வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Friday, June 30, 2006

இந்தியா - ஈழம்

இன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது "சிலருக்கு" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் "தமிழீழ ஆதரவாளர்கள்" அனைவரும் "இந்தியாவின் எதிரிகள்" அல்லது "பிரிவினைவாதிகள்" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.

"தமிழீழ ஆதரவாளர்கள்" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

சில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். "இந்திய தேசியத்தை" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று "சிலரால்" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. "தமிழன்" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.

தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.

இந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.

சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் "வெறித்தனமான" அபிமானங்களோ, "சில" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல்களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.

Leia Mais…
Tuesday, June 27, 2006

ராஜீவ் படுகொலை : பாலசிங்கத்தின் மன்னிப்பு

இராஜீவ் படுகொலை ஒரு "துன்பியல்" சம்பவம் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பிறகு புலிகளின் தலைமையிடம் இருந்து வந்திருக்கும் முக்கியமான ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மன்னிப்பு கேட்கும் நிகழ்வாக பாலசிங்கத்தின் பேட்டி இருக்கிறது. இந்த "மன்னிப்போ", இந்தியாவை நோக்கிய புலிகளின் நட்பு ரீதியான அணுகுமுறையோ இந்தியாவின் நிலையில் எந்த மாற்றத்தையும் தற்பொழுது ஏற்படுத்தப் போவதில்லை.

கடந்த காலங்களில் புலிகள் இந்தியாவிடம் நெருங்கி வர முயன்ற சூழ்நிலைகளில் இந்த "மன்னிப்பு" கேட்க வேண்டிய அவசியத்தை பல இந்தியப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பாளர்கள் முன்வைத்து இருந்தனர். இராஜீவ் காந்தியின் படுகொலையை மன்னிப்பு கேட்பதன் மூலம் சரியாக்கி விட முடியுமா ? என்ற கேள்வி எனக்கு அப்பொழுதே எழுந்தது.

என்றாலும் பொதுவாக பலர் முன்வைத்து இருந்த இந்த மன்னிப்பு, தற்பொழுது கிடைத்து விட்டப் பின்னரும், எந்த மாற்றமும் இந்தியாவின் நிலையில் ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. ஆனாலும் புலிகளின் எதிர்கால உத்திகளை பாலசிங்கத்தின் பேட்டி படம் பிடித்து காட்டுவதாகவே நான் நினைக்கிறேன்.

புலிகளின் இந்த முயற்சி உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடாது. ஆனால் எதிர்காலத்தில் தங்களுக்கு இந்தியா மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை தவிர்த்துக் கொள்ள இதன் மூலம் புலிகள் முயன்றிருக்கிறார்கள்.

உலக நாடுகளின் தடை புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தியாவின் உதவியை நாட புலிகள் முயலுகிறார்கள் என்ற பல பத்திரிக்கைகளின் கருத்தை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.

இதற்கு காரணம் புலிகள் மீது தடை விதித்துள்ள நாடுகளில், இந்தியாவுடன் மட்டுமே புலிகளுக்கு "தனிப்பட்ட பகை" உள்ளது. இந்திய இராணுவம் - புலிகள் போர் மற்றும் இராஜீவ் காந்தியின் மரணம் போன்றவையே புலிகளை இந்தியாவுடன் நெருங்க முடியாமல் செய்யக்கூடியவை. இவை தவிர புலிகளை கடுமையாக எதிர்க்க கூடிய "செல்வாக்கு மிகுந்த ஒரு Lobby" இந்தியாவில் தான் உண்டு.

ஆனால் பிற நாடுகளுடன் புலிகளுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை. புலிகள் மீது தடை விதிக்க வேண்டிய எந்த ஒரு தனிப்பட்ட நோக்கமும் பிற நாடுகளுக்கு இருந்ததில்லை. இலங்கை அரசின் நிர்பந்தம் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் புலிகளை தடை செய்ய முக்கிய காரணம் (இவை தவிர என்னுடைய முந்தையப் பதிவில் கூறியிருந்த பொருளாதார ரீதியான அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணமாக கருத முடியும்). புலிகள் மீதான ஐரோப்பிய யூனியன் தடை, கனடாவின் தடை போன்றவை புலிகள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை.

புலிகள் மீதான தன்னுடைய தடை நிரந்தரமானது அல்ல என்றும் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் புலிகளுடன் தங்களால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அமெரிக்கா கடந்த மாதம் கூறியிருந்தது. இது சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய எந்த வாய்ப்பும் இந்தியாவிடம் புலிகளுக்கு இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அதாவது தடை விதித்துள்ள நாடுகளில் புலிகளால் நெருங்க முடியாத நாடு இந்தியா மட்டுமே. ஆனால் பிற நாடுகளை புலிகளால் எதிர்காலத்தில் அணுக முடியும்.

இந்தியாவுடன் நெருங்கி வரத்தக்க ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியின் முதல் படியாகத் தான் பாலசிங்கம் இராஜீவ் காந்தியின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த மன்னிப்பு சில முக்கியமான பிண்ணனி காரணங்களைக் கொண்டது.

என்னுடைய முந்தையப் பதிவில் கூறியுள்ளது போல இலங்கையில் போர் துவங்கும் பட்சத்தில் திரிகோணமலை புலிகளின் முக்கியமான இலக்காக இருக்கும். திரிகோணமலை என்பது ஒரு முக்கியமான பொருளாதார மற்றும் இராணுவ கேந்திரம். இந்த இடம் புலிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் ஈழப் போரில் முதன் முறையாக ஒரு பொருளாதார கேந்திரம் புலிகளிடம் இருக்கும். ஒரு முக்கியமான பொருளாதார இடம் மூலம் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கும். இவை தவிர திரிகோணமலை துறைமுகம் குறித்தான சில ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கை அரசுக்கும் உள்ளது. புலிகள் இதனை கைப்பற்றும் பொழுது இந்தியாவின் நலன்கள் குறித்த கேள்வி எழும். அப்பொழுது இந்தியாவுடன் உறவை புதியதாக தொடங்க புலிகள் விரும்பினாலும், இராஜீவ் காந்தி படுகொலை, மன்னிப்பு போன்ற பிரச்சனைகள் அப்பொழுது எழும்.

இத்தகையப் பிரச்சனைகளை முன்கூட்டியே தவிர்க்க புலிகள் இந்த "மன்னிப்பு" மூலம் திட்டமிடுகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார நிர்பந்தங்களை புலிகள் exploit செய்ய நினைக்கிறார்களோ என்ற எண்ணம் எழுகிறது.

இதைத் தவிர தமிழீழம் என்ற தனி நாட்டை எதிர்ப்பதில் இந்தியாவிற்கு தான் பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இன்னொரு நாடு உருவாவது தங்களின் பொருளாதார, இராணுவ நோக்கங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் என்ற வகையில் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் தமிழீழத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழீழம் என்பது உருவானால் இந்தியாவில் இருக்கின்ற பஞ்சாப், காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தீவிராவாத குழுக்களுக்கு அது ஒரு முன் மாதிரியாக அமைந்து விடும் என்ற அச்சம் இந்தியாவிற்கு உண்டு. இந்தியாவுடன் நட்பு கொள்வதன் மூலம் இந்த அச்சத்தை போக்க முடியும் என புலிகள் நினைக்கின்றனர்.

இவை தவிர பிராந்திய வல்லரசான இந்தியாவுடன் நெருங்கி வருவதன் மூலம், இந்தியா மூலம் தங்களுக்கு எதிர்ப்பு ஏற்படாதவண்ணம் பார்த்துக் கொள்ள முனைகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இப்படியான சில காரணங்களை எதிர்நோக்கி தான் புலிகள் தற்பொழுது மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் இந்த மன்னிப்பு தற்பொழுது எந்த பலனையும் கொடுக்காது. என்றாலும் எதிர்காலம் நிச்சயமற்றது.

Tags


Leia Mais…
Saturday, June 24, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 4

இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு குறித்து பேசும் பொழுது இலங்கை அரசு ஆதரவு நாடுகள், பத்திரிக்கையாளர்கள், "ஒன்றுபட்ட சிறீலங்காவினுள் தமிழர்கள் தங்களுக்கான உரிமைகளைப் பெற்று வாழ வேண்டும்" என்று கூறுவார்கள். "the unity, sovereignty and territorial integrity of Sri Lanka", "undivided Srilanka" என்பன போன்ற பதங்களை இந்த நாடுகளின் அறிக்கையிலும், இந்தப் பத்திரிக்கைகளிலும் காண முடியும். மேலோட்டமாக பார்க்கும் பொழுது இது "தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெற்று வாழ்வதை" இந்த நாடுகள் ஆதரிப்பது போன்ற தோற்றம் தெரியும். ஆனால் இது சில உண்மைகளை மூடி மறைக்கும் உத்தி என்பது தான் யதார்த்தமான உண்மை.

undivided Srilanka என்பது தீர்வாக கூறப்படும் நிலையில் சிறீலங்காவின் இன்றைய நிலை என்ன ?

சிறீலங்கா ஏற்கனவே இரண்டு துண்டுகளாகி விட்டது.


தென்னிலங்கையில் இருக்கும் சிங்களப் பகுதி, தமிழ்ப் பகுதிகளான யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை நகரங்கள், மன்னார், தமிழர் மற்றும் முஸ்லீம்களின் பகுதியான அம்பாறை போன்ற பகுதிகள் தான் சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வடகிழக்கு மாகாண தமிழர் பகுதிகளில் சுமார் 30%-40% மட்டுமே சிறீலங்கா அரசு வசம் உள்ளது.

கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு, போன்ற பகுதிகளும், மட்டகளப்பு, திரிகோணமலை, அம்பாறை போன்ற பகுதிகளில் சில இடங்களிலும் என சுமார் 60-70% வடகிழக்கு மாகாண தமிழ்ப் பகுதிகள் இன்று புலிகள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. அதாவது "தமிழீழம்" என்று கருதக்கூடிய தமிழர் பகுதிகளில் ஏற்கனவே 60% முதல் 70% புலிகள் வசம் உள்ளது.

