Friday, August 15, 2008

காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன ?


என்னுடைய கடந்த பதிவில் காஷ்மீரில் தற்பொழுது நடந்து வரும் பிரச்சனைகள் குறித்து எழுதினேன். காஷ்மீர் பிரச்சனைக்கு காஷ்மீரின் விடுதலை என்பது தீர்வா ? அப்படியெனில் இந்துக்களை அதிகம் கொண்ட ஜம்முவை காஷ்மீருக்கு அளித்து தனி நாடாக மாற்றலாமா என்பது போன்ற கேள்விகள் எழுப்பபட்டன. அதற்கு பதிலளிக்க தொடங்கி நீண்டு விட்டதால் தனிப் பதிவாகவே பதிவு செய்கிறேன்.

காஷ்மீர் பிரச்சனை தமிழ் ஈழம், பாலஸ்தீனம் போன்ற மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட சிக்கலானது.

இந்தப் பிரச்சனை குறித்து சில விபரங்களை மட்டும் என்னுடைய ”காஷ்மீரின் விடுதலை” தொடரில் எழுதியுள்ளேன். இன்னும் எழுத வேண்டியது நிறைய உள்ளது.

தற்போதைய காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது நிரந்தர எல்லையாக முடியாது. இந்தியா, பாக்கிஸ்தான், சீனா என மூன்று நாடுகளின் கைகளில் இருக்கும் காஷ்மீரின் பல்வேறு பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டால் தான் காஷ்மீர் முழுமையாக முடியும். அதன் சாத்தியங்கள் என்ன என்பது குறித்து இறுதியிலே கூறுகிறேன். முதலில் காஷ்மீரில் இருக்கும் பல்வேறு பகுதிகள் குறித்து பார்க்க வேண்டும்.

காஷ்மீரில் மொத்தம் 5 பகுதிகள் உள்ளன. அதில் மூன்று பகுதிகள் இந்தியாவிடமும், 2 பகுதிகள் பாக்கிஸ்தான் வசமும் உள்ளன. மொத்த காஷ்மீர் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பாக்கிஸ்தானிடமும், எஞ்சிய பெரும்பான்மையான பகுதி இந்தியா வசமும் உள்ளது. நிலப்பரப்பினை கொண்டு பார்த்தால் காஷ்மீர், ஜம்மு, லடாக் போன்றவை இந்தியாவின் முக்கிய பகுதிகள். அஸாத் காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் (கில்ஜில், பால்டிஸ்தான்) போன்றவை பாக்கிஸ்தானில் உள்ளன.

இந்தியா, காஷ்மீர் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என வாதிடுகிறது. பாக்கிஸ்தான் இந்தியாவின் பிரிவினையின் பொழுது மூஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை உள்ளடக்கிய காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது (இது குறித்த விரிவான தகவல்களை என்னுடைய முந்தைய கட்டுரையில் பார்க்கலாம்)

இந்தியா எவ்வாறு பெயரளவுக்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை காஷ்மீரில் நிறுவி காஷ்மீரில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறதோ அதே போல பாக்கிஸ்தான் நார்த்தன் ஏரியாஸ் என்ற பெரும்பான்மையான பகுதியை தன் வசம் வைத்திருக்கவே விரும்புகிறது. பெயரளவுக்கு அஸாத் காஷ்மீர் என்ற சிறிய பகுதியை மட்டும் “சுதந்திர காஷ்மீர்” என்பதாக வெளியுலகுக்கு காட்டி வருகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக முஸ்லீம்களையோ, இந்துக்களையோ, புத்தமதத்தினரையோ உள்ளடக்கி இருக்கவில்லை. காஷ்மீர், நார்த்தன் ஏரியாஸ் போன்ற பகுதிகளில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர். ஜம்முவில் இந்துக்கள் பெரும்பான்மையினர். லடாக்கில் புத்தமதத்தினரும், முஸ்லீம்களும் சரிசமமாக உள்ளனர்.

