வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Monday, May 29, 2006

தன்னந்தனியாக "ஜெ"

தன்னந்தனியாக போர்க்களத்திற்கு சென்று சாதனைப் புரிந்து வந்திருக்கும் "ஜெ"வின் புகழாரங்கள் பல பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்டு வருகிறது. எதிரிகள் நிறைந்த போர்க்களத்திற்கு சென்று பலமான ஆயுதங்களை எதிர்கொண்டு இன்று அவர் "சாதனைச் செல்வியாக" மாறியிருக்கிறார். அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமையை தமிழகமே இன்று மெய்சிலிர்த்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இனி அவருடைய "தைரியத்தை" மெச்சி பாராட்டும், புகழாரமும் "சில" அரசியல் விமர்சகர்களிடம் இருந்து வாசிக்கப்படும்.

இந்தப் புகழாரங்களின் மத்தியில் சட்டசபையில் அதிமுகவினர் செய்த ரகளை மறைக்கப்பட்டு விடும். சில நாட்களுக்கு முன்பு வரை தனக்கு பாதுகாப்பு இல்லாத இடம் எனக் கூறிய ஜெயலலிதா அதே இடத்திற்குச் சென்றிருக்கிறார். அவரை அங்கு செல்ல தூண்டியது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டதா அல்லது அவர்கள் செய்த ரகளையை மறைப்பதற்கான முயற்சியா, அல்லது பிற எல்லாவற்றையும் மழுங்கடித்து தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியா என்ற கேள்விகள் எழுகின்றன.

அவருடைய "புதிய ஜனநாயக உணர்வு" பலருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அது மட்டுமே வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஊடகங்களின் சூழ்நிலையில் அந்த "புதிய உணர்வு" பாராட்டுதலுக்குரியதா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

சட்டசபைக்குச் செல்வதை தவிர ஒரு எம்.எல்.ஏ வுக்கு வேறு என்ன வேலை இருக்கிறது ? சட்டசபைக்கு செல்வதற்கு தானே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் ?

இன்று ஊடகங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும் சூழலில் சட்டசபை நிகழ்ச்சிகள் படமாக்கப்படும் சூழலில் ஒரு டிவியில் ஒரு மாதிரியும், மற்றொரு டிவியில் வேறு மாதிரி காண்பித்தாலும் இவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் பல நேரங்களில் வெளிப்பட்டு விடுகின்றன. அந்த வகையில் ஜெயலலிதா கேட்ட கேள்விகளை மறைத்த சன் டிவி, அதிமுகவின்ர் செய்த ரகளையை மறைத்த ஜெயா டிவி என இரண்டு டிவியை பார்த்தாலும் சில விடயங்கள் நமக்கு தெளிவாகவே தெரிகின்றன.

பாரளுமன்ற கூட்டங்களில் மட்டுமே நாம் பார்த்த ரகளையை இனி சட்டமன்றத்திலும் பார்க்கலாம் என்ற வகையில் தான் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆனால் 15ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போன்று கைகலப்பு, மைக் பிடுங்குதல் என அதிமுகவினரும், காங்கிரசும் செய்த ரகளை அதிமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தி "கலைஞரை அடிக்க முனைந்ததாக" ஒரு அனுதாபம் உருவாக்கப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா அந்த அனுதாபத்தை முறியடிக்க, அதிமுகவினர் மீது எழுந்த அதிருப்தியை மறைக்க சட்டசபைக்கு செல்வதென்ற அஸ்திரத்தை எடுத்திருக்கிறார். இதனால் அவரது "ஜனநாயக கடமை உணர்வுக்கு" அதிக விளம்பரம் கிடைத்திருக்கிறது. இப்பொழுது அந்த விளம்பரத்தை தக்க வைக்க எதிர்கட்சி தலைவராகவும் மாறிவிட்டார்.

இது ஒரு புறம் இருக்க ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் நக்கலாகவும், நையாண்டியாகவும் பேசி பிரச்சனையை திசை திருப்பிய திமுக அமைச்சர்களின் பிரச்சனைகள் குறித்த "அறிவின்மையும்" வெளிப்பட்டு இருக்கிறது. மத மாற்ற தடுப்புச் சட்டம் ஜெயலலிதாவின் ஆட்சியில் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்க திமுக அரசு இந்தச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக எப்படி கூற முடியும் என்பது குறித்த குழப்பம் இருந்தது. ஜெயலலிதா சட்டசபையில் இந்தப் பிரச்சனையை எழுப்பிய பொழுது தான் அது குறித்து தெளிவாக புரிந்தது. திமுக அரசு மேற்கொள்ளும் இது போன்ற "ஸ்டண்ட்" நடவடிக்கைகள் அவசியமற்றவை. இவை மலிவான விளம்பர உத்திகள் என்பதை தவிர இதன் மூலம் எந்த ஒரு உருப்படியான விடயத்தையும் சாதிக்க இயலாது.

ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் பட்சத்தில், ஆக்கப்பூர்வமான விவாதக் களமாக சட்டசபை மாறும் பட்சத்தில் ஆளுங்கட்சியை எப்படி ஒழுங்காக செயல்படவைக்க முடியும் என்பதை ஜெயலலிதா வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த காலங்களில் தமிழக சட்டசபை இவ்வாறு செயல்பட்டிருக்கிறது.

ஆனால் இது ஏதோ வேறு எங்குமே நடக்காத புதிய விடயங்கள் என்பன போன்று வெளியிடப்படும் செய்திகள் தான் நகைச்சுவைக்குரியது. ஜெயலலிதா எந்தப் புதிய சாதனையையும் நிகழ்த்தி விட வில்லை. ஜனநாயகக் கடமைகளுக்கு தமிழகத்தில் மறுவாழ்வு கொடுத்து விடவில்லை. அரசியல் சாசனம் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பதற்கு நேர்மாறாக இதுவரையில் ஜெயலலிதா, கருணாநிதி என அனைவருமே செயல்பட்டு வந்திருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் தற்பொழுது அரசியல் சாசனம் ஒரு எதிர்கட்சிக்கு நிர்ணயம் செய்துள்ள பல கடமைகளில் ஒரு "சாதாரண கடமையை" தான் ஜெயலலிதா நிறைவேற்றி இருக்கிறார்.

கடமையை செய்வதற்கு பாராட்டும் "வித்தியாசமான" மனநிலை இந்தியர்களிடமும், தமிழர்களிடமுமே நிலவிக் கொண்டிருக்கிறது. சட்டமன்றத்திற்கு சென்று கடமையை நிறைவேற்றுவது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை. அதற்காகத் தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் அதனைச் சரியாக செய்யவில்லையெனில் குற்றம்சாட்டலாம். அதே நேரத்தில் அந்தக் கடமையை அவர் செய்திருக்கிறார் என்பதற்காக பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஒவ்வொரு எம்.எல்.ஏவும் "தன்னந்தனியான" மனநிலையுடன் சென்று தங்கள் தொகுதி குறித்து, தங்கள் தொகுதி மக்கள் குறித்து பேச வேண்டுமே தவிர, "குழுவுடன்" சென்று "குஸ்தி" போட வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றம் அதற்கான இடமும் அல்ல.

Leia Mais…
Thursday, May 18, 2006

நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு

என்னுடைய முந்தையப் பதிவான "தன்னிகரில்லாத தமிழ்" பதிவில் தமிழின் மூல வடிவம் பிராமி எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அது சரியான தகவல் அல்ல, தமிழி தான் என செல்வராஜ் அப் பதிவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

என்னுடைய அப்பதிவின் திருத்தப்பட்ட பதிவு இம் மாத வரலாறு.காம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அப் பதிவில் சில திருத்தங்கள் செய்து, மேலும் சில தகவல்களையும் சேர்த்த நண்பர் கமலக்கண்ணனுக்கு என் நன்றி

இந்த நூற்றாண்டின் இணையற்ற தொல்லியல் கண்டுபிடிப்பான மயிலாடுதுறை கண்டுபிடிப்பு குறித்து இந்து தவிர பிற ஊடகங்கள் எதிலும் அதிகம் எழுதப்படவில்லை.
அக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து இம் மாத வரலாறு.காம் இணைய இதழில் எழுதப்பட்டுள்ளது. அக் கட்டுரையை இங்கு பதிகிறேன். வரலாறு இணைய இதழுக்கு நன்றி

தொல்லியல் இமயம் என்று கருதப்படும் முதுபெரும் வரலாற்றறிஞர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களே "Discovery of the century" என்று இக்கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டார் என்றால் இதன் முக்கியத்துவத்தை வாசகர்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். இந்து நாளேடு இது தொடர்பான செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிட்டுப் பெருமை கொண்டது. வரலாற்றுச் செய்திகளுக்கு அத்துணை முக்கியத்துவம் தராத ஜூனியர் விகடன் முதலான தமிழ்ப்பத்திரிக்கைகளும் இதுபற்றிக் கட்டுரைகள் வெளியிட்டன. நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் ஹிந்துவைத் தவிர பல இந்திய-தென்னக நாளிதழ்கள் இவ்வரிய கண்டுபிடிப்பை முழுமையாக இருட்டடிப்புச் செய்து அதில் இன்பமடைந்தன. இது ஏதோ தமிழகத்துக்கு மட்டுமே உரிய செய்தி என்று அவை அறியாமையினால் நினைத்துக்கொண்டன போலும் !

வரலாறு டாட் காம் வாசகர்களுக்காக இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு பதிவு செய்கிறோம்.

கண்டுபிடிக்கப்பட்ட தடயத்தைப் பற்றிப் பேசுமுன் ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 - 2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிந்துவெளி எழுத்துக்களை நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்த டாக்டர் ஆஸ்கோ பர்போலா (Asko parpola) மற்றும் திரு ஐராவதம் மகாதேவன் முதலான அறிஞர்கள் இது தமிழின் தொன்மையான வடிவமாக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இதனை ஒரு ஊகமாக வெளியிடமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமாக நிரூபிக்க சான்றுகளில்லை.

சிந்துவெளிக்குப் பிறகு இந்திய எழுத்துத் தடயங்களில் ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. நால்வேதங்களும் உபநிடதங்களும் இக்காலகட்டத்தில் இயற்றப்பட்டிருந்தாலும் அவை எழுத்து வடிவம் பெறவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வேதங்களை சுருதி - ஸ்மிருதி என்று குறிப்பிடுவது வழக்கம். "வேதங்கள் 18ம் நூற்றாண்டுவரைகூட எழுத்து வடிவம் பெறவில்லை" என்று கூறப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இன்றுவரை வாய்மொழியாகவே வேதம் கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.

சிந்துவெளிக்குப்பிறகு இந்தியாவல் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுச் சாசனம் அசோகரின் சாசனமாகும். இந்த எழுத்து வடிவங்களை பிராம்மி என்று குறிப்பிடுவார்கள். அசோகரின் கல்வெட்டே மிகத் தொன்மையானது என்பதால் பிராம்மியே இந்திய எழுத்து வடிவங்களுக்குத் தாய் என்பதான ஒரு பிரமை உண்டாகிவிட்டது. வரலாற்றறிஞர்களும் இதனை ஒப்புக்கொண்டு இதனைப் பின்புலமாகக் கொண்டே ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தனர்.

இதே அசோகர் காலத்தையொட்டி தமிழ் நாட்டிலும் பல கல்வெட்டுத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை முற்காலத் தமிழ் எழுத்துக்களாகும். இவற்றுக்கும் பிராம்மிக்கும் உள்ள தொடர்ப்பைக் கருத்தில் கொண்டு தமிழ் எழுத்து வடிவமே பிராம்மியிலுருந்துதான் உருவானது என்னும் கருத்து ஏறக்குறைய நாற்பதாண்¡டு காலமாக நிலைபெற்றுவிட்டது. பிராம்மியிலிருந்து கிளர்ந்த எழுத்து வடிவம் ஆதலின் இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடும் அளவிற்கு தமிழின் பிராம்மி சார்பு குறிப்பிடப்பட்டது.

