வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Thursday, December 29, 2005

உளவு நிறுவனங்கள்

உளவு நிறுவனங்களின் செயல்பாடுகளை படிக்கும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., இந்தியாவின் ரா, அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் போன்ற நிறுவனங்கள் செயல்பாடும் விதம் மிகவும் சுவாரசியமான கதை. இவர்கள் செயல்படும் விதம் தான் சுவாரசியமானதே தவிர அதன் End Result மோசமானது.

பெரும்பாலும் தன்னுடைய எதிரி நாட்டையோ அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட மறுக்கும் நாட்டையோ நாசமாக்குவது, அந்த நாடுகளிடம் இருந்து இராணுவ ரகசியங்களை பெறுவது, அந் நாடுகளை கண்காணிப்பது போன்றவையே உளவு நிறுவனங்களின் முக்கிய குறிக்கோள்.

இவ்வாறான பல உளவு நிறுவனங்களில் உலகின் மிகச் சிறந்த உளவு நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம் தான். 1972ம் ஆண்டு முனிச் நகரில் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டியின் பொழுது இஸ்ரேலிய அத்லட்டிக் வீரர்கள் பாலஸ்தீன தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேலின் மொசாட், இதற்கு காரணமானவர்களை உலகின் பல மூலைகளில் இருந்தவர்களை தேடிச் சென்று கொன்று தீர்த்த கதை ராஜேஷ்குமாரின் க்ரைம் நாவல்களை விட மிக சுவாரசியமானது. ஆனால் இந் நிகழ்வு உளவு நிறுவனங்களின் கோர முகத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. இதற்கு அந் நாட்டின் பிரதமர் போன்ற தலைவர்களும் ஆதரவு கொடுத்தார்கள் என்பதை நினைக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.

உலகின் அனைத்து உளவு நிறுவனங்களுமே நாசகார செயல்களை செய்வதில் கைதேர்ந்தவர்கள். நமக்கு பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரியும். காஷ்மீர் தொடங்கி கன்யாகுமரி வரை பாக்கிஸ்தானின் உளவாளிகள் பல இடங்களில் நிறைந்திருக்கிறார்கள். காஷ்மீர், பஞ்சாப், அசாம், ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா என்று இவர்கள் இல்லாத இடமே இல்லை. பாக்கிஸ்தானின் உளவாளிகளில் முஸ்லீம்களை விட இந்துக்கள் மற்றும் பிறர் தான் அதிகம். ஆண்கள் மட்டும் தான் உளவாளிகள் என்பது கிடையாது. பெண்களும் உண்டு. உளவாளியாக இருப்பவர்களுக்கு பணம் கொட்டி கொடுக்கப்படும். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பு சர்வசக்தி படைத்த ஒரு அதிகார மையம். பாக்கிஸ்தானின் அரசுக்கோ, இராணுவத்திற்கோ கூட கட்டுப்படாமல் ஒரு நிழல் அரசாங்கம் போலவே இவர்கள் நடந்து கொள்வார்கள். இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகம். தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைக்க முக்கிய காரணமே ஐ.எஸ்.ஐ தான். அது போல பஞ்சாப், காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு தீவிரவாதிகளையும் நுழைத்தது ஐ.எஸ்.ஐ தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் நடக்கும் பல குண்டுவெடிப்புகளுக்கு பிண்ணணியில் இருப்பதும் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் தான். இது தவிர இந்திய இராணுவ இரகசியங்களைப் பெறுவது, தொழில்நுட்பங்களை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் இருந்து திருடுவது போன்றவையும் இவர்களின் முக்கியமான வேலை.

அது போலவே நம்முடைய இந்திய உளவு அமைப்பான ராவும் பாக்கிஸ்தானிலும், இலங்கையிலும் மற்றும் பிற தெற்காசிய நாடுகளிலும் நுழைந்து பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போல ஒரு நிழல் அரசாங்கமாகவோ, சர்வ அதிகாரம் படைத்த அமைப்பாகவோ இல்லாமல் இந்தியப் பிரதமரின் நேரடி மேற்பார்வையில் அதிகபட்ச அதிகாரத்துடனே ரா செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ரா உளவு அமைப்பை தொடங்கி அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டவர் இந்திரா காந்தி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் ராவின் அறிக்கைகளையே பெரும்பாலும் நம்பி இருந்தனர். இராணுவ அதிகாரிகளின் அறிவுரைகளை விட ராவின் அறிவுரைகளையே இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் அதிகம் நம்பினர். இதனாலேயே இலங்கை விஷயத்தில் இந்தியாவிற்கு பின்னடைவு ஏற்பட்டது என இந்தியப் பாதுகாப்பு படையின் பின்னடைவு குறித்து எழுதிய பல இராணுவ நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் - ரா சர்வ அதிகாரம் பொருந்திய அமைப்பாக இந்தியப் பிரதமர்களின் நம்பிக்கையை பெற்ற அமைப்பாக இருந்திருக்கிறது. தொடர்ந்து அதே நிலையிலேயே இருந்தும் வருகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதில் ராவின் பங்களிப்பு முக்கியமானது.

