Saturday, April 04, 2009

துப்பாக்கிகள் மீதான காதல்

துப்பாக்கிகள் போன்ற ஒரு கொடூரமான ஆயுதம் இந்த உலகத்தில் வேறு எதுவும் இருக்க முடியாது. உயிர்களை பறிக்கிறது என்பதற்காக மட்டும் அல்ல. துப்பாக்கி கையில் இருந்தால் ஒரு புது தைரியம் கிடைக்கிறது. அடுத்தவர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறிக்கும் எண்ணமும்,
ஆயுதங்கள் இல்லாதவர்களை தங்களை விட மிகக் கீழாக நினைக்கும் போக்கும் ஏற்பட்டு விடுகிறது. உலகின் பல இடங்களில் நடக்கும் போராட்டங்களை கவனிக்கும் பொழுது இதனை நான் உணர்ந்திருக்கிறேன். ஈழம் தொடங்கி பல இடங்களில் நடக்கும் போராட்டங்கள் இதையே நமக்கு கூறுகின்றன. இத்தகைய போராட்ட பகுதிகளில் இருக்கும் சாமானிய மக்கள் துப்பாக்கிகளை வெறுக்கவே செய்வார்கள்.

ஆனால் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் துப்பாக்கிகளை நேசிக்கும் பெருவாரியான மக்கள் இருக்கும் நாடு ஒன்றும் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா தான்.

அமெரிக்காவில் சுமாராக 200 மில்லியன் (20 கோடி) துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது அமெரிக்க மக்கள் தொகையில் பெரும்பாலானோர்களிடம் துப்பாக்கி இருக்கிறது. அமெரிக்காவில் துப்பாக்கிகள் வைத்து கொள்வது, கருக்கலைப்பு போன்றவை முக்கிய சமூக பிரச்சனையாக உள்ளன. தேர்தல்களிலும் இது எதிரொலிக்கும். துப்பாக்கிகளை தடை செய்யும் எந்த சட்டத்தையும் கடுமையாக எதிர்க்கும் ஒரு பெரிய கூட்டம் இங்கு இருக்கிறது. மிகவும் வலுவான நிலையில் 2000ம் வருட தேர்தலில் இருந்த அல்கோர் தோல்வியுற்றதற்கு அவர் மீது கன்சர்வேட்டிவ்கள் முன்வைத்த மோசமான பிரச்சாரங்கள் முக்கியமான காரணம். அவர் மீது முன்வைக்கப்பட்ட பல பிரச்சாரங்களில் அவர் துப்பாக்கிகளை தடை செய்யும் சட்டத்தினை கொண்டு வருவார் என்று முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரமும் ஒன்று. ஆரம்பத்தில் ஒபாமா கூட துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும், கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர் தான். சிக்காகோ சூழலில் வளர்ந்த ஒபாமா அங்கு பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மிக சகஜமாக துப்பாக்கிகளில் சுட்டுக் கொண்டு இறந்து போகும் சூழ்நிலையில் அது குறித்த கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தார். ஆனால் அது தன்னுடைய தேர்தல் வெற்றிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற நோக்கில் அதனை தீவிரமாக வலியுறுத்தாமல் மேலோட்டமாக அது குறித்து பூசிமொழுகி பிரச்சாரம் செய்தார்.

ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால் அமெரிக்க உச்சநீதி மன்றம் கடந்த ஆண்டு தனிநபர்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதை தொடர்ந்து முன் எப்பொழுதையும் விட துப்பாக்கிகளின் புழக்கம் அமெரிக்காவில் அதிகரித்து இருப்பதாக துப்பாக்கிகளை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த சில வருடங்களில் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் என்று எண்ணி பார்த்தால் கணக்கு வழக்கே இல்லை. 10, 15 பேர் ஒரு இடத்தில் இறந்தால் தான் இந்த துப்பாக்கிச் சூடுகள் பற்றி செய்தி வெளியே தெரிய வரும். சிறிய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் எல்லாம் வெளியே வராது.

