வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, August 15, 2005

பில்லியன் டாலர் கனவுகள்

என் அப்பா அடிக்கடி சொல்வார், "நாங்க சிறுக சிறுக சேமித்து, ஒவ்வொரு செலவையும் யோசித்து செய்வோம், நீங்களல்லாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் சம்பளம் நிறைய வருதுன்னு ஏகப்பட்ட செலவுகளை செய்கிறீர்கள்" என்று. என் அப்பா வறுமை கோட்டின் கீழ் இருந்து தன்னுடைய உழைப்பால் முன்னேறியவர். செலவுகளை யோசித்து தான் செய்வார். அவர் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை எனக்கும், எனது சகோதரனின் படிப்புச் செலவுக்கும், ஒரு வீட்டை கட்டுவதற்கும் செலவு செய்தார். இவை போக அவரிடம் கொஞ்சம் சேமிப்பு இருக்கும்.

நான் நெய்வேலியில் பலரை பார்த்து இருக்கிறேன். என்.எல்.சி. நிர்வாகத்தில் வேலை செய்யும் வரை மிகுந்த வசதியுடன் இருப்பார்கள். ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெரும் பொழுது பெரிய சேமிப்புகளோ, வசதியோ இருக்காது. அரசுப் பணியில் நீண்ட காலம் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளமாக அப்பொழுதெல்லாம் 20,000 இருந்திருக்க கூடும். பல வருடங்கள் உழைத்து முன்னேறி அந்த சம்பளத்தை அடைய வேண்டும்.

ஒரு வீடு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணம் இவை தான் சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தின் கனவு. மாதத்தில் ஒன்றோ, இரண்டோ சினிமா, கடற்கரை, சரவணபவனில் மாலை டிபன் இது தான் உல்லாசம். அதிக பட்ச சுற்றுலா, ஊட்டியோ, கொடைக்கானலோ, திருப்பதியோ தான்.

ஆனால் கடந்த சில வருடங்களில் பிரமாண்ட மாற்றம். அன்றைக்கு பல வருடங்கள் உழைத்து பெற்ற சம்பளம், இன்று கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுதே கிடைக்கிறது. ஆரம்ப வேலையிலேயே பல ஆயிரங்கள் சம்பளம். யோசித்து பல தடவை சிந்தித்து கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினர் இன்று வீட்டுக் கடன், கார் கடன், உல்லாசக் கடன் என்று பல கடன்களை யோசிக்காமால் வாங்கிக் குவிக்கின்றனர். நல்ல வசதியான வீடு, வார இறுதியில் பார்ட்டிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டின்னர்கள், வருடத்திற்கு ஒரு முறை சொகுசான சுற்றுலா என்று தடாலடி மாற்றம். அலமாரிகளிலும், அரிசிப் பானைகளிலும், வங்கிகளிலும் தேங்கிக் கிடந்த பணம் இன்று ஹோட்டல்களுக்கும், விமானங்களுக்கும் பாய்கிறது.

ஒரு தலைமுறை இடைவெளிக்குள் எப்படி இந்த திடீர் மாற்றம் ?

நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வந்த பொழுது இருந்த கார்களின் எண்ணிக்கையை விட தற்போதைய எண்ணிக்கையை ஒப்பிடும் பொழுது வியப்பாக இருக்கிறது. என் சென்னை அலுவலகத்தில் பைக்குகளின் எண்ணிக்கையுடன் கார்களின் எண்ணிக்கை போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் 20 வருடங்களில் உலகில் அதிக எண்ணிக்கையில் கார்கள் இருக்கும் நாடு இந்தியாவகத் தான் இருக்க கூடும். உலக வரைபடத்தில் அமெரிக்காவும், பிரிட்டனும், ஜெர்மனியும், ரஷ்யாவும், ஜப்பானும் பெற்றிருந்த முக்கியத்துவத்தை இந்தியாவும் பெறும் நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் நிரந்திர உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உண்டு. உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா நிரந்திர உறுப்பினராக வேண்டியது முக்கியம். அப்பொழுது தான் பாதுகாப்பு சபையில் சரியான பிரதிநிதித்துவம் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவோ, அமெரிக்காவோ இந்தியாவிற்கு நிரந்திர இடத்தை கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்தன. ஆசியாவில் ஒரு சக்தியாக இந்தியா உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனால் யார் நினைத்தாலும் தடுக்க இயலாத, அணை போட முடியாத நிலையை நோக்கி இந்தியா இன்று சென்று கொண்டிருக்கிறது.

இன்று சீனாவும், அமெரிக்காவும் ஐ.நா. சபையில் நிரந்திர உறுப்பினராக இந்தியாவை சேர்க்க ஆதரவு தெரிவித்துள்ளன. இவர்கள் நமக்கு ஆதரவாக மாறியது நமக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நம்மை சிறுமைபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் யாருடைய அங்கீகாரத்திற்கும் கையேந்த வேண்டிய அவசியம் இந்தியாவிற்கு இல்லை. நம்முடைய பொருளாதார பலத்தை கண்டு நம்முடன் அவர்களது உறவை வளர்த்துக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க முயலுகிறார்கள் என்பதே உண்மை.

இது அதீத கற்பனையோ !! மிதமிஞ்சிய கனவோ !! இந்த எண்ணம் எழத் தான் செய்கிறது.

ஏனெனில் சுதந்திரம் பெற்ற பொழுது அதளபாதாளத்தில் இருந்த, திட்டமிட்டு எழுப்ப வேண்டிய ஒரு நாட்டை பல ஆயிரம் ஆண்டு கால செழுமையான வரலாற்று போதையில், வரலாற்று புகழைப் பேசியே கோட்டை விட்டவர்கள் நாம். சுந்திரம் வாங்கும் பொழுது எங்கும் நிறைந்திருந்த வறுமையை போக்க திட்டம் தீட்ட வேண்டியவர்கள் "The Great Nation" என்று பழம் பெருமையை பேசிப் பேசியே கோட்டை விட்டனர்.