ரா அமைப்பு 1968ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது தொடங்கப்பட்டது. அப்போதைய ஐ.பி - Intelligence Bureau அதிகாரி. ஆர். என். காவ் ரா அமைப்பு தொடங்குவதற்கு காரணமாக இருந்தார். Research and Analysis Wing என்பதன் சுருக்கம் தான் RAW. ஆரம்ப காலங்களில் ரா அதிகாரிகள் பெரும்பாலும் இந்திய தூதரகங்களில் தான் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் தற்பொழுது பல இடங்களில் அவர்கள் பரவி இருக்கின்றனர். இந்திய மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் இருப்பது இவ்வாறான உளவு வேலைகளுக்கு வசதியாக இருக்கிறது. இவர்கள் பல நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டே உளவு வேலைகளையும் செய்வார்கள். ரா தொடங்கப்பட்ட காலத்தில் அதன் நோக்கம் அண்டை நாடுகளை இந்தியாவிடம் பணிய வைப்பது. இந்தியாவை இப் பிரதேசத்தின் வல்லரசாக, "பிரதேச பெரியண்ணண்" போல உருவாக்குவது தான் ராவின் முக்கிய குறிக்கோள். தெற்காசிய பிரந்தியத்தில் தான் வல்லரசாக வேண்டும், அதற்காக என்றால் பிற நாடுகள் இந்தியாவுடன் அணுசரணையாக இருக்க வேண்டும் என்பதாக இந்தியாவின் வெளியுறவு கொள்கை அமைந்து இருந்தது.

தெற்காசியாவில் ராவின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ஆரம்ப காலத்தில் பாக்கிஸ்தான், சீனா இவற்றை குறி வைத்து தான் ரா செயல்பட தொடங்கியது. ஆரம்பத்தில் சுமார் 250 பேருடன் தொடங்கப்பட்ட ரா பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. ஒரு கட்டத்தில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட ரா உளவாளிகள் பாக்கிஸ்தானில் இருப்பதாக பாக்கிஸ்தான் குற்றம்சாட்டி இருந்தது.

ராவின் வெற்றிகளில் முக்கியமானது பங்களாதேஷ் உருவானது தான். கிழக்கு பாக்கிஸ்தான், பாக்கிஸ்தானை பிளக்கும் ராவின் நோக்கத்திற்கு சரியான இடமாக இருந்தது. கிழக்கு பாக்கிஸ்தானில் உள்ள வங்காளிகள் மேற்கு பாக்கிஸ்தானால் நிராகரிக்கப்பட்டு இருந்தனர். "முக்தி பாகினி" என்று சொல்லப்படும் பாங்களாதேஷ் போராளி குழுக்களுக்கு ரா இந்தியாவில் பயிற்சி அளித்தது. இந்த போராளி அமைப்பு பாக்கிஸ்தானுக்கு எதிராக செயல்பட தொடங்கியது. 1971ல் இந்திய -பாக்கிஸ்தான் போரின் வெற்றி இந்திய இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி என்பதை விட ராவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம். இந்தியா வெற்றி பெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த பிறகு இந்திய இராணுவத்தை கிழக்கு பாக்கிஸ்தானில் நுழைத்து ரா இந்தியாவை வெற்றி பெற வைத்தது.

ராவின் மற்றொரு முக்கியமான வெற்றி, சிக்கிம் இந்தியாவுடன் இணைந்தது. 1973ல் சிக்கிம்மில் நடந்த உள்நாட்டு பிரச்சனையை பயன்படுத்தி சிக்கிமை ரா இந்தியாவுடன் இணைய வைத்தது. 1975ம் ஆண்டு, சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.

நேபாளம், பூட்டான், மாலத்தீவு போன்ற அனைத்து தெற்காசிய நாடுகளிலும் ராவின் செயல்பாடுகள் இருந்தது.

ராவின் தோல்விகளில் முக்கியமானது இலங்கை பிரச்சனை தான். ஆரம்ப காலங்களில் புலிகள் மற்றும் பிற போராளி குழுக்களுக்கு பயிற்சி அளித்தது தொடங்கி, இந்திய-இலங்கை ஒப்பந்தம் வரை அனைத்தும் ரா இந்தியப் பிரதமர்களுக்கு அளித்த அறிவுரையின் காரணமாகவே நிகழ்ந்தது.