இந் நிலையில் "undivided Srilanka", "Sovereignty and territorial integrity of Sri Lanka" என்பது புலிகள் தங்கள் வசம் உள்ள பகுதிகளை சிறீலங்கா அரசுக்கு ஆயுதங்களை கைவிட்டு "விட்டுக் கொடுத்தால்" கிடைக்கும். அல்லது சிறீலங்கா இராணுவம் புலிகளை தோற்கடித்து கைப்பற்றினால் undivided Srilanka கிடைக்கும். ஆனால் இது இரண்டுமே சாத்தியம் அற்றது என்பது இந்தப் பிரச்சனையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு கூட புரியும்.

யானையிறவு இராணுவ முகாமை கைப்பற்றி புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் நிலையில் இருந்த பொழுது அமெரிக்க, இந்திய அரசுகள் புலிகளுக்கு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்ததாகவும், அதனாலேயே புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் தங்கள் திட்டத்தை நிறுத்திக் கொண்டதாகவும் ஒரு கருத்து உண்டு. யாழ்ப்பாணம் புலிகளின் கைகளுக்கு எளிதாக சென்று விடும் என்ற நிலையில் உலக நாடுகளை நோக்கி தன் நாட்டை காப்பாற்றுமாறு சந்திரிகா கேட்டுக் கொண்டிருந்த நிலையில் தான் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் யாழ்ப்பாணத்தைச் சுற்றியப் பகுதிகளில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.

இது அமெரிக்க, இந்திய அரசுகளின் எச்சரிக்கையால் ஏற்பட்டது என்று என்னால் நினைக்க முடியவில்லை.புலிகளின் எண்ணிக்கை ஒரு பரந்து பட்ட தமிழீழத்தை தக்க வைக்க கூடிய நிலையில் அன்றைக்கு இல்லை. நிலங்களை கைப்பற்றுவதை விட கைப்பற்றிய இடங்களில் நிலை நிறுத்திக் கொள்ள தேவைப்படும் பலம் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தக்க வைக்க முடியாமல் மரபுரீதியான போரில் புலிகள் தோல்வி அடைந்து பின்வாங்கிய நிலையும் ஒரு முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். யாழ்ப்பாணத்தை கைப்பற்றியப் பின் அதனை இராணுவத்திடம் இழப்பதை விட இருக்கின்ற நிலைகளை தக்க வைத்துக் கொள்வது புலிகளின் நோக்கமாக அன்றைக்கு இருந்தது.

இராணுவம் எப்படி "undivided Srilanka"வை அடையவேண்டுமென்றால் புலிகளின் பகுதிகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமோ அதே போல புலிகள் தமிழீழத்தை அடைய வேண்டுமானால் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்ற வேண்டும். யாழ்ப்பாணம் ஈழத் தமிழர்களின் கலாச்சார அடையாளம் என்றும், திரிகோணமலை நகரம் தமிழீழத்தின் தலைநகரம் என்றும் புலிகள் கூறியுள்ள நிலையில் போர் தொடங்கினால் இந்த இரண்டு நகரங்களை கைப்பற்ற புலிகள் தங்களுடைய முழுபலத்தையும் பிரயோகிப்பார்கள்.

ஆனால் இந்த நகரங்களை கைப்பற்றுவது எந்த அளவுக்கு சாத்தியம் ? சிறீலங்கா இராணுவத்தின் அத்தனை இராணுவ பலமும் இந்த இரு நகரங்களைச் சூழ்ந்திருக்கிற நிலையில் புலிகளின் இராணுவ பலம் மூலம் இந்த இரண்டு பகுதிகளை கைப்பற்ற முடியுமா ?

யாழ்ப்பாணம், திரிகோணமலை ஆகிய இரண்டு பகுதிகளை கைப்பற்றும் அவர்களின் நோக்கமே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தை செண்ட்டிமெண்ட்டாக புலிகள் கருதினாலும், அவர்களின் முக்கியமான இலக்காக திரிகோணமலை இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இதற்கு முக்கிய காரணம் திரிகோணமலையின் இராணுவ மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவம். திரிகோணமலையின் இராணுவ முக்கியத்துவம் ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். இயற்கையான துறைமுகம், பாதுகாப்பான துறைமுகம் என்பதால் இந்த துறைமுகத்தை தங்கள் வசம் கொண்டு வர இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் என ஒரு நீண்ட வரலாறு இந்த துறைமுகத்திற்கு உண்டு.

1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பொழுது இராஜீவ் காந்திக்கும், ஜெயவர்த்தனேவுக்கும் இடையே நடந்த கடித உறையாடல்களின் மூலம் இந்த துறைமுகத்தை இந்தியாவின் நலன்களுக்கு எதிராக பிற நாடுகளுக்கு இலங்கை கொடுப்பது தடுக்கப்பட்டு விட்டது.
அந்தக் கடிதங்களின் சாராம்சம்

  • Trincomalee or any other port of Sri Lanka, will not be made available for military use by any country in a manner prejudicial to India’s interests.
  • The work of restoring and operating the Trincomalee oil tank farm will be undertaken as a joint venture between India and Sri Lanka.

இது தவிர மாறிவரும் உலகச் சூழலில் இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார மற்றும் இராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து உள்ள நிலையில் அமெரிக்க-இந்திய கடற்ப்படைகளுக்கு இடையே இந்தப் பிரச்சனையில் போட்டி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் குறைவே. ஆனால் நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புகள், Globalization போன்றவை இலங்கையின் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை அதிகரித்து உள்ளன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் இந்தப் பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.
2000ம் ஆண்டிற்கு முன்பு வரை இந்தப் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருந்த ஜப்பான் போன்ற நாடுகள் கூட தற்பொழுது இந்தப் பிரச்சனையில் ஆர்வமுடன் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதை கவனிக்க வேண்டும். இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டை டோக்கியோவில் நடத்தியது, தன்னிச்சையான சமாதான முயற்சிகள் என ஜப்பான் இந்தப் பிரச்சனையில் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ஆர்வத்தை செலுத்த தொடங்கியதன் பிண்ணனி சுவாரசியமானது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வரலாற்று காலம் தொடங்கி இன்றைய நிலை வரை கடல் மீதான ஆளுமையைச் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. தமிழக வரலாற்றை சோழர் காலம் முதல் ஆராயும் பொழுது கூட ( என்னுடைய முந்தையப் பதிவு - சோழர்களின் பொருளாதாரப் போர்கள்) இந்த உண்மை நமக்கு தெளிவாகும். கடல் மீது இருந்த மிகப் பலமான ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசாங்கம் உலகெங்கும் நிறுவப்பட்டது. சோழர் காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு விடவில்லை.

இன்றைய இலங்கை இனப் பிரச்சனையில் கூட உலக நாடுகளை இந்த வர்த்தக எண்ணமே செலுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை ஒரு தீவாக ஆசியாவின் மையப் பகுதியில் மத்திய கிழக்கு, கிழக்காசியா இடையேயான கடல் பாதையில் இருப்பதே இந்தப் பிரச்சனையில் பல நாடுகளை ஆர்வம் கொள்ளச் செய்திருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் மலாக்கா நீரிணைவு இடையேயான கடல் பாதை உலக வர்த்தகத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணைவு வழியாகத் தான் நடைபெறுகிறது. உலக மொத்த வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ஜப்பானின் எண்ணெய் தேவைகளில் சுமார் 80% இந்தப் பகுதி வழியாகத் தான் நடைபெறுகிறது. மலாக்கா நிரிணைவு சீனாவை ஆசியாவுடன் இணைக்கும் பகுதி என்பதும், சீனா தனது 60% எண்ணெய் தேவைகளுக்கு இந்தப் பகுதியையே நம்பி இருக்கிறது என்பதும் இந்தக் கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும்.

அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் முதல் ஐந்து இடம் பெறக் கூடிய பொருளாதார வல்லரசு நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான் போன்றவற்றின் எரிபொருள் தேவை இந்தக் கடற்பகுதி வழியாகத் தான் நடைபெறும் என்பதால் தங்களின் தேவைகளுக்கு எந்தப் பிரச்சனையும் எதிர்காலத்தில் நேர்ந்து விடக் கூடாது என்ற அக்கறை இந்த நாடுகளுக்கு உண்டு. ஆசியாவின் பிற பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா போன்றவையும் இந்தப் பகுதியில் இருப்பதை கவனிக்க வேண்டும். இவை தவிர எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் இந்தப் பகுதியில் தன்னுடைய எண்ணெய் வளத்துடன், இராணுவ ரீதியிலான பலத்தை பெறுவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.

எதிர்காலத்தில் உலகின் முக்கியமான பொருளாதார கேந்திரமாக உருவாகக்கூடிய இந்தக் கடற்பரப்பில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது.

கச்சா எண்ணெய் தவிர அணுமின் நிலையங்களுக்கும், அணுஆயுத உற்பத்திக்கும் தேவைப்படும் புளூட்டோனியம் போன்றவையும் கடல்வழியாகத் தான் கொண்டுச் செல்லப்படுகிறது. எதிர் வரும் காலங்களில் உலகின் முக்கியப் பொருளாதாரப் பிரச்சனையாக இருக்கப் போவது கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் தேவைகள் தான். தங்களுடைய எரிபொருள் தேவைகளுக்கு தன்னிச்சையான முயற்சிகளை மேற்கொள்ள சீனா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந் நிலையில் தான் கடல் மீதான ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. தங்களுடைய எண்ணைக் கப்பல்களின் பாதுகாப்பு, பிரச்சனையில்லாத போக்குவரத்தை கப்பல்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களை கண்டறிவது போன்றவற்றுடன் இந்த கடல்வெளியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற ரீதியில் தான் உலக நாடுகளின் நிலை அமைந்து இருக்கிறது.

இந்தக் கடற்பரப்பில் தங்களின் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொள்வதும், எதிர்காலங்களில் பிரச்சனை நேரும் சமயங்களில் தங்களின் இருப்பை இந்த வர்த்தக முக்கியத்துவம் மிக்க பகுதியில் நிலை நிறுத்திக் கொள்வதிலும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் முனைந்தன.

