வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Saturday, July 28, 2007

வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி

வாசிங்டன் நகரில் கேபிடல் ஹில் (Capitol Hill) கட்டடித்திற்கு எதிரில் "ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய ஆதரவு அமைதி பேரணி" கடந்த திங்களன்று (ஜூலை 23, 2007) நடைபெற்றது. தமிழர்களின் சுயநிர்ணயத்தை ஆதரித்தும், மனித உரிமைகளை வலியுறித்தியும், சிறீலங்காவிற்கான இராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டுமெனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை சுமார் 11:30 மணிக்கு கேபிடல் ஹில் முன்பாக ஆரம்பித்த இந்த பேரணி மதியம் 3 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயத்திற்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்பட்டன. கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் வட கரோலினா மாநிலங்களைச் சார்ந்த செனட் உறுப்பினர்கள் இந்தப் பேரணிக்கு அதரவு தெரிவித்து செய்திகள் அனுப்பியிருந்தனர். பேரணியின் இறுதியில் உரையாற்றிய மனித உரிமை சட்டவல்லுனரும் ஈழப் போரட்டத்தில் ஈடுபாடு கொண்டவருமான கேரன் பார்க்கர் தமிழர்கள் ஏற்கனவே சட்டப்படி ஒரு தமிழ் ஈழத்தை ஈழத்தில் அமைத்து விட்டதாக குறிப்பிட்டார். வழக்கமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தமிழ் ஈழப் பகுதிகளை de facto state என்று சொல்வார்கள். ஆனால் அதனை அவ்வாறு அழைப்பது சரியல்ல. அது de jure - சட்டப்படியான தனி நாடு என்பதே சரி என்றார் கேரன் பார்க்கர்.

Ms Parker said: "Because of the right to self- determination, the Tamil areas belong to the Tamils. It is their land. The civilian government and the military force - the LTTE - have a right de jure (by law) to this State. Tamils presence in their own land is not de facto and their government is not a de facto one.

"The Sri Lankan government’s occupation of part of the historic Tamil Eelam is de facto. They are there by the clear facts on the ground but they don’t have the legal right to it," Ms. Parker added.

குறிப்பிட்டத்தக்க அளவில் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை தமிழர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். மிக சொற்பமான அளவிளான தமிழகத்தைச் சார்ந்த தமிழர்களும் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tamil American Peace Rally: Speech by Dr. Ellyn Shander M.D








இது குறித்த செய்திகள் :
"Struggle to achieve self-rule will continue"- American Tamils

********

உலக நாடுகளின் அங்கீகாரத்தினை பெறுவது என்பதான ஒரு நிலையில் தான் கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் மற்றும் புலிகளின் கொள்கை இருந்து வந்தது. ஆனால் உலகநாடுகளின் அங்கீகாரம் என்ற நிலையிலேயே தங்களை அடைத்துக்கொள்ளாமல் அதனைக் கடந்து வேறு வகையில் தங்களின் சுயநிர்ணயத்தை ஈழத்தமிழர்கள் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை தற்பொழுது எழுந்துள்ளது. தொடர்ச்சியாக உலகநாடுகளின் ஒரு தலைச்சார்பான நடவடிக்கை இருக்கும் சூழலில் உலகநாடுகளின் அங்கீகாரம் எளிதாக கிடைத்து விடாது. இது தவிர உலகளவில் மேற்கத்திய நாடுகளின் மக்களை அச்சுறுத்தும் மதத்தைச் சார்ந்த அடைப்படைவாத பயங்கரவாத கண்ணாடி மூலமே ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பார்க்கப்படும் சூழ்நிலையும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனையெல்லாம் கடந்து தமிழீழம் அமைவது என்பது தான் தற்போதைய சவால். அதனை உலக நாடுகளின் அங்கீகாரம் என்ற ஒரே வியூகத்தின் மூலமாக அணுக முடியாது.

ஈழத் தமிழர்கள் தங்களுக்கான சுயநிர்ணயத்தினை தாங்களாகவே முன்னெடுக்க வேண்டும் என்று கேரன் பார்க்கர் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையும் கவனிக்க வேண்டும்

Leia Mais…
Sunday, July 15, 2007

தமிழ் தேசியம் ‍- எனது பார்வை

இந்தக் கட்டுரை 2007ல் எழுதப்பட்டது. ஆனால் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஈழப்போராட்டத்திற்கு ஏற்பட்ட பெருத்த தோல்விக்கு பிறகும், திராவிட இயக்கங்கள் நடத்திய நாடங்களைக் கண்ட பிறகும் தமிழ் தேசியமே முழுமையான தீர்வு என்பதான நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. காரணம் இந்தியாவிற்குள் இருக்கும் தமிழகம், தமிழர்களின் உரிமைக்கு எந்த ஒரு நன்மையையும் செய்ய முடியாது என நான் உண்மையாக நம்புகிறேன். அந்த அடிப்படையில் என்னுடைய அடையாளம் "தமிழன்" என்றும் என்னுடைய தேசியம் "தமிழ் தேசியம்" என்றும் நான் வலுவாக நம்புகிறேன்.


எனவே 2007ல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை என்னுடைய தற்போதைய நிலைப்பாட்டினை பிரதிபலிப்பதில்லை என்றாலும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சாதி ஒழிப்பை ஒப்புக்கொள்வதில்லை என்ற அவதூறு கருத்தினை உடைக்க 2007ல் நான் எழுதிய இந்தக் கட்டுரை ஒரு சான்றாக இருக்கும் என நம்புகிறேன்


தமிழ் தேசியம் நோக்கி நகர சாதியை ஒழிக்க வேண்டும் என்ற என் கருத்தினை இந்தக் கட்டுரை வலுவாக முன்வைப்பதாக நான் நம்புகிறேன். அதே நேரத்தில் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழ் தேசியம் நோக்கி நகர முடியும் என்ற என்னுடைய முந்தைய கருத்தினை முள்ளிவாய்க்கால் உடைத்து விட்டது. சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டிய ஒன்று என நான் உறுதியாக நம்புகிறேன்

**********************



குழலி, அசுரன் இருவரும் மகஇக குறித்தும், தமிழ் தேசியவாதிகள் குறித்தும் சில கருத்துக்களை முன்வைத்து இருந்தார்கள். அதில் அவர்கள் எழுதியிருந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்கள்...

ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியத்திற்கும், தமிழகத்தில் எழுந்த தமிழ் தேசியத்திற்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. ஈழத்தில் தமிழ் மக்கள் இன ரீதியாக அவர்கள் தமிழராக இருக்கும் பொருட்டு ஒடுக்கப்பட்டனர். அதனால் ஈழத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் என்பது சிங்கள பேரினவாதத்திற்கு எதிரானது எனக்கொள்ளலாம். இலங்கையில் நடப்பது "வர்க்க போராட்டம்" என்னும் கருத்தினை நான் எதிர்க்கிறேன்.

இந்தப் பதிவில் தமிழகத்தைச் சார்ந்த தமிழ் தேசியம் குறித்து மட்டும் எனது சில கருத்துக்களை முன்வைக்கிறேன். ஈழம் குறித்து மற்றொரு பதிவில் எழுத உள்ளேன்.

முதலில் தேசியம் சார்ந்த கருத்துக்களை முன்வைக்கிறேன்.

இனரீதியாக ஒடுக்குமுறையை சந்திக்காத ஒரு சமூகத்தில் இருந்து எழும் தேசியவாதத்திற்கும் ஈழம், காஷ்மீர் போன்ற சமூகத்தில் எழும் தேசியவாதத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக இந்திய தேசியவாதம் என்பது அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் விடுதலைப் பெற்ற ஒரு இனத்தாலேயே முன்னெடுக்கப்படுகிறது. இன ரீதியாக எந்த ஒடுக்குமுறையையும் சந்திக்காத நிலையில் இருக்கிற ஒரு சமூகம் தான் இவ்வாறான தேசியத்தினை முன்னெடுக்கிறது. அது போலவே ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் அந் நிலையில் இருந்து விடுதலை அடைந்த பின்பு முன்வைப்பதும் தேசியவாதமே...

