறது. அந்த வகையிலே சுப.வீரபாண்டியன் அவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே எனது கருத்துக்களும் உள்ளன.

தமிழகத்திலே மக்களின் மத்தியிலே ஈழப் போராட்டம் குறித்து தெளிவாக முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவ்வாறான சூழல் கடந்த காலங்களில் இல்லை. தற்பொழுது அதற்கான சூழல் அமைந்துள்ள நிலையில் அதனை தெளிவாக பயன்படுத்திக்கொள்வதில் தான் ஈழவிடுதலை ஆதரவினை தமிழக மக்கள் மத்தியில் எழுப்ப முடியும். தற்போதைய சூழலில் இதனையே நான் முக்கியமாக நினைக்கிறேன். வைகோ போல விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்த குரல் எழுப்புவதால் இந்தப் பிரச்சனையில் பெரிதாக சாதித்து விட முடியாது. /

100% சரியான கருத்து. இதனை அரசியல் நோக்கமில்லாத அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும்.

3:00 AM, November 25, 2007
-/சுடலை மாடன்/- said...

//ஆனால் தற்போதைய சூழலில் இவை நடைமுறைச் சாத்தியமாக தெரியவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை அனுப்புவது என்பது அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது போன்றதே. //

சசி, நான் சாத்தியமா, இல்லையா என்ற விவாதத்துக்கே செல்ல விரும்பவில்லை. ஒரு பிரச்னை மக்களிடம் எடுத்துச் செல்லப் படவேண்டுமானால் வெகுஜன இயக்கம் நடத்தப் படவேண்டும். இலங்கை அரசின் அடக்குமுறையாலும், நோயினாலும், பட்டினியாலும் அவதியுறும் யாழ்ப்பாண மக்களின் நிலையை தமிழக மக்களிடம் (நானும், நீங்களும் இதையே சொல்லியிருக்கிறோம்) எடுத்துச் செல்ல வேண்டுமெனில் அதற்கு உணவு-மருந்து அனுப்புவதை மையமாக வைத்து ஜனநாயக ரீதியிலான ஒரு வெகுஜனப் போராட்டம் நடத்தப் படவேண்டும். அதற்குரிய சக்தி தி.மு.கவிடம்தான் இருக்கிறது.

மைய அரசு அனுமதி அளிக்கப் போகிறதா இல்லையா என்பதல்ல நான் சொல்வது. அளிக்காமலே போகட்டும். ஆனால் மைய அரசைஆட்டிப்படைக்கும் பார்ப்பனிய அதிகார மையத்தையும், பத்திரிகைகளையும் தமிழக மக்கள் அடையாளம் கொள்வதற்கான வாய்ப்பாக அமையும். மக்களாக இந்தப் பிரச்னைகளை தாமாக அறிய முன்வரப் போவதில்லை. அவர்களுக்குத் தங்களுடைய சொந்தப் பிரச்னைகளே நிறைய இருக்கின்றன. மற்ற விவகாரங்களைப் பற்றி நினைக்க கிடைக்கும் கொஞ்ச நேரத்தையும் போட்டுத் தள்ளுவதற்கென்றே சிவாஜி, அழகிய தமிழ்மகன் போன்ற கழிசடை விகாரங்கள் எடுக்கப் படுகின்றன.

கலைஞர் தமிழ்செல்வன் படுகொலைக்கு கவிதை எழுதுவதைக் கூடத் தவிர்த்திருக்கலாம். புலிகள் இயக்கத்துடன் தொடர்பு படுத்தப்படக்கூடிய எந்த செயலையும் செய்ய வேண்டாம். ஆனால் ஈழத்தமிழரை இலங்கை அரசு நசுக்கி வருவதையும், இந்திய உளவு நிறுவனங்கள் அதற்கு ஆதரவு அளிப்பதையும், உலக நாடுகள் கண்மூடியிருப்பதையும் தமிழக மக்களிடம் எடுத்துச் செல்வதை ஜெயலலிதாவால் குறை சொல்ல முடியாது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்று கூறி பின்னால் பல்டி அடித்தது போல் தி.மு.க.வின் ஈழத்தமிழருக்கான அறவழிப் போராட்டங்கள் தமிழக மக்கள் ஆதரவைப் பெற்றால் ஜெயலலிதா பல்டி அடிக்கவும் செய்யக்கூடும்.

