வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Friday, March 31, 2006

விஜயகாந்த் விருத்தாசலத்தில் தேறுவாரா ?

2006 தேர்தலில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தொகுதியாக விருத்தாசலம் மாறியிருக்கிறது. விஜயகாந்த் இந்த தேர்தலில் இங்கு களமிறங்குகிறார். விருத்தாசலத்தில் விஜயகாந்த் களமிறங்குவது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு குறிப்பிடத்தகுந்த "செல்வாக்கு" இருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருவது அவரை இங்கு நிற்க தூண்டி இருக்கிறது என்று நினைக்கிறேன்.


ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றவர்கள் பாமகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பாமக வலுவாக இருக்கும் இடங்களில் தங்களை தேவையில்லாமல் நுழைத்து கொள்கிறார்கள் என்று தோன்றினாலும் ரஜினிகாந்த்துடன் விஜயகாந்த்தை என்னால் ஒப்பிட முடியவில்லை. ரஜினிகாந்த் தோல்வி அடைந்து விட்டதால் விஜயகாந்த்தும் தோற்று விடுவார் என்றும் நாம் முடிவு செய்து விட கூடாது. ரஜினிகாந்த்தை விட விஜயகாந்த் கொஞ்சம் "புத்திசாலி" என்பது என் எண்ணம். எனவே அவரது இந்த முடிவின் பின் இருக்கும் சில காரணங்களை நாம் ஒதுக்கி விட முடியாது.

விஜயகாந்த் தன்னை ஒரு சக்தியாக இந்த தேர்தலில் நிலைநிறுத்திக் கொள்ள முனைகிறார். அது தேர்தலில் வெற்றி என்பதை விட கணிசமாக வாக்குகளை பெறுவது அவரது குறிக்கோளாக இருக்கிறது. இந்த கணிசமான வாக்குகளை வடமாவட்டங்களில் பெற்று விட முடியும் என்று விஜயகாந்த் நினைக்கிறார். இதற்கு குமுதம், தினமலர் போன்ற பத்திரிக்கைகளும் தூபம் போட்டுள்ளன. குமுதம் தன்னுடைய கருத்து கணிப்பில் வடமாவட்டங்களில் விஜயகாந்த்திற்கு பல தொகுதிகளில் 10-15% வாக்காளர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

விஜயகாந்த்திற்கு வடமாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் ரஜினியை விட ஆதரவு அதிகம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். நெய்வேலியை ஒட்டிய ஊர் விருத்தாசலம் என்பதால் இங்கிருக்கும் சில கிராமங்களின் அறிமுகம் எனக்கு உண்டு. இங்கிருக்கும் பல இளைஞர்கள் விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதாவது 30வயதிற்குட்பட்ட பலர் விஜயகாந்தின் ரசிகர்கள். இதற்கு அடுத்த நிலையில் தான் ரஜினி, சரத்குமார் போன்றோர் உள்ளனர். இங்கு பலருக்கும் ரசிகர்கள் உண்டு. எந்த நடிகர்களுக்கும் ரசிகர்கள் பஞ்சம் ஏற்படுவதில்லை. விஜய், அஜித், விக்ரம் தொடங்கி சிலம்பரசன், தனுஷ் வரை அனைவருக்கும் ரசிகர்கள் உண்டு. இவர்களிடையே விஜயகாந்த்தின் ரசிகர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.

விஜயகாந்த் ரசிகர்களில் அதிகளவில் வன்னியர்கள் குறிப்பாக பாமகவினர் இருப்பதாக பத்திரிக்கைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன. இருக்கலாம். பிற கட்சியினரும் இருக்கலாம். குறிப்பாக திமுகவினர் இருக்கலாம். இவர்களில் பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்திருக்கலாம். சிலர் தங்களுடைய சாதி மற்றும் கட்சி அபிமானத்தால் பாமக, திமுக ஆகிய கட்சிகளில் தொடர்ந்து கொண்டும் இருக்கலாம். 90% விஜயகாந்த் ரசிகர்கள் விஜயகாந்த் கட்சியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட மொத்தமாக விருத்தாசலத்தில் 5000பேர் இருக்கலாம்.

இதை மட்டுமே கொண்டு விஜயகாந்த் களத்தில் இறங்குவாரா ? அதுவும் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களில் இங்கு தன்னுடைய பலத்தை நிருபித்து இருக்கும் பாமகவை எதிர்த்து எந்த தைரியத்தில் விஜயகாந்த் களத்தில் இறங்குகிறார் ?

பாட்டாளி மக்கள் கட்சி வடமாவட்டங்களில் வலுவாக இருக்கும் தொகுதிகளில் விருத்தாசலம் முக்கியமான தொகுதி. இங்கிருக்கும் பல கிராமங்கள் முழுக்க முழுக்க வன்னிய இன மக்கள் மட்டுமே இருக்கும் கிராமங்கள் ஆகும். பல கிராமங்களில் பிற கட்சியினரை வாக்கு சேகரிக்க கூட விடுவதில்லை. அப்படியான ஒரு கிராமம் தான் ஆதாண்டர்கொல்லை என்னும் கிராமம். இது எங்கள் பகுதிக்கு அருகில் இருக்கும் சிறு கிராமம். இங்கு ஒரு சில ஓட்டுகளை தவிர மொத்த ஓட்டுகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் விழும். இங்கு பிற கட்சியினர் எவரும் வாக்கு சேகரிக்க கூட செல்வதில்லை. இங்கிருக்கும் இளைஞர்கள் அனைவருமே தீவிர பாமக தொண்டர்கள். இவ்வாறான பல கிராமங்களை உள்ளடக்கியது தான் விருத்தாசலம் தொகுதி. இந்த தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் கிராமத்து வாக்குகள் தான்.

1991ல் தன்னுடைய முதல் தேர்தலை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி, தனித்து போட்டியிட்டு இங்கு சுமார் 37,634 ஓட்டுகளை பெற்று இரண்டாமிடம் பெற்றது. அந்தக் கட்சியின் அப்போதைய தலைவரும் பின்பு பாமகவில் இருந்து நீக்கப்பட்டவருமான தீரன் இங்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் ராஜீவ் காந்தி அனுதாப அலையில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. திமுகவிற்கு மூன்றாமிடம் கிடைத்தது.

1996 தேர்தலில் கடுமையான ஜெ எதிர்ப்பு அலையில் பாமகவின் வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி சுமார் 42,218 ஓட்டுகளைப் பெற்றார். இந்த தேர்தலிலும் பாமக தனித்து போட்டியிட்டு இரண்டாமிடத்தை பெற்றது. தமிழகமெங்கும் மிக எளிதாக வெற்றி பெற்ற திமுக இங்கு போராடி 6885 ஓட்டுகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதற்கு பாமகவின் செல்வாக்கு தவிர டாக்டர் கோவிந்தசாமியின் தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய காரணம். டாக்டர் கோவிந்தசாமி இங்கு மிகவும் பிரபலமான டாக்டர். குறிப்பாக கிரமத்து மக்களிடையே குறிப்பிடத்தகுந்த செல்வாக்கு மிக்கவர். இங்கு டாக்டர் கோவிந்தசாமி தான் வெற்றி பெறுவார் என்று அந்த தேர்தலில் கருதப்பட்டது. பல பத்திரிக்கைகளும் அப்படி தான் எழுதிக் கொண்டிருந்தன. அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த 2001 தேர்தலில் பாமக-அதிமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி சுமார் 68,905 ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி சுமார் 61,777 ஓட்டுகளைப் பெற்றது.

இங்கு பலமான கட்சிகள் என்று பார்த்தால் முதல் இடம் பாமகவிற்கு தான். அடுத்த நிலையில் திமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் உள்ளன. இதற்கு அடுத்த நிலையில் இருப்பவை அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள். காங்கிரசுக்கு இங்கு ஒரளவிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

முதன் முறையாக திமுக-பாமக இணைந்து இந்த தொகுதியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றன. பாமகவின் வாக்கு வங்கியாக இங்கு சுமார் 37,000 முதல் 40,000 ஓட்டுகள் உள்ளன. திமுகவிற்கு சுமாராக 30,000 முதல் 40,000 வாக்குகள் உள்ளன. இங்கு காங்கிரசுக்கும் கணிசமான ஆதரவு இருக்கிறது. இதன் படி பார்த்தால் இங்கு பாமக மிக எளிதாக வெற்றி பெற வேண்டும். 2004 பாரளுமன்ற தேர்தலில் கூட இங்கு
திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

ஆனால் பாமகவின் வெற்றிக்கு முக்கியச் சவாலாக இருக்கப் போவது இரண்டு காரணங்கள்

  • பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி
  • விஜயகாந்த் factor (அப்படி ஒன்று இருந்தால்)

பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி எந்தளவுக்கு தொகுதியில் பிரபலமாக இருந்தாரோ அதே அளவுக்கு அவருக்கு தொகுதியில் தற்பொழுது கெட்டப் பெயர். தன்னுடைய டாக்டர் தொழிலை மட்டும் பார்க்கிறார். கிராமங்கள் பக்கம் வரவேயில்லை. கிராம மக்களிடம் சரியாக பேசுவதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. மணிமுத்தாறு பாலம் உடைப்பட்டது மிக முக்கிய தேர்தல் பிரச்சனையாக உள்ளது. டாக்டர் ராமதாசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் மட்டுமே டாக்டர் கோவிந்தசாமிக்கு தேர்தலில் சீட் கிடைத்திருக்கிறது. இந்த தேர்தலில் பாமக தோல்வியடைந்தால் அதற்கு முக்கிய காரணகர்த்தா டாக்டர் கோவிந்தசாமி தான்.

அடுத்ததாக சொல்லப்படுவது விஜயகாந்த factor. அவரின் ரசிகர் மன்றத்தினர், சினிமா கவர்ச்சி தவிர கிராமத்து மக்கள் டாக்டர் கோவிந்தசாமி மேல் உள்ள அதிருப்தியை விஜயகாந்த்திற்கு சாதகமாக மாற்றக் கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே விஜயகாந்த்தை அவரது அரசியல் ஆலோசகர் பண்ருட்டியார் இங்கு போட்டியிட வைத்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் ஓரளவிற்கு கணிசமான வாக்குகளை விஜயகாந்த் பெறக்கூடும் என்று பண்ருட்டியார் நினைத்திருக்க கூடும்.

அதே சமயத்தில் இங்கு முக்கிய போட்டி பாமகவிற்கும் அதிமுகவிற்கும் தான். ஆனால் அதிமுகவில் அதிகம் அறிமுகமில்லாத வேட்பாளர் களமிறங்கி இருப்பது பாமகவிற்கு சாதகமான அம்சம். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஆர் என்று இங்கு அழைக்கப்படும் ஆர்.டி.ரங்கநாதன் களமிறங்கி இருந்தால் அதிமுகவிற்கு இன்னும் பலம் சேர்ந்திருக்கும்.

மொத்தத்தில் வி.ஐ.பி தொகுதியாக மாறியிருக்கும் விருத்தாசலத்தில், பாமக தேர்தல் முன்பு வரை தன்னுடைய தோழனாக இருந்த திருமாவளவனின் இழப்பை முக்கியமாக உணரும். பாமக தன்னுடைய தனிப்பட்ட பலத்தை ஓரளவிற்கு இழந்தாலும் திமுக, காங்கிரஸ் என்ற வலுவான கூட்டணி பலத்துடன் இருப்பதால் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது.

விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பாமகவிற்கு உதவுக்கூடும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.விஜயகாந்த்தே நேரடியாக களத்தில் இறங்கி இருப்பதால் இது நாள் வரை ரசிகர் மன்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பிக்கொண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் பாமகவிற்கு Cross-voting செய்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

"கேப்டன்" தன்னுடைய டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளுவார் என்று நம்புகிறேன். இரண்டாமிடம் எதிர்பார்க்க முடியாது.

இரண்டாமிடம் அதிமுகவிற்கோ, பாமகவிற்கோ தான்.

(ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய அப்பாவின் கணிப்பு சரியாக அமைந்திருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன். ஒரு வியபாரியாக இருப்பதால் பலதரப்பு மக்களிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. விருத்தாச்சலத்தில் விஜயகாந்த் நிற்கிறார் என்றதும் ஒரு ஆர்வத்தில் உடனே என்னுடைய அப்பாவையும், விருத்தாசலத்தில் இருக்கும் சில நண்பர்களையும் தொடர்பு கொண்டேன். அவர்கள் கொடுத்த தகவல்களை என்னுடய கணிப்புகளுடன் கலந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்)

Leia Mais…
Wednesday, March 29, 2006

தமிழக கஜானாவிற்கு ஆபத்து

2ரூபாய்க்கு அரிசி, "பெண்களின் பொது அறிவை உயர்த்துவதற்காக" வீட்டிற்கு ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ஊதிய உயர்வு (இன்னும் இந்த பரிந்துரைகள் வெளியாக வில்லை என்று நினைக்கிறேன்) என கலைஞர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை கவர்ச்சிகரமாக வெளியிட்டு இருக்கிறார்.

எல்லாம் சரி, தமிழக அரசின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது பற்றி யோசிக்க வேண்டாமா ?

கலைஞர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகளை நிறைவேற்றுவது மிகவும் கடினம். சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) அரசியல் கட்சிகள் இவ்வாறு சகட்டுமேனிக்கு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து மாநில அரசின் கஜானாவை காலி செய்வதால் சில நிதிக் கட்டுபாடுகளை விதித்திருக்கிறது.

ஜெயலலிதா தன்னுடைய ஆட்சி முடிகிற சமயத்தில் இவ்வாறு அறிவித்து விட்டு தப்பித்து விடலாம். ஆனால் புதியதாக அமையும் அரசு இவ்வாறு செய்வது மிகவும் கடினம். அதுவும் தவிர மாநிலத்தின் பொருளாதாரத்தை இது கடுமையாக பாதிக்கும். ஜெயலலிதா சரமாரியாக அறிவித்த அறிவிப்புகளுக்கு பதிலடி கொடுக்க கலைஞர் இவ்வாறு செய்திருக்கிறார்.

கலைஞரின் இந்த அறிவிப்புகள் குறித்து பிறகு எழுதுகிறேன்.

ஜெயலலிதா அள்ளிக் கொடுத்த சலுகைகள் குறித்து முன்பு நான் எழுதிய ஒரு பதிவை இங்கு மீள்பதிவு செய்கிறேன்.



இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல "Populist" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)

இந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.



ஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.

ஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.

தமிழகம் ஒரு "fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.

திமுக அரசு எடுத்த பல "Populist" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.

இது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.

இத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் "H" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.

ஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.

இந்த தோல்விக்குப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

இந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.

தற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.

அதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.

இந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.

Leia Mais…
Monday, March 27, 2006

பண்ருட்டி

பண்ருட்டி என்றாலே பலாப்பழமும், முந்திரியும் தான் அனைவரது நினைவுக்கும் வரும். சென்னை - கும்பகோணம் சாலையில் செல்பவர்கள் ரோட்டோரங்களில் சீசன் நேரங்களில் பண்ருட்டி, நெய்வேலி பகுதியில் குவிக்கப்பட்டிருக்கும் பலாப்பழங்களையும், சாலையின் இரு புறமும் சூழ்ந்துள்ள முந்திரி தோப்புகளையும் பார்த்திருக்கலாம். பண்ருட்டியில் இருந்து நெய்வேலி வரும் வரையிலும், நெய்வேலி உள்ளே நுழைந்து நெய்வேலி நகரை எட்டும் சிறு தூரம் வரையும் சாலையின் இரு புறங்களிலும் இருக்கும் முந்திரி தோப்புகள் செல்வச் செழிப்பு உள்ள பயிர் போல பலருக்கு தோன்றும். ஆனால் உண்மையில் அதனை நம்பி இருக்கும் பலருக்கு வறுமை தான் மிச்சம் என்பது பலருக்கு தெரியாது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்காக "கடலூர் மாவட்ட கலைக் கழக" போட்டிகள் நடைபெறும். பெரும்பாலும் இந்தப் பகுதியில் இருக்கும் கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் தான் இந்தப் போட்டி நடைபெறும். நெய்வேலியில் இருக்கும் பிற ஆங்கிலப் பள்ளிகள் எதுவும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் எங்கள் பள்ளி (Saint Pauls Matric school) இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெறும். எங்கள் பிரின்சிப்பால் தந்தை தாமஸ் இந்தப் போட்டிகளில் நாங்கள் பங்கு பெற்றால், நெய்வேலி பள்ளிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்ற கருத்து உடையவர். இந்தப் போட்டிகளில் நான் பல முறை கலந்து கொண்டிருக்கிறேன்.

