காப்பீடு - ஒபாமா சீர்திருத்தம் ; கலைஞர் காப்பீடு திட்டம்

தமிழகத்தில் தொடர்ச்சியாக திமுக வெற்றிப் பெற்று வருவதற்கு கருணாநிதி அரசு முன்வைக்கும் நலத்திட்டங்களே காரணம் என திமுக தலைவர்கள்/தொண்டர்கள் முதல் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் என்.ராம் வரை அனைவரும் கூறி வருகின்றனர். கருணாநிதி முன்வைத்த பல நலத்திட்டங்களில் கலைஞர் காப்பீடு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சுமார் ரூ500 கோடி மதிப்பிலான இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.5 கோடி மக்கள் பயன்பெறுவதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவில் ஒபாமா முன்வைத்த காப்பீடுத் திட்டத்தை விட சிறந்தத் திட்டமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் பொங்க கூறுகிறார். அவர் அதற்கு கூறும் காரணம் காப்பீடுத் தொகையை தமிழகத்தில் அரசாங்கமே கொடுத்து விடுகிறது. அமெரிக்காவில் தனிநபர்களும், நிறுவனங்களும் கொடுக்கின்றன. மக்களுக்கு எந்தச் செலவும் இல்லாமல் தமிழகத்தில் காப்பீடு திட்டம் நிறைவேறுவதால் இது அமெரிக்காவை விட சிறந்தத் திட்டம் என்பது மு.க.ஸ்டாலின் அவர்களின் வாதம்.

ஆனால் சில அடிப்படை உண்மைகள் இங்கே தெளிவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசாங்கம் இந்த இலவச காப்பீத்திட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு தனியார் காப்பீடு நிறுவனங்களின் தாக்கம் பெரிய அளவில் இல்லை எனக் கூறலாம். தமிழகத்தில் சுகாதாரம் என்பது தனிநபர்களின் வசதியை பொருத்ததாக மட்டுமே இருந்தது என்பதும் உண்மை. இந்த நிலையில் மாற்றம் தேவைப்பட்டது என்பதும் உண்மை. ஆனால் அதனை அரசாங்கம் தன்னுடைய மருத்துவமனைகளைக் கொண்டு மேம்படுத்தாமல் ஏன் தனியார் காப்பீடு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே கேள்வி.

இது தவிர அமெரிக்காவை விட தமிழகத்தின் திட்டம் சிறந்தது என மு.க.ஸ்டாலின் கூறுவது சரியானது அல்ல. கலைஞர் காப்பீடு திட்டத்தின் தற்போதைய ஓட்டுச் சாதனை எதிர்காலத்தில் வேதனையாக மாறலாம். அதுவே அமெரிக்கா நமக்கு கற்றுத் தரும் பாடம் ஆகும். அமெரிக்க சுகாதார நலம், காப்பீடு நிறுவனங்களின் அசுரத்தனமானப் பிடியில் உள்ளது. பல அமெரிக்க ஜனாதிபதிகள் தொடர்ச்சியாக முயன்றும் காப்பீடு நிறுவனங்களின் பிடியை சுகாதார நலத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியவில்லை. சுகாதார நலத்தில் உள்ள காப்பீடு நிறுவனங்களை கட்டுப்படுத்தவே (To Regulate Insurance Companies) ஒபாமா சுகாதார நல மசோதாவைக் கொண்டு வந்தார். தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசாங்கமே நடத்தும் காப்பீடு திட்டத்தையும் (Public Option) ஒபாமா முன்வைத்தார். ஆனால் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த அமெரிக்காவில் அவரால் அதனைச் செய்ய முடியவில்லை. வலதுசாரிகளும், மிதவாதிகளும் தனியார் நிறுவனங்களை அரசாங்கம் நடத்தும் காப்பீடு நிறுவனம் அழித்து விடும் எனக்கூறி எதிர்த்தனர். இறுதியில் இத்தகைய அரசாங்கம் சார்ந்த காப்பீடு இல்லாமல் தான் ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறியது.
ஆனால் தமிழகத்திலோ காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு துறையில் காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நுழைக்கிறது கருணாநிதி அரசாங்கம். ஒபாமா செய்ய முனைவதற்கு நேர் எதிரானது கலைஞர் காப்பீடு திட்டம். அதாவது அமெரிக்காவில் எந்தச் சீர்கேடுகளை ஒபாமா சீர்திருத்த முனைகிறாரோ அதே சீர்கேட்டினை தமிழகத்தில் நுழைத்துக் கொண்டிருகிறது கருணாநிதி அரசாங்கம்.