ஆனால் இன்று எங்கும் நம்பிக்கை ஒளி வீசுகிறது. சமீபத்தில் உலகின் பல நாடுகளில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் இந்தியர்கள் தான் தங்கள் நாடு பொருளாதாரத்தில் பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று தெரிவிக்கிறது.

நானும் அந்த நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன். அந்த நம்பிக்கையில் தான் இந்த தொடரையும் தொடங்குகிறேன். இந்தியாவின் பல நிறுவனங்களும், தனி நபர்களும் கனவு காண வேண்டும். பில்லியனர்களாக கனவு காண வேண்டும். இந்தியா பொருளாதார வல்லரசாக பல ஆயிரம் பில்லியன் டாலர் பொருளாதார பலத்தை எட்ட வேண்டும்.

கனவு மெய்ப்படுமா ? கனவு மெய்ப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா ?

இந்த சாத்தியங்கள் ஏன் இன்று தீடீர் என்று முளைத்துள்ளன ? சுதந்திரம் கிடைத்த இத்தனை வருடங்களில் நாம் ஏன் தடுமாறிக் கொண்டிருந்தோம் ? யார் அதற்கு காரணம் ? நாம் செய்த தவறுகள் என்ன ?

இதைப் பற்றி கொஞ்சம் அலசலாம் என்று தோன்றியது. அந்த எண்ணத்தின் விளைவு தான் - "பில்லியன் டாலர் கனவுகள்"

இந்த தொடரை தமிழோவியத்தில் அடுத்த வாரம் முதல் தொடங்குகிறேன். இந்த தொடரை தமிழோவியத்தில் எழுத தூண்டிய நண்பர் கணேஷ் சந்திராவிற்கு எனது நன்றி.

Leia Mais…

காஷ்மீரின் விடுதலை - 6

ஸ்ரீநகர்-முசாராபாத் நெடுஞ்சாலை தான் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் மக்களை பிற முக்கிய பகுதிகளுக்கு இணைக்க கூடிய முக்கியமான இணைப்புச் சாலை. இந்தச் சாலைக்கு வரலாற்று முக்கியத்துவமும் உண்டு. இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, ஷேக் அப்துல்லாவிற்கு ஆதரவு தெரிவிக்க, இந்த சாலை வழியாக பயணிக்கும் பொழுது தான் ஜவகர்லால் நேருவை காஷ்மீர் மன்னர் ஹரி சிங் கைது செய்தார்.

250கி.மீ, தூரமுள்ள இந்த நெடுஞ்சாலை தான் காஷ்மீர் மக்களின் முக்கிய வணிகச் சாலையாக இருந்தது. இந்தச் சாலை ஸ்ரீநகரை முசாராபாத்துடன் இணைப்பதுடன், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. 1947 பிரிவினனக்குப் பிறகு இந்த சாலையும் மூடப்பட்டு விட்டது. இதனால் காஷ்மீரிகள் துண்டிக்கப்பட்டனர். அவர்களின் வணிகமும், பொருளாதாரமும் சீர்குலைந்தது.

காஷ்மீர் ஆப்பிள்கள் ஒரு முக்கிய வணிகப் பொருள். காஷ்மீரில் பயிரிடப்படும் ஆப்பிள்களை தில்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு தான் இங்குள்ள விவசாயிகளால் தற்பொழுது விற்க முடியும். நீண்ட தூரத்தில் இருக்கும் வர்த்தக தளங்களால் இவர்களின் லாபம் குறைகிறது. மாறாக இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டால் முசாராபாத், ராவல்பிண்டி போன்ற முக்கிய நகரங்களுக்கும் மிக எளிதாக வர்த்தகம் செய்ய இயலும். லாபமும் அதிகரிக்கும்.

அது போலவே பாக்கிஸ்தானின் காஷ்மீரில் இருக்கும் தங்கள் உறவினர்களை பார்க்க வேண்டுமானால் முதலில் பாஸ்போர்ட், விசா போன்றவை கிடைக்க வேண்டும். பின் தில்லிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தில்லி-லாகூர் பேருந்து மூலமாக லாகூர் சென்று, அங்கிருந்து ராவல்பிண்டி பின் முசாராபாத் என்று ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும். இந்த பயணம் 4 நாட்கள் நீடிக்கும். ஆனால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து மூலமாக சில மணி நேரங்களில் தங்கள் உறவினர்களை பார்த்து விடலாம். நேரம், செலவு, விசா அலைச்சல் போன்ற எந்த பிரச்சனையும் இருக்காது.

உறவுகளை இணைப்பதுடன், வணிக வாய்ப்புகளும் பெருகுவதால் ஸ்ரீநகர்-முசாராபாத் பேருந்து போக்குவரத்து காஷ்மீர் மக்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது,

இந்த பேருந்து போக்குவரத்தை இந்திய பிரதமர் வாஜ்பாய் தான் ஆக்ரா பேச்சுவார்த்தையின் பொழுது பாக்கிஸ்தானிடம் முன்வைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம் இரு காஷ்மீரிடையே பயணிக்க பாஸ்போர்ட், விசா போன்றவை தேவை. இதனால் இரு காஷ்மீருக்கு இடையே இருக்கும் எல்லைக் கட்டுப்பாடுக் கோடு - LOC சர்வதேச எல்லையாக அங்கீகரிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் பாக்கிஸ்தானுக்கு இருந்தது. எனவே, இரு காஷ்மீரிடையே மக்கள் செல்வதற்கு பாஸ்போர்ட், விசா போன்றவை இருக்ககூடாது. மாறாக விசா, பாஸ்போர்ட் இல்லாத பர்மீட் (Permit) முறையை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் இதனை இந்தியாவால் ஏற்க முடியவில்லை. இந்த பிரச்சனையால் பல மாதங்கள் பேருந்து போக்குவரத்து நிலுவையில் இருந்தது.