பல கிராமங்கள் எனக்கு இந்த வகையில் தான் அறிமுகமாகின. நெய்வேலி அருகே இருக்கும் சில கிராமங்கள் நண்பர்கள் மூலமாக அறிமுகமாகின. இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டுமானால் செம்மண் சாலைகள் வழியாகத் தான் செல்ல வேண்டும். சில நேரம் சைக்கிளில் சென்றிருக்கிறோம். முந்திரி தோப்புகளுக்கு இடையே ஒத்தையடி பாதை போல இருக்கும் வழியாகத் தான் பல நேரங்களில் செல்வோம். முந்திரி தோப்புகளிடையே அங்காங்கே சிறு சிறு கிராமங்கள் இருக்கும். இந்த கிராமங்களில் இருக்கும் அனைவருக்கும் முந்திரி தோப்புகள் சொந்தம் அல்ல. இவர்கள் இந்த முந்திரி தோப்புகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் தான்.

நெய்வேலியை ஒட்டிய கிராமப் பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை மிகவும் பரிதாபமானது. இவர்களில் பெரும்பாலானோர் ஒரு காலத்தில் ஒரளவுக்கு முந்திரி தோப்புகளுடனோ அல்லது தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான பிரச்சனைகள் அதிகம் இல்லாமலும் இருந்தவர்கள். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் அதன் பணியாளர்களுக்கு தேவையான குடியிருப்புகள் (Neyveli Township) போன்றவை இவர்கள் கிராமங்களையும், விளை நிலங்களையும் விழுங்கி விட்டன. இந்த நிலங்களுக்கு நஷ்ட ஈடும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலையும் வழங்குவதாக என்.எல்.சி நிர்வாகம் ஆரம்ப காலங்களில் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி பிறகு என்.எல்.சி அதிகாரிகளால் நிறைவேற்றப் படவில்லை. இவர்களுடைய பிரச்சனையை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசியல் தலைவர்களும் இல்லாத நிலை தான் இருந்தது. இதில் சில குடும்பங்களை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். மிகவும் ஏழ்மையான குடும்பங்கள். இவர்களுடைய எதிர்பார்ப்பு எல்லாம் என்.எல்.சி நிர்வாகம் தங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவார்கள் என்பது தான். இந்த எதிர்பார்ப்புகளை தவிர இவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு இந்தப் பகுதியில் பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லை. எந்த பெரிய தொழிலும் இங்கு இல்லை.

விவசாயம் என்று சொன்னால் பண்ருட்டியில் முந்திரியும், பலாப் பழமும் தான். மாங்காய், கொய்யா போன்றவையும் இங்கு விளைவது உண்டு (குருவி குடைஞ்ச கொய்யாப் பழம் இப்படி தான் சினிமாவிற்கு வந்து சேர்ந்தது). ஒரு விஷயத்தை இங்கு கவனிக்கலாம். இங்கு விளையும் அனைத்துமே வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே விளையக் கூடியவை. அதுவும் தவிர பெரிய வருமானத்தையும் சிறு கூலி விவசாயிகளுக்குப் இவை பெற்று கொடுத்து விடாது. முந்திரி தோப்புகள் சிறு விவசாயிகளிடமும் இருக்காது. இவர்கள் கூலி வேலைச் செய்பவர்களாகவே இருப்பார்கள். அதுவும் ஆண்டுக்கு சில மாதங்கள் மட்டுமே வருமானம் இருக்கும். வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவையிடையே முந்திரி தோப்புகளில் தீவிரவாதம் வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை தான்.

1980களில் முந்திரி தோப்புகளில் விளைந்த தமிழ் தேசியம் சார்ந்த தீவிரவாதம் பண்ருட்டியிலும் இருந்தது. சில நாட்டு குண்டுவெடிப்புகள், போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டது போன்றவை குறித்து எனக்கு ஞாபகம் இருக்கிறது.

இங்கு விளையும் பலாப் பழத்தை குறித்து அதிக விளக்கம் கொடுக்க தேவையில்லை. முந்திரிப் பழம் எனக்குப் பிடிக்கும். முந்திரிப் பழத்தை வெட்டி, உப்பு போட்டு ஊற வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். சில நேரங்களில் தொண்டையில் ஒரு மாதிரி நமச்சல் ஏற்படவும் செய்யும். முன்பெல்லாம் முந்திரி தோப்புகளில் முந்திரிப் பழத்தை இலவசமாக பறித்துக் கொள்ளலாம். முந்திரிப் பழத்தைப் பறித்துக் கொண்டு கொட்டையை மட்டும் கொடுத்து விட வேண்டும். முந்திரிப் பழம் விற்று சிலர் தங்கள் அன்றாடத் தேவைகளை ஒரளவுக்குப் பூர்த்திச் செய்து கொள்வார்கள். ஆனால் இப்பொழுது முந்திரிப் பழம் ஏற்றுமதி செய்யப்படுவதாலும், சில கெமிக்கல் தொழில்களுக்கு உபயோகப்படுவதாலும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.

முந்திரிப் பருப்பு மிகவும் விலை உயர்ந்த பொருள் தான் என்றாலும் பச்சை முந்திரிக் கொட்டையை கொழம்பு வைக்கும் வழக்கமும் இந்தப் பகுதியில் உண்டு. இதில் பெரிய சுவை ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பலாப் பிஞ்சை பொறியல் செய்வதும் இங்கு வழக்கம். அது நன்றாக இருக்கும். ஆனால் ஏதோ சக்கையை சாப்பிடுவது போல இருக்கும்.

இந்தப் பகுதியில் முந்திரி, பலா சீசன் வந்து விட்டால் தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பலாப் பழமும், முந்திரி பழமும் கொடுப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது. நண்பர்கள் மற்றும் எங்கள் கடைக்கு சப்ளை செய்பவர்கள் மூலமாக எங்கள் வீட்டிற்கு நிறைய பழங்களும், பச்சை முந்திரி பருப்பும் வரும். அழகி படத்தில் கூட பார்த்திபன் வீட்டிற்கு அவரின் கிராமத்து நண்பர்கள் பலாப்பழத்தை தூக்கி கொண்டு வருவதை கவனித்து இருக்கலாம். இது இந்தப் பகுதியில் இயல்பாக இருக்கும் ஒரு பழக்கம். சில நேரம் சென்னைக்கு பேருந்தில் செல்லும் பொழுது பண்ருட்டியில் இருந்தும், நெய்வேலியில் இருந்தும் நிறையப் பேர் இவ்வாறு பலாப்பழத்தை தூக்கி கொண்டுச் செல்வதை பார்க்கலாம். சென்னையில் ஒரு பேருந்து மேல் நிறையப் பலாப் பழம் இருந்தால் அந்த பேருந்து எங்கிருந்து வருகிறது என்பதை கவனியுங்கள். நெய்வேலி, பண்ருட்டி வழியாக வரும் கும்பகோணம், தஞ்சாவூர் பேருந்தாக இருக்கும்.

பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 1980களில் இருந்த அளவுக்கு வறுமை இப்பொழுது இல்லை என்று சொல்லலாம். இங்கிருந்து முந்திரி ஏற்றுமதி செய்யப்படுவது ஒரு காரணம். முன்பு தங்கள் விளைச்சலை பக்கத்து ஊர்களில் சந்தைப் படுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது ஏற்றுமதி செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

அது போல நெய்வேலியில் நிலம் இழந்தவர்களுக்கு வேலை வழங்கும் பிரச்சனை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பிறகு முக்கியத்துவம் பெற்றது. சில போராட்டங்களும் நடந்திருக்கின்றன. பாமக முயற்சியால் நிறையப் பேருக்கு வேலை கிடைத்தது.(என்னுடைய நெய்வேலி பற்றிய பதிவில் இது குறித்து எழுதி இருக்கிறேன்).

பாமக போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் முந்திரி தோப்புகள், பேருந்து மேல் மறைந்திருந்து கல் எறிவதற்கும், பேருந்தை கொளுத்தி விட்டு ஓடி ஒளிந்து கொள்வதற்கும் நல்ல வசதியாக இருந்தது என்று சொல்லலாம். பாமக போராட்டமா, நிச்சயம் பேருந்து பண்ருட்டியை தாண்டாது. அது போல சிதம்பரம், சேத்தியாதோப்பு பகுதிகளை தாண்டாது. இதன் இடையில் இருப்பதால் நெய்வேலிக்கு எந்த திசையில் இருந்தும் பேருந்து வராது.

பேருந்து என்றதும் இந்தப் பகுதியில் ஞாபகத்திற்கு வருபவர், பண்ருட்டி ராமச்சந்திரன் தான். "செல்லமாக" பண்ருட்டியார். மக்களின் அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கோ, இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சிக்கோ பண்ருட்டியார் எதுவும் செய்யவில்லை. ஆனால் பல பண்ருட்டி கிராமங்களை பேருந்தால் இணைத்து விட்டார். அதுவே அவருக்கு அபரிதமான செல்வாக்கை பெற்று கொடுத்தது. பண்ருட்டி டவுன் பஸ் என்பது நான் பள்ளியில் படிக்கும் பொழுது இருந்தே மிகப் பிரபலம். நெய்வேலி அனல் மின் நிலையத்தில் இருந்து தொடங்கி என் பள்ளி வழியாக பண்ருட்டி செல்லும் டவுன் பஸ் சில நேரங்களில் நான் பள்ளுக்குச் செல்ல உதவி இருக்கிறது. பண்ருட்டி டவுன் பஸ்கள் நிறையப் பேருக்கு இன்னமும் பண்ருட்டியாரை தான் ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஞாபக சக்தி தனக்கு தேர்தலில் வெற்றி பெற வைக்கும் என்று எண்ணி கடந்த தேர்தலில் பண்ருட்டியார் இங்கு தனித்து போட்டியிட்டார். ஆனால் மூன்றாம் இடத்தையேப் பெற்றார். இந்த தேர்தலில் தான் இங்கு போட்டியிட கூட வாய்ப்பு இருக்கிறது என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார் என்பதால் இந்த தேர்தலில் கவனிக்கப்படும் தொகுதியாக பண்ருட்டி உருவாகி இருக்கிறது.

பண்ருட்டி பற்றி எழுத தொடங்கி பதிவு நீண்டு விட்டதால், பண்ருட்டி தொகுதி குறித்த அலசல் அடுத்தப் பதிவில் வரும்

Leia Mais…
Sunday, March 26, 2006

சோனியா பதவி விலகல் தியாகமா ?

சோனியா காந்தி தனது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது மிகப் பெரிய தியாகம் என்று காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர். பாரதீய ஜனதா கட்சியோ அது ஒரு தியாகமும் அல்ல என்று வலியுறுத்தி கூறி வருகிறது. எது எப்படியாயினும் சோனியா தன்னுடைய அதிரடி முடிவுகளால் மக்களின் மத்தியில் மறுபடியும் தன் இமேஜை உயர்த்திக் கொண்டுள்ளார்.

பாரதீய ஜனதா கட்சி சோனியா காந்திக்கு எதிராக பலமான அஸ்திரம் என்று நினைத்து பிரச்சனையாக்கும் விஷயங்களை தன்னுடைய நடவடிக்கைகளால் சோனியா நிர்மூலமாக்கி விடுகிறார். பிரதமர் பதவியை மறுத்தது முதல் தற்பொழுது எம்.பி பதிவியை ராஜினாமா செய்தது வரை பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அவர் வழங்குவதில்லை.



சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க கூடாது, சோனியா பதவி ஏற்றால் மொட்டை அடித்துக் கொள்வோம் என்று முழங்கிய பாரதீய ஜனதா கட்சியினர், உண்மையில் சோனியா அந்த பதவியை ஏற்க வேண்டும் என்றே நினைத்தனர். சோனியா அவ்வாறு பதவி ஏற்பதன் மூலம் தாங்கள் தான் உண்மையான தேச பக்தர்கள், இந்த நாட்டை காப்பாற்ற தகுதியானவர்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சோனியாவை குறி வைத்து பாரதீய ஜனதா கட்சி தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க முடியும். ராமர் கோயில் பிரச்சனை போன்றவற்றுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடிப்பதற்கு நல்ல முழக்கமாக இருக்கும் என்று பாஜகவினர் நினைத்தனர்.

சோனியா காந்தி உட்பட வெளிநாட்டில் பிறந்தவர்கள் இந்தியாவின் பிரதமராக கூடாது என்ற சட்டத்தை இயற்றப் போவதாக கூறி வந்த வாஜ்பாய் மற்றும் பாஜகவினர் தங்களுடைய ஐந்து ஆண்டு ஆட்சியில் அதற்கான எந்த "முயற்சியையும்" மேற்கொள்ள வில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சோனியாவை குறிவைத்து அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க இந்தச் சட்டம் பயன்படாது என்று நினைத்தனர். சோனியா பிரதமராகும் வாய்ப்பு இருந்தால் தான் அதனை தங்களால் தேர்தல் பிரச்சனையாகவும் ஆக்க முடியும் என்று நினைத்தனர். அந்த வாய்ப்பை தொடர்ந்து அப்படியே பராமரித்து சோனியா பிரதமரானால் மொட்டை அடித்து கொள்வோம் என்று பிரச்சாரத்தையும் நடத்தினர்.


பாரதீய ஜனதா கட்சியினருக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் சோனியா பிரதமர் பதவியை மறுத்தார். அவரது இமேஜ் பாரதீய ஜனதா கட்சியின் அனுதாபிகள் தொடங்கி, நடுநிலையாளர்கள் வரை உயரவேச் செய்தது. இதற்குப் பிறகு உட்கட்சிப் பூசல், அத்வானி பிரச்சனை, எம்.பி.களின் லஞ்சம் எனப் பல பிரச்சனைகளில் சிக்கி தவித்த பாரதீய ஜனதா கட்சிக்கு சோனியா ஆதாயம் தரும் பதவியை வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது. ஆனால் அது மிகப் பெரிய பிரச்சனையாகும் முன்பாக மிகச் சாதுரியமாக சோனியா தனது பதவியை விட்டு விலகி பாஜகவினர் இந்தப் பிரச்சனை மூலம் எந்த ஆதாயத்தையும் அடையாமல் செய்து விட்டார். தன்னுடைய இமேஜையும் உயர்த்திக் கொண்டார்.

ஆனால் காங்கிரசும், அவர்களின் கூட்டணி கட்சியினரும் சொல்வது போல இந்தப் பதவி விலகல் தியாகமா ?

சோனியாவின் பதவி விலகல் எப்படி தியாகமாகும் என்பதை இவர்கள் கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை. சோனியா இந்தப் பதவியை விட்டு விலகி அரசியலில் இருந்து ஓய்வு எடுத்து விட்டாரா, அல்லது இனி தேர்தலிலேயே போட்டியிட மாட்டேன் என்று கூறி விட்டாரா ? மிகவும் அழுத்தமாக தான் மறுபடியும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக கூறியிருக்கிறார். தனக்கு ஏற்பட்டச் சிக்கலில் இருந்து தன்னை மிகவும் சாதுரியமாக விடுவித்துக் கொண்ட அதே நேரத்தில் அரசியல் ஆதாயத்தையும் தேடிக் கொண்டார். இது எந்தவிதத்திலும் தியாகமாகி விடாது. மாறாக மக்கள் மீது தேவையில்லாத மற்றொரு இடைத்தேர்தல் திணிக்கப்படுகிறது.

முதலில் இந்தப் பிரச்சனையே அரசியல் காரணங்களுக்காக தான் நடந்ததே தவிர அரசியல் நேர்மையை கட்டிக் காக்க வேண்டிய எண்ணம் இந்தப் பிரச்சனையை முதலில் முன்நிறுத்திய காங்கிரசுக்கும் சரி, பின் இந்த பிரச்சனையை தன் கையில் எடுத்துக் கொண்ட பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்ததில்லை. லஞ்சம் வாங்கிய தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாதாடிய அத்வானி போன்ற தலைவர்கள் சோனியாவுக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க செல்வது எல்லாம் ஒரு பெரிய சீரியசான விஷயமாக எனக்கு தோன்றியதில்லை. அரசியல் நாடகத்தில் ஒரு அத்தியாயம் அவ்வளவு தான். ஜெயா பச்சனுக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய காங்கிரஸ், சோனியாவை காக்க அவசரச் சட்டம் கொண்டு வர முனைந்தது எல்லாம் மறந்து போய் இன்று சோனியாவின் தியாகம் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பதவி மூலம் சோனியா பெரிய ஆதாயங்கள் எதையும் அடைந்து விடப் போவதில்லை. மைய அரசின் ஆட்சியே அவர் கையில் இருக்க ஏதோ ஒரு பதவி மூலம் தான் அவர் ஆதாயம் அடைய வேண்டுமா என்ன ? இந்தப் பிரச்சனையே முதலில் அர்தமற்றது. பாரதீய ஜனதா கட்சிக்கு அரசியலாக்க கிடைத்த ஒரு விஷயம் என்பதை தவிர இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பது போல எனக்கு தெரியவில்லை.