ரா அமைப்பின் பல நடவடிக்கைகள் ரகசியமானவை. அதிகம் வெளிவருவதில்லை. அவ்வப்பொழுது பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் தான் ராவின் நடவடிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யுடன் ஒப்பிடும் பொழுது ரா குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறது. பங்ளாதேஷ் உருவானது, சிக்கிம் விவகாரம், பூட்டான், மாலத்தீவு போன்ற நாடுகளை இந்தியாவின் மாநிலங்கள் போல பல விஷயங்களில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க வைத்தது போன்றவை ராவின் வெற்றிகள். இலங்கையில் ராவின் நடவடிக்கைகள் தோல்வி அடைந்திருந்தாலும், அதன் செயல்பாடுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணா விவகாரம் கூட இன்னமும் நடந்து கொண்டு இருக்கும் ராவின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்.

ஆனால் பாக்கிஸ்தானால் இந்தியாவில் நாசவேலைகளையும், தீவிரவாதத்தையும் மட்டுமே வளர்க்க முடிந்தது, இந்தியாவை தூண்டாட முடியவில்லை.

இந்தியாவின் ரா, பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாட் மற்றும் பிற உளவு நிறுவனங்கள் அனைத்துமே பிற நாடுகளில் நாச செயல்களை விளைவித்து அந் நாடுகளை சீர்குலைப்பதை முக்கியமான செயலாக செய்திருக்கின்றன. இன்னும் செய்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல, இந்தியா உட்பட

Leia Mais…
Saturday, December 17, 2005

சாப்பலின் Remote Control


இந்தியப் பாராளுமன்றம் கங்குலி நீக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்போகிறது. இது நாட்டிற்கு அவசியமான, முக்கியமான பிரச்சனை போல இடதுசாரி மற்றும் மேற்குவங்காள தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். கங்குலி நீக்கப்பட்டது சாப்பல்-பவார் & Coவின் அரசியல் காரணமாகத் தான் என்பதிலும் கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதிலும் எனக்கு மாற்று கருத்து கிடையாது. ஆனால் இது பாரளுமன்றம் விவாதிக்ககூடிய முக்கியமான பிரச்சனையா என்பது தான் கேள்வி.

இந்திய கிரிக்கெட்டின் அரசியலும் தேர்வுக் குழுவில் இருக்கும் தில்லுமுல்லுகளும் இன்று வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பாரளுமன்றமும் இந்தப் பிரச்சனையை விவாதிப்பது பிரச்சனையை மேலும் அரசியல் மயமாக்கி விடும்.

என்னைப் பொறுத்தவரை கங்குலியை நீக்கியது சரி அல்ல. அவரை மறுபடியும் அணியில் சேர்க்க வேண்டும்.



கங்குலியை ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கிய பொழுது அது சரியானது என்றே நினைத்தேன். அது போல கங்குலி டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அது சரியான முடிவல்ல, கிரிக்கெட் அரசியல் தான் காரணம் என்று கருதினேன்.

ஆனால் இப்பொழுது கங்குலி நீக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் அரசியலின் உச்சகட்டமாகத் தான் தெரிகிறது.

தில்லி டெஸ்ட் போட்டியில் கங்குலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்துள்ளது. நான் போட்டியை பார்க்கவில்லை. அர்ஜுனா ரணதுங்கா கங்குலி அடித்த சில கவர் டிரைவ்கள் தான் தில்லி டெஸ்ட் போட்டியில் தான் பார்த்த ஷாட்களில் சிறப்பான ஷாட்டாக இருந்ததாக தெரிவிக்கிறார். கங்குலி சிறிது காலம் தன்னுடைய பழைய ஆட்டத்திறன் இல்லாமல் இருந்தார். அதனை பெற முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தில்லி போட்டியில் ஓரளவுக்கு நன்றாக ஆடிய கங்குலி அடுத்த போட்டியில் சதம் அடித்தால் அவரது இடம் அணியில் உறுதியாகி விடும் என்று நினைத்து கங்குலியை சாப்பல்-கிரண் மோர் & Co நீக்கியிருக்கிறார்கள்.

சாப்பல் - கங்குலி சண்டையில் சாப்பல் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் முட்டாள்தனம் நிறைந்த அதிகப்பிரசங்கித்தனம் என்றே நான் நினைக்கிறேன். அணியின் கேப்டன் என்னும் பொழுது அவர் அணியில் இருந்தாக வேண்டும் என்பது தான் நியதி. கோச் கேப்டனுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் டீம் மீட்டிங்கில் கங்குலியை விலகிக் கொள்ளுமாறு கோச் கூறியது அதிகப்பிரசங்கித்தனம். சாப்பலுக்கு கேப்டனை விலகச் சொல்லும் அதிகாரம் கிடையாது. இது கேட்பனாக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு செய்யப்பட்ட அவமரியாதை. கங்குலி கேப்டனாக இருப்பதிலோ, அணியில் இருப்பதிலோ பிரச்சனை என்றால் அதனை கிரிக்கெட் தேர்வாளர்களிடம் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரு கேப்டனை நீ அணியில் இருந்து விலகிக் கொள் என்று சொல்வது எந்த வகையில் சரி என்பது எனக்கு தெரியவில்லை. அது போலவே கங்குலி அந்தப் பிரச்சனையை மீடியாக்களிடம் கொண்டு சென்றதும் சரியான காரியமல்ல.