பாஸ்போர்ட், விசா போன்றவை இல்லாமல், பர்மீட் மூலமாக பயணம் செய்யலாம் என்ற பாக்கிஸ்தானின் வாதத்தை பிறகு இந்தியா ஏற்றுக்கொண்டது. அது போலவே இந்த பேருந்து மூலமாக காஷ்மீரிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற தன் பிடிவாதத்தையும் பாக்கிஸ்தான் தளர்த்திக் கொண்டது.

இரு நாடுகளும் ஒரளவுக்கு பரஸ்பரம் விட்டுக் கொடுக்கும் போக்கினை கையாண்டதால் கடந்த ஏப்ரல் மாதம் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அதிக ஆரவாரத்துடன் பிரதமர் மன்மோகன் சிங் இதனை தொடங்கி வைத்தார்.



பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக ஸ்ரீநகரில் பயணிகள் தங்க வைக்கப்பட்டிருந்த பகுதி தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த பேருந்து போக்குவரத்தை நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று தீவிரவாதிகள் அச்சுறுத்தினர்.



பாக்கிஸ்தானில் இருக்கும் முஸ்லீம் தீவிரவாத மற்றும் ஜிகாத் அமைப்புகள், இந்தியாவில் இருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், இந்திய இராணுவம் போன்றவை பேருந்து போக்குவரத்தை எதிர்த்தன.

இந்திய இராணுவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் முயற்சி எடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் தீவிரவாதிகள் ஊடுறுவல் இருக்க கூடிய இடங்களில் மின்சார வேலிகளை அமைத்து இருந்தது. இதன் மூலம் தீவிரவாதிகளின் ஊடுறவல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாஸ்போர்ட் கூட இல்லாமல் இரு காஷ்மீருக்கு இடையே நடக்கும் போக்குவரத்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழையும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக இராணுவம் கருதியது.

பாக்கிஸ்தானில் இருக்கும் ஜிகாத் அமைப்புகள் இந்த பேருந்து போக்குவரத்து மூலம் காஷ்மீர் மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்தியா முயலுவதாக குற்றம் சாட்டின. தற்பொழுதுள்ள சூழலில் காஷ்மீரை பாக்கிஸ்தானுடன் இணைப்பது தான் முக்கியமானதே தவிர இத்தகைய போக்குவரத்து அல்ல என்று அந்த அமைப்புகள் நினைத்தன. அதனால் இந்த போக்குவரத்தை எதிர்த்தன.

ஆனால் சராசரி காஷ்மீர் மக்கள் இந்த பேருந்து போக்குவரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். இது அவர்களின் நீண்ட நாள் கனவு. அவர்களுக்கு இந்த பிரச்சனையின் அரசியல் முக்கியமானதாக தெரியவில்லை.

சரி.. காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்தளவுக்கு பங்காற்றும் ?

உண்மையில் காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த பேருந்து போக்குவரத்து எந்த வகையிலும் தீர்வாகாது. காஷ்மீர் மக்களின் 58 ஆண்டு கால பிரச்சனைக்கு இது ஒரு இடைக்கால நிவாரணம் தான்.

ஆனால் இரு காஷ்மீரிடையே இருக்கும் எல்லைகள் திறக்கப்படும். 1947க்கு முன்பாக எவ்வாறு இரு காஷ்மீரிடையே வணிக, கலாச்சார தொடர்புகள் இருந்ததோ அதே தொடர்பு உருவாக்கப்படும். Soft Borders எனப்படும் எளிதாக கடக்க கூடிய எல்லைகளுடன் இரு காஷ்மீரும், காஷ்மீர் மக்களும் இணைக்கப்படுவர்.

ஆனால் இந்த இணைப்பு எவ்வளவு நாட்கள் சாத்தியப்படும் ? திடீர் என்று இழுத்து மூடப்படக்கூடிய வாய்ப்புகள் இல்லாமலா போகும் ?

அப்படியெனில் என்ன தீர்வு உள்ளது இந்த பிரச்சனைக்கு ?

அடுத்தப் பதிவில்...

Leia Mais…
Tuesday, August 09, 2005

காஷ்மீரின் விடுதலை - 5

காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?


காஷ்மீருக்கு விடுதலை கொடுத்து விடலாமா ? என்னுடைய கையில் அதிகாரம் இருந்தால், காஷ்மீர் மக்களின் விருப்பமும் அதுவாக இருந்தால் நான் அதைத் தான் செய்வேன்.

ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை.

இன்று காஷ்மீர் பிரச்சனை தேசத்தின் கொளரவ பிரச்சனை. காஷ்மீரை இழக்க இந்தியாவில் யாருமே விரும்பவில்லை. கூகிள் எர்த்தில் காஷ்மீர் இந்தியாவின் பெயரில் இல்லாமல் போனதற்கே உணர்ச்சிவசப்படுபவர்கள் நாம். தென் தமிழகத்திலேயே இந்த உணர்வு என்றால் குஜராத்திலோ, மும்பையிலோ, லக்னோவிலோ, ஜெய்பூரிலோ எழக்கூடிய பிரச்சனைகள், சங்பரிவார் கும்பலின் எதிர்ப்பு போன்றவற்றால் நாட்டில் ஒரு பிரளயமே ஏழக் கூடும்.