தமிழகத்தின் மொத்தமுள்ள ஆறு கோடி மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர் காப்பீடு பெறும் பொழுது மருத்துவச் செலவுகள் படிப்படியாக ஏறத்தொடங்கும். அதற்குப் பலக் காரணங்கள் உள்ளன. காப்பீடு நிறுவனங்களின் நிர்வாகச் செலவுகள், லாபம் போன்றவை புதிதாக மருத்துவச் செலவுகளில் புகுத்தப்படுகிறது. இவை தவிர காப்பீடு பாலிசிகள் மூலம் செல்லும் பொழுது மருத்துவர்களும், மருத்துவமனைகளும் தங்களுக்கான வருமானத்தைப் பெருக்கி கொள்ள தேவையற்ற சோதனைகளை பரிந்துரைக்கின்றனர். காப்பீடு நிறுவனம் கொடுக்கப் போகிறது என நுகர்வோரும் இந்தக் கூடுதல் மருத்துவச் செலவுகள் குறித்து கண்டுகொள்வதில்லை. இத்தகைய அதிக மருத்துவச் செலவுகளை ஆரம்பத்தில் காப்பீடு பாலிசிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்களும், மருத்துவமனைகளும் செய்தாலும் எதிர்காலத்தில் இது பலருக்கும் பரவ வாய்ப்புகள் உள்ளது. பணம் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து வரும் தமிழகத்தில் இத்தகைய வாய்ப்பினை மறுக்க முடியாது. அதே போல காப்பீடு நிறுவனங்களும் மருத்துவமனைகளை காப்பீடு பாலிசி வைத்திருப்பவர்களையே சிகிச்சைக்கு எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கும். பாலிசிகள் மூலம் அதிக வருமானத்தை பெறும் வாய்ப்புகளை தனியார் மருத்துவமனைகள் கைவிடப்போவதில்லை. இவ்வாறு மருத்துவச் செலவுகள் படிப்படியாக அதிகரிக்கும். அரசாங்கம் வழங்கும் காப்பீடுகள் தவிர தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சலுகையாக காப்பீடுகளை வழங்குகின்றன. தமிழகத்தில் காப்பீடு வைத்திருப்போரின் தொகை அதிகரிக்கும் பொழுது மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். தற்பொழுது காப்பீடு தேவையில்லை என நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களும் எதிர்காலத்தில் காப்பீடு எடுக்க வேண்டிய நிலை நோக்கி தள்ளப்படுவார்கள். அதைத் தான் காப்பீடு நிறுவனங்கள் செய்ய நினைக்கின்றன. அதன் சோதனை பிசினஸ் மாடல் (Business Model) தான் தமிழகத்திலும் ஆந்திராவிலும் செயல்படுத்தப்படும் இந்த இலவச காப்பீடு திட்டங்களோ என கருத இடம் இருக்கிறது.

இது போகிறப் போக்கில் வரும் சந்தேகம் அல்ல. அமெரிக்காவில் காப்பீடு நிறுவனங்கள் செயல்படும் விதங்களை உற்று நோக்கும் பொழுது இவ்வாறு கருத இடம் இருக்கிறது. நான் இங்கே தமிழகத்தையும், அமெரிக்காவை ஒப்பிடவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். ஏனெனில் அமெரிக்க சூழலும், தமிழக சூழலும் முற்றிலும் வேறானவை. அதே நேரத்தில் உலகெங்கிலும் அமெரிக்க பாணியிலான பொருளாதாரம், அமெரிக்க பாணியிலான தாக்கங்கள் உள்ளதை மறுக்க முடியாது. அத்தகைய தாக்கம் காப்பீடில் நுழையும் பொழுது ஆபத்தாகவே முடியும். தமிழகத்தில் காப்பீடு நிறுவனங்களும் அது சார்ந்து தனியார் மருத்துவமனைகளும் செயல்படும் விதம் குறித்து மிக விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரை அமெரிக்கா சுகாதாரம் குறித்தே ஆகும். அமெரிக்காவில் சமீப நாட்களில் மிக அதிகமாக அலசப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட ஒரு விடயம் - ஓபாமாவின் சுகாதார நல மசோதா. இந்த அமெரிக்க அனுபவத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியப் பாடம் நிறைய இருப்பதாக நான் நினைக்கிறேன். தனியார் காப்பீடு நிறுவனங்களை தமிழகத்தில் எதிர்க்க வேண்டிய அவசியத்தை அமெரிக்கா குறித்த இந்தக் கட்டுரை வழங்கும் என்பது என் எதிர்பார்ப்பு.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா - பிளவு பட்டு நிற்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் முதல் கறுப்பின குடியரசுத் தலைவராக பதவியேற்று வரலாறு படைத்த பராக் ஒபாமா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மற்றொரு வரலாறு படைத்தார். அமெரிக்க வரலாற்றில் பல குடியரசு தலைவர்கள் செய்ய முயன்று தோற்றுப் போன சுகாதார நல மசோதா - Health Care Reform கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டவடிவம் பெற்றது. அமெரிக்காவின் காங்கிரசில் நிறைவேற்றப் பட்ட இந்த மசோதாவில் ஒபாமா கையெழுத்திட்டார்.

