வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, March 23, 2008

திபெத் - இந்தியா, அகிம்சை ஜல்லி

அகிம்சை தத்துவத்தை இந்த உலகத்திற்கு முதன் முதலில் கொடுத்த நாடு இந்தியா. இந்தியாவில் தோன்றிய சமண மதமும், புத்த மதமும் வன்முறையற்ற வாழ்க்கையையும் அனைத்து உயிர்களும் சமமான நிலையில் வாழும் சூழலையும் போதித்தன. அகிம்சை குறித்த மத ரீதியிலான தத்துவங்களை புத்தர் தொடங்கி "வாடிய பயிரை கண்டபொழுதெல்லாம் வாடிய" ராமலிங்க வள்ளலார் வரை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் பலர் பரப்பி வந்துள்ளனர்.

மத ரீதியிலான தத்துவங்களைக் கடந்து அகிம்சையை அரசியல் போராட்டத்திற்கும் புகுத்த முடியும் என்பதை நிருபித்து காண்பித்தவர் மகாத்மா காந்தி. காந்தியின் போராட்டம், சமுக சீர்கேடுகளை நோக்கிய ஒரு சாமானிய மனிதனின் சமூக பொருளாதார நிலை குறித்தான போராட்டமாகவே ஆரம்ப காலங்களில் தொடங்கியது. இந்திய தேசிய விடுதலை, இந்திய தேசியம் போன்றவற்றில் மகாத்மா காந்தி ஆரம்ப காலங்களில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. வெள்ளையர்களின் கைகளில் இருக்கும் ஆட்சி இந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கைகளுக்கு மாறுவதால் மட்டுமே சாமானிய மக்களின் வாழ்க்கையில் எந்த விதமான மாற்றங்களையும் ஏற்படுத்தி விட முடியாது என காந்தி நம்பினார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அடக்குமுறை, குறிப்பாக ஜாலியன்வாலாபாக் நிகழ்வுகள் போன்றவை காந்தியின் கருத்துகளில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவின் ஆட்சி இந்திய மக்களின் கைகளுக்கு மாறினால் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் உள்ளது போல மக்கள் அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்காது என காந்தி நம்பினார். அதனால் தான் இந்திய தேசிய விடுதலை நோக்கி அவர் நகர்ந்தார். காந்தியின் அகிம்சை போராட்டத்தால் மட்டும் இந்தியாவின் விடுதலை அமைந்து விடவில்லை. என்றாலும் அகிம்சை என்ற இந்தியாவின் மத ரீதியிலான தத்துவம் ஒரு அரசியல் போராட்டமாகவும் மாறியதற்கு காந்தி ஒரு முக்கிய காரணமாக இருந்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது சமூக மாற்றங்களை வலியுறுத்திய மகாத்மா காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு மாறிய சூழலையே. இந்தியாவை இந்தியனே ஆளும் பொழுது பிரிட்டிஷாரின் ஆட்சியில் உள்ளது போன்ற அடக்குமுறை சூழல் இருக்காது என காந்தி நம்பினார். அதனால் அவர் முழுமையான இந்திய விடுதலை நோக்கி நகர்ந்தார்.

இந்திய விடுதலைக்கு காந்தி எத்தகைய சூழலை முக்கியமாக கருதினாரோ அதே வகையான சூழல் இன்று இந்தியாவை சுற்றி இருக்கும் பல நாடுகளில் நிலவி வருகிறது. திபெத்தில் நிகழும் சீன அடக்குமுறை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்படும் சிங்கள அடக்குமுறை, மியன்மாரில் இராணுவ ஆட்சியில் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் என இந்தியாவைச் சுற்றிலும் ஒரு அடக்குமுறை சூழல் நிலவி வருகிறது.

காந்தி எவ்வாறு இந்தியாவை இந்தியர்கள் ஆளும் பொழுது அடக்குமுறை இருக்காது என நம்பினாரோ அதே வகையான நம்பிக்கையை தான் இலங்கையில் தமிழர்கள் கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் அமைந்தால், தமிழர்கள் சிங்கள அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்காது. இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் நேராது என தமிழர்கள் நம்புகின்றனர். இன்றைக்கு இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றனவா, இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதியில் மனித உரிமை மீறல்கள் நிகழ்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் காந்திய நாடான இந்தியா, காந்தியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக தமிழர்களை சிறீலங்கா தலைமையில் இருக்கவே வற்புறுத்துகிறது - United Sri Lanka.