உலக கடல் போக்குவரத்தில் chokepoint என்று சொல்லக்கூடிய பகுதிகள் நிறைய உண்டு. அதாவது மிகக் குறுகலான பாதை உடையப் பகுதிகளை chokepoint என்று கூறுவார்கள். இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினம். அவ்வாறான ஒரு chokepoint உள்ள இடம் தான் மலாக்கா நிரிணைவு ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்ட பல குறுகலான பாதைகள் உள்ளன. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்ப்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனை தடுக்கும் பொருட்டு தான் இந்தப் பகுதியில் பல நாடுகளின் கடற்ப்படை தளங்கள் உருவாக தொடங்கின. அமெரிக்கா இந்தப் பகுதியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து முனைந்து வருகிறது. இந்திய அமெரிக்க கடற்ப்படை இடையே இராணுவ ஒத்துழைப்பு, மலாக்கா நிரிணைவுகளில் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் போன்றவை மேற்கொள்ளப் படுகின்றன. மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. சுனாமியை முன்னிட்டு அமெரிக்கா தனது கடற்படையை இப் பகுதியின் பலப் பகுதிகளுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடாக கருதப்படும் சீனா இந்தப் பகுதியின் சில முக்கியமான இடங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முனைந்தது. இப் பிராந்தியத்தின் வல்லரசான இந்தியா மூலம் எதிர்காலத்தில் தன் வர்த்தகத்திற்கு அச்சறுத்தல் நேராமல் தடுக்கவும், தன் வர்த்தகத்திற்கு பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாகவும் மியன்மார் (பர்மா), மாலத்தீவுகள் போன்ற பகுதிகளில் தன் கடற்ப்படை மற்றும் தொலைத்தொடர்பு தளங்களை சீனா அமைத்துக் கொண்டது. அது தவிர மியன்மார் அரசுடன் எண்ணெய் கிடங்குகளை பராமரிக்கும் வசதிகளையும் பெற்று இருக்கிறது.

இந்தியாவிற்கு ஏற்கனவே அந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிகப் பெரிய கடற்படை தளம் உள்ளது. இது மலாக்கா நிரிணைவு பகுதியின் அருகாமையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் எண்ணெய்க் கிடங்குகளையும் இந்தியா அமைத்துள்ளது. திரிகோணமலையிலும் இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் காப்ரேஷன் எண்ணெய் கிடங்குகளை பராமரித்து வருகிறது.

இவை தவிர இந்தக் கடற்பரப்பில் தேவைப்படும் கண்காணிப்பிற்கு தொலைத்தொடர்பும் மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கு முதல் மலாக்கா நிரிணைவு வரையிலான பகுதியில் இருக்கும் வர்த்தக கப்பல்கள் மற்றும் இராணுவ நிலைகளிடையே தொடர்பு கொள்ளக் கூடிய தேவையும் உள்ளது. இலங்கை இந்தக் கடற்ப்பாதையின் மையப் பகுதியில் இருப்பதால் இத்தகைய தொலைத்தொடர்புக்கு உகந்த இடமாகவும் உள்ளது. அதன் அடிப்படையில் தான் வாய்ஸ் ஆப் அமெரிக்கா போன்ற நிலைகளை 1980களிலேயே இங்கு அமைக்க அமெரிக்கா முனைந்தது. இன்று தொலைத்தொடர்பு அசுர வளர்ச்சிப் பெற்றிருக்கிற சூழ்நிலையில் இது ஒரு பெரிய பலம் என்று சொல்ல முடியாது. என்றாலும் இதுவும் இலங்கைக்கு ஒரு முக்கியமான பலம் தான் என்பதை மறுக்க முடியாது.

இவ்வாறு இந்தப் பகுதி மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக இருப்பதால் தான் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தப் பிரச்சனையில் மிகத் தீவிரமான ஆர்வம் காட்ட தொடங்கின. இயல்பாகவே இந்த நாடுகள் இப் பிராந்தியத்தில் அமைதி ஏற்படுவது தான் தங்களுடைய பொருளாதார தேவைகளுக்கு உகந்ததாக இருக்ககூடும் என்ற எண்ணத்தில் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டினை எடுத்தன. அதனால் புலிகளுக்கு அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க தொடங்கின. இவ்வாறு நெருக்கடி கொடுப்பதன் மூலம் புலிகளை போர் நோக்கி செல்லாமல் தடுக்க முடியும் என நினைத்தன. அதன் விளைவு தான் அமெரிக்கா ஐரோப்பிய யூனியனை நிர்பந்தம் செய்து புலிகள் மீதான தடையினை கொண்டு வந்தது.

ஆனால் புலிகளின் போக்கு உலக நாடுகளை தங்களின் வழிக்கு கொண்டு வருவது என்ற ரீதியிலேயே இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொரு நாடும் விடுக்கும் நிர்பந்தங்களுக்கு அடிபணியும் பொழுது தமிழீழம் என்ற தீர்வினை விட்டுக்கொடுக்க நேரும். அது மட்டுமில்லாமல் ஈழப்போராட்டம் ஒரு தன்னிச்சையான பாதையில் செல்லாமல் உலகநாடுகளின் எண்ணங்களுக்கு ஏற்ப வளைந்து செல்லக்கூடிய நிலை நேர்ந்து விடும்.

இன்று இராணுவ ரீதியில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிறையப் பின்னடைவுகளை எதிர்கொண்டு இருக்கும் அமெரிக்கா, இலங்கைப் பிரச்சனையில் இராணுவ ரீதியில் "நேரடியாக" உள்ளே நுழையாது. வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சனையில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாது என்ற நிலையில் உலக நாடுகளின் நிர்பந்தம் வெறும் அச்சறுத்தல், அங்கீகாரம் மறுப்பு என்ற அளவில் தான் இருக்கும்.

இந் நிலையில் இந்தக் கடற்ப்பரப்பில் தங்களது ஆளுமையை நிலை நிறுத்துவது தான் உலக நாடுகளை தங்களின் நிலை நோக்கி கொண்டு வரும் ஒரே வழி என புலிகள் முடிவு செய்தனர். இந்தப் பிராந்திய கடற்பகுதியில் தாங்களும் ஒரு முக்கியமான சக்தி என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவது தான் அவர்களின் எண்ணம். எனவே தான் திரிகோணமலை புலிகளின் முக்கிய இலக்காக எதிர்வரும் காலங்களில் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

புலிகளின் கடற்படை இப் பிராந்தியத்தின் கடற்ப்பரப்பில் ஒரு முக்கியமான சக்தி என்பதை நிலை நிறுத்தும் வகையில் தான் கடந்த ஆறு மாத நிகழ்வுகள் இருந்தன.

அதனால் புலிகள் பெறப் போகும் பலன் என்ன ?

பொருளாதார முக்கியத்துவம் மிக்க ஒரு பகுதியில், ஒரு முக்கியமான சக்தியை எந்த நாடும் புறக்கணித்து விட முடியாது.

(தொடரும்)

Tags


Leia Mais…
Monday, June 12, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 3

புலிகளின் ராஜதந்திர உத்திகள் கடந்த இருபது ஆண்டுகளில் எந்தளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது ? இன்று ஈழப் போராட்டம் சர்வதேச மயமாகி பல நாடுகளின் தடைகள் புலிகள் மீது பாய்ந்துள்ள நிலையில் இந்தக் கேள்வி வலுப்பெறுகிறது.

இதற்கு விடை தேடும் பொருட்டு என்னுடைய கருத்தாக எதனையும் முன்வைக்காமல் புலிகள் எவ்வாறு இந்தப் பிரச்சனையை கடந்த 20 ஆண்டுகளில் அணுகியிருக்கிறார்கள் என்ற கோணத்தில் இந்தப் பதிவினை எழுத முயன்றுள்ளேன்.

புலிகளின் உத்தி ஆரம்பத்தில் இருந்தே இந்தப் பிரச்சனையை படிப்படியாக அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் உந்துதல் மட்டுமே கொண்டு அமைந்திருந்தது. இந்தப் போராட்டத்தை அடுத்தக் கட்ட நிலைக்கு கொண்டுச் செல்ல புலிகள் தொடர்ந்து பல்வேறு வழிகளில் முனைந்தாலும் ஈழப் போரட்டத்தின் தனித்துவத்தையோ, இந்தப் போராட்டத்தை தீர்மானிக்கும் உரிமையையோ அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுத்ததில்லை. ஈழப் போராட்டத்தின் எதிர்காலம், நிகழ்காலம் என்ற அனைத்தையும் தாங்கள் மட்டுமே தீர்மானிப்போம் என்பதை புலிகள் ஒவ்வொரு நிலையிலும் உறுதிச் செய்துள்ளார்கள். அது தவிர மாற்றுச் சக்திகள் இந்தப் போராட்டத்தின் போக்கினையோ, எதிர்காலத்தையோ தீர்மானிக்கும் ஒரு நிலை ஏற்பட்ட பொழுதெல்லாம் தங்களின் உத்தியை அதற்கேற்றவாறு மாற்றி மிகவும் dynamicஆக தங்களின் ராஜதந்திரங்களை அமைத்து தமிழ் ஈழப் போராட்டம் நீர்த்துப் போகாமல் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் தாங்கள் கருதும் ஒரு முக்கியமான காலகட்டத்தை இன்று எட்டியும் இருக்கிறார்கள்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" என்ற வாசகத்தை எந்த நிலையிலும் புலிகள் சமரசம் செய்து கொண்டதில்லை. அதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். பிரபாகரனைப் பற்றி முந்தைய ஒரு பதிவில் ஜெ.என்.தீக்க்ஷ்த் கூறியதை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

the character and personality of its leader V Prabhakaran who is disciplined, austere and passionately committed to the cause of Sri Lankan Tamils's liberation. Whatever he may be criticised for, it cannot be denied that the man has an inner fire and dedication and he is endowed with natural military abilities, both strategic and tactical. He has also proved that he is a keen observer of the nature of competitive and critical politics. He has proved his abilities in judging political events and his adroitness in responding to them.

இந்த வரிகளில் வெளிப்படும் பிரபாகரனின் குணாதிசயங்கள் தான் இன்று ஈழப் போராட்டத்தை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் ஒவ்வெரு கட்டத்திலும் அதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு தான் தனது ராஜதந்திர உத்திகளை பிரபாகரன் அமைத்துக் கொண்டுள்ளார். இந்த ராஜதந்திர உத்திகளில் சில தேர்ந்த இராணுவ, அரசியல் நடவடிக்கைகளும் உள்ளன. சில பயங்கரவாத படுகொலைகளும் உள்ளன.