இந்த வெற்றியை ஒபாமாவும், ஆளும் ஜனநாயகக் கட்சியினரும் (Democratic Party), லிபரல்களும் கொண்டாடி வரும் சூழலில், எதிர்க்கட்சியினரான குடியரசுக் கட்சியினரும், கன்சர்வேட்டிவ்களும் ஓபாமா அமெரிக்காவை மோசமான பாதையில் அதாவது சோவியத் சோசலிச பாணியில் கொண்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற ஊடகங்கள் (குறிப்பாக ஃபாக்ஸ் தொலைக்காட்சி) இன்னும் ஒரு படி மேலே சென்று ஒபாமா, ஹவுஸ் சபாநாயகர் (House Speaker) நான்சி பிலோசி, செண்ட் பெரும்பான்மைக் கட்சித் தலைவர் ஹாரி ரீட் போன்றோர் தங்களது தீவிர இடதுசாரி நிலைப்பாடினை அமெரிக்கா மீது திணிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இவர்கள் மூவரையும் மாவோயிஸ்ட்கள் என்று கூட ஃபாக்ஸ் தொலைக்காட்சி வர்ணித்தது. ஒபாமா ஒன்றும் பெரிய புரட்சி செய்து விட வில்லை. சோசலிசம் என்று புகார் சொல்லப்படும் ஒபாமாவின் இந்தப் புதிய மசோதா முதலாளித்துவ காப்பீடு நிறுவனங்களுக்கே இன்னும் அதிகளவில் நுகர்வோர்களை பெற்று தருகிறது. அதாவது இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது சுமார் 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை காப்பீடு நிறுவனங்கள் பெறும்.

உண்மை இவ்வாறு இருக்க வலதுசாரிகளின் கூக்குரல் காரணமாக அமெரிக்கா இன்று பிளவு பட்டு நிற்கிறது. இடதுசாரிகள் ஒரு புறமும், வலதுசாரிகள் ஒரு புறமும் என அமெரிக்கா பிளவு பட நடுவில் சிக்கியுள்ள பலருக்கு உண்மை என்ன ? பொய்யான பரப்புரை என்ன என புரியவில்லை. கன்சர்வேட்டிவ் அமைப்புகள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டன. இந்த மசோதா நிறைவேறும் தினத்தில் இதனை எதிர்த்து கேபிடல் ஹில்லில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சில கறுப்பின காங்கிரஸ் உறுப்பினர்களை (பாராளுமன்ற உறுப்பினர்கள்) நீக்ரோக்கள் என்று கூக்குரல் எழுப்பி உள்ளனர். நீக்ரோ எனக் கூறுவது அமெரிக்காவில் நிறவெறி (Racism) என்பதாகவே கருதப்படுகிறது. ஒபாமாவும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே எதிர்க்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது நினைவிருக்கலாம்.

இவை தவிர வலதுசாரிகள் மேலும் சில வன்முறை சம்பவங்களை அடுத்த சில தினங்களில் அரங்கேற்றினர். 10க்கும் மேற்பட்ட ஆளும் ஜனநாயக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு (பாரளுமன்ற உறுப்பினர்கள்) கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சிலரது வீடுகள் தாக்கப்பட்டன. துப்பாக்கிகளை தூக்கப் போவதாக சில வலதுசாரி அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன (அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்கு பஞ்சமே இல்லை - இது குறித்த என்னுடையப் பதிவு துப்பாக்கிகள் மீதான காதல்). அடுத்து வரும் தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் இந்தச் சட்டத்தை திரும்பப் பெறப்போவதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது. இதனை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கப் போவதாகவும் அக் கட்சி அறிவித்துள்ளது. பதிலுக்கு ஒபாமாவும் முடிந்தால் செய்துப் பாருங்கள் என சவால் விடுத்துள்ளார். ஒபாவிற்கு வீட்டோ அதிகாரம் (Veto Power) உள்ளதால் குடியரசு கட்சியினர் கோஷம் வெற்று கோஷமாகவே இருக்கப் போகிறது. ஒபாமாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி ஒரு மசோதாவை சட்டமாக்க குடியரசுக் கட்சிக்கு 67 செண்ட் உறுப்பினர்களும், 290 ஹவுஸ் உறுப்பினர்களும் தேவை. தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலில் இதற்குச் சாத்தியமில்லை.

