வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, May 18, 2010

அஞ்சலி

தமிழீழத்திற்கான புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்து இன்றுடன் ஒரு ஆண்டு முடிவு பெறுகிறது. எவ்வளவு என்று எண்ண முடியாத அளவுக்கு பல்லாயிரம் தமிழர்களை கொன்று பெற்ற வெற்றியினை சிங்கள இனவாத அரசு கொண்டாடி வருகிறது. போரில் பலியான பல ஆயிரம் தமிழ் மக்களுக்கும், போராளிகளுக்கும் இன்று எனது அஞ்சலியை செலுத்துகிறேன். எந்த வகையிலும் அவர்களின் மரணத்தை தடுக்க முடியாத நம்முடைய இயலாமைச் சூழ்நிலையில் நாம் செய்யக்கூடியது இந்த அஞ்சலி மட்டுமே.



ஈழ‌த்திற்கான‌ இறுதிப் போரிலே த‌மிழீழ‌ தேசிய‌த் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னும் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்திருக்கிறார். அவ‌ருக்கும் என்னுடைய‌ அஞ்ச‌லியை செலுத்துகிறேன்.



Leia Mais…
Sunday, May 16, 2010

சசிகுமார் என்கிற நான்...

நான் சசிகுமார். வலைப்பதிவில் தமிழ் சசி/Tamil SASI. நெய்வேலியில் பிறந்து, வளர்ந்து இன்று நியூஜெர்சியில் இருக்கிறேன். எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. அதனால் எழுதுகிறேன். என்னைப் பாதித்த விடயங்களை எழுதுகிறேன். நான் எண்ணுவதை எழுதுகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு உலகம் இருக்கும். ஒருவரின் உலகத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளுதல் எளிதானது அல்ல. என்னுடைய உலகத்தில் நிகழும் நிகழ்வுகளை எழுதுகிறேன்.அந்த உலகத்தில் உள்ள ரத்தமும் சதையுமான மனிதர்களைப் பற்றி எழுதுகிறேன். ஆனால் நான் எழுதும் மனிதர்கள் வாழும் இடங்களில் நான் தற்பொழுது வாழ‌வில்லை. நான் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருக்கிறேன். அமெரிக்காவில் இருப்பதால் அவ்வாறு எழுதக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறேன். "என் உலகத்தில்" நிகழும் நிகழ்வுகளை எழுத வேண்டும் என்றால் என்னுடைய "தற்போதைய" இருப்பிடத்தை விட்டு வெளியேறியே எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தப் படுகிறேன்.

வாழ்க்கை நெடியது. பல ஆண்டுகள் கொண்ட இந்த வாழ்க்கையில் நாம் எதையும் திட்டமிட்டு அணுகுவது இல்லை. நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகுகிறேன் என்று சொல்பவர்கள் எல்லாம் ஏமாற்றுகிறார்கள். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டு அணுகவில்லை. எதிர்பாராத பல விடயங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளது. என் வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட ஏற்றங்கள், இறக்கங்கள், அனுபவங்களைக் கொண்டே என் வாழ்க்கையை என் அனுபவங்களால் நான் அமைத்துக் கொள்கிறேன். என் அனுபவங்களே என் வாழ்க்கையை வழி நடத்துகின்றன. அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்றாலும், என் அரசியல் கருத்துக்கள் என்றாலும், அதனை என் வாழ்க்கையின் அனுபவங்களில் இருந்தே நான் பெறுகிறேன்.

நெய்வேலியின் புறநகர்ப் பகுதியான தாண்டவன்குப்பம் என்ற குடிசைப் பகுதியை எத்தனைப் பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் நெய்வேலியில் உள்ளவர்களுக்குத் தெரியும். நான் அங்கே தான் பிறந்தேன். தாண்டவன் குப்பத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களே. நெய்வேலி டவுன்ஷிப்பில் (Township) வீடு கிடைக்காதவர்களும் இங்கே இருப்பார்கள். மொத்தத்தில் இங்கிந்தவர்கள் அடிமட்டத்தில் இருந்தவர்கள். அந்தக் காரணத்தால் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காக இடம் இழந்தப் பலரும் நெய்வேலியைச் சுற்றிய இத்தகையப் பல குடிசைப் பகுதிகளிலேயே தங்கவைக்கப்பட்டிருந்தனர்.


நான் ஏழாம் வகுப்பில் படிக்கும் வரை என்னுடைய வீட்டில் மின்சாரம் இல்லை. நெய்வேலி இந்தியாவிற்கே மின்சாரம் அளிக்கும் ஒரு நகரம். ஆனால் நெய்வேலியில் இருக்கும் ஒரு பகுதியில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையே இருந்தது 1980கள் வரை இருந்தது. கார‌ண‌ம் இந்த‌ப் ப‌குதியில் இருந்த‌ ப‌ல‌ருக்கும் பெரிய‌ வ‌ச‌தி இல்லை. ப‌ல‌ரும் சாமானிய‌ ம‌க்க‌ள். சாமானிய‌ ம‌க்க‌ளைப் ப‌ற்றி அர‌சாங்க‌ங்க‌ளுக்கோ, அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கோ, எங்கள் நிலத்தைப் பிடுங்கிய நிறுவ‌ன‌ங்க‌ளுக்கோ எந்தக் க‌வலையும் இல்லை. நெய்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட என் அப்பாவுக்கும், பாட்டிக்கும் நெய்வேலியில் வீடு இருந்தது. அன்றைக்கு அவர்கள் இருந்த கிராமத்தின் பெயர் இளவரசன்பட்டு. இன்றைக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கமாகவும், அனல்மின் நிலையமாகவும், நெய்வேலி ட‌வுன்ஷிப்பாகவும் இருக்கும் பல கிராமங்களில் இளவரசன்பட்டு கிராமமும் ஒன்று. பலக் கிராமங்களை அழித்து அதில் எழுந்து நிற்கும் நிறுவனம் தான் நெய்வேலி நிலக்கரி நிறுவனம். என் பாட்டி இருந்த‌ வீடு நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்காகப் பறிக்கப்பட்டப் பிறகு அவர்கள் ஆதண்டார்கொல்லை என்ற குடிசைப் பகுதியிலேயே குடி அமர்த்தப்பட்டனர். பிற‌கு தாண்ட‌வ‌ன் குப்ப‌ம் என்ற‌ ம‌ற்றொரு குடிசைப் ப‌குதிக்கு மாறின‌ர். ஆதாண்டார்கொல்லை ப‌குதியை பேச்சுத் தமிழில் ஆண்டாக்கொல்லை என‌ அழைப்பார்க‌ள்.

என் பாட்டி மிகச் சிறிய வயதிலேயே விதவையானவர். நெய்வேலிக்காக நிலத்தை இழந்த என் பாட்டி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் கட்டப்பட்ட ஆரம்பகாலங்களில் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாகவே பணிபுரிந்தார். என் அப்பா ஆரம்பக் கல்விக்கு மேல் படிக்க வில்லை. வாழ்க்கைத் தேவைக்காக வியபாரத்தை என் அப்பா சிறிய வயதிலேயே தொடங்கினார். முதலில் பெட்டிக் கடை, பிறகு சைக்கிள் கடை, டீக்கடை, மளிகைக் கடை எனப் படிப்படியாக உயர்ந்தார். அதனால் நான் பிறந்த பொழுது ஏழ்மையில் பிறக்க வில்லை. அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் ஒரு குடும்பத்திலேயே நான் பிறந்தேன். என் அப்பாவிற்கு ப‌டிப்பில் நிறைய‌ ஆர்வ‌ம் இருந்தும் ஏழ்மையின் கார‌ண‌மாக‌ப் ப‌டிக்க‌வில்லை. அத‌னால் த‌ன் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்தார். அத‌ற்காக‌ எந்த‌ச் செல‌வும் செய்ய‌ சித்த‌மாக‌ இருந்தார்.

படிப்பு தவிர வேறு எதிலும் கவனம் இருக்கக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கப்பட்ட பல தமிழகப் பிள்ளைகளில் நானும் ஒருவன். ஆங்கில வழிப் படிப்பே சிறந்தப் படிப்பு என்ற தமிழக மக்களின் பொதுவான மனப்பாங்கிற்கு என் அப்பாவும் விதிவிலக்கல்ல. ஆங்கில வழிப் பள்ளியிலேயே என் அப்பா என்னைப் படிக்க வைத்தார். எல்.கே.ஜி முதல் பொறியியல் வரை அவ்வாறே படித்தேன். தாண்டவன் குப்பம் பகுதியில் இருந்த அரவிந்தோ வித்யாலயா தான் நான் படிப்பைத் தொடங்கிய இடம். அக் காலத்தில் இது குடிசைப் பள்ளியாகவே இருந்தது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நெய்வேலி டவுன்ஷிப் பள்ளிக்கு மாறினேன். நெய்வேலி வட்டம் 4ல் இருக்கும் செயிண்ட் பால் பள்ளியில் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தேன். அதன் பிறகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் பொறியியல் படித்தேன்.

இயந்திரவியல்(மெக்கானிக்) பொறியியல் படித்தவுடன் எனக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. கல்லூரிப் படிப்பை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாதாரண மதிப்பெண்களையே பெற்றேன். பலப் போராட்டங்களுக்குப் பிறகே வேலைக் கிடைத்தது. வேலையிலும் படிப்படியாக நகர்ந்து இன்று அமெரிக்காவில் ஒரு முண்ணனி வங்கியில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான பொறுப்பில்‌ இருக்கிறேன். இதற்காக நான் கடினப்பட்டிருக்கிறேன். நெய்வேலி தாண்டவன் குப்பத்தில் இருந்து யாரும் எளிதாக இதில் வந்து விட முடியாது. வழிகாட்ட யாரும் இல்லாமல், ஒவ்வொரு முடிவையும் சுயமாக எடுத்து, அதனால் அடிபட்டு பாடம் கற்றுக் கொண்டு அடுத்த அடியை வைத்து நகர்ந்து இருக்கிறேன்.

இன்று அமெரிக்காவில் நான் சொகுசாக இருக்கிறேன் என்பதை நான் மறைக்கவில்லை. மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் வீட்டில் லேடஸ்ட் தொலைக்காட்சி உள்ளது. இன்னும் சில லேடஸ்ட் அயிடங்கள் உள்ளன‌. ஓரளவுக்கு நல்ல கார் இருக்கிறது. வாடகை வீடு தான் என்றாலும் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக இருக்கிறேன் என்பதை மறைக்க நான் விரும்பவில்லை. ஆனால் சிறு வயதில் கோடைக் காலத்தில் மிகவும் புழுக்கமான அறையில் மின்சாரம் கூட இல்லாத சூழலில் வீட்டிற்கு வெளியே காற்றோட்டமாகப் படுத்தால் தான் ஓரளவிற்கு நிம்மதியாக தூங்க முடியும் என்ற சூழலில் கட்டாந்தரையில் படுத்து, அதில் கிடைக்கும் காற்றிலும் தூங்கியிருக்கிறேன். அவ்வாறு தூங்கியிருப்பதால் இன்னமும் அதைப் போன்ற மக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும்.

மின்சாரம் கூட இல்லாமல் லாந்தர் வெளிச்சத்தில் படித்தக் காலமும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. நம்முடைய நிலத்தின் மீது கட்டப்பட்ட நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் இருந்து மின்சாரம் பெறவே நாம் போராடி இருக்கிறோமே என்ற ஞாபகம் என் நெஞ்சில் இருந்து அகல வில்லை. அத்தகைய அநீதி தானே சட்டிஸ்கரில், ஜார்க்கண்ட்டிலும், ஓரிசாவிலும் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகிறது என்பதை எண்ணும் பொழுது அம் மக்களுடனும் அவர்கள் நிலத்தை பறிக்க முயலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகவும் நான் அமெரிக்காவில் சொகுசாக‌ இருக்கும் சூழ்நிலையிலும் எழுதத் தோன்றுகிறது.

ஈழப் போராட்டத்தைக் குறித்து நான் நிறைய எழுதி இருக்கிறேன். அவ்வாறு எழுதுவதால் எனக்கு என்ன நோபல் பரிசா கொடுக்கப் போகிறார்கள் ? குறைந்தபட்சம் எந்த வெகுஜன இதழாவது என் கட்டுரைகளை தான் வெளியிடுமா ? இந்தியாவிற்கும், சிறிலங்காவிற்கும், கருணாநிக்கும் ஜல்ரா அடித்தால் குறைந்தபட்சம் வெற்றிப் பெற்ற ஒரு அணிக்காக வக்காலத்து வாங்கினோம் என்ற திருப்தியையாவது அடைய முடியும். ஆனால் இன்று பின்னடைவு நேரிட்ட‌ ஒரு போராட்டத்திற்காகப் பல மணி நேரம் செலவு செய்து எழுதியிருக்கிறேன். இன்றும் எழுதி வருகிறேன். எதிர்காலத்திலும் எழுதுவேன். காரணம் அந்தப் போராட்டம் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகள் சிறிய வயதில் இருந்து என்னுள் இருந்து வந்திருக்கிறது. 10 வயதில், எங்கள் ஊரில் ஜெயவர்த்தனேவின் கொடும்பாவிகள் தெருத்தருவாக இழுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்படும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து எல்லாம் அக் காலத்தில் எதிரொலித்த‌ குரலாக இதனைப் பார்க்க முடியும். இதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் என்னை இந்தப் போராட்டம் நோக்கி ஈர்த்தது.

விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் என்னுடைய சிறிய வயது ஹீரோக்கள். இதைத் தவிர நெய்வேலிக்கு பக்கத்தில் இருந்த முந்திரிக் காடுகள் தமிழ்தேசியம் பேசியக் காலம் அது. இதுவும் என்னை பாதித்தது. என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஈழத்தில் நடந்த நிகழ்வுகளை கூர்ந்து நோக்கியிருக்கிறேன். பிரபாகரனை எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு ஹீரோவாக மட்டுமில்லாமல் கடவுளாகவும் பார்த்த எத்தனையோ தமிழர்களில் நானும் ஒருவன். ஒரு சராசரி தமிழக ஈழ ஆதரவாளன் அவ்வாறே இருக்க முடியும். அது தான் பிரபாகரன் என்ற மனிதன் எங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடையாளம். நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கும் பொழுது ஈழத்தின் நினைவுகளை எழுதாமல் என்னால் இருக்க முடியாது. அமெரிக்காவில் வாழ்ந்தாலும் அதனை எழுதாமல் என்னால் இருக்க முடியாது.

தற்கால வாழ்க்கை சொகுசாக இருக்கலாம். தற்போதைய செகுசான வாழ்க்கைக்கு ஏற்ப நம் கருத்துக்களை அமைத்துக் கொள்ளலாம். பலர் அமைத்தும் கொள்கிறார்கள். ஆனால் நம்முடைய கடந்தக் காலத்தின் நினைவுகள், தாக்கங்கள், நாம் பார்த்த ரத்தமும் சதையுமான மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள், போராட்டங்கள் போன்றவற்றை நாம் அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட்டு சென்று விட முடியாது. அந்த நினைவுகளே என்னை போராட்டத்தைக் குறித்து எழுத வைக்கின்றன. அத்தகைய மனிதர்களைப் போன்ற வேறு மனிதர்களைப் பார்க்கும் பொழுது அவர்களையும் பற்றியும் எழுத வைக்கிறது. ஈழத்தின் போராட்டத்தை பார்த்து விட்டு காஷ்மீரின் போராட்டத்தையோ, நாகா மக்களின் பிரச்சனைகளையோ புறந்ததள்ளி விட முடியாது. நெய்வேலியில் நிலம் பறிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைப் பார்த்து விட்டு சட்டிஸ்கரில் நடக்கும் பிரச்சனைகளை புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு எழுதுவதால் சொல்லப்படும் வாதம், நீ ஈழத்திற்கு போ, சட்ஸ்கருக்கோ போ என்பது. இந்த நுண்ணிய அரசியலை நாம் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் இருந்தாலும், நான் கடந்து வந்த கடந்தக் காலம் என்னைக் கடந்து விடவில்லை. அது என்னுடன் ஒட்டியே வருகிறது. நினைவுகளாக ஒட்டி வருகிறது. என் வாழ்வில் நான் எதிர்கொள்ளும் நினைவுகளே என்னுடைய கருத்தாக்கங்களை வழி நடத்துகிறது. அந்த எண்ணங்களையே நான் எழுத முடியும்.

வலைப்பதிவுகள் என்பன நம் தனிப்பட்ட எண்ணங்களின் பதிவாக்கம். என் எண்ணங்களை எழுதாதே என்று செல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. என் எண்ணங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் யாருக்கும் உரிமையில்லை. எனக்கு தோன்றுவதை தான் நான் எழுத முடியும். இதனை ஏன் நீ எழுதவில்லை, இதனை ஏன் எழுதுகிறாய், ஈழம் பற்றி எழுத வேண்டும் என்றால் ஈழத்திற்குச் செல் போன்றவற்றை நான் நிராகரிக்கிறேன். நான் என்ன எழுத வேண்டும் என்பதை நானே தீர்மானிக்க முடியும்.

முதலில் நாம் எல்லாம் சாமானியத் தனி மனிதர்கள். நம்மைச் சுற்றி நமது குடும்பமும், நம்மை நம்பி இருப்போரும் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை என்பது நமக்கு மட்டும் என்பது அல்லாமல் அவர்களுக்குமானது தான். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வகையில் குடும்பமே முதன்மையானதாகிறது. ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்பவுமே வாழ்க்கை அமைகிறது. இந்த வாழ்க்கையை விடுத்து வெளியே சென்று புதிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது 33வயதில் எளிதானது அல்ல. இது ஒரு வகையில் இயலாமை கலந்து சுயநலம் என்பதை நான் மறுக்க வில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவம் அவ்வாறு தான் இருக்கிறோம் என்பதை நாம் மறந்து விட முடியாது. எனவே இருக்கின்ற சூழலுக்கு ஏற்ற பணியையே நான் செய்ய விரும்புகிறேன்.

என்னுடைய எண்ணங்களை எழுதுவதோடு மட்டுமில்லாமல் என்னால் முடிந்த‌தை செய்ய முயன்று கொண்டு தான் இருக்கிறேன். புலம் பெயர்ந்து வெளிநாட்டில் இருப்போர் எல்லாம் சுகமாக இருக்கிறோம், எதையும் செய்யவில்லை என்பன‌ போன்ற வாதத்தை நான் நிராகரிக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் எத்தனையோ பேர் இந்தியாவில் இருப்போரை விட தாங்கள் கொண்ட கொள்கைக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நான் பின்பற்றவே விரும்புகிறேன். அப்படி நான் பின்பற்ற விரும்புகிறவர்களில் முக்கியமானவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். அவரைப் பற்றி எழுதுவதை அவர் விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஆனாலும் இதனை எழுதுகிறேன். அமெரிக்காவில் இருந்து கொண்டு நிறைய விடயங்களை செய்ய முடியும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டியவர்களில் ஒருவர் நண்பர் சங்கரபாண்டி அவர்கள். தாய்த்தமிழ்ப் பள்ளிகள், ஈழம், தமிழகம் சார்ந்த விடயங்கள் என பல்வேறு செயல்பாடுகளை எந்தத் தன்னலமும் இல்லாமல் செய்து கொண்டிருப்பவர். இதற்காக அவர் செலவிடும் நேரம் அதிகம்.

அமெரிக்காவில் இன்னும் எத்தனையோப் பேர் இது போன்று தங்களால் முடிந்த பல விடயங்களைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழுவது ஒரு வகையில் பலமானதே என்பதைக் கடந்த காலங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். ஈழத்தமிழர்கள் அதனை வெளிப்படுத்தியிருந்தனர். நானும் என்னால் முடிந்த சிலவற்றையேனும் கடந்த சில ஆண்டுகளில் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல் இருக்கிறது. தமிழ்ச் சார்ந்த விடயங்களுக்கு என்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

**************

தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் நிறைய எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். முழு நேரப் பணி, குடும்பம் இவற்றுக்குப் பிறகு தான் எழுத்து என்று இருக்கிற யதார்த்தமான வாழ்க்கைச் சூழலில் எழுத நினைத்தவற்றை முழுமையாக எழுதவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனாலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதியதில் எனக்கு ஒரளவிற்கு திருப்தியும் இருக்கிறது. இனி தொடர்ந்து எழுத முடியும் என நம்புகிறேன்.

வாய்ப்பளித்த தமிழ்மணம் நண்பர்களுக்கும், வாசித்த வலைப்பதிவு வாசகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நட்சத்திர வாரத்தை ஈழப் போரில் ஆர்ட்டலரிகளுக்கும், செல்லடிகளுக்கும் பலியான மக்களுக்கும், போராளிகளுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஈழப் போராட்டம் சார்ந்த நினைவுகளை அடுத்த வாரமும் தொடர இருக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்...

Leia Mais…
Thursday, May 13, 2010

ஈழ மக்களின் இன்றைய தேவை...

மே 2009ல் நடந்த பேரழிவுக்குப் பிறகு, திக்கு திசை இல்லாமல் தமிழ்ச் சமுதாயம் அல்லாடிக் கொண்டிருக்கிறது. அர‌சிய‌ல் த‌லைமை எதுவும் இல்லாமல், எந்த‌ நோக்கும் இல்லாமல், தெளிவானப் பார்வையும் இல்லாமல் ஒரு குழ‌ப்பான‌ சூழ்நிலையிலே த‌மிழ் ம‌க்க‌ளை விட்டுச் சென்றிருக்கிறார்க‌ள் தமிழீழ விடுத‌லைப் புலிக‌ள். விடுதலைப் புலிகள் தமிழீழத்தின் பெரும்பான்மையான நிலங்களையும், வெளிநாட்டுத் தமிழர்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழுது ஒன்றாக தெரிந்த ஈழத்தமிழினம் இன்றைக்கு பல்வேறு துண்டுகளாக தெரிகிறது.

தமிழீழ தேசியத் தலைவர் பிர‌பாகரன் போன்ற‌ ஆளுமை மிக்க‌ த‌லைவ‌ர்க‌ளின் திடீர் மறைவும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையும் குழ‌ப்ப‌ங்க‌ளையே ஏற்படுத்தும். அது தான் தற்பொழுது ந‌ட‌ந்தேறி வ‌ருகிற‌து. அடுத்த‌ த‌லைமையைக் கைப்ப‌ற்ற‌ ந‌ட‌க்கும் போட்டி, ப‌ல்வேறு குழுக்க‌ளுக்குள் ந‌ட‌க்கும் மோத‌ல்க‌ள் என‌ குழ‌ப்ப‌மான‌ சூழ்நிலையே தற்பொழுது உள்ள‌து. தற்பொழுது ந‌ட‌ந்துக் கொண்டிருக்கின்ற‌ எந்த‌ நிகழ்வும் தமிழர்களுக்கு ந‌ம்பிக்கை அளிப்பதாக இல்லை. ஒரு மோச‌மான‌ கால‌க்க‌ட்ட‌த்திலே த‌மிழ‌ர்க‌ள் இருக்கிறோம். ஒரு வலுவான தலைவனை இழக்கும் ஒரு சமூகம் இப்படியான ஒரு சூழ்நிலையையே எதிர்கொண்டு வந்துள்ளதை பல்வேறு வரலாறுகளில் கண்டுள்ளோம். அதனையே தமிழர்களும் எதிர்கொண்டு வருகிறோம்.


ஈழ‌த்திலே இன்ன‌மும் சுமார் ஒரு ல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் த‌டுப்பு முகாம்க‌ளில் உள்ள‌ன‌ர். போர்க் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணிக் காரணமாக மக்களை இன்னமும் முகாம்களில் வைத்திருக்க வேண்டியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுகிறது. அது தான் காரணம் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. தமிழர் பகுதியில் நடைபெற்று வரும் சிங்களக் குடியேற்றம், சிங்கள-புத்த மயமாக்கம் போன்றவை தமிழர்கள் நிலங்களைக் களவு கொண்டு வருகின்றன. ஆரம்பக் காலங்களில் கிழக்குப் பகுதியில் நடந்த குடியேற்றங்கள் போலவே தற்பொழுது கிளிநொச்சியிலும் குடியேற்றங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் நிலம் எங்கும் சிங்கள இராணுவ முகாம்கள் நிறைந்து உள்ளன. இந்திய வியாபாரிகளும், முதலாளிகளும் ஈழ நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளனர். நெல் விளையும் மன்னாரின் விளை நிலங்களை வர்த்தகமயமாக்கும் போக்கும் நடந்து வருவதாக செய்திகளில் காண முடிகிறது.


தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களில் பிற இடங்களில் உறவினர்களை உடையவர்கள் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே சென்றிருக்கிறார்கள். ஆனால் எந்த உறவும் அற்ற மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கின்றனர். ஈழத்தின் போரை தங்களின் தலையில் சுமந்து போராடிய வன்னி மக்களை தங்கள் உறவினர்களாக்கிக் கொள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தோ, திருகோணமலையில் இருந்தோ, மட்டக்களப்பில் இருந்தோ, ஈழ மக்களின் போராட்டத்தை தாங்களே இனி சுமக்கப் போவதாக கூறும் வெளிநாட்டில் இருந்தோ இன்னமும் யாரும் முன்வாராதது வேதனையான சூழ்நிலையே ஆகும். த‌டுப்பு முகாம்க‌ளை விட்டு வெளியே வ‌ந்த‌ ம‌க்க‌ளுக்குச் ச‌ரியான‌ வாழ்வியில் தேவைகள் இன்னும் கிடைக்காத சூழ்நிலையே உள்ள‌து. போரில் த‌ங்க‌ள‌து உற‌வுக‌ளை, பெற்றோர்க‌ளை, குழ‌ந்தைக‌ளை இழ‌ந்து த‌விக்கும் இம் ம‌க்க‌ளுக்கு கூடுதல் பிரச்சனையாக த‌ற்பொழுது வாழ்விய‌ல் பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ளும் அவ‌ல‌மான‌ சூழ்நிலையே உள்ளது.

ஈழ‌ ம‌க்க‌ளின் போராட்டத்தை இனி தாங்க‌ளே சும‌க்க‌ப் போவ‌தாக‌ கூறும் வெளிநாடுத்த‌மிழ‌ர்க‌ளோ, அதிகார‌த்தைக் கைப்ப‌ற்றும் போட்டியில் பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர். நியூயார்க்கைச் சேர்ந்த வழக்கறிஞர் உருத்திரகுமார் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌த்தை உருவாக்கும் முய‌ற்சியிலே இருக்கின்ற‌ன‌ர். ம‌ற்றொரு குழு நார்வேயைச் சேர்ந்த‌ நெடிய‌வ‌ன் த‌லைமையில் ம‌றுப‌டியும் ஆயுத‌ப் போராட்ட‌த்தை முன்னெடுக்கும் முய‌ற்சிக‌ளை செய்வ‌தாக‌க் கூற‌ப்ப‌டுகிற‌து. இரு வார‌ங்க‌ளுக்கு முன்பு மே முதல் வாரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான‌ தேர்தல் அமெரிக்கா, க‌ன‌டா உள்ளிட்ட‌ நாடுக‌ளில் ந‌ட‌ந்தேறிய‌து. ந‌டைபெற்ற‌ தேர்த‌லில் ப‌ல்வேறு குழ‌ப்ப‌ங்க‌ளும், குள‌றுப‌டிக‌ளும் ந‌ட‌ந்தேறி இருப்பதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறி வருகிறது. புதின‌ம் இணைய‌த்த‌ள‌மோ த‌மிழ்நெட் குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்துவ‌தாக‌ கூறுகிற‌து. புதின‌ம் உருத்திர‌குமார் அமைக்கும் நாடு க‌ட‌ந்த‌ அர‌சாங்க‌த்தை ஆத‌ரிக்கிற‌து. தமிழ்நெட் இணையத்தளம் நெடியவன் தலைமையிலான குழுவை முன்னிறுத்துகிறது. ஒரு வருடம் முன்பு ஆங்கில‌த்தில் த‌மிழ்நெட், த‌மிழில் புதின‌ம் என‌ ஈழ‌த்தில் ந‌டைபெறும் செய்திக‌ளை த‌மிழ‌ர்க‌ளின் பார்வைக்கு ஒரே மாதிரியாக‌ கொடுத்து‌ வ‌ந்த‌ செய்தித்த‌ள‌ங்க‌ள் இன்று இரு வேறு குழுக்க‌ளை பிர‌திப‌லிக்கும் த‌ள‌ங்க‌ளாக‌ மாறிப் போன‌து தற்போதைய தமிழர்களின் வேத‌னையான‌ சூழ்நிலையை நினைவுப‌டுத்திக் கொண்டிருக்கிற‌து.