இன ரீதியிலான ஒடுக்குமுறை இல்லாத சூழலில் தன்னுடைய வாழ்க்கைக்கான வாழ்வியல் தேவைகள், சமூக, பொருளாதார விடுதலை குறித்த போராட்டத்தில் இருக்கும் எந்த ஒரு இனமும் தேசியம் குறித்து உணர்ச்சிவயப்பட்டு பார்ப்பதுமில்லை. அது குறித்து சிந்திப்பதும் இல்லை. இந்திய வரலாற்றில் கூட காந்தி முதலில் இந்திய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றை மறுக்கிறார். மக்கள் சமூக விடுதலையை பெற வேண்டும் என்றே சிந்திக்கிறார். ஆங்கிலேயரின் கைகளில் இருக்கும் ஆட்சியை இந்திய பேரிஸ்டர்களிடம் கொண்டு வருவதால் சமூக ரீதியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே காந்தி நினைத்தார். ஆனால் பின் அவர் இந்திய தேசிய சூழலில் சிக்கிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக விடுதலையை முன்னெடுக்கும் தந்தை பெரியார் தேசியத்தை கடுமையாக எதிர்க்கிறார். பெரியார் கூறுகிறார்.

"தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும் அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது"

*************

இந்திய தேசியம் எப்படி இந்துத்துவா சார்ந்த பார்ப்பனியத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளதோ, அது போல தமிழ் தேசியம் என்பது தமிழகம் சார்ந்த மேட்டுக்குடி மற்றும் பிற சாதி இந்துக்களால் முன்னெடுக்கப்பட்டதே ஆகும். அதன் ஆரம்பகட்டம் நீதிக்கட்சி மேட்டுக்குடியினரால் முன்னெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதோர் என்பதாக தொடங்கி பிராமணர் அல்லாத சமூகங்களின் சமூக விடுதலையையே நீதிக்கட்சி முன்னிறுத்தியது. இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. நீதிக்கட்சி சமூக விடுதலையை முன்னெடுக்கையில் சமூக விடுதலையை அடைந்த பிராமணர் சமூகம் காங்கிரஸ் மூலமாக தேசிய விடுதலையை முன்வைக்கிறது.

பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சில மேட்டுக்குடி சமூகங்கள் சமுக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைந்த பின்பு திராவிட தேசம், தமிழ் தேசம் போன்றவற்றை முன்வைக்கின்றனர். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் வரை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக, ஆட்சியை பிடித்த பின்பு இந்திய தேசியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் இடையே ஒரு சரிசமமான சமூக பொருளாதார சூழல் இல்லாத நிலையில், தமிழன் என்பதால் தமிழகத்தில் தமிழ் இனம் எந்த ஒரு இன அழிப்பிற்கு உள்ளாகாத நிலையில் தமிழ் தேசியத்தை சார்ந்த ஒரு விவாதக்களம் எழுவது இயல்பானது.

தமிழ் இனத்தில் இருக்கின்ற பல்வேறு சமூக பிளவுகளை நீக்காத வரையில் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடைய முடியாது என்றே நான் நம்புகிறேன். அது மட்டுமில்லாமல் சமூக ரீதியிலான ஒடுக்குமுறை தமிழ் தேசியத்தை முன்னிறுத்திய திமுக ஆட்சிக் காலத்திலும், தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளிடையேயும் கடந்த காலங்களில் இருந்தததை கவனிக்கும் பொழுது தமிழ் தேசியம் செல்ல வேண்டிய தூரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் திமுக சமூக விடுதலையை முன்னெடுத்தாலும் அந்தச் சமூக விடுதலையின் பலனைப் பெற்றவர்கள் தமிழகத்தைச் சார்ந்த மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமுகத்தினரே. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் சமூக, பொருளாதார விடுதலையை பெற முடியாத சூழலே நிலவி வந்தது. தமிழக சமூக நிலையில் இருக்கும் சாதிப் பிளவுகளும் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான சாதி இந்துக்களின் சாதி வெறித்தனமும் இன்றளவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது கூட சமூக நீதி முன்னெடுக்கப்பட்டு ஓரளவிற்கு வளர்ந்த காலக்கட்டத்தில் தான் என்பதும் திமுக அப்பொழுது ஆட்சியில் இருந்தது என்பதும் பிற்படுத்தப்பட்ட மேட்டுகுடியினர் எவ்வாறு தலித் மக்களை ஒடுக்கினர் என்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. (இது குறித்த விரிவான பதிவு).

கீழ்வெண்மணி சம்பவத்தினை பார்ப்பன அறிவுஜீவிகள் வர்க்க போராட்டமாக முன்னெடுக்கின்றனர். சில அறிவுஜீவிகள் அதனை பிற்படுத்தப்பட்ட மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். என்றாலும் கீழ்வெண்மணி உள்ளிட்ட சம்பவங்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை ஒரே அணியில் திரட்டுவதற்கும், இவர்கள் அனைவரையும் தமிழ் தேசியம் என்னும் வடிவத்தில் அடக்க முனைவதற்கும் எதிராகவே உள்ளது.

கீழ்வெண்மணி சம்பவத்தில் தந்தை பெரியாரின் கருத்துக்கள் கூட தெளிவற்றவையாகவே உள்ளன.
கீழ்வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கை.

ரோசாவசந்த்தின் கருத்து - http://rozavasanth.blogspot.com/2006/12/blog-post.html

கீழ்வெண்மணி மட்டுமில்லாமல் அதற்கு பிறகு கூட மேலவளவு, கொடியங்குளம், மாஞ்சோலை என தமிழகத்தில் சாதி இந்துக்களின் தாக்குதல் தலித் மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. இதனை முதலாளி, தொழிலாளி என்பதாக பார்த்தாலும் கூட பாதிக்கப்பட்ட அனைவருமே தலித் சமூகத்தினர் என்பதையும், தாக்குதல் தொடுத்தவர்கள் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதையும் கவனிக்கும் பொழுது தமிழகம் எந்தளவுக்கு சாதி ரீதியில் பிளவு பட்டு நிற்கிறது என்பது தெளிவாகிறது.

 (தமிழகத்தில் தலித்துகளின் நிலை என்ற பிபிசியின் பெட்டக தொடர் - http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml)

வடமாவட்டங்களில் இன்றளவும் இரட்டை டம்பளர் முறை இருப்பதை பிபிசி தொடர் உறுதிப்படுத்துகிறது. தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திருமாவும், ராமதாசும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்திலும் இன்னமும் சாதி ரீதியிலான அடக்குமுறைகள் தொடருகின்றன என்கிற கூற்றும் மேலே உள்ள பெட்டகத்தொடரில் எதிரொலிக்கிறது.

இவ்வாறு தலித் மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் எவ்வாறு பிற்படுத்தப்பட்ட மக்கள் பார்ப்பனியத்தை எதிர்க்க வேண்டிய தேவையை முன்வைக்கின்றனரோ, அது போலவே தலித் மக்கள் பிற சாதி இந்துக்களான ரெட்டியார், முதலியார், வன்னியர், தேவர் போன்றோரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் தான் பார்ப்பனத்தலைமை என்பது 200% நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து தலித் மக்களின் பார்வையில் பெரும் முரண்பாடாகிறது. உண்மையில் சாதி இந்துக்களின் தலைமை 200% தலித்களைச் சார்ந்து இருந்தால் கூட அதனை நம்பமுடியாத நிலையில் தான் தலித் மக்கள் உள்ளனர். அந்தளவுக்கு தலித் சமூகத்திற்கும் பிற இடைத்தட்டு மற்றும் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு இடையேயான இடைவெளி உள்ளது. அரசியல் காரணங்களுக்காக தலித் மக்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இடையே சுயநலக்காரணங்களால் முன்னெடுக்கப்பட்ட கூட்டணி எவ்வாறு தோல்வி அடைந்தது என்பதை தமிழகத்திலும் பார்க்க முடியும், பிற மாநிலங்களிலும் பார்க்க முடியும்.