ரோட்டில் நடந்து செல்லுபவரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிக்கும் சம்பவங்கள் இங்கே வெகு சகஜம். அதுவும் டெக்சாஸ் போன்ற பகுதிகளில் மிக அதிகம். டெக்சாசுக்கு புதியதாக வந்த பொழுது நாங்கள் கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையில் அதிர்ச்சி அடைய வைத்தன. நியூஜெர்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகவும் குறைவு. வீட்டில் இருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டு கதவை தட்டி இருக்கிறார்கள். கதவை திறந்தவுடன் நெற்றிக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்டு பணம் கேட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பர்சில் இருக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பார்கள். டெக்சாஸ் போன்ற பகுதிகளில் திருட்டும் அதிகம். இந்தியர்கள் வீடுகளில் நகைகள் இருக்கும் என்பது பெரிய ரகசியம் அல்ல. நம்மவர்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக வீட்டின் சந்து பொந்துகளில் மறைத்து வைப்பார்கள். ஆனால் இங்கு திருட வருபவர்கள் மெட்டல் டிடக்டருடன் (Metal Detector) வருவார்களாம். சில நிமிடங்களில் வீட்டில் இருக்கும் மொத்த நகையையும் எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். இது ஏதோ ஒரு சில இடங்களில் நடக்கும் கதைகள் அல்ல. மிக சகஜமாக டெக்சாசில் அடிக்கடி கேள்விப்படும் தகவல்களாக உள்ளது. இங்கு இருக்கும் அப்பார்ட்மெண்ட்களில் துப்பாக்கிச் சூடுகள் இல்லாத அப்பர்ட்மெண்ட் எது என தேட வேண்டியிருக்கும். நியூஜெர்சியில் இத்தனை மோசம் இல்லை.

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோர் ஆண்டு தோறும் பல்வேறு துப்பாக்கிச்சூடுகளிலும், துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டும் இறக்கின்றனர். இவற்றில் நிறைய குழந்தைகளும் உண்டு என்பது வேதனை அளிக்கும் உண்மை. அமெரிக்க வரலாற்றில் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் போன்றோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் இவ்வளவுக்கு பிறகும் துப்பாக்கிகளை கட்டுப்படுத்த அமெரிக்க அரசியல்வாதிகளால் ஒரு வலுவான சட்டத்தை கூட கொண்டு வரமுடியவில்லை. மக்களின் எதிர்ப்பு அத்தகையது. இதிலே கன்சர்வேட்டிவ்-லிபரல் இடையே கொள்கை ரீதியிலான வேறுபாடுகளும் உண்டு. ஒபாமா துப்பாக்கிகளை பறித்து விடுவார் என மெக்கெயின் பிரச்சாரம் செய்தார்.

மக்களுக்கு துப்பாக்கிகள் மீது அப்படி என்ன காதல் ?

சமூக விரோத பிரச்சனைகள் காரணமாகவும், வேட்டையாடும் பொருட்டும் துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது தங்களுடைய தனி மனித உரிமையாகவே பெரும்பாலான அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள். துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டங்களை பேச்சுரிமை, தனி மனித உரிமைகளை எதிர்க்கும் சட்டமாகவே பார்க்கிறார்கள். இதனால் இங்கே எந்த அரசியல்வாதிக்கும் அத்தகைய சட்டங்களை கொண்டு வரும் தைரியம் இல்லை.

துப்பாக்கிகள் அமெரிக்காவின் கலச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருந்து வருகிறது. அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய பொழுது இது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருந்ததால் காட்டு விலங்குகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக துப்பாக்கிகளை வைத்திருக்க தொடங்கினர். அது தவிர செவ்விந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் துப்பாக்கிகள் வீட்டின் ஒரு அங்கமாக மாறியதாக கூறப்படுகிறது. இவை தவிர ஆரம்பகாலங்களில் காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுக்கள், காடுகளில் இருந்து தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை கொண்டு வர ஒரு பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக துப்பாக்கிகள் சகஜமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்க அரசியல் சட்டத்தில் இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்க மக்கள் துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவதை வலியுறுத்துகிறது.

