வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, May 19, 2009

வதந்திகளை புறக்கணித்து, மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் குறித்து வரும் வதந்திகளை புறக்கணிப்போம்.

பிரபாகரன் அவர்களின் மாவீரர் பிம்பத்திற்கு முதலில் களங்கம் விளைவிக்க பிரபாகரன் தப்பியோட முனைந்தார், சுடப்பட்டார் என சிங்கள ஊடகங்களும், இந்திய பார்ப்பனீய, பனீயா ஊடகங்களும் தொடர்ந்து செய்தி பரப்பின. அது தமிழர்கள் மத்தியில் எடுபடவில்லை என்றவுடன் தற்பொழுது புதுக் கதைகளை வெளியிட்டு வருகின்றன.

இறந்த பிறகு தன்னுடைய உடல் கூட எதிரிகளிடம் கிடைக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் பிரபாகரன். இந்திய அமைதிப்படைகளின் காலத்தில் அவருடன் இரு விடுதலைப் புலிகள் பெட்ரோல் டின்களுடன் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் உண்டு. அப்படி இருந்தவரின் உடலை கைப்பற்றியிருக்கும் செய்திகள் எதுவும் நம்பக்கூடியதாக இல்லை. நம்பாமல் அதனை புறக்கணிப்பதே நாம் இப்பொழுது உடனடியாக செய்ய வேண்டியது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் பிரபாகரனை சாகடித்து பார்த்து விட்டார்கள் இந்த ஊடகங்கள். பிரபாகரனுக்கு குறைவான வயதே ஆகிறது. இன்னும் அவர் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்புள்ளது என ஹிந்து நாளிதழ் எரிச்சல்பட்ட வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளது. சுனாமியில் பிரபாகரன் இறந்தார் என செய்தி வெளியிட்டு மகிழ்ந்த ஹிந்து நாளிதழ் தான், இன்று தன்னுடைய தொலைக்காட்சியுடன் தமிழகத்தில் இத்தகைய செய்திகளை சிங்கள அரசின் ஊதுகுழலாக இருந்து பரப்பி வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வதந்திகளை புறக்கணித்து மக்கள் பிரச்சனையை பேசுவதே தற்போதைய சூழ்நிலையில் முக்கியமானது. தற்போதைய சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களுக்கும் நிவாரணம் தேவை. மக்களை அந்த முகாம்களிலேயே அடைத்து வைத்து விட்டு கிளிநொச்சி, மன்னார் பகுதிகளை சிங்கள மயமாக்கும் முயற்சிகளை விழிப்புடன் தடுக்க வேண்டிய தேவை உள்ளது. உலக நாடுகளை நோக்கி நாம் மறுபடியும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தற்போதைய போராட்டம் முன் எப்பொழுதையும் விட அதிகமாக இருக்க வேண்டும்.

முன் எப்பொழுதையும் விட தற்பொழுது தான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு பொறுப்பு அதிகரித்து உள்ளது. இலங்கையில் போராடக் கூடிய சூழ்நிலை மக்களுக்கு இல்லை. இந்தியாவில் போராடினாலும் பலன் இருக்க போவதில்லை. மேற்குலக நாடுகளை (ஐரோப்பிய, கனடா, அமெரிக்கா) நோக்கியே நாம் நம் கோரிக்கையை முன்வைத்து போராட வேண்டும். தமிழரின் நிலங்கள் சிங்கள எடுபிடிகளான டக்ளஸ் தேவானந்தாவுக்கும், பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் சென்று சேராமல் இருக்க தமிழர்கள் தங்கள் போராட்டத்தினை உடனே முன்னெடுக்க வேண்டிய அவசரம் உள்ளது.

கடந்த காலங்கள் போலவே தற்பொழுதும் பிரபாகரன் உகந்த தருணத்தில் மக்கள் முன் வருவார். அது வரையில் நம் மக்களுக்காக நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் தளர்ந்து விடாமல் நம்பிக்கையுடன் நாம் தொடர்ந்து நம் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம்...