அது போல காஷ்மீர் பாக்கிஸ்தானுக்கும் கொளரவப் பிரச்சனை. அவர்கள் நாட்டு அரசியல்வாதிகளுக்கு காஷ்மீர் பிரச்சனை நம்வூர் இராமர் கோயில் பிரச்சனையை விட ஒரு படி அதிகமானது. மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு அந்த உணர்வுகளை ஓட்டுக்களாக மாற்றுவதற்கு காஷ்மீர் பிரச்சனை அவர்களுக்கு உதவுகிறது, அங்குள்ள பல தீவிரவாத இயக்கங்களுக்கு ஜிகாத் வளர்ப்பதற்கும் இந்த பிரச்சனை அவசியம். காஷ்மீர் நிரந்தரமாக இந்தியாவுடன் இருக்க அவர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். PAKISTAN என்ற எழுத்தில் உள்ள "K" தங்களுக்கு முழுமையாக சொந்தமாகும் வரை அவர்கள் மாறப் போவதில்லை.

பின் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு ?

இந்தியாவும், பாக்கிஸ்தானும் காஷ்மீரில் பல வருடங்களாக கடைபிடித்து வந்த கொள்கையில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு தீர்வை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணத்திற்கு தற்பொழுது வந்திருக்கின்றனர். பல வருடங்களாக சண்டையிட்டு கொண்டே இருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என்ற எண்ணத்திற்கு இரு நாடுகளுமே வந்துள்ளது ஆரோக்கியமானச் சூழல் தான்.

காஷ்மீரிகளும் 16 ஆண்டு கால நிம்மதியற்ற வாழ்க்கைக்கு பிறகு நிம்மதியுடனும் துப்பாக்கிச் சத்தம் இல்லாமலும் வாழ வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருக்கின்றனர். காஷ்மீர் பிரிவினைவாதிகளும் ஒரு தீர்வை கூடிய விரைவில் எட்ட வேண்டும் என்று எண்ணத் தொடங்கியிருக்கின்றனர். முழுமையான சுதந்திர காஷ்மீர் என்பது இன்றைய யதார்த்த சூழலில் வெறும் கனவாகத் தான் இருக்க முடியும்.

ஆனால் அனைத்து தரப்பிற்கும் திருப்தி தரக்கூடிய வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமா ? மிகவும் சிக்கலான காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியுமா ?

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் ஒரு திட்டத்தை அறிவித்தார்.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தானில் உள்ள காஷ்மீரை 7 கூறுகளாக முஷ்ரப் பிரித்துக் கொண்டார். அவற்றில் இரண்டு பகுதிகள் பாக்கிஸ்தானிடம் உள்ளவை - கில்கிட், முஷ்பராபாத். மீதி ஐந்து இந்தியாவிடம் இருக்கின்றன (லடாக், பூன்ச், கார்கில், காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு). இந்தப் பகுதிகளில் இருந்து இந்தியாவும் பாக்கிஸ்தானும் இராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும். சர்சைக்குரியப் பகுதிகளை இரு நாடுகளும் கூட்டாக ஆளுவது. பிறகு இந்தப் பகுதிகளை காஷ்மீர் மக்களிடம் ஒப்படைப்பது.

ஆனால் இதனை இந்தியாவால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. காரணம் முஷ்ரப்பின் திட்டம் காஷ்மீரை மத ரீதியாக பிளவு படுத்தும் ஒரு முயற்சி என்று இந்தியா நினைத்தது. காஷ்மீர், ஜம்மு, லடாக் என மூன்று கூறுகளாகத் தான் அம் மாநிலத்தை இந்தியா கருதுகிறது. பூன்ச், கார்கில் போன்றவற்றை காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை சார்ந்தது என்பதே இந்தியாவின் எண்ணம்.

ஆனால் முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கும் இப் பகுதிகளை தனிப் பகுதியாக முஷ்ரப் பிரித்தார். பாக்கிஸ்தான் அருகில் இருக்கும் முஸ்லீம் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ள முஷ்ரப் நினைப்பதாக இந்தியா சந்தேகித்தது.

முஷ்ரப் திட்டத்தை நிராகரித்த இந்தியா தன் பங்குக்கு ஒரு திட்டத்தை முன்வைத்தது. கடந்த ஆண்டு மன்மோகன் சிங் இதனை வெளியிட்டார். இதன்படி காஷ்மீர் மாநிலத்திற்கு இந்தியா சுயாட்சி வழங்கும். வெளியுறவு, பாதுகாப்பு, தேர்தல், நாணயம், நீதிமன்றம் போன்ற துறைகள் மைய அரசிடம் இருக்கும். பிற அனைத்து துறைகளும் காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரத்தின் கீழ் இருக்கும். இந்தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீர் இருந்தாலும், பிற இந்திய மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீர் சுயாட்சியுடன் இருக்கும். அது போலவே பாக்கிஸ்தான் வசம் இருக்கும் காஷ்மீரிலும் பாக்கிஸ்தான் இது போன்ற ஏற்பட்டை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் தங்களுடைய பிடிவாதமான போக்கை ஒரளவுக்கு தளர்த்தி உள்ளது நல்ல அறிகுறி. அதே நேரத்தில் இறுதி தீர்வை உடனடியாக எட்டி விட முடியாது. இடைக்கால தீர்வாக சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

முதல் நடவடிக்கை பிரிந்த உறவுகள் இணைக்கப்பட வேண்டும். இரண்டு துண்டுகளாக பிளக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் இணைய வேண்டும்.பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைந்தது போல இந்தியாவின் வசம் இருக்கும் காஷ்மீரும், பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் இணைக்கப்படவேண்டும்.

இது சாத்தியமா ?

நேற்று வரை திருச்சியும், மதுரையும் ஒரே நாடாக இருக்க, திடீரென்று இவை இரண்டும் இரு வேறு துண்டுகளாகி, மதுரையில் இருப்பவர்கள் திருச்சிக்கும், திருச்சியில் இருப்பவர்கள் மதுரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் ?

