வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Wednesday, March 25, 2009

தமிழக தேர்தல் கூட்டணி கணக்குகள், வியூகங்கள்

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. கூட்டணிகளில் எத்தனை இடங்கள், எந்த தொகுதிகள் என்பதில் இருக்கும் அக்கறையும், மந்திரிசபையில் போராடி சம்பாதிக்க கூடிய துறைகளை பெறுவதில் இருக்கும் கரிசனமும் தமிழக அரசியல்வாதிகளுக்கு மக்களின் பிரச்சனைகளுக்காகவோ, ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் மக்களின் நிலைக்காகவோ ஏற்படுவதில்லை. தமிழர்களின் போராட்டங்களை முன்னெடுப்பதாக காட்டிக் கொண்ட கருணாநிதி, ராமதாஸ் ஆகிய இருவரின் லட்சணமும் தெளிவாகவே சமீபகாலங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. சோனியாவை மிரட்டி தனக்கு தேவைப்பட்ட இலாக்காக்களை பெற்ற தமிழின தலைவர் தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் ராஜனாமா நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார். கருணாநிதி ஒரு புறம் என்றால், கருணாநிதியின் தமிழின அரசியலை தன் கையில் எடுத்துக் கொள்ள முனையும் ராமதாஸ், தமிழின அழிப்பை செய்து வரும் காங்கிரஸ் கட்சியிடம் இடங்களுக்காக பேரம் நடத்திக் கொண்டிருந்தார். மற்றொரு தமிழின எதிரியான ஜெயலலிதாவிடம் தற்பொழுது உறவாடுகிறார். வைகோ குறித்து எதுவும் பேச தேவையில்லை என நினைக்கிறேன். கருணாநிதியை எதிர்க்க அவருக்கு ஜெயலலிதாவிடம் இருப்பதை தவிர வேறு வழி இல்லை. ராமதாஸ், வைகோ போன்ற சந்தர்ப்பவாதிகளை நம்பி ஈழத்தமிழர் போராட்டத்தில் இறங்கிய திருமாவின் நிலை தான் பரிதாபகரமாக இருந்தது. காங்கிரஸ் விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்ற வலியூறுத்திக் கொண்டிருக்க, வடமாவட்டங்களில் திருமாவின் செல்வாக்கினை பயன்படுத்திக் கொள்ள கருணாநிதி திருமாவை தன்னிடம் தக்கவைத்துக் கொண்டார்.

இந்த தேர்தலில் நீண்டு கொண்டே இருந்த பாமகவின் பேரங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கூட்டணியா, அந்தக் கூட்டணியா என பாமக பேரங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் இறுதியாக எந்தக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கிறதோ அந்தக் கூட்டணிக்கே தாவும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தற்பொழுது திமுக-காங்கிரஸ் கூட்டணியைக் காட்டிலும் அதிமுக கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில், பாமக எப்படியும் அதிமுகவிற்கு தான் செல்லும் என்பது ஆரம்பம் முதலே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த முறை அன்புமணி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக நின்றதால் பாமக அதிமுக பக்கம் சென்றடைய காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது.

தற்போதைய அரசியல் கூட்டணியை கவனித்தால் 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். 1996ம் ஆண்டு தேர்தலில் கடுமையான தோல்வியை எதிர்கொண்ட ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதிமுகவின் பலமான வாக்கு வங்கி ஜெயலலிதாவின் சர்வாதிகார நடவடிக்கைகளால் சரியத்தொடங்கி இருந்தது. எம்.ஜி.ஆர் என்ற கவர்ச்சியான தலைவரால் எழுப்பபட்ட அந்த மாபெரும் வாக்கு வங்கியை ஜெயலலிதா தன்னுடைய நடவடிக்கைகளால் இழந்தார். இதனால் திமுக - தமிழ் மாநில காங்கிரஸ் அப்பொழுது பலமான கூட்டணியாக இருந்தது. 1996ம் ஆண்டில் கடுமையாக தோல்வி அடைந்த ஜெயலலிதாவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மைய அரசு கவிழ்ந்து தேர்தல் வந்தது ஒரு அருமையான வாய்ப்பாக அமைந்தது.
மிகவும் பலமாக இருந்த திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நினைத்தார். தமிழகத்தின் வடமாவட்டங்களில் பலமாக இருந்த பாமகவும், தென்மாவட்டங்களில் பலமாக இருக்கும் மதிமுகவும் கொண்டு வரப்பட்டால் தன்னுடைய இழந்த வாக்கு வங்கியை சரிக்கட்டி விடலாம் என்பது ஜெயலலிதாவின் கணக்கு.

சிறிய கட்சிகளான பாமகவும், மதிமுகவும் தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கிகள் மூலம் ”தனித்து நின்று” பெரிய அளவுக்கு வெற்றிகளை பெற முடியாது, கூட்டணி மூலமே வெற்றி பெற முடியும் என்ற உண்மையை உணரத்தொடங்கியிருந்த நேரம் அது. பாமக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக தனித்து நின்று தோல்வியை எதிர்கொண்டு இருந்தன. இப்படி ஜெயலலிதா, பாமக, மதிமுக ஆகியவற்றின் தனிப்பட்ட நலன்களுக்காவும், Survivalலுக்காகவும் அமைந்தது தான் 1998ம் ஆண்டு கூட்டணி. தேசிய கட்சியான பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் எந்த பலமும் இல்லை. ஆனால் பிரச்சாரத்திற்கு உதவும் என்பதால் பாஜகவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டார்.

திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளை மையப்படுத்தியே சென்று கொண்டிருந்த தமிழக அரசியலில் சிறிய கட்சிகளின் முக்கியத்துவத்தை அதிகரித்து கூட்டணி அரசியலை கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான்.

அதன் விளைவு ?

பல சிறிய கட்சிகளின் முக்கியத்துவம் தொடர்ச்சியாக அதிகரித்து தற்பொழுது தமிழக அரசியல் முன் எப்பொழுதுதையும் விட குழம்பிய குட்டையாக காட்சி அளிக்கிறது.
கொள்கைகளோ, மக்களின் நலமோ, தமிழர்களின் வாழ்வுரிமையோ இன்றைக்கு முக்கியம் இல்லை. எத்தனை இடங்கள், எத்தனை இடங்களில் வெற்றி பெற முடியும், வெற்றி பெற்றால் மைய அரசில் எந்த துறை பெறலாம், எந்த துறையை பெற்றால் அதிகம் சம்பாதிக்கலாம், அடுத்து எந்த மகனை, மகளை, பேரனை, பேத்தியை, கொள்ளுப்பேரனை, கொள்ளுப்பேத்தியை அரசியலுக்கு கொண்டு வரலாம் என்பதில் தான் அரசியல் கட்சி தலைவர்களின் கவனம் உள்ளது. இந்திய அரசியல் என்பது நவீன மன்னராட்சி காலமாக மாறி விட்டது.

மக்களை உலகமயமாக்கிய பொருளாதாரம் நோக்கி திருப்புவதன் மூலம் தங்களுடைய பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதும், மக்களுக்கு ஒரு போலியான இந்திய பொருளாதார வளர்ச்சியை சுட்டிக் காட்டி மக்களை அப்படியே ஆட்டு மந்தைகளாக வைத்திருப்பதும் தான் அரசியல்வாதிகளின் முக்கியமான வேலைத்திட்டம். இதில் இந்தக் கட்சி தலைவர், அந்தக் கட்சி தலைவர் என்ற பேதங்கள் இல்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் கடைக்கோடி தொண்டனும், ஓட்டளிக்கும் கடைக்கோடி தமிழனும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. மைய அரசில் அமைச்சராக இருந்து சம்பாதித்த பணம் தண்ணீராக செலவழிக்கப்படும். யார் அதிகம் பணத்தை வாரி இறைக்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி என்பது தான் இன்றைய தமிழக தேர்தல் அரசியலாக உள்ளது.

இங்கே மக்களின் பிரச்சனைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சென்ற தேர்தலில் இலவச கலர் டிவி முக்கிய தேர்தல் பிரச்சாரம் என்றால் இந்த தேர்தலில் எந்த பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். (வெற்றி பெற்ற பிறகு ஒரு சில இடங்களில் கொடுக்கப்பட்ட இலவச டிவி இப்பொழுது வேகமாக பட்டுவாடா செய்யப்படும் சாத்தியம் உள்ளது). இவ்வாறாக தமிழக மக்கள் தொடர்ச்சியாக ஆட்டுமந்தைகளாக ஆக்கப்பட்டு விட்டார்கள். தமிழக மக்களை அவர்களுடைய முக்கிய வாழ்வியல் பிரச்சனைகளில் இருந்து மிக எளிதாக திசை திருப்பி விட முடியும். 2006ம் ஆண்டு தேர்தலில் சமமாக இருந்த தேர்தல் களத்தை இலவச கலர் டிவி திமுக கூட்டணி பக்கம் லேசாக சாய்த்தது. அதுவே திமுக கூட்டணி அதிக இடங்களை பெற போதுமானதாக இருந்தது. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் தமிழக மக்களின் பரிதாப நிலையையே நமக்கு தெளிவுபடுத்துகின்றன.