காஷ்மீர் என்று சொல்லப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு (Kashmir Valley) பகுதியில் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்துக்களும் இங்கு உண்டு. காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் முஸ்லீம்கள் போல இல்லாமல் அவர்களுக்கேயுரிய கலாச்சாரத்துடன் தனித்தன்மையுடன் இருந்தனர். அது போல இங்கு இருந்த இந்துக்கள், பண்டிட் என்று அழைக்கப்படும் பிராமணப் பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு என தனித்தன்மை உண்டு. பண்டிட்களுக்கும் இந்தியவின் பிற இந்துக்களுக்கும் வேறுபாடுகள் உண்டு. மொத்தத்தில் காஷ்மீர் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் என்று ஒரு தனித்தன்மை இருந்தது.

அதுவும் தவிர முஸ்லீம்கள் என சொல்லப்படுபவர்களும் ஒரே மாதிரியாக இல்லை. பூன்ச் பகுதியில் இருந்த முஸ்லீம்களும், பாக்கிஸ்தான் பகுதியில் இருக்கும் நார்த்தன் ஏரியாஸ் பகுதியில் இருக்கும் முஸ்லீம்களும் ஒரு வகையினர். ஆனால் காஷ்மீரில் உள்ள முஸ்லீம்கள் சற்று மாறுபட்டவர்கள். காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக கூட சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

காஷ்மீர் முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தானின் முஸ்லீம்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அது போலவே காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

இன்னும் சொல்லப்போனால் அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்பவர்களுக்கு முஸ்லீம்கள் உதவி செய்வது என்பது காஷ்மீரில் காலங்கலமாக இருந்து வரும் மரபு (அமர்நாத் குகையை முதலில் கண்டுபிடித்தது ஒரு முஸ்லீம் ஆடு மேய்க்கும் சிறுவன் என்பன போன்ற மதநல்லிணக்க ”கதைகளும்” வழக்கத்தில் உண்டு).

காஷ்மீரில் பாக்கிஸ்தான் நுழைந்த பொழுது பயங்கரவாதத்தை புகுத்தியது. பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து விட்டனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே இருந்த நெருங்கிய இணக்கம் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு சிதைந்து போனது. இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

காஷ்மீரின் இப்படியான பன்முகத் தன்மை தான் காஷ்மீருக்கான தீர்வினையும் சிக்கலாக்குகிறது.

*****

காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது ஒரு வரையறைக்கப்பட்ட எல்லை அல்ல. இந்தியாவின் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது போல மொழி சார்ந்தோ, கலாச்சாரம் சார்ந்தோ பிரிக்கப்பட்டது அல்ல. இந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு உறவுகளை பிரித்தது. மக்களின் நிலங்களை, பொருளாதாரத்தை பிளந்தது.

காஷ்மீர் எந்த தேசத்திற்கு சொந்தமானது, அல்லது காஷ்மீரே ஒரு தனி நாடாகலாமா என்ற கேள்விகளை விட காஷ்மீரின் பகுதிகள் முதலில் இணைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நிலைப்பாடு. எந்த தேசியங்களையும் விடவும் மக்கள் முக்கியமானவர்கள்.

காஷ்மீரின் பகுதிகள் இணைக்கப்பட்டு காஷ்மீரின் எந்தப் பகுதிக்கும் காஷ்மீரைச் சார்ந்த யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அது போல காஷ்மீருக்கும், முசாராபாத் போன்ற நகரங்களுக்கும் இடையிலேயான வர்த்தக தொடர்புகளை ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பிரச்சனைகள் இல்லாமல் ஒரு நாட்டிற்குள்ளேயே வர்த்தகம் செய்வது போன்ற நிலையினை கொண்டு வர வேண்டும். அதைத் தான் முசாராபாத் செல்வோம் (Muzzafarabad Chalo) என்ற காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டம் உணர்த்துகிறது.