இந்தப் பிரச்சனை எழுந்தவுடனே சோனியா பதவி விலகி இருந்தால் அவர் நேர்மையை நாம் சிலாகித்து இருக்கலாம். மாறாக இந்தப் பிரச்சனை தனக்கு அதிக பிரச்சனைகளை கொண்டு வரும் என்று தெரிந்தப் பிறகு தான் அவர் விலகி இருக்கிறார். இதில் எந்த தியாகமோ, நேர்மையோ இல்லை. தானும் இந்தியாவின் பல அரசியல்வாதிகள் போன்ற ஒருவர் தான் என்பதை சோனியா மற்றொரு முறை நிருபித்து இருக்கிறார். பிகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி கட்சியினரை ஆட்சியில் அமர்த்த கவர்னர் பதவியை தங்களுக்கு சாதகமாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எம்.பி.க்கள் ஆதாயம் தரும் பதவிகளில் இருக்க வகைச் செய்யும் சட்டத்தை காங்கிரஸ் இப்பொழுது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்போகிறது. இதற்கு ஆதரவாகவே பாரதீய ஜனதா கட்சியும் வாக்களிக்கும். அல்லது வாக்களிப்பை புறக்கணித்து இந்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற உதவும். இவ்வாறு இருக்கையில் சோனியாவின் "தியாகம்" எவ்வளவு நகைப்பிற்குரியதோ, அதே அளவுக்கு இந்தப் பிரச்சனையை முன்நிறுத்தும் பாரதீய ஜனதா கட்சியின் கோஷங்களும் நகைப்பிற்குரியவையே.

Leia Mais…

ஸ்டாலின் vs வைகோ - 1

அடுத்த முதல்வர் ஸ்டாலினாக இருக்க கூடும் என்று சிலர் யூகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். கலைஞர் முதல்வராக பதவியேற்று விட்டு பிறகு ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும், ஸ்டாலின் துணை முதல்வராக ஆகக் கூடும் என்றும் சில யூகங்கள் உலாவிக் கொண்டிருக்கிறன. ஆனால் தனக்கும் இந்த யூகங்களுக்கும் எந்த ஒரு பொருத்தமும் இல்லாதது போல ஸ்டாலின் வழக்கம் போல கலைஞர் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுகவின் அடுத்த தலைவரிடம் இருக்க வேண்டிய குணநலன்களோ, ஆளுமைத் தன்மையோ, போர்க்குணமோ, சாணக்கியத்தன்மையோ ஸ்டாலினிடம் இருக்கிறதா ?

கலைஞரின் "அன்பு" மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதையும் தலைவர் இமேஜும் ஏற்பட்டதே தவிர ஸ்டாலின் இயல்பாக தலைவராக இருக்கக் கூடிய தகுதி வாய்ந்தவரா என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. Stalin is not a leader on his own right என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எத்தனை தருணங்களில் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை யோசிக்கும் பொழுது என்னால் ஒரு உதாரணத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறேன்.

தமிழகத்தின் தலைவர்களாக இருப்பவர்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கவேச் செய்திருக்கிறது. இதனை Charismatic என்று சொல்லலாம். மக்களை இழுக்கக் கூடிய தன்மை. பெரியார், காமராஜர் தொடங்கி இன்றைக்கு தலைவர்களாக இருக்க கூடிய திருமாவளவன் வரை அவர்களிடம் இயல்பாக தெரியக்கூடிய ஆளுமைத் தன்மை, போராட்டக்குணம், மக்களை கவரும் தன்மை போன்றவை ஸ்டாலினிடம் காணப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

தமிழகத்தின் தலைவர்களாக இருக்கக் கூடியவர்களிடம் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும் என்பதான ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் பேச்சாற்றல் மட்டுமே தலைவர்களை உருவாக்கி விடுவதில்லை. அதைக் கொண்டு மட்டுமே தமிழக மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து விடுவதில்லை.

தமிழகத்தின் தற்போதைய பல தலைவர்களின் மேடை பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். வைகோ, திருமாவளவன் போன்றவர்களின் பேச்சு அளவுக்கு ஸ்டாலினின் பேச்சு இருக்காது என்றாலும் அவர் மோசமான பேச்சாளர் அல்ல. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் தான். சென்னை நகரின் மேயர் பதவி பறிபோன நிலையில் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சை கேட்டிருக்கிறேன். நன்றாக பேசக்கூடியவர் தான். ஆனாலும் திருமா, வைகோ போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் எப்படி பேசி இருப்பார்கள் என்பதைக் கவனிக்கும் பொழுது ஸ்டாலினின் பலவீனம் நமக்கு தெரியவரும். வைகோ, திருமா போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் பேசும் பேச்சு சிலரையாவது சலனப்படுத்தி இருக்கும். ஆனால் ஸ்டாலின் யாரையும் சலனப்படுத்தவில்லை.

இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் மோசமான பேச்சாளர் என்றால் அது டாக்டர் ராமதாஸ் தான். இவரது பேச்சை நான் ஒரு திருமண விழாவில் கேட்டிருக்கிறேன். இவர் பேச்சை அவரது கட்சியின் தீவிர தொண்டர்கள் கூட கவனித்ததாக தெரியவில்லை. ஒரு சில வார்த்தைகளை கோர்த்து மேடைப் பேச்சு தமிழில் பேசக் கூட இவருக்குத் தெரியவில்லை. சாதாரண பேச்சுத் தமிழில் தான் பேசினார். ஒரு சாதாரண அரசு மருத்துவராக இருந்து, அரசியல் பிண்ணணி இல்லாமல் ஒரு தலைவராக உருவாக இவரது பேச்சாற்றல் இரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் அது வரை நினைத்திருந்தேன். ராமதாசின் வளர்ச்சிக்கு சாதி ஒரு காரணம் என்று வாதிட்டாலும், அந்தச் சாதியில் பல தலைவர்கள் இருந்தாலும் ராமதாசை மட்டுமே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போல தலித் சமுதாயத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் தான் தலைவராக உருவாக முடிந்தது.

இங்கு ஒன்றை கவனிக்கலாம். பேச்சாற்றல், எதுகை மோனையுடன் கவிதையான பேச்சு, குட்டிக் கதைகள் இவற்றை மட்டுமே கொண்டு தங்கள் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து விடுவதில்லை. நல்ல பேச்சாற்றல் உள்ளவர் தான் தலைவராக உருவாக முடியும் என்றால் வைகோ பெரிய தலைவராகி இருக்க வேண்டும். ராமதாஸ் தலைவராகவே ஆகியிருக்க முடியாது. ஆனால் மக்கள் வேறு ஏதோ ஒரு குணத்தைக் கொண்டே தங்கள் தலைவர்களை தேர்தெடுக்கிறார்கள். இந்தத் தலைவர்களிடம் இருக்க கூடிய சில குணநலன்கள் மக்களை கவர்ந்திருக்க வேண்டும்.

அப்படி பார்த்தால் எனக்கு தெரிவது தலைவர்களின் செயல்பாடுகள், அவர்கள் மேற்கொள்ளும் "அதிரடி" நடவடிக்கைகள், பிரச்சனைகளை அணுகும் முறை, போராட்டக் குணம் போன்றவையே மக்களை கவருகிறது. தொண்டர்களிடம் தலைவர்கள் நெருக்கமாக பழகுவதே தொண்டர்களை கவருகிறது. இது இந்தியா என்று இல்லை, பல நாடுகளிலும் இவ்வாறு தான் இருந்து வருகிறது. தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத தலைவர்கள் பிரகாசிக்க முடிவதில்லை.

திமுகவில் வைகோவின் எழுச்சி தொண்டர்களிடம் அவர் கொண்ட நெருக்கத்தாலேயே நிகழ்ந்தது. வைகோவின் பேச்சாற்றல், அவரது கம்பீரம் நிறைந்த கவர்ச்சி, தொண்டர்களை அரவணைக்கும் முறை போன்றவற்றாலேயே வைகோ திமுகவில் ஒரு முக்கிய தலைவராக வளர்ந்தார். ஆனால் வைகோவை கலைஞருக்கு மாற்றாக திமுக தொண்டர்கள் நினைக்கவில்லை. கலைஞரின் போர்வாள், கலைஞருக்கு அடுத்த திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதாகவே வைகோவை கருதினர். எனவே தான் வைகோ கலைஞருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதை நிறைய திமுக தொண்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வைகோ திமுகவை பிளப்பார் என்று கருதப்பட்ட நிலையில் ஒரு சிறு பிரிவையே தன்னுடைன் வெளியே கொண்டுச் செல்ல முடிந்தது.

ஆனால் கலைஞருக்கு பின் ?

திமுக தொண்டர்கள் போர்க்குணம் நிறைந்த, பேச்சாற்றல் மிக்க வைகோவை ஏற்பார்களா, ஸ்டாலினை ஏற்பார்களா ?

இது தான் இன்றைய தமிழக அரசியலில் சுவாரசியமான கேள்வி

சாதாரண திமுக தொண்டன் இன்றும் வைகோவை விரும்புகிறான். கலைஞருடன் வைகோ இருந்தால் வைகோ மீது அவனுக்கு தனிப்பாசம் ஏற்படவே செய்கிறது. ஸ்டாலினுடன் ஒப்பிடும் பொழுது வைகோவிற்கு கவர்ச்சியும் அதிகம். ஆனால் வைகோ ஜெயலலிதாவுடன் செல்லும் பொழுது திமுக தொண்டனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவனால் எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுடன் உறவாடுவதை ஏற்க முடியாது. வைகோவை ஜெயலலிதா பக்கம் கொண்டு செல்வதே திமுக தொண்டனை தக்க வைத்துக் கொள்ளும் சரியான முயற்சி. அதைத் தான் ஸ்டாலின் இந்த முறைச் செய்தார்.

அடுத்து ஆட்சியை பிடிப்பதை விட வைகோ மீதான அச்சமே கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் இருந்தது. அதனாலேயே வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலையை உருவாக்கினார்கள்.

வைகோ மீது ஸ்டாலினுக்கு ஏன் இத்தகைய அச்சம் ? திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் வைகோவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் வைகோ ஏன் ஸ்டாலினை அச்சப்படுத்த வேண்டும் ?

ஏனெனில் திமுகவில் ஸ்டாலின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக எந்த ஒரு வளர்ச்சியையும் பெறவில்லை. அவருடைய வளர்ச்சி கலைஞர் என்ற
பிம்பத்தால் நிகழ்ந்தது. ஸ்டாலினின் தனிப்பட்ட எந்த குணநலனும் திமுக தொண்டனை கவர்ந்ததில்லை.

ஆனால் வைகோவின் வளர்ச்சி அவ்வாறு இல்லை. வைகோவின் வளர்ச்சி ஒரு இயல்பான வளர்ச்சி. எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் அடிமட்ட
தொண்டனாக தொடங்கிய வைகோ தன்னுடைய தனிப்பட்ட பண்புகளாலேயே வளர்ச்சி அடைந்தார். வைகோ வளர்ச்சி அடையும் ஒவ்வொரு சூழலிலும் அதனை தடுக்க கலைஞர் தன்னுடைய சாணக்கியத்தனத்தை நுழைத்துள்ளார். வைகோ தன்னை கொல்ல முனைந்ததாக கதை கட்டி திமுக தொண்டனை வைகோவிற்கு எதிராக மாற்ற முனைந்தார். இதில் அவருக்கு வெற்றி தான்.

அடுத்து ஜெயலலிதா வைகோவை கைது செய்த பொழுது, வைகோ சிறையில் இருந்த நிலையில் வைகோவிற்கு இயல்பாக எழுந்த அனுதாபத்தை
முறியடிக்க அந்த அனுதாபத்தில் தன்னையும் கலைஞர் இணைத்துக் கொண்டார். இன்று மறுபடியும் வைகோவை ஜெயலலிதாவிடமே வைகோவை கொண்டுச் சேர்த்து திமுக தொண்டர்களை வைகோவிற்கு எதிராக மாற்றி விட்டார். கலைஞரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் வெற்றியே பெற்றார். வைகோ பலிகடாவாகவே மாறினார்.

இந் நிலையில் தேர்தல் முடிவு தான் பல நிலைகளை தெளிவாக்க முடியும்.

ஆனாலும், வைகோவால் திமுக தொண்டர்களை கவர முடியுமா ? ஸ்டாலினால் திமுகவை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்ள முடியாதா ? என்ற கேள்விகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

இது ஒரு சுவாரசியமான எதிர்காலத்தை குறித்த அலசலாக இருப்பதால் இது குறித்த யூகங்களும் ஆர்வங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

அந்த வகையில் தான் இந்த பதிவை எழுத முனைந்துள்ளேன்
ஸ்டாலின் vs வைகோ, யார் வெற்றி பெற போகிறார்கள், உண்மையிலேயே இது ஒரு போட்டி தானா இல்லை ஊடகங்கள் உருவாக்கிய மற்றொரு தேவையில்லாத சர்ச்சையா ?

அடுத்தப் பதிவில்

Leia Mais…
Saturday, March 25, 2006

தொகுதி அலசல் : குறிஞ்சிப்பாடி

தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எந்த தொகுதியில் எந்தக் கட்சி நிற்கிறது என்ற நிலவரம் தெரிந்து விட்டதால் தேர்தல் கணிப்புகளும் இனி தொகுதிவாரியாக தொடங்கி விடும். அந்த வகையில் என்னுடைய சொந்த ஊரான நெய்வேலியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி தொகுதி நிலவரத்தை என்னால் இங்கிருந்து சரியாக கணிக்க முடியாது என்றாலும் ஒரளவு கணிக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

மதிமுகவுக்கு அதிமுக வழங்கியுள்ள சில தொகுதிகளை கவனித்தேன். ஒரு விஷயம் எனக்கு தெளிவாக புரிகிறது. தான் கண்டிப்பாக தோல்வி அடையக்கூடும் என்று நினைக்கும் சில தொகுதிகளை அதிமுக மதிமுகவிடம் தள்ளி விட்டுள்ளது. வேலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, தருமபுரி, தாரமங்கலம், பெரம்பூர், எழும்பூர் என திமுக-பாமக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய பல வட மாவட்ட தொகுதிகளை மதிமுகவிடம் ஜெயலலிதா தள்ளி விட்டுள்ளார். சென்ற பாரளுமன்ற தேர்தலில் கூட பாஜகவிற்கு இந்த நிலை தான் ஏற்பட்டது. தென்மாவட்ட தொகுதி நிலவரம் பற்றி எனக்கு தெரியவில்லை. ஆனால் வடமாவட்டங்களில் நிறைய தொகுதிகள் ஏன் மதிமுகவுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று புரியவில்லை. மதிமுகவிற்கு வடமாவட்டங்களில் எந்த அடித்தளமும் இல்லை.

குறிஞ்சிப்பாடியில் கட்சிகளின் நிலவரத்திற்கு செல்வதற்கு முன்பாக இங்கிருக்கும் சில முக்கிய அம்சங்களை கவனிக்கலாம். வடமாவட்டத்தில் உள்ள பல தொகுதிகள் போல தலித், வன்னியர் என இரு சமூகங்கள் மட்டுமே இருக்கும் தொகுதியாக இல்லாமல் குறிஞ்சிப்பாடி தொகுதி ஒரு கலவையான தொகுதியாக பல சமூக மக்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. நெய்வேலியில் பல சமூக மக்களும் இருக்கின்றனர். நெய்வேலிக்கு வெளியே இருக்கும் பகுதிகளில் தலித், வன்னியர், ரெட்டியார், நாயுடு போன்ற சமூக மக்கள் அதிகம் உள்ளனர்.

நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூர் பகுதிகள் குறிஞ்சிப்பாடி தொகுதியின் கீழ் வருகிறது. நெய்வேலி நகரம் மற்றும் அதன் அருகாமையில் இருக்கும் நெய்வேலியைச் சார்ந்தப் பகுதிகளே பல தேர்தல்களில் குறிஞ்சிப்பாடி தொகுதியின் வெற்றியை தீர்மானித்து வந்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இங்கு இருந்தாலும், மைய அரசுக்கு லாபம் ஈட்டும் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நெய்வேலி இருந்தாலும், நெய்வேலியால் அருகில் இருக்கும் கிராமங்களுக்கோ, சிறு நகரங்களுக்கோ எந்த ஒரு உபயோகமும் இல்லை. குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ள பகுதியாக இதனை சொல்ல முடியா விட்டாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் நெய்வேலியை தவிர்த்தப் பிற பகுதிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. விவசாயம் தான் இந்தத் தொகுதியின் முக்கிய பொருளாதாரம் (நெய்வேலி தவிர).

குறிஞ்சிப்பாடி சுற்றி இருக்கும் பகுதிகள் நல்ல வளமான பூமி என்று சொல்லலாம். நிலத்தடி நீர் தான் பாசனத்திற்கு உதவுகிறது. முக்கிய விவசாயமாக நெல் மற்றும் வேர்கடலை உள்ளது (இதனை மல்லாட்டை, மல்லாக் கொட்டை என்று இந்தப் பகுதியில் கூறுவார்கள்). நெல், கரும்பு போன்றவையும் இங்கு உண்டு. குறிஞ்சிப்பாடி அரிசி என்பது இந்தப் பகுதியில் கொஞ்சம் பிரபலம். எங்கள் கடைக்கு அதிகம் குறிஞ்சிப்பாடி அரிசியையே வாங்குவோம்.