இந்த சமயத்தில் மிகவும் பிரிதாபத்திற்குரியவர்கள் யார் ? மக்கள் அல்ல, அரசியல்வாதிகள் நிச்சயமாக அல்ல.

மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் தமிழனின் நிலை குறித்தும், இந்த சமூகத்தை குறித்தும் கவலைப்படுபவர்களும், சினிமா பக்கங்களை படிக்காமல் இந்த வறட்சியான கட்டுரையை கூட பொறுமையுடன் வாசித்து கொண்டிருக்கும் நீங்களும், வேலைவெட்டி இல்லாமல் இதனை எழுதிக்கொண்டிருக்கும் நானும் தான்.

************

தற்போதைய அரசியல் கூட்டணியை 1998ம் ஆண்டு இருந்த தேர்தல் கூட்டணியுடன் ஒப்பிட முடியும். திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் என்பது தான் 1998ம் ஆண்டு இருந்த கூட்டணி. தற்பொழுது அது திமுக, காங்கிரஸ். கூடுதலாக திருமா தற்பொழுது கூட்டணியில் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் அப்பொழுது பாமக, மதிமுக, பாஜக இருந்தது. தற்பொழுது பாஜகவிற்கு பதிலாக இடதுசாரிகள் இருக்கின்றனர்.

1998ல் கூட்டணியில் இருந்த கட்சிகளின் அடிப்படையில் தற்போதைய சூழ்நிலை ஒரே மாதிரியாக இருந்தாலும், கட்சிகளின் பலம் இரண்டு தரப்பிலும் சரிந்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே தங்களுடைய பாரம்பரிய பலத்தை இழந்து இருக்கின்றன. சிறிய கட்சிகளான பாமக, மதிமுக போன்றவையும் 1998ல் இருந்த தங்களுடைய பலத்தில் இருந்து கணிசமான பலத்தை இழந்து இருக்கின்றன. இதில் மற்றொரு புதிய வியூகமாக விஜயகாந்த் உருவாகி இருக்கிறார்.

திமுக கூட்டணி

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) இந்த தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கும். தனிப்பட்ட பலத்தில் திமுகவை விட அதிமுக பலமான கட்சி என்பதை மறுக்க முடியாது. திமுக வடமாவட்டங்களில் மிகவும் பலமான கட்சி என்றால் அதிமுக தென்மாவட்டங்களில் பலமான கட்சி. ஆனால் கடந்த சில வருடங்களில் மு.க.அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் தென்மாவட்டங்களில் திமுக முன்பை விட பலமாக உள்ளதாக கருதப்படுகிறது. மு.க.அழகிரியை திமுகவிற்கு பலம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். பலவீனம் என கூறுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வடமாவட்டங்களைச் சேர்ந்த மிகவும் பலமான தலைவர்களான பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்களால் வடமாவட்டங்களில் பலமாக இருந்த திமுக தென்மாவட்டங்களில் சற்று தடுமாறியது உண்மையே. மதிமுகவின் பிளவும் திமுகவை பலவீனமடைய செய்தது. ஆனால் கடந்த சில வருடங்களில் அழகிரி திமுகவை பலப்படுத்தியிருக்கிறார் என்ற கருத்து பரவலாக உண்டு. இதனை இந்த தேர்தல் முடிவுகளே நமக்கு தெளிவுபடுத்த முடியும்.

இந்த தேர்தலில் வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும் பலமாகவே உள்ளது. பாமக அதிமுக பக்கம் சாய்ந்தது இழப்பு தான். என்றாலும் வடமாவட்டங்கள் எப்பொழுதுமே திமுகவின் பலமான பகுதி தான். அதனுடன் திருமாவின் பலமும் சேருகிறது. திருமாவிற்கு சிதம்பரம், கடலூர், பெரம்பலூர், விழுப்புரம் போன்ற பகுதிகளில் நல்ல பலம் உள்ளது. திமுகவின் பலத்துடன், திருமாவின் பலமும் சேரும் பொழுது வடமாவட்டங்களில் திமுகவிற்கு எதிராக இருக்கின்ற anti-incumbency factorயை கடந்தும் அதிமுக-பாமக கூட்டணி போராட வேண்டியிருக்கும். தவிரவும் விஜயகாந்த் கடந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை வடமாவட்டங்களில் நிருபித்து இருக்கிறார். திமுகவிற்கு எதிராக இருக்கும் ஓட்டுக்களை விஜயகாந்த் பிரிக்கும் பொழுது அதிமுக-பாமக கூட்டணி வெற்றி பெறுவது சுலபமாக இருக்காது.

காங்கிரசுக்கு ஒட்டு போடுபவர்கள் இருக்கிறார்கள். தொண்டர்கள் இல்லை என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. அவ்வாறு கூறியே 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்டது. ஆனால் இன்னமும் காங்கிரஸ் தனக்கு ஆதரவு இருக்கிறது என்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்ட தலைவர்களின் செல்வாக்கு காரணமாக ஒரு சில இடங்களில் காங்கிரசுக்கு பலம் இருந்தாலும் அதன் பலம் மாநிலம் முழுவதும் பரவலானது அல்ல. அது எந்தளவுக்கு திமுகவிற்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குரியது. இந்த தேர்தலில் அது தெளிவாகி விடும்.

அதிமுக கூட்டணி

அதிமுக பெரும்பாலும் தென்மாவட்டங்களிலும், மேற்கு மாவட்டங்களிலும் பலமான கட்சி. வடமாவட்டங்களில் திமுகவுடன் ஒப்பிடும் பொழுது பலவீனமான கட்சி. தென்மாவட்டங்களில் ஒரு காலத்தில் மதிமுகவிற்கு நல்ல பலம் இருந்தது. மதிமுகவின் பலம் திமுகவை தென்மாவட்டங்களில் பலவீனப்படுத்தி இருந்தது. ஆனால் சமீபகாலங்களில் மதிமுகவின் பலம் பெரிய அளவில் சரிந்து விட்டது. மு.க.அழகிரியால் தென்மாவட்டங்களில் திமுகவின் பலம் அதிகரித்து இருக்கிறது. இந் நிலையில் 1998ம் ஆண்டு இருந்ததை போல அதிமுக-மதிமுக தென்மாவட்டங்களில் பலமான கூட்டணியாக கூற முடியாது.

வடமாவட்டங்களைப் பொறுத்தவரை அதிமுக சற்று பலவீனமான கட்சி. இன்னும் சொல்லப்போனால் சில இடங்களில் (சிதம்பரம் போன்ற பகுதிகள்) திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கு அடுத்த நான்காவது இடம் தான் அதிமுகவிற்கு என சொல்ல முடியும். ஆனால் பாமகவுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறுகிறது.

பாமகவின் பலம் வடமாவட்டங்களே. வடமாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு நல்ல பலம் உண்டு. அது தேர்தல் கூட்டணியுடன் சேரும் பொழுது அந்தக் கூட்டணி வடமாவட்டங்களில் பலம் பெறும் என்பது தேர்தல் கணக்கு. வன்னியர் வாக்கு வங்கி என்பது திமுக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடையே தான் உள்ளது. திமுகவின் வாக்கு வங்கியும் வடமாவட்டங்களில் வன்னியர்களை பெருமளவில் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பாமக வாக்கு வங்கியின் பெரும் பகுதி திமுகவில் இருந்து பிரிந்து வந்ததே ஆகும். இந்த வாக்கு வங்கி மறுபடியும் திமுக நோக்கி செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எப்பொழுதும் பூசல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாமக தன் வாக்கு வங்கியை சாதி அடிப்படையில் கொண்டு சென்று விடுமோ என்ற கவலை திமுகவிற்கு உண்டு. பெரிய கட்சியான திமுக தன்னை அழித்து விடுமோ என்ற அச்சம் பாமகவிற்கு உண்டு. இதனால் இரண்டு கட்சிகளும் தலைமை மட்டத்தில் தங்களுக்குள் தாக்கி கொள்வதன் மூலம் இரு கட்சியின் தொண்டர்கள் இடையே ஒரு சுவரினை எழுப்பி தங்களை தக்கவைத்துக் கொள்ள முனைகின்றனர். ராமதாஸ் அடிக்கடி கருணாநிதியை தாக்குவது இதன் அடிப்படையில் தான். இதனால் ஏற்பட்ட பலன் என்னவென்றால் தற்பொழுது இரண்டு கட்சி தொண்டர்களும் முட்டிக் கொண்டிருக்கின்றனர். ராமதாசிற்கு அது தான் தேவை.