திருச்சிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கும் மனித உறவுகள் துண்டிக்கப்படும். மகள் மதுரையில் இருக்கலாம். அப்பா திருச்சியில் இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவரும் சந்திக்க கடவுச்சீட்டு பெற்று, விசா கிடைத்து விமானம் ஏறி பல மைல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் ? எங்கோ ஒரு கிராமத்தில் இருக்கும் சாதாரண குடும்பத்திற்கு விமானம் ஏறக் கூடிய வசதி இருக்குமா ?

அது தான் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டது.



காஷ்மீர் இரு துண்டுகளாகி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டு விட்டன. இவர்கள் வேண்டுவது எல்லாம், உறவுகளை சுலபமாக பார்க்க ஒரு இணைப்பு பாலம்.

அதன் முதல் படி தான் ஸ்ரீநகர்-முஷ்பராபாத் இடையிலேயான பேருந்து வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஏதோ தில்லி-லாகூர் இடையே விடப்பட்ட பேருந்து பயணம் போல அரசியல் லாபத்திற்காக விடப்பட்ட போக்குவரத்து அல்ல.

இந்தியாவின் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும், பாக்கிஸ்தான் ஆளுமையில் இருக்கும் காஷ்மீருக்கும் இடையிலேயான பேருந்து போக்குவரத்து. காஷ்மீரிகள் சுலபமாக தங்கள் சொந்தங்களை பார்த்து கொள்ள ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம். இது தான் காஷ்மீர் பிரச்சனையின் தீர்வு நோக்கி எடுத்து வைக்கப்பட்ட முதல் நடவடிக்கை.


இதில் வெற்றி கிட்டுமா ?

இந்த பேருந்தின் முதல் பயணமே தீவிரவாதிகள் இதற்கு எதிராக நடத்திய குண்டுவெடிப்புடன், பலத்த பாதுகாப்புடன் தான் தொடங்கியது

காஷ்மீரிகளின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்ற இந்த பேருந்து பயணத்தை தீவிரவாதிகள் ஏன் எதிர்க்கிறார்கள் ? எதிர்ப்பவர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளா அல்லது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய தீவிரவாதிகளா ?

அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்

Leia Mais…
Sunday, August 07, 2005

காஷ்மீரின் விடுதலை - 4



காஷ்மீர் தீவிரவாதப் பிரச்சனையின் இன்னொரு சோகம் அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள். ஏராளமான இராணுவத்தினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கின்றனர். இது தவிர பிற பிரிவுகளை சேர்ந்தவர்கள், காவல்துறையினர் என கணக்கில் எடுத்தால் மக்கள் தொகைக்கு நிகரான அளவுக்கு இராணுவத்தினரும், காவல்துறையினரும் காஷ்மீரில் இருக்கின்றனர்.

பாக்கிஸ்தானின் ஆயுத உதவியுடன் தீவிரவாதிகளுக்கும் பஞ்சம் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் கிடைக்கவில்லையா ? ஆப்கானிஸ்தானில் இருந்து ஆட்களை கூப்பிடு என்ற ரீதியில் தட்டுபாடு இல்லாமல் தீவிரவாதிகளும் காஷ்மீரில் ஆயுதங்களுடன் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தினசரி வாழ்க்கையில் துப்பாக்கிச் சத்தம், சந்தேக கண்ணோடு பார்க்கும் இராணுவத்தினர், வீதியில் நடமாடினலே சோதனைகள் என்று தினமும் மக்களுக்கு இன்னல்கள்.



கடந்த 16 ஆண்டுகளாக நடக்கும் தீவிரவாதத்திற்கு சுமார் 75,000 பேர் பலியாகியிருக்கிறார்கள். இராணுவத்தின் கணக்கு படி சுமார் 18,000 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதே அளவு இராணுவத்தினரும் பலியாகி இருக்கலாம். இவர்கள் இருவரிடமும் சிக்கிக் கொண்டு இறந்து போன அப்பாவி மக்களின் உயிர்கள் எத்தனையோ ?

ஒரு காலத்தில் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீர் இன்று பிண பூமியாக மாறி விட்டது. அடக்குமுறைகள், இன்னல்கள் இவற்றுக்கிடையே வாழ வேண்டிய நிர்பந்தம் காஷ்மீர் மக்களுக்கு உள்ளது. நான் இங்கு காஷ்மீரிகள் என்று குறிப்பிடுவது முஸ்லீம்களை மட்டும் அல்ல, ஹிந்துக்களையும் தான்.

காஷ்மீரி ஹிந்துக்களான பண்டிட்கள் தீவிரவாத பிரச்சனை தொடங்கியதும் காஷ்மீரில் இருந்து விரட்டப்பட்டனர். தீவிரவாதிகளின் முதல் இலக்கு இவர்கள் தான். சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேண்டிய சோக நிலைக்கு பண்டிட்கள் தள்ளப்பட்டனர்.

தீவிரவாதிகள் ஹிந்துக்களை மட்டுமில்லாது தங்களுக்கு எதிர் கருத்துக்களையுடைய முஸ்லீம்களையும் கொன்று குவித்திருக்கின்றனர். தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவாளர்கள் தான் தீவிரவாதிகளின் முக்கிய இலக்கு. இது தவிர ஹுரியத் இயக்கத்தை சேர்ந்த சில மிதவாத தலைவர்களையும் (அப்துல் கானி லோன்) தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அதிகம். நமக்கு அமைச்சர்களின் மகள் கடத்தப்பட்டது தான் செய்தியாக தெரியும். அது தவிர ஏராளமானானோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். பாக்கிஸ்தானின் முஸ்லீம் அடிப்படைவாதிகளின் இஸ்லாம் சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ஈவுஇரக்கமின்றி பலியிடப்பட்டிருக்கிறார்கள்.