அதைப் போலவே இந்தியாவும், பாக்கிஸ்தானும் இந்தப் பகுதியில் குவித்து இருக்கிற மிகப் பெரிய இராணுவத்தை விலக்கி கொள்ள வேண்டும். இராணுவம் விலக்கப்பட்டால் தான் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை இயல்பாக நடத்த முடியும். எல்லா காஷ்மீர் இளைஞர்களையும் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துடன் கடத்துவதும், பிறகு அவர்கள் காணாமல் போவது போன்ற மனித உரிமை மீறல்களும் நிறுத்தப்பட வேண்டும்.

இது உண்மையில் சாத்தியமா ?

நிச்சயம் சாத்தியமே என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2005ல் பாக்கிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷ்ரப் ஒரு தீர்வினை முன்வைத்தார். பாக்கிஸ்தான் ஜனாதிபதி முஷ்ரப் மீது எனக்கு பல விமர்சனங்கள் உள்ளன. ஒரு இராணுவ சர்வாதிகாரி, பதவி ஆசை பிடித்தவர், ஜனநாயகத்தை நசுக்க துணிந்தவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனைக்கு பலரும் ஏற்கத்தக்க ஒரு தீர்வினை முன்வைத்தவர் முஷ்ரப் மட்டுமே. ஆனால் அவருடைய இந்த தீர்வினை இந்தியாவின் சங்பரிவார் கும்பலும் ஏற்காது. பாக்கிஸ்தானின் மத அடிப்படைவாத கும்பலும் ஏற்காது.

ஆனால் காஷ்மீரில் இருந்த பல அமைப்புகள் அவரின் இந்த திட்டத்தை வரவேற்றிருந்தன. இந்தியாவில் இருந்த நடுநிலையான அமைப்புகள் கூட அவரின் இந்த திட்டத்தை ஒரு நல்ல தொடக்கமாக ஏற்றுக் கொண்டன.

அப்படி என்ன திட்டத்தை அவர் முன்வைத்தார். இது குறித்து நான் முன்பே எழுதியிருக்கிறேன். என்றாலும் மறுபடியும் இங்கே முன்வைக்கிறேன்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை (நார்தன் ஏரியாஸ், அஸாத் காஷ்மீர்). மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக். பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

இந்த திட்டம் ஒன்றிணைந்த காஷ்மீர், காஷ்மீருக்கு முழுமையான விடுதலை ஆகியவற்றை நோக்கிய ஒரு முக்கியமான திட்டம்.

முஷ்ரப்பின் இந்த திட்டத்தில் சில ”சிறிய” பிரச்சனைகள் இருந்தன. அது தான் பெரும்பாலும் விமர்சிக்கப்பட்டது. என்றாலும் அடிப்படையில் மிக முக்கியமான திட்டம்.

அவர் திட்டத்தில் இருந்த பிரச்சனைகள் என்ன ?

இந்தியாவில் உள்ள காஷ்மீரின் பகுதிகளை ஐந்து என முஷ்ரப் பிரித்தது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐந்து பகுதிகள் அல்ல. மூன்று மட்டுமே என்பது இந்தியாவின் வாதம். அது போல சீனாவிடம் இருக்கும் பகுதிகள் குறித்து இந்த திட்டத்தில் எதுவும் இல்லை.

என்றாலும் இந்த திட்டத்தை ஏன் முக்கியமான திட்டம் என சொல்கிறேன் ?

பாக்கிஸ்தான் முதன் முறையாக நார்தன் ஏரியாஸ் என்று சொல்லப்படும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை காஷ்மீருக்கு விட்டுக் கொடுக்க சம்மதித்து தான். கடந்த காலங்களில் பாக்கிஸ்தான் இவ்வாறு கூறியது இல்லை. இந்த திட்டம் இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது. இதனை அடிப்படையாக கொண்டு ஒரு இறுதியான தீர்வினை நோக்கி இந்தியா நகர்ந்திருக்கலாம். ஆனால் இந்தியா அதனை செய்யவில்லை.

