வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, October 24, 2006

இலங்கை : கூட்டாட்சியா ? போரா ?

ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும்.

ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்ட பாதையில் சரியாக முன்னேறியிருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு வருட நிகழ்வுகள் இலங்கையின் சிக்கல் மிகுந்த காலமாக பலர் பார்க்கிறார்கள். புலிகளுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பலர் நம்புகிறார்கள். அவ்வாறு நம்பும் பல ஈழத் தமிழர்களின் குரல்களையும் கேட்க முடிகிறது. ஊடகங்கள் புலிகள் பலவீனம் அடைந்து இருப்பதாக எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஒரு வருடம் தான் ஈழப் போராட்டத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் நினைக்கிறேன். ஏனெனில் இந்த ஒரு வருடம் ஈழப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தின் தொடக்கம். திட்டமிட்ட ஒரு பாதையின் அடுத்த கட்டம்.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் பெற்ற வெற்றிக்கு பிறகான கடந்த ஒரு வருட நிகழ்வுகள் முக்கியமானது. மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்றதற்கு காரணம் தமிழர்களின் தேர்தல் புறக்கணிப்பு தான். பிரபாகரன் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தன் முக்கிய நோக்கம் சிங்கள் இனவாதத்தை வெளிப்படுத்துவது தான் (இது குறித்த என்னுடைய முந்தையப் பதிவுகள் - தேர்தலும் தமிழ் ஈழ அங்கீகாரமும், புதிய யுத்தம்).

கடந்த ஓராண்டுகளாக நடந்து வரும் நிகழ்வுகளை நோக்கும் பொழுது அந்த நோக்கம் வெற்றி பெற்று இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச சமூகம் ராஜபக்ஷவின் சிங்கள தேசியவாத முகத்தின் மனித உரிமை மீறல்களை கண்டித்திருக்கிறது. அதன் போர் உத்திகளை உணர்ந்திருக்கிறது. ஆனாலும் அதனை தடுக்காத இரட்டை வேடத்தை தான் வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதனை அப்படியே தொடர முடியாது என்பதற்கு சாட்சியாகத் தான் பல நாடுகள் தங்களது பொருளாதார உதவிகளை நிறுத்தப்போவதாக அச்சுறுத்த தொடங்கியிருக்கின்றன. ஜெர்மனி அதை செயலிலும் காட்டியிருக்கிறது.

Unitary Nation என்ற கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்றிய ராஜபக்ஷ, புலிகள் கொடுத்த நிர்பந்தத்தால் ஒரு Federal அமைப்பில் ஆட்சிப் பகிர்வை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நிலைக்கு ஆளானார். அதிலிருந்து தப்பிக்க போர் நோக்கி ராஜபக்ஷ செல்ல தொடங்கினார். இதற்கிடையில் தென்னிலங்கை அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் போக்கில் முனைந்தார். ஆனால் சிங்கள தேசியவாதக் குழுக்களின் போர் முழுக்கத்திற்கு கட்டுப்பட்டு போர் புரிய முனைந்த பொழுது, புலிகள் சம்பூரில் இருந்து தங்கள் படைகளை விலக்கிக் கொண்டனர். இது சிங்கள இராணுவத்திற்கு கிடைத்த வெற்றியாக சித்தரிக்கப்பட்டது. ஒரு வகையில் சம்பூரில் இருந்து புலிகள் தங்கள் படைகளை விலக்கி கொண்டதன் மூலம் செயற்கையான ஒரு வெற்றியை அவர்களுக்கு ஏற்படுத்தியும் கொடுத்தனர். ( சம்பூர் போரில் முன்னேறிய இராணுவத்தை புலிகள் எதிர்க்க வில்லை என்பதையும், அது ஒரு தந்திரமாக இருக்கும் என்றும் முகமாலையின் தோல்விக்கு பிறகே இராணுவ நோக்கர்கள் கூற தொடங்கினர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்)

சிங்கள இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், வங்காலை படுகொலை, மூதூர் தன்னார்வ நிறுவன ஊழியர்களின் படுகொலை, ஐநாவின் கண்டனம் என கடுமையான சர்வதேச கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை சிறீலங்கா அரசுக்கு ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு இன்றைக்கு சிறீலங்கா அரசை "முழுமையாக" ஆதரிக்க முடியாத சூழலுக்கு சர்வதேச சமூகம் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கள இனவெறி முகத்தை சந்திரிகா, ரனில் போன்றோர் தங்களின் Diplomatic முகத்தால் மறைத்திருந்தனர். ஆனால் இன்று அந்த Diplomatic முகமூடி அகற்றப்பட்டு சிறீலங்கா அரசின் இனவெறி, சர்வதேச சமூகம் முன் கொண்டு வரப்பட்டிருக்கிறது. புலிகளின் பயங்கரவாதத்தை கண்டிக்கின்ற சர்வதேச சமூகம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க தொடங்கியிருக்கிறது. ஐநா அமைப்பு இலங்கைக்கான தங்களது மனிதாபிமான உதவிகளை நிறுத்தப் போவதாக கூறி பிறகு அதனை மாற்றிக் கொண்டது.