A well regulated militia being necessary to the security of a free State, the right of the People to keep and bear arms shall not be infringed.

இந்த இரண்டாம் சட்டதிருத்தம் அமெரிக்காவின் மிகவும் சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்று. ஆனால் ஒவ்வொரு முறை துப்பாக்கிகளை தடை செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பொழுதும் துப்பாக்கிகளை ஆதரிக்கும் குழுக்கள் இந்த சட்டத்தை சுட்டிகாட்டி துப்பாக்கிகளை பறிப்பது தங்களது தனிமனித உரிமையை பறிப்பதாகும் என கடுமையாக எதிர்க்கின்றன. இந்த சட்டதிட்டம் எவ்வாறான சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது, ஏன் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து பல்வேறு பார்வைகள் உள்ளன. அமெரிக்கா மீது பிற நாடுகள் போர் எடுத்தால் ஆயுதங்களை பெருமளவில் கொண்டிருக்கும் மக்கள் அதனை எதிர்த்து போராட முடியும் என்பதே இதன் பொருள். இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு அத்தகைய நெருக்கடி ஏற்படப்போவதில்லை. அதனால் துப்பாக்கிகளுக்கு அவசியமும் இல்லை.

ஆனால் துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் சமூக விரோதிகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காகவே துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள வேண்டும் என அரசியல் சட்டம் வலியுறுத்துவதாக கூறுகின்றனர். தங்களுடைய பாதுகாப்பிற்கு துப்பாக்கிகள் அவசியம் எனவும் மக்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக பல வீடுகளில் துப்பாக்கிகள் நிச்சயம் இருக்கும் என்ற நிலை தான் உள்ளது. இப்படி புழக்கத்தில் இருக்கும் துப்பாக்கிகள் தான் பல நேரங்களில் கிரிமினல்கள் கைகளிலும், மனநிலை சரியில்லாதவர்கள் கைகளிலும் சிக்கி விடுகிறது. அதனால் பல நேரங்களில் பல துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு தொடர்கதையாகவே உள்ளது.

இது தவிர மிக முக்கிய பிரச்சனையாக வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு துப்பாக்கிகளை கையாளுவது மிக சகஜமாக சிறு வயதிலேயே தெரிந்து விடுகிறது. துப்பாக்கிகள் வைத்துக் கொள்வது ஒரு கலாச்சாரமாகவே உள்ளதால் பெற்றோர்களே குழந்தைகளுக்கு துப்பாக்கி பயிற்சிகளை கொடுக்கிறார்கள். வீட்டில் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். அங்கு ஏற்படும் சிறு பூசல்களுக்கு கூட துப்பாக்கிகள் வெடிக்கின்றன. பல குழந்தைகள் இறக்கின்றனர். சிகாகோ நகரில் ஒரு வருடத்தில் சுமார் 30ம் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறார்கள் என ஒபாமா ஒரு தேர்தல் விவாதத்தில் கூறினார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். அதனால் துப்பாக்கிகளை கட்டுப்படுத்துவதை எதிர்க்கிறார்கள். தங்களுடைய வேலையிடங்களுக்கு (அலுவலகங்களுக்கு) துப்பாக்கிகள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன. யாராவது அலுவலகத்தில் திடீரென்று நுழைந்து சுட தொடங்கினால் என்ன செய்வது ? எனவே எங்களுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களது வாதம். இங்கே ஒரு சில முக்கியமான அரசு அலுவலகங்களில் மெட்டல் டிடக்கர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். என் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் தபால் நிலையத்தில் கூட மெட்டல் டிடக்கடர் சோதனைக்கு பிறகே அனுமதிப்பார்கள். ஆரம்பத்தில் இந்தளவுக்கு பயங்கரவாத பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கிறதோ என தோன்றியது. ஆனால் பிறகு தான் அதன் உண்மையான காரணங்கள் புரிந்தது. யாராவது அரசு அலுவலகங்களில் தங்களுடைய கோபத்தை காட்டி விடக்கூடாது என்பதே இதற்கு காரணம். ஆனாலும் இதையும் மீறியே இங்கு துப்பாக்கிச் சூடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் நியூயார்க் குடியேற்ப்பு மையத்தில் நடந்தது போல.