தமிழர்கள் மீதான தங்களின் இத்தகைய அணுகுமுறைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத பாசிச இயக்கம். எனவே தமிழ் ஈழத்தை இந்தியா ஆதரிக்க முடியாது என இந்திய தேசியவாதிகள் கூறுவது வழக்கம். விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு விட்டு திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டால் இந்தியா நிச்சயம் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும். தமிழ் ஈழத்திற்கு விடுதலை பெற்று கொடுக்கும் என நம்புவோம்.

எனவே இலங்கையை மறந்து விட்டு திபெத், மியன்மார் போன்ற நாடுகளை மட்டும் கவனிப்போம்.

மகாத்மா காந்திக்குப் பிறகு அகிம்சை வழியில் தங்களின் சமூக விடுதலைக்கு பல நாடுகளில் தலைவர்கள் முனைந்தனர். அமெரிக்காவின் கறுப்பர் இனத்தின் சமுக விடுதலையை முன்னெடுத்த மார்ட்டின் லூதர் கிங், தென்னாப்ரிக்காவில் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் போராடியது சமூக மாற்றங்களுக்குத் தான். தேசிய விடுதலைக்கு அல்ல. ஆனால் காந்தியை பின்பற்றி வன்முறை இல்லாமல் புத்தரின் பாதையில் அகிம்சை வழியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தலைவர் ஒருவர் மட்டுமே - அவர் திபெத்தின் ஆன்மீக தலைவர் தலாய்லாமா.

நிறுவனப்படுத்தப்பட்ட புத்த மதத்தின் அதிகாரம் பல நாடுகளில் உண்டு. அப்படி குறிப்பிடத்தக்க நாடுகளில் இலங்கை, திபெத் போன்றவை முக்கியமான உதாரணங்கள். ஆனால் இந்த புத்த மதத்தின் அதிகார மையங்கள் செயல்படும் விதம் மாறுபட்டது. சிங்கள-பொளத்த அதிகார மையம் என்பது புத்த மதத்தின் அத்தனை நியதிகளையும் கால்களில் போட்டு மிதித்து புத்தரின் அகிம்சை தத்துவங்களுக்கு முற்றிலும் எதிராக போருக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவு அளித்து சிங்கள அதிகார வர்க்கத்தின் அடையாளமாகவும் இருந்து வருகிறது.




திபெத் நாட்டின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் புத்த அதிகார மையம் தான். தலாய்லாமா என்னும் பதவி திபெத் மக்களின் தலைமை பீடமாகவும் இருந்து வருகிறது. திபெத்தை சீனாவின் கம்யூனிச சர்வாதிகார அமைப்பு 1950ல் கைப்பற்றி திபெத்தை சீனாவின் ஒரு அங்கமாக மாற்றி விட்டது. 1959ல் சீனாவின் ஆட்சிக்கு எழுந்த கடுமையான எதிர்ப்பு அடக்கப்பட்டது. அங்கிருந்து தப்பித்து இந்தியா வருகிறார் தலாய்லாமா. இந்தியாவின் தர்மசாலா நகரத்தில் திபெத் அரசாங்கத்தை நிறுவி தொடர்ச்சியாக திபெத் விடுதலைக்கு போராடி வருகிறார். தன்னுடைய போராட்டம் அகிம்சை வழியில் தான் இருக்கும் என்பதையும் தன்னுடைய போராட்டத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பதையும் தலாய்லாமா தெளிவுபடுத்தி இருக்கிறார். வன்முறையற்ற அவரது அணுகுமுறைக்கு அங்கீகாரமாக அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவரது முக்கிய கோரிக்கையான திபெத் விடுதலைக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர் தற்பொழுது முன்வைப்பதெல்லாம் திபெத்திற்கு அதிக அதிகாரங்கள் மட்டுமே. முழுமையான விடுதலை அல்ல. கடந்த சில வாரங்களாக திபெத் முழுவதும் மக்கள் மறுபடியும் தங்கள் விடுதலையை முன்வைத்தும் சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். 100க்கு அதிகமானோர் சீனாவின் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என பி.பி.சி போன்ற நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

அகிம்சை தத்துவத்தை உலகெங்கும் பரப்பும் இந்தியா நியாயமாக இந்தப் போராட்டங்களுக்கு தன்னுடைய முழு ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். இந்தியா தான் அகிம்சை நாடாயிற்றே. ஆனால் என்ன நடந்தது ? சீனாவின் அடக்குமுறையை கண்ணை மூடி பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமில்லாமல் திபெத் மக்கள் இந்தியாவில் நடத்திய அகிம்சை போராட்டத்தையும் காவல்துறை மூலமாக நசுக்கியது.