தமிழின் மிகத் தொன்மையான இலக்கியப் பாரம்பரியத்தை நினைவில் கொள்ளாமலே மேற்கூறிய தமிழ் பிராம்மி பற்றிய கருத்துக்கள் ஆழமாக வேரூன்றப்பட்டன.

தமிழகத்தின் மற்றொரு தொல்லியல் இமயம் டாக்டர் சுப்பராயலுவின் தலைமையில் நடந்த கொடுமணல் ஆய்விலும் அழகன்குளம் ஆய்விலும் கிடைத்த சில தடயங்கள் தமிழின் எழுத்து வடிவம் பிராம்மிக்கு முற்பட்டது என்பதைச் சுட்டுவதாக அமைந்திருந்தது. தமிழகத்தின் ஆய்வாளர்களில் மூத்தவர்கள் சிலர் கருத்தரங்கங்களில் இதுபற்றிய கருத்தை முன்வைத்தும் இதனை அதிகம் கண்டுகொள்வாரில்லை.

எத்தனைதான் மண்ணில் மூடி மறைத்தாலும் உண்மைக்கென்று ஒரு தார்மீக சக்தி உண்டல்லவா ? அந்த உண்மை சில வருடங்களுக்கு முன் நடந்த மாங்குளம் மற்றும் கொடுமணல் ஆய்வில் முதன் முதலில் தலைகாட்டியது. இதற்கடுத்ததாக சென்ற மாதம் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற் கல்வெட்டுக்கள் தமிழின் எழுத்து வடிவமே இந்தியாவில் மிகத் தொன்மையானது என்று ஆழமாகவும் அறுதியிட்டும் அறிஞர்கள் கூறுவதற்கு அரணாக அமைந்தது. இதனைப் பற்றிய மிக விரிவான செய்திகளை சென்ற வரலாறு இதழில் பெருமிதத்துடன் வெளியிட்டோம். இவ்வெழுத்துக்களை தமிழ் பிராம்மி என்று குறிப்பிடாமல் தமிழி என்னும் பெயரால் குறிப்பிட ஆரம்பித்துள்ளனர் அறிஞர்கள்.

இன்னும் ஒரே ஒரு கண்ணிதான் மிச்சமிருந்தது.

அது என்னவெனில் இந்தியாவின் ஆகத் தொன்மையான சிந்துவெளி எழுத்துக்களுக்கும் தொன்மைத் தமிழி எழுத்துக்களுக்கும் உள்ளதான தொடர்பாகும். இது ஏன் முக்கியமானது எனில் தமிழி தனித்துத் தமிழ்நாட்டில் வளர்ந்த எழுத்து வடிவமா அல்லது சிந்து சமவெளியில் எழுதப்பட்டதே தமிழின் மிக முற்பட்ட வடிவம்தானா என்பது இந்தத் தொடர்பைப் புரிந்துகொண்டால்தான் விளங்கும்.

நாம் "இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு" என்று குறிப்பிடும் வரலாற்றுத் தடயமானது இந்த முக்கியக் கண்ணியை முன்வைக்கிறது,

தென்தமிழ் நாட்டில் மயிலாடுதுறைக்கருகே செம்பியன் கண்டியூர் என்கிற இடத்தில் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் தனது தோட்டத்தில் குழிவெட்ட முற்படுகையில் இந்த முற்காலக் கற்கருவியைக் கண்டறிந்தார். இதில் சில எழுத்து வடிவங்களைக் கண்ட அவர் தனது நண்பருக்கு இதனைக் கொடுக்க, உரிய கரங்களை இது சென்றடைந்து இதன் மகத்துவம் உலகிற்கு அறிமுகமானது.

புதிய கற்காலத்தைச் (Neolithic - 4500 BC to 2000 BC) சேர்ந்த இக் கற்கருவி சிந்து வெளி எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதனை மிக அரிய தடயமாக்கிக் காட்டுகிறது. ஐராவதம் தனது ஆய்வு வழி இந்த எழுத்துக்களை படித்து வெளியிட்டுள்ளார். அது தொடர்பான செய்தியை இந்த மாத Links of the Month பகுதியில் வெளியிட்டுள்ளோம்.

இக்கண்டுபிடிப்பின் மூலம் -

1. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகம் வரை பரவியிருந்தன என்பது நிலைநாட்டப்பட்டுவிட்டது

2. தமிழின் எழுத்து வடிவமான தமிழிக்கும் சிந்துவெளி எழுத்துக்களுக்கும் இருக்கும் நெருக்கம் நிலைபெறுகிறது

3. சிந்துவெளி எழுத்துக்கள் தமிழாக இருந்திருக்கலாம் என்னும் அறிஞர்களின் ஊகம் சரியானதே என்பதற்கு இது ஒரு முக்கியத் தடயமாகும்

4. சிந்து வெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளை பண்டைய தமிழக எழுத்துக்களை பின்புலமாக வைத்துத் தொடர்வதற்கு வழியேற்பட்டுள்ளது

ஹீராஸ் பாதிரியார் முதல் ஐராவதம் மகாதேவன் வரையிலான அறிஞர்கள் சிந்துவெளி எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே என மொழிந்த கூற்று இப்போது ஆதாரபூர்வமான உண்மையாக நிலைபெறுவதற்கு வழியேற்பட்டுள்ளது. தமிழியின் பின்புலத்தில் சிந்துவெளி எழுத்துக்கள் படிக்கப்படும் நாள் அதிகத் தொலைவிலில்லை.

இக்கண்டுபிடிப்பு உலகத்தை சரியான முறையில் சென்றடையக் காரணமான திரு சண்முகநாதனையும் தொல்லியல்துறை நண்பர்களையும் ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களையும் வரலாறு டாட் காம் மின்னிதழ் வாழ்த்தி மகிழ்கிறது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இந்திய மக்களுக்கு சரியானபடி சேர்க்கத் தவறிய நாளிதழ்களுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

Leia Mais…
Tuesday, May 16, 2006

தன்னிகரில்லாத தமிழ்

"கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தக் குடி எங்கள் தமிழ்க் குடி" என்று சொல்லும் பொழுதெல்லாம் சிலருக்கு மெய்சிலிர்க்கும். சிலருக்கு கோபமும், எரிச்சலும் வரும். கல் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றி இருக்க முடியாது. என்றாலும் தமிழ் மிகப் பூர்வீகமான மொழி என்ற கருத்தாக்கத்துடன் எழுதப்பட்ட பாடலை பலர் தங்களின் சார்புகளுக்கு ஏற்ப திரித்தும், புகழ்ந்தும், இகழந்தும், விமர்சித்தும் பேசி வந்திருக்கிறார்கள்.

மொழி மீது தமிழகத்தில் ஒரு காலத்தில் அதீத பற்று இருந்த நிலை மாறி இன்று "தமிழன்" என்று கூறுவதே இரண்டாம் பட்சமாக மாறி விட்ட சூழ்நிலையில், தமிழனின் வரலாறு குறித்த ஆய்வுகளுக்கு தேவையான அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. தமிழக வரலாற்று தேடல் என்பது தமிழனின் மிகத் தொன்மையான வரலாற்று தடயங்களை தேடிச் செல்லும் மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் தங்கள் வரலாற்றை துச்சமென மதிக்கும் தமிழர்கள், தமிழக அரசுகள் எனப் பல இடற்பாடுகளை கடந்து தான் வரலாற்று ஆய்வாளர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் என்று கூக்குரலிட்டு அரியணை ஏறிய அரசாங்கங்கள் கூட தமிழ் குறித்த ஆய்வுகளுக்கு போதிய ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. பல வரலாற்று ஆய்வாளர்கள் தங்களின் தனிப்பட்ட சேமிப்புகளை கூட வரலாற்று ஆய்வுகளுக்காக இழந்துள்ளனர். தமிழக ஆய்வாளர்களைக் கடந்து வெளிநாட்டு ஆய்வாளர்களும் தமிழின் தொன்மை குறித்த ஆய்வுகளை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளனர்.

தமிழனின் வரலாற்று தடங்கள் பல இடங்களில் அழிந்து போய் விட்டன. இன்னும் சில தடங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. இதனை பாதுகாக்க மிகப் பெரிய ஒரு கூட்டுமுயற்சி தேவைப்படும் சூழ்நிலையில் சில புதிய வரலாற்று கண்டுபிடிப்புகளும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. புதிய "அரிய" வரலாற்று கண்டுபிடிப்புக்கள் நிகழும் பொழுதெல்லாம் அதனைச் சிறுமைப் படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது பலப் பரிமாணங்களைக் கொண்டது. கடவுளின் இடது பக்கத்தில் இருந்து ஒரு மொழியும், வலது பக்கத்தில் இருந்து மற்றொரு மொழியும் முளைத்து விடுவதில்லை. ஒரு மொழியின் பேச்சு வழக்கம் தொடங்கி அது எழுத்து வடிவமாக உருப்பெறுவது வரை பல நூறு ஆண்டு கால தொடர்ச்சியான வளர்ச்சி தேவைப்படுகிறது. தமிழ் மொழியும் இத்தகைய பல நூறு ஆண்டுகள் வளர்ச்சியைப் பெற்று தான் இன்று இணையம் வரை கிளைப் பரப்பி இருக்கிறது. செம்மொழி நிலையையும் "தாமதமாகப்" பெற்று இருக்கிறது.

தமிழின் இன்றைய எழுத்து வடிவம் உருப்பெறுவதற்கான மூல வடிவம் பிராமி வடிவம் தான். பிராமி எழுத்துருவத்தில் இருந்து தான் பல மொழியின் எழுத்துருக்கள் உருவாகின.

இந்த பிராமி எழுத்துரு இரு வடிவமாக உருப்பெற தொடங்கியது. வடக்கே பிராமியின் ஒரு வடிவமும், தெற்கே வேறு ஒரு வடிவத்திலும் அது உருவாகியது. வடக்கே உருவாகிய வடிவம் கிரந்தம் எனவும், தெற்கே உருவாகிய வடிவம் தமிழ் பிராமி என்றும் வழங்கப்படுகிறது.

இந்த கிரந்த வடிவ எழுத்துருவைத் தான் அசோகர் பயன்படுத்தினார். அசோகர் காலத்து கல்வெட்டுகளும், செப்பேடுகளும் கிடைக்கப்பெற்றதன் வாயிலாக அவரது வரலாற்றையும், அவர் காலத்து எழுத்து வடிவமும் கண்டு பிடிக்கப்பட்டது. கிமு 8ம் நூற்றாண்டு வரை கிரந்த வடிவம் பரவலாக பயன்படுத்தப்பட்டது. பல்லவர் கால கல்வெட்டுகளில் இந்த வடிவத்தை காணமுடியும்.


கிமு6 - கிமு10ம் நூற்றாண்டுகள் இடையே தமிழ் "வட்டெழுத்துக்கள்" தமிழ் பிராமி எழுத்துக்களில் இருந்து உருவாகின. வட்டெழுத்து என்பது அதன் பெயருக்கு ஏற்ற வகையிலேயே வட்ட வடிவத்தில் இருக்கும் எழுத்துருக்கள் ஆகும். அக் காலத்தில் பனை ஓலைகளில் எழுதும் முறை இருந்ததால் எழுத்துக்களை எழுதும் பொழுது பனை ஓலை கிழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு வட்ட வடிவமாக எழுத்துக்கள் எழுதப்பட்டன. இந்த எழுத்துக்களே வட்டெழுத்துக்கள் எனப்பட்டன. இவை பனை ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு கிமு8 - கிமு10 இடையே இன்றைய தமிழ் எழுத்துருக்கள் உருவாகின.

வடக்கே இருந்த கிரந்த எழுத்துருக்கள் பிற்காலத்தில் மலையாளமாக உருமாறியது. கிரந்த எழுத்துருக்களின் தாக்கம் தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் காணமுடியும். இன்றைக்கும் கிரந்த வடிவ எழுத்துருக்கள் தமிழில் புழங்குவதை நாம் அறிவோம். தமிழில் வடமொழி எழுத்துக்கள் என்று நாம் பொதுவாக கூறும் எழுத்துக்கள் தான் கிரந்த எழுத்துருக்கள் எனப்படுகிறது.