பாமகவின் தற்போதைய பலம் 1996/1998ல் அது பெற்ற வாக்கு வங்கி கொண்டே கணிக்கப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு அதன் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. குறிப்பாக 2006 சட்டமன்ற தேர்தலில் பாமக தடுமாறியது. நான் மேலே கூறியுள்ளது போல பாமகவின் சரிவு என்பது திமுகவிற்கு பலம். அதனைக் கொண்டு பார்க்கும் பொழுது கூட்டணி அளவில் அதிமுக-பாமக என்பது திமுக-விசி-காங்கிரசுடன் ஒப்பிடக்கூடியதாகவே இருக்கும் என நான் நம்புகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரசுக்கு எதிராக வேலை செய்தால் அதிமுகவிற்கு அது சாதகமாகலாம்.

விஜயகாந்த்

விஜயகாந்த் திமுக, அதிமுகவிற்கு அடுத்து தமிழகம் முழுவதும் பரவலான வாக்கு பெறக்கூடியவராக வளர்ந்து வருகிறார். விஜயகாந்த் பேசுவது நகைச்சுவையான உளறலாக இருந்தாலும் அவரது அரசியல் பயணம் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டுகிறது. அவரது நகர்வுகள் ஒரு நீண்ட கால இலக்கை நோக்கி இருப்பது போன்றே தோன்றுகிறது. இந்த சரியான திட்டமிடல் மற்றும் வியூகங்கள் காரணமாகவே அவர் கடந்த தேர்தலில் 8% வாக்குகளை பெற்றார். அவரது Masterstroke என்றால் அது விருத்தாசலத்தில் போட்டியிட்டு வென்றதே. தற்போதைய தேர்தலிலும் அவரது அணுகுமுறை சரியான திசையிலேயே உள்ளது.

அதே நேரத்தில் அவர் கடந்த தேர்தலில் பெற்ற 8% வாக்குகளை அவரது வாக்கு வங்கியாக கருத முடியாது. விஜயகாந்த் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் இந்த முறை உயர்வதற்கும், சரிவதற்கும் சமமான வாய்ப்புகள் உண்டு. எனவே அவர் பெற்ற 8% என்பதே உறுதியான வாக்கு வங்கியாக முடியாது. அது 12% உயரவும் கூடும். 5%மாக குறையவும் கூடும்.

வாக்கு வங்கி என்பது தலைவர், கட்சி, சாதி இவை சார்ந்த விசுவாசத்தின் அடிப்படையில் உருவாகுவதே ஆகும். கருணாநிதியின் வசீகரம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கவர்ச்சி போன்றவை காரணமாக இருக்கும் வாக்கு வங்கி அசைக்க முடியாமல் இருந்து வந்திருக்கிறது. என்னுடைய ஓட்டு எப்பொழுதும் உதயசூரியனுக்கு தான், இரட்டை இலைக்கு தான் என கூறுபவர்கள் பல காலமாக இருக்கிறார்கள். அந்தளவுக்கு ஒரு தலைமை, கட்சியை சார்ந்த விசுவாசமான வாக்கு வங்கி தான் திமுக, அதிமுகவினுடையது. அது போல பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை சாதி சார்ந்தவை. அதுவும் ஒரு விசுவாசமான வாக்கு வங்கியே.

ஆனால் விஜயகாந்தின் வாக்குகள் திசை மாறக்கூடியது. திமுக, அதிமுகவிற்க்கு பதிலாக மற்றொரு கட்சி வேண்டும் என நினைப்பவர்களின் வாக்குகளே விஜயகாந்த்திற்கு விழுகின்றன. இவை தேர்தல் களநிலையை பொறுத்தது. தேர்தல் களநிலை மாறும் பொழுது விஜயகாந்த் பெறும் வாக்கு விகிதங்களும் மாறும். உதாரணமாக ஒரு பெரிய அலை அடித்தால் விஜயகாந்த்திற்கு விழும் வாக்குகள் வேறு திசையில் போய் விடும். தவிரவும் மைய அரசுக்காக தேர்தல் நடக்கும் பொழுது விஜயகாந்த்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்கும் என்ற கேள்வியும் உண்டு. மாநில அரசியல் என்னும் பொழுது அது வேறு விதமான தாக்கத்தை விஜயகாந்த்திற்கு ஏற்படுத்தும். இதனால் தான் விஜயகாந்த் தேர்தலை புறக்கணிப்போம் என சில காலமாக பேசிக் கொண்டிருந்தார் என நான் நம்புகிறேன்.

விஜயகாந்த் எங்கிருந்து வாக்குகளை பெறுவார் என்பதையும் கவனிக்க வேண்டும். புதியதாக வாக்களிக்க வருபவர்களும், எந்தக் கட்சியையும் சாராதவர்களும் தான் விஜயகாந்திற்கு அதிகளவில் வாக்களிக்க போகிறவர்கள். கடந்த தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்கள் இம்முறையும் அவருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்வியும் உண்டு.

விஜயகாந்த எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பெறுவார் என்ற கேள்வியும் உண்டு.

பாரம்பரியமாக ஒரு கட்சிக்கு வாக்களித்து கொண்டிருக்கும் பெரும்பாலானோர் திடீரென்று ஒரு புதிய கட்சிக்கு வாக்களிப்பதில்லை. கவர்ச்சியின் காரணமாக சிலர் வாக்களிக்க கூடுமே தவிர பெரிய கட்சியின் வாக்குகள் விஜயகாந்த்திற்கு மாறாது. ஆனால் கூர்ந்து கவனிக்கும் பொழுது அதிமுக வாக்கு வங்கியை கவரக்கூடிய தன்மை விஜயகாந்த்திற்கு உண்டு. ஏனெனில் சினிமா கவர்ச்சியால் கட்டமைக்கப்பட்டதே அதிமுகவின் வாக்கு வங்கி. அதை விஜயகாந்த் பெறுவது சுலபம். மாறாக திமுகவின் வாக்கு வங்கியை பெறுவது அவ்வளவு சுலபமானது அல்ல. என்ன தான் ஈழப்பிரச்சனையை சார்ந்து திமுக விமர்சிக்கப்பட்டாலும் திராவிட அரசியல் என்னும் பொழுது பெரும்பாலானோர் திமுகவை நோக்கியே செல்கின்றனர். ஸ்டாலின், அழகிரி செயல்பாடுகள் எதிர்காலத்தில் அதனை மாற்றலாம். ஆனால் குறுகிய காலத்தில் திமுகவின் பலம் சரியப்போவதில்லை.


வேறு கட்சிகள்

வேறு பல உதிரிக் கட்சிகள் இருந்தாலும், இந்த தேர்தலில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொருவரும் இருக்கிறார். அவர் தான் சரத்குமார். தென்மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சி தொடங்கியிருக்கும் சரத்குமார் எந்தளவுக்கு நாடார் சமூக ஓட்டுக்களை பெறுவார் என்ற கேள்வியும் தற்பொழுது உள்ளது. சரத்குமார் இது வரையில் தன்னை ஒரு அரசியல் சக்தியாக நிருபிக்கவில்லை. சரத்குமார் நாடார் சமூகத்தை மையமாக வைத்து கட்சி தொடங்கும் முன்பே நாடார் சமூகம் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் நடந்திருக்கின்றன. தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் தலைமையில் ”சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்” என்ற அமைப்பு சரத்குமார் திமுகவில் இருந்த காலங்களிலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்ட திருநெல்வேலி மாநாட்டிற்கு நானும் சென்றிருக்கிறேன். இது நாடார் சமூகத்தை ஒன்று திரட்டி சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க செய்யும் ஒரு முயற்சி என நான் கருதினேன். ஆனால் ஏனோ சிவந்தி ஆதித்தன் அரசியலில் இறங்க வில்லை. ஆனால் அவரது குடும்பத்தை சேர்ந்த சரத்குமாரை இறக்கி விட்டிருக்கிறார். நாடார் சமூகம் மத்தியில் சிவந்தி ஆதித்தனுக்கு நல்ல மரியாதை உண்டு. எனவே ஒரு சில தொகுதிகளில் சரத்குமாரை உதாசீனப்படுத்தி விட முடியாது என்பதே என்னுடைய எண்ணம். ஆனால் மாநில அளவில் கூட்டணியின் வெற்றி பலத்தை நிர்ணயிக்கும் பலம் இவருக்கு இல்லை.