தமிழகத்தில் தலித் மக்களிடையேயான கூட்டணியை முன்வைத்த டாக்டர் ராமதாஸ் தோல்வி கண்டார். அவரிடம் கூட்டணி வைப்பதை தலித் மக்கள் விரும்பவில்லை. இதைப் போலவே உத்திரபிரதேசத்திலும் மாயாவதி - முலயாம் சிங் யாதவ் இடையேயான கூட்டணி முறிந்து போயிற்று. தலித் மக்கள் நேரடியாக தங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கிய ஒரு சமூகத்தினை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயத்தில் தலித் மக்களை "நேரடியாக" ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத பார்ப்பனர்களை ஏற்க தலைப்படுகின்றனர். தலித் விடுதலையை முன்னெடுக்கும் பார்ப்பன அறிவுஞீவிகளை தலித் மக்கள் ஏற்றுக்கொள்வதையும் பார்க்க முடிகிறது. உத்திரபிரதேசத்தில் மாயாவதி பார்ப்பனர்களுக்கிடையேயான கூட்டணி மூலமும் காண முடிகிறது.(இது குறித்து எனக்கு சில விமர்சனங்கள் உள்ளது. அது மற்றொரு தருணத்தில்...)

தலித்களுக்கும் மேல்தட்டு மற்றும் இடைநிலை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடையேயான பிரச்சனை இவ்வாறு உள்ளது என்றால், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்குள்ளும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கவே செய்கின்றன. திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த சமூக நீதியால் அதிகம் பலன் பெற்றவர்கள் மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பொருளாதார ரீதியிலான விடுதலையை பெற முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பல சமுதாயங்கள் முன் வைத்த போராட்டங்களால் 1989ல் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான 20% இடஒதுக்கீட்டினை அப்போதைய திமுக அரசாங்கம் கொண்டு வந்தது. இது பாமக தொடங்கிய காலக்கட்டத்தில் சில அரசியல் காரணங்களுக்காக, தன்னுடைய ஓட்டு வங்கியை தக்கவைக்க வேண்டும் என திமுக கொண்டு வந்தது.

1989க்குப் பிறகு தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓரளவுக்கு பொருளாதார விடுதலையை பெற தொடங்கியுள்ளனர். தலித் மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைவருமே தங்களுக்கான முழுமையான பொருளாதார விடுதலையை பெறாத வரையில் தமிழ் தேசியம் என்பதை அடையமுடியாது என்றே நம்புகிறேன்

****************

என்னுடைய கடந்த சில பதிவுகளில் நான் "தமிழ் தேசிய இனம்" என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன். தமிழன் என்னும் தேசிய இனத்தின் தனித்தன்மையை சிதைக்க முனைவதை நான் எதிர்க்கிறேன். இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களின் பன்முகத்தன்மை பராமரிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் உள்ளது. தேசிய இனங்களின் பன்முகத்தன்மையை தட்டையாக இந்தியன் என்ற வடிவத்தில் அடக்க முனைவது எதிர்க்கப்பட வேண்டியது.

அதே நேரத்தில் அந்த தேசிய இனங்களைச் சார்ந்த "பிரிவினையை" இன ரீதியாக அடக்குமுறை இல்லாத இந்தியச் சூழலில் முன்னிறுத்தப்படுவதை எதிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது. இதில் சில விதிவிலக்குகளை காஷ்மீர் போன்ற பிரச்சனைகளில் வழங்க முடியும். காரணம் காஷ்மீர் என்னும் தேசிய இனம் இந்தியா, பாக்கிஸ்தான் என இரு வேறு நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. அந்த தேசிய இனத்தை இணைக்க காஷ்மீரின் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டிய தேவை எழுகிறது.

ஆனால் தனித்தமிழ்நாடு என்பதோ, தமிழ் தேசியம் மூலம் வைக்கப்படும் பிரிவினைவாதமோ ஒப்புக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் இன்று பார்ப்பனியத்தை சார்ந்து முன்வைக்கப்படுகிற வாதங்கள் நாளை தமிழ் தேசியத்தை சார்ந்த மேட்டுக்குடியினரிடமும் முன்வைக்க முடியும். தமிழ் சமூகத்தில் இருக்கும் சாதிப் பிரிவுகளை கலைவதும், அனைத்து பிரிவினரும் பொருளாதார விடுதலையை பெறுவதும், சாதியினை மறுப்பதுமே தற்போதைய அவசியமான தேவையாகிறது. அவ்வாறு சாதியற்ற சமுதாயம் உருவாகும் நிலையில் தான் தமிழன் என்ற இனம் எந்த ஒரு பிளவும் இல்லாமல் உருவாக முடியும்.

எந்த தேசியத்தை விடவும் மக்கள் முக்கியமானவர்கள்....


Leia Mais…
Wednesday, July 04, 2007

நினைவில் நிற்கும் எட்டு

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியது, ஈழ மக்களுக்காக போராடியது, முன்னாள் பிரதமர்களுடனும், முதல்வர்களுடனும் பழகியது, கல்லூரியில் பேசி பாராட்டைப் பெற்றது என என்னைக் குறித்து நிறைய எட்டுகளை எழுத வேண்டும் என்று எனக்கும் ஆசை தான். ஆனால் என்ன செய்வது...அப்படி ஒன்றும் இல்லையே. சுயத்தேவைகளுக்காக வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பதே அன்றாட வாழ்க்கையாக இருக்கும் பொழுது சுயதம்பட்டம் அடித்து சுயவிளம்பரம் செய்து கொள்ளும் செயலில் எனக்கு விருப்பம் இல்லை.

ஆனாலும் அருணா அவர்கள், நண்பர் மாயன், நண்பர் கண்ணபிரான் ரவிசங்கர் போன்றோர் என்னை இந்த எட்டு ஆட்டத்திற்கு அழைத்திருப்பதால் ஒரு விதமான தர்மசங்கடமான நிலையில் அவர்களின் மின்னஞ்சல்களை புறக்கணிக்க முடியாத சூழலில் இந்த எட்டு விளையாட்டில் நானும் நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக வலைப்பதிவுகளில் நடக்கும் இத்தகைய விளையாட்டுக்கள் ஒரு சிலருக்கு வரப்பிரசாதம். தங்களைப் பற்றிய "பிம்பத்தை" வலைப்பதிவுகளில் முன்வைக்க முனைவார்கள். சிலர் நகைச்சுவையாக கலாய்ப்பார்கள், சிலர் தங்களின் வாழ்க்கையை இயல்பாக திரும்பிப் பார்க்கிறார்கள்.

