வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, May 05, 2013

வடமாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து

கட்டப்பஞ்சாயத்து தமிழகத்தில் பெருகி வருவது ஒரு ஆபத்தான போக்கு ஆகும். ஒரு முறை அதன் காரணமாக நான் நேரடியாக பாதிப்பும் அடைந்து இருக்கிறேன். சென்னை தாம்பரத்தில் 2003ல் ஒரு இடம் ஒன்றினை வாங்கினேன். பத்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்து வாங்கினாலும் அந்தப் பகுதி ஒரு ரவுடிக் கும்பலின் பிடியில் இருந்தது அப்பொழுது தெரியவில்லை. இப்பொழுது போல அல்லாமல் தாம்பரம் அப்பொழுது ஒரு புறநகருக்கே உரிய கிராமத்தனமாக தான் இருந்தது. நான் இடம் வாங்கி அங்கே வீடு கட்ட ஆரம்பித்த பொழுது பிரச்சனைகள் தொடங்கியது. திடீரென்று ஒரு நாள் என்னுடைய இடத்தில் திமுக, அதிமுக கொடிக்கம்பங்கள் முளைத்தன. அம்மா குடிநீர் பந்தல் என்ற ஒன்றை என்னுடைய இடத்தில் கொஞ்சம், ரோட்டில் கொஞ்சம் என்று சேர்த்து போட்டு விட்டார்கள். இடத்தை அளந்து போட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய தொடங்கினார்கள். பேரம் பேசத் தொடங்கினார்கள். ஒரு தொகையை கொடுத்து பிரச்சனையை முடித்தோம். என்னுடைய தரப்பில் லோக்கல் அரசியலில் அனுபவம் உள்ள என்னுடைய மாமா இருந்ததால் பிரச்சனையை தீர்க்க முடிந்தது. அப்படி இல்லாதபட்சத்தில் சில லட்சங்களை பிடுங்கியிருப்பார்கள். போலீசிடம் போனால் பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் தீராது. போலீசுக்கு கொடுக்க வேண்டிய தொகை, கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு கொடுக்க வேண்டிய தொகை என இரட்டிப்பு தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்.

கட்டப்பஞ்சாயத்து என்பது ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்குடன் இருக்கும் ரவுடிக்கும்பல் செய்வது. திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் எல்லா கட்சிகளிலும் உள்ள ரவுடிக்கும்பல் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். என்னிடம் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த ரவுடிகள். இதில் எந்தக் கட்சி வேறுபாடும் இல்லை. பணம் தொடங்கி ரியல் எஸ்டேட், பங்காளித் தகராறு என பல்வேறு பிரச்சனைகளில் இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் தங்கள் கைவரிசையை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2005க்கு பிறகு ரியல் எஸ்டேட் வளர்ந்த பொழுது இவர்களது அட்டூழியம் மிக அதிகமாக இருந்தது. அரசியல்வாதிகள் இத்தகைய ரவுடிக்கும்பல்களை வளர்த்து விடுகிறார்கள். தாங்கள் அரசியல் செய்ய இத்தகைய ரவுடிக் கும்பல் தேவை என்பதாக அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள். இதில் எந்த அரசியல் கட்சியும் யோக்கியம் கிடையாது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என எல்லா கட்சியைச் சேர்ந்தவர்களும் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இந்தக் கட்டப்பஞ்சாயத்து கூட்டணிக்கு புதிய வரவு தேமுதிக.

இது போன்ற கட்டபஞ்சாயத்துக்கள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து தான் வருகிறது. ஒவ்வொரு கட்சி, சாதியின் லோக்கல் செல்வாக்கிற்கு ஏற்ப கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களின் சாதியும், கட்சியும் மாறுபடுகிறது. வன்னியர்கள் அதிகம் உள்ள பகுதியில் பாமக, திமுக போன்ற கட்சியைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல்கள் இருக்கும். தலித்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள். அதிமுக ஆளுங்கட்சி என்னும் பொழுது அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வார்கள்.

ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் திமுக, பாமக, அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்பவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. சாதி அடுக்கில் தங்களுக்கு கீழே இருக்கும் தலித்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதா என்ற சாதி வெறியே இதற்கு காரணம். இது பரவலாக இருந்த ஒரு சாதிவெறி எண்ணம். அதற்கு தற்பொழுது பாமக மேடையில் இடம் கொடுத்து இருக்கிறார் ராமதாஸ். ராமதாசே விடுதலைச் சிறுத்தைகளை கட்டப்பஞ்சாயத்து கும்பல் என வெளிப்படையாக பேசுகிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்டப்பஞ்சாயத்து கும்பல் என்றால் ராமதாசுக்கு அருகில் நிற்கும் காடுவெட்டி குரு யார் ? காடுவெட்டி குரு என்ன பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயின்று கட்சி நடத்துகிறவரா ? அல்லது அன்புமணி ராமதாஸ் போல ஏற்காடு கான்வென்ட்டில் படித்தவரா ? ஜெயங்கொண்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய முன்னாள் கட்டப்பஞ்சாயத்து ரவுடி தானே இன்றைய வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ?

தருமபுரி நாயக்கன்கொட்டையில் நடந்த கலவரம் போல கடலூரிலோ, விழுப்புரத்திலோ இன்றைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதே என் நம்பிக்கை. காரணம் வடமாவட்டத்தில் ஒரு தலித் குடிசை எரிக்கப்பட்டால் பதிலுக்கு ஒரு வன்னியர் குடிசை எரியும் என்ற அச்சம் இருக்கிறது. திருப்பி அடிப்பார்கள் என்ற பயம் தான் கலவரங்களைக் குறைக்கும் என நான் நம்புகிறேன்.

***********

அரசியலில் ரவுடிகள் வந்ததால் விளைந்த மிகப் பெரிய அவலமே இந்தக் கட்டப்பஞ்சாயத்து கும்பல்களின் வளர்ச்சி. ஒரு வகையில் இத்தகைய ரவுடி கலாச்சாரத்தை வளர்த்து விட்டது திமுகவின் உள்ளூர் தலைவர்களே. உட்கட்சி தேர்தலில் தங்களை எதிர்த்து நிற்பவர்களை தோற்கடிக்க திமுக தலைவர்களே இந்தக் கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். திமுக, அதிமுக போன்ற நிலைநிறுத்தப்பட்ட அரசியல் கட்சிகளின் அடியாள் பலத்தை எதிர்கொள்ள தங்களுக்கும் ஆட்பலம் தேவை என அரசியல் கட்சி தலைவர்கள் நினைக்கிறார்கள். அந்த வகையில் திமுக வளர்த்து விட்ட அரசியல் கலாச்சாரத்தை அதன் வழியில் புதியதாக அரசியல் தொடங்குபவர்களும் பின்பற்ற தொடங்கி விடுகிறார்கள். பாமக, தேமுக, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்து கட்சிகளுமே அதனைப் பின்பற்றுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு புதியதலைமுறை செய்திகளில் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் 40க்கும் மேற்பட்ட பேர் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்பது குறித்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பீகாரில் லாலு பிரசாத் யாதவ் ஆட்சி செய்த பொழுது லாலு வளர்த்து விட்ட இத்தகைய கும்பல் தான் மொத்த ஆட்சியையும் நடத்திக் கொண்டிருந்தது. தமிழகம் அந்த நிலை நோக்கி செல்லுமோ என்ற அச்சமே ஏற்படுகிறது.

கட்டப்பஞ்சாயத்து சட்டவிரோதமானது. அதனை ஒடுக்க முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். ஆனால் எந்த அரசாங்கமும் அதனை செய்யாது. கட்டப்பஞ்சாயத்து மூலம் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அனைத்து கட்சிகளைச் சார்ந்த கட்டப்பஞ்சாயத்துக்களையும் ஒழிக்க வேண்டும். திமுக, அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கட்டப்பஞ்சாயத்துகளை ஒழித்தால் விடுதலைச் சிறுத்தைகளும் கட்டப்பஞ்சாயத்து செய்யப்போவதில்லை. மாறாக விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சொல்வது சாதீயமே...

Leia Mais…
Saturday, May 04, 2013

சாதி வெறி பாசிசப் பாதையில் பாமக

என்னுடைய முகநூலில் (Facebook) மே 2ம் தேதி எழுதியதை இங்கே மீள்பதிவு செய்கிறேன் - https://www.facebook.com/photo.php?fbid=10200582409075564&set=a.2136588627154.116605.1619275375&type=1