நிலத்தடி நீர் குறைவது, நெய்வேலியில் நிலம் இழந்தவர்களுக்கு வேலை போன்றவை இங்கு முக்கிய பிரச்சனைகள். ஆனால் இன்று வரை தீர்வு ஏதும் ஏற்பட்டதில்லை. குறிஞ்சிப்பாடி தொகுதியில் கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்கள் தொகுதிக்கு உருப்படியாக எதுவும் செய்ததில்லை. தமிழகத்தின் மிகவும் பிந்தங்கிய மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் உண்டு. இந்தப் பகுதியும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பகுதியில் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதே நேரத்தில் தமிழகத்தின் பல தொகுதி எம்.எல்.ஏ.க்களுக்கு இல்லாத வசதி இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வுக்கு உண்டு. நெய்வேலி இந்தப் பகுதியில் இருப்பதால் நெய்வேலி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் செய்து கொடுத்து விடுகிறது. ஏதாவது வசதி குறைவு என்றால் மக்களின் கோபம் என்.எல்.சி. நிர்வாகம் மேல் தான் திரும்புகிறது. எம்.எல்.ஏ.வுக்கு பிரச்சனையில்லை. அது போல பல தொகுதிகளில் இருக்கும் குடிநீர் பிரச்சனையும் இந்த தொகுதியில் இல்லை. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பகுதிக்கு என்.எல்.சி குடிநீர் வழங்கி விடுகிறது. இதனால் இந்த தொகுதி எம்.எல்.ஏ ஒரு வேலையும் இல்லாமல் நன்றாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்

இந்த தொகுதியில் நெய்வேலியை தவிர்த்துப் பார்த்தால் ஒரு உருப்படியான விஷயமும் இல்லை. நெய்வேலிக்கு வெளியே ஒரு தொழிற்சாலையோ, நல்ல பள்ளியோ, கல்லூரியோ இல்லை. பண்ருட்டி, விருத்தாசலம் போன்ற பக்கத்து ஊர்களில் இருக்கும் வியபாரப் பரபரப்பு கூட இங்கு இருக்காது. நெய்வேலியிலும் இதே நிலை தான். இந்தப் பகுதியே ஒரு சோம்பேறிப் பகுதியாக எனக்கு தோன்றும்.


நெய்வேலி நகரம் படித்தவர்கள் நிறையப் பேர் இருக்கும் இடமாக இருப்பதால் எப்பொழுதுமே திமுகவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. நெய்வேலிக்கு அருகாமையில் இருக்கும் பிற பகுதிகளான வடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகள் கிரமப்புற பகுதிகள். இங்கு பாமக ஒரு வலுவான இயக்கம் என்று சொல்லலாம். அதே அளவு வலுவான நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும் உள்ளது. கட்சி ரீதியாக அதிமுக, மதிமுக போன்ற கட்சிகளுக்கு இங்கு பெரிய அளவில் எந்தச் செல்வாக்கும் இல்லை. ஆனால் அதிமுகவிற்கு கிராமப்புற மக்களின் கணிசமான வாக்கு வங்கி இங்கு உண்டு.

நெய்வேலியில் இருக்கின்ற தொழிற்சங்கங்களில் மிகவும் வலுவானச் சங்கம் திமுகவின் தொ.மு.ச தான். இதற்கு அடுத்த நிலையில் இருப்பது விடுதலைச் சிறுத்தைகளின் தொழிற்சங்கம். மூன்றாம் இடம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற்சங்கத்திற்கும், நான்காம் இடம் கம்யுனிஸ்ட்களுக்கும் உள்ளது. ஐந்தாம் இடத்தில் அதிமுக வருகிறது. நெய்வேலி நிலக்கரி நிறுவன ஊழியர்கள் எந்த தொழிற்சங்கத்தில் அதிகம் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை பொறுத்து இந்த நிலைகள் திர்மானிக்கப்படுகிறது (என்னுடைய நெய்வேலி பற்றிய பதிவை பார்க்கலாம்).

கடந்த தேர்தலில் (2001) தமிழகத்திலேயே திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி குறிஞ்சிப்பாடி தொகுதி தான். திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுமார் 23,863 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பெற்ற வாக்குகள் 65,425 (சுமார் 55.78% வாக்குகள்). இந்த தேர்தலில் அதிமுக 41,562 வாக்குகள் பெற்றது. இதில் பாமகவின் வாக்குகளும் உள்ளன என்பதை கவனிக்க வேண்டும். அதே போல திமுகவின் 65,425 வாக்குகளில் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் உள்ளன.

இங்கு மதிமுகவிற்கு எந்த அடித்தளமும் இல்லை. வைகோ திமுகவில் இருந்து வெளியேறிய பொழுது நெய்வேலி திமுகவில் ஒரு பிரிவு வைகோவுடன் சென்றது. அந்தப் பிரிவின் தலைவர் நாகலிங்கம் என்பவர். பின்னர் அவர் மறுபடியும் திமுகவுடன் இணைந்தார். அவர் தான் இப்பொழுது திமுகவின் நெய்வேலி நகர தலைவர்.

மதிமுகவிற்கு இங்கு அமைப்பு ரீதியாக கூட எந்த பலமும் இல்லை. தன்னால் வெற்றி பெற முடியாத தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விடும் ஜெயலலிதாவின் வழக்கமான பாணியில் இந்த தொகுதி இம்முறை மதிமுகவிற்கு வருகிறது.

மதிமுகவில் யார் வேட்பாளராக நிற்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திற்கு தான் இந்த தொகுதி ஒதுக்கப்படும். 1996க்குப் பிறகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திமுகவின் அசைக்க முடியாத புள்ளியாக கடலூர் மாவட்டத்தில் உருவாகி விட்டார். எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் காட்டுமன்னார்குடி. காட்டுமன்னார்குடி தனி தொகுதியாக இருப்பதால் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாறினார். தொகுதி மக்களிடம் பெரிய அளவில் நல்ல பெயரும் இல்லை. கெட்டப் பெயரும் இல்லை.

இவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்னும் ஒரு காரணம் திமுகவில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அதனாலேயே ஒவ்வொரு திமுக உட்கட்சி தேர்தலிலும் தன்னுடைய ஆதரவாளர்களை பெரும் அளவில் பணத்தைக் கொட்டி வெற்றி பெறச் செய்வதில் எம்.ஆர்.கே அதிக அக்கறை செலுத்துவார். இந்த தொகுதியில் இவருக்கு எதிராக கட்சியில் சீட் கேட்பார்கள் என்று கருதப்பட்ட நெய்வேலி இராமகிருஷ்ணன், வடலூர் தண்டபானி, குறிஞ்சிப்பாடி கணேசமூர்த்தி போன்ற இந்தப் பகுதியின் பிரபலமான திமுக தலைவர்களை உட்கட்சி தேர்தலில் சில டம்மி வேட்பாளர்கள் கொண்டே தோற்கடித்தார். இதன் மூலம் திமுக தலைமை தனக்கே வாய்பாளிக்கும் என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்.

குறிஞ்சிப்பாடி தொகுதியை பொறுத்தவரை போட்டி என்பதே இல்லை என்று சொல்லலாம். அதிமுகவோ, விடுதலைச் சிறுத்தைகளோ நின்றிருந்தால் கூட ஒரு பரபரப்பு இருந்திருக்கும். ஆனால் மதிமுக நிற்பதால் அந்த பரபரப்பு கூட இல்லை. இந்தப் பகுதிக்கே உரிய சோம்பலுடனே தொகுதியும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

குறிஞ்சிப்பாடியில் திமுக முந்துகிறது

(அடுத்த தொகுதி அலசல் - இந்த தேர்தலில் பரபரப்பாக இருக்கப் போகிற தொகுதிகளில் ஒன்றான, நெய்வேலிக்கு பக்கத்து ஊரான "பண்ருட்டி")

Leia Mais…
Saturday, March 11, 2006

காஷ்மீர் பற்றிய குறும்படம்

காஷ்மீரில் உள்ள உண்மையான நிலை இந்திய ஊடகங்களில் வெளி வருவதேயில்லை. நேர்மையான செய்தி நிறுவனமாக தங்களை கூறிக்கொள்ளும் பல இந்திய செய்தி நிறுவனங்கள் காஷ்மீர் பற்றிய எந்த உண்மையையும் வெளியிடுவதில்லை. அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்கள் பலருக்கு தெரிவதே இல்லை. இந்தியாவில் இருந்து ஒரு பிடி மண்ணை கூட விட மாட்டோம் என்று கூறும் வலது சாரி இயக்கத்தினர் மற்றும் தீவிர தேசபக்தியினர் காஷ்மீர் மக்களின் இன்னல்களை தெரிந்து கொள்வது முக்கியம்.

காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா, பாக்கிஸ்தானுக்குச் சொந்தமா என்பதை விட காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, அவர்களின் முடிவு தான் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் நம்மில் பலர் இதனை புரிந்து கொள்வதேயில்லை. உண்மையை கூறுபவர்களை தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.

காஷ்மீரில் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் மற்றும் இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்படுவது அப்பாவி காஷ்மீர் மக்கள் தான். இராணுவம், தீவிரவாதிகள் என இவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை கடும் இன்னல்கள், மனித உரிமை மீறல்கள் இவற்றிடையே கழிக்கும் காஷ்மீர் குறித்த ஒரு குறும்படத்தை இன்று பார்த்தேன்.

காஷ்மீர் பற்றிய இந்தப் படம் 2004ல் எடுக்கப்பட்டது. இது போன்ற ஒரு படத்தை இது வரையில் நான் எந்த இந்திய ஊடகங்களிலும் பார்க்கவில்லை. இந்திய இராணுவத்தின் அடக்குமுறைகளால் இந்தியாவின் மீது காஷ்மீர் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக இந்தக் குறும்படம் தெரிவிக்கிறது.



இந்தப் படத்தை UNREPORTED WORLD என்ற செய்திப் பிரிவிற்காக Channel 4 தயாரித்திருக்கிறது

இந்த ஆங்கில வலைத்தளம் மூலம் இது எனக்கு காணக்கிடைத்தது.

இருவருக்கும் எனது நன்றியுடன் இந்தக் குறும்படத்தை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன்

Leia Mais…

பத்திரிக்கைகளிடம் "சரக்கு" இல்லை

பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் எனப் பலவற்றின் வழக்கமான மசாலாவை பார்த்து பழகிப் போன எனக்கு IBNLiveன் ராஜ்தீப் சர்தேசாய் இவ்வாறு கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை தான்,

I believe that we in the media are running out of ideas

செய்தி நிறுவனங்களில் இருக்கும் எங்களுக்கு புதிய உத்திகள் எதுவும் தெரியவில்லை, அதனால் தான் சாதாரணப் பேட்டிகளைக் கூட "Exclusive" என்பன போன்ற பெயர்களில் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ராஜ்தீப்.

இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும் அவர் கூறிய மற்றொரு கருத்து தான் கவருவதாக இருந்தது.

Maybe, we as journalists need to start recognising that a channel is not a one day 24 hour match, its a 365 day hour by hour challenge where our main task is simply to stay on top of the news, without titillating the viewer, but actually enhancing their knowledge. Will it happen? Don't know.

ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை "செய்திகளை" தருவது மட்டுமே. கொடுக்கின்ற செய்திகள் பார்ப்பவர்களை வசப்படுத்துவதற்காக இல்லாமல்,
செய்திகளை கொடுப்பது மட்டும் தான் ஒரு செய்தி நிறுவனத்தின் வேலை என்கிறார் ராஜ்தீப். Very simple.

ஆனால் தமிழகத்தில் வெளியாகும் மஞ்சள் பத்திரிக்கை தொடங்கி சில ஆங்கிலப் பத்திரிக்கைகள், டிவி சேனல்கள் வரை செய்திகளை எவ்வாறு தருகிறார்கள் என்பது நமக்கு புரியும். உதாரணமாக சன் டிவியின் உளவியல் வன்முறை பற்றி மானுஷ்ய புத்திரன் எழுதியிருந்தார். சன் டிவி பொதுமக்களின் பேட்டி என்பன போன்ற ஒரு செய்தி வடிவத்தைக் கொண்டே எப்படி தன் கருத்துக்களை மக்கள் மீது திணித்து அவர்களை தங்கள் பக்கம் வசப்படுத்த முனைந்துக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரியும்.

அது போல இந்த ஆண்டின் பட்ஜெட் குறித்து தினமலர் வெளியிட்ட செய்தியை இங்கு குறிப்பிடலாம். தினமலர் வெளியிடும் செய்திகளில் பட்ஜெட் பற்றி மட்டும் தான் குறிப்பிட வேண்டுமென்பது இல்லை, அவர்களுடைய பல செய்திகள் திரிக்கப்பட்ட செய்திகள் தான். ஆனால் பட்ஜெட் போன்ற செய்திகளை கூட தங்களுக்கு சாதகமாக எப்படி திரிக்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது வியப்பு ஏற்படுகிறது.

ஒரு பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாகட்டும், வேறு எந்தச் செய்தியாகட்டும் அதனைச் செய்தியாக மட்டுமே கொடுக்க வேண்டும். பத்திரிக்கைகள் தங்களுடைய சொந்தக் கருத்துக்களை தலையங்கங்களில் மட்டும் வெளிப்படுத்த வேண்டுமென்பது பத்திரிக்கைகளின் நியதியாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் "சிதம்பரம் மக்களை ஏமாற்றினார்" என்பன போன்று வெளியிடுவது, பத்திரிக்கையின் செய்தி வெளியிடும் தன்மையையே கேலிக் கூத்தாக்கி விடுகிறது.

இவ்வாறு பொய்யும் புரட்டும் வெளியிடும் பத்திரிக்கைகள் தங்களை ஜனநாயகத்தின் நாடித்துடிப்பு என்றும், அவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் ஐனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் முயற்சி என்றும் கூறுவது தான் நகைச்சுவையான விஷயம். இந்து பத்திரிக்கை ஆசிரியர்களை கைது செய்ய ஜெயலலிதா முயற்சி செய்த பொழுது எழுந்த கூக்குரல் இந்த வகையான நகைச்சுவையைச் சார்ந்தது தான். ஜெயலலிதாவின் நடவடிக்கையை சரி என்று ஏற்க முடியவில்லை என்றாலும் அவரின் நடவடிக்கை ஒரு வகையில் எனக்கு குரூரமான திருப்தியையே கொடுத்தது.

அது போலவே கேபிள் தொலைக்காட்சி சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தது முறையற்ற செயல் என்றாலும் பலர் இதனை வரவேற்கவேச் செய்தனர். அந்தளவுக்கு அந்த நிறுவனங்களின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இருந்தது.

இன்று தேர்தல் குறித்து செய்தி வெளியிடும் பத்திரிக்கைகள் தொடங்கி, தேர்தல் கணிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் செய்தி நிறுவனங்கள் வரை அவர்களின் செய்திகளைப் பார்க்கும் பொழுது they are running out of ideas என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த தேர்தலை எப்படி எதிர்கொண்டார்களே அதேப் போன்ற உளுத்துப் போனச் செய்திகள், வம்பானந்தா தொடங்கி கழுகு வரை அனைவரும் சொல்லும் பொய்க் கதைகளைப் படிப்பதில் ஏற்படும் அலுப்பு காரணமாக அந்தப் பக்கம் நான் செல்லுவதே இல்லை. பல வருடங்களாக இங்கு ஒரே Formula தான். இதனை தாண்டி வேறு வகையில் தமிழ் பத்திரிக்கைகள் போக முடியாதா என்ற ஆதங்கம் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் they are running out of ideas என்னும் பொழுது நாம் என்னச் செய்ய முடியும்.

***

ராஜ்தீப்பின் கருத்துப் படி ஏதாவது ஒரு செய்தியையோ புத்தகத்தையோ படித்திருக்கிறேனா என்று யோசித்த பொழுது இந்தியப் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப்பின் "Island of Blood" என் நினைவுக்கு வந்தது. இது ஒரு Reporter's Dairy. இலங்கை, ஆப்கானிஸ்தான், அயோத்தி ராமர் கோயில் இடிப்பு போன்ற சம்பவங்களின் நேரடிப் பதிவு தான் இந்தப் புத்தகம்.

Reporter's Dairy என்று சொல்லும் பொழுது அது ஒரு செய்தியாளனின் நேரடி அனுபவங்களை மட்டும் கூற வேண்டும். படிக்கின்ற வாசகன் மீது எந்த வித கருத்து திணிப்பையும் செய்யாமல், கொடுக்கும் செய்திகளைக் கொண்டே ஒரு வாசகன் தன் கருத்துக்களை நிர்ணயித்துக் கொள்வதாக இருக்க வேண்டும். பயணக் கட்டுரைகள் செய்திகளைக் கொடுப்பவை தான். ஆனால் ஒரு தீவிரமான பிரச்சனையை சுற்றி எழுதப்படும் செய்திகளில் சார்பு இல்லாமல் ஒரு செய்தியாளன் எழுதுவது முக்கியம். அங்கு நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே செய்தியாளன வாசகர்கள் அறியத் தர வேண்டும்.

