வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, September 26, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 4

சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும் என்ற வாதத்தை பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகம் பேசத் தொடங்கினர். காங்கிரஸ் கட்சியே மறந்து போன சர்தார் பட்டேலின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் தான் புதுபிக்கத் தொடங்கினர். குறிப்பாக எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி போன்ற குஜராத் தலைவர்கள் தங்களை மற்றொரு சர்தார் பட்டேலாகவே உருவகப்படுத்திக் கொண்டனர்.

சர்தார் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியா முன்னேறி இருக்குமா ? இந்திய கிராமங்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றிருக்குமா ?

மேலும் படிக்க...

Leia Mais…
Sunday, September 25, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 2

இந்திய ஊடகங்களின் பொறுப்பற்ற செயல் பற்றி நான் பெரிய அளவில் விளக்கம் தரத் தேவையில்லை. இந்தியப் பங்குச்சந்தை 16,000ஐ எட்டும் என்று செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை எந்தளவிற்கு விற்கும், அது போல பங்குச்சந்தையில் ஊழலா ? என்று கேள்விக்கணையுடன் செய்தி வெளியிட்டால் பத்திரிக்கை பரபரப்பாக விற்குமா என்று சிந்தனையில் தான் நிறைய செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்தியப் பங்குச்சந்தை இந்த ஆண்டு 8000ஐ எட்டும் என்று மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே நம்பப்பட்டது. நான் கூட இது குறித்து அப்பொழுது ஒரு கட்டுரை எழுதினேன்.

எனவே குறியீடு 8000ஐ எட்டியது ஆச்சரியத்தை கொடுக்க வில்லை. ஆனால் அது எட்டப்பட்ட விதம் தான் ஆச்சரியத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு பிறகான இடைப்பட்ட காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள், அந்நிய முதலீடு, பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை இன்னமும் நத்தை வேகத்தில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறன.

கடந்த மாதம் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி The Economist ல் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்தை கேலி செய்துள்ளது. இது மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை தான் என்றாலும், இந்தக் கட்டுரையில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தியாவின் உள்கட்டமையப்பு குறித்து இந்தக் கட்டுரை கேள்வி எழுப்பி உள்ளது. மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லை. பல வருடங்களாக பொருளாதாரச் சீர்திருத்தம் ஒரு தேக்க நிலையிலேயே இருக்கிறது. இது தவிர நிலக்கரி மற்றும் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைந்திருப்பதாக The Economist தெரிவிக்கிறது.

இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு கொடுத்து வரும் நெருக்கடி, பொதுத்துறை நிறுவனங்களை தனியமார் மயமாக்கத்திற்கு எழுந்துள்ள பிரச்சனைகள் ஒரு தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறன. இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றாலும் இத்தகைய அரசியல் தடைக்கற்களும், மோசமான உள்கட்டமைப்பு பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறன.

இத்தகைய சூழலில் பங்குச்சந்தை எந்தக் கவலையும் இல்லாமல் 8500 புள்ளிகளை எட்டுகிறது. இந்தியப் பங்குச்சந்தை குறியீடு உயர்வது இந்தியப் பொருளாதாரம் உயர்வதின் அறிகுறி என்ற வாதம் நிச்சயமாக சரியானது அல்ல. அது போல இந்தியா ஒளிர்கிறது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளத் தக்கவை அல்ல.

பின் எதனால் பங்குச்சந்தை உயர்கிறது ?

இந்தியப் பங்குச்சந்தை மட்டும் அல்ல, உலகின் பல பங்குச்சந்தைகளும் உயர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆசியாவில் இந்தியாவை விட தாய்வான் பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் குவிந்து கொண்டு இருக்கிறது.

ஏன் ? அது தான் Global liquidity

இப்பொழுது உலகில் நிலவும் பொருளாதார சூழல் தான் பல பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கியமான காரணம்

அமெரிக்காவின் கையிருப்பில் (Federal Reserve) இருக்கும் டாலர் மற்றும் உலகின் பல நாடுகளின் கையிருப்பில் இருக்கும் அந்நியச் செலவாணி, இவை தான்


Global liquidity எனப்படுகிறது. இது கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 20% அதிகரித்து உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இது போன்று liquidity இருந்ததில்லை என்று The Economist தெரிவிக்கிறது.

ஏன் இந்த நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது ?