நன்றாக விளையாடுபவர்கள் மட்டுமே அணியில் இருக்க வேண்டும் என்று கூறுவது மிகச் சரி. அப்படியானால் கங்குலி மட்டுமே தான் அணியில் சரியாக விளையாட வில்லையா ? இலங்கைக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் அடித்த 90+ தவிர சச்சின் கடந்த இரு வருடங்களாக எந்தளவுக்கு விளையாடி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். இலங்கைக்கு எதிராக அடித்த 90+க்குப் பிறகு தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் சச்சின் சரியாக விளையாடவில்லை. எனவே அவர் எதிர் வரும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டு விடுவாரா ? கங்குலிக்கு ஒரு நியாயம், சச்சினுக்கு ஒரு நியாயம் ?

தன்னுடைய அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய கேப்டனுக்கு முழு அதிகாரம் உண்டு. கங்குலி கேப்டனாக இருந்த பொழுது அதைத் தான் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புக்கே ஒரு புதிய முகத்தை ஏற்படுத்தி கொடுத்தவர் கங்குலி. ஆனால் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் திராவிடை சாப்பல் தன் ரிமோட் கண்ட்ரோலால் இயக்குவது போல தான் தோன்றுகிறது. சாப்பல் தான் இந்தியக் கிரிக்கெட்டின் தேர்வாளர், கோச், கேப்டன் எல்லாமும்.

சிறப்பாக விளையாடும் அனைவருக்கும் கங்குலி அணியில் இடமளிக்க தவறவில்லை. ஓய்வு பெற்று விடும் முடிவுக்கே சென்ற ஸ்ரீநாத்தை அணிக்கு கொண்டு வந்து அவரை கங்குலி சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அணித் தேர்வில் இருந்த பல தில்லுமுல்லுகளை கங்குலி நீக்கி திறமையானவர்களை ஊக்குவித்தார். ஒரு கேப்டன் அப்படித் தான் இருக்க வேண்டும். ஆனால் திராவிட் கங்குலி விஷயத்தில் நடந்த கொண்டு முறை அவ்வாறாகத் தெரியவில்லை.

கங்குலி தில்லி போட்டியில் சிறப்பாக விளையாடினார், அடுத்த வரும் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடக்கூடும் என்றால் அவரை அணியில் தக்கவைத்துக் கொள்ளவே எந்த கேப்டனும், கோச்சும் விரும்பவேண்டும். அர்ஜுணா ரணதுங்க கூட கங்குலி தொடர்ந்து இந்திய அணியில் இருப்பது இந்தியாவிற்கு நல்லது என்றே கூறுகிறார். கங்குலி தன்னை அணியில் நிலைநிறுத்திக் கொள்ள சிறப்பாக விளையாடவேண்டும். தில்லி போட்டியில் கூட அதைத் தான் அவர் செய்ய முயன்றுள்ளார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயமும் கூட. ஆனால் கங்குலியை ஆடவிடாமல் நீக்க வேண்டும் என்பதில் தான் சாப்பலும் திராவிட்டும் உறுதியாக இருந்திருக்கிறார்கள். அதனால் கங்குலியை அடுத்த போட்டியில் ஆட விடாமல் நீக்கி இருக்கிறார்கள்.

கங்குலி அணியில் உள்ளவர்களை பிரிக்கிறார் என்பதில் எந்த லாஜிக்கும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு குழு என்று வரும் பொழுது அதில் பிரச்சனைகளும் வரத் தான் செய்யும். சிலரை மட்டுமே கொண்ட சாப்ட்வேர் டீமில் கூட எவ்வளவு பிரச்சனைகள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்திய கிரிக்கெட் அணியிலும் பிரச்சனைகள் இருக்கத் தான் செய்யும். கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தான் செய்யும். அது அணியில் உள்ளவர்களை கங்குலி பிரிக்கிறார் என்று பொருள் தருமா என்று தெரியவில்லை. கங்குலியை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சாப்பல் பிதற்றுவதாகத் தான் தோன்றுகிறது. இப்பொழுது கூட இந்திய அணியில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் ஒரே எண்ணத்தில் சாப்பலின் பின் இருக்கிறார்களா என்ன ?

இப்பொழுது கங்குலியை அணியில் கொண்டு வந்து ஒரு போட்டித் தொடருக்கு வாய்ப்பளித்து பின் அவரே ஓய்வு பெற்றுக் கொள்வது என்பதான ஏற்பாடு பேசப்பட்டு வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஸ்டீவ் வாக்கிற்கு கொடுக்கப்பட்டது போல கங்குலிக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்படுமாம். இது ஒரு முட்டாள்தனமான காரியம். முதலில் ஸ்டீவ் வாக்கிற்கு செய்யப்பட்டதே பெரிய அவமதிப்பு. அதையே கங்குலிக்கும் செய்வது முட்டாள்தனம்.

