வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, October 20, 2011

தமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் வரை

“தமிழில் எழுதலாம் வாருங்கள்” என்பதே தமிழ்மணத்தின் முழக்கமாக ஆரம்ப காலங்கள் முதல் இன்றைக்கு வரை இருந்து வருகிறது. தமிழ் வலைப்பதிவு  பெருகுவதற்கு ”ஆரம்பகாலங்களில்” தமிழ்மணம் ஒரு முக்கிய காரணம் என்பதை பரவலாக அனைவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். காரணம் தமிழின் முதல் வலைத்திரட்டி என்ற பெருமை தமிழ்மணத்திற்கு உண்டு. நண்பர் காசி அதனை முதன் முதலில் உருவாக்கினார். 2003ல் இருந்து கூகுள் குழுமங்களிலும்,  வலைப்பதிவுகளிலும் வாசகனாக மட்டும் இருந்த எனக்கு எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது தமிழ்மணம் தான்.

2004ல் தமிழ்மணம் எனக்கு முதன் முதலில் அறிமுகமான பொழுது வலைப்பதிவிற்கு வாசகர்களை கொண்டு வந்து சேர்க்கும் தமிழ்மணம் எனக்கும் வாசகர்களை கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலேயே எழுதத் தொடங்கினேன். 2004ல் இருந்து 2006வரை தமிழ்மணத்தை ஒரு பயனாளனாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். 2006ல் இருந்து தான் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறேன். தமிழ்மணத்தை நண்பர் காசியிடம் இருந்து பெற்று "தமிழ் மீடியா இண்டர்நேஷனல்" என்ற தன்னார்வ நிறுவத்தை உருவாக்கிய பொழுது தான் நான் இதில் இணைந்தேன். எனவே நான் முதலில் ஒரு வலைப்பதிவன். பிறகு தான் நிர்வாகி. தமிழ்மணத்தை ஒரு வாசகர், பதிவர் நிலையில் இருந்தும் பார்த்திருக்கிறேன். நிர்வாகியாகவும் பார்த்து இருக்கிறேன். இரண்டு பார்வைக்கும் இரு வேறு பரிமாணங்கள் உண்டு.

தமிழ்மணம் தொடங்கிய பயணத்தில் தமிழ் வலைப்பதிவு உலகம் வேகமாக விரிவடைந்தது. தமிழ்மணத்தை தொடர்ந்து மறைந்த சாகரன் தேன்கூடு திரட்டியை உருவாக்கினார். 2006ல் நண்பர் குழலி தமிழ்வெளியும், பிறகு நண்பர் வெங்கடேஷின் திரட்டி போன்றவையும் வந்தன. சமீப ஆண்டுகளில் பிலிக்கை அடிப்படையாக கொண்டு பல புக்மார்க்கிங் தளங்களும் வந்தன. தமிழ் எழுதுவது எப்படி என கடினப்பட்டு தேடிக் கொண்டிருந்த காலம் மறைந்து இன்றைக்கு இணைய உலகம் முழுவதிலும் “தமிழ்” விரிவடைந்து விட்டது. இதற்கு காரணமானவர்கள் பலர். தேனீ எழுத்துரு உருவாக்கிய உமர் வலைப்பதிவுகளில் தமிழ் தெரிய வழிவகுத்தார். சுரதா, முகுந்த் போன்ற நண்பர்கள் தமிழ் தட்டச்சியை எளிதாக்கினர். குறிப்பாக முகுந்த்தின் இ-கலப்பையை கொண்டு தான் தமிழ் வலைப்பதிவுகளில் உழுது கொண்டிருந்தோம். காசி ஆரம்பித்த தமிழ்மணம் வலைப்பதிவுகளை பெருக்கியது. இவர்கள் எனக்கு அறிமுகமானவர்கள். இவர்களை தவிர இன்னமும் எண்ணற்றோர் தமிழை இணையத்தில் கொண்டு வர உழைத்திருக்கிறார்கள்.

இந்த உழைப்பின் மூலமான தமிழின் பரவல் மகிழ்ச்சியை தருகிறது. பேஸ்புக், கூகுள் ப்ளஸ், டிவிட்டர் என இன்றைக்கு தமிழை சுலபமாக எங்கும் நுழைக்க முடிகிறது. இந்த வளர்ச்சி தமிழை இணைய வெளியெங்கும் பரவலாக்கியுள்ள போதிலும் தமிழ் எழுத்து உலகிற்கு இது ஆரோக்கியமானது தானா என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது. 2004ல் தொடங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்த பலர் இன்று பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் முடங்கிப் போய் விட்டார்கள். பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களை வெறும் அரட்டை தளங்களாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. வலைப்பதிவில் இருக்கிற ”எழுத்து சுகம்” இந்த சமூகத் தளங்களில் கிடைப்பதில்லை.