இங்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் கடத்தப்பட்டதால் சுற்றுலா துறை வீழ்ச்சி அடைந்து அதனை மட்டுமே நம்பி இருக்கும் பல பகுதிகளின் பொருளாதாரம் நசிந்து விட்டது.

இது தீவிரவாதிகளின் கோரமுகமென்றால் நம்முடைய இராணுவத்தினரும் இவர்களுக்கு சளைக்காமல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கின்றனர்,

காஷ்மீரில் சில இடங்களில் இரவு 10மணிக்கு மேல் விளக்கு ஏற்றப்படவே கூடாது என்ற இரணுவ சட்டம் இருக்கிறது. மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்களின் வீடுகளை எந்த நேரத்திலும் சோதனை செய்யும் அதிகாரம் இராணுவத்திற்கு உண்டு. சந்தேகத்தின் பெயரில் இராணுவத்தினர் இதனை செய்கின்றனர் என்றாலும் பல நேரங்களில் சோதனைக்குட்படுத்தப்படுபவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். சிறு சந்தேகம் அவர்கள் மேல் எழுந்தாலும் அவர்கள் நிலைமை பரிதாபம் தான்.

காஷ்மீரின் ஒவ்வொரு இளைஞனும் சந்தேகக் கண்ணோடு தான் பார்க்கப்படுகிறான். பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட பலரின் நிலை பற்றி எந்த தகவலும் இல்லை. சிலரின் சடலம் மட்டும் எங்காவது வீசி எறியப்பட்டிருக்கும். விசாரணைக்கு கொண்டு செல்லப்படும் பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பலர் இராணுவத்தின் பாலியல் வன்முறைக்கு பலிகடா ஆகியிருக்கிறார்கள்

இந்திய சார்புடைய காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது மகள் மெகபூமா முப்தி கூட இராணுவத்தினர் ஒவ்வொரு காஷ்மீரி இளைஞரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது குறித்து தன் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.

இந்திய இராணுவத்தினர் பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும் இது குறித்து எந்த ஊடகங்களும் எழுதுவதில்லை. பல செய்திகள் மறைக்கப்படுகிறன.

காஷ்மீரில் Armed Forces (Special Powers) Act, 1958 என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது தடா சட்டம் போல எந்த வித விசாரணையும் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் கைது செய்யவும், எந்த இடத்தையும் சோதனை செய்யவும், இராணுவத்தின் கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரி கூட துப்பாக்கி சூடு நடத்தவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பல நேரங்களில் இராணுவத்தினர் முறையற்ற வகையில் பயன்படுத்துகின்றனர்.
இந்த சட்டம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தாலும் இதனை முழுமையாக விலக்க இயலவில்லை.

இராணுவத்தினருக்கு மனித உரிமை குறித்து உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. தவறு செய்யும் இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு செய்த இராணுவத்தினர் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இரணுவத்தினரின் பல செயல்கள் காஷ்மீர் மக்களை இந்தியாவிடம் இருந்து இன்னும் அதிக அளவு அந்நியப்படுத்தி இருக்கிறது என்பதே உண்மை.

அம்னஸ்டி முதல் பல மனித உரிமை இயக்கங்கள் காஷ்மீரில் நடக்கும் நிலை குறித்து வெளிப்படையாக தங்கள் கவலையை தெரிவித்து இருக்கின்றன. ஆனால் இன்று வரை பெரிய முன்னேற்றம் இல்லை.

காஷ்மீரிகளின் துயரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

படங்கள் : FRIENDS OF KASHMIR

Leia Mais…
Saturday, August 06, 2005

காஷ்மீரின் விடுதலை - 3

PAKISTAN என்ற வார்த்தையில் இருக்கும் "K" காஷ்மீரையே குறிப்பதாக ஜின்னா கூறினார். காஷ்மீர், முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசமாக இருப்பதால் பாக்கிஸ்தானிடம் இயல்பாக சேர்ந்து விடும் என்றும் நம்பினார். ஆனால் காஷ்மீர் முஸ்லீம்களுக்கும், பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன.

காஷ்மீர் முஸ்லீம்கள் சுபிஸம் - Sufism என்ற ஒரு முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். இதனை முஸ்லீம்களின் ஒரு பிரிவாக சிலர் ஒப்புக் கொள்வதில்லை. இஸ்லாமுக்கு வெளியே இருந்து இது தோன்றயதாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியாயினும் இதுவும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தது தான்.

காஷ்மீரில் பண்டிட் என்று அழைக்கப்படும் அனைவருமே ஹிந்துகள் என்று கூறி விட முடியாது. முஸ்லீம்கள் கூட தங்கள் பெயருடன் பண்டிட் என்பதை இணைத்துக் கொள்வது வழக்கம். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் மிக இணக்கமாக இருந்த சூழலில் ஹிந்து கலாச்சார தாக்கம் முஸ்லீம்களிடம் இருந்தது. காஷ்மீரில் இருந்த முஸ்லீம் மதகுருக்களை "முஸ்லீம் ரிஷிகள்" என்று அழைக்கும் வழக்கம் கூட இருந்தது.