அமெரிக்காவின் வட்டி விகிதம் மிகவும் குறைவாக (3.75%) இருக்கிறது. இந்த குறைவான வட்டி விகிதத்தை பயன்படுத்திக் கொண்டு இங்கிருக்கும் நிறுவனங்கள் பிற நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் தங்கள் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதனால் ஆசியாவின் பொருளாதாரம் உயரத் தொடங்கியுள்ளது. ஆசிய நாடுகள் தங்களுடைய ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் தங்கள் நாணயத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஒரு நாணயத்தின் மதிப்பை கட்டுப்படுத்த மிக அதிகமான அந்நியச் செலவாணி தேவை. எனவே அமெரிக்க டாலர் மற்றும் பாண்டுகளை (Bonds) அதிகளவில் வாங்கி தாங்கள் அந்நியச்செலவாணி கையிருப்பை அதிகப்படுத்துகின்றன (இது குறித்த எனது முந்தைய கட்டுரை - உலகின் பொது நாணயம்). அந்நியச் செலவாணி அதிகரிக்கும் பொழுது இந் நாடுகளின் கையிருப்பில் இருக்கும் உள்நாட்டுப் பணமும் அதிகரிக்கிறது. இது இந் நாடுகளில் உள்ள வங்கிகளின் பணக்கையிருப்பை அதிகரிக்கிறது.

வங்கிகள் இதனால் அதிக அளவில் கடன் கொடுக்க தயராக இருக்கிறன. வட்டியும் குறைகிறது. வட்டி குறைவதால் மக்கள் சேமிப்பை அதிகம் விரும்பவதில்லை. மாறாக வீடு மற்றும் பிற முதலீடுகளில் செலவழிக்கத் தொடங்குகின்றனர். மக்கள் செலவு செய்யும் பொழுது அது பொருளாதாரத்தை உயர்த்துகிறது.

இது தான் இப்பொழுது பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் மிக குறைந்த அளவில் இருக்கும் வட்டியால் பொதுமக்களும் அதிக அளவில் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் நிறுவனங்களுக்கு பணம் அதிகளவில் கிடைக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தற்பொழுது வசந்த காலம் தான். மக்கள் இதில் செய்துவரும் பெரும் முதலீடுகளால் அமெரிக்க வங்களில் கையிருப்பு உயர்ந்து இருக்கிறது. இந்த அதிகப்படியான பணத்தை இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் பிற பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். எனெனில் இங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அதிகம். இதனால் பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் இது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் ? இது தொடருமா ?

இந்த நிலை தொடரும் என்றே தோன்றுகிறது. எப்படி ?

கடந்த காலங்களில் மக்கள் அதிகமாக செலவழிக்க தொடங்கும் பொழுது பொருட்களுக்கு இருக்கும் அதிகமான தேவையால் (Demand)
பணவீக்கம் (Inflation) அதிகரிக்கும். ஆனால் தற்பொழுது பணவீக்கமும் குறைவாகத் தான் இருக்கிறது. காரணம், அமெரிக்கச் சந்தையில் சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பொருட்கள் மலிவான விலையில் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.

ஒரு வித்தியாசமான பொருளாதார சூழல் தற்பொழுது அமெரிக்காவில் நிலவி வருகிறது

சமீப காலாங்களில் அமெரிக்கவில் வட்டி விகிதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கூக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார ஏற்றாதாழ்வுகளுக்கு உலகில் நிலவும் இந்த liquidity தான் காரணம் என்று சில பொருளாதார வல்லுனர்கள் நினைக்கின்றனர். இது ஆசியப் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை குறைக்கும் என்றும் இவர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவின் டாலர் உலகின் பொது நாண்யமாக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் வெகுவிரைவில் சீன நாணயம், யூரோ நாணயம் போன்றவற்றால் பாதிப்படையும் என்றும் இவர்கள் நினைக்கின்றனர். அதனால் அமெரிக்க வட்டி வகிதத்தை உயர்த்தி பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது சிலரின் கருத்து.

ஆனால் அமெரிக்காவின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அமெரிக்காவில் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும். அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே வட்டி விகிதங்களை அதிகப்படியாக உயர்த்தாமல் 0.25% என்ற விகிதத்தில் அமெரிக்கா குறைவாக படிப்படியாக உயர்த்திக் கொண்டிருக்கிறது.

உலகின் நிலவும் இந்த பொருளாதாரச் சூழல்களே இந்தியப் பங்குச்சந்தை மற்றும் உலகின் ஏனைய பங்குச்சந்தைகள் உயருவதற்கு முக்கிய காரணம்.

அது சரி.. இந்தியப் பங்குச்சந்தையை ஏன் இந்த வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் குறிவைத்து உயர்த்துகின்றன ? இந்தியப் பங்குச்சந்தையின் Valuation மிக அதிகமாக இருக்கிறது என்று செல்கிறார்களே அது உண்மை தானா ? Valuation அதிகமாக இருப்பதால் இந்தியப் பங்குகள் மேலும் உயரும் சாத்தியங்கள் இருக்கிறதா ?