ஆனால் அகிம்சை தத்துவத்தை காலில் போட்டு மிதித்து போர் முழுக்கம் செய்யும் சிங்கள-பொளத்த இனவாத அரசுக்கு இந்தியா தன்னுடைய ஆதரவையும், ஆயுதங்களையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு மியன்மார் நாட்டிலே அந் நாட்டின் இராணுவ அரசுக்கு எதிராக புத்த பிக்குகள் போராட்டம் செய்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஜனநாயகத்தை முன்னிறுத்தியும் எழுந்த இந்தப் பிரச்சனையில் புத்த பிக்குகள் தலைமையிலான போராட்டத்தை மியன்மார் இராணுவ ஆட்சி சர்வாதிகரமாக அடக்கியது. நியாயமாக அகிம்சை மற்றும் ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இராணுவ ஆட்சிக்கு தன்னுடைய முழு ஆதரவையும் வழங்கியது. பாக்கிஸ்தானில் மட்டும் இந்தியா இராணுவ ஆட்சியிக்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யும் என்பதை கவனிக்க வேண்டும்.

***********

ஆரம்ப காலங்களில் திபெத் போராட்டத்தை இந்தியா ஆதரித்தது. அன்று சீனாவின் எதிரி, இந்தியாவின் நண்பன். எனவே திபெத் போராட்டத்தை இந்தியா ஆதரித்தது. ஆனால் இன்று சீனா நண்பன். எனவே திபெத் குறித்து எந்தக் கவலையும் இல்லை.

இதே நிலை தான் 1980களில் இலங்கையில் நிலவியது. அமெரிக்க ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஜெயவர்த்தனேவை எதிர்க்க, தமிழர்களை இந்தியா ஆதரித்தது. தமிழர்களுக்கு ஆயுதங்களை அளித்தது. பிறகு சிங்கள நட்பு கிடைத்தவுடன் தமிழனை போட்டு மிதித்தது. இன்று வரை தமிழனுக்கு எதிராக சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.

***********

ஈழப் பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக இந்தியாவின் தேசிய நாளிதழான பாரம்பரிய மிக்க ஹிந்து வெளியிடும் பொய்ச் செய்திகள் குறித்து தமிழர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றனர். தற்பொழுது காட்சிகள் மாறி இருக்கின்றன. தமிழர்கள் போலவே, இப்பொழுது திபெத் மக்களும், இந்திய வலதுசாரி தேசியவாதிகளும் ஹிந்துவிற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் ஹிந்து ராமிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கும் மற்றொரு முகமூடி இந்த விஷயத்தில் உள்ளது - அது ராம் ஒரு கம்யூனிஸ்ட் என்னும் முகமூடி. "ராம் ஒரு நக்சலைட், அதனால் தான் திபெத் விடுதலையை எதிர்க்கிறார்" என்று இந்திய வலதுசாரிகள் குற்றம்சாட்டி வருவது தான் தற்போதைய உச்சகட்ட நகைச்சுவை :))

திபெத் போராட்டத்திற்கு இந்திய வலதுசாரிகள் பெருமளவில் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்தியாவின் இந்துத்துவ ஆதரவாளர்கள் திபெத் விடுதலையின் ஆதரவாளர்களாக உள்ளனர். காரணம் இராணுவ வல்லரசான இந்தியாவிற்கு சீனா ஒரு அச்சுறுத்தல். இந்திய இராணுவ வலிமையை விரும்பும் இந்திய வலதுசாரி தேசியவாதிகள் மற்றொரு இராணுவ, பொருளாதார வல்லரசான சீனாவை எதிர்த்து தானே ஆக வேண்டும் :))

Leia Mais…
Monday, March 03, 2008

ஹில்லரி Vs ஒபாமா : யார் சிறந்தவர் ?


அமெரிக்க முன்னோட்ட தேர்தல் (Primary) கிட்டதட்ட இறுதி நிலைக்கு வந்துள்ளது. நாளை 4 முக்கிய மாநிலங்களில் நடக்கும் தேர்தல் குடியரசுக் கட்சியில் மெக்கெயினை குடியரசுக் கட்சியின் வேட்பாளாராக தேர்வு செய்யும். ஹக்கபீ தொடர்ந்து போட்டியில் இருந்தாலும், அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. எனவே நாளை மெக்கெயின் 1,191 என்ற இலக்கினை பெறக்கூடும் என்றே தெரிகிறது.