கூட்டணி அளவில் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஆளும்கட்சிக்கு எதிரான காரணிகள் (anti-incumbency factor) திமுகவிற்கு பலவீனமானதே. அதே நேரத்தில் அது மட்டுமே தேர்தலில் பெரிய வெற்றியை தற்பொழுது கொடுத்து விட முடியாது. இந்த தேர்தலில் இரு கட்சிகளின் வெற்றி தோல்விகளை முடிவு செய்யக்கூடியாக சக்தியாக விஜயகாந்த் இருப்பார் என தோன்றுகிறது. விஜயகாந்த அதிகளவில் ஓட்டுக்களைப் பிரித்தால் திமுக, அதிமுக கூட்டணி இரண்டும் சமமான இடங்களை பெற முடியும். விஜயகாந்த் அதிகமாக ஓட்டுக்களை பிரிக்காவிட்டால் அதிமுக வெற்றி பெறும்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பிரித்த 8% வாக்கு தான் தற்போதைய திமுக அரசை மைனாரிட்டி அரசாக்கியது.

விஜயகாந்த்தின் முந்தைய 8%, தற்பொழுது 12% என்ற அளவுக்கு உயர்ந்தால் திமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

8%, 5-6% என்றானால் அதிமுகவிற்கு அதிக இடங்கள் கிடைக்கும்

முழுமையான 40 யாருக்கும் கிடைக்காது

மக்களுக்கு ?
சில்லறை காசும், பட்டை நாமமும் கிடைக்கும்.

Leia Mais…
Monday, March 23, 2009

பேப்பர் வாங்கலையோ பேப்பர்

இன்று ஊடகங்கள் மிகப் பெரிய வளர்ச்சி பெற்றிருக்கின்றன. உலகத்தின் எந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு நடந்தால் கூட அது பலரையும் சென்றடையும் வழிகளை இன்று ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. விஜய் கத்திய காட்டு கத்தல் அமெரிக்கா வரை யூடிப் மூலமாக எதிரொலிக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களின் வருகைக்கு பிறகு ஊடகங்களின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.

ஆனால் 1990களுக்கு முன்பாக தொலைக்காட்சி ஊடகங்கள் இல்லாமல் வெறும் பத்திரிக்கைகள், வார இதழ்கள், மாத இதழ்கள் போன்றவை மூலம் தான் செய்திகள் மக்களைச் சென்றடையும். நாளிதழ்களில் ஆரம்பகாலங்களில் தினத்தந்தியின் இடம் கிராமப்புறங்களிலும் பெருவாரியான இடங்களிலும் அசைக்க முடியாமல் இருந்தது. தினமணியின் சந்தா கூட தினமலருக்கு ஆரம்பத்தில் இருந்ததில்லை. ஆனால் தினமலர் தன்னுடைய திறமையான மேலாண்மையால் படிப்படியாக கிராமங்களில் நுழைந்து தினத்தந்தியின் இடத்தை பிடிக்க தொடங்கியது. தினமலர், தினத்தந்தி, தினகரன், ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற மிகப் பெரிய ஊடக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பின் எத்தனையோ தனி நபர்களின் உழைப்பு இருக்கிறது. வெளியே அதிகம் தெரியாமல் இருக்கும் எத்தனையோ சாமானிய தனி மனிதர்களின் உழைப்பு தான் இன்றைக்கு இந்த ஊடகங்களை வளர்த்து இருக்கிறது.

எழுத்து ஆர்வம் என்பது ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளரும் சூழ்நிலையை பொறுத்தே அமைகிறது. வலைப்பதிவுகளில் இன்றைக்கு எழுதி கொண்டிருக்கும் பலருக்கும் பல்வேறு வழிகளில் எழுத்து ஆர்வம் ஏற்பட்டிருக்கும். எனக்கு பத்திரிக்கை விற்பனை அடிப்படையில் தான் எழுத்து ஆர்வம் ஏற்பட்டது. சிறிய வயதில்
இருந்தே பத்திரிக்கைகளின் வாசனையிலேயே வளர்ந்தேன் என சொல்ல முடியும். அதற்கு காரணம் என்னுடைய அப்பா ஒரு பத்திரிக்கை ஏஜெண்ட். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பத்திரிக்கைகளை நடத்திக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அந்தப் பணியின் சிரமம் காரணமாக அதனை நிறுத்தினார்.

இன்றைக்கு எப்படியோ தெரியாது. ஆனால் அப்பொழுதெல்லாம் ஒவ்வொரு பிரதியையும் மிகவும் கடினப்பட்டே விற்க வேண்டியிருக்கும். சந்தா அவ்வளவு எளிதில் கிடைத்து விடும். டீக்கடை, சலூன் போன்ற பல இடங்களில் ஓசிப் பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதிகம் இருக்கும் தமிழ்நாட்டு கிராமப்புற பகுதிகளில் பத்திரிக்கைகளை விற்பது அவ்வளவு எளிது அல்ல. சிறு, பெரு நகரங்களில் பத்திரிக்கைகள் விற்பது கிராமப்புறங்களுடன் ஒப்பிடும் பொழுது கொஞ்சம் சுலபம். எங்களைப் போன்ற நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத இரண்டாங்கெட்டான் இடம் என்றால் சிக்கல் தான். நெய்வேலியின் புறநகர்ப்பகுதியான மந்தாரக்குப்பம், தாண்டவன் குப்பம் போன்றவை தான் எங்கள் ஏரியா. இது நகரமும் இல்லை. கிராமமும் இல்லை என்ற சிக்கலான பகுதிகள். நெய்வேலி டவுன்ஷிப் என்று சொல்லப்படுகிற நெய்வேலி நகரத்தில் பத்திரிக்கைகள் விற்பது கொஞ்சம் சுலபம். அங்கும் சிக்கலகள் இருக்கவே செய்கின்றன.

பத்திரிக்கை விற்பனை என்பது கடினமான பணி. அதிகாலையிலேயே எழுந்து பத்திரிக்கை வேன்களில் இருந்து வந்திருக்கும் பத்திரிக்கை கட்டுகளை பிரிக்க வேண்டும். அனைத்து பத்திரிக்கைகளும் ஒரே நேரத்தில் வந்து விடாது. சில பத்திரிக்கைகள் 4 மணிக்கே வரும். சில பத்திரிக்கைகள் வருவதற்கு 5 மணி ஆகலாம். ஹிந்து, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை சென்னையில் இருந்து வரும். தினத்தந்தி கடலூரில் இருந்தும் தினமலர் புதுவையில் இருந்தும் வரும். இப்படி அனைத்து பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தவுடன் அதனை பகுதி வரியாக சந்தாக்களின் அடிப்படையில் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு ஏரியாவுக்கும் பேப்பர் போடுவதற்கு என்று ஒருவர் இருப்பார். பேப்பர் போடுவது பெரும்பாலும் ஒரு பகுதி நேர வேலை தான். பேப்பர் போட்டு முடித்தவுடன் அவர்களின் முழு நேர வேலைக்கு செல்ல வேண்டும். பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இந்த வேலையை செய்வார்கள். இந்த பத்திரிக்கை விநியோகத்தின் முக்கிய குறிக்கோள் அதிகாலையில் சீக்கிரமே பத்திரிக்கைகளை விநியோகித்து விட வேண்டும். அப்பொழுது தான் அது விற்பனையை அதிகரிக்கும். பத்திரிக்கை விநியோகம் தாமதமானால் பத்திரிக்கை சந்தாக்களை இழக்க நேரிடலாம்.

பத்திரிக்கை வாங்குபவர்களுக்கு அதிகாலையிலேயே பத்திரிக்கை வேண்டும். காலையில் எழுந்து காப்பியுடன் பத்திரிக்கை வாசித்தால் தான் பலருக்கு காலைப் பொழுது உகந்ததாக இருக்கும். எனவே காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் பத்திரிக்கை இல்லாவிட்டால் எங்கள் கடைக்கு வந்து கத்தி விட்டு செல்லும் பலரை பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் தாமதம் தவிர்க்க முடியாதது. பத்திரிக்கை அலுவலகங்களில் இருந்து வரும் பத்திரிக்கை வேன் தாமதமானால் பத்திரிக்கைகளை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும். மழைக்காலங்களில் வேகமாக பத்திரிக்கைகளை விநியோகம் செய்ய முடியாது. இதனாலும் விநியோகம் தாமதமாகும்.

