வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Sunday, January 21, 2007

நியூஜெர்சி பொங்கல் விழா, மற்றும் சில

நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. அமெரிக்காவில் நண்பர்களுடன் இருந்த வரையில் இத்தகைய விழாக்களில் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்பட்டதில்லை. ஆனால் குடும்பத்துடன் இருக்கும் பொழுது பொழுதுபோக்கிற்காக இத்தகைய விழாக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.

நான் அரங்கில் நுழைந்த பொழுது பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் நன்றாக தமிழில் பேசிக்கொண்டிருந்தார். பரவாயில்லையே என்று நினைத்த நேரத்தில் ஆங்கிலத்திற்கு நுழைந்து அப்புறம் நிறைய ஆங்கிலம், போனால் போகிறது என்று சில வார்த்தைகளை தமிழில் பேசினார். Over to NJ Tamil Sangam President என்றவுடன் வந்த தமிழ்ச்சங்க தலைவராவது தமிழில் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். வணக்கம் என்று தொடங்கி ஆங்கிலத்திலேயே எல்லோருக்கும் சில Instructions கொடுத்தார். இறுதியாக "We have ordered fresh flowers from chennai. மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போங்கள்" என்று 4 வார்த்தைகள் தமிழில் பேசி முடித்தார்.

தமிழ்ச்சங்க விழாவை தொகுத்து வழங்குவதில் தமிழை சரியாக பயன்படுத்தாத அலட்சியம் மற்றும் தமிழ்ச்சங்க தலைவர் கூட தமிழில் பேசுவதை முக்கியமாக நினைக்காதது என்னை எரிச்சல் படுத்தியது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் தொகுத்து வழங்கியிருக்கலாம்.

நாடகம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பார்வையாளர்கள் சிலர் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். மேடையில் இருந்து ஒருவர் அனைவரும் அமைதியாக நாடகத்தை பாருங்கள் என்று கூறினார். கூடவே "குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். குழந்தைகளை அழாமல் பார்த்துக்கொள்ளும் டெக்னிக் கற்று கொடுக்கிறீர்களா என்று கேட்க தோன்றியதை அடக்கிக் கொண்டு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு நடையை கட்டினோம்

நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே ? சக்கரைப் பொங்கல் சுவையாக இருந்தது என்பதை தவிர No Comments

******

பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் போல ஒவ்வொரு வருடமும் பொங்கல் சமயத்தில் புத்தக கண்காட்சி புண்ணியத்தால் நிறைய புத்தகங்களை பதிப்பகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. புதிய பதிப்பகங்களும் முளைத்து விடுகின்றன. இவையெல்லாம் ஆரோக்கியமான மாற்றமா என்பதை பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களை கொண்டு தான் தீர்மானிக்க முடியும். பொங்கலுக்கு வெளியாகி இருக்கிற புத்தகங்கள் வரிசையில் சில என்னை கவர்ந்தன.

கிழக்குப் பதிப்பகத்தின் ஒலிப்புத்தகங்கள் நல்ல முயற்சி. IPodல் பாட்டு கேட்பதற்கு பதிலாக இதனை கேட்கலாம். வேலைக்கு சென்று வரும் 2 மணி நேரத்தை உருப்படியாக செலவிட்டது போல இருக்கும்.

ஹிந்து நாளிதழின் ராம், துக்ளக் சோ, சுப்ரமணியம் சாமி ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் ? அப்படி தான் இருந்தது முஷ்ரப் புத்தகத்தின் தமிழாக்க வெளியீட்டு விழா. Interesting !!

ஆங்கிலப் புத்தகத்தின் தலைப்பில் (In the Line of Fire) இருந்த கவர்ச்சி "உடல் மண்ணுக்கு" என்ற தமிழ்ப் பெயரில் இல்லாதது போல உணர்ந்தேன். ஆங்கிலப் புத்தகம் வழக்கமான சுயசரிதை போல இல்லாமல் நல்ல விறுவிறுப்பாக இருந்தது. உலக அளவில் அதிகம் பேசப்பட்ட புத்தகம் தமிழல் உடனே மொழிபெயர்க்கப்படுவது நல்ல முயற்சி தான்.