சிறீலங்கா அரசு இன்று சர்வதேச சமூகம் முன் குற்றவாளியாக்கப்பட்டு கடும் நிர்பந்தங்களை எதிர்கொண்டிருந்த சூழலில் போரில் வெற்றி பெறுவது ஒரு முக்கிய தேவையாக இருந்தது. புலிகளின் தோல்வியை விரும்பும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை திருப்தி படுத்தும் வகையில் புலிகள் மீது சிறிலங்கா போர் தொடுத்தது. புலிகளும் தொடர் தோல்விகளை எதிர்கொண்டு இருப்பதான ஒரு பிம்பம் ஏற்பட்டது. அமைதியாக இந்தப் போரை ரசித்துக் கொண்டிருந்த சர்வதே சமூகம், முகமாலை தோல்விக்குப் பிறகு விழித்துக் கொண்டது. பலம் புலிகளின் பக்கம் சாய்வதை அவர்கள் விரும்பவில்லை. சர்வதேச தூதுவர்கள் இலங்கைக்கு பறந்து வந்தனர்.

இதன் பலன், இன்று சர்வதேச சமூகத்தின் நிர்பந்தம் சிறீலங்கா அரசு மீது அதிகம் எழுந்து இருக்கிறது. ராஜபக்ஷ தன்னுடைய Unitary state என்ற கோரிக்கையை கைவிடவேண்டிய தேவை எழுந்து இருக்கிறது. தென்னிலங்கை அரசியலில் பிளவுகள் இருக்கும் வரையில் தமிழர்களுக்கு சுயநிர்ணயத்தை வழங்க முடியாது. சர்வதேச நிர்பந்தங்களுக்கு மத்தியில் எதிரும், புதிருமாக இருந்த இரு கட்சிகள் இன்று இணைந்து இருக்கின்றனர்.

தென்னிலங்கை அரசியல் பிளவுகளை சுட்டி தமிழ் ஈழ விடுதலைக்கான காரணங்களை வலுப்படுத்துவது தான் பிரபாகரனின் திட்டம். அந்த திட்டத்தை முறியடிக்கவே இன்று இந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து இருக்கின்றன.

இந்த கூட்டணியின் பிண்ணனியில் இருந்த சர்வதேச சமூகத்தின் மாற்றம் முக்கியமானது

கடந்த ஒரு வருட காலத்தில் ஈழப் பிரச்சனையில் தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கான நியாயங்கள் பலரால் அலசப்பட்டிருக்கின்றன. அமெரிக்க செனட்டில் கடந்த மாதம் பேசிய நியூஜெர்சி Congressman, Frank Pallone மற்றும் U.S. Assistant Secretary of State for South and Central Asian Affairs, Richard Boucher தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்துள்ளனர்.

"though we reject the methods that the Tamil Tigers have used, there are legitimate issues raised by the Tamil community and they have a legitimate desire to control their own lives, to rule their own destinies, and to govern themselves in their homeland.''

இன்றைக்கு தமிழர்களின் சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற அதே வேளையில் அந்த சுயநிர்ணயத்தின் அளவுகோள்கள் முடிவு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது. பெரிய அளவில் அதிகாரங்கள் இல்லாத ஒரு வடகிழக்கு மாகாணத்தை இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய சூழலுக்கு பின், கடந்த 20 ஆண்டுகளில் பரந்த அதிகாரங்களுடன் தமிழர் பிரதேசம் இருக்க வேண்டிய அவசியம் (Federal) சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால், அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் புலிகளுக்கும், சிங்கள அரசுக்குமான ஒரு அரசியல் சமநிலை பலத்தைக் கொண்டு தான் அமையும். அந்த சமநிலை கடந்த காலங்களில் இருந்ததில்லை. இன்றைக்கு அமைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சமநிலையை தெளிவாக அங்கீகரிக்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் உள்ளது. இந்த சமநிலையை சர்வதேச சமூகம் விரும்புவதும் இல்லை. அதனை வெளிப்படுத்துவதும், சர்வதேச சமூகத்தை அந்த சமநிலையை அங்கீகரிக்க வைப்பதும் புலிகளின்/பிரபாகரனின் அடுத்த முக்கிய நோக்கமாக இருக்கலாம்.

அடுத்தக் கட்ட ஈழப் போராட்டம் இராணுவ போராட்டமாக மட்டுமில்லாமல், இராணுவ-அரசியல் போராட்டமாக இருக்கும்.

1997ல் புலிகள் இயக்கத்தை "Most ruthless terrosrist group" என்று அமெரிக்கா தடை செய்ததது. பின் புலிகளை சர்வதேச பயங்கரவாதக் குழுவான அல்கொய்தாவுடன் ஒப்பிட்டு பார்த்தது. பின் புலிகள் சிறீலங்கா அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், புலிகள் அமெரிக்காவுடன் எதிர்காலத்தில் ராஜாங்க உறவுகளை பராமரிக்கும் வாய்ப்புகள் உள்ளது - ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும் எனக் கூற தொடங்கியது (If the Tigers give up terrorism, the United States will be able to consider dealing with them). இவ்வாறு கடந்த ஓராண்டாக அமெரிக்காவின் போக்கு மாற்றம் காண தொடங்கியிருக்கிறது (சில நேரங்களில் குழப்பாக இரு வேறு கருத்துகளையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இது கூட அமெரிக்காவின் மாறி வரும் கொள்கைகளை தான் சுட்டிக் காட்டுகிறது).

"தங்கள் தாயகப் பகுதிகளை தமிழர்கள் ஆட்சி செய்யக் கூடிய உரிமை இருக்கிறது" எனக் கூறிய அமெரிக்கா, கடந்த வாரம் இதை வலியுறுத்தியது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கத்தை அங்கீகரித்தும் உள்ளது. ஆனால் புலிகள் தங்கள் நோக்கத்தை அரசியல் வழியில் மேற்கொள்ள வேண்டும், பயங்கரவாத/இராணுவ ரீதியில் அல்ல என கூறியிருக்கிறது

Assistant Secretary Richard Boucher addressing a press briefing in Colombo, ending his two-day visit to the island said on October 20 "They (LTTE) have aspirations to satisfy some of the legitimate grievances of the Tamil community. They have aspirations to see the Tamil community respected, and be able to control its own affairs within a unified island, and the only way they’re going to achieve those aspirations is through negotiations."