இப்படி பல துப்பாக்கிச் சூடு இங்கே நடந்து கொண்டிருந்தாலும், துப்பாக்கிகளை ஆதரிப்பவர்கள் துப்பாக்கிகளை குறை சொல்வது தவறு என்கிறார்கள். துப்பாக்கிகள் தானாக சுடுவதில்லை. மனிதன் தான் சுடுகிறான். எனவே துப்பாக்கிகளை காரணமாக சொல்ல முடியாது. மனிதர்களின் மனநிலையும், சமூக நிலையும் மாறினால் இவ்வாறான துப்பாக்கிச் சூடுகள் நடைபெறாது என கூறுகிறார்கள். இந்த வாதமே வேடிக்கையாக உள்ளது. துப்பாக்கிகள் வைத்திருக்கும் பொழுது அதனை பயன்படுத்தும் நோக்கம் பல நேரங்களில் இயல்பாக எழுந்து விடுகிறது. மனிதன் மனம் இத்தகைய தன்மை மிக்கதே. மிக அரிதாக பயன்படுத்தும் நோக்கம் மறைந்து குடும்பச்சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவற்றுக்கு கூட துப்பாக்கிகளை பயன்படுத்தும் நோக்கம் ஏற்பட்டு விடுகிறது. இது அமெரிக்கர்கள் என்றில்லாமல் இங்கு குடியேறும் அனைவருக்கும் பொருந்தும். சமீபகாலங்களில் துப்பாக்கி சூடு நடத்திய சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் மத்தியிலும் இந்த கலாச்சாரம் வளர்ந்து வருவது ஆபத்தானது. கடந்தவாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்காக தன்குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டுக் கொண்டுஇறந்திருக்கிறார். இதில் குழந்தைகளும் அடக்கம்.

ஒவ்வொரு முறை அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பெரியளவில் நடக்கும் பொழுது அன்று ஒரு நாள் மட்டும் துப்பாக்கி கலாச்சாரம் குறித்து பேசப்படும். துப்பாக்கிகளுக்கு ஆதரவான மற்றும் எதிரான வாதங்கள் முன்வைக்கப்படும். அடுத்த நாள் அது மறந்து போய் விடும். ஆரம்பத்தில் அமெரிக்காவில் இத்தகைய துப்பாக்கிச் சூடுகள் பற்றிய செய்திகள் வெளியாகும் பொழுது எனக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் இப்பொழுது வெகு சகஜமாகி விட்டது. ஐயோ, பாவம் என்ற எண்ணத்துடன் சேனல்களை மாற்றும் போக்கு ஏற்பட்டு விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்த செய்தியை பார்த்து விட்டு அடுத்த சேனலுக்கு நகர்ந்த பொழுது தான் நாமும் அமெரிக்க மனப்பான்மைக்கு வந்து விட்டோமோ என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை.

************

துப்பாக்கி கலச்சாரம் (Gun Culture) என்பது பெரும்பாலான நாடுகளில் வன்முறையையே குறிக்கும். ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பதற்கு வேறு பார்வையும் உண்டு. இங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதும் ஒரு கலாச்சாரமே. மேலே கூறியிருப்பது போல அமெரிக்காவில் வெள்ளையர்கள் குடியேறிய காலங்களில் இருந்தே துப்பாக்கிகள் அமெரிக்காவின் வீடுகளில் சகஜமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி என்பது கலாச்சாரத்தின் ஒரு அங்கமும் கூட. இதன் பிரதிபலிப்பு தான் ஹாலிவுட் திரைப்படங்களில் துப்பாக்கிகள் சகஜமாக பயன்படுத்தபடுவதற்கு முக்கிய காரணம். ஆனால் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்கிறேன் எனக் கூறி தமிழ் சினிமாவில் தற்பொழுது துப்பாக்கி காட்சிகளை படங்களில் தேவையில்லாமல் புகுத்த தொடங்கி இருக்கின்றனர். ஏன் ஹாலிவுட் படங்களில் துப்பாக்கிகள் பெருமளவில் பயன்படுத்த படுகின்றன என்ற காரணம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை.

