வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Tuesday, January 13, 2009

சத்யம் : பெயில் அவுட் அவசியமா ?

சத்யம் நிறுவனத்தை இந்திய அரசு, அமெரிக்க பாணியில் Bailout செய்யக்கூடும் என்ற தகவலை இந்திய நடுவண் அரசின் வர்த்தக துறை அமைச்சர் கமல்நாத் வெளியிட்டிருக்கிறார் . இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும். அமெரிக்காவில் செய்யப்பட்டது போன்ற பெயில் அவுட் சத்யம் நிறுவனத்திற்கு பொருந்தாது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தையே சில நிறுவனங்களின் சரிவு கவிழ்த்து விடும் என்ற அச்சத்தால் தான் AIG போன்ற நிறுவனங்களை அமெரிக்க அரசாங்கம் பெயில் அவுட் செய்தது. லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களின் சரிவு அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்ற காரணத்தால் லீமேன் பிரதர்ஸ் போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய அமெரிக்க அரசு மறுத்து விட்டது. இதனால் தான் லீமேன் திவாலாகியது.

இங்கு கூட லீமேன் பிரதர்ஸ், சத்யம் நிறுவனம் போல ஊழல் எதுவும் செய்யவில்லை. லீமேன் பிரதர்ஸ் செய்த மோசமான முதலீடுகள் காரணமாக எழுந்த நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் தான் அந் நிறுவனமும், வேறு பல அமெரிக்க நிறுவனங்களும் சரிவை எதிர்கொண்டன. தவிரவும் மிக மோசமான விலையை கொண்டிருந்த CDO (Collateralized debt obligation) பத்திரங்களை கொண்ட நிறுவனங்கள் சரிவது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பல வகையிலும் சரிவை கொடுக்கும் என்ற காரணத்தால் தான் பெயில் அவுட் என்பதையே அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்தது. இங்கு நிறுவனங்களிடம் இருக்கும் இந்த CDOக்களை அரசாங்கம் வாங்கிக் கொள்ளும். We need to Bailout Main Street, not Wall Street என்ற கோஷம் இங்கு பலமாக ஒலித்தது.

ஆனால் இந்தியாவில் உள்ள சூழ்நிலை என்ன ? சத்யம் நிறுவனத்தை ஏன் இந்திய அரசாங்கம் பெயில் அவுட் செய்ய வேண்டும் ? சத்யம் நிறுவனத்தின் சரிவு இந்திய பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை. அதுவும் தவிர அமெரிக்க நிறுவனங்கள் போல மோசமான முதலீடுகளால் சத்யம் இந்தச் சரிவை அடையவில்லை. மாறாக ராமலிங்க ராஜூ செய்த தில்லுமுல்லுகள் தான் இந் நிறுவனத்தை சரிவுக்குள்ளாக்கியது. அப்படியான சூழ்நிலையில் சத்யம் நிறுவனத்தை ஏன் அரசாங்கம் பணம் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ?


சத்யம் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தான் ஒரே காரணம் என்றால், அதற்கு வேறு வழிகள் உள்ளன. இன்போசிஸ், டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் சத்யம் நிறுவனத்தினை வாங்குவது போன்றவை தான் தீர்வாக முடியுமே தவிர சத்யம் நிறுவனத்தை அரசாங்கம் பெயில் அவுட் செய்வது அல்ல. அமெரிக்காவில் கூட மோசமான நிலையில் இருந்த Washington Mutual போன்ற நிறுவனங்களை JP Morgan Chase போன்ற நிறுவனங்கள் வாங்கின. இதைத் தான் இந்தியாவிலும் அரசாங்கம் செய்ய வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் மக்களின் வரிப்பணத்தை கொடுத்து சத்யம் நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் இந்தியாவில் பல் வேறு இடங்களில் இருந்த பல தொழிற்சாலைகள், ஆலைகள் மூடப்பட்ட பொழுது ஏன் இந்திய அரசுக்கு எந்த ஆலையையும், அதனால் பாதிப்பு அடைந்த தொழிலாளிகளையும் காப்பாற்றும் எண்ணம் ஏற்படவில்லை என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும். என் ஊருக்கு அருகில் இருக்கும் கடலூர் சிப்காட் மற்றும் புதுவையில் பல ஆலைகள் மூடப்பட்டன. அதில் பணியாற்றிய பல தொழிலாளிகள் தங்கள் வாழ்க்கையை இழந்தனர். பொருளாதார ரீதியில் நசிந்து போயினர். அவர்களை எந்த அரசாங்கமும் காப்பாற்ற வில்லை. ஆந்திராவிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பல விவசாயிகள் தங்களின் விவசாயம் நசிந்து போய் தற்கொலை செய்து கொண்ட பொழுது இந்திய அரசாங்கம் அவர்களை பெயில் அவுட் செய்ததா ? தேர்தல் நேரம் வந்தால் மட்டும் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.

ஜெயலலிதா அரசாங்கம் அரசு அரசு ஊழியர்களை கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது, அதுவும் 40-45 வயது மதிக்கத்தக்கவர்கள் அரசு வேலை தவிர வேறு வேலைகள் தெரியாத நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட பொழுது ஊடகங்கள் தொடங்கி, நீதிமன்றம் வரை அதற்கு வக்கலாத்து தான் வாங்கினார்கள். அவ்வாறு வக்காலத்து வாங்கிய என்னுடைய சக ஐடி தோழர்களையும் நான் அறிவேன்.

ஆனால் இப்பொழுது இதே ஊடகங்கள் அலறுகின்றன.

சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 800 பணிப்பெண்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். உடனே ஊடகங்களுக்கு எழுந்த கவலையும், அக்கறையும் நெஞ்சை உருக்கியது. ஊடகங்கள் ஓங்கி குரலெழுப்பின. உடனே அவர்கள் அனைவரையும் ஜெட் ஏர்வேஸ் மறுபடியும் பணிக்கு அமர்த்திக் கொண்டது. ஆனால் இந்த கருணை எல்லாம் ஏழை தொழிலாளிகளுக்கோ, விவாசாயிகளுக்கோ கிடையாது.