நானும் என் நினைவில் நிற்கும் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

*****

2005ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் ஒரு நாள், என் வாழ்க்கையில் மறந்த முடியாத உன்னதமான தருணம். அதிகாலை குளிரில் சுமார் மூன்று மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்த பொழுது மனம் பலவிதமான எண்ணங்களில் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒரு விதமான அச்சம், எதிர்பார்ப்பு என அனைத்தும் மனதில் இருந்தது. வரவழைக்கப்பட்டிருந்த டாக்சியில் நானும் என் மனைவியும் நியூஜெர்சி Hackensackல் உள்ள Hackensack University Medical Centerக்கு சென்றோம். எங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான ஒரு தருணம் அது. ஆரம்பகட்ட பரிசோதனை எல்லாம் முடிந்து காலை சுமார் 7:59மணிக்கு என்னுடைய முதல் குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தார்கள். அடுத்த சில நொடிகளில் 8மணிக்கு அடுத்த குழந்தையையும் வெளியில் எடுத்தார்கள். ஆம்.. எங்களுக்கு இரட்டைக்குழந்தைகள். முகத்தில் சில ரத்த துளிகளுடன் வெளியே வந்த என்னுடைய குழந்தைகளின் முகத்தை அருகில் இருந்து பார்க்கும் உன்னதமான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்னமும் முதன் முதலாக வெளியில் வந்த பொழுது இருந்த என குழந்தைகளின் முகபாவம் என் மனதில் நிற்கிறது. இந்தியாவில் இருந்திருந்தால் என்னை அறுவைச் சிகிச்சை அறைக்குள் நுழையவே அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதை நினைக்கும் பொழுது, இந்த வாய்ப்பு உண்மையில் விலைமதிப்பற்றது என்றே சொல்ல வேண்டும்.
என் அம்மாவின் விசா தாமதமாக, இரட்டைக்குழந்தைகளை அடுத்து ஒரு மாதம் நானும் என் மனைவியும் மட்டுமே கவனிக்க நேர்ந்த அனுபவம் சுவாரசியமானது. இன்னும் வாழ்க்கையில் எத்தனை தருணங்கள் வந்தாலும் என்னுடைய குழந்தைகள் பிறந்த அந்த தருணத்திற்கு ஈடாகுமா என்பது சந்தேகமே...

*****

கல்லூரி நாட்கள் என்பது அனைவருக்குமே மகிழ்ச்சியான நாட்கள். அதுவும் ஒரு நண்பர் குழு கிடைத்து விட்டால் போதும் அடிக்கும் கூத்துகளுக்கு அளவே இருக்காது. நான் 12ம் வகுப்பில் வாங்கி கிழித்த மதிப்பெண்களுக்கு எனக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியில் கல்லூரியில் தான் இடம் கிடைத்தது. கல்லூரியில் படிப்பதற்கு தான் நுழைந்தோம் என்பதே மறந்து போகும் அளவுக்கு அங்கு அடித்த கூத்துகளும் இனிமையானவை. அதில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல உள்ளன. ஆனால் அடிவாங்காமல் தப்பிக்க ஓடிய ஒரு நினைவு உள்ளது.

எங்கள் கல்லூரி விடுதிக்கு அருகில் மேல்மருவத்தூர் கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்கள் உள்ளன. ஒரு நாள் மாலை நண்பர்கள் சுமார் 10 பேருடன் அந்த விளைநிலங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு இடத்தில் அமர்ந்து அரட்டை அடித்து கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு நண்பன் கடலை நன்றாக விளைந்துள்ளது, பறித்து சாப்பிடலாமா என்றான். வேண்டாம் என்று சிலர் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சிலர் களத்தில் இறங்கினர். பறித்த கடலைகளை உட்கார்ந்து தின்று கொண்டிருந்த பொழுது திடீரென்று தூரத்தில் ஒரு கும்பல் எங்களை நோக்கி உருட்டு கட்டைகளுடன் ஓடிவருவது தெரிந்தது. ஓடிவருவது எங்களை நோக்கி தானா என்பது எங்களுக்கே சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு யாரும் அங்கு இல்லாததால் நாங்கள் தான் இலக்கு என்பது எங்களுக்கு புரிந்து நாங்களும் ஓடத்தொடங்கினோம். ஓடிச்சென்று சிக்காமல் விடுதி மாணவர் கூட்டத்தில் கலந்து விட்டோம். அதன் பிறகு கல்லூரியில் விசாரணை, மிரட்டல் இறுதியாக அப்பாலஜி லெட்டர் என வழக்கமான அரங்கேற்றங்கள் நடந்தன. அந்த ஒரு நிகழ்வில் கிடைத்த நல்ல பெயர் நான்கு ஆண்டுகளும் கல்லூரியில் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆனாலும் வேர்கடலை புடுங்கியதற்காக உருட்டுக்கட்டைகளுடன் ஆட்கள் ஏன் துரத்த வேண்டும் என எனக்கு புரிந்ததேயில்லை. கல்லூரியில் அதையொட்டி பலக் கதைகள் அப்பொழுது உலாவிக்கொண்டிருந்தன.

மேல்மருவத்தூர் கோயில் மீதும், பங்காரு அடிகளார் மீதும் பல விமர்சனங்கள் இருந்தாலும் அந்தக் கோயில் பலருக்கு தனிப்பட்ட வகையில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றால் அது மிகையல்ல. அங்கு தமிழில் தான் மந்திரம் சொல்லப்படும். கருவறைக்குள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். பெண்கள் மாதவிலக்கு காலத்திலும் கூட கருவறைக்குள் சென்று வழிபடலாம். இவை பல பக்தர்களுக்கு மேல்மருவத்தூர் கோயில் மீது ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அது தான் மேல்மருவத்தூர் கோயிலின் வெற்றியும் கூட. இந்து சனாதன தர்மங்களை உடைத்த ஒரு இடம் மேல்மருவத்தூர். அதே சமயத்தில் இந்து மதம் முன்வைத்த மூடநம்பிக்கைகளை முன்வைப்பதில் மேல்மருவத்தூரும் குறை வைத்ததில்லை.

*****

கல்லூரியை முடித்தப் பிறகு தான் கல்லூரி வாழ்க்கையை படிக்காமல் சொதப்பி விட்டோமோ எனப் புரிந்தது. படித்தது இயந்திரப் பொறியியல் என்பதால் அதில் வேலை தேடத் தொடங்கிய பொழுது அதில் "நல்ல" வேலை கிடைப்பது கடினம் என்பது புரிந்தது. அப்பொழுது தான் கணினித் துறை அதிக கவனத்தை பெற தொடங்கி இருந்த நேரம். நண்பர்கள் பலர் Y2K காலத்தில் நல்ல வேலைகளில் செட்டில் ஆகிக் கொண்டிருக்க நான் கணினி படிக்கத் தொடங்கினேன். பிறகு இரு சிறு நிறுவனங்களில் நிரலி எழுத தொடங்கியது தான் கணினித்துறையில் முதல் படி. குறைந்த சம்பளத்தில் சில மாதங்கள் குப்பை கொட்டியப் பிறகு ஐந்து இலக்க சம்பளத்துடன் மற்றொரு வேலையைப் பெற்ற பொழுது கல்லூரியை முடித்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தன. வேலை கிடைத்த பொழுது மகிழ்ச்சியை விட "அப்பாடா" ஒரு வழியாக கிடைத்து விட்டது என்றே நினைக்கத் தோன்றியது

*****

வலைப்பதிவுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வாழ்க்கையில் ஒரு முக்கியமான அங்கமாகி விட்டது. வலைப்பதிவுகள் மூலம் எனக்கு கிடைத்த முக்கிய பலன் - பல நண்பர்கள். பலரிடம் இருந்து அவ்வப்பொழுது வரும் நேசமான மின்னஞ்சல்கள். அந்த வகையில் வலைப்பதிவுகள் எனக்கு பிடித்தமான ஒன்று. அதே சமயத்தில் வலைப்பதிவுகள் மூலம் கிடைத்த சில நண்பர்களை இழந்தும் இருக்கிறேன். ஆனால் அதற்காக வருந்தியது இல்லை. கருத்து ஒற்றுமையின் காரணமாக கிடைக்கும் நட்பு சில நேரங்களில் கருத்து வேறுபாடால் முறிவது கூட இயல்பானதே...

அவ்வப்பொழுது வேலைப்பளு காரணமாக சில இடைவேளை இருந்தாலும் வலைப்பதிவுகளை விட்டும் விலகும் எண்ணம் ஏற்பட்டதில்லை. காரணம் சிறுவயதில் இருந்தே எழுத்தின் மீது இருக்கும் காதல்.