இரு கட்சிகளையும் ஒன்றிணைத்து அமெரிக்காவிலும், வாசிங்டன் அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரப்போவதாக கூறிய ஓபாமாவிற்கு தற்போதைய அமெரிக்க சூழல் ஒரு பின்னடைவே ஆகும். ஆனாலும் ஒபாமா தன்னால் முடிந்த அளவுக்கு குடியரசுக் கட்சியை அரவணைத்து செல்லவே முயன்றார். ஆனால் ஒபாமாவின் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்ட குடியரசுக் கட்சின் முன் ஒபாமாவின் முயற்சிகள் வெற்றிப் பெற வில்லை. ஓபாமா இன்று தன்னுடைய ஜனநாயக் கட்சியை மட்டுமே சார்ந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஏன் இத்தனைக் கூச்சல் ? ஆர்ப்பாட்டம் ?

ஆட்சியில் அமர்ந்த உடன் முந்தைய குடியரத் தலைவராக இருந்த ஜார்ஜ் புஷ் போல இல்லாமல் ஒபாமா உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார். தன்னுடைய முக்கிய திட்டமாக இந்தச் சுகாதார நலத் திட்டத்தை ஒபாமா அறிவித்தார். ஏற்கனவே பல ஜனநாயக் கட்சி குடியரசுத் தலைவர்கள் இதனை செய்ய முயன்று தோல்வியே அடைந்தனர். பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் இதனை நிறைவேற்ற முனைந்தனர். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் அதீத கூக்குரல், எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. ஒபாமாவும் அத்தகைய எதிர்ப்பையே எதிர்கொண்டார். சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்த விவாதங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஒபாமாவின் அனுபவமின்மையும், தடுமாற்றமும் வெளிப்படையாகவே தெரிந்தது. இந்த மசோதா நிறைவேறப்போவதில்லை என்பதான சூழ்நிலையே இருந்தது. ஒபாமா தன் கட்சியின் தீவிர இடதுசாரிகள், மிதவாதிகள், எதிர்க்கட்சியினர், வலதுசாரிகள் இடையே சிக்கித் தவித்தார். இந்த மசோதாவில் தோல்வி அடைந்தால் ஒபாமாவிற்கு மிகப் பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். இந்த தோல்வியில் இருந்து மீள ஒபாமா மிகவும் கடினப்பட வேண்டி இருந்திருக்கும். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஒபாமாவின் சுகாதார நல மசோதா நிறைவேறி இருக்கிறது. இதற்கு காரணம் ஒபாமாவின் தொடர்ச்சியான முயற்சியும், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசியின் தலைமைப் பண்புகளும் தான். ஆனால் இந்த மசோதா நிறைவேறியதால் வலதுசாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.

அப்படி என்ன தான் உள்ளது இந்த மசோதாவில் ? ஏன் அதற்கு இத்தனை எதிர்ப்பு ?

முதலாளித்துவத்தின் ஆணிவேரான அமெரிக்காவில் நம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் முதலாளித்துவத்தின் பிடி இருக்கும். மிக எளிதாக இருக்கும் நம் நாட்டின் எத்தனையோ அம்சங்கள் இங்கு இவ்வளவு குழப்பமாகவும், சிக்கலாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எனக்கு தோன்றும். அப்படி சிக்கலாக இருக்கும் பலவற்றில் முக்கியமானது சுகாதாரம். உதாரணமாக நம் ஊரில் நமக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஏதேனும் ஒரு மருத்துவமனைக்கு செல்கிறோம். மருத்துவமனை நிர்ணையிக்கும் கட்டணத்தைச் செலுத்துகிறோம். மருந்து வாங்க வேண்டுமென்றால் ஒரு மருந்தகத்திற்கு செல்கிறோம், மருத்துவர் எழுதித்தரும் மருந்துக்கு காசு கொடுத்து வாங்குகிறோம். அவ்வளவு தான்.

ஆனால் அமெரிக்காவில் அது அத்தனை சுலபம் அல்ல. மருத்துவச் செலவுகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும். பலர் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக கடனாளியாகி உள்ளனர். இத்தகைய நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் சுகாதார காப்பீடு (Health Insurance) எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதாவது என்றைக்காவது நமக்கு நேர சாத்தியம் உள்ள உடல்நலக் கேடுகளுக்காக முன்கூட்டியே ஒவ்வொரு மாதமும் கட்டணம் - Premium செலுத்த வேண்டும்.