************

ஈழத்தில் துப்பாக்கிகள் போராட்டத்தின் அடையாளமாக கூறப்பட்டாலும் அங்கு துப்பாக்கிகளைச் சார்ந்த வேறு சமூகவியல் பார்வையும் உள்ளது. ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு துப்பாக்கி கிடைப்பதற்கே மிக கடினமாக இருந்தது. பணத்தேவையும் அதற்கு அதிகம். துப்பாக்கிகளை பெற ஈழத்தில் இருந்த மக்களிடம் இருந்து பணம் திரட்டுவதும் கடினம். அந்தளவுக்கு மக்களிடம் பணம் இல்லை. இதனால் துப்பாக்கிகளின் புழக்கம் அங்கு வெகுவாக இல்லை. ஆரம்பகாலத்தில் ஒரு நல்ல துப்பாக்கிக்காக பல போராளிகள் அலைந்திருக்கின்றனர். ஆனால் இந்தியாவின் தலையீட்டிற்கு பிறகும், வெளிநாட்டுத் தமிழர்கள் பெருமளவில் நிதி அளிக்க தொடங்கிய பிறகும் துப்பாக்கிகள் அங்கு பெருகின. துப்பாக்கிகளின் பெருக்கம் துப்பாக்கிகளை கொண்டிருந்தவர்களை அதிகாரம் மிக்கவர்களாக சமூகத்தில் பிரதிபலித்தது.
துப்பாக்கிகளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் துப்பாக்கிகள் கிடைத்தவுடன் அதனை தங்கள் அதிகாரத்தின் சின்னங்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். தங்களிடம் துப்பாக்கிகள் இருக்கிறது என பகீரங்கமாக வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தங்களை குறித்த பய உணர்ச்சியையும் தோற்றுவித்தனர். இயக்கங்களை எதிர்த்து பேச மக்கள் அஞ்சும் சூழ்நிலையும் எழுந்தது. துப்பாக்கிகளின் வளர்ச்சியும் பய உணர்ச்சியும் இயக்கங்கள் மத்தியில் அதிகாரமையங்களையும் உருவாக்கியது. தங்களுக்கு தாங்களே வகுத்து கொண்ட சட்டங்கள், மற்றவருக்கு அளித்த தண்டணைகள் போன்றவற்றுக்கு துப்பாக்கிகள் கொடுத்த அளவில்லாத சுதந்திரமும் ஒரு முக்கிய காரணம்.

ஈழம் என்றில்லாமல் துப்பாக்கிகளை தங்களுடைய கைகளில் எடுக்கும் எந்த அமைப்பும், இயக்கமும் அளவில்லாத சுதந்திரத்தையும் தங்கள் கைகளில் எடுத்து கொள்கின்றன. இந்த அளவில்லாத சுதந்திரம் அவர்களை எந்த எல்லைக்கும் கொண்டு சென்று விடுகிறது. அதே நேரத்தில் துப்பாக்கிகளை கொண்டு நடக்கும் போராட்டம் மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அதாவது போராட்டத்தினை நடத்த பணத்திற்காக மக்களைச் சார்ந்து இருக்கும் வரையில் அந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக இருக்கும். மக்களை நம்பாமல் தங்களை மட்டும் நம்பும் பொழுது அது போராட்ட பாதையில் இருந்து விலகி சென்று விடுகிறது. ஈழப் போராட்டத்தினை இங்கே பொருத்தி பார்க்க முடியும். ஈழத்திலே உள்ள மக்கள் எப்பொழுதும் ஈழப்போராட்டத்தினை நிர்ணயித்தது இல்லை. அதற்குரிய பணபலம் அவர்களிடம் இல்லை. மாறாக ஆரம்பகாலத்தில் இந்தியா, தமிழகம் (எம்.ஜி.ஆர் போன்றவர்கள்) பிறகு புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்றோரே ஈழப்போராட்டத்தினை நிர்ணயம் செய்தவர்கள். எனவே இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People. இதுவும் ஈழப் போராட்டம் ஒரு விடுதலைப் போராட்டம், அரசியல் போராட்டம் என்பதில் இருந்து நகர்ந்து இன்று தமிழன் வாழ்வுரிமை சார்ந்த இராணுவ போராட்டமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணம்.

