வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Saturday, April 09, 2005

எப்படியிருந்த நாம். . . ?

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி கங்கபாடியும்
வேங்கை நாடும் குடமலை நாடும் கொல்லமும்
கலிங்கமும் முரட்டொழிற் சிங்களர் ஈழமண்டலமும்
இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு
பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற்
கொண்ட தன் எழில் வளரூழியுள் எல்லா யாண்டும்
தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள்
கோராஜ கேஸரி பன்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்

இது தான் இராஜராஜசோழனின் மெய்கீர்த்தி



இராஜராஜன் நாடுகளை வென்று வாகை சூடிய மாமன்னன் மட்டுமல்ல. அவனது காலத்தில் தான் தமிழர்களின் சிற்பக்கலையும், நாட்டியக் கலையும், கட்டடக் கலையும் உச்சத்தில் இருந்தது. தன்னுடைய மாபெரும் சாம்ராஜ்யத்தை தஞ்சையில் இருந்து ஆள்வது பெரிய பாரமாக இருக்கும் என்று கருதி கிராமங்கள் தோறும் குழுக்களை உருவாக்கி நிர்வாகத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான். அந்த நிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பணியை மட்டும் தஞ்சையில் இருந்து நடத்தினான். இந்த நிர்வாக குழுவினர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரந்து விரிந்திருந்த சோழ நாட்டை ஆள்வதற்கு கல்வி அறிவு அவசியம் என்றுணர்ந்து கல்விச் சாலைகளை கோயில்களுடன் பின்னிப்பிணைந்தான். அக் காலத்தில் சோழநாட்டில் தான் மனிதவள மேம்பாடு அதிகமாக இருந்தது. இத்தகைய மாண்புகளால் தான் ராஜராஜனின் மெய்கீர்த்தியை இன்றளவில் பேசிக் கொண்டிருக்கிறோம்.

அத்தகைய மாமன்னனின் மாஸ்டர் பீஸான தஞ்சை பெரியக் கோயிலின் கட்டுமானத்தையும், பல உன்னதங்களையும் சமீபத்தில் தஞ்சைக்கு செல்லும் பொழுது கண்டு மெய்சிலிர்த்தேன். அதைப் பற்றிய அனுபவங்களை இம் மாத திசைகள் பயணச் சிறப்பிதழில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரார் கோயிலை மத்திய தொல்பொருள் துறை தன் வசம் கொண்டு வர முனைந்த பொழுது கலைஞர் கருணாநிதி இம் முயற்சியை கடுமையாகச் சாடி மைய அரசின் தொல்பொருள் துறையால் மட்டுமே புராதன சின்னங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் தவறானது. மாநில அரசாலும் புராதனச் சின்னங்களை பாதுகாக்க முடியும் என்றார். ஆனால் உண்மை நிலவரம் மாநில அரசுக்கு கொஞ்சமும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, பலச் சின்னங்கள் சீரழிந்து போவதற்கு காரணமே தமிழக அரசின் திறமையின்மை தான்.

அதிமுக, திமுக என இரு கட்சிகளும் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி திருவண்ணாமலை கோயிலை தொல்பொருள் துறை வசம் செல்லாமல் தடுத்து விட்டன. இது அங்கிருக்கும் மக்களின், வணிகர்களின் ஒட்டுகளுக்காக மட்டுமே தானே தவிர கோயிலை காக்கும் அக்கறையினால் அல்ல.

மத்திய தொல்பொருள் துறைக்கு மட்டுமே புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் திறமை இருக்கிறது என்பது தான் உண்மை. அவர்களின் வசம் இருப்பதேலேயே பலச் சின்னங்கள் இன்னமும் நின்று கொண்டிருக்கின்றன. வவ்வால்களின் இருப்பிடமாக இருந்த தஞ்சை பெரிய கோயிலை தங்கள் வசம் கொண்டு வந்து அதனை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். தமிழக வராலாற்று ஆர்வாளர்களும், தமிழர்களும் தொல்பொருள் துறையினருக்கு நன்றி கடன் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தேவைப்படும் நிதியை மைய அரசில் இருக்கும் தமிழக கரை வேட்டிகள் பெற்று தரும் பட்சத்தில் அவர்களால் இன்னும் சிறப்பாக இத்தகைய வராலாற்றுச் சின்னங்களை பாதுக்காக்க முடியும்.

தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய இராஜராஜனுக்கு ஒரு சிலையைக் கூட தங்களால் எழுப்ப முடியவில்லை என்று கலைஞர் வருத்தப்பட்டுக் கொண்டார். இராஜராஜனுக்கு சிலை எழுப்பி காக்கைகள் அதில்
எச்சமிட்டு ஆண்டுக்கு ஒரு முறை அதற்கு மாலையிட்டு தங்கள் கடமையை நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் கலாச்சாரத்தை விட இராஜராஜனின் பள்ளிப்படை இருந்த இடத்தில் அவனின் நினைவாக ஒரு ஸ்தூபியோ, ஒரு மண்டபமோ எழுப்பலாம். அதை விட அழிவின் விளிம்பில் இருக்கும் புராதனச் சின்னங்களை பாதுகாக்கலாம். அது தான் அந்த மாமன்னனுக்கு தரும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

உலகின் மிக உன்னதமான அதிசயத்தக்க கட்டிடகலைகளில் முக்கிய இடம் வகிக்க கூடிய தஞ்சை பெரிய கோயிலுக்கு நம் அரசியல் தலைவர்கள் தரும் முக்கியத்துவம் என்ன ?

இது ராசி இல்லாத கோயிலாம். இங்கு வந்தால் அவர்களின் பதவி பறிபோய் விடுமாம். இது தான் தந்தை பெரியாரின் வழி வந்ததாக கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் இன்றைய உண்மையான பகுத்தறிவு.