கங்குலி நன்றாக விளையாடினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தே தீர வேண்டும். நன்றாக விளையாடா விட்டால் நீக்கி விடலாம். அதற்காக அவர் ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும், அரை சதம் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் - just too much

Leia Mais…
Wednesday, December 14, 2005

French Fries

பா.ராகவன் எழுதிய "பாக். ஒரு புதிரின் சரிதம்" என்ற புத்தகம் சமீபத்தில் படிக்க கிடைத்தது. நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இது குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்ததாக நினைக்கிறேன். அப்பொழுது மேம்போக்காக இதனை வாசித்து இருந்தாலும் காஷ்மீர் பிரச்சனை குறித்து படித்து அது குறித்து எனது எண்ணங்களை வளர்த்துக் கொண்ட பிறகு இப்பொழுது தான் இதனை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


கிழக்கு பதிப்பகம் இணையத்தளத்தில் "காஷ்மீர் பிரச்னை பற்றிய ஆழமான அலசல் அடங்கிய நூல் இது" என்ற வரிகளை பார்த்து இந்தப் பத்தகம் குறித்த ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க தொடங்கினேன். படிக்க தொடங்கிய சில அத்தியாயங்களில் காஷ்மீர் குறித்த விஷயங்கள் சரியாக எழுதப்படவில்லை என்று தான் எனக்கு தோன்றியது. காஷ்மீர் பிரச்சனை மற்ற எல்லா பிரச்சனைகளையும் விட வித்தியாசமானது. இது இரு தேசங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்சனை இல்லை. காஷ்மீர் மக்களை இரு தேசங்களுக்கிடையே துண்டாக்கி மனித உறவுகளை கூறு போட்ட ஒரு பிரச்சனை. பா.ரா. இது குறித்து அலசி ஆராய்ந்து எழுதி இருக்கலாம் என்று தோன்றியது.

பா.ரா. இதனை எழுதும் பொழுது இருந்த சூழ்நிலையை விட இன்று இப் பிரச்சனை குறித்த இரு நாடுகளின் நிலையும் ஓரளவிற்கு மாறியிருக்கிறது (கவனிக்கவும், ஓரளவிற்கு மட்டுமே). காஷ்மீரின் எல்லைகளை திறந்து (Soft Borders) காஷ்மீர் மக்களிடையேயான உறவுகளை வளர்ப்பது இப்பொழுது முக்கியமாக பேசப்படுகிறது.

நான் காஷ்மீர் குறித்து எழுதிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடைய ஒரு நண்பர் இப் பிரச்சனை குறித்து தானும் ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். இப் பிரச்சனை குறித்த ஒரு சரியான அறிமுகத்தை அவர் தமிழ் வாசகர்கள் முன் வைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது

*************

பெங்களூரில் இருக்கும் ஒரு பெரிய பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பன் தன் வேலையை உதறி பங்குச்சந்தையில் முழுமையாக நுழைந்து விட்டான். பங்குச்சந்தை எகிறிக் கொண்டே இருக்க அவன் செய்யும் டிரேடிங்கிலும் கொழுத்த லாபம். இதனை கேட்டதில் இருந்து நாம் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றி விட்டது. ஆனால் சிரமப்பட்டு அதனை அடக்கிக் கொண்டேன். பங்குச்சந்தையின் பொருட்டு வேலையை உதறுவது சரியானது தானா என்று மனதில் ஒரு பட்டிமன்றத்தையே நடத்தி முடிவில் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் பணம் சந்தையில் குவிந்து கொண்டே இருக்கிறது. உலகப் பொருளாதார நிலையும் அதற்குச் சாதகமாக இருக்கிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை இன்னும் சிறிது காலத்திற்கு நீடிக்ககூடும். அதுவரை இந்தியாவில் இருப்பவர்கள் பங்குச்சந்தையில் புகுந்து விளையாடலாம்.

*************

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற கருணா இந்தியாவில் இருப்பதாக தமிழ்நெட் இணைத்தளம் தெரிவிக்கிறது. இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தி

http://www.hindustantimes.com/news/7598_1572346,000500020002.htm

இது உண்மையா என்று தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் இந்தியாவில் இருக்கும் இரண்டாவது புலிகள் எதிர்ப்பு தலைவர் இவர். ஏற்கனவே இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் எங்கோ வடஇந்தியாவில் இருப்பதாக ஊடகங்களில் படித்த நினைவு.

யார் வரதராஜ பெருமாள் என்கிறீர்களா ? அது சரி...

*************

அது என்ன French Fries ன்னு தலைப்பு ?