இந்தியாவின் நிலைப்பாடு என்பது எப்பொழுதும் போலவே காலத்தை கடத்துவது, தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து தன் வசம் வைத்திருப்பது என்றளவிலேயே உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டினை (LoC) நிரந்தர எல்லையாக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிரச்சனையே அந்த எல்லைக் கோடு தான் என்னும் பொழுது எது எப்படி தீர்வாக முடியும் ?

இந்தியாவின் வாதம் பொருந்தாது, பொறுப்பற்றது.

இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண்டே இருப்பது தான் சிறந்த உத்தி என எப்பொழுதும் நினைக்கிறது. காலங்கள் கடந்து கொண்டே இருந்தால் பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும். இந்தியாவின் அந்த உத்தி இந்தியாவிற்கு பல வகையில் கைகொடுத்து இருக்கிறது.


அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டங்களை தன்னுடைய அதிகார பலம் மூலம் நசுக்கி கொண்டே இருந்தால் அடுத்து வரும் தலைமுறை இந்தி சினிமாவை பற்றி மட்டும் தான் பேசும். காஷ்மீர் விடுதலையா அது என்ன என்று தான் கேட்கும் ? அந்த நாளுக்கு தான் இந்தியா காத்திருக்கிறது.

14 மறுமொழிகள்:

Anonymous said...

சசி,

இரண்டு கட்டுரைகளும் அருமை. பல தகவல்களையும் கோர்வையாக எழுதி உள்ளீர்கள். உங்களது பழைய கட்டுரைகளையும் வாசிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.

காஷ்மீர் குறித்து தமிழில் ஏதேனும் நல்ல புத்தகங்கள் உள்ளனவா ? உங்கள் கட்டுரைகள் இந்தப் பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டியுள்ளது

7:44 PM, August 15, 2008
Anonymous said...

//அவ்வப்பொழுது எழும் காஷ்மீரிகளின் தற்போதைய போராட்டங்களை தன்னுடைய அதிகார பலம் மூலம் நசுக்கி கொண்டே இருந்தால் அடுத்து வரும் தலைமுறை இந்தி சினிமாவை பற்றி மட்டும் தான் பேசும். காஷ்மீர் விடுதலையா அது என்ன என்று தான் கேட்கும் ? அந்த நாளுக்கு தான் இந்தியா காத்திருக்கிறது.//

கவலைப்படாதீர்கள்!அதை தடுக்கத்தான் பாகிஸ்தானும் ஐ.எஸ்.ஐ-யும் இருக்கின்றதே.

7:54 PM, August 15, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அனானி,

நன்றி...

***
காஷ்மீர் குறித்து தமிழில் ஏதேனும் நல்ல புத்தகங்கள் உள்ளனவா ?
***

பத்திரிக்கையாளர் சந்திரன் காஷ்மீர் குறித்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதை நான் படிக்கவில்லை என்பதால் அது குறித்து கருத்து சொல்ல முடியாது.

இது தவிர குமுதத்தில் வெளியான பா.ராகவனின் “பாக் : ஒரு புதிரின் சரிதம்” என்ற புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை காஷ்மீரின் வரலாறாகவோ, பாக்கிஸ்தானின் வரலாறாகவோ நிச்சயம் பார்க்க முடியாது. காஷ்மீர்-பாக்கிஸ்தான் குறித்த விடயங்களை சங்பரிவார் பார்வையில் அம்புலிமாமா பாணியிலேயே இந்த புத்தகம் விவரிக்கிறது.

வேறு ஏதேனும் புத்த்கங்கள் உள்ளனவா என தெரியவில்லை

10:14 PM, August 15, 2008
கோவை சிபி said...