************

துப்பாக்கிகளை ஈழத்திலும், அமெரிக்காவிலும் பார்த்தவரையிலும் இந்த துப்பாக்கிகளை விளையாட்டு மொம்மையாக கூட குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவை பாதுகாப்பின் அடையாளம் அல்ல. வன்முறையின் சின்னம். வன்முறையை மனிதன் எளிதாகவும், சுலபமாகவும் கைக்கொள்ள துப்பாக்கிகள் வழிவகுத்து விடுகின்றன.

12 மறுமொழிகள்:

பதி said...

//அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பதற்கு வேறு பார்வையும் உண்டு. இங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதும் ஒரு கலாச்சாரமே.//

அதனால் தான் என்னவோ, மற்ற மக்களிடமும் (அவர்கள் எங்கெல்லாம் கால் வைக்கின்றன்ரனரோ அங்கெல்லாம்) அவர்கள் அதனை தாரளமாக புழக்கத்தில் விட முயற்சிகின்றனர் போலும்... !!!!!!!!!

//துப்பாக்கிகளை ஈழத்திலும், அமெரிக்காவிலும் பார்த்தவரையிலும் இந்த துப்பாக்கிகளை விளையாட்டு மொம்மையாக கூட குழந்தைகளுக்கு வாங்கித்தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவை பாதுகாப்பின் அடையாளம் அல்ல. வன்முறையின் சின்னம். வன்முறையை மனிதன் எளிதாகவும், சுலபமாகவும் கைக்கொள்ள துப்பாக்கிகள் வழிவகுத்து விடுகின்றன.
//

நல்ல கருத்து. நானும் இதே போல் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மையாக துப்பாக்கி வாங்கி கொடுத்துள்ள பெற்றொர்களிடம் சொல்ல போக, அவர்கள் என்னை ஒரு தீவிரவாதி அளவிற்கு பார்த்தது நினைவில் வருகின்றது !!!!! :)

6:02 PM, April 05, 2009
Anonymous said...

y dont u write about amarican govt which is the largest seller of arms and indian govt kililng tamils in sri lanka.

9:22 PM, April 05, 2009
Anonymous said...

\\மாறாக ஆரம்பகாலத்தில் இந்தியா, தமிழகம் (எம்.ஜி.ஆர் போன்றவர்கள்) பிறகு புலம் பெயர்ந்த தமிழர்கள் போன்றோரே ஈழப்போராட்டத்தினை நிர்ணயம் செய்தவர்கள். எனவே இயக்கங்களுக்கு மக்களை சார்ந்து இருக்கும் அவசியம் இல்லாமல் போனது. They were not Accountable to People.\\

இது உண்மையெனில் பின்னர் யாருக்காக போராளிகள் போராட்டம் நடத்துகிறார்கள்.(ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால்)எவர் அவர்களைச் சாரந்து நிற்கப் போகிறார்கள்?

9:49 PM, April 05, 2009
இரா.செந்தில் said...

சசி மறுமொழி சற்று நீளமானதால் தனிப் பதிவாக இங்கே. துப்பாக்கிகள்

11:24 PM, April 05, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

செந்தில்,

உங்களுடைய நீண்ட பதிலுக்கு என்னுடைய நன்றி.

முதலில் ஈழப்போராட்டம் குறித்த என்னுடைய பதிலை முன்வைத்து விடுகிறேன். காரணம் மேலே எழுதப்பட்டிருக்கிற இரு அனானி பின்னூட்டங்கள் என்னுடைய ஈழப்போராட்டம் குறித்த பார்வையை தான் விமர்சித்து இருக்கின்றன.