புலிகளின் வன்முறையைப் பற்றிப் பேசும் தமிழகக் காங்கிரஸ் வன்முறைக் கும்பல்களின் (சாதாரண உள்கட்சி விவகாரத்தில் கூட வெட்டு, குத்து என்று அலையும் காங்கிரஸின் கேடுகெட்ட நிலையைத்தான் குறிப்பிடுகிறேன்) வாயை மூடிவதற்கும் வெகுமக்கள் போராட்டம் உதவும்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

9:33 AM, November 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

ஒரு பிரச்னை மக்களிடம் எடுத்துச் செல்லப் படவேண்டுமானால் வெகுஜன இயக்கம் நடத்தப் படவேண்டும். இலங்கை அரசின் அடக்குமுறையாலும், நோயினாலும், பட்டினியாலும் அவதியுறும் யாழ்ப்பாண மக்களின் நிலையை தமிழக மக்களிடம் (நானும், நீங்களும் இதையே சொல்லியிருக்கிறோம்) எடுத்துச் செல்ல வேண்டுமெனில் அதற்கு உணவு-மருந்து அனுப்புவதை மையமாக வைத்து ஜனநாயக ரீதியிலான ஒரு வெகுஜனப் போராட்டம் நடத்தப் படவேண்டும். அதற்குரிய சக்தி தி.மு.கவிடம்தான் இருக்கிறது.

****

ஒப்புக்கொள்கிறேன்...

11:46 AM, November 25, 2007
செல்வநாயகி said...

சசி,

இதில் தமிழக அரசு முடிவெடுக்க இயலாதென்பதையும், மைய அரசுதான் முடிவுசெய்ய வேண்டுமென்பதையும் உணர்ந்தேயிருக்கிறேன். ஆனால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்பா எழுதுவதோடு தன் ஈழவிடுதலை ஆதரவு முடிந்துவிடுவதாய் அமைந்துவிடாமல் தமிழகத்தில் ஈழவிடுதலைக்குக் குறைந்தபட்ச ஆதரவு மனநிலையில் உள்ள தலைவர்களை ஒன்றுதிரட்டி எல்லோருமாய் அதை டெல்லிக்கு விடாது எடுத்துரைப்பது மூலமாய் சேர்த்துவைத்திருக்கிற பொருட்களையாவது அனுப்ப, முடியும்வரை முயற்சிகள் செய்வதில் (ஆதரவு வாபஸ் அச்சுறுத்தல் இல்லாமலேகூட) கலைஞருக்குப் பெரிய சிரமங்கள் இருக்கிறதா என்ன?
ஆனால் நெடுமாறனின் செவ்வி ஒன்றை வாசித்தபோது அவர் அப்பொருட்கள் குறித்த விடயத்தைத் தமிழகத்துத் தலைவர்களிடம் டெல்லிக்கு எடுத்துரைக்குமாறு கேட்கவே திரும்பத்திரும்ப நினைவூட்டவேண்டிய நிலையில் தானிருப்பதாகக் கூறியுள்ளார்.

இவற்றையெல்லாம் மனதில்கொண்டே "ஈழத்திற்கு ஆதரவாகக் கலைஞர் டெல்லியில் பேசுவது இருக்கட்டும், நெடுமாறனுக்கு ஆதரவாகக் கலைஞரிடம் பேசவே இங்கே ஆட்கள் நிறையத் தேவைப்படும்போல் உள்ளதே!" எனக் கருதி அதை எழுதினேன். நன்றி.

12:28 PM, November 25, 2007
தமிழ் சசி | Tamil SASI said...

செல்வநாயகி,

யாழ்ப்பாணத்திற்கு மருந்துகளையோ, உணவு பொருட்களையோ அனுப்புவது என்பது நடக்கப் போவதில்லை.

