வணக்கம்

சசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

அரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்

ஈழம்

என்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன

வாசிக்க...

ஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்

காஷ்மீர்

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு

வாசிக்க...

அப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி

அப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்

வாசிக்க...

பிற கட்டுரைகள்

தமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்

மின்னஞ்சல் : thamizhsasi@gmail.com

Friday, March 23, 2007

INDIA - you deserved to lose !!!


இந்திய அணி இது போல மோசமாக கடந்த உலககோப்பைகளில் விளையாடியதாக நினைவில் இல்லை. எனக்கு தெரிந்து இந்திய அணி மோசமாக விளையாடிய உலககோப்பை என்று பார்த்தால் அது 1992 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த உலககோப்பைகளில் தான். ஆனால் அப்போதைய இந்திய அணி இந்தளவுக்கு வலுவான அணியாக இருந்ததில்லை. தற்போதைய அணி மற்ற அணிகளுடன் ஒப்பிடத்தகுந்த அளவிற்கு வலுவான அணி (On Paper) என்பதால் இந்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த உலககோப்பை ஒரு ஏமாற்றம் தான். என்றாலும் at the end of the day, it is just a game.

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டி எழுப்பப்படும் வலது சாரி இந்திய தேசியவாதம், ஊடகங்கள் எழுப்பும் போலி பிம்பங்கள், இந்திய நிறுவனங்கள் அறுவடை செய்ய முயலும் பல கோடி ரூபாய் வருமானங்கள் போன்றவைக்கு இந்த தோல்வி தற்காலிகமான பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தவிர இந்த தோல்வி இந்திய தேசியவாத-பண பிம்பத்தில் இருந்து கிரிக்கெட்டிற்கு ஒரு தற்காலிகமான விடுதலையையும் கொடுக்கும். இந்த போலி பிம்பங்கள் இல்லாமல், நிம்மதியான ஒரு உலககோப்பை ஆட்டத்தினை பார்க்கலாம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. எந்த அணியை பின் தொடர்வது என்பதில் தான் கொஞ்சம் குழப்பம்.

விடுமுறை நாட்களில் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது என்பது பள்ளிக் கால உற்சாகம். அப்படி தொடங்கியது தான் கிரிக்கெட் மீதான காதல். நெய்வேலியில் எங்கள் ஏரியா அணிக்கும், பக்கத்து ஏரியா அணிக்கும் இடையே "bet match" என்ற பெயரில் விளையாடுவது வழக்கம். 10ரூபாய், 20 ரூபாய், 50ரூபாய் என்று பல வகை போட்டியில் விளையாடுவோம். சில போட்டிகளில் வெற்றி பெற்றும் இருக்கிறோம், சில போட்டிகளில் தோற்றும் இருக்கிறோம்.

இவ்வாறு கிரிக்கெட் மீது உருவான காதல் இந்திய அணி விளையாடும் போட்டிகளை தொடர்ந்து பின்பற்றும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்திய அணியை பின்பற்றும் ஆர்வம் என்பது போட்டியை விளையாடிதாலும் புரிந்து கொண்டமையாலும் எழுந்தது என்பதால் வெற்றி தோல்விகளை ஆட்டத்தின் அன்றைய விளையாட்டைப் பொறுத்ததாக ஏற்றுக்கொள்ள முடிந்தது.

ஆனால் கிரிக்கெட்டின் இந்த இயல்பான உற்சாகத்தை ஊடகங்களின் வளர்ச்சியும், வணிகமயமாக்கமும் கெடுத்து விட்டன என பாப் உல்மரின் படுகொலைக்கு பிறகு இன்று பலர் பேசத்தொடங்கி உள்ளனர். கிரிக்கெட்டின் இந்த நிலைக்கு இந்தியாவை/இந்திய ரசிகர்களைச் சார்ந்து கிரிக்கெட்டிற்கு கட்டமைக்கப்பட்டுள்ள பொருளாதார சூழல் தான் முக்கிய காரணம் என பலர் கூறத் தொடங்கி உள்ளனர்.