இந்தியா இதுவரையில் தெளிவாக இது குறித்த தன்னுடைய கொள்கைகளை அறிவிக்காததால், இந்தியா தன் மொளனம் மூலம் அமெரிக்காவின் நிலைப்பாடுகளை சார்ந்தே உள்ளதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது - to control its own affairs within a unified island.

இந்த வாக்கியத்தை நோக்கும் பொழுதே அதில் இருக்கின்ற தெளிவற்ற குழப்பம் நமக்கு புரியும் - to control its own affairs within a unified island. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தங்களின் ஆட்சியை அமைத்து கொள்வது என்றால் என்ன ? தற்பொழுது புலிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்களே - அது போலவா ? அல்லது வெளியூறவு, நிதி, பாதுகாப்பு போன்றவற்றை மைய அரசாங்கத்திடம் (ஒன்றுபட்ட இலங்கை அரசாங்கம்) கொடுத்து விட்டு எஞ்சிய துறைகளை புலிகள் நிர்வகிப்பார்களா ? அப்படியெனில் தற்போதைய நிலையில் தமிழர் பகுதியின் பாதுகாப்பு புலிகளின் கைகளில் உள்ளதே, அதை எப்படி புலிகள் விட்டுகொடுப்பார்கள் ? வெளியூறவு மைய அரசாங்கத்திடம் இருக்க வேண்டும் என்றால் தற்பொழுது வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புக்கு சென்று ராஜபக்ஷவை சந்தித்து விட்டு வன்னிக்குச் சென்று தமிழ்ச்செல்வனை சந்திக்கிறார்களே அதனை புலிகள் எப்படி விட்டு கொடுப்பார்கள் ?

இவ்வாறான சூழ்நிலையில் எத்தகைய கூட்டாட்சியை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முன்வைக்கும் ? அதனை சிங்கள அரசாங்கம் ஏற்குமா ?

தற்பொழுது புலிகளை விட சிறீலங்கா அரசிற்கு தான் பாதகமான சூழல் நிலவி வருகிறது. கடந்த காலங்களை போல இல்லாமல் இன்றைய Globalization சிறீலங்கா அரசாங்கத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜபக்ஷ-JVP-JHU கூட்டணி தமிழர் தாயகப் பகுதிகளை அங்கீகரிக்க மறுத்து வந்திருக்கிறது. கடந்த வாரம் இலங்கையின் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு கூட சிங்கள இனவெறி நிலைப்பாட்டை தான் முன்நிறுத்தியிருக்கிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் இந்த தீர்ப்பை ஏற்க மறுத்து உள்ளது. இது சிங்கள தேசியவாதக் குழுக்களுக்கு ஒரு பெரிய நெருக்கடியான சூழ்நிலை என்பது உண்மை.

இவ்வாறான நிலையில் சர்வதேச நிர்பந்தங்களால் மட்டுமே ஒன்று சேர்ந்திருக்கும் ராஜபக்ஷ-ரனில் எவ்வளவு காலம் இதனை தக்கவைத்துக் கொள்வார்கள் ? தென்னிலங்கை அரசியல் நிலைமையால் இந்தக் கூட்டணி சிதைத்து போகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. சமீபகால ஜனாதிபதிகளில் மிக அதிக அளவில் சிங்கள தேசியவாதத்தை முன்வைத்த மகிந்த ராஜபக்ஷ எப்படி மிதவாத போக்குக்கு மாறி அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவார் ? அதுவும் தவிர இந்த இருவரும் இணைவது சிங்கள தேசியவாத சக்திகளை எதிரணியில் ஒன்று திரள வைத்து, சிங்கள தேசியவாத சக்திகள் அரசியல் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிவகுத்து விடும் என்னும் பொழுது இந்தக் கூட்டணியின் சாத்தியங்கள் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இவ்வாறான நிலையில் புலிகளின் உத்தி கடந்த காலங்களில் இருந்து வந்த இராணுவ ரீதியிலான அணுகுமுறை தவிர இனி இராணுவ-அரசியல் உத்தியாக மாறும். ஜெனிவாவில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட சில மாறுபட்ட போக்குகள் காணப்படலாம். கடந்த முறை ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தையில் புலிகள் எடுத்த சில நடவடிக்கைகள் சர்வதேச சமூகம் மீது சில நிர்பந்தங்களை ஏற்படுத்தியிருந்தது. ஐரோப்பிய யூனியன் புலிகள் மீது விதித்த தடையை நார்வே சாடியிருந்தது. புலிகளுக்கு நெருக்கடியை கொடுப்பதன் மூலம் தங்கள் வழிக்கு புலிகளை கொண்டு வரலாம் என்ற சர்வதேச சமூகத்தின் முடிவு கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருந்தது. இது சர்வதேச சமூகம் இந்தப் பிரச்சனையை அணுகும் விதத்தை கேள்விக்குரியாக்கியிருந்தது. இந் நிலையில் இப் பிரச்சனையில் சர்வதேச சமூகம் அணுகி வரும் முறையில் மேலும் சில மாற்றங்களை ஏற்படுத்தவே பிரபாகரன் முயலுவார்.