என்னுடைய அப்பா நியூஸ் ஏஜண்ட் என்பதால் பல தினசரிகளும், வார இதழ்களும் வீட்டில் கிடைக்கும். நான் முதன் முதலில் படிக்க தொடங்கியது என்றால் அது தினமணிக்கதிரில் வந்து கொண்டிருந்த தும்பி படக்கதைகள் தான். தினமணி, தினமணிக்கதிர், துக்ளக் போன்றவை வாசிப்பது ஒரு அறிவுஞீவித்தனமான செயல் என்பதான ஒரு பிம்பம் அப்பொழுது இருந்தது. இந்த அறிவுஞீவி பிம்பத்தை என் அப்பாவிடமும், அப்பாவின் நண்பர்களிடமும் இருந்து பெற வேண்டும் என்பதற்காக தினமணிக்கதிர் மற்றும் துக்ளக் போன்றவற்றை தொடர்ந்து வாசிக்கும் பழக்கம் எனது பள்ளிக்காலத்தில் இருந்தது. தினமணிக்கதிரில் அப்பொழுது பல நல்ல அரசியல் விமர்சனக் கட்டுரைகள் வரும். ஆனால் மாநில அரசியலை விட டெல்லி அரசியலுக்கு அதிக முக்கியத்துவத்தை தினமணிக்கதிர் கொடுத்துக் கொண்டிருந்தது. டெல்லி அரசியலுக்காகவே ஒரு தனிப்பக்கம் இருந்ததாக ஞாபகம். அப்பொழுது கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்ததார் என்று நினைக்கிறேன். கஸ்தூரி ரங்கனுக்குப் பிறகு மாலன் ஆசிரியராக பொறுப்பேற்ற பொழுது தான் மாநில அரசியல்களுக்கும் தினமணிக்கதிர் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது என நினைக்கிறேன். தினமணிக்கதிர் தற்பொழுது ரொம்ப அரசியல் வாசனை அடிக்கிறது என என் சித்தப்பா விமர்சித்ததும் ஞாபகத்தில் உள்ளது. அது போலவே "புலம் பெயர்ந்த தமிழர் சிறப்பதழ்" என ஒன்றை வெளியிட்டு அதில் முழுக்க முழுக்க புலிகளுக்கு எதிரான கருத்தை முன்வைத்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் புலிகளுக்கு எதிரானவர்கள் என்பது போல முன்நிறுத்தியதும் தினமணிக்கதிர் மீதான எனது அப்போதைய விமர்சனங்கள்.

அது போலவே துக்ளக்கில் வெளியாகிக்கொண்டிருந்த "எங்கே பிராமணன் ?" தொடர், "கூவம் நதிக்கரையினிலே.." என்னும் சோவின் அரசியல் விமர்சனப் பகுதி, தலையங்கம், கேள்வி பதில்கள் போன்றவற்றை படிக்கும் பழக்கம் இருந்தது. இவற்றை படித்தே அதில் முன்வைக்கப்படும் கருத்துகளுக்கு எதிரான கருத்துக்களை வளர்த்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு ஏற்பட்டு விட்டது. வலைப்பதிவுகளுக்கு வந்த பிறகு என்னைப் போன்ற பலர் இருப்பதை நானும் கண்டு கொண்டேன். அந்த வகையில் சோவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

அது போலவே அப்பொழுது வெளியாகிக்கொண்டிருந்த சுப.வீரபாண்டியனின் "இனி" போன்ற மாற்று இதழ்களையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அவர்கள் முன்வைத்த நடைமுறைச்சாத்தியம் அற்ற, மக்களின் ஆதரவு இல்லாத தனித்தமிழ்நாடு, தமிழ் தேசியம் குறித்தும் எனக்கு விமர்சனங்கள் உண்டு.

இந்த இதழ்கள் தவிர, நான் பிறந்து வளர்ந்த நெய்வேலியில் படிப்பதற்கான வசதிகள் அதிகம். நல்ல நூலகம் ஒன்று உண்டு. அது தவிர ஒரு நடமாடும் நூலகத்தை நெய்வேலி நிலக்கரி நிறுவனம் நடத்தி வந்தது. ஒரு பேருந்து நூலகமாக மாற்றப்பட்டு நெய்வேலியின் ஒவ்வொரு பகுதிக்கும் இந்த நடமாடும் நூலகம் வரும். சில மணி நேரங்கள் ஒரு இடத்தில் நிற்கும். என் வீட்டின் எதிரிலேயே இந்த பேருந்து நிற்கும் என்பதால் நிறைய புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பிறகு கல்லூரி சென்ற பொழுது நல்ல நூலங்கள் அங்கு இல்லாததால் நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து பிறகு ஒரு கட்டத்தில் வெகுஜன ஊடகங்களை மட்டுமே வாசிக்கும் பழக்கம் என்றளவில் தான் இருந்தது. பிறகு வலைப்பதிவுகளுக்கு வந்தது மறுபடியும் பலவற்றை வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வலைப்பதிவுகளில் நுழைந்தேன். ஆனால் பங்குச்சந்தை, பொருளாதாரம், அரசியல், சமூகம் என எழுதத்தொடங்கி இது வரை ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்ற எண்ணம் அவ்வப்பொழுது எனக்கு எழுவதுண்டு. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான அரசியல் குறித்து எழுதக்கூடியதாக உள்ளது என்பதால் "கட்டுரை வடிவம்" எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

*****

ஈழப் போராட்டத்தை சிறு வயது முதல் கவனித்து வருகிறேன். எனக்கு அப்பொழுது 10 அல்லது 11 வயது இருக்கலாம். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிங்கள இனவெறி ஜெயவர்த்தனேவுக்கு எதிராகவும் தமிழகத்தில் பல இடங்களில் நடக்கும் ஊர்வலங்கள் தான் என்னை இந்தப் போராட்டம் ஈர்த்த முதல் நிகழ்வு. ஜெயவர்த்தனேவின் கொடும்பாவி எரிக்கும் பழக்கம் அப்பொழுது எல்லா ஊர்களிலும் நடக்கும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு தமிழகத்தில் இருந்த ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் கலந்து இருந்தது. இதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழர் போராட்டத்தை கவனிக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. இதில் பின்னிப்பினைந்த அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளும் வயது அது அல்ல. என்றாலும் இந்தப் போராட்டம் என் மனதில் ஆணித்தரமாக பதிந்தது. விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் எனக்கு பல விமர்சனங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுந்தாலும் இந்தப் போராட்டத்தினை ஆதரிக்கும் எனது கருத்துகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை. வெகுஜன ஊடகங்கள் தமிழகத்தில் இந்தப் போராட்டத்தை திரித்தும், பொய்க்கதைகளை பரப்பியும் வந்ததற்கு "பின்னே" இருக்கும் அரசியல்களை அறிந்து கொள்ளவும் முடிந்தது

ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் என்னை வெகுவாக பாதித்தன. திலீபனின் மரணம், கிட்டு நடுக்கடலில் கப்பலை வெடிக்கச்செய்து தற்கொலைச் செய்து கொண்டது, யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றியது மற்றும் அவ்வபொழுது போர்களிலும், சிங்கள இராணுவத்தாலும் கொல்லப்படும் அப்பாவி தமிழர்களின் மரணங்கள் என்னை வெகுவாக பாதித்தன.

இன்று ஈழப்போராட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் சூழலில் அம் மக்களுக்கு ஒரு அமைதியான வாழ்க்கை ஏற்பட வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தப் போராட்டத்திற்கு விரைவில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சிங்கள இனவாதமும், உலக நாடுகளின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்த வில்லை என்பதே உண்மை

*****

எட்டு எழுத வேண்டும் என்பது தான் விளையாட்டு, ஆனால் இப்போதைக்கு இது போதும் என்றே நினைக்கிறேன்.