காஷ்மீர் பிரச்னை தனக்கு அவமானமென்பதை உணராமல் தன் தார்மீக கடமையை மறந்து அசிங்கப்பட்டு நிற்கிறது இந்திய அரசு.1947 லிருந்தே பெரும்பாலும் பிராமணர்களையே உள்ளடக்கிய காஷ்மீரி இந்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதாக உள்ளது.இன்றுவரை காஷ்மீர் நிர்வாகத்தில் 90% அதிகமாக பிராமணர்கள் உள்ளனர்.ஒட்டுமொத்த இந்தியாவில் 5% உள்ள பிராமணர்களின் அதிகாரம் இந்திய அரசில் எத்தகையது என்பதை உலகறியும்.இதன் அடிப்படையில் வைத்து காஷ்மீரை ஆண்டொன்றுக்கு 6000 கோடிரூபாய் செலவில் கட்டிக்காத்து வரும் இந்திய அரசின் சக்தி எதுவென்பதை புரிந்துகொள்ளலாம்

12:47 AM, August 16, 2008
Gopalan Ramasubbu said...

Two books that illuminate Kashmir’s past and offer insights into how the problem can be resolved.

http://www.flonnet.com/fl2515/stories/20080801251508400.htm

2:49 AM, August 16, 2008
உண்மைத்தமிழன் said...

சசி

உங்களுடைய காஷ்மீர் பற்றிய கட்டுரைகளை இப்போதுதான் படித்து முடித்தேன். மிக, மிக ஆச்சரியம். நீங்கள் இந்த அளவிற்கு எழுதுவீர்கள் என்று நான் இதுவரையில் நினைக்கவில்லை. மன்னிக்கவும். என் மனதில் பட்டதைச் சொன்னேன். உங்களுடைய தளங்களில் கம்ப்யூட்டர் மென்பொருள், வன்பொருள், தமிழ்மணம் பற்றியே படித்துப் படித்து பழகிவிட்டது. அதனால் சொன்னேன்.

பதிவு நன்று.. பதிவில் சொல்லியிருக்கும் விஷயங்கள் என்னைப் பொறுத்தவரைக்கும் புதிது.. இப்படி நிறைய பேர் ஒரே விஷயத்தை அவரவர் பார்வையில் எழுதினால் பல்வேறு கோணங்கள் பரிமாணிக்கும்.. தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.

நன்றி சசி..

9:00 AM, August 16, 2008
Anonymous said...

//இந்தியா இந்தப் பிரச்சனையில் காலத்தை கடத்திக் கொண்டே இருப்பது தான் சிறந்த உத்தி என எப்பொழுதும் நினைக்கிறது. காலங்கள் கடந்து கொண்டே இருந்தால் பிரச்சனையின் தீவிரம் குறைந்து விடும். இந்தியாவின் அந்த உத்தி இந்தியாவிற்கு பல வகையில் கைகொடுத்து இருக்கிறது.

//

இந்தியாவின் உத்தி பாகிஸ்தான் உடைந்து சிதறும் வரை காத்திருப்பதாக இருக்கலாம்.

9:27 AM, August 16, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

சிபி,

நீங்கள் சொல்வது சரியான கருத்து...

காஷ்மீர் பிரச்சனைக்கு பெரும்பாலும் காரணமானவர்கள் ஜவகர்லால் நேருவும், அப்பட்டமான காவி இந்துமத வெறியறான சர்தார் வல்லபாய் பட்டேலும் தான்.

நேரு காஷ்மீர் பண்டிட் மரபை சேர்ந்தவர். தன்னுடைய பூர்வீக பூமியான காஷ்மீர் இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக எதையும் செய்ய துணிந்தார். இன்று வரை அதற்கான விலையை நாம் கொடுத்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவின் இரும்பு மனிதர் என ஜல்லி அடிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அப்பட்டமான இந்து மத வெறியர். காஷ்மீர் பாக்கிஸ்தான் வசமோ அல்லது தனி நாடாக உருவாவதிலோ அவருக்கு விருப்பம் இல்லை.

இந்த இருவரின் தலைமை தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணம்...