இத்தகைய காப்பீடுகளை எடுப்பதற்கு நாம் தனியாக காப்பீடுச் சந்தையில் சென்று எடுக்கலாம். நாம் பணியாற்றும் நிறுவனம் மூலமாகவும் காப்பீடுகளை எடுக்கலாம். இதில் பலரும் அதிகம் பயன்படுத்துவது தங்களின் நிறுவனங்களின் மூலமான காப்பீடுகளையே (Employer Based Insurance). அதாவது ஒரு நிறுவனம் தன் பணியாளர்களுக்கு வழங்கும் சலுகையாக இந்தக் காப்பீடு வழங்கப்படுகிறது. நாம் ஒரு சிறு தொகையை செலுத்த, நிறுவனம் தன் பங்கிற்கு ஒரு தொகையை செலுத்தி இந்தக் காப்பீடுகள் வழங்கப்படும் (Group Policy). நாம் செலுத்தும் தொகை ஒவ்வொரு நிறுவனத்திற்கும், பாலிசிகளுக்கும் ஏற்றவாறு வேறுபடும். நான் 250 டாலர் தொடங்கி 400 டாலர் வரை ஒவ்வொரு மாதம் செலுத்தி இருக்கிறேன். அதாவது கணவன், மனைவி இரு குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு நிறுவனம் சலுகையாக வழங்கினாலும் கூட நாம் சுமார் 200 டாலர் முதல் 400 டாலர் வரை நம் கையில் இருந்து செலுத்த வேண்டும். வீட்டு வாடகை, வீட்டுச் செலவுக்கு அடுத்து மிக அதிகளவு கட்டணம் இந்தக் காப்பீட்டுக் கட்டணம் ஆகும்.

ஆனால் பிரச்சனை என்னவென்றால் அனைத்து நிறுவனங்களுமே இதனை வழங்குவதில்லை. பலச் சிறிய நிறுவனங்கள் இவ்வாறான காப்பீடுகளை வழங்குவதில்லை. காரணம் அது மிக அதிக அளவிலான நிதிச்சுமையை அந் நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகின்றன. நான் கடந்த வருடம் என் இந்திய நிறுவனத்தை விட்டு விலகி தனியாக ஒரு கன்சல்டண்டாக வேலைப் பார்த்த பொழுது ஒரு நிறுவனம் சார்ந்த காப்பீடு எனக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் சார்ந்தக் காப்பீடு (Employer Based Insurance) என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை அப்பொழுது தான் உணர்ந்தேன்.

ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்து அதன் மூலம் காப்பீடு பெரும் பொழுது கிடைக்கும் பலச் சலுகைகள் காப்பீட்டுச் சந்தைக்கு சென்று நாம் தனியாக பெறும் பொழுது கிடைக்காது. முதல் பிரச்சனை மிக அதிக விலை. நான் ஒரு நிறுவனத்தின் பணியாளராக இருந்த பொழுது காப்பீட்டுத் தொகையாக 400-500டாலர் செலுத்தி இருந்தால் காப்பீடுச் சந்தையில் அதன் விலை 1500 டாலர் என்றளவில் இருக்கும். அதாவது நம் சம்பளத்தில் மிகப் பெரிய தொகையை இதற்குச் செலுத்த வேண்டும்.

எனக்கோ, என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ சுகாதாரப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதால் மிக அடிப்படையான ஒரு பாலிசியை தேர்தெடுத்தேன். அந்த அடிப்படையான காப்பீட்டின் தொகை மாதம் ஒன்றுக்கு சுமார் 850-900 டாலர்கள். அடிப்படையான காப்பீடு என்றால் மிகவும் அடிப்படையானது (Very Basic). ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைகளை இந்தக் காப்பீடுகள் முலம் பெற முடியாது.

இங்கே இருக்கும் பிரச்சனை என்னவென்றால் காப்பீட்டிற்கான மிக அதிகளவிலான கட்டணம் - ப்ரீமியம். இத்தகைய அதிகளவிலான தொகையை பலரால் செலுத்த முடியவில்லை. அவ்வாறு செலுத்த முடியாத சூழ்நிலையில் அவர்களுக்கு காப்பீடு இல்லை என்பதான சூழ்நிலை உள்ளது. இது தவிர நல்ல உடல்நலத்துடன் இருக்கும் பலர் காப்பீடு எடுப்பதில்லை. இவ்வாறு சுமார் 45 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் உள்ளனர்.

காப்பீடு இல்லாவிட்டால் என்ன பிரச்சனை ?

அமெரிக்காவில் மருத்துவக் கட்டணங்கள் மிகவும் அதிகம். இதன் காரணமாக காப்பீடு இல்லாதவர்கள் தங்கள் மருத்துவத்திற்கான சிகிச்சைகளை பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்காவில் கடன்சுமை காரணமாக திவாலாகும் தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணங்களைச் செலுத்த முடியாமலேயே திவாலாகின்றனர்.

அப்படியெனில் அமெரிக்காவில் அரசாங்கம் எந்த சுகாதார நலனையும் வழங்குவதில்லையா ?