பிராமி எழுத்துரு தான் இந்திய மொழி அனைத்திற்குமான பொதுவான மூல வடிவம்.

இந்த வடிவம் கிரந்தமாக மாறி பின் இதிலிருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற தெற்கு பகுதி எழுத்துருக்கள் உருவாகின. ஆனால் இந்த வகை எழுத்துருக்களுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.


சமஸ்கிருதம், ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் தேவாங்கிரி என்ற எழுத்துருக்களில் இருந்து உருவாகியது. தேவாங்கிரிக்கும் அடிப்படை பிராமி தான்.

இது தான் பொதுவான மொழி எழுத்துருக்களின் வரலாறு. மொழிகளின் வரலாற்றில் நம்முடைய தொன்மை குறித்த பெருமை ஒரு புறம் இருக்க அசோகரின் பல கல்வெட்டுகளை கண்டுபிடித்ததன் வாயிலாக அசோகரின் பிராமி எழுத்துக்கள் தான் பல மொழிகளின் அடிப்படை என்ற கருத்தாக்கம் நிலவி வந்தது. இதற்கு காரணம் அசோகரின் காலத்திற்கு முந்தைய எந்த கல்வெட்டுக்களும், எழுத்துருக்களும் கிடைக்கவில்லை என்பது தான். இதனால் தமிழ் மொழி அசோகரின் எழுத்துருவில் இருந்தது வந்திருக்க கூடும் என்ற கருத்து நிலவி வந்தது.

ஆனால் சமீபத்தில் தேனி அருகே கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அசோகர் காலத்திற்கு முந்தைய காலத்திலேயே தமிழ் எழுத்துருக்கள் உருவாகி விட்டன, என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் 'இந்தியா முழுவதற்கும்' எழுத்துமுறை தந்தவன் தமிழனே என்னும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்கிறார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் கலைக்கோவன்.


இந்த கண்டுபிடிப்புகள் ஏதோ தமிழ் ஆர்வளர்கள் அதீத ஆர்வம் கொண்டு கூறும் கதைகள் அல்ல. விஞ்ஞான ரீதியில் இதன் தொன்மையான காலம், அந்த எழுத்துருக்களின் வடிவம் இவற்றைக் கொண்டு இந்த உண்மை நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தான் சமீபத்தில் ஒரு வரலாற்று ஆதாரம் மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்துவில் செய்தியும், அந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்த கட்டுரையும் வந்திருந்தன.

சிந்து சமவெளி நாகரித்தின் மொழி என்ன என்பது குறித்து பலவிதமான ஆருடங்கள் கடந்த காலங்களில் வெளிவந்துள்ளன. சிலர் இது குறித்த சில முயற்சிகள் மேற்கொண்டு வெளியிட்ட தகவல்கள் சரியான fraud என்றும் நிருபிக்கப்பட்டன.

சிந்து சமவெளியில் இருந்த மொழி குறித்து பலர் பல தியரிகளை பலர் முன்வைத்துள்ளனர். அங்கு இருந்த மொழி ஆரிய மொழி என்று சிலரும், திராவிட மொழி எனச் சிலரும் கூறிவருகின்றனர். ஆனால் பொதுவாக அங்கு இருந்த மொழி ஒரு திராவிட மொழியாகத் தான் இருக்கும் என்ற கருத்தாக்கத்திற்கு நிறைய ஆதரங்கள் உள்ளன. இன்றைய பாக்கிஸ்தானில் இருக்கும் மொழிகளில் கூட திராவிட மொழிகளின் தாக்கம் இருப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. அது குறித்த ஒரு கட்டுரை - http://asnic.utexas.edu/asnic/subject/peoplesandlanguages.html. சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிகள் Indus script என்ற எழுத்துருவில் தான் இருந்தன. இவை pictograms போல உள்ளவை.


சிந்துசமவெளி நாகரிகத்தில் இருந்த மொழி ஆரிய மொழியா, திராவிட மொழியா என்ற சச்சரவு இருந்த நிலையில் தான் மயிலாடுதுறை கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மயிலாடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட ஆயுதம் இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு ஆகும்.


மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்களால் செதுக்கப்பட்ட இந்த ஆயுதத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட Indus எழுத்துரூ வடிவில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது தான் இதன் முக்கியத்துவத்திற்கு காரணம். இது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் நிருபிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் தென்னிந்தியாவைச் சார்ந்தக் கல் என்பதால் இது வடநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்தது என்ற கருத்துக்கும் இடமில்லை.

இந்த எழுத்துருவை decode செய்த இத் துறையில் உலகளவில் மதிக்கப்பெறும் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தக் கல்லில் காணப்படும் Indus script "முருகன்" என்னும் பொருளைக் கொடுப்பதாக கூறுகிறார். இதன் மூலம் சிந்து வெளி நாகரிகத்திற்கும் தமிழகத்தின் ஆதி கால மனிதனுக்கும் இடையே தொடர்புகள் இருந்தன என நிருபிக்கப்படுவதுடன், சிந்துசம வெளி நாகரிகத்தின் மொழி குறித்து இருக்கும் சச்சரவுகளுக்கும் ஒரு தெளிவான விடை கிடைக்கிறது.

சிந்துசம வெளியின் மொழி ஒரு "திராவிட" மொழியாக மட்டுமே இருக்க முடியும் என்ற கருத்து வலுப்பெறுகிறது.

திராவிட மொழி என்னும் பொழுது அது "தமிழின் மூல வடிவம்" என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?

எந்த கண்டுபிடிப்பும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மறுக்கப்படுவது வழக்கமானது தான். ஆனால் இதற்கு மாற்றாக ஒரு ஆதாரப்பூர்வமான வாதமோ, கண்டுபிடிப்புமோ முன்வைக்கப்படும் வரை தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளலாம்.

தமிழ் மொழியின் செழுமைக்கும், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம் அன்னை மொழியின் வளமைக்கும் இவை விஞ்ஞானப்பூர்வமான சான்றுகள் ஆகும்.

தன்னிகரில்லாத நம் தமிழ் மொழி குறித்து பெருமை கொள்ள வேண்டும்.


References

http://www.varalaaru.com/ & நண்பர் கமலக்கண்ணன்

http://www.ancientscripts.com
Languages in pre-Islamic Pakistan
http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html
http://www.thehindu.com/2006/05/01/stories/2006050112670100.htm

Leia Mais…
Thursday, May 11, 2006

தேர்தல் 2006 ஆச்சரியங்கள்

இந்த தேர்தலில் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதற்கு அடுத்த படியாக அனைவரும் எதிர்பார்த்து இருந்தது விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா என்பது தான். தேர்தலின் போக்கு மாறிக்கொண்டிருந்த அதே சூழலில் அங்கு விஜயகாந்த் கடும் போட்டியை ஏற்படுத்தி இருந்தார் என்று நான் கேள்விபட்டுக் கொண்டிருந்தேன். விஜயகாந்த், பாமக என யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற இறுதி கட்ட நிலவரம் இருந்த சூழலில் இறுதி முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் 14,000 வாக்கு வித்தியாசம் என்பது பாமகவிற்க்கு பெருத்த பின்னடைவு என்பதில் எந்த விதச் சந்தேகமும் இல்லை. விருத்தாசலம் முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்த இடம் என்பதும் சினிமா கவர்ச்சி அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதிலும் எந்த விதச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் அது மட்டுமே விஜயகாந்த்திற்கு இந்த வெற்றியை கொடுத்து விட வில்லை. ஒரு மாற்று அரசியல் தலைவர் தேவை என்ற எண்ணம் தமிழகத்தில் எழுந்திருக்கிறது என்பது கருத்துக் கணிப்புகளில் பரவலாக முன்வைக்கப்பட்ட கருத்து. இதைத் தவிர வடமாவட்டங்களில் இருக்கும் ராமதாஸ்-பாமக எதிர்ப்புணர்வை மிகச் சரியாக விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது தான் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணமாக நான் நினைக்கிறேன்.

விஜயகாந்த் இந்த தேர்தலில் தன்னுடைய துணிச்சலான முடிவு மூலம் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவரை நிச்சயமாக பாராட்ட வேண்டும். அதே சமயத்தில் அவர் தன்னுடைய இந்த வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள, தன்னுடைய தளத்தை இன்னும் விரிவாக்கிக் கொள்ள தற்போதைய அரசியல் பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும். இரு கழகங்களுக்கும் மாற்றாக ஒரு அரசியல் இயக்கம் வேண்டும் என்ற எண்ணம் பரவலாக எழுந்திருக்கிற இந்தச் சூழலில் அதே கழங்களின் அரசியல் பாணியை பின்பற்றுவது அவருக்கு பெரிய வளர்ச்சியை கொடுத்து விடாது. தற்பொழுது அவருக்கு கிடைத்திருக்கும் கவனம் கூட முதல் முறை என்பதால் தான்.

எதிர்வரும் தேர்தலில் அவர் தனித்தோ அல்லது திமுக, அதிமுக அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பொழுதோ தான் அவரது வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். மாறாக ஏதோ ஒரு கூட்டணியில் ஒட்டிக் கொள்ள நினைத்தால் நிச்சயம் அவரது வளர்ச்சி தேக்கத்தை அடைந்து விடும். இவை தவிர அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் தன்னை ஒரு முழு நேர அரசியல்வாதியாக மாற்றிக் கொள்வது அவசியம். சட்டமன்றத்திலும் விருத்தாசலத்திலும் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரது ஆதரவு பெருகும்.

இது வரை விஜயகாந்த்தை ஒரு மாற்று அரசியல் தலைவராக என்னால் நினைக்க முடிந்ததில்லை. தமிழகத்தில் தற்பொழுது இருக்கின்ற எல்லா அரசியல்வாதிகள் போலத் தான் இவரையும் பார்க்கிறேன். அதே அதிரடி, கவர்ச்சி அரசியல் தான். எதிர்காலத்திலும் அவர் ஒரு மாற்று அரசியல் தலைவராக தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

********

இந்த தேர்தலில் மற்றுமொரு ஆச்சரியம் - கருத்துக்கணிப்புகளின் வெற்றி (குமுதத்தைச் சொல்லவில்லை). குறிப்பாக CNN-IBN Exit Polls.
மிகத் துல்லியமாக முடிவினை இவர்கள் கணித்திருந்தார்கள். CNN-IBN முதல் கட்ட கருத்துக் கணிப்பு குறித்து என்னுடைய விமர்சனத்தை ஒரு பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பினை சாதி, மதம் என பல பிரிவுகளில் கணித்திருந்தார்கள். இந்த முடிவுகளின் படி மிகச் சரியாக தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன என்று சொல்லலாம்.

திமுக தன்னுடைய கோட்டையாக கருதிய வடமாவட்டங்கள் ஒரளவிற்குச் சரிந்துள்ளது. சென்னை திமுகவின் கோட்டையாக இருந்த நிலை மாறியிருக்கிறது. பாமக தன்னுடைய தளத்தை கணிசமாக இழந்திருக்கிறது. இவையெல்லாம் கருத்துக்கணிப்புகளில் சரியாக சொல்லப்பட்டது ஆச்சரியம் தான். அது போல தென்மாவட்டங்கள் அதிமுகவிற்கு சரிவினை ஏற்படுத்தி உள்ளது. அதனுடைய தேவர் வாக்கு வங்கி இம் முறை சரிந்திருக்கிறது. தென்மாவட்டங்களில் பலமான கட்சியாக கருதப்பட்ட மதிமுக சரிவை சந்தித்துள்ளது.

********

இம் முறை மக்களின் தீர்ப்பு ஒரு கலவையான சட்டசபையை அமைக்க உதவியிருக்கிறது. பாஜக தவிர போட்டியிட்ட அனைத்து பெரிய கட்சிகளும் சட்டசபையில் நுழைகின்றன. சட்டசபையில் இருந்து இனி யாரையும் தூக்கி எறிய முடியாது. அம்மா, அய்யா என இருவரும் எதிரும் புதிருமாக உட்காருவார்களா, அம்மா சட்டசபைக்கு வருவாரா, கேப்டன் சட்டசபையில் என்ன புள்ளி விபரங்கள் பேசுவார் என்பன போன்ற சுவாரசியமான கதைகளை நிறைய படிக்கலாம்.

முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமையப்போகிறது. ஆனால் கூட்டணி கூத்துகள் நடக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. திமுகவிற்கு கணிசமான தொகுதிகள் கிடைத்திருப்பதால் ஏதோ ஒரு கட்சி (காங்கிரசோ, பாமகவோ) திமுகவை தொடர்ந்து ஆதரித்து கொண்டு தான் இருக்கும்.

Leia Mais…

ஸ்டாலின் முதல்வராக வேண்டும், கலைஞர் விலகவேண்டும்


82வயதில் திமுகவை கலைஞர் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கிறார். அவருக்கும் திமுகவிற்கு பலர் தெரிவித்துள்ள வாழ்த்துக்களில் என்னுடைய வாழ்த்தினையும் ஐக்கியப்படுத்திக் கொள்கிறேன். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஓட்டு போடும் வயதிருப்பதால் தேர்தலில் வெற்றி பெறும் எவரையும்ஹ் வாழ்த்துவதற்கும் வயது ஒரு பொருட்டல்ல.

இந்த தேர்தலில் எனக்கு ஏற்பட்ட பல ஆச்சரியங்களில் ஒன்று கலைஞரின் பிரச்சாரம். 82வயதில் தமிழகத்தின் பல தொகுதிகளுக்கு சென்ற அவரது உடல் உறுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் இருக்கும் நெய்வேலிக்கு செல்வதற்குள் ஏற்படும் பயண எரிச்சல் ஒரு புறம் என்றால் இந்த கோடை காலத்தில் பயணம் செய்வதே எரிச்சல் மிகு தருணம் தான். என்ன தான் ஏசி காரில் சென்றாலும் கூட கோடை காலங்களில் ஏசியை மீறிய எரிச்சல் சில நேரங்களில் ஏற்படுவது இயல்பு. ஆனால் 82 வயதிலும் கடும் கோடை வெப்பத்திற்கிடையே சில ஆயிரம் கீ.மீ பயணம், பிரச்சார கூட்டம், தொண்டர்களின் அலைமோதல் இவற்றிடையே அவரது பேச்சின் ஈர்ப்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. அதே கரகரப்பான குரல். அதில் தெரியும் கம்பீரம் போன்றவை கலைஞருக்கே உரித்தான இயல்புகள்.

என்றாலும் அதை மீறி தள்ளாட்டத்துடன் நடக்கும் அவரது நடை, நிற்பதற்கு கூட தேவைப்படும் ஒரு உதவியாளர், நிற்க முடியாமல் உட்கார்ந்து கொண்டே பேசும் அவரது முதிய நிலை போன்றவையெல்லாம் பார்க்கும் பொழுது கலைஞர் இந்த அரசியல் சாக்கடையை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஆனாலும் 82வயதிலும், 2006 தேர்தலில் திமுக வெற்றி பெற கலைஞர் தான் தேவைப்படுகிறார் என்பதை கவனிக்கும் பொழுது திமுகவின் அடுத்த தலைமுறையினர் பற்றிய கேள்விக்குறியும் எழுகிறது. அடுத்த தேர்தலில் திமுகவிற்கு மக்களிடையே ஆதரவு திரட்ட கலைஞர் ஆரோக்கியமுடன் இருப்பார் என்ற எண்ணம் எழுந்தாலும் அடுத்த தலைமுறை திமுகவை கலைஞர் அவரது காலத்திலேயே ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று தோன்றுகிறது. தமிழக அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி என வயதான தலைமுறையினரை தொடர்ந்து பார்க்க வேண்டுமா என்ற அலுப்பும் ஏற்படுகிறது.

இன்று இந்தியாவின் இளையதலைமுறை பல நாடுகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தென் மாநிலங்களுக்கு படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. தமிழகம் பல இளைய தலைமுறை பொறியாளர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு இயல்பாக இருக்கின்ற கல்வி வளம், உள்கட்டமைப்பு காரணமாக ஏராளமான வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேருகின்றன. தமிழகம் ஆசியாவின் எதிர்கால முக்கிய பிராந்தியத்திற்கான விருதினைப் பெற்று இருக்கிறது (ASIAN REGION OF THE FUTURE). ஆஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் இந்த விருதினைப் பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழகம் இந்த முதலீடுகளைப் பெற தகுந்த அளவிலான ஒரு அரசாங்கத்தை கடந்த 5ஆண்டுகளாகப் பெற்றிருந்தது.

என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தது போல ஜெயலலிதாவின் கடந்த 5ஆண்டு கால ஆட்சியில் பொருளாதார ரீதியில் தமிழகம் ஒரு நல்ல நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தியா போன்ற ஏழ்மை அதிகம் இருக்கும் நாடுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் மட்டுமே மக்கள் மகிழ்ச்சியடைய முக்கிய காரணங்களாக இருப்பதில்லை. பொருளாதாரமும் உயரவேண்டும், மக்களுக்குச் சலுகைகளும் வழங்க வேண்டும். இதனை சரியான முறையில் பேலன்ஸ் செய்வதில் தான் இந்தியாவில் அமையும் அரசாங்கங்களின் திறமை இருக்கிறது. அந்த வகையில் பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், ஜெயலலிதா மக்களுக்கு சலுகைகள் வழங்கும் விதத்தில் சரியாக செயல்படவில்லை. இதை தவிர ஜனநாயக முறையில் இந்தியா கடுமையான சட்டதிட்டங்களை வைத்திருக்காவிட்டால் ஜெயலலிதா ஒரு முழுமையான சர்வாதிகாரியாகவே மாறியிருப்பார். எனவே பொருளாதார செயல்பாட்டில் ஜெயலலிதா சரியாக செயல்பட்டிருந்தால் கூட பிற வகையில் அவரின் செயல்பாடு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. அதுவே அவர் 2004தேர்தலின் தோல்விக்கும், அதனை அவர் தாமதமாகப் புரிந்து கொண்டு தவறுகளை திருத்திக் கொண்டமை தான் 2006 தேர்தலில் மோசமான தோல்வியை தழுவாமைக்கும் முக்கிய காரணம்.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் செயல்பாடு. அரசாங்கம் வேகமாக செயல்பட வேண்டும். பொருளாதார ரீதியில் பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு கொண்டு வந்து முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்கும் சலுகைகள், அடிப்படை வாழ்க்கை தேவைகள் போன்றவற்றை வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் அரசாங்கத்தின் வருவாய் பெருக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியில் போட்டி இன்று அதிகரித்து இருக்கிறது. அண்டை மாநிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை தங்கள் மாநிலத்திற்கு கொண்டு வர கடுமையாக முயற்சி மேற்க்கொள்கின்றன. இந்த முதலீடுகளை பெருமளவில் கவர்ந்தால் தான் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டுமானால் தமிழகத்திற்கு கவர்ச்சியான முதல்வர் வேண்டும். இந் நிலையில் தமிழகத்திற்கு 82வயது கலைஞர் முதல்வராக இருப்பது ஏற்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது.

கலைஞர் முதல்வராகும் பட்சத்தில் அவரது அரசாங்கம் ஒரு முதிய மந்திரி சபையாகத் தான் இருக்கும். அரசாங்கம் அரசியல்வாதிகளை விட அவர்கள் தங்களிடையே வைத்துக் கொள்ளும் அரசாங்க அதிகாரிகளால் தான் நடத்தப்படுகிறது என்றாலும், அந்த முதல்வர் தான் அரசாங்கத்தின் முகம். தன்னுடைய மொத்த அமைச்சர்களையும் டம்மியாக்கி ஜெயலலிதா தன்னை முதலீடுகளுக்குச் சாதகமான முதல்வராக வெளிப்படுத்திக் கொண்டார். ஆனால் கலைஞரால் அது போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. ஏற்கனவே அவர் கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் தமிழக பொருளாதாரத்திற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படும். அவரது முதிய வயதில் செயல்பாடு மந்தப்படும் பொழுது, தமிழகத்திற்கு வரும் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும். இது கலைஞர் மீதும், தமிழக அரசு மீதும் கடும் சுமையை ஏற்படுத்தும். இந்த காரணங்களால் தான் கலைஞர் முதல்வராவது சரியானது அல்ல என நான் நினைக்கிறேன்.

கலைஞருக்கு இந்த வாய்ப்பு இல்லையெனில் வேறு யாருக்கு இருக்கிறது ? நிச்சயமாக திமுகவில் தொண்டர் பலம் கொண்ட ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு இருக்கப்போவதில்லை. எனவே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு கலைஞர் விலக வேண்டும். ஸ்டாலின் முதல்வராக வேண்டும்.

ஸ்டாலினுக்கு அந்த தகுதி எந்தளவிற்கு இருக்கிறது ? ஸ்டாலினுக்கு அந்த தகுதி இல்லையெனில் தயாநிதி மாறன் முதல்வராகலாமா ?

ஸ்டாலினின் வாய்ப்புகளும், தகுதிகளும் ஒரு புறம் இருக்க, ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட வேண்டும்.

கலைஞர் அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுக்கும் தருணங்களில் அவரது ஆசை பேரன் தயாநிதியையும் அரசியலில் இருந்து விலக்கி தன்னுடன் அழைத்துக் கொள்வது நல்லது. திமுக மீதான அபிமானம் இனிமேலும் அதிகம் சேதம் அடையாமல் காப்பாற்ற இது உதவும்.

அரசாங்கத்தை தவிர திமுகவின் எதிர்காலத்தை முன்னிட்டும் கலைஞர் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

எனது வாதங்களை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்

Leia Mais…
Tuesday, May 02, 2006

கம்யுனிசத்தின் தேவை


மேதின வாரத்தில் கம்யுனிசம் குறித்து நல்ல விவாதங்கள் வலைப்பதிவில் நடந்து கொண்டு இருக்கிறது. கம்யுனிசத்தின் தேவை இன்றைக்கும் இருக்கும் சில காரணங்களை என் வலைப்பதிவில் பத்ரி பட்டியலிட்டிருந்தார் (1, 2). யோசிக்க வைத்த கருத்துக்கள். அது போலவே முத்துவின் வலைப்பதிவிலும் கம்யுனிசம் பற்றி சூடான விவாதம் சென்று கொண்டு இருக்கிறது.

மயூரன் கம்யுனிசத்தின் தேவை குறித்து ஒரு வித்தியாசமான பார்வையை கொடுத்திருக்கிறார். அது வலைப்பதிவில் கவனம் பெறும் பொருட்டு இங்கு தனிப்பதிவாக இடுகிறேன் (ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்).

இது குறித்து எனது கருத்தை பிறகு நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன்.

மூலதனவாதத்தை, அல்லது முதலாளியத்தை அடிப்படையாக கொண்ட நிறுவனங்கள், அவற்றை நிர்வகிக்கும் முறை, அதற்கான விஞ்ஞான முறைகள் போன்றவற்றைக்கொண்டு கட்டியெழுப்பப்பட்ட அறிவியல் இருக்கிறது. அதை மாணவர்கள் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், அதில் பெரும் அறிஞர்களாக வருகிறார்கள்.

மூலதனவாத நிறுவனம் ஒன்றை சிறப்பாக கொண்டு நடத்துவது பற்றியும் , இந்த அடிப்படையில் நாட்டின், உலகின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பற்றியும் இந்த அறிஞர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டவண்ணமிருக்கிறார்கள். இந்த "காப்ரேட்" உலகத்திற்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது. அது கம்யூனிச உலகமோ அல்லது ஆன்மீக உலகமோ அல்ல. அது உலகில் இருக்கவே செய்கின்ற பெரும்பான்மை மக்களது உலகம்.

நிறுவனங்கள், கம்பனிகள், மூலதனம் பொருளாதாரம் என்ற சித்தாங்களும் ஆர்ப்பாட்டங்களும் மிகச்சிறுபான்மையினரிடையேதான் இருக்கிறது..