(காஷ்மீர் பிரச்சனையில் தவறு செய்திருந்தாலும், நேரு இந்து மத வெறியர் அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. நேருவின் தலைமை இந்தியாவை இந்து மத வெறியரான சர்தார் வல்லபாய் பட்டேலிடம் இருந்து காத்தது என்றும் சொல்லலாம்)

10:28 AM, August 16, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

உண்மைத் தமிழன்,

நன்றி...

ஒரு வருடமாக நான் அதிகம் எழுதவில்லை. அதிகமாக எழுதியது தமிழ்மணம் சார்ந்த அறிவிப்புகளாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் நான் எழுதும் அறிவிப்புகளை கூட பெயரிலி எழுதும் அறிவிப்பாக பலர் நினைத்துக் கொள்கிறார்கள் :))

10:42 AM, August 16, 2008
Anonymous said...

இந்தியா உடைய வேண்டும் என்ற உங்களின் ஆசை என்றும் நிறைவேற போவதில்லை..
காழ்மீரை விட்டு விட்டால் அப்படியே இந்திய நாட்டை கூறு போட பல இயங்களுக்கு காரணம் கிடைத்து விடும்.

காழ்மீரில் நடப்பது இஸ்லாமிய பயங்கரவாதம் அதை அப்படியே நியாய படுத்த முயல்வது படு கேவலமான செயல்.

11:07 AM, August 16, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

காழ்மீரை விட்டு விட்டால் அப்படியே இந்திய நாட்டை கூறு போட பல இயங்களுக்கு காரணம் கிடைத்து விடும்

***

காஷ்மீரிரை விட்டு விட்டால் மற்ற மாநிலங்களும் சுதந்திரம் கேட்கும், தமிழீழம் கிடைத்து விட்டால் தமிழ்நாடு தனித்தமிழ்நாடு கேட்கும் என்ற பூச்சாண்டி கதைகளையே எத்தனை காலங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள்.

எதாவது புது ஐடியா முயற்சி செய்து பாருங்கள், எங்களுக்கும் இதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது :)

11:21 AM, August 16, 2008
Anonymous said...

//காஷ்மீரிரை விட்டு விட்டால் மற்ற மாநிலங்களும் சுதந்திரம் கேட்கும், தமிழீழம் கிடைத்து விட்டால் தமிழ்நாடு தனித்தமிழ்நாடு கேட்கும் என்ற பூச்சாண்டி கதைகளையே எத்தனை காலங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க போகிறீர்கள்.

எதாவது புது ஐடியா முயற்சி செய்து பாருங்கள், எங்களுக்கும் இதை கேட்டு கேட்டு அலுத்து விட்டது :)//

அப்ப இதேல்லாம் நடக்காது என்று சொலகிறீர்களா??

நடக்காது என்றால் தயவு செய்து விரிவாக விளக்கவும்

அதேல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு தனியாக பிரிந்து சென்று தனி நாடாக வேண்டும் என்ற சிலரின் கொள்கையில் உங்களின் கருத்து என்ன?

11:58 AM, August 16, 2008
தமிழ் சசி | Tamil SASI said...

அதேல்லாம் இருக்கட்டும்.. தமிழ்நாடு தனியாக பிரிந்து சென்று தனி நாடாக வேண்டும் என்ற சிலரின் கொள்கையில் உங்களின் கருத்து என்ன?

****

இந்தப் பிரச்சனை குறித்த என்னுடைய கருத்தினை


தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்

என்ற என்னுடைய பதிவில் விரிவாகவே எழுதியுள்ளேன், பார்க்கவும்.

யார் இப்பொழுது தமிழ்நாடு தனியாக பிரிந்து போக வேண்டும் என சொல்கிறார்கள் என கூற முடியுமா ? முன்பு அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்த அமைப்புகள் கூட தற்பொழுது அது குறித்து பேசுவதில்லை.