நாளை அனைவரின் கவனமும் ஜனநாயக் கட்சியின் மீது தான் இருக்கும். ஒபாமாவா ? ஹில்லரியா என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. ஒபாமா டெக்சாஸ், ஒகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றால், ஹில்லரி போட்டியில் இருந்த விலகக் கூடும். ஹில்லரி வெற்றி பெற்றாலோ, அல்லது இருவரும் சரிசமமான வெற்றியை பெற்றாலோ, இந்த போட்டி ஆகஸ்ட் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜனநாயக கட்சியில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்ற கேள்விக்கு மிகச் சூடான விவாதம் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு ஊடகங்களில் நடந்து வருகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான ஹில்லரி, ஒபாமா ஆகிய இருவருமே மிகச் சிறந்த வேட்பாளர்கள். இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை தேர்ந்தெடுப்பது சற்று கடினமாகவே உள்ளது. இந்த இருவரில் சிறந்தவர் யார் என்ற கேள்வி, எனக்கும் உண்டு. நான் அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை உள்ளவன் அல்ல. என்றாலும் உலகின் மிக முக்கியமான ஒரு நாட்டின் தேர்தல், பல நாடுகளின் மீது கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு நாட்டின் தலைமை எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதிலே எனக்கு ஆர்வம் உண்டு. ஒரு பார்வையாளனாக நான் கவனித்தவற்றை பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்க அரசியல் குறித்த பெரிய அளவில் ஒன்றுமே தெரியாமல் இந்த தேர்தலை கவனிக்க தொடங்கிய பொழுது எனக்கு தெரிந்த பெயர் - ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸ் மட்டுமே. ஒபாமா குறித்து இங்குள்ள பத்திரிக்கைகள் எழுத தொடங்கிய பொழுது தான் எனக்கு தெரியும். நான் மட்டுமல்ல. அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான அமெரிக்க பிரஜைகளுக்கு கூட 2004ம் ஆண்டு வரை ஒபாமா பற்றி அதிகளவில் தெரியாது. 2000ம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க செனட் தேர்தலில் தான் அடைந்த "கடுமையான" தோல்வி, அடுத்த தேர்தலில் அதிக அளவில் அவர் மாநிலத்திலேயே பிரபலம் ஆகாமல் தேர்தலை எதிர்கொண்டது போன்றவற்றை ஒபாமா அவரது "The Audacity of Hope" என்ற புத்தகத்திலே பட்டியலிடுகிறார். ஆனால் 2008ல் அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னோட்ட தேர்தலில் வலுவான வேட்பாளராக களத்தில் உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது். வெற்றியை நோக்கி அவர் நகர்ந்து வருவதாகவும் ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

ஒபாமாவை தேசிய அளவில் பிரபலமாக்கியதற்கு காரணம் அவரது பேச்சாற்றல் மட்டும் தான் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் அது மட்டுமல்ல. மக்களுக்கு தேவையானவற்றை ஒபாமா முன்வைக்கிறார். அவர் முன்வைப்பதை அவர் நிறைவேற்றுவாரா, அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறதா என்ற கேள்வி உள்ளது. ஹில்லரியும், மெக்கெயினும் கூட அந்தக் கேள்வியை தான் முன்வைக்கிறார்கள். ஆனால் மக்களை கவரும் அவரது பேச்சுக்கு முன்னே ஹில்லரியின் இத்தகைய தந்திரங்கள் பலனற்று போகின்றன. மக்களைக் கவரக்கூடிய தலைவராக ஒபாமா உருவெடுத்துள்ளர்.

ஹில்லரி தனக்கு இருக்கும் அனுபவங்களை பட்டியலிடுகின்றார். தன்னுடைய பல வருட முன்னெடுப்புகளை முன்வைக்கிறார். அதனை அவர் பலமாக நினைத்தாலும், அதுவே அவரது பலவீனமாகவும் உள்ளது. மக்கள் எதிர்பார்ப்பது ஒரு மாற்றம். ஒரே வகையான தலைவர்களையே பார்த்த அலுப்பு. இவற்றில் இருந்து தங்களுக்கு ஒரு மாற்றம் தேவை என நினைக்கும் மக்கள் ஒபாமாவை தேர்ந்தெடுக்கின்றனர். ஒபாமாவிற்கு எந்த track recordம் இல்லை. அது தான் அவரது பலமாகவும் உள்ளது. 2002ல் எங்கோ பேசிய ஒரு பேச்சில் ஈராக் போரை தான் எதிர்த்தாக கூறி அதையே தொடர்ந்து வலுவாக முன்னிறுத்தி மக்களை கவர்ந்து விட முடிகிறது. ஆனால் ஹில்லரியின் நிலை அது அல்ல. அவர் செனட் உறுப்பினர். போருக்கு செல்வதா, வேண்டாமா என்பதை வெறும் மேடையில் பேசி விட்டு ஹில்லரியால் நகர்ந்து விட முடியாத சூழல். அப்போதைய அமெரிக்க மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவர் வாக்களிக்க வேண்டிய நிலையில் இருந்தார். அதைத் தான் செய்தார். இன்று அந்தப் போர் அமெரிக்காவிற்கு பாதமாகி விட்ட சூழலில் ஹில்லரிக்கு அது பின்னடைவாகி விட்டது. ஒபாமா எதுவுமே செய்யாமல் ஹில்லரியின் பலவீனத்தை தனக்கு சாதகாக்கி கொள்கிறார்.