வடமாவட்டங்களில் நிலைமை இன்னமும் பதற்றமாக இருந்து கொண்டிருக்கிறது. வடமாவட்டங்கள் சாதி பூசலில் இருபது ஆண்டுகள் பின்நோக்கி சென்று விட்டது ஒரு ஆபத்தான போக்காவே தென்படுகிறது. ஊரில் இரு தரப்பிலும் உள்ள நண்பர்களிடம் பேசும் பொழுது ஒருவர் அடுத்தவரை குற்றம்சாட்டும் போக்கு அதிகமாக உள்ளது. எதிர்தரப்பை நோக்கி கோபமும், துவேசமும் பொங்க பேசும் வெறுப்பு பேச்சுகள் என்னை அச்சப்படுத்துகிறது. பாட்டாளி மக்கள் கட்சி வளர்த்து விட்ட சாதி வெறி போதாதென்று மக்கள் தொலைக்காட்சி பொதுமக்களின் உணர்வுகள் என்ற பெயரியில் கடந்த சில தினங்களாக இன்னும் அதிகமான வெறியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சகமனிதன் மீது ஏற்படுத்தப்படும் வெறுப்பு ஒரு ஆபத்தான போக்கு ஆகும்.

*****************

பாமக என்ற அமைப்பு மீது கடந்த காலங்களில் பல தரப்புக்கும் பல்வேறு காரணங்களால் நம்பிக்கை இருந்தது. மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு கிடைத்த நேரடி மற்றும் மறைமுக பொருளாதார உயர்வு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தங்கள் இடங்களை இழந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு, இழப்பீடு போன்றவை பாமக என்ற அமைப்பால் கிடைத்த சில பலன்கள். இது தவிர 1991க்குப் பிறகு ஈழவிடுதலையை தமிழ்நாட்டில் யாருமே பேச முடியாமல் இருந்த சூழலில் பாமக முதலில் பேச தொடங்கியதும் பாமக என்ற அமைப்பினை சாதிக்கு வெளியே "தமிழ் தேசிய" வெளிக்கு கொண்டு வந்தது. அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஈழவிடுதலையை பேசிய பாமகவை தடைசெய்ய சட்டசபையிலேயே தீர்மானம் நிறைவேற்றி மைய அரசுக்கு அனுப்பியது. 1991க்குப் பிறகு திமுக கைவிட்ட ஈழவிடுதலையை பாமக தன் கையில் எடுத்த சூழலில் பல தமிழ் தேசிய உணர்வாளர்கள் பாமகவை ஆதரித்தனர். அதை தொடர்ந்து பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து ஏற்படுத்திய தமிழ் பாதுகாப்பு இயக்கம் போன்றவை எல்லாமே ஒரு முற்போக்கு முயற்சியே. சாதியை மையப்படுத்தி எழுந்த ஒரு அமைப்பு பரந்துபட்ட வெளிக்கு தன்னை புகுத்திக் கொள்வது வரவேற்கதக்கவையாகவே இருந்தது.

ஆனால் தேர்தல் அரசியலில் பாமக சந்தர்ப்பவாத அரசியலையே மேற்கொண்டது. மாறி மாறி கூட்டணி அமைத்த பாமக 2004ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அன்புமணியை அமைச்சார் ஆக்கியது. பதவி சுகம் கண்ட பாமக படிப்படியாக தன்னுடைய எல்லா முற்போக்கு நிலைப்பாடுகளையும் கைவிட தொடங்கியது. தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதையே முக்கிய நோக்கமாக கொண்டது. அன்புமணிக்கு ராஜசபா இடம் வாங்குவதையே முக்கிய இலக்காக கொண்டு பாமக செயல்பட்டது. 2009 பாரளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியும், 2011 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் பாமகவின் அதிகார வெறிக்கு சாவு மணி அடித்த நிலையில் சாதிவெறியே அதிகாரத்தை கைப்பற்ற ஒரே வழி என்று முடிவு செய்து பாமக இன்றைக்கு ஒரு முழுமையான சாதி வெறி பாசிசப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.

1980களில் வன்னியர் சங்கம் என்ற சாதி அமைப்பாக செயல்பட்ட பொழுது கூட வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை அது முன்வைத்ததே தவிர தலித்களை நோக்கி "மேளம் கொட்டுபவன்" என இழிவாக யாரும் பேசியதில்லை. ஆனால் இன்றைக்கு அத்தகைய ஒரு தரம் தாழ்ந்த நிலைக்கு பாமகவை ராமதாசும், காடுவெட்டி குருவும் கொண்டு வந்து விட்டனர். தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டு கொண்டு கூலிங் க்ளாஸ் போட்டு கொண்டு இருப்பதாக பேசும் பேச்சுகள் சாதி வெறியின் உச்சக்கட்டமாகவே உள்ளது. கலப்பு திருமணங்களை எதிர்ப்பதும், தலித்களின் பொருளாதார பலத்தை சிதைப்பதும் ஒரு பாசிச போக்கு ஆகும். அத்தகைய பாசிசத்தை மனிதநேயம் கொண்ட யாருமே ஆதரிக்க முடியாது.