சிறீலங்கா அரசு முன் இருக்கும் சவால் அதிகபட்ச அதிகாரங்களுடன் ஒரு Federal அமைப்பை ஏற்படுத்துவது. அதிகபட்ச Federal அமைப்பு என்னும் பொழுது இலங்கையில் தற்பொழுது இருக்க கூடிய இரண்டு இராணுவங்கள் (சிறீலங்கா மற்றும் புலிகள் இராணுவம்) அப்படியே நீடிப்பது, இரண்டு நிர்வாக அமைப்புகள், பொருளாதார உதவிகளை தனித்தனியாக பெற்றுக் கொள்வது போன்றவை. ஆனால் சிறீலங்கா அரசால் இதனை ஏற்றுக் கொள்வது முடியாத காரியம் என்று தான் நினைக்கிறேன்.

புலிகள் முன் இருக்கும் சவால் - புலிகள் இராணுவ ரீதியாக பெறும் வெற்றி தான் சிறீலங்கா அரசு மீது சர்வதேச நிர்பந்தத்தை அதிகரிக்கும் என்னும் நிலையில் சிறீலங்கா அரசு போர் தொடுத்தால் அதனை முறியடிப்பது மட்டுமில்லாமல் இராணுவ நிலைகளை வெற்றிக் கொள்ள முடியுமா ? புலிகள் போரில் தோற்பதை சர்வதேச நாடுகள் விரும்பவேச் செய்யும் என்னும் நிலையில் சர்வதேச சமூகத்தை தங்களின் அரசியல் உத்திக்கு திருப்ப வேண்டுமானால் இராணுவ ரீதியில் சில முக்கிய வெற்றிகளை பெற்றாக வேண்டும். முகமாலையில் புலிகள் பெற்ற வெற்றியை போல மேலும் சிலப் பகுதிகளை புலிகள் கைப்பற்ற முடியுமா ?


************************

இலங்கையில் தற்பொழுது நடந்து வரும் நான்காவது ஈழப் போர் ஒரு சமநிலையை கடந்த வாரம் எட்டியது. ஆனையிறவு நோக்கி சிறீலங்கா அரசுபடைகளின் நகர்வை புலிகள் முறியடித்துள்ளனர். முகமாலையில் நடந்த இப்போர் சிறீலங்கா அரசு படைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியிருப்பது மட்டுமில்லாமல் தற்போதைய இராணுவ நிலையில் ஒரு சமநிலையையும் கொண்டு வந்திருக்கிறது. மாவிலாறு, சம்பூர் போன்ற இடங்களில் இராணுவம் பெற்ற வெற்றி கூட புலிகளின் Strategic move தானே தவிர அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு அல்ல என இராணுவ நோக்கர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இராணுவ ரீதியில் புலிகள் பெற்ற இந்த வெற்றி இந்த வார இறுதியில் ஜெனிவாவில் நடக்க இருக்கின்ற பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு ஒரு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயத்தில் புலிகள் ஹபரணை மற்றும் காலியில் நடத்திய தற்கொலைத் தாக்குதல் புலிகளின் நிலையை மேலும் வலுவாக்கியிருக்கின்றது. பேச்சுவார்த்தையை ஒட்டிய சமயத்தில் நடந்த இந்த தாக்குதல் பேச்சுவார்த்தை மேஜையில் புலிகளுக்கு சில சாதகமான விடயங்களை ஏற்படுத்தியிருக்கிறது

எப்பொழுதுமே தங்களுடைய இராணுவ வெற்றியின் பிண்ணனியில் பேச்சுவார்த்தை மேஜைக்கு "பலத்துடன்" செல்வது தான் புலிகளின் வழக்கம். இம்முறை அத்தகைய பலத்தை பெற்று விட சிறீலங்கா அரசு முனைந்தது. அதன் விளைவு தான் புலிகள் மீது தொடுக்கப்பட்ட சம்பூர், மாவிலாறு மற்றும் முகமாலை தாக்குதல். இதில் சிறீலங்கா அரசுக்கு வெற்றி கிடைத்ததாக ஒரு சூழல் எழுந்தது. அதன் விளைவு தான் ஆனையிறவு நோக்கிய படைநகர்த்தல். இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் போர் உத்திகளை நோக்கினால் ஒரு விடயம் தெளிவாக புரியும். சிறீலங்கா அரசு பெறும் எந்த வெற்றியும்/தோல்வியும் அரசியல் ரீதியாக சாதகமான/பாதகமான சூழ்நிலையை தென்னிலங்கையில் ஏற்படுத்தும். இரணுவ உத்திகள் மட்டுமில்லாமல், அரசியல் கள நிலையும் சிறீலங்கா இராணுவத்தின் வியூங்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். இதனைக் கொண்டு பார்க்கும் பொழுது சிறீலங்கா அரசின் உத்திகளை கணிப்பது யாருக்கும் பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது. நம்மைப் போன்ற சாமானியர்கள் கூட சிறீலங்கா அரசு எப்படி திட்டங்களை வகுக்கும் என்பதை பட்டியலிட்டு கூறிவிடலாம். ஆனால் புலிகளின் உத்திகளை கணிப்பது சிறீலங்கா அரசுக்கும், ஏன் சர்வதேச சமூகத்திற்கும் கூட கடினமாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவர்கள் பின்பற்றிய வியூகங்களை கணிக்கும் பொழுது அவ்வாறு தான் எனக்கு தோன்றுகிறது. புலிகளுக்கு, சிறீலங்கா அரசு போல அரசியல் நிர்பந்தங்கள் எதுவும் இல்லை. அவர்களுடைய உத்திகள் அனைத்துமே இராணுவம் சார்ந்த நிலைகளை பொறுத்தே இருந்து வந்திருக்கிறது.