************

பிரபல பதிவர்கள் என்ற சொற்றொடர் தற்பொழுது வலைப்பதிவுகளில் பிரபலமாக உள்ளது. பிரபல பதிவர் என்ற இடத்தைப் பிடிக்க பலத்த போட்டியும் நிலவுகிறது.  ஆனால் உண்மை என்னவென்றால் வலைப்பதிவில் பிரபல பதிவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கால ஓட்டத்தில் வாழ்க்கைச் சக்கரத்தில் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கையில் நகர முடியாது.

நானும் வலைப்பதிவு செய்து கொண்டே இருந்த காலத்தில் வாழ்க்கையில் நகரவில்லை. வாழ்க்கையில் நகர வேண்டும் என முடிவு செய்த பின்பு வலைப்பதிய நேரமில்லை. இப்படி பிரபல பதிவர்களாக இருந்து இன்று வலைப்பதிவில் காணாமல் போன நிறையப் பேரினை தெரியும். எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக செய்யாத யாரும் வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து கொண்டிருப்பது கடினம். வருடக்கணக்கில் தொடர்ச்சியாக வலைப்பதிந்து வருபவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக கூட இருக்கும். ஆனாலும் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கு முழு நேர தொழில் எழுத்து அல்ல. எழுத்து ஒரு ஆர்வம் மட்டுமே. சமூகம் மீதான நம்முடைய பார்வையை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடம். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் அந்த ஓட்டத்தினூடே பகிர்ந்து கொள்ள டிவிட்டரும், பேஸ்புக்கும், கூகுள் பஸ்சும் தான் சுலபமாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த ஊடகங்களில் இருக்கும் மாயையும், எழுத்தில் இருக்கும் போதையும் அதனை எழுதும் பொழுது தான் தெரிகிறது.

இப்படியான வாழ்க்கைச் சக்கரத்தால் தான் பதிவர்கள் வலைப்பதிவில் இருந்து மறைவதும், புதியவர்கள் நுழைவதும் நடந்து கொண்டே இருக்கிறது. எனவே நாங்கள் தான் வலைப்பதிவர்கள். எங்களைச் சார்ந்து தான் எல்லாமும் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒரு வலைப்பதிவருக்கு வாசகர்கள் தேவை என்றால் திரட்டிகள் தேவை. திரட்டிகள் ரயில்கள் போன்றவை. ரயில்களில் புதியவர்கள் ஏறுவதும், பழையவர்கள் இறங்குவதும் இயல்பாக நடப்பவை. ரயில்களில் ஏறுபவர்கள் வேண்டுமானால் மாறலாம். ஆனால் ரயில்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கும் - For men may come and men may go. We will go on forever.

பதிவர்களே மாறிக் கொண்டே இருக்கும் சூழலில் வலைப்பதிவர்களாக இருந்து தமிழ்மணத்தை நிர்வாகம் செய்யும் நாங்கள் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து நிற்பதே ஒரு இமாலய சாதனை தான். இதனை ஏதோ தற்பெருமையாக சொல்ல வில்லை. ஒரு தளத்தினை நடத்தும் எவரும், நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்வார்கள். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் இடையே தமிழ்மணத்தினை நடத்திக் கொண்டிருக்க காரணம் தமிழ்மணம் ஆரம்ப காலத்தில் இருந்து ஒரு மாற்று ஊடகமாக பார்க்கப்பட்டு வருகிறது. எனவே அந்த தளத்தினை தொடர்ந்து நடத்துவதை நாங்கள் ஒரு கடமையாக கருதுகிறோம். எனவே எங்களுடைய ரயில் ஓடிக் கொண்டே தான் இருக்கும். எங்களால் ஓட்ட முடியா விட்டால் நண்பர் காசி செய்தது போல எங்களைப் போன்றே கொள்கை உடைய தன்னார்வ நண்பர்களிடம் ஒப்படைப்போமே தவிர இழுத்து மூடி விட மாட்டோம்.