Jet Airways reinstates 800 staff





வேலை இழப்பு என்பது எத்தகைய உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நான் அறிவேன். ஆனால் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் படித்து விட்டு ஐடி துறையில் ஏதோ ஒரு வேலையில் நுழைந்தவுடன் கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் தங்களை ஒரு வித மேட்டுக்குடி மனப்பான்மையுடன் கட்டமைத்து கொள்கிற ஐடி துறை தோழர்கள், கொஞ்சம் சமூகத்தையும் திரும்பி பார்க்க வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய எண்ணம்.

ஐடி துறை நண்பர்கள் படிக்க வேண்டிய பதிவு : ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

என்னுடைய முந்தைய பதிவு - ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

Leia Mais…
Sunday, January 11, 2009

ராமலிங்க ராஜூ கோவிந்தா, கோவிந்தா

இந்தியாவில் பங்குச்சந்தையில் பங்குகளின் விலையை உயர்த்துவதற்காக நிறுவனங்களின் மதிப்பை உயர்த்தி, அதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை "அமுக்கும்" செயல் ஒன்றும் புதிய விடயம் அல்ல. ஹர்ஷத் மேத்தாவின் ஊழல்களை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுசித்தா தலால் மற்றும் தேபசிஸ் பாசு எவ்வாறு பல நிறுவனங்கள் கூட்டணி அமைத்து பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் முதலீடுகளை சிதைக்கின்றன என்பது குறித்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் (Face Value - Creation and Destruction of Shareholder value in India). எனவே இந்தியாவில் இது போன்ற காரியங்கள் நடப்பது ஒன்றும் புதிது அல்ல.

ஆனால் சத்யம் என்ற மிகப் பெரிய நிறுவனம் இதில் ஈடுபட்டதும், பங்குச்சந்தை என்பது மட்டுமில்லாமல் தன்னுடைய நிறுவனத்தின் மதிப்பையே போலியாக கட்டமைத்து இந்தியாவின் நான்காவது பெரிய மென்பொருள் நிறுவனமாக தன் நிறுவனத்தை மாற்றிக் கொண்டதும் தான் சற்று வித்யாசமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஹர்ஷத் மேத்தா போன்றவர்களின் ஊழல்களை விட ராமலிங்க ராஜூவின் வில்லத்தனம் பிரமிக்க வைக்கிறது. இது குறித்து ஏற்கனவே பலர் எழுதி விட்டதால், அதனைச் சார்ந்த சில எண்ணங்களை மட்டுமே இங்கே முன்வைக்கிறேன்.

தனியார் நிறுவனங்கள் என்றில்லாமல் அரசாங்கமே சில நேரங்களில் பங்குச்சந்தையில் "செயற்கையான" சில மாற்றங்களை செய்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தையில் பங்குகள் வேகமாக வீழ்ச்சி அடையும் பொழுது எல்.ஐ.சி நிறுவனம் மூலமாக அரசாங்கம் பங்குகளை வாங்கி பங்குச்சந்தை அதிகம் வீழ்ச்சி அடையாமல் காப்பாற்றும். எல்.ஐ.சி நிறுவனம் இவ்வாறு நாள்தோறும் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு சில மாதங்களுக்கு முன்பு பங்குகளை வாங்கி பங்குச்சந்தை அதலபாதளத்திற்கு உடனடியாக போகாமல் காப்பற்றப்பட்டதை சுசிதா தலால் வெளிப்படுத்தியிருந்தார். பல ஆயிரம் சாமானிய மக்களின் காப்பீடு பணத்தை இந்திய அரசாங்கமே பங்குச்சந்தையில் சூதாட்டம் போல முதலீடு செய்து பங்குச்சந்தையை காப்பாற்றி கொண்டிருக்கிறது. காப்பீடுகளை நெறிப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் அமைப்புகள் இதனை கண்டுகொள்வதில்லை.

காப்பீடுகளை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது ஒரு சரியான விடயம் அல்ல. அமெரிக்காவில் AIG நிறுவனம் இவ்வாறு செய்து, திவாலாகி அரசாங்கத்தால் காப்பற்றப்பட்டது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடந்தேறியது. இந்தியாவில் காப்பீடு நிறுவனங்களும், பென்ஷன் நிறுவனங்களும் அதனுடைய நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளில் தான் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது. அமெரிக்க முதலாளித்துவத்தின் பாணியை இந்தியாவில் நுழைத்த அந்த வைபோகம் அமெரிக்காவில் AIG நிறுவனம் அடைந்த பெரும் சரிவிற்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பது தான் ஆபத்தானது. அரசாங்கமே தன்னுடைய நிறுவனம் மூலம் அதனை செய்து வரும் நிலையில், பிற தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் பணம் எந்தளவுக்கு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்ற கேள்வி எனக்குள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சத்யம் நிறுவனத்தின் தற்போதைய ஊழல் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தாலும், சத்யம் நிறுவனம் சர்ச்சையில் அடிபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சத்யம் நிறுவனம் சிக்கி உள்ளது. 1999-2001ல் கேத்தன் பராக் ஊழலில் சத்யம் நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்த்தப்பட்டன. தேபசிஸ் பாசு அது குறித்து தன்னுடைய சமீபத்தைய கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

For those of us who have been tracking corporate behaviour for a long time, what Satyam did was only mildly shocking. Such anti-investor actions are not new to them, but investors’ memory, especially that of fund managers, is very short!

We all know that Satyam was one of K-10 companies - stocks of companies that Ketan Parekh was rigging in 1999-2001. That apart, in mid-2000 Satyam Computers merged Satyam Enterprise Solutions in a way that hugely benefited Srini Raju who was running SES.
The merger ratio, fixed by KPMG, was 1:1. Before the merger, Satyam Computers renounced 800,000 shares of SES in favour of Srini Raju at a price of Rs 10 when the shares were trading at Rs 1500 in the stock market. The 1:1 merger ensured that Srini Raju got 800,000 shares of Satyam Computers (paid for at Rs 10). When the information leaked out to investors, they were incensed. The stock collapsed. Among the big sellers were outraged foreign funds.