இதற்கு வெளியே கோடிக்கணக்கான மகக்ள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் சாப்பாடு இல்லாமலிருக்கிறார்கள். அவர்களில் சிலருக்கு வாழும் உருமை மறுக்கப்படுகிறது. அவர்கள் தான் சாலைப்பணியாளர்களாய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் தான் எலிக்கறி சாப்பிடுகிறார்கள். அவர்கள்தான் சம்பந்த சம்பந்தமில்லாமல் ஈராக்கில், சூடானில் பாலஸ்தீனத்தில் அழிகிறார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல கம்பனிகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் நேரமில்லை. அவர்கள் லாபம் பார்ப்பதையே முதன்மைத்தொழிலாகக்கொண்டவர்கள்.

இந்த "வெளியே இருக்கும் " மக்களுக்கு போராடுவதைத்தவிர வேறு வழியில்லை. அவர்கள் உயிர்வாழ்வதற்கான ஒரே வழி போராடுவதுதான். தன்னை சுரண்டும் முதலாளிக்கு எதிராக, தன்மீது போரைத்திணித்த அமெரிக்க எண்ணைக்கம்பனிகளுக்கெதிராக, தன்னை பணி நீக்கம் செய்த அரசாங்கத்திற்கெதிராக அவர்கள் போராடியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் செத்துப்போய்விடுவார்கள்.

போராடுவதற்கு ஆயுதமும் ஆட்களும் மட்டும் இருந்தால் போதாது. ஒரு நிலைப்பாடு இருக்க வேண்டும். யாருக்கெதிரான போராட்டம் என்ற தெளிவு இருக்க வேண்டும். போராட்டத்திற்கெதிராக எழும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான கொள்கைத்தெளுவு இருக்க வேண்டும். ( இதைப்பற்றி போராட்டங்களை பற்றி எழுதும் தமிழ் சசிக்கு விளக்க வேண்டியதில்லை) இவ்வாறான போராட்டங்களுக்கு முதுகெலும்பான சித்தாந்தங்களை, ஆதரவை, ஆன்மீகமோ முதலாளியமோ தருவதில்லை. அவர்கள் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். போர் நடந்தால் அவர்களால் லாபம் பண்ண முடியாது. தாம் லாபம் பண்ணும் இடத்திற்கு வெளியே வேறு வகையான லாபங்களுக்காக அவர்களே போர்களை உருவாக்குகிறார்கள்.

இந்த இடத்தில் தான் தனது உரிமைகளுக்காக போராடுவோருக்கு கம்யூனிசம் ஆதரவை தருகிறது. அவர்கள் கையிலெடுக்கக்கூடிய பலமான சித்தாந்தாஅயுதமாக கம்யூனிசம் இருக்கிறது.

தலித்துகளின் விடுதலைக்கான போராட்டத்தை முதலாளியம் ஆதரிக்காது. அங்கே அவர்களுக்கு லாபம் இல்லை. கம்யூனிச்டுக்களே அங்கே தோழமை கொள்கிறார்கள். சாலைப்பணியாளர் வாழ வழியில்லாத தற்கொலை செய்யும்போது கொகா கோலா கம்பனியோ, டாட்டாவோ, மைக்ரோசொஃப்டோ அவர்களுக்காக குரல்கொடுப்பதில்லை. கம்யூனிஸ்டுக்களே அவர்களுக்காக வெய்யிலில் வீதியில் இறங்குகிறார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படும்போது தமக்கு எந்த விதமான லாபமும் இல்லாதபோதும், தமது உயிருக்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று உணர்ந்தவாறும் பேரினவாதத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் சிங்களத்தோழர்கள் கம்யூனிஸ்டுக்களே. வேறு யாரும் அல்லர். தமிழ் தேசியத்தின் கலை பண்பாட்டு நிகழ்வை கொழும்பில் நடத்தி அங்கே பேரினவாதிகள் ஆயுதங்களோடு தமிழ் புத்திஜீவிகளை அடிக்க வந்தபோது மனித வளையம் அமைத்து அடிகளை தாமே வாங்கி இரத்தம் சிந்தி எம்மை காத்தவர்கள், முதலாளிய யூ என் பீ யோ, நோர்வேயோ, அமைதியை விரும்பும் கம்பனிகளின் கூட்டமைப்போ, அமைதிக்காக குரல்கொடுக்கு ல்லித் கொத்தலாவலவோ இல்லை. சிங்கள கிராமங்களிலிருந்து வந்த ஏழை இளைஞர்கள். தாம் வரித்துக்கொண்ட கம்யூனிச கோட்பாடு தந்த தெளிவின் நிமித்தம், அந்த கோடாப்பாடுதந்த நம்பிக்கையின் நிமித்தம் அவர்கள் எமக்காக குரல் கொடுக்கிறார்கள். அங்கே சுய நலம் இல்லை. இலாபம் அவர்களை "மோட்டிவேட்" பண்ணவில்லை. அவர்களது சித்தாந்தம் அதை வழங்கியது.

லலித் கொத்தலாவல தனது ஏசீ காரை விட்டு இறங்கி ரத்தம் சிந்த வரமாட்டார். இவர்கள்தான் முதலாளிகள். சமாதானம் குறித்து வாய் கிழிய கத்துபவர்கள்.

கொழும்பு ரயில் பாதைகளில் சட்டவிரோதமாக குடியிருப்புக்களை அமைத்து காலகாலமாக வாழ்ந்துவரும் ஏழைகளை எந்த மாறுத்திட்டமுமில்லாமல் அரசு அப்புறப்படுத்தியபோது, வீதியில் நின்று கதறியழுத அந்த அப்பாவி மக்களை ஓடி வந்து பார்த்த்தது முதலாளிய அரசாங்கமோ, இலங்கை ரய்ல் சேவையை வாங்க விரும்பும் கம்பனிகளோ , சுயநல ஜேவீ பீ யோ அல்ல. மக்கள் ஆதரவை, தமிழரை ஆதரிப்பதால் இழந்துவரும் சிறு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் விக்ரமபாகு கருணாரத்னவே.


ஆக தெட்டத்தெளிவான விசயம், மக்கள் ஒடுக்கப்படும்போது அவர்கள் உரிமைகள் பறிக்கப்படும்போது அவர்களுக்கு துணையாக களத்தில் இறங்குபவர்கள் எப்போதும் கம்யூனிச்டுக்களே. எப்போதும் முதலாளிகள் வீதிக்கு இறங்குவதில்லை.

இப்பொழுது புரிகிறதா, கம்யூனிசத்தினதும், கம்யூனிச்டுக்களினதும் தேவை என்ன என்று?


இது நல்ல மனிதர்கள் செய்யும் பணி என்று குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிடாதீர்கள். நல்ல மனிதர்கள் கோயிலுக்கு போவாரக்ள், சில வேளை தனியாளாக வ்ந்து அடிவாங்கி செத்துப்போவாரக்ள். ஒரு சித்தாந்தம் வேண்டும். சித்தாந்தம் போராடுவதற்கான உறுதியை தரவேண்டும். போராடம் பற்றிய தெளிவினை தரவல்ல சித்தாந்தம் வேண்டும். எல்லா ஒடுக்குமுறைகளும் சுரண்டல்களும் தமது மூல ஊற்றாக முதலாளித்துவத்தையும் இலாபச்சுயநலத்தையுமே கொண்டிருப்பதால், அவற்றுக்கெதிரான எல்லா போராட்டங்களும் கம்யீனிஸ்டுக்களின் நட்பினை சம்பாதிக்கின்றன. கம்யூனிசம் ஒடுக்குமுறையின் மூல ஊற்றினை அழிப்பதற்கான விஞ்ஞானத்தை தனகத்தே கொண்டிருப்பதால் அது ஒடுக்கப்படுவோரின் வலிய ஆயுதமாக எப்போதும் இருக்கிறது.

தேசத்தின் முன்னேற்றத்திற்கு எப்போது கம்யூனிஸ்டுக்கள் தடையாக இருந்தார்கள்?

நிலநீரை சுரண்டும் கொகாகோலா கம்பனியை விரட்டியடிக்க போராடுவது முன்னேற்றத்துக்கு தடையா?
மேல் கொத்மலை தோட்டத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக நீர்மின்சார திட்டத்திற்கு எதிராக போராடுவது தேச முன்னேற்றத்துக்கு தடையா?
யுனிலிவரின் அப்பட்டமான கொள்ளையடிப்புக்கெதிராக சோப்பு செய்து போராடுவது, நாகரிகமில்லையா?


உங்கள் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது பளபளப்பான ரோடுகள், வானுயர்ந்த கட்டடங்கள், எங்கும் ஏசி கார்கள், இந்தியாவின் முன் கைகட்டி நிற்கும் மைக்ரோசொப்ட். இவை எல்லாம்.

எங்கள், கம்யூனிஸ்டுக்களின் பார்வையில் தேச முன்னேற்றம் என்பது, எல்லா மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை. மக்களுக்கு தெவையான பொருட்களின் அதிக உற்பத்தி. மக்களுக்கு தேவையான சேவைகளின் பெருக்கம். மக்கள் ஆரோக்கியமாக, தேவைகளை தீர்த்துக்கொண்டு வாழ்வதற்கான தொழிற்றுறைகள்.

ஏசீ கார்கள் என்றால், அது எல்லோருக்கும்.

பாரதியின் வார்த்தைகளில் சொன்னால்,
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இல்லாத வளர்ச்சி.

இதனை முதலாளித்துவத்தால் வழங்க முடியாது. இலாப நோக்கம் எப்போதும் இலாபம் கிடைக்காத நோக்கங்களை கவனிப்பதில்லை.


அப்படி முதலாளியம் முற்போக்கானதாக, வளர்ச்சியின் தத்துவமாக இருந்திருந்தால், முதலாளியத்தின் தலைமை நாடான அமெரிக்கா வல்லரசக, உலக வல்ல்ரசாக இருக்கும் இன்றைய வரலாறுக்காலகட்டமல்லவா உஅக மகக்ளின் பொற்காலமாக இருந்திருக்கும்.

அமெரிக்காவும் அதன் நிறுவனங்களும் இன்றைக்கு பட்டினியை, ஒடுக்குமுறைகளை எல்லாவற்றையும் தீர்த்து சொர்க்கத்தையல்லவா உலகத்தில் நிலைநாட்டியிருக்கும்.

முதலாளியம் என்ற சுரண்டல் சித்தாந்தத்தின் கேவலமா லாபப்பெருக்க உத்திகளின் யதார்த்தத்தை எப்படி உங்களால் வசதியாக மறந்துவிட முடிகிறது?

Leia Mais…
Monday, May 01, 2006

தேர்தல், நிர்வாக சீர்திருத்தங்கள்

நம்முடைய தேர்தல் முறைகளிலும், நிர்வாக முறைகளிலும் நிறைய மாற்றங்கள் வேண்டுமென தேர்தல் நேரங்களில் கூக்குரல் எழுந்து கொண்டே இருக்கும். அரசாங்க அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் தான் ஜனநாயகத்தின் அதி முக்கியமான தூண்கள். இந்த தூண்கள் இந்தியாவில் எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன ? மாற்று வழிகள் என்ன ? தேர்தல் முறையில் மாற்றங்கள் சாத்தியமா, அது குறித்த எனது பார்வை

அரசாங்கம் மக்களுக்கு கொடுக்கும் பலச் சலுகைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்க ஊழியர்களிடமே உள்ளது. அரசியல்வாதிகள் 5வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அரசாங்க ஊழியர்கள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யாத நிலையிலும் ஓய்வுக் காலம் வரை பணியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பலவற்றில் காலதாமதம், ஊழல் போன்றவை மலிந்து போய் இருக்கின்றன. சாதாரண மக்களுக்கு காலதாமதப்படுத்தப்படும் நலதிட்டங்கள் முதல் பெரும் முதலீட்டிற்கு, வணிகத்திற்கு தேவைப்படும் லைசன்ஸ் வரை இந்தியாவில் ஒரு மோசமான inefficienecy அரசு அலுவலங்களில் பரவலாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில முன்னேற்றங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டு இருந்தாலும் இன்னமும் அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கும் நிலை தான் ஏற்படுகிறது.

அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கு இடையே நிறைய வேறுபாட்டினை காண முடியும். அமெரிக்க நிர்வாக அமைப்பைக் குறித்து ஓரளவிற்கு கேள்விப்பட்டிருந்தாலும், அந்த நிர்வாக அமைப்புகளில் பங்காற்றும் பத்மா போன்றவர்களின் அனுபவங்களைக் கேட்கும் பொழுது ஆச்சரியாகவே இருக்கும்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை, நீண்ட காலமாக ஜனநாயக முறைப்படி இருக்கு ஒரு அரசமைப்பை இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியான ஒப்பிடு அல்ல. என்றாலும் அமெரிக்கா போன்ற ஒரு முறையை நோக்கி நாம் செல்ல வேண்டிய அவசியம் இருப்பதன் காரணத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இங்கு அரசு அலுவலகங்கள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் பல விடயங்கள் குறித்த நேரத்தில் மிகச் சரியாக நடந்து விடுகிறது. உதாரணமாக குழந்தைப் பிறப்பினை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தை வேறு ஒரு நகரத்தில் பிறந்தாலும் ஒருவர் வசிக்கும் நகரத்தில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு அந்த தகவல் மருத்துவமனை மூலம் அனுப்பப்படுகிறது. அந்த நகரில் இருக்கும் சுகாதார மையம் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு அரசு சுகாதார நிலையங்கள் என்ன சலுகைகளை வழங்குகின்றன என்பன போன்ற விபரங்களை தெரியப்படுத்துகிறது. இதனால் அரசாங்கத்தின் சலுகைகள் குறித்த விபரங்கள் தெரியாதவருக்கும் அது குறித்து தெரியவருகிறது. அந்தச் சலுகைகளை பயன்படுத்திக் கொள்வதிலும் எந்தப் பிரச்சனையும் இருப்பதில்லை.

இங்கு அரசு தன்னுடைய நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுப்பதும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சிகள் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையால் சரியாக கண்காணிக்கப்படுவதும் தான் அரசின் இயக்கம் சரியாக நடைபெற முக்கிய காரணம் என்று சொல்லலாம். ஒரு விடயம் குறித்து என்ன நடக்க வேண்டும் என்பது முறையாக கணினி மூலம் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியல் படி குழந்தைப் பிறப்பு போன்றவை நடந்தால், அரசின் பலப் பிரிவுகள் என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற விபரங்கள் முறையாக நடந்து விடுகின்றன. இணையத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று அவர்களுக்கு அனுப்பி விட்டால் சரியான நேரத்தில் பிறப்பு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டு விடும். இடைப்பட்ட காலத்தில் என்ன நிலவரம் என்று கேட்க உட்கார்ந்த இடத்தில் இருந்து தொலைபேசியில் அழைத்தால் அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் பொறுப்புடன் பதிலளிப்பார்கள். அது போல வருமானம் குறைவாக உள்ள மக்களுக்கு Social Security மூலம் மருந்துகள் போன்றவை வழங்கும் முறை இருக்கிறது. ஒரு SSN அலுவலகத்தில் சென்று விண்ணபித்தால் அரசின் சலுகை நமக்கு வந்து சேர்ந்து விடும்.

இங்குள்ள அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் Quality certification பெற்றுள்ளன. தனியார் நிறுவனங்களில் தங்கள் வாடிக்கையாளரை கவனிப்பது போன்று அரசின் சலுகைகளைப் பெறச் செல்பவர்கள் கவனிக்கப்படுகிறார்கள். இங்கு பணியாற்றுபவர்கள் மிகவும் கண்ணியமாக, மரியாதையுடனே நமக்கான சலுகைகள் குறித்த விபரங்களை தெளிவாக கூறி, நாம் இந்தச் சலுகைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார்கள். இங்கும் பிரச்சனைகளும், காலதாமதமும் இருக்கவேச் செய்கின்றன. ஆனால் அவ்வாறு நடப்பது மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் அரசு அலுவலகங்கள் இந்த முறையை நோக்கி கட்டாயம் செல்ல வேண்டும். இந்த முறை மூலம் ஒருவரின் விண்ணப்பம் அரசு அலுவலகர்களால் தேவையில்லாமல் தேக்கி வைக்க முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அது மேலதிகாரியின் கவனத்திற்கு செல்வது போன்ற முறை வரும் பொழுது விண்ணப்பங்களை குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசு ஊழியர்களுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக அமெரிக்காவில் SSN எண் நமக்கு தேவை என்று விண்ணப்பித்தால் அது இரண்டு வாரங்களில் வழக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது, அந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் முறைகளை எளிமையாக்குவது போன்றவை கணினி மயமாக்குவது மூலம் சாத்தியமாகும். இது அரசு ஊழியர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதற்கும் உதவும். தனியார் நிறுவனங்களில் Appraisal என்று ஒன்று உண்டு. கடந்த வருடத்தில் ஒருவரின் செயல்பாடு எப்படி இருந்தது என்று பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ற வகையில் தான் ஊதிய உயர்வோ, பதவி உயர்வோ வழங்கப்படும். ஆனால் இவ்வாறான முறை அரசு அலுவலகங்களில் சரியாக முறைப்படுத்தப்படுவதில்லை. இதனாலேயே அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் செல்லும் பொழுது ஒரு அலட்சிய போக்கு நிலவுகிறது. சில நேரங்களில் "எங்கு வேண்டுமானாலும் போய் முறையிட்டுக்கொள்" போன்ற முரட்டுத்தனமான பதில் வந்து சேரும். எங்கு சென்று இது குறித்து முறையிடுவது என்பதும் பொதுமக்களுக்கு தெரிவதில்லை என்பதால், சாதாரண மக்கள் தங்கள் காரியத்தைச் சாதித்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் போன்றவற்றை கொடுத்து விடுகிறார்கள். விண்ணப்பம், தகுதிச் சான்றிதழ் என எல்லாம் இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நிறைவேறும். விண்ணப்பங்கள் எப்பொழுது விண்ணப்பிக்கப்பட்டது, ஏன் காலதாமதம் ஆகிறது போன்றவை குறித்த எந்த விபரங்களும் சரியான முறையில் பாராமரிக்கப்படுவதில்லை என்பதால் மக்களின் பிரச்சனைகள் சரியாக கண்காணிக்கப்படுவதில்லை.

அரசு அலுவலகங்கள் கணினி மயமாக்கப்படுவதும், மக்களின் விண்ணப்பங்கள் முறைகளை எளிமைப்படுத்துவதும் பலப் பிரச்சனைகளை ஓரளவு தீர்க்கும், அரசின் நலத்திட்டங்கள் எந்தளவுக்கு குறிப்பிட்ட பிரிவு மக்களை எட்டுகிறது போன்றவையும் கணினி மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

அது போல அரசின் எந்தச் செயல்பாடும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அரசின் செயல்பாடு குறித்தோ, குறிப்பிட்ட திட்டங்களில் யார் யாருக்கு திட்டங்கள் ஒழுங்காக சென்று சேருகிறது என்பது குறித்தோ விபரங்கள் கேட்கும் பொழுது அதனை கொடுக்கும் வசதி கொண்டு வரப்பட வேண்டும். Right to get the information என்பது அமலாக்கப்படும் பொழுது அந்த திட்டங்களை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற அக்கறையும் அரசு அலுவலங்களுக்கு ஏற்படும் (இது குறித்தச் சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது). ஒவ்வொரு அரசு அலுவலங்களும் Quality certification பெற வேண்டும்.

ஆனால் நாட்டில் இத்தகைய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றால் இதனை "மக்கள் பிரதிநிதிகள்" தான் செய்ய வேண்டும். நாட்டில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்றால் ஜனநாயகத்தின் அதிமுக்கியமான தூண்களான மக்கள் பிரதிநிதிகள், மக்களின் பிரநிதிகளாக "சரியாக" செயலாற்ற வேண்டும். இந்தியாவில் மக்களின் பிரநிதிகள் சரியான முறையில் செயலாற்றுகிறார்களா என்பதை பார்ப்பதற்கு முன்பாக இந்த மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அரசியல் முறை குறித்த விமர்சனங்களை கவனிக்க வேண்டும்.

இந்திய தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா?

இந்தியா பெரும்பான்மையைச் சார்ந்த தேர்தல் முறையைக் கொண்டுள்ளது. இதனை First-Past-the-Post (FPTP) system என்று கூறுவார்கள். யார் அதிக ஓட்டுக்களைப் பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். யார் அதிக தொகுதிகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள். இங்கு எண்ணிக்கை தான் முக்கியம். அந்த எண்ணிக்கையைப் பெற ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். இந்த தொகுதிகளை வெல்ல பணபலம் பொருந்திய, சாதியமைப்பைச் சார்ந்த வேட்பாளர்களையே அரசியல் தலைவர்கள் முன்நிறுத்துகிறார்கள். ஏனெனில் ஓட்டுக்களைப் பெற அது தான் முக்கியம் என்ற கருத்து இங்கு நிலை நிறுத்தப்பட்டு விட்டது. பணபலம், அந்த தொகுதியில் அதிகார பலம், சாதி பலம் இவற்றை உடையவர்கள் தான் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். தங்களுக்கு எண்ணிக்கை வேண்டும் என்பதற்காக எந்த வித நியாயங்களுக்கும் கட்டுப்படாமல் இவ்வாறான வேட்பாளர்களையே அரசியல் கட்சிகள் தேர்வு செய்கின்றன. இதனால் தகுதியற்ற நபர்களே மக்களின் பிரதிநிதிகளாக மாறி விடுகிறார்கள். தகுதியான படித்தவர்கள், அறிவுஜீவிகள், சிந்தனை வளம் உள்ளவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். அரசியலில் தகுதியற்றவர்கள் அதிக அளவில் இருக்கும் பொழுது மக்களிடம் இருந்து இந்த அரசியல் முறை அந்நியப்பட்டு போய் விடுகிறது. ஆட்சியமைப்பு, மக்கள் நலம் போன்றவைக்கு தரப்பட வேண்டிய முக்கியத்துவம் குறைந்து சாதி, பணபலம் இவை தான் முக்கியம் என்றாகி விடுகிறது. சாதி, மத உணர்வுகள் தலைதூக்குகின்றன. இந்த உணர்வுகளை தூண்டி விடும் முயற்சிகளை அரசியல் கட்சிகள் மேற்கொள்கின்றன. அதனால் தங்களுடைய சாதி, மத அபிமானம், அரசியல் கட்சி சார்ந்த அபிமானம் போன்றவற்றையே மக்கள் தேர்தல்களில் முன்நிறுத்துகின்றனர்.

மக்களை கவர்ந்து அதிக ஓட்டுக்களைப் பெறுவதற்காக எல்லாவித உத்திகளையும் இன்று அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்கி கொண்டிருக்கின்றனர். இந்த இலவசங்களை வழங்குவது சாத்தியமா என்ற கேள்வியை எழுப்பினால் எங்கே தங்களுக்கு ஓட்டுக்கள் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் எல்லா கட்சிகளும் இதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் முறை மீதான அவநம்பிக்கையால் கிட்டதட்ட 20% மக்கள் வாக்களிப்பதில்லை. இன்னும் குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த தேர்தல் மேல் அக்கறை கொள்வதும் இல்லை என்ற மோசமான ஜனநாயக நிலை தான் இன்று இந்தியாவில் இருந்து வருகிறது.