இன்னொரு புற‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ சிறீலங்கா தேர்த‌லில் ராஜ‌ப‌க்சே த‌ன்னுடைய‌ அதிகார‌த்தை ”வலுவாக” நிலை நாட்டி இருக்கின்றார். ஆனால் ஈழத்தில் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் தேர்த‌லைப் புற‌க்க‌ணித்து உள்ள‌ன‌ர். அவ்வாறான சூழ்நிலையிலும் த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு அதிக‌ இட‌ங்க‌ளைக் கைப்ப‌ற்றி இருக்கிறது - 13 இடங்கள். புலிக‌ள் இருந்த‌ கால‌த்திலே இவ‌ர்க‌ள் கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ள் 22. அத‌னுட‌ன் ஒப்பிடும் பொழுது இது குறைவான‌து தான் என்றாலும் இது ஒரு குறிப்பிட‌த்த‌க்க‌ வெற்றியாகும். என்றாலும் பெருவாரியான‌ த‌மிழ் ம‌க்க‌ள் இந்த‌ வாக்குப்ப‌திவை புற‌க்க‌ணித்து த‌ங்க‌ள் ந‌ம்பிக்கையின்மையையே வெளிப்ப‌டுத்தி உள்ள‌ன‌ர். என‌வே த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பு மீதும் ம‌க்க‌ளுக்கு பெரிய‌ ந‌ம்பிக்கை இல்லை என்ப‌தையே இந்தப்‌ புற‌க்க‌ணிப்பு தெளிவுப‌டுத்துகிற‌து.த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பும் ப‌ல்வேறு பிள‌வுக‌ளை எதிர்கொண்டே இந்த தேர்த‌லை ச‌ந்தித்த‌து. த‌னித் த‌மிழீழ‌ம் என்ற‌ கோரிக்கையை கைவிடுவ‌தாக‌வும் ச‌ம்ப‌ந்த‌ம் அறிவித்து இருந்தார்.

த‌மிழ் தேசிய‌க் கூட்ட‌மைப்பை வெளிநாட்டில் உள்ள‌ த‌மிழ‌ர் குழுக்க‌ள் ஏற்றுக் கொள்ள‌வில்லை. ஈழ‌த்தில் உள்ள‌ ப‌ல்வேறு த‌மிழ‌ர் அமைப்புக‌ளும் வெளிநாட்டில் இருந்து முன்வைக்க‌ப்ப‌டும் எதையும் ஏற்றுக் கொள்வ‌தில்லை என்ற‌ முர‌ண்ப‌ட்ட‌ச் சூழ்நிலையே த‌ற்பொழுது உள்ள‌து.

******************

போராட்ட‌ம் என்ப‌து வெற்றி அல்ல‌து தோல்வி குறித்தான‌து அல்ல என்பதையே ஈழம் என‌க்குக் க‌ற்றுக் கொடுத்துள்ளது. போராட்டம் நடைபெறுவதற்கான அடிப்படைக் காரணிகள் இருக்கும் வரை, போராட்ட‌ம் என்ப‌து போராடும் இருப்பை தொட‌ர்ந்து த‌க்க‌வைத்துக் கொள்வ‌தே ஆகும். போராட்டம் என்பது மிகவும் நெடியது. வெற்றிகளும், தோல்விகளும் இந்தப் போராட்ட சூழ்நிலையில் தொடர்ந்து நேரக்கூடிய நிகழ்வுகளே ஆகும். தோல்விகளுக்கும், வெற்றிகளுக்கும் மத்தியிலும் தொடர்ந்து போராடும் திறனைத் தக்கவைத்துக் கொள்வதே போராட்டம் ஆகும்.

Protracted People's war என்று சொல்லப்படுகின்ற மிக நீண்ட மக்கள் யுத்தத்தை மாவோ வலியுறுத்துகிறார். புலிகளின் 30 ஆண்டு காலப் போராட்டமும் மிக நெடிய போராட்டம் தான். பல வெற்றி, தோல்விகளை தொடர்ந்து சந்தித்து வந்த இயக்கம் தான் புலிகள் இயக்கம். மிக மோசமான தோல்விகளின் பொழுதும் புலிகள் தங்களின் போராடும் இருப்பை தக்கவைத்துக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தனர். அதனாலேயே அவர்களால் தோல்விகளில் இருந்து தொடர்ந்து மீண்டு வர முடிந்தது. ஆனால் 30 ஆண்டு கால நெடிய போராட்டத்தால் களைப்புற்ற புலிகள் தங்களின் ஒட்டு மொத்த போராட்ட களத்தையே வெற்றியை நோக்கி குறிவைத்தனர். வெற்றியா அல்லது தோல்வியா என்ற இரண்டு நிலைக்குள் போராட்டம் என்ற இருப்பு பறிபோனது. வெற்றி கிடைக்காமல் தோல்வி அடைந்த பொழுது போராட்டக் க‌ள‌ம் பறி போன‌து.


இன்றைக்கும் போராட்டத்திற்கான காரணிகள் அப்படியே தான் உள்ளது. சிங்கள இனவெறி முன் எப்பொழுதும் இல்லாத உச்சக்கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நாம் போராடுவதற்கான களம் தான் இல்லாமல் போனது. அது தான் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு. நான் புலிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லை. தமிழ் மக்களுக்காக செயல் திறனுடன் போராடிய இயக்கம் புலிகள் இயக்கம். விடுதலைப் புலிகள் இருந்த வரை தமிழ் மக்களை இந்த உலகம் நோக்கியப் பார்வையும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த உலகம் தமிழர்களை அணுகும் முறையையும் கவனிக்கும் பொழுது புலிகள் தமிழர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் நமக்கு தெளிவாகிறது. இறுதிக் காலத்தில் தமிழர்களை தடுத்து வைத்தது போன்ற குற்றங்களை புலிகள் புரிந்து இருந்தாலும், தமிழர்களுக்கான ஒரு அங்கீகாரத்தை கட்டி எழுப்பிய வகையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது நமக்கு இன்னமும் மதிப்பு அதிகமாகிறது.

அதே நேரத்தில் புலிகளின் முழுமையான இராணுவ அணுகுமுறை நம்முடைய அரசியல் வெளியை சிதைத்தும் வந்துள்ளது. மிக நெடியப் போராட்டத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையும் மிகவும் அவசியமாகிறது. ஒரு தலைமுறை தங்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்காலத்திற்கு விட்டுச் செல்லப் போகும் ஒரு கொடையாக போராட்டத்தை கொண்டுச் செல்ல முடியாது. அதைத் தான் ஈழப் போராட்டம் செய்தது. தொடர்ச்சியான போர் மக்களை தங்கள் வாழ்வியலை இழக்கச் செய்தது. வாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல வாய்ப்புக் கிடைக்காத மக்கள் ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கும் சூழ்நிலையை போராட்டக் களம் ஏற்படுத்தியது. வன்னியில் உள்ள மக்கள் ஆர்ட்டலரியிலும், பிற ஆயுதங்களாலும் பலியான பொழுதும் அது அவர்கள் எதிர்கால சந்ததியினருக்காக செய்யும் தியாகமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்தகைய வாதங்களை பல ஈழத்தமிழர்கள் முன்வைத்திருந்தனர். போராடும் வலுவை சிதைக்கவே சிங்கள இரணுவம் அடிப்பதாகவும், அதனை எதிர்த்தே போராட வேண்டி இருப்பதாகவும் பல நண்பர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர்.

இதை விட அபத்தமான சித்தாந்தம் எதுவும் இல்லை. தற்போதைய மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவது என்பது கால ஓட்டத்தின் நியாதிகளின் படி அபத்தமானது. தற்கால மக்களின் வாழ்க்கையை பணயம் வைப்பது எந்த வகையிலும் அறமான செயலாகாது. எனவே தான் போராட்டம் என்பது மக்களின் யுத்தமாக அந்த மக்களாகவே போராடுவதாக இருக்க வேண்டியுள்ளது. சூழலுக்கு ஏற்ற போராட்டமே அவசியமாகிறது. போராட்டத்தை காலத்திற்கு ஏற்ப மாற்றுவதையும், விலக்குவதையும் பல்வேறு நாட்டின் போரட்டக்களங்களில் நாம் பார்த்து இருக்கிறோம். மாறாக ஈழப் போராட்டம் என்பது ஒரே மாதிரியாக கணிக்க கூடியதாகவும் அமைந்து விட்டது.

******

தற்பொழுது போராட்டக் களத்தையே நாம் இழந்திருக்கும் சூழ்நிலையில் போராட்டத்தை மீள் அமைப்பது என்பது களநிலையையே பொறுத்தது. வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்கள் போராட தொடங்கினால் போராட்டம் தொடங்கும்.

இந்த உலகு ஒழுங்கு என்பது மாறிக்கொண்டே இருக்கக் கூடியதே. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. இன்றைக்கு அது அந்த சாம்ராஜ்யம் உருவான இடத்திலேயே சுருங்கி விட்டது. சோவியத் யூனியன் என்ற தேசம் மிகவும் பலமான வலுவான தேசமாக இருந்தது. இன்றைக்கு அது சுருங்கி விட்டது. நிரந்தரமாக வலுவான தேசம் என்பது எதுவும் இல்லை. அது காலவெள்ளத்திலும், ஓட்டத்திலும் மறையக்கூடியதே. புதிய தேசங்கள் உருவாவதும் நிகழக்கூடியதே. அதே நேரத்தில் அதற்கான நெடியப் போராட்டம் மக்களைச் சார்ந்தாக மட்டுமே இருக்க முடியும். அந்தப் போராட்டம் மக்களை உள்ளடக்கியது. மக்களின் உரிமைகளைச் சார்ந்தது. தனி நாடு என்பது இறுதி இலக்காக இருந்தாலும் தற்போதைய‌ சூழ்நிலையில் மக்களின் உரிமைகளே நமக்கு முக்கியமானது. இன்றையச் சூழ்நிலையில் தமிழ் மக்களின் உரிமை என்பது அவர்களின் வாழ்வியல் தேவைகளே.

*******************

ஈழத்திலே இருக்கின்ற தமிழ் மக்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்தின் எதிர்கால கட்டமைப்பிலும், போராட்டங்களிலும் கைகோர்த்து நின்றாக வேண்டியது அவசியமாகிறது. தற்பொழுது ஈழமக்களின் அடிப்படை வாழ்வியல் முன்னுரிமைப் பெறுகிற சூழலில் அந்த அடிப்படை தேவைகளை ஈழ மக்களுக்குச் செய்யும் கடமை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு உள்ளது.

ஈழத்திலே தற்பொழுது இருக்கின்ற சிங்கள ஆதிக்கமும், ஒடுக்குமுறையும் எதிர்காலத்திலும் தொடருகின்ற பட்சத்தில் போராட்டங்கள் வெடிப்பது வெகு இயல்பான ஒன்றே. அத்தகைய தருணத்திலே ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களே.

புலம் பெயர்ந்த தமிழர்களின் நிலையும், புலம் பெயர்ந்த யூத மக்களின் நிலையும் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. இத்தகைய ஒப்பீடுகளில் எனக்கு மாறுபட்டக் கருத்து இருந்தாலும், அந்த ஒப்பீடுகளில் இருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரேலின் நன்மையையும், இஸ்ரேலில் உள்ள யூதர்களின் நலனையுமே புலத்திலே இருக்கின்ற யூத மக்கள் முன்னெடுக்கின்றனர்.

புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்திலே இருக்கின்ற மக்களின் நலன்களையும், ஈழத்திலே இருக்கின்ற மக்களின் தேவையையுமே முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வது புலம் பெயர்ந்த தமிழர்களின் கடமையும் ஆகும்.

தற்போதைய தலைமுறை பல ஆண்டுகளாக நடந்தப் போரில் பலவீனமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் போராட்டத்திற்கான களம் நமக்கு இல்லை என்பதே யதார்த்தமான சூழ்நிலை ஆகும். இன்றைய சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் தேவைகள் மீள்கட்டமைக்கப்பட வேண்டும். மக்களின் இயல்பான வாழ்கைக்குரிய சூழல் அமைய வேண்டும். அவ்வாறு அமைய நாம் வழிவகுக்க வேண்டும்.