In August 2002 more governance issues came up. The Department of Company Affairs was asking questions about Satyam’s accounting methods but the company managed to suppress it.

What does this tell you? Well, simply that smart investors must not be taken in by the claims of institutional investors that they will shun the shares forever.

இவ்வாறு சத்யம் கடந்த காலங்களில் செய்த தகிடுதத்தங்களை மறைத்து சத்யம் உள்ளிட்ட பல முன்னனி ஐடி நிறுவனங்களுக்கு புனிதவட்டம் கட்டப்பட்டத்தில் இந்திய ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
ஊடகங்கள் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. மக்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செய்திகளை வழங்குவது தான் ஊடகங்களுக்கு வெற்றியை கொடுக்கும். ரத்தன் டாட்டா, நாராயண மூர்த்தி, ராமலிங்க ராஜூ போன்றவர்களை புனித பிம்பங்களாக இதே ஊடகங்கள் வளர்த்து வந்தன. இவர்கள் "ஒளிரும் இந்தியாவை" பிரதிபலிப்பதாக இதே ஊடகங்கள் ஒளிவட்டம் கட்டி இருக்கின்றன. இன்று ராமலிங்க ராஜூவின் குட்டு மட்டும் வெளிப்படவில்லை. செய்திகளை விற்கும் இந்த ஊடகங்களின் செயல்பாடும் தான் வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் என்ன, ஊடகங்களுக்கு என்றுமே பிரச்சனையில்லை. செய்திகளை தேவைக்கு ஏற்றது போல அவர்களால் விற்று விட முடிகிறது.

ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இது போன்ற ஏதேனும் ஊழல் கதைகளோ, தில்லுமுல்லுகளோ வெளிப்படுவதும், அரசாங்கம் விசாரணைக் கமிஷன் வைப்பதும் பிறகு பிரச்சனையின் சூடு தணிந்தவுடன் அது மறந்து போவதும் தான் தொடர் கதையாக இருந்தது வருகிறது. 1990களில் ஹர்ஷத் மேத்தா தொடங்கி வைத்த இந்த தொடர் கதை கேத்தன் பராக், UTI என பல வழிகளிலும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் புனித பிம்பங்களில் ஒருவராக வடிமைக்கப்பட்ட ராமலிங்க ராஜூ இந்தப் பிரச்சனையில் சிக்கி இருப்பது தான் புதிய செய்தி. ராமலிங்க ராஜூவின் எளிமையை கடந்த காலங்களில் ஊடகங்கள் வியந்து போற்றிய செய்திகள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. அதே வகையில் தான் நாராயணமூர்த்திகளும், ரத்தன் டாடாக்களும் வர்ணிக்கப்படுகின்றனர் என்பதை மக்கள் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும்.

இவ்வளவு பிரச்சனைக்கு பிறகும் இன்போசிஸ் இது போல எல்லாம் செய்யாது என ஒரு நண்பர் கூறினார். இன்போசிஸ் இது போன்று செய்யும் என நான் சொல்லவில்லை. ஆனால் இப்படியான போலியான நம்பிக்கைகளை தான் ஊடகங்கள் விதைக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும். நாராயண மூர்த்தி, ரத்தன் டாட்டா எல்லோருமே பண முதலைகள். பண முதலைகளின் குறி பணம் தான் என்பதை நாம் மறந்து அவர்களை புனித பிம்பங்களாக தொழுவது தான் நகைச்சுவையாக உள்ளது. ஒவ்வொரு ஐடி நிறுவனமும் செயல்படும் விதங்களை ஆராய்ந்தால் பல நேர்மையற்ற வழிகளை அவை கையாளுகின்றன என்ற உண்மை தெரிய வரும். தங்கள் நிறுவனத்திற்கு ப்ராஜட்களை பிடிக்க இந் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் நேர்மையற்ற உத்திகளை பட்டியலிட்டால் இந்திய நிறுவனங்களிலேயே ஐடி துறை போன்று ஒரு நேர்மையற்ற துறை இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அது தான் "Corporate Governance" க்கு உதாரணம் என்பதாக புனித வட்டம் கட்டப்படுகிறது.

நாராயண மூர்த்திக்கும், தேவ கொளடாவுக்கும் நடந்த பிரச்சனையின் பொழுது இன்போசிஸ் நிறுவனத்தின் மற்றொரு முகம் வெளிப்படவே செய்தது. ஆனால் ஊடகங்கள் உடனே நாராயண மூர்த்திக்கு வரிந்து கட்டி கொண்டு வக்காலத்து வாங்கின. இங்கே அரசியல்வாதிகள் மட்டும் தான் தில்லுமுல்லு செய்பவர்கள். கார்ப்பரேட் குப்பைகள், ஊடகங்கள், சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் புனித பிம்பங்கள்.

சத்யம் பிரச்சனை குறித்த ஒரு பத்திக்கையில் இவ்வாறு கேள்வி எழுப்பபடுகிறது

Has our corrupt political system badly influenced our corporate world too? If the company was doing wrong, then where were the regulatory authorities?

அதாவது நம்முடைய அரசியல் தான் "புனிதம்" மிக்க கார்ப்பரேட் உலகத்தை சீரழிக்கிறதாம். ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது என்றால் கார்ப்பரேட் உலகம் தான் அரசியலில் ஊழலை வளர்க்கிறது. இந்தியா தொடங்கி அமெரிக்கா வரை அரசியல்வாதிகளுக்கு தங்களுடைய காரியத்தை நடத்திக் கொள்ள பணம் கொடுப்பது கார்ப்பரேட் உலகம் தான் என்பது எல்லோரும் தெரியும் உண்மை. ஆனால் ஊடகங்கள் இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகும் அவர்களுக்கு புனித வட்டம் கட்டுகின்றன.
அமெரிக்க தேர்தலில் ஒபாமா பேனி மே, ப்ரடி மேக் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டினை மெக்கெயின் முன் வைத்தார். ஆனால் உண்மையை கொஞ்சம் ஆராய்ந்தால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் இருவருக்குமே சரிசமமாக பணத்தை அள்ளி வழங்கியிருக்கின்றன. அமெரிக்காவில் இந்த விடயங்களில் இருக்கும் வெளிப்படையான தன்மை இந்தியாவில் இல்லை. அப்படி இருந்தால் எவ்வாறு பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை அள்ளி வீசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்கின்றன என்பது வெளிப்பட்டு விடும். இந் நிலையில் கார்ப்பரேட் உலகத்தை சுற்றி ஒளிவட்டம் கட்டப்படுவது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