காரணம் இதனை சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்காது. நெடுமாறன் இந்தப் பிரச்சனையை எழுப்பிய சமயத்தில் சென்னையின் இலங்கை துணை தூதரகம் ஒரு அறிக்கையினை வெளியிட்டிருந்தது.

சென்னையின் மற்றொரு இலங்கை துணை தூதரகமாக செயல்பட்டு வரும் "ஹிந்து" அதனை ஹிந்து நாளிதழில் வெளியிட்டும் இருந்தது. அதிலே யாழ்ப்பாணத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சிறீலங்கா அரசாங்கம் கப்பல்கள் மூலம் அனுப்பி வருவதாக கூறியிருந்தது. யாழ்ப்பாணத்தில் எந்த தட்டுபாடும் இல்லை என்பது சிறீலங்கா அரசின் நிலைப்பாடு. யாழ்ப்பாணத்திற்கு உணவு பொருட்களை அனுப்புவதை சிறீலங்கா அனுமதிக்காது. அது தென்னிலங்கை அரசியலில் ராஜபக்ஷ்விற்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.

இந் நிலையில் சிறீலங்கா அரசை மீறி விமானம் மூலம் உணவுப் பொருட்களை போடலாம். அதாவது 1987ல் ஜெயவர்த்தனேவை தன் வழிக்கு கொண்டு வர ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சி போல செய்வது மட்டுமே தற்பொழுது ஒரே வழி.

இதனை மைய அரசு இப்பொழுது செய்யாது.

இவ்வாறான நிலையில் கலைஞர் என்ன செய்ய வேண்டும் என நெடுமாறன் நினைக்கிறார் என்பது புரியவில்லை.

அதற்காக நெடுமாறனின் முயற்சியை குறை கூறவில்லை. அந்த முயற்சி அவசியமானது. இதனை ஒரு மக்கள் இயக்கமாக நடத்துவதும், தமிழக மக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தான் நம்மால் செய்யக்கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் பொழுது மக்களுக்கு ஈழத்தில் இருக்கின்ற நிலைமை தெரியவரும். அது தான் நாம் செய்ய வேண்டியது. நெடுமாறனும் அதனைச் செய்தார். கலைஞரும் அதனை அனுமதித்தார்.

எனக்கும் உங்களைப் போல ஆதங்கம் உள்ளது. அனைவருக்கும் இந்த ஆதங்கம் உள்ளது. ஆனால் யதார்த்தமான நிலை இது தான்...

தமிழகத்திலே ஈழப் பிரச்சனை குறித்த தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக மட்டுமே தற்பொழுது பிரச்சாரம் நடைபெறுகிறது. அந் நிலை மாற வேண்டும். தற்பொழுது தமிழ்ச்செல்வன் மரணத்தையொட்டி பல ஊர்களில் நடந்த கூட்டங்களைப் போல தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.

4:27 PM, November 25, 2007
Unknown said...

சசி,
பெரிய மனிதர்கள் பெரிய விசயம் ஒன்றை விவாதித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிறியவன் என் சிறிய கருத்தைக்கூற ஆசைப்படுகிறேன்.

சொ.சங்கரபாண்டி கூறுவது எனக்கு சரியென்று படுகிறது. தமிழ்ச்செல்வன் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதெல்லாம் இப்போது அவ்வளவு முக்கியமானதில்லை. விடுதலைப்புலிகள் என்ற வார்த்தையையே தவிர்த்து ஈழத்தமிழர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் துயரங்கள் பற்றிய செய்திகள் தமிழக மக்களை சென்றடைய செய்தாலே போதும். மக்களே இதுபோன்ற இரங்கல் கூட்டங்களை அவர்களாகவே துவங்கிவிடுவார்கள். இப்போது முக்கியமாக தேவைப்படுவது செய்தி. குறைந்தபட்சம் சுவரொட்டிகளின் மூலம்கூட இதை செய்யமுடியும்.

5:00 PM, November 25, 2007
Vassan said...

வணக்கம்.