அது போல நாப்டா - North American Free Trade Agreement (NAFTA) உடன்படிக்கையை தான் எதிர்த்ததாக ஒபாமா கூறுகிறார். இதுவும் அவர் கடந்த காலங்களில் நிகழ்த்திய உரை மட்டுமே. அந்த உரை கூட தெளிவற்றைவையாகவே உள்ளது. ஆதரவு கொடுப்பது போன்ற தொனியில் தான் அந்த உரையின் சில வரிகளும் உள்ளன. ஆனாலும் தான் அதனை தொடர்ந்து எதிர்த்ததாகவும், அமெரிக்கர்களின் நலன்களுக்கு அது பாதகமாக உள்ளதாகவும் ஒபாமா கூறுகிறார். ஆனால் கடந்த காலங்களில் அந்த ஒப்பந்தத்தை ஆதரித்த ஹில்லரியால் அவ்வாறு கூற முடியாத ஒரு நிலை. (இன்று வெளியான மற்றொரு செய்தி ஒபாமாவின் NAFTA நிலைப்பாடுகள் குறித்த கேள்வியை இன்னும் வலுவாக்கியுள்ளது - http://www.cnn.com/2008/POLITICS/03/03/democrats.primaries/index.html)

ஹில்லரி ஊடகங்களால் கடந்த காலங்களில் கண்காணிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் அவரது ஒவ்வெரு பேச்சும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒபாமாவிற்கு அப்படியான ஒரு நிலை அல்ல. அவர் புதுமுகம். பல விடயங்களில் புதுமுகம் என்பதல் எளிதாக தப்பித்துக் கொள்கிறார். ஒபாமா உளறிய முக்கியமான விடயம் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என்பது. ஆனால் அது குறித்து கேள்வி எழுப்பினால் இப்பொழுது புஷ் பாக்கிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி அல்கொய்தாவின் முக்கிய தலைவரை கொன்றிருக்கிறாரே, அப்படியானால் என் கருத்து சரியானது தானே என கூறுகிறார். ஹில்லரியாலும் சரி, மெக்கெயினாலும் சரி, இந்த வாதங்களுக்கு சரியான எதிர் வாதங்களை வைக்க முடிவதில்லை.

ஒபாமாவின் இந்த வாதங்கள், எதிர்வாதங்கள் அவரை வெற்றியை நோக்கி நகர்த்தினாலும், அவர் ஒரு சிறந்த தலைமையை கொடுக்க முடியுமா ? வெறும் வாதங்கள், மேடை பேச்சுக்கள் மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தி விடாது.

இன்றைய ஒரு சாதாரண அமெரிக்க குடிமகனின் முக்கியப் பிரச்சனையாக உள்ளது - அவர்களது வீடு. தங்களது வீட்டினை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது தான் பலரின் கேள்வி. அமெரிக்கவின் பொருளாதாரம் மிக மோசமான ஒரு சூழ்நிலையில் உள்ளது. அமெரிக்கா தற்பொழுது பொருளாதார தேக்கத்தை (Recession) எதிர்கொண்டுள்ளது என சிலரும், தற்பொழுதே அந்த நிலை தான் உள்ளது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். அமெரிக்க பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பிரச்சனை அமெரிக்காவில் பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு (Layoff) போன்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தை சார்ந்தே உலகின் பல நாடுகள் உள்ளதால் இது பல நாடுகளின் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழலில் "US President for Dummies" என்ற புத்தகத்தை படிக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாவது சரியானதா என்ற கேள்வி எனக்கு உள்ளது. நான் பார்த்த விவாதங்கள், ஒபாமாவின் மேடைப் பேச்சு போன்றவற்றில் ஒபாமா பொருளாதாரம் குறித்த பேச்சுக்கள் வெறும் பேச்சாக உள்ளதாகவே எனக்கு தெரிகிறது. மாறாக ஹில்லரியின் பேச்சில் அவர் முன்வைக்கும் திட்டங்கள், அவரது கடந்த கால செயல்பாடுகள் போன்றவை ஹில்லரியே அமெரிக்காவிற்கு தற்பொழுது தேவை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