Leia Mais…
Wednesday, May 12, 2010

ப‌ரிட்டோ, டேக்கோ, ஹாட் ச‌ல்சா, ரேசிச‌ம் (Racism)

உல‌கின் ப‌ல‌ வ‌கையான‌ உண‌வு வ‌கைக‌ளில் மெக்சிக்கன் உண‌விற்கு த‌னி இட‌ம் உண்டு. அதன் சுவையே தனியானது. என‌க்கு மிக‌வும் பிடித்த‌ உண‌வு மெக்சிக்கன் உண‌வு வ‌கைக‌ள் தான். பரிட்டோ, கேஸிடியா, டேக்கோ என அனைத்துமே மிகவும் சுவையான உணவு வகைகள். மெக்சிக்கன் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது பரிட்டோ. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டொர்ட்டியாவினுள் (Tortilla) பீன்ஸ், மெக்சிக்கோ அரிசி(சாதம்), தக்காளி, சல்சா, வறுத்த சிக்கன் துண்டுகள், சீஸ் எல்லாம் போட்டு வேகவைத்து பிறகு அதன் மேல் கொஞ்சாம் சாஸ் ஊற்றி, தொட்டுக் கொள்ள கிரிமுடன் (Sour Cream) தருவார்கள். பரிட்டோவை கொஞ்சம் வெட்டி அதனை கிரிமுடன் கொஞ்சம் தொட்டு... சாப்பிட்டால்... ம்ம்ம்...நவரசம். மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்க‌ளில் சல்சாவுடன் சிப்ஸ் கொடுப்பார்கள், அதனுடன் கொஞ்சம் மெக்சிக்கன் டக்கீலாவையும் சேர்த்துக் கொண்டால்... எங்கோ பறப்பது போல இருக்கும்.

நான் டெக்சாசில் சில மாதங்கள் இருந்த பொழுது அங்கிருந்த பல மெக்சிக்கன் ரெஸ்டாரெண்ட்களில் சாப்பிட்டு இருக்கிறேன். டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளின் சுவையே தனியானது. அதைப் போன்ற சுவை நியூஜெர்சி போன்ற இடங்களில் கிடைக்காது. டெக்சாசில் கிடைக்கும் மெக்சிக்கன் உணவுகளை டெக்‍-மெக்(Tex-Mex) என‌ அழைப்பார்க‌ள். அதாவ‌து டெக்சஸ் உண‌வு முறையும், மெக்சிக்கோ உண‌வு முறையும் கொண்ட‌ க‌ல‌வையான‌ உண‌வு முறை தான் டெக்-மெக் உண‌வு வ‌கைக‌ள்.

டெக்சாசும், மெக்சிக்கோவும் இணைந்து இருப்ப‌து உண‌வு முறையால் ம‌ட்டும் அல்ல‌. க‌லாச்சார‌த்தாலும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் மிக‌ நெருக்க‌மான‌ பிணைப்பு உண்டு. கார‌ண‌ம் டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌வே 1880க‌ளில் இருந்த‌து. டெக்சாஸ் மட்டும் அல்ல. அரிசோனா, கலிபோர்னியா, நெவேடா, நியூமெக்சிக்கோ என பல மாநிலங்கள் மெக்சிக்கோவில் தான் இருந்தன. மெக்சிக்கோவுட‌ன் இருந்த‌ இந்த‌ப் ப‌குதிக‌ளை அமெரிக்கா ஒரு ஒப்ப‌ந்த‌ம் மூல‌ம் கைப்பற்றிக் கொண்ட‌து.

1821ல் மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னி ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது டெக்சாஸ் மெக்சிக்கோவின் ஒரு அங்க‌மாக‌வே இருந்த‌து. இத‌னை மெக்சிக்க‌ன் டெக்ச‌ஸ் என்று கூறுவார்க‌ள். 1821 முத‌ல் 1836வ‌ரை டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌து. டெக்ச‌ஸ் மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ இருந்த‌ பொழுது அமெரிக்காவின் பிற ப‌குதிக‌ளில் இருந்து குடியேறுவ‌து அனும‌திக்க‌ப்ப‌ட்டு இருந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ வெள்ளையின மக்கள் டெக்ச‌ஸ் ப‌குதியில் குடியேறின‌ர். இத‌னால் டெக்ச‌ஸில் மெக்சிக்க‌ர்க‌ளை விட‌ வெள்ளைய‌ர்க‌ளின் எண்ணிக்கை அதிக‌ரித்த‌து. இத்தகைய குடியேற்றத்தை த‌டுக்க‌ அப்பொழுது மெக்சிக்கோவின் அதிப‌ராக‌ இருந்த‌ அனாஸ்டாசியோ புஸ்டாமாண்டே புதிய‌ க‌ட்டுப்பாடுக‌ளையும், வ‌ரி விதிப்புக‌ளையும் கொண்டு வ‌ந்தார். உணவுப் பொருள் உற்பத்தியிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் டெக்சாசில் இருந்த‌ வெள்ளைய‌ர்க‌ளுக்கும், மெக்சிக்கோவுக்கும் இடையே பிர‌ச்ச‌னை மூண்ட‌து. இது போராக‌ உருவெடுத்த‌து. இந்த‌ப் போரில் வெற்றி பெற்ற‌ டெக்சாஸ் ஒரு த‌னி நாடாக‌ 1836ல் தன்னை அறிவித்துக் கொண்டது.

இத‌ன் பிற‌கும் மெக்சிக்கோவுக்கும், டெக்சாசுக்கும் இடையே போர் ந‌ட‌ந்த‌து. இத‌ன் தொட‌ர்ச்சியாக 1846ல் இருந்து 1848வரை அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையேயான மெக்சிக்கன்‍ - அமெரிக்கன் போர் நடந்தது. இதன் காரணமாக 1845ல் டெக்சாஸ் அமெரிக்காவுட‌ன் இணைந்த‌து.

அமெரிக்காவின் ம‌ற்றொரு மாநில‌ம் அரிசோனா. மெக்சிக்கோ ஸ்பெயினின் கால‌னிய‌ ஆதிக்க‌த்தில் இருந்து விடுத‌லை பெற்ற‌ பொழுது அரிசோனா மெக்சிக்கோவின் ஒரு ப‌குதியாக‌ 1821ல் இருந்த‌து. 1846ல் ந‌ட‌ந்த‌ மெக்சிக்கன்- அமெரிக்க‌ன் போர் கார‌ண‌மாக‌ டெக்ச‌ஸ் விடுத‌லைப் பெற்ற‌ பொழுது அரிசோனாவின் சில‌ ப‌குதிக‌ளும் அமெரிக்காவின் வ‌ச‌ம் வ‌ந்த‌து.

இதையெடுத்து ப‌ல‌ நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு க‌லிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிக்கோ, நெவேடா போன்ற மாநிலங்கள் உள்ளிட்ட மிகப் பெரும் ப‌குதிக‌ளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுக்க‌ மெக்சிக்கோ ஒப்புக் கொண்ட‌து. அரிசோனாவும் அமெரிக்கா வசம் வந்தது. ஆனால் 1912ல் தான் அரிசோனா அமெரிக்காவின் 48வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது. இது சுருக்கமான வ‌ர‌லாறு.

இன்றைய சூழ்நிலைக்கு வருவோம். இன்றைக்கு அமெரிக்காவின் ஒரு மாநிலமாக உள்ள அரிசோனா, ஒரு ச‌ட்ட‌ம் இய‌ற்றி இருக்கிறது. ‍‍‍அரிசோனாவின் குடியேற்ற‌ச் ச‌ட்ட‌ம். இந்தச் சட்டம், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி உள்ளவர்களை தடுக்கவே கொண்டு வரப்பட்டுள்ளதாக அரிசோனாவின் ஆளும் குடியரசுக் கட்சி கூறுகிறது. இந்தச் சட்டத்தின் படி போலீசார் சட்டவிரோதமாக அமெரிக்காவில் உள்ளவர்கள் என ”சந்தேகிக்கும்” நபர்களை சோதனை செய்யலாம். சோதனை செய்பவர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் இருக்கிறோம் என்பதை நிருபிக்க தங்களுடைய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அமெரிக்க குடியுரிமை உள்ளவர்கள், க்ரீன் கார்ட் வைத்திருப்பவர்கள், முறைப்படி அமெரிக்காவில் விசா பெற்று உள்ளே வந்தவர்கள் ஆகியோரிடம் ஓட்டுனர் உரிமையோ, விசா போன்றவையோ இருக்கும். போலீசார் சந்தேகிக்கும் நபர்கள் தாங்கள் சட்டப்பூர்வமாகவே இருக்கிறோம் என்பதை நிருபிக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில் இது வரையில் அப்படியான சூழ்நிலை இல்லை.

தனி மனித உரிமைகள் ”அதிகம்” மதிக்கப்படும் அமெரிக்காவில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாள அட்டை கேட்பது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் பிரச்சனையாகவுமே பார்க்கப்படுகிறது. அது தவிர சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அடையாள அட்டை கேட்கலாம் என்பதும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. போலீசார் யாரைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள் ? அமெரிக்காவில் அதிகமாக சட்டவிரோதமாக இருப்பது லாட்டினோ க்கள் தான் . அதே நேரத்தில் அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்ற லாட்டினோக்களும் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் சிறுபான்மையினராக அமெரிக்காவில் உள்ளனர்.மெக்சிக்கோ, லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் லாட்டினோ அல்லது ஹிஸ்பேனிக்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களே அதிகமாக சட்டவிரோதமாக இருப்பதால் போலீசார் தங்களையே சந்தேகிப்பர் என லாட்டினோக்கள் கூறுகிறார்கள். இந்தச் சட்டம் இனரீதியான பிரச்சனையையே ஏற்படுத்தும் என கூறப்படுகிறது - Racial Profiling.


ஒபாமா அரிசோனா மாநிலத்தின் இந்தச் சட்டத்தைக் கடுமையாகச் சாடி உள்ளார். இந்தச் சட்டத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். வ‌ல‌துசாரிக‌ளும், இட‌துசாரிக‌ளும் முட்டிக் கொள்ளும் ம‌ற்றொரு பிர‌ச்ச‌னையாக‌ இது உருவெடுத்து உள்ள‌து. ஒபாமா வெற்றி பெற்ற‌தில் இருந்தே எதிர்க்க‌ட்சியான‌ குடிய‌ர‌சுக் க‌ட்சி தீவிர‌மான‌ வ‌ல‌துசாரி நிலைப்பாட்டினை எடுக்க‌த் தொட‌ங்கியுள்ள‌தாக‌ ஒரு ப‌ர‌வ‌லான‌ குற்ற‌ச்சாட்டு உண்டு. இத்த‌கைய‌ வ‌ல‌துசாரி போக்கினையே இந்த‌ச் ச‌ட்ட‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தாக‌ இட‌துசாரிக‌ள் குற்ற‌ம்சாட்டுகின்ற‌ன‌ர். அதுவும் அரிசோனா மாநிலம் வ‌ல‌துசாரி போக்கினை மிக‌வும் தீவிர‌மாக‌ பின்ப‌ற்றும் ஒரு மாநிலம் ஆகும். ரெட் ஸ்டேட் (Red State) என்று சொல்லப்படும் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலம். டெக்சஸ், அரிசோனா போன்றவை குடியரசுக் கட்சியினரின் கோட்டை. கன்சர்வேட்டிவ்கள் வலுவாக உள்ள மாநிலம்.

அரிசோனாவின் தீவிர வலதுசாரி நிலைப்பாட்டிற்கு மிக நீண்ட வரலாறு உண்டு. 1990களில் க‌றுப்ப‌ர்க‌ளின் உரிமைக்காக‌ போராடிய‌ மார்ட்டின் லூத‌ர் கிங் நினைவாக‌ அவ‌ர‌து பிற‌ந்த‌ தின‌ம் அர‌சு விடுமுறையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌தை ஏற்றுக் கொள்ள‌ அரிசோனா ம‌றுத்த‌து. இதையெடுத்து அரிசோனா மாநில‌த்தை புறக்க‌ணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. அரிசோனாவை புறக்கணிக்கும் அடையாளமாக சூப்ப‌ர் ப‌வுல் என‌ப்ப‌டும் அமெரிக்க‌ன் புட்பால் (கால்பந்து அல்ல) போட்டிக‌ள் அரிசோனாவில் இருந்து மாற்ற‌ப்ப‌ட்ட‌ன‌. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகே அரிசோனா பணிந்தது. த‌ற்பொழுதும் புறக்கணிக்கும் அழைப்புக‌ள் விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. மெக்சிக்கோ த‌ன்னுடைய‌ குடிம‌க்க‌ளை அரிசோனா செல்ல‌ வேண்டாம் என‌ எச்ச‌ரித்து உள்ள‌து. இடதுசாரிகளுக்கும், வலதுசாரிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. ஃபாக்ஸ் தொலைக்க‌ட்சி இந்த‌ச் ச‌ட்ட‌ம் அமெரிக்காவிற்கு ந‌ன்மைக‌ளை கொடுக்கிற‌து, போதைப் பொருள்க‌ளை த‌டுக்கிறது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறது போன்ற வாத‌ங்களை முன்வைக்கிறது‌. MSNBC தொலைக்காட்சியைப் பார்த்தால் இந்தச்‌ ச‌ட்ட‌ம் அமெரிக்காவை நாசி ஜெர்மனியின் கால‌த்திற்க்கு கொண்டு செல்வதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை இந்தச் சட்டம் பறிப்பதாகவும், லாட்டினோக்களை குறிவைக்கும் Racial Profilingஐ இந்தச் சட்டம் கொண்டு வரும் எனவும் கூறுகிறது. மெசிக்கோ மக்கள் அமெரிக்காவிற்கு தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக, அதாவது 1880களில் இருந்து வேலை தேடி வந்து கொண்டிருக்கிறோம். இன்றைக்கு தாங்கள் ஏன் குறிவைக்கப்படுகிறோம் என கேள்வி எழுப்புகிறார்கள். விவாதம் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

************************

மெக்சிக்கோ-அமெரிக்கா இடையேயான வரலாற்றினை நாம் கூர்ந்து கவனித்தால் இந்தப் பகுதிகளுக்குள் வெள்ளையர்களின் குடியேற்றமும், லாட்டினோக்களின் குடியேற்றமும் தொடர்ச்சியாக இருந்து வந்திருப்பதை அறிய முடிகிறது. மெக்சிக்கோ, டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா, அமெரிக்கா இடையேயான எல்லைகள் பல்வேறு காலக்கட்டங்களில் மாறியிருக்கின்றன. அவ்வாறு எல்லைகள் மாறினாலும் குடியேற்றங்கள் எப்பொழுதுமே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. எல்லைகள் என்பன நாட்டின் அளுமை சார்ந்த ஒரு விடயமாக இருந்துள்ளதே தவிர அது ம‌க்க‌ளின் ந‌ட‌மாட்ட‌த்தை எப்பொழுதும் க‌ட்டுப்ப‌டுத்திய‌தில்லை. வெள்ளைய‌ர்க‌ள் வ‌ட‌க்கில் இருந்து தெற்கு நோக்கி ந‌க‌ர்ந்த‌து போல‌, லாட்டினோக்க‌ள் தெற்கில் இருந்து வ‌ட‌க்கு நோக்கி ந‌க‌ர்ந்துள்ளார்க‌ள். இன்றைக்கும் ந‌க‌ர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். அதுவும் அமெரிக்காவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சியும், மெக்சிக்கோவின் வ‌றுமையும் லாட்டினோக்க‌ளை மிக‌ அதிக‌மாக‌ அமெரிக்கா நோக்கி ந‌க‌ர‌ வைத்துள்ள‌து. அமெரிக்காவும் லாட்டினோக்களை தன்னுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டது. தனக்கு தேவைப்படும் நேரத்தில் மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு நடக்கும் சட்டவிரோத குடியேற்றங்களை அமெரிக்க மைய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கண்டுகொள்ளாது. ஆனால் தனக்கு தேவையில்லாத பொழுது மெக்சிக்கோவில் இருந்து வரும் குடியேற்றங்களை தடுக்கச் சட்டங்களை கொண்டு வரும்.