இப்பொழுது இன்னும் சிலரை மாட்டி வைக்கும் படலாம். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். நான் ஐந்து மட்டும் எழுதியுள்ளதால் ஆறு பேரை மட்டும் அழைக்கிறேன்
வெற்றி
மயிலாடுதுறை சிவா
கார்த்திக்ராமாஸ்
குழலி
டிசே தமிழன்
பொட்"டீ" கடை சத்யா

விளையாட்டின் விதிகள்:

விதிகள் என்பதே உடைப்பதற்கு தான் என்பதால் :)) உங்களுக்கு எதைப் பற்றி எழுத வேண்டுமோ "அந்த எட்டைப்" பற்றி எழுதி விடுங்கள்

Leia Mais…
Sunday, July 01, 2007

அப்துல் கலாம் : கே.ஆர்.நாராயணன் - யார் சிறந்த குடியரசுத் தலைவர் ?

இந்தியாவில் குடியரசுத் தலைவர் என்ற பதவியின் மீது ஒரு பெரிய புனிதத்தன்மையை பூசி புனித பிம்பங்களை அந்தப் பதவியில் அமர்த்த முனைவது தொடர்ந்து சில காலங்களாக நடந்து வருகிறது. அப்துல் கலாமிற்கு அடுத்ததாக நாரயணமூர்த்தி பெயர் சிலரால் முன்மொழியப்பட்டது. ஊடகங்களும் நாராயணமூர்த்தியை ஆதரித்தன. நாராயணமூர்த்தி மற்றும் ரத்தன் டாடா ஆகியோரது பெயர்கள் ஊடகங்களில் சில காலமாக உலாவிக்கொண்டிருந்தன. இதன் மூலம் அடுத்த குடியரசுத்தலைவர் பதவிக்கு சிலரைச் சார்ந்து ஒரு கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த சில ஊடகங்கள் முனைந்தன. அப்துல் கலாம் கூட நாரயணமூர்த்தி பெயரை வழிமொழிந்து இருந்தார். ஆனால் "நல்ல வேளையாக" நாரயணமூர்த்தியே தேசிய கீதம் குறித்த தன் "சிந்தனைகளை" வெளியிட்டார். அவர் மீது இருந்த பிம்பம் சரிய, அவரது பெயர் பரிசீலனை கூட செய்யப்படாமல் கைவிடப்பட்டது.

சரி....அப்படி என்ன தான் சமீபக்கால குடியரசுத்தலைவர்கள் சாதித்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம் என்று தோன்றியது.

சமீபக்கால குடியரசுத்தலைவர்களில் அதிகளவில் பேசப்பட்டவர்கள் என்றால் அது கே.ஆர்.நாராயணன் மற்றும் அப்துல் கலாம் தான். மற்றவர்கள் வெறும் அலங்காரமாக அந்தப் பதவியை அனுபவித்தவர்கள். வெறும் ரப்பர் ஸ்டாம்ப்புகள்.

இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே சிறந்தவராக அனைவரும் நினைப்பது, ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவது தற்போதைய குடியரசுத் தலைவரான அப்துல்கலாமைத் தான். ஆனால் சிறப்பாக செயலாற்றிய குடியரசுத்தலைவர் என்றால் அது கே.ஆர்.நாராயணன் தான். அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக சில விடயங்களில் சரியாக செயல்பட்டிருக்கிறார். ஆனால் கே.ஆர்.நாராயணன் அளவுக்கு செயல்பட்டாரா என்பது கேள்விக்குரியே. அப்துல் கலாமின் சாதனை குடியரசுத்தலைவர் என்ற பதவியை நடுத்தரவர்க்க இந்தியர்களிடம் அதிகம் பிரபலப்படுத்தியது தான். On the lighter side, குடியரசுத்தலைவர் பதவியை கொள்கைப்பரப்புச் செயலாளர் பதவிக்கு இணையாக மாற்றினார் என்று கூறலாம். (எந்தக் கொள்கைகள் என்பதை என்னுடைய முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்)

கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவர் என்பவர் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் மட்டுமே அல்ல என்பதை முதன் முதலாக வெளிப்படுத்தினார். குடியரசுத்தலைவர் பதவிக்கு இருக்கும் சில அதிகாரங்களை முதன்முதலாக பயன்படுத்தியவர் கே.ஆர்.நாராயணன் தான். குடியரசுத்தலைவர் மீது ஒரு கவன ஈர்ப்பினை நாராயணன் கொண்டு வந்தார். குடியரசுத்தலைவர் அரசின் முடிவுகளை தீர்மானிக்க முடியாது என்றாலும் தன்னுடைய ஆலோசனைகளை அரசுக்கு கொடுக்க முடியும். நாராயணனுக்கு முன்பு வரை இருந்த குடியரசுத்தலைவர்கள் அதனை செய்ததில்லை. அவர்கள் மைய அமைச்சரவையின் ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக்கொள்வதே வழக்கம். ஆனால் மைய அமைச்சரவைக்கு தன்னுடைய ஆலோசனைகளை அழுத்தமாக வழங்கியவர் கே.ஆர்.நாராயணன். அதனாலேயே அப்போதைய வாஜ்பாய் அரசாங்கத்தின் எதிர்ப்பினையும் எதிர்கொண்டார். ஊடகங்களும் இவரைச் சாடின. ஏனெனில் வாஜ்பாய் தலைமையில் இந்தியா ஒளிர்வதாக இந்த ஊடகங்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தன.

கே.ஆர்.நாரயணன் தான் நினைத்த அளவுக்கு குடியரசுத் தலைவர் பதவி மூலம் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று வருந்தியவர். அதை அவர் இவ்வாறு கூறுகிறார்

As the President of India, I had lots of experiences that were full of pain and helplessness. There were occasions when I could do nothing for people and for the nation. These experiences have pained me a lot. They have depressed me a lot. I have agonised because of the limitations of power. Power and the helplessness surrounding it are a peculiar tragedy, in fact.

கே.ஆர்.நாராயணன் இந்துத்துவ சக்திகள் தங்களின் ஆட்சி மூலம் இந்தியாவை "ஹிந்து" நாடாக மாற்ற முனைந்த சமயத்தில் குடியரசுத்தலைவராக இருந்தவர். குஜராத்தில் நரேந்திரமோடி அரசாங்கம் தன்னுடைய காவல்துறை மூலமே முஸ்லீம் மக்களை வேட்டையாடிய சமயத்தில் குடியரசுத்தலைவராக இருந்தவர். இந்த சமயத்தில் மைய அரசாங்கம் குஜராத்திற்கு உடனே இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினார். ஆனால் கே.ஆர்.நாராயணனின் வேண்டுகோளுக்கு வாஜ்பாய் அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. பின்னாளில் குஜராத் அரசாங்கம் மட்டுமில்லாமல் வாஜ்பாய் அரசாங்கமும் குஜராத் சமயத்தில் கலவரத்தை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்ததாக நாராயணன் சாடினார்.

கே.ஆர்.நாராயணன் பல விடயங்களில் குடியரசுத்தலைவர்களின் செயல்பாட்டிற்கு முன்னோடியாக திகழ்ந்தார். முதன் முதலாக தேர்தலில் வாக்களித்த குடியரசுத்தலைவர் என்றால் அது கே.ஆர்.நாராயணன் தான். இந்தியாவில் நாராயணனுக்கு முன்பு வரை குடியரசுத்தலைவர்களாக இருந்தவர்கள் தேர்தலில் வாக்களிப்பதில்லை. காரணம் குடியரசுத்தலைவர்கள் எந்தச்சார்பும் இல்லாமல் இருப்பதாக "வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்பது ஒரு மரபாக இருந்தது. இது எந்தளவுக்கு ஒரு போலித்தனமான மரபு என்பதை நாம் அறிவோம். அனைத்து குடியரசுத்தலைவர்களும் ஒரு கட்சியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அதே கட்சிக்கு விசுவாசமாக ரப்பர் ஸ்டாப்பாக செயல்பட்ட நிலையில் குடியரசுத்தலைவர் பதவியை சார்ந்த புனித பிம்பத்திற்காக தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது என்பது ஒரு கேளிக்கூத்தான மரபு. நாரயணன் இந்த போலித்தனமான மரபை முதன் முதலாக மீறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் பழக்கத்தை கே.ஆர்.நாராயணன் கொண்டு வந்தார்.