Leia Mais…
Tuesday, May 12, 2009

ஈழப் போராட்டம் குறித்த என் நிலைப்பாடு, சில விளக்கங்கள்

என்னுடைய கடந்த கட்டுரைக்கு வந்த விமர்சனங்கள், தனி மின்னஞ்சல்களில் சில நண்பர்கள் தெரிவித்து இருந்த கருத்துக்களைச் சார்ந்தே இந்த விளக்கங்களை கொடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த சில மாதங்களாக மனதில் ஈழப் பிரச்சனை ஏற்படுத்திய வலியும், இயலாமையும் மட்டுமே என்னை அந்தப் பதிவு எழுத தூண்டவில்லை. கடந்த சில மாதங்களாகவே நண்பர்களுடன் இத்தகைய கருத்துக்களை பேசியும், எழுதியும் வந்திருக்கிறேன். என்னுடைய டிவிட்டரில் கூட கடந்த வாரம் சில டிவிட்களில் இதனைச் சார்ந்து எழுதியிருக்கிறேன்.
ஈழம் தொடர்பாகவும், ஈழப் போராட்டம் தொடர்பாகவும் பலப் பதிவுகளை கடந்த சில வருடங்களாக எழுதி விட்டு, சில நிமிடங்களில் உணர்ச்சி வேகத்தில் ஈழப்போராட்டத்தினை சார்ந்து இத்தகைய ஒரு பதிவை எழுதி விட முடியாது. ஈழத்தில் பிறக்காமல் ஈழப் போராட்டத்தினை தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் எத்தனையோ பேரில் நானும் ஒருவன். எனவே அந்த பதிவை நான் சுலபமாக எழுதி விடவில்லை. ஆனால் நான் அவ்வாறு எழுதியிருக்கிறேன் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் உள்ளது. பலர் அதனை உணராமல் மறுமொழியிட்டுள்ளது தான் வருத்தத்தை தருகிறது.

வன்னியிலும் ஈழத்தின் பிற பகுதிகளிலும் இருந்தும் செய்திகளை அறிந்து கொண்டுள்ளவர்களுக்கு நான் எதன் பொருட்டு அவ்வாறு எழுதினேன் என்பதை புரிந்து கொள்வதில் பிரச்சனை இருக்காது. அவ்வாறு இல்லாதவர்களுக்கும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தான் நான் உணர்ச்சி மிகுதியில் எழுதியதாக தோன்றும். பல நாட்கள் மனதில் போட்டு உழன்று கொண்டிருந்ததை தான் அந்தக் கட்டுரையில் கொண்டு வந்திருந்தேன். ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்ட பின்பும், நான் அதனை எழுதாமல் இருப்பது என்னுடைய எழுத்திற்கும், மனசாட்சிக்கும், நியாயமாக இருக்காது என்ற காரணத்திற்காக தான் எழுத வேண்டாம் என நினைத்து மனதில் புழுங்கிய ஒன்றினை எழுத்தில் கொண்டு வந்தேன்.

நீண்ட விளக்கங்களை அளிக்க கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. அதனால் மிக சுருக்கமாக என்னுடைய விளக்கங்களை அளிக்க முயல்கிறேன்.

புலிகள் மீதான குற்றச்சாட்டு

1983ல் இனப்படுகொலை செய்த ஜெயவர்த்தனேவை விட மிகவும் கொடிய சர்வாதிகாரர்களாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே, சரத் பொன்சேகா போன்றவர்கள் இலங்கையில் இருக்கும் சூழ்நிலையில் புலிகளின் தேவை முன் எப்பொழுதையும் விட தற்பொழுது அதிகரித்து இருப்பதாக நான் நினைத்த தருணங்கள் உண்டு. புலிகளின் சகோதர படுகொலைகளை கூட வரலாற்று ரீதியிலான தவறுகளாகவே நான் பார்த்தேன். தவிரவும் சகோதர படுகொலைகளுக்கு புலிகள் மட்டும் காரணம் அல்ல. ஒவ்வொரு போராளி இயக்கங்களுக்குள்ளும் தனி மனித மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. அந்த மோதல்களை பேசி தீர்க்காமல் துப்பாக்கிகளால் தீர்த்துக் கொண்டனர். போராளி இயக்கங்களுக்குள் சண்டையை வளர்த்ததில் அனைத்து போராளி இயக்கங்களுக்கும், இந்திய உளவு அமைப்புகளுக்கும் பங்கு உள்ளது. எனவே மொத்த சகோதர படுகொலைகளையும் புலிகள் மீது போட்டு அவர்களை நிராகரிக்காமல் அந்த கசப்பான கறுப்பு பக்கங்களை கடந்து எதிர்காலத்தை நோக்கி செல்ல வேண்டும் என நினைத்தேன். என்னைப் போலத் தான் பலரும் நினைத்தனர். தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக புலிகள் இருந்ததும் அதற்கு காரணம்.