1984ல் இந்தியா புலிகளுக்கு ஆயுதங்களையும், உதவிகளையும் கொடுத்து கொண்டிருக்கிற நேரத்தில் தன்னுடைய போராட்டத்திற்கான அடிப்படை தேவைகளுக்காக இந்தியாவின் உதவியை பிரபாகரன் பயன்படுத்திக் கொள்கிறார். அதே நேரத்தில் இந்தியாவை மட்டுமே நம்பி இருக்காமல் இந்திய உளவு நிறுவனமான ராவுக்கு தெரியாமல் தன்னுடைய இயக்கத்தினரை பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமும் பயிற்சிக்கு அனுப்புகிறார். பின் இஸ்ரேலின் மொசாட் உளவுப்பிரிவுடனும் தொடர்புகளை வளர்த்துக் கொண்டு அங்கும் தன்னுடைய அமைப்பினரை பயிற்சிக்கு அனுப்பி வைக்கிறார். இதில் பெரிய ஆச்சரியம் இல்லை. ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் பல தமிழ்ப் போராளிக் குழுக்கள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றனர். ஆனால் பிற போராளிக் குழுக்கள் இவற்றுடன் தங்களை குறுக்கி கொண்ட நிலையில் வெளிநாட்டு தமிழர்களிடம் தன் தொடர்புகளை பிரபாகரன் வளர்த்துக் கொள்கிறார்.

இந்தியாவிடம் உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே தன்னுடைய போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தேவையான அடித்தளத்தை புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மூலமாக பிரபாகரன் அமைத்துக் கொள்கிறார். ஈழப் போராட்டம் இன்று ஒரு முக்கியமான நிலையை அடைந்ததற்கு காரணம் புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் வழங்கும் பொருளுதவி தான் என்பது நமக்கு தெரியும். ஆனால் இதனை 1984லேயே திட்டமிட்ட பிரபாகரனின் உத்தி வியப்பிற்குரியதாக இருக்கிறது. அது தான் யாரையும் சாராமல் ஒரு நிலையான பொருளாதார வசதியை புலிகளுக்கு கொடுத்தது. ஈழப் போராட்டத்திலும் எந்த தேக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையிலேயே, 1985ல் சில கப்பல்களை பிரபாகரன் புலிகள் இயக்கத்திற்காக வாங்குகிறார். பல்வேறு நாடுகளில் வாங்கப்பட்ட இந்தக் கப்பல்கள் சரக்கு போக்குவரத்தில் பெரும்பாலான நேரங்களில் ஈடுபடுகின்றன. எஞ்சி இருக்கின்ற நேரத்தில் புலிகளுக்கான ஆயுதங்களை கடத்தும் வேளையில் இந்தக் கப்பல்கள் ஈடுபடுகின்றன. இதன் மூலம் ஆயுதங்களுக்காக யாரையேனும் நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை 1985லேயே திட்டமிட்டு தவிர்த்து விடுகிறார். இன்று கிட்டதட்ட 20கப்பல்கள் புலிகளுக்காக இயங்குவதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல்கள் மூலம் கடற்படை, விமானப்படை, பலமான ஆயுதங்களுடன் தரைப்படை போன்றவற்றை பிரபாகரன் உருவாக்கி கொண்டிருக்கிறார். இது அனைத்தும் இந்தியாவின் ஆதரவு இருந்த நிலையிலேயே அமைத்து கொண்டது தான் புலிகளின் போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றது.

1984ல் அளித்த ஒரு பேட்டியில் "நான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம்" என்று பிரபாகரன் கூறியிருந்தார். அன்றைய காலக்கட்டத்தில் அந்தப் பேட்டியை எடுத்த இந்தியாவின் பிரபல செய்தியாளர் அனிதாவிற்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது "ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது" என்று பிரபாகரன் கூறினார். இந்த எண்ணம் அவருக்கு இருந்த காரணத்தால் தான் ஈழப் போரட்டத்திற்கு இந்தியாவை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவசியத்தை மிக கவனமாக தவிர்த்துக் கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே 1987ம் ஆண்டிற்கு பிறகான சூழ்நிலை அமைகிறது. தன்னுடைய எதிர்கால பாதுகாப்பு, மொழியைச் சார்ந்த ஒரு நாடு உருவானால், தன்னுடைய இறையான்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போன்ற எண்ணங்கள் காரணமாக புலிகளின் போராட்டத்தை நசுக்க இந்திய நினைக்கிறது. புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே சண்டை மூளுகிறது. புலிகளை எளிதாக அடக்கி விடலாம் என்று எண்ணியதற்கு மாறாக புலிகள் இந்தியப்படைக்கு கடும் சவாலினை விடுக்கின்றனர். இதற்கு புலிகளின் போர்த்திறன், உயிரை துச்சமென மதித்து போரிடுதல் போன்றவற்றுடன் பல கப்பல்கள் மூலம் அவர்கள் சேர்த்திருந்த ஆயுதங்களும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அந்தக் கால கட்டத்தில் ஈழப் போராட்டம் இந்தியாவின் நிர்பந்தம் காரணமாக கடுமையான சவாலினை எதிர்கொண்டிருந்தது. இந்தியாவின் எண்ணத்திற்கு ஏற்ப ஈழப் போராட்டம் மாறக்கூடிய சூழ்நிலை இருந்தது. இது தமிழ் ஈழம் நோக்கிய தனது பயணத்திற்கு தடையாக அமையும் என்று பிரபாகரன் நினைத்தார். இந்தியாவை இந்தப் போராட்டத்தை விட்டு முழுமையாக அகற்ற வேண்டும் என்பது தான் அவரது எண்ணம். இதற்கு முதல் படியாக பிரேமதாசேவுடன் கூட்டு அமைத்து இந்திய இராணுவத்தை இலங்கையில் இருந்து வெளியேற்றினார்.

இந்தப் பிரச்சனையில் ஈடுபட்டது தவறு என்பன போன்ற எண்ணங்கள் இந்தியாவில் அப்பொழுது நிலை பெற்று இருந்தன. ஆனால் இந்தியாவை மறுபடியும் இந்தப் போராட்டத்திற்கு கொண்டுச் செல்லக் கூடிய ஒருவர் ராஜீவ் காந்தி மட்டுமே. அவரைத் தவிர இந்தப் பிரச்சனையில் ஆர்வம் காட்டக் கூடிய இந்திய தலைவர்கள் யாருமே இல்லை. அவரை அகற்றுவது மூலம் இந்தியாவை நிரந்தரமாக இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்கி வைக்க முடியும் என்று பிரபாகரன் முடிவு செய்தார். அதன் விளைவு தான் ராஜீவ் காந்தியின் படுகொலை. 1991க்குப் பிறகு இன்று வரை இந்தியா இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிடவேயில்லை.

ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக இந்தியாவின் ஆதரவை நிரந்தரமாக புலிகள் இழக்க நேரிடும் என்று பிரபாகரனுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 1984ல் இருந்து அவரது அரசியல் உத்திகளை ஆராய்பவர்களுக்கு இது தெளிவாக புரியும். இதன் காரணமாய் தமிழகத் தமிழர்களின் ஆதரவை முழுவதும் இழக்க கூடும் என்றும் அவர் அறிந்திருக்க கூடும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட இந்தியாவை இந்தப் பிரச்சனையில் இருந்து விலக்க நினைக்கும் அவரது எண்ணம் மட்டும் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் பயங்கரவாதச் செயலை செய்ய தூண்டியிருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தின் ஆதரவை இழந்தது ஒரு முக்கிய இழப்பாக பலர் கூறினாலும், தமிழகத்தின் ஆதரவை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை என்பது கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நகழ்வுகளைக் கொண்டு நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.

பிராந்திய நிலையில் இருந்த இந்தப் போராட்டத்தை சர்வதேச நிலைக்கு கொண்டு செல்வது தான் பிரபாகரனின் அடுத்த திட்டம். சில முயற்சிகளுக்குப் பின் லியம் பாக்ஸ் என்ற பிரிட்டிஷ் அமைச்சரின் மேற்ப்பார்வையில் ஒரு புதிய முயற்சி தொடங்கியது. அன்றைக்கு தொடங்கிய முயற்சி படிப்படியாக வளர்ந்து நார்வேயை முக்கிய அணுசரணையாளராகக் கொண்டு இன்று ஈழப் போராட்டம் சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. சர்வதேச அளவில் தமிழ் ஈழப் பிரச்சனை மீது பல நாடுகள் ஆர்வம் காட்ட தொடங்கின. பொருளாதாரக் காரணங்களால் இந்த ஆர்வம் எழுந்த அதே நேரத்தில் நிர்பந்தங்களும் எழுந்தன.

சமீபத்திய மிக முக்கிய நிர்பந்தம் ஐரோப்பிய யூனியனின் தடை. ஆனால் இந்த தடையை எந்தக் கோணத்தில் புலிகள் அணுகினர் என்பதை நோக்கும் பொழுது ஆச்சரியமே ஏற்படுகிறது.

ஐரோப்பிய யூனியனின் தடைக்குப் பிறகு ஓஸ்லோவில் பேச்சுவார்த்தைக்குச் செல்ல புலிகள் ஒப்புக் கொண்டனர். இதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்கு இல்லை என்பதான ஒரு கருத்தாக்கம் நிலவி வந்தது. இலங்கை அரசு வழக்கமாக அனுப்பும் அமைச்சர்கள் மட்டத்திலான தனது தூதுக்குழுவை தவிர்த்து அதிகாரிகள் மட்டத்திலான ஒரு தூதுக்குழுவை ஒஸ்லோவிற்கு அனுப்பியது. ஐரோப்பிய யூனியன் தடை, உலக நாடுகளின் நிர்பந்தம் இவற்றுக்கு மத்தியில் புலிகளுக்கு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதை தவிர வேறு எந்த வாய்ப்பும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை.

ஆனால் நடந்ததோ உலக நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், நார்வேயையும் வியப்பில் ஆழ்த்தியது.

தன்னிச்சையான "தமிழீழ விடுதலைக்கு" குறைவான ஒரு பிரகடனத்தை ஓஸ்லோவில் புலிகள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது.