அப்படி கொடுக்கும் புத்தகம் தான் Island of Blood என்று நான் நினைக்கிறேன். நான் ஈழத்துப் பிரச்சனைகள் குறித்து எழுதும் பொழுது இந்தப் புத்தகத்தில் இருந்து மேற்கோள்களை காட்டுவது கூட அதன் பொருட்டு தான். அதே சமயத்தில் அனிதா மற்ற இந்தியப் பத்திரிக்கையாளர்கள் போலவே விடுதலைப் புலிகள் மீதும், பிரபாகரன் மீதும் விமர்சனங்களை வைத்தார் என்பதும் உண்மை.

ஆனால் Island of Blood அவர் கொண்ட கருத்துக்களை தூக்கி நிறுத்துவதற்காக எழுதப்படாமல் அவருடைய நேரடியான அனுபவங்களை பதிவு செய்யும் முயற்சியாக தெரிவதால் ஒரு நம்பகத்தன்மையை கொடுக்கிறது. அது போல இந்தப் புத்தகம் ஈழப்பிரச்சனையின் வரலாற்றையோ அந்தப் பிரச்சனையையோ விரிவாக சொல்லும் புத்தகமும் அல்ல. ஒரு செய்தியாளரின் நேரடி வர்ணனை என்று சொல்லலாம்.

அனிதா, யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுடன் தன்னுடைய அனுபவத்தை விவரிப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் விவரிப்பதற்கும் இருக்கின்ற பெருத்த வேறுபாடு தெளிவாக தெரிகிறது. புலிகளின் இயக்கத்தைச் சுற்றிச் சுழலும் அவரின் அனுபவங்களைக் காணும் பொழுது புலிகளின் இயக்கத்தில் உள்ளவர்களின் விடுதலை உணர்வு தெளிவாக வெளிப்படுகிறது. மாறாக தாலிபான்களின் மத அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் அவர் வர்ணனையைக் கொண்டே அறிய முடிகிறது. புலிகளை தாலிபான்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை அவரின் இரு அத்தியாயங்களே தெளிவாக விளக்கும்

அதே நேரத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பல காலமாக இருக்கும் விமர்சனங்களுக்கும் சில இடங்களில் பதிலை தருகிறார். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் பிரபாகரன் ஏன் பத்திரிக்கையாளர்களை அதிகம் சந்திப்பதில்லை, மாத்தையா கொல்லப்பட்டது போன்றவையும் புத்தகத்தில் வருகிறது. இதில் தன்னுடைய சொந்தக் கருத்தாக அனிதா எதனையும் வெளிப்படுத்தவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இதற்கு நேர்மாறாக இருக்கும் மற்றொரு பயணக் கட்டுரையும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. அது வாஸந்தியின் யாழ்ப்பாணப் பயணக் கட்டுரை.

இது தன் சொந்தக் கருத்தை வாசகர்கள் மீது திணிக்கும் முயற்சி. ராஜ்தீபின் கருத்துப் படி சொல்ல வேண்டுமானால் வாசகர்களை தன்னுடைய கருத்தை நோக்கி "வசப்படுத்தும்" முயற்சி.

ஒரு பயணக் கட்டுரை எழுதும் பொழுது தான் நேரில் காண்பதை உள்ளபடியே பதிவு செய்ய வேண்டும். அது தான் நேர்மையான அணுகுமுறை. வாஸந்தியின் கட்டுரையை வாசிக்கும் பொழுது அவர் முன்கூட்டியே ஒரு முடிவை திட்டமிட்டு விட்டு அதன் காரணங்களை யாழ்ப்பாணத்தில் தேடிக்கொண்டிருந்தார் என்று தெரிகிறது. கட்டுரையின் இறுதியில் அதனை அவரே தெளிவுபடுத்துகிறார்.

பிரபாகரனை நான் நேரில் சந்திக்காவிட்டாலும், யாழ்ப்பாண விஜயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும், கிடைத்த தரிசனங்களும் மிக முக்கியமானவை, என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் ஊர்ஜிதமாயின. யாழ்ப்பாணத்தில் எழுபது சதவிகிதத்துக்கு மேற்பட்ட மக்களை புலிகள் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது ஒரு திட்டமிட்ட சாதனையாகத் தோன்றிற்று. அவர்களது ராணுவ பலமும், எதிர்ப்பவர் தமிழரானாலும் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், மக்களை விநோதமான மனநிலைக்கு ஆளாக்கியிருந்தது. கண்டும் பதைத்தும், வாய் திறக்கும் திறனை இழந்ததோடு, புலிகள் செய்வதில் ஒரு நியாயம் இருப்பதாகக்கூட நினைக்கும் நிலைக்கு மக்கள் உட்பட்டிருந்தார்கள்

புலிகள் யாழ்ப்பாண மக்களை "உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் கட்டுப்படுத்தி" வைத்திருப்பதாகச் சொல்லும் வாஸந்தி அவரது கட்டுரையில் அவர் வாதத்திற்கான காரணங்களைச் சொல்லவில்லை. அவர் சந்தேகம் ஊர்ஜிதமாகி விட்டது என மேம்போக்காக சொல்லி விட்டுச் சொல்கிறார்.

யாழ்ப்பாண குடும்பங்களில் ஒவ்வொருவர் வீட்டிலும் இருந்து ஒருவர் இயக்கத்தில் இருப்பதாக சொல்லி விட்டு இறுதியில் இவ்வாறு கூறுவது கட்டுரைக்கு ஒரு செயற்கைத்தனத்தையே கொடுக்கிறது.

வாஸந்தி தன்னுடைய யாழ்ப்பாணப் பயணம் குறித்து எழுதும் பொழுது யாழ் நிலவரம் குறித்து சில இடங்களில் கூறுகிறார்,

தமிழீழம் என்பது ஏற்கெனவே சாத்தியமாகிவிட்ட ஒன்றாகத் தோன்றிற்று. ராணுவத்தைக்கண்டு எங்களுக்குப் பயமில்லை, புலிகள் இருக்கிறார்கள் எங்களைக் காப்பாற்ற என்பது மக்களின் தாரக மந்திரம் என்று பட்டது

அசாதாரண காலகட்டத்தை, புலிகள் தங்கள் பொருண்மீய திட்டங்களினால் திறமையாக சமாளித்து வந்ததை, அதன் இயக்குனர், இளைஞர் ரவி அலுவலகத்தைச் சுற்றிக்காட்டி உத்வேகத்துடன் விளக்கினார். பல இளம் புலிகள், பிரபாகரனை ‘‘அம்மா, அப்பாவை விட அதிகமா மதிக்கிறோம். ‘‘அவரது வழிகாட்டலில் நாடு விடுதலை அடைஞ்சு, சுபிட்சமா இருக்கப் போகிறோம் என்கிற நம்பிக்கை இருக்கு" என்றார்கள்

ஆனால் இது எதுவுமே அவருக்கு இயல்பாக தெரியவில்லை. மொத்த யாழ்ப்பாண மக்களும் புலிகளால் மெஸ்மரிசம் செய்யப்பட்டு விட்டனர் என்ற ரீதியில் கட்டுரை எழுதி இருக்கிறார்.

***
அனிதா பற்றி ஒரு சிறு குறிப்பு சொல்லவேண்டுமானால், இவர் 1983 இலங்கை இனக்கலவரம் முதல் இலங்கையின் பலப் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொண்டுள்ளார். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இனக்கலவத்தை பதிவு செய்த இந்தியாவின் முதல் செய்தியாளர் இவர் தான். இவர் எழுதிய இலங்கை இனக்கலவரம் பற்றிய கட்டுரைகள் தான் இந்தியாவை இலங்கைப் பிரச்சனையில் ஈடுபடவைத்தன என்றுச் சொல்லலாம். 1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் மட்டும் அல்ல. கொழும்பில் இருந்த பல தமிழரல்லாத இந்தியர்களும் தான் என அனிதா கூறுகிறார். கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்த பல இந்தியக் குடும்பங்கள் சூறையாடப்பட்டதாகவும் அனிதா இந்தப் புத்தகத்தில் கூறியிருக்கிறார்.

1983 கலவரம், இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த பொழுது நடந்த போர்கள், ஜெ.வி.பிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே நடந்த கொலைவெறிப் பிரச்சனைகள், ரஞ்சன் விஜயரத்னே, காமினி திசநாயகே போன்ற இனவெறி தலைவர்களுடனான சந்திப்புக்கள் போன்றவை இலங்கையின் மற்றொரு கோரமுகத்தை இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு சிறிய புத்தகம் தான். ஆனால் இவையனைத்தும் போரினிடையேயும், கலவரத்தின் இடையேயும் எழுதப்பட்டவை என்பதால் இந்தப் புத்தகத்தில் ஒரு யதார்த்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

ஆனால் இலங்கை குறித்துச் சில அத்தியாயங்களே இருப்பது ஒரு குறையாகவும் உள்ளது. இந்தப் புத்தகம் மூலம் இந்தப் பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்தப் போரட்டத்தின் நீண்ட வரலாற்றில் சில நிகழ்வுகளைச் சுற்றி இந்தப் புத்தகம் பின்னப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

சென்னையின் ஏ.சி. அறையில் இருந்து கொண்டு தான் "இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட்" என்று சொல்லிக் கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் யாழ்ப்பாணத்தில் இந்தியப் படைகளின் குண்டுகளுக்கிடையே ஓடி ஒளிந்து அனிதா செய்திகளை சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இலங்கை மட்டுமில்லாமல் பெண்களை மோசமாக நடத்திய ஆப்கானிஸ்தானில் உயிரை பணயம் வைத்து அவர் செயல்பட்ட விதம் உண்மையிலேயே என்னை வியப்பில் ஆழ்த்தியது.

Leia Mais…
Thursday, March 09, 2006

தமிழக அரசியலில் கொள்கைகள்

தேர்தல் நேரம் வந்தாலே கொள்கைப் பற்றியப் பிரச்சனையும் வந்து விடுகிறது. ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணிக்கு தாவும் அரசியல் தலைவர்களின் கொள்கைகள் குறித்து கடுமையாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்படும். சென்ற சில தேர்தல்களாக டாக்டர் ராமதாஸ் ஒரு அணியில் இருந்து மற்றொரு அணிக்கு தாவுவது குறித்து விமர்சனங்களும், கேலியும், நையாண்டியும் பிரபலமான பத்திரிக்கையில் தொடங்கி வலைப்பதிவு வரை அரங்கேறியது. ராமதாஸ் பத்திரிக்கைகளின் விமர்சனங்கள் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல், ஒவ்வொரு முறை கூட்டணி தாவும் பொழுதும் அதிக தொகுதிகள் பெற்று மைய அமைச்சரவையில் சாதாரண துணை அமைச்சர் தொடங்கி காபினட் அமைச்சர் வரை தன் கட்சியை நிலை நிறுத்திக் கொண்டார். இப்பொழுது ராமதாஸ் அணி மாறுவது ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது. பத்திரிக்கைகளின் விமர்சனங்களையோ, பிற எதிர்ப்புக்களையோ ராமதாஸ் அதிகம் கண்டுகொள்வதும் இல்லை. ராமதாசின் கொள்கைகள் பற்றியும் இப்பொழுது யாரும் அதிகம் பேசுவதில்லை

ஆனால் இம்முறை இந்தச் சுழற்ச்சியில் சிக்கிக் கொண்டவர் வைகோ. வைகோ நிறைய யோசித்தார். என்னவோ அவர் கொள்கையுடன் இருந்தால் அவரை தமிழக முதலமைச்சராக தமிழக மக்கள் உட்கார வைத்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாரா அல்லது எதிர்கால தமிழக ஆளுங்கட்சியாக அமர கொள்கைவாதியாக இருக்க வேண்டும் என நினைத்தாரா தெரியவில்லை. பலமாக யோசித்தார். அவர் ஒவ்வொரு நாளும் யோசித்துக் கொண்டே இருக்க, வைகோ எங்கே திமுகவுடன் தங்கி விடுவாரோ என்ற "எரிச்சலில்" இருந்த "சில" பத்திரிக்கைகள், இணையத்தில் இருக்கும் "சில" குழுக்கள் எல்லாம் வைகோ அணி தாவியவுடன் கொள்கை என்னவாயிற்று, அரசியல் நேர்மை என்னவாயிற்று எனக் கூக்குரலிட தொடங்கி விட்டனர்.

இங்கு கொள்கைகள் வைகோவிற்கும், திருமாவுக்கும் தான் அதிகம் போதிக்கப் படுகிறது. ஆனால் ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி யாரும் பேசுவதில்லை.

தமிழ் மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள், எனக்கு கூட்டணி தேவையில்லை என சூளுரைத்த "அம்மா", கூட்டணிக் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு யாராவது வரமாட்டார்களா என்று காத்துக் கிடந்த நிகழ்வுகள் பற்றி இந்தப் பத்திரிக்கைகளும், குழுக்களும் ராஜதந்திரம் என்று தான் எழுதிக் கொண்டிருந்தனவே தவிர அம்மாவின் பரிதாப நிலைப் பற்றியோ, அவரின் கொள்கைகள் பற்றியோ எழுதவேயில்லை.

இந்தியத் திருநாட்டின் இறையாண்மையை காக்கப் பிறந்த ஜெயலலிதா, "பயங்கரவாதி" வைகோவை பொடா சட்டத்தில் உள்ளே தள்ளி இந்திய இறையாண்மையை காப்பாற்றிய அரும் பெரும் காரியத்தைச் செய்தவர். இந்திய இறையாண்மையை காப்பாற்ற ஜெயலலிதா செய்த இந்த மகத்தான காரியத்திற்காக ஒரு பிரபலமான அரசியல் "விமர்சகர்" ஜெயலலிதாவிற்கு ஓட்டுப் போடுங்கள் என அவரின் வாசகர்களுக்கு பரிந்துரை செய்தாராம். அவ்வாறு இந்திய இறையாண்மையை காத்து நின்ற ஜெயலலிதா ஒரு "பயங்கரவாதியை" தன் கூட்டணியில் கொண்டு வருவதற்காக தமிழகத்தின் உளவுத்துறை மூலமும், பிற தூதவர்கள் மூலமும் தினமும் "கெஞ்சிக்" கொண்டிருந்த கொள்கைப் பற்று மிக்க நிகழ்வுகளைப் பற்றி "சில" பத்திரிக்கைகள், இணையக் குழுக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதன் நோக்கம், கணிக்க முடியாத புதிர் அல்ல.

உளவுத்துறையின் "திறமையை" மட்டும் நம்பி இல்லாமல் வைகோவின் பால்ய நண்பரான காளிமுத்துவை கட்சியின் தலைவராக்கி, அவருடைய ஒரே வேலை வைகோவை கூட்டணிக்கு கொண்டு வருவது தான் என்று உத்தரவு பிறப்பித்து, அவரும் அப்பல்லோவில் "க்ளுக்கோஸ்" ஏற்றிக்கொண்டிருந்த நிலையிலும் குட்டிக் கதைகளையும், இதிகாச உதாரணங்களையும் எடுத்துக் கூறி வைகோவை "துரத்திக்" கொண்டிருந்த, அழுது கெஞ்சிக் கொண்டிருந்த அற்புதமான காட்சிகளை, ஜனரஞ்சகமான நிகழ்வுகளை தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டார்கள். என்றாலும் அந்த கொள்கைப் பற்று மிக்க காட்சிகளை அனைவருக்கும் இந்தத் தருணத்தில் ஞாபகப் படுத்தலாம் என்று தோன்றியது.

இந்து மடத்தின் பிரபலமான மடாதிபதியை ஜெயலலிதா சிறையில் தள்ளியதையும், அவருடைய எல்லையற்ற "பேரானந்த" நிலைகளை பிரபலப்படுத்தியதையும் இந்து தர்மத்தின் பாதுகாவலர்களாக தங்களை கருதிய "பாரதீய ஜனதா கட்சியால்" சகிக்க முடியாமல் போய் ஜெயலலிதாவுடன் இனி எக்காலத்திலும் கூட்டு கிடையாது என சூளுரைத்ததையெல்லாம் மறந்து "அம்மாவின்" அருளுக்காக காத்து நின்ற அந்த கொள்கைப் பற்று மிக்க திருக்கோலத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்து விட முடியாது.

அம்மா இந்தக் "காவிக் கூட்டத்தை" கண்டுகொள்ளாமல் "முஸ்லீம் லீக்கை" அரவணைத்துக் கொண்டது கொள்கைப் பற்று மிக்க நிகழ்வாக பலருக்கு தெரிகிறது போலும். காங்கிரசை "pseudo-secularist" என்று வர்ணிக்கும் அரசியல் அறிவுஞீவிகளுக்கு ஜெயலலிதா Perfect secularist ஆக தெரிந்திருக்கிறார். ராமர் கோயில் கட்ட கரசேவை, முஸ்லீம்களை வேட்டையாடிய நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் தோன்றிய திருக்கோலம், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் என எல்லாமும் மறந்துப் போய் இன்று அம்மா நோன்பு கஞ்சி சாப்பிட கிளம்பி விட்டார்.