இதனால் எந்த வித நஷ்டமும் இல்லை. இராஜராஜன் எழுப்பித்த மகத்தான இந்தச் சின்னம் தனித்து விடப்படுவதால் எந்தச் சேதமும் இல்லாமல் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவன் புகழ் பேசிக் கொண்டு நிற்கும்.



இன்னமும் சில காலத்தில் அழிந்து விடக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு வரலாற்றுச் சின்னத்தையும், பெரிய கோயிலின் உன்னதங்களையும் திசைகள் இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரையில் ( எப்படியிருந்த நாம். . . ?) பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Leia Mais…
Friday, April 01, 2005

கங்குலி ???

திருவாளர் கிரிக்கெட் ரசிகர் ஒரு அரசு அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு லஞ்சம் கேட்கிறார்கள். கொடுக்கிறார். வெளியே வருகிறார் டிராபிக் போலீஸ் ஓரம் கட்டுகிறார். இவரும் மால் வெட்டுகிறார். ஓட்டு போட்ட அரசியல்வாதி காணாமல் போய் விடுகிறார். சகஜம் தானே. கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார். கிரிக்கெட் பார்க்கிறார். கங்குலி அவுட் ஆகிறார். வருகிறதே கோபம். முதலில் இவனை தூக்க வேண்டும் என்று கர்ஜிக்கிறார். தன் கடமையில் இருந்து தவறிய கங்குலியை நீக்க வேண்டாமா ?

ஊரெல்லாம் இது தான் பேச்சு.

இமெயிலை திறந்தால் கங்குலியை பற்றிய ஜோக்ஸ் தான் இப்பொழுது பிரபலம். சர்தார் ஜோக்கையெல்லாம் நம் ஆட்கள் மறந்து போய் விட்டார்கள். இன்று அப்படி தான் இந்த ஜோக்கை பார்த்தேன்.

இந்திய ரயில்வே துறையினர் கங்குலியிடம் வருகிறார்கள். எங்கள் ரயில்வேயில் எந்த ரயிலும் குறித்த நேரத்தில் போய் விட்டு வருவதில்லை. நீங்கள் மட்டும் போன வேகத்திலேயே சீக்கிரமாக வந்து விடுகிறீர்களே, அந்த ரகசியத்தை சொல்லுங்களேன் என்று கேட்கிறார்களாம்.

வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தன் ரன் அப்பை பாதியாக குறைப்பது என்று முடிவு செய்து விட்டாராம்.
ஏன் ?
அக்தர் ஓடி வருவதற்குள் கங்குலி பெவிலியனுக்கு சென்று விடுகிறாராம்.

அனைத்து பத்திரிக்கைகளிலும் கங்குலியின் சோகமான படங்கள். ஒரு பத்திரிக்கையில் கங்குலி எங்கேயோ வானத்தை வெறிக்க பார்த்து கொண்டிருக்கிறார். மற்றொன்றிலோ தரையை பார்த்து கொண்டிருக்கிறார். பல பத்திரிக்கைகளில் கிண்டலான கார்டூன்கள்.

இந்திய கிரிக்கெட்டில் கங்குலியின் சகாப்தம் முடிவுக்கு வருகிறதா ? இந்தியாவின் Most Successful and admired captain அவ்வளவு தானா ?

சூம்பிக் கிடந்த இந்திய அணியை உலக கோப்பை வெல்லும் நிலைக்கு கொண்டு சென்ற கங்குலி இனி மேல் அணியில் கூட இருக்க மாட்டாரா ?

இந்திய அணி தேர்வில் இருந்த பிராந்திய உணர்வுகளை கலைந்து திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திறமையுள்ளவர்களை அணிக்குள் கொண்டு வந்து இந்திய அணியை ஒரு வலுவான அணியாக உருமாற்றிய கங்குலி இனி என்ன செய்யப் போகிறார்.

2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம். இந்திய அணி எத்தனை போட்டியில் தோற்கும். நான்கு டெஸ்டிலும் தோற்குமா ? இல்லை ஒன்றையாவது டிரா செய்யுமா என்று பத்திரிக்கைகள் கேள்வி எழுப்ப கொல்கத்தா இளவரசன் அதிரடியாக முதல் டெஸ்டில் அடித்த சதம் தான் எத்தனை அற்புதமானது. சுற்றுபயணத்தின் போக்கையே மாற்றிய சதம் அல்லவா அது ?

பாக்கிஸ்தானுக்கு எதிராக சகாரா கோப்பையில் மட்டையையும் சுழற்றி, பந்தையும் சுழற்றி பெற்று கொடுத்த வெற்றிகளை மறந்து விட முடியுமா ? இல்லை லண்டன் மைதானத்தில் தன் சட்டையை சூழற்றிய அந்த ஆவேசத்தை தான் மறக்க முடியுமா ?

வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் கூட தோல்வியடைந்து கொண்டிருந்த இந்திய அணியை, தோல்வியின் விளிம்புக்கு சென்ற போட்டிகளில் கூட வெற்றி வாகை சூட வைத்த அணித்தலைவரை இனி நாம் காணமுடியாதா ?

எந்த சகாப்தமும் முடிவுக்கு வரத் தான் வேண்டும். ஆனால் இது கங்குலியின் சகாப்தம் முடிவுக்கு வரும் தருணம் அல்ல.

இன்று கங்குலி மற்றொரு சாதனையின் விளிம்பில் இருக்கிறார். 10,000 ரன்களை எட்டிப் பிடிக்க போகிறார். பிடித்து விடுவாரா ?

பிடித்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கிறேன்

Leia Mais…