அடுத்தப் பதிவில் பார்க்கலாம்

Leia Mais…
Saturday, September 24, 2005

பங்குச்சந்தையில் என்ன நடக்கிறது - 1

பங்குச்சந்தையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது ? இந்தக் கேள்வி சில வாரங்களாக இந்திய ஊடகங்களில் அதிகமாக அலசப்படுகிறது. பலரும் பல யூகங்களை முன்வைக்கின்றனர். BSE பங்குச்சந்தைக் குறியீடு 10,000 புள்ளிகளை எட்டும், 16,000 எட்டி விடும் தூரம் தான் போன்ற பேச்சுகள் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 8000 நோக்கி பங்குச்சந்தை சரியும் என்ற எண்ணம் பரவலாக தென்பட தொடங்கி இருக்கிறது.

மேலும் படிக்க

Leia Mais…
Monday, September 19, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 3


ஜோசப் ஸ்டாலின், சோவியத் யுனியனின் தலையெழுத்தை மட்டுமல்லாமல் உலகின் தலையெழுத்தையே மாற்றிய பெருமைக்குரிய சரித்திர நாயகன். ஸ்டாலினின் உண்மையான பெயர் ஜோசப் டிஜுகாஸ்வில்லி. சிறு வயது முதலே கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனினின் சத்தாந்தங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு பல புரட்சி இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றியவர். இதனால் 8 முறை கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் அடைக்கப்பட்டார். 7 முறை சிறையில் இருந்து தப்பித்து பல புனைப் பெயர்களில் புரட்சி இயக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் சூட்டிக் கொண்ட பல புனைப் பெயர்களில் ஒன்று தான் ஸ்டாலின். ஸ்டாலின் என்ற பெயருக்கு இரும்பைப் போன்றவன் என்று பொருள். தனக்கு ஏற்ற கம்பீரமான பெயர் இது தான் என்று ஸ்டாலின் முடிவு செய்தார். பின் அதுவே நிலைத்தும் விட்டது.

மேலும் படிக்க...

Leia Mais…
Monday, September 12, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 2

1917, இந்த ஆண்டு தான் உலக சரித்திரத்தையே மாற்றி எழுதிய வருடம். ஆம்..அந்த வருடம் தான் ரஷ்ய புரட்சி வெடித்து லெனின் தலைமையில் ஒரு கம்யுனிச நாடு உலகில் உதயமாகியது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களை நடைமுறைப் படுத்தக் கூடிய ஒரு அரசு அப்பொழுது தான் உலகில் முதன் முறையாக தோன்றியது. இந்த நிகழ்வு, வர்க்க பேதங்களை கலைந்து ஒரு சமத்துவமான சமுதாயத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியது.

ரஷ்ய புரட்சியின் தாக்கம் அடுத்து வந்த ஆண்டுகளில் உலகின் பல நாடுகளை ஆட்டிப் படைத்தது. பல நாடுகளின் கொள்கைகளை மாற்றி எழுதியது. மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றியது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகள் தாங்கள் எழுச்சி பெற கார்ல் மார்க்ஸின் கம்யுனிசம் தான் ஒரே வழி என்று நினைத்தன. இந்தியாவிலும் அந்த எண்ணம் பரவலாக பெருகி இருந்தது.

மேலும் படிக்க...

Leia Mais…
Wednesday, September 07, 2005

பில்லியன் டாலர் கனவுகள் - 1

1946, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்கும் நேரம். இது வரை நடந்த காங்கிரஸ் கமிட்டி தேர்தல்களை விட இந்த தேர்தலுக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தலைவர் அல்ல. சுதந்திர இந்தியாவின் "முதல் பிரதமர்" என்ற கவர்ச்சிகரமான பதவியையும் அவர் தான் அலங்கரிப்பார். பல ஆண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டு, சீர்குலைந்திருந்த ஒரு நாட்டை திட்டமிட்டு எழுப்ப வேண்டிய முக்கியமான பொறுப்பிற்கான தேர்தலாகவும் இந்த தேர்தல் அமைந்தது.

எங்கும் நிறைந்திருந்த வறுமை, மதவெறி, கல்வியறிவின்மை போன்றவற்றை கலைந்து பொருளாதாரத்தை வளர்த்து நாட்டை வழி நடத்தக் கூடிய தலைவர் யார் ?

மேலும் படிக்க...

குறித்த நேரத்தில் தொடங்காமல் இரண்டு வாரங்கள் தாமதமாக இந்த தொடரை தொடங்குகிறேன்

Leia Mais…