முதல் தாக்குதல் மாவிலாறு யுத்தம் தான். மூதூர் மீதான தாக்குதலுக்குப் பிறகு திடீரென்று புலிகள் பின்வாங்கினர். இது புலிகளுக்கு வெற்றியா, தோல்வியா என்பதை கணிக்க முடியாத அளவுக்கு தான் இருந்தது. புலிகளை பின்வாங்கச் செய்து விட்டதாக இராணுவம் கூறியது. இது அரசியல் ரீதியாக மகிந்த ராஜபக்ஷவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது. மூதூரை கைப்பற்றும் நோக்கம் புலிகளுக்கு இல்லை என்றாலும் அவர்கள் தாக்குதல் தொடுத்த வேகத்திலேயே பின்வாங்கியது சந்தேகங்களை நிச்சயம் எழுப்பியது. அடுத்த முக்கிய தாக்குதல் சம்பூர் மீதான தாக்குதல். புலிகள் இங்கும் இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்க்காமல் பின்வாங்கினர். இராணுவம் சம்பூரை கைப்பற்றினாலும், புலிகளின் இராணுவ பலத்தை சிதைக்கவேயில்லை என்பதை கவனிக்க வேண்டும். அடுத்ததாக சிறீலங்கா அரசின் Kfir விமானத்தை எதிர்க்க கூடிய பலம் புலிகளிடம் இல்லை என்பதாக இராணுவ நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர். இப்பொழுதும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் புலிகளிடம் Surface to Air missiles (SAM) எனப்படும் விமானங்களை தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் நிச்சயம் புலிகளிடம் இந்த ஏவுகணைகள் உள்ளன. புலிகள் இதனை பயன்படுத்தாமல் இருப்பது கூட ஒரு உத்தியாக இருக்க கூடும் என்று தான் எனக்கு தோன்றுகிறது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் போர் ஒரு முழு அளவிலான போர் அல்ல என்பதால் தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக புலிகள் பிரயோகிக்கவேயில்லை.

தங்களுடைய இராணுவ பலத்தை முழுமையாக பிரயோகிக்காமல் இருப்பது இராணுவ ரீதியாக மட்டும் இல்லாமல் அரசியல் ரீதியாகவும் சில விடயங்களை சாதித்துக் கொள்வதற்காக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.

***************

சிறீலங்கா அரசு முன்வைக்க இருக்கும் தீர்வும், தென்னிலங்கை அரசியலும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் புலிகள் முன்வைக்க இருக்கும் உத்திகளையும் பொறுத்தே கூட்டாட்சியா அல்லது போரா என்பது முடிவாகும்.

கடந்த கால தென்னிலங்கை அரசியலும், புலிகளின் நிலைப்பாடும் கூட்டாட்சி குறித்த நம்பிக்கையை எனக்கு தற்பொழுது ஏற்படுத்தவில்லை. ஒரு இடைக்கால தீர்வினை எட்டவே ஒரு சில ஆண்டுகள் தேவைப்படலாம்

Leia Mais…
Thursday, October 12, 2006

மரண தண்டனை


இந்தியாவில் மரணதண்டனை குறித்த பெரிய அளவிலான விவாதம் நடப்பது இது இரண்டாவது முறை. முதல் முறை இராஜீவ் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்ற கூடாது, தூக்கு தண்டனை மனித நாகரிகத்திற்கு எதிரானது என்பதான கூக்குரல் தமிழகத்தில் இருந்த தமிழ் தேசியவாதிகளால் எழுப்பபட்டது. இப்பொழுது இரண்டாவது முறையாக அப்சலுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்பதாக எழுந்திருக்கிறது. இதற்கிடையில் கொல்கத்தாவைச் சார்ந்த தன்னஞாய் சேட்டர்ஜிக்கு கற்பழிப்பு வழக்கில் 2004ல் நிறைவேற்றப்பட்ட தூக்குதண்டனையை ஒரு சில மனித உரிமை அமைப்புகள் எதிர்த்தன என்பது தவிர, வேறு எந்த எதிர்ப்பும் பெரிய அளவில் எழவே இல்லை.

தூக்கு தண்டனைக்கான பெருவாரியான ஆதரவும், எதிர்ப்பும் அது எந்தளவுக்கு பிரபலமான குற்றத்தைச் சார்ந்து இருக்கிறதோ, அதையொட்டியே எழுகிறது. இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென வாதிட்ட ஹிந்து, இப்பொழுது அப்சலுக்கு தூக்கு தண்டனை வழங்க கூடாது என்று வாதிடுகிறது (கடந்த 10 பத்து வருடங்களாக தங்களுடைய நிலைப்பாடு இதுவே என்று தலையங்கம் கூறுகிறது. நளினிக்கு மரணதண்டனை வழங்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டங்கள் நடந்த பொழுது மரண தண்டனைக்கு ஆதரவாக ஹிந்துவில் பல கட்டுரைகளை வாசித்த ஞாபகம் இருக்கிறது)

ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுவை ஏற்க கூடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த காங்கிரஸ், தற்பொழுது இந்தப் பிரச்சனையில் நடுநிலை வகிப்பதாக கூறிக்கொண்டிருக்கிறது. அதன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆஸாத் தூக்கு தண்டனை கூடாது என்கிறார். காஷ்மீரில் எழுந்திருக்கிற உணர்வும், ஆட்சி குறித்த பயமும், அப்சால் தூக்கிலிடப்படும் சமயம் ரமலான் காலம் என்பதால் அவருடைய அரசியல் அச்சம் அவரை ஆட்கொள்கிறது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்த சமயத்தில் அது குறித்து பெரிய அளவில் எந்தப் பிரச்சனையையும் எழுப்பாத பாஜக இன்று தன்னுடைய அரசியல் தேவையை முன்னிட்டு இந்தப் பிரச்சனைக்கு அதிக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் மற்றும் அவரது குழந்தைகளை தீயிட்டு கொளுத்திய தாரா சிங்கிற்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால் இன்று தூக்கு தண்டனை வேண்டும் என்று கூறும் தீவிர இந்துத்துவ, சங்பரிவார் பாணி தேசபக்தர்கள் எல்லாம் "மனிதத் தன்மையற்ற மரண தண்டனையை" அகற்ற வேண்டும் என போராடுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.