அது மட்டுமில்லாமல் மைய அமைச்சரவை பரிந்துரைக்கும் அனைத்து மசோதாவிற்கும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் கையொப்பம் இடுவது குடியரசுத்தலைவர்களின் பழக்கமாக இருந்து வந்தது. இந்தப் பழக்கத்தை முதலில் உடைத்தவர் கே.ஆர்.நாராயணன் தான். 1997ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்திரபிரதேச பாஜக அரசாங்கத்தை கலைக்க அப்போதைய பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான அரசாங்கம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆனால் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன் இதனை ஏற்க மறுத்து அமைச்சரவையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார். இந்தியாவில் தொடர்ச்சியாக பல மாநில அரசுகள் எக்காரணமும் இல்லாமல் கலைக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்த மரபு. அதனையும் தடுத்து நிறுத்தியவர் கே.ஆர்.நாராயணன் தான். இந்த சமயத்தில் ஜனநாயகத்தை கே.ஆர்.நாராயணன் காப்பாற்றியதாக அவரை ஆதரித்த பாஜக, பின் ஆட்சிக்கு வந்த பொழுது அவரை எதிர்த்தது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசாங்கம் 1998ல் பீகாரின் ராப்ரீதேவி அரசாங்கத்தை கலைக்க முனைந்த பொழுது கே.ஆர்.நாராயணன் அதனையும் ஏற்க மறுத்து அமைச்சரவையின் மறுபரிசீலனைக்கு திருப்பி அனுப்பினார்.

கே.ஆர்.நாராயணன் இந்தியாவின் முதல் தலித் குடியரசுத்தலைவர். குடியரசுத்தலைவராக இருந்த சமயத்திலும் தலித் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். கே.ஆர்.நாராயணன் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் (University of Travancore) எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரிவுரையாளர் பணி தருவது வழக்கம். ஆனால் நாராயணன் தலித் என்பதால் அவருக்கு clerk வேலையே தர முடியும் என பல்கலைக்கழகம் கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த நாராயணன் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். எம்.ஏ. பட்டத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் குடியரசுத்தலைவரான பிறகு தான் (50 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்தப் பட்டம் பல்கலைக்கழகத்தால் அவருக்கு வழங்கப்பட்டது.

கே.ஆர்.நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த பொழுது தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தவர். அவர் 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் தலித் சமூகத்தைச் சார்ந்த தகுதியான பலர் இருக்கையில் அவர்களை உச்சநீதிமன்றத்தில் நியமிக்காமல் இருப்பது எவ்வகையிலும் நியாயமாகாது என்று கூறினார்.

"Eligible persons from SC/ST categories are available and their underrepresentation or non-representation would not be justifiable. Keeping vacancies unfilled is also not desirable given the need for representation of different sections of society and the volume of work which the Supreme Court is required to handle."

இதையடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் 2000ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 1989க்குப் பிறகு 10 ஆண்டுகள் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியாத சூழலில் பாலகிருஷ்ணன் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.பாலகிருஷ்ணன் தற்பொழுது இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.

குடியரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் இடையே உச்சநீதிமன்றத்தில் தலித்களுக்கான இடஒதுக்கீடு குறித்து பரிமாறப்பட்ட இந்த "தனிப்பட்ட" கடிதம் வாஜ்பாய் அரசாங்கத்தால் கள்ளத்தனமாக ஊடகங்களிடம் வழங்கப்பட்டது. இந்திய ஊடகங்கள் நீதிமன்றத்தின் "திறமைக்கு" குடியரசுத்தலைவர் இடஒதுக்கீடு மூலமாக வேட்டு வைக்கிறார் என்ற தங்களது வழக்கமான பல்லவியை பாடின. இந்திய ஊடகங்களால் கடுமையாக சாடப்பட்டார் கே.ஆர்.நாரயணன்.

இந்துத்துவவாதிகள் ஆரம்பம் முதலே கே.ஆர்.நாராயணனை எதிர்த்தனர். அவர் காங்கிரசை சேர்ந்தவர் என்றாலும் அவரது பெயரை குடியரசுத்தலைவர் பதவிக்கு முன்மொழிந்தவர் வி.பி.சிங். காங்கிரசிலேயே அவருக்கு எதிர்ப்பு இருந்தது. அதுவும் அவரது சொந்த மாநிலமான கேரளாவின் காங்கிரஸ் கட்சி தலைமை அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை நம்புகிறவர் என்பதால் அவரை எதிர்த்தது. இந்திய ஊடகங்களும் அவரது இடஒதுக்கீடு ஆதரவு நிலைப்பாடு, தீவிர பொருளாதார தனியார்மயமாக்கத்தை எதிர்க்கும் அவரது நிலைப்பாடு போன்றவற்றுக்காக அவரை எதிர்த்தன.

இந்திய குடியரசுத்தலைவர்களியே அதிகம் செயலாற்றிய கே.ஆர்.நாராயணனின் செயல்பாடுகள் இந்த எதிர்ப்பை மீறி மக்களிடம் சென்று சேர்ந்தன என்றாலும் ஊடகங்கள் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் அப்துல் கலாமை முன்னிறுத்தி கே.ஆர்.நாராயணனை மறைத்தன. இந்தியக் குடியரசுத்தலைவர்களில் ஆக்கப்பூர்வமாக செயலாற்றிய கே.ஆர்.நாராயணன் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுக்காலத்தில் அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக சாதித்தது என்ன ? பல இடங்களில் இந்தியா வல்லரசாகும் என அப்துல் கலாம் உரையாற்றினார், குழந்தைகளிடம் பேசினார் என்பதாகத்தான் பலர் கூறுகின்றனர். ஆனால் அது குடியரசுத்தலைவரின் செயல்பாடு அல்லவே...

ஆதாயம் தரும் பதவி குறித்தான மசோதாவை பாரளுமன்றத்தின் பரிசீலனைக்கு அப்துல் கலாம் திருப்பி அனுப்பினார். இது அவரது சிறந்த நடவடிக்கை என்பதில் மாற்று கருத்து எதுவும் எனக்கு இல்லை. ஆனால் இது கூட நாராயணன் தொடங்கி வைத்த மரபு தான். அதைத் தான் கலாமும் பின்பற்றினார். இதைத்தவிர அப்துல் கலாம் குடியரசுத்தலைவராக மக்களின் தேவைகளை முன்னிட்டு எதனையும் செய்ததாக தெரியவில்லை. அப்துல் கலாமின் சாதனையாக ஊடகங்கள் கூறுவது குடியரசுத்தலைவர் என்ற பதவிக்கே தனிக் கவர்ச்சியை கொண்டு வந்தார் கலாம் என்பது தான். அது மட்டுமில்லாமல் அவரது சாதனையாக CNN IBN இவ்வாறு பட்டியலிடுகிறது

As a President he achieved innumerable firsts. In June 2006, the Supreme Commander of the Armed Forces took a ride on a fighter jet. In February 2006, the President traveled 40 metres below sea level in an Indian Navy submarine. In April 2004, he visited the Siachen glacier.