இந் நிலையில் இந்த தேர்தல் முறையில் இருந்து மாற்றம் பெற்று பிரதிநிதித்துவ முறைகளை பின்பற்றலாம் என்ற ஒரு யோசனையை (Proportional Systems) சிலர் கூறி வருகிறார்கள். இந்த முறை சரியானது தானா, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதா என்பது ஒரு புறம் இருக்க, இந்த முறையை நிச்சயமாக இந்தியாவில் கொண்டு வரக்கூடிய சாத்தியங்கள் எதுவும் இல்லை என்று சொல்ல முடியும். ஒரு தேர்தல் முறையில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அதனை வேறு ஒரு புதிய கட்டமைப்புக்குள் கொண்டு வருவது சாத்தியமானது அன்று. அதுவும் இந்தியா போன்று நிறுவனப்படுத்தப்பட்டு விட்ட நாடுகளில் இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் குறித்து விவாதிக்கலாமே தவிர அதனை நடைமுறையில் கொண்டு வருவதும், இப்பொழுது இருக்கும் முறையை முற்றிலும் மாற்றுவதும் நடைமுறையில் சாத்தியமில்லாதது.

ஒரு சரியான தேர்தல் சீர்திருத்தம் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பொழுது, அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை எதிர்த்து ஒரு அவசர சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றியும் விட்டார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது எவ்வாறு ஒரு மாற்று தேர்தல் முறைக்கு தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் ? அதுவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த முறை தான் அரசியல்வாதிகளுக்கு மிகுந்த சாதகமாகவும் உள்ளது. எனவே தேர்தல் முறைகளில் இந்தியாவில் மாற்றம் சாத்தியமற்றது.

அரசியல் முறை சீர்குலைந்து போனதற்கு முக்கிய காரணம், ஓட்டுக்களைப் பெறுவதற்காக அரசியல்கட்சிகள் பணபலத்தை பிரயோகிப்பது, சாதி மத உணர்வுகளை தூண்டுவது, தகுதியான நபர்களை புறக்கணித்து விட்டு பணபலம், சாதி பலம் இருக்கின்ற வேட்பாளர்களையே முன்நிறுத்துவது போன்றவை தான். இந்த முறைகளை ஒழிக்க சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு பணம் வழங்குவது போன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் பரிசீலனையில் இருந்தன. இதனால் தேர்தல் முறையில் ஊழல் குறையும் என்று கூறப்பட்டது. அரசியலில் கிரிமினல்களின் தலையீடுகளைக் குறைக்க இருக்கும் சட்டங்களும் அவ்வளவு பலமாக இல்லை. இந்தச் சட்டங்களை கடுமையாக்க சுப்ரீம் கோர்ட் எடுத்த நடவடிக்கைகளையும் அரசியல் கட்சிகள் தடுத்து விடுகின்றன.

இருக்கின்ற சட்டங்களும் தீர்வாக வில்லை, புதிய சட்டங்களையும் இயற்ற முடியாது, சட்டங்களை பலப்படுத்தவும் அரசியல் கட்சிகள் எந்த முயற்சியையும் எடுப்பதில்லை, இருக்கின்ற தேர்தல் முறைகளையும் மாற்ற முடியாது, மாற்று சிந்தனைகளை நடைமுறை படுத்த முடியாது என பலச் சிக்கல்கள் இருக்கும் நிலையில் இந்தப் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு உள்ளது ?

இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல் திருவிழாவாகவும், மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஆட்சி அமைக்க ஒரு அரசு வேண்டும் என்பதை நோக்கியும் தான் இருந்து விடுமா ? இந்திய ஜனநாயகம் சரிந்து செல்லரித்து விடுமா ? இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்வதில் உண்மையான அர்த்தம் ஏதேனும் உள்ளதா ?

ஜனநாயகம் என்பதே மக்களுக்காகத் தான். ஜனநாயக முறைகளில் மாற்றம் கொண்டு வருவதும் சாமானிய மக்கள் கைகளில் தான் இருக்கிறது. இவ்வளவு அவநம்பிக்கை இந்திய ஜனநாயக முறைகளில் இருக்கும் பொழுதும் தேர்தல் முடிவுகள் மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிப்பதாகவே கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற பணம், சாதி, மதம் போன்றவை போதும் என்ற நிலை மாறி, மக்களுக்காக செயலாற்றினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நிலைக்கு இந்திய ஜனநாயகம் தானாகவே மாறியுள்ளதை கவனிக்க முடியும். தேர்தல் சமயங்களில் பல இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசினாலும் அரசின் செயல்பாட்டினைப் பொறுத்தே அரசியல் கட்சிகளை மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது தெரியவரும்.

அரிசி 1ரூ என்று ஆந்திராவில் ஓட்டுக் கேட்ட காங்கிரஸ், அதனை எதிர்த்து நான் அப்படி கேட்க மாட்டேன் என்று ஓட்டுக் கேட்ட சந்திரபாபு நாயுடு என்ற இருவரில் சந்திரபாபு நாயுடுவைத் தான் மக்கள் வெற்றி பெற வைத்தனர். ஆனால் அதே சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டு பின்பு அவரும் தூக்கியெறியப்பட்டது தனிக்கதை. என்றாலும் மக்களின் தீர்ப்பு இந்த இலவசங்களை பொறுத்து மட்டுமே இருப்பதில்லை. அரசின் செயல்பாடும் தேர்தலில் ஒரு முக்கிய காரணமாகத் தான் இருக்கிறது என்பதற்கு சிறு சான்று தான் இது. இந்திய ஜனநாயக முறையில் கடந்த 10ஆண்டுகளில் மக்கள் தங்களுடைய வாக்களிக்கும் முறையில் கொண்டு வந்த பலமான மாற்றங்களால் அரசியல்வாதிகள் செயல்படும் போக்கு மாறியிருக்கிறது. தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமானால் மக்களை கவர வேண்டும் என்ற நிலை இந்தியாவில் ஏற்பட்டு விட்டது. இந்த நிலை இன்னும் பலமாகும் பொழுது ஆட்சிக்கு வந்தால் ஆட்டம் போட வேண்டும் என்ற எண்ணம் அரசியல்வாதிகளுக்கு ஏற்படாது. இதே தேர்தல் முறையுடன் தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறுதல் போன்ற முறை வந்தால், இந்தியாவில் இன்னும் நிறைய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அது போன்ற ஒரு முறையை கொண்டு வருவதிலும் பல சிக்கல்கள் உள்ளன.

இந்தியாவில் ஜனநாயகம் அமைக்கப்பெற்று 55ஆண்டுகளே ஆகின்றன. வளர்ந்த நாடுகளின் சில நூறு ஆண்டுகள் வரலாற்றுடன் ஒப்பிடும் பொழுது இந்திய ஜனநாயகம் கடந்து வந்த பாதை சவால் நிறைந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகளில் ஜனநாயகம் தழைக்க முடியாது என்று சொல்லப்பட்ட வாதத்தை இந்தியா மறுத்துள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டமாக தொடங்கிய பல நாடுகளின் போராட்டங்கள் இறுதியில் சர்வாதிகாரமுறைக்கு தான் வழி அமைத்து இருக்கின்றன. பிரபலமான மக்கள் தலைவர்கள் சர்வாதிகாரிகளாக மாறி இருக்கிறார்கள். ஆனால் இந்திய விடுதலைப் போராட்டம் ஜனநாயக வழிமுறைக்கு உத்திரவாதம் அளித்ததுடன் மட்டுமில்லாமல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முறையை காப்பாற்றியே வந்துள்ளது. பல சவால்களை கடந்து, இன்னும் பல சவால்களை எதிர்கொண்டுச் செல்லத் தான் போகிறது.

கடந்த காலங்களில் இருந்த கல்வியறிவின்மை, ஏழ்மை குறைந்து இன்று இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவாகும் நிலையில் இருக்கிறது. ஒரு நாட்டின் ஜனநாயகம் தழைக்க, மாற்றம் பெற பொருளாதாரமும் ஒரு முக்கிய காரணியாகவே பல நாடுகளில் இருந்துள்ளது. இந்தியாவில் படித்தவர்களும் பெருகி, பொருளாதாரமும் பெருகும் பொழுது ஜனநாயக முறையில் பல மாற்றங்களும் ஏற்படவேச் செய்யும். அந்த மாற்றங்கள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று திடமாக நம்புவர்களின் நானும் ஒருவன்.

Leia Mais…

ஜனநாயகத்தின் தூண்கள் :- நீதித்துறை

ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் நீதிமன்றங்களுக்கு குறிப்பிடத்தக்க இடம் உண்டு. இந்தியாவில் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு பரவலான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செல்வக்குள்ள பிரமுகர்கள், அரசியல்வாதிகள் போன்றோரை சிறைக்கு அனுப்புவதால் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறதே தவிர சாமானிய மக்களுக்கு நீதிமன்றங்களின் மூலமாக சரியான வகையில் நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. இன்று இந்தியாவில் சுமாராக 2 கோடி வழக்குகள் தேங்கிப் போய் இருக்கின்றன. தேங்கிப் போய் கிடக்கும் இந்த வழக்குகள் பெரும்பாலும் சாமானிய மக்களின் சிவில், கிரிமினல் வழக்குகள் தான். குற்றவாளிகள் இதனால் தண்டிக்கப்படாமல் தப்பி விடுகிறார்கள். அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். குற்றாச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்படும் அப்பாவி மக்கள் அந்த வழக்கை நடத்த முடியாமல், ஜாமீன் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் இருக்கும் அவலங்களும் நிறைய நடந்து கொண்டிருக்கிறன. அரசு இயந்திரங்களால் கைது செய்யப்படும் அப்பாவி மக்கள், அந்த வழக்குகளை நடத்த முடியாமல் போய் பல வருடங்கள் சிறையில் இருக்கும் நிலை இருந்து வருகிறது.

இவ்வாறு வழக்குகள் வருடக்கணக்கில் நடக்கும் பொழுது அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. மக்களுக்கு நியாயம் கிடைக்காத பொழுது ஜனநாயகத்தின் தூண்கள் என்று சொல்லப்படும் அமைப்புகள் மீது வெகுஜன மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. அரசியல்பிரமுகர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் மட்டுமே தீர்ப்பு சொல்லும் அமைப்பாக நீதிமன்றங்கள் மாறிவிடக்கூடாது.

சல்மான்கான் ஒரு தவறு செய்த பொழுது தாங்களாகவே முன்வந்து அவர் மீது வழக்கு தொடுத்த சில நீதிமன்றங்களின் செயலை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அது நீதிமன்றங்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் நாட்டின் பல மூலைகளில் பாதிக்கப்படும் பல மக்களின் பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்களில் நியாயம் கிடைக்காத பொழுது நீதிமன்றங்கள் முழுமையாக இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியாது.

வழக்குகளை விரைவாக்க மாற்று முயற்சிகளையும், சீர்திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை என்பது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், நீதிமன்றங்களின் நேரங்கள் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதும், நீதிமன்றங்களின் விடுமுறை காலங்கள் போன்றவற்றிலும் சீர்திருத்தங்கள் நிச்சயம் தேவைப்படுகிறது. இன்று வழக்குகளை தாமதப்படுத்தும் முயற்சிகளில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். வாய்தா, தள்ளிவைப்பு, சாட்சியங்கள் விசாரணை போன்றவற்றில் நிறைய நேர விரயம் ஏற்படுகிறது. குற்றவாளிகள் வழக்குகளை தொடர்ந்து தள்ளிவைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தாமதத்தை கட்டுப்படுத்த நீதிமன்றங்களில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சாட்சியங்கள் மீதான விசாரணையில் நவீன யுத்திகளை கைக்கொள்ளலாம். இது போன்றவையெல்லாம் ஏற்கனவே அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

அது போன்றே நீதிமன்றங்களில் ஊழல் என்பது ஜனநாயக முறைகளில் மக்களை நீதிமன்றங்களில் இருந்து அந்நியப்படுத்தி விடுகிறது. ஆனால் மேல்நீதிமன்றங்களில் இந்த அளவுக்கு ஊழல் இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் விடயம்

முந்தையப் பதிவு

திசைகள் கட்டுரை

Leia Mais…

கம்யுனிச காதல் - 1

இந்தியாவில் கம்யுனிசம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகளோ, தலைவர்களோ அல்ல. ஒரு மாநிலத்தின் பெயர் தான் நம் நினைவுக்கு வரும். அந்த மாநிலம் தான் மேற்கு வங்காளம். இங்கு ஆட்சி மாற்றம் நிகழந்தால் அது உலகெங்கிலும் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்படும். ஆனால் ஏனோ அந்த வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இம் முறையும் ஆட்சி மாற்றம் நிகழப்போவதில்லை என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. புத்ததேவ் பட்டாச்சாரியாவின் தலைமையில், இழந்திருந்த தன் வாக்கு வங்கியை இடதுசாரிகள் மீண்டும் பலப்படுத்திக் கொண்டுள்ளனர் என CNN-IBN கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கடந்த 30வருடங்களாக இடதுசாரிகளின் ஆட்சி தான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. உலகில் ஜனநாயக முறைப் படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் முறையில் 30 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஒரே கம்யுனிச அரசாங்கம் மேற்கு வங்காளம் தான். இது உலகெங்கிலும் விமர்சனப் பார்வையுடனும், ஆச்சரியத்துடனுமே பார்க்கப்பட்டுள்ளது. எனக்கும் இந்த ஆச்சரியம் உண்டு. கம்யுனிசத்திற்கும் மேற்கு வங்காளத்திற்கும் அப்படி என்ன காதல் ?