The de facto State of Tamil Eelam exercising jurisdiction over 70 percent of the Tamil Homeland, with control over the seas appurtenant there, with its own laws, independent judiciary, police force and full administrative apparatus; the Liberation Tigers of Tamil Eelam (LTTE), being the authentic representative of the Tamil Nation and its sole interlocutor in the current peace process facilitated by the Royal Norwegian Government; the LTTE acting as the sole defender and protector of the Tamil Nation, its People and the State institutions with its modern defence forces;

இதன் மூலம் மற்றொரு முறை தங்கள் மீதான நிர்பந்தத்தை விடுவித்து கொண்டதோடு மட்டுமில்லாமல், தாங்கள் ஒரு நாட்டினை நடத்தி வருகிறோம் என்று ஓஸ்லோவில் சென்று அறிவித்துள்ளனர். இவை தவிர ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் SLMM குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருக்கின்றனர். பிரச்சனையை தீர்ப்பதற்கான கோணத்தில் செல்லாமல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கைகுலுக்க வைக்கவே நார்வே ஆர்வம் காட்டுவதாக நார்வேயை சாடியிருக்கின்றனர்.

தங்களின் கோரிக்கையை நோக்கி உலக நாடுகள் வரவேண்டுமே அல்லாமல், உலக நாடுகளின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து தாங்கள் நகர வேண்டிய அவசியம் இல்லை என்று புலிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ஆனால்...

இது எந்தளவுக்கு சாத்தியமாகும் ? கடந்த 20 ஆண்டுகளில் ஈழப் போராட்டத்தை உலக அரங்கிற்கு தன்னிச்சையாக கொண்டு சென்றிருக்கிற பிரபாகரன் தொடர்ந்து இதனைச் செய்ய முடியுமா ? உலக நாடுகள் இதனை எப்படி அணுகும் ? இலங்கை அரசு என்ன செய்யும் ?

இன்று உலகில் ராஜதந்திர உத்திகளை யாராவது படிக்க வேண்டுமானால் முதலில் இலங்கைக்குச் செல்ல வேண்டும். இலங்கை அரசு, புலிகள், சர்வதேச நாடுகள் இவற்றிடையே நடக்கும் இந்த சதுரங்க ஆட்டத்தின் உத்திகள் குறித்து யோசிக்கும் பொழுது சுவாரசியமாக இருந்தாலும் இதற்கு பின்னே அற்பமாகிப் போன மனித உயிர்களும், மனிதநேயமும் மனதை உளுக்குகிறது.

(தொடரும்)

Leia Mais…
Saturday, June 10, 2006

மனிதாபிமான அரசியல்

ஈழத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் தொடர் கதை பலக் காலங்களாக தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருவதும், அவ்வாறு நிகழும் பொழுதெல்லாம் அண்டை நாடான இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் தொடங்கி உலகின் பல ஊடகங்களும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருப்பதும் வாடிக்கையாக நடக்கும் கதையாகி விட்டது.

அதே நேரத்தில் தென்னிலங்கையில் நிகழும் நிகழ்வுகள் தொடங்கி இராணுவம் மீது புலிகள் தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

எந்த மனித உயிரும் அற்பாக கருதப்படக் கூடியவை அல்ல. புலிகளின் குண்டுவெடிப்புகளில் பலியாகும் ஒரு அப்பாவி சிங்களன் உயிருக்கும் புலிகள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஒரு அப்பாவி சிங்களன் மடிவது அங்கு கொல்லப்படும் சிங்கள இனவாத அரசியல் தலைவர்களின் உயிர்களை விட மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே நான் கருதுகிறேன். இத்தகைய செயல்களை புலிகள் செய்தாலும், வேறு எந்த அமைப்பு செய்தாலும் அது படு பயங்கரமான "பயங்கரவாத", "மனித உரிமை" மீறலாகவே நான் பார்க்கிறேன்.

அவ்வாறே அங்கு கொல்லப்படும் என்னுடைய அப்பாவி தமிழ்ச் சகோதரனின் மரணத்தையும் நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சகத் தமிழன் பாதிக்கப்படும் பொழுது எனக்கு சற்று அதிகமான உணர்ச்சி ஏற்படுகிறது.

இதனைச் செய்யும் இனவாதிகளின் வெறியை விட அதனை மூடிமறைக்கும் ஊடகங்களை அதனை விட வெறிப் பிடித்த இனவெறியர்களாகவே நான் பார்க்கிறேன். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளை வெளியிட "தனி செய்தியாளரை" கொண்டிருக்கும் ஹிந்து இதனை ஒரு செய்தியாக கூட வெளியிடவில்லை என்பது ஹிந்து எந்தளவுக்கு ஒரு "இனவெறிப்" பத்திரிக்கையாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. புலிகள் ஆளுமையில் இருக்கும் பகுதிகள் மீது இலங்கை அரசு குண்டு வீசிய பொழுது எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டதையும், இடம்பெயர நேரிட்டதையும் குறித்து BBC போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலைமையில், Sri Lanka defends air strikes என்று அந்த குண்டு வீசுதலை நியாயப்படுத்தி செய்தி வெளியிட்ட ஹிந்து, தற்பொழுது எந்தச் செய்தியையும் வெளியிடாமலேயே இந்தப் படுகொலைகளை நியாயப்படுத்துகிறது. ஹிந்து என்றில்லாமல் இன்று இருக்கும் ஊடகங்கள் அனைத்துமே "வெள்ளைத் தோல்" அல்லாத ஆப்ரிக்க, ஆசிய சாமானிய மக்களுக்கு வழங்கும் மதிப்பு இவ்வாறு தான் உள்ளது.

புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கூறும் சர்வதேச நாடுகள், இலங்கை அரசின் இத்தகைய தொடர் வன்முறைகளை, Amnesty போன்ற மனித உரிமை அமைப்புகள் கூட வெளிப்படையாக கண்டித்த மனித உரிமை மீறல்களை எந்தக் கோணத்தில் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்த சர்வதேச நாடுகள் தான் தங்களை மனித உரிமை காவலர்களாக சித்தரித்து கொண்டிருக்கின்றன. புலிகள் வன்முறையை கைவிட வேண்டும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை அரசின் "பயங்கரவாத செயல்களுக்கு" இராணுவ உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன.

ஈழத்தில் சமீபகாலங்களில் நடந்து வரும் படுகொலைகள் மிக மோசமான இனவாதம் என்பது மட்டுமல்ல. ஊடகங்கள் வளர்ச்சியடைந்த காலகட்டத்திலும் இந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுவது மிக மோசமான இனவாத வன்முறையாக, பேதமாக நான் கருதுகிறேன். அங்கு நடத்தப்படும் சாமானிய மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றன. இதன் மூலம் ஒரூ பீதியை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்கும் முயற்சியை சிறீலங்கா இராணுவம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.

இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு குழந்தையை, தான் தமிழன் என்றோ, சிங்களன் என்றோ அல்லது ஏதோ ஒரு எழவு பிடித்த இனம் என்றோ கூட அறியாத ஒரு குழந்தையை குத்தி கொடூரமாய் கொலை செய்யும் படுமோசமான இனவாத வெறிக்கு ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்து இலக்காகி கொண்டிருக்கின்றனர். நேற்று நடந்த படுகொலை படங்களை பார்க்க முடியாமல் வேகமாக அந்தப் பக்கங்களில் இருந்து வெளியேறி விட்டேன். இதனை பார்க்கும் மனவலிமை கூட எனக்கு இல்லை. ஆனால் இத்தகைய பல நிகழ்வுகளுடன் தங்கள் வாழ்க்கையை நடத்தும் பல ஈழத் தமிழர்களின் வாழ்க்கை எனக்கு வேதனையை ஏற்படுத்துகிறது.

வேதனை என்பதே ஒரு சுயவிளம்பரம் தான். இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும், வேதனை மட்டுமே நம்மிடம் இருந்து வெளிப்படுவதும் வெறும் இயலாமையாகத் தான் எனக்கு தெரிகிறது.


தெருவொன்றில் பயணித்தபோதோ
தூங்கும்போதோ
கனிந்து பொழியும் கனவுகளில்
முழுகும் போதோ
காணாமற் போனீர்கள்.

உறவுகளின் இழைகள் ஈய்ந்து
அறுபட்ட புண்களிடை
துயரொழுகத் துயரொழுக
சிறகுகள் கிழியுற்ற வலுவீனராய்
கொலைக்கருவி முனைகளாற் கொழுவுண்டு
கடத்தப்பட்டீர்கள்.

உங்களுடைய ஆண்குறிகள்
பிதுக்கிச் சிதைக்கப்பட்டிருக்கலாம்
திறக்க மறுத்த பெண்குறிகள்
திரண்ட முனைகளின்
மூர்க்கத் துளாவல்களால்
பிளக்கப்பட்டிருக்கலாம்
வித வித வதைகளால் விகாரித்து
சிறையிருளில் நெரியுண்டு
மரித்திருக்கலாம் நீங்கள்.

பெருவெட்டையொன்றின் ஆழமோ
மலக்குழிகளோ
பாழடைந்த கிணறுகளோ
இன்னும் என்னவென்னவோ
உங்களை விழுங்கி
மெளனித்திருக்கலாம்.

உங்கள் வீடுகளின் வெற்றிடங்கள்
இனி யாரால் நிரப்பப்பட முடியும்

அந்நியக் கொடூரர்களின் பிடுங்குதலில்
உங்களை இழந்தோரின்
புண்களை ஆற்றும் தகமை
யாருக்குண்டு

துயர்களின் உராய்வுகள் பெருக
அவர்களிடையே மூளும்
மையத்தழல்களைத் தணிக்கும் வலு
யாருக்கு வரக்கூடும்?

-அமரதாஸ்
(நன்றி: செம்மணி, http://elanko.net/pathivu/?p=185)

Leia Mais…
Wednesday, June 07, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 2

கடந்த மாதம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான ரமணன் மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் புலிகளின் முன்னரங்க நிலைகளை (Forward Defence Line) பார்வையிட்டுக் கொண்டிருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும், அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையே சில நூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் அந்தப் பகுதியில் சிறீலங்கா அரசின் பலமான இராணுவ முகாமும், முன்னரங்க நிலைகளும் உள்ளன.