அரசாங்கம் சில சுகாதார நலன்களை வழங்குகிறது. ஆனால் அது அனைவரையும் உள்ளடக்குவதில்லை. அமெரிக்க அரசாங்கம் Medicare, Medicaid போன்ற சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. Medicare 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பல்வேறு சுகாதார நலத்திட்டங்களை வழங்குகிறது. Medicaid வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும், வருமானம் குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் என சில பிரிவினரை உள்ளடக்கி உள்ளது. ஆனால் காப்பீடு இல்லாத 45 மில்லியன் மக்கள் இந்தப் பிரிவில் வருவதில்லை. அதாவது அரசாங்கம் நிர்ணயிக்கும் வருமானத்தை விட அதிகமான வருமானத்தை பெற்று வருகிறார்கள். ஆனால் சுகாதார காப்பீடு பெறும் அளவிற்கான வருமானம் இவர்களுக்கு இல்லை.

காப்பீட்டுத் தொகை இவ்வளவு அதிகமாக செலுத்தும் பொழுது, நமக்கு அனைத்து சுகாதார நலன்களும் கிடைக்கிறதா என்றால்...இல்லை என்பதே உண்மை.

காப்பீட்டு நிறுவனங்கள் பணத்தை விழுங்கும் முதலைகள். பண முதலைகள். தனியார் நிறுவனங்கள் நம் ரத்தத்தை உறிஞ்சும் என இந்தியாவில் இடதுசாரிகள் பேசுவதை வெறும் மேடை முழக்கமாக மட்டுமே கேட்டிருந்தால், அமெரிக்காவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். நம்மிடம் ஒவ்வொரு மாதமும் ப்ரீமியம் பெறும் காப்பீடு நிறுவனங்கள் நம்முடைய அத்தனை மருத்துவ தேவையையும் நிறைவேற்றுவதில்லை. உதாரணமாக ஒருவருக்கு திடீரென்று கேன்சர் என்ற பெரிய நோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இது வரை நலமுடன் இருந்த பொழுது அவரிடம் பணத்தை ப்ரீயமாக பெற்ற காப்பீடு நிறுவனம் அவரை எந்தக் கேள்வியும் இல்லாமல் காப்பீட்டில் இருந்து நீக்க முடியும் (சில மாநிலங்களில் இவ்வாறு செய்ய முடியாது. உதாரணமாக நான் இருக்கும் நியூஜெர்சியில் யாருக்கும் காப்பீடு மறுக்க முடியாது. ஆனால் நியூஜெர்சியில் டெக்சஸ் மாநிலத்துடன் ஒப்பிடும் பொழுது கட்டணம் அதிகம்).

இது தவிர இன்னும் பல தில்லுமுல்லுக்களை காப்பீடு நிறுவனங்கள் செய்து வருகின்றன. உதாரணமாக ஒருவருக்கு காப்பீடு எடுக்கும் முன்பு அல்சர் பிரச்சனை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். இவ்வாறான பிரச்சனைகள் இருந்தால் தான் மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அதனை ஈடுசெய்ய காப்பீடு எடுக்க வேண்டும். ஆனால் காப்பீடு எடுத்தால் ப்ரீமீயத்தை ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் அல்சர் சிகிச்சைக்கான மருத்துவச் செலவை மட்டும் கொடுக்க மாட்டார்கள். ஏனெனில் Pre-existing conditions not covered. அதாவது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டு பணம் கிடைக்காது. புதியதாக ஏதேனும் நோய் வந்தால் கிடைக்கும். நோய் தீவிரமாக இருந்தால் காப்பீடு மொத்தமாக நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

இவையெல்லாம் ஏதோ செய்திகளில் படித்து, தொலைக்காட்சியில் பார்த்து எழுதப்படுவதில்லை. என்னைச் சுற்றியுள்ள பலருக்கும் நேர்துள்ளது. எனக்கும் நேர்ந்துள்ளது. வேலையில் இருக்கும் வரை காப்பீடு இருக்கும். வேலையை விட்டு விலகினால் காப்பீடு இருக்காது (COBRA என்ற ஒன்று உண்டு. அது தனிக்கதை. அதிலும் பலச் சிக்கல்கள்). நாம் தான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறோமே காப்பீடு எடுக்காமல் சில மாதங்கள் இருக்கலாம். காப்பீடுத் தொகையை மிச்சப்படுத்தலாம் என ஒரு முறை காப்பீடு எடுக்கவில்லை. எப்பொழுதுமே இத்தகைய நேரத்தில் தான் உடல்நலக் கேடுகள் அமெரிக்காவில் வரும். கடந்த பல வருடங்களாக காப்பீடு செலுத்திய பொழுது ஒரு ஜூரம் என்று கூட மருத்துவரிடம் நான் சென்றது கிடையாது. மனைவி, குழந்தைகளுக்காக மட்டுமே மருத்துவரிடம் சென்று இருக்கிறேன். ஆனால் காப்பீடு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் சரியாக உடல்நலக் கேடுகள் ஏற்பட்டன. மருத்துவரிடமும் செல்ல முடியாது. என்ன செய்வது என புரியாமல் தவித்து விட்டேன். நண்பர் ஒருவர் மூலமாக ஒரு மருத்துவரிடன் இருந்து மருந்து பெற்றேன்.