இந்தியா தோல்வி அடைந்தால் ரசிகர்கள் செய்யும் கலாட்டாவை நேரடி ஒளிபரப்பு செய்யாதது மட்டும் தான் பாக்கி. டோனி வீடு தாக்கி உடைக்கப்படுவதை அருகில் இருந்து அழகாக படம் பிடிக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களின் திறன் வியக்க வைக்கிறது. இது ரசிகர்களின் reaction என்று கூறி "ஒரு பத்து பேர் + சில தொலைக்காட்சி நிருபர்கள்" செய்யும் விடயத்தை தொலைக்காட்சிகள் இந்தியாவெங்கும் "விற்கின்றன". தொலைக்காட்சிகளில் தங்களுக்கு கிடைக்கும் விளம்பர வருமானத்திற்காக உலககோப்பையை ஒட்டி IBNLIVEல் எத்தனை விதமான கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் என்பதை கணக்கில் எடுக்க முடியவில்லை. யார் உலககோப்பையை வெல்லுவார்கள் என்று கருத்துகணிப்பு, ஜோதிடம் என நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை பார்த்தால் சிரிக்கத் தான் முடிந்தது.

இன்னும் எத்தனை நிகழ்ச்சிகளோ, நல்ல வேளை இந்தியாவில் இருக்க வில்லை, தப்பித்தோம் என்று நினைத்து கொள்கிறேன்.

இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் கிரிக்கெட் விற்கப்பட்டு இந்த தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நல்ல விளம்பர வருவாய் கிடைக்கிறது. இந்திய அணி குறித்த பிம்பம் எழுப்படுகிறது.

இவை மட்டுமா... நாடாளுமன்றம் கிரிக்கெட் தோல்வி குறித்து விவாதிப்பதும், கிரிக்கெட் என்பது ஒரு போட்டி, விளையாட்டு என்பது மறக்கப்பட்டு இந்தியாவிற்கு இது அவமானத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேசியவாதிகள் குரல் எழுப்புவதும் கேலிகூத்தானது தான். இந்தியாவில் இருக்கும் ஏழ்மை, சுரண்டல், மக்களை வேட்டையாடும் காவல்துறை, இராணுவம் போன்றவைகள் மறக்கப்பட்டு கிரிக்கெட் தோல்வி தான் பிரதானம் என்பதாக ஊடகங்கள் அடுத்த சில நாட்கள் குரல் எழுப்புவதை பார்க்கலாம். நந்திகிராமம், காஷ்மீர் போன்றவைகளை விட 2007 உலககோப்பையில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்ட அவனமானத்தை எண்ணி துக்கம் சிந்தும் ஊடகங்களை அடுத்த சில தினங்கள் பார்க்கலாம்.

****

இன்றைய போட்டியில் மதிய நேர ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் இந்த அடுகளத்திலும் சரியாக பேட்டிங் செய்யாத இந்திய அணி உலககோப்பையில் இருப்பதற்கு தகுதி அற்றது என்றே நான் நினைக்கிறேன்.

இந்த உலககோப்பையில் இது வரை நடந்த போட்டிகளில் அதிக சுவாரசியம் இருக்கவில்லை. இந்தியா பங்களாதேஷ் அணியிடம் தோற்றது, பாக்கிஸ்தான் அயர்லாந்து அணியிடம் தோற்றது போன்றவை உலககோப்பையில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தாலும், இது உலககோப்பையின் சுவாரசியத்தை மேலும் குறைத்திருக்கிறது. அயர்லாந்து, பங்களாதேஷ் போன்ற அணிகள் சூப்பர் 8ல் விளையாடும் போட்டிகளை கவனிக்கும் ஆர்வம் எனக்கு நிச்சயம் இல்லை. சிறிய அணிகளை பெரிய அணிகள் துவசம் செய்து உலக சாதனை படைப்பதை ரசிக்க முடியாது. பங்களாதேஷ் இந்திய அணியை தோற்கடித்த பொழுது நல்ல அணியாக தெரிந்தது. ஆனால் அந்த அணி சிறீலங்காவிடம் அடைந்த படுதோல்வியை பார்க்கும் பொழுது அவ்வாறு தெரியவில்லை.

இது வரை நடந்த ஆட்டங்களைக் கொண்டு பார்க்கும் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, சிறீலங்கா போன்றவை உலககோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெறக்கூடிய அணிகளாக தெரிகிறது.