******

சிறீலங்கா இராணுவம் வாகரையை கைப்பற்றி இருக்கிறது. புலிகள் தங்கள் படைகளை வாகரையில் இருந்து விலக்கி கொண்டுள்ளனர். இது ஒரு strategic withdrawal தான், என்றாலும் இதனை பெரிய வெற்றியாக ஊடகங்கள் முன்நிறுத்துகின்றன. வாகரையை இராணுவம் கைப்பற்றியிருக்கும் சூழலில் புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்ற வாதம் இன்னும் அதிகமாகும்.

இது வரை நடந்தவற்றை நோக்கும் பொழுது சில விடயங்கள் புலப்படும்

  • புலிகள் இதுவரை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தவில்லை. புலிகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் (Surface to Air missiles - SAM) உள்ளன. சமாதானக் காலத்தில் இன்னும் அதிகமாக கூட பெற்றிருக்கலாம்

  • புலிகளிடம் சில இலகுரக விமானங்கள் உள்ளன. இதனை பெரும் செலவிட்டு வாங்கியிருக்கும் புலிகள் அதனை இது வரை பயன்படுத்தவில்லை

  • பெரிய அளவிலான கடற்படை தாக்குதலை புலிகள் நடத்தவேயில்லை

  • புலிகளின் தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கும். முகமாலையில் தாக்குதல், அடுத்த சில தினங்களில் ஹபரணையில் தாக்குதல், காலியில் தாக்குதல் என புலிகள் நடத்திய தொடர் தாக்குதலுக்கு பிறகு இராணுவ பலம் புலிகள் வசம் சாய்ந்து விட்டதாக ஊடகங்கள் எழுதின. சிறீலங்கா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினாலும் புலிகள் இது வரை பெரிய பதில் தாக்குதல் எதுவும் நடத்த வில்லை.

இவற்றையெல்லாம் நோக்கும் பொழுது ஒரு விடயம் புலப்படும் - தங்களுடைய பலத்தை புலிகள் தக்கவைத்து கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத நேரத்தில் பிரயோகிக்கலாம்.

They have lost some battles, but not war. ஆனால் இந்தப் போரை யாருமே வெல்ல முடியாது என்பது தான் உண்மை.

இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டியது - சர்வதேச சமூகத்தின் அமைதி. சிறீலங்கா இராணுவம் முகமாலையில் தோற்ற பொழுது பாய்ந்தோடி வந்த சர்வதேச சமூகம், தற்பொழுது அமைதி காத்து வருகிறது. அதன் இரட்டை வேடம் தெளிவாக புலப்படுகிறது.

******

நியூஜெர்சியில் இந்த வருடம் மிகவும் வெப்பமான குளிர் காலம் என்றும், Snow பார்க்க முடியாதா என்றும் நினைத்து கொண்டிருந்த நிலையில், இந்த வாரம் நல்ல குளிர். லேசான Snow இருந்தது. ஜனவரியில் கூட 70°F அளவு இருந்த வெப்பநிலை இந்த வாரம் 20°F அளவுக்கு வந்து குளிர்காலம் எட்டிப் பார்த்து இருக்கிறது. வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதத்தில் காணக்கூடிய நியூயார்க் Cheery blossom இந்த வருடம் ஜனவரியிலேயே எட்டிப் பார்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Leia Mais…
Monday, January 15, 2007

புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ?

சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்கு காரணம் கருணா மீதான நம்பிக்கை என்பது ஒரு புறம் இருக்க, கிழக்கு இலங்கை புலிகளின் பலவீனமான பகுதியாகவும் இருந்து வந்தது. இதனை இராணுவ ரீதியாக கைப்பற்றுவது புலிகளுக்கு சவால் மிகுந்த காரியம். கிழக்கு இலங்கையை அரசியல் ரீதியாக வெற்றி கொள்வது தான் புலிகளுக்கு சரியான உத்தியாக இருந்திருக்கும்.