ஈழப்போராட்டம் அகிம்சை வழியில் நடத்தப்பட வேண்டும் என நான் கூறவில்லை. என்னுடைய ”திலீபன், காந்தி, அகிம்சை” என்ற பதிவில் அகிம்சை சார்ந்த போராட்டங்கள் எவ்வாறு ஒரு விடுதலைப் போராட்டமாக முடியாது என்பது குறித்து எழுதி இருக்கிறேன்.

அதே நேரத்தில் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட விதத்தில் எனக்கு விமர்சனம் உண்டு. காரணம் ஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் சக்தியாக ஆரம்ப காலத்தில் இந்தியா இருந்த பொழுது அங்கே ஆயுதப் போராட்டம் திசைமாறி போய் விட்டது. மக்களைச் சார்ந்து இருக்க வேண்டிய ஆயுதப் போராட்டம் முதலில் இந்தியாவின் பணத்தாலும், ஆயுதங்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட சூழல் ஈழப்போராட்டத்தினை மக்களை சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தில் இருந்து விலக்கியது. அனைத்து போராளி இயக்கங்களின் ஆரம்பகால செயல்பாடுகளும் இதைத் தான் உணர்த்துகின்றன. இதனையே என்னுடைய கட்டுரையில் கூற முயன்றேன். இது மிக விரிவாக பேசப்பட வேண்டிய ஒன்று என்பதால் மற்றொறு தருணத்தில் இது குறித்து எழுதுகிறேன்.

********

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த உங்களுடைய பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபடுகிறேன்.

துப்பாக்கிகளை கத்திகளுடன் இணைத்து பார்க்க முடியாது. கத்திகள் இல்லாத வீடுகள் இந்தியாவிலும் இல்லை, அமெரிக்காவிலும் இல்லை. ஆனால் எத்தனை கத்திக்குத்துகள் பள்ளிகளில் நடந்திருக்கின்றன. பொது இடத்திற்கு ஒரு தனி மனிதன், அதுவும் மனநிலை சரியில்லாத ஒருவன் கத்தியுடன் வந்து 15 பேரை சரமாரியாக வெட்டி கொன்று விட முடியுமா ? அது எங்கேனும் நடந்திருக்கிறதா ?

தற்கொலைகள் எல்லா இடங்களிலும் தான் இருக்கிறது. தற்கொலை என்பது ஒரு கண நேரத்தில் நிகழும் முட்டாள்தனம். அரளி விதையை தேட வேண்டும். பூச்சி மருந்தை தேட வேண்டும். அதற்குள் அந்த எண்ணம் மறைந்து விடும். இந்தியாவில் கிராமங்களில் பூச்சி மருந்து குடிக்கும் தற்கொலைகள் அதிகம். காரணம் அங்கே அது சுலபாக கிடைக்க கூடியதாக இருக்கிறது. வீடுகளில் பெரும்பாலும் இருக்கும். ஆனால் நகரங்களில் குறைவு. ஏனெனில் அது கிடைக்கும் சாத்தியங்கள் மிக குறைவு. அதைத் தான் நான் கூறுகிறேன். துப்பாக்கிகள் மரணத்தை சுலபாக்கி விடுகிறது. ஒரு நொடியில் இறந்து போகும் வாய்ப்பு இருக்கும் பொழுது, மிக சுலபமான தீர்வாக துப்பாக்கிகள் அமைந்து விடுகின்றன.

கடந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் குடும்ப சண்டையில் தன் குடும்பத்தை சேர்ந்த பலரை சுட்டுக்கொன்று தானும் இறந்தார். ஆனால் இதே நபர் இந்தியாவில் இருந்திருந்தால் அவர் அதனைச் செய்திருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

மனித மனம் ஒரு நிமிடத்தில் வேகமாக ஒரு திசையில் பயணிக்கும். மறு நிமிடம் மறு திசையில் பயணிக்கும். அப்படியான நிலையற்ற மனித மனத்துடன் இருக்கும் சூழ்நிலையில் துப்பாக்கிகள் வீட்டில் இருப்பது ஆபத்தானது. அமெரிக்காவில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெருமளவில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் இதனையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

அமெரிக்காவில் துப்பாக்கிகள் வாங்குவதற்கு பல சட்டத்திட்டங்கள் உள்ளன என்பதை மறுக்க வில்லை. ஆனால் துப்பாக்கிகள் வாங்குவது மிகவும் சுலபமானதாக இருக்கிறது. தேவையான பாதுகாப்பு வரையறைகள் இல்லை. துப்பக்கிகளை லாக் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற சட்டமே இங்கே பெரிய சர்ச்சையில் சிக்கி கடைசியில் அது நிறைவேறாமல் போனது. மிகவும் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கிகள் இருப்பது நிச்சயம் ஆபத்தானது.