மரண தண்டனை தேவையா, தேவையில்லையா என்பதை விட, அவரவரின் சார்புகளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சனையை பயன்படுத்திக் கொள்ளவே முனைகின்றனர். இது வரை வலைப்பதிவில் விவாதிக்கப்பட்டதில் அப்சல் சார்ந்த, எதிரான வாதங்கள் தான் முன்நிறுத்தப்பட்டதே தவிர நான் படித்த வரையில் அப்சலை தவிர்த்து மரண தண்டனையை யாரும் அணுகியதாக தெரியவில்லை.

அப்சல் குறித்த எண்ணங்களை விலக்கி வைத்து விட்டு, மரணதண்டனை பிரச்சனையை அணுக முயற்சித்துள்ளேன்

இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனையை Rarest of the rare casesல் தான் வழங்குவதாக பத்திரிக்கைகளில் வாசித்தேன். இந்த Rarest of the rare caseஐ தீர்மானிப்பது யார் ? ஏதேனும் சட்டங்கள் இதனை வரையறை செய்கிறதா ? அல்லது நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கு ஏற்ப இது நிர்ணயம் செய்யப்படுகிறதா ? நீதிபதிகளின் சுயவிருப்பத்திற்கேற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது என்றால் ராஜீவ் கொலையில் 26பேருக்கு மரண தண்டனை வழங்கியது போலவோ, ஓரிசாவில் பாதிரியார் ஸ்டைன்ஸ் தீயிட்டு கொளுத்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஓரிசா உயர்நிதீமன்றம் கீழ்கோர்ட் வழங்கிய தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியது போலவோத் தான் முடிவடையும். இந்த Rarest of the rare case எது என்பது சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என அம்னஸ்டி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

சட்டம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்றால் முதலில் எல்லா வழக்குகளும் ஒரே அளவில் தான் நடத்தப்பட வேண்டும். இந்த Rarest of the rare case என்பதே எல்லா வழக்குகளும் ஒரே மாதிரியாக நடத்தப்படுவதில்லை என்பதாகவும் சில ஏற்றத்தாழ்வுகள் இருப்பதையுமே வெளிப்படுத்துகிறது. தீவிரவாதியாக இருந்து "குண்டு வைப்பது" ஒரு வகை என்பதாகவும், தாதாவாக இருந்து கொண்டு "போட்டுத் தள்ளுவது" வேறு வகை என்பதாகவும் மாறி விடக்கூடாது. மரண தண்டனை இந்திய சட்டத்தில் "தொடர்ந்தால்" அது "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கில் பேதமில்லாமல் பிரயோகிக்கப்பட வேண்டும். அப்படி இதனை "கொடூரமான கொலை குற்றத்துக்குரிய" வழக்கிலும் கூட சரிசமமாக பிரயோகிக்கப்படுத்த முடியாது என்றால் இதனை முழுமையாக விலக்கியே தீர வேண்டும்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் குற்றங்கள் குறையும், குற்றங்கள் தடுக்கப்படும் என்ற வாதம் மரண தண்டனை ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் மரண தண்டனை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இருந்து நடைமுறையில் இருந்து தான் வருகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது தொடங்கி இன்று வரை நடந்து வரும் குற்றங்கள் மரணதண்டனை பெறுவோம் என்பது "தெரிந்தும்" நடந்து கொண்டு தான் இருக்கிறது. குற்றங்கள் என்றுமே இல்லாத அளவுக்கு வளர்ந்தும் இருக்கிறது. ஆட்டோ சங்கர் போன்ற தாதாக்கள் தூக்கிலிடப்பட்டும், வீரமணி போன்ற தாதாக்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பொழுதும் தாதாக்களுக்கு பஞ்சமில்லை. தாதாக்களே இவ்வாறு என்றால் தீவிரவாதிகள் எந்த மனநிலையில் இருக்கின்றனர் என்று நாம் சொல்லத்தேவையில்லை. தீவிரவாதிகளுக்கு உயிர் மீது எந்தக் கவலையும் இல்லை. இவ்வாறான நிலையில் தூக்கு தண்டனை, குற்றங்களை தடுத்து நிறுத்தும் என்பதோ, குற்றம் செய்ய நினைப்பவர்களை தடுக்கும் என்பதோ நகைப்பிற்குரிய வாதமாகத் தான் எனக்கு தெரிகிறது. இது பழிக்குப் பழி வாங்கும் மனோபாவம் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.