இப்படி ஜெயலலிதாவின் கொள்கைகள் பற்றி அதிகம் பேசப்படாமல் வைகோவின் அரசியல் நேர்மை மட்டுமே கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது. வைகோவும் இவ்வாறு கொள்கைகள் பற்றி கேள்வி கேட்பவர்களுக்கு மிகவும் சிரமப்பட்டு கருணாநிதி இந்திரா காந்தியை ஆதரிக்கவில்லையா ? மிசாவில் ஜெயிலில் போடவில்லையா என்பன போன்று பேசி இன்னமும் தான் அரசியல் அரிச்சுவடி தாண்டவில்லை என்று உணர்த்திக் கொண்டிருக்கிறார். வைகோ தைலாபுரம் சென்று அரசியல் பாடம் பயிலலாம். இவ்வாறான சூழ்நிலையில் ராமதாஸ் எப்படி நடந்து கொள்வார் என்பதை தெரிந்து கொள்வது வைகோவின் எதிர்காலத்திற்கு முக்கியமாகப் படுகிறது.

சுந்தரமூர்த்தி அவர்கள் கூறுவது போல தான் ஒரு கொள்கைவாதி என ஒரு புறம் காட்டிக் கொள்வதும் பிறகு அதற்கு நேர்மாறாக நடந்து கொள்வதும் வைகோவிற்கு எந்த வகையிலும் உதவாது. அவர் எடுத்த நிலைப்பாட்டினை உறுதியாக எடுக்க வேண்டுமே தவிர தடுமாறி, உளறிக் கொட்டிக் கொண்டிருக்க கூடாது. அவருடைய பேச்சு அவரது நிலைப்பாட்டில் அவருக்கே சில பிரச்சனைகள் இருக்கிறது, சந்தர்ப்பத்தால் இது நேர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.

இப்படி பரவலாக அனைவரும் பேசும் கொள்கைகள் என்றால் என்ன ? எந்தக் கொள்கையை யார் கட்டி காப்பாற்ற வேண்டும் ? சாதாரண மக்களுக்கும் இந்தக் கொள்கைகளுக்குமான தொடர்பு என்ன ?

திராவிட கட்சிகளின் வழி வந்த தமிழக மக்கள் தான் இன்று சபரிமலைக்கும், திருப்பதிக்கும், பழனிக்கும், மேல்மருவத்தூருக்கும் படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்து மத பக்தர்களாக காட்சி தரும் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்பரிவார் அனுதாபிகளும் அல்ல. விநாயகர் சதூர்த்தி வந்தால் தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் முளைத்து, காவிக் கொடிகளுடன் கும்மாளமாய் குளத்தில் கரைக்கச் செல்பவர்கள் கூட சங்கராச்சாரியார் கைது போன்ற பிரச்சனைகளை "மிக சுவாரசியமான", பார்க்க பரபரப்பான, கிளுகிளுப்பான பிரச்சனையாகத் தான் பார்த்து கொண்டிருக்கின்றனரே தவிர, தாங்கள் வணங்கும் இந்து மத கடவுள்களை கட்டிக் காக்கும் (?) மடாதிபதி கைது செய்யப்பட்டதாக உணர்ச்சிப் பொங்க வில்லை. (உணர்ச்சிப் பொங்கியவர்கள் எல்லாம் குறிப்பிட்டச் சிலரே).

90களில் விநாயகர் சதூர்த்தி தமிழகமெங்கும் பரவிய பொழுது தமிழகம் சங்பரிவார் கும்பல்களின் மற்றொரு புகலிடமாகி விடுமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டது. சென்னையில் மார்வாடிகளால் கொட்டப்பட்ட பணம் கலவரங்களாக மாறிய சூழ்நிலை அவ்வாறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இன்று ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப் பட்டாலும், இந்து முண்ணனி இந்த விழாக்களை தங்களின் விழாக்களாக நடத்தினாலும் இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கடவுள் பக்தியை விடவும் ஒரு உற்சாக மிகுதியான உணர்வு தான் இருக்கிறது. கொஞ்சம் ஜாலியாய் கொண்டாடும் பண்டியாகத் தான் இதனைக் கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

நெய்வேலியில் என் வீட்டிற்கு அருகிலேயே பெரிய விநாயகர் சிலையை வைத்து கொண்டாடும் எத்தனையோ பேர்களை பார்த்திருக்கிறேன். அவர்கள் விநாயகப் பகதர்களோ, ஆன்மிகவாதிகளோ அல்ல. அவர்களுக்கு தேவை ஒரு உற்சாகம். இந்த உற்சாகம் எதில் கிடைக்கிறதோ அதனுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வார்கள். சிறிது நாட்கள் விநாயகரை வைத்து கொண்டாடி விட்டு அந்த நாட்களை ஜாலியாக கழித்து விட்டு, பின் அந்த பெரிய விநாயகர் சிலைகளை கொண்டு ஏரியிலோ, குளத்திலோ அடித்து உதைத்து கரைத்து விடுவதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தம் கிடைக்கிறது. இன்னும் சொல்லப் போனால் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பது போன்ற விஷயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் விநாயகர் சதூர்த்தி இந்தளவுக்கு தமிழகத்தில் பரபரப்பாக இருந்திருக்காது.

இவ்வாறு தான் ஒவ்வொரு விழாவும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் மாரியம்மன் விழா, செடல் விழா போன்றவை பார்க்கும் பொழுது நமக்கு இது இன்னும் தெளிவாக புரியும். இந்த விழாக்கள் உற்சாகம் மிகுந்த தருணங்களாகவே பார்க்கப்படுகின்றன.

இவ்வாறான மக்களின் இந்த உற்சாகப் பிரியம் தான் அதனை தடுக்கும் பெரியாரின் தத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் செய்து விட்டன என நான் நினைக்கிறேன்.

இன்று சபரிமலைக்குச் செல்லும் சாதாரண பக்தனாக இருந்தாலும், அலகு குத்தி தேர் இழுக்கும் அதி தீவிர பக்தனாக இருந்தாலும் அவன் தீவிர ஆன்மிகவாதியும் அல்ல, இந்து மதத்தின் மேல் பற்றுக் கொண்டவனும் அல்ல. ராமர் கோயில் கட்டுவது அவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. சங்கராச்சாரியார் கைது செய்யப்படுவது அவனை உணர்ச்சி வசப்படுத்துவதும் இல்லை.

இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே. இன்னும் பல விஷயங்களில் தமிழனின் இத்தகைய, "எதனுடனும் தீவிரமாக ஒட்டாத" மனப்பாங்கினை பார்க்க முடியும்.

இவ்வாறான நிலையில் சாதாரண தமிழக வாக்காளன் எதைக் கொண்டு வாக்களிக்கிறான் ?

இன்றைய இந்திய/தமிழக சூழலில் மக்களுக்கு தேவை கொள்கைகள் அல்ல. யாருடைய கொள்கைகளும் யாருக்கும் தேவையில்லை. மக்களின் தேவை அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான வாழ்வியல் பிரச்சனைகள் தான். இவை தான் தேர்தலில் முக்கிய பிரச்சனை.

தலைவர்கள் மற்றும் கட்சிகள் மீதான அபிமானம், சாதி அபிமானம், உள்ளூர் பிரச்சனைகள், உள்ளூர் தலைவர்கள், அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் இவையே தமிழக வாக்காளனை உந்தும் சக்திகள். தமிழக வாக்காளனின் இந்தப் பிரச்சனைகளை யார் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள் தான் தேர்தலில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள். சிறு நகரங்கள், கிராமங்கள் இவற்றை பரவலாக உள்ளடக்கிய தமிழகத்தில் இதனைக் கொண்டு மட்டுமே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. பெரு நகரங்களில் வேண்டுமானால் கொள்கைகள் பற்றி அறிவுஞீவிகளும், படித்தவர்களும் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஆனால் கொள்கைகளோ, கூட்டணி தாவுதலோ சாதாரண தமிழக வாக்காளனைப் பொறுத்தவரை பெரிய பிரச்சனையில்லை. அவன் அதைப் பொருட்படுத்துவதுமில்லை

தமிழக அரசியலில் கொள்கைகளின் போக்கு குறித்து சங்கரபாண்டி அவர்களின் கருத்துக்கள்

Leia Mais…
Sunday, March 05, 2006

3வது பெரிய கட்சி : மதிமுகவா ? பாமகவா ?

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது ? இது தான் இந்தத் தேர்தலில் எழுந்த ஒரு சுவாரசியமான விவாதம். தங்களுக்கு பாமகவை விட ஒரு இடமாவது அதிகமாக தர வேண்டுமென மதிமுகவும், மதிமுகவை விட நாங்கள் தான் பலமான கட்சி என பாமகவும் போட்டியிட்டன. நாங்கள் தான் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என பாமக தொடர்ந்து கூறி வந்தததும், கடந்த பாரளுமன்ற தேர்தலில் பாமகவிற்கு மதிமுகவை விட அதிக தொகுதிகளை ஒதுக்கியதும் தான் இந்தப் போட்டிக்கு அடித்தளமிட்டது.

உண்மையில் மூன்றாவது பெரிய கட்சி மதிமுகவா ? பாமகவா ?

தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சியாக மதிமுகவும், கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் கட்சியாக பாமகவும் உள்ளன. கடந்த தேர்தல்களில் மதிமுக, பாமக தனித்து போட்டியிட்ட பொழுது சுமார் 5% வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். 5% என்பது ஒட்டுமொத்த தமிழக வாக்கு வங்கியில் 5%. தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்று பார்க்கும் பொழுது மதிமுக பெரிய கட்சியாகத் தெரிகிறது. ஏனெனில் பாமக வடமாவட்டங்களில் மட்டுமே உள்ளது.


பாமகவின் 5% ஓட்டுவங்கி என்பது வடமாவட்டங்களில் உள்ள ஓட்டுகள் மட்டும் தான். தமிழகத்தின் மொத்த வாக்குகளை கொண்டு பாமகவின் ஓட்டு சதவீதத்தைப் பார்ப்பது சரியான கணக்கு அல்ல. வடமாவட்ட வாக்குகளை மட்டுமே கொண்டு பார்க்கும் பொழுது, வடமாவட்டங்களில் சுமாராக 15%வாக்கு வங்கி உடைய கட்சியாக பாமக உள்ளது. சில தொகுதிகளில் இது 30-40% வாக்குகளாகவும் உள்ளன. 1996 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சில தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இந்த தேர்தலில் கடுமையான "ஜெ எதிர்ப்பு அலை" இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வடமாவட்டங்களில் உள்ள சுமார் 70 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பாமக உள்ளது. இதனால் தான் தேர்தல் காலத்தில் பாமகவிற்கு எப்பொழுதும் மவுசு அதிகமாக உள்ளது. அவர்களும் அதிக இடங்கள் கொடுப்பவர்களிடம் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்கு மாறாக மதிமுக மாநிலமெங்கும் இருப்பதால் அதன் 5% ஓட்டுகள் மாநிலமெங்கும் பல இடங்களில் பரவலாக பெற்ற வாக்குகளாக உள்ளன. சில இடங்களில், குறிப்பாக தென்மாவட்டங்களில் கணிசமான ஆதரவு இருந்தாலும் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் சக்தியாக உள்ளது என்பதை பார்க்கும் பொழுது சுமாராக 30-50 தொகுதிகளில் மட்டுமே வைகோவிற்கு கணிசமான ஆதரவுள்ளது. 1996, 2001 ஆகிய இரு தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட மதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெற வில்லை. 1996ல் "ஜெ எதிர்ப்பு அலை" என்று கூறினாலும் 2001ல் மதிமுகவிற்கு ஏற்பட்டது கடுமையான சரிவு என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

ஒரு விஷயத்தை தமிழக அரசியலில் பலர் உணர்ந்து கொள்வதேயில்லை (தினமலர் போன்ற பத்திரிக்கைகளின் பிரச்சாரம் காரணமாக இருக்கலாம்). தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.

பாமக, மதிமுக இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியும் ஒரே அளவாக உள்ளவையே. மதிமுகவிற்கு பாமகவை விட சற்று அதிக ஓட்டுக்கள் உள்ளன என்று வைத்துக் கொண்டால் கூட மதிமுக கூட்டணிக்கு வெற்றி தேடி தரும் கட்சி அல்ல.

எப்படி ?

இரண்டு கட்சிக்கும் சுமாராக 15லட்சம் ஓட்டுக்கள் உள்ளன.

பாமகவின் ஓட்டுகள், "சில" மாவட்டங்களில் மட்டுமே பெறப்படும் ஓட்டுகள். அதாவது சுமாராக உள்ள 80-90லட்சம் வடமாவட்ட ஓட்டுகளில் பெறப்பட்டவை. 80-90லட்சம் ஓட்டுகளில் 15லட்சம். ஆனால் மதிமுகவின் ஓட்டுகள் தமிழகமெங்கும் பெறப்பட்டவை. சுமார் 2.5கோடி வாக்குகளில் 15லட்சம் ஒரே இடத்தில் Concentratedஆக இருக்கும் பாமகவின் ஓட்டுகள் வடமாவட்ட தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கின்றன.

ஆனால் மதிமுகவின் ஓட்டுக்கள் தமிழகமெங்கும் சிதறி இருப்பதால் சில தொகுதிகளில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்க கூடியதாக உள்ளன.
"தமிழகமெங்கும் இருக்கும் கட்சியாக" ஆனால் 15லட்சம் ஓட்டுக்களைப் பெறும் கட்சியாக மதிமுக இருப்பது அதன் பலவீனம். ஆனால் சில மாவட்டங்களில் மட்டுமே இருப்பது தான் பாமகவின் பலம்.

தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்பதும், தமிழகமெங்கும் ஒரு கட்சிக்கு அமைப்பு ரீதியாக பலம் இருக்கிறது என்பதை மட்டும் கொண்டு அந்தக் கட்சி பலமான கட்சி என்று முடிவு செய்து விட முடியாது. தமிழகமெங்கும் இருக்கும் கட்சி என்று பார்த்தால் பல தேசிய கட்சிகள் தமிழகமெங்கும் உள்ளன. காங்கிரஸ், பாஜக, கம்யுனிஸ்ட்கள் போன்றவையும் தமிழகமெங்கும் உள்ள கட்சி தான்.

மதிமுக பலவீனமான கட்சி என்றும் நான் சொல்ல வில்லை. பாமகவுடன் ஒப்பிடும் பொழுது மதிமுக பலம் குறைந்த கட்சி என்பது தான் எனது வாதம்.
மதிமுகவின் ஓட்டுக்களை நீங்கள் தொகுதிவாரியாக அலசினால் பல தொகுதிகளில் 1000க்கும் குறைவான ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 2000, 5000, வெகு சில தொகுதிகளில் மட்டுமே 10,000க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறார்கள். அதாவது தமிழகமெங்கும் போட்டியிட்டு 15லட்சம் ஓட்டுக்கள் பெற்றிருக்கிறார்கள்.

ஆனால் பாமக பலமாக இருக்கும் பல தொகுதிகளில் 15,000 ஓட்டுக்கள், சில தொகுதிகளில் 30,000 ஓட்டுக்கள் சில தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பொழுது பெற்ற இரண்டாமிடம், 4 தொகுதிகளில் "ஜெ எதிர்ப்பு அலையின்" பொழுதும் கூட பெற்ற வெற்றியையும் கவனிக்க வேண்டும். மிக சொற்பமான தொகுதிகளில் (50-70 இருக்கும்) அவர்கள் பெற்ற ஓட்டுக்கள் 15லட்சம்.

ஒரு தொகுதியின் சராசரி வாக்குகளை கணக்கிட்டால் 15லட்சம்/70 = சுமாராக 20ஆயிரம் ஓட்டுக்கள் வருகிறது.

மாறாக மதிமுக 15லட்சம்/200 = சுமாராக 7500 மட்டுமே

பாமக 50தொகுதிகளில் பலமாக இருக்கிறது என்று கணக்கிட்டால் கூட பாமகவிற்கு வழங்கப்படும் 25 தொகுதிகள் போக மீதம் உள்ள 25தொகுதிகளில் கூட்டணியை வெற்றி பெறச் செய்கின்றனர்.

இதனால் தான் திமுக பாமகவை தன்னுடைய முக்கியமான கூட்டாளியாக கருதுகிறது.

சட்டமன்றத்தில் கணிசமான உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளான லோக்சபா, ராஜசபா போன்றவற்றில் பிரதிநிதித்துவம், காபினட் அமைச்சர் என பாமக ஒரு அரசியல் கட்சிக்கான அனைத்து நிலைகளிலும் வளர்ச்சிப் பெற்றுள்ளது. இன்னும் மாநில அமைச்சரவை தான் பாக்கி. வரும் நாட்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டால் ஏதேனும் ஒரு கூட்டணியில் சேர்ந்து அந்த நிலையையும் அடைந்து விடுவார்கள்.கடந்த காலங்களில் பாண்டிச்சேரியில் ஆட்சியை பிடிக்கப் போவதாக முழங்கிக் கொண்டிருந்தார்கள். பாண்டிச்சேரியில்
திமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற்றால் பாமக கூட்டணி ஆட்சியில் இடம் பிடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மாறாக மதிமுகவால் இது வரையில் சட்டமன்றத்தில் நுழைய முடியவில்லை. இது வரை ஒரு அரசியல் சக்தியாக மதிமுகவால் வளர முடியவில்லை.