*****************************

சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சனை அமெரிக்காவில் இருக்கின்ற முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று. அமெரிக்காவில் சுமார் 12 மில்லியன் மக்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பான்மையானானோர், அதாவது 57% மெக்சிக்கோவில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளே ஆவார்க‌ள். பிற‌ லத்தீன் அமெரிக்கா நாடுக‌ளில் இருந்து குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் க‌ணிச‌மாக‌ இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்கள் அனைவ‌ருமே லாட்டினோக்க‌ள் அல்ல‌து ஹிஸ்பேனிக்ஸ் என‌ அழைக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளை த‌விர‌ ஆசிய‌ நாடுக‌ளில் இருந்து ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறி உள்ள‌வ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் இந்தியா, சீனா பிலிப்பைன்ஸ் போன்ற‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். லாட்டினோக்க‌ளில் ச‌ட்ட‌விரோத‌மாக‌ குடியேறுப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் அமெரிக்கா‍- மெக்சிக்கோ எல்லை வ‌ழியாக‌வே அமெரிக்காவில் நுழைகின்ற‌ன‌ர். இந்தியா உள்ளிட்ட‌ நாடுக‌ளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் முத‌லில் ச‌ட்ட‌ரீதியாக‌ அமெரிக்காவில் நுழைந்து பிற‌கு த‌ங்க‌ளின் ப‌ய‌ண‌ கால‌க்க‌ட்ட‌ம் முடிந்த‌ பிற‌கும் அமெரிக்காவில் தொட‌ர்ந்து இருந்து வ‌ருகின்ற‌ன‌ர். உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ப‌ல‌ குஜ‌ராத்தி விய‌பார‌ மைய‌ங்க‌ளில் ப‌ணிப‌ரியும் தொழிலாள‌ர்க‌ள் இவ்வாறு ச‌ட்ட‌விரோத‌மாகவே‌ குஜராத்தி வியபாரிகளால் கொண்டு வரப்படுகிறார்கள்.

மெக்சிக்கோவில் இருந்து வரும் பெரும்பாலான மக்கள் எல்லையோர மாநிலங்களான‌ டெக்சஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் தான் உள்ளனர். இப்படிச் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பெரும்பாலும் மிகக் குறைந்த சம்பளத்தில் தான் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சட்டவிரோதமாக இருப்பதை பலரும் பயன்படுத்திச் சுரண்டுகின்றனர். நம்மூரில் சுரண்டப்படும் கூலித் தொழிலாளிகளின் நிலையும் இவர்களின் நிலையும் ஒன்று தான். அமெரிக்காவில் கழிப்பறையை சுத்தும் செய்யும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் மெக்சிக்கன்ஸ் தான். கட்டடத் தொழில் தொடங்கி வீட்டு வேலை, வீட்டின் முன் இருக்கும் புற்களை வெட்டுவது வரை இதில் பணிபுரியும் எல்லோரும் மெக்சிக்ன்ஸ் தான். வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமா மெக்சிக்கன்ஸ் தான். வீட்டை மாற்ற வேண்டுமா, ஒரு மணி நேரத்திற்கு 8டாலர் கொடுத்தாலே போதும், ஆள் கிடைப்பார்கள். நான் அமெரிக்காவில் ஐந்து வருடங்களாக இருக்கிறேன். இத்தனை வருடங்களில் மெக்சிக்கன்ஸ் அல்லாத எவரும் கழிப்பறையை சுத்தம் செய்து நான் பார்த்ததில்லை. ஹீஸ்டனில் ஒரு இடம் உள்ளது. பெயர் மறந்து விட்டது. நமக்கு எந்த வேலை தேவைப்பட்டாலும் அந்த இடத்திற்கு செல்லலாம். காரை விட்டு இறங்கினால் ஏராளமான மெக்சிக்கன்ஸ் கிடைப்பார்கள். சகாய விலைக்கு வீட்டிற்கு அழைத்து வரலாம். வீட்டை சுத்தம் செய்வது, வேறு வீட்டிற்கு மாற்றுவது போன்ற வேலைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கொடுத்த காசை விட அதிகமாக அதற்காக வேலை செய்வார்கள். இவ்வாறு அடி மட்டத்தில் மிகவும் சுரண்டப்படும் தொழிலாளிகளாக அமெரிக்காவில் இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். மெக்சிக்கன்ஸ் இல்லாவிட்டால் அமெரிக்காவில் இதனை செய்ய வேறு யாரும் ஆள் இல்லை என்று கூட ஒரு வாதம் உண்டு.

இந்திய தொழில் அதிபர்கள் அமெரிக்காவில் வளருகிறார்கள் என இந்திய ஊடகங்கள் மார்தட்டிக் கொள்ளும், ஆனால் இந்த தொழில் அதிபர்கள் சுரண்டிக் கொழிப்பது மெக்சிக்கன்சை தான். பட்டேல் கடைகளில் சரக்கு எடுப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றை செய்யும் தொழிலாளர்களில் கொஞ்சம் குஜாராத்தில் இருந்து முதலாளிகள் இறக்குமதி செய்த இந்தியத் தொழிலாளர்கள் போக எஞ்சி இருப்பவர்கள் மெக்சிக்கன்ஸ் தான். இந்திய ரெஸ்டாரண்ட்களில் தந்தூரி சிக்கன் செய்து கொண்டிப்பதில் இருந்து மேசை துடைப்பது வரை மெக்சிக்கன்ஸ் தான். அவ்வளவு ஏன், நியூஜெர்சியில் திருப்பதியின் கிளையாக உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களை பக்திக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் ஏழுமலையான் கோயில் கேண்டினில் தோசை சுட்டுக் கொண்டிருப்பதும் ஒரு மெக்சிக்கன் தொழிலாளி தான். கோயிலை சுத்தம் செய்வதும் மெக்சிக்கன்ஸ் தான். ஏழுமலையானும் தொழிலாளர்களை சுரண்டியே பிரிட்ஜ்வாட்டரில் வாழுகிறார்.

இப்படி எல்லா தொழில் நிறுவனங்களிலும் அடிமட்டத் தொழிலாளியாக இருப்பது மெக்சிக்கன்ஸ் தான். காரணம் குறைந்த சம்பளம், நிறைய லாபம். சட்டவிரோதமாக இந்தத் தொழிலாளிகள் அமெரிக்காவில் இருப்பதால் முதலாளிகள் நிர்ணயம் செய்யும் சம்பளத்தை இவர்கள் வாங்கிக் கொள்வார்கள். கேள்வி கேட்பதில்லை. இவர்களை undocumented workers என அழைப்பார்கள். இந்த வழக்கம் (சுரண்டல்) தொன்று தொட்டு அமெரிக்காவில் இருந்து வருகிறது. இன்று சட்டவிரோத குடியேற்றம் என அலறும் அமெரிக்க வலதுசாரிகளும், ஊடகங்களும் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை என்றைக்கோ தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் எப்பொழுதுமே அமெரிக்க அரசாங்கமோ, இன்று சட்டத்தை இயற்றும் அரிசோனாவோ செய்ததில்லை. காரணம் இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தால் தங்களுக்கு பெரும் நன்மை இருந்ததாக அமெரிக்க நிறுவனங்களும், பொதுமக்களும், அமெரிக்க அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் கருதின. எனவே இந்தச் சட்டவிரோத குடியேற்றத்தை அதிகம் கண்டுகொண்டதில்லை. மறைமுகமாக ஊக்குவித்தன.

அமெரிக்காவுக்கு மெக்சிக்கோவில் இருந்து வேலை செய்ய தொழிலாளர்களை கொண்டு வரும் வழக்கம் 1880களில் இருந்து வழக்கில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள விவசாய பண்ணைகளில் வேலை செய்யவே மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் முதலில் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு அமெரிக்காவில் கட்டப்பட்ட ரயில் பாதைகளுக்காக தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மெக்சிக்கோவில் இருந்து கொண்டு வரப்பட்டனர். மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டதன் முக்கிய நோக்கமே மிகவும் குறைவான கூலியே. 1880களில் சுமார் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டனர். விவசாய நிலங்கள், சுரங்கங்கள், ரயில்வே பாதைகள் அமைப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த‌க் கால‌க்க‌ட்ட‌ங்க‌ளில் ர‌யில்வே ப‌ணிக‌ளில் ஈடுப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ளில் 60%க்கும் மேற்ப்ப‌ட்டோர் மெக்சிக்கோவில் இருந்தே கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ன‌ர்.

இதைத் தொடர்ந்து முதலாம் உலகப் போரின் பொழுதும் பெருமளவில் தொழிலாளர்கள் மெக்சிக்கோவில் இருந்து வரவழைக்கப்பட்டனர். போர் சூழ்நிலையில் அமெரிக்காவிற்கு பெருமளவில் தொழிலாளர்கள் தேவைப்பட்ட பொழுது மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இதனை அப்போதைய அரசாங்கமும் கண்டு கொள்ள வில்லை. போர் முடிந்த பிறகு எழுந்த மிகப் பெரிய பொருளாதார தேக்கத்தின் பொழுது (The Great Depression of the 1930s)மெக்சிக்கோ தொழிலாளர்களாலேயே அமெரிக்கர்களுக்கு வேலை பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக 1929ல் 1 மில்லியனுக்கும் அதிகமான‌ மெக்சிக்கோ தொழிலாளர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை Mexican Repatriation என அழைப்பார்கள்.

1942ல் இரண்டாம் உலகப் போர் நடந்த பொழுது போர் காரணமாக அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டது. 1929-1930ல் பெருமளவில் மெக்சிக்கோவைச் சேர்ந்தவர்களை வெளியேற்றிய அமெரிக்கா, இப்பொழுது மறுபடியும் மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத்தொடங்கியது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் பெரும் சுரண்டலுக்கே உள்ளானர்கள். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மெக்சிக்கோ அரசாங்கம் மெக்சிக்கோ தொழிலாளர்களின் உரிமைகளை காக்க சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் உள்ள பண்ணைகளில் வேலை செய்ய செல்லும் மெக்சிக்கோ தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களை அழைத்துச் செல்ல வகை செய்தல், மெக்சிக்கோ அரசாங்கம் மூலமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் கூலியை நிர்ணயம் செய்தல், பணி நேரம், பணி இடம் போன்றவற்றை மெக்சிக்கோவிலேயே நிர்ணயம் செய்தப் பிறகே அமெரிக்கா செல்லுதல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டன. அதாவது சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுத்து சட்டரீதியிலாக தொழிலாளர்களை அனுப்புவதாக இது அமைந்தது. இதனை பிராசிரோ திட்டம் (Bracero Program) என அழைப்பார்கள். பிராசிரோ திட்ட‌ம் 1942 முத‌ல் 1960கள் வ‌ரை அம‌லில் இருந்த‌து. ஆனால் இந்த‌ திட்ட‌ம் குறைந்த‌ப‌ட்ச‌ ஊதிய‌ம், ப‌ணி நேர‌ம், ப‌ணி இட‌ம், த‌ங்கும் இட‌ம் போன்ற‌வ‌ற்றை நிர்ண‌ய‌ம் செய்ததால் அமெரிக்க‌ முத‌லாளிக‌ளுக்கும், நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும், ப‌ண்ணைக‌ளுக்கும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே அவர்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க, செலவைக் குறைக்க மறுபடியும் சட்டவிரோதமாக மெக்சிக்கோவில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரத் தொடங்கினர். இதன் காரணமாக சட்டவிரோதக் குடியேற்றம் அதிகரித்தது. இந்த திட்டமும் முடிவுக்கு வந்தது.

*************************

இவ்வாறு சட்டவிரோத குடியேற்றத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வந்ததை பார்க்க முடிகிறது. அவ்வாறு இருந்த அமெரிக்காவின் ஒரு மாநிலம், இன்றைக்கு ஏன் இத்தகைய ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது ?

இதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு, பொருளாதார தேக்கம் எனப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதால் போதைப் பொருளை தடுத்து விட முடியாது. அதற்கு வேறு விதமான நடவடிக்கையே தேவைப்படுகிறது. எல்லா தொழிலாளிகளையும் குறிவைக்கும் இந்தச் சட்டம் எதனால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தப் பலத் தகவல்களை ரேச்சல் மேடோ தன்னுடைய MSNBC தொலைக் காட்சி நிகழ்ச்சியில் வெளிப்படுத்தி இருந்தார். லாட்டினோக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி இருந்தாலும், அமெரிக்காவில் பிறக்கும் அவர்களின் குழந்தைகள் அமெரிக்கர்களே. அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொருவரும் அமெரிக்க குடிமக்களே. அதன் காரணமாக அமெரிக்காவில் லாட்டினோக்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாட்டினோக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அமெரிக்காவில் எதிர்காலத்தில் வெள்ளையர்களின் அதிக்கம், அதாவது ஐரோப்பிய வெள்ளை அமெரிக்கர்களின் ஆதிக்கம் குறையும் என வலதுசாரிகள் அஞ்சுகின்றனர். இதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை வலதுசாரி மாநிலமான அரிசோனா கொண்டு வந்துள்ளதாக ரேச்சல் மேடோ குற்றம்சாட்டினார். இருக்கலாம். இந்தக் காரணமும் இருக்கலாம். அல்லது ஒபாமாவை எதிர்க்கும் ஒரு வகை உத்தியாகவும் இருக்கலாம்.

தற்போதைய எதிர்பார்ப்பு இந்தச் சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்குமா என்பதே. மக்களின் அடிப்படை உரிமை மீறும் சட்டமாக இருப்பதால் நிச்சயம் இந்தச் சட்டம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு எதிர்பார்ப்பு, சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டரீதியாக்க ஓபாமா முன்வைத்த குடியேற்ற சீர்திருத்த மசோதா. இது சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீதான சுரண்டலை தடுக்கும். தன்னுடைய இந்தப் பதவிக்காலத்திலேயே இதனை கொண்டு வரப்போவதாக ஒபாமா கூறியிருந்தார். அரிசோனாவின் இந்த குடியேற்றச் சட்டம் அதனை துரிதமாக்கும் என்பதே பலரின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.


Leia Mais…
Monday, May 10, 2010

செம்மொழி மாநாடு : தமிழறிஞர்களின் தமிழ் அரசியல்

மொழி என்பது மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் ஒரு கருவி. ஒருவரிடம் மற்றொருவர் உரையாடிக் கொள்வதில் தொடங்கி கருத்துக்களை படைப்புகளாக வடிவமைத்தல், பேச்சாற்றலைக் கொண்டு மக்களை ஈர்த்தல் என மொழியை வெறும் கருவியாக மட்டுமாக‌க் கூட‌ பார்க்கலாம். அதே நேரத்தில் மொழி ஒரு பண்பாட்டு தளத்தையும் உருவாக்குகிறது. அதனால் தான் ஆசியா முழுவதும் ஒரே மாதிரியாக தெரியும் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள், ஒவ்வொரு மொழியை பேசுபவர்களின் சூழலுக்கு ஏற்ப சில வேறுபாடுகளுடன் தனித்தனி பண்பாட்டுக் கூறுகளாகவும் வெளிப்படுகிறது. இப்படி மொழியைச் சார்ந்த ஒரு பண்பாடும், தனித்த அடையாளங்களும் எழும் பொழுது அந்த அடையாளத்தை முன்னிறுத்தி, தேசிய இனங்களாக அந்தப் பண்பாட்டினைச் சார்ந்த மக்களை முன்னிறுத்துகிறோம். எனவே மொழி வெறும் கருவியாக மட்டுமே இல்லாமல் அதன் பண்பாட்டு அம்சங்களைக் கொண்டு மக்களுடன் பின்னிப்பிணைந்து இருப்பதால் மொழியையும், அம் மொழி பேசும் மக்களையும் எவ்வளவு எளிதில் பிரித்து விட முடிவதில்லை. தங்கள் மொழிக்குப் பிரச்சனை நேரும் பொழுது அம் மொழி பேசும் மக்கள் வெகுண்டு எழுந்து தங்கள் மொழியைக் காக்க முனைகின்றனர். தமிழ் மொழி பேசுபவர்களிடம் ஹிந்தி திணிக்கப்படும் பொழுது அம் மொழியைப் பேசும் தமிழர்கள் கிளர்ச்சி செய்கின்றனர். சிங்களம் மட்டும் தேசிய மொழியாக்கப்பட்ட பொழுது இலங்கையில் தமிழர்கள் வெகுண்டு எழுந்தனர். ஒரே ம‌த‌த்தைச் சார்ந்து இருந்தாலும் பேசும் மொழி வேறாக‌ இருந்த‌தால் கிழக்கு பாக்கிஸ்தான், ப‌ங்க‌ளாதேஷாக மாறியது.

மொழியும், மொழிச் சார்ந்த வளர்ச்சியும் எப்பொழுதுமே சாமானிய மக்களை உள்ளடக்கி இருந்தால் சிறப்பானது. ஆனால் அவ்வாறு தமிழ் மொழி என்றைக்கும் இருந்ததில்லை. தமிழ் மொழியின் இலக்கியங்கள் மக்களின் இலக்கியங்களாக இல்லாமல் மேட்டுக்குடியினரின் இலக்கியமாகவே இருந்து வந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் மண்ணின் மணம் இல்லை. மண்வாசனை இல்லை. தமிழ் மக்களின் இயல்பான வாழ்க்கை ஏன் பெரும்பான்மையான தமிழ் இலக்கியங்களில் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்வி எனக்கு எப்பொழுதுமே உண்டு. தற்கால இலக்கியங்களே குறிப்பாக தலித் இலக்கியம் போன்றவையே மக்களை முன்னிறுத்துகின்றன‌.

ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், கூத்து சாமானிய மக்களின் கலை. ஆனால் கூத்துப் பாடல்கள் என்றைக்கும் இலக்கியமாக தமிழ்ச் சூழலில் இருந்ததில்லை. கூத்துப் பாடல்கள் சாமானிய மக்களின் இலக்கியங்கள். ஆனால் அவை வெறும் கூத்துகளாக கட்டமைக்கப்பட்டு விட்டன. இப்படி சாமானிய மக்களின் வாழ்க்கையையும், வாழ்வியலையும் தமிழறிஞர்களும், தமிழ்ப்புலவர்களும் புறக்கணித்தே வந்துள்ளார்கள். இப்படியான இந்த மொழி அரசியல் தொடர்ச்சியாக காலங்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் வேறுபடுத்துவது என்பது ஒரு நுண்ணிய அரசியலாகும். நான் பேசும் மொழி என்றளவில் தான் தமிழ் மொழி மீது எனக்கு காதலே தவிர வெறும் மொழி என்றளவில் இல்லை. இங்கே முன்னிறுத்தப்படுவது நான் என்ற என்னையும், நாம் என்ற மொழி பேசும் மக்களையும் தான். மொழிக்குச் சிறப்பு என்பது மொழியைச் சார்ந்தது மட்டும் அல்ல. மொழி பேசும் மக்களையும் உள்ளடக்கியே தான் இருக்க முடியும். ஆனால் தமிழறிஞர்கள் என்றைக்கும் அவ்வாறு இல்லாமல் போனதன் அரசியலை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் மொழியை முன்னிறுத்துகிறோம் என்று கூறி இவர்கள் முன்னிறுத்தியது தங்களின் அரசியலை தான். அதாவது தனி மனிதர்களான தங்களையே இவர்கள் முன்னிறுத்தி இருக்கிறார்கள்.

சரி..இதையெல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் ? ஏனெனில் இன்றைக்கும் இத்தகைய ஒரு நுண்ணிய அரசியலே தமிழ்ச் சூழலில் வெளிப்பட்டு வருகிறது. மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து மொழிக்கு நன்மை என்று கூறும் ஒரு நுண்ணிய அரசியலை தமிழறிஞர் கூட்டம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நுண்ணரசியல் இடம் பெறும் இடம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் அடுத்த மாதம் (சூன் மாதம்) நடைபெற இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த மாநாடு அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழறிஞர்கள் எல்லாம், ஒவ்வொருவராக மாநாட்டில் ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி ஐக்கியமாகி விட்டனர். இவர்கள் எல்லோரும் கூறும் காரணத்தை ஒரு வார்த்தையில் தொகுக்க முடியும் - அது இந்த மாநாட்டால் தமிழுக்குக் கிடைக்கும் நன்மையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இது ஒரு மேல் பூச்சான காரணமே தவிர, உண்மையான காரணம் - இந்த மாநாட்டில் இடம் பிடித்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம், இந்த மாநாட்டினை புறக்கணிப்பதால் தமிழக அரசை பகைத்துக் கொள்ள வேண்டுமோ என்ற அச்சம், இவ்வளவு பெரிய மாநாட்டினை நம்முடைய புறக்கணிப்பு என்ன செய்து விடும் எனவே கலந்து கொள்வோம் என்ற சால்ஜாப்பு போன்றவையே.

இவ்வாறு ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி தமிழின் அனைத்துத் துறைகளும், அமைப்புகளும் இன்று இந்த மாநாட்டில் இடம் பிடித்து விட்டன. தமிழ் வலைப்பதிவுகள், தமிழ்க் கணினி, தமிழ் இணையம், தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் பல தமிழ் அமைப்புகளும், தமிழ்ச் சங்கங்களும் இந்த மாநாட்டில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அமைப்பும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி தங்களை இணைத்துக் கொள்கின்றன. ஒரு உதாரணத்திற்கு தமிழ் விக்கிப்பீடியா இந்த மாநாடு மூலம் வீக்கிப்பீடியாவிற்கு ஆயிரக்கணக்கிலான கட்டுரைகள் கிடைக்கும் என்ற காரணத்தை முன்வைத்து செம்மொழி மாநாட்டில் தன்னை இணைத்துக் கொள்கிறது. பல தமிழ் ஆர்வலர்களை உள்ளடக்கிய தமிழ் விக்கிப்பீடியா குழுவே இவ்வாறு என்றால் அரசியல்வாதிகளை உள்ளடக்கிய தமிழ்க் கணினி அமைப்பான உத்தமம் (INFITT), தமிழ்ச்சங்கங்கள் போன்றவைகளைப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை. அரசு அறிவித்த அடுத்த நிமிடமே இந்த அமைப்புகள் செம்மொழி மாநாட்டுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டன. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்மணம் பங்கேற்கலாமா, வேண்டாமா என்ற விவாதம் நடந்த பொழுது, எந்தக் காரணம் கொண்டும் இத்தகைய மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதே என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இதனால் தமிழ்மணத்திற்குச் சில இழப்புகள் நேரலாம். ஆனால் தமிழுக்கு நன்மை என்று கூறி செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் அரசியலை என்னால் புறந்தள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. You can put lipstick on a Pig. But it is still a pig. தமிழுக்கு நன்மை என்ற உதட்டுச் சாயத்தை அணிந்து வரும் செம்மொழி மாநாட்டின் துரோக அரசியலை நம்மால் புறந்தள்ள முடியாது.

மொழியையும், மொழி பேசும் மக்களையும் பிரித்து செய்யும் அரசியல் வஞ்சகமானது. இன்று மொழியை கொண்டாடும் சூழல் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. இன்னும் சுமார் ஒரு லட்சம் மக்கள் தடுப்பு முகம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் ஒரு அசாதாரணமான சூழ்நிலையையே எதிர் கொண்டுள்ளது. கடந்த காலங்களின் ரணங்களை கடந்து அவர்கள் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகலாம். இதற்கெல்லாம் காரணம் என்ன ? அவர்கள் பேசும் மொழி. தமிழ் மொழி தான் இன்றைக்குப் பல்லாயிரம் மக்கள் பலியிடப்படுவதன் காரணமாக அமைந்து விட்டது. தமிழர்களாக அவர்கள் இருந்ததால் தான் முல்லைவாய்க்கால் கடற்கரைகளில் ஆர்ட்டலரிகளுக்கு பலியாகினர். அப்படியான சூழலில் மொழியைக் கொண்டாடி, மாநாடு எடுத்து சிறப்பிப்பது ஈழ மக்களின் துயரங்களை புறந்தள்ளும் செயலே ஆகும்.

அது மட்டுமில்லாமல் இன்றைக்கு செம்மொழி நடத்தப்படுவது தமிழ் மொழிக்காக அல்ல. இந்த மாநாடே கருணாநிதியின் தமிழினத்தலைவர் பட்டத்தை மீள்கட்டமைக்கவே கொண்டு வரப்பட்டது. கருணாநிதியின் திமுக ஈழத்தமிழர் பிரச்சனையின் பொழுது தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள முனைந்ததே தவிர தார்மீக அடிப்படையில் தமிழர் நன்மையை கருத்தில் கொள்ள வில்லை. ஈழத்தில் நடந்தப் போரை கருணாநிதியால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பது அல்ல நம்முடைய நிலைப்பாடு. ஆனால் அந்தப் போர் நடைபெற்ற சூழலில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையே தமிழர்கள் எதிர்நோக்கி இருந்தனர். காரணம் கருணாநிதி தமிழினத்தலைவராக பார்க்கப்பட்டார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சிங்கள அரசுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் தமிழர்கள் தனித்து விடப்பட்டனர். தனித்து விடப்பட்ட தமிழர்கள் தங்களுக்குள்ளாவது ஒற்றுமையாக குரல் கொடுத்து இருந்தால் 25000க்கும் மேற்பட்ட தமிழர்களின் இனப்படுகொலையை ஓரளவுக்காவது தடுத்திருக்க முடியும். ஆனால் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியே ஆவார். தன்னுடைய திமுக அரசாங்கம் தமிழகத்தில் காங்கிரசை நம்பி இருப்பதால் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு நாடகங்களை நடத்தி தமிழின அரசியலை நீர்த்துப் போகச் செய்தார். தமிழக மக்கள் அவரது நாடகங்களை உணர்ந்த பொழுது சகோதரச் சண்டை என்று புதிய ஆயுதத்தை எடுத்தார். தமிழின அரசியல் பேசியவர்களை சிறையில் தள்ளவும் அவர் தயங்கவில்லை. எல்லாம் முடிந்து குறைந்தபட்சம் தடுப்பு முகாம்களில் இருக்கும் மக்களை விடுவிக்க கூட எவ்வித‌ முயற்சியிலும் அவர் இறங்கவில்லை. தடுப்பு முகாம்களுக்கு சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவு கொடுக்கும் நிலையையே திமுக நாடாளுமன்றக் குழு எடுத்தது.