காஷ்மீர் முஸ்லீம் மதகுருக்களில் நந்தி ரிஷி என்பவர் முக்கியமானவர். சுபிஸம் காஷ்மீர் முஸ்லீம்களிடையே பரவ இவர் தான் காரணம். முஸ்லீம் மக்களால் மட்டுமில்லாமல் ஹிந்துக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்டவர். இவருடைய கோயிலுக்கு Chrar-e-Sharief என்று பெயர். ஹிந்து, முஸ்லீம் மக்கள் இருவருமே இந்த கோயிலுக்கு செல்வது வழக்கம். அவரை பின்பற்றியவர்களில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சரிசமமாக இருந்தனர். மாமிசம் உண்ணாமை, தியானம் போன்றவை இவர்களால் பின்பற்றப்பட்டது.
முஸ்லீம்-ஹிந்து கலாச்சாரம் போன்ற வித்தியாசங்கள் இல்லாமல், காஷ்மீர் கலாச்சாரம் என்பதாகவே அக் காலத்தில் இருந்தது.

முஸ்லீம் பிரதேசமா, ஹிந்து பிரதேசமா என்ற கேள்வியை விட சமத்துவமான ஒரு பிரதேசமாகத் தான் காஷ்மீர் இருந்தது. எனவே தான் காஷ்மீர் இந்தியாவுடனும் செல்லக்கூடாது, பாக்கிஸ்தானுடனும் செல்லக்கூடாது, சுதந்திரமாக ஒரு சமத்துவ பூமியாக, தன் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் காஷ்மீர் மக்களிடையே இருந்தது.

காஷ்மீர் மக்கள் மென்மையானவர்கள். சாதுவானவர்கள். நேரு கூட காஷ்மீர் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது அப்படித் தான் கூறினார். ஆனால் சாது மிரண்டால் - அதன் எதிரொலி தான் 1989ல் வெடித்த காஷ்மீர் தீவிரவாதம்.

காஷ்மீரில் போராடுபவர்கள் அனைவரையும் பாக்கிஸ்தானின் கூலியாட்கள் என்று கூறுவதில் இந்தியாவிற்கு பெரும் வசதி இருக்கிறது. காஷ்மீர் மக்களின் உண்மை நிலை மூடிமறைக்கப்பட்டு விடும். அப்படித் தான் காஷ்மீர் மக்களின் நிலையும் மாறி விட்டது. இரு பெரு நாடுகளிடையே சிக்கிக் கொண்டு தன் அடையாளத்தை இழக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் காஷ்மீரில் தீவிரவாதம் எப்படி தோன்றியது ? பாக்கிஸ்தான் தூண்டுதலால் தான் தோன்றியதா, இல்லை பிரச்சனையின் இறுதி வடிவமாக தீவிரவாதம் வெடித்ததா ?

காஷ்மீர் மக்களிடையே இருந்த விடுதலை உணர்வு, மைய அரசு தொடர்ந்து நடத்தி வந்த மொம்மை ஆட்சி போன்றவற்றால் வெறுப்புற்று ஆயுத போராட்டத்தை காஷ்மீர் இளைஞர்கள் தொடங்கிய பொழுது, இந்த தருணத்திற்காகவே பல வருடங்களாக காத்திருந்த பாக்கிஸ்தான் தன் ஆதரவு கரத்தை நீட்டி காஷ்மீரை இன்றைக்கு ரத்த பூமியாக மாற்றி விட்டது.
காஷ்மீரில் தீவிரவாதம் வேரூன்ற காரணமான நிகழ்ச்சிகளை கவனிப்போம்.

ஷேக் அப்துல்லா மற்றும் அவரது நெருங்கிய நண்பர் மிர்சா முகமது அப்சால் பெக் போன்றோர் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணயம் கேட்டு போராட தொடங்கியதால் கொடைக்கானலில் கொண்டு வந்து சிறைவைக்கப்பட்டனர், காஷ்மீரின் தலைவரை தமிழ்நாட்டில் கொண்டு வந்து சிறை வைத்து அவரை காஷ்மீர் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்த இந்தியா முயன்றது.
பல ஆண்டுகள் ஷேக் அப்துல்லா சிறையில் இருந்ததையடுத்து மிர்சா முகமது அப்சால் பெக் ஆதரவுடன் "ஜம்மு காஷ்மீர் மாணவர் அமைப்பு" உருவாக்கப்பட்டது. இவர்கள் ஷேக் அப்துல்லாவின் விடுதலை கேட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த இயக்கம் மூலம் உருவாகிய முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் சபீர் ஷா, இன்றைய பிரிவினைவாத அமைப்பான "ஜம்மு காஷ்மீர் ஜனநாயக விடுதலை முண்ணனியின்" தலைவர்.

1967ல் இந்த அமைப்பை சார்ந்த சில இளைஞர்கள் சி.ஆர்.பி.எப் பிரிவைச் சேர்ந்தவர்களை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதே ஆண்டில் "காஷ்மீர் தேசிய விடுதலை இயக்கம்" என்ற அமைப்பை முகமது மெக்பூல் என்பவர் தோற்றுவித்தார். இந்த அமைப்பின் நோக்கம் காஷ்மீரை கொரில்லா போர் மூலமாக விடுவிப்பது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களுக்காக சில முறை கைது செய்யப்பட்டனர்.

பின்னாளில் காஷ்மீரின் முக்கிய தீவிரவாத அமைப்பாக உருவாகிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி (JKLF), 1978ல் அமானுல்லா கான் என்பவரால் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

இது தவிர அல்-பத்தா, ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைப்பு என பல தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தோன்றிய வண்ணம் இருந்தன.

இவையெல்லாம் காஷ்மீரில் சுயமாக, பாக்கிஸ்தான் சார்பு இல்லாமால் காஷ்மீரின் விடுதலை என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு காஷ்மீர் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள்.

1982ல் ஷேக் அப்துல்லாவின் மறைவுக்கு பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரானார். அவர் முதல்வர் ஆனார், பிறகு இந்திரா காந்தி அவரை டிஸ்மிஸ் செய்தார். வழக்கம் போல பலக் குழப்பங்கள் காஷ்மீரில் அரங்கேறின.