பயங்கர குளிர். முகம், காது, கை மற்றும் உடலெங்கும் கவசம் அணிந்தும் நடுங்க வைக்கும் குளிர். என்ன செய்வது ? ஓரளவுக்கு சுமாரான குளிரில் கொடைக்கானலிலும், ஊட்டியிலும் ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி, தேங்காய் சட்னி ஏனோ ஞாபகத்திற்கு வருகிறது. இங்கும் அது போல சாப்பிடலாம் என்று நினைத்து ஒரு முறை ஒரு இந்தியன் கடையில் பஜ்ஜி சாப்பிட்டு, அடுத்த முறை பஜ்ஜியை பார்த்தால் ஒரே ஓட்டம் தான்.

நேவார்க் (Newark) வரை சுரங்க ரெயிலில் வந்து பின் வீட்டிற்கு பேருந்து பிடிக்க காத்திருந்த சில நிமிடங்களில் மெக்டோனால்சில் சாப்பிட்ட French Fries தான் எனக்கு நம்மூர் பஜ்ஜியாக தெரிந்தது. நல்ல சூடான French Fries குளிருக்கு இதமாக இருந்தது. இங்கு கிடைக்கும் நம்மூர் பஜ்ஜியை விட French Fries 1000% times better.



அதில் மெய்மறந்து போய் இந்த கதம்பமான பதிவிற்கு French Fries என்று வைத்து விட்டேன்

Leia Mais…
Saturday, December 03, 2005

புதிய யுத்தம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் பேச்சு இலங்கைப் பிரச்சனையில் மற்றுமொரு புதிய யுத்தத்தை தொடங்கியிருக்கிறது. அது தான் ராஜதந்திர யுத்தம். அடுத்து வரும் நாட்களில்/மாதங்களில் இந்த ராஜதந்திர யுத்தத்தை தான் இரு குழுக்களும் புரியப்போகின்றன. பிரபாகரனின் பேச்சு அதற்கு தான் அடித்தளமிட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இம் முறை பிரபாகரனின் பேச்சு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது. தன்னிலை விளக்கம் தரும் உரையாகவும், இலங்கையின் யதார்த்த சூழலை வெளிப்படுத்துவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவை ஒரு பொறிக்குள் சிக்க வைப்பதாகவும் அவரது பேச்சு இருந்தது. ஆனால் பிரபாகரனின் பேச்சுக்கு எதிர்வினையாக ராஜபக்ஷ எதுவும் செய்யாமல் மிகுந்த கவனத்துடன் காய்களை நகர்த்துவதாகவே தோன்றியது.




கடந்த காலங்களில் சிங்கள அரசுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை ஒரு நிர்பந்தம் காரணமாகவே எழுந்ததாகவும், சிங்கள அரசு தமிழர்களின் உரிமைகளை எக் காலத்திலும் நிறைவேற்றப் போவதில்லை என்றும் பிரபாகரன் தெரிவித்தார். கடந்த காலங்களில் புலிகள் உண்மையிலேயே தமிழீழக் கோரிக்கையை கைவிடவில்லை, வெளிப்பூச்சாகத் தான் அதனைக் கூறுகிறார்கள் என்பதான ஒரு எண்ணம் இருந்தது. பிரபாகரன் அதனை உறுதிப்படுத்தும் அதே வேளையில் ராஜபக்ஷ சில நாட்களுக்கு முன்பு பேசிய உரையை தனக்கு சாதகாமாக பயன்படுத்திக் கொண்டார். கூட்டாச்சி, புலிகளை தமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக ஏற்பது, சுனாமி நிவாரணப் பணிகளில் புலிகளுடன் இணைந்து செயல்படுவது போன்ற உலக நாடுகளால் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட ராஜபக்ஷ மறுதளித்தது பிரபாகரனின் வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் இருந்தது.

பொதுவாக பிரபாகரனின் பேச்சில் போர் பற்றிய தீவிரம் எதுவும் இருக்கவில்லை. மாறாக உலகநாடுகளிடம் தங்களுக்கான அங்கீகாரத்தை வேண்டுவதும், சிங்கள அரசு தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்பதை வெளிப்படுத்துவதும் தான் முக்கிய நோக்கமாக இருந்தது. பிரபாகரனின் பேச்சிற்கு முன்பாக இலங்கை ஒன்றுபட்ட ஒரே நாடு அல்ல என்பதை முன்னிறுத்தும் செயல்களை புலிகள் மேற்கொண்டிருந்தனர். பிரபாகரனின் பேச்சிலும் தாங்கள் ஏற்கனவே வடகிழக்கில் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

சரி..தங்களுக்கான ஒரு அங்கீகாரத்தை தேடத் தான் சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக பிரபாகரன் கூறினார். உண்மையிலேயே அவர்கள் எதிர்நோக்கிய அங்கீகாரம் உலகநாடுகள் மத்தியில் கிடைத்ததா ? இது வரை அவர்கள் அந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளனரா ?

இல்லை என்பது தான் உண்மை.