அப்படி மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய புலிகள் இன்று மக்களை தங்களின் தற்காப்பிற்காக அடைத்து வைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் ஏதோ சிங்கள ஊடகங்களும், இந்திய ஊடகங்களும், வெளிநாட்டு ஊடகங்களும் தரும் செய்திகளை அப்படியே நம்பி எழுதுவதாக சிலர் கருதுகிறார்கள். இந்த ஊடகங்களின் செய்திகளை நான் என்றைக்கும் நம்பியதில்லை. என் பல கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அதிகம் வெளிவராத தகவல்களை கொண்டே இருந்திருக்கிறது. எனவே சிங்கள் ஊடகங்களும், இந்திய ஊடகங்களும் கூறிய தகவல்களை நான் நம்பி எழுதியதாக சிலர் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை. அதைத் தவிர வேறு எதுவும் சொல்லும் சூழல் தற்பொழுது இல்லை.


தமிழ் ஈழம்

ஈழப் போராட்டமே வேண்டாம், சரணடைந்து விடுவோம் என நான் சொல்லவில்லை. என் கட்டுரையில் கூட கீழ்க்கண்ட வரிகளில் என் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தேன்.

இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்


தமிழ் மக்கள் அமைதியாக வாழ, தங்களுக்கான உரிமைகளை இன்று பெறுவதற்கு கூட போராட்டம் நடத்த வேண்டிய தேவை உள்ளது

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியம் அற்ற ஒன்று. உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது இயலாத ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவை தான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது. பிரிட்டன், பிரான்சு போன்ற இரு நாடுகள் மட்டும் ஏதோ கூக்குரல் எழுப்பி கொண்டிருக்கின்றன. மற்ற நாடுகள் இந்த பேரவலத்தை கண்டு அமைதியாக இருக்கும் பொழுது ஒரு தனி நாட்டினை நம் கையில் தூக்கி கொடுத்து விடுவார்கள் என நினைப்பது அப்பாவித்தனமாக தெரியவில்லையா ?

சரணடைந்து விடுவதா என பலர் கேட்கிறார்கள். வசதியான, பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இவ்வாறு கேட்பது சுலபம். ஆனால் ஈழத்திலே போர் சூழ்நிலையில் இராணுவத்திடம் சிக்கி கொண்டு தினமும் செல், ஆர்ட்டிலரி தாக்குதல்கள் மத்தியில், பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்துக் கொண்டும், பச்சிளம் குழந்தைகள் எல்லாம் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில் இந்தக் கேள்வியை கேட்போமா ? பிறக்கும் குழந்தைக்கு கூட செல்லடி தானே கிடைக்கிறது. வன்னியில் போர் சூழ்நிலையில் பசியும், பட்டினியுமாய், செல்லடி பட்டும் மனநிலை பிழன்ற சூழ்நிலையிலும் தமிழர்கள் உள்ளனர். அவர்களிடம் கேளுங்கள் இந்தப் போரினைப் பற்றியும், சரணடையாலாம் என்பது குறித்தும். எந்த தாய் தன்னுடைய குழந்தை செத்தாலும் பரவாயில்லை, புலிகளோடு இருப்பேன் என நினைப்பாள் ? மக்கள் தாமாகவே அந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும். அப்படி இல்லாவிட்டால் கிழக்கு மாகாணம் பிள்ளையானுக்கும், வடக்கு மாகாணம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் சென்று சேரும் அபாயத்தையே இன்றைக்கு நான் காண்கிறேன்.