ஒட்டுமொத்த தமிழருக்கும் ஒரே பிரதிநிதியாக புலிகள் தங்களை முன்நிறுத்தியதற்கு எதிராகத் தான் கருணாவை இலங்கை-இந்திய உளவு நிறுவனங்கள் புலிகளுக்கு போட்டியாக உருவாக்கின. கிழக்கிலங்கை மக்களுக்கும், வடக்கு பகுதி மக்களுக்கும் காலங்காலமக நிலவிய பிரச்சனையை உளவு நிறுவனங்கள் இதற்கு பயன்படுத்திக்கொண்டன. இராணுவ ரீதியாக இவர்களின் இந்த முயற்சி எடுபடவில்லை என்றாலும் அரசியல் ரீதியாக இதனை சாதித்துக் கொள்ள தற்பொழுது முனைகின்றனர்.

புலிகள் வாகரையை இழப்பதாலோ, கிழக்கு இலங்கையில் கருணா தலைமையில் ஒரு மொம்மை அரசாங்கம் அமைவதாலோ புலிகளுக்கு இராணுவ ரீதியில் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை, என்றாலும் அரசியல் ரீதியாக இதனால் புலிகளுக்கு நிறைய நிர்பந்தங்கள் ஏற்படும்.

புலிகள் இராணுவ ரீதியில் மிகவும் பலவீனமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிற நிலையில், புலிகளின் நடவடிக்கைகளும் இந்த சந்தேகத்தை வலுவாக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில் புலிகளின் உண்மையான பலம் குறித்த கேள்விகள் எழுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பூரை புலிகள் இழந்த பிறகு கூட இவ்வாறு ஊடகங்கள் எழுதிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பூரை கைப்பற்றிய பிறகு ஆனையிறவை நோக்கி சிறீலங்கா இராணுவம் நகரக்கூடும் என்றும், ஆனையிறவை கைப்பற்றியப் பிறகு அந்த பலத்துடன் பேச்சுவார்த்தைக்கு சிறீலங்கா செல்லும் என்றும் ஊடகங்களில் செய்திகள் காணப்பட்டன. DBS.ஜெயராஜ் கூட இது போன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் ஆனையிறவை நோக்கி முன்னேறிய இராணுவத்தை புலிகள் முகமாலையில் தாக்கி அவர்களுக்கு மிகக் கடுமையான தோல்வியை ஏற்படுத்தினர். அதன் பிறகு சில மாதங்கள் குறைந்திருந்த "புலிகள் பலவீனமடைந்து விட்டனர்" என்ற வாதம் இப்பொழுது மறுபடியும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது.புலிகள் பலவீனமடைந்து விட்டனரா என்பது புலிகளை தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது தான் உண்மை.

புலிகள் இது வரை தங்கள் பலத்தில் சிறிய அளவு கூட பயன்படுத்த வில்லை. ஆனால் சிறீலங்கா இராணுவம் தன்னுடைய விமானப் படையின் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. இராணுவச் செலவு அதிகமாகிக் கொண்டே இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. புலிகளை அழிக்க இது தான் சரியான சமயம் என்பதாக சிறீலங்கா ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. கிழக்கு பகுதியை கைப்பற்றியப் பிறகு வடக்கு பகுதியையும் கைப்பற்றுவோம் என்கிறார் சிறீலங்கா இராணுவ தளபதி போனஸ்கா.

நிறைய இடங்களை கைப்பற்றி அதனை தக்க வைக்க கூடிய வலிமை சிறீலங்கா இராணுவத்திற்கு உள்ளதா என்பதை எதிர்வரும் நாட்கள் தெளிவு படுத்தும்

புலிகளின் யுத்தம் குறித்து எங்கோ படித்த சில வரிகள் இவை.
கொரில்லா யுத்தம் குறித்து மாவோ இவ்வாறு கூறுகிறார்
"the enemy advances, we retreat; the enemy camps, we harass; the enemy tires, we attack; the enemy retreats, we pursue."

புலிகளின் கடந்த கால யுத்த முறை இவ்வாறு தான் இருந்தது. the enemy advances, we retreat என்ற நிலையில் இருந்து தான் முன்னேறி ஆனையிறவு உட்பட பல இடங்களை கைப்பற்றினர்.

கடந்த காலங்களுக்கும் இப்போதைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இம்முறையும் புலிகளால் தாங்கள் இழந்த இடத்தை கைப்பற்ற முடியுமா ?

புலிகள் பதில் தாக்குதல் நடத்தும் வரை அவர்களின் உண்மையான பலத்தை யாராலும் கணிக்க முடியாது

Leia Mais…