இலங்கை அரசு கடந்த காலங்களில் சந்திரிகா, லஷ்மன் கதிர்காமர், ரனில் விக்ரமசிங்கே போன்றோர் மூலமாக நடத்திய ராஜதந்திர யுத்தத்தில் புலிகள் தோல்வியடைந்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் இவர்கள் மூவரும் இலங்கை அரசுக்கு ஒரு Diplomatic முகத்தை கொடுத்தனர். குறிப்பாக லஷ்மன் கதிர்காமர் உலக நாடுகளிடம் இலங்கைக்கு நெருங்கிய நட்புறவை ஏற்படுத்தி அதன் மூலம் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வைத்தார்.

புலிகள் குறித்தான ஒரு அவநம்பிக்கையை மிக கவனமாக உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசு வளர்த்திருந்தது. புலிகள் கடந்த காலங்களில் செய்த அரசியல் படுகொலைகள் அரசின் நோக்கத்திற்கு உதவி புரிந்தது. லஷ்மன் கதிர்காமர் தவிர புலிகளுக்கு சலுகைகளை அதிகம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட ரனில் கூட புலிகளுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டுவதில் வெற்றி கண்டிருந்தார். நார்வேயை மட்டுமே அனுசரணை செய்யும் நாடாக புலிகள் நினைத்தனர். ஆனால் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி புலிகளை ஒரு பொறிக்குள் சிக்க வைக்க ரனில் முயன்றார். வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டால் அது தங்களுக்கு ஒரு முக்கியமான அங்கீகாரத்தை கொடுக்கும் என்று புலிகள் நினைத்தனர். ஆனால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவே புலிகள் அழைக்கப்படவில்லை. புலிகள் விலக்கப்பட்டது குறித்து ரனில் அதிகம் அக்கறை கொள்ளாமல் அடுத்த மாநாட்டை டோக்கியோவில் நடத்த தயாராகினார். சமாதான பேச்சு வார்த்தை என்ற பொறிக்குள் தங்களை ரனில் கொண்டுவர நினைப்பதை தாமதமாக உணர்ந்த புலிகள் அந்தப் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலகினர்.

இலங்கை அரசு மேற்கொண்ட இவ்வாறான நடவடிக்கைகளை கடந்து, புலிகள் சில வெற்றிகளை பெற்றிருந்தனர்.

இலங்கைக்கு வருகின்ற பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கொழும்புவில் ஜனாநிதிபதியையும், பிரதமரையும் சந்தித்து விட்டு கிளிநொச்சி சென்று பிரபாகரனையும் தமிழ்ச்செல்வனையும் சந்திப்பது வழக்கமான ஒன்றானது. குறிப்பாக சுனாமிக்கு பின்பு புலிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிடைத்தது. புலிகளின் பகுதியில் ஒரு தனி நாடு போன்ற அமைப்பு இருந்தது நிவாரணப் பணிகளில் புலிகளையும் சேர்த்து கொள்வது போன்றவற்றில் உதவியது. அது போல புலிகளின் கிழக்கு மாகாண தலைவர் கொளசல்யன் கொல்லப்பட்ட பொழுது ஐ.நா. பொதுச்செயலர் கோஃபி அன்னான் அதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்பொழுது புலிகளுக்கு ஐ.நா. அங்கீகாரம் தர முயலுவதாக இலங்கை அரசு, மற்றும் சிங்கள் தேசியவாதிகள் கோஃபி அன்னான் மீது குற்றம் சாட்டினார்.

ஆனால் இவை புலிகள் அங்கீகாரம் பெறுவதற்கு போதுமானதாக இருக்கவில்லை

கடந்த காலங்களில் உலகநாடுகளிடம் புலிகள் அங்கீகாரம் பெற முயன்ற பல முயற்சிகளை லஷ்மன் கதிர்காமர் தடுத்தார்.

ஆனால் கடந்த காலங்கள் போல் இல்லாமல் இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் பெருத்த மாறுதல் இருக்கிறது.

இன்றைக்கு அரசியல் ரீதியாக ஒரு சமபலம் நிலவுகிறது. புலிகளை பார்க்கும் அதே கோணத்தில் போரினை விரும்பும், சிங்கள தீவிர தேசியவாத குழுவாகவே இலங்கை அரசும் தற்பொழுது பார்க்கப்படுகிறது - Hawkish. இலங்கைக்கு கடந்த காலங்களில் இருந்த ஒரு Diplomatic முகம் தற்பொழுது இல்லை. கடந்த காலங்களில் உலகநாடுகள் கவனிக்க மறந்த பல விஷயங்கள் தற்பொழுது கூர்ந்து கவனிக்கப்படும். கிழக்கு மாகாணங்களில் தங்கள் மீது நிழல் யுத்தத்தை இலங்கை அரசு தொடுத்திருப்பதாக புலிகள் குற்றம்சாட்டினர். வரும் நாட்களில் இது போன்ற விஷயங்களை உலகநாடுகள் கூர்ந்து கவனிக்கும். இந்தச் சூழ்நிலையை Exploit செய்து விடும் நோக்கத்தில் தான் பிரபாகரனின் பேச்சு இருந்தது.