அதைத் தான் என்னுடைய முந்தைய பதிவில் கூறினேன். அப்துல் கலாம் முன்னிறுத்தியது இந்தியாவின் இராணுவ வலிமையை. நாராயணன் முன்னிறுத்தியது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை. தேசிய உணர்ச்சியை விட மக்களின் அடிப்படை தேவைகளும், அவர்களுடைய உரிமைகளும் முக்கியம். நாராயணன் குடியரசுத் தலைவர் பதவி மூலம் அதைத் தான் செய்ய நினைத்தார்.

நாராயணன் தொடங்கி வைத்த மரபுகளிலும் சில சறுக்கல்களை கலாம் எதிர்கொண்டார். 2005ம் ஆண்டு பீகார் சட்டமன்றத்தை மைய அரசு கலைத்தது. அப்துல் கலாம் இதற்கு ஒப்புதல் கொடுத்தார். பிறகு உச்சநீதிமன்றம் பீகாரின் சட்டமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறியது.

அப்துல் கலாமின் இந்தியா 2020 கனவுகள் குறித்து பலர் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். ஆனால் இந்தக் கனவுகள் - "வெறும் கனவுகள் தான்". நடைமுறைச் சாத்தியங்கள் இல்லாத அடிப்படையானவை. வெறும் இலக்குகள் குறித்து பேசுபவை. அவர் முன்வைக்கும் இலக்குகளை 2020க்குள் அடைவது எல்லாம் நடைமுறையில் சாத்தியம் இல்லை. அடிப்படையில் இந்தியா போன்ற பெரிய நாட்டை, மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாட்டை சில பொருளாதார அளவுகோள்கள் மட்டும் கொண்டு வளர்ந்த நாடு என்று கூறி விட முடியாது. எந்த வளர்ச்சியும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

அப்துல் கலாம் சிறந்த பேச்சாளரா என்று எனக்கு தெரியவில்லை. இது வரை ஒரு முறை கூட அவரது பேச்சினை நான் கேட்டதில்லை. ஆனால் அவரது பேச்சினை வாசித்திருக்கிறேன். சில நேரங்களில் அந்த பேச்சில் அபத்தங்கள் நிறைந்து இருப்பதை கவனிக்க முடியும். அவருடைய சிறப்பான பேச்சு என்பதாக மின்னஞ்சல்களில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தப் பேச்சினை அனைவருமே படித்திருக்க முடியும்.

I have three visions for India. In 3000 years of our history, people from all over the world have come and invaded us, captured our lands, conquered our minds. From Alexander onwards, The Greeks, the Turks, the Moguls, the Portuguese, the British, the French, the Dutch, all of them came and looted us, took over what was ours. Yet we have not done this to any other nation. We have not conquered anyone. We have not grabbed their land, their culture, their history and Tried to enforce our way of life on them. Why? Because we respect the freedom of others.

இது எவ்வளவு அபத்தமான ஒன்று. வட இந்தியத்தனமான பார்வை. "நாம்" யார் மீதும் படையெடுத்ததில்லை என்று அவர் கூறுவது முதலில் பொருந்தாது. ஏனெனில் இந்தியா என்ற தேசம் பல நூற்றாண்டுகளாக இருந்ததில்லை. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு பிறகு தான் இந்தியா என்ற தேசமே உருவானது. ("தமிழை" அடிப்படையாக் கொண்டு கூட ஒரு தேசம் இருந்ததில்லை)

அதற்கு முன்பு இருந்த அனைவரையும் அவர் இந்தியர்கள் என்கிறார் என்றால் கூட அவர்கள் யார் மீதும் படையெடுத்ததில்லை என்பது வரலாற்று தவறு. படையெடுத்தே அடுத்தவன் நாடு, அரண்மனை, பெண்கள் என அனைத்தையும் சிதைத்த மன்னர்களை கொண்டது இந்தப் பிராந்தியம். சோழன், சேரன், பாண்டியன், விஜயநகரம் என அடுத்த நாடு மீது படையெடுத்து அடுத்த நாட்டின் சுதந்திரத்தை பறித்தவர்கள் இந் நாட்டு மன்னர்கள். அது மட்டுமல்ல, சோழ சாம்ராஜ்யம் தென்னிந்தியா முழுமையும் ஆக்கிரமித்து இருந்தது. அது தவிர இலங்கை, மாலத்தீவுகள், கடாரம், சுமத்ரா என பல நாடுகள் மீது சோழர்கள் படையெடுத்தனர். சோழ ஏகாதிபத்யம் (Chola imperialism) என்று கூட இவர்கள் அழைக்கப்படுவது உண்டு. சோழ ஏகாதிபத்யம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் போலவே பொருளாதாரத்திற்காக நாடு பிடிக்கும் ஆசையை அடிப்படையாக கொண்டது. பொருளாதாரக் காரணங்களுக்காகவே இவர்கள் மாலத்தீவுகள், கடாரம், சுமத்ரா போன்றவற்றின் மீது படையெடுத்தனர். (இது குறித்த என்னுடைய பதிவு)

உண்மை இவ்வாறு இருக்க அப்துல் கலாம் தன்னுடைய உரை மூலம் என்ன கூற வருகிறார் ? எதைக் கட்டியெழுப்ப முனைகிறார் என்பது தெளிவாக வெளிப்படுகிறது.

இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. அப்துல் கலாமின் பேச்சு மற்றும் கனவுகள் குறித்து இன்னும் கூட விரிவாக பேச முடியும். அதை மற்றொரு சமயத்தில் விரிவாக பேசும் எண்ணம் உண்டு.

*****

தேர்தலில் வாக்களிக்காமல் இந்தியக்குடியரசுத்தலைவர்கள் நடுநிலைமை முகமூடி அணிந்தாலும் சாமியார்கள் மடத்தில் ஆஜராவதில் எந்தக் குறையும் வைத்ததில்லை. வெங்கட்ராமன் குடியரசுத்தலைவர் மாளிகையை காஞ்சிபுரத்திற்கு மாற்றாதது தான் ஆச்சரியம். அடிக்கடி காஞ்சிபுரத்திற்கு வந்து செல்வார். சங்கர் தயாள் சர்மா திருப்பதிக்கு செல்வதை முக்கிய கடமையாக வைத்திருந்தார்.அப்துல் கலாமும் இந்த விடயத்தில் குறைவைத்ததில்லை. எல்லா மடங்களுக்கும் சென்று வந்தார். புட்டபர்த்தி சாய்பாபா பிறந்தநாளுக்காக புட்டபர்த்திக்கே சென்றவர் அப்துல் கலாம்.


ஆனால் நாராயணன் குடியரசுத்தலைவராக இருந்த காலத்தில் எந்த சாமியார் மடத்திற்கும், வழிபாட்டு தளங்களுக்கும் செல்லாதவர் என்பதே அவரை பிற குடியரசுத்தலைவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

****

அடுத்த குடியரசுத்தலைவராகப் போவது பிரதீபா பட்டீல். அவருக்கு சேனியா காந்தி தான் இந்த வாய்ப்பினை வழங்கினார். என்றாலும் அவர் வழிபடும் பாபாவின் ஆவி தான் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளாதாக கூறியிருக்கிறார் :)

தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதீபா பட்டீல் :

நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மிக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதிஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஓர் இனிய அனுபவம் கிடைத்தது. தாதிஜியின் உடலில் பாபா (பிரம்மகுமாரிகள் பிரிவின் நிறுவன தலைவர் மறைந்த லெக்ராஜ்) ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார். நான் அதிர்ஷ்டசாலி என்றும் மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்து இருப்பதாகவும் அதற்கு நான் தயாராக இருக்குமாறும் கூறினார்.

இவரைத் தான் காங்கிரசும், இடதுசாரிகளும், திமுகவும், பாமகவும் ஆதரிக்க போகின்றனராம். இவர் தான் இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த பொறுப்பை வகிக்க போகின்றாராம்.

வாழ்க இந்திய ஜனநாயகம் :)

Leia Mais…