சத்யம் நிறுவன பிரச்சனையில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு குறித்த கேள்விகளும் தற்பொழுது எழுந்து உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சட்டங்களை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எப்பொழுதுமே உண்டு. ஹர்ஷத் மேத்தாவின் ஊழலில் Standrard Charted போன்ற வெளிநாட்டு வங்கிகள் செய்த தில்லுமுல்லுகள் வெளிப்பட்டு இருக்கின்றன (இதுகுறித்து ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதை தொடரில் நான் எழுதி இருக்கிறேன். அதனை இங்கே படிக்கலாம் ). அது போலவே தற்பொழுது Pricewaters Coopers நிறுவனம் எந்தளவுக்கு இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இந்த பன்னாட்டு நிறுவனங்கள் எப்பொழுதுமே தங்களுடைய இந்தியக் கிளைகள் மீது பழி போட்டு விட்டு தப்பித்து விடும். ஆனால் நடப்பது என்னவென்றால் ஒவ்வொரு நாட்டிலும் தங்களுடைய லாபத்தை பெருக்க அந் நாட்டு சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பது தான் இந் நிறுவனங்களின் செயல்பாடு. இந்தியாவில் தங்கள் நிறுவனத்தை நிலை நிறுத்த இந்திய சட்டங்களை வளைக்க வேண்டுமென்றால் அதனை செய்ய இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் எப்பொழுதுமே தயங்காது. கூகுள் அமெரிக்காவில் பயனாளிகளின் அந்தரங்கங்களை வெளியிட போராடுவதாக படம் காட்டும். ஆனால் சீனாவிலும் இந்தியாவில் அனைத்து அந்தரங்கங்களையும் வெளியிடும். இது போன்று தான் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

சத்யம் நிறுவனத்திடம் பணமே இல்லை என்றும், தான் லாபத்தை உயர்த்தி மட்டுமே காண்பித்தேன், பணத்தை கையாடவில்லை என்றும் ராமலிங்க ராஜூ கூறியிருக்கிறார். இதை விட நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. இது கிரிமினல் தனமானது. டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களுக்கு இணையாக பல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை தங்களின் க்ளையண்டாக சத்யம் நிறுவனம் பெற்றிருக்கிறது. சத்யம் நிறுவனத்தின் கணக்கை பார்த்தால் சத்யம் நிறுவனத்தின் Operating Margin 3% என்பதாக தற்பொழுது வருகிறது. இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களின் Operating Margin 20%. அப்படியெனில் உண்மையில் ராமலிங்க ராஜூ பணத்தை சுவாகா செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்களும் தங்கள் கணக்கை மாற்றி எழுதியிருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பதை அடுத்து வரும் நாட்கள் தெளிவுபடுத்தும். என்னைப் பொறுத்தவரை நான் இந்த எந்த நிறுவனங்களையும் நம்ப தயாராக இல்லை.

***************

இந்தியாவில் ஐடி துறையின் பின்னடைவு குறித்து தற்பொழுது பலமாக விவாதிக்கப்படுகிறது. நானும் ஐடி துறையில் தான் வேலை பார்க்கிறேன். ஆனால் ஐடி துறையின் பின்னடைவு தற்போதைய இந்திய சூழலில் அவசியமானது என நினைக்கிறேன். நான் 2005ல் ஒரு முறை இவ்வாறு எழுதிஇருந்தேன்.

சென்னையிலும், பெங்ளூரிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் பெருகி வரும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவை கொடுக்கும் ஊதியம் போன்றவை சில நேரங்களில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே ஒரு சமன்பாடு இல்லாத நம் சமுதாயத்தில் இந்த நிறுவனங்கள் ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்துவதாகவே எனக்கு தோன்றும். அரசு நிறுவனங்களிலும், பிற நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் உயர் அதிகாரிகளை விட பல மடங்கு அதிக சம்பளத்தை மென்பொருள் நிறுவனங்களில் வேலைப் பார்க்கும் 30வயதிற்கும் உட்பட்ட இளைஞர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் இவர்களைச் சார்ந்த, இவர்களைக் குறிவைத்து இயங்கும் பல தொழில்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. உதாரணமாக உல்லாச கேளிக்கை இடங்கள். நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து, பேஷன் ஷோ வரை எங்களைப் போன்றவர்களுக்கு இயல்பாக தோன்றும் விஷயங்கள் ஒரு பகுதி சமுதாயத்திற்கு அந்நியமாக தோன்றுகிறது. பொருளாதர ரீதியில் ஒரு வீட்டுக் கடன் பெறும் பொழுது கூட எங்களைப் போன்றவர்களுக்கு கிடைக்கும் கடன் தொகை, முக்கியத்துவம் பிறருக்கு கிடைப்பதில்லை. இதுவெல்லாம் ஏற்கனவே இருக்கும் சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பது போல தான் தோன்றுகிறது.