அது போலவே நார்வேவை சமாதான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்க வேண்டும் என்பன போன்ற பேச்சுகள் ராஜபக்ஷவின் தேர்தல் முழுக்கமாக இருந்தது. வெற்றி பெற்ற பிறகு ராஜபக்ஷ நார்வே குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லையெனினும், அனுசரணை செய்யும் நாடுகளை பலப்படுத்துவது குறித்து ராஜபக்ஷ தெரிவித்து இருந்தார். இதன் மூலம் நார்வேக்கு இருக்கும் முக்கியத்துவத்தை குறைப்பது தான் ராஜபக்ஷவின் நோக்கம். நார்வே புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் நார்வேவை அனுசரணை செய்வதில் இருந்து தன்னிச்சையாக நீக்குவதையோ, தற்போதைய சூழ்நிலையில் நார்வே விலகுவதையோ இலங்கை விரும்பவில்லை.

புலிகளுக்கு ஆதரவான நாடாக நார்வேயை இலங்கை கருதுகிறது. நார்வே நாட்டினை அனுசரணையாளர் என்பதில் இருந்து நீக்கினால் இலங்கைக்கு அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக புலிகள் தமிழீழத்தை அறிவித்தால் அதனை அங்கீகரிக்க கூடிய நாடாக நார்வே இருக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இப் பிரச்சனைகளில் தன்னுடைய சார்பு நாடுகளான இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளை உள்ளடக்கி தனக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி விட்டு பிறகு நார்வேயின் முக்கியத்துவத்தையோ, நார்வே வை முழுமையாக நீக்குவதையோ மேற்கொள்ள இலங்கை நினைக்கிறது. ஆனால் இந்தியா இந்தப் பிரச்சனைகளில் நுழையுமா என்பது சந்தேகமே. அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு வரும் காலங்களில் இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது. தற்போதைய இலங்கை அரசு தலைமையை நம்பி அமெரிக்கா இந்தப் பிரச்சனைகளில் நுழையக்கூடிய வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.

தமிழர்களின் நிலையை ஓரளவுக்கு புரிந்து கொள்ளக் கூடிய அமைப்பாக கருதப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் லஷ்மன் கதிர்காமரின் படுகொலைக்கு பிறகு எடுத்த நிலைப்பாடு புலிகளுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்கா, இந்தியா ஆதரவை விட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு புலிகளுக்கு முக்கியமானது. இதனை புலிகள் பெற்றாக வேண்டும்.

பிரபாகரனின் பேச்சுக்கு முன்பாக தமிழீழம் அறிவிக்கப்படும் என்பன போன்ற செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தன. ஆனால் அவ்வாறு ஒரு அறிவிப்பு வெளியிடக்கூடிய சூழ்நிலை தற்பொழுது இல்லை. உலகநாடுகள் அதற்கு ஆதரவு தராது. எனவே தான் பிரபாகரனின் பேச்சில் பெரும் பகுதி உலகநாடுகளை நோக்கியே அமைந்து இருந்தது. தங்களுடைய பொறுமை குறைந்து கொண்டிருக்கிறது என இறுதி எச்சரிக்கையை விடுத்து உலகநாடுகளை இப் பிரச்சனையில் அதிக கவனத்தை பெற வைக்க பிரபாகரன் முயலுகிறார்.

உலக நாடுகளின் ஆதரவை இரு குழுக்களுமே தற்பொழுது பெற வேண்டிய நிலையில் இருக்கின்றனர். கடந்த காலங்களில் Advantage - srilanka என்ற நிலை தற்பொழுது மாறியிருக்கிறது. புலிகள் எப்படி தங்களை சமாதானத்தை விரும்பும் குழுவாக வெளிப்படுத்த நினைக்கிறார்களோ அது போல ராஜபக்ஷ தான் சிங்கள தேசியவாதத்தை மட்டுமே முன்னிறுத்த வில்லை, தமிழர்களுக்கு கூட்டாச்சி உரிமைகளை கொடுப்பதிலும் தனக்கு ஆர்வமுள்ளது என்பதை தன்னுடைய நடவடிக்கைகள் மூலம் தெளிவுபடுத்தியாக வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால் அவ்வாறு தனது நிலையை மாற்றிக் கொள்ள ஜே.வி.பி போன்ற அமைப்புகள் அவரை அனுமதிக்குமா என்பது அடுத்த கேள்வி. அவரை ஒரு Hawk என்றே உலகநாடுகள் தெரிந்து வைத்திருக்கின்றன. இதனை மாற்றியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கு இருக்கிறது.




இலங்கைப் பிரச்சனை தற்பொழுது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. ஆனால் பிரச்சனை மேலும் சிக்கலாகி இருக்கிறது. போரும் இல்லாமல், சமாதானமும் இல்லாமல் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த யுத்தத்தில் யார் வெற்றி பெற போகிறார்கள் ?

Leia Mais…