என்னைவிட நிச்சயமாக விபரம் தெரிந்தவர்கள் ஈழம் பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் போது குறுக்கீட தயக்கமாய் உள்ளது. ஆயினும்
உணர்வை கட்டுப்படுத்த இயலவில்லை. பொறுத்துக் கொள்ளவும்.

முத்துவேல் கருணாநிதியை நம்புவதற்கு மேலாக "ஈழத்தமிழர்களின் நலன்களின்" முதல் எதிரிகளான சோ ராமசாமி, இந்து ராம், தினமலர் நாளிதழ் போன்றோரின் செல்வாக்கை குறைப்பது அல்லது இவர்களின் கபடத்தை வெளிபடுத்துவது எவ்வாறு என்பதை தீவிரமாக யோசிக்க ஆரம்பிக்கலாம்; அதும் அவரவர் வசிக்கும் நாடுகளின் இறையாண்மைகளுக்கு முரணில்லாமல் என்ன செய்யலாம்..?

1. தமிழ்நாட்டில் வலுவான ஒரு ஆங்கில நாளிதழ் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் குறிக்கோள் உண்மையை உரத்து சொல்வதாக இருக்க வேண்டும். இந்து,துக்ளக்,தினமலர் போன்ற இதழ்களின் விற்பனையை பாதிக்க தேவையான துணிவு,தெளிவு இச்செய்தியிதழின் பிறழ முடியாத கட்டுப்பாடுகளாக இருக்க வேண்டும். லாபம் ஒரு நோக்காக இருக்ககூடாது..

2. தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஈழம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க முடியுமா( எனக்கு தமிழ் சேனல்களில் பரிச்சயம் கிடையாது; எந்த சேனல்கள் முதுகெலும்பு உடையவை என தெரியாது)

3. சினிமா வெறிபிடித்த தமிழர்களிடையே, முதுகெலும்புடைய தமிழ் நடிகர்கள்,நடிகைகள் போன்றோரை - பொருத்தமான தளங்களில்
ஈழம் பற்றி பேச நாம் முயற்சிக்க வேண்டும். அதாவது, த.நா மக்களின் சிந்தனைகளில் ஈழம் பற்றிய நினைப்புகள் இருந்து கொண்டே இருக்க செய்ய வேண்டும்.

4. குறிப்பிட்டவொரு சாதியினர் அனைவரையும் எதிரிகளாக கற்பிதம் செய்து கொள்ளாமல் அவர்களிடையும் நீதி உணர்வு உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களுடைய கருத்துக்களை குறிப்பிட்ட அந்த ஒரு வகுப்பினரிடையே பரப்ப வேண்டும். வலைப்பூ உலகிலேயே சிலர் உண்டு.

5. இந்த முயற்சிகளில் நாம் யாராவது ஈடுபட வாய்ப்பு வாய்த்தால், நடுநிலை தவறாமல், எந்த சூழலில் உணர்ச்சி வசப்படக் கூடாது ( நன்றி அலேஸ்கா தங்கமணி)

6. யாரோ சொல்லியிருந்தார்கள்: வட இந்தியா ஏனைய தெற்கிந்திய அறிவுசீவிகளிடம் ஆதரவு தேட வேண்டும் என்று..


புலம் பெயர்ந்த தமிழர்கள், உணர்வுள்ளத் தமிழர்கள் ஒரு xx பேர்கள் ஒன்றுகூடினால் ஏன் செய்ய முடியாது..?

நன்றி.

வாசன்

newmexico.vassanஅட் ஜீமெய்ல் டாட் காம்

8:53 PM, November 25, 2007
வெத்து வேட்டு said...

my question is why tamil nadu t amil should be very worried about tamil eelam tamil?
now indian decents (mostly tamils) in malaysia id oppressed..indian workers are oppressed in middle east...are we tamils in tamil nadu going to enlighten everone about these too? or?????????

9:27 PM, November 25, 2007
செல்வநாயகி said...

விளக்கங்களுக்கு நன்றி சசி.