Health Care குறித்து ஹில்லரி, ஒபாமா இடையே பல சூடான விவாதங்கள் நடந்தன. இதுவும் அமெரிக்காவில் ஒரு முக்கியமான பிரச்சனை. பலருக்கு "மிக" முக்கியமான பிரச்சனையும் கூட. இதில் ஒபாமா, ஹில்லரியின் விவாதங்கள் இரண்டையும் கவனித்த வரையில், இது குறித்து வாசித்த வரை - எனக்கு இதில் பெரிய வேறுபாடு தெரியவில்லை. ஹில்லரி அனைவரும் காப்பீடு எடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறார். அவ்வாறு செய்யும் பொழுது மருத்துவ செலவு குறையும் என்கிறார். ஆனால் ஒபாமா எல்லோரும் எடுக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. குழந்தைகள் மட்டும் கட்டாயம் காப்பீடு எடுக்க வேண்டும் என்கிறார். அனைவரும் காப்பீடு எடுக்குமாறு காப்பீட்டுச் செலவை குறைக்கலாம் என்கிறார்.

எல்லோரும் காப்பீடு எடுக்க தேவையில்லை என்னும் பொழுது இளைஞர்கள் காப்பீடு எடுக்க மாட்டார்கள். இதனால் காப்பீடு எடுப்பவர்கள் எல்லோரும் மருத்தவ தேவை உள்ளவர்களாகவே இருப்பார்கள். எனவே மருத்துவ செலவு அதிகரிக்கும் என்கிறார் ஹில்லரி. இது சரியானதாகவே எனக்கு தோன்றுகிறது. பொதுவாக நான் உரையாடிய என் அலுவலக அமெரிக்க நண்பர்கள் ஹில்லரி இத் துறையில் மிக நீண்ட அனுபவம் உள்ளவர் என்றும், அவரது திட்டம் ஒபாமா திட்டத்தை விட சிறப்பாக உள்ளதாகவும் கூறிகிறார்கள். அமெரிக்காவில் நீண்ட வருடங்களாக இருந்து, இங்குள்ள Health Care முறை குறித்த நன்கு அறிந்திருக்க கூடிய செல்வராஜ், சுந்தரமூர்த்தி, பாஸ்டன் பாலா போன்றவர்கள் இது குறித்து எழுதினால் மேலும் தெரிந்து கொள்ளலாம்.

ஹில்லரியின் மிகப் பெரிய பலவீனமாக பலரும் பார்ப்பது அவர் ஆரம்பத்தில் ஈராக் போருக்கு அளித்த ஆதரவு வாக்கு தான். நியாயமாக பார்த்தால் ஒபாமா ஒன்றும் போருக்கு எதிரானவராக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. பாக்கிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று கூறியவர் தான் ஒபாமா. இவ்வாறான நிலையில் எங்கோ போருக்கு எதிராக ஒபாமா உரையாற்றியதை மட்டுமே கொண்டு ஹில்லரியை நிராகரிப்பது சரியான காரணமாக எனக்கு தெரியவில்லை. ஈராக் போருக்குப் பிறகும் புஷ்ஷுக்கு ஆதரவாக ஒபாமா பேசியுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஹில்லரி, ஒபாமா இருவரும் எதிர்காலத்தில் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து விலக்கி கொள்வோம் என்றே கூறுகின்றனர். ஈராக் போருக்கு அமெரிக்க மக்களிடம் பரவலாக எதிர்ப்பு உள்ள சூழலில், அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பாதகமான செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிற சூழலில் அடுத்து வரும் ஜனாதிபதி உள்நாட்டு பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கும்.

ஒபாமாவிடம் எனக்கு கவர்ந்த விடயம், அமெரிக்காவின் "பெரியண்ணன் மனப்பான்மையை" கலைய வேண்டும் என்ற அவரது கருத்து. ஒபாமாவின் சில நிலைப்பாடுகள் அரசியல் காரணங்களுக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழலில் அவர் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக க்யூபா குறித்த அவர் நிலைப்பாடுகள் "தேர்தல் வெற்றிக்காக" மாற்றம் அடைந்திருக்கின்றன. கடந்த காலங்களில் அமெரிக்காவின் க்யூபா நிலைப்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் தான் ஒபாமா. ஆனால் தற்பொழுது பிடரல் காஸ்ட்ரோ குறித்து எந்த நல்ல வார்த்தையையும் சொல்லி விடாது கவனமாக உள்ளார். அவ்வாறு பேசினால் அது அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

டெக்சாஸ் விவாதத்தின் பொழுது கூட க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும்.