நான் போராட்டம் தோற்கும் நிலையில் அதனை விட்டு வெளியேறுவதாக வானதி போன்றவர்கள் கூறியது வருத்தத்தை தருகிறது. சிறு வயதில் இருந்து ஈழப் போராட்டத்தினை கவனித்து வருகிறேன். அது என்னுடன் கலந்த ஒன்று. அதற்கு என்னுடைய வலைப்பதிவே ஒரு சாட்சியாக உள்ளது. தற்பொழுது நான் எதனை செய்து கொண்டிருக்கிறேனோ அதனை நிச்சயமாக செய்து கொண்டிருப்பேன். என்னுடைய எழுத்து எதையும் சாதித்து விடவில்லை. But, Something is better than Nothing. என்னுடைய பங்களிப்பு ஏதோ ஒரு வகையில் இருந்து கொண்டே தான் இருக்கும். நான் ஏற்கனவே கூறியிருந்தது போல ஈழப்பிரச்சனையை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன். மக்களின் அவலங்கள், மனித உரிமைகளை சார்ந்ததாகவே அது இருக்கும்.

நான் ஒரு சாமானியன். என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயம் செய்வதாக இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் எண்ணம். அதைத் தவிர வேறு எதுவும் என் எழுத்தினை செலுத்துவதில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன். மறுமொழிகள் மூலமும், மின்னஞ்சல் மூலமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

Leia Mais…
Sunday, May 10, 2009

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையில் கசாப்பு கடையில் கொல்லப்படும் ஆடுகளை விட கேவலமாக தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியா, சீனா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் நடைபெறும் இந்தப் போரில் மனித உயிர்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விட்டது. கொத்து கொத்தாக கொல்லப்படும் சக மனித உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இந்தியாவில் இருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் உள்ளனர். இதிலே இந்தக் கொலைக்கார நாட்டிற்கு அகிம்சை நாடும் என்றும், காந்தி பிறந்த நாடும் என்றும் பெயர் வேறு. கம்யூனிச நாடு என்ற பெயரில் சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் சீனா இந்தப் போருக்கு ஆதரவு கொடுத்து வருகிறது. ரஷ்யா, ஜப்பான் என அனைத்து நாடுகளும் இந்த கொலைக்கார கூட்டணியில் அங்கம் வகித்து செயல்படுகின்றன. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் மீது காறி துப்புகிறேன். அதைத் தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.

கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். சாமானிய மக்களான அம் மக்களை இவ்வாறான அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கியதில் சிறீலங்கா, இந்தியா, சீனா மற்றும் பிற சர்வதேச சமூகம் ஒரு காரணம் என்றால், இந்த படுகொலைகளுக்கு விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் இனி பகீரங்கமாக பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம். இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் அந்த மக்களுக்கு நாம் நியாயம் செய்வதாக இருந்தால் விடுதலைப் புலிகளை நோக்கியும் நமது குற்றச்சாட்டு அமைந்தாக வேண்டும். இது வரையில் இந்த நெருக்கடியான தருணத்தில் புலிகளை விமர்சிக்க வேண்டாம் என பலர் அமைதியாக இருந்து விட்டோம். போரை நிறுத்த வேண்டும் என்று கூக்குரல் எழுப்புவது மட்டுமே நமது நோக்கமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைக்கு வன்னிக் காடுகளிலும், வவுனியா தடுப்பு முகாம்களிலும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்களுக்கு காரணம் விடுதலைப் புலிகளும் தான்.

இன்றைக்கு சீனா, இந்தியா, சிறீலங்கா, ஜப்பான், அமெரிக்கா என அனைத்து நாடுகளும் புலிகளை எதிர்த்து நிற்கிறது. புலிகள் தங்களால் முடிந்த அளவுக்கு போராடி விட்டார்கள். இந்த நாடுகளை எதிர்த்து இந்தளவுக்கு தாக்கு பிடிக்க முடிந்ததென்றால் அதற்கு புலிகளின் போர்த்திறன் தான் காரணம். ஈராக் குவைத் மீது போர் தொடுத்த பொழுது அதனை மீட்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கை ஈராக் போன்ற பெரிய நாட்டின் படையிடம் சில நாட்களில் முடிந்து விட்டது. இத்தனைக்கும் ஈராக் அப்பொழுது மிகப் பெரிய இராணுவம் கொண்டிருந்தது. இராணுவ பலம் கொண்ட உலகின் முதல் 10 நாடுகளில் ஈராக்கும் ஒன்று. ஆனால் புலிகள் தங்களுடைய போரிடும் திறமையை எந்தளவுக்கு வெளிப்படுத்தி இருந்தனர் என்பதற்கு இந்தப் போர் ஒரு உதாரணம். இந்தப் போரில் ஈடுபட்ட ஒவ்வொரு விடுதலைப் புலி வீரரையும் வியந்து பார்க்கிறேன்.