அதே சமயத்தில் தூக்கு தண்டனை கூடாது என்பவர்களின் வாதங்களும் சரியாக முன்வைக்கப்படுவதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு உயிரை எடுக்க உரிமையில்லை என்று கூறும் ரோசாவசந்த் ஐரோப்பாவை மனிதகுல நாகரிகத்திற்கு உதாரணமாக எப்படி மேற்க்கோள் காட்டுகிறார் என்பது புரியவில்லை. அமெரிக்கா சதாம் உசேனுக்கு எதிரான தாக்குதல் எனக்கூறி இராக்கில் அப்பாவி மக்கள் பலரை குண்டுவீசி தாக்கியதே அது மனிதநாகரிகத்தின் முதிர்ச்சியான நிலையா ? அமெரிக்காவின் இந்த தாக்குதலை அதன் ஐரோப்பிய நேச நாடுகள் ஆதரித்துக் கொண்டு தானே இருக்கின்றன. எண்ணெய் வளத்திற்க்கு நடக்கும் இந்தச் சண்டையில் மனித நாகரிகம் இன்னும் முதிர்ச்சி அடையாத நிலையில் இருப்பது தான் தெளிவாகிறது.

மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? எத்தனையோ அப்பாவிகள் அரசாங்க இயந்திரங்களால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணிக்கும் நிலையில், சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியுமா ? அரசாங்கத்தின் சட்டங்களே சில இடங்களில் அமுக்கப்பட்டு இராணுவத்திற்கு நிறைய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சட்ட வரையறைகள் மட்டுமே நம்மை எந்தவகையிலும் நாகரீகமான சமூகமாக மாற்றாது.

"ஒரு சமூகத்தின் மீது வன்முறை பிரயோகிக்கப்படும் பொழுது, அந்த சமூகம் தன் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறையை, தன்னுடைய எதிர் வன்முறையால் தான் எதிர்க்கும்" என்று ஒரு வாசகம் உண்டு. மரணதண்டனையும் ஒருவன் மீதோ அல்லது ஒரு சமூகம் மீதோ பிரயோகிக்கப்படுவது வன்முறைக்கு ஒப்பானது தான்.

சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எவ்வித மாற்று கருத்தும் இல்லை. அதே நேரத்தில் தண்டனைகள் குற்றங்களை தடுப்பதாகவும், குற்றவாளிகளை திருத்துவதாகவும் இருக்க வேண்டுமே தவிர குற்றவாளிகளின் உயிர்களை பறிப்பதாக இருக்க கூடாது. இவ்வாறு கூறுவதன் மூலம் தீவிவாதிகளை எப்படி திருத்த முடியும் என்ற கேள்வி எழும்.

தீவிரவாதத்தை சட்டங்கள் மூலம் தடுத்து விடமுடியாது என்பது தான் யதார்த்தமான உண்மை. தீவிரவாதம் தோன்றுவதன் அடிப்படை சமூக அவலங்களை நீக்கினால் தான் தீவிரவாதம் தடுக்கப்படும்.

இந்தியாவில் மரணதண்டனை, தீவிரவாதம் போன்ற குற்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என செய்திகளில் பார்த்தேன். தீவிரவாதத்தை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது என்னும் பொழுது இந்த சட்டத்தின் நோக்கத்தில் எவ்வித அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தீவிரவாதத்தை சமூக மாற்றத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.

அமெரிக்காவை Free Democratic country என்று சொல்வார்கள். ஆனால் இங்கு தான் கடுமையான சட்டங்களும் உள்ளன. ஆனால் இங்கிருக்கும் பல சட்டங்கள் ஒரு சமூகத்தை சரியான கோணத்தில் செலுத்தக்கூடியவை. செலுத்திக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு ஓட்டுனர் உரிமம் பெற இங்கிருக்கும் சட்டங்களும், சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும், தண்டனையாக மட்டும் இருப்பதில்லை. அது தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கின்றன. சாலை விதிகளை மீறுவதை தடுத்து நிறுத்தியிருக்கிறது

நம்மூரிலும் இத்தகைய சட்டங்கள் இல்லையா ? இருக்கின்றன. பல சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்குமான வேறுபாடு அதனை செயல்படுத்துவதில் தான் இருக்கிறது. எவ்வளவு கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை சரியாக நடைமுறைப்படுத்தவில்லையெனில் அந்த சட்டங்கள் இருப்பதில் அர்த்தம் இல்லை. இந்தியாவில் சட்டங்களை செயல்படுத்தக்கூடிய அரசு இயந்திரங்களான காவல்துறையும், அதிகார அமைப்பும் சட்டங்களை
எந்தளவுக்கு மதித்து செயல்படுத்துகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்களை நடைமுறையில் சரியாக பின்பற்றக்கூடிய நிர்வாக முறை உள்ளது.

குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, அதனை சரியாக நிர்வகிக்க வேண்டுமே தவிர, மரண தண்டனையோ, வேறு எந்த தண்டனையோ குற்றங்களை தடுத்து நிறுத்தி விடாது.

மரண தண்டனை பழிவாங்கும் குரூரமான வெறித்தனம் தானே தவிர குற்றங்களை தடுத்து விடாது.

(
மரண தண்டனைக்கு மாற்று தான் என்ன ? இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போதைய ஆயுள் தண்டனையின் காலம் 14வருடங்கள். இதனை இரட்டை ஆயுள் தண்டனையாக மாற்றலாம், 35வருடங்கள் சிறைவாசம், தனிமை சிறைவாசம் போன்றவற்றை பலர் முன்வைத்துள்ளனர். தற்பொழுது இருக்கும் சிறை என்பது பலருக்கு "உல்லாசமாக" இருப்பதான ஒரு கருத்து நிலவுகிறது. பலருக்கு அது சிறைவாசமாக இல்லாமல் மற்றொரு விடுதி அனுபவமாக மாறிவிடுகிறது. இந் நிலையில் சிறைவாசத்தை இன்னும் கடுமையாக மாற்றுவதும், தனிமை சிறைவாசத்தை புகுத்துவதும், கடுமையான வேலைகளை கைதிகளுக்கு கொடுப்பதும் குற்றங்களை குறைக்கும் என சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இவையெல்லாம் பரிசீலிக்கப்படவேண்டியவை
)

Leia Mais…
Tuesday, October 10, 2006

வடகிழக்கு மாகாணங்களில் தனி ஆட்சி

இன்று CNN-IBN பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு செய்திப்படம் பார்த்தேன். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் சிலப் பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் ஒரு தனி இராணுவம் (மணிப்பூர் மக்கள் படை) சில இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது என்பதும் தான் அந்தச் செய்தி.