இவையெல்லாம் ஒரு சில பிரச்சனைகள் மட்டுமே. இன்னும் பல உள்ளன. இவை தவிர பல் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Dental Insurance). கண் சிகிச்சைக்கு தனி காப்பீடு (Vision Insurance) என ஒரு பெரிய பட்டியல் உண்டு.

***************************

இவ்வாறான பலப் பிரச்சனைகளை சரி செய்ய ஒபாமா முன்வைத்த திட்டம் தான் சுகாதார நல சீர்திருத்த மசோதா - Healthcare Reform. சுமார் ஒரு வருடத்திற்கும் முன்பு ஒபாமா இந்த திட்டத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்ததில் இருந்து தொடர்ச்சியான பிரச்சனைகள். ஒபாமா அமெரிக்காவின் சுகாதார நலத்தை அரசாங்கத்தின் கைகளுக்குள் கொண்டு வர முனைவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒபாமாவும் இடதுசாரிகளும் அரசாங்கம் வழங்கும் சுகாதார காப்பீடுகளை (Public Option) முன்வைத்தனர். இதன் மூலமாகவே தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ப்ரீமியத்தை குறைக்க முடியும் என்பது ஒபாமாவின் வாதம். ஆனால் இதனை வலதுசாரிகள் எதிர்த்தனர். இது தனியார் நிறுவனங்களை அழித்து விடும் என்பது அவர்களின் வாதம். அமெரிக்காவில் தனியார் நிறுவனங்கள் மீது கன்சர்வேட்டிவ்களுக்கு அப்படியொரு காதல். இந்த மசோதா அமெரிக்காவில் இருக்கும் அனைவரும் காப்பீடு வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. அது தங்களுடைய தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக அமையும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தங்களுக்கும் தங்களுடைய மருத்துவருக்கும் இடையில் அரசாங்கம் தலையிட எந்த உரிமையும் இல்லை என்பது மற்றொரு வாதம். ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே மிதவாதிகள், தீவிர இடதுசாரிகள் இடையே கருத்து வேறுபாடுகள் என விவாதம் ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.

இந்த விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஒபாமா தன்னுடைய திட்டம் இது தான் என்ற தீர்மானமான ஒரு வடிவத்தை காங்கிரசிடம் அளிக்கவே இல்லை. ஒரு மேலோட்டமான வரையறையை மட்டும் செய்து விட்டு மசோதாவை உருவாக்கும் பொறுப்பை காங்கிரசிடம் ஒப்படைத்து விட்டார். இதுவே பல குழப்பங்களுக்கு காரணமாக அமைந்து. ஒபாமா இவ்வாறு செய்வதற்கு ஒரு முக்கிய காரணம் - பில் க்ளிண்டன் தோல்வியில் கற்றப் பாடம். தற்பொழுது ஒபாமாவின் முக்கிய ஆலோசகர் ராகம் இமானுவல். இவர் பில் க்ளிண்டன் ஜனாதிபதியாக இருந்த பொழுதும் வெள்ளை மாளிகையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது பில் க்ளிண்டன் - ஹில்லரி க்ளிண்டன் தங்களுடைய திட்டமாக ஒரு சுகாதார மசோதாவை உருவாக்கி அதனை நிறைவேற்றுமாறு காங்கிரசை பணித்தனர். காங்கிரஸ் அதனை அப்படியே நிராகரித்தது. எனவே ஒபாமா அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நோக்கமாக ஒரு வரையறையை மட்டும் உருவாக்கி விட்டு முழு மசோதாவையும் காங்கிரசே செய்யுமாறு ஒபாமா பணித்தார். இதன் மூலம் பலரது யோசனைகளையும் உள்ளடக்கி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து பிரிவினரது ஆதரவையும் பெறலாம் என்பது ஒபாமாவின் திட்டம். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இயலாத காரியம் என ஒபாமா உணர்ந்தனர். விவாதங்களும், எதிர் விவாதங்களும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

பல தடைகளுக்குப் பிறகு இறுதியாக கடந்த வாரம் நிறைவேறிய ஒபாமாவின் சுகாதார நல மசோதாவின் சில முக்கிய அம்சங்கள்.