அது போல பத்திரிக்கை விநியோகம் செய்வதற்கும் அவ்வளவு எளிதில் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். விநியோகிக்கும் நபரை பொறுத்தே பத்திரிக்கை விற்பது அதிகரிப்பதும், குறைவதும் நடக்கும். விநியோகிப்பவர் ஒவ்வொரு நாளும் விநியோகிப்பதை தாமதப்படுத்தினால், காலையில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் பத்திரிக்கைகளை நிறுத்தி விடுவார்கள். சரியான நேரத்தில் பத்திரிக்கை விநியோகம் செய்யப்பட்டால் வியபாரம் தொடர்ச்சியாக இருக்கும். பத்திரிக்கை விநியோகிப்பவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் விடுப்பு எடுத்து விடுவார்கள். அப்படியான சூழ்நிலையில் அனைத்துமே தாமதமாகும்.

நகர்ப்புறங்களில் ஒரு பத்திரிக்கையை நாம் வாங்க வேண்டும் என்றால் டெபாசிட் தொகை கொடுக்க வேண்டும். ஏஜெண்டும் பத்திரிக்கை அலுவலத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை அனுப்புவார்கள். ஆனால் எங்களைப் போன்ற ஏஜெண்ட்களுக்கு அந்த வசதி எல்லாம் கிடையாது. டெபாசிட் செய்தால் தான் பத்திரிக்கை என்பது சமீபகாலங்களில் ஏற்பட்ட மனநிலை தான். ஆரம்பகாலங்களில் அதனை கட்டாயமாக்க முடியாது. சிலர் கொடுப்பார்கள். பலர் கொடுக்க மாட்டார்கள். எனவே பத்தி்ரிக்கையை போட்டு விட்டு தான் பணம் வாங்க வேண்டும். சில நேரங்களில் அது வருவதற்கும் தாமதம் ஆகும். தாமதமாகிறது என பத்திரிக்கையை நிறுத்தி விட முடியாது. அப்படியே விட்டு விடுவார்கள். பத்திரிக்கை போட்டு கொண்டே அவர்களிடம் பழைய பாக்கியையும் நெருக்கி பெற வேண்டும். அதனால் பத்திரிக்கை அலுவலகத்திற்கு பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை நேரும் பொழுது நம் கை காசோ, கடனோ வாங்கி கட்ட வேண்டும். பிறகு முழுமையாக வசூலானால் திருப்பி செலுத்த வேண்டும். சில நேரங்களில் 15ம் தேதி வரை கூட போட்ட பத்திரிக்கைகளுக்கு காசு முழுமையாக கிடைக்காது. பத்திரிக்கைகளை மாதம் முழுக்க வாங்கி விட்டு வீட்டை காலி செய்து விட்டு போனவர்களும் உண்டு. அந்த நஷ்டத்தையெல்லாம் ஏஜெண்ட் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் பரபரப்பான செய்திகள் ஏதேனும் இருந்தால் பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து கேட்காமலேயே கூடுதல் பிரதிகள் அனுப்பி விடுவார்கள். அதையெல்லாம் விற்க வேண்டும். பெரும்பாலும் கடைகளில் கூடுதல் பிரதிகள் போட்டு விற்க முயற்சிப்போம். செய்திகளின் பரபரப்பினை பொறுத்து அனைத்து பிரதிகளும் விற்று, இன்னும் பல பிரதிகள் கூட தேவைப்படும். சில நேரங்களில் கூடுதல் பிரதிகள் விற்காது. இதனை திருப்பி அனுப்ப வேண்டும். விற்காத பிரநிதிகளுக்கு ஏஜெண்ட்களும் கொஞ்சம் பொறுப்பேற்க வேண்டும். எனவே எப்படியாயினும் விற்காவிட்டால் கொஞ்சம் நஷ்டம் தான்.

இப்படி எல்லாம் கடினப்பட்டு செய்யும் பத்திரிக்கை தொழிலால் பெரிய வருமானம் ஒன்றும் கிடைக்காது. நகர்ப்புற நியூஸ் ஏஜண்ட்கள் வேண்டுமானால் பெரிய அளவில் லாபம் பார்க்கலாம். ஆனால் கிராமப்புறங்களில், எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளில் உழைத்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியமாக கூட பத்திரிக்கை வருமானத்தை கருத முடியாது என்பது தான் உண்மையான நிலை.

இவ்வளவு கடினப்படும் சூழ்நிலையிலும் அந்த விற்பனைக்கு போட்டி உண்டு என்பதும், தொடர்ச்சியாக நமது விற்பனையை உயர்த்தும் முயற்சிகளை மேற்கொள்ளா விட்டால் ஏஜென்சி பறிபோய் விடும் என்பதும் அடுத்த பிரச்சனை. சர்குலேஜன் உயர்த்த திட்டங்களை வகுக்க பத்திரிக்கை அலுவலத்தில் இருந்து நேரடியாக பிரதிநிகள் வருவார்கள். மறைமுகமாக நமக்கு தெரியாமல் ஆய்வு செய்து, இந்த வாய்ப்புகளை நீங்கள் ஏன் பயன்படுத்தவில்லை ? பத்திரிக்கை விநியோகம் ஏன் தாமதம் ஆகிறது என்று நெருக்குதல் தருவார்கள். குறிப்பாக தினத்தந்தி போன்ற நிர்வாகங்கள் ஏஜெண்ட்களை நெருக்குதல், ஏஜென்சியை எடுத்து விடுவேன் போன்ற மிரட்டல்கள் மூலமே பத்திரிக்கை விற்பனை அதிகரிக்க முடி்யும் என்ற மேலாண்மை தத்துவம் உடையவர்கள். மாறாக தினமலர், ஏஜெண்ட்களை அரவணைத்து சென்று விற்பனையை அதிகரிக்கும் மேலாண்மையை கொண்டவர்கள். அதனால் தான் தினமலர் தினத்தந்தியின் இடத்தை வேகமாக பிடித்தது. தினத்தந்தி வைத்திருப்பவர்கள் தினமலர் ஏஜென்சியை எடுக்க கூடாது. ஆனால் ஹிந்து போன்ற போட்டியில்லாத பத்திரிக்கைகளை நடத்தலாம். தினமலரில் அப்படி எதுவும் விதி ஆரம்பகாலங்களில் இருந்ததில்லை. இப்பொழுது கொண்டு வந்திருக்க வாய்ப்பு உள்ளது.

நான் நேரடியாக பத்திரிக்கை விநியோகம் போன்றவற்றை செய்ததில்லை. என் வீட்டில் நடக்கும் விடயங்களை சிறு வயதில் இருந்து தொடர்ந்து கவனித்து வந்ததில் பெற்ற அனுபவத்தை தான் மேலே கூறியிருக்கிறேன். ஆனால் பத்திரிக்கை விற்பனைக்கு சந்தா பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். வலைப்பதிவில் எந்த பத்திரிக்கைக்கு எதிராக பல கட்டுரைகள் எழுதினேனோ, அதே பத்திரிக்கையை தான் முதன் முதலாக எங்கள் பகுதியில் விற்க முனைந்தேன். ஆம், ஹிந்து பத்திரிக்கைக்கு ஒரு காலத்தில் களத்தில் இறங்கி சந்தா சேர்த்திருக்கிறேன்.