கடந்த கால வெற்றிகளையும், அரசியல் பலத்தையும், தொண்டர் பலத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மதிமுக இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் ஒரு தேக்க நிலைக்கு சென்று விட்டது என்று தான் கூற வேண்டும். சாதி அடிப்படையிலான கட்சியாக பாமக இருப்பதால் பிற சமூகத்தினர் இந்தக் கட்சியில் இது வரையில் இணைந்ததில்லை. இனி மேலும் இணையும் வாய்ப்புகள் இல்லை. பாமகவை பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் இயக்கமாக மாற்ற டாக்டர் ராமதாஸ் மேற்க்கொண்ட முயற்சிகள் தோல்வியையே கண்டன.

மாறாக மதிமுக தன் தளத்தை விரிவுப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சரியான உத்தியை வைகோ உருவாக்கினால் நிச்சயம் 3வது பெரிய கட்சியாகவோ, சந்தர்ப்பம் வாய்த்தால் முதல் - இரண்டாம் இடத்தில் கூட வரலாம். ஆனால் வைகோ எதிர்காலத்தில் மேற்கொள்ளும் யுத்தியை பொறுத்தே அது உள்ளது. வைகோவின் யுத்தியை விட சந்தர்ப்பமும், கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்.

தன்னுடைய கட்சிக்கு 8% வாக்கு வங்கி உள்ளதாக வைகோ தெரிவித்து இருக்கிறார். இந்த தேர்தலில் அது உண்மையா என்று தெரிந்து விடும்.

இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே மூன்றாவது பெரிய கட்சி பற்றிய கேள்விக்கும் விடை கிடைக்கும். ஆனால் தற்போதைய நிலையில் பாமக தான் மூன்றாவது பெரிய கட்சி என்பது வைகோவிற்கு கசப்பளிக்கும் உண்மை.

Leia Mais…
Saturday, March 04, 2006

திமுகவிற்கு தோல்வியா ?

தமிழகத்தில் கூட்டணி குழப்பங்கள் விலகி ஒரு தெளிவான களம் உருவாகி இருக்கிறது. மிக பலமான கூட்டணியாக காணப்பட்ட திமுக இன்று சிதறி, கூட்டணி பலத்தில் ஒரு சமபலம் நிலவுவதாகவே தெரிகிறது. இனி சிறிய உதிறிக் கட்சிகள் இரு கூட்டணிகளிலும் இடம் பிடிக்கலாம். அதனால் கூட்டணியில் கட்சிகளின், தலைவர்களின் எண்ணிக்கை உயருமே தவிர வேறு பலன் இருக்கப்போவதில்லை

தமிழகத்தில் பலமான கட்சிகளை வரிசைப்படுத்தினால், அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் என வரிசைப்படுத்தலாம். காங்கிரஸ், கம்யுனிஸ்ட்கள், பாஜக போன்ற கட்சிகளை பாராளுமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மட்டுமே பயன்படுத்தலாம். மாநில அரசியலில் அவர்கள் ஒரு பொருட்டு அல்ல. காங்கிரஸ் முதுகில் ஏறினால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால் இன்றைக்கு அந்த நிலை இல்லை. ஒரளவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட்டணியின் பலத்தை நிர்ணயிக்கும் அளவுக்கோ, சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அளவுக்கு வலிமையான கட்சியாகவோ காங்கிரஸ் இல்லை. பாஜகவிற்கு கோயம்புத்தூர், கன்னியாகுமரி போன்ற சில இடங்களில் கணிசமான ஆதரவு உள்ளது. தமிழகத்தில் கம்யுனிஸ்ட்களுக்கு நாகப்பட்டினம், மதுரை போன்ற சில இடங்களிலும், கம்யுனிஸ்ட்களின் தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கும் இடங்களிலும் ஆதரவு இருந்தாலும் கூட்டணி சமபலத்தை இவை எந்தவிதத்திலும் பாதிக்காது.

கூட்டணி கட்சிகள் மூலம் திமுக பலம் வாய்ந்த கூட்டணி போல தெரிந்தாலும், காங்கிரஸ் கம்யுனிஸ்ட்களால் திமுகவிற்கு ஒரளவிற்கு வாக்குகள் சேருமே தவிர, பெரிய பலம் ஏதும் கிடையாது. இதனால் திமுக கூட்டணியை பல கட்சிகளின் கூட்டணி என்பதை விட திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி என்றும், அதிமுகவை அதிமுக-மதிமுக-விடுதலைச்சிறுத்தைகள் என்பதாக மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பார்க்கும் பொழுது இரு கூட்டணிக்கும் இருக்கும் சம்பலம் தெளிவாக தெரிகிறது.

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்த போதிலும் அதிகபட்ச "பேராசை" காரணமாகவும், சரியான Strategy இல்லாமலும், தனிப்பட்ட ஈகோ காரணமாகவும் திமுக, தேர்தலுக்கு முந்தைய முதல் ரவுண்டில் அதிமுகவிடம் தோல்வி கண்டுள்ளது. கலைஞர் அரசியல் சாணக்கியரா என்ற கேள்வி கடந்த சட்டமன்ற தேர்தலின் பொழுதே எனக்கு எழுந்தது. குட்டிக் கட்சிகளுக்கு ஸ்டாலின் மேற்பார்வையில் அதிக இடங்களை கடந்த தேர்தலில் ஒதுக்கிய கலைஞர், மதிமுக, பாமக போன்ற தன் பக்கம் இருக்க கூடிய கட்சிகளை பறிகொடுத்தார்.

இம்முறையும் அது போன்றே நிகழ்ந்துள்ளது.

திமுகவின் கூட்டணி குழப்பங்களை ஆரம்பத்தில் இருந்து கவனிக்கும் பொழுது மதிமுக-திமுக இடையே ஒட்ட முடியாத ஒரு நிலை தான் இருந்து வந்துள்ளது. அதனால் தான் வைகோ குறித்த பதிவினை எழுதும் பொழுது கூட வைகோ அதிமுக பக்கம் செல்வது தான் அவருக்கு நல்லது என்று நான் எழுதினேன். ஜெயலலிதாவிடம் வைகோ கூட்டணி வைக்கும் பொழுது கடந்த கால நிகழ்வுகள் குறித்த சில சங்கடங்கள் குறிப்பாக பொடா கைதினால் ஏற்பட்ட மனக்கசப்பு இருக்கலாம். ஆனால் அதைத் தவிர பெரிய முரண்பாடோ, உறவுச்சிக்கலோ இந்த இரு கட்சிகளுக்கு ஏற்படும் வாய்ப்பு இல்லை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது வைகோவின் வளர்ச்சி குறித்து திமுக தலைமைக்கு இருக்கும் அச்சம், அதன் காரணமாக அவரை பலவீனப்படுத்தும் முயற்சிகள் போன்றவையெல்லாம் நடக்கும். எனவே திமுக-மதிமுக எந்தக்காலத்திலும் ஒரு இயல்பான கூட்டணியாக இருக்க முடியாது. வைகோவின் பலத்தை மட்டும் உயயோகித்துக் கொண்டு மதிமுகவிற்கு குறைவான, வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளை கலைஞர் (ஸ்டாலின்) ஒதுக்கக்கூடும் என்றே நான் நினைத்தேன். திமுகவின் கூட்டணி தகராறுகளை பார்க்கும் பொழுது அவ்வாறே தோன்றியது. இன்று வைகோவின் பேட்டி கூட அதனை உறுதிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் ஜெயலலிதா ஏற்படுத்தும் எந்தக் கூட்டணியும் தேர்தலில் அவருக்கு வெற்றியை கொண்டு வருவதற்கான தற்காலிக ஏற்பாடு மட்டுமே. கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. தேர்தல் முடிந்தவுடன் ஜெயலலிதாவும் கைகழுவி விடுவார். பின் அடுத்த தேர்தல் வந்தால் மறுபடியும் அரவணைக்க முயலுவார். ஜெயலலிதா, கலைஞர் இருவருமே எதிரிகள் என்னும் பொழுது இந்த தற்காலிக ஏற்பாடு ஒரு வகையில் வைகோவிற்கு நல்லது. வைகோ பெரிய குழப்பத்திற்குப் பிறகு ஒரு நல்ல முடிவையே எடுத்துள்ளார் என்று சொல்ல வேண்டும்.

மிகப் பெரிய கூட்டணியில் தொகுதி சிக்கல்கள் வரும் என்றாலும் அதனைச் சுமூகமாக தீர்த்து வைக்க திமுக முனைந்ததா என்பதே கேள்வி ? இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். கலைஞர் அரசியல் சாணக்கியத்தனத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகவில்லை. சில தனிப்பட்ட விரோதங்கள், ஈகோ காரணமாக தமிழகத்தின் அடுத்த ஆட்சியை பறிகொடுக்கும் நிலைக்குச் சென்றுள்ளார் என்றே நான் நினைக்கிறேன்.

திமுக கூட்டணியில் தொகுதிகளை இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ், மதிமுக, பாமக - 26, விடுதலைச் சிறுத்தைகள் - 10, கம்யுனிஸ்ட்கள் - 16
பாமக-விடுதலைச் சிறுத்தைகள் இருவரும் கூட்டாக 30தொகுதிகளுக்கு தயாராக இருந்தனர் என்பதும், மதிமுக 25 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டனர் என்பதையும் வைத்து பார்க்கும் பொழுது கலைஞர் மிகச் சுலபமாக இந்த கூட்டணி பிரச்சனையை தீர்த்து இருக்கலாம். இங்கு குறைவான தொகுதிகள் காங்கிரசுக்கு தான். காங்கிரசுக்கு கொஞ்சம் அதிகமான தொகுதிகளை கொடுக்க நினைத்தால் இவ்வாறு பிரித்து இருக்கலாம்.
திமுக - 130, காங்கிரஸ் - 32 , பாமக - விடுதலைச் சிறுத்தைகள் - 30 மதிமுக - 26 கம்யுனிஸ்ட்கள் (மார்க்ஸ்சிஸ்ட், இந்திய கம்யுனிஸ்ட்) - 16.
பிற கட்சிகளுக்கு "மனதில் இடத்தை" கொடுத்து கூட்டணிப் பிரச்சனையை முடித்திருக்கலாம்.

இதன் மூலம் மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற வலுவான கட்சிகளை கலைஞர் தன்னுடன் தக்க வைத்திருக்க முடியும். இந்த உடன்பாட்டில் காங்கிரசுக்கு சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் கூட்டணியில் இருந்து வெளியேற முடியாத கட்சியான காங்கிரசை டெல்லி தலைமை மூலம் எளிதாக சமாதானப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இவ்வாறு எதையும் செய்யாமல் மதிமுகவை குறி வைத்து அவர்களுக்கு குறைவான இடங்களை வழங்கும் போக்கிலேயே கலைஞரின் நிலை இருந்து வந்துள்ளது. மதிமுகவிற்கு குறைவான இடங்களைக் கொடுத்து அவரை ஒரு குட்டி தலைவராக்கி விடலாம் என்றோ, வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளைக் கொடுத்து அவருக்கு பலம் ஏதும் இல்லை என்று நிருபித்து விடலாம் என்பதாகவோத் தான் திமுக தலைமை யோசித்து இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே திமுகவிற்கும் மதிமுகவிற்கும் பிரச்சனை தொடங்கியது இதன் காரணமாகத் தான். 18, 20, 22 என எண்ணிக்கையை அதிகரித்த திமுக பிறகு அத்துடன் நிறுத்திக் கொண்டது. மதிமுக 35ல் தொடங்கி 25வரை தனது தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள முன்வந்தது. மதிமுகவுக்கு மட்டும் தொகுதிகளைக் குறைத்துக் கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டிய திமுக தலைமை, ஏன் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் தொகுதிகளை குறைப்பதில் முனைந்திருக்க கூடாது ?

கலைஞர் யோசித்து நயமாக, கவிதையாக பேசக் கூடியவர் என்ற நிலை மாறி இன்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கும் வாய்ப்பை கெடுத்தது கலைஞரின் பேச்சு தான். "22க்கு ஒப்புக் கொண்டால் கூட்டணியில் இருக்கலாம்" என்று கூறியதன் மூலம் மதிமுக அணி மாறுவதற்கு காரணமாக இருந்துள்ளார்.

முதலில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான கூட்டணியை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும். பின் தனித்து ஆட்சியை பிடிக்க முடியுமா, கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இனி கலைஞர் 145தொகுதிகளில் கூட போட்டியிடலாம். ஆனால் எத்தனை இடத்தில் வெற்றி பெறப் போகிறார் ? இந்த தேர்தலில் அதிமுக சார்பான கூட்டணி அதிக இடங்களைப் பிடிக்கலாம். அல்லது ஒரு குழப்பமான முடிவை தமிழக மக்கள் கொடுக்கலாம். திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.

இன்று தமிழகத்தின் வாக்கு வங்கி பல கட்சிகளிடையே சிதறிக் கிடக்கிறது. இதில் பலமான கட்சியாக இருப்பது அதிமுக. அடுத்த நிலையில் தான் திமுக உள்ளது. இந்த இரு கட்சிகளின் பலத்தை ஆராயும் பொழுது திமுக வடமாவட்டங்களில் பலமாக உள்ளது. அதிமுகவின் பலம் தென்மாவட்டங்கள்.

கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் பெரும்பாலும் வடமாவட்டங்களில் இருப்பவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக, வடமாவட்டங்களில் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பாமக மூலம் கணிசமான தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் ஆட்சியைப் பிடித்தது. கடந்த முறை அதிமுக வெற்றி பெற்றதற்கு மதிமுக தனித்து போட்டியிட்டதும் ஒரு காரணம்.

திமுக வடமாவட்டங்களில் கடந்த முறை வெற்றி பெற முக்கிய காரணம் அதனுடைய பலம் மட்டும் என்று சொல்லி விட முடியாது. விடுதலைச் சிறுத்தைகளுடன் திமுக கொண்ட கூட்டணியும் முக்கிய காரணம். இதனையும் இம் முறை கலைஞர் கவனிக்க தவறி விட்டார்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் சுமார் 2லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். திமுக-பாமக-மதிமுக-காங்கிரஸ் என்ற பலமான கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக, திருமாவளவனை விட சுமார் 80,000 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக சுமார் 1லட்சம் ஓட்டுகளைப் பெற்றது. இதனை கவனிக்கும் பொழுது திருமாவளவன் எந்தளவுக்கு வெற்றியை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருக்கிறார் என்பது தெளிவாகும். சுமாராக 20-25 தொகுதிகளில் திருமாவளவனுக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திருமாவளவனை அதிமுக கூட்டணிக்கு அனுப்பியதன் மூலம் எளிதில் வெற்றிப் பெறக்கூடிய 20க்கும் மேற்பட்ட வடமாவட்ட தொகுதிகளை கலைஞர் கடுமையான போட்டிக்குள்ளாக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் தலித் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.

திமுக-பாமக கூட்டணி வடமாவட்டங்களில் வலுவான கூட்டணி தான் என்ற போதிலும் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்குச் சென்றது அதிமுகவிற்கு வலுச் சேர்த்துள்ளது.

தென்மாவட்டங்கள் என்று பார்த்தால் அதிமுக தான் பலமான கட்சி. மதிமுகவின் பலமே தென்மாவட்டங்கள் தான். கடந்த தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்ட பொழுது சுமார் 20தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இம்முறை மதிமுக அதிமுகவுடன் சேரும் பொழுது இந்த தொகுதிகளை நிச்சயமாக திமுக இழக்கும். இவை தவிர மதிமுக தன்னுடைய வாக்கு வங்கி அதிகரித்துள்ளதாக கூறி வருகிறது.

ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சிக்கும் தென்மாவட்டங்களில் பலம் கிடையாது. கிட்டத்தட்ட திமுக தென்மாவட்டங்களில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை தான் உள்ளது.

இவ்வாறு கூட்டணி கணக்குகளை சீர்தூக்கி பார்க்கும் பொழுது வடமாவட்டங்களில் திமுக கூட்டணியும், தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டணியும் வலுவாக உள்ளன. சுமாராக 100 தொகுதிகளில் திமுகவும், 100முதல்-130 தொகுதிகளில் அதிமுக கூட்டணியும் பலமாக உள்ளன. இந் நிலையில் திமுக வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் எந்தளவுக்கு உள்ளன என்பது விவாதத்திற்குரியது. கூட்டணியே இல்லாமல் இருந்த ஜெயலலிதா மிக Aggressive கவும், திமுக குழப்பங்களுடனும் இது வரை களத்தில் உள்ளனர்.