ஒபாமாவின் நடுப்பெயரான ஹூசேன் அதிகம் அடிபட தொடங்கி இருக்கிறது. குடியரசுக் கட்சியினர் இது குறித்து சர்ச்சைகளை எழுப்பினாலும், இன்று உலகில் காணப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதம் Vs அமெரிக்கா என்ற சூட்டை தணிக்க ஒபாமாவின் தலைமை உதவக்கூடும். அரேபிய அமெரிக்கர்களுக்கு ஆதரவாக அவர் 2004ல் பேசிய பேச்சு, ஆசிய நாடுகளில் அவர் வளர்ந்த சூழல் போன்றவை ஒபாமா குறித்த மாறுபட்ட எண்ணத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்தக் கூடும். அனைத்து நாடுகளையும், இனங்களையும் சமநிலையில் அணுகும் முறையை ஒபாமா வலியுறுத்தி இருக்கிறார். புஷ் அரசாங்கம் ஈராக், ஈரான் போன்ற நாடுகளிடம் கொண்ட அணுகுமுறை உலக அமைதிக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிற சூழலில் ஒபாமாவின் தலைமை அமெரிக்காவின் நிலைப்பாட்டினை மாற்றக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும் அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது.

அதே போல ஒபாமாவின் முரண்பாடுகளையும் கவனிக்க வேண்டியுள்ளது. இஸ்ரேல் போன்ற நாட்டிற்கு தன்னுடைய ஆதரவை தொடர்ந்து எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒபாமா வலியுறுத்தி வருகிறார். இன்றைய இஸ்லாமிய அடிப்படைவாத சூழலுக்கு இஸ்ரேலும், இஸ்ரேலுக்கான அமெரிக்க ஆதரவும் முக்கிய காரணமாக உள்ள நிலையில் ஒபாமா இஸ்ரேலுக்கான தனது ஆதரவை எந்தக் கேள்வியும் இல்லாமல் முன்வைப்பது ஒபாமா மீதான நம்பிக்கைகளை சிதைக்கவும் செய்கிறது.

தவிரவும் ஒபாமா தன்னை பல விடயங்களில் முழுவதுமாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தேர்தல் வெற்றிக்காக அடக்கி வாசிக்கிறார் என்பது புரிகிறது. ஒபாமாவின் மனைவி மிஷ்ஷேல் ஒபாமா அதிரடியாக முன்வைக்கும் சில கருத்துக்களை கூட ஒபாமா முன்வைப்பதில்லை. கறுப்பர்களுக்கு் இன ரீதியான பிரச்சனை இன்றும் அமெரிக்காவில் உள்ள சூழ்நிலையை மிஷ்ஷேல் சமீபத்தில் ஒரு பேட்டியில் (சி.என்.என்) சுட்டிக்காட்டினார். அது போல ஒரு அமெரிக்கராக தான் இப்பொழுது தான் பெருமைப்படுவதாகவும், இது வரையில் அவ்வாறு தான் கருதியதில்லை என்றும் சமீபத்தில் கூறினார். இது கடுமையான சர்ச்சையையும் ஏற்படுத்தியது. (இந்தப் பேச்சுக்களால் ஒபாமாவை விட மிஷ்ஷேல் ஒபாமா என்னைக் கவர்ந்தார். ஹில்லரி கிளிண்டன் போல எதிர்காலத்தில் மிஷ்ஷேல் ஒபாமா களத்தில் இறங்குவாரா ?)