ஹிந்து அப்பொழுது முக்கியமான நகர்ப்புற பகுதிகளில் மட்டும் தான் இருந்தது. கிராமங்களிலோ, எங்களைப் போன்ற புறநகர்ப்பகுதிகளிலோ இருந்ததில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் இருந்தது. ஹிந்து தனது சந்தாவை விரிவாக்கும் பொருட்டு நகரங்களுக்கு வெளியே இருக்கும் பகுதிகளையும் குறிவைக்க தொடங்கியது. எனவே நெய்வேலி நகரத்திற்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளில் சந்தா பிடிக்க எங்களை அணுகியது. ஆனால் எங்கள் பகுதியில் எல்லாம் அதிகம் ஹிந்து படிக்க மாட்டார்கள். தவிரவும் ஏற்கனவே இந்தியன் எக்ஸ்பிரஸ் வாங்கிக் கொண்டிருப்பவர்களை அணுகவும் முடியாது என்பது என் அப்பாவின் நிலை. ஆனால் முயற்சித்து பாருங்கள். ஆரம்பத்தில் சில பிரதிகளை இலவசமாக அனுப்பி வைக்கிறோம். விற்பனையாகாவிட்டால் திரும்ப பெற்று கொள்கிறோம் என்றார்கள். நான் ஆங்கில வழிப் பள்ளியில் படித்து கொண்டிருந்தால் பத்திரிக்கையை விநியோகம் செய்யும் பழனி என்பவருடன் என் அப்பா என்னையும் அனுப்பினார். ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருப்பவர்களை பார்த்து சந்தா படிப்பது தான் எங்கள் இலக்கு. ஹிந்துவில் வெளிவரும் பல்வேறு பகுதிகளை விளக்கி சந்தா பிடிக்க வேண்டும். ஹிந்துவை படித்தால் ஆங்கிலம் வளரும் என்பது எங்களுடைய வழக்கமான தூண்டில். தினமும் வாங்கா விட்டால் ஞாயிற்று கிழமை மட்டும் வாங்கிப் பாருங்கள் என்பது அடுத்த இலக்கு. நான் அப்பொழுது ஏழாவதோ, எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தாக ஞாபகம். அது ஒரு வித்யமான தனி அனுபவமாக இருந்தது. ஆங்கிலம் படிக்க கூடியவர்களை குறிவைத்து பேசி எங்களாலும் சந்தா பிடிக்க முடிந்தது.

இப்படி எத்தனையோ நபர்களின் உழைப்பில் உயர்ந்த பத்திரிக்கைகள் தான் இன்று நமக்கு எதிரான அரசியலை நம்மை வைத்தே கொண்டு செல்கின்றன...

(தொடரும்)

பி.கு. இது என்னுடைய தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலானது. ஒவ்வொருவரின் அனுபவங்களுக்கு ஏற்ப அவர்களது கருத்துக்கள் மாறலாம். இது பத்திரிக்கை விற்பனை குறித்த என் பார்வை மட்டுமே.

Leia Mais…
Wednesday, March 18, 2009

தமிழ் பிரதமர் :-), பாஜக இனி மெல்ல அழியும்

இந்தியாவில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வந்து போகும் தேர்தல் திருவிழா காலம் இது. இந்த தேர்தல் காலங்களில் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உற்சாகமும், வேலையும் அதிகமாக இருக்கும். மக்களும் யார் யாருடன் சேர்வார்கள் ? தங்களுடைய தொகுதியில் யார் வெல்வார்கள் போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த ஆர்வத்தை காசுக்கும் காரியத்தை ஊடகங்கள் கச்சிதமாக செய்யும்.

தொலைக்காட்சி சானல்களின் பெருக்கத்திற்கு முன்பு இந்த தேர்தல் கால விற்பனையை மொத்த குத்தகை எடுத்திருந்தது அச்சு ஊடகங்கள் தான். அச்சு ஊடகங்கள் தங்கள் சந்தாவை அதிகளவில் பெருக்க இந்த தேர்தல் காலங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். அச்சு ஊடகங்களின் சர்குலேஷன் பிரதிநிதிகள் பத்திரிக்கை ஏஜெண்ட்களை தேடி ஊர் ஊராக அலைந்து தற்பொழுது இருக்கும் பிரதிகளை விட கூடுதல் பிரதிகளை விற்க விற்பனையாளர்களை நெருக்குவார்கள். அவ்வாறு விற்பனையை பெருக்காத ஏஜெண்ட்கள் எதிர்காலத்தில் மாற்றப்படுவீர்கள் என எச்சரிக்கவும் படுவார்கள். இதற்கு பயந்து தேவைக்கு அதிகமான கூடுதல் பிரதிகளை வாங்கியாக வேண்டிய சூழ்நிலையில் ஏஜெண்ட்கள் இருப்பார்கள். சில நேரங்களில் இவ்வாறு கூடுதலான பிரதிகளை பெற்று விற்க முடியாத பிரதிகளை திரும்ப எடுத்துக் கொள்ள கூட தினத்தந்தி போன்ற சில ஊடக நிறுவனங்கள் மறுத்து விடும். தினமலரின் வளர்ச்சிக்கு முன்பாக தினத்தந்தி நிர்வாகம் இந்த விடயங்களில் சற்று சர்வாதிகாரமாகவே நடந்து கொள்ளும். தினமலர் வளர தொடங்கிய பின்பு, தினத்தந்தியின் சந்தை சரிவுக்குள்ளானதை தொடர்ந்து தான் தினத்தந்தி நிர்வாகத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. தினத்தந்தி, தினமலர் நிர்வாகங்களை ஒப்பிடும் பொழுது மேலாண்மை ரீதியில் தினமலர் எத்தனையோ திறமை மிக்கது என கூற முடியும். தினத்தந்தியின் மேலாண்மை ஒரு மன்னார் அண்ட் கம்பெனியை விட மோசமானது. ஏஜெண்ட்களை மிரட்டும் தொனியை தினமலர் நிர்வாகத்தில் நான் பார்த்ததில்லை. தினமலரின் இத்தகைய அணுகுமுறை தான் தினமலரின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என கூற முடியும். இது ஒரு புறம் இருக்கட்டும்.

தேர்தல் நேரத்தில் விற்பனையை பெருக்க இப்படி கள அளவில் முயற்சியை மேற்கொள்ளும் ஊடகங்கள், செய்தி மட்டத்திலும் பரபரப்பினை சேர்ப்பார்கள். அப்படி சேர்த்தால் தான் பத்திக்கை அதிகமாக விற்கும். வழக்கமாக பத்திரிக்கைகள் பக்கமே திரும்பாத பலர் தேர்தல் காலங்களில் மட்டும் பத்திரிக்கைகள் வாங்குவது உண்டு. சராசரியாக சுமார் 10-20% அதிக விற்பனையை தேர்தல் காலங்களில் பார்க்க முடியும். சில இடங்களில் இது அதிகமாகவும் இருக்கலாம். தற்போதைய தொலைக்காட்சி காலங்களில் பத்திரிக்கைகளின் இந்த தேர்தல் கால வருவாயினை தொலைக்காட்சி ஊடகங்களும் விளம்பரங்கள் மூலமாக பங்கு போட்டு கொள்கிறார்கள்.

இப்படி தேர்தல் காலங்களில் தங்களின் வருவாய் அதிகரிப்பது தான் காரணமோ என்னவோ இந்த ஊடகங்களுக்கு ஜனநாயகத்தின் பெருமை தேர்தல் காலங்களில் தான் தெரியவரும். ஊடகங்கள் தேர்தல் காலங்களில் ஜனநாயகத்தை ஓங்கி ஒலிக்கும். இந்தியாவில் ஜனநாயகம் செழித்து ஓங்குவதாக நம்ப வைக்க முனைவார்கள். சீமானை கைது செய்ய முழுக்கமிட்ட தினமலர் தேர்தல் ஜனநாயகம் குறித்து புல்லரிக்க பேசும். ஆனால் இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் ஜனநாயகம் தான். வெறும் மேடைப் பேச்சிற்காக தேசிய பாதுகாப்பு சட்டம், பொடா சட்டம் போன்றவை மூலமாக பலர் சிறையில் தள்ளப்படும் இந் நாட்டினை, ஜனநாயக நாடு என்று கூறுவதே கேலிகூத்தானது. சீனா, சிறீலங்கா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் ஜனநாயகம் ஏதோ இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

தேர்தல் காலங்களில் தேர்தல் கணிப்புகளும், அலசல்களும் சுவாரசியம்மிக்கவை. இவர் வெற்றி பெறுவார் என காரணங்களை அடுக்குவதிலும், அவர் தோற்பார் என ஆருடம் கூறுவதும் போன்ற விவாதங்கள் ரொம்ப சாதரணமாக டீக்கடை, பேருந்து நிலையங்கள் எங்கள் அலுவலக கேபிடேரியா வரை நடைபெறுவது உண்டு. இப்படியான விவாதங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுது தமிழ் வலைப்பதிவுகளிலும் அதிகளவில் இடம் பெற்றது. நண்பர்கள் இடையே விவாதித்ததை முதன் முறையாக எழுத்து வடிவம் கொடுத்து வலைப்பதிவில் எழுதியது எனக்கு ஒரு சகமான அனுபவம். அப்பொழுது வலைப்பதிவுகளில் இருந்த தமிழக தேர்தல் பரபரப்பு இப்பொழுது காணப்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆனால் தனிப்பட்ட அளவில் தற்போதைய ஈழப் பிரச்சனை சார்ந்த சூழ்நிலையும், அதனை புறக்கணிக்கும் தமிழக/இந்திய அரசியல்வாதிகளின் போக்கும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தையும், ஈடுபாட்டினையும் குறைத்து இருக்கிறது. அரசியல்வாதிகளின் பின்னே இருந்து இந்த தேர்தலின் போக்கினை தீர்மானிக்கும் சக்திகளைப் பற்றிய புரிதல் முந்தைய காலங்களை விட தற்பொழுது அதிகம் உள்ளது. இதுவும் இந்த தேர்தல் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது.