இன்று ஏதோ ஒரு டிகிரியுடன் நல்ல ஆங்கில அறிவு இருந்தாலே ஒரு நல்ல வேலையில் நுழைந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வேலையில் என்ன செய்கிறோம், ஏன் இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்தால் சில நேரங்களில் வியப்பாக இருக்கும். இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மென்பொருள் நிறுவனங்களை எடுத்துக் கொண்டால் கூட இந்தியாவிற்கு வருகின்றன வேலைகளில் 50%-70% வேலைகள் Production Support /Maintenance வேலைகள் தான். சமீபத்தில் ABN AMRO நிறுவனம் இன்போசிஸ் மற்றும் TCS நிறுவனங்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வேலைகளை கொடுத்தது. இதில் பெரும்பாலான வேலைகள் Production Support /Maintenance தான். இந்த வேலைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் கொஞ்சம் அளவுக்கு அதிகமானது என்பது எனது கருத்து. இந்த வேலைகளை விட ஒரு இயந்திரவியல் பொறியாளர் (Mechanical Engineer) செய்யும் மெஷின் டிசைன் போன்றவை மிக நுட்பமானவை, சிக்கல் நிறைந்தது. ஆனால் அவர்களுக்கு Copy-paste செய்பவர்களை விட சம்பளம் குறைவு தான். ஒரு விஷயம் உண்மை. நிறைய சம்பளம் கிடைப்பது இந்தியா-அமெரிக்க நாணயங்களிடையே இருக்கும் நாணய மாற்று விகிதம் என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.

இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இந்தியாவில் உள்ள பிற துறைகளில் நல்ல சம்பளம் இல்லை. ஏனெனில் outsourcing இந்த துறைகளில் குறைவாகவே உள்ளது அல்லது கொஞ்சமும் இல்லை.

இந்த ஏற்றத்தாழ்வு கடந்த இரு வருடங்களில் பல மடங்கு உயர்ந்ததை கடந்த முறை இந்தியாவிற்கு சென்ற பொழுது உணர்ந்தேன். கடந்த மூன்று வருடங்களில் மிகவும் பலமான சமூக ஏற்றத்தாழ்வுகளை ஐடி துறை இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கிறது. ஐடி துறையில் பணியாற்றுபவர்களின் ஆடம்பரம் சமூக மட்டத்தில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஐடி துறையில் வேலைப்பார்ப்பவர்கள் தங்களை மிகப் பெரிய அறிவாளிகளாக சமூகத்தில் வெளிப்படுத்திக் கொள்வது அதை விட நகைச்சுவையானது. உண்மையில் ஐடி துறையில் இந்தியாவைப் பொறுத்தவரை 70% வேலைகள் Production Support, Maintenance போன்ற வேலைகள் தான். இதற்கு பெரிய அறிவுத்திறன் வேண்டும் என்று யாராவது சொன்னால் சரிக்கத் தான் முடியும். Development போன்ற வேலைகள் கூட பெரும்பாலும் அமெரிக்காவில் Design செய்யப்பட்டு வெறும் Specs தான் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வேலைகளை இந்தியாவில் செய்து வாங்குவதற்குள் பேசாமல் நாமே செய்து விடலாம் என இங்கிருப்பவர்களுக்கு தோன்றி விடும். இதில் Communication போன்ற பல பிரச்சனைகள் உள்ளன என்பதை நான் மறுக்க வில்லை.

ஆனால் அமெரிக்காவின் இயங்குதலே இந்தியாவின் அறிவுமிக்க மூளைகளால் தான் உள்ளது என்பது போன்ற தோற்றம் தான் நகைச்சுவையானது. இந்த பிம்பம் விதைக்கப்பட்டு இந்தியாவில் ஐடி துறையைச் சேர்ந்தவர்கள் ஆடிய ஆட்டம் மிக அதிகம். ஐடி துறையில் இருந்தவர்கள் எல்லாம் வானத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது பூமியை எட்டி பார்த்து இருக்கிறார்கள். அந்த வகையில் நானும் ஐடி துறையில் இருந்தாலும், ஐடி துறையின் பின்னடைவு எனக்கு சமூக மட்டத்தில் ஒரு திருப்தியையே கொடுக்கிறது.

Leia Mais…
Friday, January 02, 2009

கிளிநொச்சி போர் : ஒரு முடிவின் துவக்கம் ?

முதல் பகுதி, இரண்டாம் பகுதி, மூன்றாவது பகுதி


1996ம் ஆண்டு கிளிநொச்சியை சிறீலங்கா இராணுவம் கைபற்றியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1998ம் ஆண்டு கிளிநொச்சியை மறுபடியும் புலிகள் கைப்பற்றினர். கிளிநொச்சி மற்றும் பரந்தனை புலிகள் கைப்பற்றியது அவர்களை ஆனையிறவு வரை கொண்டு சென்றது. தற்பொழுது வரலாறு திரும்பி இருக்கிறது. பரந்தன், கிளிநொச்சி ஆகிய இரண்டு இடங்களையும் சிறீலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இனி ஆனையிறவு நோக்கி சிறீலங்கா இராணுவம் முன்னேறும். பரந்தன், பூநகரி போன்ற இடங்களை புலிகள் இழந்துள்ள நிலையில் இனி ஆனையிறவை புலிகள் தக்கவைத்துக் கொள்வது கடினம்.

அடுத்து இராணுவம் ஆனையிறவு மற்றும் முல்லைத்தீவினை நோக்கி நகரக்கூடும். 1998ம் ஆண்டு போல மறுபடியும் சிறீலங்கா இராணுவத்தை முறியடித்து புலிகள் கிளிநொச்சியை கைப்பற்றுவது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. காரணம் 1998ம் ஆண்டு புலிகள் ஒரு நாட்டினை எதிர்த்து தான் போரிட்டார்கள். எனவே அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது. ஆனால் இம் முறை பல நாடுகளை எதிர்த்து போரிடுகிறார்கள். சிறீலங்கா, இந்தியா, பாக்கிஸ்தான், சீனா, அமெரிக்கா, ஈரான் என அனைத்து நாடுகளையும் எதிர்த்து ஒரே நேரத்தில் போரிடுகிறார்கள். எனவே கிளிநொச்சி இழப்பு என்பது மறுபடியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றே எனக்கு தோன்றுகிறது. இது சரியானது தானா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.