ஒபாமா, ஹில்லரியின் பலம், பலவீனங்கள் ஒரு புறம் என்றால் பிரச்சாரம் நடந்த விதமும் ஒபாமாவின் வெற்றிக்கும், ஹில்லரியின் பின்னடைவுக்கும் காரணமாக இருந்தது. ஹில்லரி தன்னை ஒரு வட்டத்திற்குள் அடைத்து கொண்டு அதற்குள்ளேயே பிரச்சாரம் செய்தார். ஹில்லரியின் வெற்றி தவிர்க்க முடியாதது (Inevitable) என்பதாக கடந்த வருடம் முழுவதும் நிலவிய சூழலில் ஹில்லரியின் பிரச்சாரம் எந்த வித பெரிய திட்டமிடலும் இல்லாமல் ஒரே பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒபாமா தன்னுடைய எதிர் வேட்பாளர் குறித்து தெளிவான திட்டத்துடன் நகர்ந்தார். குறிப்பாக அயோவா (Iowa) மாநில தேர்தலில் ஒபாமா வெற்றி பாதை நோக்கி நகர்ந்த பொழுது ஹில்லரியின் பிரச்சாரம் தடுமாற தொடங்கியது. அதுவும் குறிப்பாக கறுப்பர்கள் ஒபாமாவை நோக்கி நகர தொடங்கிய சூழலில் தென் கரோலினா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஒபாமா மீது மிக கடுமையான தனிப்பட்ட தாக்குதல்களை ஹில்லரி அணியினர் தொடுக்க தொடங்கினர். தென் கரோலினாவின் பாதி வாக்காளர்கள் கறுப்பர்கள். அங்கு பில் கிளிண்டன், பாப் ஜான்சன் போன்றோர் ஒபாமா மீது தொடுத்த தாக்குதல் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது. தென் கரோலினா வெற்றி ஒபாமாவின் மீது பலமான கவனத்தை ஏற்படுத்தியது.

ஹில்லரி-ஒபாமா இடையே போட்டி கடுமையாக மாறிய சூழலில் ஹில்லரியின் பிரச்சாரம் அதற்கு ஈடுகொடுக்க தடுமாறியது. டெக்சாஸ், ஒகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியதும் ஹில்லரி ஒபாமா மீது தாக்குதல்களை குறைத்து விமர்சனங்களை முன்வைத்தார். இது சரியான அணுகுமுறையாக இருந்தது.

தற்பொழுது ஹில்லரி வெல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன. நாளை முடிவு தெரிந்து விடும். ஹில்லரி ஒகாயோ, டெக்சாஸ் என இரண்டு மாநிலங்களையும் இழந்தால் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் அதிகரிக்கும்.

கட்டுரையின் தலைப்புக்கு வருவோம்...ஹில்லரி, ஒபாமா - யார் சிறந்தவர் ? இருவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. இருவர் மீதும் எனக்கு பல விடயங்களில் உடன்பாடும் உண்டு. என்றாலும் மெக்கெயினை யார் தோற்கடிக்க கூடியவர் என்பதை கவனிக்கும் பொழுது ஒபாமாவிற்கே வாய்ப்பு உள்ளது போல தோன்றுகிறது. ஹில்லரி வெற்றி பெறும் பட்சத்தில், ஒபாமா துணை ஜனாதிபதியாக போட்டியிட்டால் மெக்கெயினை தோற்கடிக்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் இவ்வளவு தீவிரமாக எதிர்பிரச்சாரம் செய்து விட்டு ஹில்லரியும், ஒபாமாவும் இணைவார்களா என்ற கேள்வியும் உள்ளது.

யார் சிறந்தவர் என்ற கேள்வியை பொருத்தவரை என்னிடம் இரு பதில்கள் உள்ளன.

- நான் அமெரிக்க குடிமகனாக இருந்தால் நிச்சயம் ஹில்லரியையே ஆதரிப்பேன்.
- அவ்வாறு இல்லாத நிலையில், அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுகள், உலக அமைதி போன்றவற்றை தற்போதைய சூழலில் நான் பெரிய விடயமாக கருதுவதால் ஒபாமாவை ஆதரிக்க வேண்டிய சூழல் உள்ளது.

******

பொதுவாக அமெரிக்க தேர்தல் சூழலில் ஒரு விடயத்தை இந்தியர்களிடம் கவனித்தேன். இந்தியாவில் வலது சாரிகளாக இந்தியாவின் இராணுவ வலிமையை முன்னிறுத்தும் பலர் அமெரிக்காவில் மட்டும் லிபரல்களாக மாறி ஒபாமாவையோ, ஹில்லரியையோ ஆதரிக்கின்றனர். இந்திய வலது சாரிகளுக்கு அமெரிக்க வலது சாரிகளை கண்டால் அச்சம் போலும் :)

தமிழ் அமெரிக்கர்கள் ஹில்லரியை ஆதரிக்கின்றனர். ஹில்லரி விடுதலைப் புலிகள் குறித்து தெரிவித்த கருத்து தமிழர்களை ஹில்லரி ஆதரவாளர்களாக மாற்றியிருக்கிறது. ஒபாமா பெரிய அளவில் இலங்கைப் பிரச்சனை குறித்து பேசவில்லை. என்றாலும் இலங்கைப் பிரச்சனையை பயங்கரவாதப் பிரச்சனையாக பார்க்காமல் இனப்பிரச்சனையாகவே கருதி சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

Leia Mais…