1987 தேர்தலில் பரூக் அப்துல்லா ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்த தேர்தல் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தோன்ற வழிவகுத்தது.

இந்த தேர்தலில் காஷ்மீரின் பல அமைப்புகள் ஒன்றினைந்து "முஸ்லீம் ஐக்கிய முண்ணனி - Muslim United Front - MUF", என்ற அமைப்பை தோற்றுவித்தனர். இது பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டது. பரூக் அப்துல்லா-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் (76 தொகுதிகள்) போட்டியிட்டது. MUF 43 தொகுதிகளில் போட்டியிட்டது.

காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த தேர்தலில் கலந்து கொண்டனர். அவர்கள் MUF ஐ ஆதரித்தனர். இந்த தேர்தலில் பல இடங்களில் MUF வெல்லும் என்று நம்பப்பட்டது.

ஆனால் வழக்கம் போல இந்த தேர்தலிலும் தில்லியில் இருந்து தேர்தல் முறைகேடுகள் அரங்கேறின. MUFன் தேர்தல் ஏஜெண்ட்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தல் முறையற்று நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையும் சரியாக நடக்க வில்லை.

MUF 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பரூக் அப்துல்லா வெற்றி பெற்று முதல்வரானார்.

பல இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க கூடிய MUF முறையற்ற தேர்தலால் தோல்வியடைந்ததை கண்ட காஷ்மீர் இளைஞர்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை இழந்தனர். ஆயுதம் ஏந்த தொடங்கினர். 1987 தேர்தலில் கலந்து கொண்டு போட்டியிட்ட பலர் பின்னர் தீவிரவாதிகளாக மாறினர்.

1987 தேர்தல் முறையாக நடந்திருந்தால் தீவிரவாதம் தோன்றியிருக்காது. ஆனால் தில்லியின் அதிகாரத்தை எதிர்க்கும் ஒரு அரசாங்கம் காஷ்மீரில் அமைந்திருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கும். ஆனால் இந்திய ஆதரவு அரசாங்கம் தான் காஷ்மீரில் அமைய வேண்டும், எதிர்கருத்துக்கள் இருக்ககூடாது என்ற மைய அரசின் எண்ணம் தான் காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய ஆட்சி மீது அவநம்பிக்கையை எதிர்படுத்தியது. காஷ்மீர் இளைஞர்களுக்கு இந்திய அதிகாரத்தின் மீது தோன்றிய இந்த அவநம்பிக்கை தான் காஷ்மீரில் தீவிரவாதம் ஏற்பட முக்கிய காரணம்.

தாத்தா நேரு பிள்ளையார் சுழி போட்ட பிரச்சனையை பேரன் ராஜீவ் காந்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உதவி விட்டார். ஒரு குடும்பம் காஷ்மீரிகளின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாகி விட்டது.

பல ஆண்டுகளாக காஷ்மீரில் என்ன செய்யலாம் என்று காத்திருந்த பாக்கிஸ்தான் இந்த வாய்ப்பை கைவிட விரும்பவில்லை. காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவத் தொடங்கியது. ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. பயிற்சி மையங்களை நடத்தியது. தீவிரவாதத்தை வளர்த்தது.

அதே நேரத்தில் JKLFன் கோஷமும் பாக்கிஸ்தானை எரிச்சல் படுத்தியது.
அவர்கள் கேட்டது ஒட்டுமொத்த விடுதலை. இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றிணைந்த காஷ்மீரை உருவாக்கி ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவது. இதனை பாக்கிஸ்தான் விரும்பவில்லை. காஷ்மீர் தன்னுடன் இணைய வேண்டும் என்பது தான் பாக்கிஸ்தானின் எண்ணம்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முண்ணனி - JKLF, காஷ்மீர் இளைஞர்களிடம் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த சூழலில், காஷ்மீரின் சுதந்திர கோஷம் வலுப்பெற்றிருந்த நிலையில் ஹிஸ்புல் முகாஜீதீன் Hizbul Mujahideen என்ற அமைப்பை JKLFக்கு போட்டியாக பாக்கிஸ்தான் காஷ்மீரில் களம் இறக்கியது.
மதச்சார்பின்மையையும் காஷ்மீரின் விடுதலையையும் வலியுறுத்தி போராட தொடங்கிய JKLF ஒரம்கட்டப்பட்டு ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றை சேர்ந்த மதவெறி கும்பல்கள் காஷ்மீர் போராட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டன. ஹிந்துக்களுடன் ஒற்றுமையாக இருக்க விரும்பிய காஷ்மீரிகளுக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதத்தை இவர்கள் வலியுறுத்த தொடங்கினர். மதரீதியாக ஹிந்து, சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்களையும் நடத்தி மதநல்லிணக்கத்தை குலைத்தனர்.

Sufism என்ற மென்மையான முஸ்லீம் வழி வந்த காஷ்மீர் மக்கள் இன்று தலிபான் போன்ற முரட்டுதனமான முஸ்லீம் பயங்கரவாத பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். காஷ்மீரிகளின் விடுதலையை ஆதரிப்பதாக கூறி அந்த போராட்டத்தின் முகத்தை பாக்கிஸ்தான் சிதைத்து விட்டது.

உண்மையான காஷ்மீரிகள் தங்கள் விடுதலையையும் அல்லது குறைந்தபட்சம் நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்த்து இருக்க, காஷ்மீர் பிர்ச்சனை முஸ்லீம் பயங்கரவாதமாக, ஜிகாத் என்ற பெயரில் உருமாற்றப் பட்டு விட்டது.


இன்று காஷ்மீரிகள் நினைத்தால் கூட தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்க முடியாதவாறு அவர்களது கலாச்சாரமும், மத நல்லிணக்கமும் சீர்குலைக்கப்பட்டு விட்டது.

Leia Mais…