அதே நேரத்தில் என்னுடைய இந்த விமர்சனம் என்பது தனிப்பட்ட விடுதலைப் புலிகளை அல்லாமல் அந்த அமைப்பின் தலைமையை நோக்கியே முன்வைக்கிறேன்.

2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பொழுது புலிகள் வசம் 80% தமிழீழ நிலங்கள் இருந்தது. மொத்த இலங்கை நிலப்பரப்பில் 3ல் 1 பகுதி புலிகள் வசம் இருந்தது. மொத்த இலங்கையின் கடற்பரப்பில் 3ல் 2பகுதி புலிகள் வசம் இருந்தது. அதாவது இலங்கை அரசாங்கத்தைக் காட்டிலும் பெரும் கடற்பரப்பு புலிகள் வசமே இருந்தது. இலங்கை அரசாங்கமே புலிகளுக்கு சுங்க வரி செலுத்தும் அளவுக்கு புலிகளின் கட்டுப்பாடு இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கி இருந்தனர். யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்களும் தேடுதல் வேட்டை, சோதனை போன்ற பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர். இந்த அமைதியான வாழ்க்கை நீடித்து, அரசியல் ரீதியாக போராட்டத்தை தொடர்ந்திருந்தால் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது.

எந்தப் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட இலக்கு வரை தான் இரணுவப் பாதையில் செல்ல முடியும். இராணுவப் பாதையில் பெற்ற வெற்றியை அரசியல் பாதைக்கு திருப்புவதே அந்தப் போராட்டத்தினை முழுமை அடைய வைக்கும். மாறாக புலிகளே இறுதிப் போர் என கூக்குரலிட தொடங்கினர். தங்களிடம் இருந்த 80% இடத்தை தக்கவைக்க முனையாமல், அதனையும், தங்களை நம்பி இருந்த மக்களையும் பகடைக்காயகளாக பயன்படுத்தி இன்று அனைத்து இடங்களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களை நம்பி இருந்த மக்களை சிங்கள வல்லூறுக்களிடம் பலியாக்கி கொண்டு இருக்கின்றனர்.

போர் தொடங்கிய பொழுது புலிகள் ஒவ்வொரு இடமாக பின்வாங்கிய பொழுது இது புலிகளின் போர் தந்திரம் என பேசிக் கொண்டிருந்தோம். தந்திரோபாய பின்நகர்வு என்ற ஒற்றை இராணுவ பார்வையில் மட்டுமே இந்த பின்நகர்வு பார்க்கப்பட்டது. ஆனால் அப்பொழுது இந்த தந்திரோபாய பின்நகர்வுக்கு பின்னே இருந்த மனித அவலங்களை பார்க்கவில்லை. புலிகள் பின்வாங்கும் பொழுதெல்லாம், அவர்களுடன் சேர்ந்து மக்களும் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். கிழக்கு பகுதிகளில் இருந்து பின்வாங்கி அகதியாகினர். மன்னரில் இருந்து ஒவ்வொரு இடமாக மக்கள் நகர்ந்து கொண்டே இருந்தனர். அந்த அவலத்தை நாம் அப்பொழுது பேசவில்லை. தந்திரோபாயத்தை மட்டுமே பேசினோம். புலிகளின் ஒவ்வொரு நகர்வையும் தந்திரோபாயம் என கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால் இன்று நகர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலையை அடைந்து விட்டோம்.

புலிகள் நடத்தும் போர் என்பது இன்றைக்கு ஒரு தனி நாட்டை எதிர்த்து அல்ல. உலகமயமாக்கப்பட்ட சூழ்நிலையில், உலகின் முக்கிய கடல் பாதையில் இலங்கை தீவு இருக்கும் சூழ்நிலையில் புலிகள் மொத்த உலகையும் எதிர்த்தே போர் நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. மொத்த உலகையும் புலிகளால் எதிர்க்க முடியாது. அதனை தான் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழ் ஈழம் என்பது முன் எப்பொழுதையும் விட இன்றைக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. 20002ல் அது கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தனி நாடாக இல்லாமல் ஒரு கூட்டாட்சியாக கூட தொடர்ச்சியான அரசியல் வியூகத்தில் அதனை நோக்கி சென்றிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு அது சாத்தியம் இல்லை.