இவ்வாறு தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள தமிழின விரோத அரசியல் செய்த கருணாநிதியின் செல்வாக்கு உலகத்தமிழர்கள் மத்தியில் சரிந்தது. தமிழினத்தின் தலைவராகப் பார்க்கப்பட்ட கருணாநிதி, உலகத்தமிழர்களாலும் ஈழ ஆதரவாளர்களாலும் வெறுக்கப்பட்டார். இழந்த தன்னுடைய நிலையை உலகத்தமிழர்களிடம் பெற வேண்டிய நிலையில் கருணாநிதி இருந்தார். கருணாநிதியின் செல்வாக்கினை புதுப்பிக்க உதயமானது தான் செம்மொழி மாநாடு. அதுவும் இந்தச் செம்மொழி மாநாடு உருவாக்கப்பட்டச் சூழலையும் நாம் கவனிக்க வேண்டும்.

உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தும் பொறுப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே உள்ளது. முதலில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தை அணுகிய கருணாநிதிக்கு பரவலான எதிர்ப்பே எழுந்தது. ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழியில் மேதையுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா மாநாடு நடத்த போதிய அவகாசம் இல்லை என்று கூறி மாநாட்டை உடனே நடத்த மறுத்தார். அவர் மாநாட்டினை நிராகரிக்க வில்லை. ஆனால் கூடுதலான அவகாசத்தையே கேட்டார். ஆனால் கருணாநிதிக்கு உடனடியாக மாநாடு நடத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம். சில மாதங்களில் செம்மொழி மாநாட்டினை நடத்தியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் தமிழுக்கு நேர்ந்தது அசாதாரணமானது தான்.

சில மாதங்களில் ஒரு மாநாட்டினை நடத்த வேண்டும் என்றால், ஒரு புதிய தமிழ் அமைப்பினை உருவாக்க வேண்டும். அதைத் தான் கருணாநிதி செய்தார். உலக செம்மொழி நிறுவனத்தை புதியதாக உருவாக்கி அந்த நிறுவனம் மூலமாக மாநாடு நடத்த முனைகிறார் கருணாநிதி. எப்பாடு பட்டாவது இழந்த தன்னுடைய பெயரை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது நிலை. செம்மொழி மாநாட்டை நடத்தும் சூழ்நிலையிலும் கருணாநிதியின் தமிழின எதிர்ப்பு அரசியல் முடிவுக்கு வரவில்லை. செங்கற்பட்டில் இருந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது போலீஸ் அராஜகம் ஏவப்பட்டது. சென்னைக்கு வந்த 80 வயது மூதாட்டியான பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்டார். பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப் பட்டதற்கு இந்திய அரசு மட்டுமே காரணம் என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா அனுப்பிய அறிக்கையை தனக்குச் சாதகமாக கருணாநிதி இந்த விடயத்தில் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மையாக இருக்க முடியும். செம்மொழி மாநாடு நடைபெறும் சூழலில் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் வைகோவின் பராமரிப்பில் இருப்பதை கருணாநிதியால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? விமான நிலையம் வரைக்கும் வந்த பார்வதியம்மாள் கருணாநிதிக்கு தெரியாமல் திருப்பி அனுப்பபட்டிருப்பார் என்பதை திமுக உடன்பிறப்புகள் வேண்டுமானால் நம்பலாம். அதிகாலையிலேயே விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட போலீசார் கூட கருணாநிதிக்கு தெரியாமலேயே குவிந்து விட்டார்கள் போலும். தமிழக காவல்துறை கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லாமல் மன்மோகன் சிங் கட்டுப்பாட்டிலா உள்ளது ?

இப்பொழுது தமிழக அரசின் பாதுகாப்பில், தமிழக அரசின் செலவில், தமிழக அரசு சொல்லும் மருத்துவமனையில் பார்வதியம்மாள் சிகிச்சை பெற ஒப்புக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற இருக்கிறார். அதாவது கருணாநிதியின் கருணையால் பார்வதியம்மாள் சிகிச்சை பெற இருக்கிறார். தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கும், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் அனாதைகளாக சுற்றித் திரியும் வயதான தமிழர்களுக்கும் இன்னமும் நாதி இல்லாத சூழ்நிலையில் ஒரு பார்வதியம்மாளுக்காவது இப்படி ஏதேனும் ஒரு வழியில் சிகிச்சை கிடைப்பது நமக்கு மகிழ்ச்சியே.

இப்படி தொடர்ச்சியான தமிழினத்திற்கு எதிரான அரசியல் முன்னிறுத்தப்படும் சூழலிலும் தமிழறிஞர்கள் தமிழுக்கு நன்மை என்ற வாதத்தை முன்வைப்பது எவ்வளவு அபத்தமானது என்பதை நாம் விளக்க தேவையில்லை. தமிழறிஞர்கள் என்பவர்கள் தங்களின் சுயநலத்தை அடிப்படையாக கொண்டே இம் மாநாட்டினை ஆதரிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

**************

அதே நேரத்தில் நான் யாரையும் செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை. எண்ணற்றப் புறக்கணிப்பு முழக்கங்களையும், எண்ணற்ற மனுக்களையும், தொலைபேசி அழைப்புகளையும், மின்னஞ்சல்களையும் அனுப்பி அலுத்தும் போய் விட்டது. நான் இங்கு முன்வைப்பது இவர்களின் அரசியலையே ஆகும். தமிழர்களின் அரசியல் அலங்கோலமே இன்றைய தமிழர்களின் வாழ்வியல் அலங்கோலத்திற்கும் முக்கியக் காரணம். எனவே இங்கே நான் பேசிக் கொண்டிருப்பது, செம்மொழி மாநாட்டின் அரசியலையும், தமிழறிஞர்களின் நுண்ணரசியலையுமே ஆகும்.

தவிரவும் இன்று தமிழர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? ஈழத்தில் இராணுவத் தடுப்பு முகாம்களில் இருப்பவர்களா? தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்தும் தங்களின் மொத்த குடும்பத்தையும் போரில் இழந்து யாரும் இல்லாத அனாதைகளாக நடைபிணமாக திரிபவர்களா? தங்களுடைய தந்தையையும், தாயையும் இழந்து யாருமற்ற அனாதைகளாக இருக்கும் குழந்தைகளா? போராளிகளாக இருந்து சிறைப் பிடிக்கப்பட்டு தங்களின் இந்த வாழ் நாளில் சிறைக்கூடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கும் இளைஞர்களா? யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும், கொழும்பிலும் இந்தப் பிரச்சனைகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த‌ தமிழ் பேசும் மக்களா? வெளிநாடுகளில் கூக்குரலிட்டு விட்டு இன்று அமைதியாக இருக்கின்ற வெளிநாட்டு தமிழர்களா ? ஈழம் ஒரு பொருட்டல்ல, பணமே பிரதானம் என நிருபித்த தமிழக மக்களா? எதையும் செய்ய இயலாமல் உலகமயமாக்கத்தின் சுகத்தையும் இழக்க முடியால் இயலாமையுடன் திரிந்து கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களா? யார் தமிழர்கள்? எந்தத் தமிழர்களை நோக்கி நான் தமிழர்களே செம்மொழி மாநாட்டை புறக்கணியுங்கள் எனக் கூற முடியும் ? அதனால் நான் யரையும் செம்மொழி மாநாட்டைப் புறக்கணியுங்கள் என சொல்லப் போவதில்லை.

********

செம்மொழி மாநாடு மிகப் பெரிய விழாவாக, பல நூறு கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது என்பதை நடந்து வரும் ஏற்பாடுகள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. கோவையில் புதிய சாலைகளும், அழகான பூங்காக்களும் இந்த மாநாட்டினையொட்டி அமைக்கப்படுகின்றன‌. அரசின் இலவச பேருந்துகள் பல லட்சக்கணக்கான மக்களை கோவைக்கு கொண்டு வந்து குவிக்கும். அது தவிர உலகெங்கிலும் இருந்து கோவை வரும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விமானப் பயணம், தங்குமிடம் என அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்கள். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் இருந்தும், கனடாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் இலவச பயணமாக கோவை செல்கிறார்கள். இவ்வாறு பல நூறு கோடி ரூபாய் செலவில் இந்த விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இப்படி குவிக்கப்படும் தமிழர்களை கொண்டு தான் மட்டுமே தமிழினத் தலைவர் என கோவையில் கருணாநிதி சூளுரைக்க இருக்கிறார்.

அதற்காக கோவை செல்லவிருக்கும் தமிழறிஞர்கள், தமிழன்பர்கள், உடன்பிறப்புகள், கதர் வேட்டிகள் அனைவருக்கும் என்னுடைய bon voyage wishes.

Dudes, Have a nice, memorable and historic trip to Coimbatore. May your name gets mentioned in the history.

bye for now...

Leia Mais…
Sunday, May 09, 2010

தமிழ்மணம் நட்சத்திரம், எழுத்து அரசியல், ஈழ‌ம்

தமிழ்மணத்தின் நட்சத்திரமாகி இருக்கிறேன். 2005ல் முதல் முறையாக நட்சத்திரமாகியப் பிறகு 2010ல் மறுபடியும் நட்சத்திரம். 2004ல் தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வலைப்பதிவுகளுடன் நெருக்கமாக இருந்து வருவது எனக்கே ஆச்சரியமான ஒன்று தான். நான் எழுதத் தொடங்கியக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தவர்களில் பலர் இப்பொழுது எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். பலப் புதியவர்கள் ஒவ்வொரு மாதமும் வலைப்பதிவில் நுழைந்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கிப் பெருகி விட்டது. இன்றைக்குச் சுமார் ஏழாயிரத்திற்கும் அதிகமான வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. எழுதப்படும் அனைத்தையும் வாசிக்க முடிவதில்லை. வாசிக்க முடிவதெல்லாம் சிறந்த படைப்புகளாக இருப்பதும் இல்லை. தினந்தோறும் எழுதப்படும் எண்ணற்றக் கட்டுரைகளில் எத்தனையோ நல்லப் படைப்புகள் யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஒளிந்து கொள்கின்றன.

வலைப்பதிவுகள் குழு மனப்பான்மை உடையது. நம்முடையப் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு குழுவுடன் நம்மை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தங்களை ஏதேனும் குழுவுடன் ஐக்கியப்படுத்திக் கொள்பவர்கள் வேகமாக பிரபலமாகிறார்கள். திரட்டிகளின் ஓட்டுகளை பெறுவதற்கும் அது ஒரு முக்கிய தேவையாகவும் இருக்கிறது. நான் முதலில் வலைப்பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய பொழுது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வலைப்பதிவுகள் இருந்தன. அந்தச் சூழ்நிலையிலும் குழு மனப்பான்மையை உணர்ந்து இருக்கிறேன். சில மாதங்கள் வலைப்பதிவுகளை வாசித்தப் பிறகு நாமும் எழுத வேண்டும் என யோசித்த பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக் குறித்த‌ வ‌லைப்ப‌திவை தொட‌ங்கினேன். அப்பொழுது ப‌ங்குச்ச‌ந்தைக்கு என்று ஒரு த‌னி வ‌லைப்ப‌திவை த‌மிழில் யாரும் வைத்திருக்க‌வில்லை. நான் ப‌ங்குச்ச‌ந்தை குறித்து எழுத‌த்தொட‌ங்கிய‌த‌ற்கு அதுவும் ஒரு கார‌ண‌ம். அது தான் எந்தக் குழுவிலும் சேராமல் என்னை ஒர‌ள‌வுக்கு அடைய‌ள‌ப்ப‌டுத்திய‌து. அத‌னை தொட‌ர்ந்து என்னுடைய‌ காஷ்மீர் குறித்த‌க் க‌ட்டுரைக‌ளும், ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்டுரைக‌ளும் ந‌ல்ல‌ அறிமுக‌த்தைக் கொடுத்த‌ன.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை கூடிய அளவிற்கு தரம் கூட வில்லை என்ற குறைபாடும், குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரளவுக்கு உண்மை தான். என்றாலும் இன்று இருக்கின்ற வெகுஜனப் பத்திரிக்கைகளை விட தமிழ் வலைப்பதிவுகளில் நல்ல படைப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒரு பிரச்சனைக் குறித்த பல்வேறு கோணங்களை வலைப்பதிவுகள் நமக்கு வழங்குகின்றன. தமிழ் எழுத்து உலகில் ஒரு சில எழுத்தாளர்கள், வெகுஜன ஊடகங்களின் பார்வை மட்டுமே நமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில் இது மிகப் பெரிய கருத்தாக்க வெளியை நமக்கு வழங்குகிறது. ஆனால் அதனை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்கிறோமா என்று நோக்கினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. திரைப்பட விமர்சனம் போன்றவற்றில் ஒரு திரைப்படம் குறித்து பலக் கோணங்கள் கிடைக்கின்றன. ஆனால் முக்கிய சமூகப் பிரச்சனைகளில் பல வேறுபட்ட கோணங்கள் கிடைப்பதில்லை. சினிமாவை மாறுபட்டு உள்வாங்கும் நமது சமூகம், சமூக வாழ்வியல் பிரச்சனைகளை ”பெரும்பாலும்” ஒற்றைப் பரிமாணத்திலேயே பார்க்கிறதோ என்ற கருத்து எனக்குள்ளது.