இந்தியா பொருளாதார ரீதியில் முன்னேறி வரும் நேரத்தில் இந்த முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பவர்களில் முக்கியமானவர்களாக மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்படும் கம்யுனிஸ்ட்களை நான் நினைக்கிறேன். அந்த வகையிலும் மேற்கு வங்காளம் ஏன் தொடர்ந்து கம்யுனிச மாநிலமாக இருந்து வருகிறது என்ற எனது ஆர்வத்தின் விளைவும் தான் இந்தப் பதிவு. வங்காளிகள் பொதுவாக இந்தியாவில் படித்தவர்களாகவும், அறிவுஞானம் உள்ளவர்களாகவும், தங்கள் மொழி மீது அதீத பற்று கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். அது உண்மையும் கூட. அப்படிப்பட்ட படித்தவர்கள் இருக்கும் ஒரு மாநிலம் இந்த நவீன பொருளாதார யுகத்திலும் ஏன் கம்யுனிசத்தை பின்பற்ற வேண்டும் ?


கம்யுனிசம் என்பது ஒரு theoretical சித்தாந்தம். இந்த "theoretical" சித்தாந்தம் இது வரையில் எந்த நாட்டிலும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. லெனினின் ரஷ்ய புரட்சியால் அமைந்த அரசாங்கம் கூட கம்யுனிசத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை. ஆனாலும் கம்யுனிசம் மீது உலகெங்கும் பல நாடுகள் கொண்ட காதல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சித்தாந்தம், யதார்த்த வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத நிலையை என்றைக்கோ எட்டி விட்டது. ரஷ்யாவை லெனின் உருவாக்கிய பொழுது கூட கார்ல் மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளை முழுமையாக லெனினால் கைக்கொள்ள முடியவில்லை. மார்க்ஸ்சின் கம்யுனிச சிந்தனைகளில் இருந்து "நழுவி" அவர் நிலைநிறுத்திய கொள்கைகள் தான் பின் நாளில் "லெனினிசம்" என்று பிரபலமாயிற்று. அது போலவே கம்யுனிசத்தில் பல கூறுகள் பல்வேறு காலகட்டத்தில் உருவாகின. பல புதிய பெயர்களும் அதற்குச் சூட்டப்பட்டன. லியான் ட்ராட்ஸ்கி, மாவோ போன்றவர்களின் சிந்தனைகள் கம்யுனிசத்தின் பல்வேறு வடிவங்களாக தோன்றின. ஆனால் கம்யுனிச சிந்தனையையே மாற்றி எழுதிய ஸ்டாலினின் "ஸ்டாலினிசம்", கம்யுனிசமாக ஒப்புக்கொள்ளப்பட்டதில்லை. (ஸ்டாலினிசம், லெனினிசம் போன்றவையெல்லாம் அவர்கள் எழுதி வைத்த சிந்தனைகள் அல்ல. அவர்கள் செயல்பட்ட விதம் தான் பின்னர் அவ்வாறு அழைக்கப்பட்டது). ஆனால் அந்த "ஸ்டாலினிசம்" தான் உலகெங்கிலும் கம்யுனிசத்திற்கு கவர்ச்சியையும் கொடுத்தது. அந்த கவர்ச்சியால் இந்தியா உட்பட பல காலனியாதிக்க நாடுகள் கம்யுனிசம் தான் நாடு முன்னேற அனைத்து மக்களும் நலம் பெற சிறந்த வழி என முடிவு செய்தன. பல நாடுகள் கம்யுனிசத்தை பின்பற்ற தொடங்கின.

இந்தியா முழுமையான கம்யுனிசத்தை கைக்கொள்ளவில்லை. இதற்கு ஸ்டாலினின் சர்வாதிகாரம் ஒரு முக்கிய காரணம். இந்தியா சோஷலிச முறைப்படி செல்ல வேண்டிய அதே நேரத்தில் முழு கம்யுனிஸ்ட் நாடாகவும் மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் பலருக்கு இருந்தது. குறிப்பாக நேருவுக்கு இருந்தது. அதன் விளைவு தான் ஒரு கதம்பமான அமைப்பாக, ஆனால் சோஷலிசம் மேல் கொண்ட அதீத காதலுடன் இந்திய பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருந்தது.

கம்யுனிசம் சிதைந்து போனதற்கு கம்யுனிசம் என்ற பெயரில் ஸ்டாலின் எழுப்பியிருந்த பிம்பம் தான் முக்கிய காரணம். ஸ்டாலினின் சர்வாதிகார முறைகளை பல நாடுகளால் பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே கம்யுனிசம் மீதான கவர்ச்சி படிப்படியாக குறைந்து விட்டது. தனி மனித சுதந்திரம் மேல் அதிக நம்பிக்கை கொண்டிருந்த நேருவால் ஸ்டாலினின் சர்வாதிகார முறையை பின்பற்ற முடியவில்லை. அதனாலேயே ஸ்டாலின் பெற்ற வெற்றியை நேருவால் பெற முடியவில்லை.

மார்க்ஸ், லெனினின், ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, மாவோ என பல்வேறு பரிமாணங்களில் வர்க்க பேதமில்லா சமுதாயத்தை "உலகெங்கிலும்" அமைக்க உருவாகிய கம்யுனிசம் தான் இன்று குறுகிய பிராந்திய உணர்வுகளுடன் பல நாடுகளில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளது. வர்க்க பேதமில்லா சமுதாயம் அமைக்க குரல் கொடுத்த மாவோ தான் திபெத் மீது தாக்குதல் தொடுத்து திபெத்தை சீனாவுடன் இணைத்தார். மனித உரிமை மீறல்களும் அங்கு அரங்கேறின. மக்களின் விடுதலை பற்றி பேசும் சில கம்யுனிச குழுக்கள் தான் திபெத், ஈழம் போன்ற மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கின்றன. இனவெறி பிடித்த சிங்கள ஜேவிபியுடன் கம்யுனிச ரீதியில் உறவாட முடிகிற இந்திய மார்க்ஸ்சிட்ஸ்களால் அதே கம்யுனிசத்தை தங்களுடைய சித்தாந்தமாக கொண்டிருக்கிற புலிகளுடன் உறவாட முடிவதில்லை என்பதும் ஆச்சரியம் தான். கம்யுனிச நாடு என்று கூறிக்கொள்ளும் சீனா தான் இன்று உலகில் முதலாளித்துவ ரீதியிலான பொருளாதார முறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடு. இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களை "தில்லியில்" எதிர்க்கும் மார்க்ஸ்சிஸ்ட்கள் தான் "கல்கத்தாவில்" அந்நிய முதலீட்டை அதிகரிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி பலவிதங்களில் இன்று கம்யுனிசம் சிதைந்து, உருமாறி போய் விட்டது. கம்யுனிசத்தை பின்பற்றக் கூடிய நாடுகள் கூட தனியார் பொருளாதார மயமாக்கம் தொடங்கி முதலாளித்துவ ஆதரவு நிலை வரை தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. அப்படி மாற்றிக் கொண்டதன் காரணமாகவே சரிந்து கொண்டிருந்த கம்யுனிச செல்வாக்கினை மேற்கு வங்காளத்தில் மீண்டும் வலுவாக்க புத்ததேவ் பட்டாச்சாரியாவால் முடிந்திருக்கிறது.

இன்று "மே தினம்" என்பதால் மற்றொரு முறை முதலாளித்துவத்திற்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கும். இன்றைய காலகட்டத்தில் ஒரு கார்ப்ரேட் நிர்வாக முறையில் இயங்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் இன்னும் "சுரண்டும் முதலாளித்துவம்" என்பதற்கு ஏதேனும் பொருள் இருக்கிறதா ?

இந்தியா, இலங்கை, நேபாளம் என தொடங்கி பல காலனி ஆதிக்க நாடுகளில் உள்ள பல இயக்கங்கள் கம்யுனிசம் மீது கொண்ட காதல் ஆச்சரியமானது அல்ல. காலனி ஆதிக்கத்தில் நிலவிய வறுமை, ஏற்றத்தாழ்வுகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்த சாதி ரீதியான அடக்குமுறை இவற்றால் "சமதர்ம" சமுதாயத்தை அமைக்க கம்யுனிசம் ஒரு சரியான வழியாக பலருக்கு தோன்றியது. நில உரிமை இல்லாத பலருக்கு பொதுவுடமை சிறந்த சித்தாந்தமாக தோன்றியது. ஆனால் ரஷ்யாவிலேயே இதனை நிறைவேற்ற முடியவில்லை. ரஷ்ய புரட்சிக்கு பின்பு லெனின் தனது கம்யுனிச சிந்தனைகளில் நிறைய சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. கம்யுனிசம் ரஷ்யாவின் பல பிரச்சனனகளுக்கு உடனடி தீர்வாக முடியாது என்பதை லெனின் உணர்ந்தார். தனது புதிய பொருளாதார கொள்கை (New Economic Policy) மூலம் லெனின் அந்த சமரசத்தை செய்து கொண்டார். முழுவதும் கம்யுனிசம் என்ற தனது கொள்கை தற்போதைய ரஷ்ய சூழ்நிலையில் எடுபடாது என்பதை உணர்ந்த லெனின் கம்யுனிசத்தை நோக்கி ஒரு அடி வைக்க வேண்டுமானால் இரு அடிகள் பின்நோக்கி சென்று தான் தீர வேண்டும் என்று வாதிட்டார் ( One Step Forward, Two Steps Back). அதன் பிறகு ஸ்டாலின் கொண்டு வந்த முறைகள் வெற்றி பெற்றன என்றாலும், அது கம்யுனிசத்தைச் சார்ந்தது அல்ல என்று தான் லியான் ட்ராட்ஸ்கி மற்றும் ஸ்டாலினுக்கு பிறகு வந்த ரஷ்ய தலைவர்கள் வாதிட்டனர்.

ஸ்டாலினின் வெற்றியை தான் ரஷ்யாவில் கம்யுனிசத்தின் வெற்றியாக கூற முடியும் என்னும் பொழுது, ரஷ்யா எப்படி கம்யுனிச சிந்தனைகளால் முன்னேறியது என்று கூற முடியும் ?

(மேற்கு வங்காளத்தில் ஏன் கம்யுனிஸ்ட்கள் தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றி கொண்டு இருக்கிறார்கள் என எழுத தொடங்கினேன். நீண்ட நாட்களாக கம்யுனிசம் குறித்த எழுத நினைத்த விடயங்களும் சேர்ந்து கொண்டன. அடுத்தப் பதிவில் அது குறித்து எழுதுகிறேன்)

என்னுடைய "பில்லியன் டாலர் கனவுகள்" பதிவில் லெனின், ஸ்டாலின் குறித்து எழுதிய சில பதிவுகள்

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=2

http://www.tamiloviam.com/unicode/thodargalpage.asp?folder=Sasi2&taid=3

Leia Mais…