Leia Mais…
Saturday, March 17, 2007

இந்தியாவின் மோசமான ஆட்டம்

காலை நேர ஆடு களம். ஆடுகளத்தில் சரியான அளவுக்கு வீசப்படும் மித வேக seaming பந்து. அது ஆஸ்திரேலிய பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பங்களாதேஷின் பந்து வீச்சாக இருந்தாலும் சரி...இந்தியாவுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும் என்பதை இன்றைய ஆட்டம் மற்றொரு முறை நிருபித்து இருக்கிறது. பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். என்றாலும் இதைக் கூட சமாளிக்க முடியாத இந்திய மட்டையாளர்களின் தடுமாற்றம் - இந்த அணி

உலக கோப்பையின் அடுத்த சுற்றுக்கே செல்லுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

டாஸ் வென்ற டிராவிட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இத்தகைய தருணங்களில் பவுளிங் தான் செய்திருக்க வேண்டும். ஆனால் பங்களாதேஷ் போன்ற அணியிடம் தங்களின் மட்டையாளர்களுக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக இதனை கருதியிருக்க வேண்டும். அதனாலேயே பேட்டிங் செய்ய தீர்மானித்தார். It back fired. சேவாக்கின் அவுட் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. எதிர்பார்த்தது தான். அடுத்த போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகமே. தினேஷ் கார்த்திக் அணிக்குள் கொண்டு வரப்பட வேண்டும். சேக்வாக்கை தொடர்ந்து அணியில் வைத்திருப்பது ஒரு gambling போலத் தான். சேக்வாக் நன்றாக விளையாடும் பொழுதே அவர் நிலைத்து நின்று ஆடுவது 50-50% தான். ஆனால் தற்போதைய நிலையில் அதிகம் எதிர்பார்க்க முடியாது.

இது வரையில் நடந்த உலககோப்பை ஆட்டங்களை பார்க்கும் பொழுது (பாக்கிஸ்தான்-மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்து-நியூசிலாந்து) துவக்க ஆட்டக்காரர்கள் தடுமாறுவதை பார்த்திருக்கிறோம். இந் நிலையில் துவக்க ஆட்டக்காரர்களாக டெக்னிக்கலாக நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்கள் தான் தேவை. உத்தப்பா துவக்க ஆட்டகாரராக முடியாது. கங்குலி-கார்த்திக் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கலாம். இது கூட ஒரு சோதனை முயற்சி தான். உலககோப்பையில் வந்து கூட ஆட்டக்காரர்களை சோதனை செய்து கொண்டிருக்கும் இந்திய அணியின் பிரச்சனைக்கு காரணம் என்னை கேட்டால் அணியின் கோச் சேப்பல் என்று தான் கூறுவேன்.

கடந்த உலககோப்பையின் பொழுது இந்திய அணி ஓரளவுக்கு நிலையான பேட்டிங் வரிசையை கொண்டிருந்தது. ஆனால் இந்த போட்டியில் யார் எங்கே விளையாடுவது என்பதை கூட இன்னும் முடிவு செய்ய முடியாத நிலை.

இந்தப் போட்டியில் என்னை ஆச்சரியப்படுத்தியது டிராவிட்டின் தடுமாற்றம். இது போன்ற நிலையில் திராவிட் பல முறை நிதானமாக ஆடி அணியை கரை சேர்த்திருக்கிறார். ஆனால் இன்று அவரது தடுமாற்றம் அதுவும் சுழல் பந்து வீச்சுக்கு அவர் தடுமாறியது இந்திய அணியின் இன்றைய மோசமாக ஆட்டத்திற்கு ஒரு உதாரணம். என்ன தான் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தாலும் கூட (Ball is not coming on to the bat, which made batting difficult) பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சிற்கு இந்தியா சுருண்டது பெருத்த ஆச்சரியம், ஏமாற்றம்

டெண்டுல்கர் கூட சூழல் பந்து வீச்சிற்கு தான் ஆட்டம் இழந்தார். பந்தை சரியாக கணிக்காமல் inside edge on to his pad and caught by keeper.

கங்குலி, யுவராஜ் நன்றாக ஆடினர். குறிப்பாக யுவராஜ் *அதிகம்* தடுமாறவில்லை. ஆனால் தேவையான நேரத்தில் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. யுவராஜ் அடித்த சிக்ஸர் அவர் நல்ல பார்ம்மில் இருப்பதை காட்டியது. ஆனால்....

அடுத்து வந்த டோனி பங்களாதேஷ் அணிக்கு கேட்ச் ப்ராக்டிஸ் கொடுத்த திருப்தியில் வெளியேறினார்...

இந்திய பந்து வீச்சாவது சிறப்பாக இருக்கும் என்று நினைத்தால், சிகஸர்கள் பறக்கிறது. டோனி கேட்ச்களை கோட்டை விடுகிறார். பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் இந்திய அணிக்கு எதிராக போட்டியை திருப்பி விட்டார்.

அவ்வப்பொழுது சில பவுண்டிரிகள் பறந்து கொண்டிருப்பதால், ஏதாவது அதிசயம் நடந்தால் இந்தியா வெற்றி பெறும்.

Leia Mais…