புலிகளின் பகுதிக்கும், இராணுவ நிலைகளுக்கும் இடையே இருக்கும் யாருக்கும் உரிமை இல்லாத பகுதியில் மறைந்திருந்து நடத்தப்பட்ட ஸ்னைப்பர் தாக்குதலில் கர்னல் ரமணன் சுட்டுக்கொல்லப்பட்டார். புலிகளின் பகுதி மிகவும் பலமாக பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதும், இராணுவத்தின் உதவி இல்லாமல் இராணுவ முன்னரங்க நிலையில் இருந்து யாரும் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்த முடியாது என்பதும் தெளிவான நிலைமை. இந்த தாக்குதலை சிறீலங்கா இராணுவத்தின் deep penetration unit தான் செய்திருப்பார்கள் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என கருணாப் பிரிவு கூறிக் கொண்டது. இராணுவம் சமாதானக் கால ஒப்பந்தத்தை மீறி இவ்வாறு செய்ததை விடுதலைப் புலிகளின் இரு குழுக்களிடையேயான சண்டையாக மாற்ற அரசு தொடர்ந்து செய்து வரும் தந்திரங்களின் ஒரு உதாரணம் தான் இந்தத் தாக்குதல்.

சமாதானக் காலக்கட்டத்தில் கருணா என்றப் பிரிவை உருவாக்கி இராணுவம் செய்து வரும் இத்தகைய தந்திரங்களை முறியடிக்க, உலகின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப புலிகள் அதே வகையான உத்தியினை கடைபிடிக்க தொடங்கினர். இராணுவத்திரை மக்கள் குழுக்கள் என்ற அமைப்பினர் மூலம் தாக்க தொடங்கினர். இராணுவம் மீதான இந்த தாக்குதலை நிகழ்த்த அவர்கள் உருவாக்கிய குழுக்கள் தான் மக்கள் குழுக்கள் என்றாலும் இதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புலிகள் தெரிவித்தனர்.

ராஜபக்ஷ பதவியேற்றப் பிறகு குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் தொடங்கி அவருக்கு இந்த மக்கள் குழுக்கள் மூலம் புலிகள் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். இதன் மூலம் சில முக்கிய விடயங்களை சாதிக்க புலிகள் எண்ணினர்.

  • ராஜபக்ஷ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எந்த அவகாசமும் வழங்காமல், இந்தப் பிரச்சனையை சர்வதேச அளவில் அதிக கவனத்தைப் பெற வைப்பது. அதன் மூலம் ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதக் குழக்களின் பிரச்சனைகளையும், தெற்கில் இருக்கின்ற முரண்பாடுகளையும் வெளிப்படுத்துவது.
  • மக்கள் குழுக்கள் என்ற பெயரில் தொடுக்கப்படும் தாக்குதல் தங்களால் நடத்தப்படவில்லை என்று கூறிக்கொண்டு, இராணுவம் கருணா பெயரில் நடத்துவதற்கு பதில் தாக்குதல் தொடுப்பது.

மக்கள் குழுக்கள் நடத்திய தாக்குதலை நாங்கள் நடத்த வில்லை என்று புலிகள் கூறிக்கொண்டதை யாரும் நம்ப வில்லை. இந்த தாக்குதலுக்கு புலிகள் தான் ஆயுதங்கள் வழங்குகின்றனர் என்பதும், புலிகளின் சிலப் பிரிவு இதனை தொடுத்திருக்கலாம் என்பதாகவுமே அனைவருக்கும் தோன்றியது. உலக நாடுகளும் இந்த தாக்குதலுக்கு புலிகளையே கண்டனம் செய்தன. என்றாலும் இதன் மூலம் புலிகள் மீது நடந்து வரும் தாக்குதல் கருணாவால் நடத்தப்படவில்லை, இராணுவம் தான் செய்து கொண்டிருக்கிறது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. SLMM கூட இந்தப் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கருணாப் பிரிவு என்ற பெயரில் இராணுவம் செய்து கொண்டிருக்கும் தாக்குதல் தான் என்று குற்றம்சாட்டி இருந்தது.

புலிகளின் உள்பிரச்சனை எனக் கூறிக்கொண்டிருந்தமைக்கு மாறாக இதன் பிண்ணனியில் இருப்பது இராணுவம் தான் என்பதை உலகறிய வைத்ததில் புலிகளுக்கு நிச்சயம் வெற்றி தான். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் என சமாதானத்தில் அணுசரணையாளராக இருக்கும் அனைத்து நாடுகளுமே துணைப்படைகள் என்று கூறிக் கொண்டிருக்கும் பல ஆயுதக்குழக்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கின்றன. ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளில் கூட புலிகளின் நிலைக்கு கணிசமான வெற்றி கிடைத்தது. இந்தப் பேச்சுவார்த்தையே சமாதானக் கால உடன்படிக்கைகளை பலப்படுத்துவது குறித்து தான் நடைபெற்றது. ஜெனிவா மாநாட்டின் முக்கிய தீர்மானமான "துணை ஆயுதக் குழுக்களை" அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானமே, புலிகளின் கோரிக்கையை ஒட்டியே இருந்ததை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.

இது அனைத்துமே புலிகளின் ராஜதந்திர செயல்பாடுகள் சரியான தடத்திலேயே சென்று கொண்டிருந்ததை வெளிப்படுத்தியது. அது மட்டுமில்லாமல் ராஜபக்ஷ போன்ற அனுபவம் இல்லாத ஒரு அரசியல்வாதி, ஜனாதிபதியாகிய பொழுது இத்தகைய சிக்கலான விடயத்தை பதவிக்கு வந்த உடனேயே எதிர்கொள்ள வேண்டி நேர்ந்த சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாகவே புலிகள் பயன்படுத்திக் கொண்டனர். இந்தப் பிரச்சனைகளை சமாளிக்க ராஜபக்ஷ தடுமாறியதை தெளிவாக காண முடிந்தது.

ரனில் ஜனாதிபதியாகி இருந்தால் சமாதானத்திற்கு வாய்ப்பிருந்திருக்கும் என்பதான ஒரு கருத்து நிலவி வருகிறது. ரனில் பிரதமராக இருந்த பொழுது நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை, Co-chairs ஏற்படுத்தப்பட்டது குறித்து என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருக்கிறேன். சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ரனில் முயற்சி மேற்கொண்டிருந்தார். இதன் மூலம் புலிகளுக்கு ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவரது திட்டம். அது மட்டுமில்லாமல் ரனில் வெற்றி பெற்றிருந்தால் சிறீலங்காவின் பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளில் ஒரு continuity இருந்திருக்கும். இது புலிகளுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். மாறாக ராஜபக்ஷ வெற்றி பெற்றப் பிறகு சிறீலங்கா அரசு மீண்டும் புதியதாக வெளியுறவு கொள்கைகளை புதுப்பிக்க வேண்டிய நிலைக்குச் சென்றிருந்தது. இதனால் சிறீலங்கா அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு தேக்கம் நிலவியதை கவனிக்க வேண்டும்.

இவை தவிர சிறீலங்கா அரசு ராஜபக்ஷ தலைமையில் இருந்தாலும் சரி, ரனில் தலைமையில் இருந்தாலும் சரி சில விடயங்களில் (சிங்கள/புத்த இனவாத நிலைமையில்) பெரிய மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சி செய்தாலும் சரி, காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் சரி பொருளாதார, வெளியுறவு கொள்கைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டதில்லை. இத்தகைய விடயங்களில் ஒரு தொடர்ச்சி இருக்கத் தான் செய்கிறது. அவ்வாறே பாக்கிஸ்தானில் முஷ்ரப் ஆட்சி செய்தாலும் சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்தாலும் சரி காஷ்மீர் போன்ற விடயங்களில் அங்கு நிலைப்பெற்றிருக்கும் ஒரு பொதுவான நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை காண முடியாது.

இந் நிலையில் ராஜபக்ஷவிற்கு பதிலாக ரனில் வந்திருந்தால் எப்படி ஒரு அரசாங்கத்தின் கொள்கைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்பது எனக்குப் புரியவில்லை. இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு அதிக அதிகாரம் இருந்தாலும் தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் நிலைமைக்கு எதிராக ரனில் எதுவும் செய்திருக்க முடியாது. அதுவும் தவிர தென்னிலங்கையில் குறைவான ஆதரவை கொண்டிருக்கும் ரனில் எவ்வாறு தென்னிலங்கையில் இருக்கும் அரசியல் சக்திகளை புறக்கணித்து சமாதானப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும் ? ரனில் வந்திருந்தால் இன்று வெளிக்கொணரப்பட்டிருக்கும் இலங்கை ஜனாதிபதியின் "தென்னிலங்கை அரசியல் இனவாதம்" மறைக்கப்பட்டு ஒரு மிதவாத நிலை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம். அந்த மிதவாத நிலைமையைக் கொண்டு இலங்கை பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வலுவடைந்திருக்கும். புலிகள் மேலும் சர்வதேச அளவில் பலவீனப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

இது தான் ராஜபக்ஷவை புலிகள் வெற்றி பெற வைத்ததன் மூலம் முக்கியமாக சாதித்தவை.

தென்னிலங்கையில் இருந்த சிங்கள இனவாதத்தையும், முரண்பாடுகளையும் ஓரளவிற்கு வெளிப்படுத்திய அதே நேரத்தில் தெற்கின் முரண்பாடுகளை முழுவதும் வெளிப்படுத்த புலிகளால் முடியவில்லை. இது புலிகளின் திட்டத்தினை முழுமை அடைய வைக்க வில்லை. அது மட்டுமில்லாமல் புலிகளின் நோக்கங்கள் அனைத்துமே இராணுவ அளவிலான திட்டமாக மட்டுமே இருந்தது.

புலிகளின் முக்கியமான தோல்வியாக நான் கருதுவது, அவர்கள் கூற நினைப்பதை ராஜதந்திர ரீதியில் கூறாமல் தொடர்ந்து இராணுவ வழியிலேயே கூற முற்பட்டது. இலங்கை அரசும் புலிகளின் தாக்குதலை தொடர்ந்து ஊக்குவித்து கொண்டே இருந்தது. சிறிய தாக்குதலாக மக்கள் குழுக்கள் என்பன போன்ற பெயரில் தொடர்ந்த தாக்குதல் பிறகு வெளிப்படையாக புலிகள், இராணுவம் என்பதாகச் சென்று விட்டது. இரு குழுக்களும் சமாதானக் கால உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்றாலும் புலிகள் இராணுவம் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு அதிக விளம்பரம் கிடைத்தது.

இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த தாக்குதல் இறுதியில் புலிகள் கொழும்புவில் தற்கொலை தாக்குதல் தொடுக்க வழி செய்து விட்டது. இத்தகைய தாக்குதலை கூட அரசு எதிர்பார்த்திருக்க கூடும். அரசு ஒரு வகையில் அதனை தூண்டி விட்டது என்று சொல்லலாம். இது அரசின் நிலைக்கு வலுச்சேர்த்தது. இந்த தாக்குதலுக்குப் பிறகு புலிகளின் நிலை மீது சிறீலங்கா அரசு விமானத் தாக்குதலை தொடுத்தது. போர் மூளக் கூடும் என்ற அச்சத்தில் புலிகளுக்கு நெருக்கடி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் சிறீலங்கா அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம், கப்பல் போக்குவரத்தின் கேந்திர முக்கியத்துவம் போன்றவற்றால் உலக நாடுகள் இலங்கை ஒரு அமைதியான நாடாக இருப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கின்றன. பனிப்போர் காலங்களில் இருந்த இராணுவ முக்கியத்துவம் தற்பொழுது அதே அளவிற்கு இல்லை (என்னுடைய முந்தையப் பதிவு). என்றாலும் தற்போதைய பொருளாதார வளர்ச்சி நிலையில் இருந்து இலங்கை தடம் மாறுவதை ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்பவில்லை. கடந்த வாரம் இலங்கை வந்திருந்த அமெரிக்கவின் வெளியுறவுச் செயலர் ரிசர்ட் பவுச்சர் "புலிகளின் கோரிக்கை நியாயமானது என்றாலும் அவர் கடைப்பிடிக்கும் வழிகள் தான் எங்களுக்கு பிரச்சனைக்குரியதாக இருக்கிறது" என்று தெரிவித்தார் (the US recognises the Tamils’ “legitimate desire … to govern themselves in their own homeland.” Furthermore, “they (Tigers) need to focus their vision on how to achieve their legitimate goals through a legitimate process of negotiation [rather than arms],” )

தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை தென்னிலங்கையில் இருக்கிற சிங்கள இனவாத தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய தேர்தல் முழுக்கமாக கூட்டாச்சியை மறுதலித்த ராஜபக்ஷ, சில மாதங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில் கூட தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க மறுத்ததை கவனிக்க வேண்டும். ராஜபக்ஷ மற்றும் சிங்கள இனவாதிகளின் இத்தகைய நிலையை வெளிப்படுத்தும் நோக்கத்தில் தான் புலிகள் ராஜபக்ஷவை வெற்றி பெற வைத்தனர். என்றாலும் அதற்கு பிறகு இந்த வழியில் இருந்து தடம்புரண்டது தான் தற்போதைய பின்னடைவுக்கு முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.

புலிகள் தங்களுடைய இராணுவ ரீதியிலான உத்திகளுடன் ராஜதந்திர ரீதியிலான உத்திகளையும் பிணைத்திருக்க வேண்டும். ஆனால் ராஜதந்திர ரீதியில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தி விட்டு இராணுவ ரீதியில் மட்டுமே அமைந்த அவர்களின் நோக்கம் உலகநாடுகளிடம் சரியான வகையிலான தக்கத்தை ஏற்படுத்த வில்லை. ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டிற்கு எதிராக போராடும் பொழுது, உலக நாடுகளின் கவனம் அந்தப் பிரச்சனையை நோக்கி திரும்பும் பொழுது, அந்தப் போராட்டத்தைச் சரியான வகையில் பல நாடுகளிடம் கொண்டுச் செல்லப் பிரதிநிதிகள் தேவைப்படுகிறார்கள்.

ஒரு நாட்டிற்குரிய தனி நிர்வாக அமைப்பை நிறுவியிருக்கும் புலிகள் ஒரு நாட்டின் முக்கியமான நிர்வாகப் பிரிவான வெளியுறவுப் பிரிவு, தூதரகங்கள் போன்றவற்றை சரியான வகையில் அமைக்க தவறி விட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன். இங்கு நான் கூறும் வெளியுறவுப் பிரிவு, தூதரகங்கள் போன்றவை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைப் போன்ற பிற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிற நாடுகளுடனான உறவுகளைப் பராமரிக்க சிலச் சிறந்த அறிவுஞீவிகளைக் கொண்ட அமைப்புகள் வேண்டும் என்றே நான் குறிப்பிடுகிறேன். இதன் மூலம் பிற நாடுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பராமரிக்க தக்க ஒரு வழி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த அமைப்புகள் அரசுகளுடன் மட்டுமில்லாமல் பிற நாட்டு ஊடகங்களிலும் இந்தப் பிரச்சனையை கொண்டுச் செல்ல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் அமைப்புகளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு ராஜதந்திர ரீயிலான உறவுகள் கடந்த காலங்களில் தேவைப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த நீண்ட சமாதானக் காலத்தில் இவ்வாறு ஒரு அமைப்பின் தேவை நிச்சயம் இருக்கிறது. இவர்கள் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அவர்கள் பிற நாட்டு அரசாங்கம், ஊடகங்கள் போன்றவர்களுடன் உறவை பராமரிக்கத்தக்க "திறமையுள்ளவர்களாக" இருக்க வேண்டும். ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் சில நாடுகளுடன் ஏற்படுத்தியிருக்கும் தொடர்புகள் ஒரு சிறந்த உதாரணம். என்றாலும் இது ஒரு சிலரால் செய்யக் கூடிய முயற்சி அல்ல. நிர்வாக ரீதியில் செய்யப்பட வேண்டிய முயற்சி.

இவ்வாறு செய்யும் பொழுது உலகத்தின் கவனத்தை இந்தப் பிரச்சனையின் பக்கம் திருப்ப தொடர்ச்சியான தாக்குதல் தேவைப்பட்டிருக்காது. ராஜதந்திர ரீதியிலான அணுகுமுறை மற்றும் இராணுவ ரீதியிலான அணுகுமுறை போன்றவற்றின் ஒரு கலவை இருந்திருக்கும்.

அது போல தற்பொழுது சர்வதேச மயமாகி விட்ட ஈழப் போராட்டத்தில் அரசியல் ரீதியிலான படுகொலைகள் பின்னடைவுகளை ஏற்படுத்துமே தவிர எந்த அனுகூலத்தையும் கொடுத்து விடாது.

(தொடரும்)

Leia Mais…
Saturday, June 03, 2006

சதுரங்க ஆட்டத்தில் "தமிழீழம்" - 1

ஈழம் குறித்தப் பதிவினை சில மாதங்களுக்கு முன்பு எழுதிய பொழுது, இவ்வாறு கூறியிருந்தேன்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார்

இரு நாடுகளின் ராஜதந்திர யுத்தம் பற்றி அந்தப் பதிவில் எழுதியிருந்தேன். இம் முறையும் இந்த ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோற்று தான் உள்ளனர். போர்க் களத்திற்கும், சமாதானக் கால செயல்பாடுகளுக்கும் இடையே இருக்கும் பெருத்த வேறுபாட்டினை இந்த நீண்ட சமாதானக் காலத்தில் (மறைமுக போர்க் காலம் என்று தான் சொல்ல வேண்டும்) புலிகள் உணர்ந்திருப்பார்கள். போர்க் காலங்களை விட இந்தச் சமாதானக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு நிறைய பின்னடைவுகள் நேர்திருக்கின்றன என்று சொல்லலாம்.

சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கிய காலக்கட்டத்தை நோக்கிப் பின்நோக்கி செல்லும் பொழுது சிறீலங்கா அரசு எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதையும் கவனிக்க முடியும்.

யானையிறவு போரில் அரசு படைகள் தோற்று விட்ட சூழலில் தான் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கியது. இராணுவ பலத்தில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. சிறீலங்கா அரசின் பொருளாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்து இருந்தது. மிகவும் வலுவாக 7% பொருளாதார வளர்ச்சியுடன் ஒரு காலத்தில் முன்னேறிக் கொண்டிருந்த சிறீலங்கா, 2001ல் வெறும் 1.5% பொருளாதார வளர்ச்சி என்ற நிலைக்குச் சரிவடைந்து மிகக் கடுமையான நிதி நெருக்கடிகளையும் எதிர்கொண்டு இருந்தது. திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் வெளிநாட்டுக் கடன், மிகக் குறைந்த வருவாய், எந்த நலத்திட்டத்தையும் செய்ய முடியாத நிதி நிலை என ஒரு Bankrupt நிலைக்கு இலங்கைப் பொருளாதாரம் சென்று கொண்டிருந்தது. அன்றைய சூழலில் போர் தொடர்ந்திருந்தால் இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருக்கும். இலங்கை சீர்குலைந்து போய் இருக்கலாம். ( இதற்கு நேர்மாறாக உலக நாடுகள் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம் என்று நம்புவதற்கும் இடமுள்ளது. ஆனாலும் இவை யூகங்களே ).

2001-2005க்கு இடையேயான சமாதானக் காலத்தில் இலங்கையின் பொருளாதாரம் ஓரளவிற்கு தன்னுடைய ப்ழைய நிலையை மீட்டு எடுத்து விட்டது. கடந்த ஆண்டின் நிலவரப் படி சுமார் 5% பொருளாதார வளர்ச்சியை இலங்கை அடைந்து இருக்கிறது. இராணுவ ரீதியிலும், ஆயுத தளவாடங்களிலும் அரசின் பலம் அதிகரித்து உள்ளது. 2005ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 8% அதிகமாக இரணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதங்களைத் தவிர இராணுவ வீரர்களின் பலம் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக 2001ல் 10,000மாக இருந்த விமானப் படை கடந்த ஆண்டு நிலவரப் படி சுமார் 18,000மாக உயர்ந்துள்ளது.

புலிகளின் இலகு ரக விமானங்கள் குறித்து எழுந்த விமர்சனம் அளவுக்கு இலங்கை அரசின் விமானப் படையின் பலமோ, பலமாக அதிகரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலம் குறித்தோ எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஒரு புறம் இருக்க, இலங்கை அரசு மேற்கொண்ட சில strategic நடவடிக்கைகள் புலிகளின் பலத்தை வெகுவாக குறைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக இரண்டு நடவடிக்கைகளைச் சொல்லலாம்

  • புலிகளின் அதே கொரில்லா உத்தியைப் பின்பற்றி புலிகளை தாக்குவது. இதனைச் செய்ய கருணா பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது.