***************************

தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சியும், இணையத்தின் வளர்ச்சியும் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. இன்றைக்குப் பல எழுத்தாளர்களின் எழுத்துகளுக்கு உடனுக்குடன் வாசகர்கள் கிடைக்கிறார்கள். அவ்வாறு கிடைப்பதால் அவர்கள் எழுதும் எழுத்துக்கு "ரசிகர்களும்" பெருகி இணைய வாசகர் உலகம் பல ரசிக குழுக்களால் சினிமா ரசிகர் மன்றங்கள் போன்ற குழும மன்றங்களாக மாறி விட்டது. சாருவுக்கு ஒரு கோஷ்டி, ஜெயமோகனுக்கு ஒரு கோஷ்டி என சினிமா ரசிகர் மன்றங்களை ஒத்த ரசிகர் குழுக்கள் இங்கே உருவாகி விட்டது.

இந்தக் குழுக்களை தொடர்ச்சியாக கட்டமைக்க எழுத்தாளர்கள் முனைகின்றனர். இந்தக் குழுக்க‌ளை த‌க்க‌வைக்க‌ இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்பொழுது தங்களுக்குள் சண்டைகளை உருவாக்கி, ந‌ல்ல‌ சுவார‌சிய‌மான‌ மோத‌லை அவ்வ‌ப்பொழுது வ‌ழ‌ங்கிக் கொண்டிருக்கிறார்க‌ள். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் எல்லாமும் கார்ப்பரேட் மயமாகி வரும் சூழலில் எழுத்தும் கார்ப்பரேட் யுகத்தை நோக்கித் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாசகர்கள் ரசிகர் மன்றங்களாகவும் பிறகு வாடிக்கையாளர்களாகவும் மாறும் பரிணாம வளர்ச்சியில் தான் சாமியார்களுக்கு விளம்பர சேவைகளையும் இந்த எழுத்தாளர்கள் புரிந்து வருகின்றனர். எழுத்தாளர்கள் தங்களின் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ச்சியான குப்பைகளை தங்கள் வலைத்தளத்தில் ஓய்வில்லாமல் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படிக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள் சாரு நிவேதிதாவும், ஜெயமோகனும்.

இவர்கள் எழுதுவது பெரும்பாலும் சுவாரசியமான குப்பைகள் தான் என்றாலும் சாரு கொட்டும் குப்பைகளை கூட‌ கலகம் என புளகாங்கிதம் அடைய‌ ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்தியக் காலத்திலும், போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தக் காலத்திலும் ஈழத்தைப் பற்றி எழுதவே சாரு தொடை நடுங்குவார். மே2009க்குப் பிறகு பிரபாகரன் சேவ் செய்து சரண‌டைந்து விட்டார் எனப் பல மாதங்களுக்குப் பிறகு யோசித்து எந்தப் பிரச்சனையும் தனக்கு ஏற்படாது என உறுதிப் படுத்திக் கொண்டு எழுதினார் சாரு. உடனே அவர் ரசிக சிகாமணிகள் எல்லாம் சாருவுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள், பெரிய கலகத்தையே புரிந்து விட்டார் என புல்லரித்து மகிழ்ந்தனர்.

இந்த எழுத்துலகக் கலகப் புல்லரிப்பின் மிகை உணர்ச்சியைப் பார்த்தால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியை விட அசத்தலான நகைச்சுவையாக இருக்கும். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் ”நொஞ்சான்” தமிழ்மணத்தை நாலு சாத்து சாத்தினால் பெரும் கலகத்தை ஏற்படுத்தியவர் என்ற பட்டம் கிடைக்கும். யோனி என்ற வார்த்தையை எழுதினாலே கலகம். காமக்கதை என்ற தலைப்பு வைத்தாலே பெரும் கலகம். இதுவெல்லாம் கொஞ்சம் ”ஓவர்” என்று இந்த கலக எழுத்தாளர்களுக்கும், ரசிக சிகாமணிகளுக்கும் தெரியாதது தான் அதை விட நகைச்சுவையானது.

ஜி.நாகராஜன் மிகச் சிறந்த எழுத்தாளர். அவரது குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே போன்ற நாவல்கள் வெளிவந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலியல் தொழிலாளர்களும், தன் மனைவியையே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவனும் இவர் நாவலின் கதாநயகர்கள். தான் கலகம் புரிவதாக இவர் சொல்லிக் கொண்டதில்லை. அதன் பிறகு எத்தனையோ பேர் தமிழில் பாலியல் கலகத்தைப் புரிந்து விட்டனர். பாலியல் வெகுஜன ஊடகங்களிலும் பரவலாக பலரால் அலசப்பட்டது. பல வெகுஜன பத்திரிக்கைகள் மிக விலாவாரியாக கட்டுரைகள் எழுதி பாலியல் மூடு மந்திரங்களை அவிழ்த்தன. விஜய் டிவியில் வந்த புதிரா, புனிதமா அந்தக் காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுவும் ஒரு பெண் பாலியல் கேள்வி கேட்பதா எனக் கூக்குரல் எழுந்தது. இன்றைய நவீன இணையக் காலத்தில், இணையத்தை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பாலியல் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் உள்ளது என்றே சொல்லலாம். அவ்வாறான நிலையில் காமக்கதை என்று எழுதுவதே கலகம் என்று எண்ணும் காமெடி எல்லாம் தமிழ் வலைப்பதிவுலகில் மட்டுமே நிகழ்க்கூடியது. இதனால் என்ன பயன் என்றால் தமிழ்மணம் வலைப்பதிவுக்கு வரும் தேடலில் பெரும்பாலும் காமக்கதையை தேடிய கூகுள் தேடல்கள் தான் அதிகமாக வருகின்றன. இனி என்னுடைய இந்தக் கட்டுரைக்கும் அதிக தேடல் கிடைக்கும் என நம்புகிறேன். அந்த வகையில் இது ஒரு தேடல் கலகம் தான்.

இன்னொரு நகைச்சுவையை உதாரணமாக கூற வேண்டும் என்றால் சமீபத்தில் வலைப்பதிவில் நடந்த லீனா மணிமேகலைச் சார்ந்த விடயத்தை கூறலாம். லீனா ஒரு கவிதையை எழுத அதனை விமர்சித்து வினவு தளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. கலகம், கட்டுடைப்பு என்று கூறும் லீனா மணிமேகலை போன்றவர்கள் விமர்சனம் என்று வரும் பொழுது மட்டும் பெண் என்ற கேடயத்தை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். அவர்களை ஆதரிப்பவர்களும், விமர்சனம் செய்பவர்களை ஆணாதிக்கம் மிக்கவர்கள் என குற்றம்சாட்டுகின்றனர். இது ஒரு அலுப்பூட்டும் வாதம். பெண்ணியவாதிகளை விமர்சிக்கவே பல நேரங்களில் தயக்கமாக உள்ள காரணங்களில் இந்த ஆணாதிக்க முத்திரையும் ஒரு முக்கியக் காரணம். இங்கே விமர்சனம் செய்த வினவுக்கு ஆணாதிக்கவாதி என்ற பட்டமே கிடைத்தது. லீனா மணிமேகலைக்கு எதிராக‌ ஒரு விமர்சனக் கட்டுரை முன்வைக்கப்பட்டவுடன் தமிழ் அறிவுஜீவிகள் எல்லாம் சிலிர்த்து எழுந்தனர். ஈழப் போராட்டம் நடந்தக் காலத்தில் ஒரு கூட்டம் கூட நடத்த துப்பில்லாத தமிழ் நாட்டின் அறிவுஜீவிகள் எல்லாம் கொதித்து எழுந்து இல்லாத எதிர்ப்புக்கு கண்டன கூட்டம் நடத்த தொடங்கி விட்டனர். லீனா மணிமேகலை எழுதுவதை யார் தடை செய்தார்கள்? லீனா மணிமேகலைக்கு அப்படி என்ன தான் எதிர்ப்பு எழுந்தது ? அவர் எழுதியக் கவிதைக்கு ஒரு விமர்சனக் கட்டுரை. அவ்வளவு தான். இல்லாத எதிர்ப்புக்கு ஒரு கண்டனக் கூட்டம் நடத்தும் போலி அறிவுஜீவிகளுக்கு அ.மார்க்சின் தலைமை ஆச்சரியப்படுத்த வில்லை. இதில் இன்னொரு உச்சக்கட்ட காமெடி என்னவென்றால் லீனா மணிமேகலையின் கவிதை, தமிழ்க் கவிதையை அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறதாம். இது வேறையா...அடங் கொய்யால...நல்ல வேளையாக இதைப் பார்க்க அடுத்த நூற்றாண்டில் நான் இருக்கப் போவதில்லை.

இப்படி நாம் கூறினால் உடனே யோனி என்ற புரட்சி வார்த்தைக்கு நாம் எதிரானவர்கள், கலாச்சாரக் காவலர்கள், ஆணாதிக்கவாதிகள் என பட்டம் கிடைக்கும். ஆனால் கோணேஸ்வரிகள்...என்ற இந்தக் கவிதை தரும் உணர்வுகளையும், கருத்தின் ஆழத்தையும் லீனா மணிமேகலை போன்ற கவிஞர்களின் புரட்சிக்(?) கவிதைகள் நமக்குத் தருவதில்லை.

***************************

2005ல் முதலில் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். இன்றைக்குத் திரும்பி பார்த்தால் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. என்னுடைய எழுத்து பெரும்பாலும் அரசியல் சார்ந்தாகவே இருந்து வந்திருப்பதால் நான் சார்ந்த, ஆதரித்த, முன்வைத்த அரசியல் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டது போன்ற உணர்வு எனக்குள்ளது. நாம் முன்வைத்த அரசியலை எல்லாம் மீள் ஆய்வு செய்து, முதலில் இருந்து அரசியலையும், கருத்தாக்கங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டுமோ என்ற உணர்வு கூட ஒரு நேரத்தில் எழுந்தது உண்டு. அதே நேரத்தில் தற்போதைய சமுதாய முறையையும், அநீதியான சூழலையும், அராஜகமான அதிகாரமையப் போக்கினையும், தற்போதைய உலக ஒழுங்கினையும் எப்பொழுதும் நிராகரித்து வந்திருக்கிறேன் என்ற வகையில் ஒரு வகையான திருப்தியும் எனக்குள்ளது.

***************************

மே 2010, தமிழினப் பேரவலத்தின் ஒரு வருடத்தை குறிக்கும் நினைவு மாதம். புலிகளின் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து 12 மாதங்கள் முடிந்து விட்டன. சுமார் 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் முல்லைவாய்க்கால் கடற்க்கரை மணலில் புதைக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் விட்டனர். ஒரு மனிதப் பேரவலத்தை உலகமே கண்டுகொள்ளாத உலக ஒழுங்கிலும், சக தமிழர்கள் கூட முழுமையாக இந்த அவலத்தை உள்வாங்காத சூழ்நிலையிலும் வாழ நேர்ந்ததன் துக்கத்தை மறுபடியும் நினைவு கூறும் மாதமாக மே 2010 மாறியுள்ளது.

இந்த ஒரு வருடத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வியலை மீள் அமைக்கவே அராஜகச் சூழலை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கான அரசியல் என்பது இன்றைக்கு ஏதும் இல்லை என்பதான சூழ்நிலையே உள்ளது. இன்றைய அநீதியான உலக ஒழுங்கை மட்டுமல்ல அவர்களின் அரசியல் பாதையை செப்பனிட வேண்டிய தமிழ் அரசியல் சூழலும் அந்த அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டிய தமிழ் அறிவுஜீவி சூழலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தற்போதைய ஒட்டுமொத்த பின்னடைவுக்கும் புலிகளே காரணம் என முடிவு செய்து விட்ட தமிழ் அறிவுஜீவி உலகம் அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்து கொண்டிருந்ததிலேயே கடந்த 12 மாதங்கள் கழிந்து போய் விட்டன. சிறீலங்கா அரசாங்கத்தை நோக்கியே தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கேட்க வேண்டி உள்ளதாக குரல் எழுப்பிய அறிவுஜீவிகள் எல்லாம் இன்று தமிழ் திரையுலகில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தமிழீழத்தை முன்னிறுத்தி அரசியல் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழின அரசியல் என்ற பெயரில் தங்களின் சுயநல அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வைகோ, திருமா, கி.வீரமணி, நெடுமாறன், சுப.வீரபாண்டியன் என எல்லோரும் தங்களின் தேவைக்கு ஏற்ப தமிழின அரசியலை முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய பள்ளிக் காலத்தில் என்னை அதிகம் பாதித்தவர்கள் சுப.வீரபாண்டியன் மற்றும் தியாகு போன்றோர்களே. ஆனால் இன்றைக்கு சுப.வீரபாண்டியனை பார்க்கும் பொழுது எனக்கு ஏமாற்றமே ஏற்படுகிறது.

கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் இன்றைக்கு ஒரே தராசில் தான் எடை போட வேண்டி இருக்கிறது. தமிழின உணர்வாளர்களாக இருந்த உடன்பிறப்புகளை ரத்தத்தின் ரத்தமாக மாற்றிய பெருமை கருணாநிதியையேச் சாரும். அது தான் அவர் தமிழ் சமுதாயத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியம் (Legacy).

***************************

அடுத்த ஒரு வாரத்திற்கு இத்தகைய பல்வேறு விடயங்களை தொட்டுச் செல்வதான எண்ணத்தில் இருக்கிறேன். விரிவாக எழுத முடியா விட்டாலும் தொட்டுச் செல்ல முடியும் என நம்புகிறேன்.

தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நண்பர் சங்கரபாண்டிக்கு என்னுடைய‌ நன்றி...

Leia Mais…