///யாழ்ப்பாணத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சிறீலங்கா அரசாங்கம் கப்பல்கள் மூலம் அனுப்பி வருவதாக கூறியிருந்தது///

இந்தச் செய்தி நான் வாசித்திருக்காத ஒன்று. ஆனால் ராஜபக்ஷே அறிவித்தபடி அங்கு உண்மையிலேயே தேவையான பொருட்கள் அனுப்பப்பட்டதா? அங்கிருக்கும் மக்களின் நிலைமை என்ன? அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பது வேறேதும் ஊடகம் மூலமேனும் வெளிவந்ததா தெரியவில்லை.

ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இப்படி அந்நாட்டு அதிபர் அறிவித்துவிட்டதாலேயே வெளியிலிருக்கும் வேறு மனித உரிமை அமைப்புகளோ, தொண்டு நிறுவனங்களுமோகூட வேறெதும் செய்ய முடியாமல் கைகட்டித்தான் வேடிக்கை பார்க்க நேரிடுமா? என்பதுகுறித்தும், அதுசம்பந்தமான பன்னாட்டுத் தொடர்புகள் பற்றிய சட்டக்குறிப்புகளைத் தேடிப்பார்க்கத் தோன்றுகிறது.

மற்றபடி நீங்களோ, சங்கரபாண்டியோ சொல்வதுபோல் தமிழ்நாட்டில் கூட்டங்கள் மூலமும், ஊடகங்கள் மூலமும் அங்கிருக்கும் மக்களின் நிலையை இடைவிடாது சொல்லிக்கொண்டிருப்பது அவசியமானதென்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. நிறையச் செய்யமுடியும் செயல்குறித்த ஒருங்கமைந்த ஈடுபாடும் உழைப்பும் இருக்கும்போது, அது எவ்விடமாயிருந்தாலும் சரி.

10:29 PM, November 25, 2007
மயிலாடுதுறை சிவா said...

".....ஈழப் போராட்டம் பற்றிய உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக தற்போதைய கலைஞரின் ஆட்சியை கருத வேண்டும். இந்த வாய்ப்பை "தீவிரவாதம்" பேசி, கலைஞர் ஆட்சிக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி சிதைத்து விடக்கூடாது....."

இந்த வைரவரிகள் போதும் சசி. மிக பொறுமையாக யோசித்து எழுதியுள்ளீர்கள். ஈழ மக்கள் மீது என்றும் கலைஞருக்கு பாசம் உண்டு. அதே சமயம் ஈழ போராட்டத்தை ஆதரித்த காரணத்தால் கலைஞர் அடைந்த இழப்புகளை நாம் மறந்து விட கூடாது.

2011 ஆண்டு தேர்தலில் யார் வந்தாலும் பரவாயில்லை, ஆனால் தமிழன எதிரி ஜெயலலிதா வரகூடாது என்பதை உண்மையான தமிழர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். (இதனை அய்யா மருத்துவரும் புரிந்து கொண்டால் நல்லது!!!)

நல்ல கட்டுரைக்கு நன்றிகள் பல சசி!!!

மயிலாடுதுறை சிவா....

11:14 PM, November 25, 2007
லக்கிலுக் said...

//கருணாநிதி 60 களின் ஆரம்பத்திலே திமுகவின் அதிமுன்னணித்தலைவருமல்ல;//

பெயரிலி அண்ணை!

60களின் ஆரம்பத்தில் தலைவர் கலைஞர் தி.மு.கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்தார். அப்படியென்றால் அதிமுன்னணித் தலைவரல்ல என்று பொருளா?

1956 (54?) திமுக மாநில மாநாட்டில் "வாக்கெடுப்பு அரசியலில் கழகம் பங்கேற்க வேண்டும்" என்ற தீர்மானத்தின் பின்புலமாக இருந்தவரே கலைஞர் தான். அத்தீர்மானம் திமுகவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்பதை தமிழக அரசியல் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.

கலைஞரை விட மூத்த தலைவர்கள் திமுகவில் இருந்ததால் கலைஞரை ஜூனியர் லெவல் தலைவராக அப்போதைய ஊடகங்கள் சித்தரித்திருக்கலாம். ஆயினும் அரசியலைப் பொறுத்தவரை வயது ஒரு தகுதியே கிடையாது. செயல்வேகமே ஒரு தலைவரின் வளர்ச்சியையும், தகுதியையும் தீர்மானிக்கிறது.