அதே நேரத்திலே முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் இந்திய அரசியல் ஒரு குழம்பிய குட்டையாக காட்சி அளிப்பது ஒருவகையில் ஆறுதலையும் தருகிறது. பல தேசிய இனங்களை உள்ளடக்கிய இந்தியாவை ஹிந்தி, ஹிந்து மதம் சார்ந்த ஒரே தேசியமாக கட்டமைக்க இந்திய தேசிய சக்திகள் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தொடர்ந்து முனைந்து வந்திருக்கின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை தன்மையுடன் கட்டி எழுப்ப முனைந்த அந்த பிம்பம் இன்றைக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சிகளின் சரிவு மூலம் ஒரளவிற்கு உடைக்கப்பட்டிருக்கிறது. முன் எப்பொழுதையும் விட இந்த தேர்தலில் இந்த இரு கட்சிகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. மாநில கட்சிகள் தங்களின் செல்வாக்கினை தக்க வைக்க அதிகளவில் முனையும். குறைந்தபட்சம் இரண்டு/மூன்று பிரதமர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா பெறும் என்றளவில் இந்திய அரசியல் குழப்பமாக உள்ளது.

அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுப்பினால் - மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி, மாயாவதி, தேவ கொளடா, சந்திரபாபு நாயுடு, முலயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதாவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா என அடுக்கப்படும் பெயர்கள் தலைசுற்றலை ஏற்படுத்துகின்றன. இவர்களில் அதிகளவு வாய்ப்பு மன்மோகன் சிங், சோனியா காந்தி, எல்.கே.அத்வானி, மாயாவதி போன்றோருக்கு உள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என கூறி விட முடியாது.

சந்திரசேகர், தேவ கொளடா போன்றோர் எல்லாம் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சியில் அமர்ந்த நிகழ்வுகளை நிச்சயம் அடுத்த சில மாதங்களில் மறுபடியும் எதிர்பார்க்கலாம்.

முலயாம் சிங் யாதவ் உத்திரபிரதேசத்தில் அதிக இடங்களை பெற்றால் அவரும் நாற்காலியில் உட்கார முனைவார். காங்கிரஸ்-முலயாம் கூட்டணி உத்திரபிரதேசத்தில் ஏற்பட்டிருந்தால் முலயாம் அதிக இடங்களை பிடிக்க கூடும் என்ற காரணத்தால் தான் உ.பியில் தோற்றாலும் பரவாயில்லை கூட்டணி தேவையில்லை என காங்கிரஸ் முலயாமை விட்டு விட்டது. கர்நாடகத்தில் தேவ கொளடா அதிக இடங்களை பிடித்தால் மறுபடியும் பிரதமராகலாம். இதே போன்ற ஒரு தருணத்தில் தான் ஜனதா தள கட்சியில் இருந்து தேவ கொளடா யாருமே எதிர்பார்க்காமல் பிரதமரானார்.

இத்தகைய ஒரு தருணத்தில் தான் உலக வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக ஒரு ”தமிழன்” பிரதமராகும் ஒரு வரலாற்று நிகழ்வு வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. அதற்காக இன்று வரைக்கும் எனக்கு மகிழ்ச்சி தான். அந்த தானை தமிழன் ஜி.கே.மூப்பனாருக்கு பிறகு அந்த இடத்தை அடைய மற்றொருவர் முயற்சிக்கிறார். அதனை சுப்பிரமணியம் சாமி நிறைவேற்ற போகிறாராம். இரண்டாவது முறை நடக்காமல் போனது மூன்றாவது முறை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது தான் ஆபத்தானது. பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பாண்மை கிடைக்காமல், ஜெயலலிதா தமிழகத்தில் அதிக இடங்களை (30+) கைப்பற்றினால், ஜெயலலிதா தலைமை அமைச்சராகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு 20, அதிமுக கூட்டணிக்கு 20 என தமிழக மக்கள் சமமாக படி அளந்து ஒரு மனுநீதிச்சோழனாக தீர்ப்பு அளித்தால் தமிழகம் தப்பிக்கும். இல்லாவிட்டால் உலக வரலாற்றில் முதன் முறையாக என்ற அவலங்கள் எல்லாம் நடந்தேறும்.

**********

கடந்த தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்ற கோஷத்துடன் மறுபடியும் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி காங்கிரஸ் கூட்டணியிடம் தோற்று போனது. தற்போதைய தேர்தல் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆட்சியை பிடிக்க அற்புதமான வாய்ப்பு. காங்கிரஸ் கட்சி மீது இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். 2004ல் இருந்ததை விட விலைவாசி உயர்வு மக்களின் வாழ்க்கை தரத்தை கடுமையாக பாதித்து உள்ளது.
விவசாயம், தொழில்துறை என அனைத்து மட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி உள்ளது.

பொதுவாக காங்கிரசை காட்டிலும் இந்தியாவின் நடுத்தரவர்க்க மக்களுக்கு பாரதீய ஜனதா கட்சி மீது அபிமான உண்டு என்பதான ஒரு கருத்தாக்கத்தை ஊடகங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. இம் முறை நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் முக்கிய எதிர்கட்சியான பாரதீய ஜனதா மிக எளிதாக வெற்றியை பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2004ம் ஆண்டு தேர்தலில் பெற்ற இடங்களை கூட இம் முறை பாரதீய ஜனதா கட்சியால் பெற முடியாது என்பதே தற்போதைய சூழ்நிலையாக உள்ளது. இதைக் கொண்டே ஊடகங்களின் நடுத்தரவர்க்க கருத்தாக்கம் எவ்வளவு புரட்டானது என்பதை நாம் புரி்ந்து கொள்ள முடியும்.

குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மட்டும் தான் பாஜக தற்பொழுது பலமாக உள்ளது. ஹிமாச்சல், சட்டிஸ்கர் போன்ற சிறிய மாநிலங்களிலும், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலத்தில் கூட்டணி பலத்தாலும் பாஜக இடங்களை கைப்பற்ற கூடும். கடந்த தேர்தலில் ராஜஸ்தானில் தான் பாஜக அதிக இடங்களை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து உள்ளது. உத்திரபிரதேசம் பாஜகவிற்கு கடுமையான சரிவினை கொடுத்திருக்கிறது. மாயாவதி, முலயாம் சிங் யாதவ் போன்றோருக்கு பிறகு தான் மூன்றாவது இடத்தில் பாஜக உள்ளது. ஒரிசா போன்ற மாநிலங்களில் கூட்டணி பலத்தால் அதிக இங்களை பெற்ற பாஜக இம் முறை கூட்டணியில் ஏற்பட்ட பிளவால் சரிவினை எதிர்கொள்ளும் என தெரிகிறது.

1984ம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக 1999ம் ஆண்டு தேர்தலில் தன்னுடைய 182 இடங்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) சுமார் 270 பாரளுமன்ற உறுப்பினர்கள் மூலம் முதன் முறையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தது. அவ்வாறு ஆட்சி செய்த பாஜக 2004ம் தேர்தலில் பெற்ற 138 தொகுதிகளை கூட இம் முறை பெற முடியாது என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் இந்த சரிவிற்கு காரணம் என்ன ?