கருணா பிரச்சனை மூலம் புலிகளை வடக்கு, கிழக்கு எனப் பிளவுப் படுத்தலாம் என்பதாக முதலில் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்து, கருணா "இந்தியாவிலோ", வேறு ஏதோ "ஒரு நாட்டிலோ" பாதுகாப்பாக தஞ்சம் அடைந்து விட்டாலும் அந்தப் பிரச்சனையை அப்படியே இலங்கையின் உளவுப் பிரிவு தக்கவைத்துக் கொண்டது.

கருணா என்ற கவசத்தை அணிந்து புலிகளை திடீரென்று தாக்குவது என்ற அரசு உளவுப் பிரிவின் திட்டம் புலிகளை கடுமையாகப் பாதித்து இருக்கிறது. புலிகளின் முக்கியமான பிரமுகர்கள், இராணுவ தளபதிகள் இவர்களைக் குறிவைத்து நடந்து வரும் இந்தத் தாக்குதல் தமிழ் ஈழப் போராட்டத்தின் போர் சூழ்நிலையில் மோசமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்சல்யன் தொடங்கி, கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட ரமணன் வரை புலிகளின் பல முக்கியமான தளபதிகள் இந்த சமாதானக் காலத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை புலிகளும் எதிர்கொண்டு இருக்கின்றனர். ஏனெனில் அவர்களும் ஒரு தனி அரசாங்கத்தை தமிழீழத்தில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கொரில்லா நிலையில் இருந்து மாறுதல் பெற்று ஒரு தனி அரசாங்கத்தை அவர்கள் நிறுவி நடத்தி வரும் சூழ்நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர்களை குறி வைத்து நடத்தப்படும் இந்த தாக்குதல் தான் இலங்கையில் தற்பொழுது தொடர்ந்து நடந்து வரும் சண்டைகளுக்கு முக்கிய காரணம்.

  • மற்றொரு விடயம், புலிகளின் சார்பு நிலையில் இருந்த சில சிறந்த சிந்தனையாளர்களை அகற்றுவது, அதன் மூலம் அங்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துவது.

சமாதானக் காலத்தில், பேச்சுவார்த்தை போன்ற சூழ்நிலை நிலவும் பொழுது இந்தப் பிரச்சனையை சிறந்த வகையில் வெளிப்படுத்தும் சிறந்த சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பிற சமூகத்தினரும் மதிக்கும் எழுத்தாளர்கள் ஒரு சமூகத்தின் முக்கியமான ஆயுதம் என்றே அறியப்படுகிறார்கள். அவ்வாறு ஒரு முகத்தை தமிழ் ஈழ தமிழ் சமுதாயத்தில் வெளிப்படுத்தியவர் "தாரகி" என்று அழைக்கப்படும் தருமரத்தினம் சிவராம்.

தாரகி சிறந்தப் பத்திரிக்கையாளர், இராணுவ ஆய்வாளர் மற்றும் சிந்தனையாளர். இவரை கொழும்புவில் "அதிகப் பாதுகாப்பு மிக்கப் பகுதியாக" அறியப்பட்ட ஒரு பகுதியில் "சிறீலங்கா அரசு உளவுப்பிரிவினர்" கொன்றனர். இதன் மூலம் தமிழ் ஈழ சமுதாயத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திய ஒரு சிறந்த சிந்தனையாளரை அகற்றி விட்டனர்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தினமும் கொல்லப்படும் எத்தனையோ அப்பாவி மக்கள், திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மாணவர்கள், ஜோசப் பரராஜசிங்கம், கொளசல்யன் தொடங்கி கடந்த மாதம் ரமணன் வரை சுட்டுகொல்லப்பட்ட சில முக்கியமான புலிகள் பிரமுகர்கள் எனப் பல "பயங்கரவாத" நடவடிக்கைகளை மேற்க்கொண்டிருந்த சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடுதலைப் புலிகளின் பலச் செயல்களும் இதையொட்டியே இருந்தன. லஷ்மண் கதிர்காமர் கொல்லப்பட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளின் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றியங்களில் பயணம் செய்ய தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த இந்தத் தடைக்கு நியாயமான காரணம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. படுகொலைகள் ஒரு பயங்கரவாதச் செயல் என்ற வகையில் புலிகளின் அரசியல் படுகொலைகள் கண்டனத்திற்குரியது.

அதே நேரத்தில் "வரலாற்றில் புலிகள் ரத்தக்கறையை ஏற்படுத்தியிருப்பதாக" கருதும் பல நாடுகள், அமைப்புகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தனி நபர்கள் புலிகள் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள அதே நியாயமான காரணங்கள் சிறீலங்கா அரசுக்கும் பொருந்தும் என்பதை எப்படி மறக்கிறார்கள்/மறைக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

"தாரகி" ஒரு அரசாங்கத்தின் அமைச்சர் அல்ல என்பதைத் தவிர ஒரு சிறந்த சிந்தனையாளராக, பத்திரிக்கையாளராக, சமூக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரதிநிதியாக வெளிப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டது, பாரளுமன்ற உறுப்பினராக இருந்த பரராஜசிங்கம் கொல்லப்பட்டது, திருகோணமலையில் அப்பாவி மாணவர்கள் கொல்லப்பட்டது (அதனைச் உறுதிச் செய்த SLMM) எனப் பலச் சம்பவங்கள் நடைபெற்றப் பின்னர் சிறீலங்கா அரசு மீது தடை விதிக்க பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஆனால் அவ்வாறு இல்லாமல் அதனை வாய்மூடி மொளனமாக பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நாடுகள், அமைப்புகள், பத்திரிக்கையாளர்கள் குறித்த அவநம்பிக்கை எழுகிறது. சிறீலங்கா அரசுப் படைகள் மேற்கொண்ட பல அத்துமீறல்களில் "சிலவற்றையேனும்" காரணமாகக் கொண்டு புலிகள் மீது விதிக்கப்பட்ட அதே அளவிளான தடைகள் சிறீலங்கா அரசு மீதும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்காமல் போனதன் காரணம் என்னவென்று எனக்கு தெரிந்தே இருப்பதால் இதன் அரசியல் என்னை வேதனைப்படுத்துகிறது/ எரிச்சல்படுத்துகிறது.

இந்தப் பிரச்சனைக்கு எத்தகைய தீர்வு தான் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
புகைந்துக் கொண்டிருந்த இந்தப் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்தது கடந்த ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றப் பிறகு தான். மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலத்தில் நிலவியச் சூழ்நிலை கவனிக்கத்தக்கது. புலிகள் "ஆதரவு", "எதிர்ப்பு" என்ற உணர்வுகளை விலக்கிப் பார்க்கும் பலருக்கும் அப்பொழுது நிலவிய சூழ்நிலை தெளிவாகப் புரியும்.

மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற சூழ்நிலையில் நானும் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு எழுதிய சூழ்நிலையிலும் தமிழ் ஈழப் போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவே நான் நம்பினேன். முக்கியமான கட்டம் என்பது "தமிழீழம்" என்ற தனி நாட்டை நோக்கிய ஒரு முக்கியமான முன்னேற்றம், அல்லது சிறீலங்கா அரசு போர் நோக்கி நகரும் தீவிரம் இவை ஏதேனும் ஒன்று என்ற ரீதியில் தான் எனது பதிவில் அதனைக் குறிப்பிட்டிருந்தேன்.

அந்தக் காலக்கட்டத்தில் பல ஊடகங்களின் செய்தியை நோக்கினால், குறிப்பாக சிறீலங்காவில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" போன்ற ஆங்கில நாளிதழ்கள், சிறீலங்காவிற்கு வெளியே இருக்கும் சிறீலங்கா அரசு சார்பு ஏடுகளான "ஹிந்து" போன்ற நாளிதழ்களை கவனித்து வருபவர்களுக்கு இந் நிலை தெளிவாகப் புரிந்திருக்கும்.

புலிகளுக்கு உலக நாடுகள் மத்தியில் கிடைக்கும் அங்கீகாரம் "புலிகள்" எதிர்ப்பாளர்களை கவலை கொள்ள வைத்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ போன்ற சிங்கள இனவாத தலைவர்கள் பதவியேற்றிருக்கும் சூழ்நிலையில் புலிகளின் நிலைக்கு பலம் சேர்ந்திருந்தச் சூழலில்
தான் இந்தப் போக்கு தடம் மாறியது.

பல நாட்டு உளவு அமைப்புகள், Strategists போன்றவர்கள் இணைந்து அமைத்த வியூகத்தில் புலிகள் சிக்கிக் கொண்டனர். இன்று பல நாடுகளின் தடை நோக்கி அவர்கள் செல்ல காரணமாக அமைந்ததும் இந்த வியூகச் சிக்கல் தான். வழக்கம் போல தங்களுடைய வியூகத்தை தெளிவாக அமைக்காமலேயே, நிறுவனப்படுத்தப்பட்ட நாடு என்ற ஒரே முகமூடியைக் கொண்டு இந்தப் பிரச்சனையை தங்களுக்குச் சாதகமாக சிறீலங்கா அரசு பயன்படுத்திக் கொண்டது.

முதலில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த "தமிழ் தேசம்" என்பதை கேள்விக்குள்ளாக்குவது, புலிகள் அனைத்து தமிழ் மக்களுக்குமான பிரதிநிகள் அல்ல என்று நிலை நிறுத்துவது என்ற போக்கில் தான் அரசின் உத்தி இருந்தது. அதற்கு அவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரம் தான் "கருணா". "ஹிந்து" போன்ற சிறீலங்கா அரசு சார்பு ஊடகங்களில் "கிழக்கு மக்களின்" உரிமைகள் குறித்து தொடர்ந்து எழுதப்படுவதை இங்கே கவனிக்க வேண்டும்.

இவ்வாறு சிறீலங்கா அரசுக்கும், புலிகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் இடையே நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டத்தில் சிக்கிக் கொண்டவர்கள் திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இருக்கும் நம்முடைய அப்பாவி தமிழ்ச் சகோதர/சகோதரிகள் என்பது தான் வேதனைப்படுத்தும் உண்மை
Tamil Eelam Kids

சிறீலங்கா அரசு விளையாட தொடங்கிய இந்த சதுரங்க ஆட்டத்தில் புலிகள் எடுத்த எதிர் நிலைப்பாடு குறித்து அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

Leia Mais…