இந்தப் போர் குறித்து போரியல் நோக்கில் கட்டுரை எழுத தொடங்கினேன். இன்னும் போர் முடியவில்லை என எனக்கு தோன்றுகிறது. புலிகள் தங்களின் பலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளனர். புலிகளின் பல அடுக்கு தற்காப்பு வளையத்தில் இரண்டு அடுக்குகளை தற்பொழுது இழந்துள்ளனர். முதல் அடுக்கு தங்களது எல்லைகளை பாதுகாப்பது என்பதாகவும், இரண்டாம் அடுக்கு முக்கிய நகரங்களைச் சுற்றியும், மூன்றாவது அடுக்கு இராணுவம் சார்ந்த பகுதிகள் மற்றும் கடற்கரைச்சார்ந்த முக்கிய நிலைகளை பாதுகாப்பது என்பதாகவும் அமைந்து இருந்தது. தற்பொழுது இரண்டு அடுக்குகளை சிறீலங்கா இராணுவம் உடைத்துள்ளது. இரண்டாம் அடுக்கு சார்ந்த சில முக்கிய நிலைகளை இனி புலிகள் தக்கவைப்பது கடினம். எனவே புலிகளின் மூன்றாவது தற்காப்பு வளையத்தை நோக்கி போர் நடைபெறக்கூடும். இது தான் இறுதிப் போர்.

எனவே போர் இன்னும் முடியவில்லை. என்றாலும் பல நாடுகளை ஒரே நேரத்தில் எதிர்த்து போரிடக்கூடிய பலம் புலிகளிடம் உள்ளதா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. கிளிநொச்சி, பரந்தன் போன்ற பகுதிகளின் இழப்பு புலிகளின் ஈழப்போராட்டத்தின் முடிவின் துவக்கமாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. கொழும்பு ஊடகங்கள் இதனை பிரபாகரனின் வாட்டர்லு என வர்ணிக்கின்றன. "புலிகளின் முட்டாள்தனத்தையும், மூர்க்கத்தனத்தையும் தந்திரோபாயம் என கொண்டாடுபவர்கள் தான் தமிழர்கள்" என ஒரு நண்பர் சில நாட்களுக்கு முன்பு கூறினார். இது உண்மையாக இருக்கலாம்.

இவ்வாறான சூழ்நிலையில் நான்காவது ஈழப் போர் சார்ந்த போரியல் வியூகங்களை தொடர்ந்து இங்கு முன்வைக்கிறேன். ஏனெனில் போர் கிளிநொச்சியுடன் முடிந்து விடப்போவதில்லை.

*********************

1916ம் ஆண்டு முதல் உலகப் போர் நடைபெற்ற சூழலில் இருந்த ஒரு யுத்த வியூகத்தினை நாம் கவனிக்க வேண்டும். ஒரு புறம் ரஷ்யா மற்றொரு புறம் பிரஞ்ச், பிரிட்டன் என இரு புறமும் இருந்த எதிரிகளை சமாளிக்கவும், தொடர்ச்சியான அவர்களின் தாக்குதலை எதிர்கொள்ளவும், அவர்களின் எதிர்தாக்குதல்களை முறியடித்து பிறகு தங்களுக்கு சாதகமான சூழ்நிலையில் ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொள்ளவும் ஜெர்மனி ஒரு நீண்ட தற்காப்பு வளையத்தை அமைத்து இருந்தது. இந்த தற்காப்பு வளையத்தை Hindenburg Line என குறிப்பிடுவார்கள். தங்களுக்கு சாதகம் இல்லாத இடங்களை கைவிட்டு, சாதகமான இடங்களை மட்டும் தக்கவைத்துக் கொள்வது ஜெர்மனியின் வியூகமாக இருந்தது (If this meant the relinquishment of territory to achieve dominant and fortifiable terrain and features, so be it.). அது தவிர சில முக்கிய நோக்கங்களும் ஜெர்மனி படையணிக்கு இருந்தது. ரஷ்யாவில் பிரச்சனைகள் ஏற்படும், அது தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்தும் என ஜெர்மனி நினைத்தது. எனவே அது வரையிலான காலத்தை கடத்துவது ஜெர்மனியின் நோக்கம். எனவே தன்னுடைய வலுவான நிலைகளை உள்ளடக்கி ஒரு நீண்ட தற்காப்பு அரணை அமைத்துக் கொண்டது. இந்தப் பகுதியை தங்களால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதும், குறைவான படைகளே இதற்கு தேவைப்படுவார்கள் என்பதும் ஜெர்மனியின் வியூகம்.

ஜெர்மனியின் இந்த வியூகம் அதற்கு சாதகமாகவே அமைந்தது. தொடர்ச்சியான பிரஞ்ச் படையினரின் தாக்குதல்களை தங்களுடைய தற்காப்பு வியூகங்களால் முறியடிக்க முடிந்தது. மொத்த பிரஞ்ச் படையையே இந்த தற்காப்பு வியூகம் மூலமாக ஜெர்மனி தோற்கடித்தது. முறியடிக்கவே முடியாத நிலையில் இருந்த Hindenburg Line என்ற தற்காப்பு வியூகத்தை நவம்பர் 20, 1917ல் பிரிட்டன் படைகள் முறியடித்தன. இந்த யுத்தத்தை Battle of Cambrai என கூறுவார்கள்.

பிரிட்டன் படைகள் ஜெர்மனியின் வியூகத்தை உடைத்து உள்ளே சென்றதும், பிறகு ஜெர்மனியின் பதில் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்கினர். இதற்கு பிறகு ஒரு வலிந்த தாக்குதல்களை பிரிட்டன் எதிர்பாராத நேரத்தில் ஜெர்மனி தொடுத்தது. இதில் ஜெர்மனிக்கு கணிசமான வெற்றி கிடைதது.