பாஜக ஆட்சியை பிடித்ததற்கு முக்கிய காரணம் ராமர் கோயில் பிரச்சனை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான மதக்கலவரங்கள் போன்றவையே. மதரீதியிலான உணர்வுகளை தூண்டி விட்டே பாஜக தன்னுடைய வாக்கு வங்கியை பெருக்கியது. ஆனால் மக்களை கவரக்கூடிய ஒரு தலைவரை பாஜக உருவாக்கவில்லை. பாஜக ஒரு வலுவான தலைவரை எப்பொழுதுமே கொண்டிருக்கவில்லை. வாஜ்பாய் கூட ஒரு முகமூடி தான். அதனை அந்தக் கட்சியின் தலைவர்களே கூறி வந்தனர். பாஜகவின் இந்த நிலைக்கு காரணம், பாஜக சார்ந்து இருந்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் அமைப்புகள் தான். பாஜகவின் அடித்தளமே சங்பரிவார் அமைப்புகளால் தான் பிணைக்கப்பட்டிருந்தது. சங்பரிவாரின் மதரீதியிலான முன்னெடுப்புகளான ஹிந்தி - ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை முன்னெடுப்பதே பாஜகவின் நோக்கம். அதே நேரத்தில் அதனுடைய மத ரீதியிலான தீவிரவாதத்தை மறைத்து தேசிய மட்டத்தில் ஒரு மிதமான தலைவரை கொண்டு ”மறைமுகமாக” (Hidden Agenda) தன்னுடைய செயல் திட்டங்களை முன்னெடுப்பதே சங்பரிவாரின் திட்டம். அதற்கு பாஜகவிற்கு கிடைத்த முகமூடி தான் வாஜ்பாய். வாஜ்பாயால் அதனை வெற்றிகரமாக சாதிக்கவும் முடிந்தது. என்றாலும் வாஜ்பாயால் பாஜகவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. காரணம் ஒரு சில ஹிந்தி மாநிலங்களுக்கு வெளியே பாஜக தலைவர்களால் மக்களை கவர முடியவில்லை. கூட்டணிகளையும் பெற முடியவில்லை. பாஜகவின் வட இந்திய மேல்தட்டு முத்திரையை வாஜ்பாயால் விலக்க முடியவில்லை.

வாஜ்பாய்க்கு பிற்கு அடுத்த பாஜக பிரதமராக அத்வானி இருப்பார் என நம்பப்பட்டது. வாஜ்பாயை விட அத்வானிக்கு கட்சியில் செல்வாக்கு அதிகம் என்ற பிம்பமும் அதற்கு காரணம். ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் "மாஸ்க்" தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு நடந்த சில நிகழ்வுகள் நிருபித்தன. அது பாஜகவை மேலும் பலவீனப்படுத்தியது.

ஆர்.எஸ்.எஸ் தலைமை தான் பாஜக என்ற கட்சியையே இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்களை தான் பாஜக செயல்படுத்த முடியும். அதனை வாஜ்பாய் ஆட்சியிலேயே கண்டுகூடாக பார்க்க முடிந்தது. 2004ல் பாஜக ஆட்சியை இழந்த பிறகு பாஜக மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமானால் ஹிந்து அடிப்படைவாத தேசியவாத கோஷத்தை கைவிட வேண்டும் என அத்வானி நினைத்தார். ஹிந்து அடிப்படைவாதம் என்பது கட்சிக்கு சில இடங்களை பெற்று தருமே தவிர அதுவே எப்பொழுதும் இந்தியாவெங்கும் வெற்றியை தந்து விடாது. ஹிந்து அடிப்படைவாத கோஷத்தால் மாநில கட்சிகளின் கூட்டணியும் கிடைக்காது. 2004 தேர்தலில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் கோஷத்தை தோற்கடித்தது. ஒரு சில மாநிலங்களை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவெங்கும் தன்னை நிலை நிறுத்தி கொள்ள ஹிந்தி - ஹிந்து என்ற அடையாளங்களை கலைய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இருந்தது. தவிரவும் அத்வானி ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சி சார்ந்த சூழ்நிலையில் தனக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். வாஜ்பாய் போன்று ஒரு மிதவாத பிம்பத்தை முன்னிறுத்த வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. இவை தவிர ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தார்.

அத்தகைய சூழலில் தான் 2006ல் பாக்கிஸ்தான் சென்ற அத்வானி ஜின்னா ஒரு Securalist என்று கூறினார். இந்த ஜின்னா அஸ்திரம் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும், ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் அத்வானிக்கு இது கட்சியில் பலத்த சரிவினையே ஏற்படுத்தியது.

பாஜகவின் மொத்த அமைப்பையுமே ஆர்.எஸ்.எஸ் தான் கட்டுப்படுத்துகிறது. காரணம் பாஜகவின் தலைவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அல்ல. பாஜக மீதான அபிமானம் என்பது மதரீதியிலானதே. தனிப்பட்ட தலைவர்களை சார்ந்தது அல்ல. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அடித்தளத்தில் இருந்து எழுந்தது தான் பாஜக. எனவே பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கு கட்டுப்பட்டே தீர வேண்டும். இந்த நிலையில் இருந்து விதிவிலக்கானவர் நரேந்திர மோடி மட்டுமே. மத ரீதியிலான தளத்தை பயன்படுத்தி் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டை கடந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒரே பாஜக தலைவர் நரேந்திர மோடி தான் (ஹிட்லரை ஜெர்மனி மக்கள் கொண்டாடினர் என்பதை இங்கே பொருத்தி பார்க்க வேண்டும்).

அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் "பாக்கிஸ்தான்" என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை அத்வானி புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கி, அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் எடுத்தது. அத்வானியின் நிலை கட்சியில் கேள்விக்குரியாக்கப்பட்டது. நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்ற வதந்திகள் உலாவின. அத்வானி தன்னுடைய செல்வாக்கினை மீட்க 1990ல் செய்தது போல மறுபடியும் 2006ல் ஒரு ரதயாத்திரை தொடங்கினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலில் ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறத்தில் இருந்து ரதயாத்திரை தொடங்கினார். 1990ல் நடந்தது போன்று அத்வானிக்கு ரதயாத்திரை வெற்றியை கொடுக்க வில்லை. அவருக்கு ரதயாத்திரை தோல்வியையே கொடுத்தது.

இன்றைக்கு பாஜக பிளவுபட்ட கட்சியாக இலக்கில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. காரணம் தேசியவாதம் மக்களுக்கு தேவையில்லாதது. மக்களை நீண்ட நாட்களுக்கு தேசியவாதம் போன்ற பிம்பங்களில் அடைத்துவைக்க முடியாது. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறைத்து இந்தியாவை ஹிந்தி ஹிந்து மதம் சார்ந்த ஒற்றை தேசமாக கட்டமைக்க சங்பரிவார் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது இயல்பானது. அந்த இயல்பை மறைத்து பின்ன முனைந்த செயற்கையன ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதத்தை மக்களே உடைத்து இருக்கின்றனர். பாஜக அதிகம் வளர்ந்த உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலேயே அது தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறது.

ஒரு மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் தலைவரான நரேந்திர மோடியை தேசிய தலைவராக மாற்றி விடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் செல்வாக்கு என்பது உள்ளூர் தலைவர்களாலேயே நிலை நிறுத்த முடியும் என்பது நரேந்திர மோடி மூலமும், கர்நாடகத்தில் பெற்ற வெற்றி மூலமும் நிருபிக்கப்பட்டிக்கிறது. அத்வானிக்கும், வாஜ்பாய்கும் குஜராத் வெற்றியிலோ, கர்நாடகா வெற்றியிலோ எந்த பங்கும் இல்லை. ஆனால் அதை மறந்து நரேந்திர மோடியை தேசிய தலைவராக்குவதன் மூலம் சரி செய்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அம்பானிகள் சர்ட்டிபிகேட் கொடுத்து விட்டால் நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தலைவராகி விட முடியாது. தமிழ்நாட்டு குப்புசாமிக்கும், ஆந்திரத்தின் ரொட்டிக்கும், கேரளாவின் நாயருக்கும் இன்னும் நரேந்திர மோடியின் புகைப்படம் கூட தெரிந்திருக்காது.

பாஜக தன்னுடைய வெற்றியை தக்கவைக்க எப்பொழுதுமே மத அடிப்படைவாதத்தை தூண்டும். எங்கெல்லாம் மதவாதம் தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெறும். முஸ்லீம்களை வேட்டையாடி நரேந்திர மோடி வெற்றி பெற்றார். ராமர் சேனாக்களை வளர்த்து கர்நாடகத்தை தக்கவைக்க பாஜக முனைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த தேசியவாதம் எடுபடாத மாநிலங்களில் பாஜக நுழையவே முடியாது. தமிழகத்திலும், கேரளாவிலும் அது தான் நிலை. ஹிந்து மதம் சார்ந்த தேசியவாதம் அலுத்து போய் விட்டாலும் பாஜக தோல்வி அடைந்து விடும். உத்திரபிரதேசத்தில் அது தான் தற்போதைய நிலை.


பாஜகவின் சரிவு அதைத் தான் இன்றைக்கு தெளிவுபடுத்தி கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலில் தொடங்கிய பாஜக சரிவு, இந்த தேர்தலிலும் நீடிக்கும். இனி பாஜக மெதுவாக அழிந்து போகும்.

Leia Mais…