- இந்தச் சட்டம் அமலுக்கு வரும் பொழுது (2014ல்) அனைவரும் கட்டாயமாக காப்பீடு வைத்திருக்க வேண்டும். தற்பொழுது இளைஞர்களும், நல்ல அரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடு எடுப்பதில்லை. காரணம் மருத்துவ தேவையே இல்லாத பொழுது காப்பீடு தேவையில்லை என்பதே. அதனால் மருத்துவத் தேவை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடுகளை நாடும் பொழுது காப்பீடுத் தொகை அதிகரிக்கிறது. மாறாக நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளவர்களும் காப்பீடுகளை எடுக்கும் பொழுது அதில் பெறும் வருவாயைக் கொண்டு உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களின் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யலாம். இதனால் ப்ரீமியம் அதிகரிக்கப்படாமல் ஒரே சீராக வைத்திருக்க முடியும். ஆனால் இதனை பலர் எதிர்க்கின்றனர். காப்பீடு எடுப்பதை கட்டாயமாக்குவது தாங்கள் உயிர் வாழ்வதற்கே ஒரு விலை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துவதாக இவர்கள் கூறுகின்றனர். இந்த வாதத்தில் இருக்கும் உண்மையை மறுப்பதற்கில்லை.

- காப்பீடு நிறுவனங்களின் மனிதத்தன்மையற்ற போக்கிற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்றால் - Children with Pre-existing conditions are not covered by Insurance. தற்பொழுது ஆரோக்கியமில்லாமல் உள்ள குழந்தைகளின் மருத்துவச்செலவை காப்பீடு மூலம் பெற முடியாது. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ள குழந்தைகளின் மருத்துவச் சிகிச்சைக்காக பெற்றோர்கள் திண்டாடும் நிலைமை உள்ளது. இந்தச் சட்டம் இதனை தடை செய்கிறது. இது இந்த வருடம் முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளின் மூலம் இந்த அமலாக்கத்தை 2014 வரை கடத்த காப்பீட்டு நிறுவனங்கள் முயலுகின்றன.

- 26 வயது வரை தங்களின் பெற்றோர்களின் காப்பீடுகளிலேயே இருந்து கொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. தற்பொழுது 19வயதுக்கு மேல் தனி காப்பீடுகளை எடுக்க வேண்டும். பெற்றோர்களின் காப்பீடுகளில் இருக்க முடியாது. இது பலப் பெற்றோர்களுக்கு கூடுதல் செலவாக உள்ளது. இந்த வருடம் முதல் அமலுக்கு வரும் இந்தப் பிரிவு பல பெற்றோர்களிடத்தில் வரவேற்பினை பெற்றுள்ளது.

- நோய் கண்டறியப்பட்டவுடன் காப்பீடுகளில் இருந்து நீக்குவதை இந்தச் சட்டம் தடை செய்கிறது. இது தவிர நோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதிரியான ப்ரீமியம், நோய் இல்லாதவர்களுக்கு வேறு மாதிரியான ப்ரீமியம் போன்றவற்றையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது

- ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கு (Pre-existing Conditions) தற்பொழுது காப்பீடு வழங்கப்படுவதில்லை. அதனையும் இந்தச் சட்டம் தடைசெய்கிறது. இது 2014ல் அமலுக்கு வருகிறது.

- இவை தவிர அமெரிக்காவின் பற்றாக்குறையை இந்த மருத்துவ நல மசோதா குறைக்கும் என கூறப்படுகிறது.

ஒபாமாவின் சுகாதார நல மசோதா இவ்வாறு பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி இருந்தாலும் பெருவாரியான அமெரிக்க மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பே இருந்து வருகிறது.

அரசாங்கமே நடத்தும் காப்பீடு இல்லாத இந்த திட்டத்தால் பெரிய அளவு நன்மை இல்லை என்றே நான் நினைக்கிறேன். மாறாக இந்த திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கே அதிக நன்மையை கொடுக்கும். அதாவது 32 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை இந்தக் காப்பீடு நிறுவங்கள் பெறும். காப்பீடு நிறைவேறிய வாரத்தில் இந்தக் காப்பீடு நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் உயர்ந்தன என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். காப்பீடுகளின் ப்ரீமியத்தை இந்தத் திட்டம் எந்த வகையிலும் குறைக்காது என்பது என்னுடய நிலைப்பாடு. அதே நேரத்தில் இந்த மசோதா ஒரு முதல் படி தான் என்றும் Public Option போன்றவை எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம் எனவும் ஒரு வாதம் உள்ளது. அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. வரும் நவம்பர் தேர்தலில் ஆளும் ஜனநாயக் கட்சி பின்னடைவைச் சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் இது அடுத்தச் சில வருடங்களில் சாத்தியமற்றதே.

இந்த மசோதாவிற்கு எதிராக பல வாதங்கள் கூறப்பட்டாலும் காப்பீடு நிறுவனங்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட மிக முக்கியமான ஒரு மசோதா என்றளவில் ஒபாமாவின் இந்த மசோதா ஆதரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.