இப்பொழுது ஈழத்திலே நடைபெற்று கொண்டிருக்கும் போரினை ஜெர்மனி-பிரிட்டன் யுத்தத்துடன் ஒப்பிட முடியும். புலிகளின் படைபலத்தை ஜெர்மனியுடன் ஒப்பிட முடியாது. என்றாலும் புலிகளின் வியூகம் ஜெர்மனி போலவே உள்ளதை கவனிக்க முடியும். தங்களுக்கு சாதகமான பகுதிகளைச் சார்ந்த தற்காப்பு அரணை புலிகள் அமைத்து உள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி சார்ந்த தற்காப்பு அரண் இராணுவத்தால் உடைக்கப்பட்டுள்ளது. என்றாலும் இன்னும் அவர்கள் வசம் எஞ்சி இருக்கிற பகுதிகளைச் சார்ந்து மற்றொரு தற்காப்பு அரணை அமைத்து உள்ளார்கள். இது தவிர கடல்சார்ந்த புலிகளின் பகுதிகளைச் சார்ந்தும் மற்றொரு தற்காப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிப் போர் என்பது இந்த கடற்கரைச் சார்ந்த இறுதி தற்காப்பு அரணைச் சார்ந்தே அமையும் என போரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறு பிரிட்டன் படைகள் தங்களின் அசுர மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்டு ஜெர்மனியின் வியூகத்தை உடைத்தார்களோ அதைப் போலவே சிறீலங்கா இராணுவம் தங்களது நவீன ஆயுத பலம் மூலம் புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து உள்ளனர்.

புலிகளின் தற்காப்பு அரண் தங்களின் படைகளை தற்காத்துக் கொள்ளும் நோக்கமும் கொண்டது. அது தவிர தங்கள் பலத்தை ஒரே இடத்தில் குவிப்பதும் புலிகளின் நோக்கமாக உள்ளது (Concentration of forces). புலிகளிடம் இன்னமும் 25,000 படைப்பிரிவினர் உள்ளனர். இவர்களில் 10,000 பேர் நவீன பயிற்சி பெற்றவர்கள். இந்தப் போரில் இது வரை புலிகளின் சார்லஸ் ஆண்டனி படையணி, இம்ரான் பாண்டியன் படையணி போன்றவை அதிகம் ஈடுபடுத்தப்படவில்லை. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த தாக்குதல்களில் ஈடுபட்ட இந்தப் படையணிகள் எளிதில் குண்டு துளைக்காத உடைகவசம் அணிந்தும், தலையில் கவசம் அணிந்தும் போரில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களுடைய முக்கிய படையணிகளை தற்காத்துக் கொள்ளும் புலிகளின் வியூகத்தையே இது வெளிப்படுத்துகிறது.

எந்த தற்காப்பு போரும், இறுதியில் வலிந்த தாக்குதல்களை நோக்கமாக கொண்டே அமைக்கப்படும். அந்த வகையில் ஜெர்மனி எவ்வாறு தங்களுடைய தற்காப்பு வியூகத்தை ரஷ்யாவில் இருந்த உள்நாட்டு குழப்பத்தை எதிர்பார்த்து அமைக்கப்படிருந்ததோ அது போல புலிகளும் தங்களுக்கு சாதகமான ஒரு நிலையை எதிர்பார்த்து தங்களது தற்காப்பு வியூகத்தை அமைத்து உள்ளனர்.

இது வியூகமாக இருந்தாலும், இந்த வியூகம் எந்தளவுக்கு புலிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்தே அவர்களின் எதிர்கால வலிந்த தாக்குதல் வெற்றிகளை கொடுக்கும். அது போல சிறீலங்கா இராணுவம் எந்தளவுக்கு புலிகளின் பலத்தை குறைத்து உள்ளதோ அதனைச் சார்ந்த அதனுடைய தற்போதைய வெற்றி நிலைக்க முடியும்.

முதலில் சிறீலங்கா இராணுவத்தின் வெற்றி எப்படியானது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிறீலங்கா இராணுவம் புலிகள் வசம் இருந்த பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது அதன் முக்கிய வெற்றியாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் இந்த வெற்றியை தக்கவைப்பதும் எதிர்காலத்தில் இராணுவத்திற்கு இருக்ககூடிய சவால் என்பதையும் நான் கவனிக்க வேண்டும். இப்பொழுது கைப்பற்றியுள்ள இடங்களை தக்கவைக்க வேண்டுமானால் புலிகளின் பலத்தை இராணுவம் அழிக்க வேண்டும். அவ்வாறு இது வரை செய்திருக்கிறதா என்பதை ஆராய்ந்தால் அப்படியான எந்த வெற்றியும் இராணுவத்திற்கு ஏற்படவில்லை என்று தான் கூற வேண்டும். இது வரை புலிகள் தரப்பில் சுமார் 10,000 பேரை தாங்கள் கொன்று விட்டதாக இராணுவம் கூறி வருகிறது. ஆனால் புலிகள் ஆண்டுதோறும் வெளியிடும் மாவீரர்கள் பட்டியல் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான நிலவரத்தை தரும். அவ்வாறு நோக்கம் பொழுது புலிகள் தரப்பில் பெருத்த சேதங்கள் ஏற்படவில்லை என்பதை கவனிக்க முடியும். இது தவிர புலிகளுக்கு ஆயுதங்கள் வரும் வழங்கல் பாதை (Supply Lines) இன்னும் முழுமையாக முடக்கப்படவில்லை என்பதையும் சமீபத்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் சிறீலங்கா இராணுவத்தின் தற்போதைய வெற்றி என்பது உறுதியான வெற்றி அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அது போல புலிகளின் தற்காப்பு வியூகங்கள் எந்தளவுக்கு வெற்றி பெற்று உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் மூலம் இராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்துவது, தொடர்ச்சியான போர் மூலமாக சிறீலங்காவின் பொருளாதாரத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது போன்றவை புலிகளின் நோக்கமாக இருந்தது. புலிகளின் இந்த முயற்சிக்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதை நாம் போர் நிலவரங்கள் மூலம் கவனிக்க முடியும். சில குறிப்பிடத்தக்க இழப்புகளை இராணுவத்திற்கு புலிகள் ஏற்படுத்தியிருந்தாலும் அந்த இழப்புகள் இராணுவத்தை பொறுத்தைவரை மிகவும் குறைவே. அது தவிர கடந்த காலங்களில் கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதல் போன்றவை மூலம் சிறீலங்கா பொருளாதாரத்திற்கு கடுமையான அழுத்தங்களை புலிகள் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால் தற்பொழுது புலிகளால் அது போன்ற ஒரு பொருளாதார அழுத்தங்களை ஏற்படுத்த முடியவில்லை.