தமிழ் ஈழம் என்பது இன்றைக்கு சாத்தியம் இல்லை என்பதும், அப்படியான ஒன்றை பேசிக் கொண்டிருப்பது கூட எதிர்கால தமிழ் மக்களை தொடர்ச்சியான அவலத்திலேயே தள்ளும் என்பதுமே இன்றைய யதார்த்தம். போர் ஒரு சாமானியனுக்கு ஏற்படுத்தும் கொடுமையான பாதிப்புகளை தற்பொழுது தான் முதன் முதலாக பார்க்கிறேன். ஈழப் போராட்டதினை சிறிய வயதில் இருந்து கவனித்து வந்தாலும் இந்தளவுக்கு போரின் கொடுமைகளை நான் உணர்ந்தது இல்லை. இந்தியாவில் இந்தளவுக்கு போர் குறித்த செய்திகளும் வந்ததில்லை. ஆனால் முதன் முறையாக போர் என்பது எவ்வளவு கொடுமையானது, எந்தளவுக்கு மக்களுக்கு போர் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை கவனிக்கும் பொழுது இந்தப் போரை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் இந்தப் போர் என்பது சாமானியனுக்கு தான் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மக்கள் கசாப்பு கடையில் இருக்கும் ஆடுகளை விட கேவலமாக கொல்லப்படுகின்றனர். கொல்லப்படும் மக்களை கொண்டு பரப்புரையும், எதிர் பரப்புரையும் செய்யப்படுவது அதனை விட கொடுமையானது.

அதிகாரங்களை எதிர்த்து பேசுவது, அதிகாரங்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது என்பதற்கு எல்லாம் இன்று எந்த அர்த்தமும் இல்லை. அடையாளப்பூர்வமாக அதிகாரத்தை எதிர்த்து எழுதலாம் - யாரும் படிக்க மாட்டார்கள். பேசலாம் - ஏதோ சிலர் கேட்டு விட்டு செல்வார்கள். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செய்வது போல ஆர்ப்பாட்டம் செய்யலாம் - இந்தியாவில் கைது செய்து சில நாட்கள் உள்ளே வைத்து விட்டு அனுப்பி விடுவார்கள். வெளிநாட்டில் அனுமதி பெற்று பிரச்சனை இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்தால் கைது செய்யக்கூட மாட்டார்கள். ஆனால் அதிகாரங்களை எதிர்த்து களத்தில் இறங்கி போராடினால் அதிகாரம் நம்மை அழித்து விடும் என்பதற்கு அடையாளமாகத் தான் இன்றைய போர் உள்ளது. போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். புலிகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை புலிகளே தடுத்து வைத்திருக்கிறார்கள் என ’நம்பத்தகுந்த’ குற்றச்சாட்டுகள் வரும் பொழுது மக்களை விட புலிகளோ, அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமோ முக்கியம் அல்ல.

இப்படி கொடுமையாக மக்கள் கொல்லப்படுகையில் வசதியான இடத்தில் இருந்து கொண்டு தமிழீழமே தமிழர்களுக்கு தீர்வு எனக் கூறுவது எனக்கு மோசமான சுயநலமாக தெரிகிறது. எந்த அதிகாரங்களும் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. போர் முடிந்தால் போதும். மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை குண்டுவீச்சுகள், செல் தாக்குதல் போன்றவை இல்லாமல் கழித்தாலே போதும் என்ற எண்ணமே எனக்கு இன்றைக்கு மேலோங்கியுள்ளது. ஒரு சாமானிய ஈழத்தமிழனின் எண்ணம் அவ்வாறே இருக்கும். இனி ஈழப் போராட்டம் என்பது தனி நாட்டிற்கான போராட்டமாக இல்லாமல் மக்களின் அமைதியான வாழ்விற்கு வழி ஏற்படுத்தும் ஒரு அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

Leia Mais…