11:38 PM, November 25, 2007
லக்கிலுக் said...

//வெத்து வேட்டு said...
my question is why tamil nadu t amil should be very worried about tamil eelam tamil?
now indian decents (mostly tamils) in malaysia id oppressed..indian workers are oppressed in middle east...are we tamils in tamil nadu going to enlighten everone about these too? or?????????
//

நண்பர் வெத்துவேட்டு அவர்களே தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ற சரியான பெயரையே தாங்கள் தங்களுக்கு சூட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!!! :-))))

11:39 PM, November 25, 2007
பிருந்தன் said...

//விடுதலைப் புலிகளின் போர் வெற்றிகள் மட்டுமே சிங்கள அரசை மறுபடியும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவரும்.//

//புலிகள் போர் வெற்றிகளை பெற முடியுமா ? புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் என்ற சிங்கள அரசின் பிராச்சாரத்தை முறியடிக்க முடியுமா ? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.//

கட்டுரைக்கு நன்றிகள்,

ஒரு பெரு வெற்றியை பெற்வேண்டுமெனில் ஆயிரக்கணக்கான வீரர்களை விதைக்கவேண்டும், இழப்புகள் இன்றி வெற்றிகள் இல்லைதான் அது யதார்த்தம், இவ்வலவு இழப்புகளுடன் பெறப்படும் வெற்றி சிங்களத்தை பேச்சுக்கு கொண்டு வருவதற்க்கு மட்டும்தானா? பேச்சுக்கு வந்தாலும் சிங்களம் சிறு அதிகாரத்தை கூட தமிழருக்கு தர சம்மதிக்குமா? இழுத்தடிக்கும் பேச்சுகளுக்காக, பேச்சுக்களுக்கான வெற்றி தேவையா? சிங்களத்துடன் பேசி இனியும் பயன் ஏதும் உண்டா?

பிருந்தன்.

11:59 PM, November 25, 2007
-/பெயரிலி. said...

லக்கிலுக் தம்பியோவ்,
தவறாகப் புரிந்துகொண்டீர்களென்று எண்ணுகிறேன்.
கலைஞர் அதிமுன்னணித்தலைவரல்ல என்றுதானே சொல்லியிருக்கிறேன்; திமுகவின் முன்னணித்தலைவர்களிலே ஒருவரில்லை என்றா? அண்ணாதான் அதிமுன்னணித்தலைவரென்ற அர்த்தத்திலே, அவருக்கே தடைவிதிக்காத இலங்கை அரசு கலைஞருக்கா தடைவிதித்திருந்தது என்ற அர்த்தத்திலேயே சொன்னேன். மிகுதிப்படி, கலைஞர் திமுகவிலே முன்னணித்தலைவர்களிலே ஒருவராகவிருக்கவில்லை என்றேதும் சொல்லவில்லையே?

12:44 AM, November 26, 2007
ராயன்-Rayan said...

திமுகழகம் விடுதலை புலிகள் பற்றி தெளிவு படித்தமைக்கு நன்றி...ஆனால் ஒரு சிறு சந்தேகம் புலிகள் தங்களுக்கு தேவையான பெரும்பாலான பொருட்களை தமிழகம் முலம் கொண்டு செல்கின்றனர்..அவைகளை என் கலைஞர் கண்டும் காணாமல் இருந்துவிடலாம் அல்ல மாறாக ஏராளமான பொருள்களை என் பறிமுதல், கைது செய்ய வேண்டும்...மேலும் புதியதாக மேலும் ஒரு கடல் ஓர காவல் படை எதற்கு...ராமேஸ்வரத்தில் ஒரு புதிய ராணுவ முகாம் அமைப்பது பற்றியும் பரிசிலனை செய்கிறது

2:27 AM, September 24, 2008
லக்கிலுக் said...

இந்தப் பதிவையும், பின்னூட்டங்களையும் வாசிக்க இப்போது நகைச்சுவையாக இருக்கிறது :-)

7:08 AM, May 03, 2009