*****************

வடமாவட்டங்களில் சாதியை ஒழிக்கும் முயற்சிகள் 1980களில் இருந்து தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. சாதி ஒழிப்பில் சாதியால் வன்னியர்களாக இருந்த பலரும் பங்காற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்த தமிழ்தேசியத்தின் முக்கியமான குரல் வடமாவட்டங்களில் இருந்தே எழுந்தது. தமிழ் சமூகத்தில் உள்ள சாதிகளை ஒழிக்காமல் தமிழ்தேசியத்தை அமைக்க முடியாது என்று அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் தோழர் தமிழரசன் அவர்கள். சமீபத்தில் தமிழகம் சென்றிருந்த பொழுது "சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்" என்ற புத்தகம் கிடைக்கப் பெற்றேன். தமிழ்நாடு விடுதலைப்படை என்ற அமைப்பை 1980களில் தொடங்கிய தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பு பற்றி எழுதிய கருத்துக்களின் தொகுப்பே இந்தப் புத்தகம். 1980களில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் இன்றைக்கும் சாதி ஒழிப்பை பேசவேண்டியுள்ளது மிக மிக அவலமான சூழ்நிலை ஆகும்.


 

1980களில் சாதி ஒழிப்பில் தீவிரமாக இருந்த இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த பலர் கடுமையான போலீஸ் அடக்குமுறைக்கு உள்ளாகினர். வன்னியர் சமூகத்தை சேர்ந்த பலர் 1989ல் பாமக தொடங்கிய பொழுது அதனுடன் இணைந்தனர். பாமகவின் முற்போக்கு வேடம் களைந்து விட்ட நிலையில் தமிழ்தேசிய உணர்வு கொண்ட அத்தகைய பலர் இன்றைக்கு பாமகவை விட்டு வெளியேறி வருகிறார்கள். பாமகவில் உள்ளவர்கள் உணர வேண்டியது பாமகவின் பாசிசப் பாதை ஒரு அழிவு பாதை என்பதே.

*****************

உலக வரலாறு எங்கும் வெறுப்பு காரணமாக கொல்லப்பட்ட சகமனித வரலாறுகளை நாம் வாசித்து வந்திருக்கிறோம். லட்சக்கணக்கான யூதர்களை நாசிக்கள் கொல்ல காரணமாக இருந்தது யூதர்கள் மீது ஹிட்லர் குரூரமாக பரப்பிய வெறுப்பு. துட்சி இனமக்கள் ருவாண்டாவில் கொல்லப்பட காரணமாக இருந்ததும் அதே வெறுப்பு தான். சிங்களர்கள் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக செய்த வெறுப்பு பிரச்சாரமே 2009ல் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. தமிழகத்தில் அது போல நிகழ வாய்ப்பில்லை என்றாலும் வெறுப்பு பிரச்சாரம் ஒரு ஆபத்தான பாதை என்பதே உலக வரலாற்றில் இருந்து நாம் படிக்க வேண்டிய பாடம். அதுவும் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலைக்கு பறிகொடுத்த தமிழர்கள் நிச்சயம் தம் சக தமிழர்களையே வெறுக்கும் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எந்தச் சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விலைபோக மாட்டார்கள்.

சாதி அடுக்குகளை கொண்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிற நாம் எல்லோருமே சாதி என்ற சட்டையை பிறப்பிலே அணிந்தே பிறந்திருக்கிறோம். அந்தச் சட்டையை அறிவுமுதிர்ச்சியுடன் கழுட்டி எறிவதே சரியான மனிதகுல வளர்ச்சியாக இருக்க முடியும். அடிப்படையில் மனிதநேயம் மிக்க ஒரு மனிதனாக இருப்பதையே என்னுடைய முதல் மற்றும் முக்கிய அடையாளமாக கருதுகிறேன். அதைத் தாண்டியும் ஒரு அடையாளம் வேண்டும் என்றால் "தமிழன்" என்ற அடையாளம் மட்டுமே எனக்கு தேவையாக உள்ளது. அதைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் நாம் உதறித்தள்ள வேண்டும். இதையே என்னுடைய கோரிக்கையாக வன்னியர்களிடமும் பிற சாதி நண்பர்களிடமும் முன்வைக்க விரும்புகிறேன்.

மனிதநேயம் மிக்க தமிழனாக மட்டும் இருப்போம்....


Leia Mais…