ஒரு இனம் இனரீதியாக ஒடுக்கப்படும் பொழுது தான் தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் ஆரம்பிக்கும். இந்தியாவில் ஒரு வலுவான தேசிய கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் மைய அரசும் இருந்த வரை பிராந்திய உணர்வுகள் மறுக்கப்பட்டன. இந்தி திணிப்பு, மைய அரசின் திட்டங்கள் எதுவும் தென் மாநிலங்களுக்கு வராத சூழ்நிலை போன்றவை தமிழ் தேசியம் சார்ந்த உணர்வுகளையும், தனித் தமிழ்நாட்டின் தேவையையும் ஏற்படுத்தி இருந்தன. அதனைச் சார்ந்து தான் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது போன்ற கோஷங்கள் எழுந்தன. ஆனால் இன்றைக்கு வலுவான தேசியக் கட்சிகள் எதுவும் இல்லை. பிராந்தியக் கட்சிகளைச் சார்ந்தே இந்தியா செயல்படும் சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு பிராந்திய உணர்வுகளை மறுக்க கூடிய தைரியம் எந்த மைய அரசுக்கும் இல்லை.

எனவே தேசியம் சார்ந்த முன்னெடுப்புகளை விட பொருளாதாரம், சமூகம் சார்ந்த முன்னெடுப்புகளே அவசியமாகிறது. அவ்வாறான முன்னெடுப்புகள் தான் பல இடங்களிலும் நடந்து வருகிறது. எனவே காஷ்மீர் பிரிந்தால் பிற மாநிலங்கள் சுதந்திரம் கேட்கும் என்பது நகைச்சுவையான வாதம். அதற்கான தேவை இன்றைக்கு இல்லை என்பதே எனது கருத்து.

சில விதி விலக்குகள் இருக்கவே செய்கின்றன. வடகிழக்கு மாநிலங்களுக்கு இந்திய மைய அரசின் தலைவிதியை நிர்ணயம் செய்யக்கூடிய அளவுக்கு அரசியல் பலம் இல்லை. எனவே அந்த மாநிலங்கள் புறக்கணிக்கப்படும் பொழுது இயல்பாக பிரிவினைவாதம் தலைதூக்கும்.

பிரிவினைவாதம் என்பது ஒரு சிலர் கைகளில் ஆயுதம் ஏந்தி துவங்கும் பிரச்சனை அல்ல. அதற்கான தேவையை பெரும்பான்மை சமூகம் தான் உருவாக்குகிறது. இந்தியாவில் சங்பரிவார் ஒரு மிகப் பெரிய சக்தியாக வளருமானால் அதற்கு மாற்று சக்தியாக தீவிரவாதம் வளரவே செய்யும். அது மிக இயல்பானது

*****

காஷ்மீர் என்பது இந்த எல்லாப் பிரச்சனைகளையும் விட மாறுபட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஐடி பூங்காக்களை உருவாக்கினால் கூட பிரச்சனைகள் தீராது. காரணம் அங்கே வேலைவாய்ப்பு பிரச்சனைகள் என்பதை விட பல கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ள காஷ்மீரின் இணைப்பு தான் முக்கிய பிரச்சனையாக உள்ளது.

பல கூறுகளாக உள்ள காஷ்மீரை இணைப்பதற்கு காஷ்மீரின் விடுதலை மட்டுமே ஒரே வாய்ப்பாக உள்ளது

நன்றி...

3:30 PM, August 16, 2008
Bharathiraja said...

ஒரு ஆஃப்கானிஸ்தான் ஒரு பாகிஸ்தானுக்கே இந்த உலகம் ஈடு கொடுக்க முடியவில்லை இதுல இன்னொரு தீவிரவாத உற்பத்தி கேந்திரமா? தாங்காதுப்பா....

ஈழ விடுதலைக்கும் காஷ்மீர் விடுதலைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதை திரு தமிழ்சசி அவர்கள் உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம். இல்லையெனில் அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லாம் பேய் என்பது போல் ஆகி விடும்.

2:31 AM, August 31, 2008