இவ்வாறான நிலையில் இந்தப் போர் எந்த வெற்றியையும், யாருக்கும் கொடுக்க முடியாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்றாலும் இடங்களை கைப்பற்றியதன் மூலம் இராணுவம் சில குறிப்பிடத்தக்க வெற்றிகளை நான்காவது ஈழப் போரில் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது.

*************************

2008ம் ஆண்டு முடிந்து 2009ம் ஆண்டு தொடங்கி விட்டது. A32 சாலைக்காக நடந்த சண்டையில் இராணுவத்தின் Attrition warfare நோக்கம் தங்களுக்கு தெரிவதாகவும், அதற்கு ஏற்ப தங்களுடைய வியூகமும் அமையும் என புலிகள் அமைப்பின் ஒரு மூத்த தலைவர் தெரிவித்து இருந்தார். 2008ம் ஆண்டு போர் பற்றிய ஒரு தெளிவினை கொடுக்கும் என 2008ம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் கூறினார். 2008ம் ஆண்டு முடிந்து விட்ட நிலையில் ஒரு விடயம் தெளிவாகவே புரிகிறது..... அதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

2008ம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு பல தோல்விகளை புலிகள் அடைந்து உள்ளனர். அடம்பன், பூநகரி தொடங்கி தற்பொழுது பரந்தன், கிளிநொச்சி என பல இராணுவ முக்கியத்துவம் பெற்ற இடங்களை புலிகள் இழந்து உள்ளனர். கிளிநொச்சி தவிர முல்லைத்தீவு பகுதியையும் புலிகள் இழக்ககூடும். கிளிநொச்சியை புலிகள் தற்காக்க தீவிர போர் புரிந்த சூழ்நிலையில் அதனை தங்களுக்கு சாதகமாக சிறீலங்கா இராணுவம் பயன்படுத்திக் கொண்டது. முல்லைத்தீவினை நோக்கி இராணுவம் நகர்ந்து வருகிறது. முல்லைத்தீவு நகரை அண்டிய முள்ளியவளை, தண்ணீரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியை தக்கவைக்க வேண்டுமானால் கிளிநொச்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை தான் புலிகளுக்கு இருந்தது. அதைத் தான் தற்பொழுது புலிகள் செய்திருக்கின்றனர்.

நான் கடந்த பகுதியில் கூறியிருந்தது போல புலிகள் போன்ற சிறிய இராணுவ அமைப்பிற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நடத்தப்படும் பெரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஆட்பலமோ, ஆயுதபலமோ இல்லை. அதைத் தான் இந்த வார நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம் என்பதையும் விளக்க வேண்டும். தங்களுடைய தற்காப்பு அரண் முழுவதையும் பாதுகாப்பதற்கு போதிய போராளிகள் பலமோ, ஆயுத பலமோ புலிகளிடம் இல்லை. தற்காப்பு அரணை சார்ந்த பகுதிகளில் குறைந்த அளவிலான போராளிகளே இருப்பார்கள். இது இராணுவத்தின் ஆர்ட்லரி தாக்குதல்கள் போன்றவற்றை சமாளிப்பதற்கான ஒரு உத்தியும் கூட. இராணுவம் தாக்குதல் தொடுக்கும் பொழுது தாக்குதல் நடத்தப்படும் இடங்களுக்கு, தாக்குதல்களின் பலத்தை பொறுத்து போராளிகளையும், ஆயுதங்களையும் அனுப்புவது புலிகளின் வழக்கம். இது புலிகள் என்றில்லாமல் எல்லா இராணுவ அமைப்புகளின் செயல்பாடும் இவ்வாறு தான் இருக்கும். பல முனைகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இந்த வழங்கல் பாதையில் (Supply Lines) சுணக்கம் ஏற்படுகிறது. அது தவிர இராணுவத்தின் விமானத் தாக்குதல் இந்த வழங்கல் பாதையை குறிவைக்கிறது. இதன் காரணமாகவே புலிகளின் தற்காப்பு அரணை பல முனை, எதிர்பாராத தாக்குதல்களை மூலம் இராணுவம் முறியடிக்க முனைகிறது. அதற்கு வெற்றியும் கிடைத்து உள்ளது.

இதனை எதிர்கொள்ள தங்களால் பாதுகாக்க முடிந்த சிறிய பகுதிகளை மட்டும் பாதுகாத்து கொள்வதும், தங்களால் பாதுக்காக்க முடியாத முக்கிய நிலைகளை விட்டு பின்வாங்குவதும் புலிகளின் தற்போதைய வியூகமாக உள்ளது. தற்போதைய நிலையில் மூன்று புறமும் புலிகளை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது. ஒரு புறம் கடல் வழியே வரும் ஆயுதங்களை இராணுவம் தடுக்க முனைந்து வருகிறது. இருந்தாலும் புலிகள் அவ்வப்பொழுது ஆயுதங்களை பெற்றே வந்திருக்கின்றனர் என்பதையும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. புலிகள் எந்தளவுக்கு ஆயுதங்களை கடல் வழியாக பெறுகின்றனர் என்பதை பொறுத்தே போரின் எதிர்கால போக்கு அமையும். இந்த கடல் வழிப் பாதையை எந்தளவுக்கு இராணுவம் தடுக்கிறதோ அந்தளவுக்கு அது இராணுவத்திற்கு வெற்றியையும் கொடுக்கும்.

*************************

இராணுவத்தின் இந்த தொடர்ச்சியான வெற்றிகளை தடுக்க புலிகள் வலிந்த தாக்குதல்களை தொடுக்க வேண்டும். புலிகள் ஏன் தங்களுடைய வலிந்த தாக்குதல்களை மேற்கொள்ள வில்லை என்ற கேள்வி தொடர்ச்சியாக பல ஊடகங்களில் எழுப்பபட்டு வருகிறது. புலிகளிடம் வலிந்த தாக்குதல்களை தொடுக்க கூடிய பலம் இல்லை என இராணுவம் கூறுகிறது. அது உண்மையா என்பதை காலம் தான் பதில் சொல்லும்

Leia Mais…