வலைப்பதிவில் தமிழ்மணம் ”கல்லா கட்டுவதாக” பலர் எழுதும் பொழுது சிரிப்பு தான் வருகிறது. இவ்வாறு எழுதுபவர்கள் ஒரு இணையத்தளம் என்றால் என்னவென்றே தெரியாத ”அறியாமையில்” உளறுவதாக தான் புரிந்து கொள்ள முடியும். தமிழ்மணத்தை விடுங்கள். வணிக ஊடகங்களாக உள்ள விகடன், குமுதம்,  நக்கீரன் போன்ற தளங்களே இணையத்தளம் மூலமாக எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. இத்தனைக்கும் விகடன் போன்றவை கட்டணத் தளங்கள். இணையம் என்பது தமிழ் ஊடகத்துறையை பொறுத்தவரை ஒரு சேவையாக மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது என்பது தான் யதார்த்தமான உண்மை.  தமிழ்மணத்தின் மாதந்திர வழங்கிச் செலவுக்கே (Hosting Charges) தமிழ்மணத்தின் விளம்பர வருவாய் போதுமானதாக இல்லை என்பதே யதார்த்தம்.

இதையெல்லாம் நான் எங்களை நோக்கி அவதூறு செய்பவர்களுக்கு சொல்ல வில்லை. தமிழ்மணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே சொல்கிறேன்.  அவதூறு செய்பவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கருதியிருந்தால் எப்பொழுதோ தமிழ்மணம் காணாமல் போய் இருக்கும். தமிழ்மணத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே அவதூறுகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

************

2004ல் தமிழ்மணம் தொடங்கப்பட்ட காலம் முதலே தமிழ்மணத்திற்கு மாற்றாக ஒரு திரட்டி தேவை என்ற கருத்தினை பலரும் முன்வைத்து வந்துள்ளனர். இன்றைக்கு பல புக்மார்க்கிங் தளங்கள் உருவாக்கப்பட்டு விட்டாலும் ஒரு வலைப்பதிவினைச் சார்ந்த அத்தனை பரிமாணங்களையும் (பதிவுகள், மறுமொழிகள், குறிச்சொற்கள்,  வகைப்படுத்தல், முன்னணி பதிவுகள், வாசகர் பரிந்துரைகள் போன்றவை) கொண்ட திரட்டியாக தமிழ்மணம் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு திரட்டியை உருவாக்குவது ஒன்றும் கடினம் அல்ல. மிக மிக சுலபமானது தான். அவதூறு செய்யும் நேரத்தில் உருப்புடியாக எழுதலாம். இது போன்ற தொழில்நுட்பங்களை உருவாக்கலாம்.

2007ல் வேறொரு வலைப்பதிவு பிரச்சனையில் ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? என்ற பதிவை எழுதினேன். தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் 2007  என்பது தற்பொழுது கற்காலம் போன்றது. ஆனாலும் இந்த அடிப்படையை வைத்து எவரும் எதை வேண்டுமானாலும் உருவாக்கலாம். தமிழ்மணத்தை விட மிகவும் சிறப்பான திரட்டி உருவானால் எங்களுக்கும் மகிழ்ச்சியே

ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ? - http://blog.tamilsasi.com/2007/12/blog-aggregator-for-dummies.html

Leia Mais…
Monday, October 10, 2011

அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)

வர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

வால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்

தற்போதைய அரசியல் சூழ்நிலை

இந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு முன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.

தற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


சுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்டியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின் ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.

****************
பணக்காரர்களுக்கு வரி விதிப்பு

ஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.

வேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.
ஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.

பணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.

****************

உலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை ? என்ன தான் நடக்கிறது ? அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.

ரீகனின் பொருளாதாரம் - Trickle down Economics

இந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.

அது என்ன Trickle down Economics ? அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.
தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.

இந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.

ரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்


பணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.

சரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா ? இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.


பணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.

அமெரிக்காவின் பொருளாதார சரிவு

ரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.

Collateralized debt obligation மற்றும் Credit Default Swaps

சரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் ? அவர்களுக்கு பணம் வேண்டாமா ? அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.

இது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது ? நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.

2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா ? அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா ? அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.

ரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன ? வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.

Bailout

எந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தாலும் வேறு வழியில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.

வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்

இடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).

*********************


இடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.

99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% மக்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.


*****************

வர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.

Leia Mais…