அஸாம் குறித்த பிரச்சனையை நான் அறிந்திருக்கிறேன். அது தவிரவும் என்னுடைய நண்பன் ஒருவன் அசாமைச் சேர்ந்தவன் என்ற வகையில் அங்கிருக்கும் பிரச்சனையின் சில யதார்த்த ரீதியிலான உண்மைகளை அறிந்திருக்கிறேன். பொருளாதாரம், கல்வி, அடிப்படைவசதிகள், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் தான் அசாமில் தீவிரவாதம் வளர்ந்தது. வடக்கிழக்கு மாகாணங்கள் இந்திய அரசியல்வாதிகளுக்கு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாத பகுதி என்பதால் கடந்த காலங்களில் இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டதும் தீவிரவாதம் வளர முக்கிய காரணம்.

மணிப்பூர் குறித்து எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இந்த செய்தினை பார்க்கும் பொழுது இது பொருளாதார காரணங்களால் மட்டும் நடக்கும் பிரச்சனை போன்று தெரியவில்லை.

CNN-IBN செய்திப்படம்

CNN-IBN செய்தியில் இருந்து சில வரிகள்

The UNLF contends that the Merger Agreement signed in 1949 between Maharaja Bodh Chandra Singh and the Advisor to the Government V P Menon, was flawed.

“From 1947 to 1948, to be precise 15 October, 1949, the day India annexed Manipur, Manipur was an independent country. That's how it all began - the conflict - the genesis of the Manipur-India conflict,” says UNLF Chairman Sanayaima.

Strangely, the man who leads Manipur's violent secessionist movement once believed in the idea of India.

“I grew up and I thought that I'm an Indian - when I was in school and I thought of myself in that environment. But when I began to grow and reach the level of college & I gradually realized that India is something different from what we are,” says Sanayaima.

Alienation drives these young guerillas

Leia Mais…
Sunday, October 08, 2006

காஷ்மீர் : சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை

காஷ்மீரில் இன்று நடப்பது சுதந்திர போராட்டம் என பாக்கிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு நடப்பது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் பயங்கரவாதம் என இந்தியா கூறி வருகிறது. தீவிர இந்திய, இந்துத்துவா அனுதாபிகளும், அடிப்படைவாதிகளும் இதனையே கூறிவருகின்றனர்.

ஆனால் உண்மையில் அங்கு நடந்தது, நடைபெறுவது என்ன ?

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையாக ஆரம்பித்து, பின் அவர்களில் சில குழுக்களின் ஆயுதப் போராட்டமாக உருவாகியது தான் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம்.

ஆனால் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன் என்ற போர்வையில் உள்ளே நுழைந்து அந்த போராட்டத்தின் முகத்தை சிதைத்து இன்று காஷ்மீரை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிய பெருமை பாக்கிஸ்தானையேச் சாரும்.

காஷ்மீர் முஸ்லிம்கள் சுபிஸம் என்ற இஸ்லாம் பிரிவைச் சார்ந்தவர்கள். இதனை Liberal Islam என்று கூறுவார்கள். ஆனால் இன்று பாக்கிஸ்தானின் பஸ்தூன்களும், முல்லாக்களும், ஆப்கானிஸ்தானின் அடிப்படைவாதிகளும் காஷ்மீரில் புகுந்து காஷ்மீரின் முகத்தையும், காஷ்மீர் முஸ்லிம்களின் வாழ்க்கைமுறையையும் சிதைத்து இருக்கின்றனர். காஷ்மீர் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே நெருங்கிய இணக்கம் இருந்து வந்திருக்கிறது. ஆனால் பாக்கிஸ்தானின் வருகைக்குப் பிறகு இந்துக்கள் மீதான தாக்குதலை பாக்கிஸ்தான் ஆதரவு குழுக்கள் தொடுத்தன. காஷ்மீர் பூர்வீக இந்துக்களான காஷ்மீரி பண்டிட்களை காஷ்மீரில் இருந்து விரட்டியவர்கள் கூட பாக்கிஸ்தான் அதரவு குழுக்கள் தான். இதனை காஷ்மீரின் ஆயுதக்குழுக்களும், மிதவாத போராட்டக் குழுக்களும் எதிர்த்தன என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

இன்று காஷ்மீர் மக்கள் தங்களின் சிதைந்து போன வாழ்க்கை முறையையும், போராட்ட முகத்தையும் வெளிக்கொண்டு வரமுடியாமல் தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இது குறித்து நான் முன்பு எழுதிய காஷ்மீர் குறித்த கட்டுரையை மீள்பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

அதனை இங்கே தருகிறேன் (காஷ்மீர் குறித்த எனது பதிவுகள் - 1, 2, 3, 4, 5, 6)


காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.


காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய நினைவிடத்துக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த நினைவிடத்துக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், "காஷ்மீர் கலாச்சாரம்" என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது. பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது. அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.

மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிரச்சனை பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.

இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

Leia Mais…