கடந்த சில தேர்தல்களை கவனிக்கும் பொழுது ஜெயலலிதா ஒரு தேர்ந்த அரசியல்வாதியாகவே வெளிப்பட்டுள்ளார். அவருக்கு ஆலோசனை சொல்லும் சில "பத்திரிக்கையாளர்கள்", பணமுதலைகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள், ஆட்சியில் இருக்கும் பொழுது உதவும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் என ஒரு வலுவான ஆலோசனைக் குழுவை உருவாக்கியிருக்கிறார். ஆனால் திமுக தலைமை ஸ்டாலினின் மேற்பார்வையில் இருப்பதால் கலைஞருக்கே இருக்கக் கூடிய சாணக்கியத்தனம் இல்லாமல் ஒரு குழப்பான யூனிட்டாகத் தான் வெளிப்பட்டு இருக்கிறது.

திமுகவிற்கு கூட்டணி தவிர கைக்கொடுக்க கூடிய ஒன்று anti-incumbency factor - ஆளும்கட்சிக்கு எதிராக ஒவ்வொரு தேர்தலிலும் உருவாகும் எதிர்ப்பு உணர்வு. திமுக சரியான பிரச்சாரம் மூலமாக இனி வரும் நாட்களை திடமாக எதிர்கொண்டால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும். இது வரை திமுக கூட்டணி ஒரு குழம்பிய குட்டையாகத் தான் இருந்தது. கூட்டணியின் பலம் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டு தெளிவான பிரச்சாரத்தை திமுக முன்னெடுக்க வேண்டும். ஆளும்கட்சிக்கு எதிராக இயல்பாக இருக்க கூடிய உணர்வுகளை தங்களுக்கு சாதகாமாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும்.

இல்லையேல் அடுத்த ஐந்து ஆண்டுகள் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதிக் கொண்டு எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்க முடியும்

Leia Mais…
Thursday, March 02, 2006

தமிழகமும், தமிழ் ஈழமும்

தமிழக இளையசமுதாயம் தமிழீழம் குறித்து எந்தளவுக்கு அறியாமையுடன் இருக்கிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம் தான் நந்தனின் இந்தப் பதிவு. இந்தப் பதிவை நான் நேற்று படிக்க நேர்ந்தது. நந்தனின் பதிவில் தான் நினைத்ததை அவர் எழுதியிருக்கிறார். அதற்காக அவருக்கு என்னுடைய நன்றி.


அதே நேரத்தில் ஒட்டுமொத்த தமிழக இளையசமுதாயமும் இவ்வாறு இருக்கிறது என முடிவு கட்டிவிட முடியாது. நானும் வலைப்பதிவில் இருக்கும் பிற நண்பர்களும் என்ன முதிய சமுதாயமா ? புரிதல் என்பது பிரச்சனையை எந்தளவுக்கு அறிந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இருக்கிறது. பிரச்சனை குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளாத வரை எந்தச் சமுதாயமும் எந்தப் பிரச்சனையையும் புரிந்து கொள்ள முடியாது.

ஆவணப்படுத்துதல் குறித்து நந்தன் எழுதியிருந்தார். புலிகள் தங்கள் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் ஆவணப்படுத்தி இருக்கின்றனர். புலிகள் போல தங்கள் இயக்கத்தின் வரலாற்றை ஆவணப்படுத்திய இயக்கங்கள் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு போரினையும் பதிவு செய்திருக்கிறார்கள். புலிகள் இயக்கத்தில் போரினையும் பிற முக்கிய நிகழ்வையும் பதிவு செய்யும் ஒரு தனிப் பிரிவே உண்டு. புலிகள் தங்களுடைய போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே இதனை செய்திருக்கிறார்கள்.

தன்னுடைய Island of Blood புத்தகத்தில் அனிதா பிரதாப் இவ்வாறு தெரிவிக்கிறார்.

shortly after i was seated, taciturn Tiger guerrillas switched on a color television set ( a rare commodity in those days) and made me watch several video documentaries (even rarer commodities) on the LTTE and its leader. They were beautifully shot. The dance of sunlight and the angle of the camera made pirabhakaran seem larger than life. He looked strong, tough and brave. The film depicted LTTE as the disciplined national army of a proud nation - Tamil Eelam.

தங்களுடைய இயக்கத்தைப் பற்றிய குறும்படங்களை 1984லேயே எடுத்து பலருக்கும் ஒளிபரப்பியவர்கள் விடுதலைப் புலிகள். இத்தகையப் படங்கள் இணையத்தில் கிடைக்கிறதா என்று நானும் தேடினேன். ஆனால் சிலப் படங்களை மட்டுமே காண முடிந்தது. நன்றாக எடுக்கப்பட்ட படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இத்தகையப் படங்கள் ஐரோப்பாவில் திரையிடப்படுகின்றன என்று நான் படித்து இருக்கிறேன். இன்று ஈழத்து செய்திகளை தினமும் பார்க்க தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் உள்ளது. ஈழத்தில் முக்கியமான நிகழ்வுகள் நடக்கும் பொழுதெல்லாம் நான் இந்த தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழக்கம். பிரபாகரன் வன்னியில் ஆற்றும் உரை ஐரோப்பாவில் நேரடியாக ஒளிபரப்பாகிறது என்பது எத்தனை "இந்திய" தமிழர்களுக்கு தெரியும் என்பது தெரியவில்லை.


அதே நேரத்தில் இந்த குறும்படங்களும், செய்திகளும் தமிழார்வம் கொண்ட நண்பர்களுக்கு போய்ச் சேர்வது முக்கியமாகப் படுகிறது. குறும்படங்கள் குறித்து மேலும் விபரங்களை தமிழீழ நண்பர்கள் கொடுக்கலாம்.

கடந்த சில ஆண்டுகளாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பலன், உலகின் பலப் பகுதியில் இருக்கும் ஊடகங்கள் தமிழ் ஈழம் சென்றது தான். புலிகளின் தமிழீழ உள்கட்டமைப்பு பற்றி இந்தியாவின் பத்திரிக்கைகள் தொடங்கி, அமெரிக்காவின் டைம் போன்ற பத்திரிக்கைகள் வரை அனைவரும் எழுதியிருக்கிறார்கள். இது தவிர பல நாட்டு தூதுவர்கள் இலங்கைக்கு செல்லும் பொழுது தமிழ் ஈழத்திற்கும் சென்று தமிழ்ச்செல்வனை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். புலிகள் ஒரு தனி அரசாங்கத்தை நிறுவி நடத்தி வருகிறார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. அது போல அந்தப் பகுதிக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

இன்னொரு விஷயத்தையும் தமிழகத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வது முக்கியம். தமிழ் ஈழத்திற்கு வரி செலுத்துபவர்களில் இலங்கை அரசாங்கமும் அடங்கும் என்பதே அந்தச் செய்தி. கொழும்பு - யாழ்ப்பாணம், A9 நெடுஞ்சாலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கடந்தே செல்ல வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தன் இராணுவத்தினருக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை கொண்டு செல்ல இந்தச் சாலையை பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம், புலிகளுக்கு சுங்க வரி செலுத்துகிறது.

புலிகளின் இராணுவத் திறன் பற்றிச் சொல்ல வேண்டுமானால் யானையிறவு போரைப் பற்றிச் சொல்லலாம். யானையிறவு போர் பற்றி மட்டுமே ஒரு பெரிய பதிவு எழுதலாம்.

யானையிறவு யாழ்ப்பாண தீபகற்பத்தை பிற நிலங்களுடன் இணைக்கும் சிறு நிலப்பகுதி. யாழ் தீபகற்பத்திற்கான வாயில் என்று இதனைச் சொல்லலாம். இந்த நிலப்பகுதிக்காக பலப் போர்கள் நடந்துள்ளன. கேந்திர முக்கியத்துவம் உள்ள இடம் இது. இங்கு சீறிலங்கா இராணுவத்தின் மிகப் பெரிய முகாம் இருந்தது. பலத்த பாதுகாப்பான முகாம். பலத்த என்பதை "பலப் பல" மடங்கு என்று சொல்லலாம். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்டது இந்த முகாம். இந்த முகாமின் பாதுகாப்பு வளையங்களை பார்வையிட்ட அமெரிக்க, பிரிட்டன் (UK) இராணுவ வல்லுனர்கள் இதனை கைப்பற்ற வேண்டுமானால் விமானப் படை வேண்டும். மரபுச் சார்ந்த படையாக இருந்து முப்படைகளையும் பெற்றிருக்க வேண்டும். முப்படைகளின் கூட்டு படைத்திறன் மூலமே இந்த முகாமை கைப்பற்ற முடியும் என தெரிவித்திருந்தனர். புலிகள் போன்ற கொரில்லா இயக்கங்களால் இந்த முகாமை எப்பொழுதும் கைப்பற்ற முடியாது என்று கூறினர். இந்த முகாமில் சுமார் 25,000 படை வீரர்கள் இருந்தனர். பல அடுக்கு பாதுகாப்பு அரண்களை கொண்ட இந்த முகாமை புலிகளின் 5000 பேர்களை மட்டுமே கொண்ட படை கைப்பற்றியது, உலக இராணுவ வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு. மரபுச் சார்ந்த போர் குறித்த இராணுவ நோக்கர்களின் கருத்துகளை மாற்றி எழுதிய நிகழ்வு இது. இந்தப் போரினை திட்டமிட்டு நடத்தி வெற்றி பெற வைத்தவர் புலிகளின் தலைவர் தான். விமானப் படை இல்லாமலேயே ஒரு பெரிய பாதுகாப்பு அரணை உடைத்து புலிகள் இந்த வெற்றியை பெற்றனர்.

இந்த போர் தான் புலிகளுக்கு ஒரு தனி மரியாதையை கொடுத்தது. 10,000 பேர்களை கொண்ட புலிகள் முன்னேறி வருகிறார்கள். எங்களுடைய
50,000 வீரர்களை காப்பாற்றுங்கள் என உலகநாடுகளிடம் ஒரு நாட்டின் ஜனாதிபதி (சந்திரிகா) கதறும் அளவுக்குத் தான் சிங்கள இராணுவத்தின் motivation உள்ளது. புலிகளை போர் மூலம் வெல்ல முடியாது என்பதும், வேறு எந்த நாடும் இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்காது என்பதும் தெளிவான விஷயம். பிற நாடுகள் ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் ஆயுத பலம், எண்ணிக்கை பலம் இவற்றில் இந்தியப் படைக்கு எதிராகவும் சரி, இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் சரி புலிகள் பலம் குறைந்தவர்கள் தான். புலிகளுடைய பலமே உயிரை துச்சமென மதித்து ஈழவிடுதலைக்காக போராடும் அவர்களின் மனதிடமும், விடுதலை வேட்கையும் தான். அதற்கு முன் எந்த பெரிய இராணுவமும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை யானையிறவு போர் நிருபிக்கவே செய்தது.

இந்தப் போரும், அதன் வெற்றியும் தான் தமிழர்களுக்கு ஒரு சரிசமமான இடத்தை கொடுத்திருக்கிறது என்பதை நாம் மறந்து விட கூடாது. சிங்கள அரசு தமிழர்களிடம் பேச்சுவார்த்தை தொடங்க காரணமே இந்தப் போரின் வெற்றி தான்.

அகிம்சை பற்றி உலகநாடுகளுக்கு அறிவுரை வழங்குவதே நம்முடைய வேலையாய் போயிற்று. ஆனால் அகிம்சை வழியில் இந்தியா தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று உண்ணவிரதம் இருந்த திலீபனின் உயிர் பற்றியோ அவரது அகிம்சை போராட்டம் பற்றியோ இந்தியா கண்டுகொள்ளவேயில்லை. திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிரை இழந்தது மட்டுமே அகிம்சை வழியில் கண்ட பலன்.

இன்று உலகில் அகிம்சை வழியில் போராடும் மற்றொரு நாடு திபெத். திபெத்திற்கு உலகெங்கிலும் அங்கீகாரம் கிடைத்தது. உலக நாடுகளின் பரிவு கிடைத்தது. திபெத் தலைவர் தலாய்லாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது. அவ்வளவு தான். அவர்கள் போராட்டத்திற்கு இதைத் தவிர வேறு எதுவும் கிடைக்கப்போவதில்லை (திபெத் பற்றிய என்னுடைய பதிவு)

மாறாக இன்று உலகநாடுகள் கூட்டாச்சியை புலிகளுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக் கால வரலாற்றைப் படிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதத்தை எடுத்தார்கள் என்பது தெரியும். புலிகளின் இராணுவ பலம் மட்டுமே தமிழர்களை உலக அரங்கில் பேச்சுவார்த்தை வரை கொண்டு சென்றுள்ளது. அகிம்சை போராட்டமாக இருந்திருந்தால் எப்பொழுதோ நசுக்கப்பட்டிருப்பார்கள். தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் இருப்பதற்கு காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதனை புலிகளின் எதிரிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள் (என்னுடைய இந்தப் பதிவை பார்க்கலாம்)


புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டம் இல்லை, தீவிரவாதப் போராட்டம் என்று உலக அரங்கில் நிலைநிறுத்தியதில் சிங்கள அரசுக்கும், இந்தியச் "சார்பு" ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் உண்மை நிலை அது அல்ல. இதனை பல நடுநிலையாளர்களும், புலிகளின் எதிர்ப்பாளர்களும் கூட ஒப்புக் கொண்டுள்ளனர். ஜெ.என். தீக்ஷ்த் இவ்வாறு கூறுகிறார்.

The third factor is the cult and creed of honesty in the disbursement and utilisation of resources. Despite long years spent in struggle, the LTTE cadres were known for their simple living, lack of any tendency to exploit the people and their operational preparedness.

மக்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்காக கடத்தி சென்ற கதைகளை பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களுக்கு சுனாமி போன்ற சமயங்களிலும் சரி, சாதாரண சமயங்களிலும் சரி புலிகள் தான் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தேவைகளையும் வழங்கி இருக்கின்றனர். புலிகளின் பிரதேசங்கள் மீது பல காலமாக இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார தடைகள் இருந்தன என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

உலக அரங்கில் அரசியல் தலைவர்களின் படுகொலைகள் மட்டுமே தீவிரவாதமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் தலைவர்கள் அரசாங்கத்தின் இராணுவம் மூலம் நிகழ்த்திய அட்டூழியங்கள் இராணுவ நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறன. தங்களுடைய அரசு இயந்திரங்கள் மூலம் இந்தத் தலைவர்கள் அட்டூழியங்களை நிகழ்த்தும் பொழுது அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் அப்பாவிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று உலகநாடுகள் நினைக்கின்றன. ரஞ்சன் விஜயரத்னே இலங்கையின் மிகக் கொடூரமான இனவெறிப் பிடித்த தலைவர்களில் ஒருவர். ஒரு முறை அனிதா பிரதாப் பிரபாகரனை பேட்டி எடுக்கச் செல்லும் முன் விஜயரத்னேவை சந்தித்த பொழுது அவர் இப்படி கூறினாராம்.

When you meet Pirabhakaran, tell him it's the last time he will be seeing you. Before you get there next time, I will make sure he is a dead man

இத்தகைய இனவெறி, கொலை வெறிப் பிடித்த தலைவர்களிடம் விடுதலை கேட்டு அகிம்சை வழியிலா போராட முடியும் ?

எந்த அரசியல் படுகொலையும் கண்டனத்திற்குரியதே. அதனை நியாயப்படுத்த முடியாது. அதே இறுகிய கடந்த கால நிகழ்வுகளைக் கொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளை வைத்திருக்க முடியாது. இன்று தமிழகத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகளின் நிலையை ஏற்று இலங்கை விஷயத்தில் காங்கிரஸ் தலைமையிலான (சோனியா காந்தி) மைய அரசு நடுநிலையுடன் நடந்து கொள்ள தொடங்கி இருக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம். புலிகளின் எதிர்ப்பாளர்கள் மட்டுமே "இறந்த" காலத்தை தொடர்ந்து பேசி புலிகள் எதிர்ப்பை நிலைநிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்த திரை சற்றே விலகி இருக்கிறது. இது வரை இந்திய ஊடகங்கள் எழுதி வந்த பொய்க்கதைகளைக் கடந்து இருக்கும் உண்மை நிலை பற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் தமிழ் ஈழப் போரட்டத்தில் இருக்கின்ற உண்மை நிலையை தமிழக மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய வழிகளை ஆராய வேண்டும். குறும்படங்கள், புத்தகங்கள் போன்றவை எளிதில் கிடைக்ககூடியதாக இருக்க வேண்டும்.

நான் இந்தப் பதிவில் எந்தப் புதிய விஷயத்தையும் கூறி விடவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனை பற்றி தொடர்ந்து பேசுவதும், எழுதுவதும் முக்கியம். அதுவும் தமிழ் ஈழ போராட்டம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நேரத்தில் இது மிக முக்கியமாகப்படுகிறது.

Leia Mais…