12:26 AM, April 06, 2009
தமிழ் சசி | Tamil SASI said...

பதி,

இந்தியாவில் வளருகின்ற குழந்தைகளை விட அமெரிக்காவில் வளரும் குழந்தைகளுக்கு இந்தக் கருத்து மிகவும் பொருந்தும்.

இந்தியாவில் தீபாவளி போன்ற நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது ஒரு குழந்தைத் தனமான விளையாட்டாக உள்ளது. திருடன் போலீஸ் வீளையாட்டில் கூட அவ்வாறு சுட்டுக் கொள்வது போன்றவை உண்டு. ஆனால் அது அடுத்து கட்டத்திற்கு செல்வதில்லை. காரணம் நம் வீடுகளில் துப்பாக்கிகள் இல்லை.

ஆனால் அதே விளையாட்டு அமெரிக்காவில் முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவில் என்ன இதைப் போய் பெரிதாக சொல்கிறார்கள் என்பதாக பார்க்கிறார்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ளவர்கள் அந்த மாறுபட்ட கோணத்தை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்...

நன்றி...

1:18 AM, April 06, 2009
Anonymous said...

Building a portrait of New York gunman

Binghamton's police chief, Joseph Zikuski, said that until a month ago Wong had taken English classes at the immigration centre but quit after complaining that he had been made fun of.

Mr Zikuski said Wong felt other students had mocked him because of his poor English.

He also confirmed that Wong had recently lost his job at a company called Shop-Vac, which makes vacuum cleaners.

'Hard times'

Some people in Binghamton are now asking whether the tough economic times could have pushed him over the edge.

http://news.bbc.co.uk/2/hi/americas/7983968.stm

2:00 PM, April 06, 2009
பிளாட்டினம் said...

எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.

குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.

எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!

இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்

3:11 PM, April 06, 2009
Anonymous said...

சசி,

உண்மைதான், வீட்டில் பொடியன் தொலைக்காட்சி பார்க்கும்போதெல்லாம் ஏதாவது சுகிறமாதிரி காட்சிகள் வந்தால் மடமட வென்று மாற்றவேண்டியாதாக உள்ளது. விவரம் தெரியாத பருவத்தில் இன்னும் சாக்கிரதையாக இருக்கவேண்டுமோ என்ற பயம் வருகிறது...

துப்பாக்கி, கத்தி எதும் ப்ளாஸ்டிக்காக இருந்தாலும் கூட வாங்கித் தரக்கூடாது என்று ஒரு ஸ்டாண்டிங் ஆர்டர்! :)

--fd

3:44 PM, April 06, 2009
BR said...

தமிழ்மணம் விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.

5:30 PM, January 17, 2010
Anonymous said...

தமிழ் ஈழம் பற்றியோ, ஈழப் புலிகள் பற்றியோ, (அவர்கள் செய்த கொடுமைகள், அநியாயங்கள், அக்கிரமங்கள், ஈழப் போராட்டம் எனும் தலைப்பில் அவர்கள் செய்த கொடூரங்கள், இன்னும் ஏராளம்) அனைத்தையும் தொலைக்காட்சிகளிலோ, ரேடியோக்களிலோ கேட்கும் பார்க்கும் செய்திகளை வெய்து பின்னூட்டம் கூறாமல், யுத்தப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை குறிப்பாக முஸ்லிம்களை கிட்டுப் பார்த்தால் தெரியும். கிழியும் புலிகளின் உண்மையான திரை..

11:32 AM, June 22, 2011